Monday 19 August 2019

பார்க்கிற மழையில் கலிஸியாவின் கதை - காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்

பார்க்கிற மழையில் கலிஸியாவின் கதை -
காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்
*****தமிழில் - தேவதாஸ்********
கல்குதிரை சிற்றிதழ்

காமிராக்காரர்கள் மற்றும் பத்திரிக்கை நபர்கள் சூழ்ந்திருக்க வெகுநாள் கழித்து மாட்ரிட் நகரத்தில் என்னைப் பார்க்க நேரிட்ட போது கவிஞனும் ஓவியனும் நாவலாசிரியனுமான ஹெக்டர் ரொஜஸ் ஹெராஸோ கருணை நிரம்பி நடுக்கம் கண்டு போயிருப்பான், "நாளாக ஆக உனக்கு நீ நல்லவனாகிவிட வேண்டும் என்பதை ஞாபகம் கொள்" என்று அருகே வந்து கிசுகிசுத்தான். நல்லதொரு பரிசை வழங்கிக்கொண்டு வருஷக்கணக்காகிறது. ஆகவே கனவுகளில் ஒன்றான கலிஸியாவுக்குப் போய்வருவதை வழங்கிக்கொண்டுவிடத் தீர்மானித்தேன். எனக்கு.
ருசித்துச் சாப்பிடுகிற யாரும் கலிஸியாவின் பதார்த்தங்களை நினைக்காமல் போக முடியாது. "வீட்டின் நினைவு ஏக்கமானது சாப்பாட்டில் துவங்குகிறது" என்றார் சே குவேரா. நினைவு கலிஸியாவுக்குப் போகுமுன்பே வந்துவிட்டது. ஆவிகள் பற்றி முதன்முறையாக அறிய நேரிட்ட அரக்காடக்காவின் பெரிய வீட்டில் பாட்டி சந்தோஷமாக ரொட்டி செய்து விற்று வந்தாள். ஆற்றுவெள்ளம் பெருகி வீட்டை நாசமாக்கி அடுப்பை சரிசெய்ய யாரும் முன்வராத வரையில் வியாபாரம் நடந்தது. தொழில் பெருகிவிட்டதால் ரொட்டி செய்ய முடியாமல் போன பின்பும் பன்றி இறைச்சியில் பதார்த்தம் செய்தாள். சுவையாக இருந்தாலும் குழந்தைகளாகிய எங்களுக்குப் பிடிக்காமல் போனது. பெரியவர்களுக்குப் பிடித்தவற்றைக் குழந்தைகள் விரும்புவதில்லை. ஆனால் பதார்த்தத்தின் முதன்முதலான ருசி நாக்கில் தங்கிவிடுகிற ஒன்று. பிற்பாடு அதை ருசித்ததே இல்லை. நாற்பது வருஷங்கள் கழித்து பார்ஸிலோனாவில் அதே ருசியுடன் குழந்தைப் பருவத்தின் குதூகலங்களும் நிச்சயமின்மைகளும் தனிமைவாசம் கொண்ட உணர்வும் வந்து சேர்கின்றன.
அந்த ருசியுடன் ஆதியந்தத்தை ஆராயும் லயிப்பு பெருகி அந்தப்போக்கில் சென்று மே மாதத்துக்கு கீரைவகைகளிலும் சமுத்திரத்திலும் மழையிலும் கலிஸிய நாட்டுப்புறத்தில் வீசுகிற நித்தியக் காற்றிலும் ஈடுபட்டேன். அறிவார்ந்த விளக்கங்கள் எடுபடாமல் போய் அமானுஷ்ய உலகத்தில் எதுவும் சாத்தியமாகக் கூடியதாக பாட்டி வாழ்வதை அப்போது புரிந்து கொண்டேன். உத்தேசமாக வரப் போகிற பயணிகளுக்காக அவள் பதார்த்தத்தைத் தயாரித்துக் கொண்டு நாள் பூராவும் பாடிக் கொண்டிருப்பதையும் புரிந்துகொண்டேன். "சாப்பிட வரும்போது அவர்கள் எதைக் கேட்பார்களோ. மீன், ஆட்டுக்கறிப் பதார்த்தங்கள் செய்ய வேண்டுமே" என்று ரயிலின் கூ சப்தம் கேட்ட போதெல்லாம் சொல்லிக் கொள்வாள். வயது போய்ப் பார்வை மங்கி எதார்த்தம் பற்றிய உணர்வு விலகி நினைவுகளை தற்போதைய நிகழ்வுகளுடன் கலந்துவிட்டு குழந்தைப் பிராயத்தில் பரிச்சயமாகி மரணமடைந்தவர்களுடன் உரையாடியவாறே பாட்டி போய்ச் சேர்ந்தாள். போன வாரம் கலிஸிய நண்பன் ஒருத்தனுடன் ஸான்டியாகோ டி கம்போஸ்டெலாவில் இதைச் சொல்லப்போக "அப்படியானால் பாட்டி கலிஸியக்காரியாகத்தான் இருக்க வேண்டும், சந்தேகமில்லை. பித்துப் பிடித்தவள்" என்றான். நிஜத்தில் எனக்குத் தெரிந்திருந்த கலிஸியக்காரர்களும் சந்தித்துப் பரிச்சயப்படுத்திக் கொள்ள முடியாமல் போனவர்களும் மீனராசியில் பிறந்தவர்களே.


சுற்றுலாப் பயணியாக இருப்பதிலுள்ள அவமானம் எங்கிருந்து வருகிறது தெரியவில்லை. சதா அலைந்து கொண்டிருக்கும் நண்பர்களும் சுற்றுலாப் பயணிகளுடன் கலந்து விடுவதை விரும்பாததாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். கலக்காமல் போனாலும் தாங்களும் சுற்றுலாப் பயணிகளே என்பதை உணராத நண்பர்கள். போதிய அளவு அறிந்து கொள்வதற்கு நேரமில்லாமல் ஒரிடத்துக்குப் போகும்போது வெட்கத்துக்கு இடமின்றி என் பாத்திரம் சுற்றுலாப் பயணியுடையதாகி விடுகிறது. "உங்கள் இடதுபுறத்திலும் வலதுபுறத்திலும்...." என்று வழிகாட்டிகள் ஜன்னல் ஊடாக விளக்கம் தருகிற மின்னல்வேக சுற்றுலாக்களில் இணைய விரும்புகிறேன். பார்க்க விரும்பாத இடங்களை சந்தேகமில்லாமல் தெரிந்து கொள்ளத்தான்.
எந்த வகையிலும் இத்தகைய விபரங்களுக்கு இடம் தராத நகரம் ஸான்டியாகோ. அங்கேயே பிறந்து விட்டதைப் போல உடனடியாகவும் முழுமையாகவும் தன்னை முன் நிறுத்திக் கொள்ளும் நகரம். ஸயானாவில் உள்ள சதுக்கத்தை விடவும் அழகானது பூமியில் இல்லை என்று நம்பி வந்திருக்கிறேன். அதைவிட அழகானதா என்ற சந்தேகத்தைக் கொண்டு வருவது ஸான்டியாகோ சதுக்கமே. பொலிவும் முனைப்பும் அதன் வயதை யோசிக்க வைக்காமல் செய்யும். காலப்பிரக்ஞையை இழந்து போன யாரோ நேற்றுத்தான் அதை நிர்மாணித்திருக்க வேண்டும். சதுக்கத்தை வைத்து மட்டும் இந்த மனப்பதிவு உண்டாவதில்லை. நகரத்தின் மூலை முடுக்குகளைப் போலவே தினசரி வாழ்க்கையில் ஆழ்ந்து தோய்ந்திருப்பதிலிருந்து உண்டாகிறது. துடிப்பான நகரத்துக்கு வயதேற உற்சாகமும் குதூகலமுமாக ஆர்ப்பரிக்கும் மாணவர்கள் வாய்ப்பளிப்பதில்லை. கெட்டியாகிப் போன சுவர்களிலிருந்து எழுகிற செடிகொடிகள் விநாசத்தையும் விஞ்சி நிற்கும். காலடி ஒவ்வொன்றிலும் பூமியின் இயல்பான கற்கள் முழுமலர்ச்சியுடன் படும்,
மூன்று நாட்களாக மழை புயலுடன் இல்லை. இடையிடையே கடும் வெயில் இருந்தாலும் கலிஸிய நண்பர்கள் பொன்மயமான இந்த இடைவெளிகளைக் கண்டதாகத் தெரியவில்லை. மழைக்காக சதா என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். மழையற்ற கலிஸியா தரும் ஏமாற்றத்தைக்கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை...ஏனென்றால் கலிஸியர்களின் உலகம் அவர்களின் அதுபற்றிய உணர்வைக் காட்டிலும் புராணிகமானது. புராணிகப் பிரதேசங்களில் சூரியன் தலைகாட்டுவதில்லையே.
"போனவாரம் வந்திருந்தால் சீதோஷ்ணம் பிரமாதமாக இருந்திருக்கும்" என்றார்கள் அவமானம் படிந்த முகங்களுடன் நண்பர்கள். "பொருத்தமில்லாமல் வருஷத்தின் இந்த சமயத்தில் பெய்கிறது" என்றும் வலியுறுத்திச் சொன்னார்கள். வாலி இங்க்லான், ரொஸாரியோ டி காஸ்ட்ரோ மற்றும் கலிஸியக் கவிஞர்கள் ஒவ்வொருவரின் எழுத்துக்களில் எல்லாம் பார்த்தால் பிரபஞ்சப்பிறப்புக் காலம்தொட்டே பொழிகிறது மழை என்றிருப்பதை மறந்துவிட்டிருந்தார்கள். மழைக்கிடையே ஓயாது வீசும். காற்றுதான் ஏகப்பட்ட கலிஸியர்களை மகிழ்வான வகையில் வித்தியாசப்படுத்தி வைத்திருக்கிற விதையைத் தூவியிருக்க முடியும்.
நகரத்தில் மழை. வயல்களில் மழை. அரோஸாவின் ஏரிகள் நிறைந்த சொர்க்கத்திலும் விகோ முகத்துவாரங்களிலும் மழை. பாலத்தின் மேலும். மாயத்தன்மை மிக்க ப்ளாஸா டி கம்படாஸ்ஸாவிலும் மழை. வேறுஉலக காலத்தைச் சார்ந்த ஹோட்டல் உள்ள லா டொஜாவிலும் மழை. மழை நிற்கவும் காற்று ஓயவும் மறுபடியும் உயிர்ப்பு வர சூரிய ஒளி தென்படுவதற்காகவும் ஹோட்டல் காத்திருப்பதாகக் தோன்றியது. நாசமாக்கப்பட்டிருக்கும் பூமியில் கிடைக்கிற ஒரேவகை சிப்பிமீன் பதார்த்தத்தைத் தின்றவாறே பொலிவுடனான உலகில் போவதாக மழையில் நடந்து போனோம். ஓயாத மழையால் கிட்டிய நன்மையென இதையெல்லாம் அறிந்துகொண்டோம்.
எப்போதோ பார்ஸிலோனா விடுதி ஒன்றில் எழுத்தாளர் அல்வாரோ கான்க்யுரர்ஸ் கலிஸிய உணவு பற்றிக் கூறியதைக் கேட்டிருக்கிறேன். விவரிப்பு அற்புதமானதால் கலிஸியக்காரனின் பிதற்றலான நினைவுகளாகக் குறித்தும் கொண்டேன். கலிஸிய அகதிகள் சொந்த ஊர் பற்றி பேசுவதை ஞாபகப் படுத்திக் கொள்ள முடிகிற வரையில் அவை கடந்த கால ஏக்கம் கலந்தவையாகத் தெரிகின்றன. கலிஸியாவில் கழித்த எழுபத்திரண்டு மணி நேரத்தை இப்போது நினைத்துப் பார்க்கிற போது அதெல்லாம் நிஜம்தானா, பாட்டியின் பித்துப் பிடித்த பிதற்றலுக்கு ஒருவேளை பலியாகிவிட்டேனோ என்று ஆச்சரியத்துடன் யோசிக்க வேண்டியிருக்கிறது. கலிஸியர்களைப் பொறுத்த வரை இந்த சந்தேகத்துக்கு பதில் ஏதும் கிட்டாமல் தான் போகப் போகிறது.


