Saturday 8 February 2020

என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும் - சா.கந்தசாமி |


என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும் - சா.கந்தசாமி
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/jan/26/என்-பார்வையில்-சுந்தர-ராமசாமியின்-வாழ்க்கையும்-இலக்கியமும்---சாகந்தசாமி-3341050.html
Published on : 26th January 2020 12:21 PM |




"நான் எனக்காக மட்டும் எழுதக் கூடியவனாக இருக்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். எனக்குள் புதையுண்டு கிடக்கும் கலை உணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவந்த பிறகுதான் உள்ளே அது இருப்பது தெரிய வருகிறது. இதைப்போல் உள்ளே வேறு என்ன என்ன இருக்கின்றன என்பதை அறிந்து கொண்டு விடவே நான் எழுத முற்படுகிறேனோ என்னவோ' என்று தன் எழுத்தைப் பற்றி குறிப்பிடும் சுந்தர ராமசாமி தன் வாசகர்கள் பற்றியும் சொல்கிறார்.
"இவ்வாறு வெளிப்பட வெளிப்பட, நான் அத்தகைய அனுபவங்களுக்கு ஆளாக ஆளாக, என்னை நான் கண்டு கொள்வது ஒரு விதத்தில் சாத்தியமாக இருக்குமென்று தோன்றுகிறது. என்னைப் பற்றி நான் தெரிந்து கொள்ள எழுதும் எழுத்துகள், தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உபயோகப்படும் என்று எண்ணுகிறவர்கள் என்னுடைய வாசகர்கள்' என்றார்.
தன் எழுத்துகள் பற்றியும், தன் வாசகர்கள் பற்றியும் தீர்க்கமான முன் முடிவுகள் கொண்ட ராமசாமி 1931-ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள "தழுவிய மகாதேவர் கோவில்' என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை எஸ்.ஆர். சுந்தரம் ஐயர். தாயார் தங்கம்மாள்.
எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் கோட்டயத்தில் பர்மா ஷெல் எண்ணெய் நிறுவன முகவராக இருந்தார். அது மலையாள மொழி பேசப்படும் பகுதி. பள்ளிக்கூடத்தில் மலையாளம் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆரம்பப் படிப்பை மலையாளத்தில் தான் அவர் தொடங்கினார்.
1939 - ஆம் ஆண்டில் எஸ்.ஆர். சுந்தரம் ஐயர் பர்மா ஷெல் எண்ணெய் நிறுவன முகவர் பணியை விட்டு விட்டு நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்து வந்தார். அப்பொழுது ராமசாமிக்கு எட்டு வயதாகி இருந்தது. அவர் தந்தையார் சுதர்சன் ஜவுளிக் கடையை ஆரம்பித்து நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியான நாகர்கோவில் திருவதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. எனவே பள்ளிக்கூடங்களில் மலையாள மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. அவர் பள்ளியில் மலையாள மொழி படித்து வந்தார்.
ராமசாமிக்குப் பத்து வயதாகும்போது பக்கவாத நோய் வந்துவிட்டது. அதனால் பள்ளிக்கூடம் தொடர்ந்து செல்ல முடியவில்லை. எனவே வீட்டில் ஆங்கிலம், மலையாளம், சமஸ்கிருதம் படித்தார். தமிழ்மொழி வீட்டில் பேசப்பட்டு வந்தது.
அவர் தாயார் தங்கம்மாள் புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா சிறுகதைகளைப் படித்துக் காட்டி வந்தார். அவரை நவீன தமிழ்ச் சிறுகதைகள் வசீகரித்தன.
1947- ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்பொழுது ராமசாமிக்கு பதினாறு வயதாகி இருந்தது. தொடர்ந்து பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லை. எனவே வீட்டில் இருந்து கொண்டே மலையாளம், ஆங்கிலம் வழியாக நாட்டின் நடப்புகளை, அரசியல் சமூக, கலாசார இலக்கிய நிகழ்வுகளைப் படித்தறிந்து கொண்டார்.
மகாத்மா காந்தி, ராமகிருஷ்ண பரமஹம்சர், பெரியார், அரவிந்தர், ராம் மனோகர் லோகியா, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஜே.சி. குமரப்பா உட்பட எதிர் எதிரான சிந்தனைப் போக்குகள் கொண்ட இந்தியர்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் சாதனைகளையும், தத்துவங்களையும் அறிந்து கொண்டார்.
அவருக்குத் தமிழ் மொழிவழியாகப் படிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. "சொந்த முயற்சியால் பதினெட்டாவது வயதில் தமிழ் கற்றுக் கொண்டேன்' என்று பின்னால் எழுதியிருக்கிறார்.
அவர் பதினெட்டாவது வயதில் தமிழ் கற்றுத் தமிழ் மொழியில் பின்னால் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதியதால்தான் இலக்கிய ஆளுமை கொண்டவர், மேலான கலைஞர் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். அதுதான் எழுத்து என்பதின் வலிமை.
தமிழ் படிக்கக் கற்றுக் கொண்ட ராமசாமி புதுமைப்பித்தனின் "காஞ்சனை' சிறுகதையைப் படித்தார். கதைகளின் கருத்துகளும், சொல்லப்பட்ட விதமும், மொழியும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. புதுமைப்பித்தன் அசலான கதாசிரியர் என்று முடிவு செய்தார். பதுமைப்பித்தனுக்கு ஒரு நினைவு மலர் கொண்டு வர முன் முயற்சிகள் எடுத்தார். புதுமைப்பித்தன் நினைவு மலரில் வெளியிட ஒரு சிறுகதை எழுதினார். அதற்கு "முதலும் முடிவும்' என்று பெயரிட்டார். தன் தாயாரிடம் படித்துக் காட்டினார். நன்றாக இருக்கிறது என்று தாயார் பாராட்டியதைக் குறிப்பிட்டு விட்டு, "எந்தத் தாயார்தான் தன் மகன் எழுதியதை பாராட்டாமல் இருப்பார்' என்று ஒரு கேள்வியையும் கேட்கிறார்.
1951- ஆம் ஆண்டில் புதுமைப்பித்தன் நினைவு மலர் வெளி வந்தது. அதில் அவரது முதல் சிறுகதை, "முதலும் முடிவும்' இடம் பெற்றது.
ராமசாமிக்கு மலையாள மொழி இலக்கியத்தின் மீது நல்ல பரிச்சயம் இருந்தது. தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், காரூர், கேசவ தேவ் உட்பட பலரைப் படித்திருந்தார். 1942- ஆம் ஆண்டில் வெளிவந்த தகழியின் "தோட்டியின் மகன்' பெருமளவில் வெற்றி பெற்ற நாவலாக இருந்தது. நாவலின் தலைப்பே முற்போக்கான, எதைச் சொல்கிறது என்பதை உரக்கச் சொல்வதாக இருந்தது. "தோட்டியின் மகன்' நாவல் ராமசாமியை வெகுவாகக் கவர்ந்தது. எனவே மலையாளத்தில் இருந்து அதனை தமிழில் மொழி பெயர்த்தார்.
"தோட்டியின் மகன்' மொழிபெயர்ப்புக்கு 2000- ஆம் ஆண்டில் எழுதிய முன்னுரையில், "அப்போது எனக்கு வயது இருபது, இருபத்தியொன்று. அதற்கு முன் தமிழில் சொல்லும்படி நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. நிச்சயமாக என்னுடைய படைப்பென்று எதுவும் அச்சேறியிருக்கவில்லை. என் உடல், மனம் சார்ந்த அன்றைய வேதனைகளைக் கோபத்துடனும், வருத்தத்துடனும் புலம்பல் கடிதங்களாகக் கடவுளுக்கு எழுதிக் கொண்டிருந்தேன்' என்று "தோட்டியின் மகன்' மொழிபெயர்ப்பு பற்றி ஐம்பதாண்டுகளுக்குப் பின்னால் ராமசாமி நினைவு கூர்ந்து சொல்கிறார்.
"தோட்டியின் மகன்' மொழிபெயர்க்கப்பட்டு அவரிடம் இருபது ஆண்டுகள் இருந்தன. அவர் பிரபலமாகி வந்தார்.
கம்யூனிஸ்டும், இலக்கியவாதியுமான தொ.மு.சி. ரகுநாதன் வெகுஜனப் பத்திரிகைகள் மீதும், புலமை அற்ற பேராசிரியர்கள் மீதும் கடுங்கோபம் கொண்ட எழுத்தாளராக இருந்தார். அவர் வை.கோவிந்தனின் "சக்தி'யில் சில காலம் பணியாற்றியவர். தீவிரமான இலட்சியவாதி. அவருடன் ராமசாமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன், ராமசாமியைக் தத்துவரீதியிலும், கலைக் கோட்பாட்டிலும், கம்யூனிஸ்டு சித்தாந்தம் என்பதிலும் அதிகமாகவே சிந்தித்தவர் என்றே குறிப்பிட வேண்டும். இருவரும் தோழமை கொண்டிருந்தார்கள். ராமசாமி திறமை மிகுந்ததொரு கலைஞர் என்றே தொ.மு.சி. ரகுநாதன் கருதினார்.



