Monday 28 December 2015

செப்புப்பட்டயம்
Category Archives: ரமேஷ் – பிரேம்

http://kundavai.com/category/ரமேஷ்-பிரேம்/

by Kundhavai
படைப்பின் அடிமைகள்(ரமேஷ் – பிரேம்)

விடுதலை கருத்தியல்கள் மற்றும் புரட்சிகர கோட்பாடுகளின் காலமான பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகள் மனித சமூகங்களின் மொத்த வடிவத்தையும், இயக்கத்தையும் ஏதோ ஒரு வகையில் மாற்றி அமைத்துள்ளன. இன்றைய வாழ்நிலையின் பல அடிப்படைக்கூறுகள் மனித உரிமை, சுதந்திரம் என்பவற்றை முன் நிபந்தனையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. இன்றுள்ள அதிகாரம், ஆதிக்கம் என்பவை கூட ஏதோ ஒரு வகையில் முன்னேற்றம், சமநீதி என்பவற்றையும் அடிப்படை உரிமைகள் என்பவற்றையும் முன்வைத்தே தம்மை நியாயப்படுத்திக் கொள்கின்றன.


முன்பிருந்த ஆதிக்கம், அதிகாரம் என்பவை தம்மை இறையாண்மை உடையவையாக பிரகடனப்படுத்திக் கொண்டது போல, கேள்விக்கு அப்பாற்பட்டவையாக இன்று எந்த ஆதிக்க, அதிகார, அடக்குமுறை அமைப்பும் தம்மை வைத்துக்கொள்வதில்லை; இவை தம்மை நியாயப்படுத்தும் சொல்லாடல்களை, நடைமுறை விதிகளைக் கட்டமைத்து பெருக்கிக் கொண்டுள்ளன. இந்தச் சொல்லாடல்கள், விதிகள் அனைவரையும் உள்ளடக்குவதான தோற்றம் கொண்டவை. அகிலம் சார் மனிதம், மனித உரிமை, சுதந்திரம், கடமை எனப் பல உபதர்க்கங்களைக் கொண்டு இவை கட்டப்பட்டுள்ளன. இந்த உள்ளடக்கும் கருத்தியல்களின் சொல்லாடல்கள் மிகத்தந்திரமானவை; தாம் கொண்டுள்ள அடக்குமுறை, ஒடுக்குமுறை, ஆதிக்கப் பொறியமைப்பை வெளித்தெரியா வண்ணம், புலப்படா வண்ணம் பொதிந்து வைத்திருப்பவை. அனைவரையும் இதன் பங்கேற்பாளராக மாற்றிவிடுபவை. என்றாலும் விடுதலை, மாற்றம், புரட்சி என்ற மாற்றுக்கருத்தியல்களும், செயல்திட்டங்களும் இன்றைய வாழ்தல் விதிகளை, உலகு பற்றிய பார்வைகளை, நடத்தை விதிகளைத் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கேள்வி கேட்கும் கருத்தியல்களின் மிகத்தீவிரமானதும்,. மிகத்தேவையானதுமான ‘பெண்ணியம்’ மட்டும் இன்றும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வரும் ஒன்று, எல்லா விடுதலை, புரட்சிகர கோட்பாடுகள், சித்தாந்தங்கள், கருத்தியல்களும் பெண்ணியத்தைப் புரிந்துகொள்வதில், ஏற்பதில் மிகுந்த தயக்கம் காட்டுபவையாக அல்லது தமக்கேற்ப பெண்ணியத்திற்கு வரையறை தரமுயற்சிப்பவையாகவே இருந்து வருகின்றன.


எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் அப்பால், எல்லா வித அடிமைத் தனங்களுக்கும் அப்பால் மீந்து நிற்கும் ஒடுக்குமுறையாக, அடிமைத்தனமாக இருப்பது பெண்ணடிமைத்தனமாக, பெண்ணொடுக்கு முறையாகவே இருக்கிறது. அடிமைகளுக்குள் அடிமையாக, ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக பெண்கள் இருத்தி வைக்கப்பட்டுள்ளது ஒரு வரலாற்று மெய்மை. மிகக்குறுகிய ஒரு வெளிக்குள், மிகக்குறைந்த இரு உறுப்பினர்களுக்கிடையில் கடைசியாக மீந்து நிற்பதாக இந்தப்பால் நிலை சமத்துவமின்மை, பாலியல்பு ஒடுக்குமுறை இருந்து கொண்டே வருகிறது. ‘‘ஆணும் பெண்ணும் சமஉரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?’’ எனப் பெரியார் கேட்பது எல்லா வித அறிவியல் சமூக ஒழுங்குகளுக்கும் பொருந்தக்கூடியது.


பெண் இயற்கையிலேயே ஆணுக்குப் பிற்பட்ட, கீழ்ப்பட்ட உயிரி என்ற வாதம் வெகுகாலமாக வைக்கப்பட்டு, பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. உலகின் பெரும் மதங்கள் அனைத்தும், பல இனக்குழு சமயங்கள் உட்பட பெண்ணை, ஆணுக்கு அடங்கிய, கட்டுப்பட்ட உயிரியாக வரையறுத்ததும் உடைத்தெறியப்பட்டுவிட்டது. பெண் ஒடுக்கப்பட இல்லை, பெண்கள் சுதந்திரமாகவே உள்ளனர் என்ற மூடத்தனமாக வாதங்கள் தற்போது பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் இயல்பிலேயே அடங்கியும் கட்டுப்பட்டும் இருக்க விரும்புபவர்கள் என்ற கோணல் வாதங்களும் எப்போதும் பெருகியபடி உள்ளன. இவையும் இன்னும் எண்ணற்ற கொடுங்கோன்மை ஆண்மைய, ஆண் மேலாதிக்க வாதங்களும் பெண்ணியத்தால் ‘தகர்க்கப்பட்டு பொய்ப்பிக்கப்பட்டுவிட்டன. என்றாலும் ‘பெண்ணிய’ அறிதல் முறை, அணுகுமுறை, புலன்முறை என்பது இன்னும் ‘வெளியே’ உள்ளதாக, விளிம்பு நிலைப்பட்டதாக இருப்பதற்குக் காரணம் உண்டு. மற்ற கோட்பாடுகள், அரசியல் கருத்தில்களைப் போல் இல்லாமல் ‘பெண்ணியம்’ மனித சமூகத்தின் அடிப்படைகளை மாற்றியமைப்பது, பாலியல்புகள், பாலியல் நடத்தைகள் தனிமனித உறவமைப்புகள், குடும்பம், சமூகக்குழு என அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டிய தேவையை பெண்ணியம் உணர்த்துகிறது. நகர அமைப்பு, வாழிட அமைப்பு, மொழி அமைப்பு, பண்பாட்டு இயக்கம், உணவு, உடை மற்றும் குடும்ப அமைப்பு என அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டிய தேவையை ‘பெண்ணியம்’ தெளிவுப்படுத்துகிறது. ஆண்மைத்தன்மை உடைய இன்றைய சமூக உளவியல் இவற்றை ஏற்பதைக் கடுமையாக எதிர்க்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.


நுண் அரசியல், நுண் அதிகாரக்களங்களைக் கேள்வி கேட்கும் ‘பெண்ணியம்’ மிகச் சமீபத்தில்தான் தன்னை வடிவமைத்துக்கொண்டது. இன்றுள்ள விடுதலை, ‘சமத்துவம் சார்’ கோட்பாடுகள் மற்றும் கருத்தியல்களில் மிகமிகப் புதிய புரிதல் இந்தப் ‘பெண்ணியம்’. இது ஆண்மையச் சொல்லாடல்களை, அமைப்புகளை அச்சுறுத்துவதாக இருப்பது இயல்பு. ‘ஆண்மை’ என்ற ஒன்றையே கேள்விக்குட்படுத்தி தகர்க்கும் இந்த விடுதலைக்கருத்தியலை ஏற்காத வரை, உலகின் சமூக அறம், சமூக அழகியல், ஒழுக்கவிதிகள் யாவும் அர்த்தமற்றவை, ஆபத்தானவை, ஆதிக்கத்தன்மை உடையவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அன்பு, காதல், பாசம், நட்பு என்ற அனைத்தும் பாலொடுக்குதலின் வன்கொடுமைக் கருவிகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


பெண்ணியமும், தலித்தியமும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டு வழிகாட்டு நெறிகளாக மாறாத வரை, இந்தியச் சமூகங்களின் எந்த விடுதலைக் கருத்தியலும், அரசியலும் வெறும் ஏமாற்று வித்தைகள்தான் என்பதை நாம் உரத்துச்சொல்ல வேண்டிய காலம் இது. இதற்கான காரணங்களும், தர்க்கங்களும், நியாயங்களும் எல்லா மட்டங்களிலும் தொடர்ந்து பேசப்படவேண்டும். எல்லா சொல்லாடல்களையும் இவை உடைத்துப்பிளவு படுத்தவேண்டும். நிர்ணய_நியாயவாத, இயற்கை வாத வன்முறைகளின் போலித்தனங்கள் அறிவுத்துறைகளிலும், அழகியல் தளங்களிலும் குவிந்து கிடப்பதை மிக மென்மையான அணுகுமுறைகளின் மூலம் இனி எதிர்கொள்ளமுடியாது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. மேலாதிக்கக்கருத்தியல்கள் தம்மை ‘இயற்கை வாதங்களாக’, ‘இயல்பு வாதங்களாக’ வைத்துக்கொண்டு விடுதலை மற்றும் அடிமை மறுப்புக் கருத்தியல்களை இயற்கை மீறிய, இயல்புகோணிய வக்கிரங்களாக, பயங்கரங்களாகத் தொடர்ந்து சித்திரித்துக்கொண்டே வருபவை. அப்படி ‘வக்கிரகோணல்’ பட்டியலில் சேர்க்கப்பட்ட சிந்தனைகளில் ஒன்றுதான் ‘பெண்ணியம்’


தற்போது உள்ள உலகமயமான அரசியலும், மிக நுண்தளத்தில் உள்ள ஒரு இந்திய சாதிக்குழு அரசியலும் மிக இணங்கிப்போகும் ஒரு கருத்தியல் ஆண்மையத்தன்மை மற்றும் பெண் ஒடுக்குமுறை. இது எப்படி சாத்தியமானது என்பதுதான். மிக மிக நுணுகி ஆய்வு செய்யப்படவேண்டியது. இது மிகமிகப் புராதனமான வரலாற்றை உடையது; அதே சமயம் மிகமிகத் தற்காலத் தன்மையும், தற்கணத்தன்மையும் உடையது.


இனஒடுக்குதல், தேச ஒடுக்குதல், வர்க்க ஓடுக்குதல் போல் எதிரெதிராக விலகி நிற்கும் இரு குழு அல்லது பகுதிகளுக்கு இடையில் உள்ளது போல் இல்லாமல் பாலொடுக்குதல் என்பது உள்ளடங்கிய, பிணைந்த இருவருக்கிடையில், உறவமைப்புகளுக்கிடையில் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஒன்று என்பதனால் மிகவும் நுட்பமாகவும், பூடகமாகவும், மர்மமமான முறையிலும், தந்திரமாகவும் செயல்படுத்தப்படுகிறது. இந்தப்புலப்படாதத்தன்மை பல சமயங்களில் அதற்குள் நசுங்கிக்கிடக்கும் பெண்களையே நினைவிழக்கச்செய்து ஒடுக்குதலில் ஒப்புக்கொடுப்பவர்களாக மாற்றிவிடக்கூடியது. இந்த நினைவிழப்பு தான் ஆண்மேலாதிக்கத்திற்கும், ஆண்மைய வாதத்திற்கும் பலமாக மாறி அவற்றை விரிவடையச்செய்கிறது. ‘பெண்ணியம்’ இந்த நினைவிழப்பிலிருந்து பெண்களை மீட்கவும், மறதிகளிலிருந்து வெளியேற்றவும் நிகழ்த்தும் ஒவ்வொரு முனைப்பும் ஆண்மையச்சிந்தனைகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது.


நினைவிழப்புகளால், அறியாமைகளால் கட்டப்படும்_ பாதுகாக்கப்படும்_ எந்த அமைதியும் சமநிலையும் கொடூரமானது. அந்தக்கொடூரங்கள் காலம் காலமாக நியாயப்படுத்தப்பட்டு, நிலைப்படுத்தப்பட்டு வரும் சூழலில் அக்கொடூரங்களுக்கு எதிரான மறுப்பு மிக மென்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது பெரும் வன்முறை. இந்திய அரசியலில் தலித்தியத்திற்கும் இதே நிலை ஏற்பட்டதுண்டு. ஒடுக்குதலுக்கு, வன்கொடுமைக்கு எதிரான கேள்வி வன்முறையினதாக, அமைதி குலைப்பதாக, சமநிலையை உடைப்பதாக அடையாளப்படுத்தப்பட்டது. தலித் அரசியல் இந்தியப் பொது அரசியல் பொருளாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் ஒரு வன்முறையான இடையூறாக அறியப்பட்டு வருவது, பொதுப்புத்தியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கேள்வியும், மறுப்பும், எதிர்ப்பும் இன்றி பணிந்து, ஒடுங்கி இருப்பது அமைதி; அதுவே சமநிலை. இந்தச் சமநிலையை அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளத்தில் மட்டும் இன்றி உளவியல், நடத்தையியல் தளத்திலும் குலைக்கும் செயலைச் செய்வது பெண்ணியம். மிகப்புராதனமான வலியுடன், மிக அடிப்படையாக அறத்துடன் உருவாகி வந்துள்ள ‘பெண்ணியம்’ இருபத்தோராம் நூற்றாண்டின் எல்லா மாற்றுச்சிந்தனை முறைகளுடனும், ஊடாடி, கேள்வி கேட்டு சரிப்படுத்தும் செயலைச் செய்யவேண்டிய கடினமான பணியைத் தன்னிடம் கொண்டுள்ளது. அது அமைதியாகத் தன் தரப்பு நியாயங்களை முன் வைத்த காலம் முடிந்து தான் போனது. இது உடைப்புகளுக்கென காலம். குடும்பம், சாதி, ஊர், சமூகம், சமயம், தேசியம், சமூக ஒழுக்கம், மனித அறம் என்ற அனைத்து ஆண்மையக் கட்டமைப்புகளையும் ‘பெண்ணியம்’ உடைப்பதன் மூலம் ‘ஆண்’_‘ஆண்மை’ என்பதையும் உடைக்கவே செய்யும். இந்த உடைக்கும் உரிமை பெண்களுக்கு எப்படி வரமுடியும் என்ற கேள்வி எழலாம். கட்டியவர்கள் அவர்கள். ஆம், இன்று ஆண்களால் கைப்பற்றப்பட்டு கட்டுப்படுத்தப்படும் அனைத்து ‘மனித நிலை’ நிறுவனங்கள், அமைப்புகள் யாவும் பெண்மையால், பெண்களால் கட்டப்பட்டவை. ஈணுதல், பேணுதல் (பிறப்பளித்தல், வளர்த்தல்) என்ற தாய்மையின் கூறுகள்தான் மனித சமூகத்தின் அடிப்படைகள். ஈணுதல் அனைத்து உயிர்களுக்கும் பொது. ஆனால் ‘பேணுதல்’ (நீடித்த பேணுதல்) மானுட சமூகத்தின் மூலக்கூறு, இது மனிதர்களை மாற்றியமைத்தது. இதிலிருந்தே மனித சமூகத்தின் அனைத்து வளர்ச்சிகளும், மாற்றங்களும் தொடங்கின. உணவு சேகரித்தல், சேமித்து வைத்தல், விவசாயம், கைத்தொழில், வாழிடம் அமைத்தல், சேர்ந்து வாழ்தல் என அனைத்து மனிதத்தொழில் கூறுகளும் பெண்களால் படைக்கப்பட்டவை. வளர்க்கப்பட்டவை. தாய் வழி, தாய் முதன்மைச்சமூகங்களாக இருந்தே எல்லா சமூகங்களும் இன்றுள்ள தந்தை வழி, தந்தை முதன்மைச் சமூகங்களாக மாறின. தாய்மை ஒருவகையில் மனிதர்களை (ஆண்) வளர்த்தது, மறுவகையில் பெண்மையை ஒடுக்கியது. அடிமைப்படுத்தியது. பெண் படைத்தது., பெண்ணையே ஒடுக்குதல் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தபோதும், இனத்தொடர்ச்சிக்குப் பெண் தந்த முதன்மை பெண்ணை படைப்பின் அடிமையாக்கியது. தான் படைத்தவைகள் தன்னை ஒடுக்கும் போது, அவற்றை உடைக்கும் உரிமை யாருக்கும் உண்டு. பெண்ணியம் அவ்வகையில்தான் உடைத்துப் படைக்கும் ஒரு செயலாக, போராட்டமாகத் தொடரவேண்டியிருக்கிறது.