தமிழில் - தேவதாஸ்

Saturday 17 August 2019

மோகப் பெருமயக்கு - சுகுமாரன்


மோகப் பெருமயக்கு

மோகத்தைக் கொன்றுவிடு - அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு; தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
பாரதி
காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்ட செவ்வியல் ஆக்கங்களை மீண்டும் வாசிக்கும்போது ஒரு விஷயம் புலப்படுகிறது. அந்தப் படைப்புகள் உருவான காலத்தில் அவற்றின்மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மெல்ல மெல்ல வலுவிழந்து போகின்றன, அவற்றில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட குறைகள் அவற்றின் குணங்களாகவே அங்கீகரிக்கப்பட்டுவிடுகின்றன. செவ்வியல் ஆக்கமாகக் கருதப்படும் படைப்பைத் திரும்ப வாசிக்கும்போது அதன் சிறப்புகள்தான் கவனத்தை ஈர்க்கின்றன. குறைகள் புலப்படுவதே இல்லை. தி. ஜானகிராமனின் 'மோகமுள்' ஓர் எடுத்துக்காட்டு. நாவல் தேவைக்கு அதிகமான பக்கங்களைக் கொண்டிருக்கிறது. கதையாடல் கட்டுக்கோப்பானதாக இல்லை. கதை நிகழும் காலத்தையும் சமூகப் பின்புலத்தையும் அழுத்தமாகச் சித்தரிக்கவில்லை, இவை நாவலை முன்னிருத்திச் சொல்லப்பட்ட விமர்சனங்கள். நாவல் எழுதப்பட்டும் வெளிவந்தும் அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்று வாசிக்கும்போது இந்த விமர்சனங்கள் பொருட்படுத்தத் தகுந்தவையாக இல்லை. நாவலின் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள் வாசகனுக்கு மலைப்புத் தரும் அளவல்ல; ஆயிரம் பக்கங்கள் அச்சியற்றப்படுவதும் வாசிக்கப்படுவதும் இலக்கியத் தகுதிகளில் ஒன்றாகவே ஆகிவிட்டிருக்கிறது. கட்டுச் செட்டான கதையாடலெல்ல இன்றைய நாவல்கள், சிதறுண்ட கதை மையங்கள்தாம் இன்றைய புனைவு நடைமுறை. காலமும் இடமும் முயங்கிய வெளிதான் இன்றைய ஆக்கங்களின் பின்புலம். இந்தக் கருத்துகளின் பின்பலத்தில் அணுகும்போது 'மோக முள்' தன்னியல்பாகவே தமிழின் செவ்வியல் நாவல்களில் ஒன்றாக நிலைபெறுகிறது. இன்று அந்த 'மேலான குறைகளையும் ஏற்றுக்கொண்டே நாவலை வாசிக்கிறோம், புதுமுக வகுப்பு மாணவனாகக் கல்லூரி நூலகத்தில் முதன் முதலாக 'மோக முள்' நாவலை வாசித்த தருணம் இப்போதும் கலையாமல் நினைவில் தங்கியிருக்கிறது. அது ஜெயகாந்தன் படைப்புகளிலிருந்து புதுமைப்பித்தன், ஜானகிராமன் படைப்புகளின் வாசகனாக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக்கொண்ட காலம். இரண்டு நாட்கள் வகுப்புகளுக்குப் போகாமல் நூலகரின் சந்தேகக் கேள்விகளுக்கு நம்பகமாகப் பொய்களைச் சொல்லியும் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பார்வையில் அகப்படாமலும் வாசித்து முடித்த பரவசத்தை அன்று சொல்லத் தெரியவில்லை. இப்போதென்றால் தி.ஜா.வையே மேற்கோள் காட்டலாம் - 'காதல் செய்கிற இன்பம் அதில் இருந்தது. காதல் செய்கிற இன்பம். ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை - எல்லாம் அதில் இருந்தன.' பரவசம் முற்றிய நிலையில் மிகச் சிக்கலான ஒரு நடவடிக்கை பற்றி யோசித்தேன், இருப்பதிலேயே அலுப்பூட்டும் பாடமான வேதியியலைக் கற்பிக்கத் தற்காலிக நியமனத்தில் வந்திருந்த ரெங்கநாயகி மேடத்தைக் காதலிக்கலாமா என்று தீவிரமாக ஆலோசனை செய்தேன். அவர் கற்பிக்க ஆரம்பித்த பிறகுதான் கந்தக அமிலத்துக்கு மல்லிகை மலரின் வாசனையிருப்பது தெரியவந்தது, அவரும் யமுனாவின் சாயலில்தான் இருந்தார். 'அவ்வளவு தேர்ந்த அழகு என்று சொல்தற்கில்லை. உயரம். உடலமைப்பு. கால் கை விரல்களின் நீளம். குவிப்பு, நடுவில் உயர்ந்து நீண்டு குவியும் நகங்கள் எல்லாவற்றிலும் யமுனாவின் அச்சு, நிறத்தில் மட்டும் அவளைவிடச் சற்றுச் சிகப்பு,' யமுனா பேசிய தமிழில் மராத்தி வாடை இருந்ததா என்று நாவலில் குறிப்பு இல்லை. ஆனால் ரெங்கநாயகியின் தமிழில் கொங்கு தேச நாயக்கர் தெலுங்கின் காரம் தொனித்தது. படிக்கிற பையன் என்று அவருக்கும் என்மேல் கரிசனம் இருந்தது. ஆசிரியர் அறைக்கு அழைத்துப் பேசும் நெருக்கமும் கான்டீனில் தேநீருக்குக் காசைக் கொடுக்கிற பிரியமும் இருந்தன. முதிரா இளைஞன் முதிர்ந்த இளைஞயைப் பற்றிக் கனவு காண இவை போதாதா? தன்னுடைய நியமனத்தை உறுதி செய்துகொள்வதற்காக ரெங்கநாயகி மேடம் நடத்திய வகுப்புத் தேர்வில் சக மாணவர்களில் முக்கால் சதவீதமும் தோல்வியடைந்ததில் அவர் வெறுத்துப்போய் முனைவர் பட்ட ஆய்வையே கைவிட நேர்ந்தது. அப்போது ஏற்பட்ட இழப்புணர்வு, சில ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிற்கருவிகள் விற்பனையாளனாக எனக்குக் கிடைத்த முதல் (வேலைப் பருவத்தில் மறைந்தது. நான் விற்பனை நிமித்தமாகச் சென்றிருந்த ஒரு வார்ப்பகத்தின் உரிமையாளர் ரெங்கநாயகி மேடத்தைத் தன்னுடைய மனைவியும் ஃபவுண்டரியின் மேலாளரும் என்று அறிமுகப்படுத்தினார். அந்த தினத்துக்குச் சில மாதங்கள் முன்னர்தான் தி, ஜானகிராமனின் மறைவு, அதையொட்டி நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் நான் வாசித்த இரங்கற்குறிப்பின் ஒரு வரி 'தி. ஜானகிராமனிடம் எனக்கு

 அந்தரங்கமான நன்றிக் கடன் உண்டு; என்னுடைய யமுனாவை எனக்கு அடையாளம் காட்டியவர் என்பதால்" என்பது. இன்று அந்த வரி நினைவுக்கு வரும்போது அசட்டுத்தனமாக உணர்கிறேன். ஆனால் எழுதியது ஆத்மார்த்தமாகத்தான், ஒரு நல்ல படைப்பின் ஜீவன் வாசகனுக்குள் ஊடுருவி நிலைக்கும் இலக்கியச் செயலின் உதாரணமாகவே இதைக் காண விரும்புகிறேன். அதே காலப் பகுதியில் வாசித்துப் புளகாங்கிதப்பட்ட வேறு பல நாவல்களும் பின்னர் வாசித்தபோது பொக்காகிப்போயின, ஆனால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகப் பல முறை வாசித்தும் உயிர்ப்பின் இளமை தீராத படைப்புகளில் ஒன்றாகவே 'மோக முள்" என்னளவில் இருந்து வருகிறது. என்னைப் போலவே இந்தப் பரவசத்துக்கு ஆட்பட்ட தீவிர வாசகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது என் ஊகம். இது
வாசிப்பவனின் மனப்பாங்கு மட்டுமல்ல; நாவல் மையத்தின் ஈர்ப்பு விசை மட்டுமல்ல, அந்தப் படைப்பு மொழியுடனும் வாசகப் பரப்புடனும் கொண்டிருக்கும் உறவின் இயல்பு. இந்த இயல்புதான் அதை இன்றைக்கும் வாசிக்கத் தகுந்த பிரதியாக ஆக்குகிறது.
'மோக முள்' இன்றும் தரும் பரவசம் கதையாடலைச் சார்ந்தது மட்டுமல்ல. ஒவ்வொரு மறு வாசிப்பிலும் அது வாசகனுக்குத் திறந்துவைக்கும் நுண் தளங்கள் சார்ந்தது. அந்தத் தளங்கள் வாசகனின் அந்தரங்கத்தில் வேறு இடங்களை உருவாக்குகின்றன. தி. ஜானகிராமனின் பிரதி என்னுடைய பிரதியாகவும் அவருடைய பாத்திரங்கள் என்னுடைய அனுபவத்தில் உலவும் மனிதர்களின் பிரதிநிதிகளாகவும் மாறுவது இந்த இயல்பினால்தான். இந்த இயல்புதான் புனைவுக்கும் உண்மைக்குமுள்ள புலனாகாத கோட்டை இல்லாமல் செய்கிறது. 'மோக முள்' நாவலை 1955-56ஆம் ஆண்டுகளில் எழுதியதாகக் குறிப்பிடுகிறார் ஜானகிராமன். அதைத் தொடர்ந்த ஆண்டிலேயே புத்தகமாகவும் வெளிவந்திருக்கலாம். புத்தகம் வெளிவந்த பிந்தைய ஆண்டுகளில் கதை நிகழும் இடத்தைச் சென்று 'தரிசித்தவர்களின் எண்ணிக்கை கணிசமானது. குறிப்பாக யமுனாவின் வீட்டைத் தேடி அலைந்தவர்கள் அதிகம். எழுத்தாளர் சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, பிரபஞ்சன் முதல் நான் உட்பட ஜானகிராமன் பார்த்த கும்பகோணமும் தூக்காம்பாளையத் தெருவும் அவர் காலத்திலேயே மாறியிருக்கக்கூடும், அதற்குப் பின்னர் அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் ஜானகிராமன் பார்த்த இடத்தையோ சித்தரித்த இடத்தையோ பார்க்கக்கூடிய வாய்ப்பு இல்லவே இல்லை. அந்த நிகழிடம் கற்பனையானது; அது புனைவின்

 களம் என்று தெரிந்தே 'இலக்கியத் தீர்த்த யாத்திரை நடக்கிறது. இலக்கியப் புனைவு வாசக மெய்மையாகும் இந்தப் படைப்பு விநோதம் செவ்வியல் இலக்கியங்களுக்கு மட்டுமே சாத்தியம். அல்லது இதைச் சாத்தியப்படுத்தும் படைப்புகளே (செவ்வியல் இலக்கியமாகக் கருதப்படுகின்றன. செவ்வியல் இயல்பு கதைக்களத்தை இலக்கியப் புனிதத் தலமாக மாற்றுவதன் பழைய உதாரணம் - ஐரிஷ் நாவலாசிரியரும் கவிஞருமான ஜேம்ஸ் ஜாய்சின் 'டப்ளின்.' புதிய உதாரணம் - கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் 'மகோந்தா." தமிழ் உதாரணம் - ஜானகிராமனின் கும்பகோணம். தமிழில் வேறு எந்தக் கதைக்களமும் இவ்வளவு துல்லியமாக வாசக கவனத்தில் பதிந்திருக்குமா என்பது சந்தேகம். இத்தனைக்கும் ஆசிரியச் சித்தரிப்பில் நகர வர்ணனை வெறும் இடம் சுட்டல் மட்டுமே, ஆனால் அந்தச் சுட்டலில் அவர் கொடுக்கும் தகவல்கள் கதை மாந்தரளவுக்கு முக்கியமானவை. பாபுவைப் போல யமுனாவைப் போல நகரத்தையும் ஒரு கதாபாத்திரமாக்குகின்றன அந்தத் தகவல்கள், எனக்குக் கும்பகோணம் அறிமுகமானது 'மோக முள்' வாயிலாகத்தான். முதன்முறையாக அந்த நகரத்துக்குப் போனபோது ஜானகிராமனின் சித்தரிப்புத்தான் வரைபடமாக மனதில் இருந்தது. 'அணைக்கரை ஆனையடியைக் கடந்துவந்து டவுன் ஹைஸ்கூல் வாசலையும் கடந்து நாற்சந்தியையும் கடந்து போயிற்று' என்ற வரியில் துலங்கும் நகரமைப்புப் படத்தைக் கற்பனை செய்துகொண்டு டவுன் ஹைஸ்கூல் வாசலில் நின்றபோது சட்டையும் கால் சராயும் அணிந்திருந்த எனக்கு 'ஐந்து முழக் காவிக் கதரால்' மூக்கைப் பொத்திக்கொள்ளத் தோன்றியது. ஏனெனில் பாபுவின் காலத்துக்கும் எனது காலத்துக்கும் ஓர் ஒற்றுமை இருந்தது. 'கும்பியில்" அப்போதும் புழுதி மாறாமலிருந்தது. செவ்வியல் கதாபாத்திரங்கள் நிரந்தர இருப்புக் கொண்டவை, கும்பகோணப் புழுதியும் அப்படித்தான் போல.
பாரதி கவிதைகள் பற்றி தி. ஜானகிராமன் அதிகம் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை . சிறிது காலம் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர், எனவே தவிர்க்கவியலாதபடி பாரதியை அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தன்னுடைய எழுத்துகளின் முன்னோடி என்று அவர் மதித்த மணிக்கொடி எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலன், பாரதி கவிதைகளை வியந்து பாராட்டும் விதத்தில் (சிட்டியுடன் இணைந்து

