Monday 30 April 2018

உரையாடல் - 16 (நாகர்ஜுனன், அந்நியன், ஜமாலன், றஞ்சனி) :: சாரு நிவேதிதாவும் நானும் - 1 - நாகார்ஜுனன்

உரையாடல் - 16 (நாகர்ஜுனன், அந்நியன், ஜமாலன், றஞ்சனி)

நாகர்ஜுனன் அவர்களது திணை, இசை, சமிக்ஞை தளத்தில் இடம்பெற்ற உரையாடல்.
http://unidentifiedspace.blogspot.in/2008/10/16.html
சாரு நிவேதிதாவும் நானும் - 1 - நாகார்ஜுனன்.

என் பத்தாண்டுக்காலத் தனிமைவாசத்துக்குப் பிறகு சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவலை நேற்றிரவு நெடுகிலும் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். உறக்கமற்ற வாசிப்பு என்பதன் ஊடேயும் கண்ட கனவு கலையாமல் எஞ்சிய கிறுகிறுப்பு இன்னமும் போகவில்லை. சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நாவலை இவ்வளவு காலம் தீண்டவில்லையே என்கிற தாபம் ஒருவழியாகத் தணியும் என்று பார்த்தால் தணியவுமில்லை! இந்தக் கரட்டு-எழுத்தின் வெப்பமும் காமமும், சீற்றமும் மென்மையும், இசைவும் மாறும், நட்பும் பகையும் என்னை ஒராயிரம் முறை தலைகீழாகத் தொங்கவிட்டன...

இந்த நாவலுக்கு விமர்சனம் என ஒன்றை எழுதுமுன் என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டுமோ என்று தோன்றியது. நாவலை வாசித்த பிரமிப்பும் கோபமும் குதூகலமும் சோகமும் என்னை அமேஸான் வெப்பமண்டலக்காட்டிலிருந்து பனிப்பாலை வரை கைப்பிடித்துக் கூட்டிச்சென்றன. என்னிலிருந்து ஒருவர் கிளம்பி எங்கோ பயணம் செய்துவிட்டுத் திரும்பிவந்து அருகே சிரித்து அமர்ந்துகொண்டார். நான் வாசித்த விளாடிமிர் மாயகோவ்ஸ்கியின், பிரமிளின் கவிதைகள், பல ஆங்கில, ஃப்ரெஞ்சு எழுத்துக்கள், சாருவுடைய முதல் நாவலும் சிறுகதைகளுமாக என்னில் கிளம்பிக் கெக்கலித்தன. தவிர, இந்தப் பயணத்தில் குதூகலமும் அயர்வும் என்னில் ஒருங்கே தோன்றின. அவருக்கும் எனக்கும் இன்றுள்ள தொலைவு ஒருபக்கமிருக்க, இந்த நாவல், மொழியாகவே என் தொண்டையை அடைத்துவிட்டது....

எண்பதுகள் முதல் தொண்ணூறுகளின் தொடக்கம் வரை சாருவுடன் நண்பனாக, வாசகனாக நான் கடந்த இலக்கியத்தூரம் அசாத்தியமானது... வாசிப்பில் கடுமையான உழைப்பாளி. நம்மையும் வாசிக்கத் தூண்டிவிடுவார். அதையெல்லம் வரிகளில் எழுத முடியாது...

அதே சமயம் தினமலர், இணைய தளத்துக்குப் பத்து லட்சம் ஹிட்ஸ், பிரபலங்களுடன் நட்பு, அவர்கள் அங்கீகாரம் என்பதற்காக அவர் செய்யும் கிசுகிசு எழுத்துப்பிரதாபங்கள், ஊடாட்டங்கள், சாகசங்களை, தூர நின்று கூட பார்க்க முடியவில்லை! இதுதான் என் பார்வை என நன்கறிவார் அவர். இதை மீண்டும் வலியுறுத்துவற்காக, என்மீது அவருக்கு எவ்வளவோ கோபமிருக்கலாம். ஆனால் என்னைப்பற்றி அவர் வேறு என்ன கருதினாலும் சரி, எனக்குக் கோபம் வர முடியாமல் செய்துவிட்டது இந்த நாவல். எனக்கு அவர் மீதான ஒரே கோபம், வருத்தம் - அவருடைய எழுத்து அவராலேயே நீர்த்துப்போய்விடுமோ, அவருக்குக் கிடைத்திருக்கிற, கிடைக்கிற, கிடைக்கப்போகிற அங்கீகாரத்தால் அது நடக்குமோ என்பதுதான்.

இந்த சமயத்தில், இருபதாண்டுகள் முன்பு வந்த சாரு நிவேதிதாவின் முதல் நாவலுக்கு அப்போது நான் எழுதி, பிரம்மராஜன் ஆசிரியராக இருந்த மீட்சி 34 (1990) இதழில் வெளியான விமர்சனம், நினைவுக்கு வருகிறது. ஒருவிதத்தில் அந்த விமர்சனத்தை அடிப்படையாக வைத்தே இந்த நாவலுக்கும் விமர்சனம் எழுதத்தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

அந்த விமர்சனத்தைப் பகுதிபகுதியாக இங்கே வாசிக்கலாம்:

நாவல்-எழுத்து = விலக்கப்பட்டவற்றால் கட்டமைக்கப்படுகிற எச்சம்

சாருநிவேதிதா, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபான்ஸி பனியனும் (கிரணம் வெளியீடு, 1989).

நாவலை விமர்சிப்பதற்கு முன்பு முதல் பாரா:

இந்த நாவல், எவர்ஸில்வர் பாத்திரங்களாகவோ தமிழ்ச்சூழல் என்று அறியப்பட்டுக் கொண்டிருக்கிற பிரபஞ்ச-விகாசக் காயலான்கடையில் ஹீரோக்களாக வேஷம் தரித்துக்கொண்டவர்களின் வாழ்க்கையில் நடந்தேறிய வியாபாரங்களாகவோ பார்க்கப்படுவது தெரிந்ததே.

அப்படிப் பார்ப்பவர்கள், சாவைத் தத்தம் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றியதாக இருந்துகொள்பவர்கள்: உண்மையில் இவர்கள் ஓராயிரம் முறை நரகத்தில் தலைகீழாய்த் தொங்கியவ்ர்கள். இதற்குக் காரணம், சாவை வெளியேற்றுவதன்மூலம் புகழ்-வாழ்க்கை என்கிற நரகத்தில் இவர்களின் பெயர்கள் சிக்கிவிடுவதுதான். இவர்களுக்கு இந்த விமர்சனத்தின் கடைசிப்பாரா சமர்ப்பணம். அங்கே போய் வாங்கிக்கொள்ளலாம்: விலை ரூ. 3-25; அளவு 325 எம்-எல்; அரைக்காலனித்துவ-அரைநிலப்பிரபுத்துவ உள்பேட்டை வரிகள் தனி.

இனி நவீனத்துவ நாவல் எழுகின்ற சமுதாயம் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்: இது உடல்களின் திசைநோக்கிய அரைவு (directed grinding of bodies) என்பதாக இயங்குகிறது. இந்த நவீன சமுதாயத்தில் அங்கீகாரம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைக் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டிய தேவை வருகிறது.

இந்த நாவலைப் புரிந்துகொள்ள அரசியல்பற்றிய வேறுபட்ட பார்வை தேவை. அதாவது அரசியல் என்பது ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டமாகக் கருதப்பட்டுக் கொள்ளலாம், கண்டபடி கலைத்தப் போடப்பட்ட அதிகாரத்தவ உறவுகளின் வலைப்பின்னலாக இருக்கிறது. இந்த வலைப்பின்னலை மேலாதிக்க நுண்-உத்திகள் (microstrategies of domination) என்றும் அழைக்கலாம்.

அதிகாரமும் அறிவுஜீவியும்

அதாவது, இங்கே பிரச்னைப்பாடாக இருப்பது அதிகாரம், அல்லது அதிகாரம் பற்றிய நுண்-பௌதிகம் (microphysics of power). சொல்லப்போனால் அதிகாரம் என்பதே நுண்-அளவில் இயங்குகிற உறவுகளின் கட்டமைப்புத்தான் எனலாம்.

ஒரே சமயத்தில் அதிகாரம் என்பது மேலாதிக்க வன்முறையாகவும் அதற்கான எதிர்வினையாகவும் (response/resistance) சாத்தியப்பட்டுக்கொள்வதற்கான கூறுகள் எப்படிப்பட்டவை என்பது தான் பிரச்னை. அதிலும் இங்கே தனது அறிவுத்திறனை முன்வைத்து இயங்குபவனின் பங்களிப்பானது எந்தெந்த வகைப்பட்டதாக இருக்கிறது என்பது இது தொடர்பான இன்னொரு பிரச்னை. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், அறிவுஜீவி-தான் என்கிற தன்னிலையின் செயல்பாட்டுத்தளம் குறித்த பிரச்னை இது.

இதற்கான பதிலைப் பின்வருமாறு தொடங்கலாம்: அறிவுஜீவி என்ற நபரின் தற்காலத்திய செயல்பாட்டைக் கொஞ்சம் ஆராயலாம். இந்த நபர் உலகுதழுவிய, மனிதார்த்த (universal, humanist) மதிப்பீடுகளை நிலைநிறுத்தப் பாடுபட வேண்டும், ஈடுபாடு காட்ட வேண்டும் என விதிக்கப்பட்டள்ளது. இதுவரை, ஆனால் இதுவல்ல இனியான விஷயம் இனி. அறிவுஜீவி என்பவர், இனியும் உலகுதழுவிய, மனிதார்த்த மதிப்பீடுகளைக் கட்டிக்காத்து வெளிப்படுத்துவதைத் தனது கடமையாக எண்ணிக்கொள்ள முடியாது; இந்த நபர், இனியும் மக்களின் சிந்தனாமுறைகளைத் திருத்திக்கொடுப்பதையோ அப்படிச்செய்யும்போது தனதான தத்துவ நிலைப்பாடுகளை சோதித்து நிறுவிக்கொள்கிற விமர்சனத்தில் ஈடுபடுவதையோ கடமைகளாகக் கருதிக்கொள்ள முடியாது.

இப்படிப்பார்க்கும்போது, இனியும் அறிவுஜீவி என்கிற இந்த நபர் மனிதகுல முழுமை என்பதன் சார்பிலோ, அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் சார்பிலோ பேசிக்கொள்கிற உரிமையைத் தனதாக எடுத்துக்கொண்டுவிட முடியாது என்றும் கூறுமுடியும்.

இது ஏன் என்று பார்த்தால் ழான்-ப்ரான்ஸ்வா லையோதார் (Jean-Francois Lyotard) என்பவரின் விளக்கத்தில் பதிலைக் காணலாம். பிற்கால-நவீனத்துவவாதியான இவர் கூறுவது: (1) தத்துவவாதி எனப்படுபவன் வார்த்தைக் கூட்டங்களால் வர்ணம் பூசும் தொழிலாளி. ஆவ்வளவுதான், ஆதாவது, வார்த்தைகளில், வார்த்தைகளைக் கொண்டு, விளையாடுபவன். ஆவற்றுக்கான இடைவெளிகளை மீறுபவன். இந்த விளையாட்டின் ஊடே அவன் செய்துகாட்டுவது (demonstrate) சொல்லாடல்களங்களில் உறைந்திருக்கும் அதிகார இயக்கத்தைப் பிரித்துப் போடுவதைத்தான்.

எந்த ஒரு களத்திலும் அதிகாரத்துவ நுண்-உறவுகள் பற்றியதான பன்முகரீதியான அலசலுக்கான கருவிகளைத் தயார்செய்து, வருபவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவதுதான் அறிவுஜீவி என்கிற நபரின் இனியான செயல்பாடு. இந்த அளவில் புதிய உண்மைகளாக சில வெளிப்பட்டுவிடுகின்றன: சமுதாயத்தில் விரவியிருக்கிற அதிகாரம் அல்லது உயிராற்றல், எல்லையற்றதுமல்ல; பூஜ்யமாக ஆகப்போவதுமல்ல. It is neither infinite nor brought to an absolute zero. அதிகாரம் எல்லையற்றே இருக்கிறது என நினைக்கும்போது, அதிகாரம் என்பது வெறும் ஓடுக்குமுறையாகக் (repression) கணிக்கப்படுகிறது: மாறாக, என்றோ ஒருநாள் அதிகாரம் பூஜ்யமாகிவிடும் என்கிற நம்பிக்கை ஓர் கனவுலகைச் (utopia) சாத்தியப்படுத்தவதாக இருந்தாலும் அந்த நம்பிக்கை எதிர்காலம் தொடர்பானதாக இருப்பதில்லை: காரணம், அதிகாரத்தைப் பூஜ்யமாக்க விழைவதாக, கனவுலகைச் சாத்தியப்படுத்தவதாக, கூறிக்கொள்ளும் செயல்பாடுகள், உயிராற்றலைக் குறைத்து விடுகின்றன. எனவேதான எதிர்காலம் பற்றிய கனவுலகைக் கைவிட்டுவிட்டு எதிர்-கனவு உலகங்கள் (dystopias, heterotopias) பற்றிக் கவனம் செலுத்தவேண்டிய சமயம் வந்துவிட்டது. இதுபற்றி வேறு இடத்தில் கவனிக்கலாம்.

அதிகாரம் அல்லது உயிராற்றல் பற்றிய மேற்கண்ட சிந்தனை சாத்தியப்படுவதற்கு, மொழி மற்றும் உடல் பற்றிய பொருண்மையான புரிதல் தேவைப்படுகிறது. இந்தப்புரிதலை நாவலுக்கு முன்பாக எழுதப்பட்டுள்ளதில் (பக்கம் 5-9) காண முடிகிறது: இங்கே மொழி வெறும் தொடர்புசாதனமாகக் காணப்படாமல் பெயரிடுதலைச் சாத்தியமாக்குகிற ஒரு தொழில்நுட்பமாக (technology), அறிவாக, அலசப்படுகிறது.

"மொழி என்பது மனிதன் தன் இருத்தலை நிலைப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே அமைந்துவந்திருக்கிறது. பெயரற்ற ஒருபொருளை எதிர்கொள்வது என்பது மனித இருப்பை அச்சுறுத்துவதாகவும் ஒருவகையில் அவனது இருப்பைக் குலைக்கக் கூடியதுமாகவே அமையும். அதனால் மனிதன் எதிர்கொண்ட ஒவ்வொரு பொருளுக்கும் பெயரிடுதல் என்பது அப்பொருளைத் தன்னுடைய இருத்தலின் சூழலுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வினையாகவே அமைந்திருக்கிறது. இந்நிலையில் மொழி என்பதன் மூலமாக மனிதன் தனது சூழலின்மீதான முதல்வினையைத் தொடங்குகிறான். எனவே மொழி என்பதே அறிவாகவும் அறிவு என்பதே பொருளின் மீதான ஆதிக்கமாகவும் செயல்படுகின்றன" என்கிறார் நாவலின் முதலில் பிரேம்.