ஆண் என்பவன் பண்பாடு (கலாசாரம்) (சிuறீtuக்ஷீமீ) என்றும், பெண் இயற்கை (ஸீணீtuக்ஷீமீ) என்றும் ஒரு எதிரிடை கட்டப்பட்டுள்ளது. இது ஆணுக்கு பண்பாட்டில், அரசியலில், நாகரிகத்தில் அதிக முதன்மை தரும் வாதம். உண்மையில் பெண்ணே கட்டமைப்பு (பண்பாடு) (சிuறீtuக்ஷீமீ). ஆண் அதன் உப கட்டமைப்பு, தாய்மைக்கு உள்ள எந்தப் பொறுப்பும் அற்ற தந்தையைப் பண்பாட்டுக்குள் கொண்டுவந்த நிகழ்வு மானிட சமூக வரலாற்றில் மிக முக்கியமான கட்டம். சமூக அமைப்பும், அதன் வளர்ச்சியும் ஆண்களால் வந்தவை என்ற அறிவற்ற வாதங்களை உடைக்க இன்று ஏராளமான சான்றுகள் கிடைத்துவிட்டன, என்றாலும் ஆண் மையப்பட்ட சொல்லாடல்கள் இவற்றை ஏற்பதில்லை. பெண்ணின் படைப்புகள். குடும்பம், குடி மரபு என்பவை பெண்ணின் படைப்புகள் குடும்பம், குடி மரபுகள் தான் வாழிட எல்லைகளின் அடிப்படைகள், இவையே அரசின் தொடக்கம், போரின் தொடக்கம். இல்லம், வீடு என்பவை தாய்மையின் கண்டுபிடிப்பு, இவையே உலக வரலாற்றை மாற்றியமைத்தவை. இன்று எல்லாம் மறதிக்குள் புதைந்து போன ‘ஆண் முதன்மை’ அரசியலில் பெரும் தலைகீழாக்கம் நிகழ வேண்டியள்ளது. இந்தத் தலைகீழாக்கத்திற்கு பெண்மை எல்லாவிதமான உத்திகளையும் கையாளும், அதற்கான நியாயங்கள் அதற்கு உண்டு. இது ஒரு வகையில் இரண்டாம் படைப்பு, தான் முதலில் படைத்ததை உடைத்து, தனக்கான இடத்துடன் கட்டப்படும் இரண்டாம் படைப்பு. ‘ஆண்மை’ என்பதும் இதில் அடங்கும். ‘ஆண்’ என்பதும் ‘ஆண்மை’ என்பதும் கூட பெண்ணின் படைப்பு, பெண்ணின் புனைவுதான். ‘தந்தை’ என்பது போல் தாய் அளித்த உரிமைதான். இந்த உடைப்புகளுக்கும் மறு உருவாக்கத்திற்கும் தயாராக இல்லாத ‘ஆண்மை’ இனி எந்த அறத்தையும், நியாயத்தையும், அறிவியலையும் பேசத் தகுதியற்றதாகவே இருக்கும். ஏனெனில் இன்றுள்ள ‘ஆண்மை’யின் கையில் இருப்பவை ‘பேரழிவுக்கருவிகள்’ பேரழிவு உத்திகள்’ கொடும்வன்மை மூலம் தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ள அது முயற்சிக்கும். இது அழிவின் தொடர்வினை, படைக்கப்பட்டவற்றை தான் கவர்ந்து கொண்டதால் கிடைத்த ஆதிக்க மேலாண்மை. பெண்ணியம் எதிர்நோக்கி உள்ள மிகப்பெரும் சிக்கல், இந்த வன்முறை எதிர்கால அற சார் அரசியலுக்கும், மனித ஒழுங்குகளுக்கும் முன் உள்ள பெரும் சவாலும் இதுதான்.


நன்றி தீராநதி Standard | Posted in ரமேஷ் - பிரேம் | 0 comments






02.07.07

by Kundhavai

உண்மையின் பயங்கரம்(ரமேஷ் – பிரேம்)









மனிதர்கள் அடிப்படையில் வன்முறையானவர்கள் என்று கூறுவது, சற்று வன்முறையாகத் தோன்றலாம். ஆனால் என்ன செய்வது நாம் அப்படித்தான் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. வன்முறைகள் சமூக அமைப்பின் அடிப்படை. வன்முறைதான் மனிதரை ‘மனிதராக’ வைத்திருக்கிறது. மனிதர்களைப் பற்றி எத்தனைப் புனைவுகளை உருவாக்கிக் கொண்டாலும் அடிப்படையில் விலங்குகள் என்பதை மறந்துவிடவோ, மறுத்துவிடவோ எந்தச் சான்றும் இதுவரை கிட்டவில்லை. நாம் விலங்குகள் போல் வன்முறையை உடையவர்கள். எந்த நிமிடமும் வன்முறையைச் செலுத்த நாம் ஆயத்தமாக இருக்கிறோம். விலங்குகளின் வன்முறை அக்கணத்தின் காரணங்களைக் கொண்டது; உணவுக்காக, தற்பாதுகாப்புக்காக, இடத்திற்காக, இனத்துக்காக, புணர்ச்சிக்காக என ஏதோ ஒரு தருணத்தில் அவை வன்முறையில் ஈடுபடுகின்றன. ஆனால், அவற்றின் வன்முறை இயற்கை விதியின் ஒரு பகுதியாக இருப்பது போல் வரலாற்றுத் தொடர்ச்சி கொண்டதல்ல. மனிதர்களின் வன்முறையோ வரலாற்றுத் தொடர்ச்சி கொண்ட ஒரு உயிரியல் நிகழ்வு. மனிதர்கள் அடிப்படையில் ஊன் உண்ணிகள், அத்துடன் தமது உணவுக்காக, தேவைக்காக எந்த விலங்கையும் தாவரத்தையும் அழிக்கத் தயங்காதவர்கள். விலங்குகளில் சிலவற்றைத் தவிர, பிற தமது இனத்தின் ஊனை உண்பது இல்லை. மனிதர்கள் தமது இனத்தின் ஊனையும் உண்ணப் பழகியவர்கள். அதே சமயம், தமது இனத்துக்காகத் தமது உயிரையும் இழக்கவும் பழகியவர்கள்.


காதல், போர் என்ற இருமைகளின் மீது கட்டப்பட்டது அடிப்படை மனித சமூகம். வீரமும், காதலும் என்ற இரு அடிப்படை உணர்வுகள் மனிதச் செயல்பாட்டின் எல்லா கூறுகளிலும் ஊடாடி இருப்பவை. வீரம் என்பது தற்காத்தல், தன் உயிரை, உடலை அழிவிலிருந்து காத்தல், தன் இனத்தைக் காத்தல் என்பவற்றுடன் தொடர்புடைய வன்முறைச் செயல் உத்தி. இது தற்போது உள்ள உடலைக் காத்தலின் தொழில் முறை, போர் அவ்வகையில் புராதனப் புனிதச் செயலாகிறது. காதல் என்பதோ இனத்தொடர்ச்சி என்பதை நோக்கியது, தன் இனப்பெருக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த இரண்டைச் சுற்றியும் எத்தனை காவிய கற்பனைகள் புனையப்பட்டாலும், இந்த இரண்டின் உள்ளீட்டு உந்தம் ‘மரணம்’ என்ற‘ அழிவற்ற உண்மை’. தன் உடல் அழியாமை, தன் இனம் அழியாமை என்பதே இதன் நேரடி இயல்புருவம். இயற்கையின் விதி இது, இது இயற்கையின் சட்டமும் நியதியும் ஆகிறது. ஒரு உடல் உருவாகி, வளர்ந்து, தன்னைப் போல் இன்னொரு_இன்னும் சில உடல்களை உருவாக்கிவிட்டுத் தளர்ந்து மடிவது என்பது இயற்கை நியதி. எத்தனை முயன்று தேடினும் இதற்கு மேல் இயற்கை நமக்கு எந்த உரிமையையும், உன்னதத்தையும் வழங்கி விடுவதில்லை. மற்ற பிற எல்லாம் ‘மொழி’ என்பதைப் போல் எதேச்சையாக, ஏதோ வகையில், விபத்தைப் போல், விபரீதமாக மனிதருக்கு நேர்ந்தவைதாம். ‘மொழி’ என்ற புரியாத ஒரு மர்மம், புதிர், இயற்கை வினோதம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், இயற்கை மீறிய இந்த மனிதத் தன்மை என்பது எப்படி இருந்திருக்கும் என யூகிப்பது கடினம். எல்லையற்ற பயங்கரமாக விரிந்து கிடக்கும் இயற்கையின் விதிகளுக்குள் இருண்மையாய் இருந்து மனிதரை மிரட்டும் மரணத்தையும் நாம் இப்படித்தான் மொழி மூலம் எதிர்கொள்கிறோம்.


வாழ்வு, மரணம் என்ற இரு நிலைப்புள்ளிகளுக்கிடையே நமது மாபெரும் தனிமை எங்கெங்கோ நம்மை அலைக்கழிக்கிறது. இன்பம், துன்பம் என்ற இரு இருமைகளால் சுழலியக்கம் பெரும் மனிதப் புலன்களின் அடிப்படையில் இந்த இறப்புணர்வும், வாழ்வுணர்வும் நடத்தும் நாடகங்கள் பற்றி எல்லா தத்துவங்களும் ஏதேதோ பேசிச் செல்கின்றன. இன்ப விழைவு, துன்ப மறுப்பு என்பதில்தான் மனித சமூகப் பண்பும் கூட வடிவம் பெறுகிறது. ஆம், மனிதர்கள் இவ்வகையில்தான் என்றும் வன்முறையானவர்களாக இருந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எந்த அளவுக்கு சமூக வயமானவர்களோ, அதே அளவுக்கு சமூக வெறுப்பும், சமூக மறுப்பும் கொண்டவர்கள். நாம் எப்போதும் இந்த வெறுப்பின் உள் சுழல்களை அடக்கியபடியே இன்னொன்றாக இருக்கப் பழகிக் கொண்டிருக்கிறோம். வாழ்வை ஓயாமல் இயக்கும் இந்த இறப்பைத்தான் இந்திய மனம் தர்மம் என்கிறது. தர்மம் என்பது நியதி, விதி, சட்டம். அதனால் தான் தர்மத்தின் தேவனே மரணத்தின் தேவனாக இருக்கிறான். எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் தர்மத்தின் தேவன், மரணத்தையே தனது உத்தியாகக் கொண்டிருப்பதான உருவகம் உண்மையில் மிக வலிமையானது. இதனால்தான் இந்திய மரபில் பிறவி என்பது பெருந்துன்பமாக, பெரும் நோயாக அச்சுறுத்துவதும் ‘பிறவாமை’ என்பது பேரின்பமாகக் கவர்ந்திழுப்பதும் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருக்கிறது. நோக்கமற்ற ஒரு எதேச்சை நிகழ்வாக ‘ஊழாக’ விளைந்து விட்டது இந்தப் பிறவி என்ற உணர்வு, எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குரியது. இதற்கு சமூக சமயத்தீர்வு பிரம்மம் என்ற புனைவாக இருக்கலாம். அல்லது சூன்யம் என்ற மிரட்டும் பிரக்ஞையாக இருக்கலாம். இந்த இடத்தில் மனிதருக்கு முன் இரண்டு சாத்தியங்கள் உள்ளன. கட்டற்ற செயல், ஒடுங்கி நிற்கும் செயலின்மை. துறவும், சரணும் இந்த வெறுமைக்கு மாற்று மயக்க மருந்துகள். ஆனால், எல்லாம் கலைந்து போகும் மயக்க நிலைகள் தான். மனிதர்கள் தம் மீது கவிழ்க்கப்பட்ட இந்த வன்முறையிலிருந்து விடுபட வன்முறையைத்தான் கைக்கொள்வார்கள். அப்படியெனின் அறம், அன்பு, அகத்தனிவு என்பவை முற்றிலும் பொய்யானவைகளா எனில், நிச்சயமாக நம்மால் எதுவும் கூற முடியாது. ஆனால், அவையும் மனிதச் செயல்பாட்டின் சில கூறுகளாக அமைந்து விடுகின்றவைதாம்.


அன்பு என்பது முதலில் மனிதர்களின் சுய அன்பில்தான் தொடங்குகிறது. தன்னைத்தான் நேசித்தல், தன்னைத்தான் மோகித்தல் என்பதில்தான் எல்லா நேசங்களின் அடிப்படையும். தான்_பிறர் என்பதில் தற்காதல் தான் முதலில் நிற்கிறது. உயர் பண்புகளின் தொடக்கமாகக் கூறப்படும் தன் மதிப்பு சுய மரியாதையில்கூட முதலில் தன் மீதான மதிப்பு தான் தொடக்கம்.


தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்


_ தொன்றும்


துன்னற்க தீவினைப் பால் (குறள்_209)


‘‘உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’’ இதுவே தலை சிறந்த முதன்மையான கட்டளை.


‘‘உன் மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை.


(மத்தேயு 22:34_40 மாற்கு 12:28.34 லூக்கா 10:25_28) இந்தத் தற்காதல் தன் நேசம் என்பதில் முன் நிற்கும் ‘தான்’ என்பது எப்போதும் தனித்து இருக்க விரும்பாதது. தான் என்பதை அறிய, உணர, உணர்த்த, அறிவிக்க அதற்குப் ‘பிற’ தேவைப்படுகிறது. எந்த ஒரு மனிதரும் இந்த உலகில் தனித்து இருக்க இயலுவதோ, எண்ணுவதோ, ஏன் யூகிப்பதோ இல்லை என்பது இதனால் தான். ஒரு வகையில் தான் என்பதே பிற என்பதால் தான் அறியப்படுகிறது என்பதும்கூட உண்மையே. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிய ஒவ்வொரு மனித உடலிலும் புலன்கள் இருந்தாலும் காண ஒளியும், கேட்க ஒலியும், உண்ண உணவும், நுகர மணமும் உற்றறிய மற்ற பொருளும் இல்லாத போது புலன்கள் என்பவை எந்த அர்த்தமும், வடிவமும் பெறுவதில்லை. இன்னொரு வகையில் நமது ஒவ்வொரு ‘நாள்’ மற்றும் ‘தான்’ என்பது பல்வேறு பிறவற்றின் இணைப்பால் இழைவால் நேரும் ஒரு விளைவும் கூட. இந்த ‘தான்’ பிற என்பதில் நேர்ந்து விடும் இந்தச் சிக்கல், பெரும் ஆக்கங்களை நோக்கியோ, பெரும் அழிவை நோக்கியோ நம்மை நகர்த்தலாம். அத்துடன் எல்லாத் தருணங்களிலும் ‘தன் மீது தான் காதலாகி’ நிற்பதும் கூட சாத்தியமற்ற ஒன்றே. பிற என்பது இதன் நீட்சியாக வெறுப்பும் விருப்புமாக உருச் சுழன்றபடியே இருப்பதும் தவிர்க்க முடியாதது. ஒரே சமயத்தில் ‘தான் ஒரு மையம்’, ‘பிற ஒரு மையம்’ என்ற இரு துருவச் சுழற்சியால் மனிதச் செயலாற்றல் பெருகவோ, சுருங்கவோ செய்கிறது.


நாம் நம்மை வெளியிலிருந்தே கற்கிறோம்; குழந்தையாக இருக்கும்போது, நமக்கு எந்த ஒழுங்கும் தெரியாது. நாம் அனைத்தையும் கலைத்துப் போடுகிறோம். மடிக்கப்பட்ட துணி, அடுக்கப்பட்ட பாத்திரம், வட்டமான தட்டில் இடப்பட்ட சோறு எதையும் நாம் கலைத்தும், கலந்தும் போடவே முயல்கிறோம். நேர்க்கோடு, வட்டம், சதுரம், முக்கோணம் என்ற ஒழுங்கு நமக்குத் தெரியாது. கலைப்பது என்பது நமது இயற்கை வினை. பிறகு மெல்ல மெல்ல ‘ஒழுங்கை’ விதிகளைக் கற்கிறோம். இந்த ஒழுங்கு கற்றல்தான், நமது வாழ்தலைக் கற்றலாகிறது. உண்ணக் கூடியது, உண்ணக் கூடாதது, தொடக் கூடியது, தொடக் கூடாதது, செய்யக் கூடியது, செய்யக் கூடாதது; என நம் வாழ்தலின் விதிகளைக் கற்கிறோம். இந்த விதிகள் மீறப்படும் பொழுது, நாம் உயிரை இழக்க வேண்டி வரும். எப்பொழுதும் மரணம் நம்மை இழுத்துக் கொள்ளக் காத்திருக்கிறது. நம் உடல் காயப்படலாம். ஊனப்படலாம். விதிகள் மீறப்படும்போது, நாம் மெல்ல சமூக உயிரியாக மாறிய பிறகும், நமக்குள் இந்த ஒழுங்கு கலைக்கும் உந்துதல் கடைசிவரை இருந்து கொண்டே இருக்கிறது. இருக்கத்தான் செய்யும். இப்பொழுது மெல்ல புரிபடத் தொடங்குகிறது. ஏன் மனிதர்கள் ஒரே சமயத்தில் சமூக உயிரிகளாகவும் சமூக வெறுப்பு கொண்டவர்களாகவும் உள்ளே முட்டிமோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது. இங்கே சமூக விதி என்பது இன்னொரு வடிவில் மனிதர்களின் இறப்புணர்வுடன் தொடர்ந்து பேரம் பேசிக் கொண்டே இருக்கிறது. எல்லா சமூகத்திலும் தனி மனிதர்களுக்கு தண்டனை என்பது வரையப்பட்ட ஒன்று. அதன் உச்சபட்சம் மரணம். மரண பயத்தில் தொடங்கி தன் மோகத்தில் தொடர்ந்து மீண்டும் மரண சாசனத்தில்தான் எல்லா ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படுகின்றன. இயற்கை விதித்த அதே கொடு விதியைச் சமூகமும் _ அரசியலும் _ பண்பாடும் தமது கூட்டு மன இயக்கத்தின் உத்தியாக மாற்றிக் கொண்டுவிட்ட பின்; வன்முறை என்பது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் எப்போதும் எங்கும் இருந்துகொண்டே இருக்கிறது என்பது மிகைப் பட்ட கூற்றல்ல; ஆனால் ‘ஒழுங்கு’ என்பதன் மூலம் நாம் அதனைத் தவிர்க்க, தணிக்க, உருமாற்ற முடிகிறது. அரசு, சட்டம், ஆட்சி என அனைத்து நிறுவனங்களும் இந்த உயிர்_உடல் நீக்கும் அதிகாரம் கொண்டவையே; தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மனிதரும் இதே அதிகாரத்தைக் கற்றுச் சிறிய அளவில் செயல்படுத்தியபடியே இருக்கிறோம். ஆனாலும் தனி மனித ஒழுங்கும், சமூக ஒழுங்கும், அரசியல் ஒழுங்கும் ஒத்திசைகிறபோது அமைதியும் இணக்கமும் இயல்பும் தோற்றம் தருகின்றன. வேறு வகையில், ஒரு ஒழுங்கு இன்னொரு ஒழுங்கின் மீது திணிக்கப்படும் பொழுது, இன்னொன்றுடன் மோதுகின்றபொழுது, பார்வைக்குத் தென்படும் பருண்மையான வன்முறையும், பயங்கரமும் பரபரப்பைப் பெருக்கி விடுகின்றன. இரண்டோ இரண்டுக்கு மேற்பட்ட ஒழுங்குகளோ மோதிக் கொள்ளும் தளங்கள் பற்றியதுதான் நமது கவலை. ஒழுங்குகளின் மோதல்கள் இலங்கையில் செஞ்சோலையில் நூற்றுக்கு மேற்பட்ட பச்சைக் குழந்தைகளைப் பலி கொள்ளலாம். லெபனானில் ஆயிரக்கணக்கானோரை சாகடிக்கலாம். இராக்கில் பத்து லட்சம் பேருக்கு மேலான மக்களை கணக்கிலிருந்தே நீக்கி விடலாம். ஆப்கானிஸ்தானை வெறும் கற்குவியலின் பூமியாக மாற்றிவிடலாம், என்னவும் செய்யப்படலாம்; எல்லாம் ஒழுங்குகளின் விதிகளின் மோதல்கள்தான். வன்முறை தற்போது வேறு வடிவில் நம்முன் மகா கொடூரமாக நிற்கிறது அல்லவா. எங்கும் பேசப்படுவதாக, எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாக, எப்போதும் வெடித்துக் கிளம்புவதாக அது விரிகிறது அல்லவா. இதைப்பற்றிய வேறு வகையான பேச்சுத்தான் பயங்கரவாதம் பற்றியது.