 'கண்ணன் என் கவி') ஒரு நூலையே எழுதியிருக்கிறார். அதை அவர் வாசிக்காமலிருந்திருக்கவும் வழியில்லை . ஜானகிராமன் எழுதவந்த காலத்தில் பாரதி மறுகண்டுபிடிப்புச் செய்யப்பட்டுப் பரவலாக விவாதத்துக்கும் உரையாடல்களுக்கும் உள்ளாகியிருந்தார். பாரதியின் வரிகள் அநேகமாகத் தேய்வழக்குகளாகவே ஆகியிருந்திருக்கவும் கூடும். அந்தப் பேச்சுகள் அவர் காதை வந்தடையாமல் இருந்திருக்காது. எனினும் அது பற்றி அவர் எங்கும் குறிப்பிட்டதில்லை. என் வாசிப்புக்கு எட்டியவரை அவரது எழுத்துகளில் எங்கேயும் பாரதியைப் பற்றிய சூசகங்களோ கவிதை மேற்கோள்களோ இல்லை. ஆனால், "மோக முள்' நாவலின் தலைப்பும் அதன் கதை மையமும் இங்கே மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு வரிகளின் பாதிப்பாக இருக்கலாம் என்பது அனுமானம், 'உரவில் உலக்கை விழும்போது தரையில் வைத்திருக்கும் பாத்திரம் அதிர்வது' போன்ற (உவமைக்கு நன்றி: சுந்தர ராமசாமி) பாதிப்பாக இருக்கலாம்.
பாபுவுக்கு யமுனாமேல் தோன்றும் பிள்ளைப்பருவ ஈர்ப்பு நாட்களினூடே வளர்ந்து இளமைப் பருவ மோகமாக விரிகிறது. அந்த மோக சாந்திக்காக அவன் படும் அவஸ்தைகள்தான் கதையாடலின் மையம். அவளுடன் பிணைப்பு நிகழும்வரையிலான தேக வேட்கையும் சிந்தனைக் குமுறல்களும்தான் கதையாடலின் நகர்வுகள். அவற்றைப் பாரதியின் நான்கு வரிகளுக்குள் வைத்து யோசிக்கும்போது நாவலின் ஒற்றை வரிச் சுருக்கத்தைக் கண்டுவிடலாம் என்று தோன்றுகிறது. ஜானகிராமன் தனது நாவலை இப்படி உள்வாங்கியிராமலும் இருக்கலாம். நாவலின் தலைப்பேகூட மேற்கோள் கவிதையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் யோசித்திருக்கிறேன், தன்னுடைய கவிதைகளில் தீவிரமான உணர்ச்சியைக் காட்ட பாரதி அதிகம் பயன்படுத்திய சொல் 'மோகம்." 'மோகத்தைக் கொன்று விடு, அடிமையின் மோகம், மோகப் பெருமயக்கு என்ற பிரயோகங்கள் தீவிர நிலையைச் சித்தரிக்கின்றன. நாவலின் உச்சமும் மோகம் தைப்பதுதான் என்பதால் இப்படி ஒற்றுமையைத் தேடியிருக்கலாம் என்றும் படுகிறது. இந்த ஒப்பீடு அந்தரங்கமானது. பாரதியின் பாடலை வாசிக்கும்போதும் கேட்கும் போதும் (குறிப்பாக மகாராஜபுரம் சந்தானம் பாடியது) 'மோக முள்' நாவலின் காட்சிகள் பார்வைக்குள் புரள்வதும் 'மோக முள்' நாவலை வாசிக்கும் தருணங்களில் பாரதியின் பாடல் ஒலிப்பதுமான மனநிலையைப் பலமுறை அடைந்திருக்கிறேன். அதுவும் காரணமாக இருக்கலாம், இது வாசகனாக நான் செய்யும் அதிகப் பிரசங்கித்தனம், ஆனால் அது நாவலை இன்னும் துல்லியமாக விளங்கிக்கொள்ளத் துணை புரிகிறது. ஒரு செவ்வியல்

 படைப்பு இது போன்ற 'அதிகப் பிரசங்கித்தனத்துக்கு இடம் கொடுக்கிறது.
அதன் மூலம் வாசகனுடனான உறவை வலுவாக்குகிறது.' இந்தப் பார்வையின் வாயிலாக ஜானகிராமனின் எழுத்தியல்பை மதிப்பிடக்கூடிய இன்னொரு அம்சமும் புலப்படுகிறது. பாரதியின் பாதிப்பு ஜானகிராமனிடம் உண்டு என்ற குழப்பமான கருத்தைப் பிடிவாதமாக வைத்துக்கொள்கிறேன். அவர் எழுதிய காலத்தில் அந்தப் பாதிப்புத் தேய்வழக்காக மாறியிருந்தது என்ற ஊகத்தையும் சேர்த்துக்கொள்கிறேன், இங்கே ஜானகிராமனின் கலையிலுள்ள கறார்த்தன்மை வெளிப்படுகிறது. தேர்ந்த கலைஞன் தனது படைப்புகளில் தேய்வழக்குகளை அனுமதிக்க மாட்டான், அவனுடைய முந்தைய எழுத்துகளின் பாதிப்பையேகூட அண்டவிட மாட்டான் என்ற நிலைப்பாடு நிரூபணமாகிறது. ஜானகிராமனின் மொத்தப் படைப்புகளையும் ஊன்றிக் கவனித்தால் அவரது படைப்பு நோக்கத்தில் பொதுத்தன்மை தென்படுமே தவிரப் படைப்புகளில் வித்தியாசங்களே இருக்கும், கதையாடலிலோ நடையிலோ சொல்முறையிலோ இடங்களை விவரிப்பதிலோ இயற்கை வர்ணனைகளிலோ என்றைக்குமான புதுமை மிளிரும். தொடர்கதையாக எழுதப்பட்ட 'மோக முள்ளில்கூடத் தேய்வழக்குகள் இல்லை என்பது வாசிப்பில் புரியும்.
'மோக முள்ளின் கதை வாழ்க்கையில் பழைமையானது. அது எழுதப்பட்ட காலகட்டத்தில் இலக்கியத்துக்குப் புதியது. முதிரா இளைஞன் முதிர் கன்னிமேல் ஈடுபாடு கொள்வதும் அடைவதும்தான் நாவலின் மையம். இந்த உறவுக்கு அன்றைய சமூக வாழ்க்கையில் மதிப்பில்லை, அது நாவலிலேயே குறிப்பாகச் சொல்லப்படுகிறது. பாபுவுக்கு யமுனாமீது ஏற்படும் ஈர்ப்புத் தெரிய வரும்போது அவர்களைச் சார்ந்தவர்கள், பாபுவின் தந்தை வைத்தி, நண்பன் ராஜம், யமுனாவின் தாய் பார்வதி, ஏன் யமுனாவேகூட அதை ஏற்கத் தயங்குகிறார்கள். இந்த உறவு மீறலைப் பதிவு செய்ததுதான் ஜானகிராமனின் கலைத் துணிவு. ஆனால் அதுமட்டுமே அல்ல நாவல். நாவலை மறுபடியும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அதன் நுண் தளங்கள் வெளிப்படுகின்றன. காதலையும் காமத்தையும் முதன்மையாகச் சொல்லும் நாவல் நுட்பமாக வேறு பரிமாணங்களையும் கொண்டிருக்கிறது. இசையும் உறவுகளும் காலமும் நாவலின் மறைமுக மையங்களாகின்றன, தந்தைக்கும் மகனுக்குமான உறவு (வைத்தி - பாபு), நண்பர்களுக்கிடையிலான தோழமை (ராஜம் -

 பாபு), சகோதர வாஞ்சை (சங்கு - பாபு), ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான பந்தம் (ரங்கண்ணா - பாபு), சங்கீதத் தேடல் (மராத்தியப் பாடகர் - பாபு), காமத்தின் அழைப்பு (தங்கம்மா - பாபு). இந்த நுண் தளங்கள் ஒன்றுக்கொன்று பிணைந்து நிற்கின்றன, மேற்சொன்ன கிளைத் தளங்களிலிருந்து அணுகினால் 'மோக முள்' இன்னொரு தோற்றத்தைக் கொள்ளக்கூடும்,
எடுத்துக்காட்டாக, ரங்கண்ணா என்ற இசைக் கலைஞருக்கும் பாபுவுக்கும் இடையில் நிலவிய உறவின் கோணத்திலிருந்து பார்த்தால் 'மோக முள்ளின் முதன்மையான மையம் இசையாக மாறலாம். அப்போதும்கூட பாபு - யமுனா உறவே கதையாடலைத் தீர்மானிக்கும் அம்சமாக இருந்திருக்கும். சங்கீதம் ஓர் ஆன்மநிலை; அதை அடையப் புலனொழுக்கம் தேவை என்று பாபுவுக்குக் கற்பிக்கப்படுகிறது. அதை மீற முடியாமல் அவன் அடையும் தத்தளிப்புகள் இப்போதைய நாவல் வடிவத்தில் இடம்பெறுவதைவிடவும் சிக்கலானதாக இருந்திருக்கும். யமுனா மீதான பாபுவின் வேட்கையைக் கதை மாந்தர்களில் பலரும் மெல்லமெல்லவே அறிகிறார்கள். முதலில் யமுனா, பின்னர் ராஜம், யமுனாவின் தாய் பார்வதி, இறுதியாக பாபுவின் தந்தை வைத்தி, அந்த உறவை அவன் உறுதியாக உணர்வது தங்கம்மாவுடனான முயக்கத்தின்போதுதான். குற்ற உணர்வால் தற்கொலை செய்துகொள்ளும் யோசனையுடன் தடுமாறும் பாபு அதை 'யமுனாவுக்குப் பண்ணின துரோக'மாக நினைக்கிறான். அதை அவளிடம் சொல்லும் சந்தர்ப்பத்தில்தான் யமுனாவும் அவன் உள்ளக் கிடக்கையைத் தெரிந்துகொள்கிறாள். அதே நாட்களில்தான் ரங்கண்ணாவையும் குருவாக ஏற்கிறான். ரங்கண்ணா செய்யும் உபதேசத்தில் சரீரக் கட்டுப்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்கிறார். 'கீர்த்தனம் வந்தா கொஞ்சம் அத்தர் இருந்தாத் தேவலை போலிருக்கும், அப்புறம் எங்க தேவடியா வீடு இருக்குன்னு உடம்பு அலையும், அதுக்கப்புறம் சங்கீதம் பிராணன் எல்லாம் ஒண்ணொண்ணாக் கரையும். இந்த எச்சரிக்கை பாபுவைத் தடுக்காமலிருந்தால், பாபுவின் ரகசியத்தை ரங்கண்ணா அறிந்திருந்தால்? - நாவலின் பின்புலமாக இருக்கும் இசை அதன் மையமாகவே ஆகியிருக்கும். இது ஓர் உதாரணம் மட்டுமே. இவ்வளவு நுண்தளங்கள் கொண்ட படைப்பு இது என்று சுட்டிக்காட்டவே.
விழைவுகளைச் சொல்லும் நாவலாகவே 'மோக முள்'

