Sunday 29 March 2015

ஆர். ஷண்முகசுந்தரம், ‘சக்தி’ கோவிந்தன், கு.அழகிரிசாமி , சார்வாகன், திரு.வி.க. By சாரு நிவேதிதா

By சாரு நிவேதிதாFirst Published : 10 May 2015 10:00 AM ISThttp://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/05/10/உ.வே.சா.-பிறப்பு-1855-இறப்பு-1942/article2805770.ece

துவரை நான்கைந்து பதிப்பாளர்கள் இத்தொடரைப் புத்தகமாகக் கொண்டு வர விரும்பி என்னைத் தொடர்பு கொண்டதிலிருந்து இந்தத் தொடர் பலரையும் கவர்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். இதற்கான காரணம் அனைத்தும் நம்முடைய முன்னோடிகள் செய்த அளப்பரிய தியாகம் மட்டுமே. இந்தத் தொடர் வெறுமனே ஒரு வழிகாட்டி; அவ்வளவுதான். இந்த வழியாகச் சென்றால் தங்கச் சுரங்கத்தை அடையலாம் என்று சொல்லும் வழிகாட்டி. சுரங்கத்தைச் சென்றடைந்து தங்கம் கொள்வதோ மறுப்பதோ உங்கள் விருப்பம். இந்தத் தொடரைப் பதிப்பிப்பதை விட அவசரமான ஒரு பொறுப்பு பதிப்பாளர்களுக்கு உள்ளது. அது, இந்தத் தொடரில் நான் குறிப்பிட்டு வரும் பல்வேறு நூல்களைப் பதிப்பிப்பதுதான். விற்குமா எனத் தயங்க வேண்டாம். சோழர் காலத்து ஒரு வெள்ளிக்கு இன்றைய மதிப்பு எவ்வளவோ அவ்வளவு மதிப்பு உண்டு நம் முன்னோடிகளின் நூல்களுக்கு.  அதிலும் உ.வே.சா. போன்றவர்கள் வெறும் தங்கச் சுரங்கம் மட்டும் அல்ல; அவர் எழுத்தில் தங்கத்தோடு கூட வைர வைடூரியங்களும் நவரத்தினங்களும் கொட்டிக் கிடக்கின்றன. உ.வே.சா. எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களான என் சரித்திரம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம் (இரண்டு பாகங்கள்), மகா வைத்தியநாதையர், கனம் கிருஷ்ணையர், கோபால கிருஷ்ண பாரதியார், வித்துவான் தியாகராசச் செட்டியார் போன்ற நூல்களெல்லாம் இதற்கு சாட்சி. அதிலும் என் சரித்திரம் ஏதோ ஒரு சுவாரசியமான சரித்திர நாவலைப் படிப்பது போல் உள்ளது. பக்கங்கள் பறக்கின்றன.  இது தவிர புதுக்கோட்டை திவான் சேஷையா சாஸ்திரியார், பேராசிரியர் பூண்டி அரங்கநாத முதலியார், சுப்ரமணிய பாரதியார், இசைப் புலவர் ஆனை ஐயா முதலியோர் பற்றியும் தனித்தனியே கட்டுரைகள் எழுதியிருக்கிறார் உ.வே.சா. இவையெல்லாம் உடனடியாகப் புத்தகங்களாகப் பதிப்பிக்கத் தக்கவை. இவையெல்லாம் இன்று கிடைப்பதற்கு அரிதாக உள்ளன. இந்தத் தொடருக்காக என்னுடைய பல நண்பர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் பழைய நூல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியும் பல நூல்கள் கிடைக்கவில்லை.  உ.வே.சா. எழுதிய மகா வைத்தியநாதையர் என்ற நூலை உஸ்மானியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் என் நண்பர் ஒருவர். அதிலும் புத்தகம் நெடுகிலும் ஒற்றெழுத்துக்களுக்குப் புள்ளியே காணோம். ஓலைச் சுவடியிலேயே வாழ்ந்த உ.வே.சா.வின் நூலை ஓலைச் சுவடி படிப்பது போலவே படித்தேன்!  

இந்தக் கட்டுரைகளை வெறும் வழிகாட்டி மட்டுமே என்று குறிப்பிட்டேன். ஏனென்றால், க.நா.சு., அசோகமித்திரன் போன்றவர்கள் மலைமலையாய் எழுதிக் குவித்திருக்கிறார்கள். க.நா.சு. அறுபது ஆண்டுகள் எழுதினார். அதுவும் இரண்டு மொழிகளில்.  எல்லாவற்றையும் தொகுத்தால் 50000 பக்கங்கள் வரலாம். அதுவே குறைவான கணக்கு.  அசோகமித்திரன் க.நா.சு.வை மிஞ்சியிருப்பார். க.நா.சு.வை விட அதிக ஆண்டுகள் - 60 ஆண்டுகளுக்கும் மேலாக - எழுதி வருகிறார். இப்போது 84 வயதில் எழுதும்போதும் அவர் எழுத்தில் ஒரு சிறிதும் தளர்ச்சி இல்லை. இப்பேர்ப்பட்ட மேதைகளை ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஒரு கட்டுரையில் அடக்குவது கடினம். ஆயிரம் பக்கங்கள் எழுத வேண்டும் என்பதே என் ஆசை.

ஆனால் உ.வே.சா.வுக்கு ஆயிரம் பக்கங்கள் கூடப் போதாது. ஏனென்றால், அவரது வாழ்நாளில் நூறு பேர் செய்ய வேண்டிய பணியை அவர் ஒருவராகச் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்திருக்கிறார். சிறிய வயதில் தான் படித்த விதம் குறித்து என் சரித்திரத்தில் இப்படி எழுதுகிறார்: ‘பள்ளிக்கூடத்தில் படித்தது தவிர வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.’ இதெல்லாம் அவர் படித்ததில் ஒரு துளி. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எந்தெந்த வரிகள் காணோம் என்பதை வெறும் ஞாபகத்திலிருந்தே எடுத்துக் கொண்டு விடும் திறன் பெற்றிருந்தார் உ.வே.சா. இது ஞாபக சக்தியைப் பொறுத்த விஷயம் மட்டும் அல்ல. பல்வேறு உரை நூல்களையும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
உ.வே.சா.வின் மகத்தான உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் மட்டும் இருந்திராவிட்டால் நமக்குச் சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியத்திலும் பல நூல்கள் கிடைத்திருக்காது. வாகன வசதி இல்லாத அந்தக் காலத்தில் ஓலைச் சுவடிகளைத் தேடி நடையாய் நடந்திருக்கிறார் அந்த மகான். அவருடைய பணி எப்படி நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள அவர் எழுதிய நல்லுரைக் கோவை என்ற நூலின் நான்காவது தொகுதியில் உள்ள உதிர்ந்த மலர்கள் என்ற கட்டுரையைப் படிக்கவும். 1889-ம் ஆண்டு. பத்துப் பாட்டை ஆராய்ந்து பதிப்பிக்கத் துவங்கிய போது அதில் வரும் குறிஞ்சிப் பாட்டில் ஒரு சிக்கல். அது சங்கப் புலவர்களில் தலைசிறந்தவரான கபிலர் பாடியது. அதில் 99 மலர்களின் பெயர் வரும் இடத்தில் சில வரிகளைக் காணவில்லை. ஏட்டுச் சுவடியில் அந்த இடம் காலியாக இருக்கிறது. பழைய ஓலைச் சுவடிகளைத் தேடி எங்கெங்கோ அலைகிறார். நம் தமிழர்களின் விசேஷம் என்னவென்றால், ஆடிப் பதினெட்டு அன்று வீட்டில் இருக்கும் பழைய சுவடிகளையெல்லாம் ஆற்றில் போட்டு விடுவது வழக்கம்.  இப்படி அடித்துக் கொண்டு போனதுதான் அகத்தியம் போன்ற அருந்தமிழ் நூல்களெல்லாம். உ.வே.சா. பத்துப் பாட்டின் மூலத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த போது கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர். திருவாவடுதுறை ஆதினத்தின் ஆதரவில் இருக்கிறார். தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் சுவடிகளைத் தேடியாயிற்று. மாயூரத்துக்கு அருகில் உள்ள தருமபுர ஆதீனத்தில் மட்டுமே தேடவில்லை. தேடவும் முடியாது. திருவாவடுதுறைக்கும் தருமபுரத்துக்குமான பகை நீதிமன்றம் வரை போய் விட்டது.  அதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய மொழிக்காக தருமபுரம் செல்கிறார் உ.வே.சா. 

‘ஆதீனத் தலைவர்களாகிய ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்து கொண்டிருந்தனர். நான் அவர் அருகிலே போய்க் கையுறையாகக் கொண்டு வந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை அவருக்கு முன் வைத்துவிட்டு நின்றேன். என்னைக் கண்டும் அவர் ஒன்றும் பேசவில்லை. வெறுப்பின் அறிகுறியாக இருக்கலாமென்று எண்ணினேன்; ‘திருவாவடுதுறை மடத்திற்கு வேண்டியவர் இங்கே வரலாமா? எதற்காக வந்தீர்?’ என்று கடுமையாகக் கேட்டுவிட்டால் என் செய்வது என்ற அச்சம் வேறு என் உள்ளத்தில் இருந்தது. பேசாமல் அரைமணி நேரம் அப்படியே நின்றேன். தேசிகர் ஒன்றும் பேசவில்லை. நான் மெல்லப் பேசத் தொடங்கினேன்…’ விலாவாரியாகத் தான் வந்த காரணத்தைச் சொல்கிறார் உ.வே.சா.

‘அவ்வளவையும் கேட்டபிறகு அவர் தலை நிமிர்ந்தார். ‘என்ன சொல்லுவாரோ?’ என்று அப்பொழுதும் என் நெஞ்சம் படபடத்தது. தலை நிமிர்ந்தபடியே அவர் சிறிது நேரம் இருந்தார். ஏதோ யோசிப்பவர்போலக் காணப்பட்டார். பிறகு, ‘நாளை வரலாமே’ என்று அவர் வாக்கிலிருந்து வந்தது. ‘பிழைத்தேன்’ என்று நான் எண்ணிக்கொண்டேன்; ‘இந்த மட்டிலும் அனுமதி கிடைத்ததே’ என்று மகிழ்ந்தேன். ‘உத்தரவுப்படியே செய்கிறேன்’ என்று சொல்லி மறுநாள் வருவதாக விடை பெற்றுக்கொண்டு மாயூரம் சென்றேன்.’

மாயூரத்தில் வேதநாயகம் பிள்ளையின் வீட்டில் அன்று இரவு தங்குகிறார். வேதநாயகம் பிள்ளையும் உ.வே.சா.வைப் போலவே மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர். உ.வே.சா. சென்ற போது பிள்ளை நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். (அதற்கு அடுத்த சில மாதங்களில் அவர் இறந்து விடுகிறார்.) அன்று இரவு முழுதும் உ.வே.சா. உறங்கவில்லை. பொழுது புலர்ந்ததுமே கிளம்பி ஏழு மணிக்கெல்லாம் தருமபுர ஆதீனம் வருகிறார். அன்றும் ஸ்ரீ மாணிக்கவாச தேசிகர் முதல் நாள் இருந்த கோலத்திலேயே இருக்கிறார். அதே சாய்வு நாற்காலி. அதே மௌனம். இவரும் முதல் நாளைப் போலவே அருகில் போய் நிற்கிறார். அதன்பிறகு அங்கே பணிபுரியும் ஒருவரது சிபாரிசில் உ.வே.சா.வுக்குச் சுவடிகளைப் பார்க்க அனுமதி கிடைக்கிறது. அங்கேயிருந்த ஆயிரக் கணக்கான சுவடிகளில் தொல்காப்பியம் உட்பட பல பழந்தமிழ் நூல்கள் உரையோடு இருக்கின்றன. ஆனாலும் உ.வே.சா.வின் கவனமெல்லாம் விடுபட்ட மலர்களின் மேல்தான். இரவு பத்து மணி வரை உயரமான குத்துவிளக்கு வெளிச்சத்தில் சுவடிகளை ஆராய்கிறார். (காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த தேடல்!) அப்பொழுது, முன்னே குறிப்பிட்ட மடத்தின் ஊழியர் அங்கே வருகிறார். உ.வே.சா. தனக்கு வேண்டிய சுவடி கிடைக்காததை வருத்தத்தோடு சொல்லவும் அவர், ‘சில தினங்களுக்குமுன் பதினெட்டாம் பெருக்கில் காவிரியில் கொண்டுபோய் விட்டு விடுவதற்காகப் பல பழைய கணக்குச் சுருணைகளையும் சிதிலமான வேறு சுவடிகளையும் கட்டிச் சிறிய தேரில் வைத்துக் கொண்டு போனார்கள். அதில் சில பழைய ஒற்றை ஏடுகளைக் கண்டேன். ஒருவேளை மடத்துத் தஸ்தாவேஜாக இருக்கலாமென்று எண்ணி அவைகளை மட்டும் எடுத்துக் கட்டி என் பீரோவின் மேல் வைக்கச் செய்தேன். அவைகளில் ஏதாவது இருக்கிறதா பார்க்கலாம்’ என்று சொல்கிறார். அந்த ஏடுகளில்தான் உ.வே.சா. தேடிய விடுபட்ட மலர்கள் இருந்தன. இப்போது குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்களின் பெயர்களைக் கண்டு நாம் ஆச்சரியம் அடைகிறோம் என்றால் அதற்கெல்லாம் காரணம், உ.வே.சா.வின் அர்ப்பணிப்பும் தியாகமும் மட்டுமே. ஓரிரு வரிகளுக்கே இவ்வளவு உழைப்பு எனில் சங்க இலக்கியம் முழுவதையும் தேடி எங்கெல்லாம் அலைந்திருப்பார் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.  

