Wednesday 29 March 2017

போர்ஹே பற்றிய தகவல்கள் - Kaala Subramaniam, Vasu Devan


Kaala Subramaniam added 4 new photos.
23 March at 23:51 ·



போர்ஹே பற்றிய தகவல்கள்
-------------------------------------------

Vasu Devan
போர்ஹே தன் வாழ்நாளில் 101 சிறுகதைகளை மட்டுமே எழுதினார். ( Jorge Luis Borges- Collected Fictions- Penguin வெளியிட்ட மொத்த தொகுப்பில் 101 சிறுகதைகள் உள்ளது). இதைத்தவிர அவர் கவிதைகள் மற்றும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். நாவல் எழுதவில்லை. போர்ஹெ கையாண்ட சொற்சிக்கனம், மொழிவளம், சக பிரதியியல் கூறுகள் (Inter Textuality), சுட்டுப்பொருள் ( Denotative), பண்டைய தொன்ம குறிப்புகள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு புதிய அர்த்தத்தை வழங்கிய வண்ணம் உள்ளது. அவர் கையாண்ட பதங்கள், வாக்கிய அமைப்பு, கச்சாப்பொருள் அடர்த்தி மிகுந்தவை. அதனால்தான் அவருடைய படைப்புகள். பலமுறை வாசித்தாலும் அவ்வளவு எளிதில் போர்ஹே பிடிபடமாட்டார். எந்த ஒரு கோட்பாடு மற்றும் இலக்கிய வகைமையிலும் அவர் எழுத்தை நிறுத்த முடியாது.,,,,,,,


அவருடைய சிறுகதைக்கான கச்சாப் பொருள் நாம் நினைத்து பார்க்கமுடியாத காலக்கட்டத்தில் அரங்கேறி பல சகப் பிரதியியல் கூறுகளோடு கதையாடலை பிரதியில் அரூபமாக எழுதிச்செல்கிறார். ஏனெனில் தன் வாழ்நாள் முழுவதும் புத்தகங்களோடு வாழ்ந்தவர். வாசிப்பு, வாசிப்பு, வாசிப்பு என்ற செயலை அயராமல் தன் வாழ்நாளில் கடைபிடித்தவர்.…. அவர் கையாண்ட பல பதங்களுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கவே ஒரு வாசகன் தீவிரமாக உழைக்க வேண்டும். ஒரு நேர்காணலில் “ நீங்கள் என்னவாக நினைக்கூறப்படவேண்டும்?” என்ற கேள்விக்கு, அடக்கமாக போர்ஹே சொன்ன பதில், “ நான் எழுத்தாளன் இல்லை..ஒரு வாசகன்” என்றார்.
-The Theme of the Traitor and the Hero என்ற சிறுகதையில் ’Moab’ என்ற வார்த்தையை கையாண்டிருப்பார். பலருக்கு இதன் பொருள் பிடிபடாது. ஜோர்டானுக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தை மோசஸ், பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டதை போர்ஹே இந்தக்கதையில் கையாண்டிருப்பார்.
- Funes, His Memory என்ற சிறுகதையில் Quebracho என்ற வார்த்தை, உருகுவேவில் 19ம் நூற்றாண்டில், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எழுச்சிப்பெற்ற புரட்சிப் படையை குறிக்கிறது.
-The Secret Miracle சிறுகதையில் வரும் Abenesra என்பவர் 11-12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்பானிஷ் கவிஞர்/சிந்தனையாளர்.
போர்ஹே கையாண்ட (இத்தகைய) புதிரான பதங்களுக்கு பிரத்யேகமான அகராதியை தொகுத்துள்ளார்கள். அநேகமாக, உலக இலக்கிய வரலாற்றில் ஒரு எழுத்தாளரின் படைப்புகளுக்கு அகராதி தொகுத்தது போர்ஹேவுக்கு மட்டுமே நடந்துள்ளது. ( பல எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு கையேடுகள் வந்துள்ளது).

Kaala Subramaniam
Adolfo Bioy Casares உடன் சேர்ந்து இரு நாவல்களை போர்ஹே எழுதியுள்ளார். அதில் 1942ல் எழுதி 1981ல் ஆங்கிலத்தில் வெளியான Six Problems for Don Isidro Parodi என்ற துப்பறியும் நாவல் படிக்கக் கிடைப்பது. நிற்க. ஜேஆர்ஆர் டோல்கின்-க்கும் சிறந்த அகராதி உள்ளது.

Vasu Devan
1942ம் வருடம் ஸ்பானிஷ் மொழியில் Bustos Domecq என்பவர் எழுதியது என 160 பக்கங்களில் நீங்கள் குறிப்பிட்ட நூல் வெளிவந்தது. Bustos Domecq என்பவர் இரு எழுத்தாளர்களின் புனைப்பெயர். அதாவது போர்ஹே மற்றும் பாய் கசரேஸ் எழுதியது இந்நூல். இருவரும் திட்டமிட்டபடி ஒரு புதிய புனைவு எழுத்தாளரை உருவாக்கியதை பல ஆய்வாளர்கள் Biorges என்ற பெயரிலும் அழைத்தனர். இது ஆறு அத்தியாயங்களில் சிறுகதை வடிவத்தில் எழுதப்பட்ட துப்பறியும் கதை. பரிட்சார்த்த முறையில் எழுதப்பட்ட இந்நூல், அவ்வளவாக கவனம் பெறவில்லை. மேலும் போர்ஹே, சிறுகதைக்களூக்கான அவரின் பங்களிப்புக்கே உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறார். மற்றபடி, தனிப்பட்ட முறையில் டோல்க்கினையும், போர்ஹேவையும் ஒப்பிடுவது சரிபடவில்லை. டோல்க்கின் படைப்புகளுக்கு அகராதி வெளிவந்திருக்கலாம். ஆனால் டோல்க்கின் ஒரு Fantasay Writer. இம்மாதிரி எந்த கண்ணீயிலும் சீரியஸ் எழுத்தாளரான போர்ஹேவை அடைக்க முடியாது என்பது என் கருத்து.

Kaala Subramaniam
1, Jorge Luis Borges &Adolfo Bioy Casares. Chronicles of Bustos Domecq (1982)
2, Jorge Luis Borge. Evaristo Carriego (A Book About Old-time Buenos Aires) (1984)
3, Jorge Luis Borges, ADOLFO BIOY-CASARES. Six Problems for Don Isidro Parodi (1981)
வாசகர்களுக்குத் தகவலுக்காக.

Vasu Devan
மிக்க நன்றி. பிரமிளை தவிர, போர்ஹேவையும் பற்றியும் நீங்கள் வாசகர்களுக்கு தெரியப்படுத்தியது ஆச்சரியமாகவும், மகிழ்சியாகவும் உள்ளது...

Kaala Subramaniam
சிறுகதைகளாக ஒரு நாவல் எழுதப்படலாம். அப்டைக்கின் பெக் எ புக் ஒரு உதாரணம். Evaristo Carriego வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளையும் இலக்கிய விமர்சனங்களையும் கொண்ட நாவல் எனவும் சொல்ல வாய்ப்புள்ளது. ஏனெனில் இலக்கிய விமர்சனங்களையே சிறுகதை உத்தியாகப் பயன்படுத்தியவர் தானே போர்ஹே. நாவல் எழுதமுடியாத சோம்பேறித்தனம் உள்ளவன் தான் என்று அவர் சொல்லியுள்ளார், நாவலையும் சிறுகதையாகத்தான் எழுதுவேன் என்கிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் (பிறர் சிக்கல்கள் தீர்க்கப்படுதல்) தனித்தனியானவை. Don Isidro Parodi கதைகள் (தன் சிக்கல்கள்?) இணைந்தவை எனவும் சொல்லக்கூடும். ஃபெண்டாஸ்டிக் ரியலிசம் என்ற இலக்கியப் போக்கை உருவாக்கியவராக போர்ஹே (தனது முன்னோடிகளை அவர் வழிமொழிந்தாலும்) மேஜிக்கல் ரியலிசம், காமிக்கல் ரியலிசம் இத்யாதியெல்லாம் பெயர்பெறாததற்கு முன்பே போற்றப்பட்டவர். சீரியஸ் இலக்கிய உலகின் ஒரு சிகரம். டோல்கின் ரியலிஸ்ட்டிக் ஃபேண்டஸியை உருவாக்கியவர். மிடில் எர்த் என்ற உலகை நிஜமாக உருவாக்கியவர். அதற்காக மொழியை, தொன்மங்களை, வரலாறுகளை, நாட்டார் வழக்காற்றியலை (துல்லியமாக கச்சிதமாக உண்மையிலேயே) உருவாகியவர். ஓராயிரம் பக்கங்கள் கொண்ட நாவலுக்கு பல ஆயிரம் பக்கங்களில் இவற்றை அவர் செய்தார். அவரது இலக்கிய வகையில் அவர்தான் தனிப்பெரும் சிகரம். சயன்ஸ் ஃபிக்சன், ஃபேண்டஸி இலக்கியம் என்பன ஜனரஞ்சக வகையாக, எஸ்கேபிஸ்ட் இலக்கியமாக கருதப் பட்டது போய் அவற்றிலும் கிளாஸிக்கலான, நியூவேவ், சைபர்பங், போஸ்ட் மார்டன் வகை எழுத்துக்கள் வந்துள்ளன. வெல்ஸ், பிரையன் அல்டிஸ், வில்லியம் கிப்ஸன் என்று. ஏன் சீரியஸ் இலக்கியத்தின் கர்ட் வானெகட் ஜுனியர், வில்லியம் பர்ரோஸ் என்று. தப்பித்தல் இலக்கியம் பற்றி தான் தொகுத்த அருமையான ‘காலக்டிக் எம்பயர்’ முதல் தொகுப்பின் முன்னுரையில் டோல்கினின் ஒரு கூற்றை ஆல்டிஸ் எடுத்துக்காட்டியது நினைவுக்கு வருகிறது. “ஜெயிலில் இருந்து தப்பித்தோடலை ஜெயிலர்தான் குற்றமாகப் பார்ப்பான். தப்பித்தவனுக்கோ அதுதான் விடுதலை.

Six Problems for Don Isidro Parodi என்ற நூல் உண்மையில் comic detective fiction என்றுதான் சொல்லப்படுகிறது. சிறுகதைகள் என சொல்லாமல் புனைகதை என்று - நாவலுக்கும் சிறுகதைக்கும் உள்ள பொதுவான வார்த்தையில் - அழைக்கப்படுகிறது. Collected Fictions என்ற மொத்தத் தொகுப்பிலும் அவ்வாறே காணலாம்.

• Un modelo para la muerte, 1946, detective fiction, written with Adolfo Bioy Casares,
• Dos fantasías memorables, 1946, two fantasy stories, written with Adolfo Bioy Casares.

பின்னூட்டங்கள்
--------------------------

Thuraiyur Saravanan
நீங்கள் போர்ஹே பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியவை உன்னதத்தில் மொழிபெயர்த்தவை மற்றும் உங்களின் பல்துறைசார்ந்த பங்களிப்புகளை இன்றைய வாசகர்கள் எந்தளவு தேடிப் படித்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. இன்றைய நிலையில் இணையத்தில் வாசிப்பவர்களுக்கும் பதிவர்களுக்கும் உங்கள் பதிவுகளும் பின்னூட்டங்களும் மேலு‌ம் ஆழமாக வாசிக்கவும் சிந்திக்கவும் உந்துதல் தரும்.

Muthu Kumar
டினொடேஷன் என்றால் சுட்டுப்பொருள், இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி சகபிரதியியல் கூறுகள் என்றெல்லாம் தப்பும் தவறுமாக புரிந்து கொண்டு வெறும் தகவல் குப்பைகளை மட்டும் கொட்டுவது என்று எந்த பீறாய்ந்தயாரும் செய்யக்கூடியதை வைத்து போர்ஹேயை புரிந்து கொள்ள முயற்சிப்பது அபத்தமாகும். அதாவது டினொடேஷன் என்றால் வார்த்தையின் தன்மைநவிற்சிப் பொருள், வெளிப்படைப் பொருள் அதாவது வார்த்தை ஏற்படுத்தும் அகவியல் சலனங்கள், அறிவார்த்தக் கருத்துக்கள், உட்பொருள் ஆகியவற்றுக்கு மாறானதே டினொடேஷன். மாறாக கனடேஷன் இருப்பதாகக் கூற வேண்டும், டினொடேஷன் இருக்கிறது என்றால் வெளிப்படையான பொருள், எல்லோருக்கும் தெரிந்த பொருள் என்பதையே குறிக்கும் அகராதியே போடப்படும் ஒரு எழுத்தாளருக்கு டினொடேஷன் (அதுவும் சுட்டுப்பொருளாம்) இருக்கிறது என்றால் அன்பரின் ’தேர்ந்த புலமை’ யை யாதென அழைப்பது? ரெஃபரன்ஷியல் மீனிங் என்பதைத்தான் சுட்டுப்பொருள் என்போம் அல்லது இண்டெக்ஸ் என்பதை சுட்டுப்பொருள் என்போம். அன்னாரின் வெற்றுச் சலசலப்புகள் ஓய்வது எப்போது?

அது என்ன பண்டைய தொன்மக் குறிப்புகள்? அப்படியென்றால் நவீனத் தொன்ம குறிப்புகள் என்று ஏதாவது உண்டா? அல்லது தற்கால தொன்மக்குறிப்புகள் என்று ஏதாவது உள்ளதா? \\எந்த ஒரு கோட்பாட்டு, இலக்கிய வகைமையிலும் அவர் எழுத்தை நிறுத்த முடியாது\\ தனது புரியாமையையும், இருண்மைகளையும் குருட்டுத் தனங்களையும் இப்படி ஒருவர் சொல்லிக் கொள்ளலாம்.

\\அவருடைய சிறுகதைக்கான கச்சாப் பொருள் நாம் நினைத்து பார்க்கமுடியாத காலக்கட்டத்தில் அரங்கேறி பல சகப் பிரதியியல் கூறுகளோடு கதையாடலை பிரதியில் அரூபமாக எழுதிச்செல்கிறார்\\

இதில் ஏதோ மொழிபெயர்ப்புக் கோளாறு உள்ளது, ஏனெனில் கச்சாப்பொருள் எப்படி காலக்கட்டத்தில் அரங்கேறும்? மேலும் சகப் பிரதியியல் என்பது பல சகப்பிரதியியல் ஆனது எப்படி? முதலில் இயல் என்று கூறலாமா? இயல் என்றால் உண்மையான அர்த்தம் தெரியுமா? இப்படி எந்த வார்த்தைக்கும் ஒரு அர்த்தமும் விளங்காதவரெல்லாம் போர்ஹேயையும் ஜாய்சையும் எழுதுவது காலக்கொடுமை என்று கூறாமல் ’யாதென அழைப்பாய்?’இண்டெர்டெக்ஸ்சுவாலிட்டி என்பது ஊடுபிரதி, அல்லது இடைவெட்டுப் பிரதி, இது மூலப்பிரதியின் தனித்துவத்தையும், ஏகபோக உரிமையும், ஆசிரிய அகங்காரத்தையும் கேள்விக்குட்படுத்தும் ஒரு கோட்பாடு, இது ஒரே பிரதிக்குள் பலபிரதிகள் ஊடாடும் ஒன்றுக்கொன்று மோதும், இணையும், லீலாவிநோதமான ஒரு மொழியியல் செயல்பாடு, இதில் agonistics என்ற முரண்கள், முட்டி மோதல்கள் இருக்குமே தவிர சில அரிய வேளைகளில்தான் ‘சக’ கைகூடும். அதனை சகபிரதியியல், அதுவும் கூறுகள் என்றெல்லாம் கூறுகெட்ட விதத்தில் எழுதுவது அக்கோட்பாடுகளின் வீரியமழிப்புச் செயல் இல்லாமல் வேறு என்னவாம்? Moab பற்றி விக்கிப்பீடினால் தகவல் கிடைக்கிறது, பலருக்கும் பிடிபடாத இந்தப் பொருள் இவருக்குப் பிடிபட்டு விட்டதாம். என்ன போலித்தனம்.

Quebracho என்பது அர்ஜெண்டினா புரட்சி இயக்கம் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன், அன்னார் உருகுவே என்கிறார்!! எவன் பார்க்கப்போகிறான் வெரிஃபை செய்யப்போகிறான்? Abenesra என்ற பெயரும் கூகிள் செய்தால் தகவல் கொட்டுகிறது. இதெல்லாம் விஷயமேயல்ல, இவற்றையெல்லாம் கொண்டு போர்ஹே என்ன செய்கிறார் என்பதே விஷயம். அன்பர் போர்ஹேயின் ஷேக்ஸ்பியர்’ஸ் மெமரி என்ற கதையைப் படித்து (அன்பருக்குப் பிடிக்காத வார்த்தை, ஏனெனில் பார்ப்பது பதிப்பது அவ்வளவுதானே நடவடிக்கை) என்ன புரிந்து கொண்டார் என்று மற்ற அன்பர்களுக்கு விளக்கினால் நல்லது. முதலில் அன்பர் தமிழை சொற்பிழை எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்வோம். இப்படியே அன்பரும் எத்தனை நாள் ‘எழுதிச் செல்கிறார்’ என்று பார்ப்போம். காலசுப்பிரமணியம் இதனைப் பொருட்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

முதலில் டினொடேடிவ் பிறகு அரூபமாக எழுதுகிறார் என்று அன்பர் கூறுகிறார்.... இந்த அபத்தத்தை யாதென அழைப்பாய்?

Valar Mathi
கனோடேஷனுக்கும் டினோடேஷனுக்கும் வித்தியாசம் தெரியாதவர், இன்டர் டெக்ஷுவாலிடியை சகபிரதியியல் என்பவரெல்லாம் போர்ஹேவைப் புரிந்து கொண்டார் என்றால் அதுதான் நம் ஊர் டெடொனேஷன். கொடுமை! கொடுமை! கட் & பேஸ்ட் ஆசாமி!