 பார்க்கப்பட்டிருக்கிறது. உறவுக்கான விழைவும். சங்கீதத்துக்கான விழைவும். மனிதர்கள் தமது இருப்பின் சமநிலையை எட்டுவதற்காக மேற்கொள்ளும் தவிப்பைப் பற்றிய கதையாடலாக நாவலை வாசிக்கலாம். பிரதானமாக பாபுவின் தவிப்புகள். அதன் விளைவாகப் பிறரிலும் ஏற்படும் தவிப்புகள். இளம் பருவம் முதல் பார்த்துவந்த யமுனாவின் மீது கொள்ளும் ஈடுபாடுதான் அவனுடைய தவிப்புக்குக் காரணம். அவன் வளர வளர இந்தத் தவிப்பும் வெவ்வேறு பருவங்களில் வளர்கிறது. சகோதரிக்கு இணையாகப் பார்க்கும் நிலை. தன்னுடைய தகப்பனார் காரியஸ்தராக இருக்கும் நிலவுடைமை அமைப்பின் உரிமையாளராகப் பார்க்கும் நிலை. தனது ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் தோழியாகப் பார்க்கும் நிலை, அவளுடைய உடல் வனப்பால் ஈர்ப்புக்கு உள்ளாகும் நிலை, அவளுடைய அறிவையும் தன்மானத்தையும் வியக்கும் நிலை. வாழ்ந்து கெட்டு அநாதரவாக அவள் துவண்டிருக்கும் நிலை. இந்த நிலைகளின் இறுதியாக அவளை அடையும் நிலை, அவன் தவித்துத் தவித்து அவளை அடைந்த பின்புதான் சமநிலையைப் பெறுகிறான். அந்தச் சமநிலையையும் யமுனாவின் வழிகாட்டுதலில் தான் எட்ட முடிகிறது. அவனுடைய வாழ்க்கையின் நோக்கத்தைத் தேர்ந்தெடுத்து முன்னே செல்ல உந்துகிறது. சரிவுகளில் தடுமாறி நின்ற அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறான். அது அவளை உரிமை கொள்ளும் சுவாதீனத்தை
அவனுக்கு அளிக்கிறது.
"பழைய பாபு இல்லை என்றுதான் நம்பினேன். நீ பிடிவாதமா இருக்கே, உன் திருப்திக்காகத்தான் நான் உயிரை வச்சிருக்கேன். உன்னைத் திருப்தி செய்யறதுதான் என் கடமை. எனக்கு ஆசை அதுதான். உன் திருப்திக்குத்தான், நீ செஞ்சது கொஞ்சநஞ்சமல்ல. எதையும் லட்சியம் பண்ணாமல் எனக்குக் கைகொடுத்துண்டே வந்திருக்கே. நான் ஏன் உன்னைத் திருப்திப்படுத்தப் படாது?" இந்த வாசகங்களை யமுனா சொல்லும் இடத்தில் பாபுவின் தவிப்பு நிறைவேறும் வழி திறக்கிறது. முதல் கூடலுக்குப் பின்பு அவள் கேட்கும் கேள்வி: 'வருஷக்கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமாக இல்லை , விவரம் தெரிந்தது முதல் பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே, ம்?" அவளே பதிலும் சொல்கிறாள் "இதற்குத்தான்." பாபு தவிப்பிலிருந்து விடுபட்டுச் சமநிலையை உணர்வது இந்தப் பதிலில்தான். இந்தச் சமநிலை அவனை இசையின் புதிய ஞான விழைவுக்கு உந்துகிறது. மோகித்து அடைந்த பொருள் வசப்பட்ட பின்னர் உருவாகும் வெற்றியின் வெறுமையிலிருந்து

 அவனை மீட்பது இசைமீதான நாட்டம். அதை அவனுக்கே புரியவைப்பவள் யமுனா. கற்பனைப் பாத்திரமான யமுனா வாசக மனதில் உயிரும் ஒளியுமுள்ள ஜீவனாக நிலைப்பது இதனால்தானா? யமுனாவை பாபு ஒரே சமயத்தில் இரண்டு விதமாகப் பார்க்கிறான். அடையக்கூடியவளாகவும் அடைய முடியாதவளாகவும், குருதியும் நிணமும் பின்னிய வனப்பான மோகத்துக்குரிய மனித உடலாகவும் வழிபடத்தகுந்த சொரூபமாகவும், 'அவளைப் பார்த்ததும் பெருமிதம் பொங்கிற்று. அவள் மேனி முழுவதும் கூடத்தில் தொங்கும் பதினைந்து காண்டில் பவர் விளக்கின் ஒளியில் தகதகவென்று மின்னிற்று' என்று இச்சையுடன் பார்க்கும் அவனே "நான் உன்னைச் சாதாரண மனிதப் பிறவியாக நினைக்கவில்லை. நான் வணங்கும் தெய்வத்தின் வடிவம் நீ" என்று மனதிலேயே தலைவணங்குகிறான். இந்த இரண்டு முனைகளுக்கும் நடுவில் அவன் மனம் ஆடும் ஊஞ்சலாட்டம்தான் தவிப்பைக் கொந்தளிப்பாக்குகிறது. யமுனாவுடனான கல்விதான் அதைத் தணிக்கிறது. அவளும் உயிரின் வேட்கையை உணரும் உடல் என்று உணர்கிறான். அந்த உணர்வு அடையக் கிடைக்காத ஒன்றை
அடைந்துவிட்ட அகங்கார நிறைவும்கூட
தவிப்பின் பேருருவம் தங்கம்மா. உடலை நாடும் உயிரின் பெரும் அலைக்கழிப்பு, யமுனாவின்பால் பாபு கொண்டிருக்கும் தவிப்புக்கு நிகரானது அவன் மேல் தங்கம்மா கொள்ளும் விழைவு, கிழவருக்குக் கட்டிவைக்கப்பட்டு, சரீர சுகம் பெறாமல் தவிக்கும் அவள் நள்ளிரவில் சுவர் தாண்டி வருவது அபாயகரமானது. ஓர் சமூக அத்துமீறல். தடையாக இருக்கும் சுவரைத் தாண்டுவதிலேயே ஓர் உருவகத்தன்மையை ஜானகிராமன் சித்தரிக்கிறார். பாபுவுக்கு உடலின்பம் தேவையாக இருக்கிறது. அதே சமயம் அவனுக்குப் புகட்டப்பட்ட ஒழுக்க நெறிகள் அதைக் குற்றம் என்று எச்சரிக்கின்றன. சமூகக் கண்ணோட்டத்துக்கு அவனைப் பணியவும் செய்கின்றன. தவிர, சங்கீதம் ஓர் இறைநிலை, அதை அடைய நல்லொழுக்கம் பேணப்பட வேண்டும் என்ற போதனை அவனைக் கட்டுப்படுத்துகிறது. அந்த இறுக்க நிலையை ஒருமுறையேனும் தகர்ப்பதில் வெற்றி பெறுகிறாள் தங்கம்மா. அந்தத் தளர்வுதான் யமுனா மீதான காதலை மீண்டும் அவனுக்குள் கிளர்ந்தெழச் செய்கிறது. இரண்டாம் முறையாகத் தங்கம்மா தன்னை நாடும்போது பாபு அவளை நிராகரிக்கக் காரணம் ஒழுக்க நியதிகள் மட்டுமல்ல; யமுனாவுக்குத் துரோகம் செய்துவிடக் கூடாது என்ற தவிப்பும்தான். தங்கம்மாவின் பெருந்தவிப்பு மரணத்தில் சமநிலை அடைகிறது,

 பெருந்தவிப்புகளில்லாமல் இருப்பின் சமநிலையை அடைந்த பாத்திரங்கள் நாவலில் இருக்கிறார்கள். எல்லாப் பெண்களையும் கடவுள் சாயலாகப் பார்க்கும் ராஜம், உலகின் எல்லா அசைவுகளிலும் இசையைக் காணும் ரங்கண்ணா , மனிதர்களுக்காக உருகும் அப்பா வைத்தி, அவமதிப்புகளிலும் புறக்கணிப்புகளிலும் வறுமையிலுமிருந்து தன் அகவலிமையால் நிமிரும் யமுனா - இவர்களின் தவிப்புகள் குறைந்தபட்சம் தன்னலமில்லாதவை. அதனால்தான் பாபு அவர்களை மானசீகமாகத் தஞ்சமடைகிறான். )
5
'மோக முள்' - ஓர் இரண்டு அடுக்கு நாவல், காதல் ஓர் அடுக்கு. இசை இன்னொரு அடுக்கு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நிறைவுசெய்து கொள்ளும் வகையில்தான் கதையாடல் அமைகிறது. எந்த அடுக்கு எப்போது இன்னொரு அடுக்கில் ஊடுருவுகிறது என்பதைக் கண்டடைவது ஒரு புதிர். நாவலின் தொடக்கத்திலிருந்து (மேலக் காவேரி சாஸ்திரிகளின் உரையாடல்) இறுதியில் இசை ஞானம் தேடி புனே செல்வதுவரை ('கீழ்ஸ்தாயி ஷட்ஜமத்தில் நிற்கும்போதுகூட இந்த எதிர்ப்புத்தான் குரல் கொடுக்கிறது' என்ற தனிமொழி) நாவலின் பக்கங்களில் இசையின் கார்வை நீடிக்கிறது. சரியாகச் சொன்னால் நாவலின் மையப்பகுதி முழுவதும் இசைமயமானது. அதன் ஆதார சுருதி ரங்கண்ணா. இந்த நாவலின் உயிரோட்டம் மிகுந்த பாத்திரம் அவர்தான். ஒருவேளை நவீனத் தமிழ்ப் புனைகதை மாந்தர்களில் முழுமையாக வார்க்கப்பட்ட பாத்திரங்களில் ரங்கண்ணாவும் ஒருவராக இருக்கலாம், ரங்கண்ணாவின் வாழ்க்கைச் சித்தரிப்பு ஒரு காவிய நாயகனின் வாழ்க்கைபோல நுட்பமாக ஜானகிராமனால் உருவாக்கப்படுகிறது. காண்பதிலெல்லாம் சங்கீதத்தின் சாயலைக் காண்கிறார். கேட்கும் ஒலியிலெல்லாம் இசையை உணர்கிறார். அவரது மரணமும் கூட இசையின் முத்தாய்ப்பாக அமைகிறது. பாபுவின் மடியில் கிடந்து ரங்கண்ணா உயிர் துறக்கும் காட்சிக்கு உண்மையான ஆதாரம் இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். சீடரான எம்.டி ராமநாதனின் மடியில் கிடந்து குரு டைகர் வரதாச்சாரி உயிர் நீத்த சம்பவம் ஜானகிராமனை இந்தச் சித்தரிப்புக்குத் தூண்டி விட்டிருக்கலாம், இந்த அனுமானத்தை நேர்ச் சந்திப்பில் அவரிடம் தெரிவித்தபோது "அப்படி உங்களுக்குத் தோன்றினால் அது நல்லது" என்று சிரித்தார். மழுப்பலான சிரிப்பு. ஆனாலும் என் அனுமானத்தையொட்டியே இந்தக்

