அறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி/

https://brammarajan.wordpress.com/2008/12/21/அறிந்த-நிரந்தரம்-பிரம்ம/
அறிந்த நிரந்தரம் -பிரம்மராஜன் முதல் கவிதைத் தொகுதி/Brammarajan’s First Collection of Poems

December 21, 2008Poems in Original TamilPoems in Original Tamil, Poems in Tamil





அறிந்த நிரந்தரம்

(1980)

பழைய மிருகத்துடன் ஒரு புதிய மனிதன் சில குறிப்புகள்

சொல்லில் கிடைத்த சங்கிலியைக்

கழுத்தில் கட்டி

இழுத்துக்கொண்டலைந்தேன் அம்மிருகத்தை.

கிளைகளுடன் உரையாடித் திரும்பிய

மனநிலைகளில் விநோதப் பறவைகள் பற்றி

வண்ண வண்ணமாய்க் கதைகள் சொல்லிற்று

கேட்டவர் உறங்க.

கண்களில் நெருப்பு ஜொலித்தாலும்

பிடறியைத் தூண்டி நானை வளர்த்த பெண்களிடம்

நன்றி என்றது

குளிர் காற்றைப் பார்வையில் கொணர்ந்து.

கோடுகளைத் தாண்டிக்

காடுகளில் அலைந்து

சிறகு போல் இலகுவாய்

மாடிமேலிருந்து பறந்திறங்கிப்

பஸ் பிடிக்கக் கூச்சலிட்டுப் பிறாண்டிய மனிதர்களைக்

கேலிசெய்தது.

அலைதலில் அளவற்றுத்

தளர்வுற்றுத் தகர்ந்தபோது

சோடா உடைத்து நுரை நீரில் முகம் கழுவி

டாக்ஸி பிடித்து

வீடு சேர்ப்பித்தேன்.

தொல்லை போதும் காட்சி சாலையில் விடு என்றவர்க்குச்

சொன்னேன்

காட்சியே மறையும் விரைந்து

சாட்சியாய் ஒரு சொல் மட்டும்

நானென்று நிற்கும்.





இறப்புக்கு முன் சில படிமங்கள்

ஜன்னலில் அடைத்த வானம்.

குறுக்கிடும் பூச்செடிகளுடன்

சுப்ரபாதம் இல்லையென்றாலும்கூட

மங்களமான பனிப்புகையில்

விடியல்.

நரைத்து உடைந்த இரவின் சிதறல்கள்

நேரம் உண்டாகவே வந்துவிட்ட

தோட்டியின் கால்கள் முன்.

மண் தின்று எஞ்சிய

எலும்பின் கரைகளில் சிற்பத்தின் வாசனை

காற்றைத் தவிர

அவனுக்கு மட்டும்.

பியானேவென இசைத்து ஒலித்து

உறங்காமல் திரிந்த

மணிக்கூண்டு உணர்விழந்துவிட்டது

உறையும் குளிரில்.

பறந்த பறவைகள் வானில் கீறிய ஓவியம்

பார்த்ததில்

பந்தயம் இழந்தது நேற்று.

விரலிடுக்கில் வழிந்த காலத்தின்

துளிகளை

மற்றெரு கையில் ஏந்த

கணங்களை முழுவதும் எரித்தாகி விட்டது.

அவன் இறந்துவிட்டான்.

இன்றெதற்கு இரண்டாம் மாடியில்

அழகான அறை ?

அங்கு

பூக்கள் நிஜமாய் மலராது.





எதிர்கொள்ளல்

அரங்கத்தில் அடிக்கடி இருள்.

எங்கோ ஒரு நாள்

நரம்புகளின் லயத்துடன் இழைகிறது

வானவில்.

காதுகள் அற்றவர் அசைவில்

கழுதைகளை

மனதில் நிறுத்திவிட்டு மறைகின்றனர்.

அன்னையின் கைகள்

சிரசில் ஊர்வதை மீண்டும் எக்கிக் கேட்பதுபோல்

வீணையின் விரலில்

தரிசனம் தேடி வருகையில்

காலில் சகதி.

குவித்த விரல்களின் குவளையில்

கங்கை நீர்.

தகரத்தின் பிய்ந்த குரல்கள்

கழுவாத முகங்கள் போன்ற கட்டிடங்களின்

வாயில் நாறும் .

ஆயினும் மீட்டலொன்று போதும்.

குருதி கசியும்

மனதின் சுவர்களில்

தளிர்கள்

உதயமாகும்.

இப்பொழுது

கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில்

புதியதொரு ஜனனம்.

காற்றைப் போல் மென்மை

அச்சிசுவின் காலெட்டில்.

நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு

நிறம் தரும்.

சுவை மாற

அலைகளும் உறங்காது.

உடனே புதிய ஊற்றுகளின்

கதவைத் தட்டு.

