Saturday 2 January 2016

Poems of Breyten Breytenbach Introduced by Brammarajan



Poems of Breyten Breytenbach Introduced by Brammarajan பிரேடன் பிரேடன்பாஹ் கவிதைகள்


பிரேடன் பிரேடன்பாஹ்  (1939- )கவிதைகள்
9.13.09BreytenBreytenbachByLuigiNovi1ஆப்பிரிக்க மொழியில் எழுதிய நவீன ஆப்பிரிக்கர்களில் மிகச் சிறப்பான பெயர் பெற்றவர் பிரேடன் பிரேடன்பாஹ். மேற்கு கேப் டவுனில் உள்ள போன்னிவேல் என்ற கிராமத்தில் ஒரு கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிரேட்டன் பிரேட்டன்பாஹ் கேப் டவுன் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியாய் அமைந்த மைக்கேலிஸ் நுண்கலைப் பள்ளியில் ஓவியம் பயின்றார். பள்ளி செல்வதை நிறுத்திய விட்டு பாரிஸ் நகருக்குச் சென்றார். அங்கே வேலை செய்து கொண்டு ஓவியம் தீட்டினார். அவரின் நண்பர் ஒருவர் பிரேட்டனின் கவிதைகளில் சிலவற்றை ஆப்பிரிக்காவுக்கு எடுத்துச் சென்று வெளியிட்டார். உடனடியான வெற்றிகரமான நிகழ்வாயிற்று பிரேட்டனின் கவிதை வெளியீடு. பிரேட்டன் தொடர்ந்து கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு சில முக்கியமான விருதுகளைப் பெற்றார். அந்த விருதுகளைப் பெறும் பொருட்டு தென் ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்ய அனுமதி கோரினார். தென்னாப்பிரிக்க அரசாங்கத்திட மிருந்து தன் வியட்நாமிய மனைவியை அழைத்துக் கொண்டு சொந்த நாட்டுக்கு வருவதற்கு. அவர் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க அரசாங்கத்திற்கு  இந்த. “பிரபலமானவர்”  மூலமாக ஏற்பட்ட தர்மசங்கடத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே 1973ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அவருக்கு குறைந்த கால விசா தருவதற்கு சற்றே இளகியது. கேப் டவுனில் நிரம்பி வழிந்த அரங்கினில் அவர் ஒரு இலக்கிய கருத்தரங்கில் இவ்வாறு உரையாற்றினார்ஙி
We [Afrikaners] are a bastard people with with a bastard language. Our nature is one of bastardy. It is good and beautiful thus…[But]like all bastards-uncertain of their identity-we began to adhere to the concept of purity.  That is apartheid. Apartheid is the law of the bastard.”
1973ஆம் ஆண்டு நிகழ்ந்த வருகையின் பதிவு முதன் முதலில் நெதர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டது. பிறகு ஆங்கிலம் பேசும் உலகில் A Season in Paradise   என்ற தலைப்பில் கவிதைகளால் விரவிய நினைவுக் குறிப்புகளாக வெளியாயிற்று.  இந்த நூல் வெறும் நினைவுக் குறிப்புகளாக அல்லாது அன்றைய தென்னாப்பிரிக்காவின் அரசியல் நிலவரத்தையும் பிரதிபலித்தது. 1975ஆம் ஆண்டு மீண்டும் பிரேட்டன்பாஹ் தென்னாப்பிரிக்கா வுக்குத் திரும்பினார். ஆனால் இந்த முறை வேறு ஒரு வேடத்தில், வேறு ஒரு செயல் பங்காளராக ஆப்பிரிக்க தேசீய காங்கிரஸுக்காக (ஏஎன்சி) ஒரு ரகசிய உளவு நடவடிக்கையில் சதிசெய்பவர்களை ஆள் சேர்ப்தற்காக. ஆனால் தென்னாப்பிரிக்க உளவுத்துறை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பிரபலமானவர் என்கிற அந்தஸ்துதான் அவரைக் காட்டிக் கொடுத்தது. ஒன்பது வருட சிறைத் தண்டனையையும் சித்தரவதையையும் அனுபவித்தார். சிறை இருப்பு முடிந்து  பிரான்ஸ÷க்கு திரும்பியவுடன் தன் மக்களிடமிருந்து தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். “நான் என்னை ஆப்பிரிக்கன் என்று கருதவில்லை” என்று அறிவித்தார். இருப்பினும் கூட 1980களில்  போலீஸ் கண்காணிப்பில் மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு வருகை தந்தார்.