இப்படி உ.வே.சா.வைத் தமிழின் 2000 ஆண்டு பாரம்பரியத்தை நிலைநாட்டிய பிதாமகராக நாம் அறிவோம். அதற்காகச் சிலையெல்லாம் வைத்திருக்கிறோம். ஆனால் உ.வே.சா.வின் பங்களிப்பு அது மட்டும் அல்ல. சுமார் 15-ம் நூற்றாண்டிலிருந்து பாரதியின் காலம் வரை தமிழ் இலக்கியத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை. புலவர்கள் சமஸ்தான அதிபதிகளைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள். அல்லது, இறைவனைத் துதிக்கும் பாடல்களை இயற்றினார்கள். அப்படி வறண்டு கிடந்த தமிழ்ச் சூழலில் புதியதோர் இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பாரதி. இது வரலாறு. ஆனால் நமக்குத் தெரியாத வரலாறு என்னவென்றால், தமிழ் உரைநடையை நவீனப்படுத்தியதில் பாரதி அளவுக்கு முக்கியமானவர் உ.வே.சா. என்பதுதான். (பாரதி பிறப்பதற்கு 27 ஆண்டுகள் முன்பே பிறந்தவர் உ.வே.சா.) உ.வே.சா.வின் எல்லா உரைநடை நூல்களுமே மாபெரும் இலக்கிய அனுபவத்தைத் தருவதாக இருக்கின்றன. Oscar Lewis எழுதிய La Vida என்ற மானுடவியல் நூல் இலக்கிய நூலாக வகைப்படுத்தப்பட்டது போல் உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் அனைத்தும் புனைவு இலக்கியத்துக்குச் சமமாக வைக்கப்பட வேண்டியவையே. என் சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் அது பெயருக்குத்தான் உ.வே.சா.வின் சரித்திரமாக உள்ளது. மற்றபடி அதன் 800 பக்கங்களும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதன் வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன. என் சரித்திரத்தில் ஒரு காட்சி:
இப்போது (1940) உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது; ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.
இவ்வளவு ரூபாய் என்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுர வாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சாந்தி இருந்தது.
இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதேயொழியக் குறையவில்லை.
எங்கள் ஊரைச் சுற்றிப் பல வாய்க்கால்கள் உண்டு. குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பெரிய வாய்க்கால் ஒன்று முக்கியமானது. பெரியவர்கள், விடியற் காலையில் எழுந்து குடமுருட்டி ஆற்றுக்குப் போய் நீராடி வருவார்கள். அங்கே போக முடியாதவர்கள் வாய்க்காலிலாவது குளத்திலாவது ஸ்நானம் செய்வார்கள். அந்நதி ஊருக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. அதற்கு ஒற்றையடிப் பாதையில் போகவேண்டும்; வயல்களின் வரப்புக்களில் ஏறி இறங்கவேண்டும். சூரியோதய காலத்தில், நீர்க் காவியேறிய வஸ்திரத்தை உடுத்து நெற்றி நிறைய விபூதி தரித்துக்கொண்டு வீடுதோறும் ஜபம் செய்து கொண்டிருக்கும் அந்தணர்களைப் பார்த்தால் நம்மை அறியாமலே அவர்களிடம் ஒரு விதமான பக்தி தோற்றும். காயத்திரி ஜபமும் வேறு ஜபங்களும் முடிந்த பிறகு அவர்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.’
உ.வே.சா.வின் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) கிருஷ்ண சாஸ்திரிகள் எந்நேரமும் சிவநாம ஜெபத்தைத் தவிர வேறு ஒன்றையும் அறியாதவர். நாகை மாவட்டம் கஞ்சனூருக்கு வடகிழக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ள சூரியமூலை என்ற சிற்றூரில் வசித்து வந்தார். (இந்த சூரியமூலையில்தான் உ.வே.சா.வும் பிறந்தார்.) இவ்வளவு சிறிய ஊரில் இருக்கிறீர்களே என்று யாரேனும் கேட்டால், ‘அனாச்சாரத்துக்கு இடமில்லாத ஊர். திரண காஷ்ட ஜல சமர்த்தியுள்ளது. வேறு என்ன வேண்டும்?’ என்று கேட்பாராம். திரணம் – புல்; காஷ்டம் – விறகு. பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும் என்பது பொருள். பசு கூட எதற்கென்றால் சிவபூஜை செய்வதற்குப் பால் வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இதே கிருஷ்ண சாஸ்திரிகள் சூரியமூலையை விட்டுத் தன் சொந்த ஊருக்குப் புறப்படுவதற்குக் காரணமாக ஒரு சம்பவமும் நடந்தது. அந்த ஊரில் ஒரு பிராமணர் இறந்தார். அவரை மயானத்துக்கு எடுத்துச் செல்ல நான்கு பிராமணர் தேவை. கிருஷ்ண சாஸ்திரிகள் முன்வந்தார். இன்னொருவரும் வந்தார். இருந்தும் இரண்டு கை குறைந்தது. பிறகு வேறு ஜாதிக்காரர்களை அழைத்துக் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டனர். தனக்கும் அப்படிப்பட்ட நிலை வந்து விடுமோ எனப் பயந்துதான் சொந்த ஊருக்குக் கிளம்பினார் கிருஷ்ண சாஸ்திரிகள்.
உ.வே.சா.வின் உரைநடை நூல்களின் இன்னொரு விசேஷம், அவை தமிழ்நாட்டு நிலவியலின் அற்புதமான ஆவணங்களாகத் திகழ்கின்றன. உத்தமதானபுரம் உருவான வரலாறு, அதன் தென்கிழக்கு மூலையில் உள்ள கோட்டைச்சேரி, தென்மேற்கில் இருக்கும் மாளாபுரம், அதற்கு மேற்கே உள்ள கோபுராஜபுரம், வடமேற்கே அன்னிக்குடி, உத்தமதானபுரத்துக்குக் கிழக்கே அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அமர்நீதி நாயனார் அவதரித்த ஸ்தலமான நல்லூர், வடமேற்கில் பேஷ்வாக்கள் என வழங்கப்பட்ட மகாராஷ்டிரப் பிராமணச் செல்வர்கள் வாழ்ந்த திருப்பாலைத்துறை என்ற தேவாரம் பெற்ற ஸ்தலம் என்று நூற்றுக் கணக்கான ஊர்களின் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு நிலவியலை விளக்குகிறார் உ.வே.சா. ஸ்மார்த்த பிராமணர்களில் உள்ள அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்ற மூன்று பிரிவினர் பற்றிய விளக்கத்திலும் ஊர்களே வருகின்றன. நந்திவாடி என்பது இன்ன ஊர் என்று தெரியவில்லை. அருவாட்பாடி என்பது மாயூரத்துக்கு வடகிழக்கே மூன்று மைல் தூரத்தில் திருக்குறுக்கை என்னும் ஸ்தலத்துக்குப் போகும் மார்க்கத்திலும், திருநீடூர் என்னும் ஸ்தலத்துக்கு அருகிலும் உள்ளது.  அத்தியூர் தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ளது. அத்தியூரைப் பற்றி அந்தக் காலத்தில் வழங்கிய ஒரு கதை இது:
அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்பசங்கைக்குப் போனார். அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, ‘நீ எந்த ஊர்?’ என்று கேட்டான். அவர், ‘இந்த ஊர்தான்’ என்று கூறினார்.
காவற்காரன் அதை நம்பவில்லை; ‘நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய மாட்டாய்’ என்றான். அந்தப் பிராமணர், ‘நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?’ என்றார்.
‘இந்த ஊரில் ‘இரா வடக்கு’இல்லையே! இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே!’ என்றான் அவன்.
இரவில் வடக்குத் திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான்.
இப்படியாக என் சரித்திரத்தில் மட்டும் சுமார் 500 ஊர்களைப் பற்றிய கதைகளும் விவரங்களும் வருகின்றன. எனவே உ.வே.சா.வைப் பழந்தமிழ் நூல்களை மீட்டெடுத்தவர் என்று மட்டும் அல்லாமல் தமிழ் உரைநடையை நவீனமாக்கிய முன்னோடி எழுத்தாளராகவும் அறிந்து கொள்வோம். உ.வே.சா.வின் இல்லத்துக்கு ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார்; காந்தியின் கூட்டத்துக்கு உ.வே.சா. தலைமை தாங்கிப் பேசியிருக்கிறார். உ.வே.சா.வின் பேச்சைக் கேட்ட மகாத்மா இந்த முதியவரின் பேச்சைக் கேட்டால் எனக்கே தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறதே என்று சொல்லியிருக்கிறார். காந்தியை விட 14 வயது மூத்தவர் உ.வே.சா. அவர் எழுதிய பிற உரைநடை நூல்கள்:
நல்லுரைக்கோவை (நான்கு பாகங்கள்), நினைவு மஞ்சரி (இரண்டு பாகங்கள்), நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும், மணிமேகலை கதைச் சுருக்கம், புத்தசரிதம், திருக்குறளும் திருவள்ளுவரும், மத்தியார்ச்சுன மான்மியம் என்று ஏராளமான உரைநடை நூல்களையும் ஏழு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். இவை எல்லாமே அந்நாளைய ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பிரபல பத்திரிகைகளில் வெளிவந்து பல்லாயிரக் கணக்கான மக்களால் வாசிக்கப்பட்டவை. 
என் சரித்திரம் மின்நூல் இணைப்பு:
http://www.tamilvu.org/library/lA471/html/lA471cnt.htm
 

ஆர். ஷண்முகசுந்தரம் (1917 - 77) 

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/05/03/ ஆர்.-ஷண்முகசுந்தரம்-1917---77/article2793914.ece

First Published : 03 May 2015 10:00 AM IST 

சி.சு. செல்லப்பாவின் எழுத்துப் பிரசுரத்திலிருந்து, 1962-ல் ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற சிறியதொரு கட்டுரைத் தொகுப்பு இரண்டு ரூபாய் விலையில் வெளியிடப்பட்டது. அதில் எழுதியிருந்த பதினோரு எழுத்தாளர்களில் ஒருவர் ஆர். ஷண்முகசுந்தரம். திருப்பூர் மாவட்டம், கீரனூர் கிராமத்தில் பிறந்தவர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களில் ஒருவரான இவர்தான், அந்த எழுத்தாளர்களில் முதலில் நாவல் எழுதியவர்.

நாகம்மாள் என்ற அந்த நாவல் 1942-ல் வெளிவந்தது. வட்டார வழக்கில் எழுதப்பட்ட முதல் நாவல்; குடியானவர் வாழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் ஆகிய பெருமைகளைக் கொண்டது. இதுதவிர, சட்டி சுட்டது, அறுவடை, தனிவழி முதலான இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், நவசக்தியில் கதம்பம் என்ற தலைப்பில் ஆலோலம் என்ற புனைபெயரில் அரசியல் பத்தி என்று ஏராளமாக எழுதியிருக்கிறார். இவைதவிர, விபூதிபூஷன் பந்தோபாத்யாய எழுதிய பதேர் பாஞ்சாலி உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

 
ஆர். ஷண்முகசுந்தரத்தின் ‘எதற்காக எழுதுகிறேன்?’ என்ற கட்டுரையில் சில சுவாரசியமான தகவல்கள் உள்ளன. 1937-ல் அவர் எழுதிய முதல் கதையை ஏற்றுக்கொண்டு மணிக்கொடியிலிருந்து ஆசிரியர் பி.எஸ். ராமையா சார்பாக, உதவி ஆசிரியர் கி.ரா. கடிதம் அனுப்புகிறார்.  (இப்போது கி.ரா. என்றால் கரிசல்காட்டு கி.ராஜநாராயணனைக் குறிப்பதுபோல், முப்பதுகள் நாற்பதுகளில், கி.ரா. என்றால் மணிக்கொடியின் உதவி ஆசிரியராக இருந்த கி. ராமச்சந்திரனையே குறிக்கும். இவரது வாழ்க்கை திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்தது.  பிறகு பார்ப்போம்). அந்தக் கடிதத்தில், ‘இந்தக் கதை உங்கள் சொந்தக் கற்பனைதானா?’ என்று கி.ரா. கேட்கிறார். இப்படி முதல் கதையிலேயே மணிக்கொடி ஆசிரியரைத் திகைப்படையச் செய்தவர் ஷண்முகசுந்தரம்.   

‘எதற்காக எழுதுகிறேன்? உலகத்தை உய்விக்கும் நோக்கம் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நான் எழுதினாலும் எழுதாவிட்டாலும் கெட்டுத் தொலைகிறதாக இவ்வுலகம் கங்கணம் கட்டிக்கொண்டுவிட்டால், இந்த உலகைத் தடுத்து நிறுத்திவிட நம்மால் முடியுமா?

ஆரம்பத்தில் எனக்கு இருக்கும் ஆர்வத்தினால் எழுதினேன். அன்று என்னுடைய பதில் அது. இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பிறகு பத்திருபது சிறுகதைகள் படைத்து, சரத்சந்திர சட்டர்ஜியின் நாவல்கள் இரண்டொன்றை மொழிபெயர்த்த பின்னர், அமரர் கு.ப.ரா.வோடு நெருங்கிப் பழகிக்கொண்டிருந்த நாளில், ‘கிராமத்து ஜனங்களை நன்றாக அறிந்திருக்கிறீர்கள். நாவல் எழுதுவதுதானே?’ என்று கு.ப.ரா. கூறினார்.

‘நாகம்மாள்’ நாவலை ஒரு மாதத்தில் எழுதி முடித்தேன்.  நண்பர் கு.ப.ரா., உண்மையில் மகிழ்ச்சி அடைந்தார். அன்றைக்கும் இன்றைக்கும், எனக்கு என்ன எழுதுவதென்றாலும் ‘மூடுகீடு’ ஒன்றும் வரவேண்டியதில்லை. எந்த நேரமும் பேனா பிடித்தால், நிற்காமல் நிறுத்தாமல் எழுத வேண்டியதுதான். அடித்தல் திருத்தல்களுக்கு இடம் வைத்துக்கொள்ள மாட்டேன்’.

நாகம்மாளை 1942-ல் எழுதி முடித்துவிட்டு, பத்து ஆண்டுகள் எழுத்தே கதியாக இருந்தார் ஷண்முகசுந்தரம். எழுத்திலிருந்து வருமானம் இல்லாததால், ஒரு முடிவு செய்கிறார். கதைகளை எழுதி சொந்தமாகப் பிரசுரம் செய்வது! அதிலிருந்தும் பணம் வராததால், பத்து ஆண்டுகள் எழுத்திலிருந்தே ஒதுங்கி இருக்கிறார். ‘ஒரு வருஷத்தில் இரண்டு புத்தகம் எழுதினோம் வாழ்ந்தோம் என்ற நிலை இருக்கிறதா? கூழைவிட ஒரு வேளை சோறு மேல் என்று சொல்வதில் என்ன பெருமை? அது ஒரு வளர்ச்சி என்று பறைசாற்றுவது சரியென்று தோன்றவில்லை’ என்று சொல்லும் ஷண்முகசுந்தரம், நண்பர் க.நா.சு.வின் வற்புறுத்தலால் மீண்டும் எழுத ஆரம்பிக்கிறார்.  அப்போதுதான் சட்டி சுட்டது என்ற நாவல் வருகிறது. அது 1965.

‘பட்டினி கிடந்து செத்துக்கொண்டே எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்கின்ற சித்தாந்தத்தை நான் அடியோடு மறுப்பவன். ‘பாலும் பழரசமும் தந்தால் என்ன வேண்டுமானாலும் எழுதுவீரோ? எந்தக் கட்சிக்கும் எழுதித் தருவீரோ?’ என்று நையாண்டி பண்ணாதீர்கள்.  கட்சியாவது சுண்டைக்காயாவது? வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிக்கொள்வதில் என்ன பிரயோஜனம்?’ என்று தன் கட்டுரையை முடிக்கிறார் ஷண்முகசுந்தரம்.