வெவ்வேறு சூழல்களில் வாழ்கிற இனங்களாகிய மனிதத்தொகுதிகளுக்கு வெவ்வேறு பெயரிடல்கள் சாத்தியப்படுகின்றன. அவை ஒன்றோடொன்று உராயும் போது நிகழ்வதென்ன என்பதையும் பிரேம் விளக்குகிறார்: "மொழியின் மூலமாக அமைக்கப்பாக்கப்பட்ட அறிவும் அறிவின் மூலமாகக் கட்டப்பட்ட ஆதிக்கமும் சீரற்ற பரவலை நிகழ்த்தும்போது அமைப்புக்குள்ளான ஓர் ஆதிக்கச்சமச்சீரின்மை உருவாகிறது. இதுவே இன்றைய சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அதிகார அமைப்புக்கு மூலமாக அமைந்திருக்கிறது. இருவேறு நிலவியல்-சூழல்களில் (geographical environment) வளர்ந்த இரு மனிதக்குழுக்கள் தத்தமது சூழலியல் சார்ந்து ஒரு தொழில்நுட்பத்தை, அதாவது அறிவை (மொழியை) வளர்த்துக்கொண்டிருக்கும். இங்கு தனிப்பட்ட மனிதக்குழுக்களுக்குள்ளான மொழி என்பது பொருளுக்கும் பொருளை அறிதல் என்பதற்கும் இடையிலான முரண்பாட்டைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும். இந்த இருவேறு மனிதக்குழுக்களின் சமூககாலம் என்பதில் நேரும் வேறுபாடு அவை வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு என்பதிலும் ஒரு வேறுபாட்டைக் கொண்டதாக அமையும். இங்கு இரு மனிதக்குழுக்களும் தமக்கேயான அடையாளங்களோடு கூடிய இனங்களாக வடிவமைந்திருக்கும். இரு இனக்குழுக்களும் ஒன்றையொன்று எதிர்ப்படும்போது அவற்றுக்கிடையிலான சமச்சீரற்ற தொழில்நுட்ப அறிவால் ஓர் ஆதிக்க மோதலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இந்த இடத்தில் எந்த இனக்குழு தனது தொழில்நுட்ப அறிவால் மேலோங்கியிருக்கிறதோ அந்த இனக்குழு மற்றொரு இனக்குழுவை மேலாதிக்கம் கொள்ளும் ஒரு செயலைச் சாதித்துவிடுகிறது."

ஆக, வெவ்வேறு நிலவியல்-பரப்புகளில் (topography) வாழ்கின்ற இனங்களாகிய மனிதத்தொகுதிகள் மூலமாக, இத்தொழில்நட்ப வித்தியாசம், வெவ்வேறான வடிவங்களில் மோதிக்கொள்கின்றன. இந்த மோதல் பற்பல குறியீடுகளைச் சுற்றி நடைபெறுவதால், இதில் வெற்றி-தோல்வி என்று எதுவுமே அறுதியானதாக இருப்பதில்லை. இத்தகைய மோதலில் ஈடுபடுத்தப்படுகிற நபரான, மனிதத்தொகுதி, உடல்ரீதியாகத் தன்னைப் பொருண்மைப்படுத்திப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கே உடல் என்பதை உழைப்பில் ஈடுபடுத்தப்படும் அங்கங்கள் (organs) என்றோ பாலுறுப்புகள்-வழி இன்பந்துய்ப்பில் (orgasms) ஈடுபடுத்தப்படும் "காயம்" என்றோ கருதிவிடக்கூடாது. மாறாக, உடல் என்பதை நரம்பியல்-சாத்தியப்பாடுகள் தம்மை மீறல்களாகப் (excesses, transgressions) பல்வேறுவழிகளில் வெளிப்படுத்தித்கொள்ளும் கட்டமைப்பு (bundle) என்று கொள்ளலாம்.

இந்த நரம்பியல்-சாத்தியப்பாடுகள் ஒருமுகப்படுத்தப்பட்டு விடும்போது (homogenous) உடல்கள் ஒன்றிணைக்கப்பட்டு அரைவு ஏற்படுகிறது. உற்பத்தி என்பதும் (production) உபரியும் (surplus) உபரியைத் தக்கவைத்துக்கொள்கிற, ஒருமுகமாகச் செலவழிக்கிற கலாச்சாரமும் (culture) என்கிறதும் வருகின்றன. மாறாக, இவை பன்முகப்படுத்தப்பட்டு விடும்போது இந்தப்போக்கு சிதைக்கப்படுகிறது: உற்பத்தி ஒய்கிறது; கலாச்சாரம் எனத் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒன்று உருவாகும் போக்கு சிதைக்கப்பட்டு, பன்முகமாகி மீறல்கள் சாத்தியமாகின்றன: அழகியல் மதிப்பீடுகள் அழிகின்றன: கனவுலகம் சிதைந்துபோகிறது; சாவைப்பற்றிய பயமானது போய், சாவுக்கான இடைவெளியானது இங்கே பொருண்மையாகச் செயலாற்ற விழைகிறது. இப்படிச் செயல் சாத்தியமாகும்போதுதான் மாற்றமும் சாத்தியம் என்கலாம்.

அடிக்குறிப்புகள்:

1. Jean-Francois Lyotard, Discours, figure, p. 53 cited in Parasthetics, David Carrol (Metheun, 1987) p. 33.

அந்நியனினது பின்னூட்டம்.

நாகார்ஜுனன்,

உங்கள் மொழி-> அறிவு-> அதிகாரம் வழிப்பட்ட சிந்தனைகளை இன்னும் விரிவாக ஆராயலாம். இதன்வழி நாம் பின்னோக்கிச்சென்றால், அதிகாரம்-> அறிவு-> மொழி-> குறியீடு-> சூழல் என்னும் இடத்தில் வந்து நிற்கவேண்டியிருக்கும். இவ்வகையான சிந்தனைமுறைகள் இவ்வழி இடம்பெறுவதே கூடுதலான பலனைத் தரக்கூடும் என்பது என் கருத்து.

அதிகாரம் பற்றிய உரையாடலை மொழியில் இருந்து தொடங்கும் போது 'மனித குலம்' என்கின்ற பொதுவெளியை அதன் தளமாகக் கொள்ள வேண்டிவரலாம். அது பல வகைகளில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். மற்றைய உயிரினங்களுக்கும் சூழலில் இருந்து 'கட்டமைக்கப்படும்' விடயங்கள் சார்ந்த குறியீடுகளும் அதன் வழியான அனுபவங்களும் இருக்கின்றன. இங்கே, மொழிப்பயன்பாடு என்பது மனித வெளியில் இருந்து ஆரம்பிப்பதே எமது உரையாடலை இங்கே தொடங்குவதற்கான காரணமாகப் புரிந்துகொள்கிறேன். ஆயினும் சில புரிதல்களுக்காக நாம் தொடங்க வேண்டிய புள்ளி 'மொழிக்கு' முந்தைய நிலைவரை செல்ல வேண்டும் என்பதே என் கருத்து.

ஏனெனில் மொழிக்கு முந்தைய நிலைகள் குறியீடுகளும் அனுபவங்களும் (அவை கூட ஒரு வகையான மொழியாக இருக்கும் போதிலும்) வாசகர்களுக்கு விளங்காமலே போகக் கூடும். ஆக, அதிகாரத்தின் தோற்றுவாய், மொழிக்கும் முற்பட்ட நிலையாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில் அதிகாரம் 'மொழிக்கு' முந்தைய நிலையிலேயே கட்டமைக்கப்பட முடியும். (இங்கே மொழி என்பது 'பேசும் மொழி' எனக் கருத்துருவாக்கப்படதாக நான் நினைக்கிறேன். ஆயினும் நான் மொழி என்பதை குறியீடு மற்றும் அசைவுமொழிகள் என்பனவற்றையும் சேர்த்து கூற முயற்சிக்கிறேன்).

'மனிதன்' அல்லாத இடங்களிலும் இவ்வாறாக கட்டமைக்கப்பட்ட சூழலை காண்கிறோம். இவ்விடத்தில் பிரேம் கூற நினைக்கும் 'மொழி' தொடர்பான விடயங்கள் ஒருவித homogenous தன்மையுடையதைப் போலப் படுகின்றது. அது தொடர்பாகப் பலவிதமான கேள்விகளும் வருகின்றன.

இங்கே நான் கூறும் சூழல்-> குறியீடு-> மொழி-> அறிவு-> அதிகாரம் என்பதை, இன்னும் விளக்கமாக உரையாடும் போதே சில தெளிவுநிலைகளுக்கு வரமுடியும் என நினைக்கிறேன். அதிகாரம் சுழலில் செல்வாக்கு செலுத்துகின்றது. அதிகாரத்திற்கு இசைவான சூழல் கட்டமைக்கப்படுகின்றது. சூழல் மொழியைக் கட்டுப்படுத்துகின்றது. இங்கே, இவை மாறிமாறி ஒன்றையொன்று வெவ்வேறு சதவீதங்களில் இருப்பைப் பலப்படுத்தும் நோக்கில் அதிகாரத்தினூடே கட்டுப்படுத்தப்படுகின்றன. 'பெண்' என்னும் பாத்திரம் கட்டமைக்கப்பட்டது தொடர்பாகவும் அதற்கு மொழி எவ்வாறெல்லாம் ஒத்தாசை புரிந்தது, 'பெண் உடல்' மொழியூடாகக் கட்டுப்படுத்துவது - இவை தொடர்பாக எமக்கு புதிய சாட்சிகள் தேவையுமல்ல.

இங்கே, தர்க்கவியல் மற்றும் பரிசோதனைகள் ஊடாகவும் க்ட்டமைக்கப்பட்ட அறிவியல் என்பதுகூட, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட சூழல் சார்பானதே. அவற்றின் தளத்திலும் சாட்சியாகவுமே அவற்றின் நகர்வுகள் இடம்பெறுகின்றன.

உதாரணமாக பெண்-மருத்துவம் தொடர்பான கல்விப்பரப்பு, கட்டமைக்கப்பட்ட பெண் தொடர்பானதே. அங்கே, அக்கல்விமுறை கட்டமைக்கப்பட்ட பெண் உடல் சார்ந்து மீறலை விரும்புவதில்லை. அவற்றைப் பேணவே எத்தனிக்கிறது. உயிரியல்ரீதியான பால்வேறுபாடு தவிர்த்து ஏனையவை அனைத்துமே கட்டமைக்கப்படுவதாகவே ஜூடித் பட்லர் வாதிடுவார்.

இங்கே, நான் உங்களுடன் உடன்பாடான விடயங்களைக் கூறினேன். இனி கூற எத்தனிப்பது உடன்பாடின்மைகள் அல்ல. உங்களது விடயக்குவிப்பிற்கு சற்று வெளியே இருப்பவை. ஆயினும் அவசியமானவை.

நான் ஏற்கனவே கூறியபடி சூழல், குறியீடு, மொழி, அறிவு, அதிகாரம் போன்றவற்றை ஒருமுகத்தன்மையில் கூற முடியாதவை. பரந்த சமூகத்தைப் பொறுத்தவரை அது மொழியால் ஒருங்கிணைக்க்ப்படுகிறது. அவ்விடத்தில் மொழி முக்கியத்துவம் பெற்றுவிட்டது எனவே கூற முடியும். ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டால் அங்கே தனியே மொழி மாத்திரம் அல்ல, வேறுவகையான காரணிகள் 'பலமான' செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆயினும், பெரிய அளவில் மொழியில் நிகழும் பன்முகமாதல் மூலம் கட்டமைக்கப்பட்ட 'கலாச்சாரம்' ஆட்டம் காணுகின்றது. அங்கே, மொழி முதன்மை பெறுகின்றதாகவே கூறப்பட வேண்டுமே தவிர அதன்மூலமாகத்தான் என்றல்ல.

அடுத்து, இருவேறு நிலவியல்-சூழல்களில் தம்மை வளர்த்துக்கொண்ட மனிதக்குழுக்கள் தொடர்பான விடயம் சார்ந்து நீங்கள் கூறிய கருத்துக்கள் தொடர்பாகவும் சில விடயங்களை மேலதிகமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கே, தொழில்நுட்பம் சார்ந்த அறிவிலும் பலவகையான வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் அவை மாத்திரம் காரணியாகிவிட முடியாது என்பதே எனது கருத்து. மேற்குலகம் வளர்த்த மருத்துவ அறிவின்முன்பு கிழக்கு வளர்த்த அறிவு தேக்கம் கண்டு காணாமல் போகப்போவதை அறிவோம். அது மட்டுமல்லாமல் தர்க்கவியல் மற்றும் பரிசோதனைமுறைகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்க்பட்ட அறிவியல், ஐன்ஸ்டீனுக்குப் பிற்பாடு முட்டி மோதியதை நாம் அறிவோம். குவாண்டம் இயற்பியலைக் கடக்க வளர்த்தெடுக்கப்பட்ட பாதைகளை மறுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. 'இரண்டுமாகி இருத்தல்' என்பது வளர்த்தெடுக்கப்பட்ட அறிவியலின் அடிப்படைக்கே முரணாகி நின்றது.

காலனித்துவத்தின்போதும் சரி, பின் காலனியத்தின் போதும் சரி அதனை ஐரோப்பா தக்கவைத்துக் கொண்டது தனியே 'அறிவு' சார்ந்து அல்ல. அறிவு முக்கியப் பங்காற்றியது என்பதை நான் மறுக்கவில்லை. இயற்கையை வெல்ல வேண்டிய சூழலில் வளர்ந்த ஐரோப்பிய சமூகம் சில வகையான அடக்குமுறைகளை உபயோகிக்கக்கூடிய அறிவைத் தன்வசம் வைத்திருந்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. அது மட்டுமல்ல, தன் வளர்ச்சிக்கு அது 'எதிர்கொண்ட சவால்கள்' முக்கிய பங்காற்றின. (இன்றைய அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கான காரணிகளில் ஒன்றென - அமெரிக்கர்கள் சவால்களைச் சந்திக்க தயார் இல்லாத நிலையை அடைந்ததும் சொல்லப்படுகிறது.
இப்போக்கு கீழைத்தேய நாடுகளில் அவர்கள் எப்போதும் தங்கியிருக்கப் போவதையே எமக்கு உணர்த்தி நிற்கின்றது). இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வென்பது தென் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய மக்களின் வாழ்வியல் நடைமுறையாக ஓரளவுக்காவது இருந்திருக்கிறது. பின்-காலனித்துவ ஆய்வுகள் என்பது இது சாரப்படவும் செய்யப்பட வேண்டியமை அவசியம் எனவே கருதுகின்றேன்.

நீங்கள் குறிப்பிடும் பன்முகப்படுத்தப்படுத்தல் நிகழும் போது சிதைவுடையும் கலாச்சாரத்துடன் உடல்கள், தன்னிலைகள் என அனைத்தும் மாற்றமுறுகின்றன. சிதைந்து போகின்றன. அந்நிகழ்வு முக்கியமானதே...

இனி, இவை தவிர்த்து 'அறிவுஜீவிகள்' தொடர்பாக எட்வார்ட் சையத் கூறிய கருத்துக்கள் மிக முக்கியமானவை. எட்வார்ட் சைத் இனது The Public Role of Writers and Intellectuals என்ற கட்டுரையும் அவர் தம் Orientalism புத்தகத்தில் கூறும் பார்வைக்கோணமும் முக்கியமானவை. அங்கே கட்டமைக்கப்பட்ட 'அறிவை' முன்வைத்துக் கூறும் கருத்துக்களை மொழி அடிப்படையிலேயே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

இவை தொடர்பாக மேலதிகமாக உரையாட விருப்பமே. உங்களது மின்னஞ்சல் முகவரியை தரமுடிந்தால் சில மின்-நூல்களை அனுப்பி வைக்க முடியும்.

மேலும் ஒரு கேள்வி. C-THEORY இல் எவற்றையும் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

சில மேலதிக வாசிப்புகள்.



நன்றி

அந்நியன்.

நாகர்ஜுனனினது பின்னூட்டம்.

1. சுமார் இரு தசாப்தங்களுக்கு முன்பு பிரேம், நான் எழுதியவற்றை முன்வைத்துக் கேட்கிறீர்கள்...

2. முதலில் வந்தது எது என்ற பிரச்னையும் தேடலும் in search of origins என்கிற தேடலுக்குள் நம்மைத் தள்ளிவிடும். மனித குலம், மனிதமற்றது இரண்டுக்கும் நடுவிலான ஊடாட்டங்களில் ஒன்று மொழி. அதை குறியீட்டுப்பரப்புகளில் ஒன்றாகக் கொண்டு சிந்தனையைத் தொடரலாம். எது முன்னது எனகிற கேள்விக்கு எளிதான விடையில்லை. அவற்றை இணைநிகழ்வாகக் கொண்டுவிட வேண்டியதுதான்.