1982ஆம் ஆண்டிலிருந்து அவர் “அப்பார்தெய்ட்”க்கு எதிரானவராக நடந்து கொள்பவராகத் தெரிவதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். 1991ஆம் ஆண்டின் மறு வருகையின் அனுபவம் இன்னொரு புத்தகமாக– Return to Paradise–உருவெடுத்தது.” சீர்திருத்தம் செய்யப்பட்ட” தென் னாப்பிரிக்காவின் வழியாக அவரது பயணத்தை அந்த நூல் பதிவு செய்தது. பிரேட்டான்பாஹ் விளக்கியபடி இந்த நூலை True Confessions of an Albino Terrorist என்ற சிறை அனுபவ நினைவுக் குறிப்புகளுடன் அதற்கு முன்னர் A Season in Paradise நூலுடன் இணைத்து சுயசரிதையின் முப்பக்கம் கொண்ட பிரதியாகப் படிக்க வேண்டும். இந்த மூன்று நூல்களுமே நவீன பிரெஞ்சுக் கவிஞரான ஆர்தர் ரைம்போவின் A Season in Hellஎன்ற நூலின் தலைப்பினை மறைமுகமாகச் சுட்டுகின்றன. தென்னாப்பிரிக்காவை பிரேட்டன் “இந்த நாசமாய்ப் போன பிரதேசம்” என்றுதான் தன் நூலில் குறிப்பிடுகிறார். “நான் எதிர் காலத்தைப் நோக்கும் போது என் எலும்புகள் குளிர் நடுக்கம் கொள்கின்றன.” என்று எழுதினார். “புரட்சி காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டது. மத்தியவயது தலைவர்களின் சிறு குழுக்கள் தம் ஆதாயப் பங்குக்காக பேரம் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களின் வழித் தோன்றல்கள் காட்டுத்தனமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.” என்றார். அவர் குரலில் சாத்தியப்படாத ஒரு புரட்சியில் அவர் பங்கு கொண்டதற்கான வருத்தம் தோய்ந்திருக்கிறது என்றாலும் கூட அரசியல்வாதிகளின் கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தொலைவான எதிர் காலத்தை கற்பனை செய்வதற்கான உரிமையும், எதிர்காலம் குறித்த முன் கூறலில் அவருக்கான பங்கும் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
பிரேட்டனின் 1991ஆம் ஆண்டு விஜயத்தின் போது கூச்சல் மிகுந்த அரங்கங்களில் கவிதை வாசிப்புகள் நடத்தினார். அங்கே பார்வையாளர்களுக்கு அவருடைய மொழி புரியவில்லை. ஆனால் அவர்கள் வந்திருந்தார்கள் பிரேட்டன்பாஹ் என்ற விநோத மனிதனைப் பார்ப்பதற்காக. இணைந்து புரட்சியில் ஈடுபட்ட தோழர்களிடமிருந்து குழப்பமான கேள்விகள் கிளம்புகின்றன. (“நாம் இப்போது வெற்றி பெற்றுவிட்டதால் நீ ஏன் கொண்டாடக் கூடாது? ஆனால் நீ எப்போதுமே சந்தோஷமாக இல்லையா?) வைதீகத் தன்மைக்கும், ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றிற்கும், அரசியலுக்கும், அரசாங்கத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக பிரேட்டன் இனியும் தான் இருக்கப் போவதாக அறிவித்ததால் அவரை யாரும் புரிந்து கொள்ளாதது மட்டுமின்றி அவருக்கெதிரான பகையுணர்வுகள் அதிகரித்தன. அவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமாலிருந்த தென்னாப்பிரிக்கா  Pre-humanity லிருந்து post-humanity க்கு சரிந்து விட்டது என்றார் பிரேட்டன்.