சற்றுமுன் சிறு விரல்களில் தந்த

மலர்

இப்பொழுது வாடும்.

மாற்று புதியதொன்றை மணத்துடன்.

நாளைக்கென்று நீளாத

தெருக்களில் நடக்கவிடு.

பார்வை விரியப் பாதை வளரட்டும்.

முன்பே ஒன்றிருந்தால்

உடைத்த கைகள், உளி

கல் துகள், கண்ணீர்,

இடது முலையில் இதழ்கள்,

சக்கரம், நெரிசல், மரங்கள்,

கார்கள், கார்பன் மோனாக்சைட்,

விடியலில் பறவைகளின் குரல்,

எல்லாமே

பளிச்சென்று ஜ்வலிக்க

கண் முன்

எப்பொழுதும் தா.





கூப்பிட்ட குரல்

மாலைக்கு மேல் வேளை கெட்டு வந்தால்

விபரீதம் தோற்றுவிக்கும்

பனங்காடுகள் தாண்டிப்

பண்ணை பூத்த விதவை நிலங்களுக்கும்

அப்பால்

கீற்று நிலா வெற்றுத்தனமாய்க் காயும்

மயிரற்ற ஆண் மார்புகளாய்க் கிடக்கும்

குன்றுகள் தாண்டித்

தனித்துப் போய்த் தனக்குத் தானே

சலசலக்கும் ஒற்றை அரசமரத்திற்கும்

அப்பால்

முகமற்ற குரலொன்று

அழைத்தது.

பாதைத் திருப்பமொன்றின் பாதியிருளில்

வீற்றிருந்தது

மனிதக் கைகளே கிளைகளாய்

வாவெனப் பரிவுடன் வீசிய

கனவின் மரம்

அப்பால்

அங்கிருக்கும்.

பாதுகை தேய்ந்தறுந்தும்

கட்டிய மணிப்பொறி விட்டெறிந்தும்

கலையாமல் தொடர்கிறது பயணம்

குரல் தேடி.

ஒரு யுகம் வேண்டும் முகம் தேட.





அறிந்த நிரந்தரம்

ரேடியம் முட்களெனச் சுடர்விடுகிறது விழிப்பு.

இரவெனும் கருப்புச் சூரியன்

வழிக் குகையில் எங்கோ சிக்கித் தவிக்கிறது.

நெட்டித் தள்ளியும் நகராத காலம்

எண்ணற்ற நத்தைகளாய்க் கூரையில் வழிகிறது.

அரைத் தூக்கத்தில் விழித்த காகம்

உறங்கும் குழந்தையின் ரோஜாப் பாதங்களைக்

கேட்காமல் மறதியில் கரைகிறது.

இதோ வந்தது முடிவென்ற

சாமச் சேவலின் கூவல்

ஒலிக்கிறது ஒரு ஸிம்பனியாக.

இரண்டாம் தஞ்சம்

பொய் முகம் உலர்ந்தன ஏரிகள்.

நாதியற்றுப்போன நாரைகள்

கால்நடைகளின் காலசைப்பில்

கண் வைத்துக் காத்திருக்கும்.

எப்பொழுது பறக்கும் வெட்டுக்கிளிகள்?

தன் புதிய அறைச்சுவர்களுடன் கோபித்த

மனிதன் ஒருவன்

ஒட்டடை படிந்த தலையுடன்

வாசல் திறந்து வருகிறான்

கோதும் விரல்களிடம்.

காயும் நிலவிலும் கிராமக் குடிசை

இருள் மூலைகள் வைத்திருக்கும்

மறக்காமல்

மின்மினிக்கு.

வாழும் பிரமைகள்

காலம் அழிந்து

கிடந்த நிலையில்

கடல் வந்து போயிருக்கிறது.

கொடிக்கம்பியும் அலமாரியும்

அம்மணமாய்ப் பார்த்து நிற்க

வாசலில் மட்டும் பாதம் தட்டி உதறிய மணல்.

நினைவின் சுவடாய் உதட்டில் படிந்த கரிப்பும்

காற்றில் கரைந்துவிட

வந்ததோ எனச் சந்தேகம் கவியும்.

பெண்ணுடல் பட்டுக் கசங்கிய ஆடைகள்

மறந்த மனதின்

இருண்ட மூலைகளினின்று

வெளிப்பட்டு

உடல் தேடி அலைவதால்

எங்கும் துணியின் சரசரப்பு.

அன்று பக்கவாட்டில் நடந்து வந்த மஞ்சள் நிலா

தசைகளின் சுடரை

நகல் எடுக்க முயன்று

கோட்டுக் கோலங்களைச் செதுக்கியது.

இறந்த நாள்களின்

குளிர் நீளக் கைகள்

நீண்டு வந்து

மறதியைக் கொண்டு தூர்த்துவிட

கற்பனைக்கும் சொந்தமில்லை

கோலங்கள்.