3. நிலப்பரப்பு, தொழில்நுட்ப வித்தியாசங்களில் மோதல் வரும்போது என்ன ஆகிறது.. இங்கே வழக்கமான வெற்றி-தோல்வி என்பது திசைமாறும் நிலைக்கான சாத்தியம் எப்போதும் உண்டு. எடுத்துக்காட்டாக,
மற்றவர்ளை, இயற்கையை வென்ற மேற்குலகும் பிறகு அதைப் பின்தொடர்ந்த பிற சமுதாயங்களும், அந்த வெல்லும் உணர்வை வெல்ல முடியாமல் (Mastery of mastery of nature) திணறுகின்றன... இன்று 'இயற்கை' என எஞ்சியிருக்கும் ஒன்றே இந்த 'மனித குலத்தின்' தயவில் இருப்பதுதான். தற்பாதுகாப்பு கருதி 'மனித குலம்' விட்டுவைத்திருப்பதே 'இயற்கை'.
ஓரளவு மிஷெல் ஸெர், ப்ரூனோ லத்தூர் எழுத்துக்களை, விவாதங்களை வாசித்தால் இது புரியும்.

4. முதலீட்டிய அரசியலின் எல்லைகள் மட்டுமின்றி தன்-அடையாள அரசியலின் எல்லைகளும் 'மனித குலத்தை', 'இயற்கையை' நெருக்குகினறன. எட்வர்ட் சையத் போன்றவர்கள் இதைக் கவனிக்கவில்லை எனலாம்.

5. c-Theory இணையதளத்தில் உள்ள கட்டுரைகளை copy and paste செய்ய வேண்டியதுதானே!

நாகார்ஜுனன்.


ஜமாலனது பின்னூட்டம்.

அடையாள அரசியல் பற்றிய இந்த உரையாடல் பல திறப்புகளைக் கொண்டது. ”அடையாளமற்ற வெளி“ அவர்களின் கீழ்கண்ட கருத்துதான் எனது புரிதலுக்கு சிக்கலானதாக உள்ளது.

//மொழிக்கு முந்தைய நிலைகள் குறியீடுகளும் அனுபவங்களும் (அவை கூட ஒரு வகையான மொழியாக இருக்கும் போதிலும்) வாசகர்களுக்கு விளங்காமலே போகக் கூடும். ஆக, அதிகாரத்தின் தோற்றுவாய், மொழிக்கும் முற்பட்ட நிலையாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில் அதிகாரம் 'மொழிக்கு' முந்தைய நிலையிலேயே கட்டமைக்கப்பட முடியும். (இங்கே மொழி என்பது 'பேசும் மொழி' எனக் கருத்துருவாக்கப்படதாக நான் நினைக்கிறேன். ஆயினும் நான் மொழி என்பதை குறியீடு மற்றும் அசைவுமொழிகள் என்பனவற்றையும் சேர்த்து கூற முயற்சிக்கிறேன்).//

மொழியை ஒரு விரிந்த புலத்தில் அதன் குறியில், பாவனைகள் மற்றும் சைகைகள் என பேச்சுநிலை மற்றும் பேச்சற்ற பாவனை நிலை இரண்டிலும் விரிக்கும்போது, மனித நடவடிக்கை அல்லது செயல்கள் துவங்கியபோதே மொழிச்செயல் துவங்கிவிடுகிறது எனக்கொள்ள வேண்டியுள்ளது. அப்படியிருக்கையில் அதிகாரம் எப்படி மொழிக்கு முந்தையதாக இருக்க முடியும்? அதிகாரம் என்பதும் ஆதிக்கம் என்பதும் ஒன்றல்ல? (ஆதிக்கம் என்பதை மனிதப்பண்பாகவும் அதிகாரம் என்பதை அரசியல் சொல்லாடலாகவும் புரிந்துகொண்டுள்ளேன்.) ஆதிக்கம் என்கிற நிலைதான் அதிகாரத்திற்கான தோற்றமூலம் என்பதாக புரிந்துகொண்டால் இயற்கையாக ஒன்றின்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நிலை எங்கு? எப்பொழுது? எதனிடம்? எதற்காக? ஏற்படுகிறது என்கிற கேள்விகள் வருகின்றன. ஆண் பெண் என்கிற மூலமுதல் அடையாளத்திலிருந்து இந்த ஆதிக்கமும் அதனால் கட்டமைக்கப்பட்ட அதிகாரமும் துவங்குகிறது எனக்கொள்ளலாமா? ஆக, அடையாளம் என்பது அடிப்படையில் ஆதிக்கத்திற்கான ஒரு சொல்லாடலாக புரிந்து கொள்ளப்படக் கூடியதுதானா? என்கிற கேள்வி அடுத்து வருகிறது? அடையாள அரசியலை எப்படி நாம் கையாள்வது? அடையாளமற்ற வெளியோ? இருத்தலோ சாத்தியமா? என்கிற கேள்விகளும் இத்துடன் இணைந்து வருபவையே. இவை நீண்ட அவசியமான உரையாடலுக்கானவை. நமக்குமுன் எழும் சிக்கல் நிராகரிக்கப்பட வேண்டிய அடையாள அரசியலை இன்று நிராகரிக்க முடியுமா? என்பதுதான்.

அன்புடன்
ஜமாலன்.


நாகர்ஜுனன் பின்னூட்டம்.

ஜமாலன்,

1. மனித குலம்-மனிதமற்றது இரண்டுக்குமான ஊடாட்டங்களில் ஒன்று மொழி. எது முதலில் வந்தது என்ற பிரச்னை, நம்மை மூலமுதல் தேடும் (in search of origins) போக்குக்குள் தள்ளிவிடும். ஒருங்கே என்று பார்க்கும்போது இந்தத்தேடலை மட்டுப்படுத்தலாம், தவிர்க்கலாம்.

2. மனிதப்பண்பு என ஏதாவது உண்டா என சாம்ஸ்கியுடன் நடத்திய விவாதத்தில் ஃபூக்கோ கேட்கிறார். படைத்தல் (creativity) என்ற முனையிலிருந்து பேசும் சாம்ஸ்கிக்கு அவர் முன்வைத்த கேள்வி அது. தவிர, ஆதிக்கம் என்பது மனிதப்பண்புகளில் ஒன்றாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அதுவே மனிதப்பண்பல்ல.

3. அதிகாரம் என்பது மனிதம்-மனிதமற்றதன் இடையிலான உறவுநிலை எனப்புரிந்துகொண்டால், சொல்லாடல் என்பது மொழியின் அடித்தளம் என ஏற்கலாம். இங்கே, தமிழில் பலர் எழுதும்போது சொல்லாடலைப்பேசும்போது, அரசியல்-சமுதாயக்களத்தை மட்டும் முன்நிறுத்திக்கொள்கிறார்கள். இப்படிப்பிரிப்பது சாத்தியமில்லை. சொல்லாடலை ஃபூக்கோ இப்படி விவரிக்கவுமில்லை. இது தொடர்பாக, ஃபூக்கோவின் The Order of Things, Archaeology of Knowledge புத்தகங்களில் நிறைய இருக்கிறது. Culture Studies செய்வோர் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களுக்குத் தன்-அடையாள அரசியல், விளிம்புநிலை அரசியல் போதுமென்றாகிவிட்டது.

4. தன்-அடையாள அரசியல் என்பது சிந்தனாரீதியாக ஒருவழியாக முட்டுச்சந்தை அடைந்திருக்கிறது. செயல்ரீதியாகக் கூட்டக்கொலை-தற்கொலை ஆகியவை அதன் தீவிர முனைகள். இவற்றைத் தாண்டி இருந்துவந்த சாத்தியங்கள் வேகமாகக் காலியாகிவருகின்றன. அடையாளத்துக்குப் பிரபஞ்ச இருப்பு
இனியும் தேவையில்லை. ஆக, அடையாளம் என்பது வெறும் அரசியல்-சமுதாயக்களத்துடையதாகச் சுருங்கிவிட்டது. அதற்குமேல் அது விரியவில்லை. தென்னாசியப்பரப்பில் நிலைமைகள் பல இப்படித்தான் இருக்கின்றன.

4. ஆக, அடையாளமற்ற வெளி என்பது பிரபஞ்சம்தான் என்ற விஷயத்தில் - அதில் சமுதாயம் என்பது இல்லை என்பதால் - ஒருபுறம் மகிழ்ச்சியும் இன்னொருபுறம் கவலையும் கொள்ளலாம்.

நாகார்ஜுனன்


ஜமாலனது பின்னூட்டம்.

//1. மனித குலம்-மனிதமற்றது இரண்டுக்குமான ஊடாட்டங்களில் ஒன்று மொழி. எது முதலில் வந்தது என்ற பிரச்னை, நம்மை மூலமுதல் தேடும் (in search of origins) போக்குக்குள் தள்ளிவிடும். ஒருங்கே என்று பார்க்கும்போது இந்தத்தேடலை மட்டுப்படுத்தலாம், தவிர்க்கலாம்.//

உண்மைதான். அந்த பார்வை மூலமுதல் தேடுதலை மட்டுப்படுத்தவதற்கு “ஒருங்கே“ என்று பார்ப்பதே சரி. காரணம் முதலில் எது? என்பதே இரண்டாவது வந்தபிறகுதான் சாத்தியம். அதனால் இரண்டுதான் முதலுக்குமான தோற்றம் என்பதாக இதனைப் புரிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன். இந்த முதல் இரண்டு என்கிற வரிசையே ஆதிக்கம் சார்ந்ததுதானே. அதனால் ஒருங்கே தோன்றியது என்பதுவே சரியான பார்வையாக இருக்கும்.

//2. மனிதப்பண்பு என ஏதாவது என சாம்ஸ்கியுடன் நடத்திய விவாதத்தில் ஃபூக்கோ கேட்கிறார். படைத்தல் (creativity) என்ற முனையிலிருந்து பேசும் சாம்ஸ்கிக்கு அவர் முன்வைத்த கேள்வி அது. தவிர, ஆதிக்கம் என்பது மனிதப்பண்புகளில் ஒன்றாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அதுவே மனிதப்பண்பல்ல. //

ஆதிக்கம் என்பது மனிதப் பண்புகளில் ஒன்று என்பதுதான் சரி. ஒருவேளை நான் எழுதும்போது மனிதப்பண்பு அதுவே என்பதுபோல் எழுதி விட்டோனோ? அந்த அர்த்தம் தவறானதே. ஆதிக்கம் அதிகாரம் வேறுபாட்டை சொல்லவே அதனை சொன்னேன். மனிதப்பண்பு என்கிற ஒன்று இருக்கிறதா? என்பதுகூட தீவிரமான கேள்விதான்.

//3. அதிகாரம் என்பது மனிதம்-மனிதமற்றதன் இடையிலான உறவுநிலை எனப்புரிந்துகொண்டால், சொல்லாடல் என்பது மொழியின் அடித்தளம் என ஏற்கலாம். இங்கே, தமிழில் பலர் எழுதும்போது சொல்லாடலை, அரசியல்-சமுதாயக்களத்தை மட்டும் முன்நிறுத்திக்கொள்கிறார்கள். இப்படிப்பிரிப்பது சாத்தியமில்லை. சொல்லாடலை ஃபூக்கோ இப்படி விவரிக்கவுமில்லை. இது தொடர்பாக, ஃபூக்கோவின் The Order of Things, Archaeology of Knowledge புத்தகங்களில் நிறைய இருக்கிறது. Culture Studies செய்வோர் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களுக்குத் தன்-அடையாள அரசியல், விளிம்புநிலை அரசியல் போதுமென்றாகிவிட்டது.//

இதனை முழுமையாக ஏற்கிறேன். சொல்லாடல் என்பது, discourse என்பதற்கு, தாங்களால் தமிழுக்குத் தரப்பட்ட ஒரு அற்புதமான சொல். அது இன்று சராசரி டீக்கடை பெஞ்ச் அரசியலுக்கும் பயன்படும் ஒன்றாக மாறிவிட்டது. அது அர்த்தமற்ற நிலையில் புழங்கப்படும் ஒன்றாகிவிட்டது. போகட்டும். உண்மையில் நமது பிரச்சனை இதுதான். அடையாள அரசியல் குறித்து அச்சமூட்டும் நிலையே உருவாகிக் கொண்டு உள்ளது. இங்கு எழும் கேள்வி.. ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மையினர் மற்றும் உள்ளடக்கப்பட்ட தேசிய அடையாளங்களின் அரசியல் பாத்திரத்தை எப்படி பார்ப்பது என்பதுதான்?

தெல்யுஸின் becoming minority என்பது குறித்து நீங்களோ அல்லது வேறு யாராவதோ அறிமுகம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

//4. தன்-அடையாள அரசியல் என்பது சிந்தனாரீதியாக ஒருவழியாக முட்டுச்சந்தை அடைந்திருக்கிறது. செயல்ரீதியாகக் கூட்டக்கொலை-தற்கொலை ஆகியவை அதன் தீவிர முனைகள். இவற்றைத் தாண்டி இருந்துவந்த சாத்தியங்கள் வேகமாகக் காலியாகிவருகின்றன. அடையாளத்துக்குப் பிரபஞ்ச இருப்பு
இனியும் தேவையில்லை. ஆக, அடையாளம் என்பது வெறும் அரசியல்-சமுதாயக்களத்துடையதாகச் சுருங்கிவிட்டது. அதற்குமேல் அது விரியவில்லை. தென்னாசியப்பரப்பில் நிலைமைகள் பல இப்படித்தான் இருக்கின்றன. //

இதுதான் கவலைக் கொள்ளும் விஷயமாக உள்ளது.

//4. ஆக, அடையாளமற்ற வெளி என்பது பிரபஞ்சம்தான் என்ற விஷயத்தில் - அதில் சமுதாயம் என்பது இல்லை என்பதால் - ஒருபுறம் மகிழ்ச்சியும் இன்னொருபுறம் கவலையும் கொள்ளலாம். //

:) (:

5. c-Theory இணையதளத்தில் உள்ள கட்டுரைகளை copy and paste செய்ய வேண்டியதுதானே!

- எந்த ஒரு வலைப்பக்கத்தையும் அல்லது வலை தளக் கட்டுரைகளையும் பதிவிறக்கம் செய்வதற்கு அதனை பிரின்ட் போட்டு PDF Printer -ல் PDF File ஆக மாற்றி செகரித்துக் கொள்ளலாம். அதற்கான PDF Convert Software இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்த உங்கள் கணிப்பொறியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். சுட்டி இங்கு..



நன்றி உங்களது விரிவான விளக்கத்திற்கு.

அன்புடன்

ஜமாலன்.


அந்நியனது பின்னூட்டம்.

ஜமாலன்,
நான் மொழி எனக் கருதியது 'பேசும் மொழிக்கு' முந்தைய நிலையை என்ற போதிலும், இங்கே நாகர்ஜுனன் குறிப்பிட்டதைப் போன்று 'பேச்சு மொழியை' கருதியே அக்கருத்தைக் கூறியிருந்தேன். சூழல் மீதான எதிர்வினை என்னும் போதே அதிகாரம் தோன்றிவிட்டது என்பதையே கூற எத்தனித்தேன். மொழி, அறிவு, அதிகாரம் என்னும் விடயப்பரப்பு எம்மை சமூகவியல் பரப்பினுள் மாத்திரம் அடக்கிவிடக் கூடும் என்ற அபாயம் கருதியே எனது கருத்து அதற்கு முந்தைய நிலைகளை பேச எத்தனித்தது. ஏனெனில் அதன்வழி மானுடவியல் மற்றும் உயிரியல் துறைகளை இணைந்த உரையாடல் தொடங்கப்பட வேணும் என்பது எனது விருப்பாக இருந்தது.