தமிழ்ச் சூழல், எந்த அளவுக்கு இலக்கியத்துக்கு எதிரானதாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம், க.நா.சு., நாகம்மாள் நாவலின் முக்கியத்துவம் பற்றி இடைவிடாமல் எழுதிவந்தும், 1942-ல் வெளிவந்த அந்த நாவலின் இரண்டாம் பதிப்பு, 1987-ல்தான் வெளிவந்தது.  இப்போதோ, பெருமாள் முருகன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு யாருக்கும் அவர் பெயர் தெரியாது!
நாகம்மாள், அறுவடை, சட்டி சுட்டது போன்ற நாவல்கள், கிராமப்புறங்கள் பற்றி எழுதப்பட்ட க்ளாஸிக்ஸ் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. ‘தமிழ் நாவல்களில் மட்டுமல்ல; இந்திய நாவல்களிலும் ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. கிராமியச் சூழ்நிலைகளை முழுவதும் உபயோகித்து, பிராந்திய நாவல் என்கிற துறையை முதல்முதலாக இந்தியாவில் உருவாக்கியவர் ஷண்முகசுந்தரம் என்று சொல்லலாம்’ என்கிறார் க.நா.சு. 

கு.ப. ராஜகோபாலன், நாகம்மாளுக்கு எழுதிய முன்னுரையில், அந்த நாவலில் வரும் வெங்கமேடு என்ற கிராமத்தை, தாமஸ் ஹார்டியின் Egdon Heath-த்துடன் ஒப்பிடுகிறார். உண்மைதான். ஹார்டியின் The Return of the Native என்ற நாவலின் முக்கியப் பாத்திரம் மனிதர்கள் அல்ல; எக்டன் தரிசு நிலம். ஹார்டிக்கு எக்டனைப்போல்,  ஷண்முகசுந்தரத்துக்கு திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்கள்.  வெங்கமேடு, திருப்பூரிலிருந்து அறுபது மைல் தூரம். ‘வெங்கமேட்டில் வாரத்துக்கு ஒருமுறை புதன்கிழமை சந்தை கூடும்; சுற்று வட்டாரத்துச் சுமார் பத்து இருபது கிராமத்தவர்கள், வீட்டுச் சாமான்கள் வாங்குவதற்கு இங்குதான் வருவது வழக்கம். ‘உப்புத் தொட்டுக் கற்பூரம் வரை, சாதாரணமாக எல்லாச் சாமான்களுமே அங்கு கிடைக்கும்’ என்று வெங்கமேட்டை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். 

நாகம்மாளைவிட சட்டி சுட்டது இன்னும் காவியத் தன்மை கூடியதாக உள்ளது. தாராபுரம் தாலுகாவின் வடக்கு எல்லையில் நொய்யல் ஆற்று விளிம்பில் ஒதுங்கிக்கிடக்கும் ஒரத்தபாளையம் என்ற குக்கிராமத்தில், நாற்பதுகளில் வாழ்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தைப் பற்றிய கதை, சட்டி சுட்டது. வருடத்தில் பத்து மாதங்கள் தண்ணீரைப் பார்க்க முடியாத வறண்ட பூமி. பத்துப் பதினைந்து வீடுகள். எல்லாம் ஓட்டு வில்லை வீடுகள். ஒரத்தபாளையம் எப்படி இருந்தது என்பதை ஆசிரியர் விளக்குகிறார் -

‘ஒரத்தபாளையத்துக்குப் போவதென்றால், மற்ற ஊர்க்காரர்களுக்குக் கொஞ்சம் பயம்தான்! பயப்படும்படியான ஆள்களோ கருவிகளோ அப்படி என்ன இருந்தது அங்கே? அதெல்லாம் ஒன்றுமில்லை. பாதை சரியில்லை; வழி கிடையாது. அடுப்புக்கல் கூட்டியது போன்ற ஊரின் அமைப்பு! ஒருபுறம் சிவியார்பாளையம்; இன்னொரு பக்கம் அழுக்குத்தி வலசு. காங்கேயம் - சென்னிமலை செல்கின்ற சாலையிலிருந்து குறுக்குப் பாதை வழியாக – வண்டித்தடத்தில் அழுக்குத்தி வலசு வந்து சேர்வதற்குள், இடுப்பும் முதுகும் வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.  அங்கிருந்து நாலு காட்டுத் தூரம் ஒற்றையடிப் பாதையில் நடந்தால், ஒரத்தபாளையம் போய்ச் சேரலாம். அது ஒரு வழி. மற்றொன்று – சிவியார்பாளையத்தை சிரமப்பட்டு, கரடுமுரடுகளைத் தாண்டிச் சென்றடைந்துவிட்டாலும், கை தேர்ந்த மாடுகள் மட்டும் ஏற்ற இறக்கம் குண்டு குழிகளைச் சமாளித்து நிதான நடை போடுகின்ற இட்டேறித் தடத்தில் – பழக்கப்படாத பாதங்கள் நடப்பதென்றால், படாத பாடு பட்டுவிடும். அவ்வளவு கஷ்டத்தைக் கடந்து, ஒரத்தபாளையத்துக்கு யார் போகப் போகிறார்கள்? போக வேண்டிய வேலை என்ன? இந்த இரண்டாவது யுத்தம் முடிந்த நாலைந்து வருஷத்துக்குப் பிறகுதான் – வியாபாரிகள் இரண்டொருவர் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்’.

‘வறட்சியைத் தழுவிக்கொண்டிருக்கும் அந்த வட்டாரத்தில் செய்வதற்கு என்ன வேலை இருக்கிறது? பிஞ்சுக் கரங்கள் வேகாத வெயிலில் ஓடி ஓடிச் சாணி எடுப்பதும், கழி தட்டுப் பொறுக்குவதும், வருஷத்துக்குப் பத்து வள்ளம் கம்புக்கும், எட்டு வள்ளம் சோளத்துக்கும் – ராகிக் கூழுக்குமாக அடிமைச் சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் பண்ணைகளில் அவதிப்படுகிறதைப் பார்க்குந்தோறும், சாமிக் கவுண்டர், அந்தப் பேசும் பொற்சித்திரங்களைப் பெற்றெடுத்த புண்ணியவாளர்களை எண்ணி இரங்குவார்’.

கிராமத்து மனிதர்களின் வாழ்வை எந்த அளவுக்கு அவர்களின் அவ்வப்போதைய உணர்ச்சிகள் பாதிக்கின்றன என்பது பற்றிய ஒரு சிறிய சித்திரம் இது –
‘கவுண்டருடைய அத்தை மகன் ஒருவன் – அரும்பு மீசைக்காரன் – தன் தோட்டத்தில் திருட்டுத்தனமாகப் புளியங்காய் பறித்துக் கொண்டிருந்த பையனைக் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டான். அவனும் இளைஞன்தான்.  மணியக்காரரின் மெய்க்காப்பாளராகப் போகவர இருந்து கொண்டிருந்தவன். சற்று முரடன். புத்தியும் கட்டைப் புத்தி.  வார்த்தை தடித்தது. விசுக்கென்று சூரிக்கத்தியை எடுத்துக் குத்திவிட்டான். பையன் குடல் அப்படியே வெளி வந்துவிட்டது. அந்த இடத்திலேயே அவன் துடிதுடித்துச் செத்தான்’. 

ஷண்முகசுந்தரத்தின் வறண்ட நிலப்பகுதிகளைப் படித்தபோது, மெக்ஸிகோவில் 1950-களில் பிரபலமாக இருந்த பல எழுத்தாளர்களின் ஞாபகம் வந்தது. குறிப்பாக, யுவான் ருல்ஃபோ (Juan Rulfo). பல்வேறு காரணங்களால், நாம் ஷண்முகசுந்தரத்தின் க்ளாஸிக்குகளை வாசிக்கவும் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறைக்குக் கற்பிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். முக்கியமாக, ஒரு காலகட்டத்தின் நிலவியலையும் மொழியையும் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், இவருடைய நாவல்கள் மிக முக்கியமான மானுடவியல் ஆவணங்கள் என்று சொல்லலாம்.  ஆனால், வெறும் ஆவணங்களாக மட்டும் இல்லாமல், அவை மகத்தான இலக்கியமாகவும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன.  ஷண்முகசுந்தரத்தின் படைப்புகளை, யூமா வாசுகி 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்கத் துன்பவியல் நாடகங்களோடு ஒப்பிடுகிறார். அதில் கொஞ்சமும் மிகையில்லை. ஸோஃபாக்ளிஸின் அவல நாடகங்களுக்கும் நாகம்மாள், சட்டி சுட்டது, அறுவடை போன்ற நாவல்களுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

எழுபது வயதில், கல்யாண ஆசையில் பெண் தேடும் சின்னப்ப முதலியாரின் கதை சொல்லும் அறுவடை என்ற நாவல், 1960-ல் எழுதப்பட்டது என்பதை நம்பவே முடியவில்லை. பணம் பணம் என்று பணத்துக்காகவே அலைந்துகொண்டிருக்கும் நாச்சிமுத்து, அவனுடைய செல்ல மகள் தேவானை, அவளுடைய காதலன் சுப்ரமணியன், சின்னப்ப முதலியாருக்கும் தன் மகனுக்குமாகச்  சேர்த்து மணமகள்களைத் தேடிக்கொண்டிருக்கும் கருப்பண முதலியார் போன்ற வெகு சில பாத்திரங்களில் ஒரு பெரும் காவியத்தையே படைத்திருக்கிறார் ஆசிரியர். கருப்பண முதலியார் தன் வீட்டில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் தேவானை நினைக்கிறாள், இந்த ஆள் ஏன் நம் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்? ‘அவர் மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது தெரியும். ஆனால் சதா தறிக்குழியே சதம் என்று அழுந்திக்கிடக்கும் சொரி சிரங்கு பிடித்த பயலுக்கா, அப்பா தன்னைக் கல்யாணம் செய்து கொடுப்பார்?’ கடைசியில் பார்த்தால், அவள் அப்பன், சின்னப்ப முதலியாருக்கே தேவானையைக் கட்டிக் கொடுக்க முடிவு செய்துவிடுகிறான்.  சுப்ரமணியனிடம் இந்தக் கொடுமையான விஷயத்தைச் சொல்லி அவள் அழும்போது, அவன் சிரித்துக்கொண்டே சொல்கிறான், ‘எவனயாவது கட்டிக்கிட்டு எங்காச்சும் போயிருந்தயானால் நமக்கு எவ்வளவு கஷ்டம்? எங்க தாத்தனெக் கட்டிக்கிறது நல்லதாப் போச்சு’.  ஆம், சுப்ரமணியனின் தாத்தாதான் சின்னப்ப முதலியார்! எப்படி இந்த இக்கட்டிலிருந்து தப்பிப்பது என்று புரியாத தேவானை, நமக்குள் இருக்கும் உறவைப் பற்றி ஊரெல்லாம் சொல்லிவிடுங்களேன் என்று சுப்ரமணியனிடம் சொல்கிறாள். எதற்கு? அப்போதாவது முதலியார் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார் அல்லவா?

‘இதுக்கெல்லாம் எங்க தாத்தா மசியமாட்டார். இதுக்கு முன்னாலே படிதாண்டாப் பத்தினிகளெத்தான் கூட்டிக்கிட்டு வந்து வச்சிருந்தாரா?  எல்லா தேவடியாளகள்தானே?’ என்கிறான் சுப்ரமணியன்.

மின்னலில் தாக்குண்டவள்போல் தேவானை துடிக்கிறாள். இவளைப்போல ஒரு தேவடியாளைக் கலியாணம் செய்துகொள்ள அவனுடைய தாத்தா தயங்கமாட்டாராம்! ‘பளார்’ என்று சுப்ரமணியனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்துவிட்டு, அவன் முகத்திலே காறித் துப்புகிறாள் தேவானை. அதற்குப் பின் நாவல் எப்படி முடிகிறது என்பதை நான் சொல்லப் போவதில்லை. யாருமே எதிர்பார்க்காத ஒரு காவிய முடிவு அது. அளவில் சிறிதாக இருந்தாலும், ஷண்முக சுந்தரத்தின் எல்லா நாவல்களையும்விட அறுவடையே எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  

‘எழுத்தையே நம்பி வாழ்ந்திருந்த ஷண்முகசுந்தரத்துக்கு, இந்தச் சமூகம் போதுமான பொருளாதார வசதியைத் தரவில்லை. தமிழுக்கு முன்னோடி வரவுகளைக் கொடுத்த ஆசிரியருக்கு, இச்சமூகம் புறக்கணிப்பையே தந்தது. அவருடைய படைப்புகள் அனைத்தும் இன்றைய வாசகர்களுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான் வாசகர்கள் அவரைப் பற்றிய, அவரது செயல்பாடுகள் குறித்த முழுமையான கணிப்பை வந்தடைய இயலும். அதற்குரிய சூழல் இன்னும் கனியவில்லை’ – பெருமாள் முருகன்.

நன்றி: எஸ்.எஸ்.ஆர். லிங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர்

‘சக்தி’ கோவிந்தன்

First Published : 19 April 2015 10:00 AM IST

வர் ஒரு தமிழ்ப் பதிப்பாளர். பதிப்பாளர் என்பதைவிட, புத்தகங்களை வெகுவாக நேசிக்கும் இளைஞர். கு.அழகிரிசாமி, தி.ஜ.ர. போன்ற பழைய படைப்பாளிகளின் நூல்கள் இன்று கிடைப்பதற்கு அரிதாக இருப்பதால், அவற்றை மறுபிரசுரம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.