இளம் இரவில் இறந்தவர்கள்

இளம் இரவில் இறந்தவர்கள்

பிண வாடை மிதி வண்டியில் தொற்றி வந்து

அறைச் சுவர்களில் ஒட்டடையாய்த் தொங்கும்.

அடுத்த நாள்

நாசித் துவாரங்களில்

சாம்பல் நிறத்தில் காளான்கள் பூக்கும்.

அடிக்கடி கொடி மின்னல்கள்

வலியெனப் படர்வதால்

இதயச் சுவர்கள் காரை உதிர்க்கும்.

இரவறுத்தும் ஓயாத சிள் வண்டுகள்

இலையுதிரும் காலைகளில்

குயில்களின் பாட்டில் குரல் நீட்டிக் குறுக்கிடும்.

கானக மரங்கள் மூளைச் சாலைகளில்

படை எடுக்கும்.

லாரி என்ஜின்களின் நடை துவள

ஒரு ஸிம்பனியின் உச்சம் முற்றுப் பெறும்.

இறந்த இலைகள்

நடைக்கு அடியில் கிசுகிசுக்கும்.

சாணைக்கல் நெருப்புக் கம்பிகள் தெறித்து விழக்

காடு கருகி

உடல் நாற்றம் வீசும்.

நூலறுந்த பட்டமொன்று

யோனியில் நீந்தும் விந்தின் நினைவோடு

பூத்து நிற்கும் முருங்கையில் வால் துடிக்கும்.

நாளைக்கும் காற்று வரும்.





நிலைப்பாடு

பசிகொண்டு நிதம் செல்லும் பாதங்கள்

தொலைவற்ற தூரம் கேட்கும்.

சாலை மரங்கள் சற்றே

உரங்கிப்போவென்று சொல்லும்

தாம் தந்த நிழலுக்காய்.

கால்களில் தீப்பொறி குதிரைகளின் கனைப்பை

நினைவுக்குள் புகை மூட்டும்.

நிழல் தின்று ஆறாது பசியெனினும்

ஒரு கிளை பிடித்து

குடையெனப் பாவனைசெய்ய

தொடரும் பயணம்.

நினைவுக்கென வெட்டிக் கொடுத்து

பின் காயங்களில் சாசுவதம் கண்டு

வரும் நாள்கள் கழியும்.

வேர்கொள்ளாக் கால்கள்

பகற் கானலில் சாம்பலாகும்

கட்டிடங்களுக்கு அப்பால்

நீலத் தொடுவானம் தேடிச் செல்ல

வழி மரங்கள் தாம் பெற்ற

ராகங்களின் நிரந்தரமாறியாது

உடல் சிலிர்த்துப் பாதையை

நிறைக்கும்

கந்தல் நிழல் கொண்டு.





சுடர் அரங்கும்நத்தை ஓடுகளும்

அடுத்த மழைக்குக் காத்திராமல்

ஓடைக்கரையில் ஒதுங்கிய

நத்தை ஓடுகளுக்குத் தெரியாது.

விண்ணில் ஏகிய குதிரை வீரர்கள்

விட்டுச் சென்ற

பட்டாக் கத்திகள் குல்மொஹர் மரங்களில் தொங்கக்

கோடை நெருப்பில்

சிவப்புக் கலவரத்தில்

திக்கெங்கும் முன்னங்கால்களில் தாவும்

வேட்டை நாய்கள்

தலை உதறிச் சிலிர்த்த பனித்துளிகள்

துருவங்களில் விழுந்து

பூமியைச் சிறைபிடிக்க

நெஞ்சில் சுடருடன்

நடனம் காட்டுகின்றன

இவ்வறையின் தேய்த்த கண்ணாடிகள் மட்டும்.

இரவை உதறிய பறவையின் சிறு குரல்

சூரியனின் சாய்ந்த ஒளிக்கற்றையில் சரிய

சுவரில் சாய்ந்த மிருதங்கம் உருகி

உறை கழலுகிறது.

உறைந்த புல்லாங்குழலும்

கூடடைந்த பறவைச் சிறகில் ஆர்கனும்

முன் விழித்து

சமன் செய்துகொள்வதால்

எடுத்த அடியிலும்

பிடித்த முத்திரையிலும்

நடனம் தொடர்கிறது.





இல்லாமல் இருந்தது ஒன்றுதான்

இல்லாமல் இருந்தது ஒன்றுதான்.

மகிழ்ச்சியான கடல் அது.

தவிர

பறவைக் குரல்களாலும் உடைபடாமல்

தடுப்பவர்களற்றுக்

காலடியில் சுழன்று கொண்டிருந்தது

ஓர் ஆரஞ்சுப் பழமென அச்சாம்ராஜ்யம்.

புலர் பொழுதுகளில்

வெண்மையாய் விழித்தது

மலர்ந்த குளங்களில்.