Saturday 25 March 2017

எண்கள் – அசோகமித்ரன்

எண்கள் – அசோகமித்ரன்


இந்த ஆள் எப்போ முடிப்பார்னு தெரியலை. தினம் இந்த மாதிரிதான் ஆயிடறது. ஒவ்வொருநாளும் கொஞ்சம் முன்னாலே வந்து பேப்பரை முழுக்கப் பாத்துட்டுப் போகலாம்னா நாம வரத்துக்குள்ளே நாலு பேராவது ஏற்கனவே வந்துடறாங்க. இவங்க வீடெல்லாம் பக்கத்திலேயே இருக்கோ என்னவோ. இந்த ஆள் வீடு ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். ரொம்ப ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். இந்தச் சாலையிலே இரண்டு சாரிலேயும் ஒரே பாங்குகளும் கடைகளுந்தான் இருக்கு
asokamithran
. இந்தப் பாங்குகளையும் கடைகளையும் எட்டு மணிக்குத்தான் திறக்கிறான். இந்த ஒரு இடந்தான் ஏழு மணிக்கே திறக்கிறான். ஏழு மணிக்கே வந்தா இங்கே வர இரண்டு மூணு பேப்பரையும் அஞ்சு நிமிஷத்துலே பாத்துட்டுப் போயிடலாம். நாளைக்காவது ஏழுமணிக்கு வந்துடணும். ஏழு மணிக்கு வந்தா வீட்டிலே தண்ணி பிடிச்சு வைக்க முடியாது. எட்டு குடும்பம் நடுவிலே ஒண்டுக் குடித்தனம் வாழற அழகிலே ஒழுங்காக் கொல்லைப்புறம் போயிட்டு வரமுடியாது. ஏழு மணிக்குள்ளே பழைய சோத்தைக் கொட்டிண்டு கிளம்ப முடியாது. பேப்பரைப் படிச்சுட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டுச் சாப்பிட்டுட்டு கிளம்பறதுக்கு நேரம் இருக்காது. வெறும் வயத்தோட ஒன்பதே முக்கால் மணி வரை எப்படி இருக்கிறது ? ஒன்பதே முக்காலுக்குத்தான் காண்டானுக்குள்ளேயே நுழையலாம். இந்தப் பேப்பரையே படிக்காம போயிடலாம். பேப்பரைப் படிக்காம போற நாளிலேதான் சர்க்கரைகார்டு பத்தி ஏதாவது புதிதாச் சொல்லறான். நாலு நாளைக்கு பால் கார்டு தர மாட்டேன்னு சொல்லறான். இது தெரியாம அரைநாள் லீவு போட்டுட்டுப் பால் ஆபீஸஉக்குப்போனா, ‘போங்க திங்கக்கிழமை வாங்க, படிச்சவங்களெல்லாம் இப்படி வந்துடறீங்களே ? பேப்பர்லதான் போட்டாங்களே ? ‘ அப்படான்னு பால் ஆபீஸ் பியூன் கேக்கறான். பேப்பரை வீட்டிலேயே வாங்கித் தொலைக்கலாம். முழுக்க அஞ்சு நிமிஷங்கூடப் படிக்கிறதுக்கு விஷயம் இல்லாத பேப்பரை

மாசம் எட்டு ஒம்பது ரூபா கொடுத்து அழ வேண்டியிருக்கு. ஒம்பது ரூபாயிலே எவ்வளவோ காரியம் நடக்கும். ஆனா இந்த நாள்லே ஒம்பது ரூபாலே என்ன காரியம் நடக்கிறது ? ஒழுங்கா இரண்டு படி அரிசி வாங்கிண்டு வர முடியலை. இரண்டுபடி அரிசி இரண்டு நாள்லே தீந்துபோயிடறது. நாள் கணக்கிலே கிரஸினாயிலே கிடைக்காம போய் அன்னிக்கு வாசல்லே வந்த வண்டிக்காரன் கிட்டே இருந்த காசெல்லாம் கொடுத்து மூணு பாட்டில் எண்ணை வாங்கித்து. அளவெல்லாம் மோசம். சொன்னா அதுவும் இல்லைன்னு அடிச்சுடறான். அன்னிக்கு அந்த அஞ்சு ரூபா நோட்டை வாங்கிக்க மாட்டேன்னு அழ அழ வைச்சான். போஸ்டாபீஸ்லே கொடுத்த நோட்டு. போஸ்டாபீஸ். அவனும் சில்லறை இல்லைன்னு நாயா அங்கேயும் இங்கேயும் ஓட வைச்சு அப்புறம் கொடுத்த நோட்டு. கையை விட்டா அப்படியே பறந்து போயிடும். அது காசுன்னு இல்லைன்னா அந்தக் குப்பையை எவனும் கோலெட்டுக்கூடத் தொடமாட்டான். ஆனா இப்பத் தெருவிலே இருக்கிற காகிதக் குப்பையைச் சின்னத் துண்டு விடாம தூக்கிண்டு போறாங்க. இந்தக் காகிதம் பொறுக்கிறவங்க கண்ணே ஏதோ மாதிரி மாறிடறது. அவனுக்கு உலகத்திலே வேறே எந்தச் சிந்தனையும் கிடையாது. அவன் தோளிலே இருக்கிற சல்லடையா இருக்கிற சாக்கு, அப்புறம் குப்பை. தெருவிலே போறவங்க, வரவங்க, வண்டி, சைகிள், மாடு, வீடு எதுவும் அவன் கண்ணிலே படறதும் கிடையாது. படவும் முடியாது. கண்ணிலே படறது இல்லேன்னு சொல்ல முடியாது. அப்படி இல்லேன்னா தினம் ரோடிலே கார் ஏறிச் சாகறவங்க எல்லாரும் இந்தக் குப்பை பொறுக்கிறவங்களாத்தான் இருக்கணும். ஒரு வேளை அப்படித்தானோ என்னவோ. குப்பை பொறுக்கிறவங்க இவ்வளவு பேர் செத்தும் இன்னும் குப்பை பொறுக்கிறவங்க இவ்வளவு பேர் இருக்காங்கன்னா இந்த ஊர்லே குப்பை பொறுக்கிற வேலைதான் எவனுக்கும் உடனே கிடைக்கக்கூடியதுன்னு குழந்தைகூடத் தெரிஞ்சுகும். எவ்வளவு நல்லகாலம் இந்தக்குப்பை பொறுக்கறவங்க அத்தனைபேரும் திருடப்போகாம, கொள்ளையடிக்க போகாம இருக்கிறது ‘ நாளெல்லாம் குப்பை பொறுக்கினா அதிலே எவ்வளவு கிடைக்கும் ? ஒரு ரூபாய்–இரண்டு ? இரண்டு ரூபாலே ஒத்தன் என்ன பண்ண முடியும் இந்தக் காலத்திலே ? அது சரி, அவனே இரண்டு ரூபாய்க்கு வாங்கித் தின்னுட்டான்னா அவன் குழந்தை குட்டிங்க ? அவனுக்கு மட்டும் குழந்தை குட்டி கிடையாதா ? வீடு வாசல் துணி இல்லாம இருக்கலாம், குழந்தை குட்டி இருக்காது ? அந்தக் குழந்தைக் குட்டிகளும் இவன் மாதிரித்தான் குப்பை பொறுக்க போயிடுமோ ? குப்பைன்னா என்ன குப்பை ? தெருவிலே கிடக்கிற பாதிக்குப்பை குழந்தைப்பீயை வழிச்சுப் போட்ட குப்பைத்தானே ? அந்தப்பீயைத்தான் அந்தக் குழந்தைகளும் தோள்மேல் சுமந்துண்டு போகும் ? பீயைச் சுமக்கிறதுக்கா இங்கே குழந்தை குட்டிங்க பொறக்கிறாங்க ? பீ. பீ. பீ. எல்லாம் ஒரே பீ, இந்த ஆளு விடாம ஒரு வரி விடாம படிக்கிற இந்தக் காகிதம் கூட நாளைக்குப் பீயோட தெருவிலே கிடக்கும். அதை ஒத்தன் பீன்னுகூடப் பாக்காம சாக்கிலே எடுத்துப் போட்டுண்டு இன்னும் பீக் காகிதத்தைப் பொறுக்கப் போயிண்டே இருப்பான்…….
அந்தக் கிழவர் படித்துக்கொண்டிருந்த தாளை அவனும் ஒரு முனையில் தூக்கிப் பிடித்தான்.
இந்தப் பக்கத்தை இந்த ஆளு அஞ்சு நிமிஷமாப் படிச்சுண்டிருக்கார். படிச்சுண்டிருக்கார் என்ன வேண்டியிருக்கு ‘ கான். குனிஞ்ச தலைநிமிராமப் படிச்சுண்டிருக்கான். இந்த ரீடிங் ரூமிலே வேறே பேப்பரும் கிடையாது. இது தர்மத்துக்கு நடத்தற ரீடிங் ரூம். அவன்தான் எவ்வளவு பேப்பர் வாங்கி போடுவான் ? பிராஞ்சு லைப்ரரியை எட்டரை மணிக்குத்தான் திறக்கிறான். இந்த கால்காசு வேலைகூட இல்லேன்னா அங்கே போய்ப் படிக்கலாம். அதுவே வேலை இல்லாதவர்களுக்குத்தான் நடத்தறானோ என்னவோ. இது எட்டரை மணிவரை ரீடிங் ரூம். அப்புறம் கிண்டர் கார்டன் ஸ்கூல். சுவரிலே ஒரு ஆணி விடாம படம். இல்லாதபோனா போதனைகள். அன்பே சிவம். உழைப்பே தெய்வம். சுத்தம் சோறு போடும். உண்மையே பேசு. சத்தம் போடாதே. சத்தம் போடாமதான் இந்தக்கதிக்கு வந்தாச்சு. இந்த ஆளு சத்தம் போடாமதான் படிச்சுண்டு இருக்கான். படிச்சுண்டே இருக்கான். நானும் காத்திண்டே இருக்கேன். இவன் படிக்கிற பக்கத்திலே பாதிலே ஒரு பாங்க் பாலன்ஸ் ஷீட். ஒரு எண்கூட எட்டு இலக்கத்துக்குக் குறைஞ்சு கிடையாது. எட்டு, ஒன்பது, பத்து, பதினொண்ணு கூட இருக்காப்போல இருக்கு. பதினொரு இலக்கத்து எண்ணை ரூபாயாக் கற்பனை பண்ணிக்கூடப் பாக்க முடியலை. இதுவே பட்ஜெட் தாளாக்கூட இருக்கலாம். அப்பவும் பத்து, பதிணொண்ணு, பன்னெண்டுன்னு பெரிய பெரிய எண்கள். அவன் பத்து இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இருபது இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இவ்வளவு ரூபாயைப்பத்தி நிஜமாத் தெரிஞ்சவங்க நிச்சயம் இருப்பாங்க. அவங்க எப்படி இருப்பாங்க ? என் மாதிரி இருக்கமாட்டாங்க. இந்த ஆள் மாதிரி கூட இருக்கமாட்டாங்க. இலவசப்பேப்பர் பறக்கப் பறக்கப் படிச்சுட்டுப் போறவங்களுக்கு மூணு இலக்க எண் தெரிஞ்சாலே பெரிய விஷயம். அது பிச்சைக் காசு பிச்சைக்காரங்களுக்குப் பிச்சைக்காசு பத்தித்தான் தெரியும். லட்சம் கோடியெல்லாம் பள்ளிக்கூடத்திலே பரீட்சை பாஸ் பண்ணற அளவுக்குத் தெரிஞ்சாப் போதும். அவ்வளவுதான் தெரியும் வேறே. இந்த ஆளு எவ்வளவு பரீட்சை பாஸ் பண்ணியிருப்பான் ? அதிகமா இருக்காது. இவன் ஷவரம் பண்ணி அஞ்சாறு நாளாகியிருக்கும். மூஞ்சி தலையிலே இருக்கிற மயிர்லே கருப்பு மயிரை எண்ணி எடுக்கலாம். ஒண்ணு, இரண்டு, மூணு, நாலு…. சீ, மயிரை எண்ணறதுக்கா இங்கே வந்து உக்காரணும் ? ஆனா என்னதான் பண்ணறது ? பேப்பர்லே இருக்கிற மூணுதாளும் மூணு ஆளுங்க கிட்டே சிக்கியிருக்கு. அந்த இரண்டையும் நான் பார்க்கக்கூட வேண்டியதில்லை. எனக்கு ஸ்போர்ட்ஸ்உம் வேண்டியதில்லை, சினிமாவும் வேண்டியதில்லை, பால கிருஷ்ண சாஸ்திரியின் காலஷேபச் சுருக்கமும் வேண்டியதில்லை. இந்த ஆளு பக்கத்தைப் புரட்டினாலும் தேவலை. பாங்க் பாலன்ஸ் ஷீட்டை ஒரு வரி, ஒரு எண் விடாம படிக்கிறான். இவனே பாங்க்லே இருக்கானோ ? இந்த நாள்லே பாங்க்கிலே வேலை பாக்கிறவங்க பளபளன்னுதானே இருக்கிறாங்க ? நிஜமா அவங்ககிட்டே போய் என் அஞ்சு ரூபா, பத்து ரூபாயை சேவிங்க்ஸ் கணக்கிலே போடுன்னு சொல்லறதுக்கே வெக்கமாயிருக்கு அந்தக் கணக்கிலேந்து நான் பத்து ரூபா வாங்கப் போனப்போ அரைமணி காஷ் கெளண்டர்லே காத்திருக்க வேண்டியிருந்தது. ஏன்னா பக்கத்திலே ஜெனரேட்டர் வைச்சு வெளிச்சம் போடற புடவைக் கடைக்காரன் கத்தை கத்தையா நோட்டைக் கொண்டுவந்து பாங்க்கிலே போட்டிருக்கான். அதை அரை மணியா அந்த பளபளா பாங்க் ஆளு எண்ணிண்டிருந்தான். தினம் ஒரு லட்சம் கொண்டு வந்து கட்டறானாம் அந்தக் கடைக்காரன். அந்த பாங்கிலே என் அஞ்சு பத்து ரூபா என்ன மாத்திரம் ? வெக்கம், அவமானம். அந்த அவமானத்துக்கு இந்த ரீடிங் ரூம் அவமானம் பெரிசில்லை. ஆனா இந்த ஆள்தான் பாங்க் பாலன்ஸ் ஷீட்டை விடாம படிச்சிண்டே இருக்கான். இவனுக்கு இந்த எண்ணெல்லாம் அர்த்தம் ஆகணும். சீக்கிரம் படிச்சுத் தொலைச்சாத் தேவலை. இங்கேந்து ஏழு அம்பதுக்குக் கிளம்பினாக்கூட எட்டு பதிமூணுக்கு டைம் கீப்பர் கேட் கிட்டே போயிடலாம். இந்தச் சனியன் பேப்பர் படிக்காமயே போயிருக்கலாம். போயிருந்தா அப்பவே போயிருக்கணும். இவ்வளவு நேரம் இவன் பக்கத்திலேயே இந்தத் தாளைப் பிடிச்சுண்டு உக்காந்துண்டு சுவரிலே இருக்கிற வாக்கியங்களை எல்லாம் படிச்சிருக்க வேண்டாம். இந்த மகா மகா வாக்கியங்களைக் குழந்தைகளே படிச்சுண்டு இருக்கட்டும். குழந்தைகளால்தான் இதைப் படிச்சுட்டு வயறெறியாம இருக்கமுடியும். தர்மம் பண்ணறவங்க இந்தப் போதனைகள் பண்ணாம இருந்தாத் தேவலை. ஆனா ஒத்தன் தர்மம் பண்ணறதே அவன் போதனை பண்ணறதுக்கு ஒரு வாய்ப்புன்னுதானே.
இப்போது அவன் அந்தக் கிழவர் படித்துக் கொண்டிருந்த தாளைச் சிறிது உறுதியாகவே பிடித்தான்.
இது விடாது போலேயிருக்கு. பாலன்ஸ் ஷீட்டுக்கு மேலே இருக்கறதைத்தான் எத்தனை தடவை படிக்கறது ? நாலு டெண்டர் நோட்டாஸ். இரண்டு சங்கீத சபா விளம்பரம். நடுவிலே கால் பத்தி செய்தி. என்ன செய்தி ? ‘சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்யும் என்று நேடோ கருதவில்லை. ‘ பக்கத்திலேயே ‘எம். ஐ. ஆர். வி. எஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்த ரஷ்யா தயார். ‘ இந்த எம். ஐ. ஆர். வி. எஸ்.னா என்ன ? அதெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு நேரம் எங்கே இருக்கு ? இந்த ஆளுக்கு தெரிஞ்சிருக்கலாம். நான் இங்கே வர நாளெல்லாம் இவனும் வரான். நான் வராத நாளெல்லாம் கூட வருவான். வந்து இப்படி ஒரு எழுத்து விடாம. படிச்சுத் தீர்ப்பான். இதெல்லாம் படிக்கறது இவன் தலையெழுத்து. இவன் தலையிலே இருக்கிற மயிரெல்லாம் நரைச்ச மயிர். இவன் காதிலேயும் மயிர் நிறைய முளைச்சிருக்கு. அந்த மயிர் கறுப்பாயிருக்கு. இவன் புருவ மயிர் எப்படி இருக்கும் ? இவன் கண்ணையே பாக்க முடியலையே ? அப்படித் தலையைக் குனிஞ்சிண்டு படிக்கறான். கன்னம் ஒட்டித்தான் கிடக்கு. நேத்திக்குச் சோறு சாப்பிட்டானோ என்னவோ ? எவ்வளவோ நாள் சாப்பிடாமக் கிடந்தாத்தான் இப்படி ஒட்டிப் போக முடியும். இல்லை, பெரிய சீக்காளியா இருக்கணும். இல்லை இரண்டுமா இருக்கணும். இவனுக்கு என்ன சீக்கு இருக்கும் ? பொண் சீக்கு இருக்கறதுக்கு நியாயமில்லை. பித்தம், காசம், ஹெர்னியா, டயாபிடாஸ், ரத்தக் கொதிப்பு, மயக்கம். நேத்திராத்திரி அது ஏதோ ஜாஸ்தியாப்போய் சாப்பிடாம படுத்திருப்பான். வெறும் வயத்திலே படுத்துண்டதனாலே தூக்கம் கண்டிருக்காது விடிஞ்சதும் விடியாததுமா இங்கே வந்துடறான். நான் மட்டும் என்ன பண்ணறேன் ? அவனும் என்னைப் பத்தி அப்படித்தான் நினைச்சிண்டிருக்கணும் இந்த மாதிரி இந்த ஊர்லே இருக்கிற ஆயிரம் ரீடிங் ரூமிலேயும் ஆயிரக்கணக்கான பேர் இப்படித்தான் ஆயிரக்கணக்கானப் பேரைப் பத்தி நினைச்சிண்டிருப்பாங்க. மத்தவங்களைப் பத்தியும் நினைக்க முடியுமா இந்தக் காலத்திலே ? எனக்குத் தோணலை. ஒரு ஆளைப் பத்தி நினைக்கிறதுக்கு கூட மனசிலே ஒரு அமைதி இருக்கணும். ஒரு உற்சாகம் இருக்கணும். இங்கே எவன் மூஞ்சியைப் பாத்தா உற்சாகமா இருக்கிற மாதிரி இருக்கு ? எல்லார் மூஞ்சியிலேயும் சோர்வு, ஏக்கம், நாள் முழுக்க முழுக்க ஏதேதோ காரணங்களுக்காக மனம் நொந்து போய், அந்தத் தனித்தனி காரணங்களெல்லாம் ராத்திரி தூக்கம் என்கிற ரசாயனத்திலே அப்படியே பாகாப் போய், மூஞ்சியிலேயும் முதுகிலேயும் இறுகிப் போய்க் கிடக்கு. ஒத்தன் மூஞ்சி தெளிவாயில்லே. ஒத்தன் முதுகு நேராயில்லை. இவுங்க எல்லாம் விவரம் தெரிஞ்சவங்க. இந்த மண்லே விவரம் தெரிஞ்சவங்க எவனும் கூனிக் குறுகாம இருக்க முடியலை. ஏதோ தடால் புடால்னு கார்லே ஸ்கூட்டர்லே போறவங்களைப் பாத்தாக் கூட இந்தக் கூனிக் குறுகல் தெரியறது. இவ்வளவு பெரிய பாலன்ஸ் ஷீட்டைப் பக்கத்திலே பாதி அடைச்சுக்கிற மாதிரி அச்சிட்டுக் காண்பிச்சாக்கூட இந்தக் கூனிக் குறுகல் தெரியறது. இது நோய் நொடினாலே இருக்கணும், இல்லே, அயோக்யத்தனத்தாலே இருக்கணும். இந்த மண்ணிலே இன்னிக்கு இருக்கிறவங்க எல்லாம் ஒண்ணு நோயாளிங்க, இல்லேன்னா அயோக்யங்க. இந்தப் பாரத புண்ய பூமி—- அதோ அந்த ஆணியிலே பாரத புண்ய பூமி பத்தி பெரிய பாட்டு அட்டையிலே குழந்தைகளுக்காக தொங்கறது —- பாரத புண்ய பூமி. பாரதியார் பாடிட்டுப் போயிட்டார். டி. கே. பட்டம்மாள் ரிகார்டு போட்டா. இப்போ குழந்தைகள் பாடறது. பாடறதுன்னுதான் நினைக்கிறேன். இந்த ரூம்லேயே இன்னும் அரை மணி கழிச்சுக் குழந்தைகள் பாடும். பாரத புண்ய பூமி. இந்த ரீடிங் ரூம் பாரத புண்ய பூமிதான். வெளியிலே போல உள்ளேயும் பெருக்காத குப்பை நிறையக் குவிஞ்சு கிடக்கு. இங்கே குழந்தைகளும் ஒண்ணு இரண்டு சொல்லும். கிழவங்களும் பத்து இலக்க எண், பன்னெண்டு இலக்க எண் படிப்பாங்க. சுவர்லே நிறைய போதனைகள். இந்தக் கிழவன்கிட்டே இந்தத் தாளுக்காகக் காத்திருக்கிறதுக்குச் சுவரிலே போய் முட்டிக்கலாம். சுவர்லே முட்டிண்டா உடனே சுவர் எல்லாம் பாட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடும். என்ன பாட்டு ? பாரத புண்ய பூமி. சீ ‘ இவ்வளவு கசப்பா எனக்குள்ளே அடைஞ்சு கிடக்கு ? பாவம், பாரதம் என்ன பண்ணும், பூமி என்ன பண்ணும் ? ஆனா ஏன் இவ்வளவு கசப்பு ? எனக்கு மட்டுந்தானா கசப்பு ? லட்சக்கணக்கான பேர், கோடிக் கணக்கான பேர் கிட்டே இந்தக் கசப்பு இல்லை ? இப்ப எப்படி லட்சம், கோடி யெல்லாம் அர்த்தம் ஆறது ? அவுங்க மனுஷங்கன்ற காரணத்தினாலா ? மனுஷங்களை வெறும் எண் மாதிரி ஒதுக்கிவிட முடியுமா ? அதனாலேதான் இந்த ஆள் இப்படிக் கால் மணியா இந்த ஒரே தாளை, அதுவும் இந்த பாங்க் பாலன்ஸ் ஷீட் இருக்கிற தாளைப் படிச்சிண்டு இருக்கிறப்போ விடுடா அதைன்னு சொல்லிப் பிடுங்க முடியாம இருக்கா ? இவன் சட்டையைத் தோச்சு வாரக் கணக்கிலே ஆயிருக்கணும். காலர் கிட்டே அழுக்கு அப்படியே வண்டி மசையாப் பதிஞ்சு போயிடுத்து. இவனுக்கு குடும்பம் பெண்சாதி யாரும் கிடையாதோ ? இவனே இந்தச் சட்டையைத் தோய்க்கிறதுன்னா மணிக் கணக்கிலே தோய்க்கணும். அப்ப கூடப் பெரிசா இந்தக் கழுத்து மசைமாறிடப் போறதில்லை. எங்கெங்கேயோ விழுந்திருக்கிற மூக்குப்பொடிச் சளிக் கறை போயிடப்போறதில்லை. இவன் ஒழுங்காச் சவரம் பண்ணிண்டா இவன் முகம் அழகாகக் கூட இருக்கலாம். ஒரு காலத்திலே ரொம்ப அழகாக இருந்திருக்க வேண்டிய முகந்தான். இவனுக்கு விவரம் தெரிஞ்சு முப்பது வருஷம், நாப்பது வருஷம் வாழ்ந்து இடிபாடுகள் பட்டு, யார் யாரையோ கெஞ்சு, எது எதுக்காகவோ கதறி, அழுது, பொருமி, ஆத்திரத்தை யடக்கி, இழிவுபட்டு, நோய்வாய்ப்பட்டு, உதவி இல்லாம, ஒத்தாசை இல்லாம, பராமரிப்பு இல்லாம, சரியாச் சாப்பாடு இல்லாம, நாளை பத்தி ஒரு நிச்சயமில்லாம, நிச்சயமில்லாததுனாலே பயம் கொண்டு, பீதி கொண்டு, வெறுப்பு கொண்டு, கசப்பு கொண்டு, கண்ணைத் திறந்து வெளியிலே பாத்தா பட்டினியும் வேதனையும் குரூரமும் நிர்தாட்சண்யமும் அவலமும் அயோக்யத்தனமும் பீக் காகிதத்தைக் குழந்தைகள் பொறுக்கிக் கால் வயிறு ரொப்பிக் கொள்ள வேண்டிய அநியாயமும் காணச் சகிக்காம, இவனாலே ஒண்ணும் பண்ணமுடியாம, சாகறதுக்கும் தைரியமில்லாம, சாராயம் குடிச்சும் நினைவு தவறிக் கிடக்கக் காசில்லாம, இங்கே வந்து, இந்த ரீடிங்ரூமிலே வந்து எவனோ கொட்டிச் சேர்த்துக் கொம்மாளம் அடிக்கிற பணத்தைக் கணக்கு பாத்து, இவன் கற்பனையும் பண்ணிப்பாக்க முடியாத எண்களைக் கண் வழியா மூளையிலே போதையேத்திண்டு மயங்கிக் கிடக்கான். இந்தப் போதை கூட இவனுக்குக் கிடைக்க வழியில்லைன்னா இவன் என்னாவான் ? இவன் போதையிலே மயங்கிக் கிடக்கட்டும். தாராளமாகக் கிடக்கட்டும். தாராளமாகக் கிடக்கட்டும். இந்தப் போதை ஒண்ணுதான் இவனுக்கும் இவன் மாதிரி இருக்கிற கோடிக்கணக்கானவங்களுக்கும் இன்னிக்குக் கிடைக்கக் கூடியது. நான் கூட இந்தப் போதைக்குத் தான் இங்கே வருகிறேனோ ?
மணி ஏழு ஐம்பைத்தைந்து ஆனதில் அவன் தாங்க முடியாத அவசரத்தில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து குனிந்தபடி படித்துக் கொண்டிருந்த கிழவர் கையிலிருந்து அந்தத் தாளைச் சிறிது உறுதியாகப் பிடித்து உருவினான். முந்தின இரவு உண்ணாமல் படுத்திருக்கக் கூடியவர், அல்லது அப்படிப் பல நாள் உண்ணாமல் இருந்திருக்கக் கூடியவர், பலநாள் சவரம் செய்யாத முகமுடையவர், அழுக்கு மசையாகப் பதிந்து போய்விடும் அழுக்குச் சட்டை உடுக்க வேண்டியவர், பித்தம் காசம்–டயாபிடாஸ்-ரத்தக்கொதிப்பு அவதிக்குள்ளாகியிருக்கக் கூடியவர், தன்னுடைய நீண்ட வாழ்வின் சோகத் துயர இழிவுகளை மறக்கப் பிரமாண்டமான எண்களைப் படித்துப் போதையேற்றிக் கொள்ளவேண்டியவர் சிறிது நேரம் முன்பாகவோ அல்லது வெகு நேரமாகவோ தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்தத் தாள் அவன் கையுடன் வந்து விட்டது.