'சக்தி' கோவிந்தன்
 
வாசிப்புச் சூழல் கொஞ்சம்கூட அனுசரணையாக இல்லை; அதிகபட்சம் 300 பிரதிகள் போகும் என்றார் அவர். பிரபலமான எழுத்தாளரின் புதிய நாவல் என்றால் 2000 போகுமாம். அதிர்ச்சியாக இருந்தது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஒரு கலாசாரமாக மாற்றாத வரை இந்த நிலை மாறாது என நினைக்கிறேன்.
இன்று, நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் தமிழில் வந்துவிட்டன. இந்த நிலையில் தமிழ்ப் பதிப்புத் துறையின் தந்தை எனக் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர் பற்றிப் பார்ப்போம்.
சில ஆங்கில இலக்கிய இதழ்களைப் பார்க்கும்போது அதுபோல் தமிழில் இல்லையே என நான் வருத்தப்படுவதுண்டு. உதாரணம், TDR எனச் சுருக்கமாக அழைக்கப்படும் The Drama Review, Granta போன்றவை. ஆனால் அந்தப் பத்திரிகைகளின் தரத்தில், 1939-ல் தமிழில் ஒரு மாதப் பத்திரிகையை நடத்தியிருக்கிறார் வைகோ என அழைக்கப்பட்ட வை.கோவிந்தன். அந்தப் பத்திரிகையின் பெயர், சக்தி.
வழவழப்பான தாளில், மேல்நாட்டுப் பத்திரிகைகளின் தரத்தில் அமைந்த ‘சக்தி’யின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது நான் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவில்லை. இவ்வளவுக்கும், இரண்டாம் உலகப் போரின் காரணமாகக் காகிதப் பற்றாக்குறை இருந்த காலம் அது. ஒரு இதழில் விலை குறைப்பையும் அறிவித்து, அதிலிருந்து இதழின் விலையை நாலணாவாகக் குறைக்கிறார் வைகோ.
தி.ஜ.ரங்கநாதன், தொ.மு.சி.ரகுநாதன், கு.அழகிரிசாமி, வலம்புரி சோமநாதன், தமிழ்வாணன், ரா.கி.ரங்கராஜன், அழ.வள்ளியப்பா எனப் பலரும் ‘சக்தி’யின் ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார்கள். ரோஜா முத்தையா நூலகத்தில் அமர்ந்து, மொத்தம் 16 ஆண்டுகள் வெளிவந்திருக்கும் ‘சக்தி’யின் (1940-1944) அறுபது இதழ்களை மட்டும் மாத வாரியாகப் படித்துக்கொண்டிருந்தேன். பாரதிதாஸன் (ஆரம்ப காலத்தில் அவர் பெயர் அப்படித்தான் அச்சாகியிருக்கிறது).
தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, யோகி சுத்தானந்த பாரதியார் போன்றவர்களின் கவிதைகளும், மு.அருணாசலம். ராய.சொக்கலிங்கம், எஸ்.வையாபுரிப்பிள்ளை, அ.சீனிவாச ராகவன், மு.வரதராசனார் போன்ற தமிழறிஞர்களின் தமிழ் இலக்கியம் பற்றியக் கட்டுரைகளும், ஏ.கே. செட்டியாரின் பயணக் கட்டுரைகளும், அநேகமாக ஒவ்வொரு இதழிலும் வெளியாகி இருக்கின்றன.
‘சக்தி’யில் எழுதிய மற்றவர்கள் - சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார், டி.கே.சிதம்பர முதலியார், பெ.தூரன், த.நா.குமாரஸ்வாமி, வெ.சாமிநாத சர்மா, ந.பிச்சமூர்த்தி, ந.சிதம்பர சுப்ரமணியன், சரோஜா ராமமூர்த்தி (சமீபத்தில் இறந்துபோன ‘குடிசை’ ஜெயபாரதியின் தாயார். இதேபோல், ஜெயபாரதியின் தகப்பனார் து.ராமமூர்த்தியின் கதைகளும் வேறு சக்தி இதழ்களில் வந்துள்ளன), க.நா.சுப்ரமணியன், கு.ப.ராஜகோபாலன், அ.கி.ஜயராமன், பி.ஸ்ரீ. மற்றும் பலர். ஒவ்வொரு இதழும் சுமார் 125 பக்கங்கள் இருந்தாலும், இடையில் ஒரு படம்கூட இல்லை.
நம்முடைய சிறுபிராயத்திலிருந்து அறிந்து வந்துள்ள இந்த அறிஞர்களின் எழுத்துகளை, அவை எழுதப்பட்ட உடனேயே பத்திரிகையில் வெளிவந்த வடிவத்தில் காணும்போது ஏற்படும் உணர்வுகளை வார்த்தையால் எழுத முடியவில்லை.  இதையெல்லாம் நம் இளைஞர்கள் பயின்றால், தமிழ் இலக்கியம் பற்றியும், சமூகம் பற்றியும் இளைய சமுதாயத்திடம் எப்பேர்ப்பட்ட விழிப்புணர்வு ஏற்படும் என்று எண்ணி விம்மினேன்.
‘சக்தி’ இதழ்களில் தல்ஸ்தோயின் படையெடுப்பு என்ற நாவல் தொடராக வந்திருக்கிறது. (பிறகு அந்த நாவல் மூன்று பாகங்களாக ‘சக்தி’யின் வெளியீட்டில் வந்தது). க.நா.சு.வின் பல உலக இலக்கிய மொழிபெயர்ப்புகள், தொடர்ந்து ‘சக்தி’யில் வெளியாயின. ஒரு தலையங்கம், போரின் காரணமாக ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு பற்றிக் கவலைப்படுகிறது. 1.8.1943 தலையங்கம், பெர்னார்ட் ஷாவால் மேதை என்று வர்ணிக்கப்பட்ட முஸலினி வீழ்ந்துவிட்டது பற்றிப் பேசுகிறது.
ந.சிதம்பர சுப்ரமணியனின் கட்டுரையில் இருந்த ஒரு விஷயம், 75 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றிய ஏக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. சிதம்பர சுப்ரமணியன் ஒரு அங்கவஸ்திரம் வாங்குவதற்காக ஒரு ஜவுளிக் கடைக்குச் செல்கிறார். அதன் விலை ஏழரை ரூபாய். இவர் கையிலோ நான்கு ரூபாய்தான் இருக்கிறது. வேண்டாம் என்று வெளியேறுகிறார் சி.சு. காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் கடைக்காரர், மீதிப் பணத்தை மெதுவாகப் பிறகு கொண்டு வந்து கொடுக்கச் சொல்லி, சி.சு.விடம் அங்கவஸ்திரத்தை கொடுக்கிறார்.
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும்போது, அவரைப் பலரும், “மூர் மார்க்கெட்டில் ஃபவுன்டன் பேனாவை அடித்துவிடுவான்; செண்ட்ரலில் பர்ஸை அமுக்கிவிடுவான்; ஜாக்கிரதையாக இரும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், சென்னையோ இப்படி இருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறார்.
அதே கட்டுரையில், சி.சு. தன் நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, நண்பரின் வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரனின் தொல்லை.  நண்பரோ, உடனடியாகப் பிச்சை போடாததால், வாசலில் வந்து நின்ற பிச்சைக்காரன் பாடிக்கொண்டே நிற்கிறான். சி.சு.வுக்கு அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அந்தக் காலத்துப் பிச்சைக்காரர்கள் அப்படிப் பாடிப் பாடித்தான் பிச்சை எடுத்தார்கள். நமக்குத்தான் அவை ஆச்சரியம்.  பிச்சைக்காரன் பாடிய பாடல்கள், தாயுமானவர் பாடலும் ராமலிங்க ஸ்வாமிகள் பாடலும்.
ஒவ்வொரு சக்தி இதழிலும், சக்தி காரியாலயத்தின் புத்தக வெளியீடு பற்றிய விளம்பரமும், நாலைந்து பக்கங்களுக்கு புதிய புத்தகங்களுக்கான மதிப்புரையும் வந்துள்ளன. ஏப்ரல் (‘43) இதழ் தலையங்கம், தீரர் சத்யமூர்த்தியின் மறைவு பற்றி வருந்துகிறது. இணையற்ற பிரசங்கியான அவர் சிறையில் இருந்தபோது பீடித்த நோயினால்தான் இறந்தார் என்கிறது தலையங்கம்.
ஃபெப்ருவரி (‘44) இதழில் வ.ரா., லெனின் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மார்ச் இதழில் “தாயை இழந்தோம்” என்ற தலையங்கம்.  (கஸ்தூர்பா காந்தி மறைந்தது அந்த ஆண்டு ஃபெப்ருவரி 22-ம் தேதி).  ந.பிச்சமூர்த்தியின் நீண்ட வசன கவிதை. மாஸ்தி வேங்கடேச ஐயங்கார் கதை ஒன்றின் மொழிபெயர்ப்பு. விளம்பரங்கள் - டி.கே.சி.யின் ஆரண்ய காண்டம். புதுமைப் பதிப்பகம் வெளியீடு. விலை 5 ரூ. பி.எஸ்.ராமய்யாவின் “சினிமா…?” ஜோதி நிலையம், திருவல்லிக்கேணி.  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையின் புத்தகம் - இசைத் தமிழ். தேசிய விநாயகம் பிள்ளையின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியம், புதுமைப் பதிப்பகம், காரைக்குடி.
சக்தி பிரசுராலயத்தின் விளம்பரத்தில், வெ.சாமிநாத சர்மாவின் புதிய சீனா, கார்ல் மார்க்ஸின் ஜீவிய சரித்திரம் போன்ற புதிய நூல்கள் பற்றிய அறிவிப்பு. வெ.சா.வின் இன்னொரு புத்தகமான ரூஸோவும் வெளிவர இருக்கும் புத்தகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சக்தி காரியாலயம், தமிழ் நூல்கள் மட்டுமன்றி ஆங்கில நூல்களையும் பிரசுரித்துள்ளது. உ-ம். நாஜி ஜெர்மனியின் மனமும் முகமும்.  தொகுப்பாசிரியர் பேராசிரியர் என்.கங்குலி; கே.எம்.முன்ஷியின் அகண்ட இந்தியா ரூ.1.4.0.
‘சக்தி’ இதழில் வந்துள்ள வேறு சில பதிப்பகங்களின் விளம்பரங்கள் -  ஆஸ்கார் ஒயில்டின் சிறந்த சிறுகதைகள் – மொழிபெயர்ப்பு - ஆ.சுப்பையா, ஸ்டார் பிரசுரம். ஒயில்டின் சிறை அனுபவம் – மொழிபெயர்ப்பு - வி.ஆர்.எம்.செட்டியார், மோலியர் – யோகி சுத்தானந்த பாரதி. டி.கே.சி. எழுதிய கம்ப ராமாயணம். விலை 6 ரூ. (இந்த விலை, அப்போதைய மதிப்பில் மிக அதிகம் என்பதால், நூல் அதிகப் பக்கங்களைக் கொண்டது என யூகிக்க முடிகிறது). சி.சு.செல்லப்பாவின் ஸரஸாவின் பொம்மை – கலைமகள் காரியாலயம்.
சக்தி வெளியிட்ட மேலும் சில நூல்கள் - டி.கே.எஸ். சகோதரர்களில் ஒருவரான டி.கே.முத்துசாமி எழுதிய ராஜா பர்த்ருஹரி நாடகம்; சந்தியா – சரத் சந்திரர் – மொழி பெயர்ப்பு - அ.கி.ஜயராமன், ரா.ஸ்ரீ.தேசிகன், எம்.ஏ. எழுதிய குழந்தை ராமு விலை: 0-8-0. (ரூ-அணா-பைசா) எட்டணா என்பது இக்காலத்திய அரை ரூபாய்; கு.ப.ராஜகோபாலன் & பெ.கோ.சுந்தரராஜன் இணைந்து எழுதிய கண்ணன் என் கவி, 0.12.0; பிரபல அமெரிக்க நாவலாசிரியர் அப்டன் சிங்க்ளேரின் மதுவிலக்கு மங்கை; இந்தியப் பொருளாதார நூல் - தி.சு. அவினாசிலிங்கம், 2.0.0, டால்ஸ்டாயின் இனி நாம் செய்ய வேண்டுவது யாது, 1.0.0, டால்ஸ்டாயின் இருளின் வலிமை; டால்ஸ்டாயின் சிறுகதைகள்; மகாத்மா காந்தியின் அரசியல் அனுபவங்கள், சிறை அனுபவங்கள், தென் ஆப்ரிக்கா சத்தியாக்கிரகம் (மூன்று நூல்கள்); எப்படி எழுதினேன், தி.ஜ.ர., யான் பெற்ற இன்பம், மு.அருணாசலம், எம்.ஏ.; குழந்தை வளர்ப்பு பற்றி ராஜாஜி எழுதிய சிசுபாலனம், ராஜாஜியின் ஹிந்து மத சாரம், புதுக்கவி விட்மன் பற்றிய யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியின் நூல், கவிதைத் தோரணம் – வி.ஆர்.எம்.செட்டியார்; காலைப் பிறை – F.W.பெயின்; கட்டுரைக் கோவை – பண்டித லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார்; தூங்குமூஞ்சி – செக்காவ்.
‘‘மகான் மணி ஐயர்” என்று ஒரு நூல் பற்றிய விளம்பரம். இவர் நாற்பதுகளில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.  அப்போதைய அமெரிக்க அதிபர் வில்சனுக்கு, பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவில் செய்து வரும் ஊழல்கள் பற்றிக் கடிதம் எழுதி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அல்லாமல், பிரிட்டிஷ் சர்க்காருக்கும் அதன் மூலம் நெருக்கடி கொடுத்தவர்.
இதையெல்லாம் பார்த்தபோது, வாசகருக்கு எது வேண்டும் என்பதைத் தருவதில் ‘சக்தி’ கோவிந்தனுக்கு இருந்த பிடிவாதத்தை என்னால் யூகிக்க முடிந்தது. சக்தி இதழ்களில் பல்வேறு ஆச்சரியங்கள் காணக் கிடைத்தன.
முதலில், 2007 வரை நம்மிடையே வாழ்ந்து, தனது 91-வது வயது வரை எழுதிக்கொண்டிருந்த லா.ச.ராமாமிர்தம், சக்தியில் ஏராளமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அடுத்து, ‘சக்தி’யில் ஒன்றிரண்டு சினிமா விளம்பரங்களைத் தவிர, சினிமா பற்றிய எந்த விஷயத்தையும் காண முடியவில்லை. (ஒரு சினிமா விளம்பரம் - ஹொன்னப்ப பாகவதர்,  T.R. ராமச்சந்திரன், U.R. ஜீவரத்தினம், V.N.ஜானகி நடித்த படம் ‘தேவ கன்யா’.  டைரக்‌ஷன்: R.பத்மநாபன். இன்னொரு விளம்பரம் - கொலம்பியா ரிகார்டுகளில் கேளுங்கள், T.R.ராஜகுமாரி, T.R.மஹாலிங்கம் பாடிய இன்னின்ன பாடல்கள்…).
‘சக்தி’ கோவிந்தன், ‘சக்தி’ இதழ் தவிர குழந்தைகளுக்காக ‘அணில்’ என்ற வார இதழையும், பெண்களுக்காக ‘மங்கை’ என்ற மாத இதழையும், சிறுகதைகளுக்காக ‘கதைக் கடல்’ என்ற மாத வெளியீட்டையும், காந்தியின் எழுத்துகளை மட்டுமே மாதம் ஒரு நூலாகவும், குழந்தைகள் செய்தி என்ற இதழையும் நடத்தினார்.
சக்தி காரியாலயம் மூலம் பல மலிவுப் பதிப்புகளையும் கொண்டுவந்து, பதிப்புத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். ராஜாஜியின் வியாசர் விருந்தை, ஒரு ரூபாய்க்கு ‘தினமணி’ வெளியிட்டதற்கு கோவிந்தனின் முயற்சியே காரணம். வெளியான அன்றே, அந்நூல்  80 ஆயிரம் பிரதிகள் விற்றது.
‘சக்தி’ இதழ்களின் பெட்டிச் செய்திகளில்கூட, உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும்தான் சுவாரசியமான விஷயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. அல்லது, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகளின் பொன்மொழிகள் இடம் பெற்றுள்ளன. ‘சக்தி’ இதழ்களின் ஒவ்வொரு துளி இடமும், மனித குல மேன்மை குறித்து சிந்தித்த ஒரு மகத்தான மனிதனின் உழைப்பே தெரிகிறது.