T
 காட்சியை வாசிக்க விரும்புகிறேன்.
நாவலின் இசைப் பின்னணியைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் ஓர் ஒற்றைவரி வாசகமும் ஒரு தீவிரமான காட்சியும் மனதில் படரும். இசைமையில்லாமல் அவை இல்லை என்று மனம் வலியுறுத்தும், தங்கம்மாவுடனான கூடலின் தருணத்தைச் சொல்லும் அந்த வரி - 'உறை கழற்றிய வீணை மாதிரி கிடந்த அந்த உடல் அலை அலையாக எழுந்தது' - ஓர் சங்கீத ஆலாபனையில் ராகத்தின் முழுச் சாயலும் வெளிப்படும் நாத உச்சத்துக்கு ஒப்பான வரி. அதற்குச் சற்று முன்பு வரும் தங்கம்மாவின் உரையாடலில் இசைத் தீவிரம் கூடிய காட்சியைப் பார்க்கலாம்.
"நேத்து நீங்க பாடினேன் பாருங்கோ , 'மனசு விஷய'வா அதுதானே?"
"ஆமாம்." "இனிமேல் என் காதுபட அதைப் பாடாமல் இருக்கேளா?"
"ஏன்?"
"நீங்க பாடினா நல்லாத்தான் இருக்கு ... பாட வேண்டாம்." "ஏன்?"
"என் கல்யாணத்தில் யாரோ ஒரு பெண் வந்து பாடினா அதை எனக்கு
அதைக் கேட்டால் பைத்தியம் பிடிச்சுப் போயிடும் போலிருக்கு."
ஒரு வாசகனாகவும் இசை ஆர்வலனாகவும் இந்த வாசகம் புதிராக இருந்தது அந்தக் கீர்த்தனையின் பொருள் விளங்கும்வரை. 'மனதின் செய்கைகளைக் களவொழுக்கத்துக்கு அளித்துவிட்டால் ராமனின் கிருபை உண்டாகுமா? அந்தச் செயல், தன் வீட்டுக் கதவைப் பிறர் வீட்டிற்குப் பெயர்த்துவைத்துவிட்டு, தான், நாய்களை விரட்டுவதுபோல ஆகாதா? தவிட்டுக்கு வேசியாடச் செல்வது கூழ்ப் பானையைக் குரங்கு கொண்டுபோக அனுமதிப்பதுபோல ஆகாதா? அப்படிச் செய்வது செவிடனுக்கு உபதேசித்ததுபோல ஆகாதா?" இது அந்த நாட்டக் குறிஞ்சி ராகக் கீர்த்தனையின் சாரம். இது விளங்கியபோது அந்தக் காட்சி மேலும் துல்லியமானதாகத் தெரிந்தது. கதையாடலுக்கு வெளியிலிருக்கும் ஒன்றை அதற்குள் பொருத்திப்பார்ப்பது அநியாயம். ஆனால் இந்த அநியாயம் கதையாடலை மேலும் வசீகரமானதாக்குகிறது. பாபுவின் குற்ற உணர்ச்சி இன்னும் ஆழமானதாகப் புலப்பட இந்தப் பொருத்திப் பார்த்தல்

 துணைபுரிகிறது. தங்கம்மா 'எனக்கும் பாடத் தெரியும்' என்று சொல்வதை இந்த வியாக்கியானத்துக்கான சான்றாக எடுத்துக்கொள்கிறேன். அது அவளுடைய தவிப்பையும் விழைவையும் உணர்ந்து பச்சாதாபம் கொள்ளவைக்கிறது. எரியுண்ட மயானத்தில் அவளுடைய சாம்பலைப் பார்த்து பாபு புலம்புவதைப் புரிந்துகொள்ள வைக்கிறது. கதைமாந்தர்களின் பேச்சிலும் ஆசிரியரின் கூற்றிலுமாக இசை தொடர்பான நுட்பங்களையும் (தம்புராவுக்கு ஜீவா புடிச்சா மாதிரி சாரீரம், ரங்கண்ணாவின் அவதானிப்புகள்), விமர்சனங்களையும் (சங்கீதம் என்பது
அனுபவம், அனுபவம்தான் ஞானம் என்ற ரங்கண்ணாவின் நிலைப்பாடு, இந்துஸ்தானி பாடகர்களின் மதிப்பீடுகள்) ஜானகிராமன் போகிறபோக்கில் சொல்வதுபோல் எழுதிச் செல்கிறார். அவற்றை நுணுகிப் பார்த்தால் நாவலின் இசைத்தன்மை முடிவேயில்லாத ராக விஸ்தாரமாகத் தெரியும், நம் ஊர் சங்கீதக்காரர்கள் புனிதமயப்படுத்துவதுபோல் சங்கீதம் தெய்வீகமானதல்ல; மானுடத் தன்மை மிகுந்தது என்றும், இசை பக்தியின் கருவியல்ல அதுவே ஒரு கலை என்றும் அவர் வாதிடுவதாகப் படுகிறது.
ஜானகிராமன் நவீனத்துவரல்லர், செவ்வியல் மரபின் தொடர்ச்சி கொண்டவர், இசையிலும் எழுத்திலும். அந்த மரபில் அபூர்வமாக நிகழும் மீறலின் அடையாளம் அவர் எழுத்து. சமூகமும் மரபுகளும் காபந்து பண்ணிவைத்திருக்கும் மதிப்பீடுகளுக்கு எப்போதும் எதிரானது அவருடைய கலை நோக்கு. விலக்கப்பட்டவர்களின் சார்பானது அவருடைய கரிசனம். இதை அவரது நாவல்களின் பொதுக் குணமாகச் சொல்லலாம். அதன் ஒரு சான்று 'மோக முள்.' சமூகத்தின் அணுகு முறையில் மீறலாகக் கருதப்படும் ஒன்றைத் தனது எழுத்தில் நியாயமானதாக நிறுவுகிறார். ஏனெனில் அவரது கண்ணோட்டத்தின்படி மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவையல்ல; உணர்ச்சிகளுக்கும் அதை உருவாக்கும் சூழலுக்கும் இணங்கியவை, 'மோக முள்'ளின் கதையாடலைத் தீர்மானிக்கும் சிக்கல்களில் ஒன்று யமுனாவின் திருமணம். மணப்பருவம் கடந்தும் அவளுக்கு வாழ்க்கை அமையாததன் காரணம் அவள் பிறப்பு. அவள் பிராமண மராட்டிய உறவுகளின் சந்ததி, அதுவே அவளுக்குத் தடையாகிறது. அதன் தொடர் விளைவுதான் கதையின் நீட்சி. கலப்பு மணம் என்ன அவ்வளவு சிக்கலுக்குரிய பிரச்சனையா என்று நாவலை முன்பு வாசித்த

 சந்தர்ப்பங்களில் கேள்வி எழுந்திருக்கிறது. இப்போது வாசிக்கும்போது நிலவும் நிகழ்காலச் சூழல் அந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று பதிலளிக்கிறது. ஜானகிராமனை 'தீர்க்கதரிசி' என்று சொல்லலாம். அப்படிச் சொல்வது அந்தக் கலைஞனுக்கு எவ்வளவு பெரிய அவமானம்? தனது படைப்புகளில் ஜானகிராமன் அதிகம் வாஞ்சை கொள்வது பெண்களிடம்தான், அவரது ஆரம்ப கால நாவலான 'அமிர்தம்' முதல் கடைசி நாவலான 'நளபாகம்' முடிய, பெரும்பான்மை நாவல்களும் பெண்களை முன்னிருத்தியே நகர்பவை, விதிவிலக்கானவை - கலை வறுமை நிரம்பிய அவருடைய தொடர் கதையான 'அன்பே ஆரமுதே'வும் கலையின் ஒளிமிளிரும் 'மோக முள்ளும் என்பது சுவாரசியமான முரண். இரண்டிலும் ஆணே மையம், ஆணின் பார்வையில் காட்டப்படும் உலகம்தான் அவருடையது. ஆனால் அங்கே விதியையும் விதிவிலக்கையும் உருவாக்குபவர்கள் பெண்களே, பாபு சங்கீதம் கற்கிறான். ஆனால் இசைக்கலைஞன் ஆவதில்லை. கல்லூரியில் படிக்கிறான். வேலைக்குப் போகிறான். ஆனால் சராசரி குமாஸ்தாவாக ஆவதில்லை. தன்னைத் தனக்குள் பொருத்திக்கொள்ள முடியாமல் அவன் கொள்ளும் தவிப்பை யமுனாவின் உறவு போக்குகிறது. அவளிடமிருந்துதான் அவனுடைய எதிர்காலம் துவங்குகிறது. 'பூமி வானைத் தொட்டதும் வானம் பூமியைத் தொட்டதும்' அங்கேதான்.
தனது எழுத்தை மூன்று நிலைகளில் எழுதுவதாகச் சொல்கிறார் ஜானகிராமன், எனக்கே எனக்கு, உனக்கே உனக்கு, எனக்கும் உனக்கும் ஆகிய மூன்று நிலைகள், 'மோக முள்" நாவலைக் கடந்த காலங்களில் இடைவெளி விட்டுப் பலமுறை வாசித்திருப்பேன். ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் எனக்கே எனக்கு என்று எழுதப்பட்ட படைப்புகளில் ஒன்றாக எண்ணச் செய்கிறது. அதன்மீது வைக்கப்பட்ட வைக்கப்படும் விமர்சனங்களை மீறி. 'மோக முள்' நாவலின் ஒவ்வொரு வாசகரும் இதையே சொல்லக்கூடும்.
திருவனந்தபுரம்
சுகுமாரன்
18 டிசம்பர் 2012

Monday 5 August 2019

சாவு நிலையானது காதலுக்கு அப்பாலும் - மார்க்வெஸ்

Gabriel Garcia Marquez

சாவு நிலையானது காதலுக்கு அப்பாலும் 

செனட்டர் ஒனாஸிமோ சான்செஸ் தன் வாழ்க்கையின் உன்னதமான பெண்ணைக் கண்டபொழுது அவர் இறப்பதற்கு இன்னும் ஆறு மாதங்களும் பதினோரு நாட்களும் இருந்த ரோசல் டெல் விரே என்னும் பொய்மையான கிராமத்தில் அவளைச் சந்தித்தார். அது ஒரு புறம் இரவு நேe கடத்தல்காரர்களின் கப்பல்களுக்கு ரகசிய கப்பல்து? மேடையாகவும் மறுபுறம் பகல் நேரத்தில் பாலைவனத்தின் மிகவும் பயனற்ற கழிமுகமாகவும் இருந்தது. கிராம் வெறுமையானதும், திசையற்றதுமான ஒரு கடல்புறத்தைப் பார்த்திருந்தது. எல்லாவற்றிலிருந்தும் தூரமாய் அவ்வளவு விலகி இருந்ததால் யாருடைய வாழ்க்கைப் பயணத்தையும் திசைதிருப்பும் சக்திமிக்க எவராவது அங்கு வாழ்ந்து கொண் டிருப்பார்களா என ஒருவரும் சந்தேகித்திருக்க முடியாது. அதன் பெயர் கூட ஒரு வகையான கிண்டல் தான். காரணம் அந்த கிராமத்தில் இருந்த ஒரே ஒரு ரோஜாவை செனட்டர் ஒனாஸிமோசான்செஸ், லாரா ஃபரீனாவைச் சந்தித்த அதே மதியத்தில் அணிந்து கொண்டிருந்தார். 

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர் நிகழ்த்திய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அது தவிர்க்க முடியாத ஒரு நிறுத்தமாக இருந்தது. கேளிக்கை வண்டிகள் காலை யிலேயே வந்துவிட்டிருந்தன. நகரங்களுக்குள் பொது நிகழ்ச்சி களின் போது கூட்டங்களைப் பெரிதாக்க கொண்டு செல்லப்பட்ட, கூலிக்கு அமர்த்தப்பட்ட சிவப்பிந்தியர் களைத் தாங்கிய ட்ரக்குகள் பிறகு வந்தன. பதினோரு மணிக்கு சற்று முன்பாக, இசை மற்றும் வானவெடிகளுடன் குழுவின் ஜீப் கார்களும் அமைச்சர்கக் காரும் வந்து சேர்ந்தன. அந்தக் கார் மென் சிவப்பு ஸ்ட்ராபெர்ரி ஸோடா நிறத்தில் இருந்தது. ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட காருக்குள் செனட்டர் ஒனாஸிமோ சான்செஸ் ஆழ்ந்த அமைதியிலும் காற்றற்றும் இருந்தார். ஆனால் கதவைத் திறந்தவுடன், நெருப்பலை வீச்சு ஒன்றினால் அதிர்ந்து போனார். அவருடைய தூய பட்டுச்சட்டை ஒருவித மென்னிற சூப்பினால் நனைந்தது. அவர் பல வருடங்கள் வயதாகிவிட்ட மாதிரியும், எப்பொழுதையும் விட மிகத் தனிமையாகவும் உணர்ந்தார். நிஜத்தில் அவருக்கு நாற்பத்து இரண்டு வயதே ஆகியிருந்தது. காட்டிங்கென் கல்லூரியில் ஆனர்ஸ் பட்டம் பெற்று, உலோகவியல் துறை என்ஜினீயராக வெளிவந்தார். அதிகம் பயனின்றிப் போயினும், மோசமாக மொழிபெயர்க்கப்பட்ட லத்தீன் பேரிலக்கியங் களின் ஒரு ஆர்வமான வாசகர். அவருக்கு சருமம் ஒளிரும் ஜெர்மன் பெண்ணுடன் திருமணம் ஆகி, அவள் மூலமாக ஐந்து குழந்தைகள் இருந்தன. அவர்கள் எல்லோரும் தம் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர்--அவர் எல்லோரையும் விட மகிழ்ச்சியானவராக - அடுத்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பாக அவர் இறந்துபோவார் என்று மூன்று மாதங்களுக்கு முன்னர் அவர்கள் அவரிடம் சொல்லும் வரை. 