Monday 13 March 2017

மிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்

>மிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்

>
(ஒரு இசைக்கலைஞர் சொன்ன கதை)
‘நீர் எழுத்தாளர். கதை கிதை எல்லாம் எழுதுகிறீர். எனக்குப் பாடத்தான் தெரியும். எழுதத் தெரியாது. அதனால் நான் சொன்னதை அப்படியே நீர் எழுதும். நீர் தான் கண்டதையும் கேட்டதையும் எழுதுகிறவர் ஆச்சே.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் இசைக் கல்லூரியில் பயின்று பட்டம் வாங்கினேன். நானும் என்னுடைய சகபாடிகளான இன்னும் பத்தொன்பது பேரும் சேர்ந்து பட்டத் தாளைப் t_janakiraman_2பெற்றுக் கொண்டோம். அதற்காக வழக்கம் போல ஒரு பட்டமளிப்பு விழா நடத்தினார்கள். நாங்கள் இருபது பேரும் மகா பாக்கியசாலிகள், ஏனென்றால் பட்டத்தாள்களை தன் கையாலேயே நேரிடையாக வழங்கினவர் இந்தியாவின் தலையாய அரசியல் பொருளதார –வியாபார–இலக்கிய–தொழில் பேரறிஞர். ஆவர் கையால் பட்டத்தாளைப் பெறக் கொடுத்து வைக்க வேண்டுமே ‘ அவர் என் பட்டத்தாளை என் கையில் கொடுத்து, என் கையைக் குலுக்கி, கும்பிடவும் கும்பிட்டு ஒரு புன்னகையும் புரிந்தார். எத்தனை பெரிய வாய்ப்பு ‘ இந்த விழாவுக்காகவே பிரத்யேகமாக 1500 மைல் ஏரப்ளேனில் பிரயாணம் செய்து வருகை தந்திருந்தார் அவர்- இந்த விழாவுக்காக–பிரத்யேகமாக –எங்களுக்குப் பட்டத்தாள்களை நேராக, தம் கையால் கொடுக்கவே நாங்கள் எவ்வளவு இறும்பூது எய்திருப்போம் என்பதை நீரே, கற்பனை செய்து கொள்வீர். நீர்தான் எழுத்தாளர் ஆச்சே ‘
எங்களை அவ்வளவு இறும்பூது கொள்ளச் செய்த பெரும்தகை யார் என்றா கேட்கிறீம் ? ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது. பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது. ஊரைப் பேரைச் சொன்னாலும் ஜாதிப் பேரைச் சொல்லக் கூடாது. அதனால் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன். மிஸ்டர்…..
திரு கோடு கோடு கோடு என்று திரு போட்டால் அவர் தமிழர் என்று நீர் கண்டு பிடித்து வம்பு பண்ணுவீர். அதனால்தான் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன். மேலும் இப்போதெல்லாம் சென்னையில் நாயுடு ரோடை, –ரோட் அதாவது கோடுரோடு என்றும் முதலியார் ரோடை – ரோட் அல்லது கோடு ரோடு என்றும், கிருஷ்ணமாச்சாரிரோடை கிருஷ்ணமா தார்பூசு ரோடு என்றும், வெங்கட அய்யர் ரோடை வெங்கட தார்பூசு ரோடு என்றும், சின்னசாமி கவுண்டர் ரோடை சின்னசாமி தார்பூசு ரோடு என்றும் மாற்றியுள்ளதை நீர் அறிந்திருப்பீம். எனவே ராஜத்துரோகமான காரியத்தைச் செய்யக்கூடாது என்றே எங்களுக்குப் பட்டமளித்த பெருந்தகை மிஸ்டர் கோடு கோடுகோடு என்று அழைக்கிறேன். முதல்கோடு ஊர் பெயர். இரண்டாவது கோடு இயற்பெயர். மூன்றாம் கோடு சாதிப் பெயர்.
பட்டத்தாள்களை அளிப்பதற்கு முன்னால் அவர் இந்தியாவின் தொன்மையான இசைக்கலை பற்றியும், மிக மிதத் தொன்மையான தமிழிசை பற்றியும் ஒரு மணி நேரம் உரையாற்றினார். சிலப்பதிகாரம் என்ன, சர்மவேதம் என்ன, திருக்குறள் என்ன, பரதமுனி என்ன, கூத்த நூல் என்ன — இவைகளிருந்தெல்லாம் மேற்கோள்கள் காட்டி பாரத நாட்டு இசையின் பெருமையையும், முக்கியமாக தமிழகத்து இசையின் பெருமையையும் எடுத்து விளக்கியபோது, ஆகா ஆகா என்று சிலிர்த்துப் போனேன். அதே சமயம் நான் ரொம்ப சின்னவனாகியும் விட்டேன். எங்கள் வாத்தியார்களும் சின்னவர்களாகி விட்டார்கள். இசையை கரைத்துக் குடித்திருக்கிறார் இந்தப் பெரியவர். அஞ்சு வருஷம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் இதில் ஆயிரத்தில் ஒன்றைக் கூடச் சொல்லவில்லையே, ஏமாத்தி விட்டான்களே என்று வருந்தினேன். எங்களுக்கு சங்கீதம் கற்பிக்கிறேன் பேர்வழி என்று மடாத்தப்பளை மாதிரி கத்தியே அஞ்சு வருஷம் கத்திக் கத்திப் பொழுதை போக்கி விட்டான்களே, இந்தப் பெரியவர் ஒரு மணி நேரம் சொன்னதில் பத்தாயிரத்தில் ஒன்றுகூடச் சொல்லவில்லையே என்று மனம் கசிந்தேன். பட்டமளிப்பு முடிந்ததும். என்னைப் பாடச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு உள்ளூர பயம். முன் வரிசையில் திரு கோடு கோடு கோடு உட்கார்ந்திருக்கிறார். இசைக்கடல். பார்த்தால் ஒன்றும் தெரியாத மாதிரி உட்கார்ந்திருக்கிறார். இசை அறிவோ ஆழங்காணாத அறிவு. கஜமுகனே கணநாயகனே என்று பிரணவ சொரூபியான பிள்ளையார் மீதே பாரத்தைப் போட்டுப் பாடத் தொடங்கினேன். திரு கோடு கோடு கோட்டைக் கூடிய வரை பார்க்காமலே பாடிக்கொண்டிருந்தேன். நடு நடுவே அவரைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அவர் அசையாமல் முகத்தில் எந்தக் குறியும் இல்லாமல் என்னையே பார்ப்பது தெரிந்தது. சில சமயம் பக்கத்தில் உள்ளவர்களைப் பார்ப்பார். யாராவது பலே என்று பாராட்டினால் அவரைத் திரும்பி பார்ப்பார். இன்னும் யாராவது ஆகா என்றால் அவரைத் திரும்பிப் பார்ப்பார். பிறகு என்னைப் பார்ப்பார். சாதாரண அல்பசந்தோஷி இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு நன்றாக உழைத்துப் பாடினேன். விரலால் தாளம் போடுவதைக் கூட அவர் யார் கண்ணிலும் படாதது போலவும் என் கண்ணில் கூட படாதது போலவும் பாடுவார். ஒன்றரை மணி நேரம் கழுவில் ஏற்றிவைத்தாற் போலிருந்தது. எப்படியோ தைரியமாகப் பாடி முடித்தேன்.
இசை அரங்கு முடிந்ததும் பிரின்சிபால் வந்தார். ‘நல்லாத்தேறிட்டே போ ‘ என்று வாழ்த்தினார். திரு கோடு கோடு கோட்டின் முன்னாலேயே மற்றவர்களும். ‘பிரமாதம் ‘ என்றும், ‘ரொம்ப சுத்தம், ரொம்ப சுத்தம் ‘ என்றும், ‘ரொம்ப பெரிசா வரப் போற ‘ என்றும் வாழ்த்தினார்கள். மிஸ்டர் கோடு கோடு கோடு தன் கையை நீட்டி என் கையைக் குலுக்கினார். ‘ரொம்ப மகிழ்ச்சி. ரொம்ப ரொம்ப நல்லா பாடிட்டாங்க ‘ என்றார். அப்பாடா ‘ உயிர் வந்தது. நிஜமாகவே பிழைத்தேன். ஒரு சிங்கத்தின் வாயிலிருந்து புறப்பட்டுவிட்டேன். என்னைக் காப்பாற்றிய கணநாயகனுக்கு முன்னால் மனதுக்குள்ளேயே எண்சாண்கிடையாக விழுந்து விழுந்து கும்பிட்டேன். பத்திரிக்கைகளில் இசையரங்குகளைப் பற்றி விமர்சனம் எழுதிப் பணம் சம்பாதிக்கும் கால் வேக்காடு அரை வேக்காடுகள் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும். அவங்களெல்லாம் முக்காலே மூணு முக்கால் வீசம் மூங்காட்டுத் தம்பட்டம் என்றும் புலித்தோல் போர்த்தின புனுகு பூனை என்றும் எனககுத் தெரியும். நான் பயப்படுகிறதெல்லாம் இதையெல்லாம் கண்டுக்காமல் மந்திரி, தலைவர் மானேஜிங் டைரக்டர் என்றெல்லாம் பெரிய பெரிய பதவிகளில் இருந்து கொண்டு இரண்டாம் பேர் அறியாமல் சங்கீதத்தைக் கரைத்துக் குடிக்கும் மிஸ்டர் கோடு கோடு கோடு போன்றவர்களிடம் தான். நிஜமான சங்கீதம் அவர்களுக்குத் தான் தெரியும். அவங்களுக்கு இசை தொழில் இல்லையே. யாருக்கு பயப்பட வேண்டும் அவர்கள் ? அதனால் தான் மிஸ்டர் கோடு கோடு கோட்டின் வாயிலிருந்து ‘ரொம்ப நல்லா பாடிட்டாங்க ‘ என்று வந்ததும் எனக்கு உயிரும் தைரியமும் வந்தது. ‘வாங்கடா இப்ப அரை வேக்காடு விமர்சனங்களா ‘ ‘ என்று துடை தட்ட வேண்டும் போல் கை கூட புருபுருத்தது.
அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாது போய்விட்டது. மறுநாள் காலை என்னை பிரின்சிபால் கூப்பிட்டார். ‘மிஸ்டர் கோடு கோடு கோடு அவருடைய ஊரில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் நடத்துகிறார். அதில் இசையை ஒரு பாடமாக நுழைக்கப் போகிறார். உன்னைத் தான் அந்தப் பிரிவுக்கு முக்கிய ஆசிரியராகக் கூப்பிடுகிறார். ரொம்ப அதிர்ஷ்டம். இத்தனை சம்பளம் எடுத்த எடுப்பில் யாரும் குடுக்க மாட்டாங்க ‘ என்று சம்பளத் தொகையைச் சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டுவிட்டேன். ட்யூஷனே வைத்துக் கொள்ளவேண்டாம். கலியாணம். கோயில் திருவிழா என்றெல்லாம் நாடறிந்த வித்வான்களைத் தான் பாடக் கூப்பிடுகிறார்கள் என்னைப் போன்ற புதுசுகளுக்கு ஒரு தட்டில் குண்டஞ்சி ஐந்து முழம் அங்க வஸ்திரமும் வண்டி சார்ஜஉம் தான் கொடுப்பார்கள். ரேடியோக்காரன் வருஷத்துக்கு ரண்டுசான்ஸ் கொடுத்தால் பிரளயம். அதுக்கே ஆடிசனுக்கு வா. மனுப் போடு. பணம் கட்டு என்று எழுதுவான். கிடைச்சால் தான் போச்சு. எனவே மிஸ்டர் கோடு கோடு கோட்டின் பள்ளிக் கூடத்திலேயே இசைப் பேராசிரியராக வேலை ஒப்புக் கொண்டேன்.
நாலு மாசம் ஆயிற்று. ஏதோ தகராறில் பதவியை ராஜினாமா செய்து விட்டு மிஸ்டர் கோடு கோடு கோடு ஊரோடு வந்து தம்முடைய தொழிற்சாலைகளையும் வியாபாரங்களையுமே கவனிக்கத் தொடங்கினார். வெளி நாடுகளுக்குப் பெரிய பதவியில் அனுப்புகிறது என்றதையெல்லாம் மறுத்து தம் தொழிற் சாலைகளையும் கல்விச்சாலைகளையும் கவனிக்கத் தொடங்கினார்.
எங்கள் கல்லூரித் தலைவர் மிஸ்டர் சுப்ரமண்ய கோடு (ஜாதி பெயரைச் சொல்லாததற்கு மன்னிக்க வேணும்) என்னிடம் அடிக்கடி, ‘பெரியவர் உங்களைப் பார்க்கணுமாம். அடிக்கடி சொல்லுகிறார் ‘ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குப் பயமாகத்தானிருந்தது. எதற்காக என்னைப் பார்க்க வேணுமாம் ?
அப்படி ஒரு கட்டம் இரண்டு தடவை வந்தது. பயம். நல்ல வேளையாக, குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் என் தகப்பனார் காலமானார். பிழைத்தேன். இரண்டாவது தடவை மிஸ்டர் கோடு கோடு கோடே ஒரு அவசர மீட்டிங் என்று சந்திப்பைக் கான்சல் செய்தார். மூன்றாம் தடவை தப்பித்துக் கொள்ள முடியவில்லை. என் உறவினர் யாரும் பரலோகம் போகவில்லை. மிஸ்டர் கோடு கோடு கோட்டிற்கும் அவசர் மீட்டிங்கும் இல்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று மாட்டிக்கொள்ளலாம். அவருடைய இரண்டு தொழிற்சாலைகளில் லாக்-அவுட்.
எதற்காக கூப்பிடுகிறார் ? ஏதாவது 17 அட்சரம், 19 அட்சரம், 37 அட்சரம் என்று தெரியாத தாளத்தில் பல்லவி பாடச் சொல்லப் போகிறாரா ? இல்லை. வடமொழி தெலுங்கு கீர்த்தனத்திற்குப் பொருள் கேட்கப் போகிறாரா ? கணநாயகன் இப்போதும் காப்பாற்றுவான் என்று மீண்டும் அவர் மீது பாரத்தைப் போட்டு நடந்தேன்.
மிஸ்டர் கோடு கோடு கோட்டின் வீடு பெரிய அரண்மனைமாதிரி. வாசலில் இரண்டு கூர்க்கா ரயில்வே லெவல் கிராஸிங் பாய்ண்ட்ஸ் மேனின் கூண்டு போன்ற ஒரு கூண்டில் ஒரு காவலாளி காக்கி உடுப்பில் டெலிபோனுடன் உட்கார்ந்திருப்பார். அவர் ஃபோன் பண்ணி, அனுமதி பெற்று என்னை உள்ளே அனுமதித்தார்.
மிஸ்டர் கோடு கோடு கோடு தன்னறையில் வேட்டி சட்டை அணிந்து தனியாக உட்கார்ந்திருந்தார். போனவுடனே பிஸ்கட், மைசூர்பாகு, இட்டலி, சாம்பார் வடை, சுத்த நெய் எல்லாம் வந்தன. அவரும் என்னுடனே சாப்பிட்டார்.
‘வேலை கடுமை. அதனாலே உங்களைச் சந்திக்க முடியவில்லை ‘ என்று மன்னிப்புக் கேட்பதுபோல் கேட்டுக் கொண்டார்.
‘எனக்குத் தெரியாதா ? இப்படி உங்களோடு உட்கார்ந்து பேச முடியுமா ‘ உங்களுக்கு எத்தனை ஜோலி ‘ ‘
அறையில் வேறு யாருமில்லை.
‘ஒன்றுமில்லை உங்களைக் கூப்பிட்டது ஒரு சின்ன விஷயத்திற்குதான். நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் ‘
‘பேஷா ‘
‘ரொம்ப நாளாக கத்துக்கணும்னு ஆசை, வேலை பளுக்கள், வெளிநாட்டுக்குப் போறது இந்த மில்லுங்களை கவனிக்கிறது….. ‘
‘எனக்குத் தெரியாதா ? நீங்க சொல்லணுமா ? என்னமோ சொல்லிக் கொடுக்கணும்னு சொன்னீங்களே, எதுவானாலும், எனக்குத் தெரிஞ்சவரையில் நான் சொல்லத் தயார். எதிலெ சொல்லணும். எனக்கு இந்த சங்கீதம் ஒன்று தானே தெரியும் ‘ ‘
‘அதுலெதான். சங்கீதத்துலெதான். ‘
‘என்ன சொல்லணும் ? நான் என்ன சொல்லணும் ‘ நீங்களே சமுத்ரமாச்சே, ‘
‘சமுத்ரம்தான் சமுத்திரத்திலே கப்பலோட்டலாம். மீன் பிடிக்கலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால் ஒரு அவுன்ஸ் கூட குடிக்க முடியாதே. ‘
‘எனக்குப் புரியிலியே நீங்க சொல்றது. ‘
‘ஒண்ணுமில்லெ. நீங்க இதைச் சொல்லிக் கொடுத்தாப் போதும். ‘
‘எதை ? ‘
‘இப்ப உங்க மாதிரி ஒரு பெரிய வித்வான் பாடுகிறார். கேட்கறவங்க பல பேர் ‘ஆகா ஆகாங்கறாங்க. பலேபலேங்கறாங்க. நல்லதுடாப்பா நல்லதுடாப்பாங்கறாங்க அப்படியே கண்ணை மூடிக்கிறாங்க. இதெல்லாம் எப்படி செய்யறாங்க ? இதெல்லாம் எப்ப எப்ப செய்யணும் ? எப்ப கண்ணை மூடிக்கிறது ? எப்ப ஆகான்னு சொல்லணும் ? சும்மாகேட்டுக் கிட்டே இருக்கறாங்க. திடார்னு ஆகாங்கறாங்க. ஐயோன்னு கசியறாங்க. நம்ப மானேஜரு கேக்கறதைச் சில கச்சேரிங்கள்ள பார்த்திருக்கேன். திடார்னு ஆகாங்கறார். ஒரே ஒரு சமயம் கண்ணைத் துடைச்சுக்கிறார். இதெல்லாம் எப்படி ? எப்ப செய்யறது ? எதுக்காக இப்படி செய்யத் தோணுகிறது. இது தெரிஞ்சாப் போதும். இதுக்குத்தான் உங்களைக் கூப்பிட்டனுப்பிச்சேன். ‘
இதுதான் நடந்தது. நான் இப்போது ஒரு நிஜசிங்கத்தின் வாயிலேயே நுழைந்து விட்டதாகத் தோன்றிற்று.
மிஸ்டர் கோடு கோடு கோடு இப்போது இல்லை. சிலவருடங்கள் முன்பு காலமாகிவிட்டார். அந்த சந்திப்பை நினைத்தால் இப்போது என் உடல் நடுங்குகிறது. ஏனாம், நீர் எழுத்தாளராச்சே சொல்லும்.