இங்கே, 'அதிகாரம்' என்பதன் மூலங்களில் ஒன்றாக 'அறிவு' இடம்பறுகின்றது. அறிவின் தோற்றுவாய்களில் ஒன்றாக மொழி இடம்பறும் தருணத்தில், மூலத்தோற்றுவாய் மொழி என்ற கருத்தடிப்படையில் எமது உரையாடல் தேங்கிப் போகின்றது. 'அனுமதிகப்பட்ட சொற்களும்' 'தேங்கிப் போன கருத்தாடல்களும்' எமக்கு உருவாக்கும் அறிவே அதிகாரத்தின் தோற்றுவாயாக உள்ளது. மீள் அனுமதிப்பிற்கு உள்ளாகும் சொற்கள் காலப்போக்கில் சில வெளியொதுக்கல்களை நிகழ்த்தும். அதன் வழி உருவாகும் அறிவு அதிகாரமாக உருப்பெறும். அங்கே முன்னர் மீள் அனுமதிப்பிற்கு உள்ளாகாத சொற்களின் அரசியல் மீது ஒடுக்குமுறையாகக் கவியும். இங்கே தான் மொழி தேங்கிப் போகாமல் இருப்பதற்காக பிரேம் கூறுவதைப் போன்று ஒழுங்குகளைக் கலைக்க வேண்டியுள்ளது. அதன் தேவை அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இது சமூகவியல் தளத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது.

ஆனால், நான் இங்கே அதற்கு மேலதிகமாக சில விடயங்களைச் சொல்ல விழைந்தேன். சமூகவியல் தளத்துடன் இணைந்த உயிரியல் நடத்தை தொடர்பான கிளைப்பாதையே நான் தேர்ந்தெடுத்த பகுதியாகும். பேசும் மொழிக்கு முந்தைய 'மொழி' மற்றும் 'நடத்தைச்' செயற்பாடுகள் கட்டமைக்கும் அதிகாரமும் மேற்கூறிய சமூகவியல் கிளைக்குச் சமாந்தரமாக வரும் இன்னுமொரு கிளைப்பாதை எனலாம். இங்கே நடத்தைச் செயற்பாடுகள் என்னும் போது சூழல் மீதான எதிர்வினை என்பதில் இருந்தான அதன் ஆரம்பம், சில நடத்தைகளை மீள் அனுமதிக்கிறது. திரும்ப திரும்ப நிகழும் செயற்பாடுகள் சில 'தேங்கிப் போன' செயற்பாடுகளை உருவாக்கும். அவை சில நடத்தைச் செயற்பாடுகள் மீது வெளியொதுக்கலை நிகழ்த்தும். அங்கேயும் இதற்குச் சமாந்தரமான அறிவும் அதனூடான அதிகாரமும் கட்டமைகப்படுகின்றதென்கிறேன். இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றை விட்டும் ஒன்றை பேசமுடியாது என்பதே எனது கருத்தாக இருக்கிறது. நாகர்ஜுனன் அவர்களது எழுத்தில் நான் நேசிக்கும் விடயங்கள் என்னவென்றால் இவ்விரண்டு பார்வைகளையும் சேர்ந்தவாறான ஒருவித hybrid பார்வை. (அதுவும் சரளமான பார்வை. அவரது அடிப்படைப் பார்வைக் கோணம் மிகவும் வேறுபட்டது என்பது எனது கருத்து.)

மற்றையது உங்களது அடையாளம், அதிகாரம் மற்றும் அரசியம் பற்றிய விடயத்தை நாம் பெரியளவில் அலசவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அடையாளமற்ற வெளி அல்லது அடையாளங்களைக் களைதல் என்னும் போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல. களைவின் நிலவுகையில் பேணப்பட்ட அதிகாரக் கட்டமைப்பின் உச்சியில் அமைந்த கூறுகள் மாத்திரமே நிலைக்கும். களைதல் என்பது இன்னுமொன்றின் பேணுகைக்கும் வித்திடக் கூடும். அதே மாதிரி, 'வேர்களைத் தேடுதல்' என்னும் அடையாள அரசியல் என்பது சிலவகையான தன்னிலை இறுக்கங்களுடன் வெளியொதுக்கல்களை நிகழ்த்தி வன்முறையின் தோற்றுவாயாக மாறிவிடும் அபாயம் உள்ளது. ஆக எம்முன் உள்ள தெரிவுதான் என்ன?

அடையாள அரசியல் நிராகரிப்பிற்கு உள்ளாகும் போதெல்லாம் அது இன்னுமொரு தளத்தில் வலுப்பெறும் என்பதே எனது கருத்து. என்னைப் பொறுத்தவரை இதற்கு தீர்வாக 2 விடயங்களைக் குறுவேன்.

1. அடையாள அரசியலை அதன் வழியில் நின்றவாறு விரைவுபடுத்தல். விரைவுபடுத்தலினூடு அங்கீகாரங்களையும் பரஸ்பர நம்பிக்கைகளைம் வளர்த்தல். அடையாள அரசியலின் தோற்றுவாயும் நோக்கமும் ஒடுக்குமுறைக்கு எதிராக அடையாள முன்னிறுத்தல்களுடன் கூடிய எதிர்ப்புணர்வே. அங்கே அங்கீகரிப்புகளை வேகமாக்குவத்ன் மூலம் 'பிளவுறும் தன்னிலைகள்' வரை அது நீளும். அதன் பின்பு நிகழும் வெறுமையின் பின்பு தேக்கமுறாத 'பொது அடையாளம்' மீண்டும் நிகழும். இறுக்கமான அடையாளங்கள் என்பது அடிப்படைவாதத்துடன் நெருக்கமானது. தமிழ்நாட்டில் 'நிகழ்த்தப்படும்' அடையாள அரசியல் என்பதும் ஈழத்தில் நிகழ்த்தப்படும் அடையாள அரசியல் என்பதும் அடிப்படைவாதங்களுக்கு அண்மையானது. அங்கே வன்முறையும் அமைதியின்மையும் மட்டுமே தீர்வாகும். 'தேசியம்' என்பது அடிப்படைவாதக் கூறாக நிராகரிப்பிற்கு உள்ளான கருத்துருவாக்கம் அதன் மீது கூடவே கவியக் காத்திருக்கும் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டதே. ஆனால், தேசியம் = பாசிசம் என்ற வாய்ப்பாட்டை இலகுவாக மனப்பாடம் பண்ணிக் கொண்டு தலித்தியத்தை பாசிசமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் எமது அடையாள அரசியல் கேவலம். தேசியம் தனக்கூடாக அனுமதி மறுக்கப்பட்ட வெளிகளைக் கொண்டிருக்கும் என்பதன் அதே உண்மையின் கீழ் தலித்தியமும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அடிப்படைவாத அடையாள அரசியலை நிகழ்த்த எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் அதனைச் சுட்டிக்காட்டுவது அவசியமானது. எந்தவொரு அடையாள அரசியலின் பின்னும் அடிப்படைவாத மனநிலை ஒழிந்திருப்பதென்பது நாம் மறுத்துவிட முடியாது. ஆயினும், அடையாள அரசியலின் அவ் அடிப்படைவாத மனநிலை தேக்கமுறுவதை தடுப்பதொன்றே எம்முன் உள்ள தெரிவு. அதனை மறுத்தல் என்பது கூட அவர்கள் 'மாற்றம்' அடைவதை தடுப்பதற்கான காரணியாகப் போய்விடும் அபாயம் உள்ளது. அதீத அங்கீகரிப்பின் பின் கூட 'நிரந்தர பொதுநிலை' என்பதை இயன்றவாறு மறுத்தடியிருத்தல் முக்கியமானது. நிரந்தர பொதுநிலை என்பது கூட சிலவகையான இறுக்கங்களை மீண்டும் மேற்கொள்ளத் தொடங்குதல் என்பது மீண்டும் பிழையான விடயமாகக் கூடும்.

இங்கே Deleuze இனது பிளவுறும் தன்னிலை என்பது கூட அடையாள அரசியலின் தொடர்ச்சியே. (வியப்படைய வேண்டாம்.) இறுக்கமாகக் கட்ட்மைக்கப்பட்ட தன்னிலை என்பது சில பாசிச ஒழுகிற்குள் ஆட்பட்டிருக்கும். அதன் பிளவு அதன் பாசிசத்தைச் சிதைக்கக் கூடியது. பிளவு என்பது dynamic ஆக வேண்டும். அங்கே தேக்கமுறாத சூழல் உருவாகும். அடையாளங்கள் இருந்தால் கூட அவற்றிற்கு 'வேலை' இருக்காது. ஒருவித பிரபஞ்சத்தன்மையின் தோற்றமே அதுவாகும். பிளவுறும் தன்னிலைகள் என்பது கூட சில மறுப்புகளை வேண்டி நிற்கும் செயற்பாடே. வலிமையாகக் கட்டமைக்கப்பட தன்னிலைகளுக்கு எதிரான போரில் பிளவுறும் தன்னிலைகள் தோன்றுகின்றன. கட்டமைக்கப்பட்ட தன்னிலையின் இறுக்கம் அதனை நொருக்கி பிளக்கின்றது. தனித்த தனிலையின் இருப்பு என்பது கூட அடிப்படைவாதமாகக் கருதப்பட முடியும். இத்தன்னிலையின் இருப்பு என்பது எமது சூழலால் கட்டமைக்க்ப்படுகின்றது. சூழல் என்னும் போது கருத்துக்கள், நம்பிக்கைகள், சடங்குகள், ஆசைகள் போன்றனவற்றைக் குற முடியும். ஆக, தன்னிலை என்பது கூட ஒருவித அடிப்படைவாத அம்சமே. அக்கட்டில் இருந்து விடுபடும் நோக்கிலேயே தன்னிலைகள் பிளவுற ஆரம்பிக்கின்ற்ன.

2. 'அடையாள'(ஒருமை) அரசியலில் இருந்து அடையாளங்களை (பன்மை) நோக்கிய நகர்வு. இங்கே ஒரு அடையாளத்தினுள் தேங்கிப் போகாமல் இருக்கும் போது அடிப்படைவாத மனநிலையைத் தாண்ட முடியும். ஒவ்வொரு அடையாளமும் ஒன்றையொன்று cross பண்ணியவாறிருக்கும். நிரந்தரப்படுத்தப்படும் போதே பாசிசம் தோன்றுகின்றதென்பேன். எவ்வடையாளங்களும் இறுக எத்தனிக்கும் போது அது தனக்குக் கீழே அனுமதிகப்படாத வெளிகளை வரைகின்றது. அவ்வெளிகள் நசுக்கப்படுகின்றன. எவ்வடையாள ரீதியாலோ இறுக்கமடையாத சூழ்நிலையை உருவாக்க வேண்டியதே அறிவுஜீவிகளின் பொறுப்பே தவிர மாறாக அதனை இறுக்குவது அல்ல.

இவற்றை விட,
தேசிய அடையாளங்கள் என்பது பிற்போக்கானது அல்ல. ஆனால், அவை இலகுவாக பிற்போக்கு பாத்திரத்தை எடுக்கக் கூடியவை என்பது தான் எனது கருத்து. ஆரோக்கியமன தேசிய அடையாளங்களை நாம் நிராகரிக்கவும் முடியாது. தமக்குள் அங்கீகரிப்புக்களைக் கொண்ட தேசிய அடையாளங்களை நாம் எப்போதும் நிராகரிக்க முடியாது. அதன் தேவையை மறுக்கவும் முடியாது. ஈழத்தில் புலிகளால் கட்டமைக்கப்பட்ட தேசியம் பிற்போக்கானது. அடிப்படைவாத மனநிலை கொண்டது. ஆயினும், ஈழத்தில் தமிழ்த்தேசியத்தில் தேவையை பேரினவாதம் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது.
( 'தேசிய' மாதாவுக்கு அ. மார்க்ஸ் உரிஞ்ச சீலையில் வன்னி மக்களின் சீலைகளும் சேர்ந்தே உரிகின்றன. :( ).

ஓரளவு அங்கீகரிப்பிற்கு உள்ளாகிய ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து இறுதியில் con-federal மூலம் கட்டமைப்பை ஏற்படுத்த எத்தனிக்கவில்லையா? இங்கே தான் நான் சொல்லும் அடையாள அரசியலை விரைவுபடுத்தலும் அங்கீகரிப்புகளை நிகழ்த்துதலும் என்பதும் முக்கியம் பெறுகின்றன. சென்ற நூற்றாண்டின் சம்ஸ்டி எண்ணக்க்கரு இந்த நூற்றாண்டுவரைக்கும் முக்கியமானது. மையநீக்கம் என்பது இறுதியில் கொண்டுவர எத்தனிக்கும் பிரபஞ்ச பார்வை அல்லது சர்வதேசியப்பார்வை என்பதை முக்கியமானதாகவே கருதுகின்றேன். அதீத சுதந்திரத்தில் நிகழும் இணைவு வித்தியானமானது. அதிக அங்கீகரிப்பை கொடுப்பது. வித்தியான அங்கீகரிப்பை நிலைநிறுத்துவது. தம்மளவில் கலப்பதற்கான ஏதுவாய்களைக் கொண்டவை.

இறுதியாக,
'சிறுபான்மை' மற்றும் 'அடையாளம்' போன்றவற்றை நாம் எப்ப்போது 'நிரந்தரமான தளத்தில்' வைத்து அணுக முடியாது. அவற்றை மேம்போக்காக 'நிலைப்படுத்தகூடாது'. அசையும் தன்மையானவை. நெகிழ்ச்சியானவை. அவற்றிற்கு எல்லைகளை வகுக்கும் போதோ அல்லது கோடு கீறும் போதோ நாம் அவற்றிற்கான தேவையை அவ்விடத்தில் இழந்து விடுவது மாத்திரமன்றி அவை பிற்போக்கான பாத்திரத்தை எடுக்கக் காரணமாகிவிடுகின்றோம்.

ஜமாலன்,
c-Theory பற்றிய தகவலுக்கு நன்றிகள்.

-அந்நியன்

நாகர்ஜுனனது பின்னூட்டம்.

முதலில் இங்கு நடக்கும் விவாதத்தை தனிப்பதிவில் நடத்த வேண்டும். அதற்காக எழுத முன்முயற்சி எடுக்க வேண்டும்! கொஞ்சம் ஆபத்தான காரியம்தான்.

சமூக-அடையாளங்கள் உருவாகி இறுகும்போது சமூகவியல்-உயிரியல் என்ற பிளவு ஏற்பட்டு அதனால் சிக்கல் வருகிறது. இயற்கை என்பதைப் புறத்தே கொண்டுபோய்த்தான் இது சாத்தியமாகிறது. இதை அறிந்தும் உணர்ந்தும் இந்தப்பிரச்னைக்கு முகம்கொடுப்போர்தாம் கலைஞர்கள், இலக்கியவாதிகள்.

