Tuesday 5 January 2016

Lakshmi Manivannan - ஷோபா சக்தி நேர்காணல்


Lakshmi Manivannan added 2 new photos — feeling happy with Anar Issath Rehana and 3 others at Pandicheri.
14 hrsPondichéry


Lakshmi Manivannan remembering those moments in Nagercoil.
4 hrs


காலம் தவறிய இளவரசி
மேல் தட்டில்
வழக்கமாக உலவுமிடத்தில்
உலவிக் கொண்டிருந்தாள் 
பழைய இளவரசி
சாலையில் மஞ்சள் வெள்ளமெனப்
பாயும் சோடியம் ஒளி.
வண்ணம் வற்றிய புற்றுச்சுவர்
மரத்தூண்கள் ஒடியும்
வீட்டைப் பல திசைகளில்
ஓவியர்களுக்குப் பரிசளிக்கிறது
மரணித்துப் போனார்களா இல்லையா
சந்தேகத்தைக் கிளப்பும்
தம்புரான்களும் தம்புராட்டிகளும்
கீழறைகளில் புழங்கிக் கொண்டிருப்பது
இளவரசிக்குத் தெரியும்
வீட்டைச் சுற்றி காடு
தன்னை
மீட்டெடுக்கிறது.
வேலையாட்கள் வெளிநாடு போய்விட்டார்கள்
அலங்காரச்செடிகள் வைத்த
மண்தொட்டிகள் கவிழ்ந்து
கிடக்கும் இடத்திலிருந்து கிளம்பும்
இளவரசியின் நரைத்த காமத்தை
அரங்கு வீட்டிற்குள்
வவ்வால்கள் அள்ளித் தின்கின்றன
கீழிருந்து பார்பவர்களுக்குப்
பழைய இளவரசி
மேல்தட்டில் வழக்கமாக உலவுமிடத்தில்
எப்போதும் உலவிக் கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது
உலவிக் கொண்டிருக்கும் இளவரசியின் மனதில்
இப்போது எந்த
இளவரசனும் இல்லை.
ஆக்காட்டி


ஆகாட்டியில் வெளிவந்திருக்கும் என்னுடைய இந்த நேர்காணல் நண்பர் ஷோபா சக்தியால் எடுக்கப்பட்டது.

நேரடியான கேள்விகள் நேரடியான பதில்கள்

இவ்வளவு நேரடியாக பேசும் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு ஷோபாவிற்கு தனிப்பட்ட எனது நன்றிகள்.நீங்கள் யார் என்று அறியாதவரிடமிருந்து இவ்வளவு நேரடியான கேள்விகள் வர இயலாது.


நன்றி ஷோபா சக்தி



ஆக்காட்டி இதழில் வாங்கி படித்துப் பாருங்கள் .அது நன்று.
-------------------
உங்களது இளமைப்பருவம், பெற்றோர்கள், குடும்பச் சூழல், ஊர்ப் பின்னணி இவை குறித்துச் சொல்லுங்கள்?
சிறுவயதிலேயே அம்மா தவறி விட்டார்.எனக்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும்.சாத்தூரில் உயர்நிலைப் பள்ளியில் அம்மா தமிழாசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்..அப்பா அப்போது அருகில் நடுவப்பட்டியில் தமிழாசிரியர்.அம்மா என்னைப் பற்றி கவலை கொண்டவராகவே மனதில் சித்திரமாகி இருக்கிறார் .உறவினர்களும் அவ்வாறேதான் சொல்கிறார்கள்.யாரேனும் கவலையின் பனிக்கட்டி போன்ற தன்மையை வெளிப்படுத்தும்போது இன்றுவரையில் அம்மாவின் மரணம் அளித்த கசப்புணர்ச்சியே மனதில் மேலோங்கும்.அதனை வேகம் கடக்க முயல்வேன். அவரது தொடுவுணர்ச்சி எப்போதும் என்னிடம் உண்டு .அது என்ன என்பது தெரியும் .அது எப்போதும் என்னுடன் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது.என் உள்ளக் கிடக்கையில் அகத்தின் எல்லையாக மினுங்குவது அந்த தொடுவுணர்ச்சியின் தைலம்தான் .அதன் ரீங்காரமும் மணமும்தான் எனக்கு மனப்பதிவின் தொடக்கம்.எனக்கு பேய் பிடித்திருப்பதாக கருத இடமுண்டெனில் அதற்குக் காரணமாகும் ரீங்காரம் அது. அவரது கையெழுத்துப் பிரதிகள் சில பலகாலம் என்னிடம் இருந்தன.அவர் எழுதிய கட்டுரைகள் அவை.
எனது சிறுவயது என்பதை சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கித் திரும்புதல் என அர்த்தம் செய்யலாம்.சாத்தூரிலிருந்து தொடங்கி எனது சொந்த கிராமமான பனங்கொட்டான் விளை நோக்கிக் கிளை பிரிந்து செல்லும் பாதை அது.அம்மாவுடன் இணைந்து சென்ற இரவு நேர ரயில் பயணங்கள்,இரவின் மரண மினுங்கல் ஒளி ,சாத்துக்குடி வாசனை நிரம்பிய பேருந்து நிலையங்கள்,வெள்ளை நிற அலுமினிய பேருந்துகள் இப்படியாக கிராமத்தில் நுழையும் பென்ஸ் பேருந்து ,அவை கடக்கும் இருபக்கமும் வேலிகள் உயர்ந்த குறுஞ்சாலைகள்,எசலைகள்,கள்ளிகள்.கள்ளிகள் பூத்துக் குலுங்கும் கிராமம். கடற்கரையை ஒட்டி உள்ளிருந்த கிராமம் அது.மீன் பாரங்களை ஏற்றிச் செல்லும் பனி லாரிகள் ஊரின் குறுஞ்சாலையில் தினம் இரண்டு முறை செல்லும்.ஒளி குறைந்த மின்சாரவிளக்குகள் கொண்ட நாலு கட்டு வீடு .நிறைய மரணங்களைக் கண்ட வீடு அது.இடை மரணங்கள் . என்னுடைய அப்பையாவைத் தவிர்த்து பிறர் எல்லோரிடமும் கண்களில் பாதுகாப்பின்மையின் நிழல் உண்டு.
அப்பையா ஜோதிடத்தில் நிபுணர்.எங்கள் பகுதி சுற்று வட்டாரம் முழுக்க பிறந்த குழந்தைகளுக்கு அந்த தலைமுறையில் பிறப்புக் குறிப்பு எழுதிக் கொடுத்தவர் அவராகத்தான் இருக்கும் .வில்லிசைக் கலைஞராய் இருந்து பின்னாட்களில் கைவிட்டவர்.அப்பம்மை சீதா லெட்சுமி வைகுண்டசாமியின் குடும்பத்தில் பிறந்தவர்.ஊரிலேயே பெரிய குடும்பம் நாங்கள்தான்.நிலபுலங்கள்,நஞ்சைகள்,மாடுகள் என செல்வாக்கான குடும்பம்.இப்போதும் எங்களுடைய குடும்பத்தின் பெயரைச் சொன்னால் சுற்றுவட்டாரத்திலுள்ள பழைய ஆட்களுக்குத் தெரியும்.