மன அவசத்திலும் துயரத்திலும் இருந்த அவர் எல்லா திசைகளிலும் உள்ளவர்களை விளாசுவதற்காகத் தன் புத்தகத்தைப் பயன்படுத்தினார்ஙி வெள்ளை லிபரல்கள், தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, பூர்ஷ்வா இடதுசாரிகள், முன்னாளைய தோழர்களான வோலே சோயின்க்கா மற்றும் ஜெஸ் ஜேக்ஸன். குறிப்பாக தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரஸ÷க்கு எதிராக. அவர் சிறையில் இருந்த போது அவர்கள் அவரை நடத்திய விதத்திற்காக. ஆம்னஸ்ட்டி இன்ட்டர்நேஷனல் கூட பிரேட்டனை ஒரு மனசாட்சியின் கைதியாகச் ஸ்வீகரித்துக் கொள்வதை ஏஎன்சி தடுத்து விட்டதாக பிரேட்டன் குற்றம் சாட்டினார். ஏறத்தாழ முழு வளர்பிராயத்தையும் ஐரோப்பிய நாடுகளிலேயே கழித்து விட நேர்ந்திருக்கிற பிரேட்டன்பாஹ் தன்னை ஒரு ஐரோப்பியனாக என்றும் கருதியதில்லை. ஆப்பிரிக்காவும் அதன் மண்ணும் அதன் நிலக்காட்சிகளும்  மாத்திரமே தனது எல்லா உணர்தல்களையும் விழிப்புடன் இருக்கச் செய்பவை என்கிறார் பிரேட்டன். அவர் எழுதும் ஒவ்வொரு பக்கமும் மந்திரத்தன்மை வாய்ந்தவையாக மாறுவதற்குக் காரணம் அந்த ஆதியில் உருவான கண்டம் முக்கிய காரணம், அதன் மூலாதார காட்சிகள் மற்றும் ஓசைகளுடன். எனவே பிரேட்டனின் மிக ஆழ்ந்த கிரியா சக்தியானது தனக்குரியது என்பதை விட தன் முன்னோர்களின் புராதனப் பிரக்ஞையின் வெளிப்பாடு என்ற கருதினார்.
1990 ஆம் ஆண்டு Dog Heart என்ற மற்றொரு நினைவுக் குறிப்பு நூலை வெளியிட்டார் பிரேட்டன்பாஹ். கிராமப்புற வன்முறையை நியாயப்படுத்துபவராக பிரேட்டன் இந்த நூலில் தெரிகிறார் எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஜே.எம்.கோயெட்ஸி. ஆனால் இந்நூலில் காணப்படும் பௌத்த அணுகு முறை பிரேட்டன் தன் அந்திமக் காலத்தை எதிர் கொள்கிறார் என்பதையும் காட்டுகிறது.
1973இல் “a bastard people with with a bastard language” என்று பிரேட்டன் குறிப்பிட்டது அவருக்கு அனுசரணையாக இருந்த ஆப்பிரிக்கர்களையே திடுக்கிடச் செய்தது. ஆனால் நிலைமை மாறி விட்டது. அந்த சொல்லைப் பயன்படுத்துவது கலாச்சார வரலாற்றில் இன்று ஃபேஷனாக மாறியிருக்கிறது.