பொதுப் பேரணிக்கான தயாரிப்புகள் முடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, அவர் ஓய்வெடுப்பதற்காக அவர்கள் ஒதுக்கித் தந்திருந்த வீட்டில் ஒரு மணி நேரம் தனிமையில் இருப்பதற்கு சாத்தியப் படுத்திக்கொண்டார். படுப்பதற்கு முன்பாக, பாலைவனத்தின் வழியாய் எல்லாம் அவர் வாடி விடாமல் வைத்திருந்த ரோஜாவை ஒரு தம்ளர் குடிநீரில் போட்டு வைத்தார். நாளின் மற்ற நேரங்களுக்கெல்லாம் அவருக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கறியின் பொரித்த பகுதிகளை திரும்பத் திரும்ப சாப்பிட வேண்டியதைத் தவிர்க்க விரும்பி, அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த, தானியங் களிலிருந்து தயாரிக்கப்பட்டிருந்த உணவை உட்கொண்டார். மேலும், குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னராகவே பல வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டார். வலிக்கு முன் -பாகவே நிவாரணத்தை அடையும் வகையில். கித்தான் தொட்டிலுக்கு மிக அருகில் மின் விசிறியைச் சுழலவிட்டு, ரோஜாவின் நிழலில் பதினைந்து நிமிடங்களுக்கு வெற்றுடம் -புடன் நீட்டிப் படுத்திருந்தார். குட்டித் தூக்கத்தின் போது சாவைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்றபடிக்கு மனதின் திசை திரும்பல்களுக்கு எதிராகப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார். மருத்துவர்களைத்தவிர, அவர் ஒரு முடிவு செய்யப்பட்ட காலத்திற்குள் மரணத்திற்கு உட்பட்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் வாழ்க்கையில் எவ்வித மாறுதல்களும் இன்றி தன் ரகசியத்தைத் தானே தனியாகப் பொறுத்துக் கொள்ளத் தீர்மானித்தார்- தற்பெருமையினால் அல்ல அவமானத்தினால். மதியம் மூன்று மணிக்கு மீண்டும் பொதுப்பிரவேசம் செய்தபோது தன் மனதின் முழுக்கட்டுப்பாட்டுடன் உணர்ந்தார் 

வெடுத்துக் கொண்டு, அவரின் ஆன்மா வலி எதிர்ப்பு மாத்திரைகளால் வலிவூட்டப்பட்டு, முரட்டுத்தனமான லினன் தலாக்குகளையும், பூ வேலைப்பாடு செய்யப்பட்ட சட்டையையும் அணிந்து தூய்மையாக இருந்தார். இருப்பினும் சாவின் தேய்மானத்தன்மை அவர் உத்தேசித்திருந்ததைவிட மிகத் தீவிர அழிப்புத்தன்மை உடையதாயிருந்தது. காரணம் மேடையின் மேலே சென்றதும், நல்ல நிகழ்வுக்காக அவருடன் கைகுலுக்கிப் போராடிக் கொண்டிருப்பவர்கள் மீது, விநோதமான வெறுப்பு கலந்த புறக்கணிப்பை உணர்ந்தார். பிற சமயங்களில் போல இம்முறை வெறுமையான சிறு சதுக்கத்தின் உப்பு மண் கற்களின் வெப்பத்தைத் தாங்க முடியாமலிருந்த, காலணிகள் அணியாத செவ்விந்தியர் குழுக்களுக்காக அவர் வருத்தப்பட வில்லை. கைத்தட்டல்களை ஒரு கையசைவின் மூலம் மெளனப் படுத்தி, ஏறத்தாழ ஒரு ஆத்திரத்துடன், எவ்வித சைகைகள், அசைவுகளுமின்றி அவர் பேசத் தொடங்கினார்- பார்வை கடலின் மீது பதிந்திருக்க, கடல் வெப்பத்தினால் பெருமூச்சு விட. அவருடைய அளவிடப்பட்ட, ஆழ்ந்த குரலில் அமைதி -யான நீரின் தன்மை இருந்தது. ஆனால் மனப்பாடம் செய்யப் பட்டு, பலமுறை திரும்பச் சொல்லப்பட்ட பேச்சு நினைவுக்கு வரவில்லை . மாறாக, Marcus Aurelius-இன் நான்காவது Meditations-இல் கூறப்பட்ட விதிவசமான அறிவிப்புக்கு எதிரானது போன்றதாயிற்று. 

'நாம் இங்கு இயற்கையைத் தோற்கடிக்கும் நோக்கத்துடன் கூடியுள்ளோம்' அவர் தொடங்கினார், அவருடைய வலிமையான நம்பிக்கைகளுக்கெல்லாம் எதிராக. 'தாகத்தி னதும், மோசமான தட்பவெட்ப நிலைகளினுடையதுமான பிரதேசத்தில், நம்முடைய தேசத்திலேயே நாம் கேட்பாரற்ற பிள்ளைகளாக, கடவுளின் அனாதைகளாக, நம் சொந்த தேசத்திலிருந்தே நாடு கடத்தப்பட்டவர்களாக இனி ஒரு பொழுதும் இருக்க மாட்டோம். கனவான்களே, கனவதிகளே, நாம் வித்யாசமான மனிதர்களாக ஆவோம், நாம் உயர்ந்த மகிழ்ச்சியான மனிதர்களாவோம்.' 

அவருடைய இந்த சர்க்கஸ் வேலைகளுக்கு ஒரு அமைவு முறை இருந்தது. அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அவருடைய உதவியாளர்கள் காகிதப் பறவைகளில் சில கொத்துக்களை எடுத்து காற்றில் வீசினர். இந்த செயற்கை  பலகையினால் அமைக்கப்பட்ட மேடையினைச் சுற்றிப் பறந்து, கடலை நோக்கிப் போயின. அதே நேரத்தில் மற்றவர்கள், ஒட்டுக் கம்பளத்தில் ஆன இலக்க " கொண்ட செயற்கை மரங்களை பாரவண்டிகளிலிருந்து எடுத்து, உப்பு மண்ணில், கூட்டத்திற்குப் பின்புறம் நட்டார்கள். அட்டையில் செய்யப்பட்ட ஒரு பொய் முகப்பினை நிறுத்தி முடித்தனர். அதில் சிவப்பு செங்கற்கள் மற்றும் கண்ணாடி ஜன்னல்களுடைய செயற்கை வீடுகள் இருந்தன. அவற்றைக் கொண்டு நிஜ வாழ்க்கையில் பரிதாபகரமான பொத்தல் குடிசைகளை மறைத்தனர். 

இந்த கேலிக் கூத்துக்கு இன்னும் கொஞ்சம் நேரம் அளிக்கும் வகையில், லத்தீனில் இரண்டு மேற்கோள்களுடன் செனட்டர் பேச்சினைத் தொடர்ந்தார். மழை உண்டாக்கும் யந்திரங்கள், உணவுக்காகும் விலங்குகளை உற்பத்திசெய்யும் எடுத்துச் செல்லப்படக்கூடிய உபகரணங்கள், ஜன்னல் தொட்டிகளில் பேன்ஸி மலர்கள், உப்பு மண்ணில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் மகிழ்ச்சியின் எண்ணெய்கள் போன்ற வற்றை அளிக்க உறுதி கொடுத்தார். தன் கற்பனை உலகம் உருவாக்கப்பட்டு விட்டதைக் கண்ட அவர் அதைச் சுட்டிக் காட்டினார். 'அது போலத்தான் நமக்கு இருக்கும், கனவான் களே, கனவதிகளே' அவர் உரக்க அறிவித்தார். 

பார்வையாளர்கள் சுற்றித் திரும்பினர். காகிதத்தில் தீட்டப்பட்ட ஒரு பெரும் கடற்கப்பல், வீடுகளுக்குப் பின்புறம் கடந்து சென்றது. அந்த செயற்கை நகரத்தில் இருந்த மிக உயரமான வீடுகளையெல்லாம் விட அது உயரமாக இருந்தது. அது செய்யப்பட்டு, கீழிறக்கப்பட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட காரணத்தால் அதன் மீது பொருத்தப்பட்டிருந்த கெட்டி அட்டை நகரம் பயங்கர சீதோஷ்ணத்தால் அரிக்கப்பட்டிருப்பதையும், அது ரோசல் டெல் விரேவைப் போலவே ஏறத்தாழ பரிதாபமாகவும், தூசி படிந்தும் இருப்பதை செனட்டர் மட்டுமே கவனித்தார். 

இந்தப் பன்னிரண்டு வருடங்களில் முதல் முறையாக நெல்ஸன் ஃபரீனா தன் வணக்கத்தைச் சொல்ல செனட்டரிடம் செல்லவில்லை. தன் மதியத்தூக்கத்தின் மிச்சங்களுடன் கித்தான் தொட்டிலில் படுத்தபடி, தன் கம்பவுண்டர் கைகளினால் தானே கட்டிய, இழைக்கப்படாத பலகைகளால் ஆன வீட்டின் குளிர்ச்சியான கூடத்திலிருந்து பேச்சினைக் கேட்டுக் கொண்டி -ருந்தான். அவன் முதல் மனைவியை இதே கைகளால்தான் இழுத்து, நான்கு துண்டங்களாக வெட்டினான். டெவில்ஸ்டிவிலிருந்து தப்பித்து, ஒரு கப்பலில் ஏறி ரோசல் டெல் விமாவில் தோன்றினான். ஒரு பாவமும் அறியாத மேக்கா பெருங்கிளி -ளால் நிரம்பியிருந்த அந்தக் கப்பலில், பாரமரீபோவில் அவன் கண்ட அபவாதமான, அழகிய கறுப்புப் பெண்ணா சந்தான். சிறிது காலத்திற்குப் பின், இந்த பெண் இயற்கையான காரணங்களால் இறந்து போனாள். இவள் முன்னவளின் முடிவைப் போன்ற தொன்றைச் சந்திக்கவில்லை. தன் காலிஃபிளவர் பாத்திக்கு தானே எருவாகிப் போகவில்லை மாறாக அவளின் டச்சுப் பெயருடன் உள்ளூர் இடுகாட்டில் முழுமையாகப் புதைக்கப்பட்டாள். இவளின் மகள், இவளுடைய நிறத்தையும், உடற்கட்டினையும், மஞ்சளும், வியப்புக்குட்பட்டது போன்றதுமான அப்பாவின் கண்களையும் ஸ்வீகரித்துக் கொண்டிருந்தாள். உலகின் மிகச் சிறந்த பெண்ணை தான் வளர்க்கிறோம் என்ற கற்பனை அவனுக்கு இருந்ததற்குத் தகுந்த காரணம் இருந்தது. 

எப்பொழுது முதல் முறையாக சான்செஸ்ஸை அவருடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தின் போது சந்தித்தானோ அப்பொழுதிலிருந்தே நெல்ஸன்ஃபரீனா சட்டத்தின் பிடிகளில் இருந்து அவனை அப்பால் வைத்துவிடக் கூடிய பொய் அடையாள அட்டையைப் பெறுவதற்கு உதவும் படி அவரைக் கெஞ்சியிருக்கிறான். செனட்டர், நட்பான முறையில் ஆனால் ஸ்திரமான வகையில் மறுத்துவிட்டார். நெல்ஸன் ஃபரீனா முயற்சியைக் கைவிட வில்லை. வித்யாசமான உதவி கோருதலுடன் தன் கோரிக்கையைத் திரும்பச் சொல்லு வான். ஆனால் இந்த முறை, கடத்தல்காரர்களின் வெப்பமான பதுங்குமிடத்தில் உயிருடன் அழிவதற்கு விதிக்கப்பட்டவனாக, தன் கித்தான் தொட்டிலிலேயே தங்கிவிட்டான். கடைசி கைத் தட்டல்களைக் கேட்ட பொழுது, தலையை உயர்த்தி, மரப் பலகைகளால் ஆன வேலிக்கு அப்பால் பார்த்தவன், கேலிக் கூத்தின் பின்புறத்தைக் கண்டான் : கட்டிடங்களுக்கான செட்கள், மரங்களுக்கான சட்டங்கள், மறைந்திருந்த பொய்த் தோற்றவாதிகள்- அவர்கள் பெரும் கடற்கப்பலைத் தள்ளிக் கொண்டிருந்தனர். அவன் எந்தவித காழ்ப்பும் இன்றி காறித் துப்பினான். 