ஆனால் எனக்கு இளம்வயது மிகவும் கசப்பு மிக்கதாக ஒரு புறமும் ,கிராமிய தன்மையின் மயக்கம் மற்றொரு புறமாகவும் நினைவில் உள்ளது.
நாங்கள் சிறுவயதில் குழந்தைகளாக நீதியின்மையின் முன்பாகக் கிடந்தோம்.இந்த நீதியின்மை இல்லாமையில் இருந்து உருவாகவில்லை.எல்லாமே இருந்தது.அம்மா தவறியதாலும் உருவானது.எல்லாமே இருக்கும் ஓரிடத்தில் ஏன் அநீதி நிகழவேண்டும்?பானை நிறைய சோறு இருக்கும் ஆனால் நாங்கள் அலந்து கிடப்போம். இது ஏன் என இன்றுவரையில் எனக்கு விளங்கவில்லை.இருக்கிற இடத்தில் நாங்கள் குறைபட்டுக் கிடந்தோம்.இதற்கு குடும்பத்தில் உள்ள யாரோ ஓரிருவரை குறைபடவில்லை.அதற்கு பொறுப்பாளிகளாக அவர்களை மட்டும் கைகாட்டுதல் பொறுப்பற்றது. இது ஒரு வினோதமான நீதியின்மை.இதனை எல்லோரும் சில முணுமுணுப்புகளுடன் ஏற்றுக் கொள்ள பழகியிருந்தார்கள்.அதிகாரம் பெற்றது எதுவோ அது செய்வதெல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் பாங்கு.இந்தியாவில் நான் பார்ப்பதும் இதனைத்தான்.இங்கே எதுவும் இல்லாமலோ, பற்றாக்குறையாகவோ இருபதாகவோ நான் கருதவில்லை.மிகப் பெரிய அநீதியின் முன்பாக எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்.
வெள்ளைப்பல்லி விவகாரம், 36 A பள்ளம், அப்பாவின் வீட்டில் நீர் பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும், வீரலட்சுமி, எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம், சித்திரக்கூடம், குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள், ஓம் சக்தி ஓம் பராசக்தி...இவை தவிர உங்களின் வேறென்ன புத்தகங்கள் வெளியாகியுள்ளன. ? நான்தமிழகத்தில் இருந்து ரொம்பவும் தூரத்திலேயிருப்பதாலும் வயதாவதால் ஞாபகத் தேய்வாலும் கண்டிப்பாக விடுபடல்கள் இருக்கும்.?
சித்திரக்கூடம் மற்றுமோர் சிறுகதைத் தொகுப்பு ,சங்கருக்குக் கதவற்ற வீடும்,அப்பாவைப் புனிதப்படுத்துதல் கவிதைத் தொகுப்புகள்.
உங்களது பிறந்ததேதியும் அறியத்தாருங்கள்.
23- 11-1969
இலக்கியம் மீதான உங்களது ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது என்பதை அனுமானிக்க முடிகிறதா?
வெளிபடுத்தாமல் நாம் வாழ முடியாது என்பதை எனது சிறுவயது நிறைய பாடம் நடத்தி விட்டது.பசிக்கிறது என்று பொதுவில் சொல்லி விடவேண்டும்.இல்லையெனில் சோறு கிடைக்காது.எனக்கு தீங்கிழைக்கிறார்கள் என கத்தி விடவேண்டும்.பொறுத்துக் கொண்டிருந்தால் சோறு கிடைக்காது.தீமை அகலாது.நான் எனது குழந்தைகளுக்குக் கூறுகிற ஒரேவொரு அறிவுரை நீங்கள் உங்கள் வலியையோ,துன்பத்தையோ சொல்லிவிடுங்கள் பொறுத்துக் கொள்ளாதீர்கள் என்பதை மட்டும்தான்.
சிறுவயது அநீதிகளுக்கும் எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீமைகளுக்கும் ,வன்முறைகளுக்கும் எதிராக முதன் முதலாக நாட்குறிப்பு எழுதத் தொடங்கினேன்.ஒருவேளை நான் இறந்து போனால் அந்த தீமைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்பது மட்டுமே அந்த நாட்குறிப்புகளின் நன்னோக்கம்.வேறொன்றுமில்லை.
பிறிதொரு குழந்தைக்கு குடும்பத்திலேயே கிடைக்கிற விளையாட்டுப் பொருட்கள்,சிறப்புகள்,பிரத்யேக பதார்த்தங்கள் ,புதுத்துணிகள். எங்களுக்குக் கிடைக்காது.
நல்ல மீன் வீட்டில் வாங்கக் கூடாது என நினைப்பேன்.நெய் மீன்களும் ,விள மீன்களும் வாங்கப்படும் நாட்கள் பிறருக்குரியவை என்பதை அறிவோம்.அன்று எங்களுக்கு தலையோ செள்ளோ மிஞ்சும். நல்ல மீன் வாங்கினால் அவை எங்கள் வயிற்றுக்கு வராது.மலிவான மீன்கள் வாங்கப்படும் நாட்களில் மட்டுமே செழிக்கச் சாப்பிடுவோம்.
மிகவும் மனத் தொந்தரவுகளுக்கு ஆட்படுத்தப்பட்ட குழந்தையாகவே வளர்ந்தேன் .அம்மா இருந்தவரையில் அதீத முக்கியத்துவம் கொண்ட குழந்தை அவள் தவறியது தொடங்கி அனுபவித்த அநீதிகள்.இவை இரண்டுமே காரணங்கள்.
இப்படி நாட்குறிப்பிலிருந்தே எழுத்துக்குள் நுழைந்தேன்.
நீங்கள் சுந்தர ராமசாமிக்கு மிக நெருக்கமாயிருந்தவர்..அவருடனான நினைவுகள் குறித்து?
அவர் இல்லையானால் நீங்கள் காணுகிற இப்போதைய "நான்" இல்லை.தினசரி பத்திரிகை செய்தி வாசிப்பவர்கள் மத்தியில் ஒருவேளை புகழடைந்திருப்பேன் .ஒரு கொலைகாரனாகவோ,வழிப்பறியாகவோ ,வேறோருவிதத்தில் .
அப்பாவை வெட்டிக் கொலை செய்து விடுவது எனும் நோக்கம் கூர்மைப்பட்டுத் திரிந்த காலத்தில்தான் நான் சுந்தர ராமசாமியை சந்திக்கத் தொடங்கினேன்.அதற்கு முன்னரே கோணங்கியிடம் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. என்னை சுந்தர ராமசாமியை போய் பார்க்கச் சொன்னவர் கோணங்கிதான் .நான் சொல்லுவது தொண்ணுறுகளின் தொடக்ககாலம்.அதிலிருந்து எட்டு வருட காலங்கள் நெருங்கிய நட்பு.அவருடைய நற்பண்புகளின் கால்பகுதியேனும் மனதில் உறைக்கப் பழகிய காலங்கள் அவை.