1953- ஆம் ஆண்டில் தொ.மு.சி.ரகுநாதன் "சாந்தி' என்றொரு இலக்கியப் பத்திரிகையைத் தொடங்கினார். அது சிற்றிதழ்தான். அதில் அரசியல் கட்டுரைகள் சில வந்தன. ஆனால் "சாந்தி' வெளியிட்ட கதைகளுக்காகவே மதிக்கப்படுகிறது. "சாந்தி' யின் முதல் இதழில் ராமசாமியின் இரண்டாவது சிறுகதை "தண்ணீர்' வெளிவந்தது. தண்ணீர் முற்போக்கான சிறுகதை. ஆனால் வறட்சி உள்ள சிறுகதை கிடையாது. மனிதாபிமானம் என்பதுதான் கதையின் ஆதார சுருதி.
இலக்கியம் என்பது பொழுதுபோக்கிற்கானது இல்லை. அது மனித குலத்தின் மேன்மைக்கானது என்ற சோசலிச கருத்து முதன்மையுற்று இருந்தபோது ராமசாமி உளவியலையும் சேர்த்து எழுதினார்.
தண்ணீர் கதையின் பிரதான அம்சம்தண்ணீர்தான். "நீரின்றி அமையாது உலகு' என்பது பொதுவிதி. அது மனிதர்கள் மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. பூமி பசுமை கொள்ள பயிர்கள் விளைய, பறவைகள் வானில் பறக்க, விலங்குகள் கானகத்தில் திரிய, மனிதர்கள் உண்டு களிப்புற்று இருக்க தண்ணீர் வேண்டும்.
ஒரு கிராமம் நீரின்றி வறண்டு போன போது மனிதர்கள் தண்ணீர் இன்றி தவிக்கும்போது, ஒரு முதியவர் கிணறு வெட்டுவதுதான் தண்ணீர். அது மனித முயற்சியின் உச்சம். அது வெறும் முற்போக்கு இல்லை. ஆனால் சொல்லப்படும் முறையில் சார்பு கொண்டு விடுகிறது
ராமசாமி கம்யூனிஸ்டு சித்தாந்தத்தின் ஆதரவாளராக இருந்தபோது, அவர் அடிப்படையில் கலைஞராகவும் இருந்தார். கலை எல்லாவிதமான புத்திசாலித்தனமான காரியங்களையும் உருட்டித் தள்ளிவிடும் என்பதால், அவர் ஆரம்ப கால கதைகள் கூட அதிகமான சேதாரம் இல்லாமலேயே இருக்கின்றனர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு, 1959- ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதன் பெயர் "அக்கரைச் சீமையிலே' . ராமசாமிக்கு அப்போது இருபத்தெட்டு வயதாகி இருந்தது.
உலகம் முழுவதிலும் பல எழுத்தாளர்கள் இளம் பருவத்தில் கவரப்பட்ட இலட்சியப் பிடிப்போடு எழுதிக் கொண்டு இருப்பதில்லை. இடையில் இலட்சியம் ஒரு சுமையென கருதி அதை கீழே இறக்கி வைத்துவிட்டு எழுத போயிருக்கிறார்கள். இன்னும் சிலர் இளம் பருவத்தில் தவறானதொரு இலட்சியத்திற்காக எழுதியதாகப் பிரகடனப் படுத்திக்கொண்டு அதற்கு எதிராக எழுதி இருக்கிறார்கள். எழுதவே வேண்டாம் என்று போனவர்களும் இருக்கிறார்கள். சிலர் இலட்சியத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் அதனை செயல்முறைப்படுத்திய தலைவர்கள் செயற்பாட்டில் அதிருப்தி உற்று வெளியேறி உள்ளார்கள். சித்தாந்தம் தவறு என்று சொல்லிக் கொண்டு வெளியில் சொன்னவர்களும் இருக்கிறார்கள்.
1950- ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளில் பலர் எழுத்தாளர்களாக இருந்தார்கள். அல்லது எழுத்தாளர்களில் சிலர் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள். அவர்களில் தமிழ்நாட்டில் முதன்மையானவர் தொ.மு.சி. ரகுநாதன். அவர் கம்யூனிஸ்டு சித்தாந்தவாதி. இளம் பருவத்தில் இயக்கத்தில் பங்குபெற்ற அவர், தன் இறுதி காலம் வரையில் கொள்கைப் பிடிப்பாளராகவே வாழ்ந்தார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் சித்தாந்த அடிப்படையிலேயே எழுதி வந்தார். மொழி பெயர்ப்பாளர். சோவியத் நாவல்களையும், கவிதைகளையும் மொழி பெயர்த்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் காந்திய கோட்பாடுகள், கம்யூனிஸ்டு சித்தாந்தங்கள், திராவிடச் சிந்தனைகள் பரவி இருந்தன. அவற்றில் கவரப்பட்ட சிலர் கவிதைகள், சிறுகதைகள் நாவல்கள் எழுதி வந்தார்கள். நாடகங்கள் எழுதி சிலர் அரங்கேற்றினார்கள். சித்தாந்தம் கலைப் படைப்பிற்கு அவசியமில்லை. வாழ்க்கையை எழுதுவதுதான் இலக்கியம் என்ற முறையில் சிலர் எழுதி வந்தார்கள். பத்திரிகைகள் குடும்பக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் வெளியிட்டு வந்தன. எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள் பெரும்பாலும் பத்திரிகை எழுத்தாளர்களாக இருந்தார்கள்.
தமிழகத்தின் தென்கோடியில் இருந்து சுந்தர ராமசாமி வந்தார். கடலூரில் இருந்து ஜெயகாந்தன் வந்தார். இருவரும் சொற்பப் படிப்புப் படித்தவர்கள்தான். ஆனால் சுயமான சிந்தனை கொண்டவர்கள். மார்க்ஸ், லெனின் சித்தாந்தத்தால் கவரப்பட்டவர்கள். ஒரு பத்தாண்டு காலத்திற்குள் அவர்கள் சித்தாந்தம் சார்ந்து எழுதுவதில் இருந்து வெளியில் வந்து விட்டார்கள்.
சுந்தர ராமசாமி, ""சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகார செயற்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டபோது மனம் மாறி வந்துட்டேன்'' என்றார்.
ஜெயகாந்தன், " நான் கம்யூனிஸ்டுகளால்தான் உருவானேன். ஆனால் அவர்களோடு இருக்க முடியாமல் வெளியே வந்துவிட்டேன்'' என்றார்.
ஒரு கட்சியில் சேர்வதற்கும், சித்தாந்தம் சார்ந்து எழுதுவதற்கும் பெரிய ஈர்ப்புகள் ஒன்றும் கிடையாது. சித்தாந்தத்தின் கவர்ச்சி, தலைவர்களின் செயற்பாடுகள், அறிமுகம், அரவணைப்பு சேர்த்து வைக்கிறது. வயது ஏற ஏற எழுத்தாளர்களின் ஆர்வம் மாறுகிறது. கட்சியின் மீது பிடிப்பு குறைகிறது. தலைவர்கள் சாதாரணமான முதியவர்களாகப் படுகிறார்கள். தன்னிடம் அபாரமான அறிவும் ஆற்றலும், தலைமைப் பண்பும் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அதன் காரணமாகச் சுதந்திர எழுத்தாளராக பிரகடனப்படுத்திக் கொள்கிறார்கள்.
கம்யூனிஸ்டு தலைவர் ப.ஜீவானந்தத்திடம் சுந்தர ராமசாமி பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டு இருந்தார். ஜீவா இலக்கியவாதி இல்லை. இலட்சியவாதி. இலட்சியவாதிக்கு சமூகத்தில் இடம் உண்டு என்ற முறையில் நினைவோடையில் ப.ஜீவானந்தம் பற்றி எழுதியிருக்கிறார்.
தொ.மு.சி. ரகுநாதன், கம்யூனிஸ்டு சுந்தர ராமசாமியை இனம் கண்டு இலக்கியவாதியாக அறிமுகப்படுத்தியவர். அவரை வெகுவாகப் பாதித்த எழுத்தாளர். ஆனால் அவரைப் பற்றி நினைவோடையில் எழுதவில்லை. அதுவும் ஒரு விமர்சனம்தான்.
அவருக்கு எழுதும் மொழி முறை, படிக்கும் விதம் பற்றி எல்லாம் தனியாகக் கருத்து இருந்தது. அவர் சொல்கிறார்:
"முரட்டுத்தனமான மொழியில் எழுதப்பட்ட எந்தப் புத்தகத்தையும் படிக்கச் சிரமமாக இருக்கிறது. முரட்டுத்தனமான மொழி என்று சொல்லும்போது கெட்ட வார்த்தைகள், ஆபாசமான வார்த்தைகள் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். மொழிக்கும் படைப்பாளிக்கும் என உறவில் ஒரு முரட்டுத்தனம் இருக்கக் கூடாது. உறவு இணக்கமற்று இருந்தால், இங்கிதமற்று இருந்தால் ஒத்திசைவு என்பது அறவே இல்லாதிருந்தால் அந்தப் புத்தகத்தைப் படிக்க கஷ்டமாக இருக்கிறது.'
இலக்கியம், அது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், எதுவாகட்டும் மொழியில்தான் எழுதப்படுகின்றன. மொழி என்பது மனிதர்கள் உருவாக்கிக் கொண்டதுதான். மொழியைக் கொண்டுதான் பலரும் தம் மேதமையை நிலை நாட்டி வருகிறார்கள். ஆனால் மொழிக்கு என்ன இடம் என்பது படைப்பாளர்கள் தீர்மானிப்பதுதான். சிலர் கருத்துக்கேற்ற வசீகரமான மொழி நடையையும், வார்த்தைகளையும் வளர்ப்பதோடு கொண்டு வந்து எல்லோரையும் படிக்க வைத்துவிடுகிறார்கள். மற்றும் சிலர் மொழியே பிரதானமென்று கொண்டு முரட்டுத்தனமாக எழுதி படிக்கவே முடியாமல் செய்துவிடுகிறார்கள்'.
ஓர் படைப்பு எழுத்தாளர் என்ற முறையில் மொழியின் முக்கியத்துவம் பற்றி சுந்தர ராமசாமி தன் அனுபவம் என்ற முறையில் சொல்லி இருக்கிறார்.
மொழி என்பது கற்கப்படுவது. ஒருவன் எந்த மொழியும் கற்றுக்கொண்டு எழுதலாம். அவன் வாழும் பகுதியில் அது அதிகமான மக்களால் படிக்கப்படுகிறது. ராமசாமிக்கு மலையாள மொழி முதல் மொழியாக இருந்தது. அதில் அவர் எழுதியிருந்தால் மலையாள எழுத்தாளராகி இருப்பார். தமிழ்மொழி தாய்மொழியாக இருந்தது. அவர் பெற்றோர்கள் தமிழ் பேசிவந்தார்கள். சில தமிழ்க் கதைகள், கேட்டு, அதனால் தமிழ் படித்து தமிழில் கதைகள் எழுதி தமிழ் எழுத்தாளராகி விட்டார். அது சொந்தமான முடிவுதான் என்கிறார். மலையாள மொழியில் எழுதி இருந்தால் கூடுதலான அங்கீகாரம் பெற்று இருக்கலாம் என்று அர்த்தம் சொல்லப்பட்டதின் வழியாகத் தெரிகிறது.
சுந்தர ராமசாமி இளம் பருவத்தில் படித்த புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் நினைவுகளையெல்லாம் உரையாடலில் எழுதியிருக்கிறார்.
அவர்களில் க.நா.சுப்பிரமணியம் மீது அவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது. தன்னையும், ஜெயகாந்தனையும் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர்கள் என்று அவர் அறிமுகம் செய்தது உற்சாகம் அளித்தது என்றோர் இடத்தில் பதிவு செய்து இருக்கிறார். ஆனாலும் க.நா.சுப்பிரமணியம் பட்டியல் அடிக்கடி மாறக் கூடியதாக இருப்பது பற்றி கேலி செய்கிறார்.
சிறுகதை எழுத்தாளரும், புதுக்கவிஞருமான ந.பிச்சமூர்த்தி மீது அவருக்கான மரியாதை குறையாமலே இருந்து வந்தது. அவர் வாழ்க்கையையும், சாதனைகளையும் பற்றி "ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்' என்று இலக்கியச் சிந்தனைக்காக 1991-ஆம் ஆண்டில் புத்தகம் எழுதினார்.
ந.பிச்சமூர்த்தியை, அவர் சி.சு. செல்லப்பா போல மகாகவி என்று கொண்டாடாவிட்டாலும் அசலான புது கவிஞர் என்று உறுதிபட நம்பினார்.
ந.பிச்சமூர்த்தி ஒரு படைப்பு எழுத்தாளராகவே இருந்தார். அவர் சார்ந்திருந்த மணிக்கொடி எழுத்தாளர்களில் புதுமைப்பித்தன், க.நா.சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா அலசல் முறையிலும், ரசனைரீதியிலும் நவீன படைப்பிலக்கியத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தியபோது சிறுகதைகள், புதுக் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருந்தார். விமர்சனம் செய்ய வேண்டாம் என்றுதான் இருந்தார்.
சுந்தர ராமசாமி விமர்சனத்தின் மீது ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார். அதாவது ஒரு படைப்பின் சக்தியை, கலையம்சத்தைக் கண்டறியும் ஆற்றல் பெற்று இருந்தார். அவர் தனக்கு உவப்பான எழுத்தாளர்கள் பற்றி நினைவோடையில் எழுதினார். அந்தத் தேர்வே விமர்சனம்தான்.
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள், நாடகங்களை விட, புதுக்கவிதைக்காக அதிகமாக மதிக்கப்படுவார் என்பதுதான் அவர் கருத்தாக இருந்தது. அதனை விளக்கி எழுதவில்லை. ஆனால் புதுக்கவிதைகள், சிறுகதைகள் பற்றி எழுதியதன் வழியாகத் தெரிய வருகிறது.
(தொடரும்)
****
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/feb/02/என்-பார்வையில்-சுந்தர-ராமசாமியின்-வாழ்க்கையும்-இலக்கியமும்-3347430.html
என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்