'சக்தி' கோவிந்தன்
 
‘சக்தி’ கோவிந்தன் பற்றி யூமா வாசுகி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இருந்த இரண்டு மேற்கோள்கள் இவை –
‘சரஸ்வதி’ விஜயபாஸ்கரன் கூறுகிறார் –
“சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று சங்கீத வித்வத் சபை (மியூஸிக் அகாடமி) இருக்கும் இடத்தில்தான் அன்று சக்தி காரியாலயம் இருந்தது. போர்த்துக்கீசியர் கட்டிய பிரம்மாண்டமான கட்டடம். முன்புற வராந்தாவில் வலது கைப் பக்கத்தில் ஒரு சிவப்பு நிறத் திண்ணை. சோபா மாதிரியிருக்கும். வை.கோ.வின் யதாஸ்தானம் அதுதான். அந்த வராந்தா, ஒரு சங்கப் பலகை. தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் என்று எப்போதும் சபை நிறைந்திருக்கும். மாடியில் அவரது குடும்பமும் இருந்தது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் ரகசியமாகச் சந்தித்துக்கொண்ட இடமும் அவரது மாடிதான்”.
வை.கோவிந்தனின் மகன் அழகப்பன் –
“…கடைசியா அப்பா - ராயப்பேட்டை பக்கம் சத்யசாய் லாட்ஜின்னு கவுடியா மடத்துக்குப் பக்கத்துல ஒரு லாட்ஜ் இருக்கு. அந்த பில்டிங்குலதான் - யார் உதவியும் இல்லாம ஒரு ரூம் வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தாங்க. மியூஸிக் அகாடமி இருக்கிற அதே ரோடுலதான். நாங்கெல்லாம் ஊருல இருந்தோம். அப்பாவால குடும்பத்த சென்னையில வைக்க முடியல. அவங்க தனியா இருந்து ரொம்பத் துன்பப்பட்டாங்க. இனி எழுதித்தான் சம்பாதிக்கணும்கிற நெலம வந்தபோது, ஆள் உயிரோட இல்ல. எந்தக் கஷ்டமும் அவங்களப் பெரிய அளவுல பாதிச்சது கிடையாது. எப்போதும் படிச்சிக்கிட்டே இருப்பாங்க. அவங்க எழுத முயற்சி செஞ்சப்போ, அவங்களுக்கு சாப்பாட்டுக்கே ரொம்ப சிரமமாயிருந்துச்சி…
வைகோ பற்றிய கட்டுரையை சக்தி இதழ்களை வைத்து மட்டுமே எழுத வேண்டும் என விரும்பியதால், பழ.அதியமான் எழுதியுள்ள ‘‘சக்தி வை.கோவிந்தன்: தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை” என்ற நூலை, இந்தக் கட்டுரையை எழுதி முடித்த பின்னரே படித்தேன். நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல்.

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/03/22/கு. அழகிரிசாமி

First Published : 29 March 2015 10:00 AM IST
கோவில் திருவிழாக்களில் உறுமி மேளமும் நையாண்டி மேளமுமாக அடித்துப் பட்டையைக் கிளப்புவார்கள் அல்லவா? ஆட்டமும் தூள் பறக்கும். ஆடியவர், அடித்தவர், பார்த்தவர் எல்லோருமே அப்போது ஒரு உச்சகட்ட பரவச நிலையில் இருப்பார்கள். கு. அழகிரிசாமியைப் படிக்கும்போது அப்படிப்பட்ட உணர்வே ஏற்பட்டது. அதோடு அவரது கிண்டல், நையாண்டி எல்லாமும் சேர்ந்து ஏதோ வசியம் செய்யப்பட்டவர்களைப் போல் ஆகிவிடுகிறோம். இப்பேர்பட்ட எழுத்து வன்மை கொண்ட கு. அழகிரிசாமியின் பெயர்கூட இன்றைய தலை முறைக்குத் தெரிந்திருக்குமா என்று வருத்தத்துடன் யோசித்தேன். அதிலும் புதுமைப்பித்தன் இவ்வளவு பரவலாக அறியப் பெற்றிருக்கும்போது கு.அழகிரிசாமியின் பெயர்கூடத் தெரிந்திராத நிலை ஆச்சரியத்தையே அளிக்கிறது. 
வெறும் 47 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த கு.அழகிரிசாமி (1923–1970), சிறுகதைகளுக்காகவே அறியப்பட்டாலும் இசை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஓவியம், பத்திரிகை ஆசிரியர் (மலேஷியாவில் ஐந்து ஆண்டுகள் தமிழ் நேசன் பத்திரிகையில் பணி) என்று பல்வேறு துறைகளில் இயங்கித் தடம் பதித்திருக்கிறார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் கீர்த்தனைகளை எப்போதும் முணு முணுத்துக்கொண்டே இருப்பார் என்று அவரது பால்யகால நண்பரான கி.ராஜநாராயணன் குறிப்பிடுகிறார். கர்னாடக இசையை முறையாகக் கற்றவர். காருக்குறிச்சி அருணாசலத்தின் நெருக்கமான நண்பர். அவருக்காக அழகிரிசாமி எழுதிய இரங்கல் கட்டுரை, சங்கீத ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று. தியாகராஜரின் கீர்த்தனைகளில் இருந்தே அவரது வாழ்க்கைச் சரிதத்தை எழுத வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் என்கிறார் கி.ரா.  அதன் விளைவுதான் திரிவேணி என்ற கதை. 
அழகிரிசாமியும் கி.ரா.வும் ஒரே ஊர்க்காரர்கள் (இடைசெவல்). கி.ரா.வைப் போலவே அழகிரிசாமியின் தாய்மொழியும் தெலுங்கு. கி.ரா.வுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்களே தனிப் புத்தகமாக வந்துள்ளது. அழகிரிசாமி, கரிசல் மண்ணைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் எழுத்து எனக்குத் தஞ்சை மாவட்டத்து எழுத்தாளர்களையே நினைவூட்டியது. தஞ்சை எழுத்தாளர்களிடம் மட்டுமே அதிகம் காணக்கூடிய கிண்டலும், கேலியும், சுய எள்ளலும், பெண்கள் மீதான அதீத ஆர்வமும், அழகிரிசாமியின் கதைகளில் அனாயாசமாகத் துள்ளி விளையாடியதால் அப்படி நினைக்கத் தோன்றியது.





 
இரண்டு பெண்கள் என்ற கதை. கதை நடப்பது நாற்பதுகள் என்று யூகிக்க முடிகிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வரும் கல்யாணம் ஆகாத ஒரு இளைஞன். மேற்கொண்டு அழகிரிசாமி சொல்கிறார்: ‘‘மனித வாழ்க்கைக்கு மதுரையென்றாலும் ஒன்றுதான்; சென்னையென்றாலும் ஒன்றுதான். இரண்டும் ஒன்றுபோலவே மோசமாக இருக்கும்போது எங்கே இருந்தால் என்ன? மதுரையிலும் வீட்டு வாடகை அதிகம்; சென்னையிலும் வீட்டு வாடகை அதிகம்… மதுரையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரம்மச்சாரிகள் பேசக் கூடாது; சென்னையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரம்மச்சாரிகள் பேசக்கூடாது. மதுரையிலும் காதலிக்க வேண்டுமென்று விரும்பாத ஆண்கள் இல்லை. சென்னையிலும் காதலிக்க வேண்டுமென்று விரும்பாத ஆண்கள் இல்லை.”
மயிலாப்பூரில் ஒரு அறையை வாடகையை எடுத்துக்கொண்டு தங்குகிறான் இளைஞன். நிறைய வாசிப்பவன். தெருக்கார இளைஞர்கள் யாரும் அவனோடு பேசுவதில்லை. கிழவர்கள் மட்டும் பேசக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு பேச இளைஞனுக்கு விருப்பம் இல்லை. கிழவிகளோடும் வாலிபப் பெண்களோடும் மட்டும்தான் பேசலாம். ஆனால், அவர்களோடு பேசினாலும் உலகம் சந்தேகப்படும். சிறுவர்களோடு பேசலாமா என்றால், ‘’ஆசாமி கல்யாணமாகாதவன் என்று தெரிந்துகொண்டால், என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு சிறுவனும் தன் தன் அக்காளுடைய காதல் கடிதத்தைக் கொண்டு வருவதாகவே உறுதியோடு கருதி, மேல் நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்பார்கள்.” இந்த நிலையில், இளைஞனிடம் நிறைய பத்திரிகைகளும் புத்தகங்களும் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளும் எதிர்வீட்டுப் பெண், தன் தந்தையைத் தூது விட்டு அந்தப் புத்தகங்களை வாங்குகிறாள். 
(அந்தக் காலத்தில் புத்தக வாசிப்புக்கு மக்கள் எப்படி அடிமையாக இருந்தார்கள் என்பதை அழகிரிசாமியின் பல கதைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. அன்பளிப்பு என்ற அதிஅற்புதமான கதையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், வால்ட் விட்மனின் கவிதைத் தொகுதியை கதாசிரியனிடமிருந்து இரவல் கேட்கிறான்). நம் கதைக்கு வருவோம். இளைஞனின் பத்திரிகைகளும் புத்தகங்களும் எதிர்வீட்டில் இருந்து தெரு முழுவதும் போய் வருகின்றன. எதிர்வீட்டுப் பெண்ணும் இளைஞனும் ஒரே பஸ்ஸில் ‘காரியாலயம்’  போய் வருகிறார்கள்.
ஒருநாள், கடும் மழையில் அவளைத் தன்னுடைய குடையில் அழைத்து வருகிறான். தெருக்காரர்கள் ஒன்றும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. இளைஞனுக்கு அந்தப் பெண்ணின் மீது துளியும் காதல் இல்லை. காரணம், அவள் அழகி அல்ல. அதைவிட முக்கியமான காரணம், கோடி வீட்டுப் பெண். அவளைப் போன்ற ஒரு கனக விக்கிரகம், பதினான்கு லட்சம் ஜனத்தொகை உள்ள சென்னையில் மொத்தம் பத்து பேர் இருந்தால் ஜாஸ்தி. அப்படிப்பட்ட சௌந்தர்யவதியை அந்த இளைஞன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை. ஒருநாள், அவள் வீட்டுக்கும் இவனுடைய உதவி தேவைப்படுகிறது.
இனி அழகிரிசாமி: மதியம் மூன்று மணி. ஈஸிசேரில் அறிதுயிலில் இருந்தபோது யாரோ கதவைத் தட்டினார்கள். வந்து நின்றவன் கோடி வீட்டுக் கனக விக்கிரகத்தின் தம்பி. ‘’வா தம்பி”. இந்த இரண்டு சொற்களைச் சொல்லும்போது என் நாக்கு தழுதழுத்தது. பேச முடியாமல் திக்கு முக்காடினேன். அவர்களுக்கு, இளைஞனிடம் உள்ள டைப்ரைட்டர் வேண்டும். தானே கொண்டுபோய் கொடுத்து, மறுநாள் போய் (அப்போதுதானே இரண்டு நாள் போக முடியும்?) எடுத்துக்கொண்டு வருகிறான்.
மறுநாள், இளைஞனை வீட்டுக்காரர் காலி பண்ணச் சொல்கிறார். இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கோடி வீட்டுக்குப் போனதுதான் பிரச்னை என்று தெரிகிறது. தான் தலையிட்டிருக்காவிட்டால், தெருப் பையன்களே அவனை ஏதாவது செய்திருப்பார்கள் என்கிறார் வீட்டுக்காரர். இவனும் அறையைக் காலி செய்துவிட்டு வேறு இடம் போகிறான். ஆனாலும் எதிர்வீட்டில் சிநேகம் வைத்துக்கொண்டபோது ஒன்றும் சொல்லாத தெரு, கோடி வீட்டுக்குப் போனதும் ஏன் தன்னைத் துரத்தி அடித்தது? அவனுடைய நண்பரான பத்திரிகை ஆசிரியர் விளக்கம் சொல்கிறார்: அழகில்லாத எதிர் வீட்டுப் பெண்ணோடு பழகினால் யாருக்கும் பாதகம் இல்லை. நீங்கள் குடியிருந்த வீட்டுக்காரரும், எதிர்வீட்டுக்காரரும், அந்தத் தெருவில் இருந்த அத்தனை பேரும் அந்தக் கோடி வீட்டு அழகி மீது வெறியோடு இருந்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் எவனுமே அந்தப் பெண்ணைக் கெடுக்கவும் தயங்கமாட்டான்.
இதேபோல் இன்னொரு கதை. தகப்பனும் மகனும். ‘’இது ஒரு சிறுகதை; கட்டுரை அல்ல” என்ற அறிவிப்போடு துவங்குகிறது கதை. காரணம், இன்றைய காலகட்டத்தில் எழுதப்படும் கதைகளைப்போல் படமெல்லாம் போட்டு விளக்குகிறார் அழகிரிசாமி. ரயில் பெட்டியின் இருக்கைகளின் படம். முதலாம் எண் இருக்கையில் கதாநாயகி. இரண்டாவது எண்ணில் அவள் தங்கை. மூன்றாவது, கதை சொல்லியின் நண்பர். எதிர் வரிசையில் முதலாம் இலக்கத்தில் கதைசொல்லி. இரண்டாவது எண்ணில் கதாநாயகர். அதாவது, நாயகியின் தகப்பனார். சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸில், கதாநாயகர் தன் இரண்டு மகள்களையும் மேலே குறிப்பிட்ட இரண்டு ஆசாமிகளிடம் இருந்தும் ‘காபந்து’ பண்ணி திருச்சியில் இறங்குவதுதான் 13 பக்கம் நீளும் இந்தக் கதை.
கதைசொல்லியும் அவன் நண்பரும் கல்யாணம் ஆகாதவர்கள். கல்யாணமும் சமீபத்தில் நடப்பதாகத் தெரியவில்லை. ஏன்? நண்பரைப் பற்றித் தெரியாது. ஆனால் கதைசொல்லிக்கு மனைவியாக ஒரு உலகப் பேரழகி வேண்டும். அவன் கண்ணில் அழகான பெண்கள் தட்டுப்படாமல் இல்லை. சில பெண்கள் தூரத்தில் இருந்து பார்க்க மட்டும் அழகாகவும், சில பெண்கள் போட்டோவில் மட்டும் அழகாகவும், சில பெண்கள் மூக்கு மட்டும் அழகாகவும், சில பெண்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டால் மட்டும் அழகாகவும் இருந்தார்களே ஒழிய, உண்மையில் அழகாக இல்லை. அழகான பெண்களும் கிடைத்தார்கள். ஆனால் அவர்களுக்கு இவனைப் பிடிக்கவில்லை.  ஏன்? இவன் அழகாக இல்லை. இப்படியாகக் கல்யாணம் தள்ளிக் கொண்டு போனது. ‘’ஆனால், எப்பொழுதாவது ஆகும் என்றுதான் நம்புகிறேன். என் எதிர்கால மனைவி (நீங்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால்) உங்கள் எதிர்கால மனைவியைப் போலவே பேரழகி. ஒரு இம்மியளவு குறைந்த அழகோடு, எந்தப் பெண் வந்து எனக்குக் கனகாபிஷேகம் செய்தாலும் நான் அவளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை”. 
இந்த நிலையில் எதிர் இருக்கைக் கதாநாயகியை – அதிலும் வயது வராத பெண் – நான் காதலித்துவிடுவேனா? அது ஏன் இந்த மரமண்டைக்கு – அதாவது, கதாநாயகருக்குத் தெரியவில்லை? நாயகியின் தங்கையோ, ஏழு வயதுக் குழந்தை. ஆனால், அந்தக் குழந்தையின் மீது காற்றில் நண்பரின் சட்டை நுனி பட்டாலும், கதாநாயகர் எழுந்து நின்று கத்துகிறார். ‘’நீங்களெல்லாம் தாய் தங்கையோடு பிறக்கவில்லையா, இத்யாதி, இத்யாதி”. அந்தக் குழந்தை, தூக்கத்தில் நண்பர் மீது சாய்ந்தால் அதற்கும் ஒரு ரகளை. இப்படியே அந்தத் தகப்பனும் இரண்டு பெண் குழந்தைகளும் திருச்சியில் இறங்கிப்போகிறது.
படு கிண்டலாக எழுதப்பட்டிருந்தாலும், கதையின் உள்சரடாக மனிதர்களின் மனோவக்கிரம் பற்றிய அழகிரிசாமியின் கோபம் கொந்தளித்தபடியே இருக்கிறது. கடைசியில், வெளிப்படையாகவே முடிக்கிறார். ‘’இவனெல்லாம் ஒரு அப்பனா? ஆபாசக் களஞ்சியம். தகப்பனுக்கு மகளைப் பார்த்தால் மகளைப்போல் காட்சியளிப்பாளா?  காமக்கருவியாகக் காட்சியளிப்பாளா?” இதுபோன்ற கதைகளைப் படித்தபோது, 60 – 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதைகளைப் போல் தோன்றவில்லை. ஏதோ சென்ற ஆண்டுதான் ஐரோப்பாவில் இருந்து ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் எழுதிய கதைபோல் இருக்கிறது. அதே சமயம், 70 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற வரலாற்றுப் பதிவாகவும் நாம் கு.அழகிரிசாமியின் கதைகளைப் படிக்கலாம். வரலாற்றைப் பதிவு செய்யும் பழக்கம் இல்லாத நமக்கு, இந்தக் கதைகள் கால எந்திரத்தில் பின்னோக்கிச் செல்வதான அனுபவத்தையும் தருகின்றன.