Friday 10 March 2017

வை.கோவிந்தன் : மறக்கப்பட்ட ஆளுமை by யூமா வாசுகி



வை.கோவிந்தன் : மறக்கப்பட்ட ஆளுமை



வை.கோவிந்தன்
தஞ்சாவூரில், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனக் கிளை மேலாளர் சரவணனிடம் பேசிக்கொண்டிருந்த போது “சக்தி கோவிந்தனைத் தெரியுமா?” என்றார். “ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னேன். “புதுக்கோட்டை அருகில் உள்ள ராயவரம்தான் அவரது சொந்த ஊர்.   அங்கே நடக்கின்ற ஒரு விழாவிற்காக அவரது மனைவியும் மகனும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களாம். சந்திக்கிறீர்களா…”

உச்சி வெயில். எதிர் அனல் காற்று. இரு சக்கரவாகனத்தில் நான் பின்னிருக்கையில் இருந்தேன். பயணம் நெடுந்தூரம். போகிறோம்… போகிறோம், ஊர்வந்த பாடில்லை. தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்குமிடையில் சுமார் ஒரு மணிநேரப் பயணம் தான் என்றாலும் பஸ்ஸில் சென்றிருந்தால் இந்தளவு அயர்ச்சி தெரிந்திருக்காது. புதுக்கோட்டையிலிருந்து இடையிடையே வழி விசாரித்துக்கொண்டு ராயவரம் எனும் சிற்றூருக்குள் நுழைகையில் மதியம் இரண்டுமணி. அங்கே சக்தி கோவிந்தனின் வீட்டைக் கண்டு பிடிப்பதும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.  குழம்பிப்போய் விசாரித்த வீட்டின் கதவுகளையே மறுபடியும் தட்டினோம். ராயவரத் தெருக்களில் குறுக்கும் நெடுக்குமாக வண்டியில் பாய்ந்து “சக்தி கோவிந்தன் – சக்தி கோவிந்தன்” என்று கேட்டு, சரியான பதில் கிடைக்காத நிலையில், சுட்டப்பட்ட வீடுகளும் தவறாக இருக்கையில், எதிரே வந்த ஒருவரிடம் சரவணன் சமயோசிதமாகக் கேட்டார். “கோவிந்தன் செட்டியார் வீடு எதுங்க?” அந்த நபரால் காட்டப்பட்டதுதான் நாங்கள் தேடிக்கொண்டிருந்த வீடு. அந்த வீட்டிலிருந்த பெண்மணி “கோவிந்தன் செட்டியார் வீடு இதுதான் கண்ணுங்களா, ஆச்சியும் (கோவிந்தன் மனைவியும்) அவங்க மகனும் மெட்ராஸ்லேர்ந்து வந்துருக்காங்க. அவங்க கோயில்ல இன்னிக்குப் பூச நடக்குது. அதுக்காகத்தான் வந்துருக்காங்க அங்கே போய்ப் பாருங்க கண்ணுங்களா” என்று வழியும் சொன்னார்.

“எல்லாரும் மறந்துட்டாங்க” தன் தந்தை வை. கோவிந்தன் குறித்து அழகப்பன் சொல்லத் தொடங்கியதன் ஆரம்ப வாசகம் இது. “நிறைய புத்தகம் போட்டாங்க அப்பா.  விக்கல.  யாரும் வாங்கிப் படிக்கல. ரொம்ப நஷ்டமாயிருச்சி…”

கண்களில் ஏற்பட்ட கோளாறைக் குணப்படுத்தச்செய்த அறுவை சிகிச்சையினால் கேட்கும் திறன் பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டது அழகப்பனுக்கு. எதிராளி என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள அதிகப் பிரயாசையுடன் முகத்தையே உற்றுநோக்கி இழுத்து இழுத்து நிதானமாகப் பேசினார்.  இந்தக் குறைபாட்டால் அவரால்  வேலை எதுவும் செய்ய இயலாமலாகிவிட்டது.  ஆயினும், பழைய பொருட்களை வாங்கிவிற்கும் வேலையை அவ்வப்போது செய்து வருகிறார்.  மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டிருக்கிற தற்போதைய நிலையில் நண்பர்கள் எவரேனும் அரிதாக உதவுகின்றனர். நாற்பது வயதில்தான் திருமணம் செய்திருக்கிறார்.  அழகப்பனின் மனைவி, கண்ணதாசனின் உறவுக்காரப் பெண், நான்காம் வகுப்புப் படிக்கும் ஒன்பது வயது மகளின் பெயர் அழகம்மை. அம்பத்தூரில்  தன்  மூத்த  சகோதரியின்  (இவர் வை. கோவிந்தனின் முதல் மனைவிக்குப் பிறந்தவர். இரண்டாம் திருமணத்தில் பிறந்தவர் அழகப்பன்) வீட்டருகில் வசித்து வருகிறார்.
அவருடைய  பேச்சு முற்றிலும் வசப்படுத்தியது எங்களை.  தன் தகப்பனாரின் செயல்பாடுகளைப் பற்றி முழு ஈடுபாட்டுடனும் பெரிய மரியாதையுடனும் – அதே சமயம் மிகவும் வேதனையுடனும் நீண்ட நேரம் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். மாபெரும் பதிப்பாளர் ஒருவர் அறிவுத் துறையிலே நிகழ்த்திய சாதனைகள். லௌகிகப் பெரும் சரிவு. இப்போதும் வீரியம் குன்றாதபடி அவரிடம் நிலைத்திருக்கிறது தந்தையின் அகாலமரணம். இந்த இறப்பின் மையத்திலிருந்தே பேச்சு கிளை விரிகிறது.

சோகத்தின் கைப்பும் நிராதரவின் இறுதிக்கட்ட மௌனமுமாக இடையிடையே உறைந்துபோகிறார். எங்கோ பார்த்துத் தலையசைத்து முனகலாக “எல்லாரும் மறந்திட்டாங்க…” என்றவர் சரவணனிடம் திரும்பி “எங்க அப்பா ஒண்ணும் செய்யாம வீட்டில இருந்திருந்தாலே இன்னும் இன்னும் பல தலைமுறைகளுக்கு நாங்க நல்லா இருந்திருப்போம். புத்தகம் போடுறேன் – பத்திரிகை நடத்துறேன் என்று எல்லாவற்றையும் விரயம் செய்துவிட்டார்கள். இப்போது நாங்கள் சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்படுறோம்” என்றார். தன் அப்பா செய்த காரியங்களின் முக்கியத்துவம் – பெருமை எல்லாம் தெரிந்தாலும்கூட – வை. கோவிந்தனின் மீதுள்ள பெரும் அபிமானத்தையும் மீறி, வாழ்வின் வலி அவர் இதயத்திலிருந்து வெளியுதிர்த்த வார்த்தைகள் அவை.
ஆக… இறுதியில் இப்படிச் சொல்ல நேர்ந்துவிட்டது.

அப்பா பிறந்தது புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உள்ள ராயவரம். இப்போது புதுக்கோட்டை மாவட்டம். தாத்தா பேரு ராமசாமி செட்டியார். பாட்டி பேரு விசாலாட்சி. அப்பா படித்தது எட்டாவது வரையில்தான். படித்துக் கொண்டிருக்கும்போதே தாத்தா அப்பாவை பர்மாவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.  அந்தச் சமயத்தில் அப்பாவுக்கு 14 அல்லது 15 வயசுக்குள்ள இருக்கணும்.   பர்மாவில் தாத்தாவுக்கு மரம் அறுக்கும் மில்லும் வட்டிக் கடையும் இருந்தது. அங்கே ரொக்கக் கடையின்னு சொல்வாங்க.   அப்பா அதைப் பார்த்துக்கொள்கிற மாதிரி ஏற்பாடு. விவசாயம் பண்ணுகிறவர்களிடம் பணத்தைக் கொடுத்து வாalakappanங்குறதுதான் முக்கியமான வேலை. வெள்ளாமை நல்லா இல்லாமப்போனா அவங்களால வாங்குன பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அந்த மாதிரி சயமங்கள்லே அவங்களை கசக்கிப் பிழிஞ்சி வாங்குறது அப்பாவுக்கு மனசுக்குப்பிடிக்கல.   அப்ப சுத்தானந்த பாரதியார் – சாமிநாத சர்மா அவர்களெல்லாம் அப்பாவின் வயதுக்காரர்கள். சாமிநாத சர்மா பர்மாவிலே இருந்தார். சுத்தானந்த பாரதி அரவிந்தாஸ்ரமத்திலிருந்து பர்மாவுக்குப் போயிருந்தார்.  அவங்களோடு அப்பா கலந்து பழகினாங்க.  அப்பா வேலை செய்த கடை தாத்தாவினுடையது.  வட்டிக்கடைத் தொழில் அப்பாவுக்கு பிடிக்கல.  சுத்தானந்த பாரதி இங்கே இருக்கும்போதே பர்மாவிலே இருந்த அப்பாவுக்கும் அவருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருந்தது. அப்பா இங்கே வந்துட்டாங்க. வந்தவுடனே அப்பாவை இன்னொரு வீட்டுக்கு ஸ்வீகாரம் கொடுத்துட்டாங்க. எங்களுடைய பங்காளிங்க மாதிரி உள்ள வீட்டுக்கு.   தத்து எடுத்த தாத்தாவின் பெயர் வைரவன் செட்டியார்.  அந்தம்மா பேரு முத்தையாச்சி. அப்ப ராமசாமி தாத்தாவினுடைய வீடு ராஜா சர்.முத்தையா செட்டியார் வீட்டில் அடமானத்துல இருந்துச்சி. தொழிலுக்காக ராஜா சர்.முத்தையா செட்டியார் கிட்ட வாங்கிய கடன் 30,000 ரூபாயக் கட்ட முடியல. அதனால அப்பாவத் தத்துக் கொடுத்து 30,000 ரூபாய் பணம் வாங்கி அந்த வீட்டைத் திருப்பியிருக்காங்க. அப்பா அடாப்ட் போன இடத்தின் சொந்தத்திலேயே கல்யாணம் பண்ணுனாங்க. கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள்ல அப்பாவுக்கு, அப்ப பிரிட்டிஷ் கரன்ஸி ஒரு லட்ச ரூபா ஒன் லேக் அந்தக் காலத்துல. அப்ப அப்பாவுக்கு 17, 18 வயசு இருக்கணும். பேங்குல இல்ல, எங்க சொந்தக்காரங்க வீட்டு “சேஃப்”புல இருந்து எடுத்துக் கொடுத்து – வைத்து தொழில் பண்ணிக் கொள் என்றார்கள்.  அந்தப் பணத்தை வைத்து மெட்ராஸ் வந்து சுத்தானந்த பாரதியை வைத்து சக்தி பிரஸ் ஒன்று தொடங்கி சக்தி மேகஸின் ஆரம்பித்தார்கள்.