By - சா.கந்தசாமி | Published on : 02nd February 2020 10:34 PM |!






சென்ற இதழ் தொடர்ச்சி...

சுந்தர ராமசாமியின் உற்ற நண்பர் கிருஷ்ணன் நம்பி. அநேகமாக இருவரும் ஒரே வயதினர். இலக்கியப் பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமி வழியாக கிருஷ்ணன் நம்பியையும், கிருஷ்ணன் நம்பி வழியாக சுந்தர ராமசாமியும் தமிழக இலக்கிய உலகம் தெரிந்து கொண்டது. அவர்களின் நட்பின் இறுக்கத்தையும்.

சுந்தர ராமசாமி, தன் காலத்தில் மிகவும் மதித்த எழுத்தாளர் என்றால் அது க.நா.சுப்பிரமணியம்தான். அவர் படைப்புகள், மொழி பெயர்ப்புகள், இலக்கிய அபிப்பிராயங்கள், அவற்றை எழுதியது பற்றியெல்லாம்கவனிக்கத்தக்க விதமாகவே எழுதியுள்ளார்.

அவர் நாகர்கோவிலில் வசித்து வந்தார். பல தமிழ் எழுத்தாளர்கள் சென்னையில் இருந்தார்கள். ஆனால் எழுத்தாளராக வாழ்வதற்கு சென்னைதான் சரியான ஊரென்று சிலர் வாழ்ந்து வந்தார்கள். ஒரு வேலையும் செய்யாத எழுத்தாளர்கள் கூட, சென்னையை இருப்பிடமாகக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகள்,புத்தக நிலையங்கள், நூலகங்கள் புத்தகக் கடைகள் எல்லாம் சென்னையில் இருந்தன. வானொலி சென்னையில் இருந்தது. வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பல எழுத்தாளர்கள் சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதனால் சென்னையில் சில எழுத்தாளர்கள் வசித்தார்கள்.