***
வாஸ்தவத்தில், இந்தத் தொடரில் எழுத நினைக்கும் ஆளுமைகளைப் பற்றி குறைந்தபட்சம் 500 பக்க அளவுக்காவது எழுத வேண்டும் என்ற அளவுக்கு விஷயம் கொட்டிக் கிடக்கிறது. அவர்களின் சாதனை அப்படிப்பட்டது. ஆனாலும், தூசு படிந்த நமது வரலாற்றின் பக்கங்களில் இருந்து சில ஆளுமைகளை அறிமுகப்படுத்துவதோடு என் பணி முடிகிறது. அழகிரிசாமியின் பிரபலமான சிறுகதையான “ராஜா வந்திருக்கிறார்”, உலகின் மிகச் சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக வரக்கூடியது. மானுட அறத்தைப் பற்றிப் பேசும் கதை அது. அதைப் படித்த பிறகு, ஒருவர் முன்பு இருந்ததைப்போலவே இருந்துவிட முடியாது. அவரது ஆளுமையிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதை அது.  
கு.அழகிரிசாமி இந்தக் கதைகளையெல்லாம் எந்தெந்த ஆண்டுகளில் எழுதினார், மலேஷியாவில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் அவர் என்ன செய்தார், ஏன் அந்தக் காலகட்டம் (1952-57) பற்றி அவர் எதுவுமே எழுதவில்லை என்றெல்லாம் பல கேள்விகள் என்னுள் எழுகின்றன.  அதையெல்லாம் ஒரு ஆய்வாளர்தான் சொல்ல வேண்டும். அத்தகைய ஆய்வாளருக்காக, கு.அழகிரிசாமியின் எழுத்தும் வாழ்க்கையும் காத்திருக்கின்றன.

சார்வாகன்

First Published : 22 March 2015 10:00 AM IST


நவீன நாடகத்தின் பிதாமகர்களில் ஒருவராகவும் உலகம் முழுவதும் சிலாகிக்கப்படும் சிறுகதைகளை உருவாக்கியவருமான ஆண்டன் செகாவ், தன் பிரதானமான தொழில் மருத்துவம் என்றே சொல்லிக்கொண்டார். (‘மருத்துவம் எனது சட்டரீதியான மனைவி; இலக்கியம் துணைவி’).

‘‘ஈரான் அல்லது பெரூவின் ஏதோ ஒரு மலைப்பிரதேசத்தில் இதுவரை ஆய்வு செய்யப்பட்டாத ஒரு பூச்சியின் புதியதொரு உடல் உறுப்பை, மைக்ரோஸ்கோப்பின் மூலமாகப் புதிதாகக் கண்டுபிடிப்பதில் உள்ள சந்தோஷத்தோடு ஒப்பிடும்போது, இலக்கியத்தினால் கிடைக்கும் பாராட்டுகளும் வெகுமதிகளும் ஒன்றுமே இல்லை. ரஷ்யாவில் மட்டும் புரட்சி நடந்திருக்காவிட்டால் என் வாழ்க்கை முழுவதையும் வண்ணத்துப்பூச்சி ஆய்வுகளிலேயே செலவிட்டிருப்பேன். எந்த நாவலையும் எழுதியிருக்கமாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார், Lepidopterology எனப்படும் வண்ணத்துப்பூச்சி ஆய்வுகளில் பல உலக சாதனைகளை நிகழ்த்தியிருப்பவர் வ்ளதிமீர் நபக்கோவ். இப்படித் தன்னை ஒரு பூச்சி ஆய்வாளன் (Entomologist) என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் நபக்கோவ்தான், பின்நவீனத்துவ இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.





தமிழுக்கு வருவோம். அவர் பெயரை நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். அவர் அதிகம் எழுதியது இல்லை. ஆண்டுக்கு இரண்டோ மூன்றோ சிறுகதைகள். அதுவும், 1965 முதல் 1976 காலகட்டத்தில்தான். தன்னை அவர் எழுத்தாளர் என்றும் சொல்லிக்கொண்டதில்லை. தொழில், மருத்துவம். அதுவும் சாதாரணமாக அல்ல. தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவைச் சிகிச்சையில் உலக அளவில் பேர் பெற்றவர். அந்தத் துறையில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். பெயர்: ஸ்ரீனிவாசன். இலக்கியத்தில், சார்வாகன். இவரைப் படித்தபோது பல்ஸாக், மாப்பஸான், ஆண்டன் செகாவ் போன்ற மேதைகளுக்கு ஒப்பானவர் என்றே சொல்லத் தோன்றுகிறது.

முன்னுரையிலிருந்து கடைசிப் பக்கம் வரை, எள்ளலும் துள்ளலுமான இவருடைய நடைக்கு ஒரு உதாரணமாக, 1988-ல் வல்லிக்கண்ணன் இவருக்கு எழுதிய இரங்கல் கட்டுரை பற்றி இவர் எழுதுவதைக் குறிப்பிடலாம். உண்மையில் இறந்தது சாலிவாஹனன். இந்தப் பாக்கியம், மார்க் ட்வெய்னுக்கு மட்டுமே கிடைத்திருப்பதாகவும், வல்லிக்கண்ணனின் கட்டுரை யாரிடமாவது இருந்தால், தனக்கு அனுப்பித் தரும்படியும் முன்னுரையில் எழுதுகிறார் சார்வாகன்.

இந்தத் தொடரின் ஆரம்பமாக இவரைப் பற்றி எழுதலாம் என, நற்றிணை பதிப்பகத்தின் சார்வாகன் தொகுப்பை எடுத்தேன். மொத்தம் 41 சிறுகதைகள், 3 குறுநாவல்கள். இதில் எதைப்பற்றி எழுதுவது என்று நினைத்தபோது, பெரும் குழப்பமே ஏற்பட்டது. நவரத்தினங்களும் கொட்டிக் கிடக்கும் சுரங்கத்தில் எதை என்று எடுப்பது? இருந்தாலும், நமது பக்க வரையறையைக் கருதி மீண்டும் மீண்டும் புரட்டி, மீண்டும் மீண்டும் குழம்பி, கடைசியில் இரண்டு ரத்தினங்களை எடுத்தேன். அமர பண்டிதர் என்ற குறுநாவல். சுதந்தரப் போராட்டம் தீவிரமடைந்திருந்த நாற்பதுகளில் கதை துவங்கி, சுதந்தரத்துக்குப் பிறகு மதிப்பீடுகளின் சடுதியான வீழ்ச்சியோடு முடிவடைகிறது.

பொதுவாகவே அரசியல், கலாசார, தனிமனிதப் போராட்டங்கள் யாவும் தம் குறிக்கோளை அடையும்வரை அக்னியைப்போல் தகிப்பதையும், அடைந்த பிறகு தாம் முன்வைத்த மதிப்பீடுகளுக்கு எதிராகச் செயல்படுவதையும் நாம் காணலாம். ரஷ்ய-சீன-கூபப் புரட்சிகளிலிருந்து நமது திராவிட இயக்கம்வரை நடந்த கதைதான். இன்னும் பின்னோக்கினால், அகிம்சையை போதித்த பௌத்தம், இலங்கையில் எந்திரத் துப்பாக்கிகளால் மனிதர்களைக் கொன்று குவித்த வரலாறு தெரிகிறது.

1940-ல், தனிநபர் சத்யாக்கிரகம் துவங்கிய காலகட்டத்தில், சின்னூர் என்ற சிற்றூரில் கதை துவங்குகிறது, அமர பண்டிதர் கதை. சத்யாகிரகம் செய்து கைதாகிறார் ஷராப் நாராயணசாமி. அதேசமயம், சின்னூர் ராஜவிசுவாசிகளில் முதன்மையானவர் ராவ்சாகிப் சுந்தரமூர்த்தி முதலியார். கள்ளுக்கடை கான்ட்ராக்ட், லேவாதேவி, நிலம், நெல் மெஷின்கள், சினிமா தியேட்டர், இத்தியாதிகளுக்கு அதிபதி. சத்யாகிரகத்தை வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் கலைந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, ராவ்சாகிபின் காரியஸ்தன் மாதவராவ், நாராயணசாமியின் சாதியைக் குறித்து மட்டமாகப் பேச, ஒரு குள்ளன் அவர் மீது சாணியை எறிந்துவிடுகிறான். குள்ளன்தான் கதையின் நாயகன். ஊரின் நாவிதன். அவன் எறிந்த சாணி, ராவின் மூக்கிலும், அதனடியில் வியாதி பிடித்த கம்பளிப்பூச்சிபோல் ஒண்டிக்கொண்டிருந்த மீசை மேலும் அப்பிக்கொண்டுவிடுகிறது. குள்ளனும் கைது செய்யப்பட்டு சிறை செல்கிறான். காட்சி மாறுகிறது.

நாராயணசாமி, வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். வரவேற்பதற்கு அங்கே குள்ளனைத் தவிர வேறு யாரும் இல்லை. பரதேசியைப்போல் புளியமரத்தடியில் கதர்த்துண்டை விரித்துப் போட்டுத் தூங்கிக்கொண்டிருந்த நாராயணசாமியை, குள்ளன் யாரிடமோ கடன் வாங்கி ‘சண்முகா கேப்’புக்கு அழைத்துப்போகிறான். சுதந்தரம் வாங்கியதும் தேசியக் கொடி ஏற்றுபவர் தாசில்தார்; சலாம் போடுபவர் சுந்தரமூர்த்தி முதலியார்; விழுந்து கும்பிடுவது மாதவராவ்.

குள்ளனுக்குள் ஓர் எண்ணம். நமக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? ‘சும்மா பொழுது விடிஞ்சா பொழுது போனா, முடிவெட்டி முடிவெட்டி ஒருநாளைக்கு மசிர்க்குப்பை மாதிரி குப்பைமேட்டுலே ஒதுங்கறதுதானா மனுஷ ஜன்மத்தின் வாழ்க்கை?’ எனவே, இந்த உலகத்தில் தான் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளத்தை நிறுவி விட்டுப்போக நினைக்கிறான். தன்னால் முடியாததை தன் சந்ததியால் சாதிக்கலாம் என்று பார்த்தால், குழந்தை பிறக்கவில்லை. இரண்டாம் திருமணமும் செய்துகொள்கிறான். அப்படியும் இல்லை.

நாயனம் வாசிப்பதில் ஆர்வமுள்ள தன் தம்பி தங்கராசுவையாவது பெரிய கலைஞனாக ஆக்க வேண்டும் என்று முயற்சிக்கிறான். ஆனால், அவனோ படு சோம்பேறி. பழகு என்றால் மூச்சுப் பிடிக்க முடியவில்லை என்கிறான். தவில் அடி என்றால் விரல் நோவுகிறது. ஒத்து ஊதுவதுதான் சிரமம் இல்லாத வேலை. வானொலியில் அவனை நிலைய வித்வானாக ஆக்க முயற்சிக்கிறான் குள்ளன். அங்கே போய் கக்கூஸில் ஒளிந்துகொள்கிறான் தங்கராசு. திரும்பி வீட்டுக்கு வரும்போது ‘‘கலையைக் காசுக்கு விற்க முடியாது” என்று வியாக்யானம் பேசுகிறான். ஒருநாள், இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கும் டாக்டர் வீட்டு வாசலில் ஒரு சத்தம் கேட்கிறது.