சுத்தானந்த பாரதியுடன் அரவிந்தாஸ்ரமரத்தில் இருந்ததிலிருந்து தான் அப்பாவுக்கு இலக்கிய ஈடுபாடு. முதல் மனைவி கல்யாணம் செய்த கொஞ்ச நாட்களிலேயே இறந்துட்டாங்க. அவங்களுக்குத்தான் எங்க அக்கா பொறந்தது. அக்கா சின்னக் கொழந்தையா இருக்கையில அப்பா அரவிந்தாஸ்ரமம் போயி இருந்துட்டாங்க.  வரவேயில்லை. இந்த வாழ்க்கை அவங்களுக்குப் புடிக்கல. முதல் மனைவி இறந்ததும், எனக்கு எதுவும் வேண்டாம் என்று அரவிந்தாஸ்ரமத்தில் போய் சேர்ந்து விட்டார்கள். அப்போது சுத்தானந்த பாரதியார் ஆஸ்ரமரத்தில் இருந்தார்கள்.  அப்பா அந்த பீரியட்ல எழுதுன நோட்புக் ஒண்ணு இருக்கு.  அப்பா கைப்பட எழுதிய நோட்புக்.  நீங்க பாத்தீங்கன்னா தெரியும். அதுலேர்ந்து அப்பாவுக்கு இந்த லௌகீக வாழ்க்கை புடிக்கலைன்னு உங்களுக்குத் தெரியும்.
அப்பாவுக்கு ஆங்கில இலக்கியத்திலெல்லாம் நிறைய ஈடுபாடு உண்டு. சாமிநாத சர்மாவுடனெல்லாம் பழகியதால பாரதியார் மேல அளவில்லாத ஆர்வம்.  வெளிநாட்டு நல்ல புத்தகங்களையெல்லாம் தமிழ்ல வெளியிடணும்னு ஆசைப்பட்டாங்க.

ஆசிரமத்திலிருந்து அவங்களை கூட்டிக்கொண்டு வரமுடியல. அப்புறம் சுத்தானந்த பாரதிதான் “குடும்ப வாழ்க்கைக்குப் போ, ரெண்டாவது கல்யாணம் செய்துகொள்” என்று வலியுறுத்தியதன் பேரில் அப்பா ரெண்டாவது கல்யாணம் செய்துகொண்டார்கள். அப்பாவுடைய அண்ணன் மனைவியின் தங்கைதான் அம்மா. அப்பாவின் உடன் பிறந்தவங்க நான்குபேர். பெரியவர் ரங்கநாதன் செட்டியார்.  பர்மாவுல இருந்தவர்.  அவரும் அவரின் மனைவியும் சேர்ந்து அம்மாவை அப்பாவுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். கல்யாணம் நடந்த பிறகும் அவர்களே அப்பாவுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

இப்போது மியூசிக் அகாடெமி இருக்கிற இடம் சக்தி காரியாலயத்தின் சொந்த இடமாக இருந்தது. அப்பா சக்தி பத்திரிகை ஆரம்பித்த காலத்தில் ரஷ்யாவிலிருந்து நிறைய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் வந்தன.  அப்பாவுக்கு டால்ஸ்டாய் மேல் தீவிர ஈடுபாடு வந்தது. டால்ஸ்டாயின் மீது பைத்தியமாகவே இருந்தாங்க. அப்பாவே நிறைய டால்ஸ்டாய் புத்தகங்களை வெளியிட்டாங்க.  இது அப்பா செய்த முக்கிய காரியங்கள்ல ஒண்ணு.

மொதல்ல தி.ஜ. ரங்கநாதன்தான் அப்பாவிடம் வேலை பார்த்தவர். தி.ஜ.ர-மஞ்சரில இருந்தாருல்ல, அவருதான். பெறகு கு.அழகிரிசாமியும் வந்து அப்பாவோட வேலை பார்த்தாங்க. தொ.மு.சி. ரகுநாதனும் அப்பாவோட இருந்தாங்க. இவங்க சக்தி மேகஸின் பார்த்துக்கிட்டிருந்தாங்க.  பிறகு மங்கைன்னு பெண்களுக்கான பத்திரிகையை அப்பா ஆரம்பிச்சாங்க. அதற்கு ஆசிரியையாக டாக்டர். லட்சுமி நியமிக்கப்பட்டாங்க. சக்தி பத்து வருடங்கள் வந்திருக்கும். வாரம் ஒன்று. ஆரம்பத்தில் டைம் மேகஸின் அளவுக்குப் பெரிதாகச் செய்தார்கள். செலவு அதிகமாகிறது என்று பிறகு சிறிய அளவிற்கு மாற்றினார்கள். தொடர்ச்சியாகப் பத்திரிகை வந்துகொண்டிருந்தது.
1951-52-இல் பிரஸ் விக்கிற நெலமைக்கிப் போயிருச்சி. பத்திரிகை வாங்கிப் படிக்க ஆள் இல்ல. பெருமளவில் விற்பனையாகாமல் தேங்கியது. நிறைய நஷ்டம் வந்தது. புத்தகமென்றால் அதற்கு ஆயுள் அதிகம் என்று புத்தகத் தயாரிப்பில் இறங்கினார்கள் அப்பா. அப்புறம் அணில் என்று குழந்தைகளுக்கான பத்திரிகை ஆரம்பித்தார்கள். குழந்தை எழுத்தாளர் சங்கத்தை தோற்றுவித்தவரும் அதன் முதல் தலைவரும் அப்பாதான். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவுமிருந்தார்கள். குகப்பிரியை எனும் புனை பெயரைக்கொண்ட டாக்டர் லட்சுமி ஆசிரியராக இருந்து நடத்திய மங்கை நான்கு வருடங்கள் வந்திருக்கும். மங்கை மாதம் ஒரு பத்திரிகை. அணில் பத்திரிகையில்தான் தமிழ்வாணன் உதவியாசிரியராக இருந்தார்.  முதன் முதலில் தமிழ்வாணன் சென்னைக்கு வந்து அப்பாவிடம் கேஷியராக வேலைக்குச் சேர்கிறார்கள்.

தமிழ்வாணன் எழுத்தாளராக வரவில்லை.  நம்பிக்கையான ஆள் வேண்டும் என்று செட்டியார் கம்யூனிட்டிலேர்ந்து அவரைக் கொண்டு வந்து வைத்தார்கள் அப்பா. அவர் கடைசி வரைக்கும் அப்பாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தார். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவும் 1940-இல் சக்தி அலுவலகத்தில் கேஷியராகப் பணிபுரிந்தார். அந்தப் பீரியட்லதான் ரா.கி. ரங்கராஜன் சக்தியில் வந்து சேர்ந்தார். குமுதம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு ரா.கி.ரவும் தமிழ்வாணனும் சக்தியிலிருந்து பிரிந்து குமுதத்தில் சேர்ந்துவிட்டார்கள்.  கம்யூனிஸ ஈடுபாட்டுடன், கொள்கை தொடர்பான தத்துவப் புத்தகங்கள் எல்லாம் போட்டால் அவற்றை விற்க முடியாமல் போகுமென்று அவங்கெல்லாம் ஒதுக்கிட்டாங்க. பாப்புலராக விற்க முடியாமல் போகுமே என்று பிரிந்து போயிட்டாங்க. அதுதான் நடந்தது. முழுவதும் ரஷ்யா தொடர்பான புத்தகங்கள் போட்டால் நமக்கு நல்ல எதிர்காலம் இல்லைன்னு அவங்க நெனச்சாங்க.

பிற்பாடு அணில் மேகஸின் நடத்திக்கொண்டிருக்கும்போது அப்பாவுக்கு கார் ஆக்ஸிடன்ட் ஆகிவிட்டது. மோரீஸ் மைனர். புதுவண்டி. அப்பாவின் தங்கை கணவர் (அடாப்ட் போன இடத்தில்) வாங்கிக் கொடுத்தது.  அவர் பெயர் வைரம் அருணாச்சலம்.  மிகவும் புகழ் பெற்றவர்.   A.V.M- முக்கெல்லாம் ஒரு தடவை பைனான்ஸ் செய்தவர். அவர்தான்  A.V.M ஸ்டுடியோ ஆரம்பித்துக்கொடுத்தவர். பெரிய வைர வியாபாரி.  அவர் இங்கு வந்து எங்களுடைய மியூசிக் அகாடமி வீட்டில் இருக்கும்போது அவர் வெளியே செல்வதற்கு டாக்ஸி பிடித்துவரச் சொல்லி ஆள் அனுப்பினாங்க அப்பா.  அவர் அப்பாவிடம் “இன்னும் நீ கார் வாங்கிக் கொள்ளவில்லையா?” என்று கேட்டுவிட்டுச் சென்று திரும்பி வரும்போது “மோரீஸ் மைனர்” புது கார் வாங்கி வந்து சாவியை அப்பாவின் மேசைமீது வைத்து எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவர் மிகப்பெரிய கோடீஸ்வரன். பாம்பேல  அவருக்கு  வைர  வியாபாரம்.   அவரும்  நொடிச்சிப்போயிட்டார் கடைசி காலத்துல.

வண்டி வாங்கிய ஒரு வாரத்துல அவரு ஊருக்குப் போயிட்டாரு. அப்பா பேங்குக்குப் போறதுக்கா – அன்னைக்குத் திங்கட்கிழமை – வண்டியை எடுக்கச் சொன்னங்களாம்.  டிரைவர் “இப்போது மணி எட்டாகிறது.   ராகு காலம் கழித்துப் போகலாம்” என்று சொல்லியிருக்கிறார்.  “எனக்கு இந்த சென்டிமெண்ட் இல்ல, வண்டிய எடு” என்று சொல்லிவிட்டார்கள் அப்பா. வண்டிய எடுத்துக்கிட்டுப் போறபோது ஆழ்வார்பேட்டை கார்னர்ல வண்டி வரும்போது ஆக்ஸிடண்ட்டாயிருச்சி.   பெரிய ஆக்ஸிடண்ட் அது.   டிரைவர் ஸ்பாட்ல செத்துப் போயிட்டாரு.  அப்பா பின் சீட்டில் இருந்ததால உயிர் பிழைச்சிட்டாங்க. ஆனா அப்பாவுக்கு கடைசி வரையிலும் கால் சரியாக ஊன்ற வராமல் போய்விட்டது, அந்த ஆக்ஸிடெண்டிலிருந்து. அந்த ஆக்ஸிடெண்ட்ல அப்பா குற்றுயிரும், குறையுயிருமாக ரோட்ல கெடக்கும்போது, சிவகங்கை ராஜா அந்த வழியா வண்டில வந்தவரு அப்பாவைப் பார்த்து ராயப்பேட்டை ஆசுபத்திரில கொண்டு போயிச் சேத்துட்டாரு.

ராயப்பேட்டை ஆசுபத்திரில சேந்தவுடனே தமிழ்வாணனுக்கு போன் பண்ணியிருக்காங்க. தமிழ்வாணன் வந்து கடைசி வரைக்கும் கூட இருந்து பாத்துக்கிட்டாரு.  அணில் பத்திரிகைக்கு அப்பாதான் எடிட்டராக இருந்து பாத்துக்கிட்டாங்க. அந்தப் பத்திரிகையோட எல்லா விஷயத்தையும் தன்னோட கட்டுப்பாட்டில் வைத்திருந்தாங்க. குழந்தைகள் பத்திரிகை என்பதால் ரொம்ப கவனமாயிருந்தாங்க. அப்பா ஆக்ஸிடெண்டால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஆசிரியர் பொறுப்பு தமிழ்வாணனிடம் போனது. அப்பா ஆசிரியராக இருந்தபோது அணில் 5,000 காப்பிகள்தான் விற்பனையானது.  அது போதும் என்றிருந்தார்கள் அப்பா. “நீயே அணிலைப் பார்த்துக்கொள்” என்று அப்பா தமிழ்வாணனிடம் சொன்னவுடன் அவர் 25,000 பிரதிகளாக சர்குலேஷனை ஜாஸ்தி பண்ணிட்டார்.   அணிலில் “பயம்மாயிருக்கே” என்று மர்மத் தொடர்கதை ஒன்றை தமிழ்வாணன் எழுதியதுதான் காரணம்.  அதுதான் முதல் கதை தமிழ்வாணனுக்கு. “கதை நல்லாருக்கு.   ஆனால் குழந்தைகளுக்கு இதுபோல எழுதக் கூடாது. துப்பாக்கி சத்தம், ரத்தம் அது இதுன்னு ஒரே வன்முறையா உள்ளது போல எழுதாதீங்க” அப்படீன்னாங்களாம் அப்பா.

தமிழ்வாணனுக்கும் அப்பாவுக்கும் எந்தவொரு மனஸ் தாபமும் எப்போதும், கடைசி வரையிலும் இருந்தது கிடையாது. தமிழ்வாணன் மிக்க அன்புடனும் மரியாதையுடனும் இறுதிவரை பழகிக் கொண் டிருந்தார். ஆனால் அப்போது, இதுபோன்ற கதைகள் எழுதாதீர்கள் என்றார்களாம் அப்பா.   “இல்லை, 5,000 சர்குலேஷனை 25,000 – த்திற்கு உயர்த்தியிருக்கிறேன்.  இன்னும் ஜாஸ்தி இதை கொண்டுட்டு வந்திடலாம்” என்று சொன்னாராம் தமிழ்வாணன்.

அதற்கு அப்பா, “எனக்கு வியாபாரம் பெருசுல்ல, எனக்குன்னு ஒரு மோட்டிவ் இருக்கு. என்னுடைய கொள்கைதான் எனக்கு முக்கியம். குழந்தைகளுக்கு குழந்தைகள் கதை போலத்தான் எழுதவேண்டும்” என்றார்களாம். தமிழ்வாணன் சக்தி காரியாலயத்தில் தனக்கு எழுத்து சதந்திரம் இல்லையென்று எஸ்.ஏ.பியிடம் போயி சேர்ந்துட்டாரு. அவர் தமிழ் வாணனுக்காகவே “கல்கண்டு” பத்திரிகையை ஆரம்பித்துக் கொடுத்தார். தமிழ்வாணனையொட்டி ரா.கி.ரவும் குமுதத்தில் சேர்ந்துட்டாங்க. அவர்கள் இருவரும் வெளியே வேலைக்குச் சேர்ந்தார்கள் என்றாலும் அப்பாவைத் தினமும் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கேயிருந்தாலும் நீங்கள் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று அப்பா சொன்னார்கள்.

தமிழ்வாணன் புத்தகக் கடை ஆரம்பித்தபோதுகூட அப்பாவிடம் தான் வந்து அறிவுரைகள் கேட்டுப் போனார். அப்பா செத்தபோதுகூட முதல்ல நின்னு தூக்குன ஆள் தமிழ்வாணன்தான். தமிழ்வாணனும் – நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ண மூர்த்தியும் அப்பாவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களாயிருந்தார்கள். இன்னைக்கி வரையிலும் எனக்கு ராதாகிருஷ்ணமூர்த்தியும் தமிழ்வாணனின் மகன் லேனா தமிழ்வாணனும் உதவுகிறார்கள். என் குழந்தைக்கு பள்ளிக்கூட பீஸ் கட்டுவதற்கும் சாப்பாட்டுக்கும் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறார் லேனா. எப்ப எது வேண்டுமென்றாலும் போன் செய்தால் போதும், வந்து செஞ்சி கொடுத்துடுவாரு. உங்களுக்கு எதாவது நல்லபடியாக செய்து தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

அப்பாவுக்கு கடன் ஜாஸ்தியாகிவிட்டது.  தொடர்ந்து அடுத்தடுத்து நஷ்டங்கள். மியூசிக் அகாடெமி வீடு அப்படியே முழுகிப் போய்விட்டது.  அதை விட்டு வந்து மவுண்ட் ரோட்டுல ஆயிரம் விளக்குல – மவுண்ட் ரோட்டுல வச்சாதான் புத்தகக் கடை நல்லாப் போகும்னு – அப்பா கடை ஆரம்பித்தார்கள். அப்போது ஒரே கடை ஹிக்கின் பாதம்ஸ் மட்டும்தான். அங்கே ஆங்கிலப் புத்தகங்கள் மட்டும்தான் விற்பார்கள். தமிழ்ல புத்தகக் கடை வேணும்னுதான் அப்பா ஆரம்பிச்சாங்க. பிறகு அதையும் அப்பாவால நடத்த முடியல. அப்பாவோட தம்பி ஒருத்தரு, அவரு ஒரு மாதிரி டைப்பா போயிட்டாரு. குடி – போதைன்னு T.B பேஷண்டாயிட்டாரு.   அவரக் கவனிக்கிறதுலேயே அப்பாவுக்கு நிறைய இழப்பும் சிரமமும் ஏற்பட்டுருச்சி. அப்பாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.   அப்பாவோட தம்பியினாலதான் குடும்பம் நொடிச்சிப் போச்சி.   மவுண்ட் ரோடு கடையையும் மூடுற நெலம வந்தது.