'மலம்' அவன் சொன்னான் 'இது கறுப்பு மனிதர் தீவு அரசியல்'. 

பேச்சு முடிந்தவுடன், வழக்க முறைப்படி, நகரின் தெருக்களின் வழியாக, இசை மற்றும் வே வழியாக, இசை மற்றும் வான வெடிகளுக்கு இடையில் நடந்து சென்ற செனட்டர் தம் கஷ்டங்களைக் கூறிய நகர மனிதர்களால் சூழப்பட்டார். அவர்களின் வேண்டு கோள்களை நல்ல மனநிலையுடன் கேட்டுக்கொண்டார். அவர்கள் ஒவ்வொரு வரையும் ஆறுதல்படுத்த, அவர்களுக்கு எந்தவிதமான கடினமான உதவிகளும் செய்யாமலேயே ஏதாவது ஒரு உத்தியைக் கண்டு பிடித்தார். தன் சிறு குழந்தைகள் ஆறு பேருடன் வீட்டின் கூரை மீதிருந்த ஒரு பெண் இந்த களேபரத்தையும், பட்டாசு வெடிச்சத்தங்களையும் மீறி தன் குரலைக் கேட்கும்படி செய்தாள். 

'நான் ஒன்றும் அதிகமாகக் கேட்கவில்லை செனட்டர்' அவள் கூறினாள் 'தூக்கிலிப்பட்ட மனிதனின் கிணற்றி லிருந்து நீர் இரைக்க மட்டும் ஒரு கழுதை வேண்டும்'. செனட்டர் ஆறு மெலிந்த குழந்தைகளைக் கவனித்தார். 'உன் கணவனுக்கு என்ன ஆயிற்று?' என்று கேட்டார். 'அரூபாத் தீவுக்கு செல்வம் தேடிப் போனார்' அந்தப் பெண் நல்ல மனநிலையில் பதில் கூறினாள். 'அவர் கண்டதென்னவோ பற்களின் மீது வைரங்களை அணியும் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை'. இந்த பதில் பெரும் வெடிச் சிரிப்பைக் கொணர்ந்து. 'நல்லது' செனட்டர் முடிவு செய்தார். 'உனக்கு ஒரு கழுதை கிடைக்கும்.' 

இதற்கு சிறிது நேரத்திற்குப் பின்னர் அவரின் உதவியாளர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு நல்ல பொதி சுமக்கும் கழுதை ஒன்றைக் கொண்டு வந்தார். மேலும் கழுதையின் பின்புறப் பகுதியில் அது செனட்டரின் பரிசு என்பதை யாரும் மறந்து விடாத வகையில் தேர்தல் பிரச்சாரக் கோஷம் அழிக்க முடியாத பெய்ன்டினால் எழுதப்பட்டிருந்தது. 

சிறிது தூரமே இருந்த அந்தத் தெருவின் வழியாகச் செல்கையில் அவர் வேறு சிறிய குறிப்புணர்த்தும் செயல்களைச் செய்தார். செனட்டரைப் பார்க்கும்படி தன் கட்டிலை வாயிற் படிக்கருகில் போடச் செய்து படுத்திருந்த நோயாளி மனிதன் ஒருவனுக்கு சிறிய கரண்டியில் மருந்து ஊற்றினார். கடைசி திருப்பத்திற்கு அருகில், பலகையினால் ஆன வேலியின் வழியாக, நிறம் வெளுத்துப் போய், சோகமாய்த் தெரிகிற நெல்ஸன் ஃபரீனாவை அவனுடைய கித்தான் தொட்டிலில் கண்டார். ஆனாலும் செனட்டர் அன்பின் தொனிப்பு எதுவும் மின்றி அவனுக்கு வணக்கம் சொன்னார்.

எப்படி இருக்கிறாய்' நெல்ஸன்ஃபரீனா தன் கித்தான் தொட்டிலில் திரும்பி, அவரைத் தன் சோகமான, மஞ்சள் - மண் நிறப் பார்வையால் நனைத்தான். 

“என்னை உங்களுக்குத்தான் தெரியுமே' அவன் கூறினான். 

வணக்கம் கூறுதலைக் கேட்டபொழுது அவனுடைய மகள் முற்றத்திற்கு வந்தாள். வெளுத்துப்போன குவாரிரோ இந்திய அங்கியை அணிந்திருந்தாள். அவளுடைய தலை வர்ண வில்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. சூரிய வெப்பத் திலிருந்து காக்க அவள் முகம் சாயம் பூசப்பட்டிருந்தது. ஆனால் அந்த மாதிரியானதொரு சீர்குலைந்த நிலையிலும் அவ்வளவு அழகிய பெண் உலகில் வேறு எங்கேயும் இருந்த தில்லை என்று கற்பனை செய்வது சாத்தியமாயிருந்தது. செனட்டர் பேச்சு மூச்சற்றுப் போனார். 'நான் நாசமாய்ப் போவேன்' பெரும் வியப்பில் மூச்சிழுத்தார் 'கடவுள் மிகவும் பித்துப் பிடித்த காரியங்களைச் செய்கிறார்! 

அன்றிரவு நெல்ஸன் ஃபரீனா தன் மகளை, அவளின் சிறந்த உடைகளில் அலங்கரித்து செனட்டரிடம் அனுப்பினான். ஆயுதம் தாங்கிய இரு காவலர்கள் இரவல் வாங்கப்பட்டிருந்த அந்த வீட்டினுள் வெப்பத்தின் காரணமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தனர். முகப்பறையில் இருந்த ஒரே ஒரு நாற்காலியில் அவளைக் காத்திருக்க உத்தரவிட்டனர். 

அடுத்த அறையில் ரோசல் டெல்விரேவின் முக்கியப் பிரமுகர்களுடன் செனட்டர் இருந்தார். தன் உரைகளில் அவர் சொல்லாமல் விட்டு விட்ட உண்மைகளைச் சொல்வதற் காக அவர்களை அங்கு ஒன்று சேர்த்திருந்தார். இந்தப் பாலைவனத்தில், எல்லா நகரங்களிலும் அவர் எப்பொழுதும் சந்தித்தவர்களைப் போலவே இவர்கள் தோன்றியதால், முடிவற்ற அந்த இரவுச் சந்திப்பில் செனட்டர் தானும் ளத்துப் போய், சலிப்புற்றிருந்தார். அவர் சட்டை வெயில் நனைந்திருந்தது. மின் விசிறியின் வெப்பமான 'ஊறில் தன் உடல் மீது அதை உலர்த்த முயன்று எடிருந்தார். அந்த அறையின் கனத்த வெப்பத்தில் "ஐ ஒரு பெரிய ஈ மாதிரி ரீங்கரித்துக் கொண்டிருந்தார். மின் விசிறி ஒரு கொண்டிருந்தது. 


வாஸ்தவமாக, நாம் காகிதப் பறவைகளைச் சாப்பிட முடியாது' என்றார் அவர். 'இந்த ஆட்டுச் சாணக் குவியலில் மரங்களும் பூக்களும் வரும் நாளில், நீர்ச்சுனைகளில் புழுக களுக்குப் பதிலாக சாப்பிடக் கூடிய பெரிய ஷேட் மீன்கள் வரும் நாளில் -அந்த நாளில் நானோ நீங்களோ இங்கிருக்க மாட்டோம். உங்களுக்கும் எனக்கும் அது தெரியும். நான் சொல்வது புரிகிறதா ? ' யாருமே பதில் சொல்லவில்லை., அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, காலண்டரின் ஒரு தாளக் கிழித்து, அதில் ஒரு காகிதப் பட்டாம் பூச்சியை தன் கைகளால் உருவாக்கியிருந்தார். எந்த குறிப்பிட்ட இலக்கும் இன்றி அதை மின் விசிறியிலிருந்து வந்த காற்றின் இழுவையில் சுண்டி விட்டார். அந்தப் பட்டாம்பூச்சி அறை யைச் சுற்றிப் பறந்து பின், பாதி திறந்திருந்த கதவின் வழியாக வெளியே சென்றது. சாவின் பங்கேற்பினால் உண்டான கட்டுப்பாடுடன் செனட்டர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். 

'ஆகவே' அவர் கூறினார் ' நீங்கள் முன்பே மிக நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதை நான் உங்களுக்குத் திரும்பச் சொல்ல வேண்டியதில்லை : என்னுடைய மறு தேர்தல் என்னை விட உங்களுக்குச் சிறந்த வியாபாரமாக இருக்கும். காரணம் இந்த தேங்கிப் போன தண்ணீர், செவ்விந்திய வியர்வை ஆகியவற்றால் நான் மிகவும் சலிப்படைந்து போயிருக்கிறேன். மாறாக நீங்கள் அதிலிருந்து பிழைப்பு நடத்துகிறீர்கள்.' 

லாரா ஃபரீனா காகிதப் பட்டாம்பூச்சி வெளியே வருவதைப் பார்த்தாள். அவள் மட்டுமே அதைப் பார்த்தாள். காரணம் முகப்பறையில் இருந்த காவலர்கள் தம் துப்பாக்கி களை அணைத்தபடி உறங்கிப் போயிருந்தனர். சில அசைவு களுக்குப் பிறகு அந்த லித்தோ கிராப்ஃப் செய்யப்பட்ட பட்டாம்பூச்சி, முழுவதும் விரிந்து, சுவர் மீது தட்டையாகி, அங்கேயே ஒட்டி நின்றது. தன் நகங்களைக் கொண்டு லாரா ஃபரீனா அதைப் பிய்த்தெடுக்க முயன்றாள். அடுத்த அறையிலிருந்து வந்த கை தட்டல்களினால் விழித்தெழுந்த காவலர்களில் ஒருவன் அவளுடைய பயனற்ற முயற்சியைக் கவனித்தான். 


'அதை எடுக்க முடியாது. அவன் தூக்கக் கலக்கத்துடன் சொன்னான். -  

'அது சுவற்றில் தீட்டப்பட்டிருக்கிறது' 

கூட்டத்திலிருந்து மனிதர்கள் வர ஆரம்பித்த போது மீண்டும் லாரா ஃபரீனா அமர்ந்தாள். அறைவாசல் வழியில் தாழ்ப்பாளின் மீது கை வைத்தபடி நின்றிருந்தார் செனட்டர். முன் கூடம் காலியான பிறகு லாரா ஃபரீனாவை அவர் மட்டுமே கவனித்தார். 

'இங்கு என்ன செய்கிறாய் நீ?' 

'இது என் அப்பாவின் வேலை' என்றாள் அவள். 

செனட்டர் புரிந்து கொண்டார். முதலில் தூங்கிக் கொண்டிருந்த காவலர்களையும், பிறகு லாரா ஃபரீனாவையும் கூர்ந்து கவனித்தார். அவளுடைய அசாதாரண அழகு அவருடைய் வலியை விட ஆதிக்கம் செலுத்துவதாயிருந்தது. சாவு, அவருக்கான முடிவினைச் செய்திருப்பதாக அவர் அப்போது தீர்மானித்தார். 

'உள்ளே வா' அவளிடம் கூறினார். 

அறைவாசல் வழியில் லாரா ஃபரீனா ஸ்தம்பித்து நின்றிருந்தாள் : ஆயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளைப் போல வங்கி நோட்கள் படபடத்தபடி காற்றில் மிதந்து கொண்டி ருந்தன. ஆனால் செனட்டர் மின் விசிறியை நிறுத்தினார். காற்றின்றிப்போன காகிதங்கள் அறையில் இருந்த பொருள் களின் மீது வந்திறங்கின. 

'மலம் கூடப் பறக்கும்', 'உனக்குத் தெரியுமா ?' 

என்றார் புன் முறுவல் செய்தபடி. 

பள்ளிக் கூடப்பையன் அமரும் ஸ்டூலில் லாரா ஃபரீனா 

அமர்ந்தாள். கச்சா எண்ணெயின் அதே சூரிய அடர்த்தி 1 அம், அதே நிறத்துடனும், அவளுடைய சருமம் வலிமை பாகவும், வழவழப்புடனும் இருந்தது. அவளுடைய தலைமுடி "பன குதிரைக் குட்டியினுடையதைப் போலிருந்தது. 