வெறுக்காமல் மறுத்துப் புறப்பட்டபோது

சகுனம் பாராதிருந்தும்

மழை மரங்களின் மாலைச் சிந்தனையாகப்

பின்னிய கிளைகளில் சிக்கி நின்றது

மௌனமாய் மஞ்சள் சூரியன்.

வந்த நிலத்தில் அன்று

மழையில் நனைந்தது தொடக்கம்.

தேவையென்று கொண்டுவந்த நாள்களின்

எச்சம்

பாக்கெட்டில் நிறைந்த

வார்த்தைகள் மேல் பூத்தது.

மத்தாப்புக் கம்பிகளும் நனைந்திருந்தன.

மின்கம்பிகளின் தொய்வில்

இன்று உறக்கமின்மை ஊஞ்சல் பயில

நரம்பின் முடிச்சுகளில் கண்கூசும் வெளிச்சம்.

மீட்சிக்கு முயற்சியற்றுப் போயினும்

தாறுமாறாய்க் கிடக்கும் வார்த்தைகளை

உலுக்கிஎழுப்ப வேண்டும்.





கூண்டுகள்

புதிய இலக்குகளை மனதில் வைத்து

எம்பிப் பறந்ததில்

சிக்கிக்கொண்டது என் சிறகின் ஒரு மூலை

முழுமையடையாத

விடுதலையின் கம்பிகளில்.

அறுத்துக்கொண்டு அரைச் சொர்க்கத்திலிருந்து

படபடக்க யத்தனிக்கையில்

உன் நினைவு

ஒற்றை இறகாய்

பாரம் அறியாமல் இறங்கியது.

உன் விடுதலைக்காய் நான் இறைத்த வார்த்தைகள்

பாதை பாவாமல்

சிதறி வழியடைத்தன.

நாலெட்டில் உனது இலக்கு என

நான் நினைத்தபோதிலும்

இடைவெளியில் புகுந்து புறப்பட்டது

உன் பயணம்.

கால்களின் அளப்புக்கு மிஞ்சிய

என் பாதையில்

நானே பதிக்கவில்லை ஒரு பாதமும்.





தனிமொழி-1

நேற்றுப் பாலையாய் விரிந்திருந்து

இன்று குறுகிப்போன

நாள்களில்

நீ எண்ணியிருக்க முடியாது

நான் உன் வழித்துணையாய்

வருவேனென்று.

உன் ஸ்நேகத்துக்கு முன்

புற்றென வளர்ந்திருந்தது

நடுமனதில்

தனிமை.

விழிகள் அழுந்த மூடிக்

காதுகள் வைகறைக் காக்கைகளுக்காகக்

காத்திருந்த இரவுகளில்

தேய்ந்து மறையும்

புகை வண்டியொலியில் கலந்தன

உன் நினைவுகள்.

இருந்தும்

விழிக்கும் இரவின் நீளத்தைக் குறைக்கும்

புத்தகங்களைப் போல

இதமிருந்தது அவற்றில்.

விழித்தெழுந்து அழுதது குழந்தை

தான் மறந்த முலைகளுக்காய் வேண்டி.

இன்றென்

ஈரம் படர்ந்த விழிகளில்

நீ கலைந்த வெளிச்சம்.





தனிமொழி-2

நீரில் மூழ்கிய கடிகாரங்களென

சப்தமற்றுப் போயிருந்த காலம்

நான்

உன்னிலிருந்து பிரிந்தவுடன்

கடல் காக்கைகளாய்ச்

சிறகு விரித்துப் பறந்து

ஒலிகளாய்

வெடித்துச் சிதறித்

தன் நீட்சியை நினைவுறுத்தும்.

காது மடலைத் தடவியபடி

நான் இனிச்

சிவப்பு நிற டீயின் கசப்பில்

உன்னை மறக்க முயல்வேன்.

நீயும்

காற்றை வெட்டிச் சாய்த்துச்

சுழலும் மின் விசிறியில்

கவனம் கொடுத்துப்

பேனா பிடித்தெழுதி

பஸ் ஏறி

வீடு செல்வாய்.

எனினும் இருளுக்கு முன்

நீ போய்ச் சேர வேண்டுமென்று

என் மனம் வேண்டும்.

தனிமொழி-3

உன்னுடன் கழித்த

சாதாரண நிமிடங்கள்கூட

முட்கள் முளைத்த வண்ணக் கற்களென

நினைவின் சதையைக் கிழிக்கின்றன.

மெல்லிய ஸ்வாசங்கள்

புயலின் நினைவுடன்

இரைச்சலிடுகின்றன.

உன் கையில் பூட்டிய

என் விரல்களை அறுத்து

விடுதலை பெற்றும்

மனதில் சொட்டிய குருதித் துளிகள்

வளர்க்கின்றன

முள் மரங்களை.