டி.எஸ். சொக்கலிங்கம் காமராஜரும் சிறிய வயதில் ஒன்றாயிருந்தவர்கள். டி.எஸ். சொக்கலிங்கம் காமராஜர் கிட்டே சொல்லி அப்பாவுக்கு காங்கிரஸ் கிரவுண்டுல ஒரு கடை எடுத்துக்கொடுத்தாங்க. அப்பா மேகஸின் ஆரம்பித்த போது 24 மணி நேரமும் அப்பா கூடவே இருந்தவரு சொக்கலிங்கம். சொக்கலிங்கம் அப்போது கல்யாணம் ஆகாதவரு. எந்த நேரமும் ஒன்றாகவே இருப்பார்கள் இருவரும்.  காமராஜர் சொக்கலிங்கத்தைப் பார்க்க அடிக்கடி சக்தி காரியாலயத்திற்கு வருவார்.  அப்பாவுடன் ரொம்ப நேரம் கேலியாக அரட்டையடித்துக்கொண்டிருப்பார். அப்பா கம்யூனிச ஆதரவாளராயிருந்ததனால் “ரெட்… ரெட்” என்று அப்பாவைக் கிண்டல் செய்வார் காமராசர். அப்பாவும் சில சமயங்களில் காமராசரைப் போய் பார்த்துப் பேசிவிட்டு வருவார்கள்.    அப்பாவுக்கு  அவர்தான்  காங்கிரஸ் கிரவுண்டில் இடம் கொடுத்தார். அதையும் நடத்த அப்பாவுக்கு முடியல.
எங்க அக்காவுக்கு கல்யாணம் செய்ய வேண்டியிருந்தது. செட்டியார் ஜாதில பெரிய அளவுக்கு சிறப்பாகச் செய்ய வேண்டிய நிகழ்ச்சி திருமணம். அப்பா ஊருக்குச்சென்று வீட்டிலிருந்ததை எல்லாம் விற்றுக் கல்யாணம் செய்தார்கள். அப்பா ஒரு மாதிரி அக்ரிகல்ச்சர் லைனுக்குப் போய்ட்டாங்க.   இந்தப் புத்தகத்துறை அவங்களுக்குப் புடிக்கல.   எப்போதும் புத்தகங்களுக்கு நடுவுல இருந்ததால – அந்த வாசனையும் தூசியும் ஒத்துக்காம T.B வந்துடுச்சி. இதனால் பெரிய கஷ்டம். அப்பாவுக்கு இந்தத் துறை புடிக்கல. இந்த எழுத்து புடிக்கல.   நல்ல புத்தகம் போட்டால் வாங்க ஆள் இல்ல. லைப்ரரி  ஆர்டரை  நம்பியே  எல்லாரும்  புத்தகம்  போட்டுக்கிட்டிருந்தாங்க. அப்பாவுக்கு லைப்ரரிக்கு புத்தகம் கொடுக்கிறது புடிக்காது. லைப்ரரிக்கு கொடுக்கறதுக்கு யார் யாரையோ கெஞ்சி பணம் கொடுத்து ஆர்டர் வாங்க வேண்டும். பக்கத்துக்கு இவ்ளோன்னு கொடுத்து வாங்கணும். எனக்கு அது தேவையில்லைன்னாங்க அப்பா. வெள்ளைத்தாள் கெடைச்சா கருப்பாக்கி காசாக்கிட்டுப் போறாங்க. அவங்கெல்லாம் மளிகைக் கடை வைக்கலாம்னு அப்பா கோவமாகச் சொல்லுவாங்க.  அப்பா ஒரு புத்தகம்கூட லைப்ரரிக்குக் கொடுக்கல. மியூசிக் அகாடமிலேர்ந்து மவுண்ட்ரோடு கடைக்கு வந்தப்புறம் மலிவுப்பதிப்புன்னு தொடர்ந்து புத்தகம் போட்டாங்க. அப்பதான் பாரதியார் கவிதைகள் முழுத்தொகுப்பாக சக்தி வெளியீடாக வந்தது.
A.V. மெய்யப்பச் செட்டியார் பாரதியார் கவிதைகளின் ரைட்ஸ் பூரா வாங்கியிருந்தாங்க.  அப்புறம் பணம் எதுவும் வாங்காம அரசாங்கத்துக்கிட்டே கொடுத்துட்டாங்க. கவர்ன்மென்ட்லேர்ந்து அந்தப் புத்தகத்த 6 ரூவா விலைக்கிப் பப்ளிஷ் பண்ணினாங்க.  அந்த சமயத்துல அப்பா காமராஜருடன் சண்டை போட்டாங்களாம். “ஒரு ரூபா விலைக்கி நீங்க இந்தப் புத்தகத்த அரசாங்கத்துலேர்ந்து விக்கணும்.6 ரூவா விலை இந்தப் புத்தகத்துக்கு நீங்க வச்சிருக்கீங்க.  இது எல்லா மக்களுக்கும் எப்படிக் கிடைக்கும்” என்றார்களாம். அன்று 6 ரூபாய் பெரிய தொகை. அப்ப காமராஜர் சொன்னாராம் “உன்னால் முடிந்தால் நீ ஒரு ரூபாய்க்கிப் போடு”ன்னு. அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் பாரதியார் கவிதைகள் தொகுப்பை 1 ரூபாய்க்குப் போட்டார்கள் அப்பா. 500 பக்கங்கள். காமராஜரை தலைமை தாங்க வைத்து, ராஜா சர். முத்தையா செட்டியாரை புத்தகம் வெளியிட வைத்து, ராஜா அண்ணாமலை மன்றத்தில் விழா நடத்தினார்கள்.  பிரிண்ட் செய்த அத்தனை புத்தகங்களுமே அன்னைக்கே ராஜா அண்ணாமலை மன்றத்தில் வித்துருச்சி. ஒரே நாள். ஒரு ரூபாய் விலை வைத்தினாலே அதே மேடையில் அன்றே புத்தகங்கள் விற்றுவிட்டன.  மூன்றாவது நாள் புத்தகம் இல்லையாம். அப்போது காமராஜர் அப்பாவிடம் “இதுபோன்ற ஆட்கள்தான் எங்களுக்குத் தேவை. இதுபோன்ற விஷயங்களை நீங்கதான் செய்யணும்.   எல்லாவற்றிற்கும் அரசை எதிர்பார்க்காமல் செய்யணும்.” என்று பாராட்டினார். அதற்குப் பிறகு திருக்குறள் புத்தகம் போட்டார்கள், பரிமேலழகர் உரையுடன். இதுவும் 500 பக்கங்கள்.  அதே ஒரு ரூபாய் விலைக்கு.  அதற்குப் பிறகு பஞ்ச தந்திரக் கதைகள் போட்டார்கள். பெரிய புத்தகம்.  அதுவும் மலிவுப் பதிப்பு. ஒரு ரூபாய். அது முடிந்தபிறகு கம்பராமாயணம் போட்டார்கள். கம்பராமாயணம் போடும்போதுதான் இரண்டு இரண்டு தொகுதிகளாகப் போட்டார்கள். ரெண்டு ரூபா ரேட்டு வச்சிருந்தாங்க. இது 4 வால்யூம் வந்துச்சி. அதுக்கப்புறம் அப்பாவால பண்ண முடியல.

பாரதியார் கவிதைகள் போடுவதற்கு முன்பு ஹிக்கின்ஸ் பாதம்ஸுக்கு முன்கூட்டியே போய் ஆர்டர் கேட்டாங்க அப்பா. ஏன்னா லைப்ரரி அல்லது ஹிக்கின் பாதம்ஸை டிப்பன்ட் பண்ணித் தான் இருக்கணும். ஹிக்கின் பாதம்ஸுக்கு எல்லா ரெயில்வே ஸ்டேஷன்லேயும் கடையிருக்கும்.  அங்கே கேக்குற போது, அவங்க, பர்சண்டேஜ் ஜாஸ்தி கொடுத்தாத்தான் விப்போம்னாங்க.  அவங்க கேட்டது 40ரூ. அப்பா 15ரூக்கு மேல கொடுக்க மாட்டேன்னுட்டாங்க. ஒரு ரூபா விலை வச்சி நான் 40ரூ உங்களுக்குக் கொடுத்தன்னா எனக்கு கட்டுப்படியாகாதுன்னாங்க.   அதனால ஹிக்கின் பாதம்ஸ் ஆர்டர் கெடைக்கலை. புத்தகம் வெளிவந்து எல்லாம் விற்றுப்போனதும் வாசகர்கள் ஹிக்கின் பாதம்ஸ் கடைகளில் எல்லாம் பாரதியார் கவிதைகள் புத்தகத்தை கேட்டு அலைந்திருக்கிறார்கள். அப்போது ஹிக்கின் பாதம்ஸ்காரர்கள் “எங்களுக்கு கமிஷனே தராவிட்டாலும் பரவாயில்லை. உடனே புத்தகத்தை கொடுங்கள்.  நிறையப்பேர் கேட்கிறார்கள்.   எங்களுக்கு வியாபாரம் தடைபடுகிறது” என்று வேண்டிக் கேட்டுக்கொண்டதும் இரண்டாம் பதிப்பை ஹிக்கின் பாதம்ஸுக்கு கொடுத்தார்கள் அப்பா. முதன் முதலில் பாரதியார் கவிதைகளை முழுமையாக மிக மலிவான விலைக்குக் கொடுத்தது அப்பாதான். அப்பா கொடுத்தது போல இன்றைய வரையிலும் யாரும் பாரதியின் கவிதைகளை முழுமையாக நிறைவாகக் கொடுக்கவில்லை. அதில் பரலி சு. நெல்லையப்பர் முன்னுரை எழுதியிருக்கிறார். பரலி சு. நெல்லையப்பர், பாரதியார் பொண்ணு, ரா. பத்மநாபன் ஆகியோரெல்லாம் பாரதியார் கவிதைகளை வெளியிடுவதற்கு உதவினார்கள். அப்பா சொல்லித்தான் தினமணியிலிருந்து, ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். தங்கம்மா பாரதி எழுதிய பாரதியார் சரித்திரத்தையும், வ.ரா. எழுதிய பாரதியார் சரித்திரத்தையும் அப்பா போட்டிருக்கிறார்கள்.

அப்பா இறந்த பிறகு பல வருஷங்கள் கழித்து பாரதியார் கவிதைகள் புத்தகத்தை மூர்மாக்கெட்டில் ஒரு கடையில் வைத்திருந்தார்கள். அதை நான் பார்த்தேன்.  அந்தப் புத்தகத்தை வாங்குவதற்கு மிகவும் ஆசைப்பட்டேன்.  விலை கேட்டபோது கடைக்காரன் அதற்கு 100 ரூபாய் விலை சொன்னான்.  புத்தகத்தில் விலை போட்டிருந்த இடம் கட் பண்ணியிருந்தது. அதைப் பத்து அல்லது பதினைந்து ரூபாய்க்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் நான் நீண்ட நேரம் விடாப்பிடியாக பேரம் பேசினேன் அவனிடம். அவன் சொன்னான், “இது சக்தி வெளியீடு. இதைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது.  மற்ற பாரதியார் கவிதை புத்தகமாயிருந்தால் நீ கேட்ட விலைக்குத் தந்துவிடுவேன். இதில் 2 ரூபாயென்று (இரண்டாம் பதிப்பு) விலை போட்டிருந்தாலும் 75 ரூபாய்க்குக் குறைத்துத் தரமுடியாது” என்று உறுதியாகச் சொன்னவுடன் நான் 75 ரூபாய் கொடுத்துத்தான் அதை வாங்கிக்கொண்டு வந்தேன். அப்பா ஒவ்வொரு ஊராக அலைந்து திரிந்து தனித்தனியாக வந்த, பாரதி கவிதை உள்ள பேப்பர்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி அவ்ளவும் சேர்ந்து அதில வரணும்னு ரொம்ப சிரமப்பட்டு பண்ண புத்தகம் அது.

சக்தி வெளியீடாக நல்ல டிக்ஷனரி கொண்டுவர வேண்டுமென்று அப்பா விரும்பினார்கள்.  தயார் செய்து தருவதாக ஒத்துக்கொண்டு டிக்ஷனரி வேலையைத் தொடங்கினார் க. நா. சு. பாதி வேலை முடிந்த நிலையில் க.நா.சு.வுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவருக்கு ஏற்பட்ட அவசர பணத்தேவையின் பொருட்டு வேறொரு பதிப்பகம் வெளியிட்ட டிக்ஷனரியிலிருந்து பாதியைக் காப்பி செய்து சேர்த்து, வேலையை முடித்துக் கொடுத்துவிட்டார். அந்தப் பதிப்பகத்தார்கள் கேஸ் போட்டு விட்டார்கள். நஷ்ட ஈடாக அப்பா அந்தப் பதிப்பகத்திற்கு பெரும்பணம் கொடுக்கவேண்டியிருந்தது.

அக்காவுக்குக் கல்யாணம் நடந்த பிறகு அப்பா ராயவரத்தில் கொஞ்ச நாள் இருந்தார்கள். தென் மொழிகள் புத்தக நிறுவனம் என்று ஒரு அமைப்பு இருந்தது. அதிலிருந்து பிரிந்து புத்தக வியாபாரிகள் சங்கம் உருவானது. சவுத் இந்தியா முழுவதிலும் உள்ள புத்தக வியாபாரிகள் சங்கம் அது. அப்போ அதிலே சேர்மன் எலெக்ஷன் நடந்தது. அப்பா தேர்தலில் கலந்துகொண்டவுடன் வேறு யாரும் போட்டியிடாமல் அப்பாவை நேரடியாக சேர்மனாக்கிவிட்டார்கள். அதில் சேர்மனாக அப்பா ரொம்பநாள், சாகிறவரை இருந்தார்.  அதன் மூலமாக வந்த பத்திரிகைதான் கூரியர். அந்த அமைப்பில் இருக்கும்போது கூரியரை தமிழில் கொண்டுவரவேண்டும் என்று – பக்தவச்சலம் பீரியட்ல – ரொம்ப முயற்சி பண்ணுனாங்க அப்பா. புத்தக வியாபாரிகள் சங்கம் அதனுடைய செலவுகளுக்குப் பணம் இல்லாமல் மூழ்குகிற நிலைக்கு வந்தவுடன் தென் மொழிகள் புத்தக நிறுவனத்துடன் சேர்ந்து விட்டது. ஆனால் அப்பா அதில் போய் வேலை பார்க்க இயலவில்லை. தனியாக இருந்து விட்டார்கள்.  அப்பா இறந்த பிறகு தென்மொழிகள் புத்தக நிறுவனம் மணவை முஸ்தபாவை வைத்து கூரியரை நடத்திக்கொண்டு வந்தது.

அப்புறம்   அப்பா   ரொம்ப   கஷ்டப்பட்டுட்டு   ஊருக்குவந்துட்டாங்க. வந்துட்டு, “திரும்ப புத்தக வியாபாரத்தைப் பார்க்கணும் – லைப்ரரி ஆர்டரைத்தான் டிப்பன்ட் பண்ணி இருக்கணும் – எனக்கு வேற தொழில் தெரியல – ரெண்டு மூணு புத்தகம் போட்டு லைப்ரரிக்கு சப்ளை பண்ணலாம்”னு வேற வழியில்லாம வந்தபோதும் அவங்களால அதுபோல செய்ய முடியல. மனசு ஒப்பல அவங்களுக்கு.  ஒடம்பும் ரொம்ப சரியில்லாமப் போச்சி.  கடைசியா ராயப்பேட்டை பக்கம் சத்திய சாய் லாட்ஜ்ன்னு கவுடியாமடத்துக்குப் பக்கத்துல ஒரு லாட்ஜ் இருக்கு; அந்த பில்டிங்குலதான் – யார் உதவியும் இல்லாம ஒரு ரூம் வாடகைக்கு எடுத்துட்டு தங்கியிருந்தாங்க. மியூசிக் அகாடெமி இருக்கிற அதே ரோடுலதான் தங்கியிருந்தாங்க.  ரா.கி.ர கூட இதைப் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். சின்ன ரூம் எடுத்துத் தங்கியிருந்து புத்தக வேலையெல்லாம் பார்த்து ஏதாவது சம்பாதிக்கலாம்னு – அப்பாவே எழுத ஆரம்பிக்கணும்னு விரும்புனாங்க. இனி எழுதிதான் சம்பாதிக்கணுங்கிற நிலைமை வந்தபோது ஆள் உயிரோட இல்லை. எந்தக் கஷ்டமும் அவங்களை பெரிய அளவிலே பாதிச்சது கிடையாது. எப்போதும் படிச்சுக்கிட்டேயிருப்பாங்க.   அவங்க எழுத முயற்சி செய்தபோது அவங்களுக்கு சாப்பாட்டுக்கே ரொம்ப சிரமமாயிருந்தது. அப்போது நாங்கள் எல்லாம் ஊரில் இருந்தோம். குடும்பத்தை சென்னையில் வைக்க முடியவில்லை.   அவங்க தனியாகத்தான் இருந்து மிகவும் துன்பப்பட்டாங்க. செத்தபோதுகூட அவங்க பையில் ஏழு ரூபாயோ எட்டு ரூபாயோ சில்லரைதான் இருந்தது. வேறு எதுவும் இல்லை.  அந்த ரூமுல இருக்கிறபோது ஒடம்புக்கு முடியாம படுத்துட்டாங்க.   கீழ இறங்கிவரும்போது படி வழுக்கிவிட்டு விழுந்துட்டாங்க. அப்புறம், எங்க அக்கா கூடப்போயி இருந்திருக்கு. எனக்கு எழுதியிருந்தாங்க, அடிக்கடி ஒடம்புக்கு முடியலைன்னு. சில சமயம் நல்லா இருக்கேன்னு லெட்டர் வரும். நான் ஊரிலிருந்து இங்கு வந்து அப்பாவைப் பார்ப்பதற்குக்கூட வசதியில்லாமலிருந்தேன். அதனால் ஊரிலேயே இருந்துட்டேன். அப்புறம் ஒரு நாள் பார்த்தால் திடீரென்று டெலிகிராம் வந்தது. அப்பா இறந்துட்டாங்கன்னு.
லாட்ஜில் இருக்கும்போது உடல்நிலை மிகவும் மோசமாகிப் போனதும் பப்ளிஷர் எல்லாருக்கும் போன் பண்ணியிருக்காங்க. எல்லாரும் வந்து ஜி.எச்.க்கு கூட்டிட்டு போயிருக்காங்க.  ராமமூர்த்தி வந்து பார்த்துருக்காரு (நியூரோ ஸ்பெஷலிஸ்ட்). அப்பா ஏற்கெனவே டி.பி. பேஷண்ட்.  காலில் பிரச்சினையிருப்பதால் ராமமூர்த்தி வந்து பார்த்துட்டுத்தான் ஜி.எச்.க்கு கொண்டு போகச்சொல்லியிருக்கார். அதன்படி செஞ்சிருக்காங்க.  அன்னைக்கி ஞாயித்துக்கிழமை.  எந்த டாக்டருமே வரல்ல. கூட வந்தவங்க வெளியில நின்னு பேசிக்கிட்டிருந்திருக்காங்க. அக்கா அப்பா பக்கத்துலயே உட்கார்ந்திருக்கு. கொஞ்சம் நேரம் கழிச்சி அந்த வார்ட் பாய் – பால், பிரட்டெல்லாம் கொண்டு வர்றவன் – படுத்திருந்த அப்பாவுடைய கையைப் பிடிச்சித் தூக்கி தொப்புன்னு கீழே போட்டிருக்கான். டாக்டரும் இல்லை. கூட வந்தவங்களும் வெளியே நின்னு பேசிக்கிட்டிருக்காங்க.  அந்தப் பையன் சொல்கிறான், “என்னம்மா செத்த பொணத்து பக்கத்துல உட்கார்ந்திருக்கே”ன்னு. அதுக்கப்புறம்தான் அக்காவுக்கே தெரியுது அப்பா செத்துப்போயிட்டாங்கன்னு. அந்த நேரத்துல அப்பாவை ஒரு நல்ல மருத்துவமனையில் சேர்த்து ட்ரீட்மெண்ட் கொடுக்கக்கூட ஆளில்லாமல் போய்விட்டது.   அப்பா ஜி.எச்லே ஆதரவில்லாம செத்துட்டாங்க.

சாகறதுக்கு நாலைந்து நாட்கள் முன்னாடி ராதா கிருஷ்ணமூர்த்திக்குப் போன் பண்ணியிருந்தாங்களாம்.   மருந்தெல்லாம் வாங்கணும் பணம் இல்லேனிட்டு.   அவர் முன்னூறோ நானூறோ அன்னைக்கே கொண்டு வந்து கொடுத்துட்டு “நீ வைத்தியம் பாத்துக்க வை.கோ. உனக்கு சௌகரியமாகிவிடும். நீ இந்த மாதிரி ரூமில் எல்லாம் இருந்து பிரயோஜனம் இல்லை.  நீ ஊருக்குப் போய் அங்கேயே இரு. நான் உனக்கு வேன் அனுப்புகிறேன்.  உன் பொருட்களை்யெல்லாம் வேனில் ஏற்றிவிட்டு உன்னை ரயிலேற்றிவிடுகிறேன்.   நீ ஊருக்குப் போயிரு.  அங்கேயிருந்து எங்களுடைய நியூ செஞ்சுரி வேலைகளை தமிழ்ல நீ கொஞ்சம் பாத்துக்கொடு. ஏன்னா எங்களுக்கு ரஷ்யன் புத்தகங்கள் வரவர ஸ்டாப்பாயிட்டிருக்கு.   ரஷ்யாவையே நம்பியிருக்காமல் நாங்க தமிழ்ல புத்தகம் போடணும்னு இருக்கோம். அதுக்கு நீ ஹெல்ப் பண்ணு.  கம்பெனியிலேர்ந்து உனக்கு எல்லாம் பண்ணித் தர்றோம்” என்றிருக்கிறார். அப்பா இறந்துட்டாங்க.