சுந்தர ராமசாமி, திருவனந்தபுரத்தில் தன் நண்பர் கிருஷ்ணன் நம்பியுடன் சென்று க.நா.சுப்பிரமணியத்தைச் சந்தித்ததை, இலக்கியம் என்பதற்கு அப்பால் ஒரு பெரிய மனிதர் சந்திப்பு என்ற வகையிலேயே எழுதி இருக்கிறார். க.நா.சுப்பிரமணியத்தின் இலக்கிய மதிப்பீடுகளை பெரும்பாலும் ஏற்றுக் கொண்டார். தொ.மு.சி. ரகுநாதன் உட்பட கம்யூனிஸ்டுஎழுத்தாளர்கள் க.நா.சுப்பிரமணியம் படைப்புக்களையும் ஏற்றுக் கொண்டது இல்லை; அவருடைய இலக்கிய விமர்சனங்களையும் கண்டு கொண்டது இல்லை. அவரை சோவியத் எதிர்ப்பாளர் என்றும், மார்க்சிஸ்டு விரோதி என்றும், அமெரிக்காவின் கூலி என்றும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்கள். இந்திய-தமிழக கம்யூனிஸ்டு எழுத்தாளர்களோடு இலங்கை கைலாசபதியும் சேர்ந்து கொண்டார். சுந்தர ராமசாமி, கைலாசபதியை நிராகரித்தார். ஆனால் ரகுநாதன் பற்றி ஒரு சொல்லும்சொன்னது இல்லை.

இலக்கியத்திற்குச் சித்தாந்தம் எதிரானதோ, விரோதமானதோ இல்லை. ஆனால் அதனைக் கலையாகச் சொல்வதில் இருக்கிறது என்ற முறையில்தான்
பின்னால் எழுதினார்.

சுந்தர ராமசாமியின் முதல் நாவல் "சரஸ்வதி' இதழில், "ஒரு புளிய மரம்' என்ற பெயரில் 1959 - ஆம் ஆண்டில் வெளிவந்தது. ஆனால் அது தொடர்ந்து வரவில்லை. இடையில் நின்று போய்விட்டது. பின்னர், 1966 -ஆம் ஆண்டில் "ஒரு புளிய மரத்தின் கதை' என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

அவர் வெகுஜன பத்திரிகை எழுத்தாளர் இல்லை. அதில் உறுதியாக இருந்தார். தன் படைப்புகள்வெகுஜன பத்திரிகைகளில் வந்து பிரபல்யம் அடைய வேண்டும் என்ற விருப்பமும் இருந்ததில்லை. ஆரம்ப காலத்தில் இருந்தே அதாவது எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர் சிறுபத்திரிகை, சிற்றிதழ் எழுத்தாளர்தான். அவர் "சாந்தி', "சரஸ்வதி", "எழுத்து', "இலக்கிய வட்டம்', " சலங்கை', "கொல்லிப்பாவை', "தீபம்', "ஞானரதம்' இதழ்களில் தான் எழுதினார். "தாமரை'யிலும் சில கதைகள் எழுதி உள்ளார். அவர் மொத்தமாக எழுபத்திரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார்.

நா. பார்த்தசாரதி, சுந்தரராமசாமி மீதும், அவர் படைப்புகள் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் கதைகள் தான் பணிபுரிந்த "கல்கி'யில் வெளிவரவேண்டுமென விரும்பினார். அவரிடம் வற்புறுத்தி கதைகள் வாங்கி "கல்கி' தீபாவளி மலரில் வெளியிட்டார். சொந்தமாக "தீபம்' தொடங்கியதும் அவர் கதைகளை வெளியிட்டார்.

சுந்தர ராமசாமி அதிகம் எழுதும் எழுத்தாளர் இல்லை. அவசரப்படாமல்தான் எழுதி வந்தார். 1967-ஆம் ஆண்டில் சொந்தத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியால் ஏழாண்டு காலம் எழுதுவதையே விட்டுவிட்டார். படைப்பு மனம் மாறிவிட்டது. அது ஒரு மனோ நிலை. சிலர் எழுதிக் கொண்டும், பலர் எழுதாமலும் எழுத்தாளராகவே இருக்கிறார்கள். சிலருக்கு விட்டதைப் பிடிக்கும்போது கலையே உருமாறி விடுகிறது.

எழுத்து என்பது மனத்தில் சுரந்து வருவது. சிலருக்கு வற்றாது சுரந்து கொண்டே இருக்கும். சிலருக்கு சில ஆண்டுகள் சுரந்து வறண்டு போவதும் உண்டு. என்றும் சுரப்பவர்தான் எழுத்தாளர் என்றோ இடையில் விடுகிறவர் எழுத்தாளர் இல்லையென்றோ சொல்ல முடியாது. என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதுதான் படைப்புலகத்தில் முக்கியமாகக் கவனம் பெறுகிறது.

சில எழுத்தாளர்கள் முதல் நாவலில் தன்னை எழுத்தாளன் என்று நிலைநிறுத்திக் கொண்டுவிடுகிறார்கள். க.நா.சுப்பிரமணியம் முதல் நாவல் "சர்மாவின் உயில்', சி.சு. செல்லப்பாவின் "வாடிவாசல்', ஆர். சண்முகசுந்தரத்தின் "நாகம்மாள்', நீல பத்மநாபனின் "தலைமுறைகள்', அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்' எல்லாம் முதல் நாவல்கள்தாம். ஆனால் முதிர்ச்சி உள்ள நாவல்கள். ஒரு படைப்பைப் பாதியில் விட்டால், இணைப்பது என்பது அநேகமாக சாத்தியமில்லாமல் போகிறது. மிகச்சிறந்த கலைவாணர்கள் இரண்டு பகுதிகளையும் வெகு நுட்பமான முறையில் முடிச்சுத் தெரியாமல் இணைத்து விடுகிறார்கள்.

சுந்தர ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை' மிகவும் நேர்த்தியான விதத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இலக்கியம் என்பது பற்றி எத்தனைதான் சொன்னாலும், பூரணமாகச் சொல்லி முடித்துவிட முடியாது. ஒவ்வொரு சொல்லும் இன்னொரு சொல்லை எட்டியே செல்கிறது.

சுந்தர ராமசாமி விட்டதைப் பிடிக்கும் எழுத்தாளராகவே இருந்தார். அவர் உரைநடையில் சிறுகதைகள், நாவல்கள் எழுதியது போல புதுக் கவிதைகளும் எழுதினார். அவர் புதுக் கவிதைகள் தமிழில் எழுதப்பட்டு வந்த புதுக்கவிதைகள் மரபை ஒட்டி இல்லை. இருண்மை, தத்துவ விசாரணை கிடையாது. தீர்மானமான வெளிப்பாடுகள். ஆனால் சமூக விமர்சனம் செய்கின்றவை இல்லை. மனத்தை நெகிழ வைக்கும் புதுக்கவிதைகள் எழுதியது போல பிரகடனப்படுத்தும் கவிதைகளும் எழுதினார்.

அவர் புதுக் கவிதைகள் எழுதி வந்த காலத்தில் அவர்தான் புதுமையைச் சார்ந்திருந்தார்.

புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, க.நா. சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், சி.சு.செல்லப்பா இல்லை அவர். அவர்களைப் படித்திருந்தார். ஆனால் அவர்களை விட்டு ஒதுங்கி வெகுதூரம் வந்திருந்தார். அவரின் புதுக் கவிதைகள் மொழியும், சொல்லப்பட்ட கருத்தும், சொல்லிய விதமும் வசீகரம் கொண்டிருந்தன. அவருக்குத் தான் எழுதுவது பற்றி பூரண பிரக்ஞை இருந்தது. ஒவ்வொரு சொல்லின் சொல்லப்படும் அர்த்தமும், சொல்லப் படாத பொருளும் வாசிக்கும்போது புரிந்து கொள்ளும் விதமாக எழுதினார்.