அவர் என் வாழ்வின் மிகவும் மதிப்பு மிக்க நினைவு.அவரைப் பற்றிய நூல் ஒன்றை எழுதுகிற வாய்ப்பை காலம் வழங்குமெனில் பகிர பல விஷயங்கள் உள்ளன.அபூர்வமான பறவைகள் காணாமல் போய்விடுவதைப் போல அவர் காணாமல் போய்விட்டார்.அவர் மரணத்தின் போது தீவிரமான மனச்சிதைவுக்கு உள்ளானேன்.அவ்வளவுக்கு கலங்கடித்த பிறிதொரு மறைதல் என்னிடம் இல்லை.
அவரது இலக்கிய பெறுமதி என்பது யூ.ஆர்.அனந்தமூர்த்தி ,பாதல் சர்க்கார்.பேராசிரியர்.ராமானுஜம் ஆகியோரைக் காட்டிலும் சிறப்பு மிக்கது.அவர் நவீன காலத்தின் சாரம்.இலக்கிய இயக்கம்.
தமிழ் சமூகம் அவர் மீது கொண்டிருந்த பராதிகள் அனைத்துமே வெறும் அற்பத்தனமான அவதூறுகளே அன்றி பொருட்படுத்தும் படியானவை அல்ல. இன்றும் என்னிடம் அவரிடம் சாதி,மத துவேஷங்கள் இருந்ததா என கேட்பவர்கள் இருக்கிறார்கள்.இவை அகன்றால்தான் ஒருவரை படைப்பாளி என ஒத்துக் கொள்வேன் என்னும் நிலை எதுமே என்னிடம் கிடையாது.மட்டுமல்லாமல் இந்த கேள்விகளை சுமந்தலைவதுதான் கோளாறே.சுந்தர ராமசாமி இதற்கெல்லாம் சிறிதும் பொருத்தமற்றவர் . அவரின் மனப்பரப்பிற்குள்ளேயே இவற்றிற்கு ஏதும் வேலை கொடுக்காதிருந்தவர்.இத்தகைய விசாரணைகளில் சங்கடப்பட்டு நெளிபவர்.அக்கறை படாதிருந்தவர்.
உரிமைகளின் பொருட்டு எல்லோரும் சமமாகப் பாவிக்கப்படுதல் வேண்டும் என்பதில் அவரிடம் எத்தகைய சமரசமும் கிடையாது.அவர் ஆகச் சிறந்த முற்போக்கு.ஆனால் அவரை முற்போக்கு என்று யாருக்கும் அடையாளம் காணத் தெரியவில்லை.
சுந்தர ராமசாமியை முற்போக்கு என அடையாம் காண்பதற்கு என்ன தடைகள் இருந்திருக்கக் கூடும் என நினைக்கிறீர்கள். அந்தத் தடையை அவரே உருவாக்கிக்கொண்டாரா என்ன?
அவரே எப்படி அவருக்கான தடையை உருவாக்குவார்? முற்போக்காளர்கள் தன்னைக் தெரிந்து கொள்ள தவறுகிறார்கள் என்கிற ஆதங்கம் அவருடைய உரைநடைகள் முழுவதிலுமே பாடுபொருளாக இருக்கிறது.பல எழுத்தாளர்கள் முற்போக்குக் கம்பனிகளைப் பொருட்படுத்துவதே இல்லை.பொருட்படுத்திய ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.முற்போக்கிகள் கருத்து நிலைபாடுகளைத் தாண்டி வர இயலாதவர்களாக இருபதற்காக அவர் நிறைய அவரது உரைநடைகளிலேயே கவலை வெளிப்படுத்தியிருக்கிறார்
இப்போது ஜே.ஜே சில குறிப்புகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
இன்று எனக்கு அது முக்கியமான நாவலாகப் படவில்லை.அவருடைய சிறுகதைகள் காலம் கடந்து வாழும் திறன் படைத்தவை.அவரது நுட்பமும்,அழகுணர்ச்சியும் சிறுகதைகளில் மட்டுமே உள்ளது.புளியமரத்தின் கதையை அவரது நீளமான சிறுகதை என்று சொல்லலாம்.கவிதைகளைப் பொறுத்தவரையில் பின் திண்ணைக் காட்சி,ஆளற்ற லெவல் கிராசிங்கில் ,மூடு பல்லக்கு இன்னும் இவை போன்ற ஒன்றிரண்டு கவிதைகளில் ஆசையுடன் முயற்சி செய்து பார்த்திருக்கிறாரே அல்லாமல் ,இப்போது மீண்டும் வாசிக்கையில் கவிதைகளில் அவர் எழுதியவை மிகச் சிறந்த அறிவுரைகளாகவும்,அபிப்ராயங்களாகவும் சரிந்து கிடக்கின்றன.உரைநடையில் தேர்ந்த நிபுணர்.ஸ்டைலிஸ்ட் . சிறுகதைகளே அவரது ஆன்மா.
ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் தமிழில் ஒரு வாசகனுக்குப் புதிய திறப்பாக அமைய முடியும்.நவீனத்தின் மீதான திறப்பாக . தமிழ் நவீனத்துவம் பெற்ற ஒரு முழுமையான வடிவம் அல்லது வடிவ தற்சோதனை அந்த நாவல் என்று சொல்லலாம் . இன்று உங்களுடைய கொரில்லா,பாக்ஸ் உட்பட இந்த வடிவ பரிசோதனைக்கு தொடர்ச்சி இருக்கிறது.இதற்கு முழு காரணம் சுந்தர ராமசாமிதான் என்று சொல்ல முடியாது.நகுலனில் இது தோன்றுகிறது.சுராவிடம் முழுமை பெறுகிறது.என்றாலும் நவீன காலகட்டத்திற்குப் பிற்பாடு ஜே.ஜே சில குறிப்புகள் நாவலின் உள்ளடக்கம் அலுப்பூட்டுவதாக மாறி விட்டது.அது ஒருவகையான நா. பார்த்தசாரதி வகையறா நாவல்தான்.
ஒரு காலகட்டத்தில் தோன்றும் படைப்பு பிறிதொரு காலத்திலும் செல்வாக்கு பெற இயலாமற்போகுமெனில் அர்த்தம் பெற தடையாக இருக்குமெனில் அதில் ஆழப்பொருளும் அகப்பொருளும் இல்லையென்றே அர்த்தம்.நவீன காலத்திலேயே உருவான அப்போது மதிக்கத் தவறிய எம்.வி .வெங்கட்ராமின் நித்திய கன்னி,காதுகள் போன்ற படைப்புகள் மீண்டும் மினுங்குகின்றன.லா.ச.ரா நவீன காலத்தின் புறக்கணிப்பையும் தாண்டி நவீன காலத்தின் பிந்தைய நிலையில் புனர்ஜென்மம் பெறுவதையும் கவனிக்க வேண்டும் .
உங்களது இலக்கிய வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் கவிஞர் விக்கிரமாதித்யனின் ஆளுமை எவ்வளவு தூரத்திற்குக் கலந்திருக்கிறது?
விக்கிரமாதித்தன் நம்பியின் போக்கும் என்போக்கும் வேறு வேறு.