‘‘ஒரு தீபாவளிக் காலை… ஆறரை ஏழு மணி சுமாருக்கு ரேடியோவை திருப்பினேன். அப்போது திடீரென்று ஒரு விசித்திர சப்தம் கேட்டது. என் ஆயுளில் அந்த மாதிரியான கர்ணகொடூரமான சப்தத்தை நான் கேட்டதேயில்லை. ஒரு விநாடி ரேடியோவுக்குதான் கெடுதல் நேர்ந்துவிட்டதோ என்று நினைத்தேன். மறு விநாடி, செவ்வாய் கிரகத்திலிருந்து யாராவது ராட்சசர்கள் படையெடுத்துவிட்டார்களோ என்றுகூட நினைத்தேன்! முதல் நாள் ராத்திரி எச்.ஜி.வெல்ஸ் படித்ததன் விளைவு. பிறகுதான், சப்தம் வீட்டு ரேழியிலிருந்து வருகிறது என்று புரிந்தது. கம்பிக் கதவின் பின்னால் ஒரு ஆள் நின்றுகொண்டு, நான் கேட்ட விசித்திர சப்தத்தை உண்டாக்கிக்கொண்டிருந்தான். ஒரு நாயனத்தை வாயில் வைத்துக்கொண்டு, ஒரே சமயத்தில் அடிவயிற்றிலிருந்தும் தொண்டையிலிருந்தும் முக்கிக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் முக்குவதை நிறுத்தி, ‘குட்மார்னிங் சார்!’ என்றான் தங்கராசு! மீண்டும் தன் ஹடயோக சங்கீதத்தை ஆரம்பித்தான்!”

(மொத்த தொகுப்புமே இப்படித்தான். எனக்குத் தெரிந்து தமிழில் இந்த அளவுக்குப் பகடியை யாரும் எழுதியதில்லை என்றே தோன்றுகிறது). இப்படியெல்லாம் போராடும் குள்ளன், கடைசியில் ஊரெல்லாம் உண்டியல் குலுக்கி ஒரு சிறிய கோவிலைக் கட்டிவிட்டு, வியாதி வந்து செத்துப்போகிறான். ஊர் மக்களால், அது குள்ளன் கோவில் என்று அழைக்கப்படுகிறது!

இன்னொரு கதை, முடிவற்ற பாதை. சினிமா ரசிகர்கள் பதேர் பாஞ்சாலியை எந்த இடத்தில் வைக்கிறார்களோ அப்படி வைக்கப்பட வேண்டிய ஒரு கதை. கதிர்வேலு ஒரு தபால்காரர். மனைவி காச நோயாளி. மூத்த பெண், நாலாவது பிள்ளைப்பேற்றுக்காக வீட்டுக்கு வந்திருக்கிறாள். கடைக்குட்டிப் பெண், இந்த வருஷமோ அடுத்த வருஷமோ பெரியவளாகிவிடுவாள். புத்திசாலியான பெரியவன், கள்ளச் சாராயம் காய்ச்சி மாட்டிக்கொண்டு, ஊரை விட்டு எங்கோ ஓடிவிட்டான். ரெண்டாவது பிள்ளையால் பயனில்லை. மூணாவது பிள்ளை கெட்டிக்காரன். நல்ல குணவானும்கூட. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போது காலரா வந்து வாரிக்கொண்டு போய்விட்டது. இவ்வளவு பிரச்னையிலும் கதிர்வேலு சந்தோஷமாக சிரித்துக்கொண்டே இருப்பார். காரணம், அவர் மனத்தில் எப்போதும் கற்பனைக் குதிரை ஓடிக்கொண்டே இருக்கும். தொடர்கதைபோல் ஒரே கதை வாரக்கணக்கில் அவர் மனத்தில் ஓடும். ‘‘எத்தனை காட்டுமிராண்டிகளை விரட்டியடித்து எத்தனை அழகிய இளங்குமரிகளைக் காப்பாற்றியிருக்கிறார். அதையெல்லாம் எழுதப் புகுந்தால், ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ ஆசிரியர்கூடத் தன் கற்பனை வறட்சியை நினைத்துத் தற்கொலை செய்துகொண்டுவிடுவார்!”

இந்த நிலையில், வடுகப்பட்டியில் வசிக்கும் எல்லம்மா என்ற கிழவிக்கு 500 ரூபாய் மணியார்டர் வருகிறது. அனுப்பியது, வட இந்தியாவில் ஏதோ சுரங்கத் தொழிலுக்குப் போன அவளுடைய மகன் குருசாமி. போனதிலிருந்து கிழவியை வந்து பார்க்காதவன். மாதாமாதம் அஞ்சோ பத்தோ அனுப்புவதோடு சரி. ஆனால், இவ்வளவு பெரிய தொகை அனுப்பியதில்லை. (கதை எழுதப்பட்டது அறுபதுகளில்). தனக்கு இப்படி யாராவது 500 ரூபாய் அனுப்பிவைத்தால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும் என்று நினைக்கிறார் கதிர்வேலு. இதற்கிடையில், நடுக்காட்டில் நரமாமிச பட்சிணிகளிடையே மாட்டிக்கொண்ட அவருடைய கதாநாயகியை வேறு அவர் மீட்டுக்கொண்டு வர வேண்டும். அதற்குள் எல்லம்மா வீடு வந்துவிடுகிறது. எல்லம்மா செத்து மூன்று மாதம் ஆகிறது என்கிறார் ஊர்க்காரர் ஒருவர். எவ்வளவு தொகை என்று அவருக்குத் தெரியாது. அஞ்சோ பத்தோ இருக்கும் என்பது அவர் நினைப்பு. சாவு செலவை நாங்கள்தான் பார்த்தோம்; காதும் காதும் வைத்தாற்போல் மணியார்டர் பணத்தை நாம் ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்கிறார் அவர். அதை மறுத்துவிடுகிறார் கதிர்வேலு.

சின்னூர், வடுகப்பட்டியிலிருந்து ரெண்டு கல் தொலைவில் இருக்கிறது. முகத்தில் வழிந்த வேர்வையைத் துடைத்தபடி, பூவரச மர நிழலில் அமர்கிறார். கண்ணுக்கெட்டின தூரம் வரை ஒரு ஈ காக்காய், மனுஷன் மாடு ஒண்ணையும் காணவில்லை. கூசும் வெய்யிலில், சின்னூர் ரஸ்தாதான் நீண்டு நெளிந்து போய்க்கொண்டிருக்கிறது.

மணியார்டர் கூப்பனை பார்க்கிறார். குருசாமி இல்லை. யாரோ சரவணன். தொழிற்சாலை விபத்தில் குருசாமி செத்துவிட்டான். சாகும் தறுவாயில் தன் சேமிப்புப் பணத்தை தன் அம்மாவுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறான். ஆக, அனுப்பிய ஆளும் உயிரோடு இல்லை; வாங்க வேண்டிய ஆளும் உயிரோடு இல்லை. ஒரே ஒரு கையெழுத்தைப் போட்டுவிட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டால், யாருக்கும் தெரியப்போவதில்லை. நினைக்கும்போதே கதிர்வேலுவுக்குக் கைகால் நடுங்குகிறது. ‘‘விலாசதாரர் காலமாகிவிட்டார்” என்று எழுதிவிட்டு, அந்தக் கடும் வெய்யிலில் சின்னூர் நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்.

படித்துவிட்டுக் கண் கலங்கினேன். எப்பேர்ப்பட்ட தர்மம்! எப்பேர்ப்பட்ட அறவுணர்வு! மதிப்பீடுகள் எத்தனைதான் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் இன்னமும் கதிர்வேலு போன்ற மனிதர்கள் இருப்பதால்தான், உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது. சார்வாகனை நேரில் சந்தித்து, இன்னும் எழுதுங்கள் எங்கள் ஆசானே என்று அவர் கை பிடித்துச் சொல்லத் தோன்றுகிறது!


திரு.வி.க.

First Published : 12 April 2015 10:00 AM IST
http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/04/12/திரு.வி.க./article2756034.ece

மகால வாசிப்பு பற்றிய என் தீராத துக்கம் என்னவென்றால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சுயசரித நூல்களை மொழிபெயர்த்துப் படிக்கிறோம். ஆனால், அதையெல்லாம்விட எத்தனையோ மடங்கு சிறப்பு வாய்ந்த ஒரு தமிழ் நூல் பற்றி யாருக்குமே தெரியாதிருக்கிறோம்.

120 ஆண்டுகளுக்கு முந்தைய சென்னை நகரம், தமிழ் வாழ்க்கை, இந்திய அரசியல் பற்றிய அரிய ஆவணமான ஒரு சுயசரிதையே அது.  திரு.வி.க. (பிறப்பு: 1883, இறப்பு: 1953) எழுதியது. 1900-ல் இருந்து, இந்திய விடுதலைப் போராட்டம் அதன் உக்கிரத்தை அடையத் துவங்கியிருந்தது. அந்தக்  காலகட்டத்தில் மகாத்மா காந்தி, திலகர், அன்னி பெசன்ட், பாரதி, வ.வே.சு.ஐயர், மறைமலை அடிகள், ராஜாஜி, பெரியார், வ.உ.சி., சத்தியமூர்த்தி போன்றவர்களோடு நெருங்கிப் பழகி, சுதந்தரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற செயல்வீரர்களில் ஒருவராக விளங்கியவரின் வாழ்க்கைக் குறிப்புகள், எவ்வளவு சுவாரசியமாகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.



மகாத்மாவும், திலகரும் தமிழ்நாடு வரும்போது, அவர்களது சொற்பொழிவுகளைத் தமிழில் மொழிபெயர்ப்பவராக திரு.வி.க. இருந்திருக்கிறார்.

அது பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவம் –
காந்தியின் பேச்சை முதல்முறை மொழிபெயர்த்தது 1921-ல். அப்போதெல்லாம் திரு.வி.க.வைப் பார்க்கும்போது ‘வாரும், மொழிபெயர்ப்பாளரே’ என்றுதான் சிரித்துக்கொண்டே அழைப்பாராம் மகாத்மா. பிறகு, ஆறு ஆண்டுகள் கழித்து மகாத்மாவைச் சந்திக்கிறார் திரு.வி.க.. அப்போது, ‘சென்னையில் முதன்முதலில் என் பிரசங்கங்களை மொழிபெயர்த்தது நீங்கள்தானே? அப்போது ஒரு வாக்கியத்தை நீங்கள் விட்டுவிட்டீர்கள். நான் திருத்தினேன். நினைவிருக்கிறதா?’ என்று கேட்டாராம் காந்திஜி. அந்த ஆறு ஆண்டுகளில் மகாத்மா சந்தித்த மனிதர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். இருந்தாலும், அவர் திரு.வி.க.வை நினைவில் வைத்திருந்தார் என்று மகாத்மாவின் ஞாபகசக்தி குறித்து சிலாகித்து எழுதுகிறார் கல்கி.
பத்திரிகைத் துறையிலும் திரு.வி.க. பல புரட்சிகரமான மாற்றங்களைச் செய்தார். முக்கியமாக, துளியும் சமரசமின்றி அதிகாரத்தை எதிர்த்தார். 1917-ல் அன்னி பெசன்ட், அருண்டேல், வாடியா மூவரையும் கைது செய்தது அரசு. அந்த நிகழ்ச்சிதான், திரு.வி.க.வை நேரடி அரசியலில் இறங்கச் செய்தது. தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய மேடைப் பேச்சாளரான திரு.வி.க.வின் அரசியல் சொற்பொழிவு, அன்னி பெசன்ட் கைதான அன்று துவங்கியது. அப்போதே, தேசபக்தன் நாளிதழின் ஆசிரியராகவும் ஆனார். அதில் அவர் எழுதிய தலையங்கக் கட்டுரைகள், நாம் அனைவரும் – குறிப்பாக பத்திரிகையாளர்கள் – அவசியம் படிக்க வேண்டியவை.

பின்னர் தேசபக்தனில் இருந்து விலகி, 1920-ல் சாது அச்சகத்தை நிறுவி, நவசக்தி வார இதழைத் துவக்கி, 1940 வரை திரு.வி.க. நடத்தினார். இந்தக் காலத்தில், ஆங்கிலேய நிர்வாகத்திடம் இருந்தும் போலீஸிடம் இருந்தும் எக்கச்சக்கமான மிரட்டல்களைச் சந்தித்தார்.

பத்திரிகை மட்டுமல்லாமல், தொழிலாளர் சங்கம் உருவாவதற்கும் காரணமாக இருந்தார். இந்தியாவிலேயே, சென்னையில்தான் 1918-ல் முதல் தொழிற்சங்கம் திரு.வி.க.வின் முயற்சியால் உருவானது. அதன்பிறகு, 1921-ல் சென்னை நெசவுத் தொழிலாளர் கதவடைப்பும் வேலை நிறுத்தமும் ஆறு மாத காலம் தொடர்ந்தது. அந்தப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தவர் திரு.வி.க..

அப்போது கவர்னராக இருந்த வில்லிங்டன் பிரபு, தொழிலாளர்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர். அச்சமயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல தொழிலாளர்கள் பலியாயினர். அந்த ஆறு மாத காலமும், தன் இல்லம் இருந்த ராயப்பேட்டையில் இருந்து வெண் குதிரை பூட்டிய வாடகை வண்டியில், தினமும் ஒவ்வொரு வழியாக அலுவலகம் சென்று வந்திருக்கிறார் திரு.வி.க.. அந்த அளவுக்கு அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது.

‘வெண்குதிரையின் மணியொலி கேட்கும் வரை ராயப்பேட்டை கவலையில் கிடக்கும். தெருத் திண்ணைகளில் கூட்டம் இருக்கும். வீடு விழித்திருக்கும். என்னை ஈன்ற அருமை அன்னையார் தெரு வாயிற்படியிலே முகவாய்க் கட்டையிலே கையை வைத்து ஏக்கத்துடன் என் வருகையை நோக்கிய வண்ணம் அமர்ந்திருக்கும் காட்சி என் உள்ளத்தை உருக்கும்’.

சமயங்களில், வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும்போது, வழியில் உள்ள மக்களே அவருக்குப் பாதுகாப்பாக வந்திருக்கிறார்கள். வேலை நிறுத்தப் போராட்டமும், அதிகார வர்க்கத்தின் கெடுபிடிகளும் மும்முரமாக இருந்த ஒருநாள் - 1921 ஜூலை 5-ம் தேதி - மாலை ஆறு மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு வருமாறு திரு.வி.க.வுக்கு அழைப்பு வருகிறது. செல்கிறார். அவருக்கு முன்னரே தோழர்கள் சக்கரைச் செட்டியார், இ.எல்.ஐயர், ஜலீல்கான், அப்துல் ஹகீம் நால்வரும் அங்கே சென்றிருந்தனர்.