"ஜே.ஜே. சில குறிப்புகள்' என்ற நாவல் 1981 - ஆம் ஆண்டில் நூலாக வெளிவந்தது. க்ரியா ராமகிருஷ்ணன் சிறப்பான முறையில் அச்சிட்டிருந்தார். "ஜே.ஜே. சில குறிப்புகள்' மலர்மன்னன் என்ற எழுத்தாளர் நடத்திய "கால்' என்ற காலாண்டு இதழில் பல பகுதிகள் வெளிவந்தன. "ஜே.ஜே. சில குறிப்புகள்' அது மரபான கதையில்லை. மொழி இறுக்கமாக இருந்தது. இலக்கியம் மொழியில்தான் எழுதப்படுகிறது என்றாலும் மொழியே இலக்கியம் கிடையாது. அதனை சுந்தர ராமசாமி அறிந்து கொண்டுதான் இருந்தார். ஆனால் எழுதுகிறபோது முறுக்கலான மொழிநடை நாவலை நிலைநிறுத்திவிடும் என்று எழுதி இருப்பது தெரிகிறது.

சுந்தர ராமசாமியின் "ஜே.ஜே. சில குறிப்புகள்' எழுதப்பட்ட புதுமொழி புதிய வாசகர்களுக்குப் பிடித்திருந்தது. அவர்கள் "ஜே.ஜே. சில குறிப்புகள்' போலதொரு நாவல் தமிழில் இல்லை என்றே கொண்டாடினார்கள். அவருக்கும் தமிழ் நாவலாசிரியர்கள் யார் மீதும் பெரிய அளவில் மதிப்பு இல்லை. அவருக்கு ஜானகிராமன், ஜெயகாந்தன் மீது சிறிது மதிப்பு இருந்தது. அதைத்தவிர அவர் மலையாள எழுத்தாளர்கள் தகழி, பஷீர், பொற்றே காட், கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி, காரூர், தாமஸ் மேல் எல்லாம் மதிப்பு கொண்டிருந்தார். அதுவே அவரை தகழியின் "தோட்டியின் மகன்' நாவலை இருபது இருபத்தொரு வயதில் மொழி பெயர்க்க வைத்தது. பின்னர் அவர் தகழியின் "செம்மீன்' நாவலை மொழி பெயர்த்தார்.

க.நா.சுப்ரமணியம், இந்திய எழுத்தாளர்களில் மலையாள எழுத்தாளர் பஷீரையும், கன்னட எழுத்தாளர்களில் மாஸ்தி வேங்கடேச ஐயங்கார், சிவராம் காரந்தையும் அங்கீகாரம் செய்தார். தமிழ் மக்கள் விரும்பிப் படித்து வந்த மராத்திய எழுத்தாளர் வி.ச. காண்டேகரை ஒதுக்கித் தள்ளிவிட்டார். அவர்தான் இலக்கியத் தரம் நிர்ணயிக்கக்கூடிய திறன் பெற்றவராக இருந்தார். அவரை ஏற்காதவர்கள் கூட, அவர் பட்டியலுக்கும், மதிப்புரைக்கும் மதிப்பளித்து வந்தார்கள். ஆனால் அவர் தன் குரலை உயர்த்தாமல் சொல்லவும் எழுதவும் கூடியவராக இருந்தார். ஒரு கவிதையை, சிறுகதையை, நாவலை வாசகன் படித்து தன் சொந்த அறிவால் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

இலக்கிய விமர்சனம் என்பது தங்கத் தட்டில் வைத்து வழங்கப்படுவது இல்லை என்று சொல்லப்படுவதுதான் அது.

கலையென்பதும், படைப்பு என்பதும் வித்தையல்ல. மூளையில் கட்டும் நேர்த்தியான கூடும் கிடையாது. ஓர் எழுத்தாளன் வாழும் காலம் முழுவதும் சிறந்த கதைகளையே எழுதி கொண்டிருக்க முடியும் என்பதோ, எழுதவேண்டும் என்பதோ விதி கிடையாது. சில மகோன்னதமான படைப்பு எழுத்தாளர்களுக்கு, ஒரு படைப்பு போதுமானதாக இருக்கிறது. அதுவும் முதல் படைப்பிலேயே சிலர் தங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகமான எண்ணிக்கையில் தரமான, மேலான படைப்புகள் எழுதினால்தான் படைப்பாளர் என்பது கிடையாது. தமிழ் மரபில் ஒரு பாடலுக்காக மூவாயிரம் ஆண்டுகளாகக் கவியென கொண்டாடப்படுகிற கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு கவிதை, ஒரு பாடல்தான் எழுதினார்கள் என்பதில்லை. தொகுப்பாளர்கள் ஒரு பாடல் போதுமென கருதி இருக்கிறார்கள். ஒரு பாடல் மூலமாக எல்லாக் காலத்திற்குமான கவியாகி இருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி எழுத்தைச் சமூகத்திடம் இருந்து பெற்றவர். அவர் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், மொழியென்பது பத்திரிகைகளின் மொழியில்லை.
"மணிக்கொடி'யில் வெளிவந்த புதுமைப்பித்தன் ந.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா சிறுகதைகளை அவரது தாயார் தங்கம்மாள் படித்துக் காட்ட கேட்டுக் கொண்டார். அதுவே அவரை வெகுஜன பத்திரிகை கதைகள் எழுதவிடாமல் தடுத்து நிறுத்தி, தனித்தன்மையோடு மிளிர வைத்தது என்று குறிப்பிட வேண்டும்.

இளம்பருவத்தில் புதுமைப்பித்தன் படைப்புகள் மீது அவர் கொண்ட ஈடுபாடு கடைசி வரையில் குறையவே இல்லை. இளம் பருவ இலக்கிய ஈடுபாடு, அக்கறை எல்லாம் காலம் போகப் போக ஐம்பது அறுபதுஆண்டுகளுக்குப் பின்னால் மாறிப் போவது உண்டு. அவரே முற்போக்குச் சித்தாந்தத்தின் மீதும், அதையொட்டி கதைகள் எழுதுவது என்பதையும் விட்டுவிட்டு தன்னையறிதலும் அறிந்ததைச் சொல்வதுமாக எழுத ஆரம்பித்தார். புதுமைப்பித்தனை அதிகமாக அவர் மதித்தாலும், அவர் படைப்புகள் மீது புதுமைப்பித்தன் பாதிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது.

புதுமைப்பித்தன் வேறு, தான் வேறு என்ற நிலைப்பாடே அவருடையது.

அவர் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், இலக்கிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதனை அறிந்தேதான் செய்தார் என்று குறிப்பிட வேண்டும். அவருக்குத் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரைப் பிரபல்யப் படுத்துவதில், அவரின் இலக்கிய மேதமையை எடுத்துச் சொல்வதில்தான் ஈடுபாடு இருந்தது. தெரிந்துதான் அதனைச் செய்தார் என்பதுதான் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது.

புதுமைப்பித்தன், சீடர்களை நேர்முகமாகவும், இலக்கிய வழியாகவும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார். ஆனால் தொ.மு.சி. ரகுநாதன் போன்று சிலர் சீடர்களாகி இருந்தார்கள். சுந்தர ராமசாமிக்கு பதின்மூன்று வயதாகும்போது புதுமைப்பித்தன் திருவனந்தபுரத்தில் காலமாகிவிட்டார். அவருக்குப் புதுமைப்பித்தன் அறிமுகம், பழக்கம் என்பது எல்லாம் புத்தகங்கள் வழியாகத்தான். அதுதான் படைப்பு இலக்கியம் என்பது. அதற்கு ஆசிரியர் உயிரோடு இருக்க வேண்டும் என்பது கிடையாது. பார்த்துப் பேசி அனுபவம் பெற வேண்டும் என்பதும் இல்லை. ஒரு படைப்பில் சொன்னதற்கு மேலாக, எழுத்தாளன் எதுவும் சொல்லிவிட முடியாது. சில அபூர்வமான எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் பற்றி பேசியும், எழுதியும் வதம் செய்திருக்கிறார்கள்.