சடலத்தை லாட்ஜில் வைத்து எடுக்கமுடியாது. செட்டியார்ஸுக்கெல்லாம் திருவெற்றியூர்ல – ஒரு மடம் மாதிரியிருக்கும். இறுதிச் சடங்குகளெல்லாம் செய்வதற்கு அங்கே கொண்டு போகணும். அங்கே கொண்டு போகும்போது பப்ளிஷர்ஸ் எல்லாம் கார்ல போயிட்டாங்க. எல்லாரும் வசதியாக உள்ளவங்க. அப்பாகூட மார்ச்சு வரி வேன்ல வரதுக்கு யாரும் இல்ல.  யாரும் கூட இல்லையேன்னு அக்கா போயிருக்கு. பொம்பளைங்க வரக்கூடாதுன்னுட்டாங்க. அப்ப ராதாகிருஷ்ணமூர்த்தி “நான் இருக்கேன், வை.கோ. கூட வர்றேன்” என்று அப்பாவின் உடலுடன் வந்தார். அவரும் தமிழ் வாணனும்தான் இறக்கி எல்லாம் செய்தார்கள். மறுபடியும் ஏத்திக்கிட்டு மயானத்துக்குப் போறதுக்காக ஃபுனரல் வேன் வந்தது. அப்போது தமிழ்வாணன் சொன்னாராம் “வை.கோ.விடம் இருந்தவர்கள் இவ்வளவு பேர் இருக்கிறோம். இன்னொரு வேன்ல தனியா ஏத்தியனுப்புறது சரியில்ல. நாமதான் தோள் கொடுத்து தூக்கிக்கிட்டு போகணும்”னு.  ராதாகிருஷ்ணமூர்த்தியும், தமிழ்வாணனும்தான் தூக்க ஆயத்தமானது. பிறகு எல்லாரும் வந்து தூக்குனாங்க. எல்லாரும் வந்திருந்தாங்க. தினமணி கோயங்கா உட்பட.  A.V.மெய்யப்பச் செட்டியார், கண்ணதாசன் எல்லாரும் வந்திருந்தாங்க. யார் வந்தா யார் வரலேங்கறதே தெரியல.

அப்பா யாரிடமும் உதவி கேட்டுப் போனதில்லை. புத்தகத் துறையில் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஜாஸ்தி. எல்லாம் அப்பாவ வச்சி இந்தப் பீல்டுக்கு வந்தவுங்கதான். நல்ல புத்தகம் போடணும்னு அப்பா ரொம்ப ஆசைப்பட்டாங்க.  “ரோடு நல்லாயிருந்தா ரொம்ப தூரம் சீக்கிரமா போகலாம். மேடு பள்ளமாயிருந்தா கொஞ்சத்திலேயே களைப்பா இருக்கும்”னு அப்பா சொல்வாங்க. பேப்பர் நல்ல தரமாக இருக்கணும். பிரிண்டிங் அந்த மாதிரி இருக்கணும். பிரிண்டிங் சரியில்லைன்னா பத்து பக்கம் படிக்கறதுக்குள்ள கண்ணு டயர்டாயிடும். நாம நடக்குறது போலத்தான் கண்ணு.

தமிழ்ல முதன் முதல்ல தரமான பதிப்புகளில் புத்தகங்களை வெளியிட்டது சக்தி காரியாலயம்தான்.  அன்றைக்கு அச்சு வசதிகள் அவ்வளவு முன்னேற்றமில்லாத காலத்திலேயே, அப்பா தன்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணி அச்சமைப்பில் புதுமையும் நேர்த்தியும் செய்தார்கள். ஒன்றுமே இல்லாமல் அன்றைக்கு அந்த பழைய மெஷினை வைத்துக்கொண்டு சிறந்த முறையில் வேலை செய்தார்கள். அப்பா சுய அனுபவத்திலேயே எல்லாம் கற்றுக் கொண்டார்கள். மொத்தம் சுமாராக 120 அல்லது 130 புத்தகங்கள் இருக்கும் அப்பா போட்டது. எல்லாமே பெரிய ஆதர்கள் எழுதினதுதான். பாரதியார் பொண்ணு எழுதியது, தொ.மு.சி ரகுநாதன் எழுதியது, கு. அழகிரிசாமி எழுதியது எல்லாம் போட்டிருக்கிறார்கள். சத்தியமூர்த்தி பொண்ணு லட்சுமி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகமும்…

T.S.சொக்கலிங்கம் போரும் வாழ்வும் மொழிபெயர்த்துக் கொடுத்தார். சாமிநாத சர்மா புத்தகம் அப்பா போட்டுருக்காங்க. அவருடையது 4, 5 இருக்கும். 90 சதவீதம் மொழிபெயர்ப்புகளைத்தான் விரும்பி அப்பா புத்தகமாக்குனாங்க.  அப்பா எப்போதும் படிச்சிக்கிட்டிருப்பாங்க.  படிக்கும்போது எது நல்லாயிருப்பதாக அவங்களுக்குத் தோன்றுதோ அதை யாரிடமாவது கொடுத்து மொழி பெயர்க்கச் சொல்லுவார்கள்.  அவற்றை மொழிபெயர்த்த டிரான்ஸ்லேட்டர்கள்தான் ரகுநாதன், விஜயபாஸ்கரன், ரா.கி. ரங்கராஜன் எல்லாம்.