நாடுகடத்தப்பட்ட ஒருவனின் சொந்த நாட்டுக்கான ஏக்கத்துடன் அவர் எழுதிய கவிதைகள் கசப்பு நிறைந்த வெளிப்பாடு கொண்டிருந்தன. பிரேடனின் கவிதை நடை தளர்வானது, வேறு பல விஷயங்களைத் ஒரே சமயத்தில் தொடர்புபடுத்திக் கொள்வது. ஆப்பிரிக்க மொழிக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது அவர் கவிதைகள். எதிர்ப்பு மற்றும் வலியுறுத்தும் தனித்துவத்திற்கான கருவியாக அவர் கவிதைகளைப் பயன்படுத்தினார். ஒரு நாவலையும்  (Mouroir: Mirrornotes of a Novel(1984)) இரண்டு கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். 1964லிருந்து 1977வரையிலான தேர்ந்தெடுத்த கவிதைகள்  In Africa Even the Flies are Happy: Selected Poems, 1964-1977 என்ற பெயரில் வெளிவந்திருக்கின்றன. பிரேட்டன்பாஹ் கவிதை எழுதிய மொழி ஆப்பிரிக்கான்ஸ்.
பிரேடன்பாஹின் கவிதைகளின் தனிமுத்திரை எதுவென்று தீர்மானிப்போமானால் அது அவற்றின் ஸர்ரியல்தன்மை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். கனவுத்தன்மை மிகுந்த கவிதைப் பகுதிகள் அவற்றில் அதிகம் காணக்கிடைக்கின்றன. தனிமைப்படுதலின் படிமங்கள் இணையும் பொழுது அவற்றின் வலிமிக்க வலு அதிகரிக்கிறது. கவிதையோ அல்லது படைப்பெழுத்தோ துன்பத்திலிருந்துதான் தோன்றுகிறதென்றதால் அது பிரேடன்பா ஹு க்கு முற்றிலும் பொருந்தக்கூடியது.
கட்டுரையும் மொழிபெயர்ப்பும்: பிரம்மராஜன்

horizontal-line21
 பிரேட்டன் தனக்காகப்  பிரார்த்தனைசெய்கிறார்

வலிக்கு எந்த அவசியமும் இல்லை இறைவாஙு நாம் வாழ முடியும் அது இன்றி ஒரு மலருக்குப் பற்களில்லை. நிஜம்தானது  மரணத்தில் நாம் நிறைவாக்கப்படுகிறோம் ஆனால் நம் சதை முட்டைக்கோசைப் போல புதியதாய் இருக்கட்டும் எம்மை ஸ்திரமாக்குவீர் இளஞ்சிவப்பு நிற மீன்களைப் போல நாம் ஒருவரை ஒருவர் சபலப்படுத்துவோம், நமது விழிகள் ஆழ்ந்த பட்டாம்பூச்சிகள் கருணை வையும் எம் வாய்களின் மீது, எம் குடல்களின் மீது, எம் மூளைகளின் மீதும் நாங்கள் என்றுமே மாலை ஆகாயத்தின் இனிமையை சுகித்திருப்போமாக கதகதப்பான கடல்களில் நீந்தி, சூரியனுடன் உறங்கி வெளிச்சமான ஞாயிற்றுக்கிழமைகளில் சாந்தமாய் சைக்கிளில் பயணம் செல்வோமாக பிறகு  பழைய கப்பல்கள் அல்லது மரங்களைப் போல கொஞ்சம் கொஞ்சமாய் சிதிலமடைவோம் ஆனால் என்னிடமிருந்து வலியைத் தூர வையும் ஓ இறைவனே மற்றவர்கள் அதைத் தாங்குமாறு கைது செய்யப்பட்டு, சிதைக்கப்பட்டு கல்லால் அடிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டு