எடுத்துக்காட்டாக, இந்திய தேசியம் உருவாகும்போது அரவிந்தர், தாகூர் போன்றோர் அதிலிருந்து விலகிநிற்கும் பிரபஞ்சப்புள்ளிக்கு இயல்பாகவே செல்கிறார்கள். பாரதி வசனகவிதையை முன்வைக்கிறார். புதுமைப்பித்தன் சிறுகதையை நவீனமாக்குகிறார். கறாரான இந்திய தேசியவாதியான சி.சு. செல்லப்பா, நவீன இலக்கியத்தை முன்வைக்கும் எழுத்து பத்திரிகை நடத்திய முன்னோடியாக இருப்பதைத் தமிழவன் சுட்டிக்காட்டுகிறார். இப்படித்தான் மொழி என்ற களத்தின் ஊடாக இந்தியப்பரப்பில் தேசிய-அடையாளத்தைத் தாண்டிய பிரபஞ்ச வெளிகள் தக்கவைக்கப்பட்டன. அதேபோல, திராவிடச்சிந்தனை என்பது தமிழ்த்தேசியம் பேசாத திருக்குறளின் பொது-அறத்தை ஏற்கிறது. அதன் வழிவந்த பாரதிதாசன் "தமிழால் தோன்றுவது உலகம்" என்று கூறுவது empirical தமிழ் அல்ல என்று பார்த்தால், அதை மொழியால் தோன்றுவது உலகம் என்ற பிரபஞ்சப்பார்வையோடு இணைக்கலாம். இதையும் தமிழவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனால்தான் பாரதிதாசன் வழிவந்த பலர் புதுக்கவிதைப்பரப்புக்குள் வந்து அதை மாற்றியமைத்தது தமிழில் நடந்தது. எண்பதுகளில் தமிழ் விமர்சன மரபில் ஸ்ட்ரக்சுரலிஸம் பரவியதற்கும் சங்க இலக்கியத்தை ஏற்கிற புதுக்கவிதை இன்று உருவாவதற்கும் அதை வாசித்து இன்புறும் தன்னிலைகள் உருவாவதற்கும் இதுதான் காரணம். அதுபோல கிறித்தவ, இஸ்லாமிய மரபுகளும் தமக்கான தமிழிலக்கியத்தைக் கண்டடைவதன் மூலம் பிரபஞ்சப்பார்வைகளைத் தக்கவைக்கின்றன. அயோத்திதாசர் பௌத்த அறத்தை முன்னிறுத்தும் பிரபஞ்சப்பார்வையைக் கொண்டிருக்கிறார். இது தலித் இயக்கம் இறுகாமல் போவதற்கான அடிப்படையை இட்டிருக்கிறது. மொழியைப் பொறுத்தவரை உள்ள இது மற்ற கலை-அறிவியல் பரப்புக்களிலும் சாத்தியம்தானே..

எந்த அளவு இதை ஒவ்வொருவரும் தொடர்கிறோம் அல்லது கருவறுக்கிறோம் என்பதில் அடையாளங்கள் இறுகுவதும் இறுகாமலிருப்பதும் நடக்கின்றன. சமூக-அரசியல் பரப்புக்கள் அடையாளங்களை இறுக்கத்துடிக்கின்றன. கலை-இலக்கியவாதிகள்-விமர்சகர்கள் இந்த இறுக்கங்களை ஏற்கும் நிலையில் இவற்றுக்கு நாமும் பலியாகிறோம்..

நாகார்ஜுனன்

இதற்கான அந்நியனினது பதிலை பதிலை நாகர்ஜுனன் தனிப்பதிவாகவே இட்டார். அது அவரது பெருந்தன்மையைக் காட்டுகின்றது. என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.


அந்நியனினது பின்னூட்டம்.


இலங்கையிலிருந்து - கொழும்பிலிருந்து என்று நினைக்கிறேன் - வந்திருக்கும் கடிதத்தை அப்படியே தருகிறேன். அருகில் கொழும்பில் இன்றைய நிலை பற்றிய ஒரு படம்.. இந்தக்கடிதத்தில் உள்ளவற்றுக்கு நேரடியான பதிலை யார்தாம் எழுத முடியும்... - நாகார்ஜுனன்.
-----------------------------------------------------------------------------------

நாகார்ஜுனன் அவர்களுக்கு

உங்கள் எழுத்துக்களை தவறாமல் படிக்கிறேன். என் கல்வித்துறை கணிதம், பௌதீகம், கணனி விஞ்ஞானம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அறிவியல் மற்றும் தத்துவம் போன்றவற்றின் இணைவு தொடர்பாக எனக்குள் அதீத விருப்பம் ஏற்கனவே இருந்தது. தமிழில் இந்த இணைவு தொடர்பாக ஆங்காங்கே சிலவிதமான கருத்தாடல்கள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றிலிருந்து உங்கள் எழுத்துக்கள் பலமாக வேறுபடுகின்றன என்பதான உணர்வு இருந்துகொண்டேயிருந்தது. ஒன்று, அறிவியலுக்குள் இருந்தவாறு தத்துவம் தொடர்பான பார்வையாக இருந்தது அல்லது தத்துவத்தில் இருந்தவாறு அறிவியல் தொடர்பான பார்வையாக இருந்தது. ஆனால், உங்களது எழுத்துக்கள் அவ்வேறுபாடுகளை கடந்து 'இயல்பான' இணைவுநிலையைத் தோற்றுவிக்கின்றன. உங்களது அணுகுமுறையே அடிப்படையில் வித்தியாசமானது என நினைக்கிறேன். உங்களது எழுத்துக்களைப் படிக்கும் போது எனக்குள் ஏதோ புதுவிதமான பாதையைத் திறந்திருப்பது போன்றதான உணர்வு.

மற்றும், நீங்கள் கூறிய "தன்-அடையாள அரசியலின் எல்லைகளும் 'மனித குலத்தை', 'இயற்கையை' நெருக்குகினறன" என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கின்றது. ஆயினும் அவற்றின் 'விரைவுத்தன்மையிலும்' 'பிளவிலும்' இறுதியில் மனிதகுலத்தை - இயற்கையை நெருக்குதலில் இருந்து விடுவிக்கும் நிலையைத் தோற்றுவிக்க முடியும் என நம்புகிறேன். ஏனெனில் அடையாள அரசியலின் நியாயப்பாடுகளையும் அரசியல்வாதிகளின் நகர்வுகளையும் அடிப்படைவாத மற்றும் ஒடுக்குமுறைக்கட்டமைப்பு சார்ந்தவர்களால் எதிர்கொள்ளவே முடியாது என்பது எனது கருத்து.

இன்றைய ஈழத்து நிலவரம் உங்களுக்கு இவற்றை உணர்த்தும் என நினைக்கிறேன். தமிழில் தட்டெழுதிக் கொண்டிருக்கும் காரணமாக நான் கைதுசெய்யப்படலாம். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் இல்லையா? என் இங்கு வந்திருக்கிறாய்? என அனைத்து தரப்பாலும் கேட்கப்படுகின்றேன். வங்கிவைப்பு புத்தகத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் இராணுவத்திற்கு கணக்குக் காட்ட வேண்டியிருக்கிறது. இங்கே, எமது சமாதானத்திற்கு முன்பு அடையாள அரசியல் நின்றது. அதன் நியாயப்பாடுகளை எவராலும் எதிர்கொள்ள முடியவில்லை. இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட சமூகங்க்ளுக்கு அது அவசியப்படுகின்றதோ என்று தோன்றுகிறது. அதனை விரைவுபடுத்தல் சில அங்கீகரிப்புக்கள் நிகழ அனுமதிக்கக்கூடும். அங்கீகரிப்புகள் ஊடாக மட்டுமே அடையாள அரசியலை நீர்த்துப்போகச் செய்ய முடியும் என்பது எனது நிலைப்பாடு. ஏனெனில் அதுமட்டுமே அவர்களின் முற்போக்கான அம்சமாயிருக்கிறது. சில வேளை விரக்தியின் உச்சத்திலான எனது கருத்தாகவும் இருக்கக் கூடும். எம் 'அறிவுஜீவிகள்', இந்நாடு சிங்களவர்களுக்கானதே எனக் கூறும் ராணுவத்தளபதியை கேள்வி கேட்க திராணியற்ற தமிழ்க்கட்சிகளின் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். மக்களின் அழிவுக்குப் பின்பான அரசியலை செயல்படுத்த வெளிநாடுகளில் கூட்டம் போடுகின்றனர். இவ்விடத்திலேயே நான் அடையாள அரசியலை வெறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திண்டாடுகின்றேன்.

நீங்கள் உங்கள் தேசம்நெற் பேட்டியில் கூறியது ஞாபகம் வந்துகொண்டேயிருக்கிறது:

"உங்கள் பிரச்னையில் எவ்வித அரசியல் தீர்வு வந்தாலும் சரி. உங்கள் சமுதாயமும் இலங்கையின் மற்ற சமுதாயங்களும் அனுபவித்த ரணங்கள், கசப்புணர்வு எல்லாம் ஆறுவதற்கு தனித்த காலம் தேவைப்படும்ன்னு நினைக்கறேன். இதற்குக்காரணம் உங்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் ரொம்ப அதிகம், தவிர இழப்புகளுக்கு நீதி கிட்டாத சூழ்நிலை, இந்த அநீதி தொடர்கிற சூழ்நிலை, அது உண்டாக்கியிருக்கற கோபம், வன்மம், எதிர்வன்மம்.. இதெல்லாம் போக ரொம்பக்காலம் ஆகலாம். ஆனா இதெல்லாம் போனால்தான் சமாதானம் நிலைக்கும்னு அடித்துச்சொல்ல முடியும்."

இதற்காக உழைப்பது எமது அறிவுஜீவிகளின் முதன்மைப்பணி என்பேன். அதற்கு எதிர்மாறாகவே எமது சூழலில் 'அறிவுஜீவி' என அறியப்பட்டவர்களின் வேலையாயிருப்பது அதற்கு நேர்மாறானது என்பது மிகவும் துயரமானது.

எனது சுய புலம்பல்களை இத்துடன் நிறுத்துகிறேன். சம்பந்தமில்லாத உரையாடலாக இருப்பின் இப்பின்னூட்டத்தை நீங்கள் நீக்கிக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே கூறியபடி உங்கள் எழுத்து எனக்குள் திறந்துவிட்ட உலகு உவப்பானதாயிருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. ஆயினும் சில யதார்த்தங்கள் முரண்படவும் வைக்கின்றன. உங்களைத் தொடர்கிறேன்.

நன்றி

அந்நியன்.


அந்நியனினது பின்னூட்டம்.

நாகார்ஜுனன் அவர்களுக்கு,

நன்றி. பின்னூட்டத்தைத் தனிப்பதிவாக இடுவீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை.

அடையாள-அரசியல் தொடர்பாக மேலும் சில விடயங்களைக் கூறியிருக்க முடியும். உங்கள் பதிவைப் பார்த்த பின்பு நண்பர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். கொழும்பில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கவில்லையா, கொழும்பில் தமிழ் டைப்பிஸ்ட்கள் இல்லையா, லட்சக்கணக்கில் பணத்தைத் தமிழர்கள் வங்கியில் வைத்திருக்கவில்லையா என்றவாறாக அவர் கேள்விகள் அமைந்திருந்தன. கேள்விகள் நியாயமானவையே. அவ்வாறு நினைப்பதிலும் தவறில்லை.

இதற்கு நான் அவருக்கு சில சம்பவங்களை நிலைநிறுத்தி விளக்கம் கொடுக்க வேண்டியதாய் இருந்தது. சில மாதங்கள் முன் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் செய்திசேகரிப்புக்காக Sowmini Sengupta என்ற பெண்மணி வந்திருந்தார். அவருடன் கூடவே நாகாலாந்து பிரச்னை தொடர்பான பலமான அனுபவம் உள்ள Pablo Bartholomew என்ற புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரும் கூடவே வந்திருந்தார். அவர்கள் களப்பணிக்கு ஒத்தாசையாக நண்பர் ஒருவர் அழைத்தன் பேரில் போயிருந்தேன். கொழும்பில் பலவிதமானவர்களைச் சந்தித்து நிலைமையை விசாரித்தனர். அப்போது ஒவ்வொருவர் பதிலும் வித்தியாசமாக அமைந்தது. கொழும்பில் 18 வருடங்களுக்கு மேல் தங்கியிருந்து சிங்களம் நன்கு பேசத்தெரிந்த சிலர் தாம் தமிழர் என்ற காரணத்தால் படும் கஷ்டங்களைச் சொன்னபோது வியப்பாகவும் இருந்தது. அதே கொழும்பு வந்து சில வருடங்களே ஆனவர்கள் தமக்கு இவ்வாழ்வில் கடினம் எதுவுமில்லை எனக் கூறியது அதைவிட வியப்பாக இருந்தது. அதே நேரத்தில், கொழும்பில் பிறந்து வளர்ந்த, வடக்கு-கிழக்கை அறியாத இந்தியா வம்சவழியானவர்கள் தாம் தமிழர்களாக இருப்பதில் எதிர்நோக்கும் பிரச்னைகளை பட்டியலிட்டதும் மலையகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுபினர் ஒருவருடைய மகன் தாம் காரிலேயே திரிவதாகவும் சிங்கள நண்பர்களுடன் தாம் எப்போதும் நல்-உறவாக இருப்பதையும் சொன்ன போது ஒரு கட்டத்தில் வியப்பேற்படுவது நின்றுபோயிற்று.

இங்கே, கடினமான வாழ்வு என்பதும் ஒடுக்குமுறை என்பதும் பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுவதாக உணர முடிந்தது. அவற்றில் முக்கியமாக இரு காரணிகள் -
முதலாவது தமிழர் என்ற அடையாளம் தொடர்பானது. இந்த நிபந்தனை பூர்த்தியாகும் பட்சத்தில் சமூக அந்தஸ்து, செல்வாக்கு மற்றும் பொருளாதார நிலைமை செல்வாக்குச் செலுத்துகின்றன. அடையாளம் என்று வரும் போது 'அடையாளப் பேணுகை எத்தனிப்பு' என்பதும் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது என்பேன்.

உதாரணமாக ஒன்று. அன்டன் பாலசிங்கத்தின் The Will to Freedom என்ற ஆங்கில நூலை வைத்திருப்பதிலும் பார்க்க முறிந்தபனையின் தமிழ்ப்பதிப்பு மோசமான தாக்கத்தைச் செலுத்தக்கூடியது. இது என்னிடம் இருந்த தமிழ்ப்புத்தகங்களை நூலகத்தில் கொண்டு சென்று ஒப்படைக்கும் அளவுக்கு எனக்குப் பிரச்னையாக இருந்தது. நான் இருக்கும் இடத்துக்கு அண்மையில் வெளிநாடு செல்வதற்காக இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் படும் வேதனைகளைச் சொல்லவே முடியாது. வங்கியில் இருந்து எடுத்த 5,000 ரூபா பணத்திற்கு காவல்துறை கேட்ட போது பதில்சொல்லாமல் இருந்த காரணத்திற்காக சிறைசென்றவர் ஒருவரோ இருவரோ அல்ல. சோதனையிடச் செல்பவர்கள் வங்கிப்புத்தகத்தைப் பார்வையிட முடியாது என்று உயர்நீதிமன்றம்
உத்தரவிட்ட அடுத்த நாள் என் வங்கிப்புத்தகத்தைக் காட்டியிருக்கிறேன்.

அந்நியன்.


றஞ்சனியினது பின்னூட்டம்.

அடையாளங்கள் எம்மீது கட்டாயமாகத் திணிக்கப்படுபவை,
நான் பெண்ணென்ற அடையாளமில்லாமல் ஒரு மனித உயிராகத்தான் இருக்க விரும்புகிறேன். ஆனால் முடியவில்லை. So, நான் பெண் என்ற அடையாளத்தை முன்நிறுத்திப் போராட வேண்டியுள்ளது , அதுபோல்த்தான் தமிழ்-சிங்களமென்ற இன அடையாளங்களில்லாமல் அந்தச்சிறிய நாட்டில் எம்மால் மனிதர்களாக வாழமுடியவில்லை.. அடையாளங்களைக் காப்பாற்றுமாறு
பலவந்தமாகத் திணிக்கப்படுகிறோம். என்னைப்பொறுத்தவரை எந்த அடையாளமும் இல்லாமல், மனித உயிராக, உலகம் முழுக்க போய்வரத்தான் விரும்புகிறேன்,
ஆனால் முடியவில்லை. இங்கு ஐரோப்பாவில் நிறவாதத்தால் நாம் கறுப்பர்கள் என்ற அடையாளத்தை ஏற்குமாறு திணிக்கப்படுகிறோம். மனிதர்களாக எங்கும் இருக்க முடியவில்லை. இப்படி எங்கும் மதம் இனம் மொழி என்ற அடையாளங்களை விரும்பாமல் சுமக்குமாறு திணிக்கப்படுகிரோம் என்றுதான் நினைக்கிறேன். அப்படித் திணிக்கப்படும்போது நாம் அதற்க்காக போராடத்தான் வேண்டியுள்ளது, சுதந்திரமாகச் செயல்படமுடியவில்லை.