சக்தி மேகஸினில் 4 பேர் எடிட்டராக இருந்திருக்கிறார்கள். தி.ஜ.ர., அழகிரிசாமி, ரகுநாதன், விஜயபாஸ்கரன். அப்பா மார்க் பண்ணிக் கொடுத்ததையெல்லாம் இவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். சக்தியைப் போல் தமிழ் நேசன் என்று ஒரு பத்திரிகை மலேஷியாவில் ஆரம்பித்தார்கள். அப்போது அழகிரிசாமி அங்கே மாறிப்போனார். டால்ஸ்டாயை மொழிபெயர்த்து 6,7 புத்தகங்கள் அப்பா போட்டுருக்காங்க.  டால்ஸ்டாய் எழுதிய ‘இனி நாம் செய்யவேண்டியது யாது?’ என்ற புத்தகம்தான் அப்பா பதிப்பித்த முதல் புத்தகம். சு. ராமநாதன், சு.ழ. நாதன்னு ரெண்டு பேர் இருந்தாங்க. அண்ணன் தம்பி. சுதந்திரத்துக்கு முன்னால ஆர். ராமநாதன் எழுதி ‘லெனின் பிறந்தார்’ன்னு அப்பா புத்தகம் போட்டாங்க.  லெனின் மீது மிகவும் ஈடுபாடு உண்டு. லெனின்னு சொல்றப்போ வேற விஷயம் ஞாபகத்துக்கு வருது. வருஷா வருஷம் தீபாவளியின்போது நெருக்கமான நண்பர்களை வீட்டில் அழைத்து வைத்து பேசிக் கொண்டிருப்பார்கள் அப்பா. அன்றைக்கு அப்பாவின் கால்களில் மகன்கள் விழுந்து ஆசி வாங்கி புதுத்துணி வாங்கிக்கிறது வழக்கம். ஒரு தீபாவளியின் போது நான் அப்பா கால்ல விழுந்து வணங்கறதுக்கு மறுத்துட்டேன்.   அப்ப பக்கத்துலயிருந்த விஜயபாஸ்கரன் சொல்றாரு, “வை.கோ.வும் பண்டிகையின் போது அவங்க அப்பா கால்ல விழுந்துதானே புதுத்துணி வாங்கிருப்பாங்க… இது நல்ல மரபுதானே. உனக்கு ஏன் பிடிக்கலை”ன்னு. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரில.   “என்னோட அப்பா கம்யூனிஸ்ட் கிடையாது. அதனால அவர் கால்ல நான் விழவேண்டியிருந்தது. அப்ப பார்மாலிட்டீஸுக்கு முக்கியமான இடம் இருந்தது. இவனோட அப்பா ஒரு கம்யூனிஸ்ட் – இந்த பழக்கம் எல்லாம் தேவையில்லை”ன்னு அப்பா சொன்னாங்க…
ஆயிரம் புத்தகங்களுக்கு நல்ல வாசகர்கள் 100 பேர் இருந்தாக் கூடப் போதும். மீதம் 900 புத்தகங்கள் விரயமாகப் போனாலும் பரவாயில்லை… என்பார்கள். அப்பா போட்ட ரஷ்ய மொழிபெயர்ப்புகள் விற்கவில்லை. கம்யூனிஸக் கொள்கைப் புத்தகங்கள் போட்டதாலதான் அப்பாவால முன்னுக்கு வரமுடியாமல் போனது… போரும் வாழ்வும்… பெரிய வேலை. நான்கு பாகங்கள். மொத்தம் கிட்டத்தட்ட 2,500 பக்கங்களுக்கு மேல் வரும். ஸ்பெஷலாக ஆர்டர் கொடுத்து திக்கான சிவப்புக் கதர் துணி செய்து வாங்கி அதற்கு ரேப்பர் போட்டிருந்தார்கள். நல்ல அச்சு.
T.S. சொக்கலிங்கத்திற்கு மொழிபெயர்ப்புக்காக மட்டும் கொடுத்த பணம் ரஷ்யன் கவர்ன்மெண்ட் கொடுத்த பணத்தைவிட அதிகம். பேப்பர் வாங்குவதற்கே அப்பா மிகவும் சிரமப்பட்டார்கள். எப்படியோ 3 வால்யூம் முடிந்தது. ஆனால் வாங்க ஆளில்லை. 4 வது வால்யூம் முடிக்கலை. முடிக்கலைன்னா புத்தகம் பிரிண்ட் ஆகி வந்து விட்டது.  பைண்டிங் ஆகவில்லை. ரஷ்யாவிலேர்ந்து என்னாச்சினு கேக்குறபோது “நான் புத்தகம் போட்டுட்டேன். செலவு மிக அதிகமாக ஆகிவிட்டது.  போட்ட வால்யூம்களும் விக்கல.  என்னிடம் இதற்குமேல் செலவு செய்ய பணம் இல்லை”யென்று அப்படியே எல்லா புத்தகங்களையும் சூஊக்ஷழல் ஒப்படைத்துவிட்டார்கள். இங்கே தமிழில் பல பதிப்பாளர்களுக்கு அந்தக் காலத்தில் ரஷ்யா பணம் கொடுத்தது புத்தகங்கள் போடுவதற்காக. சிலர் போடவில்லை, சிலர் அரைகுறையாகப் போட்டார்கள், சிலர் வேறு வகையில் அதை செலவு செய்தார்கள்.  பிறகு புத்தகங்கள் ரஷ்யாவிலிருந்தே பப்ளிஷ் ஆகி வர ஆரம்பித்துவிட்டது.  அந்த விஷயத்தை அவர்களே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய பாஸ்கரனும் அவர் நண்பர்களும் பாலிசி புக்ஸ் போடுவதற்கு அப்பாவை சார்ந்து இருக்காமல் தனியாகவே போடுவதற்காக – மியூசிக் அகாடெமி வீட்டில்தான் – அப்பாவுடன் கலந்து ஆலோசித்தார்கள். அதற்கெனத் திட்டமிட்டு ஆரம்பித்ததுதான் NCBH நிறுவனம். ஆரம்பத்தில் இது இந்தப் பெயரில் இல்லை. பின்னாட்களில்தான் NCBH என்று ஆகியது. B.E.பாலகிருஷ்ணன் சமீபத்தில் இறந்துவிட்டார். இவர் NCBH-ன் ஆரம்பக்கட்ட தூண்களில் ஒருவர்.   அப்பாவுடன் மிகவும் நெருக்கமாயிருந்தார்.  அவர் அப்பாகூடவே வந்து இருந்து அப்பாகிட்டே ஐடியா கேட்டு NCBH பப்ளிஷிங் வேலையெல்லாம் பாத்துக்கிட்டிருந்தாரு. ராதா கிருஷ்ணமூர்த்தி அப்போது அப்பாவுக்கு நல்ல நண்பராக இருந்தார். அவர் தமிழ் நன்றாகப் பேசுவார். ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது.
sakti 01அப்பாவின் பால்ய வயதில் எங்க ராயவரம் வீட்டில் வந்து தங்கியிருந்தார்.  உ.வே. சாமிநாதையர்.  அப்பாவோட அப்பாவுக்கும் உ.வே.சா அவர்களுக்கும் பழக்கம். தாத்தா தமிழ்மேல் ஆர்வமுடையவர். வீட்டில் பெரிய நூல் நிலையம் வைத்திருந்தார். (அப்பாவின் சொந்த அப்பா) உ.வே.சா அவர்கள் வீட்டில் வைத்து உபசரித்து ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் சென்று ஓலைச் சுவடிகளைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.  அந்தச் சமயத்துல அப்பாவும் உ.வே.சா. கூட சேர்ந்து அலைந்திருக்காங்க.  அதனாலதான் ஆரம்பத்துலயே அவங்களுக்கு புத்தகங்களின் மேல ஒரு பிடிப்பு ஏற்பட்டுடுச்சி.   எங்கள் ஊர்களில் பழைய காலத்தில் பெரிய பெரிய வீடுகளைக் கட்டியிருப்பார்கள். லெட்ரின் பாத்ரூம் இருக்காது. எங்கள் வீட்டில் தங்கியிருந்த உ.வே.சா. ரோட்டில் இறங்கி ஒரு ஓரத்தில் யூரின் பாஸ் பண்ணியிருக்காரு. அப்ப அந்த வழியா வந்த பொம்பளைக்கி இவர யாருன்னு தெரியாது. இவரும் அந்தப் பொம்பளைய கவனிக்கல. அந்தப் பொம்பள ஒரு கல் எடுத்து உ.வே.சா.மேல அடிச்சிருச்சாம். தலையிலேர்ந்து ரத்தம் கொட்டுதாம்.  என்ன ஏதுன்னு எல்லாரும் பதறிப்போயிருக்காங்க.
அந்தப் பொம்பளய தேடியிருக்காங்க.  காணோம்.  அப்ப உ.வே.சா. சொல்லியிருக்கார், இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி வச்சிருக்கிறீங்க ஒதுங்குறதுக்கு ஒரு இடமில்லையேன்று. அப்பாதான் உ.வே. சாவத் தாங்கிப் பிடித்து உள்ளே கொண்டு வந்து ரத்தத்தைத் துடைத்து சுத்தம் செய்து ஆசுவாசப்படுத்தியிருக்காங்க. அந்தக் காலத்திலேர்ந்து அப்பாவுக்கு புத்தகங்கள்ல ஆர்வம்.   பர்மாவுக்குப் போனவுடன் இங்கிலீஷில் படிக்க ஆரம்பிச்சிருக்காங்க.இந்தச் சமயத்தில்தான் இலக்கியத்தில் அதிகமாய் கவனம் செலுத்தியது. முக்கியமாக அப்பாவுக்கு டால்ஸ்டாயினுடைய ஒர்க்ஸ் எல்லாம் மிகவும் பிடித்து விட்டது.
இங்கிலீஷில் ஒரு நல்ல புத்தகம் வந்திருந்தால் அது பற்றிய விவரம் அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். எந்த ஆதரைப் பற்றியும் அப்பா அபிப்பிராயங்கள் சொல்லுவார்கள். எந்த நல்ல புத்தகத்தின் பெயரைச் சொன்னாலும் அதை எழுதியவரையும் அவர் எழுதிய வேறு புத்தகங் களையும் அப்பா சரியாகச் சொல்லுவார்கள். பெரும்பாலும் ஹிக்கின் பாதம்ஸில் நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருந்தார்கள் அப்பா. ஏதோ ஒரு புத்தகம் 400 செட்டுதான் வெளிவந்ததாம்.  பிரிட்டனில் பிரிண்ட் ஆனது. 400ல் இந்தியாவுக்கு வந்தது ரெண்டே செட்தான். ஒரு செட் அப்பாகிட்டே இருந்தது. இன்னொன்று நார்த் இந்தியாவில் யாரோ மார்வாடிகிட்ட இருந்தது.   இது போல ரொம்ப நல்ல கலெக்ஷன் இருந்தது அப்பாகிட்ட.
பிறகு அப்பாவுக்கு பணக் கஷ்டம்.   உறவினருக்குக் கொடுக்க வேண்டியது. 27,000 ரூபாய் கடன் இருந்தது. அந்தப் பணத்தை அப்பாவினால் அடைக்க முடியலை. பணம் கொடுத்தவரின் பையனுக்கு புத்தக டேஸ்ட் ஜாஸ்தி. ராய சொக்கலிங்கம்னு ஒருத்தர் இருந்தாரு. அவரு அந்தப் பையனை நன்றாகப் படிக்க வைத்து அந்தப் பையனுக்கு குரு மாதிரியிருந்தாரு. அவர் அப்பாவின் புத்தகங்களையெல்லாம் – அந்தப் பையனுக்குத் தேவைப்படுமென்று – அவனை விட்டே அப்பாவிடம் கேட்கச் சொன்னார். அப்பா “எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார். அந்தப் பையன் “இதற்கு எவ்வளவு தர வேண்டும்” என்று கேட்ட போது “உங்கள் அப்பாவுக்குத் தரவேண்டிய பாக்கிக்கு ஒழுங்கு பண்ணிக்கச் சொல்.   இந்தப் புத்தகங்களையெல்லாம் மிகப் பாதுகாப்பான இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள். ஒரே ஒரு நிபந்தனைதான், எனக்குத் தோன்றும்போது உன் வீட்டில் வந்து தேவையான புத்தகத்தைப் படிப்பதற்கு எனக்கு இடம் கொடு. படித்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டு வருவேன்” என்று கேட்டுக் கொண்டார்கள். தேவையானபோது அப்பா அங்கே சென்று படிப்பதற்குக் கடைசி வரையிலும் அவர்கள் அனுமதித்தார்கள்.   இன்றுவரையிலும் அவர்கள் உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பிற்பாடு அந்தப் புத்தகங்கள் எல்லாம் M.S.குகனின் (A.V.M) பெண் வசம் போய்விட்டது. M.S.குகனைச் சந்திக்கும்போது தன் பெண்ணிடம் என்னைக் காட்டிச் சொன்னார்.” அந்தப் புத்தகங்களில் எல்லாம் வை.கோவிந்தன் என்று போட்டிருக்கிறதே அது யார் என்று கேட்டுக் கொண்டிருந்தாயே, அவர் இந்தப் பையனோட அப்பாதான்.”
அப்பாகிட்ட மிகச் சிறந்த கலெக்ஷன் இருந்தது. விஜயபாஸ்கரன் கூட எழுதியிருக்காரு. அப்பாவே லெட்சக் கணக்குல வெல குடுத்து வாங்கி சேர்த்து வச்சது. இடைவிடாமல் புத்தகங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் அவருக்குப் பிடித்தமானவற்றை குறித்துக் கொடுத்து நண்பர்களை மொழிபெயர்ப்பில் ஈடுபடுத்தினார்கள். அன்றைக்கு நல்ல புத்தகங்களைப் படிப்பதற்கு ஆட்கள் இல்லை. நாம் அதைத் தொழிலாகச் செய்வது நன்றாயிருக்காது.   நீ இந்தத் தொழிலுக்கு வரவேண்டாம் என்றார்கள் என்னிடம். சாகிற வரையில் இரவு ஒரு மணி இரண்டு மணி வரையில் ஏதாவது படித்துக் கொண்டேயிருப்பார்கள். எதற்காகப் படிக்கிறீர்கள் என்றால் “எனக்கு இது பொழுதுபோக்கு” என்று சொல்வார்கள்.
அப்பா என்னை இலக்கியத்தில் ஈடுபடுத்தவில்லை.  இது உனக்கு வேண்டாம் என்றார்கள். ஒரு கட்டத்தில் படிப்பதை நிறுத்தி விட்டார்கள். புத்தகம், வாசிப்பு இவற்றின் மீதெல்லாம் வெறுப்பாகி விட்டது.  விவசாயத்தின் மீது நாட்டம் திரும்பியது. “செடி எப்படி முளைக்கிறது – எப்படி வளர்கிறது. அது எப்படிக் காய்க்கிறது என்பதையெல்லாம் பார்த்து ஆராய்ந்துகொள்” என்றார்கள் என்னிடம். இதைப்போல் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
அப்பா மிக உயர்ந்த தரமுடைய பேனாக்களை உபயோகப்படுத்தினார்கள். அந்தக் காலத்திலேயே மிகவும் விலையுயர்ந்த ‘மான்பிளாங்க்’ ‘வாட்டர் மென்’ பேனாக்களை பயன்படுத்தினார்கள். அப்பா இறந்த பிறகு எனக்கு சாப்பாட்டுக்குக் கஷ்டமாக இருந்த நேரத்தில் அப்பாவுடைய பேனாவொன்றை 2,000 ரூபாய்க்கு விற்றேன். அம்மா ஆச்சரியப்பட்டார்கள். அது பத்து இருபதுக்குத்தான் போகுமென்று நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த பழைய பேனாவுக்கு ஜாஸ்தியான ஆண்டிக் வேல்யூ இருந்திருக்கு. 2000 ரூபாய்க்கு மார்வாடி எடுத்துக்கிட்டான். எவ்வளவுன்னான். நான் ஒரு 200, 300 போவும்னு மூணு விரலைக் காட்டினேன்.  அவன் “அவ்வளவா…” என்று மறுத்தபிறகு நான் “பார்த்து போட்டுக்கொடு – ரெண்டரையாவது கொடு”ன்னேன். அவன் நான்கு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தான். “இதுபோதும் வைத்துக்கொள். அடுத்த தடவை பார்க்கலாம்” என்றான். நானும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன். பிறகுதான் சொன்னார்கள் அது ஆண்டிக் வேல்யூ உள்ளது; இன்னும் அதிக விலைக்குப் போகக்கூடியது; இது தெரியாமல் விற்றுவிட்டாய் என்றார்கள்.   இப்போது மான் பிளாங்க் பேனாவெல்லாம் 15,000 த்திற்கும் மேல் விற்கிறது. அது பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத்தான் தெரியும்.
எங்க ஜாதிக்காரர்களெல்லாம் சீட்டு விளையாடுவாங்க. அதை பிரெஸ்டீஜாக நினைத்து கிளப்புகளில் போய் விளையாடுவார்கள். அப்பாவுக்கு அது பிடிக்காது. அவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. செஸ்தான்.
கம்யூனிஸ்ட் பார்ட்டியில் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தேடப்படும்போது தலைமறைவாக இருந்தது மியூசிக் அகாடெமி வீட்டில்தான்.   விஜய பாஸ்கரனே ஒரு தடவை தலைமறைவாக இருந்தார் நம்ம வீட்ல. விஜயபாஸ்கரன் நான் குழந்தையா இருக்கும்போது என்னைத் தூக்கி வளர்த்துருக்காரு. இப்ப கூட சொல்வாரு அந்தப் பையன் நான் தூக்கி வளர்ந்தவன்னு. பாலதண்டாயுதம் தலைமறைவு வாழ்க்கையில் அப்பா கூடத்தான் வந்து தங்கியிருந்தாங்க.
பள்ளி – கல்லூரி பாடப் புத்தகங்கள் பாடத்திட்டங்கள் அவங்களுக்குப் பிடிக்கலை. வேண்டாம், இதெல்லாம் வேஸ்ட், நீ படிக்காதே என்று சொல்லி நான் படிக்கிறதைக் கெடுத்துட்டாங்க அப்பா.   டால்ஸ்டாய் புத்தகம்போல உள்ள லிட்டரேச்சர் புத்தகமெல்லாம் படிக்கவேண்டும் என்று எங்களுக்குச் சொல்வார்கள். “இந்த எஜுகேஷன் சிஸ்டம் வாழ்க்கைக்கு ஒத்துவராது; உனக்கு தொழில் என்று தேவைப்பட்டால் விவசாயம் செய். பதிப்புத் தொழில் புனிதமானது. அதை வெறும் வியாபாரமாக்க வேண்டாம்” என்றார்கள். அப்பா சொன்னதில் தவறில்லை. “நல்ல பணம் சம்பாதிச்சி இதுல வந்து செலவு பண்ணணும். புத்தகம் போட்டு சம்பாதிக்கணும்னு நோக்கம் இருக்கறவங்க இந்த தொழிலுக்கு வரவேண்டாம். அவர்கள் மளிகைக் கடை வைத்துப் பிழைக்கலாம்” என்பதுதான் அவர்களுடைய கருத்து. “எதிலும் சம்பாதிக்கலாம், ஆனால் புத்தகத் தொழிலில் சம்பாதிக்கலாம் என்று நினைக்காதே” என்று அறிவுறுத்தினார்கள்.
வெளிநாட்டுப் புத்தகங்கள் போல அமைப்பிலும் தரத்திலும் தமிழில் நல்ல புத்தகங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அப்பா போட்ட புத்தகமெல்லாம் புளு – ஒயிட் -இப்படித் தான் இருக்கும். பெங்குயின் புக்ஸ்போல. ஒருசமயம் பெங்குயின் புக் எந்தப் புத்தகமாயிருந்தாலும் அட்டைப்படம் வராது. ஊதாவும் வெள்ளையும் சேர்ந்து ஒரு நிரந்தர டிஸைனில் வரும். அதே டைப்ல அப்பா நிறையப் புத்தகம் போட்டாங்க. அட்டைப்படமே இருக்காது. மேல ஒரு ஹெட்டிங் இருக்கும். உள்ளே என்ன மேட்டர் இருக்குன்னு நாலுவரி இருக்கும். ஆதர் பேர் இருக்கும்.  அவ்வளவுதான்.  “அந்தப் புத்தகங்களை தூரத்திலிருந்து பார்த்தாலே சக்தி புத்தகம் என்று தெரியவேண்டும். அந்த கலரைப் பார்த்துத்தான் கையில் எடுப்பார்கள்.” என்பார்கள். அப்பாவுக்கு சில நல்ல கஸ்டமர்ஸ் இருந்தார்கள்.
நான் பத்தாவது படிச்சிக்கிட்டிருக்கும்போது அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டாங்க. அந்த நேரம் அப்பாவுக்கே மிகவும் நெருக்கடி. அவங்க இறப்பதற்கு மூன்று வருடம் முன்னால மிதமிஞ்சிய துன்பம். முன்பு அப்பா எனக்கு ஸ்கூலுக்குப் போறதுக்காக சின்ன சைக்கிள் ஒண்ணு வாங்கிக்கொடுத்திருந்தாங்க. 150 ரூபாய்க்கு சென்னையில வாங்கி ஊருக்கு கொண்டு வந்திருந்தாங்க. கஷ்ட காலத்துல அப்பா டெய்லி செப்டோமைஸின் ஊசி போட வேண்டியிருந்தது.   ஒரு தடவை, ரெண்டு மூணு நாளா அப்பா ஊசி போட்டுக்கலை. இருமல் ஜாஸ்தியாயிருச்சி.  ராத்திரி பூரா இருமிக்கிட்டிருந்தாங்க.  “ஏம்ப்பா டாக்டர்கிட்ட போயி ஊசி போட்டுக்கிட்டு வரலையா” என்று கேட்டேன். “காசு இல்லைடா. பணம் வரும்னு பாக்குறேன். ரெண்டு மூணு பேருக்கு எழுதியிருக்கேன், யாரும் அனுப்பலை” அப்படீன்னாங்க.
அப்பாவுக்குத் தெரியாம அந்த சின்ன சைக்கிள – அப்ப அந்த சின்ன சைக்கிள் பழக்கத்தில் இல்லாத நேரம்.  சைக்கிள் என்றாலே பெரிய விஷயம்தான்.  அப்ப ஒரு வாடகை சைக்கிள் கடைக்காரன் வேடிக்கையா அடிக்கடி கேட்டுக்கிட்டிருப்பான்.   சைக்கிளைக் கொடுத்துடு நூறு ரூபாய். தர்றேன்னான். திடீரென்று அவனிடம் போய் சைக்கிளை எடுத்துக்கிறியான்னு கேட்டேன்.  அவன் சொன்னான், “நான் எடுத்துக்கறேன். இந்த ஊர் சின்ன ஊர். நான் சின்னப் பையனிடம் ஏமாற்றி வாங்கிட்டேன்னு பேசுவார்கள்” என்று. “வா. வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் அப்படீன்னேன்.”  வீட்டில போயி “சைக்கிள கேக்குறாங்க அப்பா.  நான் 100 ரூபாய் கேட்டேன்.  அவன் 95 ரூபாய் கையில் தர்றேன்னு சொல்லுறான். அவனுக்கு 5 ரூபாய் வேணுமாம்”னு சொன்னேன்.   “எதுக்குடா விக்குற…   இப்பத்தானே வாங்கினே” அப்படீன்னாங்க அப்பா. “நீ நல்லாருந்தா மறுபடியும் வாங்கித் தருவ. உனக்குத்தான் இப்ப வைத்தியம் பாக்குறதுக்கு காசு இல்லையே, காசை வாங்கிக்க.  போயி மருந்து வாங்கிட்டு வருவோம்”னு சொன்னேன். பணத்த வாங்குனதும் கண்ணு கலங்கிப் போச்சி அப்பாவுக்கு. அப்புறம் போய் மருந்து வாங்கிக்கிட்டு – ஊசி போட்டுக்கிட்டாங்க. “நான் நல்லா வந்துட்டன்னா உனக்கு வேற சைக்கிள் வாங்கித் தர்றே”ன்னாங்க. அதுக்கப்புறம் அப்பா இல்ல. போயிட்டாங்க. “இவன் என்னை மாதிரியே இருக்கான். ஆசையா இருந்ததுன்னு சின்ன சைக்கிள் கேட்டு வாங்கினான். எனக்கு ஒடம்புக்கு முடியலைன்னதும் இவனுக்கு மனசு தாங்கல. பாதி விலைக்கு வித்துட்டான்”னு கடைசி வரையிலயும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஏதாவது, தாங்கமுடியாத பெரிய பிரச்சினைன்னா பூஜையறையில போயி உட்கார்ந்துடுவாங்க. யாருடைய பேச்சையோ கேட்டு அவர்களுக்குத் தெரியாத தொழில்ல இன்வெஸ்ட் பண்ணிட்டாங்க பாம்பேல. எலெக்ட்டிரிக் சாமான்கள் விக்கிற கடை, பங்குதாரரோட கூட்டுச் சேர்ந்து ஆரம்பிச்சாங்க. அந்த தொழில்ல எந்த அனுபவமும் கிடையாது.   அப்பா சென்னையில இருக்கவும் பார்ட்னர் பல வகையில ஏமாத்தியிருக்காரு. ஒரு தடவை யார்கிட்டயோ கடைபெயரில் 27,000 ரூபாய் வாங்கிட்டு தலைமறைவாயிட்டார். பாதிக்கப்பட்டவங்க கொடுத்த புகாரின் அடிப்படையில் கடையோட இன்னொரு பார்ட்னரான அப்பா பேர்ல அரஸ்ட் வாரண்ட் பிறப்பிச்சிட்டாங்க.   தகவல் தெரிந்ததும் அப்பாவால உடனடியா எதுவும் செய்ய முடியல. அது நொடித்துப் போன காலம். மனசு ரொம்ப சஞ்சலப்பட்டு பூஜையறையில் உட்கார்ந்திருக்கும் போது அப்பாவத் தேடிக்கிட்டு அங்கே வர்றார் “ஜான்” அப்படீன்னு ஒரு நண்பர். ஜான் அப்பாவுக்கு ரொம்ப நெருக்கமான நண்பர். மிகவும் கஷ்ட நிலையில் ஒரு சாதாரண கேமராவுடன் சென்னைக்கு வந்தவர். அப்பாவோட தொடர்பு ஏற்பட்ட பின்னாடி அவரோட நிலம அடியோட மாறிப்போச்சி. அப்பா ஜானை இயன்ற வகையில் எல்லாம் வெளியிட்ட புத்தகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டு அவரோட பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுனாங்க. அப்பாவின் பரவலான செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு பிளாக்மேக்கிங் தொழில் ஆரம்பித்து நல்ல நிலைக்கு உயர்ந்தார் அவர்.
ஜான் பூஜையறைக்குள் ஷுவுடன் வந்தது அப்பாவுக்குப் பிடிக்கல. “ஷுவைக் கழட்டிட்டு உள்ளே வா ஜான்”ன்னு சொன்னாங்க அப்பா.
“உன்னை வெளியே போலீஸ் தேடுது.   நீ இங்க சாமி கும்பிட்டுக்கிட்டிருக்கியா”ன்னு வருத்தத்தோட ஜான் சொல்லவும் “என்ன செய்யிறது. பெயர் கெட்டுப் போகும். கெட்டுப்போனால் போகட்டும். நான் தப்பு செய்யல. எது வந்தாலும் வரட்டும் பாத்துக்கலாம்”ன்னு அப்பா சொன்னாங்க. ஜான் அப்போதே அப்பாவை பேங்குக்கு அழைச்சிட்டுப்போய் தன் கணக்கிலிருந்த பணத்திலேர்ந்து 27,000 ரூபாயை அப்பா கணக்குக்கு மாத்திக் கொடுத்து வர இருந்த ஆபத்திலேர்ந்து காப்பாத்திட்டாரு.  அப்புறம் ரெண்டுபேரும் ஒரு நான்வெஜ் ஹோட்டலுக்குப் போயிருக்காங்க. அப்பா நான்வெஜ் சாப்பிடறதில்ல. அதனால அவங்களுக்கு டீயும் பன்னும் வாங்கிக்கொடுத்து பேசிக்கிட்டிருந்திருக்காரு ஜான். அப்ப, “உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.   இவ்ளோ பெரிய தொகையை எப்படி என்கிட்டேயிருந்து திரும்ப வாங்குவே”ன்னாங்களாம் அப்பா.  “உன்னால தரமுடியலைன்னாலும் ஒண்ணும் பிரச்சினையில்லை. இது உன்னால சம்பாதிச்ச காசு.   உனக்காக செலவு பண்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்”னு ஜான் சொல்லியிருக்காரு.  ஜான் கேக்குறார், “சாமி சாமின்னு கும்பிட்டுக்கிட்டிருந்தியே – இந்த சிக்கலில் சாமி வந்து உனக்கு என்ன செய்தது?”ன்னு. “சாமி எதுவும் செய்யத்தேவையில்லை. அதுதான் உன்னைய அனுப்பியிருக்கிறதே”ன்னு அப்பா சொன்னாங்களாம். “நான் வாங்குன இந்தப் பணத்துக்கு பத்திரமோ – அல்லது அதுபோல ஏதாவது அத்தாட்சியோ தருகிறேன் என்றதற்கு ஜான் அதை மறுத்து “அதை வைத்துக்கொண்டு பின்னாளில் உன் பிள்ளைகளும் என் பிள்ளைகளும் சண்டை போடுவதற்கா?”ன்னு கேட்டாராம்.
அப்பா இறந்த பிறகு ஜான் வர்றதுக்காக நான்கு மணிநேரம் காத்திருந்தாங்க.  எங்கெங்கெயோ ஜானைத் தேடுனாங்க. கடைசீல, போன்ல “நான் வை.கோ.வுடன்தான் பழகினேன், வை.கோ.வோட உடம்போட இல்ல. என்னால அந்த உடம்பப் பாக்க முடியாது எடுத்துடுங்க”ன்னு சொன்னார் ஜான்.
பிறகு பல வருஷங்கள் கழிச்சி நான் ஜானைப் பார்க்கப் போனேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியல. “நீ யாருன்”னு கேட்டாரு. “என் பெயர் அழகப்பன். வை.கோவிந்தனின் பையன்” அப்படீன்னேன். “என்ன விஷயம்”னு கேட்டதுக்கு “அம்மாவும் நானும் ரொம்ப கஷ்டப்படுறோம். எனக்கு ஏதும் வேலை கிடைக்கிறதுக்கு உதவி செஞ்சீங்கன்னா நல்லாயிருப்போம்”னு சொன்னேன். “நீ யாரு”ன்னு கேட்டாரு. “என் பெயர் அழகப்பன். எனக்கு ஒரு வேலை வாங்கித் தருவீங்களா… ரொம்பக் கஷ்டப்படுறோம்”னேன்.  ஜான் கொஞ்ச நேரம் பேசாம இருந்தார்.
அப்புறம் மறுபடியும் “நீ யாரு தம்பீ”ன்னு கேட்டாரு.   “நான் தான் சொன்னேனே, திரும்பத்திரும்ப கேக்குறீங்களே… நான் வை.கோவிந்தனோட மகன்”ன்னு பதில் சொன்னேன். “அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கு. வை. கோவிந்தனோட மகன் உதவி கேட்டு யாரையும் போய் பார்க்கக்கூடாதே”ன்னு சொன்னாரு. “பிறகு நான் என்னதான் செய்யணும்கிறீங்க”ன்னு கேட்டேன்.
“உதவி கேட்டு யார்கிட்டேயும் போய் நிக்காதே.  கோவிந்தன் பையன் அப்படி நிக்கக்கூடாது.  கோவிந்தன் பல பேர் வாழ்க்கைக்கு உதவி செஞ்சிருக்காரு.  அவர் மகன் இப்படி கேட்கக்கூடாது.  அது வை.கோ.வின் கௌரவத்திற்கு இழுக்கு”ன்னு சொன்னாரு ஜான். “நான் என்ன செய்யிறது.   சரியான படிப்பில்ல. வறுமையை சமாளிக்க முடியல”ன்னு சொன்னேன்.  “ஏதாவது செய்… இதோ இந்த ரோட்டு ஓரத்திலேயே பழைய பேப்பர் கடை போட்டாலும் நல்லதுதான். நீயாக ஏதாவது செய். அப்ப நான் உனக்கு உதவி செய்யறேன்”னாரு. அப்ப அவரு சொன்னபடி செஞ்சிருந்தாலும் இப்ப நல்லாயிருந்திருப்பேனோ என்னவோ தெரீல.