பயங்கரவாதம் என்றவுடன் நமக்கு நினைவூட்டப்படுவது சில கட்டடங்களின் தகர்ப்பு, சில ரயில் வெடிப்பு, சில தலைவர்கள் கொலை செய்யப்படுவது என்பவை போன்றன. உண்மையில் நம்மை நடுங்கச் செய்யும் நிகழ்வுகள்தாம் இவைகள், ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (கீணீக்ஷீ ஷீஸீ tமீக்ஷீக்ஷீமீக்ஷீவீsனீ) என்பது அதைவிட நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியதல்லவா. 2001 ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு முன், உலகில் எங்கும் பயங்கரங்கள், வன்முறைகள் நடக்காதது போலவும், அன்றுதான் மனித குலத்துக்கே நாசம் வந்து சேர்ந்ததாகவும் தொடங்கப்பட்ட பேச்சுக்கள், கட்டமைக்கப்பட்ட கருத்துக்கள், எத்தனை வன்கொடுமையானது. அதனை ஒரு சாக்காக வைத்து ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் தரைமட்டமாக்கப்பட்டது, பேரன்பின் அடையாளம் போலப் பேசப்படுகின்றன. இராக்கில் சில மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி உயிரிழப்பு பன்னிரண்டு இலட்சங்களைத் தாண்டுகிறது. தினம் இரண்டு மூன்று கார் குண்டு வெடிப்புகள் ர்ராக் மண்ணில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சரி இதனால் ‘பயங்கர வாதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு வன்முறை நியாயமானதாகி விடுமா. இல்லை; எல்லா வன்முறைகளும் கொடூரமானதே. ஆனால், மனிதர்கள் அதைப் பெருக்கிக் கொண்டே இருப்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? நாம் எப்பொழுதும் வன்முறை செலுத்த, பிறர் மீது செலுத்தப்படும்போது பார்த்து ‘ரசிக்க’ தயாராக இருப்பதற்கு எல்லாவிதமான தயாரிப்புகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.


பயங்கரவாதம் என்பது போர் அல்ல, போர் செய்ய முடியாதவர்களால் போர் வலிமை உடையவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. அதில் ஒரு அரசு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு மதம், ஒரு வர்க்கம், ஒரு தலைமை எது வேண்டுமானாலும் குறிவைக்கப்படலாம். எந்த வகையிலும் அத்துடன் தொடர்பற்ற மக்களும் பாதிக்கப்படலாம். அது திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படும் ஒரு வன்கொடுமை. இதைச் செய்பவர்களின் நோக்கம் தீர்வு அல்ல, வெறும் எதிர்ப்பு_வெறுப்பு; இதற்குப் பின்னுள்ள பிரச்சினையை நோக்கி அனவைரையும் இழுத்துவிட அவர்கள் செய்யும் முயற்சி. இது ஒரு ‘நவீனத்தொழில் நுட்பம்’. நவீன அழிவுக் கருவிகளால், உத்திகளால் நிகழ்த்தப்படுவது. சில ஆய்வாளர்கள் இது வெகுசன ஊடகங்களின் காலகட்டத்தில், ஊடகங்களில் இவற்றிற்கான சொல்லாடல் களத்தை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்படுபவை என்று கூறுகிறார்கள். ‘தனிநபர் பயங்கரவாதம்’ என்பதோ, இயக்கங்களின் திட்டமிடுதலில் நடப்பதோ, எதுவானாலும் அதில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் யாருக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கவே செய்யும். மக்கள், இனங்கள், சமூகங்கள், தேசங்கள் என்பவை இதிலிருந்து தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவே செய்கின்றன. ஆனாலும் இது எப்பொழுதும் நடந்துகொண்டே இருந்திருக்கிறது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. ‘நவீன பயங்கரவாதம்’ என்பது வேண்டுமானால் இருபதாம் நூற்றாண்டின் உருவாக்கமாக இருக்கலாம். ஆனால் படுகொலை, வன்கொடுமை, திட்டமிட்ட தனித்தாக்குதல் என்பவை மனித இன வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே நடந்து கொண்டே இருப்பதுதானே. இங்குதான் சிக்கல் எழுகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களின் ‘அறம்’ வன்முறையை மனிதர் மீது மனிதர் செலுத்தும் வன்கொடுமையை எதிர்க்கிறதா; அல்லது அதிகாரபூர்வமான, நியாயப்படுத்தப்பட்ட வன்முறை நிறுவனங்களைத் தவிர (அரசுகள், இராணுவங்கள், பலவகைப்படைகள்) வேறு யாரும் வன்முறையில் ஈடுபடுவதை எதிர்க்கிறதா. இதற்குப் பதில் கூறப் போகும் முயற்சியில்தான் ‘மனிதர்கள் அடிப்படையில் வன்முறையானவர்கள்’ என்ற வாசகம் நம்மை எதிர்கொள்கிறது.


இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சில பயங்கரங்களை, பாதகங்களை, சற்றே நினைவுபடுத்திக்கொள்வது நமது உறக்கத்தை, தொந்தரவு செய்வது என்றாலும், தற்போது தேவை இருக்கிறது. தற்போது பேசப்படும் ‘மகாபாதக செப்டம்பர்’ 11 போல், 1973 ஆண்டு ஒரு செப்டம்பர் 11 இல் சிலியின் தலைநகரில் ஒரு படுகொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச அரசை, அமெரிக்கத் துணைப்படை அழிக்கப் புறப்பட்டு, ஒரே நாளில் 14,000 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் தினம் கைதும் படுகொலையுமாக எத்தனை ஆண்டுகள்! ஆனால், உலகம் இப்போது போல் பெரும் சோகத்தில் மூழ்கிடவில்லை. (தொலைக்காட்சி இப்போது போல் அதைப்படம் பிடிக்காதது மட்டும் காரணம் அல்ல). ஆனால், 9/11 என்று புதிய ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை உருவாக்க, தற்போது அமெரிக்காவுக்கு ‘பயங்கரவாதம்’ பயன்படுகிறது. இனி உலகை ஆட்டிப்படைக்க இது ஒரு பயங்கர ஆயுதம்.


1945_செப்டம்பர் மாதம் வியட்நாமின் மக்கள் தலைவர் ஹோ சிமின் ஞிமீனீஷீநீக்ஷீணீtவீநீ ஸிமீஜீuதீறீவீநீ ஷீயீ க்ஷிவீமீtஸீணீனீ இன் சுதந்திரப்பிரகடனம் செய்கிறார். அதுவரை இந்தோசீனா என்ற பெயரில், பெரும் நிலப்பரப்பை அடிமை கொண்டிருந்த வன் கொடுமையாளர்களுக்கு அது ஏற்கக் கூடியதாக இல்லை. வியட்நாம் மண்ணை இரண்டாகப் பிரித்து, பெரும் நாசத்தை விளைவித்த போரைத் தொடங்கினர். பத்து ஆண்டுகள் பிரஞ்சுப் படையினரின் அட்டூழியம், 1955 முதல் அமெரிக்கப்படையினரின் அட்டூழியம். அப்பொழுதும் வியட்மின்களை பயங்கரவாதிகள் என்றே கூறினர், அமெரிக்க நிர்வாகிகள். 1975 வரை எத்தனை இலட்சம் மக்களின் உயிரிழப்பு, எத்தனை ஆயிரம் பேரின் ஊனம், எத்தனை பெரிய மனநோக்காடு. அதற்காக அமெரிக்கா செய்த செலவு எத்தனை மில்லியன் டாலர்கள். வியட்நாமை இரு பகுதிகளாக்கி பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. இன்றைய ஈராக்கில் ஷியா_சன்னி என்ற பிரிவினையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் படுகொலை வெடிப்புகள் போல. இதைப்பற்றி ஜான் பிட்சரால் கென்னடி ‘‘கீமீ sலீணீறீறீ ஜீணீஹ் ணீஸீஹ் ஜீக்ஷீவீநீமீ, தீமீணீக்ஷீ ணீஸீஹ் தீuக்ஷீபீமீஸீ னீமீமீt ணீஸீஹ் லீணீக்ஷீபீsலீவீஜீ, suஜீஜீஷீக்ஷீt ணீஸீஹ் யீக்ஷீவீமீஸீபீ ஷீஜீஜீஷீsமீ ணீஸீஹ் யீஷீமீ tஷீ வீஸீsuக்ஷீமீ tலீமீ suக்ஷீஸ்வீஸ்ணீறீ ணீஸீபீ suநீநீமீss ஷீயீ லிவீதீமீக்ஷீtஹ்’’ என மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார். இப்போது உள்ள அமெரிக்க ஜனாதிபதியும் இதுபோல் உலக அமைதியைக் காக்க எதையும் எப்படியும் செய்யத் தயாராக இருக்கிறார்.


1948இல் இரண்டாம் படுகொலைப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்குப்பின் பாதிக்கப்பட்ட யூத இன மக்களைக் காக்க அமெரிக்க_ ஐரோப்பிய நாட்டு மனிதாபிமானிகள் ஒன்றுகூடி ஒரு நாட்டை உருவாக்கினார்கள்: இஸ்ரேல், யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட நாஜி தாக்குதல் வரலாற்றின் பெருங்கொடுமையானதே. ஆனால், ஐரோப்பியர்கள் தமது நிலப்பகுதிக்குள் ஒரு நாட்டை, நிலத்தை ஒதுக்கி ஒரு குடியேற்ற தேசத்தை உருவாக்கித் தந்து தமது மேலான மனிதநேய மெல்லுணர்வுகளை நிரூபித்திருக்கலாம். புதிதாக ஒரு நாட்டை வேறு நாட்டுக்குள் இடம் ஒதுக்கி நட்டதன் மூலம் ஐம்பதாண்டு ரத்தக்களரியை உருவாக்கி விட்டனர். பாலஸ்தீனத்தின் தினசரிப் போராட்டம் இப்படியாகத் தொடங்கியது. அராபிய மண்ணில் தமக்கு ஒரு இராணுவத் தளத்தை ‘இஸ்ரேல்’ என்ற பெயரில் அமெரிக்கா உருவாக்கிக்கொண்ட படுபாதகச் செயலின் விளைவுதான், பின்னால் வந்த பல தனிநபர் தாக்குதல் இயக்கங்கள், யாசர் அராபத் போன்றவர்களையும் பல காலம் பயங்கரவாதி என்றே கூறி வந்தன மேற்கத்திய அரசுகள். பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதும், சோவியத்துக்கு எதிராக ஒசாமா பின்லாடன் என்ற தாக்குதல் தளபதியை அமெரிக்கா உருவாக்கி உலவவிட்டதும் இந்தப் பின்னணியில்தான்.


1994ஆம் ஆண்டு ஒரு ஏப்ரல் மாத நாளில் ருவாண்டாவில் தொடங்கிய வன்முறை, கடந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான வன்முறைகளில் ஒன்று. இரண்டு ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கிடையிலான வன்மம். ‘ஹ§டு’ என்ற இனமக்கள் ‘டுட்சி’ என்ற இனமக்களில் 80,0000 பேரை மூன்று மாதத்திற்குள் மகாகொடூரமான முறையில் கொன்று குவித்தனர். பல ஹ§டு இன மக்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் அந்தப் படுகொலை அங்குமிங்குமாக நிகழ்ந்தபடியே இருந்தது. உயிரிழப்புகள் தொடர்ந்தபடியே இருந்தன. இதில் ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சியாளர்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்கலாம். இதைத் தொடங்கி வைத்தவர்களே ஐரோப்பிய ஆட்சியாளர்கள்தான். முதலில் ஜெர்மனியின் ஆதிக்கத்திலும் பிறகு பெல்ஜியத்தின் ஆதிக்கத்திலும் ருவாண்டா இருந்தபோதுதான் ஹ§டு_டுட்சி என்ற எதிர்ப்பு இன அடையாளம் வன்மைப்படுத்தப்பட்டது. தமது ஆதிக்கத்தை நிறுவ _ தொடர இந்த இன வெறுப்பு தூண்டி வளர்க்கப்பட்டது. பழங்குடிச் சமூக அரசுகளாக இருந்த இந்நாட்டின் மக்கள் குழுவினரை ஒன்றாக நெருக்கி நாட்டை உருவாக்கி, 10 பசுக்களுக்குக் கீழ் உள்ளவர்கள் ‘ஹ§டு’ என்றும், 10க்கு மேல் பசுகொண்ட மக்களை ‘டுட்சி’ என்றும் சட்டப்பதிவு செய்து, ‘டுட்சி’ மக்களுக்கு சில அரசு சலுகைகள் தருவதன் மூலம் பெரும் பான்மை ஹ§டு மக்களிடம் வன்மத்தைத் தூண்டி ஒரு நீடித்த இனமோதலை ஏற்படுத்தியது, பெல்ஜிய ஆதிக்கம். 1994_இல் நடந்த படுகொலைக்கு ஆயுத உதவி செய்தது பிரான்ஸ் என்ற பரந்த மனப்பான்மை கொண்ட நாடு. படை உதவியும் செய்ததாக தற்போது தெரியவருகிறது. இனமோதலை முன்பெல்லாம் சிறிய போர்களின் மூலம் தீர்த்துக்கொண்ட வரலாறு, தற்போது நவீன உத்திகளால் படுபயங்கரமாக மாற்றப்பட்டுவிட்டது.


நன்றி தீராதநதி Standard | Posted in ரமேஷ் - பிரேம் | 1 பின்னூட்டம்

01.08.07

by Kundhavai


பேரழகிகளின் தேசம்


ரமேஷ் பிரேம்(இதை இங்கேயே சொல்லிவிடுகிறேன். இந்தக் கவிதையை எழுதியது ரமேஷ் பிரேம் தான் நானில்லை நானில்லை. இது பேரழகிகளின் தேசம் என்ற ரமேஷ் – பிரேமின் கவிதைத் தொகுப்பில் கடைசியாக உள்ள கவிதை. புத்தக வெளியீடு மருதா.(டைப்பி இங்கே போட்டது மட்டும் தான் நான்.)


பாயிரம்


வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்

திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவரில்

எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட

ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்

பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்

பகலில் கறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்

நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்

வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்

பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று

வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்

உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்

உடல் வாசனயால் கவரப்பட்டு

எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு

வெட்டவெளியாலான இத்தேசத்தின் ஒரே உயிரியான

பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.


வேறு


என் தியானம் நிலைகொண்ட மையப்புள்ளியென சமைந்த

உனது தொடைகள் சந்திக்கும் மாடத்து அகலின்

திரிமுனையில் சுடர் பொருத்த எனது நாவின்

தணல்கொண்டு வருகிறேன்


இதுவுமது


சுருள் கேசக் கோதுகளை நீக்கிவிட்டு

முற்றிய பலாச்சுலை உதடுகளை மெல்லப் பிளந்து

வாய்கொண்டு தின்று எழும் போதையின் நீரோட்டத்தில்

மிதந்து செல்லும் ஆளற்றப் படகெனவே என் மனம்


பூமியிலோடும் எல்லா நதிகளும் சந்திக்கும்

ஒரு புள்ளியைப் போல உனது உடம்பிலோடும்

எல்லா நரம்புகளையும் சேர்த்திழுத்து

முனைகளை முடிச்சிட்டு அறைந்த ஆணி ஒன்று

உனது மதனபீடத்தில்

அந்த ஆணியை எனது முன்பற்களால் மெல்லக்

கவ்வி இழுக்கும்போது

உனது உயிரின் இறுதித் துளி உன்னைவிட்டுச் சிந்துகிறது

ஒரு துளி எல்லையற்ற வெளியில்

வளர்ந்து வளர்ந்து பெரும் நீர்க் கோளகையாய்த் திரண்டு

பூமியை மோத இறங்கிக்கொண்டிருக்கிறது


வேறு


கொங்கைகளனைத்தும் குழந்தைகளுக்கே என்று

வேதகாலத்தில் நான் ஒருமுறை சொன்னேன்


இதுவுமது


ஓங்கி வளர்ந்த இரண்டு முலைகளுக்கு நடுவே

ஓடும் வியர்வைப் பாட்டையில் மிதக்கிறது

ஆளற்ற படகு – அதிலே

சிட்டுக்குருவிகள் வந்தடையும் உனது

யோனியின் வாடையை ஞாபகம்கொண்டு துய்க்கும்

எனது மனம் படுத்துக்கிடக்கிறது


இந்தத் தேசம் கொங்கைகளல் ஆந்து

கொங்கைகளைத் தின்று உயிர்வாழச் சபிக்கப்பட்டவன் நான்

கொங்களைக் கடைந்து பொறியெழுப்பி

கூந்தலைக் கொளுத்தித் தீ வளர்த்து

எனது இரவு உள்ளங்கை அளவே வெளிச்சம்கொண்டு கழிகிறது


வேறு


யோனி புணர்வதற்கல்ல

பிறப்பதற்கு – என்று வேதநூலில் நான்

சொல்லியிருந்த வாக்கியத்தை

காலத்தில் என்றோ யாரோ உருவியெடுத்து

வேள்வித் தீயிலிட்டுவிட்டார்கள்


தீயணைந்த கரியிலிருந்துப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்

வெண்சாம்பலிலிருந்த்ப் பிறந்த ஒரு பேரழகியின் வம்சத்தாலும்

நிறைந்த இந்தத் தேசம்

மனிதகாலத்திற்கு முன்பு நீருக்கடியிலிருந்து

அந்த நீர்நிலையைத் தாங்கும் மண் கிண்ணமாக

இந்த்ப் பூமி இருந்தது

அதை மெய்ப்பிக்கிறேன் கேள்.