அதுதான் ஜீவிதமான மரபு. ஒரு கவி, படைப்பு எழுத்தாளன் காலத்தில் வாழ்ந்து உரையாடி ஞானம் அடைவதை விட, அவன் படைப்புகள் வழியாக தானே ஞானம் அடைவதுதான் மகத்தான ஆளுமை. அதுதான் குருவை ஒழிக்கச் சொல்கிறது. பல கலைகள் ஒன்றாகச் சேர்ந்து இருந்தாலும், ஞானத்தின் வெளிப்பாடான எழுத்து என்பது தனித்துவம் கொண்டது. அது குடும்பப் பாரம்பரியம் கொண்டது இல்லை. பயிற்சி பெற்று கவியாகிவிட முடியாது.

மகத்தான கவிஞர், வியப்பூட்டும் எழுத்தாளர்கள், கதைகளையும் படிக்கலாம். ஆனால் அசல் எழுத்தாளன் தனக்குப் பிடித்தமான, பிடிக்காத எந்ததொரு எழுத்தாளனையும் பின்பற்றி எழுத முற்படுவது இல்லை. தான் விரும்பும் படைப்புக்கு இன்னொரு படி மேலே போக வேண்டும் என்பதுதான் எழுதும் எழுத்தாளர்கள், சொல்லும் இலட்சியமாகவும், சொல்லப்படாத இலட்சியமாகவும் இருக்கிறது.

""என்னை உருவாக்குவதில் பாரதிக்கு, புதுமைப்பித்தனுக்கு, ந.பிச்சமூர்த்திக்கு, க.நா.சுப்பிரமணியத்துக்கு, மலையாள மொழி எழுத்தாளர் எம்.கோவிந்தத்துக்குப் பங்கிருக்கிறது'' என்று சுந்தர ராமசாமி சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. அவர் நம்பியதைச் சொல்கிறார். படைப்பில் அது பூரணமாக இருக்கிறதா என்று பார்த்தால் அநேகமாக இல்லாமலேயே இருக்கும். எனவேதான் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு, எழுத தூண்டிய சக்தி, எழுதுவதற்கான காரணம் பற்றியெல்லாம் சொல்வதை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

தமிழ் மொழியே கவிதை மொழி. மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியம் என்பது கவிதையாகவே இருந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழி வழியாக, பிரிட்டிஷ், அமெரிக்கக் கவிதைகளைப் படித்த புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியம் எல்லாம் இலக்கணம் இல்லாமல் கவிதை எழுத ஆரம்பித்தார்கள். சொந்த மன உணர்வுகளைச் சொல்லும் விதமாகவும், சமூக விமர்சனமாகவும் இருந்த அவர்களின் கவிதைகளுக்குத் தமிழ்ப் பேராசிரியர்கள், முற்போக்குவாதிகளிடம் கடும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் வாசகர்களிடம் ஓரளவு ஆதரவு இருந்தது.

சி.சு.செல்லப்பா எழுத்துப் பத்திரிகை ஆரம்பித்ததும் அதில் தமிழ்ப் புதுக் கவிதைகள் முக்கியத்துவம் பெற்றன. அவர் பிச்சமூர்த்தி புதுக்கவிதைகளை வெளியிட்டு மகாகவி என்று எழுதினார். புதிதாகப் பலர் புதுக்கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். புதுக்கவிதை எதிர்ப்பாளர்களாக இருந்த தொ.மு.சி. ரகுநாதன், நா.பார்த்தசாரதி உட்பட பலரும் புதுக்கவிதை ஆதரவாளராக மாறினார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும் புதுக்கவிதைகள் எழுதினார்கள்.

(அடுத்த இதழில்)


****
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/feb/09/என்-பார்வையில்-சுந்தர-ராமசாமியின்-வாழ்க்கையும்-இலக்கியமும்-3353311.html
என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும், இலக்கியமும்

By - சா.கந்தசாமி | Published on : 09th February 2020 07:57 PM |



சென்ற இதழ் தொடர்ச்சி...

சிறுகதைகள் எழுதி வந்த ராமசாமி புதுக்கவிதை எழுத ஆரம்பித்தார். அவர் சிறுகதை எழுத்தாளர் என்று அங்கீகாரம் பெற்றிருந்தார். 1959 -ஆம் ஆண்டில் "எழுத்து'சிற்றிதழ் ஆசிரியருக்கு “"உன் கை நகம்'” என்ற புதுக்கவிதையை "பகவய்யா' என்ற புனைப்பெயரில் அனுப்பி வைத்தார். அதோடு அது ராமசாமி எழுதியது என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஏனெனில் தன் புதுக்கவிதை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதைஅறிய புது ஆளாகவே இருக்க ஆசைப்பட்டார்.

உன் கை நகம்

நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
அகிலமே சொந்தம் அழுக்குக்கு
நககண்ணும் எதற்கு அழுக்குக்கு
பிறான்டலாம் பிடுங்கலாம்
குத்தலாம் கிழிக்கலாம்
ஆரத் தழுவியஅருமை கண்ணாளின்
இடது தோளில்ரத்தம் கசியும்
வலது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
தாம்பத்திய பந்தத்தை விட்டுவிடு
தூக்கி சுமக்கும்அருமை குழந்தையின்
பிஞ்சு துடைகளில்ரத்தம் கசியும்
இடது கை நகத்தை வெட்டியெறி - அல்லது
குழந்தை சுமப்பதை விட்டுவிடு
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
குறும்பை தோண்டலாமே - காதில்
குறும்பை தோண்டலாமே
குறும்பைக்கு குடியிருப்பு
குடலுக்கு குடி மாற்றம்
குருதியிலும் கலந்து போம் - உன்
குருதியிலும் கலந்து போம்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்
நகத்தை வெட்டி எறி- அழுக்கு சேரும்

"புதுக்கவிதை என்பது இலக்கணம் இல்லாதது மட்டும் இல்லை. அதில் சொல்லப்படும் கருத்தும் புதுமையாக இருக்கவேண்டும்; சொற்களும் வழக்கமாகப் பயன்பாட்டில் உள்ளனவாகப் பெரும்பாலும் இருக்கக் கூடாது'என்று க.நா.சுப்பிரமணியம் சொல்லி வந்தது ராமசாமிக்கு ஏற்புடையதாகவே இருந்தது. அதனை அவரின் முதல் புதுக்கவிதையான "உன் கை நகம்' என்பதன் வழியாகவே தெரிந்தது.

"உன் கை நகம்' எழுத்தில் வெளி வந்ததும் கவனம் பெற்றது.ஆனால் அது ஓர் புதுக் கவிஞர் புதுக் கவிதை இல்லை; தேர்ந்த எழுத்தாளர் எழுதியது என்று அனுமானிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கவிதைக்காகவே கவனிக்கப்பட்டது. அது அவருக்கு உற்சாகம் அளித்தது. சமூகம், வாழ்க்கை என்பன பற்றி மிகவும் தீவிரமாக விமர்சனம் செய்யும் புதுக்கவிதைகளையும் எழுதி வந்தார்.

1964 -ஆம் ஆண்டில் சுந்தர ராமசாமியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான "பிரசாதம்' வெளிவந்தது. முதல் சிறுகதைத் தொகுப்பான "அக்கரைச் சீமையிலே' தொகுப்பில்இருந்து முற்றிலும் மாறான ஒரு சிறுகதைத் தொகுப்பு. கருத்தும், மொழியும் மாறி விட்டிருந்தது. "பிரசாதம்' தொகுப்பில் இடம்பெற்றபல கதைகள் விஜயபாஸ்கரனின்,"சரஸ்வதி'யில் வெளிவந்தவையாகும். அது முற்போக்கு இதழ்தான். ஆனால் விஜயபாஸ்கரன் பலவிதமான சிந்தனைப் போக்குகளுக்கும் இடம் கொடுப்பவராக இருந்தார். தொ.மு.சி. ரகுநாதன், க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா, ஜெயகாந்தன், வல்லிக் கண்ணன், சுந்தர ராமசாமி எல்லாம் "சரஸ்வதி'யில் எழுதினார்கள்.

1957-58-ஆம் ஆண்டுகளில் சுந்தர ராமசாமி மொழி பெயர்த்த தகழியின் "தோட்டியின் மகன்' நாவல் தொடராக வெளிவந்தது. அவர் "சரஸ்வதி'யில் சிறுகதைகள் எழுதி வந்தார். எனவே ஒரு மாறுதலுக்காக என்.எஸ்.ஆர். என்ற புதுப் பெயரில் மொழிப் பெயர்ப்பாளர் குறிப்பிடப்பட்டிருந்தார். என்.எஸ்.ஆர் என்பது நாகர்கோவில் சுந்தரம் ஐயர் ராமசாமி என்பதுதான்.