சரிவுகள்

சார்பற்ற வெறுமையின் சாத்தியம்

எனக்குச் சாதகம் ஆக

வெறுப்பதற்கில்லை எனினும்

உன்னை விலக்க

என்னுள் யத்தனிப்பு.

உணர்வுக்கயிறுகளை அசைக்கத் தெரியாது

பட்டங்களை அறுத்துக்

காட்சிகளை அழித்து

நெற்றி

நிலம் தொட மன்னிப்பை யாசித்தவன்

குழந்தை போல்

சாலையைத் தாண்டும் உன்னிடம்

பேசுவது தத்துவம்.

அடைந்ததைக் கடப்பது

கடந்த பின் அப்பால் என்னவென்பது

எல்லாம் சப்தமாய்ப் புழுதியை இறைத்துக்

கரை உடைக்கும் குளங்களை

உன் கண்ணில் தோற்றுவிக்க

என் நிழல் சிதைகிறது.

உருவம் இழந்து அந்நியனாய் நான் நடக்கிறேன்.

26 மே 1979

கந்தலில் முடிந்து தந்தாலும்

கனவுகளை முடிவற்றதென்று உணராமல்

மடியில் குழந்தையெனக் கிடக்கும்

ஒரு பாட்டில் ஹார்லிக்ஸ்

உடன் வாங்கி வைத்துக்கொண்டேன்.

பஸ்ஸின் தகர முதுகைப் பிய்த்தன பனிக்கற்கள்

முதுகில் நனைந்தும்

கண்களில் தூசி நிரம்பியும்

நோய் நடப்பதற்கில்லாமல் செய்திருந்தும்

தேவதைகள் என்னிடம் வந்ததால்

உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஊர் அடைந்ததும்

பஸ்ஸை விட்டிறங்கும் உன் கால்களிடம்

சொல்லும்

மழையில் ஊறிய மண்.

பரிசு முடிவற்றது

என்று வரும் அந்த இன்று

என்ற நினைவு பதியுமுன்

வைத்துக்கொள்

என ஒட்டி ஏந்திய கைக்குழியில்

வார்த்தாய் புது நாள்களை.

அத்துடன் அறியாப் பரிசும்

கண்திறவாக் குட்டிகளாய்

வீட்டுக் கொட்டிலில் கிடந்தது.

அரும்புகள் தொடுத்த

உயிர்த்த விரல்கள்

சற்றே விறைத்தன

செவியில் படபடத்த சிறகொலியில்.

மாற்றுவதென்பதே முடியாமல் மலைக்க

உயிர் கரைத்து உண்டு வாழ்கிறது

கபாலத்தில் மின்னல் புழு.

நிழல் விளையாட்டு

கனவிலும் சாதுவாய்

வருகிற

கோழையைப் போல்

வளர்ந்துவிட்ட இந்நிழல் விளையாட்டிலும்

உனக்குக் கண்ணாமூச்சி.

நான் நான் இல்லையென்று

நீ மட்டும் நீதான் என்றும்

கற்பனை அரண்கட்டி

என்னைக் கை விரல்களுக்கப்பால் மறைத்து

என்னில் ஒரு பூனைக்குட்டியைப் பிரித்தெடுத்து

உனக்கு விளையாட்டு.

பால் எனக்கு என்றும் போல்.

கால்களும் பஞ்சல்லவென்பதால்

குவளைகள் உடைவதில்லை.

உன் சிதறல்களில் விழும் ஆச்சர்யம்

வளையல் துண்டுகளில் உருவிழக்கும்.

மனக்கூட்டில் வந்தடையும் சோகம்.

வளர்ந்த பின்னும்

மழலையே பேச்சென்றால்

நிறைய உண்டு

மரப்பாச்சிகள்

உனக்கு.





இவ்விதமாகவும்

மையத்தில் குறுக்கும் நெடுக்குமாய்க்

கொடிபடரும் வலிகளுக்கு

பதில் தர இன்றிரவு

உறக்கத்துடன் உறவில்லை.

மூக்கில் காற்றின் முடிச்சுகள்

சிக்கலாகிக்

கனவுக்குள் கனவும்

நாற்றங்காலில் மலைத்தோட்ட மலர்விதைகளும்

ஈரம் வறண்டு

கரும்புகைக்குக் கருவாகலாம்.

நீளும் சாலைகளும்

மாறும் முகங்களும்

பனிப்புகையில் பார்வையிழந்து

இடத்துக்கு இடம் தாவும் ஒற்றைக் காக்கையும்

அவசரமாய்ப் பார்வை அழியலாம்.

வர்ணம் கரைந்த நிமிஷங்களில்

செப்பியா நிற ஆல்பம் ஒன்றில்

விரல் சுட்டி முகம் காட்டிப்

புத்தகங்கள் விட்டுச் சென்றவன் தனக்கு

என்றொரு பெண் சொல்லலாம்.