இதுவுமது


யோனிச் சுரப்பை வாய்க்கொண்டுப் பருக

ஒரு மிடறு நீர்

எனது வாய்க்குள் அலையடிக்கும் கடல்

அதன் உப்புக் கரையோரத்தில் எனது படகு தனித்திருக்கிறது

நீரலைகளென அசையும் அவளது

தொடைகளுக்கிடையே திரளும் சுழலில்

எனது ஒற்றைத் துடுப்பு சிக்கிச்சுழன்று

அடிமண்ணில் புதைகிறது செங்குத்தாய்


கிளையோடு பொருத்தி அம்பு தைத்தப் பிறவையென

றெக்கைத் துடிக்கிறது யோனி

வெட்டவெளி தேசமெங்கிலும் இந்த

ஒற்றைப் பறவையின் ஓலத்தைக் கொண்டு வீசுகிறது காற்று

மனிதகாலத்துக்கு முந்தி நீருக்கடியில் இருந்த மணல்வெளி

கிளர்ந்து புகைகிறது

கூந்தலால் போர்த்திய கருணைக்குள் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறேன்.


வேறு


நிலவைப் போன்ற பிருஷ்டங்களைக் கொண்ட அவர்கள்

சாயும்கால ஒளியில் கொஞ்சம் கொஞ்சமாக

தொடுவானத்திலிருந்து

மந்தையைப் போலப் புலப்படத் தொடங்கினர்

தண்டவடம் கீழிறங்கி முடியும் சறுக்கலின்

வெயில்படாத பால் நிறச் சருமத்தில்

என் பெயரைப் பச்சைக் குத்தியிருந்த ஒருத்தியைக் கண்டேன்

என்னையறியாமலேயே என் குலதெய்வத்தின்

பெயரால் அவனை விளித்தேன்

திரும்பிப் பார்த்த அவள் கூட்டத்திலிருந்து விலகி

குறுஞ்சிரிப்போடு என்னை நோக்கி வந்தாள்

ஒற்றை முலையோடு

வந்தவளை வாறி மடியிலிருத்தி

முலையிழந்து பொருக்காடும் காயத் தடத்தைத் தொட்டுத்தடவி

வரல் சுட்டுப் பதறி

உயிர்த்துடித்து உதறி எடுத்த விரலை

எனது வாய் எச்சிலில் நனத்தேன்

உறிந்த பொருக்கினூடே உள்ளே

கணன்ற நெருப்பைக் கண்டேன்.


கொங்கை நெருப்பி எனது மடிவிட்டு எழுந்து

குறுஞ்சிரிப்போடு நடந்காள்


இதுவுமது

வியர்வை கசியும் பேரழகியின் அக்குள்கள் நக்கினேன்

அங்கே மணங்கமழும் புற்கள் முளைத்திருக்க

ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் அவற்றை மேய்ந்தேன்

என் முகத்தை அவள் அள்ளியெடுப்பது

முத்தமிடத்தானே என நெகிழ்ந்துகொடுக்க

என் குரல்வளையை ஆடெனக் கருதி கவ்விக்

குருதி குடித்தபோதுதான் தெரிந்தது

இவள் எனது ஊரைச் சேர்ந்த துஷ்டதேவதை என்பது


உதிர்ந்த கூந்தல் இழைகளைக்கொண்டு திரிந்த கயிறால்

பிணைந்த எனது படகை

தொடுவானத்திற்கு அப்பாலிருந்து இழுத்தபடி

முலைகள் குலுங்கிச் சிரிக்க ஓடிவந்தார்கள்

படகில் ஒருத்தி மல்லாந்து படுத்துக்கொண்டு

உச்சிச் சூரியனைப் புணர்ந்துகொண்டிருந்தாள்


நான் அவர்கள் முன்நின்று எனது படகைத்

தரும்படி வேண்டினேன்

அவர்களில் ஒருத்தி பதிலுக்கு

தாங்கள் எனக்கு வழங்கிய போகத்தையெல்லாம்

திரும்பிக் கேட்டாள்

எல்லோரும் சிரித்தார்கள்

பாலைவெளி ஆதி ஞாபகம்கொண்டு அலை நடித்தது


படகில் சூரியனைப் புணர்ந்தபடி ஒருத்தி

நெருப்பாக்கிக் கொண்டிருந்தாள்

படகு பற்றிப் புகையத் தொடங்கியது

பேரழகிகள் எல்லோரும் குலவையிட்டார்கள்


வானம் ஒரு கிண்ணம் போல் கவிழ்ந்திருக்கும்

திசைகளற்ற இத்தேசத்தின் வட்டச் சுவற்றில்

எறும்பைப் போல ஊர்ந்து செல்லும் பரிதியைவிட

ஒளிபொருந்திய அதீத முகம்கொண்டு அலையும்

பேரழகிகளைப் பற்றிப் பாடுகிறேன்

பகலில் சுறுசுறுப்பாகவும் இரவில் வெள்ளையாகவும்

நிறம்மாறித் தோன்றும் இவ்வழகிகளின்

வனப்பைப் பற்றி மட்டுமே பாடப்போகிறேன்

பச்சையமற்ற இத்தேசத்தின் வெட்டவெளியில் நின்று

வெளிச்சத்தைக் குடித்தும் இருட்டைத் தின்றும்

உயிர்வாழும் இறப்பறியாப் பேரழகிகளின்

உடல் வாசனையால் கவரப்பட்டு

எனது படகை உப்புக் கரையிலேயே விட்டுவிட்டு

வெட்டவெளியான இத்தேசத்தின் ஒரே உயிரியான

பேரழகிகளிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.


—————————-


இதற்கு முன்னால் செய்த சில ரமேஷ் – பிரேம் காப்பிகள்.


தாமதமாக வந்துசேரும் அறிவு

கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும் Standard | Posted in கவிதைகள், ரமேஷ் - பிரேம் | 3 பின்னூட்டங்கள்


10.03.06


by Kundhavai


கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும்






எழுத்து என்பது ஒரு வகையில் குற்றச்செயலாக உள்ளது. தான் எழுதும் பகுக்கும் பிரச்சனை நிகழ்வில் உள்ள பொழுது அதைச் சொல்லாடலாக அறிவதன் மூலமும் அதைப் பற்றிய சொல்லாடலை ஆய்வதன் மூலமும் அதற்கப்பாலான ஒரு வெளியை உற்பத்தி செய்து அதற்குள் அதன் சுதந்திரத்தையும் அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது. எழுதும் தன்னிலை இந்த இடத்தில் தப்பிக்கும் தன்னிலையாகவும் எழுதப்படும் தன்னிலைகளுக்கு எதிரான குற்றத்தை நிகழ்த்துவதாகவும் உள்ளது பிரதிநிதித்துவ சொல்லாடல்களைக் கொண்ட பிரதிகள் இந்த இடத்தில் மிகப்பெரும் வன்முறையாக உள்ளது.


குற்றவியல் என்பது சமூகக் கட்டமைப்பின் மிக மையமான கூறாக இருக்கும் நிலையில் எழுதுதல் என்பது தனது குற்றச்செயலைப்பற்றிய மறு சொல்லாடலை உற்பத்தி செய்வதன் மூலம் குற்றம் மற்றும் அதிகாரம் பற்றிய ஒரு விளக்க நிகழ்த்துதலைச் செய்து, மறு தளத்தில் வாசிப்பு என்பதை அதன் எதிர்வாக மாற்றும் சாத்தியங்களையும் உள்ளடக்கி உள்ளது.


எந்த பொருளும் ஏதோ ஒரு அர்த்தத்தை அடைவதற்காக உள்ளது என்பது கருத்தியலின் அதிகபட்ச வன்முறையாகும். வாழ்க்கை அர்த்தம் சாராம்சம் என்ற அனைத்தும் சூன்யத்தைப் போல் எல்லையற்றதும் எல்லையின்மை போல் சூன்யமுமாகவே உள்ளன.


மொழியின் மூலமாக மட்டுமே கட்டப்பட்ட, சமூகவெளிக்குள் செயல்படும் அனைத்தும் மொழிபுகளாக உள்ளன, இதில் உண்மை பொய்மை என்ற எதிர்மைகள் ஒரே பொருளின் இரண்டு பரிமாணங்கள். பரிமாணங்கள் பெருகிவிட்ட நம் காலத்தில் உண்மை என்பது இனி பொய்மையான ஒன்றே.


இவைகள் ரமேஷ் பிரேமின் இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள். எனக்கு பெரும்பாலும் இவர்களின் எழுத்துக்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை. ஆனாலும் எனி இந்தியனால் புனேவில் இறக்கி படித்த பொழுது. எனக்காய் தோன்றியது ஒரு நல்ல அறிமுகம். பின்னர் கஷ்டப்பட்டு படித்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன், மனுஷ்ய புத்திரனால் காலச்சுவட்டின் பதிப்பகத்திற்கு பரிந்துரைக்கப் படமுடியாதவையாக இந்த நாவல்கள் இருந்தன என்னும் முன்னுரையும். தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார் இந்த புத்தகத்துடன்(இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாவல்களுடன்) தன்னால் உறவுகொள்ள முடியவில்லை என்று சொல்லி திருப்பியனுப்பப்பட்டவை என்பதையும் படித்தபின் அப்படியென்னத்தான் எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்க படிக்கத் தொடங்கினேன் முதலில்.


சாருவும், தி.கண்ணனும் கூட இந்த நாவல்களை புத்தகவடிவமாக்க நினைத்தார்கள் என்றும் படித்தேன். பின்னர் புரிந்தது சாரு ஏன் இதனை ‘ஆய்வி’ற்கும், ‘ங்’ ற்கும் பரிந்துரைத்து தோல்வியடைந்தார் என்பது.


“பின்நவீனத்துவம், இன்று தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி, இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ்-பிரேம். இவர்கள் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தங்கள் பங்களிப்பை அளித்து வருபவர்கள். இன்று ஏற்பட்டிருக்கும் பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இக்குறுநாவல்களின் தொகுதி மூலமாக பூர்த்தி செய்கிறார்கள்”. என்ற புதுப்புனல் குறிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த “கனவில் பெய்த மழைக்குறிப்பைப் பற்றிய இசைக் குறிப்புகள்” புத்தகம் சொல்லப்போனால் என் படிப்புலக வரலாற்றில் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன்.


புரியாமல் எழுதுவது பின் நவீனத்துவம் என்றும் இல்லாவிட்டால் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் எழுதுவது தான் பின் நவீனத்துவம் என்று சொல்பவர்களுக்கான பதில் என்னிடம் கிடையாது.


பிரச்சனைகளைப் பற்றி ப்ளாக்குகளின் நடக்கும் பலவிவாதங்களை பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தவைகளை ரமேஷ்-பிரேமின் இந்த வார்த்தைகளின் பின்னால் நான் உணர்ந்தேன். என் சாப்ட்வேர் வாழ்வில் அடிக்கடி இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்ப்டும். “Why you are trying to invend the wheel once again.” அதே போல் என் எண்ணத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள் கிடைத்த பிறகும் அதை உற்பத்தி செய்ய மனம்வராததால் இப்படி.




பூனையாக இல்லாமல் போன சோகங்கள்


"Love is the delightful interval between meeting a beautiful girl and discovering that she looks like a haddock." John Barrymore (1882 - 1942)

கருத்து சுதந்திரமும் பின் நவீனத்துவமும
http://baavaa.blogspot.in/2008/02/blog-post_02.html

எழுத்து என்பது ஒரு வகையில் குற்றச்செயலாக உள்ளது. தான் எழுதும் பகுக்கும் பிரச்சனை நிகழ்வில் உள்ள பொழுது அதைச் சொல்லாடலாக அறிவதன் மூலமும் அதைப் பற்றிய சொல்லாடலை ஆய்வதன் மூலமும் அதற்கப்பாலான ஒரு வெளியை உற்பத்தி செய்து அதற்குள் அதன் சுதந்திரத்தையும் அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் செயல்படுத்துகிறது. எழுதும் தன்னிலை இந்த இடத்தில் தப்பிக்கும் தன்னிலையாகவும் எழுதப்படும் தன்னிலைகளுக்கு எதிரான குற்றத்தை நிகழ்த்துவதாகவும் உள்ளது பிரதிநிதித்துவ சொல்லாடல்களைக் கொண்ட பிரதிகள் இந்த இடத்தில் மிகப்பெரும் வன்முறையாக உள்ளது.

குற்றவியல் என்பது சமூகக் கட்டமைப்பின் மிக மையமான கூறாக இருக்கும் நிலையில் எழுதுதல் என்பது தனது குற்றச்செயலைப்பற்றிய மறு சொல்லாடலை உற்பத்தி செய்வதன் மூலம் குற்றம் மற்றும் அதிகாரம் பற்றிய ஒரு விளக்க நிகழ்த்துதலைச் செய்து, மறு தளத்தில் வாசிப்பு என்பதை அதன் எதிர்வாக மாற்றும் சாத்தியங்களையும் உள்ளடக்கி உள்ளது.

எந்த பொருளும் ஏதோ ஒரு அர்த்தத்தை அடைவதற்காக உள்ளது என்பது கருத்தியலின் அதிகபட்ச வன்முறையாகும். வாழ்க்கை அர்த்தம் சாராம்சம் என்ற அனைத்தும் சூன்யத்தைப் போல் எல்லையற்றதும் எல்லையின்மை போல் சூன்யமுமாகவே உள்ளன.

மொழியின் மூலமாக மட்டுமே கட்டப்பட்ட, சமூகவெளிக்குள் செயல்படும் அனைத்தும் மொழிபுகளாக உள்ளன, இதில் உண்மை பொய்மை என்ற எதிர்மைகள் ஒரே பொருளின் இரண்டு பரிமாணங்கள். பரிமாணங்கள் பெருகிவிட்ட நம் காலத்தில் உண்மை என்பது இனி பொய்மையான ஒன்றே.

இவைகள் ரமேஷ் பிரேமின் இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள். எனக்கு பெரும்பாலும் இவர்களின் எழுத்துக்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைக்கவில்லை. ஆனாலும் எனி இந்தியனால் புனேவில் இறக்கி படித்த பொழுது. எனக்காய் தோன்றியது ஒரு நல்ல அறிமுகம். பின்னர் கஷ்டப்பட்டு படித்து புரிந்துகொள்ளத் தொடங்கினேன், மனுஷ்ய புத்திரனால் காலச்சுவட்டின் பதிப்பகத்திற்கு பரிந்துரைக்கப் படமுடியாதவையாக இந்த நாவல்கள் இருந்தன என்னும் முன்னுரையும். தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமார் இந்த புத்தகத்துடன்(இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நாவல்களுடன்) தன்னால் உறவுகொள்ள முடியவில்லை என்று சொல்லி திருப்பியனுப்பப்பட்டவை என்பதையும் படித்தபின் அப்படியென்னத்தான் எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்க படிக்கத் தொடங்கினேன் முதலில்.

சாருவும், தி.கண்ணனும் கூட இந்த நாவல்களை புத்தகவடிவமாக்க நினைத்தார்கள் என்றும் படித்தேன். பின்னர் புரிந்தது சாரு ஏன் இதனை 'ஆய்வி'ற்கும், 'ங்' ற்கும் பரிந்துரைத்து தோல்வியடைந்தார் என்பது.

"பின்நவீனத்துவம், இன்று தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி, இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ்-பிரேம். இவர்கள் இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தங்கள் பங்களிப்பை அளித்து வருபவர்கள். இன்று ஏற்பட்டிருக்கும் பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இக்குறுநாவல்களின் தொகுதி மூலமாக பூர்த்தி செய்கிறார்கள்". என்ற புதுப்புனல் குறிப்புடன் வெளிவந்திருக்கும் இந்த "கனவில் பெய்த மழைக்குறிப்பைப் பற்றிய இசைக் குறிப்புகள்" புத்தகம் சொல்லப்போனால் என் படிப்புலக வரலாற்றில் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன்.

புரியாமல் எழுதுவது பின் நவீனத்துவம் என்றும் இல்லாவிட்டால் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் எழுதுவது தான் பின் நவீனத்துவம் என்று சொல்பவர்களுக்கான பதில் என்னிடம் கிடையாது.

பிரச்சனைகளைப் பற்றி ப்ளாக்குகளின் நடக்கும் பலவிவாதங்களை பார்த்திருக்கிறேன், அதைப் பற்றி நான் மனதில் நினைத்துக் கொண்டிருந்தவைகளை ரமேஷ்-பிரேமின் இந்த வார்த்தைகளின் பின்னால் நான் உணர்ந்தேன். என் சாப்ட்வேர் வாழ்வில் அடிக்கடி இந்த வார்த்தைப் பிரயோகங்கள் உபயோகப்படுத்தப்ப்டும். "Why you are trying to invend the wheel once again." அதே போல் என் எண்ணத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள் கிடைத்த பிறகும் அதை உற்பத்தி செய்ய மனம்வராததால் இப்படி.