2000-ஆம் ஆண்டில் "தோட்டியின் மகன்'நூலாக வெளிவந்தது. நாவல் மொழி பெயர்க்கப்பட்டு ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் நூலாக வந்தது. முன்னுரையில் எழுதினார். "மலையாளத்தில் "தோட்டியின் மகன்'வெளிவந்த காலத்தில் இருந்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நாவல். மேடையிலும் எழுத்திலும் அங்கு நடந்த விவாதங்கள் என நினைவில் இருக்கின்றன. ஆனால் "சரஸ்வதி'யில் இந்நாவல் தொடர்கதையாக வந்தபோது வாசகர் கவனத்தை இந்த தொடர் பெற்றதற்கான எந்த அடையாளமும் என்னிடம் வந்து சேரவில்லை. யாரும் இந்த நாவலைப் பற்றி இன்று வரையிலும் எழுத்திலோ, பேச்சிலோ, குறிப்பிட்ட நினைவும் இல்லை.'

சுந்தர ராமசாமி எழுத்தாளராக இருந்தது போலவே படிக்கக் கூடியவராகவும், படித்ததைப் பற்றிச் சொல்லக் கூடியவராகவும் இருந்தார். ஒரு முறைதான் படிப்புப் பற்றி பின் வருமாறு குறிப்பிட்டார்:

""இந்த நூற்றாண்டில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் பலருடைய நூல்களையும் நான் படித்திருக்கிறேன். முக்கியமாகச் சிறுகதைகள், நாவல்கள், சமூக விமர்சனங்கள், இலக்கிய விமர்சனங்கள், சமயம் சார்ந்த புத்தகங்கள், மொழி பெயர்ப்புகள், சமயத்துக்கெதிரான புத்தகங்கள், ஆன்மிகத்தைப் பற்றி விளக்கும் புத்தகங்கள் என்று பல. குறைந்தது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் மீதாவது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். உங்கள் முன் அந்த ஆசிரியர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வரிசைப்படுத்திக்கொண்டு போவது என் உணர்ச்சிகளை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய ஒருவிஷயம்.

நான் வாசிப்பில் நம்பிக்கைகொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு மேற்பட்ட எந்தத் தகுதியையும் நான் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. புலவர் என்றோ அறிவாளி என்றோ, சிந்தனையாளர் என்றோ ஒருவர் என்னை அழைத்தால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அழைப்பது அவர் சுதந்திரம். ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது என் சுதந்திரம். அத்துடன் நான் சீரான படைப்பாளியும் அல்ல. ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்து அந்த விஷயத்தை சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு பொருள் சார்ந்த தேர்ச்சியைப் புத்தகங்களின் மூலம் உருவாக்கிக் கொள்ளும் பழக்கம் என்னிடம் கிடையாது. ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கும், ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்கும், ஓர் ஆசிரியரிடமிருந்து மற்றொரு ஆசிரியருக்கும், என் விருப்புகள் சார்ந்து என் மனோநிலை சார்ந்து தாவிக் கொண்டே இருப்பேன். எனக்குச் சில அக்கறைகள் இருக்கின்றன. இடங்கள் சார்ந்த அக்கதைகள், காலங்கள் சார்ந்த அக்கறைகள், மனித உறவுகள் சார்ந்த அக்கறைகள், கடவுள் சார்ந்த அக்கறைகள், கடவுள் மறுப்பு சார்ந்த அக்கறைகள், தத்துவம் சார்ந்த அக்கறைகள், மனிதர்கள் சார்ந்த அக்கறைகள், மனித உறவுகள் சார்ந்த அக்கறைகள் இவையெல்லாம் இருக்கின்றன. இந்த அக்கறைகள் மனதில் சில ஆவல்களை உருவாக்குகின்றன. இந்த ஆவல்களைத் தீர்க்க நான் புத்தகங்களைப் படிக்கிறேன்.''

""1948ஆம் அண்டி வாக்கில் க.நா. சுப்பிரமணியம் முதல் நாவலான "சர்மாவின் உயில்' படித்தேன். என்னைக் கவரவில்லை'' என்கிறார்.

க.நா.சுப்பிரமணியம் வீட்டில் ஆர்.சண்முகசுந்தரம், கம்பதாசனையும் சந்தித்தது பற்றி எழுதியுள்ளார். அவர்கள் ""என்னிடம் பேசியது இல்லை. க.நா. சுப்பிரமணியத்திடம் பேச வருவார்கள். இரண்டு மணிநேரம் போல காத்திருந்ததுகூட ஏதாவது பேசி விட்டுப் போவார்கள்'' என்று பதிவு செய்திருக்கிறார்.

ஆர்.சண்முகசுந்தரம் க.நா.சுப்பிரமணியம் பாதிப்பால்தான் "நாகம்மாள்' எழுதினார் என்பதை விமர்சனமாகச் சொல்கிறார். அவர் இலக்கியத்தை முன்னெடுத்துச் சொல்ல இலக்கியக் கூட்டங்கள் நடத்தினார். 1988-ஆம் ஆண்டில் "காலச்சுவடு' ஆரம்பித்தார். சில இதழ்கள் கொண்டு வந்தார். அதில் இடர்ப்பாடுகள் ஏற்பட்டதால் நிறுத்தி விட்டார்.

சுந்தர ராமசாமி இன்னொருவர் பேசுவதை கவனமாகக் கேட்கக் கூடியவராக இருந்தார். அதோடு அவர் இரண்டு மூன்று பேர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது குறுக்கில் புகுந்து தன் கருத்துக்களைச் சொன்னது கிடையாது. கூட்டத்தில் பேசப்படும் ஒவ்வொரு சொல்லையும் உன்னிப்பாக செவி மடுப்பவராகவே இருந்தார்.

"நான் அவரை சென்னையிலும், டில்லியிலும் பல முறைகள் சந்தித்திருக்கிறேன். அவர் பேச்சைக்கேட்கும் தோரணை, "இன்னும் கொஞ்சம் பேசுங்கள்' என்று கேட்கக் கூடியதாகவே இருக்கும். அவர்கள் க.நா.சுப்பிரமணியத்திடம் எவ்வளவு தெளிவாகக் கேட்டுக் கொண்டாரோ அப்படியே மற்றவர்களிடமும் கேட்டுக் கொண்டார். ஆனால் எழுதும் அவர் அப்படி இல்லை. தீர்மான முடிவுகள் அடிப்படையில் எழுதினார். "கொஞ்சம் குரலை உயர்த்தி கூடுதலாகவே எழுதினார்' என்று அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்.

ஒரு முறை "ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர் எம்' என்று அறியப்படும் "மகேந்திர குமார் டைரி' குறிப்புகளைப் படிக்கச் சொன்னார். மேலும், ""தமிழில்வேண்டாம். ஆங்கிலத்தில் படியுங்கள். அதுவும் வங்க மொழியின் மொழி பெயர்ப்புதான். ஆனால் படிக்க வசீகரமாகவும், எளிதில் புரியக்கூடியதாகவும் இருக்கிறது'' என்றார்.

“""என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?''” என்று கேட்டபோது, “""வங்கமொழி எழுத்தாளர் தாராசங்கர் பானர்ஜியின்"ஆரோக்கிய நிகேதன்' படித்துக்கொண்டு இருக்கிறேன். கிராம வாழ்க்கையைச் சொல்லும் சிறப்பான நாவல். சாகித்திய அகாதெமி வெளியிட்டு இருக்கிறது''” என்றார். பிறகு “""தமிழில் மொழி பெயர்ப்பு வந்திருக்கிறதா?''” என்று கேட்டார்.

“""அநேகமாக இல்லை''”

“""விரைவில் வெளிவந்துவிடும். அவசியம் படியுங்கள். உங்களுக்குப் பிடிக்கும்''” என்றார்.

த.நா.குமாரசாமியின் தமிழ் மொழி பெயர்ப்பில் வெளிவந்தது. அவர் வீட்டுப் பக்கத்தில்தான் நான் குடியிருந்தேன். ஒருநாள் என்னை அழைத்து அற்புதமான நாவல் என்று சொல்லி கையெழுத்து இட்டுக் கொடுத்தார். படித்தேன். அது அசலான இந்திய நாவல்தான்.