அந்நியனின் கடிதம்போல யாழ் பல்கலைக்கழக நண்பன் ஒருவனின் கடிதங்களில் கடைசியாக வந்த கடிதமொன்றைத் தரலாம் என்று நினைக்கிறேன்:

"அன்புள்ள றஞ்சினி.

மிக்க நன்றி.

நான் வெளியில் போவதில்லை நெட் பார்க்க. பல்கலைக்கழக நெட்டில்தான் வேலைசெய்வதுண்டு. எனது மற்றும் இங்கு நிலைமைகள் உங்களுக்குச் சரியாக தெரிகின்றன. தெரு பற்றி எனக்கு நிறைய ஆசை இருக்கிறது. பறிகொடுத்துவிட்டதை உணருகிறேன். பல்கலைக்கழகத்திற்கும் விடுதிக்கம் இடையில் அன்று மாட்டி ராணுவத்தின் கடும் விசாரணைகளுக்குப் பிறகு தாமதமாக விடுதி வந்தேன்.

இவைகள்தாம் எங்கள் அடிமைத்தனத்தை
ஞாபகப்படுத்தியபடி இருக்கிறார்கள்.
எல்லாம் தாண்டி பிணமாகத் தீரும் விதி எங்களுடையது.

உங்களுடன்தான் மனம்திறந்து இப்பொழுது பேசி வருகிறறேன்.
நிறையத்தொடர்புகள் (வன்னி)அறுந்துவிட்டன..."

இந்த வரிகள் என்னை மிகவும் துன்பப்படுத்தியவை - "தெரு பற்றி எனக்கு நிறை ஆசை இருக்கிறது
பறிகொடுத்துவிட்டதை உணருகிறேன்..."

Saturday 28 April 2018

திசை மாற்றம் - சண்முகம் சிவலிங்கம்

ஈழத்தின் மிக முக்கியமான கவிஞர் ”சசி” என அழைக்கப்படும் சண்முகம் சிவலிங்கம். இவரும் நுஃமானும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். “சசி“யின் ”திசைமாற்றம்” என்ற சிறுகதையை வாசித்திருக்கிறீர்களா? அந்தக் கதையில் வரும் ”நோமன்” என்ற கதாபாத்திரம் நுஃமான் அவர்கள்தான்.
தமிழ் தேசிய விடுதலைக்கு இலக்கிய வெளியில் நுஃமானளவு பங்களிப்புச் செய்தவர்கள் யாருமில்லை. ஆயினும், அந்தக் கதையை முதலில் வாசியுங்கள் பின்னர் அது குறித்து சொல்கிறேன். நுஃமானை எப்படி சித்தரிக்க முயல்கிறது அந்தக் கதை என்பது, ஈழத்திலிருக்கும் இனவாதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
மிக நெருங்கிய நண்பரே அப்படி சித்தரித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
புலிப் பாணி இலக்கியவாதிகள் புரிந்துகொள்ளட்டும்

திசை மாற்றம் - சண்முகம் சிவலிங்கம்

மஜிம்தார் முக்கியமான ஒரு அலுவலுக்காக பேராசிரியர் வைகுந்தனிடம் வந்திருந்தான். அவன் வந்தபோது பேராசிரியர் பின்னேரத் துக்கத்திலிருந்து எழவில்லை. அவர் எழுந்த மேல்கழுவி உடைமாற்றி வருவதற்கிடையில் இன்னும் பலர் வந்து விட்டார்கள்.

வந்தவர்கள் ஒவ்வொருவரும் மஜிம்தாரை உற்றுப் பார்த்துக் கொண்டே அமர்ந்தார்கள். மஜிம்தார் அவர்களுக்கு வினோதமாக்ப் பட்டிருக்கக்கூடுமா?
சடை வளர்த்திருந்த மஜிம்தார் கம்பசுக்கு வந்தது முதல் ஒட்டவெட்டி இருந்தான். அது ஒரு காரணமாக இருக்குமோ? அவன் கொஞ்சம் ஒல்லி, தலை இருந்து கால் வரையும் ஒரே சீராக இருந்தான். அது ஒரு காரணமாக இருக்குமோ? கொஞ்சம் பெரிய பெல்ஸ்தான் அணிந்திருந்தான். அவனுடைய மூக்கு முழி எல்லாம் அவ்வளவு வித்தியாசம் இல்லை. உதடு கொஞ்சம் கறுத்திறுந்த்து. அவ்வளவு சிகரெட் பற்றி இருக்கின்றான். ஒரு வேளை அதுதானோ? எதுவாய் இருந்தால் என்ன? இவர்கள் என்ன பெரிய ஆட்களா?

வந்தவர்கள் எல்லோரையும் அவனுக்குத் தெரியும். எல்லோரும் பேர் பெற்ற திரிபுவாதிகள். முதுகீரனுக்குக் கூட மஜிம்தாரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. முதுகீரனும் திரிபு வாதிகளின் முகாம்தான் இப்போது. நோமன் வந்து சேர்ந்த பிறகுதான் மஜிம்தாருக்கு தெம்பாக இருந்தது. ஒரு வானொலி ஸ்க்ரிப்ட் பற்றிப் பேசுவதற்கு நோமனை பேராசிரியர் அழைத்திருந்தார். ஏனையவர்களும் இவ்வாறு ஒவ்வொரு காரியத்துக்காக பேராசிரியரிடம் வந்திருப்பார்கள். ஆனால், அவர்களில் நோமனைத் தவிர மற்ற எல்லோரும் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டிருந் தார்கள். பேராசிரியருக்கும் முகத்தைத் தொங்கப் போடும் வியாதி தொற்றி விட்டது போலிருந்த்து. பேராசிரியரும் அந்த ஹோலுக்கு வந்து இரண்டொரு முகமன்களைப் பரிமாறிக் கொண்டபின் வாட்டமாய் போனார். நோமனுடன் பேசிக் கொண்டிருந்த்தில் அவர்களுடைய ஆரம்ப்ப் பேச்சை அவன் கவனித்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை ஏதாவது மரணச்செய்தியோ? நோமனிடம் கேட்டான், நோமனுக்கு புன்னகைக்க மட்டுந்தான் தெரிந்த்து,எதேச்சையாக உள்ளறையில் இருந்த ஹோலுக்கு வந்த பேராசிரியரின் மனைவி சகலகலாவல்லி பெரும் புதினத்தைக் கண்டது போல் சிரித்தா.

‘’என்ன, எல்லோரும் ஒருமிக்க, சொல்லி வைத்தாற் போல? நேற்று மகாநாட்டில் தீர்மானித்துக் கொண்டதோ? இருங்க, ரீ கொண்டார்றேன்’’
கன்வஸ் கதிரை ஒன்றினுள் உட்குழிந்து போயிருந்த வட்டக் கண்ணாடி திரு நரேம்ஜிதான் முதலில் சற்று அசைந்து பத்திரிகையை மடித்தபடி நிமிர்ந்தார்.

‘’எல்லாம் நல்லாத்தான் இருந்தது. பிரதமர் சிறிமாவோ சொன்னது போல் வரவில்லையா? அமைச்சர் கெனமன் வந்து அவ்வளவு நேரமும் இருக்கவில்லையா? நாம் அழைத்த எந்தச் சிங்கள எழுத்தாளர்களும் கலைஞர்களும் வராமல் இருந்தார்கள்? வட கிழக்கில் இருந்தும், மலைநாட்டில் இருந்தும் வந்திருந்த தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களினதும், கலைஞர்களினதும் எண்ணிக்கையை வரவுப்பதிவேட்டில் பார்த்தாலே தெரியும். இப்படி எல்லாம் ஒழுங்காகப் போன ஒரு மகாநாட்டில் கடைசியில் இப்படி ஒன்று நடந்து போயிற்றே’’.
என்ன விஷயம் என்பதை மஜிம்தார் ஊகித்தான். அவனுக்குச் சிரிப்பு வந்த்து.

நீட்டிய சோபா ஒன்றினுள் வெள்ளை வலாமணியை தள்ளிக்கொண்டு தொப்பை வயிறு சற்றே தெரிய மல்லாந்து கிடந்த மல்லிகை நேசன் கொழுக்கி போன்ற தன்கழுத்தில் தொங்கும் தலையை முன் நீட்டி நிமர்ந்தார்.

‘’கெடுத்துப் போட்டான். கெடுத்துப் போட்டான்’’ தலையில் அடித்துக் கொண்டு சொன்னார்.

தொடைகளை அசைத்தசைத்து, நரை படரும் தன் மலர்ச்சியான முகத்தைக் கோணல்கள் ஆக்கிக்கொண்டு ஒரு சஞ்சிகையில் மூழ்கி இருந்த நீர்வை ஒரு சிங்கம் போலக் குதித்தெழுந்தார்.

‘’நானும் காவலுரும் எவ்வளவு கவனமாக இருந்தானாங்க, மகாநாட்டு மண்டபத்துள் அதிதீவிர மாவோயிட்டுகளை தூண்டில் போட்டுக்கொண்டு எவ்வளவு கவனமாக இருந்தனாங்க. அதிதீவிர மாவோயிஸ்ட்டுகளில் ஒரு ஈ எறும்பைக்கூட நாங்கள் உள் நுழைய விடல்லியே. அப்படியிருந்தும் நமக்குள்ள இருந்து ஒரு நாலாம் படை வெளிக்கிளம்பி இருக்கே……..’
மஜிம்தார் களுக்கென்று சிரித்தான். மெல்ல நோமனின் காதுக்குள் சொன்னான். ‘நான் இருந்தேனே மகாநாட்டில, என்னை இவர்கள் கண்டு கொள்ளவில்லையே’’
நோமனும் சிரித்து மஜிம்தாரின் காதுக்குள் சொன்னான். ‘’உன்னை அதிதீவிர மாவோயிஸ்ட்டாக அவர்கள் கணக்கெடுக்கல்ல ,,,,,,’’
நோமனை உற்றுப் பார்த்தான் மஜிம்தார் அந்தச் செந்தளிர்ப்பான முகத்தில் ஒரு தெளிவு இருந்தது, திரிபுவாதிகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் தீவிர மாவோயிஸ்ட்டுகளுடன் ஒட்டியும் ஒட்டாமலும் தனக்கென்று ஒரு கருத்தை எப்படி வைத்துக் கொள்ள முடிகிறது இந்த நோமனால்?
நீர்வையின் பேச்சை ஒட்டி ஒருவர் கேட்டார்.

‘’யார் அந்த நாலாம படை?’’
நோமன் சொன்னான்.
‘’அவர் நம்ம அள்தான். நம்ம கூட்டாளிதான். ஒரு நல்ல மாக்ஸ்ஸிட்டு தான். ஆனால், இது ஒரு திசை மாற்றமான காலம், தளம்பல்களும் பின்னோக்கல்களும், தடுமாற்றங் களும் மிகுந்த காலம் எவர் சரி என்பதை எதிர்காலந்தான் சொல்லும்…..’’
‘’அப்போ உம் நண்பரை நீர் ஆதரிக்கின்றீர்?’’
‘’நான் அவருடைய கவிதையை ஆதரிக்க வில்லை. ஆனால், அவர் ஒரு நல்ல கவிஞர், ஒரு நல்ல மாக்ஸ்ஸிட்’’
‘’ஒரு நல்ல மாக்ஸ்ஸிட் இதைச் செய்வானா?’’
மல்லிகை நேசன் மீண்டும் தலையில் அடித்துக்கொண்டார்.
‘’ஓ ! கெடுத்துப் போட்டான். கெடுத்துப் போட்டான்.’’
திருமதி சகலகலாவல்லி தேனீர் தட்டத்துடன் வந்தவர் அப்படியே நின்று விட்டா,
‘’என்ன கெடுத்துப்போட்டான், கெடுத்துப்போட்டான், என்று சொல்லுறீங்கள், இல்ல, நான் ஒரு கதைக்குத்தான் கேட்கிறன், அந்தப் பொடியன் என்னத்தைச் செய்து போட்டான்? – ஒரு கவிதையை வாசித்தான். மக்கள் அவனுக்கு கரகோஷம் செய்தார்கள். இது பிழையோ?’’
திருமதி சகலகலாவல்லி தேனீர்த்த தட்டத்தை நீட்டியபடி ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்டா, திரு நாரேம்ஜி அம்மையாருக்கு பதில் சொல்ல விரும்பியவர் போல எழுந்து நின்றார். இந்தப் பேச்சு நீண்டு விடுமே என்று பயந்தவர் போல பேராசிரியர் வைகுந்தம் இடை மறித்தார்.
‘’சசீந்திரன் அவ்வளவு பிழையான ஆள் அல்ல. நான் நினைக்கிறேன், அவனை யாரோ தூண்டி விட்டிருக்க வேணும். அல்லது அவனே இதன் நன்மை தீமையை கருதாது ஒரு வம்புக்கு ஒரு வாய்ச் சவடால் வீசியிருக்க வேணும். எதுக்கும் நாம ஆளை ஒருக்கா எடுப்பிச்சு நேரில கேட்டால் என்ன? ஏன் இதை வைத்துக் கொண்டு பிசுபிசுப்பான்? உந்த ஹவ்லொக் றோட்லதானே இருக்கான் , , , , தம்பி, இங்க வா மோனே, மஜிம்தார். உனக்கு சசியின் லொட்ஜ் தெரியுந்தானே சைக்கிளை எடுத்துப் போய் நான் வரச் சொன்னதென்று கூட்டிற்று வா மோனே,,,,’’
மஜிம்தாருக்கு தன் காரியம் முடியாவிட்டாலும், அப்போதையச் சூழலில் அந்தக் கூட்டத்தில் இருந்து விடுபட்டது சந்தோஷமாகவே இருந்த்து. இந்தக்கலப்பு முற்போக்குவாதிகளுடன் காலத்தை வீணாக்குவதை விட கிறுக்கன் சசியிடம் போய் பேசிக்கொண்டிருப்பது பரவாய் இல்லைப் போல் தோன்றியது. உண்மையில் அப்படிப்பட்ட ஒரு கவிதையை சசி எழுதினான் என தானே அவனிடம் கேட்க வேண்டும்,,,, என்று முந்திய நாளே நினைத்திருந்தான். அவர்களுடைய மார்க்சீய ஆய்வு வட்டத்தின் கலந்துரையாடல்களின் போதும் அந்த விஷயத்தை அவன் எழுப்ப இருக்கிறான்.
ஏழ்மையான அவனுடைய பைசிக்கிள் லொடலொடத்து வெள்ளவத்தை வீதியில் இறங்கியது. தலை நிறையச் செடை வைத்திருந்தவனுக்கு இப்போது அது இல்லாமல் இருப்பது கொஞ்சம் பாரம் குறைந்த மாதிரித்தான் இருந்த்து. காதோரமாக நெரித்து குறுக வெட்டப்பட்ட அந்த இடங்களில் மாலை நேரக்காற்றுப் படும் போது இதமாக இருந்த்து.