- இது செப்புப்பட்டயத்தில் இருந்து ஒரு காப்பி பேஸ்ட் பதிவு

ரமேஷ்-பிரேம் கதைகள் - வரலாறுகளின் சதுரங்கப் பலகை
மனோ. மோகன்
http://manomohanthepoet.blogspot.in/2012/03/blog-post.html
"எழுது. எல்லாவற்றையும் எழுது. கதையாக எழுது. ஆய்வுரையாக எழுதி விடாதே. அதிகாரத்தின் கண்காணிப்பில் நீ இருக்கிறாய்.. அணுசக்தி மட்டுமே மனிதரை அதிமனிதர் ஆக்கக்கூடியது. நாம் அதற்கு எதிரானவர்கள். நம்மைக் கொல்ல இந்த உலகின் எல்லா நாடுகளின் அரசுக்கும் உரிமையுள்ளது. நாம் புனைவுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். எல்லாம் புனைவுதான். கடவுளைப் போலவே விஞ்ஞானமும் புனைவுதான்."
[குருவிக்காரச் சீமாட்டி, பக். 101 - 102].
          தமிழகத்தின் கிழக்குக் கடலில் காற்றில் குமையும் பிணவாடை மட்டுமே எஞ்சியிருக்கிற ஈழத்துச் சூழலின் தீவிரம் யாரையும் எதுவும் செய்துவிடப் போவதில்லையென்பது யதார்த்தமாகியிருக்கிறது. கால்களுக்குக் கீழே பூமி பத்திரமாயிருக்கிறதாவென ஒவ்வொரு கணமும் சரிபார்த்துக் கொள்கிறேன். எந்த நிமிடமும் என் காலடி நிலம் பிய்த்து வீசப்படலாம் என்கிற அச்சம் மனதை உறையவைக்கிறது. வரலாற்றின் தீராத பக்கங்களில் ஒவ்வொரு விபத்தும் திட்டமிட்டே நிகழ்த்தப் படுகிறது என்கிற பேருண்மை எந்த நேரத்திலும் இரத்த நாளத்தை வெடிக்கச் செய்வதான மரண பயத்தைத் தருகிறது. இந்தப் பரந்துபட்ட உலகில் சொந்தமாக ஒருபிடி மண்கூட இல்லாததைக் கவனப்படுத்தியபடியே அகதிகளின் கதையை நாடோடிகளின் கதையை விளிம்புகளின் கதையைப் பேசும் ரமேஷ்-பிரேமின் பேரினவாத எதிர்ப்புப் பிரதிகளை இத்தகைய கனத்த மனதோடுதான் வாசிக்க நேர்கிறது.
 
          தையல் காரனைப் போலவோ மளிகைக்கடைக் காரனைப் போலவோ என்னிடம் எந்த அளவுகோலுமில்லை. ரமேஷ்-பிரேமின் பிரதிகளை மதிப்பிடுவதான அல்லது இலக்கிய வரலாற்றில் அவற்றின் இருப்பு குறித்ததான நுட்பங்களுக்குள்ளும் நான் போகவில்லை.. ஏறத்தாழ இருபது வருடங்களில் ரமேஷ்-பிரேம் எழுதிய முப்பத்தைந்து கதைகள் குறித்த வாசிப்பனுபவத்தினூடாகச் சக வாசகனுக்கான சில முன்தயாரிப்புகளைத் தருவது என்பதனடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப் படுகிறது.
 
          வாசிப்பில் கிடைக்கும் இன்பத்தினூடே அரசியலையும் பொதிந்து வைத்திருக்கிற ரமேஷ்-பிரேமின் பிரதிகளில் பெரும்பாலானவை வாசகனுக்கான கோப்பைகளை மட்டுமே தயாரித்துத் தருகின்றன. அவற்றில் மதுவை ஊற்றிக் கொள்வதோ மருந்தை ஊற்றிக் கொள்வதோ வாசகனின் பிரதியனுபவத்தில்தான் இருக்கிறது. இவ்வகையில் 'பன்றி' கதை மிகுந்த கவனத்திற்குரியது. ஆதித்தாயின்  சாயலில் சாலையோரத்தில் குட்டிகளோடு படுத்திருக்கும் பருத்த பெண்பன்றி நவீன வாகனமான லாரி ஏறி இறந்து விடுவதான இந்தக் கதை சமூகத்தில் பன்றியின் பல்விதமான இருப்புகளை முன்வைக்கிறது. இக்கதையை வெறும் பன்றியைப் பற்றிய கதையாகவும் வாசித்துக் கொள்ளலாம். பெண்களுக்கெதிரான, தலித்துகளுக்கெதிரான, கருப்பர்களுக்கெதிரான, எந்தவொரு விளிம்புக்கும் எதிரான வன்மத்தைப் பேசும் பிரதியாகவும் வாசித்துக் கொள்ளலாம். ஆதிக் குடிகளை நிர்மூலமாக்கும் அதிகார வர்க்கத்தின் அழித்தொழிப்பை கவனப்பத்தும் கதையாகவும் இதனை வாசித்துக் கொள்ளலாம்.
 
          பொதுவாகவே ரமேஷ்-பிரேமின் கதைகள் வாசகனின் வரலாற்றறிவையும் அரசியலறிவையும் ஒருசேர எதிர்பார்க்கின்றன. இவை குறித்த கூடுதல் எதிர்பார்ப்பினால் முதலிரண்டு தொகுப்புகளும் வாசகனை ஒருவித மிரட்சிக்குள்ளாக்கவும் செய்கின்றன. அதே சமயம் வாசக மனதின் அறிதல் திறனுக்குத் தக்கவாறு வேறுவேறு விதமான புளகாங்கிதங்களையும் உடைப்புகளையும் இக்கதைகள் ஏற்படுத்துகின்றன.
 
          வரலாற்றுப் பிரதிகளைச் சிதைப்பாக்கம் செய்வதன் மூலம் வரலாற்றின் அரசியல் பின்புலங்களையும் மறைக்கப்பட்ட பக்கங்களையும் ஊடுபிரதியாகக் கொண்டியங்குகின்றன ரமேஷ்-பிரேமின் கதைகள். சகமனிதனை அடித்துவிரட்டுவதும் அழித்தொழிப்பதுமாகவே நீளும் வரலாறு பேரினவாதத்தின் பாசிச மனோபாவத்தோடும் மனிதகுல விரோதியொருவனின் வன்மத்தோடும்தான் செயல்படுகிறது. எதிரியின் உடைவாளைக்கொண்டே எதிரியை வீழ்த்துவது போல இக்கதைகள் வரலாற்றுப் பிரதிகளின் புனைவுத் தன்மையைக் கொண்டே வரலாற்றின் பாசிச மனோநிலைக்கெதிரான கலகத்தை நிகழ்த்துகின்றன. 'இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள்' பிரதியை அதிலும் குறிப்பாக மைதூனா நாகரீகம் குறித்த பகுதியை இவ்விடத்தில் வாசித்துக் கொள்ளலாம்.
 
          விளிம்புகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்த கவனமே இக்கதைகளின் மையநீரேட்டமாக ஒடுகிறது. 'பிரம்மனின் உடலுக்கு வெளியே', 'காலவட்டத்திற்குள் இரண்டு கண்கள்' முதலான கதைகளைத் தலித் அரசியலைப் பேசும் கதைகளாக அடையாளம் காணமுடியும். 'பொம்மை-குழந்தை' கதை பைத்தியங்களைப் பேசுவதோடல்லாமல் தெருவோரங்களில் வீசப்படும் குழந்தைகளையும் கவனத்திற்குள் கொண்டுவருகிறது. விளிம்பிலிருப்பவற்றைப் பேசுவது என்பதைத் தாண்டி மையத்தை நிறைத்துக்கொண்டிருந்த குடிகள் விளிம்பிற்குப் பிதுக்கியெறியப் பட்டது பற்றிய கவலையே ரமேஷ்-பிரேமின் கதைகளில் அதிகம் வெளிப்படுகிறது. கடந்த நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் புதுச்சேரி முழுவதையும் ஆக்கிரமித்திருந்த பன்றிகளை அதிகார வர்க்கம் அழித்தொழித்தது பற்றிக் கூறும் 'பன்றி' கதை இத்தகைய அரசியலைப் பேசுவதே. இவர்களின் கதைகள் பூர்வ குடிகள் அழித்தொழிக்கப்பட்ட வரலாற்றையும், அகதிகளின் அவலங்களையும் ஊடுபிரதியாகக் கொண்டியங்குகின்றன.
 
          ஆதி மனோநிலைக்கும் நவீன மனோநிலைக்கும் இடையிலான முரண்களினூடாக நகர்ந்து அறிவியலின் வன்முறையை அழித்தொழிப்பின் வன்முறையைப் பேசும் கதைகளாக இவற்றை வாசிக்க இயலும். விஞ்ஞானத்தின் அழித்தொழிப்புகளிலிருந்து தப்பி ஆதி மனோநிலைக்குத் திரும்புவதன் மூலம் இயற்கையோடு கலப்பதே இக்கதைகளின் எத்தனிப்பாக உள்ளது. இந்த எத்தனிப்பு இயல்பாகவே சூழலியல் குறித்த கவனமாகவும் விரிந்து விடுகிறது. 'முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன', 'நத்தைக் கதை' முதலானவற்றில் அணுசக்தியின் பேரழிவுகளைப் பேசுவதும், ஆதித் தாய் பற்றிய குறிப்புகளில் அவள் பச்சை நிறத்தவளாயிருப்பதும் (எ.கா. ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம், பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை) இந்த வகையில் கவனம் பெறுகின்றன.
 
          அறிவு அதிகாரத்தைக் கட்டமைக்கிறது. அதிகாரம் பேரினவாதத்திற்குத் துணைபோகிறது. பேரினவாதம் தனது ஒற்றை அதிகாரத்தின் மூலம் விளிம்புகளை மறக்கடித்து விடுகிறது. இத்தகைய மறக்கடிப்பு அரசியலுக்கு எதிரான கலகத்தை நிகழ்த்தும் பிரதிகளாக ரமேஷ்-பிரேமின் கதைகளை வாசித்துக்கொள்ள முடியும். தன் வீட்டிலேயே வளர்ந்த பூனையை வீட்டுக்காரன் அடித்துத் தின்றுவிட்டுக் குறவன் தூக்கிப் போயிருக்கலாமெனக் கதைகட்டும் 'தொடர் மழைக் காலம்' கதை பேரினவாதமும் ஊடகமும் இணைந்து நிகழ்தும் மறக்கடிப்பு அரசியலைப் பேசும் குறியீட்டுக் கதையாக விரிகிறது. காலனியாதிக்கத்தின் அரசியலைப் புனைவினூடாக வெளிப்படுத்துவது (ஆதியினத் தேவதைகளின் தலைமறைவுக் காலம்), நவீன பேரரசுகளின் ஏகாதிபத்திய வன்மத்தால் அழித்தொழிக்கப் பட்டவர்களைப் பட்டியலிட்டு அதன் அரசியல் பின்னணிகளைத் தெளிவு படுத்துவது (மூளையின் ஏழு அடுக்குகள் பற்றி அல்லது ஊன் உண்ணிகளின் கனவுகள் பற்றி) ஆகியவற்றின் மூலம் இவர்களின் பிரதிகள் பேரினவாதத்தின் முகமூடியைக் கிழித்தெறிகின்றன.
 
          நம் கண்ணெதிரே நிகழ்த்தப்பட்ட ஈழத்துப் பேரினவாதத்தின் வன்முறையை ரமேஷ்-பிரேம் தங்கள் கவிதைகளில் போலவே கதைகளிலும் தொடர்ந்து பேசிவந்துள்ளதை இப்பிரதிகளில் உணரமுடிகிறது. அகதி முகாம்களின் அவலத்தைப் பேசும் 'பேசப்படாத பூக்களுக்கு இனி மெளனங்களும் இல்லை' கதையும் யாழ்ப்பானத்துத் தெருக்களில் நிகழ்த்தப்பட்ட பேரழிவையும் அந்தப் போரின் தொடர்ச்சி கடல்கடந்து நம்மிடம் வர வெகுநாட்களில்லை என்னும் அபாய அறிவிப்பையும் வெளிப்படுத்தும் 'கோடைப்பகல் தூக்கம்' கதையும் இங்கு கவனம் கொள்ளத்தக்கன. 'முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன' கதையில் உலகின் எந்தப் பேரினவாதத்தின் பேரழிவுடனும் பொருத்திப் பார்க்க முடியுமெனினும் அதன் மங்கலான நிலவியல் சித்திரம் அதைத் தமிழீழ விடுதலையை எதிர்நோக்கும் பிரதியாக வாசிக்கும் மனோநிலைக்கு உட்படுத்திவிடுகிறது.
 
          பேரினவாதத்திற்கெதிரான கலகப் பிரதிகளான ரமேஷ்-பிரேம் கதைகள் விளிம்புநிலையரசியலைப் பேசுபொருளாகக் கொண்டது போலவே வடிவ ரீதியிலும் உத்தி ரீதியிலும் கூட ஏகத்துவத்தை உடைத்துப் பன்மைத்துவத்தை உடுத்துக்கொள்கின்றன. நேர்கோட்டு வாசிப்பிற்கெதிராக வரிசை மாற்றி அடுக்கப்பட்ட இப்பிரதிகள் அர்த்தங்களைத் தொடர்ந்து ஒத்திப் போட்டுக்கொண்டே வருவதன் மூலம் மையமறுப்பு அரசியலை நிகழ்த்துகின்றன. வாசகனை முடிவை நோக்கி நெருங்க விடாமல் செய்வதன் மூலமே இவை அதிகாரத்திற்கெதிரான கலகத்தை நிகழ்த்துகின்றன. கால, இடப் பரிமாணங்களில் செங்குத்தாகவும் கிடைக்கோட்டு நிலையிலும் நகரும் இப்பிரதிகள் ஒருவித எண்கணித விளையாட்டை நிகழ்த்திக் காட்டுகின்றன. முதலிரண்டு தொகுப்புகளில் இத்தகைய எராளமான கதைகளைக் காணமுடியும். வரலாற்றின் கருப்புப் பக்கங்களின் கருதுகோள்களைக் கொண்டு புதிய புதிய தொன்மங்களைப் புனையும் இக்கதைகள் வரலாற்றுப் பிரதிகளின் உண்மைத் தன்மைக்கும் புனைவுத் தன்மைக்கும் இடையிலான மொழி விளையாட்டின் சதுரங்கப் பலகையாக விரிந்து விடுகின்றன.
 
          உலகின் ஒட்டுமொத்த அரசியலும் நிகழ்த்தப் படுவதற்கான களங்களாக உடலையும் மொழியையும் முன்னிறுத்தும் ரமேஷ்-பிரேம் கதைகள் தனது பூர்வ அடையாளங்களை மீட்டெடுக்க எத்தனிக்கும் இனங்களின் அடையாள அரசியலுக்கான கருவியாக மொழியை முன்மொழிகின்றன. உடல் ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிப்புக்கும் ஒடுக்குதலுக்கும் உட்படுத்தப்படுவது. அந்தக் கண்காணிப்பிலிருந்து தப்பித்துப் புனைவின் மூலம் உடலைப் பூரண விடுதலை பெற்றதாகக் கொண்டாட வைக்கும் உடலரசியலை நிகழ்த்திப் பார்க்கின்றன ரமேஷ்-பிரேம் கதைகள். கண்காணிப்புக்குட்பட்ட லிங்க மையப் புணர்ச்சியிலிருந்து விடுபட்டு ஆணோடு ஆண் புணர்தல், பெண்ணோடு பெண் புணர்தல், அலியின் போகம், ஆண் சிறுமியோடு போகம் கொள்ளுதல், பெண் சிறுவனோடு போகம் கொள்ளுதல், ஆண் பெண்மிருகத்தைப் புணர்தல், பெண் ஆண்மிருகத்தைப் புணர்தல், கூட்டுப் புணர்ச்சி, யாரும் யாரோடும் உறவு கொள்ளும் கட்டற்ற வெளிக்கு உடலை நகர்த்துதல் என உடலைப் பூரண விடுதலையுடைய ஒன்றாகக் கொண்டாடுகின்றன இக்கதைகள். அதிகார மையத்தின் கண்காணிப்பு அரசியலை உடலின் மூலமாக மீறும் கலக ஏற்பாடு இது.
 
          உடல் அரசியலைப் பேசும் ரமேஷ்-பிரேம் கதைகள் எல்லா அதிகாரத்திற்கும் மூலகாரணியாக அதிகாரத்தின் பேருருவாக இருப்பது ஆண்மையமே என்னும் புள்ளியிலிருந்து கிளைத்து லிங்க மையத்தை உடைத்துப் போடும் பாலரசியல் பேசும் கதைகளாகப் பரிணமிக்கின்றன. ஆதிச் சமூகம் பெண் தலைமைச் சமூகமாகவே இருந்ததை இக்கதைகள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன. ஆதி சக்தியிலிருந்தே மும்மூர்த்திகளும் பிறந்ததான தொன்மம் ஊடுபிரதியாகச் சொல்லப்படுகிறது. 'வியாசகுலம்' கதை லிங்க மையத்தை ஆட்டம் காணச் செய்து பெண்ணின் இருப்பு குறித்த உரையாடலை நிகழ்த்துகிறது. வைத்தியனொருவன் சிவனின் பெயரால் பிள்ளையில்லாத பெண்களுக்குத் தன் விந்தையே மருந்தாகச் செலுத்துவதைப் பேசும் அக்கதை 'பெண் என்பவள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் கொள்கலம் தானா? பிள்ளையில்லாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழவே முடியாதா?' என்னும் கேள்விகளை முன்வைக்கிறது. 'பிரம்மனின் உடலுக்கு வெளியே' கதையில் ஆண் கடவுளை வழிபடும் முப்புர ராசாக்களால் விரட்டியடிக்கப்பட்டு வெகு காலத்திற்குப் பிறகு தன் பூர்வ நிலத்திற்கு மீளும் தாழ்த்தப்பட்ட குடிகளுக்கு வழிபடுவதற்கெனப் பெண் கடவுள் காத்திருக்கிறது. 'குருவிக்காரச் சீமாட்டி' கதை ஆண்களை வெளியே நிறுத்தி பெண்களுக்கான கதை வெளியை உருவாக்குகிறது. 'இங்கும் அங்கும் உடல்கள் அங்கும் இங்கும் கதைகள்' கதை பெண்ணிய அரசியலைப் பேசும் தொன்மங்களைப் புனைகிறது..
 
          ஆண் தன்மையுடைய பிரதிகள் மையத்துடன் இருக்கும். அதன் விரைப்பு முடிவை நோக்கிச் சுட்டியபடி இருக்கும்.. பெண் தன்மையுடைய பிரதிகளில் இறுக்கமிருக்கலாம். ஆனால் தளர்வுகள்- மையபடுத்தப் படாத பல புலன் சிலிர்ப்புகள்- கலைந்து கிடக்கும் பலவழிப் புழைகள்- விட்டு விட்டுத் தொடரும் அர்த்தத்தின் திருகு மாற்றங்கள் என விரிந்து கொண்டேயிருக்கும். (கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள். ப.90). ரமேஷ்-பிரேமின் கதைகளும் அக்கதைகளின் அரசியலும் இத்தகைய பெண் தன்மை கொண்டவையாகவே இயங்குகின்றன.
 