சுந்தர ராமசாமி புத்திசாலியான படைப்பு எழுத்தாளர். நுணுக்கமாகவும், ஆழமாகவும் எதைப் பற்றியும் சொல்லக் கூடியவர்.

சுந்தர ராமசாமியின் மாமா நாராயணன் சென்னையில் தியாகராய நகரில் வசித்து வந்தார். அவர் சினிமாவில் என்னென்னவோவேலைகள் செய்து கொண்டிருந்தார். சிறிது காலம் "துக்ளக்' பத்திரிகையில் "பரந்தாமன்' என்ற பெயரில் எழுதி வந்தார். அவருக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது அபரிதமான ஈடுபாடு. எனவே கலைவாணர் கிருஷ்ணன் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வந்தார். பல சினிமாக்காரர்கள், எழுத்தாளர்களை எல்லாம் அழைத்து பேச வைத்துக் கொண்டிருந்தார். நானும் பரந்தாமனும் நந்தனம், தியாகராயர் நகர் பகுதிகளில் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அவரிடம் பேச நிறைய அரசியல், இலக்கியம், சினிமா சம்பந்தப்பட்ட அம்சங்கள் இருந்தன.

சுந்தர ராமசாமி, நாராயணன் என்ற பரந்தாமன் பற்றி மனம் நெகிழும் விதமாக சிறிது எழுதியிருக்கிறார்.

தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபாவில் நடைபெற்ற மகாத்மா காந்தி பற்றிய கூட்டத்தில் அவரைச் சந்தித்தேன். அவர் வீடு அருகில் இருந்தது. வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் காபி கொடுத்து உபசரித்தார். வீடு நிறைய கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை, நாடகம், சினிமா பற்றிய தகவல்கள் கொண்ட காகிதங்களை கட்டி வைத்திருந்தார். ""கலைவாணர் பற்றி ஒரு சரியான வாழ்க்கைச் சரித்திரம் எழுதப் போகிறேன். அந்த வேலையாகத்தான் அலைந்து கொண்டு இருக்கிறேன்'' என்றார். அவர் ஆர்வம் உண்மையானது. ஆனால் அது சாத்தியப்படாமல் போய்விட்டது.

நாராயணன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ""ராமசாமியைப்பார்த்தீர்களா?'' என்று கேட்பார். நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம், ""ராமசாமி சென்னைக்கு வந்திருக்கிறாரா'' என்று கேட்பேன்.

ஒருமுறை நானும், என் நண்பருமான நா.கிருஷ்ணமூர்த்தியும், சென்னை கோபாலபுரத்தில் சுந்தர ராமசாமியைச் சந்தித்திருந்தோம். அவர் சோர்ந்து போய் இருந்தார். என்னவென்று விசாரித்தோம். மூத்த மகள் செளந்தராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றார். நாங்கள் அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு விடை பெற்றுக் கொண்டோம்.

1991 -ஆம் ஆண்டில் அவரை தியாகராய நகரில் சந்தித்தேன். இரண்டு பேரும் நல்லி ஜவுளி கடைக்கு அருகில் இருந்த பார்க்லேண்ட் ஓட்டலுக்கு வந்து காபி சாப்பிட்டோம். பிறகு பனகல் பூங்காவிற்கு வந்தோம். சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு உலக இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கியப் பரிசுகள், வெகுமதிகள், விமர்சனங்கள் பற்றி பேசி கொண்டிருந்தோம். இரண்டு மணிநேரம் சென்று விட்டது. பின்னர் எழுந்தோம்.

""மகள் எப்படி இருக்கிறார். உடம்பு சரியாகி விட்டதா?'' என்று கேட்டேன்

“""இல்லை. அவள் போய்விட்டாள்''” என்றார்.

நான் அவரையே பார்த்தபடி இருந்தேன்.

“""கேன்சர். ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள்''” என்றார்.

கீதா தர்மராஜன் என்ற தமிழகப் பெண்மணி கதா என்ற அமைப்பை டில்லியில் ஏற்படுத்தி தமிழ்ச் சிறுகதைகள், நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். கதா 2003 -ஆம் ஆண்டு "கதா சூடாமணி' என்ற வெகுமதியை சுந்தர ராமசாமிக்கு வழங்கியது. அதற்கான விழா கோலாகலமாக டில்லியில் உள்ள இந்தியா இண்டர்நேஷனலில் நடபெற்றது. டிசம்பரில் நல்ல குளிர்காலத்தில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற விழாவில் கம்பளி உடை, தலைக்குல்லாய் அணிந்து, அனல் காய்ந்து கொண்டு அவர் ஏற்புரையை வழங்கினார். தமிழில்தான் பேசினார். அவர் நிதானமாக தீர்மானமான தொனியில் பேசினார். விழா முடிந்ததும், பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

அவர் மேடையை விட்டு இறங்கி வந்ததும் முன்னே சென்று வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் என் கையைப் பற்றிக் கொண்டு, “""நாகர்கோவிலுக்கு வந்திருக்கிறீர்களா?''” என்று வினவினார்.

“""இல்லை. ஆனால் வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது''” என்றேன்.

“""அவசியம் வாருங்கள். என் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருக்கலாம். நான் மூன்று மாதங்கள் நாகர்கோவிலில்தான் இருக்கிறேன். பிறகு அமெரிக்கா போகப் போகிறேன்''” என்றார்.

அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தார். நான் நாகர்கோவில் செல்ல முடியாமல் போய்விட்டது.

2005 - ஆம் ஆண்டில் சுந்தர ராமசாமி தன் எழுபத்து நான்காவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.

அவர் தனித்துவம் மிக்கத் தமிழ் எழுத்தாளர். மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதியவர். எழுத்துக்கு இலக்கியப் பூர்வமாகப் பலனுண்டு என்று எழுதியவர். அதோடு எழுத்தாளன் படைப்பு சுதந்திரம் பற்றித் தன்னளவில் அறிந்து கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயேஎழுதினார். எழுத எழுத அவர் எழுத்துகளில் வீரியம் கூடியது. அவர் சிறுகதைகளில் "தண்ணீர்', "பிரசாதம்', "வாழ்வும்வசந்தமும்', "விசாகம்'மிகவும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய சிறுகதைகள். நாவல்களில் "ஒரு புளிய மரத்தின் கதை' குறிப்பிடப்படவேண்டியது. நவீன தமிழ் இலக்கியத்தில் அவர் படைப்புகள் அசலான படைப்புகள் என்ற வகையில் இடம் பெறுகின்றன.

சுந்தர ராமசாமி 1988 -ஆம் ஆண்டில் கேரளாவில் உள்ள "குமாரன் ஆசான் விருதை' கவிதைக்காகப் பெற்றார்.

2001 -ஆம் ஆண்டுகனடா நாட்டில் டொரண்டோவில் வழங்கப்படும் "இயல்' விருது பெற்றார். 2003 - ஆம் ஆண்டில் அவருக்கு கீதா தர்மராஜன் கதா அறக்கட்டளை, "கதா சூடாமணி' விருது வழங்கியது.

சுந்தர ராமசாமி தமிழ் எழுத்தாளர். அவர் தன் படைப்புக்களைத் தாய்மொழியான தமிழில்தான் எழுதினார். ஆனால் அவர் படைப்புகள் மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஹீப்ரு, ஜெர்மன் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

1966 -ஆம் ஆண்டில், தன் முப்பத்தைந்தாவது வயதில் சுந்தர ராமசாமி, "நானும் என் எழுத்தும்'கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்.

"வாழ்வின் அந்திமத தசையில் இவ்வாறு கூறிக்கொள்ள முடிந்தாலே போதும். என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான். எனினும் அந்தச் சொற்பமான கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசி வரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த மொழியை மலினப் படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக் கொண்டேன். இவ்வளவு போதும் எனக்கு.' சொல்லப்பட்டதற்கு அப்பால் சொல்லப்படாததையும்,சொல்லப்படாததின் வழியாக அறியத்தக்கதையும் சொல்வதுதான் இலக்கியம்.

சுந்தர ராமசாமி அதனையே கூர்ந்து எழுதி வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

(21.11.2019 சென்னை சாகித்திய அகாதெமி அரங்கில் ஆற்றிய உரை)