வழியில் நிகழ்ந்த இழப்பு

கற்கள் வழிவிடுமா எனக் காத்திருந்து

அடையாத ஊற்றுக்கண் தேடி

அலைந்த வேளையில்

விரித்த வறிய விரல்களாய்

இலை களைந்து மரம் விண்ணை நோக்கி வேண்டிற்று.

மௌன ஓட்டுக் குகையிலிருந்து

தவழ்ந்ததும்

வாரியணைக்கும் உன்னையும்

வரும் வழியில் மறதியாய் விட்டுவந்த

உறக்கத்துடன்

சாம்பல் இரவொன்றில் இழந்துவிட்டேன்

அழியாதே

என்ற அன்புச் சொல் நிக்கொட்டின் மணக்கும்

உதடுகளின் அருகாமையில் கேட்காது.

வயலின்கள் பாடிய

நாட்கள் போய்

இனி கதவின் குரல்கள்

எண்ணெய்க்கு அழும்.

இரவின் பரிமாணங்களை அளந்து

காற்றிடம் பேசிக்கொண்டிருந்தாலும்

கீர்த்தனைகள் சமர்ப்பிக்க

மனித

ஜீவன் இருக்காது.

தெரு முனைகளும் தருணமும்

அன்று நான் சோகமாய்த் திரும்பியதாய்

மனிதர்கள் சொன்னார்கள்

நினைவு நிலைகளில்

குளிர் நீர்ப்பரப்பு நிறைந்ததை அறியாமல்.

தவசியை ஒத்த ஒளி நிமிடம்

ஒரு துளி விழுந்து

மனம்

வர்ணங்களற்ற நீள்வெளியாகும். தருணமிதில்

காற்றில் லேசான தக்கையாகும்

உடலும்.

கனவில் சிறகின்றிப் பறக்கும்

நிழல் “நான்”கள்

ஒன்றில் ஒன்றிணைந்து

சமதளத்தில் அலையாய்ப் பரவும்

இசையில் சங்கமம்.

சிரிக்கும் முலைகள்,

சிற்பம்,

நீ,

மழையில் மணக்கும் உன் அணைப்பு

சூரியன் மறையும் தெரு முனைகள்

தெருவிளக்குகளின் இடையிருளில் நட்ஷத்ரங்கள்

தொண்டை நனைய ஒரு வாய் நீர்

யாவும் சுவை அறும். சமம்.

கடவுளற்ற உலகம் எனக்கென்றால்

உனக்கு உன் பிரார்த்தனைகள்.

வேண்டுமானால் என் நிறமற்ற நிமிடங்கள்

வளர

உன் கடவுளிடம் முறையிடு.





அது ஒரு ராகம்

இருட்டைச் செதுக்கி

நின்று நீண்ட செவ்வகத்தில் நிறுத்தி

ஒளியின் பிரமையை நிராகரித்த

உனக்குப்

பசி பறந்தது.

அமிலத்தின் கோஷங்களை அடக்கிய

உன் குரல்

மழைக்கும் சோறிட்டது.

வாகன இரைச்சல் போர்த்திய

புழுதி கரைந்தது.

ஆத்மா இப்போது

புது ரோஜாப்பூ.

துண்டித்த நரம்புகளுக்குச் சிகிச்சை வேண்டி

உன்னிடம்

யாசித்தது யதுகுல காம்போஜி.

தாலாட்டிக் கரைத்தாய்

என்னை நீலாம்பரியில்.

கனவின் எல்லைகள் கைக்குள்பட

முலைக்காம்புகளின் முத்தம்

மூடிய இமைகளின் மீது.

என் ரதங்கள் புறப்பட்டுப் போய்விடும்.

சோறும் உறங்கிவிடும்

உன் வயிற்றின் ஒடுங்கல் நிமிரும் நேரம்.





அதிகாலைக் கனவில் தேவிக்கு ஒரு பாடல்

ஆயிரம் ஆல் இலைகளால்

என் வானத்தைத்

தைத்த பின்னும்

பட்டாய் மின்னுகிறது

நீலத்துணுக்குகளில்

மயிர் சுழித்து

உள் வாங்கும் உன் வயிறு.

ரத்த தாளங்களில் வீணை உலவ

நாட்டியங்களற்ற என் மேடையில்

உன் முந்தானை.

அருகிலான விண்வெளிப் புகைப்படம்

நிலவின் அப்பக்கம்

கனவுக் கோடுகள் விரிந்த என் நிலம்.

அகழ்வில் சிசுக் குரல்

உன் கால் சதங்கைகளை ஒரு தரம்

ஒலிக்கச் சொல்லி

என் இன்னொரு நனவிடம் கேட்கும்.