          ரமேஷ்-பிரேம் கதைகளை இரண்டாயிரத்திற்கு முன்பு எழுதப்பட்டவை, இரண்டாயிரத்திற்குப் பின்பு எழுதப்பட்டவை என்னும் இரண்டு பகுப்புகளுக்குள் வைத்துப் பார்க்க முடியமெனத் தோன்றுகிறது. இப்படியொரு கோட்டை வரைந்து கொள்கையில் இக்கதைகளின் பரிமாணங்களில் எற்பட்ட மாற்றங்களெனச் சிலவற்றை அனுமானிக்க முடியும். முந்தைய காலக் கதைகள் உலக வரலாறுகளையும் மேற்கத்திய சிந்தனைத் தொகுப்புகளையும் அதிகம் உட்கொண்டு இயங்கும் கதைகள். இட, காலப் பரிமாணங்களின் மங்கலான சித்திரத்தை மட்டுமே வரையும் இக்கதைகள் அந்தரத்தில் தொங்குவதான பாவனையை ஏற்படுத்துகின்றன. அதிகம் பாத்திரப் பெயர்களில்லாத நீண்ட வாக்கிய அமைப்புடன் எழுத்து வழக்கிலான உரையாடல்களைக் கொண்டியங்கும் கதைகளாக இவற்றை வரையறுத்துக் கொள்ளலாம். கால அடுக்குகளில் முன்னும் பின்னுமாக நகர்வதன் மூலம் வாசகனின் அதிகபட்ச கவனத்தைக் கோரும் கதைகளாக இவை இயங்குகின்றன. 'கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்' தொகுப்பை வாசகனின் அதீத பொறுமையை எதிர்நோக்கும் தொகுப்பாக அடையாளம் காணலாம்.
 
          இரண்டாயிரத்திற்குப் பிறகு வெளிவந்த கதைகளில் கூறுமுறையில் எளிமை கூடியிருக்கிறது. புதுவையின் நிலவியலை வரைந்து காட்டும் கதைகளாக இவற்றை வாசிக்கமுடியும். இட, காலப் பரிமாணங்களின் தெளிவான சித்திரத்தை இவற்றில் காணலாம். கடந்த இருநூறாண்டு கால எல்லைக்குட்பட்ட கதைகளாகவே இயங்கும் இவற்றில் எளிய வாக்கிய அமைப்பையும் பேச்சுவழக்கிலான உரையாடல்களையும் காணமுடியும். தலைப்பிடுவதில் கூட முந்தயகாலக் கதைகளுக்கும் பிற்காலக் கதைகளுக்குமிடையே மிகுந்த வித்தியாசத்தைக் காணமுடிகிறது. (எ.கா. மூளையின் ஏழு அடுக்குகள் பற்றி அல்லது ஊன் உண்ணிகளின் கனவுகள் பற்றி, பன்றி).
 
          ரமேஷ்-பிரேமின் கதைகளை ஒட்டுமொத்தமாகத் திரட்டிக் கொள்வோமெனில் விளிம்புகளின் வரலாற்றுப் பாத்திரம் குறித்துப் பேசும் கதைகளெனவும் பூர்வ மையம் விளிம்புகளில் வழியவிடப்பட்டதின் வன்மத்தைப் பேசும் கதைகளெனவும் வரையறை செய்து கொள்ளலாம். எனினும் அர்த்தங்களை அடுத்த கணத்திற்கென ஒத்திபோடும் இப்பிரதிகளில் வாசக அனுபவத்தினூடாக முடிந்த ஒற்றை முடிவுக்கு வரமுடியுமெனத் தோன்றவில்லை. சக வாசகராகிய உங்களுக்கு இக்கதைகள் என்னுடைய வட்டத்திற்கு வெளியே வேறுவிதமான உடைப்புகளை ஏற்படுத்திவிடும் சாத்தியமிருக்கிறது. எனவே இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளாமல் தொடர் ஓட்டத்தின் முதல் ஓட்டக்காரனைப் போல இதன் தொடர்ச்சியை உங்கள் பொறுப்பில் விட்டு விடுகிறேன். எனக்குச் சார்பாகவோ எதிராகவோ சம்பந்தமில்லாமலோ எப்படி வேண்டுமானாலும் இதன் தொடர்ச்சியை நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
நன்றி: மணல் வீடு ( டிசம்பர் 2009)

காகங்கள் அங்கு பறந்தன, காற்று இனித்தது
பிரசாந்தி சேகர்
http://www.kalachuvadu.com/issue-175/page29.asp


சொல்லித் தீராத் துயர் ஒன்று என் கைகளுக்குள். எழுதி மாளா கனம் ஒன்று என் நெஞ்சுக்குள். இட்டு நிரப்ப நீ வேண்டும். உன்னிடம் பகிர்ந்து நான் மீளவேண்டும்.

மரித்தாலும் மறக்கா நெடுந்துயரின் பதிவு இது.
உயிர்த்தாலும் துரத்தும் கொடுங்கனவின் பதற்றம் இது.
எரித்தாலும் எரியாச் சிறு கூட்டின் வாழ்வு இது.

இரவொன்று வேண்டும் இந்த ஒளியைப் புரிந்திட. அவ்வாறான இரவு இது. ஓராயிரம் மின்மினிப் பூச்சிகள் மின்னக்கண்டேன், அங்கும் இங்கும். சரசரக்கும் இலைகளுக்குள், சடைத்த மரக்கொப்புகளுக்குள், அடர்ந்த காடுபோல் அமைந்த இந்த ரயில் நிலையத்தினுள், துருப்பிடித்து மணக்கும் இந்தக் காற்றினுள், மின்னும் உறுப்பை வால்பகுதியில் கொண்ட இந்தச் சிறுபூச்சிகள் கூட்டமாய்ப் பறந்து, விட்டுவிட்டு மின்னியும் விடாது மின்னியும் முடிச்சுப் போடும் கதைகள் ஒன்றல்ல. காத்திருக்கின்றேன். ஒவ்வொன்றாய் அவிழ்த்தபடி. ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கும் ஒருமுறை விரைந்து வந்து சடசடத்துக் கடந்துபோகும் ரயிலைப் பார்த்தபடி பயணிக்க இங்கு நான் வரவில்லை. இங்கு அமர்ந்து என்னை மீட்டிட வந்தேன். நெஞ்சினில் கனன்றெரியும் கதை ஒன்றைச் சொல்லிட வந்தேன். இது எனது கதையா? எனது வேரின் கதையா? எனது விருட்சங்களின் கதையா? சொல்லத் தெரியவில்லை. சொற்களுக்கும் சக்தி இல்லை. ஒன்று மட்டும் தெரியும். இந்த ரயில் நிலையத்தில் பதிந்த கதை இது. இணையாகச் செல்லும் தண்டவாளங்களில் தொடங்கிய கதை. அதனுள் இரும்பாய் ஊறி இரத்தமாய்க் கசிந்த கதை. விழிகளில் கடந்துபோகும் ரயிலின் ஒவ்வொரு சடசடப்பிலும் உயிர் உறையும் கதை. சற்று இறங்கி இந்த இரும்புப் பாதையில் ஒருமுறை காது வைத்துக் கேட்டுப்பார்! ஒரு தேசத்தின் அழுகுரல் உனக்குக் கேட்கவில்லையா? ஓர் இனத்தின் சாவுப் பாடல் உன் நெஞ்சைப் பிசையவில்லையா? உள்ளமெல்லாம் கனக்கவில்லையா? உணர்வழிந்து போகவில்லையா? மின்னிப் பறக்கின்றனவே இந்தப் பூச்சிகள். நீயும் 'ஓம்' என்று ஓர் வார்த்தை தலையசைத்துச் சொல்! உன் கைப்பிடித்து உன்வேருக்குள் நீராய் ஊற்றுவேன், நீளும் என் நினைவுதனை. தீராத் துயர்தனை.

ஓர் ஊரில் ஓர் எல்சூனியா வாழ்ந்தாள்.
அவள் சிறுமி.
ஒருநாள் யாருமற்று அவள் இறந்துபோனாள்.
அவள் அப்பா மஜ்டானெக்கில்.
அவள் அம்மா ஔஷ்விற்சில்.

- Elzunia

இது ஒரு சிறுமியின் காலணிக்குள் மடித்து வைக்கப்பட்டுப் போலந்தின் லுப்ளின் எனும் ஊரில் 1944ஆம் ஆண்டு இறந்தவர்களின் உடமைகளுடன் கண்டெடுக்கப்பட்ட கவிதை. அதனை எழுதியவள் எல்சூனியா என்ற ஒன்பது வயதுச் சிறுமி. போலந்து மொழியின் சிறுவர் பாடல் ஒன்றின் மெட்டில் அவள் அந்த வரிகளை எழுதிப் பாடி வந்தாள். பிறிதொரு நாள் யாருமற்று அவள் இறந்துபோனாள் என்று சொல்கிறது ஒரு குறிப்பு. எல்சூனியாவின் மரணம்; அது இயற்கையாய் நிகழ்ந்தது அல்ல. ஓர் இனத்தை சேர்ந்தவள் அவள். அதற்குரிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டவள். அதனால் முகிழ்க்கு முன் காலன் அவளைக் குரூரமாகக் கூட்டிச் சென்றான். எல்சூனியா இன்று இல்லை. அவள் அப்பா இல்லை. அம்மாவும் இல்லை. அவள் எழுத்து மட்டும், சாம்பலை ஊதி ஊதி விலக்கப் பூத்துக்கிடக்கும் நெருப்புப்போலத் தணலாய் எரிகிறது. சாவையும் மீறி, சரித்திரத்தின் சிவந்த பக்கங்களில்.

1939 & 1945: இரண்டாம் உலகப்போரின் காலப்பகுதி அது. எனக்கு அது இருண்டகாலம். ஒரு சொல்தான். ‘ஹோலோகௌஸ்ட்’. கிரேக்க மொழியில் ‘ஹோலோகௌஸ்ட்’ என்பது ‘முற்று முழுதாய் எரித்தல்’ என்று பொருள்படும். கிரேக்க மற்றும் உரோமானிய வழிபாட்டு முறையில் நிலத்தெய்வங்களுக்குக் காணிக்கையாக விலங்கினைப் பலிகொடுப்பதுண்டு. பலியிடப்பட்ட அந்த விலங்கு முற்று முழுதாய் எரிக்கப்படும். எரிந்த அந்த இருண்ட படையலே அதி உச்ச வேள்வியாகக் கருதப்பட்டது. அதுவே ‘ஹோலோகௌஸ்ட்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. எனினும், கடந்த அரை நூற்றாண்டு காலமாக ‘ஹோலோகௌஸ்ட்’ என்பது ஓர் இனத்திற்குச் சொந்தமான சொல்லாகியது. இரண்டாம் உலகப் போரின்போது அவ்வினத்திற்கு நிகழ்ந்த பேரிடர் அது. முற்றுமுழுதாய் ஓர் இனம் எரிக்கப்பட்ட அனர்த்தம். இனப்படுகொலை. ‘யூதர்’ (யிமீஷ்s) எனும் பெயர் கொண்ட இனத்திற்கு நிகழ்ந்த பெருந்துயர் அது.

11ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அந்நியரின் ஆட்சியினால் தமது சொந்த நிலமான இஸ்ரேலில் இருந்து புலம்பெயர்ந்து உலகமெங்கும் சிதறிப் பரவினர் யூதமக்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்பாகம், ஐரோப்பாவில் வாழ்ந்த யூதமக்களின் எண்ணிக்கை சுமார் 9 இலட்சத்தைத் தொட்டது. போரின் முடிவில், ஆறு இலட்சம் யூதமக்களின் உயிரைக் குடித்தது ‘ஹோலோகௌஸ்ட்’. ஒருவனே அதனை மூர்க்கமாக நிகழ்த்தி முடித்தான். ஜெர்மனி நாசிக் கட்சியின்

(ழிஷிஞிகிறி) தலைவன். அடோல்ப் ஹிட்லர் அவன் பெயர். மானுடத்தின் எதிரி. மனித இனத்தின் பெரும் பகைவன். ஆரிய இரத்தத்தில் பிறக்காதவர்கள், தனது கருத்திற்குத் தலையசைக்க மறுத்தவர்கள், ‘வானம் பச்சை’ எனக் கருதியவர்கள். ‘நிலம் நீலம்’ எனச் சொல்லியவர்கள் அனைவரையும் அழித்தான். அழிப்பின் விதைகளை வெகு நுட்பமாய்த் தூவினான். மானுடத்தைப் பொய் யாக்கி, பொய்யைப் பெரிதாக்கினான். அந்தப் பெரிதைச் சில வார்த்தைகளுக்குள் சிறிதாக்கினான். அந்தச் சிறு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க அதுவே பெரும் மெய்யாகிப் போனது. அந்த மெய்யில் மரித்தனர் ஆரியர் அல்லாத யூதர், ஜிப்ஸீஸ், கம்யூனிஸ்ட், ஊன முற்றவர், ஓரினச் சேர்க்கையாளர்; இன்னும் எத்தனையோ இனத்தால், மதத்தால், நிறத்தால், தேசத்தால் வேறுபட்டவர்கள்; மொத்தம் 15 இலட்சம் உயிரிகள்.

மாண்டவர் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. மரணத்திற்குக் கணக்குப் போட்டுப் பெருக்கவும் விரும்பவில்லை. மரணத்திற்கு முன் எழுதப்பட்டது ஒரு பதிவு. ஓர் இனத்தின் கையெழுத்து. எல்சூனியாவின் கவிதையைப் போல இன்னும் ஆயிரமாயிரம் வரிகள் என் கைகளுக்குள் கனத்துக் கிடக்கின்றன. மரணத்திற்கு முன் எழுதப்பட்ட இந்தக் கவிதைகள் வண்ணங்கள் தீர்ந்துபோன சாகாச்சித்திரம். அலங்காரம் இல்லை. அணி இல்லை. அழகு இல்லை. சொற்களை உடைத்தேன் சாம்பல் பறந்தது. நீ சொல். மரணத்திற்காகச் காத்திருக்கும் அந்தக் கொடிய கணத்தில் எழுதுவது சாத்தியமா? சுயம் தொலைந்து, மனம்பிறழ்ந்து, உடல் தேய்ந்து துடிக்கும் நொடியிலும் படைப்பது சாத்தியமா? சாத்தியமாயிற்று. பலருக்கு அது சாத்தியமாயிற்று. போலந்து நாட்டின் ஔஷ்விற்ஸ் (Auschwitz) எனும் பெரும் நிலத்தில் எழுதப்பட்டதனால் அவை ஔஷ்விற்ஸின் கவிதைகளாயிற்று. தொட்டுப் புரட்டியபோது அவை எனதாகின. மைதொட்டு எழுத நேர்ந்த அந்தக் கணம், இரத்தத்தில் தோய்ந்தது எனது இறகு. சாம்பலாகின வார்த்தைகள். வாழாத ஒரு காலத்தில் வாழ்ந்தேன். போகாத ஓர் ஊருக்குப் போனேன். வேகாத ஒரு நிலத்தில் வெந்து, எரிந்து, சாம்பலாகித் தொலைந்தேன். புலன்கள் அனைத்தையும் இழந்தேன்.

உணர்வழிந்து போனேன். விரல்களுக்குள் வலி எடுக்கும் இந்தச் சாவுப் பாடல்களில். யாரும் என்னை அங்கு கண்டீர்களா? கண்டால் ஒரு வார்த்தை சொல்லுங்கள்.

விலங்குகளைச் சுமக்கும் புகைவண்டிகள்
மனிதர்களைச் சுமந்தன
ஒரு சொட்டு நீருக்கு, கீற்று ஒளிக்கு
கொஞ்சம் காற்றுக்கு
கொடுத்தோம் படையினருக்குத் தங்கக்காசை
எமை இகழ்ச்சியாய்ப் பேசும்
இனிவரும் தலைமுறை
நம்பிடாது எமக்கு நேர்ந்த இடரை மட்டும்

(Tadeusz Borowski)

ஐரோப்பாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் அடிவானத்தின் அனைத்துப் புள்ளிகளிலிருந்தும் ரயில்வண்டிகள் புகைத்தபடி புறப்பட்டன. மனிதர்களாய் நாம் வாழ்ந்த வீடுகளிலிருந்து விரட்டப்பட்டு, ஆடு, மாடு, குதிரைகள் போல நெருக்கித் தள்ளித் திணித்து அடைக்கப்பட்டோம், பொறித்தாழிட்ட ரயில்பெட்டிகளுக்குள். திசை ஒன்று கண்ணுக்கு எத்துப்பட இந்தப் பெட்டிகளுக்கும் ஜன்னல் இல்லை. எங்கு போகிறோம்? தெரியவில்லை.

ஔஷ்விற்சை நோக்கி ஔஷ்விற்சை நோக்கி
விரைகின்றன சக்கரங்கள்

(Karl-Heinz Czechowski)

போகும் இடத்தில் எமக்கு வேலை உண்டு. தங்க இடம் உண்டு. உணவும் உண்டு. அதுமட்டும் தெரியும். அதுபோதுமல்லவா? அறிவுக்கு அதுபோதும். ஆயினும், இதயம் விசித்திரமாய்த் துடிக்கிறது. காற்று இல்லை. ஒளியில்லை. நீர் இல்லை. உணவில்லை, இந்த நெடுநாள் பயணத்தில். மலம் கழிகிறது. சிறுநீர் மணக்கிறது. வியர்வை கசிகிறது. இருள் கவிகிறது. எங்கும்.

தண்ணீர், தண்ணீர்,
தண்ணீர் கொடுங்கள்
நா ஊதி உப்பிற்று
உதடு கொதித்து வெடித்திற்று

(Zofia Grochowalska Abramowicz)

யாரும் என்னை அங்கு கண்டீர்களா? சுவாசப்பை சுருங்கிப்போக ஒருசொட்டுக் காற்றுக்காய் நான் தவித்தேனே. யாரும் என்னைக் கண்டீர்களா? என் அருகில் நசிபட்டுத் தூங்கி விழித்த அந்தக் குழந்தை நீருக்கு வீரிட்டு அழுகிறது. அதன் அம்மா அசைவற்றுக் கிடக்கிறாள். அசைவுறும் நான் வெறுங்கைகளுடன். இது கொடுமை. கழிந்த மலத்தில் மயங்கிக் கிடக்கிறான் இன்னொருவன். அவனை எழுப்ப முயன்று தோற்றுப்போனாள் ஒருத்தி. அவளின் கண்ணீரிலும் துடிக்கவில்லை அவனது விழிகள். காற்றுக்கூடப் புகுந்து கொள்ளாத நெருக்கத்தில் மரணம் புகுந்து விழித்தபடி இருந்தது. இருளோடு இருளாக அது கூடவே வந்தது. கண்களைக் கட்டிக் கூட்டிச் சென்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பலரை. ஒளியின்றி, ஓசையின்றி. இன்னும் நெடுநாள் நீளுமா இந்தப் பயணம்? சொல், சுருங்குமா எம் வாழ்வு?