‘சென்னையில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்கு நீங்கள் ஐந்து பேரும்தான் காரணம்; உங்களை நாடு கடத்தப்போகிறேன்’ என்கிறார் கவர்னர். பதிலுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல, திரு.வி.க. ‘எல்லார்க்கும் நியாயத் தீர்ப்பு நாள் இருக்கிறது’ என்று சொல்ல, அது வில்லிங்டனை உறுத்திவிடுகிறது. அதனால், ‘தொடர்ந்து இப்படியே செய்தால் நாடு கடத்தப்படுவீர்கள்’ என்ற மிரட்டலோடு அனுப்பிவிடுகிறார்.

திரு.வி.க.வின் திருமணம் 1912-ல் நடைபெறுகிறது. ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திலும், ஒரு பெண் குழந்தை பிறந்து ஒரு ஆண்டிலும் இறக்கின்றன. மனைவி கமலம், எலும்புருக்கி நோயால் 1918-ல் மரணமடைகிறார். அந்த ஆறு ஆண்டு மண வாழ்க்கை பற்றித் திரு.வி.க. எழுதுவது காவிய நயம் மிகுந்தது. குறிப்பாக, திருவொற்றியூர் கடற்கரையில் அவரும் கமலமும் கழித்த மாலைப் பொழுதுகள். அதற்குப் பிறகு அவர் மணம் செய்துகொள்ளவில்லை.

அதற்குத் திரு.வி.க. சொல்லும் காரணம் –

‘கமலத்தை நினைத்த மனதால் இன்னொரு பெண்ணை நினைக்க முடியாது’. ஆனால், மறுமணம் பற்றி அவரை நிர்ப்பந்திப்பவர்களிடம், மறுமண உரிமை இருபாலருக்கும் இல்லாதது நியாயமா என்று கேட்டுத் திருப்பி அனுப்பிவிடுவாராம்.

தன் இல்வாழ்க்கையைப் பற்றி திரு.வி.க. இவ்வாறு சொல்கிறார் –


‘யான் திருக்குறள் படித்தவன். என்பால் பிடிவாதம், வன்மம், முன்கோபம் முதலிய தீக்குணங்கள் துதைந்திருந்தன. வெறும் திருக்குறள் படிப்பு, தீக்குணங்களை அறவே களையவில்லை. கமலாம்பிகையின் சேர்க்கை, அக்குணங்களைப் படிப்படியே ஒடுக்கியது. அவள் திருக்குறள் படித்தவள் அல்லள். ஆனால், அவளே எனக்குத் திருக்குறளாக விளங்கினாள். யான் பின்னாளில் எழுதிய திருக்குறள் விரிவுரைக்கு, இல்வாழ்க்கையின் அனுபவம் பெருந்துணையாய் நின்றது’.

தன் தமிழாசிரியரான யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையிடம் புராணங்களையும் யாப்பிலக்கணத்தையும்; மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் திருவருட்பயன்சிவப்பிரகாசம்,சிவஞானபோதம் போன்ற நூல்களையும், வடமொழியையும் கற்றார் திரு.வி.க.. அதேபோல், பாம்பன் சுவாமிகளிடம் உபநிஷத்துக்களும், மருவூர் கணேச சாஸ்திரிகளிடம் சிவகீதையும், நீலகண்ட பாடியமும், அப்துல் கரீமிடம் திருக்குர்ஆனும், ஜஸ்டிஸ் சர்.டி.சதாசிவராவிடம் ஆங்கிலமும் கற்றார். மற்றபடி அவர் மெட்ரிகுலேஷன் பரீட்சையே எழுதவில்லை.

காரணம், தேர்வு நாள் அன்று நீதிமன்றத்தில் அவர் தன் ஆசிரியருக்காக சாட்சி சொல்லவேண்டி இருந்தது. என்ன வழக்கு? கதிரைவேற்பிள்ளை மீது ராமலிங்க சுவாமிகள் சார்பில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு! இப்படி, தன் ஆசிரியருக்காகப் பள்ளிப் படிப்பையே தியாகம் செய்தார் திரு.வி.க..

‘திரு.வி.க.வை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? இந்தியாவின் முதல் தொழிற் சங்கத்தை அமைத்தவர் என்றால் நமக்கு என்ன? இன்றைய வாழ்க்கையில் அவருடைய தேவை என்ன?’ என்று நமக்குக் கேள்விகள் எழலாம்.

அவரை நாம் வாசிக்க வேண்டியதன் காரணம், அவர் தன் வாழ்க்கையையே நமக்கான செய்தியாக மாற்றினார். அவர் எழுதிய சுயசரிதையின் ஒவ்வொரு பக்கமும் அதற்குச் சான்றாக விளங்குகிறது. உறவினர் தனக்குப் பெண் பார்க்கும்போதுகூட, பெண்ணின் அழகு பற்றியோ செல்வ நிலை பற்றியோ அவர் கவலைப்படவில்லை. ‘ஏழ்மையைக் கண்டு அஞ்சாத பெண்ணாக இருக்க வேண்டும்’ என்று தம் உறவினரிடம் வலியுறுத்துகிறார். எந்தப் பெண்ணையும் அவர் ஒருபோதும் காமக் கண் கொண்டு நோக்கியதில்லை. ஏன் என்பதற்கு அவரே காரணமும் சொல்கிறார். ‘ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும், தன் இருதயத்தில் அவளோடே விபசாரம் செய்வதாயிற்று’ - இந்த பைபிள் வசனமே எப்போதும் அவர் தன் நண்பர்களிடம் சொல்லி வந்த பதிலாக இருந்தது.

வாழ்வின் அறம் பற்றி ஒரு இடத்தில் இப்படிச் சொல்கிறார் –

‘எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே உயர்ந்து எவ்வுயிரும் பொது எனும் தெளிவு தோன்றித் தம் உயிரே பிற உயிரும் என்னும் உணர்வு பொங்கித் தொண்டு செய்யும் அந்தண்மை அமைகிறதோ அவர் வாழ்க்கை வெற்றி அடைகிறது. மற்றவர் வாழ்க்கை தோல்வி அடைகிறது. மற்றவர் என்றால் பதவியையும் பொருளையும் மேலாக எண்ணும் மனிதர்’. இதை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பேர் சொல்ல நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் அது வெறும் சொல்; திரு.வி.க.தான் சொன்னதை வாழ்ந்து காட்டினார்.

திரு.வி.க.வை நாம் வாசிக்க வேண்டியதன் மற்றொரு காரணம், தமிழ். கவிதையில் பாரதி செய்ததை உரைநடையில் திரு.வி.க. செய்தார் என்று கல்கி கூறியது மிகவும் சரி. அந்நாளில், ஆங்கில மோகம் கடுமையாக இருந்தது. சட்டசபையில்கூட ஆங்கிலத்தில்தான் பேசினார்கள். அரசியலை தமிழில் எழுதவே முடியாது என்று கருதினார்கள். அப்போதுதான் வெஸ்லி கலாசாலைத் தமிழாசிரியர் பதவியைத் துறந்து வெளியே வந்து, தேசபக்தன் நாளிதழின் ஆசிரியர் ஆனார் திரு.வி.க.. அதிலிருந்து அவர் ஆற்றிய தமிழ்ப் பணி, ஒரு சிறிய கட்டுரையில் எழுதக் கூடியதன்று. முக்கியமாக, சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்களிடம் இருந்து அறிஞர்கள் வரை வாசிக்கக்கூடியதாக தமிழை மாற்றிய பெருமை திரு.வி.க.வையே சாரும்.

மூன்றாவது காரணம், வரலாறு. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை ஒரு நாவலாசிரியரைப்போல் வர்ணிக்கிறார் திரு.வி.க.. அவர் குறிப்பிடும் ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு பெரும் வரலாறு இருக்கிறது.

உதாரணமாக, சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் கச்சேரிகளை ரசித்தது பற்றி எழுதுகிறார். இந்த சரப சாஸ்திரி யார் என்று பார்த்தால், அது புல்லாங்குழலின் வரலாற்றுக்கு இட்டுச் செல்கிறது. இரண்டு வயதிலேயே கண் பார்வையை இழந்துவிட்ட சரப சாஸ்திரியின் (1872–1904) காலத்துக்கு முன்னால், புல்லாங்குழல் ஒரு பக்கவாத்தியமாகவே இருந்தது. 32 வருடங்களே வாழ்ந்த சரப சாஸ்திரிதான், புல்லாங்குழலை முழுமையான கச்சேரி வாத்தியமாக மாற்றியவர். இவரைப் பற்றி பாரதி ‘மஹான்’ என்று குறிப்பிடுகிறார்.

சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் வாசிப்பைக் கேட்டுவிட்டுத்தான், வயலின் கலைஞராக வளர்ந்து வந்த பல்லடம் சஞ்சீவ ராவ், வயலினை விட்டுவிட்டு புல்லாங்குழல் கற்றுக்கொண்டார். சரப சாஸ்திரி வசித்துவந்த கும்பகோணம் சென்று ஏழு ஆண்டுகள் உஞ்சவிருத்தி செய்தே அவரிடமிருந்து புல்லாங்குழல் கற்றார். மாலிக்கு முன், மாலி அளவுக்குப் பிரபலமாக இருந்தவர் இந்த சஞ்சீவ ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

முப்பதுகளின் இறுதியில், அரசியல் ஆபாசமாகவும் குப்பையாகவும் ஆகிவிட்டது என்று சொல்லி, நேரடி அரசியலில் இருந்து விலகிய திரு.வி.க., தன் இறுதிநாள் வரை மற்றவர்களுக்காகவே வாழ்ந்து, தமிழகத்தின் மகாத்மா என்று அழைக்கப்பட்டார். அவரது சுயசரிதையையும் மற்ற நூல்களையும் படிப்பது நம்மை இன்னும் மேம்பட்ட மனிதனாக உருமாற்றும்.
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி –
இயற்கை வரவேற்பு
அந்நாளில் இராயப்பேட்டையினின்றும் மயிலாப்பூர் செல்வோர் வெயிலின் தாக்குதல் இன்றியே போய்ச் சேர்தல் கூடும். செல்வோர்க்கு வழி நெடுக வரவேற்பு நிகழும். எத்தகைய வரவேற்பு? இயற்கை வரவேற்பு.

இயற்கை அன்னை பலபட பசுமைக்கோலம் பூண்டு வரவேற்பு அளித்த வண்ணம் இருப்பாள். வழிப்போக்கரை கொடிகளிற் குலவும் வெற்றிலைத் தாள்கள் வாழ்த்தும், வாழைகள் பழங்களைத் தாங்கிக் கைகளை நீட்டி அழைக்கும், மாமரங்கள் காய்கனிகளை ஏந்தி இறைஞ்சும்.

தென்னைகள் காய்களைச் சுமந்து, ‘இளநீர் பருக வாரும் வாரும்’ என்று தலையாட்டும், கரும்புகள் ‘அருந்துக அருந்துக’ என்று சாறு பொழியும், ஆலும் அரசும் வேம்பும் ஆங்காங்கே குடை பிடித்து நிற்கும். செஞ்சாலிக் கதிர்கள் (நெல் வகை) சாமரை இரட்டும். பொய்கைப் பூக்கள் கண்ணுக்கு விருந்தாகும். ஏற்றமும் மூங்கிலும் வண்டும் பறவையும் செவிக்கு அமுதம் ஊட்டும். இவ்வரவேற்புகள் இப்பொழுது உண்டோ?

தாவரப் பெருக்கம்
அட்லன் தோட்டம் என்ற சிறுவனம் காட்டைக் கடுக்கும். அவ்வனம், இராயப்பேட்டைக்குப் பொதுவுடைமையாகப் பயன்பட்டது. அதில் அத்தி, விளா, மா, நெல்லி, நாகை, கிச்சிலி, இலந்தை, இலுப்பை, புளியம், புரசை, புன்கு (புங்கம்), முண் (தாழை), முருக்கு (முள்முருங்கை), கொன்றை, மகிழம், அசோகு, புன்னை, நுணா, ஆல், அரசு, வேம்பு, பனை, மூங்கில் முதலிய மரங்கள் விரிந்து பரந்து அடர்ந்து ஓங்கி வெய்யோனுடன் பொருதும்; பெருங்களா (கரம்பை), காரை, நொச்சி, ஆமணக்கு, எருக்கு, வட்டத்தாரை முதலிய செடிகள் பரவி மரங்களை நோக்கும்; சிறுகளா, சங்கம், கள்ளி, கண்ணி (குண்டுமணி), மருட்டி, படர்காரை முதலிய தூறுகள் செடிகளைப் பார்த்து நகைக்கும்; தாளி, கோவை, பாலை, பிரண்டை முதலியன மரங்களையும் செடிகளையும் தூறுகளையும் பிணித்துப் பின்னிப் படர்ந்து இறுமாந்து கிடக்கும். முண்டகம் (நீர்முள்ளி), கண்டகம், முள்ளி, முளரி, ஆடாதோடை, ஆடுதின்னாப்பாலை, செருப்படை, தூதுவளை, தும்பை, துழாய், கண்டை, நாயுருவி, நாக்கடு, ஊமத்தை, கற்றாழை, கொடி, வேலி கண்டங்கத்திரி, அவுரி முதலிய மூலிகைகள் மருத்துவஞ் செய்யும்.
பறவைகளும் உயிரினங்களும்

ஆங்காங்கே குளம், கேணி, ஓடை முதலிய நீர்நிலைகள் தண்மை வழங்கும்; அவைகளின் உள்ளிலும் புறத்திலும் கொட்டி, ஆம்பல், தாமரை, நீலோற்பவம் முதலிய பூக்களும்; அறுகு, தருப்பை, நாணல் முதலிய புல்லினங்களும்; பொன்னாங்கண்ணி, கையாந்தகரை, வள்ளை, வல்லாரை முதலிய கீரை வகைகளும் பொலிந்து இன்பமூட்டும்; அங்கும் இங்கும் பழங்கள் தாமே கனிந்து கனிந்து வீழும்; பாம்பு, கீரி, உடும்பு, முயல், காட்டுப்பூனை, காட்டுக்கோழி முதலியன இரிந்தோடும்; கொக்கு, உள்ளான், நாரை, கள்ளிக்காக்கை, கிளி, பூவை (மைனா), சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, வர்ணக்குருவி முதலிய பறவைகள் பறந்தும் இருந்தும் பாடியும் மகிழும்; கால்நடைகள் உலவும், மேயும், நீர் அருந்தும், படுக்கும், உறங்கும்; மக்கள் விளையாடலும் நிகழும். அட்லன் தோட்டம் ஊருக்கு விறகு, பழம், கீரை, எருமுட்டை (வரட்டி) முதலியன தந்து உதவும். அதை இராயப்பேட்டை வனதேவதை என்று கூறலாம்.