மின்னலும்

ஆர்கன் இசையும்

ஒருங்கி மடிந்ததும்

மனிதர் அற்றுப் பிறக்கும் ஒரு சமவெளி.

பூட்டிக்கொண்ட பூமிக்குள்

ஒரு மழலை மடிந்திருக்கும்.





கடவுளும் ஒரு கனவின் கருவும்

நிலைகள் மூன்றினையும் மறந்து

கடல் நிற மணிமாலைகளுடன்

இருள் வேளைகளில் கரைகளில்

திரும்பிக்கொண்டிருக்கிறேன்.

கழுகு இரை கொள்ளும் நேரம்

களைத்து வருகிறேன் படிகளில் உருண்டு.

பிரகாரத்தை அணைத்த இடைவெளிகளில்

மனிதர்களின் மையத்தில்

கைக் கமண்டலத்தில் முகம் அசைய

நடப்பது அறியாமல் அமர்ந்திருக்க

இட்டுவிடு என்று வருகிறான் குரு

நீர்த்தட்டுடன்.

நானாவென நானே கேட்டுச் சிதறுமுன்

கும்பல் கூவுகிறது ஆம் ஆமென்று.

குருவின் நெற்றியில் என் பெருவிரல்.

காணவில்லை

என் முகம்.

கல்லில் விழும் உளிகளும்

கலைக்காத கனவில் தொலைவிலிருந்தும்

மூலைக்கு மூலை தெறித்து விழுகிறது

அலை நுரை.

திரை நனைந்து எலுமிச்சை நிறத்தில் விடிகிறது

கடற்கரை.

கோயிலில் கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

தொடுவானில் அலையும் புலிகளின்

தொண்டையில்

சப்தக் கவளமாய்த் திரண்டு

பாம்பின் அசைவுகளில் தவழ்ந்து

பாசியில் படிகிறேன்.

மெஷின்களுக்குப் பின்னாலும் மனிதர்கள்

நன்றாகத் தாழிட்டிருந்தும்

கதவின் இடைவெளிகளில்

பால் வண்ணத்தில் பிளிறுகிறது தெரியாத தெருவிளக்கு.

தார்ச்சாலையின்

மௌனம் கலைக்கத்

தினசரிப் பேப்பரின் பையொன்று

காற்றுடன் பேசிச் சரசரக்கிறது.

அண்ணாந்து பார்த்து

இரண்டு நட்சத்திரங்களின் தொலைவு வெளி பற்றி

உனக்கு அக்கறை இல்லை என்று சொல்கிறேன்.

மாதா கோயிலின் மணிகள் இருள் மடியில்

புரளும்போதும்கூட

மிலான் நகரத்து ஓவியங்களுக்காக

விழிக்கும் வியப்பற்றவளாய் இருக்கிறாய்.

மத்தாப்பு ஒளிகளாய்ச் செவியைக் கீறும்

முன்பறியாத பூச்சி சொல்கிறது என்னிடம்.

நியூட்ரான் குண்டுகள் குதறிய பின்னும்

மீண்டும் ஒரு முறை புழுவாய்த் தோன்றுவான் மனிதன்

என்பது ஐயம்.

சிங்கத்தின் தாடி

மார்க்ஸின் சோற்றுக் கணக்கு

எல்லாம் இங்கு மண்ணில் இறைத்த விந்தாகிவிட்டது

என்று உன் அறியாமை பற்றிப்

பட்டியல்கள் அடுக்கப்படும்.

காலம் எவ்வாறு அளக்கப்படினும்

மலையாய் உயரும் கான்க்ரீட் எலும்புகளுக்குப்

பின்னாலும்

நியான் விளக்குகளைத் தாண்டியும்

எனது உனது பாஷைகள்

ரத்தமும் சதையும்-

மொழி வெறும் சங்கேதக் குறிகளாய்

கம்ப்யூட்டர்களின்

கைகளில்

சிக்கிய பின்னும்.

மனநிழல் ஓரம்

இடம் பெயரும் ஈசல் குருவிகளின் அலையாய்

ஸ்ருதிக்குத் தவித்தது இவ்வறை.

உன் கருப்பைக் குருதியின் வெளிச்சம்

இரவு விளக்காக.

பாதைகளின் புழுதிக்குச் செம்பு நீர் ஊற்றாமல்

காலில் தலை கவிழ்த்து

உறக்கம் வரும்.

நடு முதுகில் மயிலிறகு

இமை பிளந்து

அடியாற்றின்

இருளுக்குள் இருள் தேடும்.

நிலைக்கண்ணாடியற்ற என் குருட்டுத்தனம்

மலடாகும்.

விடை பெறும் நேரம்

சொல்லாதே

ஓய்வுக்கென அமர்ந்தேன் என.

உன் சொல் ஏற்காது

என் உயரம்.





எனக்கு எதிராய் என் நிலைக்கண்ணாடியில் உனக்கு ஒரு சித்திரம்

சொல்வாய்

அப்படி ஒரு மனிதன் இருந்தானென்று.