சட்டெனச் சக்கரங்களின் சடசடப்பு ஓய அடைத்து மூடிய கதவுகள் திறந்துகொண்டன. காற்று, அதனைக் குடித்தும் தீரவில்லை தாகம். ஒளி, அது தெறிக்கக் கண்கள் பனிக்கின்றன. பெயர் அறியா இந்தப் பெரும்வெளியில், உள்ளமெல்லாம் ஊசியாய்க் குத்தும் இந்தப் பனி நிலத்தில் பதித்தோம் எம் கால்களை.

வரைபடத்தில் இந்தப் புள்ளி
இந்தக் கறுப்புக்கறை. ஐரோப்பாவின் நடுவே.
இந்த சிவப்புக்கறை. இந்த துருப்புக்கறை.
இந்த இரத்தக்கறை. இந்த சாம்பல்கறை.
எண்ணற்ற மக்களுக்கு. பெயரற்ற நிலம் இது.
தமது வாழ்வுடன். தமது நினைவுகளுடன்.
சின்னச் சின்ன குற்றங்களுடன். பெரிய பெரிய கனவுகளுடன்
இறக்கிவிடப்பட்டனர்.
அந்த விழிகள் கேட்டன. ஆயிரம் கேள்விகள்
இங்கு வந்தவர்களுக்கும் தெரியாது
சென்றவர்களுக்கும் தெரியாது இந்த நிலத்தின் பெயர் யாதென்று.

(Charlotte Delbo)

ஔஷ்விற்ஸ், அதன் பெயர். போலந்து நாட்டின் கிராகோவ் (Krakov) எனும் நகரத்திலிருந்து முப்பது மைல்கள் தென்நோக்கி அமைந்த ஊரின் பெயர்தான் ஔஷ்விற்ஸ். அமைந்த ஊர் அல்ல. ஆரியர்கள் அமைத்த ஊரது. அவ்வளவும் தானா?

வைக்சல் (Weichsel) நதிக்கும் சோலா (Sola) நதிக்கும்
இடையில் கிளைவிட்டு
சேற்று நிலத்தில் முட்கம்பிகள் சூழப்
பரந்து கிடக்கிறது ஔஷ்விற்ஸ்
போலந்து மலைகளின் அடிவாரத்தில்
சாபம் போட்ட கூடல்லவா அது?

(பெயரற்ற கவிஞன்)

நாம் ஏன் இங்கு வந்தோம்? இங்கும் அங்கும் எங்கும் சுற்றிக்கிடக்கும் முள்வேலிகளுக்குத் தெரியும். மின்கம்பிகளுக்கும் தெரியும். தூரத்துக் காப்பரன்களுக்குத் தெரியும். செங்கல் தொடர் குடியிருப்புக்களுக்கும் தெரியும். மரப்படுக்கைகளுக்குத் தெரியும். புகைக்கூடுகளுக்கும் தெரியும். இங்கு உலவும் ஆரியர்களுக்குத் தெரியும். அவர்களின் கைப்பிடியில் ஓட்டம் பிடிக்கும் பசி நாய்களுக்கும் தெரியும். ஏன், இந்த நிலத்திற்கும் காற்றுக்கும் நன்றாகவே தெரியும். எமக்கு மட்டும் தெரியாது போயிற்று. அறிவுக்கும் கிட்டாது போயிற்று. எமது உடைமைகள் தனித்தொதுக்கப்பட வேகமாய் நடக்கின்றோம் அந்த வாயிலை நோக்கி.

எழுதப்படாத வீரகாவியம் இங்கு பிறக்கின்றது
அவலம் நிறைந்த இறுதிக்காலம் எமை அழைக்கிறது.

(Tadeusz Borowski)

தூரத்தில் புகைக்கூடுகள் புகைத்துக்கொண்டே இருக்கின்றன. அது இரசாயனத் தொழிற்சாலையா? அங்குதான் எமக்கு வேலையா? விறைக்கின்றன எனது கால்கள். நடுக்கம் கொள்கின்றன எனது விரல்கள். யாரும் என்னை அங்கு கண்டீர்களா? இரும்பு எழுத்துக்கள் பதித்த அந்த நுழைவாயிலில் ஓரமாய் நான் ஒதுங்கி நின்றேனே. புரியாத பல கேள்விகளுடன் அந்த எழுத்துக்களில் பதில்களைத் தேடினேனே. யாரும் என்னைக் கண்டீர்களா? வரிசையில் என்னைக் கடந்துபோயின பல கால்கள். "உழைப்பு உன்னை விடுதலை செய்யும்" (Arbeit Macht Frei) என்று சொல்கிறது ஒரு வாசகம், இந்த வாயிலில். ‘உழைப்பு’ ‘விடுதலை’ முரண்படும் இரண்டு புனிதப்பொருள் கொண்ட கூற்றுகள். உழைப்பிற்கும் விடுதலைக்கும் வெகுதூரமல்லவா? அறிவுகட்ட முயன்ற படங்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாது ஒருசேர மறுக்கின்றன. நொருங்கி விழுகின்றன. இந்த நிலத்தில். உனக்காயினும் புரிகிறதா? இமை கொட்டக் கொட்ட விழிக்கும் இந்தக் கணம் பனிச்சூரியனின் கதிர்கள் இரத்தச் சிவப்பாய் வானத்தைப் புண்ணாக்க, இழுத்து வரிசையாக்கப்படுகிறேன். எங்கும் வரிசைகள். நீளும் பட்டியல்கள்.

பெண்கள். ஆண்கள்.
குழந்தைகள். பிஞ்சுப்பாலன்கள்
பலமானவர்கள். பலமற்றவர்கள்
முடி நரைத்தவர்கள். பார்வை மங்கியவர்கள்
ஆண் போன்ற பெண்கள். பெண் போன்ற ஆண்கள்.
நீள்மூக்கு மனிதர். கூர்நாடிக்காரர்
மனிதரில் இத்தனை வகை
இந்த நிலத்தில் மட்டும்

(பெயரற்ற கவிஞன்)

இதயம் ஓங்கி அடிக்க உன்னைக் கேட்கிறேன். இதில் நான் எந்த வகை? யாருக்கும் தெரியுமா? சொல்லுங்கள். என்னைப் பற்றி எனக்கே தெரியாதவையெல்லாம் அவனுக்குத் தெரிகிறது, இங்கு அமர்ந்து பட்டிய லிடுபவனுக்கு. எனது உடல்வாகு, உயரம், எடை, பார்வைக் கூர்மை, கால்களின் சக்தி, கைகளின் வீரியம் யாவும் ‘பலமானவர்கள்’ எனும் பட்டியலில் சேர்கின்றன. அந்த வரிசையில் நடக்கின்றேன்.

புயல் - அது வீசி எறிந்தது
எமை இந்த நிலத்தில்
சுமந்துபோனது
நதியில் மிதக்கும் கிளையாய்
காட்டினுள் தொலைந்த குழந்தைகள் நாம்.

(Tadeusz Borowski)

எனக்கு முன்நின்ற அந்த முடி நரைத்த பெண் எங்கே? பார்வை மங்கின பெண் எங்கே? தனது கைகளில் இருந்த குழந்தையைப் பறித்தெடுக்கக் கதறியழுத அந்த அம்மா எங்கே? அந்தக் குழந்தை எங்கே? எம்முடன் நடந்து வந்த ஆண்கள் எங்கே? புகைக்கூடுகள் புகைத்தபடியே இருக்கின்றன. அதற்குள் கடின உழைப்பு எமக்காகக் காத்திருக்கிறதா? உழைக்கத்தானே நாம் இங்கு வந்தோம்? உழைத்து வீடு செல்லத்தானே நாம் இங்கு வந்தோம்? கேள்விகள் பதில்கள் அற்று முளைக்கின்றன. கண்களைக் கசக்கி விழிக்கிறேன். கொடுங்கனவாய் இது இருக்கக் கூடாதா?

பெயர் யாவும் பூச்சியத்திற்கும் கீழ்
இலக்கம். அதுவே இந்த நிலத்தின் அரசன்
பசியுற்றது ஓர் இலக்கம். பலநாள் ஆகாரம் இன்றி
நோயுற்றது ஓர் இலக்கம். குருதிக்கட்டிகள் பெருக்கெடுக்க
உயிர்விட்டது ஓர் இலக்கம். இது வேடிக்கையான கூற்று
மனிதர்தானே இறப்பர். இலக்கம் இறக்குமா?

(Franciszek Stryj)

சுயத்தையும் மனிதத்தையும் ஒரு நொடியில் சிதைக்க முடியுமா? யாரும் என்னை அங்கு கண்டீர்களா? கண்களை இறுக்கி மூடி, பற்கள் நொருங்கக் கடித்தேன். கூரான ஆணிகள் பதித்த இரும்புக் கல்லை ஆறு தடவை எனது இடது நெஞ்சினில் குத்தி எடுத்தான் ஒருவன். அம்மா... அம்மா... அம்மா... புழுத்துடியாய்த் துடித்தேனே. யாரும் என்னைக் காணவில்லையா? இதயம் வெம்பி அழுதது. சொட்டுச் சொட்டாய் இரத்தம் வழிந்தொழுக நெஞ்சு நனைந்தது. காயாத அந்தப் புதுப்புண்ணில் நீல மையைத் தடவினான் இன்னொருவன். மூச்சு நின்றது. முகம் தொலைந்தது. சுயம் இழந்து நான் இலக்கமானேன். "157622". புலன்களில் உச்சமென நான் கருதும் தொடும் மொழி எனக்குத் தொலைவாய்ப் போயிற்று. இனி, என்றும் அது எனக்குக் கிட்டாது. எனக்கும் என் உடலுக்குமான உரையாடல்கள் இந்தக் கணம் முதல் முற்றுப்பெற்று முடிந்துபோயின.

ஆரியனே, கயவர்களே
நெஞ்சு மட்டுமல்ல. கை, கால்
கழுத்து, உடலனைத்தும் உனக்கே
பச்சை குத்து. சிவப்பாக்கு ஆணி வைத்து
நீல மை தடவு. வண்ணமாக்கு
துடிக்காது இனியும் இந்தத் தேகம்.

(பெயரற்ற கவிஞன்)

இனியாரும் என்னைப் பெயர் கொண்டு அழைக்காதீர். 'விசித்திரமானவள்' என்ற குட்டிக்குட்டிக் கனவெல்லாம் குத்திக்குத்தி வலிக்கின்றன. விட்டுவிட்டுப் போகின்றன. இனி, அவளும் மற்றவளும் நீயும் நானும் ஒன்றே. வெவ்வேறு இலக்கங்களுடன். புகைக்கூடுகள் ஓய்ந்த பாடில்லை. எரிந்து எரிந்து புகைக்கின்றன. இனி, நாம் இழப்பதற்கு ஏதும் இருக்கிறதா?

இலைகள் உதிர்கின்றன நாள்காட்டியிலிருந்து
வாழ்வின் சக்கரம் தொடராய்ச் சுழல்கிறது
நேற்றைய கொடுங்கனவு. அது மறந்தாயிற்று இன்று
இன்றைய நினைவு. அது மழுங்குது மெல்ல
என் சகவாசியே! உனக்கு நினைவிருக்கிறதா?
பனியில் வெறுங்கால்களுடன்
காலணிகள் எம் கனவாகின
தலைமுடி மழிக்கப்பட்டு
முடி எம் கனவாகின

(Miroslaw Lebkowski)

யாரும் என்னை அங்கு கண்டீர்களா? கண்டிருக்க மாட்டீர்கள். எனது தோற்றம் எனக்கே அந்நியமாய், அவமானமாய், தலைமுடி மழிக்கப்பட்டு உருக்குலைந்து நின்றேன். மொட்டைத் தலையுடன். முதிர்ந்த குழந்தையாய். கொட்டும் பனியில். தலைத் தோல் விறைக்க. யாரும் கண்டீர்களா?

கத்தரிக்கப்பட்ட முடி
கொத்துக்கொத்தாய். நிலமெங்கும்
தோளிலும் காலிலும்
கழுத்திலும் விழுகிறது
கண்ணீர் மொழியாகி
அது கரைகிறது. விழுந்த
எனது சுருள்முடியில் கலந்து

(Anna Sonschein)

கட்டற்று அலைகிறது மனது. கரைபுரண்டு வழிகிறது நினைவு. இனி, அழுவதற்கும் என்னிடம் கண்ணீர் இல்லை. நான் மட்டுமா? இலக்கங்களாக உலவும் இந்த நிலத்தின் அத்தனை உருவங்களும் முகம் அற்று, முடி அற்று ஒரே உடையில்.

நீள்வரி ஆகின எமது ஆடைகள்
நீங்கின எமது முடி
விதிக்கு அப்பாற்பட்டவர் நாம்
மனிதனாய் இருப்பவனும்
கலைஞனும் சிந்தனை யாளனும்
அடிமைகளின் ஆடையில்

(Kupfer Kobernitz)

பழுப்பு நீலவண்ணத்தில் வெள்ளை நீள்வரி. இனி, இதுவே எமது உடையாகிற்று. அவளின் உடலில் அது பெருத்துத் தொங்குகிறது. எனக்கோ காலுக்கு மேலேறிக் கழுத்துவரை இறுக்கி நெரிக்கிறது. நீள்வரி உடையில் அடுக்கடுக்கே உயர்ந்த மரப்படுக்கைகளில் குறுக்கும் நெடுக்குமாய்க் கிடக்கிறோம். இந்தக் குடில்களில். குடில், இந்தச் சொல்லுக்குள் எத்தனை அன்பு, பரிவு, அரவணைப்பு, உறவு, சூடு, சுகம். தொலைத்தோமே இவையாவற்றையும் நாம். குடில்களில் மனிதர் வாழ்வார் இல்லையா? எமக்கென ஒதுக்கப்பட்டிருப்பதோ விசித்திரமான குடில்கள். எட்ட நின்று பார். எத்தனை அழகான செங்கல் குடில்கள். மரத்துண்டுகள் பதித்த குடியிருப்புகள். கிட்டவந்து குடிலுக்குள் ஓர் அடி வைத்துப் பார். மனம் வெடித்துச் சிதறும். விலங்குப் பண்ணைகள் இவை. ஆடுகள், மாடுகள், குதிரைகள், பன்றிகள், கோழிகள் வளர்ந்து திரிந்த குடில்களுக்குள் நாம். மடிக்குள் பொத்தி வைத்து வளர்த்த என் அம்மா சித்தம் சிதைவாள் இதனைப் பார்த்து. முடி கோதி முத்தமிட்ட என் அப்பா துடித்துப் போவார். இதனைக் கண்ணுற்று. துடித்துத் துவளவில்லை நான். முகம் தொலைத்து, முடிதொலைத்து, பெயர் தொலைத்து, அறிவையும் தொலைத்த எமக்கு இந்த விலங்குப் பண்ணைகள்தான் தகும். மனிதர் அல்லவே நாம். குடில்களில் வாழ!

எம் கண்களில் வெண்படலங்கள்.
அதன் அடிவாரத்திலோ
மறக்கப்படாமல், மரிக்காமல்
வலி தந்து உறைகிறது
துயர், இழப்பு, இன்னல்
நெடுந்துயர், கடும் இழப்பு
பேரின்னல்

(Zofia Grochowalska - Abramowicz)

கால்விரல்களுக்குள் வைக்கோல் சிக்குப்படுகிறது. மேலெங்கும் விலங்குகளின் எச்சங்கள். என் அருகில் தூங்க முயன்றவள் சத்தி எடுத்து, கத்தி அழுகிறாள். ‘அழாதே’ என்று நான் எப்படி அவளுக்குச் சொல்ல? அவள் வேகமாய் ஓடுகிறாள். இருண்டவெளிதனில். அவளை நிறுத்த யாரும் இல்லையா? சட்டென ஓர் ஒலி. கண்கள் ஒருமுறை ஒளிர்ந்து இருள, மின்கம்பிகள் மின்னிப் பொரிந்தன. சிவந்து வழிந்தன. என் நா அசைவற்றுப்போயிற்று. என் வார்த்தைகள் எங்கே? தொலைத்தேன். சொல் கோர்த்துப் பேசும் மொழிதனைத் தொலைத்தேன். என் மௌனம் யாருக்கும் கேட்கவில்லையா? தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் நீள்கிறது இந்த இரவு. மரணம் மட்டும் துளிகூடத் தூங்காது விழித்திருக்கிறது. கால்கள் நடந்த பாதையெங்கும் துரத்திப் பிடித்துக் கவ்விக்கொண்டது. வெவ்வேறு வடிவில். இனி விடியாத பல காலைகளும் விரியாத பல பகல்களும் மடியாத பல இரவுகளும் இந்த நிலத்தில் மரணத்துடன் மல்லுக்கட்டி. நேற்று அவள், இன்று இன்னொருத்தி. நாளை வேறொருத்தி. மறுநாள் நானா? வானம் புகைமண்டிக் கிடக்கின்றது. இந்தப் புகைக்கூடுகளுக்கு ஓய்வே இல்லையா?

உலுப்பி எழுப்புகிறது ஓர் ஒலி. விடியாத பல காலைகள் தட்டுத் தடுமாறி விடிகின்றன.

முகாம்! முகாம்! பெண்கள் முகாம்!
கழிப்பறை. குளியலறை
கோப்பி எடு! எழும்பு!
அறிவிப்பு! அறிவிப்பு!
எல்லாம் வெளியேறு!
ஐவராக! அமைதி! அமைதி!
கணக்கெடுப்பு! எல்லாம் சரி!
கத்தி, கோடாலி, மண்வெட்டி, வைக்கோல் வாரி
வேகம்கொள்! நடந்துசெல்!
நிற்காதே!