சாட்டையால் விளாசப்பட்டு பயன்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு கடும் உழைப்பு தரப்பட்டு அவர்களின் வாழ்நாளிறுதி வரை பெயர் தெரியாத் தீவுகளில் நாடுகடத்தப்பட்டு கெஞ்சும் கசகசத்த எலும்புகள் வரை நீர்க்கசியும் குழிகளில் வீணாகியபடி அவர்கள் வயிற்றில் புழுக்கள், தலை நிறைய ஆணிகள் ஆனால் எனக்கல்ல நாம் என்றுமே வலி தருவதில்லை அல்லது புகார் செய்வதில்லை

கனவுகளும் கூட காயங்கள்தான்
 இவ்வாறுதான் ஒவ்வொரு கனவும் ரகசியமாய் சிறியதாய் தனது எழுத்துக்களைப் பதிக்கிறது விடியலில் நாம் கண்ணாடியில் தேடுகிறோம் மையின் கொப்புளங்களை பத்திரமான காப்பகங்களில் சேமித்து வைக்க ஆனால் காயங்கள் ஆறுவதில்லை மிக அடர்ந்த நிறமுள்ள குருதி தொடர்ந்து பூக்கிறது தாள்களின் மேல் புரட்சிகளின் பழத்தோட்டங்கள் அல்லது  தோட்டங்களில் காதலின் குமிழிடுதல் என்றுமே ஆறாத ரணங்கள் செவிடர்கள் கூட கனவு காண அனுமதிக்கப்படுகின்றனர் பைத்தியக்காரர்கள் தம் எழுத்துக்களைக் கிசுகிசுக்க அனுமதிக்கப் பட்டதைப் போல மற்றும் குருடர்கள் காற்றைப் பார்ப்பதற்கு வலி நம்மையெல்லாம் கூடுதல் அத்யந்த நிறத்திற்கு ரணமாக்குகிறதுþþ எனது இளமையின் தோட்டங்களின் பறவைகள் எவ்வளவு பசுமை நிறமாய் இருந்தன தீட்டப்பட்டது போலவும் எத்தனை கனிந்ததாயும் இருந்தது சூரியன் மேலும் திரள்பனி ஆறுவதில்லை இந்த பூமி ஒரு அரசன் மக்களால் நிறைந்து மக்கள் அரசர்கள் மரங்களால் நிறைந்து பயம் அல்லது வெறுப்பு அல்லது ஏக்கங்களின் மரங்களால் நிறைந்து அவை என்றும் கனவுகளைக் குணமாக்குவதில்லை காரணம் இதுதான் நமது ஓரே முடிவற்ற சொர்க்கம் நாம் மீனவனைப் போல செல்வந்தனாய் இருக்கிறோம் அவனது உச்சபட்சமான முட்டைகளை வகைபிரித்து எண்ணியபடி மீன்களைக் கடலுக்குத் திருப்பிக் கொடுத்தபடி முட்டைகளின் பேச்சினைப் போல் பேசுவதற்காய் ஆண்டாண்டுகள் குருதி கசியும் அலைகள் போல பாடுவதற்காய் என்றுமே குணமாகா அந்தக் குருதியுடன் அந்த ராணுவ வீரர்களுக்கு பட்டாணிகளைப் போல கண்கள் மண்ணைப் போல கைகள் அந்த விவசாயிகளுக்கு மேலும் அவர்கள் அனைவரும் செய்திகளை உலகங்களைக் கனவு காண்கின்றனர் என்றுமே குணமாகா அந்த மலர்களால் நிறைந்து போய் இப்பொழுது ஒரு கிளி கூட கவிதையில் நுழைகிறது, ஒரு மஞ்சள் கிளி கவிதையிலிருந்து வரிக்கு தனது புகார்களைச் சொல்லியபடி தனது நாக்கின் கரிய நிற பாய்மரப் பாய்களின் ஓலத்துடன் அதன் பாடல்கள் என்றுமே குணமாகாதபடி எனவே எனது இரவுகள் கற்பதில்லை குணமடையவோ வாசிக்கவோ காரணம் எனது