இல்லை

நினைத்துக்கொள்வாய்

சிதறல்களில் செழிப்பைச் செதுக்கிய

கடவுள் ஒருவன் என்று.

இல்லை

காட்சிகொள்ளும் உன் மனது

செலவுக்கென்று சுதந்திரத்தின் கட்டுகளை

முறிக்காத அதீத மனிதன் இருந்தானாவென்று.

அலையலையாய்

இனி உன் கரை மாந்தர் கோஷமிடுவர்

கொஞ்ச நாளாய் வந்து வாழ்ந்த

மௌனத்தைக் கொன்று.

தோட்டமும் கரையும் பாதையும் அலையும்

நுரையும்.

இமைக்காதிருந்து

நிமிஷங்களை வலையில் பிடித்து

சதையில் சதை திருடும் சரித்திரம் உயிர்த்ததில்லை

என்றும்.

சொற்கள் விலகித் தெரிந்திருக்கலாம் தோட்டம்.

துளையிடப்பட்ட ஜீனியா மலர்கள்

கட்டளையிடும்.

கம்பி வேலியின் நட்ஷத்திரங்களில்

பச்சை நிற வெட்டுக்கிளிகள்

கழுவேற்றப்படும்.

கோடுகள் மட்டும் வழிவதில்லை என் விரல்களில்

சில சமயம் துரப்பணக்கருவிகளும்

கூர்நுனிப் புற்களும்.

நட்டுப் பதினைந்து நாட்கள்

நாற்று கண் விழிக்கவில்லை.

கவலைகொள்ளும் ஊர் சென்ற மனது

வாரத்தின் இறுதியில்

அன்புடன் டேலியாக் கிழங்குகளின்

கழுத்தில் விழும் நகக் குறி.

கிழங்கிற்குள்ளும் ஒரு மிருகம்

சதை தின்று வாழும்

என நினைக்கிறாய்.

நானில்லை.

ஆனால் அழுத்தமாய் மூச்சிழுத்து

அரைவட்டம் போய்வந்து

சாம்பல் பனி விலக்கித் தெரியவிட்டேன்

சதையும் புகையுமாய்

தினம் ஒரு பிணம் எரியும்

என் வழியை.

ஓய்வற்றுத் திரியும்

பத்தாம் கபால நரம்பு

அமில ஆறுகளை நினைத்துப் பிளந்த நாக்குகளைச் சுழற்றும்.

நுரையீரல் மரக்கிளையில்

கூடு வளர்க்கும் சுதை நெருப்பு.

வர்ணத்திட்டுகளை செதிலாய் வளர்த்தும்

விருப்பத்தைச் சிலிர்த்து உடைத்துவிட்டுத்

திசுக்கள் அழிந்து மிஞ்சிய மூளைச் சிற்பத்தை

மொகஞ்சதாரோ எனக் கண்டெடுத்து

புதிய தூண்கள் தேடிச் செல்கையில்

நீ மீண்டும் சொல்வாய்

இப்படியும்

ஒரு மனிதன்

இருந்தானென





வெளியேற்றம்

பனித்துணியில் ஒரு முகத்திரை.

நகத்தைக் கிழித்த

கல்லுக்கும் நடனம் கற்பனையாய் ஓர் இசைக்கு.

கூடத் தொடரும்

சப்தம் ருசிக்கும் கூட்டம்.

நிழல்கள் அறுபடாமல் அலையும்.

களைத்துவிட்டது. சிக்கி

விடுவேன் என்றபோது

என்னுடலை முழுக்காற்றுக்குத்

தின்னக் கொடுத்து

உடைகளை நிழற்கறையான்களுக்கும் எறிந்துவிட்டேன்.

காற்று மட்டும்

தொடைகளைத் திறந்து

போவெனச் சொன்னது

என்னை.

முடிவுரை தற்காலிகமாக

இறுதி வரிகள் உன் மனதில் கேள்வியாகும் நேரம்

என்னுருவம் எங்கோ தொலைவில் கல் மரம்.

காய்ந்து விழுந்தும் நெற்றியில் பொட்டின் தடம்.

காற்றில் கரைந்திருக்கும்

என் அரூபச்சொற்களின் மிச்சம்.

ஆலின் விதையொன்று உண்டாகும்

வைத்துக் கொள் என் பால்யத்தை.

பின் கல்லலைகள் மோதும் உன் காதில்.

என் சிரிப்பும்.

வீடு சென்று தேடு

பாக்கிச் சொத்துகள் எனது என்னவென்று.

திண்ணைப்புறம் கிடக்கும் ஆற்றங்கரைக் கூழாங்கல்.

பச்சைப் புதரில் வெறும் விரலில்

பிடுங்கிய மூங்கில் கிளை ஒன்று.