(Jadwiga Leszczynska)

பனியிலும் மழையிலும் நடுங்கும் குளிரிலும் நடந்தோம். வெகுதூரம். எங்கு போகிறோம்? காட்டு மரங்களை வெட்டிச்சரிக்க. அவற்றை விறகாக்க. சேற்று நிலத்தைச் சரிப்படுத்த, வெற்று நிலத்தில் குழிதோண்ட. மரத்தாலான காலணிகள் எம் கால்களில். பாதையோ பனியில் சேறாகி.

மரணத்தின் பனிப்பாலையில்
மெதுவாக இழுபட்டோம்,
வடக்கு நோக்கிச்
சங்கிலியால் விலங்கிடப்பட்டன
எமது கால்கள்.
குளிரால் குறுகின
எமது தோள்கள்,
செத்து விழுந்தன
சில உருவங்கள்.
வீசும் பனிக்காற்றில்
கேளுங்கள் எமது பாடலை,
அது ஒப்பாரியாய் எழும்புகிறது
அந்தப் பாடல், நாம் அங்கு பாடினோம்
அந்தப் பாடல், அதற்காய் உயிரை விட்டோம்

(Fania Fenelon)

கால்கள் நீலமாகி நாளங்கள் புடைக்க நடையை நிறுத்தினாள் ஒருத்தி. அதுபெரும் ஆபத்து. திரும்பிப் பார்த்து அவளை இழுப்பதற்குள் கால்களுக்குள் குண்டுபாய்ந்து சரிந்து விழுந்தாள் அந்தப் பெண். நேற்றைய இராப்பொழுதில் அவளின் குரல்தான் வைக்கோல் படுக்கையில் விம்மிவிம்மிக் காதுகளில் ஒலித்தது.

மகளே! இரவின் பிஞ்சுக்கால்கள்
இந்தப் பாடலின் தொட்டிலை அசைக்கட்டும்
என் உருவம் உனக்கு, தெரியாதுபோனாலும்
உன்னிடம் வருவேன். இந்தப் பாடலினூடே
எனது கைகளில் சுமந்து வருவேன்
உனக்கான தூக்கத்தை
நான் வராதுபோனால்
வாழ்வேன். பல ஆண்டுகள்
இந்தப் பாடலில்
தூங்கு என் மகளே!
நான் அழுதிடல் ஆகாது
உன்னைப் போல

(Tadeusz Holuj)

உயிரைப் பிசைந்த அந்தக் குரல் இப்போதும் என் காதுகளில். ஒலித்து ஓய்ந்தது. போதும். செவிப்புலன் இந்த கணம் முதல் மருத்துப்போக. கேட்கும் மொழியாவும் தொலைந்துபோக. இந்த நிலம் இனி ஒலியற்றுக் கிடக்கட்டும். சற்றுமுன் எனது கைகள் தோண்டிய குழிக்குள் அவளின் உடல். உற்றுப் பார்க்கிறேன். இந்தக் காட்டுநிலத்தின் ஆழத்திலிருந்து தட்டுப்படுகின்றன இன்னும் பல எலும்பாய்த் தேய்ந்த கைகள். கால்கள். தலைகள். நம்பமறுத்துத் திரும்பி நடக்கிறேன். தூரத்தில் புகைக்கூடுகள் எரிந்துகொண்டு இருக்க, பஞ்சு பஞ்சாய்ப் புகை பரவியது. இந்த நிலத்தில் புகை அல்லாத பொழுதேதும் உண்டா? காலுக்குள் உறைந்த பனி சிவந்து போயிற்று. அது அவள் விழுந்த பனி. அறியாமல் ஒரு துளி என்னையும் மீறி என் கண்களின் ஓரமாய்க் கசிந்தது. யாரும் அதனைக் கண்டீர்களா? கண்டாலும் ‘காணவில்லை’ என்று சொல்லுங்கள். அது அப்படியே உறைந்து போகட்டும்.

எமது பெரும் பகைவன்
பனி, அது ஓய்ந்தபோது
பசி, அது பெருக்கெடுத்தது

(Primo Levi)

மரணம் எமது பகல்களையும் விட்டுவைக்கவில்லை. பசி வடிவில் தின்று தீர்த்தது. மெல்லமெல்ல உயிரைப் பிடுங்கி எடுத்தது. யாரும் என்னை அங்கு கண்டீர்களா? பசியால் கண்கள் மின்ன மரப்படுக்கையில் எலும்புகள் நொருங்கத் துடித்தேனே. யாரும் என்னைக் கண்டீர்களா?

ஒருபிடி உணவிற்குப் பிச்சை எடுத்தோம்
ஏச்சும் சாபமும் அடியும்
அனைத்தும் பொறுத்தோம்
உணவைக் கண்டபோது
விலங்கானோம்

(Konstanty Cwierk)

கஞ்சி போன்ற நீராகாரத்தில் சதை வற்றி எலும்புகள் தேய நாட்கள் நீண்டன. வயிறு நிறையச் சுவைக்கும் புலன், அது யாதெனக் கேட்டேன்.

பசி என்றால் என்னவென்று
நீ அறிந்ததுண்டா?
பசி, அது உன் குடற்
கொடிகளைச் சுருக்கும்,
மூளையிலிருந்து நினைவை
விரட்டும்,
வயிற்றைக் கத்தி கொண்டு
கிழிக்கும்,
மூச்சு வரமறுக்கும்,
இதயம் துடிப்பதை
நிறுத்தும்,
உணவு, உணவு, உணவு...
இந்த நினைப்பில்
அனைத்தும் மங்கும்,
கண்கள் இருள்கின்றன,
கடவுளே கருணை
காட்டாயா?
கடவுளே, என்றாவது நீ
பசியுற்றாயா, சொல்!

(Halina Nelken)

பசியால் நோயால் செத்து விழுந்தன நித்தம் பிணங்கள். குடில்களெங்கும் பிணங்களின் நாற்றம். வயிற்றுப்போக்கில் மிதந்தும் கிடந்தன அவை. பார்க்க மறுக்கிறேன் அந்த அவலத்தை.

பிணங்களும் மலமும் சிரங்கும் நச்சுக்காய்ச்சலும்
எங்கும் பெண்களின் பிணங்கள். கண்களில்
பூளையும் சீழும்
ஈரும்பேனும் புண்களை மொய்த்து மூடின
அழகியாய் வாழ்ந்தவர்கள்.
அது அன்று,
இன்று, அந்த உடல்களை எலிகள் தின்றன.

(Monika Dombke)

மரணம் நாளங்களுக்குள் குடைந்து சென்று உடலைப் துளைக்கிறது. நாளை நானும் இந்தப் பிணங்களுக்குள் ஒருத்தியா? கூடு போன்ற இந்த நெஞ்சினில் அவனின் கால்கள் நடந்துபோகுமா? மிதித்து நசுக்கிவிடுமா? துயரை சுமக்க முடியாது வெடித்துச் சிதறுமா இந்த இதயம்? வழிந்த இரத்தத்தில் ஊர்ந்து திரியுமா இந்த எலிகள்? போதும். என் கண்களைத் தூரமாய் கொண்டு செல். பிடுங்கி எறி. முள்வேலிகளுக்கு அப்பால். பார்க்கும் மொழி இனியும் எனக்கு வேண்டாம். பார்வை போனால் பயம் நீங்கும், வலி மறக்கும் அல்லவா?

நரகத்தில், மற்றவர் இறப்பது தெரியாது,
நரகத்தில், மரணத்திற்கு இடர் இல்லை,
நரகத்தில், பசி இல்லை, தாகம் இல்லை,
நரகத்தில், காத்திருப்பு இல்லை,
நரகத்தில், நம்பிக்கை இல்லை, பயம் இல்லை,
அப்படி இருக்க, ஏன் சொன்னாய்,
இது நரக நிலம் என்று?

(Charlotte Delbo)

இந்தப் பாழ்பட்ட வாழ்வில் எதற்காக இத்தனை ரணம்? இது யாருக்கும் புரியவில்லை. இந்த நிலத்தில் மீள்வது எமக்கினி இல்லை. மெல்லச் சாவதும் எமக்கினி வேண்டாம். வலியற்ற, துடிப்பற்ற, ஒரு நொடிச்சாவு. அது வேண்டும். அதுபோதும்.

விடிந்த பொழுதில் வரிசையில் ஒருவனைக் காணோம்
முள்வேலிக்குள் முகம் குப்புற அவன் விழுந்தான்
குண்டுகள் சரமாய்ப் பொழிந்தன
வளைந்த கம்பிகளில் இரத்தம் வழிந்து ஒழுகியது

(Kazimierz Wojotowicz)

புகைக்கூடுகள் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கின்றன. கண்கள் அற்றும் காட்சியாய் அது பதிந்தது. மரித்தாலும் மறக்காது இந்த நிலத்தின் புகைக்கூடு. என்ன இது? உனக்கு மணக்கவில்லையா? காற்றில் ஒரு மணம். அது தினுசாய் மணக்கிறதே. நுகர்ந்துபார். காற்று இனிப்பாய் மணக்கிறதல்லவா? இனிப்பில் ஊறிக் காற்று இனிக்கிறதல்லவா? 'ஓம்' என்று சொல். பார்ப்பதும், கேட்பதும், சுவைப்பதும், தொடுவதும் அனைத்துப் புலன்களையும் இழந்தேன். தூக்கித் தூர எறிந்தேன். தொலைந்து போகட்டும் என எண்ணி. ஆனால், இந்த நுகர்தல் மட்டும் தொலையவில்லை. துரத்தினபோதும், தூக்கி வீசினபோதும் விட்டுப்போகவில்லை. இனிப்பான இந்த மணம் நான் என்றோஅறிந்தது ஒன்று. சுவைத்தது ஒன்று. சுகமான அழகான வாழ்வில் இழையோடிய மணம் அது. உறவின் கதகதப்பான சூட்டைச் சொன்ன மணம் அது. நினைவுகளுக்குள் துளைத்துத்தேட விரிகிறது ஒரு காட்சி.

எனது ஊரின் திருவிழாக்காலம் அது. வீட்டில் இருந்தாலே மேளச்சமா கேட்கும். எட்டி ஒரு நடை நடந்தால் கோயில் தெரியும். பச்சை உடுத்த அந்த அழகன் தெரிவான். சிறுமி நான். அம்மாவின் கைப்பிடித்து அந்த அழகனைப் பார்க்கவா சென்றேன்? இல்லை. திருவிழாவின் காற்றைக் குடிப்பதற்காய்ச் சென்றேன். காற்றின் ஒவ்வொரு சொட்டையும் உருசித்து மென்று விழுங்கினேன். கோயில் வீதியெங்கும், போகும் பாதையெங்கும் சோளகத்தில் அசைந்த இலைகளிலும் ஒலிபெருக்கியிலும் வறுத்த கச்சானிலும் கிணற்றடியிலும் சுற்றுக்காப்பிலும் சாமிப் பட்டிலும் காற்று இனித்து இனித்து மணத்தது. இனிப்பாய் அது இருந்தது. உதடுகளைத் தேனாய் ஒட்டவைத்தது. இது எப்படிச் சாத்தியம்? வண்ண வண்ண ஐஸ் பழத்துக்குள் நுழைந்து, ரோஸ் தும்பு முட்டாசியில் ஒரு சுற்றுச் சுற்றி, பழுத்த பலாவில் ஊறி எங்கும் இனிப்பாய் இனித்தது அந்தக் காற்று. திருவிழாக் காற்று. அன்றிலிருந்து திருவிழாவில் மட்டும்தான் காற்று இனிக்கும். தேனாய் இனிக்கும். இனித்து மணக்கும்.

இன்று, இந்தப் பொழுது, கடல்தாண்டி, மலைதாண்டி, இந்தக் கொடும் நிலத்தில் காற்று இனித்து மணக்கிறது. தொட்டுத் தடவிப் புரிய முயல்கிறேன். இங்கு காற்று இனிப்பதன் கதை யாது?

ஒவ்வொரு நாளும்
குடில்களுக்கு அப்பால்
புகையும் நெருப்பும் வரக்கண்டேன்
என்ன எரிகிறது? நீ கேட்கிறாயா?
உனக்குத் தெரியவில்லையா?
மனிதனே, உன் தலையைக் குனி
இங்கு யாரும் மீள முடியாது
எல்லாம் எரிக்கப்படும்

(Ruth Klueger)

சட்டென ஓர் ஒலி. தட்டுத் தடுமாறிக் கூட்டத்துடன் கூட்டமாய் நான் நடக்கிறேன். நாம் விரட்டப்படுகிறோம். கண்கள் இல்லை. ஆயினும் கால்களுக்கு நன்றாகவே தெரியும். இது கரடுமுரடான கல்லுப்பாதை. இத்தனை காலமும் கால்கள் படாத ஒரு பாதை. “ஆடைகளைக் கழற்றி இங்குவை, குளியல் அறைக்குள் இறங்கிப்போ! போ போ நிற்காதே!” உரத்த குரலில் ஒருவன் கத்தினான்.

நீள் வரி உடையே, நீள் வரி உடையே!
நீயே எனது அதி உச்ச உடை. நான் மெச்சும் உடை
உனக்குள் நான் துயருற்று வருந்தியது
அளக்க முடியாது அந்த வலி,
அதுவே உன்னை அளப்பெரிதாக்கிற்று.

(Kupfer Kobernitz)

ஆடைகள் இன்றி நெருக்கித் தள்ளி அடைக்கப்பட்டோம் இந்தக் குளியல் அறைக்குள். நசிபட்டு நின்றேன் எண்ணற்ற மேனிகளுக்கு நடுவில்.

கொத்துக் கொத்தாய் மனிதர்கள்
வந்து சேர்ந்தனர்
நான்கு சுவர்களுக்குள்
களைத்து, வாடி, வதங்கி
சூடான நீரில் குளிப்பதற்கு
ஏன் இந்தக் குளிப்பு? நீ கேட்கிறாயா?
உனக்குத் தெரியவில்லையா?

(Paul Celan)

ஓர் ஒலி. கதவு அடைத்து இழுத்து மூடிய அந்த ஒலி. கத்திக் கதறி அந்தரித்தோம். ஓங்கி அடித்துத் திறக்க முயன்றோம். அந்த நெரிசலுக்குள் ஒரு குழந்தை கேட்கிறது.

அம்மா, ஏன் அழுகிறாய்?
எல்லோரும் ஏன் அழுகிறார்கள்?
எனது பொம்மையும் அழுகிறதே!
வா, நாம் வீடு போவோம்
அழாதே அம்மா! சிரி! பார்,
நானும் சிரிக்கிறேன்
இந்தப் பொம்மையைப் போல

(Kazimierz Dabrowski)

அந்தக் கணம் மேலிருந்து தாரையாக நீர் வரவில்லை. புகை வந்தது. நச்சுப்புகை அது. சுவாசக் குழாய்கள் சுருங்க மூச்சு வரமறுத்தது. தொண்டை அடைத்து, குரல்வளை இறுகி முடிச்சாகியது. மூச்சுத் திணறி விக்கித் தவித்துக் கண்கள் சொருகச் சரிந்தோம். மெல்லச் சரிந்தோம். உடல்களின் மேல் உடலாக. கொத்துக் கொத்தாய்.

பொழுதாகியதும்
புகைக்கூடுகள் மட்டும் விடாது
எரிந்தன
சுண்ணமிட்ட எண்ணற்ற
சடலங்கள்
மேலெழும்பிய அந்தப் புகை
அந்தக் காற்று
அந்த மணம்
நாம் இங்கு இருந்தோம்
எனச் சொல்லிற்று
நெருக்கமாய்க் கிடந்தோம் நிலத்தில்
பிரிந்து போகிறோம் துகள்களாய்க்
காற்றில்
எஞ்சியது சாம்பல் மட்டுமே
நிலமெங்கும் காற்றெங்கும் சாம்பல்
இனி, சாம்பல் கொண்டு காற்றில்
எழுதுங்கள்
எங்கள் பெயர்களை...

(Paul Celan)

இருள் அல்லாத ஒளி அல்லாத அந்தப் பொழுது. ஔஷ்விற்ஸின் அஸ்தமனம். சிவந்த வானில் சாம்பல் படிந்தது. சாவு மணத்த காகங்கள் அங்கு பறந்தன. காற்று இனித்தது.

பெர்லின் குரூனவல்ட் (Berlin, Grunewald) ரயில் நிலையம், 17வது தண்டவாளப் பாதை:

ஔஷ்விற்ஸ் பற்றிச் சொல்ல நான் யார்? எனக்கும் அந்த நிலத்திற்கும் என்ன உறவு? ஓராயிரம் மின்மினிப் பூச்சிகளை விரட்டியபடி பயணிக்காமல் நான் அமர்ந்திருக்கும் இந்த ரயில் நிலையம். இந்த 17வது தண்டவாளப் பாதை. ஏழு வயதுச் சிறுமியாக இந்தத் தண்டவாளப் பாதையில் ரயில் வரும்வரை நான் கல் எறிந்து விளையாடியதுண்டு. ஓடி ஒளித்ததுண்டு. ரயில் ஏறிப் பயணித்ததும் உண்டு. அன்று எனக்குத் தெரியவில்லை. யாரும் சொல்லவில்லை. இன்று தெரியும். உனக்குச் சொல்கிறேன். இந்த ரயில் நிலையத்தில் இருந்து, இந்த 17வது தண்டவாளப் பாதையில் இருந்து, நீ காது வைத்துக் கேட்ட இந்த இரும்புப் பாதையிலிருந்து புறப்பட்டன அன்று அந்த ரயில் வண்டிகள், மனிதர்களைச் சுமந்து மரணத்தை நோக்கி. காகங்கள் பறந்த திசையை நோக்கி. காற்று இனித்த நிலத்தை நோக்கி. ஔஷ்விற்சை நோக்கி.

இட்டு நிரப்ப நீ வந்தாய். நான் மீண்டேன். மரணத்திற்கு முன் எழுதப்பட்ட இந்தப் பதிவை உன் கைகளுக்குள் பதித்து நான் போகிறேன். இனி, நீ பேசு. வாழாத ஒரு காலத்தில் வாழ்ந்து, புலன்களைத் தொலைத்து, உணர்வழிந்து பேசு. நான் போகிறேன்.
at 05:17:00