அவர் என் மதிப்பிற்குரிய கவிஞர்.ஏற்கனவே உருவான நிலைகளை பொதுவெளியில் வைத்து அவர் துகில்
உரிந்திருக்கிறார் . சகல கருத்து நிலைகளையும் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கிறார்.நிர்வாணத்திற்கு உட்படுத்தியிருக்கிறார் . அதுவே அவர் வெளிப்படையாக அடைந்த நிர்வாணமும்.அதனை மறைக்க அவர் மேற்கொண்ட ஒரு முயற்சியும் கைகூட வில்லை.நரபலி மொழி விளையாட்டு எடுத்துக் கொண்ட நரபலி அவர்.சகலத்தையும் கலைத்துப் போட்டிருக்கிறார்.பொதுக் கருத்துக்களை துவம்சம் செய்திருக்கிறார்.
தமிழ் கவிதைகளை மதிப்பிடுவதில் அவருக்கு நிகராக ஒருவரையும் சொல்ல முடியாது.அவரது வாய்ப்பழக்கத்தில் உச்சரிக்கப்படாத ஒருவன் பிச்சமூர்த்தி காலம் தொடங்கி இன்று எழுதும் ஒருவன் வரையில் எவனும் கவியானதாக இல்லை.அந்த அளவிற்கு கவிதையில் சிந்தனை திரண்டவர் .
அகப்பொருளற்ற கவிஞரவர்.தேவதச்சனை அகப்பொருளின் கவிஞன் என்றால் விக்கிரமாதித்தன் நம்பியை அகப்பொருளற்ற கவிஞன் எனலாம்.இருவேறு எதிரெதிர் துருவங்களும் தன கதியில் நிலைபெற தமிழ் மொழி சாத்தியம் கொண்டிருக்கிறது. அகப்பொருள் அற்றவர் விக்கிரமாதித்தன் . அகப்பொருள் கொண்டவரைப் போல தோற்றம் காட்டுபவர்.அகப்பொருள் ஏதுமின்றி தமிழில் ஒரு கவி நிலைக்க முடியுமாயின் அது விக்கிரமாதித்தன் நம்பி அன்றி பிறிதொருவருக்கு சாத்தியமில்லை.
எனதுகவிதைகள் அகப்பொருட்களாலும் ஆனவை.
இன்றைய தமிழ் இலக்கியப் போக்கை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
நவீன காலத்தின் மதிப்புகளை விற்றுப் பிழைக்கிறார்கள்.பரிசோதனையும் ,புதிய கண்டுபிடித்தலும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.தமிழில் நவீன காலமே இலக்கியத்தின் பொற்காலம்.அவர்களின் பார்வைகளை,தரிசனங்களை இப்போதும் விற்று முதலாக்கிக் கொண்டிருக்கிறோம்.
பரிசோதனையும்,புதிய கண்டுபிடிப்பும் இல்லாதவற்றை இலக்கியம் என்று எனக்கு ஒத்துக்கொள்ள முடிவதில்லை.கண்களுக்கெட்டாதவற்றைப் படைப்பு அறியப் படுத்தவேண்டும்.எனக்கு ஏற்கனவே தெரிந்த சங்கதிகளை என்னிடம் கொண்டுவந்து மூடை மூடையாக தட்டுவதற்கு இலக்கியம் எதற்கு? இளைஞர்கள் பரிசோதனைகள் பேரில் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள்.ஏதேனும் உடனடி அறுவடைக்கு ஏற்றவற்றை பயிரிடவேண்டுமென விழிப்பு கொண்டிருக்கிறார்கள் .சமூகசரிதைகள் வண்டி வண்டியாக கொண்டு கொட்டப் படுகின்றன.
கலையும் ,இலக்கியமும் பயனின்மையின் சார்பில் இயங்குபவை.இந்த முரண் இங்கு இப்போது வேலை செய்யவில்லை.அதற்கான நெருக்கடியிலும் இவர்கள் இன்று இல்லை.அடுத்த தலைமுறையில் பெண்கள்தான் அதிகம் எழுத வருவார்கள் என நினைக்கிறேன்.அவர்கள்தான் இப்போது நெருக்கடியில் இருக்கிறார்கள்
காலச்சுவடு, உயிர்மை போன்ற இடைநிலை இதழ்களின் இடம் இன்றைய இலக்கியத்தில் என்னவாயிருக்கிறது?
குமுதம்,குங்குமத்தைக் காட்டிலும் தீமையாக நான் கருதுவது இவர்களைத்தான். பரிசோதனைகள் பேரில் ஆர்வம் சூழலில் கழன்று விழ காரணமானவர்கள் இவர்கள்.அந்த இடத்தையே இல்லாதொழித்தவர்கள் .ஒழித்தவனே காவலாளி வேடத்திலும் நடிப்பது போல உலகமெங்கும் கலை இலக்கியக் காவலர்கள் போல தங்களை பிரபலப் படுத்தியிருக்கிறார்கள் .இவர்கள் இருவரும் ஒழியாமல் தமிழில் இனி புதிய முயற்சிகள் எதுவும் தோன்றாது .
இவர்கள் இரண்டு தறுதலைகள் உருவாகப்போக ,தமிழில் இவர்களை பார்த்து கெட்ட,ஒத்த பத்து பதினைந்து தறுதலைகள் உருவாகி விட்டார்கள்.இவர்களின் முகவர்கள் இன்று உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள்.இலங்கையில்.புலம்பெயர்ந்த நாடுகளில் என. இன்று இவர்களின் பிடிக்குள் சூழல் அகப்பட்டிருக்கிறது.பரிதாப நிலைக்குக் காரணம் இதுதான்.
வணிகம் பேரில் கொண்ட பாரம்பரியமான பார்வைகளால் இதனை நான் சொல்லவில்லை.தமிழ் போன்ற பழம் பெரும் மரபு கொண்ட மொழியில் வணிகமும் கலையிலக்கிய புதிய முயற்சிகளும் ஒன்றிணைவது இயலாது.ஏனென்றால் பழம்பெரு மரபு கொண்ட மொழிகளில் மக்களின் பெருமிதம் என்பது பழம் பெருமைகளில் தேங்கி நிற்கக் கூடியது.வணிகத்தின் இணைப்பு செல்வாக்கு பெற புதிய முயற்சிகள் அதற்கு அவசியமில்லை.மலையாளம்,கன்னடம் எல்லாம் வேறு.அங்கெ புதிய முயற்சிகளில் இருந்து மட்டும்தான் அவர்கள் தங்களின் பெருமையை நிலைநாட்ட முடியும்.
மலையாளத்தில் மனோரமா போன்ற வெகுஜன வணிக இதழ்களுக்கும் கூட புதிய முயற்சிகளும் ஒரு வணிகத் தேவையாக இருப்பதை ஒப்ப இங்கோ , ஆந்திராவிலோ எதிர்பார்க்க முடியாது.
மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷிரை யாரென்று எந்த வெகுஜன இதழும் அறியாமல் உயிர் வாழ முடியாது.இங்கே புதுமைப்பித்தன்பிரபலமாவதற்கே இன்னும் நூருவருடம் ஆகும்.