வெள்ளவத்தை சந்தையின் ஓரமாக உள்ள பஸல்ஸ் ஒழுங்கையில் திரும்பினான். ஒழுங்கையின் முன்பகுதியில் சந்தையின் மீன் வெடுக்கு இருந்தது என்றாலும் அந்த ஒழுங்கையில் போவது அவனுக்கு சந்தோஷமாகவே இருந்த்து, ஒரு காரணம் சசி கொடுத்த தகவல், அந்த ஒழுங்கையின் 39ம் இலக்க வீட்டில்தான் கும்பிழான் ஐ. சண்முகமும் யேசுராசாவும் விடுதியைக் கொண்டிருந்தார்களாம். அந்த நினைவில் அந்த வீட்டோடு மஜிம்தாருக்கு மானசீகமான பரிச்சயம் ஏற்பட்டிருந்த்து, குப்பிழான் ஐ. சண்முகம் மார்க்சீயவாதி அல்ல. ஆனால், மென்மையான உணர்வோட்டம் உடைய ஒரு மனிதாபிமானி. யேசுராசாவை நேற்றுதான் மாநாட்டு மண்டபத்தில் அவருடைய ‘அலை’ முதல் இதழோடு கண்டான். பேராசிரியரின் வரட்டுத்தனத்தை யேசுராசா விமர்சனம் செய்தார். பேராசிரியரின் சீனச்சாயம் கழன்று போவதாகவே மஜிம்தாருக்கும் பட்டது.
பஸல்ஸ் லேன் முடிவில் வந்த குறுக்கு வீதியினுடாக டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தைக்கு வந்தான். பின் பாமன்கடை சந்தி. சந்தியில் இடது பக்கமாக திரும்பினால் ஹவ்லொக் ரோட்டின் லேசான இறக்கம். இறக்கத்தில் சற்று நடந்து திரும்பினால் ரம்புட்டான் பழுத்த அந்தப் பெட்டையின் வீடு. எதிரே உள்ள மாடிதான் சசியின் விடுதி.

அறையில் சசி இருக்கவில்லை. உமா இருந்தான். உமா இரண்டு நாட்களுக்கு – முன்புதான் அறிமுகம். உமாவிடம் பேசுவதிலும் அவனுக்கு ஆர்வம் இருந்த்து. உமாவும் சடை வளர்த்திருந்தான். அவனுடைய கோழிக் குஞ்சு மார்பில் உரோமங்கள் புரிவிட்டிருந்த்து. அகன்ற பெரிய விழிகளும் ஆனைக்காதுகளும் அசப்பில் சொல்லத்தான் நினைக்கிறேன், கமலஹாசனைப் போன்ற தோற்றமும்.
உமாவினுடைய இரண்டு நாள் சினேகத்தில் உமா மார்க்சீயம் பற்றிய தவறான முடிவுகளுடன் இருப்பதை மஜிம்தார் உணர்ந்திருந்தான். மெல்லமெல்ல உமாவை அவன் மார்க்சீயப் பார்வைக்கு இட்டுச் செல்ல வேணும். சசியின் நட்பு தத்துவத் தொடர்பில்லாத்து. ஒரே அறையில் உமாவுடன் இருந்து கொண்டும் உமாவின் சித்தாந்த நோக்கு பற்றி சிரத்தை இல்லாமல் இருந்திருக்கிறேனே சசி.

சசியின் அணுகுமுறையில் தத்துவத்திற்கு முதலிடம் இல்லைப் போல்தான் தெரிகிறது, மஜிம்தாருக்கு உள்ளது போன்று மார்க்சீயத்தை பரப்ப வேணும் என்ற முனைப்பு அவ்வளவாக இல்லை. இருந்திருந்தால் சசியின் கிராமத்தில் மார்க்சீய அரசியல் வேலை செய்ய மண்முனையிலிருந்து மஜிம்தார் அங்குபோக வேண்டிவந்திருக்குமா? சசி தன் பகுதியில் கொஞ்சம் வேலை செய்திருந்தான்தான், தன்னை சூழ்ந்திருந்த சில கிராமங்களில் சில படிப்பு வட்டங்களை அமைத்திருந்தான்தான். செவ்வானம், அக்னி, சிற்பிகள், செங்கனல், தேன்தோடை முதலிய பல வட்டங்களை உருவாக்கி இருந்தான்தான். அப்பெயர்களைத் தாங்கிய கை எழுத்து பத்திரிகைகளில் கருத்துக்கள் முன்வைக்க பட்டனதான். ஆனால், வேகம் போதாது, சசிக்கு போதிய வேகம் இருந்திருந்தால் பன்னீர்செல்வம் போன்ற தமிழ் இயக்கவாதிகளின் செல்வாக்கு ஓங்க விட்டு வைத்தருப்பானா?

உமா குளியலறைக்குப் போனான், புத்தகங்களும், சஞ்சிகைகளும் குழம்பிக்கிடந்த மேசையோடிருந்த கதிரையில் இருந்தபடி கீழே மாலைப்பொழுது இன்னும் பிரகாசமாய் இருந்த ஹவ்லொக் வீதியின் வாகனப் போக்குவரத்தைக் கவனித்தான் மஜிம்தார். வாகனங்களில் ஊர்ந்த எண்ணங்கள் மலைகளையும் வெளிகளையும் கடந்து சசீந்திரனின் கோயில் வெளியை அடைந்தன. மண்முனையிலிருந்து சசியின் கோயில் வெளியில் மார்க்சீய வகுப்புகள் எடுக்க மஜிம்தார் சென்றிருந்த அந்த மாலைப்பொழுது நினைவுக்கு வந்த்து. பதற்றம் மிக்க அந்த இரவு கண்முன் விரிந்த்து.

கோயில் வெளி. அடர்ந்த பெரிய ஆலமரங்கள், இடையிலே வெள்ளை மணற்பரப்புகள் சுற்றிவர வீதிகள். மஞ்சள் ஒளி தரும் பல சோடியம் பல்புகளுக்கிடையில் ஒரு பெரிய மேர்க்கூரி வெளிச்ச மின்கம்பம். மேர்க்கூரிக் கதிர்கள் ஆல மரங்களுக்கிடையில் நிழல்களை வீழ்த்தின. கோயில் விளக்குகளின் ஒளிக்கீற்றுகள் ஆலமரங்களின் நிழல்களை வரிவரிவாய் கீறின.

அந்த வகுப்புக்கு சசி ஓடியாடி நல்ல வேலை செய்திருந்தான். ஒரு நாற்பது ஐம்பது தோழர்களைத் திரட்டி இருந்தான். அவர்களை அந்த மங்கல் மணல் வெளியில் ஒன்றாக்க் காண மஜிம்தாருக்கு சந்தோஷமாக இருந்த்து. மஜிம்தாருடன் துரையும் சுபத்திரனும் வந்திருந்தார்கள். கூட்டத்தைக் கண்டதும் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். மஜிம்தாருக்கும் அது பெருமையாகத்தான் இருந்த்து.

இரவு எட்டு மணிக்குப் பிறகுதான் எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். வகுப்புத் தொடங்கும் போது ஆலமரங்களின் இருள் கீற்களிடையே சருகுகள் சரசரத்துக் கேட்டன. சுபத்திரன் கேட்டான்,
‘’இன்னும் தோழர்கள் வர்றாங்களா-‘’
மௌனம்.
அவர்கள் காத்திருந்தார்கள்.
சரசரப்புகள் ஓய்ந்தன.
ஏன் அந்த்த் தோழர்கள் இருட்டுக்குள் இருக்கிறார்கள்? அவர்களும் இங்கே வரலாமே…’’
சசி எழுந்து இருட்டுக்குள் இருந்தவர்களிடம் போனான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.
‘’அவர்கள் அங்கிருந்தே கேட்கிறார்களாம். பன்னீர்செல்வமும் வந்திருக்கான்,’’
‘’யார் பன்னீர் செல்வம்-‘’
‘’கூட்டணியில் முக்கியமானவர்…’’
மஜிம்தாருக்கு பூரிப்பாகவே இருந்த்து. கூட்டணிக்காரப் பையன்களும் மாற்றுச் சிந்தனையுடன் தன் வகுப்புக்கு சமூகமளித்திருக்கிறார்களே! அவனுடைய வாராந்த வகுப்புகள் கிராமத்தில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே! அதனால்தான் வெளியில் தெரியாமல் மறைப்புக்குள் இருந்து கேட்கிறார்கள்!
‘’மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை’’ என்ற வரிகளோடுதான் அவன் அன்று தன் மார்க்சீய வகுப்பை தொடங்கினான். இருட்டுக்குள் இருப்பவர்களும் கேட்கட்டும என்று சுற்று உரத்த குரலில்தான் பேசினான்.
வகுப்பின் அரைவாசி நேரம் கடந்த்து. காசியின் அந்தக் கவிதை வரிகளுக்கு வந்தான்.
‘’ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை
ஆள நினைப்பதில் என்ன குறை?‘’

எந்தக் காலத்திலும் எந்த்த் தேசத்திலும், எந்த இனத்தினுள்ளும் ஆளும் பரம்பரையும் ஆளப்படும் பரம்பரையும் உண்டு என்பதை மஜிம்தார் விளக்கினான். ஒரே இனத்துக்குள் ஆளும் வர்க்கத்துக்கும் ஆளப்படும் வர்க்கத்துக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை எடுத்துக் காட்டினான். ஆண்ட பரம்பரையை ஆளுவதற்கு மீண்டும் அழைப்பது அவர்களால் ஆளப்பட்ட அவர்களது இனத்தின் விவசாயிகளையும் பாட்டாளிகளையும் தொடர்ந்து அடிமையாய் வைத்திருக்க அழைப்பதுதான். வேறு வகையாகச் சொன்னால் ஒரு ஆளும் வர்க்கத்தை நீக்கி இன்னொரு ஆளும் வர்க்கத்தை மக்கள் மீது சவாரி விட அழைப்பதுதான் அது. அதுதான் இனத்தேசியம். ஆண்ட பரம்பரை என்ற கோஷம் அவர்களுக்குக் கீழ் சுரண்டப்பட்ட மக்களுக்கு ஊட்டப்படும் மயக்க மருந்து, போதை வஸ்த்து அபின் ….. ‘’
‘’நிறுத்தடா ‘’
இருட்டுக்குள் இருந்து ஆவேசம் பூண்ட ஒரு குரல் கத்தியது.
‘’நிறுத்தடா, நிறுத்தடா…’’
மேலும் பல குரல்கள்.
இருட்டுக்குள் இருந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மங்கல் ஒளி மணற்பரப்புக்கு ஓடி வந்தார்கள்.
‘’ஆர்ரா நீ காசியின் வரிகளைக் கறைப்படுத்த?’’
வெங்கலம் போன்ற அவனுடைய குரல் இலக்கண சுத்தமான உச்சரிப்பு அந்த்த் தொனியே ஒருதேர்ந்த பேச்சாளனின் தொனி.
மஜிம்தார் அந்தத் தொனிக்குரியவனைப் பார்த்தான். அவன் ஒல்லியாய், வெள்ளை வேஷ்ட்டியுடன் வெள்ளை சேட் அணிந்திருந்தான். பளிச்சென்ற அகன்ற முகம் சற்றுக்கருமை. அந்தக் கருமையில் அவனுடைய வெண்பற்கள் மிளிர்ந்தன. மினுங்கிய அந்தக் கண்களில் வன்ம்மும் ஆசேவமும் பக்கத்து உச்சி. பக்கவாடாக வாரிய சுருள்முடி.
மஜிம்தார் முழிசினான்.

‘’என்னடா முறைக்கிறாய்?’’
அந்தக் கறுத்த ஒல்லியான வெள்ளை வேட்டி வெள்ளை சேட் முண்டி அடித்துக் கொண்டு ஆக்கிரோஷமாக மஜிம்தாரை நெருங்கினான். கண்ணை மூடி முழிக்க முன் அவன் மஜிம்தாரின் சேட் கொலரைப் பற்றி இருந்தான்.
‘’பன்னீர் செல்பம் . . . பன்னீர் செல்வம் . . .’’ சசி உரத்துக்கத்திக் கொண்டு முன்னுக்கு ஓடி வந்தான்.
அவன்தான் பன்னீர்செல்வம் என்று மஜிம்தாருக்கு அப்போதுதான் தெரியும். ஒல்லியான அவனுடைய பிடியில் தான் எத்தனை உரம்! மலர்ச்சியான அந்த முகத்தில் தான் எத்தனை மின்னல். . . !

படீர் எனக் கதவு திறக்க, மஜிம்தார் சட்டெனத் திரும்பினான். உமா குளித்துச் சுற்றிய ரவலுடன். அந்த அனெக்ஸ்ட் பாத்ரூமின் கதவை அவன் மீண்டும் படீர் என்றே மூடினான். அவனுடைய சடை விரிந்த நிலையில் சாயிபாபாவை நினைவு படுத்தினான்.
‘’சசியர் இன்னும் வரல்லியா….?’’ ஈரோசுக்கு முன்னால் விஜயாள் பீற்றரின் வீடு இருக்கு. 134ம் இலக்கம் அங்கதான் வாசகர் இருக்கார். வாசகரிடந்தான் சசியர் போயிருக்கிறார். இதை நான் உங்களிடம் முதலே சொல்லி இருக்கலாம்…..’’
தன்னுடன் பேச்சுக் கொடுப்பதை உமா தவிர்க்கிறான் என்பதை மஜிம்தார் புரிந்து கொண்டான். உமா முக அலங்காரம் செய்து உடையணிந்து புறப்படுவதற்கு எல்லாம் தன்னுடைய தொடர்ந்த இருப்பு சங்கோஜம் தரவும் கூடும். எனினும் உமா நீண்ட முடியை நன்றாக உணர்த்தி, எண்ணெய் தடவி வார்ந்த கிறீம் பூசி, பெல்சுக்கு மேல் ஸ்லாக்கை அணிந்து புறப்படும் வரை காத்திருந்து உமாவுடனேயே அறையை விட்டு வெளிக்கிட்டான். மாடியில் இறங்கும்போது சிறிது பேச்சுக்கொடுத்தான். உமா சுருக்கமாகவே பதில் அளித்துக் கொண்டு வந்தான்.
‘’நீங்கள் எங்கள் மார்க்சீய ஆய்வு வட்ட கலந்துரையாடல்களுக்கு வரலாமே-‘’
‘’எனக்கு ஆர்வம் இல்லை.’’
‘’கொள்ளுப்பிட்டியில், லோட்டஸ் ஹோட்டலுக்குப் பின்னால் நோமனுடைய அறையில்தான் கூடுவோம். மகாநாடு மூன்று மாதமாய் குழப்பிப்போட்டு. இந்தச் சனிக்கிழமை கூடுகிறோம்’’
‘’தெரியும்’’
‘’நல்ல பொழுது போக்குத்தான். இந்தோ சிலோனின் சூடான தயாரிப்புகளுடன்’’
‘’நாங்கள் அந்நேரம் ஹோட்டல் பிளாசுவுக்குப் போவோம்….’’
ஹவ்லொக் வீதியில் டபிள்யு.ஏ. சில்வா மாவத்தைக்குப் போகும்
‘’மன்னிக்கவும்,,,நான் நண்பர் ஒருவரை சந்திக்கப் போக வேணும்…’’
‘’சரி’’
தப்பினேன் பிழைத்தேன் என்பது போல் உமா விரைவாக நடந்தான். விரைவான நடையில் உமாவின் பதுமைத்தனம் சற்றுக் குழம்பிப் போவது போல் இருந்த்து.
ஈரோசுக்கு எதிரே தான் நின்ற பக்கம் பார்த்தான். அதன் எதிரே ஒரு பிரம்பு வேலைத் தளபாடக் கடைதான் இருந்த்து. வீட்டிலக்கங்கள் தொடர்பற்றுப் போய் இருந்தன. 134ம் இலக்கத்தைக் காணவில்லை.
பரவாய் இல்லை. அந்த இடத்தில் நின்று கூட அவனால் உலகை ரசிக்க முடியும். கடைசியாக கொள்ளுப்பிட்டியில் நடந்த மார்க்சீய ஆய்வு வட்டக் கலந்துரையாடலும் அதைத் தொடர்ந்த காலிமுக்த் திடலின் அழுத்தமான சந்திப்பும் அவன் முன் நிழலாடின. நோமனின் விடுதி கண் முன்னே வருகிறது….
வழமைபோல நோமனின் விடுதி அறையின் இரண்டு கட்டில்களும் நிரம்பி வழிந்தன. ஒர கட்டிலின் மையத்தில் நோமனும் மற்றக்கட்டிலின் மத்தியில் சமுத்திரனும் அமர்ந்திருந்தார்கள். மற்றவர்கள் அவர்களைச் சூழவும் இருந்தார்கள். சசியும் மஜிம்தாரும் இரண்டு கதிரைகளிலும் இடம்பிடித்திருந்தார்கள்.

