Friday 15 January 2016

உண்மையில் அவனுடைய தூக்கத்தைப் பறித்தேன் - றியாஸ் குரானா


மாற்றுப்பிரதி
உண்மையில் அவனுடைய தூக்கத்தைப் பறித்தேன்
கடைசியாக உறங்கிய அன்றிரவு அவன்
கனவு கண்டு கொண்டிருந்தான்
தூக்கமற்று கிடந்த நான், புரண்டு படுக்கும்போது
கண்டேன்.
காட்சிகளாக ஒருவருடைய கனவை நேரில் காணும்
சந்தர்ப்பத்தை இழக்க விரும்பவில்லை.
சிறு சம்பவத்தால் மிக நீளமான கனவு அது.
அந்தக் கனவுக்குள் சில பூமரங்கள் மாத்திரமே
வளர்ந்தபடி இருந்தன.
ஒரு மர நிழலில் இசையொன்றை ரசித்தபடி
உட்கார்ந்திருந்தான்.
அவனுடைய கனவுக்குள் நான் தற்கொலை
செய்வதாக காட்சி அமைந்திருந்தது.
அவன் ரசிக்கும் எனது தற்கொலையை
இந்த இரவின் பதற்றத்தில் காட்சிகளாக
என்னால் காண நேர்ந்தபோது,
சுதாகரித்துக்கொண்டு எழுந்தேன்.
என்னையும் அருகில் உறங்கும் அவனையும்
தொட்டுப்பார்த்தேன்.
கனவுக்குள் மரத்தில் தொங்கிய நான்
சாவதற்கு நெடுநேரமெடுத்துக் கொண்டிருந்தது.
கனவு எனினும்,தூக்கில் தொங்கும் நான் படும்
வேதனை பார்த்துக் கொண்டிருக்கும் என்னை
பற்றிக்கொண்டது.
என்னைக் கொல்ல வேண்டும் அல்லது
கனவை நிறுத்துவதற்கு அவனை எழுப்ப வேண்டும்.
அவசர அவசரமாக அவனை எழுப்பினேன்.
தூக்கத்திலிருந்து விழித்தவன்
நான் சாகவில்லை என்று சொன்னான்.
மீண்டும் கனவுக்குள் சென்று என்னை காப்பாற்ற
வேண்டும் என்று முயற்சிக்கத் தொடங்கினான்.
கனவுக்குள் அவன் திரும்பிச் சென்றால்
செத்துவிடுவேன் என்று
நான் அஞ்சினேன்.
அவனை உறங்கவிடாது தடுக்க
அவனோடு இருக்கவே சபிக்கப்பட்டிருக்கிறேன்.
அவன் உறங்கினால்,எதுவும் நடக்கக்கூடும்.
நான் காப்பாற்றப்படலாம்
அல்லது செத்துவிடலாம்.
ஆம். இதற்காகத்தான் நான் அவனை உறங்கவிடுவதில்லை.
உறக்கத்தை பறித்ததற்கு
அவன் சொல்லும் காரணங்கள் பொய்.