நாலு பேர் சேர்ந்து நட்டப்பட தயாராக இருக்கும் எத்தனையோ காரியங்களில் அன்றாடம் ஈடுபடத்தான் செய்கிறோம்.கூட்டாக ஊர்களில் சேர்ந்து சாமி கொடைகள் நடத்துகிறோம்.அது போல இலக்கியத்தில் ஈடுபடும் சிறுகூட்டமே இன்றைய தேவை.அவர்களால் மட்டுமே புதிய முயற்சிகள் தமிழில் இனி சாத்தியம். இடைநிலை இதழ்கள் ஈமு கோழி வளர்ப்புப் பண்ணைகள்.
நம்முடைய காரியங்கள் வணிகத்திற்கு அப்பாற்பட்ட சிறு சிறு கூட்டு முயற்சிகளால் மட்டுமே உருக் கொள்ளமுடியும்.பயனற்ற மடத்தனமான காரியங்களில் மனம் கொண்ட சில சாதியப்பாடுகளின் மூலமாக .
வணிகம் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்.காலச்சுவடும் ,உயிர்மையும் வணிகத்தை உலக முகவர்களை ஒன்று கூட்டி நிறுவனமாக்கி சதை திரண்ட மதம்போல மாற்றி வைத்திருக்கிறார்கள் .இவர்கள் இருவருமே கலை இலக்கியத்திற்கு,புதிய முயற்சிகளுக்கு எதிரான பெருந்தீமைகள். இவர்கள் இப்போது தமிழில் பிராய்லர் கோழி வளர்ப்புப் பண்ணைகளை ஒத்த ஸ்தியை அடைந்திருக்கிறார்கள். .இவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்வதும் ,விலகுவதுமே தற்போதைய அவசரம்.
இத்தகைய இடைநிலை இதழ்களைக் களமாக்கி காத்திரமான படைப்புகள் வெளியாக்கிக்கொண்டுதானேயிருக்கின்றன. அநேக படைப்பாளிகளின் முதல் புத்தகங்களை இவர்கள்தானே பதிப்பித்து வெளியிடுகிறார்கள். நம் காலத்தின் தீவிர சிந்தனையாளர்கள் எல்லோருமே ஏதோ ஒருவகையில் இத்தகைய இதழ்களில் பங்கெடுக்கிறார்களே..என் நீங்களே கூட தீராநதியிலும் அம்ருதாவிலும் தொடர்ந்து எழுதுகிறீர்களே?
காலச்சுவடு உயிர்மை போன்றவற்றிலும் கூட நான் எழுதலாம்.காலச்சுவட்டில் நிறைய எழுதியிருக்கிறேன்.அது பிரச்சனை அல்ல.அவற்றைப் பற்றிய எனது கண்ணோட்டம் என்ன என்பதுதான் பிரச்சனை.ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன்.அணுவுலையில் வேலை செய்யும் ஒருவர் அணுவுலைகளுக்கெதிரான பார்வை கொண்டிருக்கக்கூடாது என கண்டிக்க முடியுமா என்ன?நீங்கள் கேட்பது பழைய அறங்களை முன்வைத்து.
இன்று ஒருவர் சகலவிதமான எதிர்நிலைகளோடும் ஊடுபாவாமல் வாழ்தல் சாத்தியம் இல்லை. மிக மிக மட்டம் என பிறர் நினைக்கக் கூடிய வெகுஜன இதழ்களிலும் எழுதியிருக்கிறேன்.பணிபுரிந்திருக்கிறேன்.இவர்கள் நாங்கள்தான் சக்கரவர்த்திகள் என்கிற ஒரு சொம்பைத் தூக்கிக் கொண்டலைகிறார்களே அதன் பேரில் எனக்கு மதிப்பில்லை.ஒரு மதிப்பீட்டை மறைமுகமாகவும் நேரடியாகவும் உங்கள் தலையில் சுமத்துகிறார்களே அதுதான் .இவர்கள் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு வணிகம் செய்வதாக ஏமாற்றுபவர்கள் .பிற பதிப்பகங்களைப் போல அல்ல.அவர்கள் வெறும் வணிகர்கள் . கவிதா பதிப்பகமும் காலச்சுவடும் ஒன்று அல்ல.உயிர்மையிடம் என் மேலும் மேலும் பலர் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்?
மிகச் சாதாரணமான சில பதிப்பகங்கள்தான் கழிந்த பதினைந்து வருடங்களில் மிக்கியமான படைப்பாளிகள் கவிஞர்களை தமிழில் கொண்டு வந்திருக்கிறார்கள் .இவர்களும் செய்திருப்பார்கள்.அதற்கு இவர்கள் பேரில் நான் முன்வைக்கிற மதிப்பீட்டிற்கும்,குற்றச்சாட்டிற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
நமது சுழலில் பிரசுர பாக்கியமே பெரிது என்னும் எண்ணம் கொண்டவர்களே அதிகம்.
ஈழத்துக் கவிதைகள் உரத்த குரலில் அரசியலைப் பேசுவதால் அவை உங்களைக் கவருவதில்லை என்ற பொருள்பட ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். போர்நிலத்தில் அது தவிர்க்க முடியாதவொன்றுதானே...ஈழத்துக் கவிதைகளை பாலஸ்தீனக் கவிதைகளுடன் ஒப்பிடமுடியுமல்லவா?
சமகால நெருக்கடிகளுடன்,சமகாலத் தன்மையை கவிதை அடைகிறதா இல்லையா என்பதுதான் பிரச்சனையே அன்றி அது எழுப்பும் குரலின் ஓசை எப்படி இருக்கிறது என்பது பிரச்சனையில்லை.சமகால தன்மையில் தன்னிலை கரையும் கவிஞன் காரசாரமாகவும் பேசலாம்,இதமூட்டவும் செய்யலாம்.
ஈழத்தின் விஷயங்களை எனக்கு சரியாக விளங்கிக் கொள்ள இயலவில்லை.கவிதைகளில் காணக் கிடைக்கும் தன்மைகள் புரிதலுக்கு போதுமானவையாக இல்லை.வெளிப்படையாகப் பேசுவதானால் ஓரளவிற்கு நான் தனிப்பட்ட முறையில் குலசிங்கத்துடனான நேரடியான உரையாடல்கள் ,புஷ்பராஜாவின் "ஈழ போராட்டத்தில் எனது சாட்சியம்", மற்றும் உங்களுடைய படைப்புகள் வழியாக ஒரு சிறு வெளிச்சத்தை பெற்றிருக்கிறேன்.
சேரன் போன்றோரை எல்லாம் கவிஞராக எனது மனம் ஒத்துக் கொள்ளவே இல்லை.இலங்கை வைரமுத்து அவர் என்பதுதான் எனது எண்ணமாயிருக்கிறது.தளையசிங்கம் பேரில் எனக்கு மதிப்பிருக்கிறது.உமா வரதராஜன் ஆரம்ப காலத்தில் படித்தது.அனாரின் கவிதைகள் எனக்குப் பிடிக்கும்.நுக்மான் மீது எனக்கு மதிப்பில்லை.இவர்கள் ஆகச் சிறந்த பரோவுபகாரிகளாகவும்,சான்றோர்களாகவும் ,நற்சிந்தை கொண்ட நன்மனிதர்களாகவும் இருக்கலாம்.எனக்கு மறுப்பில்லை.அது பற்றி எனக்கு தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.உலகம் முழுதுமே நன்மனிதர்களின் எண்ணிக்கை அதிகம் என்றுதான் சொல்கிறார்கள்.இவை ஒரு புறம் இருக்கட்டும் .