சமுத்திரன் ஒரு மையம். நோமன் மற்றொரு மையம் இந்த இரண்டு மையங்களிடையே மற்றவர்கள் இணைந்திருந்தார்கள். ஒரு காந்த மண்டலத்தின் இரும்புத் துகள் நிரல்கள் மஜிம்தாருக்கு நினைவுக்கு வந்த்து. சமுத்திரனும் நோமனும் ஒன்று மற்றொன்றை ஈர்க்கும் துருவங்கள். எதிர் துருவங்கள் என்பது தவறான பிரயோகம்.

அந்த வட்டக் கழுத்துச் சேட்டுதான் சமுத்திரனின் அடையாளம். இடுப்பின் கீழ் இறக்கம் இரு பக்கமும் பிளவு பட்ட வட்டக்கழுத்துச் சேட். அவனுடைய குறுந்தாடியும் அவனுடைய ஒரு அடையாளம்தான். குறுகலாய் வெட்டிய தலை முடியிடனும், பெரிய கண்களுடனும் அவன் ஒரு பெருந்தோற்றமாகத்தான் தெரிந்தான். ஆர்ப்பாட்டம் மிகுந்த அவனுடைய தோற்றத்தின் முஷ்ட்டி மடக்கி கோஷமிட்டு ஒரு செஞ்சட்டை அணிக்கு தலைமை தாங்கக் கூடிய வலு தெரிந்த்து. அதே சமயத்தில் ஒரு சிந்தனையாளனின் தீர்க்கமும் அவனிடமிருந்த்து.
சமுத்திரன் சொன்னான்.

‘’நண்பர்களே, நாம் பேச இருந்த விஷயத்தை பின் போடுவோம். நமக்கு உடனடியாக ஒரு தகவல் இருக்கிறது. சில தமிழ் தீவிர வாதக் குழுக்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் எங்களைப் பற்றிய பல தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் நாமும் அவர்களைப் பற்றி பல தவறான புரிதல்களைக் கொண்டிருக்கிறோம் போல் தெரிகிறது. உதாரணமாக அவர்களுக்கு கெனமனும் மார்க்சிஸ்ட்டுதான். சண்முகதாசனும் மார்க்சிஸ்ட்டுதான். ரோகன் விஜயவீரவும் மாக்ஸ்ஸிட்டுத்தான். எங்களைப் போன்ற மார்க்ஸ்ஸிட்டுகளும் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புதிர். நாங்கள் அவர்களிடமிருந்தும் அவர்கள் எங்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது போல் தோன்றுகிறது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நாம் அவர்களுடன் இன்றிரவு 9.00 மணிக்கு காலிமுகத் திடலில் ஒரு கலந்துரையாடலை ஆரம்பிக்கலாம்….’’

சமுத்திரன் பேசியது மஜிம்தாருக்கு கண்ணுக்குள் கரிசல் விழுந்த்து போல் இருந்த்து. அவனுடைய அதே உணர்வுடன் நோமன் சொல்லிக் கேட்டது,
அது சரி வரும் என்று நான் நினைக்கவில்லை’’
ஏன்?’’
தமிழ் தேசியவாதிகளிடமிருந்து நாம் பெற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை. எம்முடைய போராட்டத்தில் குறுகிய இனத் தேசியவாத்த்தைக் கலந்து கொள்வதற்கோ, அவர்களுடைய போராட்டத்தில் பூர்ஷூவாக்களுக்கு எதிராக பாட்டாளிகளையும், விவசாயிகளையும் வர்க்க அடிப்படையில் ஒரு சக்தியாக இணைத்துக் கொள்வதற்கோ சாத்தியமும் இல்லை.’’
மஜிம்தாருக்கு சசியின் கிராமத்தில் ஏற்பட்ட அனுபவம், நோமன் பேசும் போது நினைவுக்கு வந்தது. பன்னீர்செல்வத்தின் உருவத்தை மனதில் படமாக்கிக் கொண்டான். அவனும் சமுத்திரனுக்கு தன் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொண்டான். சமுத்திரன் சொன்னான்.
‘’சரி, அவை பற்றியும் நாம் விவாதிக்கலாந்தானே?’’
‘’விவாதித்து என்ன பயன்?’’
‘’எல்லாவற்றையும் நம் விளங்கிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை. நோமன் இதைக் கேளும். மார்க்சீயம் பின்னாளில் லெனினிசமாக வளர்ச்சி கண்டது. லெனினிசம் பின்னாளில் மாவோயிசமாக வளர்ச்சி கண்டது. சரியாகச் சொன்னால், ஒவ்வொரு நாட்டிலும் மாக்சீயம் பரீட்சிக்கப்பட்டது. பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களும் ஒரு பரிசோதனையை முன் வைக்கிறார்கள். நாம் சற்றுக் காது கொடுத்தால் என்ன?’’
‘’சரி நீங்கள் காது கொடுங்கள் என்னை மன்னியுங்கள்….’’
‘’என்னை மட்டும் அனுப்பாதீர்கள். என்னுடன் ஒரு குழுவை அனுப்புங்கள்’’
சசி உடனே சம்மதித்தான். பாரூக்கும் முன்வந்தான். என்ன பேசுகிறார்கள் என்று அறிகிற ஆர்வம் மஜிம்தாருக்கும் ஏற்பட்டது.
‘’ஒரு பார்வையாளனாக நானும் வருகிறேன்’’.
நேரம் 8.30 ஆகி இருந்த்து இந்தோ சிலோனுக்கு போய் விட்டுப் பிரிந்தார்கள். காலி முகத்திடலை நோக்கி சமுத்திரனும் சசியும் பாரூக்கும் மஜிம்தாரும் நடந்தார்கள் ………
ஈரோஸ் தியேட்டருக்கு முன்னால் 134ம் இலக்க வீட்டை மஜிம்தாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. உமா பிழையான இலக்கத்தைக் கொடுத்திருப்பானா?
எவ்வாறெனினும், அந்த வீட்டைக் கண்டபிடிப்பதற்காக மஜிம்தார் சிரமப்பட விரும்பவில்லை. ஈரோசுக்கு முன்னால் நின்று புதினம் பார்த்தாலே அவனுக்குப் போதும் போல் இருந்த்து. உள்ளே ஒரு மெட்னி ஓடிக்கொண்டிருந்த்து. பேராசிரியர் எதிர்பார்த்து இருப்பார்தான். எனினும், அவன் வெறுங்கையுடன் போவதில் என்ன இருக்கிறது?’ இன்னும் கொஞ்ச நேரம் பார்த்து விட்டு ஒரு ரெலிஃபோன் எடுத்துச் சொல்லி விடலாம்.
சட்டென்று ஒரு மின்னலில் சசி தெரிந்தான். என்ன ஆச்சரியம். அந்தப் பிரம்புத் தளபாட கடைக்குப் பின்னாலிருந்துதான் அவன் வந்து கொண்டிருந்தான்,
‘’ சசி….. சசி….. சசி…..’’
சசி திரும்பிப் பார்த்தான்.
‘’ஓ! தோழர் மஜிம்தார்!’’
பிரம்புத்தளபாட கடைக்கு முன்னாலிருந்த சைக்கிளைத் திறந்து தள்ளிக் கொண்டு சசி வந்தான். மஜிம்தார் தன் சைக்கிளோடு அவனை எதிர் கொண்டான்.
‘’உன்னை எவ்வளவு தேடிக் கொண்டிருந்தேன். 134ம் இலக்க வீடு என்று உமா சொன்னானே?’’
‘’நான் வந்த்துதான் 134ம் இலக்க வீடு. அந்தப் பிரம்புத் தளபாடக் கடை முகப்பை மறைக்கிறது…’’
சசி வழமைபோல் எதற்கும் எப்போதும் தயார் என்ற நிலையிலேயே இருந்தான். சற்றுக் கறுப்பு, எனினும் பிரகாசமான முகம். உதடுகள் கவர்ச்சியான சிவப்பு பரந்த முகம். சடை முடி வாட்டசாட்டமான உடல். பெல்ஸ்ஸின் மேல் புள்ளி போட்ட சேட் சொன்னதும் உடனே புறப்பட்டான்.

பாமன் கடைச்சந்தியை நெருங்கிய போது தான் எதையோ இழந்து விட்ட தவிப்பு மஜிம்தாருக்கு தோன்றியது. சிறிது மனதைக் குடைந்தான். மனதுக்குள்ளாலேயே அது தலைப்பிறைபோல உருக்காட்டியது. ஆமாம் அவனுடைய அந்தப் பகற்கனவு, அந்த இரை மீட்டல் . . . . கொள்ளுப்பிட்டியில் மார்க்சீய ஆய்வு வட்டக் கலந்துரையாடலில் சமுத்திரன் சொன்னவை, இந்தோ சிலோனுக்கு போனது…. ஆ…..ஆ…. மின்குமிழின் சரம் கோர்த்த காலி வீதியில் மெல்லிய காற்றின் வருடலுடன் அவர்கள் கரம் கோர்த்துச் சென்றது…. அந்த இரவு ….
காலிமுகத்திடல் களை கட்டித்தான் இருந்த்து. காலி வீதி மேர்க்குரி விளக்குகளுடன் கடலோரப் பாதையின் விளக்குகளும் எரிந்தன. இரண்டு நிரை விளக்குகள் இருந்தும் திடலின் நடுவில் கலங்கலாகத்தான் இருந்த்து. அந்தக் கலங்கலில்தான் அவர்கள் அந்தத் தீவிரவாதிகளுடன் கை குலுக்கினார்கள். கை குலுக்கும் போது மஜிம்தாருக்கு துக்கிவாரிப் போட்டது. நினைவின் கலங்களுக்குள் நீந்துபவனாக திடலின் கலங்களுக்குள் பன்னீர் செல்வமும் தெரிந்தது போல் இருந்த்து.

‘’நீங்கள் பன்னீர் செல்வம் அல்லவா?’’
‘’நீங்கள் என்னை மறக்க வில்லை.’’
மஜிம்தாருக்கு முள் குத்தியது போலிருந்த்து. அதே கணீர் என்ற குரல். இப்போது ட்ரௌசரும் பற்றிக்ஸ் சேட்டும் அணிந்திருந்தாலும் அந்த அகலமான முகமும் தலை முடியும் அப்படியே இருந்த்து. ஆனால், தீவிரவாதிகளுள் ஒரு தீவிரவாதியாய் அவன் முன்பை விடவும் உரமேற்றியவனாய் அந்த மங்கலுக்குள் தெரிந்தான்.

மங்கலுக்குள் மங்கலாகத்தான் அவர்களுடைய பேச்சுக்கள் நிகழ்ந்தன. எனினும், வெளிச்சம் அவர்களுடைய பேச்சில் மிகைத்திருந்த்து. சமுத்திரன் சொன்னது சரிதான். ஒவ்வொரு சோஷிலிசப் புரட்சியின் வரலாறும் மிகவும் அத்துப்படியாய் இருந்த்து அவர்களுக்கு. காட்டிக் கொடுப்புகளைக் கரிக்கோடு இட்டுக்காட்டினார்கள். ஏகாதி பத்தியங்களின் துரோகத்தனங்கள் அவர்களின் விரல் இடுக்குகளில் இருந்தன. சனநாயகப் புரட்சி இன்றி சோஷலிசப் புரட்சிக்கு தாவுதல் சாத்தியமில்லை என்றனர். நாட்டுக் நாடு புரட்சியின் நடைமுறைகள் வேறுபட்டிருப்பதை விளக்கினார்கள். நவமார்க்சீயத்தின் தோற்றங்களையும் தொட்டார்கள். அவர்கள் அறிந்த அளவுக்கு நாம் அறியவில்லையே என்ற ஆதங்கம் மஜிம்தாருக்குள் அலை மோதியது. முடிவில் பன்னீர்செல்வம் முகத்தில் அடித்த்து போல் விட்டெறிந்த சவால்தான் அவனை இன்னும மோசமாகக் குத்தியது.
‘’நீங்கள் இலங்கையின் அனைத்து இனங்களிலுமுள்ள பாட்டாளி – விவசாய வர்க்கங்களையும் ஒன்றிணைத்து புரட்சி நடத்தி அதன் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கு முதல் நாங்கள் தமிழீழம் கண்டு அதன் மூலம் சமதர்ம சமூகத்தை உருவாக்கி விடுவோம்’’
அவர்கள் பிரிவதற்கு முன்பு இந்தோ சிலோன் கபேய்க்கு வந்தார்கள். அங்கிருந்து பிரியும் போது பன்னீர் செல்வம் திடீரெனக் கேட்டான்.

‘’சசியண்ணே, இரவுத் தங்கலுக்கு நான் உங்க ரூமுக்கு வரட்டுமா?’’
வா, வா, ரெண்டு கட்டில்தான் கிடக்கு. மூன்று பேரும் சமாளிப்போம்’’
‘’அந்த நினைவுக்கீற்றுடன் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த மஜிம்தார் தன்னை மறந்து கத்தினான்.
‘’ஹாய் எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்!’’
சைக்கிளில் போகும் சசியைப் பார்த்தான். சசி வெள்ளவத்தை 37ம் குறுக்குத் தெருவில் முடங்கிக் கொண்டிருந்தான். மஜிம்தார் ஊன்றி மிதித்தான்.

மஜிம்தாரின் விலாங்குக் கால்களுக்கு சைக்கிள் போதவில்லை. குழந்தைச் சைக்கிளை மிதிப்பது போலவே பெடலைச் சுற்றினான். அவன் இறுதியாக பேராசிரியரின் வீட்டை அடைந்தபோது சசி மர்மயோகி அரசவையில் கரிகாலன் பாணியில் மண்டபத்தில் நின்றும் திரும்பியும் நடந்தும் பேசிக் கொண்டிருந்தான்.
. . . . நீங்கள்தான். நீங்கள் ஒவ்வொருவருந்தான், அந்தக் கவிதையை எழுதும் படி என்னைத் தூண்டினீர்கள். வடக்குக் கிழக்கில் உள்ளவர்கள் தங்கள் சனநாயக உரிமைகளைக் கேட்டால் அது வகுப்பு வாதம். தெற்கில் உள்ள இனத் துவேஷத்துக்கு பெயர் தேசியம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இந்த தீக்கோழித்தனந்தான் – இந்த ஒற்றைக்கண் நெல்சனின் பார்வைதான் என்னை அந்தக் கவிதை எழுத்த் துண்டியது…’’
‘’இல்லை, எனக்குத் தெரியும். உன்னை யார் அந்தக் கவிதையை எழுத்த் துண்டியதென்று. எல்லாம் அந்த பன்னீர்செல்வத்தின் தொடர்பு….’’
‘’அட, சவமே, பன்னீர்ச்செல்வம் செத்து இப்போது மூன்று மாதம். இவர்கள் தேசிய ஒருமைப்பாட்டு மகாநாடு பற்றி சிந்திக்க முதலே…. வவுனியாவில் மருதங்குள துப்பாக்கிச் சமரில்….’’
மஜிம்தார் விறைத்து போய் நின்றான்.

Published on December 9, 2012
This entry was posted in சிறு கதை, படைப்புகள் and tagged 2001, முன்றாவது மனிதன் by sivalingam. Bookmark the permalink.