குருதியின் கடைசிச் சொட்டினைச் சிந்துவதற்கு நீ வந்திருக்கிறாய் நீயும் கூட என் தசையின் ஒரு தழும்பு என்பதற்கு மேல் ஆகமாட்டாயோ? குருதியின்றி நம்மால் ரத்தம் சிந்த முடியாது வாஸ்தவமாக மேலும் நம் கனவுகள் நம் இரவுகளின் குருதி நாம் குருதியாய் இருந்து குருதியால் கனவு காணப்பட்டதைப் போல ஆகவே நான் நிலைக்கிறேன் ஒரு படுக்கைத் தளபதியாய் இரவு அடுத்த இரவாக என் ராணுவங்களைக் காலிசெய்தபடி எனது இதயத்தின் மைச்சொட்டுக்களை வெளியேற்றிக் கொண்டு உனக்காக, கனவு காணப்பட்டு, என்றுமே குணமாகாத நபரான உனக்கு தசைகளின் வெறும் உமிகள் நம் உடல்கள் கைத்தடிகளில் உலர்ந்து போகத் தீர்மானிக்கப்பட்டவை இறுதியாய் கனவு காணப்படாமல் நாம் உறங்கச் செல்கிறோம் மேலும் அதன் பிறகுதான் தண்ணீர் புளித்த காடியாய் மாறும் மேலும் மௌனம் தன் வானவில்களை வானத்தில் விரிக்கும் பிறகு நம் கனவுகள் சந்திக்கும் இந்த எழுத்துக்கள் என்றுமே ஆறாதிருக்குமாக உத்திரவாதமாய் இந்தக் காயங்கள் என்றும் ஆறாது.
வாழ்வு இருக்கிறது
மரங்களின் மேல் துளைத்து கிழிபட்ட ஏசுநாதர்கள் உண்டு ஜன்னியால் பீடிக்கப்பட்ட தீர்க்கதரிசிகள் பாலவனங்களில் வழிபடுபவர் தம் கண்கள் சூரியனின் கீழ் குருத்து விடுகின்றன ஒரு பக்கத்தில் அத்திப் பழங்களுடன் உரையாடும் புத்தர்கள் டால்ஃபின்கள் அலை வலையங்களின் ஊடாய் துண்டாகும் போது இந்த மேகங்களில் ஜீவன் பசுமையாகிக் கொண்டிருக்கிறது கடல் காக்கைகளின் குடல் வறண்ட நடுங்கும் கதறல்கள் மலைப்பக்கங்களில் வெறுங்காலுடனான எலும்பு மெலிவு உருப்பெருக்கும் ஆகாயத்தின் பின்னால்  எரிமலை வாயின்  நெருப்புப் பேச்சு நகர்த்தப்பட்ட மௌனங்களைப் போல உறைபனியின் சரிவுகள் மயிரிழை அளவு சொர்க்கம் உடைந்து திறக்கையில் வெளியில் கொட்டுகின்றன கறுப்பு கட்டுக்கதைகள் ஊர்க்குருவி புறா பூமியைப் பிணைக்கும் எலும்புகள் உண்டு காலத்தினால் பிணைக்கப்பட்டதன் வழியாக மகிழ்ச்சி உடைத்து வருகிறது மடத் தவறுகள் செய்த வேடிக்கை மனிதனின் வடிவமாய் நான் இருப்பினும் கூட இன்னும் பகல் ஒளிக் கற்றையினால் செல்வந்தனாகிக் கொண்டிருக்கிறேன் முழு இரவிலும் செதில்கள் பிழம்பாய் மின்னின நான் ஒரு காலத்தில் சிறைக் கைதியாய் இருந்திருப்பேன் ஆனால் இங்கே இதயத்தின் துடிக்கும் சுருங்கல் தெளிவாய் உச்சரிக்கப்படுகிறது நாம் அனைவரும் இப்பொழுதிலிருந்து  இன்னும் ஒரு நூறு வருடத்திற்கு அம்மணமாய் இருப்போம்
புகலிடம்