பாலஸ்தீனக் கவிதைகளுடன் ஈழத்துக் கவிதைகளை நிச்சயமாக ஒப்பிடயிலாது.பாலஸ்தீனக் கவிதைகள் சமாகாலப் பிரஞ்ஞை குன்றாதவை..இரண்டும் வேறு வேறு காலத்திலும் மனோபாவத்திலும் இயங்குபவை.பாலஸ்தீனக் கவிதைகள் நவீன அரசாங்கங்களின் வன்முறையிலிருந்தும் , நவீன அரசாங்கங்கங்களின் கொடூரமான முகங்களிலிருந்தும் தோற்றம் கொள்பவை.இலங்கையில் உரத்தகுரல் நவீன அரசைச் சென்றடைவதில் உள்ள பண்ணை முதலாளிகளின் ,நிலா பிரபுக்களின் இன,குழு,சாதிமேலாண்மைத் தடைகளிலிருந்து உருவாகின்றனவோ என்கிற சந்தேகம் எனக்குள் இருக்கிறது.இன்று உலகத்தின் பல இடங்களிலும் ஆயுதம் தாங்கிய யுத்தக் குழுக்களின் பின் செயல்படும் உளப்பாங்கு பல்வேறு காரணிகளாலும் அமைந்திருக்கிறது .வணிகமும் இதில் அடக்கம்.ஆயுத வணிகம்.நாம் நேரடியாகக் கருதிக் கொண்டிருப்பதைப் போல நோக்கத்தை மட்டும் கொண்டு இயங்குபவை அல்ல இந்த குழுக்கள்.
அவற்றை ஆதரிக்கும் அல்லது நிராகரிக்கும் போக்குகள் மட்டுமே அரசியல் தன்மை கொண்டிருக்கின்றன .அவற்றின் உள்ளீடான காரணங்களும் காரணிகளும் ஒன்றிற்கொன்று தொடர்பற்றவை.இவற்றிற்கிடைப்பட்ட விந்தை என்ன என்பதை அறியும் வேலை எழுத்தாளனையும் சார்ந்தது.
யுத்தம் முடிந்த பின்னர் இனி என்ன செய்யப் போகிறோம் என்கிற மனச்சோர்விற்கு பெண் போராளிகள் இலக்கானதாக ஷெர்மிளா ஷெய்யித்தின் பதிவொன்றில் படித்தேன் .எழுத்தாளன் கண்டடைய வேண்டிய மிக்கியமான இடம் இது என்பது எனது எண்ணம்.
மணிவண்ணன் கொண்டாடும் சிறுதெய்வ வழிபாடும் பண்பாடும் உண்மையில் இந்து மதத்திற்கு வெளியேதான் இருக்கிறதா?
நானொரு இந்து.இந்து மத பழக்க வழக்கங்களை கடை பிடிப்பவன்.சிறு தெய்வ வழிபாடு இந்து மதத்திற்கு உட்பட்டதுதான்.நான் என்ன வழிபடவேண்டும்,?எதை நான் வழிபட்டால் அது முற்போக்கானதாகக் கருதப்படும்? போன்ற எத்தகைய உயரிய ஆலோசனைகளையும்,அபிராயங்களையும் மேலாண்மை செய்யும் எந்த அசரீரிகளிடமிருந்தும் கேட்பதை நான் விரும்பவில்லை.
புத்தம் இலங்கையில் அநீதி .அதற்காக புத்தனைக் கழுவிலேற்ற முடியுமா? ரோமன் கத்தோலிக்கத்தை முன்வைத்துதான் நீட்ஷே கடவுளின் இறப்பை அறிவிக்கிறார்.கிறிஸ்தவத்தை தூக்கிலிடப்பட்டவனின் மாயவரலாறு என்கிறார் அவர்.அதற்காக என்ன செய்வது?
இந்தியாவின் மீது கோலோனியல் யுத்தம் ஒன்று தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.காலனிய வெளியேற்றம் நடைபெற்ற நாடுகள் அத்தனையிலும் வெளியேற்றத்திற்குப் பின்னரும் பிளவையும்,வெறுப்பையும் மட்டுமே மட்டுமே முன்னிறுத்தி நடைபெறுகிற யுத்தம் இது .அவர்கள் எனக்கொரு வரலாற்றை அணிவிக்க விரும்புகிறார்கள்.எனது முற்போக்குத் தன்மைக்கு சான்றிதழ் தர முயல்கிறார்கள் .இவற்றை நான் வேண்டவுமில்லை.பொருட்படுத்தவும் இல்லை.
வரலாறு என்பது புனைவு.அதன் நோக்கம் உங்களிடம் பிளவையும்,வெறுப்பையும்,சந்தேகத்தையும் மட்டுமே சாதிக்கிறதென்றால் அது மாபெரும் கலோனியல் வரலாற்றுப் புனைவு.உங்களை எந்த திசையில் கட்டி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு கட்டப்படுகிற புனைவு அது.அது கட்டும் புனைவை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தும் கருவிகளை என்னுடைய தன்னிலையிலிருந்து தொடர்ந்து கழற்ற முயற்சித்துக் கொண்டிருப்பவன் நான்.வரலாற்றைத் துண்டித்து விட்டு எனக்கு இனிமை தரும் எல்லாவற்றிலும் கலந்து கொள்ளவே விரும்புகிறேன்.ஒவ்வொரு பொருளிலும் அதன் அதிகாரம்,வரலாறு உட்பட எழுப்பப்பட்டிருக்கும் புறகட்டுமானங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு நேரடியான மகிழ்ச்சிக்கு செல்வதே எனது இலக்கு.அவற்றின் மீது கட்டபட்டிருக்கும் அதிகாரத்திற்கும் எனது தன்னிலையில் வேலையில்லை,வரலாற்றிற்கும் என்னிடம் வேலையில்லை.
எனக்கு சுடலைமாட சாமியும் ஒன்றுதான் நெல்லையப்பனும் ஒன்றுதான் அன்றாடத்தில் இடையூறை அவர்கள் ஏற்படுத்தாத வரையில் . பிள்ளையாரின் நேர்மறையான ,எதிர்மறையான சகல அம்சங்களும் கழற்றிவிட்டு யோசித்துப் பாருங்கள்.விந்தையான வினோத உருவம் அது.இப்படி பார்த்த சாத்தியம்.இந்த சாத்தியம் மட்டும்தான் உங்களுடன் வரலாறு கொண்டு வந்து கொட்டியிருக்கும் சுய வெறுப்பையும் பிற வெறுப்பையும் கட்டுப்படுத்த உதவும்.வரலாற்றுப் பார்வைகள் எனப் படுபவை கலவரங்களுக்கானவை.வெறுப்பிற்கானவை .
வரலாற்றின் பேரில் என் கழுத்தில் மாட்டப்படும் கலோனியல் அடையாள அட்டைகளை செயல்பட மறுப்பது எனது பணியே. நான் இந்து மதத்தை சார்ந்தவன் என்பதில் எனக்கு ஒரு இடர்பாடுமே இல்லை.அது அசரீரிகள் அறிவிப்பது போல ஒற்றைப்படையானது இல்லை.அது எல்லா மதங்களையும் போலவே நன்மையையும் ,தீமையும் கொண்டது.வள்ளலாரும்,ராமானுஜரும்,வைகுண்ட சாமியும்,சட்டம்பி சாமிகளும் ,ஸ்ரீ நாராயண குருவும் , அய்யங்காளியும் இந்து மதத்தை சார்ந்தவர்கள்தான்.
உன்னிடம் நடக்கும் நல்லவற்றிற்கெல்லாம் நாங்கள் பொறுப்பு,அவலங்களுக்கெல்லாம் நீ கொண்டிருப்பவை மட்டுமே பொறுப்பு என்பது கொலோனியல் மேட்டிமைத்தனம்.
சாதிய ஏற்றத்தாழ்வும் தீண்டாமையுமற்ற இந்துமதம் சாத்தியம் என்கிறீர்களா? நடைமுறையில் சிறுதெய்வ வழிபாடோ பெருந்தெய்வ வழிபாடோ எந்த வழிபாட்டு முறையைச் சேர்ந்த இந்துக்களும் சாதிக்கும் தீண்டாமைக்கும் வெளியிலில்லையே? ஒன்றில் அவர்கள் சாதியரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது ஒடுக்குகிறார்கள். ஒரே பதிலில் புத்தரையும் அம்பேத்கரையும் பெரியாரையும் 'தலித்துகள் இந்துகள் இல்லை' என்ற நவீன அரசியற் குரலையும் நிராகரிக்கிறீர்களா?
சாதிய ஏற்ற தாழ்வும் தீண்டாமையும் இந்து மதத்தின் சாராம்சங்கள்இல்லை..ஆழ்வார்களும்,நாயன்மார்களும்.சித்தர்களும் ஒரு சாதிக்குப் பிறந்தவர்கள் இல்லை.
உலகின் எல்லா மதங்களிலும் தீமையும் உண்டு .கிறிஸ்தவர்கள் இங்கே கால்வைக்கத் தொடங்கும் போது சாதி பார்த்து ஆய்வுகள் மேற்கொண்டு கால்பதித்து சாதியை தீவிரப் படுத்தியவர்கள் .சாதி எப்போதும் கொழுந்து விட்டெரிய வேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள்.கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ மதப்பிரிவும் ஒவ்வொரு சாதி ஏன்?
தலித்துக்கள் இந்துக்கள் இல்லை என்ற குரலே தவறானது.இந்தியாவில் பெரும்பான்மையான தலித்துக்கள் இந்துக்கள்தான்.தலித்துகள் இந்துக்கள் இல்லை என்கிற வாதம் பொதுவானதொரு அரசியல் குரல் அல்ல.
இந்து மத தலைமைப் பொறுப்பே பல சமயங்களில் தலித்துகளின் கைகளில் இருந்திருக்கிறது.அய்யன்காளி மிகப் பெரிய உதாரணம்.
ஏற்ற தாழ்வுகள் எந்த வடிவத்தில் இருந்தாலும்,எந்த பொருளில் வந்தாலும் களையப் படவேண்டுமேயன்றி அதற்கு இந்துமதத்தை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது.இத்தகைய பார்வைகள் மரபான வரலாற்றாசிரியர்கள் கட்டுவித்தவை.
ஆழ்வார்களிலும் ,நாயன்மார்களும் ,சித்தர்களிலும் தலித்துக்கள் உண்டு.இவர்கள் இல்லாத இந்து மதம் எப்படி சாத்தியம்?
கோவில்களையும் ,மடங்களையும் யாரோ சம்பந்தமில்லாதவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள் என்றால் உடைத்து உள்ளே செல்ல வேண்டியதுதான்.இந்து மத கோவில்கள்,புராணங்கள் எல்லாம் எல்லோருக்கும் உரியவைதானே அன்றி பறிமுதல் செய்து வைத்திருப்பவனிடன் ஒப்படைத்து விட்டுக் கலைந்து செல்வதற்காக அல்ல.
சாதிய ஏற்ற தாழ்வுகளும்,தீமைகளும் தொடர்ந்து எல்லோராலும் வேறுவேறு காரணங்களுக்காக பேணப்படுகின்றன.அரசியல் காரணங்கள்,கொலோனியல் ஆர்வம், ஆகியவையும் இவற்றில் அடக்கம்.இந்துமதத்தைக் காரணமும் முழுப் பொறுப்பும் ஏற்குமாறு நிர்பந்திப்பது சரியான அணுகுமுறையில்லை.
சாகித்ய அகடாமி விருதுகளைத் திருப்பக்கொடுப்பது குறித்து உங்களது பார்வையென்ன?
பொது இடர்பாடுகள் , பொதுவான உரிமைகளின் மீதான அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது கூட்டாகச் சேர்ந்து எழுத்தாளர்கள் , கலைஞர்கள் குரல் தரவேண்டும் அது ஒரு தார்மீக நிலைபாடு.நிலைபாட்டின் உள்ளர்த்தமும் ,அரசியலும் எவ்வாறு வேண்டுமாயினும் இருக்கலாம்.அதனை இடர்பாட்டின் நேரத்தில் வெளிபடுத்தத் தேவையில்லை.அப்படிபட்ட நேரங்களில் நிலைபாட்டின் மீது அதிருப்தியை வெளிபடுத்துதல் நேர்மைக்குப் புறம்பானது.
எழுத்தாளர்களும் ,கலைஞர்களும் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பிக் கொடுத்தது நல்ல எதிர்வினை.தமிழ்நாட்டில் இதற்கு ஆளில்லாமல் போனது வருந்ததக்கது.இவர்களின் சகலவிதமான முற்போக்கு முகமூடிகளும் அதிகாரத்தை மட்டுமே இலக்காக கொண்டவை என்பதை தெளிவு பட்டுவிட்டது..
இப்போது தமிழ் சினிமா மாறிவருகிறது என்கிறார்கள் எழுத்தாளர்கள். வணிகச் சினிமாவை எழுதுவதற்கென்றே 'காட்சிப் பிழை'யென்ற பத்திரிகை அறிவுஜீவிகளால் நடத்தப்படுகிறது. இலக்கிய மேடைகளிற்கு சூப்பர் ஸ்டார்களும் அசட்டு சினிமா இயக்குனர்களும் அழைக்கப்படுகிறார்கள். நாம் வெட்கமுற வேண்டுமா?