 ஆரம்பத்தில் உனக்கு மிக அருகில் இருந்தோர் துப்பாக்கியால் சுட்டு உனக்குள் துளையுண்டாக்கினர் இரவு எனும் திருட்டுச் சிலந்தி ஒவ்வொரு அறையின் ஒவ்வொரு மூலையிலும் காத்திருக்கும் அது இந்த விடியலின் சிவப்பு வாசல்களின் வழியாய் நெருக்கியடித்து நுழைந்தது மேலும் மினுங்கும் வலையின் தடயங்கள் உனது நாளங்களை அடைத்தது மண்ணில் என்றென்றைக்குமாய் குருதி ஊறிக் கொண்டிருக்கிறது சிதைக்கப்பட்ட உடல் கிடக்கிறது, ஆபாசமாய் வன்புணர்ச்சிக்காட்பட்டு, ஒரு கட்டுத்தறியில், ஒரு தொழுவத்தில் உதடுகள் இளிக்கின்றன–அவர்கள் ஒரு கடைசி தடவை “போய்வருகிறேன்” என்று சொல்ல விரும்பினார்களா? மிதித்து நசுக்கப்பட்ட வாயிலாக இருக்கின்றன பற்கள் ஒரு சிதிலமடைந்த சுவர் கண்கள் திறந்திருக்கின்றன ஆனால் பார்க்க எதுவுமில்லை வாழ்பவரற்ற பிரதேசத்தின் கண்காணிப்பு பெட்டிகள் தேனில் கிடக்கும் இரண்டு தேனீக்கள் மேலும் கல்லாகிப் போன வெளிச்சம் மூச்சு நடுங்குகிறது எங்கோ தொலைவில் மரங்களின் மீது பறவைகளுக்கிடையில் மேலும் ஏற்கனவே உடல் பாடம் செய்யப்பட்டுவிட்டது அழுகலின் சரச சுகந்தத்தினால்– கண் கூச மின்னும் எலும்பின் வலைப்பின்னலாகிறாய் நீ . . . வாருங்கள் மீண்டும் துளைகளைக் ஒழுக விடுங்கள் உடலைக் காற்றுப் புகாததாக்குங்கள் தயவு செய்து எம் கண்ணுக்கு மேல் ஒரு திரைப்படலத்தை சுற்றுங்கள் நாயகன் ஒருவன் எவ்வாறு இறக்கிறான் என்பதை நாங்கள் என்றுமே காணாதவாறு அவன் சடலத்தின் ரகசியங்கள் மானுடர்களால் எப்படிப் பார்க்கப்படுகின்றன என்றும் 2 தனிமை தேசத்தில் ஒரு பயணம் எல்லைகளற்ற தேசத்தின் ஊடாய் விடுதிகளற்ற ஒரு பயணம் வழியெங்கும் கரைகளற்ற ஒரு கடல் காதல் மட்டுமே கலங்கரை விளக்குகளாக கண்ணில்லாதவர்களின் தேசத்தில் எல்லா நிறங்களும் நம்பமுடியாதவை ஒவ்வொரு ஓசையும் ஒரு சாட்சியம் ஊமைகளின் வெள்ளி மொழியில் காதல் மட்டுமே இருளாக காதல் மட்டுமே கலங்கரை விளக்குகளாக கடலை எதிர்த்த ஒரு தடையாக ஒரு மெஷின் துப்பாக்கியின் கிசுகிசுத்த செய்தியைப் போல நுரை உடைத்துத் திறக்க வேண்டிய தொண்டையின் ஸ்வரங்கள் ஊமையால் ரகசியக் குறிப்பில் திக்கித் திணறி வெளிப்படும் காது கேளாதவனின் காதுகளில் அவன் அதை எழுதுவான் குருடர்களுக்காய் காதல் மாத்திரமே மசியாக மெஷின் துப்பாக்கி ரகசியத்தைக் காட்டிக் கொடுத்து விடுவதால் எல்லா ரகசியங்களும் வெளிவரும்படி மெஷின் துப்பாக்கி வழியைத் திறந்து விடும் காரணத்தால் உன் கால்களைக் கழுவி விட்டு உன் முன்னால் ரொட்டியையும் மதுவையும் வைக்கிறது நீ வீட்டுக்குத் திரும்பி வர ஏதுவாய் காதல் மட்டுமே உன் மரணத்தின் உடலாக