தான் செல்கிற அனைத்து பாதைகளையும் நியாயப்படுத்திக் கொண்டே செல்வது நமது பொது நோய்.காட்சிப்பிழையை ஒரு சினிமா இதழாகவோ, அதில் எழுதுகிறவர்களை அறிவுஜீவிகளாகவோ நான் கருதவில்லை. இந்த சீசன் வியாபார அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் போர்டு பௌண்டேஷன் போன்ற உளவு நிறுவனங்களில் போய் சேர இப்படி பயிற்சி எடுத்துக் கொள்வது தமிழ்நாட்டில் ஐந்தாண்டுத் திட்டம் போன்றதொரு பழக்கம்.இப்படியான பயிற்சி இதழ்கள் பல வருவதையும் போவதையும் பொருட்படுத்த ஏதுமில்லை.மேலும் தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்ற தரப்பினரே இன்னும் உருவாகவில்லை வெறுப்பற்ற பார்வை கொண்ட ஒருவர் கூட.
அ.மார்க்ஸ் ,எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ,வெங்கடேஷ் சக்ரவர்த்தி ,ராஜன் குறை ,பிரேம் எல்லோரையும் கவனத்தில் எடுத்துக் கொண்டே இந்த கூற்றைச் சொல்கிறேன்.அறிவுஜீவி தமிழில் இன்னும் உருவாகவில்லை.சாம்ஸ்கி ,ழான் போத்திரியா ,அசீஸ் நந்தி ,டி.ஆர் .நாகராஜ்,அமர்த்தியா சென் போன்றோரே அறிவுஜீவிகள்.
புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியப் போக்கை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதுவரையில் கலை இலக்கியத்தில் ஈடுபடவே தொடங்கவில்லை.மலேஷியாவிலிருந்து வல்லினம் போன்ற குழுக்கள் செயல்படத் தொடங்கியிருப்பதை தவிர்த்து.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே தீவிர இலக்கியத்தில் அக்கறையோடு இருக்கிறார்கள்.
இப்போது தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் பெண்களிடத்தில் தீவிர இலக்கியத்திற்கான தாக்கம் இருப்பதை உணர முடிகிறது.அவையெல்லாம் எப்படி வடிவமுற போகிறது என்பதனை யூகித்துச் சொல்ல இயலவில்லை.
ங்கே உங்களது இரண்டாவது நாவல்?
முதலில் நான் எழுதியதே நாவல் அல்ல.நாவலுக்கானதொரு முயற்சி அவ்வளவுதான்.இரண்டாயிரத்திற்கு முன்னர் அது எழுதி பார்த்தது அவ்வளவுதான்.
தற்போது தமிழில் வெளிவரும் நாவல் எழுத்து பேரில் எனக்கு மதிப்பேதும் இல்லை.யாராவது நாவல் எழுதப்போகிறேன் என்கிற தகவல் கிடைக்கும் போது அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்ளலாம் என்றே படுகிறது.
தமிழில் நாவல் எழுத்து என்பது தன்னிலையைப் பிதுக்கி பெரிதுபடுத்திக் காட்டுவதைப் போல உள்ளது.இதற்கு துணிபவர்களை பதிப்பாளர்கள் ஊக்குவிக்கிறார்கள்.சிலர் சமூக சரிதைகளை அள்ளி எறிகிறார்கள் நாவல் என்கிற பெயரில்.
தமிழில் இப்போது எழுதப்படுகிற நாவல்களில் பெரும்பாலானவை பதிப்பாளர்களால் எழுதப்படுபவையே அன்றி எழுத்தாளர்களால் எழுதப்படவில்லை.பதிப்பாளர்கள் விற்பனையின் நலம் கருதி ஆள்வைத்து வேறுவேறு பெயர்களில் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் நாவல் எழுதுவேனாக இருக்கலாம்.அதற்கான ஆசை எனக்குண்டு.ஆனால் அது இந்த பதிப்பக நெடியிலிருந்தோ,பரபரப்பிலிருந்தோ நிச்சயம் தொடங்காது.அது மட்டுமல்லாமல் நாவல் எழுதியே தீரவேண்டும் என்கிற கட்டாயம் ஏதும் கிடையாது.என்னிடம் இப்போது நாவல் எப்போது? என விசாரிப்பவர்கள்தான் என்னிடம் கெட்ட வார்த்தைகளால் திட்டும் வசையும் வாங்குவதில் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஈழப் போராட்டத்தில் தமிழக எழுத்தாளர்களின் பங்களிப்புகளை எவ்விதம் மதிப்பிடுகிறீர்கள்?
நானறிந்தவரையில் சுந்தர ராமசாமி உண்மையான அக்கறை கொண்டிருந்தார்.தமிழ்நாட்டின் பிற வாணவேடிக்கைகள் எல்லாமே பொய்யும் பித்தலாட்டமும்.
.

இசக்கி
எங்களுர் இசக்கி
ஊர் பெண்களின் காமத்தை
ஓங்கி உளியறைந்தபடி
தலைவிரித்தாடி
சிவப்புப் புடவையில்
உலரப் போடப்பட்ட மாதவிடாய்
துணியின் பூவாசனை கொண்டு
நின்றாள்
முப்பந்தல் இசக்கி
வண்ணகளால் உடல் நிரம்பி
முளை திரண்டு
சாம்பிராணி புகை மூட்டமாய்
மயங்கினாள்
புலன்களுடன்
முலையுடைந்து
கூட்டமாய் திருவிழா
கொண்டாடினால்
கோழியறுத்துத் தின்ற
சுவை மறந்த
பொன்னாரமடை இசக்கி
நடுத்தோட்டத்தில்
குளித்து விட்டு
முந்திகட்டி உலரப் போடப் பட்ட
வண்ணப் புடவையென
ஆடையவிழ்ந்த உடலாடு
முட்புதருள் தனித்துப் படபடத்தாள்
ஓர் இசக்கி .
வில்லுப்பாட்டில்
ஊர் ஊராய்
சென்று நின்றாள்
கள்ளியைப் பிள்ளையாக மாற்றி
பழிவாங்கத் துடித்த
கோவலன் குலத்து இசக்கி
தின் பண்டங்கள் ஈ மொய்க்க
ஆலமரமென படர்ந்த
வேம்பின் மூலத்தில் மாடனின் காவலில்
புணர்ச்சி முடிந்த வெறுமையுடன்
காடுகளை இரவில்
ஜனித்துக் கொண்டிருந்தாள்
மண்டைக் காட்டாளும்
நடுக்காட்டாளும்
நாராயணிஎன முகம் கெடுத்து
பணிந்த பகவதியாக
பிரோகிதர்களால் உருவம் தொலைத்து
நின்றார்கள்
திப்பு திபுவென
தீயாய் ஜொலித்து
ஆண்மையில் கண்கொத்தினாள்
தனித்த இசக்கி ஒருத்தி
ஆண்களை வழிமறித்தாள்
படையலுக்கு வைத்த மல்லிகைச் சரங்களில்
வாசனை இல்லையென
ஆண்களைக் குறை கூ றினாள்
தமிழ் பெண்கவிஞர்கள்
கணவன்மார்களைப் பராதி சொல்லி
கவிதைஎழுதுகிறார்கள்
புலியூர்க்குறிச்சிக் கிழவன்
இசக்கியின் உருவம் கொணர
படாதபாடு
படுகிறான்
ஒரு கவியைப் போல