விளக்கினை விடப்பளிச்சென்று இருந்தன அவளுடைய கண்கள். அவளுடைய 

'! அவளுடைய பார்வையின் சரடைப்பின் 

ஓடாந்த செனட்டர், உப்புப் பிரதேசத்தின் உவாட் 

""குலந்து போயிருந்த ரோஜாவைக் கண்டாய் 


'அது ஒரு ரோஜா' என்றார். 

குழப்பத்தின் சாயலுடன் அவள் 'ஆமாம்' என்றாள். 

ஆம்' ரியோஹாச்சாவில் அவை என்னவென்பதை நான் தெரிந்து கொண்டேன்' என்று கூறினாள். 

தன் சட்டைப் பித்தான்களைக் சுழற்றியபடி, ரோஜாக்களைப் பற்றிப் பேசிய வண்ணம் செனட்டர் ஒரு ராணுவக் கட்டிலின் மீது உட்கார்ந்தார். அவருடைய மார்புப் பகுதிக்குள் எந்தப் பக்கம் தன் இதயம் இருக்கிறது என்று கருதினாரோ அந்தப் பகுதியில் ஒரு கடற் கொள்ளைக்காரனின் பச்சை குத்தியிருந்தார். அது இதயத்தைத் துளைக்கும் அம்பு வடிவில் இருந்தது. நனைந்து சொத சொதத்துப் போயிருந்த சட்டையைத் தரையில் வீசிவிட்டு, லாரா ஃபரீனாவை அவருடைய பூட்சுகளைக் கழற்ற உதவும்படி கேட்டார். 

கட்டிலைப் பார்த்தபடி அவள் குனிந்தாள். சிந்தனை வயப்பட்டவராய் அவளைக் கூர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தார். அவள் பூட்சுகளின் லேஸ்களை விடுவித்துக் கொண்டிருக்கும்போது, அவர்கள் இருவரில் இந்த சந்திப்பின் துரதிர்ஷ்டத்தில் எவர் முடியப் போகிறார்கள் என நினைத்தார். 

'நீ வெறும் குழந்தை ' என்றார் அவர். 'நீங்கள் நம்பவில்லையா?' அவள் கூறினாள் 'ஏப்ரலில் எனக்கு பத்தொன்பது வயதாகப் போகிறது' செனட்டர் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். 'என்ன நாள் ?' 'பதினோறாம் நாள்' என்றாள். செனட்டர் செளகரியமாக உணர்ந்தார். 'நாம் இருவருமே மேஷ ராசிக்காரர்கள்' என்றார். புன் முறுவல் செய்தபடி தொடர்ந்தார் 'அது தனிமையின் ராசி' . 

லாரா ஃபாரீனா கவனம் செலுத்தவே இல்லை. காரணம் பூட்சுகளை அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. செனட்டர், தன் பங்குக்கு, லாரா ஃபரீனாவுடன் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருந்தார். காரணம் திடீர்க் காதல்களில் அவருக்குப் பழக்கமில்லை. மேலும் இப்போதிருப் பதின் தொடக்கங்கள் அவமதிப்பில் இருந்தன என்பதை 

அறிந்திருந்தார். வெறுமனே சிந்திப்பதற்கு சிறிது நேரம் வேண்டுமென்பதற்காக தன் முட்டிகளுக்கு இடையில் லாராஃபரீனாவை இறுகப் பிடித்து, அவளை இடுப்புப் பகுதியில் அணைத்தபடி தன் முதுகுப் பக்கத்தை கட்டிலில் கிடத்தினார். ஆடைகளுக்கு அடியில் அவள் நிர்வாணமாய் இருந்தாள் என்பதைப் பிறகு உணர்ந்தார். அவள் உடலிலிருந்து காட்டு மிருகங்களினுடையதைப் போன்ற அடர்ந்த வாசனை வீசியது. ஆனால் அவள் இதயம் பயந்து போயிருந்தது. அவள் சருமம் ஒளிரும் வியர்வையால் இடைஞ்சலுற்றிருந்தது. 

'யாருமே நம்மைக் காதலிப்பதில்லை' அவர் பெருமூச்செறிந்தார். 

லாராஃபரீனா ஏதாவது சொல்ல முயற்சி செய்தாள். ஆனால் அவளுக்கு மூச்சு விடுவதற்கு மட்டுமே தேவையான காற்றிருந்தது. அவளுக்கு உதவும் பொருட்டு அவளை அவருக்கு அருகில் படுக்க வைத்தார். அறையின் விளக்கை அவர் அணைத்தபோது ரோஜாவின் நிழலில் இருந்தது அறை. அவள் தன் விதியின் கருணை வசம் தன்னை ஒப்படைத்தாள். மெதுவாக செனட்டர் அவளை வருடினார். அவளுடைய முக்கியப் பகுதியைத் தேடிய வண்ணம், ஏறத்தாழ தொடுகிற நிலையில் இருந்தார். 'அவளை' எங்கு இருக்க வேண்டுமென எதிர்பார்த்தாரோ அங்கு இடை மறித்தபடி ஏதோ இரும்பு போன்ற ஒன்றைத் தொட்டார். 

'அங்கு என்ன வைத்திருக்கிறாய்?' 

'ஒரு பூட்டு' என்றாள். 

"என்ன நரகம் ! கோபமாகக் கூறிய செனட்டர் மிக 

நன்றாகத் தெரிந்திருந்ததைக் கேட்டார். 

'சாவி எங்கே ? 

லாராஃபரீனா ஆசுவாசமான மூச்சிழுத்தாள். என அப்பா வைத்திருக்கிறார்' அவள் பதில் 

அளித்தாள். * ங்கள் ஆட்களில் ஒருவரை சாவியைப் பெற பயும்படியும், என் அப்பாவின் நிலைமையைச் சரி செய்வீர்கள் என்ற எழுதியளிக்கப்பட்ட உறுதிமொழி யையும் அவர் மூலமாக அனுப்பும்படியும் என்னிடம் சொன்னார்.' 

செனட்டர் விறைப்பேறிப் போனார். 

'தவளைத் தேவடியாள் மகன்' அவர் கடும் கோபத்தில் முணுமுணுத்தார். படபடப்பைச் சமன்படுத்திக் கொள்ள அவர் கண்களை மூடினார், தன்னையே இருளில் சந்தித்தார். நினைவு கொள், அவர் ஞாபகப் படுத்திக் கொண்டார், நீயோ அல்லது வேறு எவரோ, உன் சாவுக்கு முன் அதிக காலமிருக்காது. உன் பெயர் கூட இல்லாமல் போவதற்கு அதிக காலமிருக்காது. 

தீடீர் நடுக்கம் குறைவதற்குக் காத்திருந்தார். 

- 'ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்' அவர் அவளிடம் அப்போது கோட்டார் : 'என்னைப் பற்றி என்ன கேள்விப் பட்டிருக்கிறாய் ? 

'கடவுள் சத்தியமான உண்மை உங்களுக்கு 

வேண்டுமா ? ' 

'கடவுள் சத்தியமான உண்மை ' 

'நல்லது' லாராஃபரீனா துணிகரமாகத் தொடர்ந்தாள். 'மற்றவர்களை விடவும் நீங்கள் மோசம், காரணம் நீங்கள் வித்யாசமானவர் என்று சொல்கிறார்கள்.' 

செனட்டர் இதனால் மன நிலை குலையவில்லை. அவர், கண்கள் மூடியபடி நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். மீண்டும் கண்களைத் திறந்த போது தன்னுடைய மிக ஆழ்ந்த உள்ளுணர்வுகளில் இருந்து மீண்டவர் போலத் தோன்றினார். 

'ஒ என்ன நரகமிது ! அவர் தீர்மானித்தார். பெட்டை நாயின் மகன் உன் அப்பாவிடம் சொல், நான் அவனுடைய நிலைமையை நேர் செய்கிறேன் என்று' 

' நீங்கள் விரும்பினால் நானே போய் சாவியை வாங்கி - வருகிறேன்' என்றாள் லாராஃபரீனா. ,ன என்பதை 


செனட்டர் அவளை பின்னுக்கு இழுத்துக் கொண்டார். (சாவியைப் பற்றி மறந்துவிடு' , 'கொஞ்ச நேரம் என்னுடன் 

தனியாக இருக்கும் போது யாருடனாவது இருப்பது நல்லது.' என்றார். 

அவளுடைய கண்கள் ரோஜாவின் மீது பதிந்த வண்ணம் அவருடைய தலையைத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டாள் . செனட்டர் அவள் இடையைப் பற்றியபடி, காட்டு விலங்கின் கையிடுக்கில் தன் முகத்தைப் புதைத்து பயங்கரத்திற்குள் தன்னை இழந்து கொண்டார். ஆறு மாதங்களும் பதினோரு நாட்களும் கழிந்த பிறகு அவர் அதே நிலையில் இறந்து போவார், சீரழிந்து, மறுதலிக்கப்பட்டு காரணம் லாராஃபரீனாவுடன் ஆன தொடர்பு பற்றிய பொதுஜன வதந்தியாலும், அவள் இல்லாமல் இறப்பது பற்றிய பெரும் ஆத்திரத்தில் அழுதபடியும்.

Sunday 4 August 2019

கன்னியும் மீமனிதக் கிழவியின் காதகப் பார்வையும் - சிதானந்த தாஸ்குப்தா :: தமிழில் - ரமோலா நடராஜன்



கல்குதிரை - மார்க்வெஸ் சிறப்பிதழ்

கன்னியும் மீமனிதக் கிழவியின் காதகப் பார்வையும்

சிதானந்த தாஸ்குப்தா

எரிந்திராவைக் கதையாக்க மாயாவசீகர இயக்கம் தேவை. ஆனால் நாவலாக அன்றி திரைக்கதையாக எழுதினார் முதலில். காணாமல் போனதால் மீண்டும் வேண்டியதாயிற்று எழுத. எழுத்தின் கற்பனை காட்சிப்படிமங்களை இயக்குவது இதனால்தான். படிமங்கள் அடுக்கப்பட்ட பக்கம்பக்கமாக இழுத்துக்கொண்டுவாக்கிய அமைப்பில் நூல்ரப்பராகச் சென்று மாறாத உண்மையொன்றை உணர்த்தும். காட்சிகளை மறக்கவியலாதபடி அடுக்கடுக்காகப் பளீரிடும் வகையில் கொண்ட படத்தைப் பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவம். பீறிடும் வார்த்தைகள் கொண்ட நடை வாசகனின் கற்பனைக்கும் வர்ணனையிலிருந்து படிமங்களைப் பிரித்துப் பார்க்கும் சக்திக்கும் சவால். ஒளிர்கிற கண்ணாடியின் காட்சிகளில் கற்பனை தூண்டும் பிம்பங்களைப் பார்க்கச் செய்கிற கடினமான வாக்கியங்கள், படிமக் கணைகள், வித்தைக்காரன் சுழற்றிப்போடுகிற மின்னும் கற்பளிங்குகள். பார்க்கும் கண்கள் மருள், அவள் துயரம், அவள் கண்ணியம் உச்சத்திலிருந்து அடைகிற வீழ்ச்சி, எள்ளல், அழிவு, வெகுளித்தனம், பகட்டு இப்படிப் பலவித உணர்வுகள் மனிதமாகக் கலந்து போகின்றன.

எரிந்திரா, அவளை விற்றுவிடும் காதகிப்பாட்டி, பாட்டியிடமிருந்து காப்பாற்ற விழைகிற இளைஞன் யுலிளஸ் என்று திரைக்கதை சுழல்கிறது. பாலைவனத்தில் படமாகிய வசீகர நாடகத்தில் ஓவிய-எழுத்துத் திறமைகள் சங்கமிக்கின்ற. ஆதார உணர்வுகளின் நடனத்தில் இயங்குகிற பாத்திரங்களை எழுதி இயக்கத்தை ரை குவேரா என்ற ப்ரேஸிலிய இளைஞரிடம் விடுகிறார் மார்க்வெஸ்.

படம் முடிந்து வரும்போது தூக்கம் விழித்த கனவாகிறது. கோர்வையற்றும் இடம்பெயர்ந்தும் தலைகீழாகவும் நினைவுகள் - பாலைவனமும் க்யூ வரிசைகளும் சார விளக்குகளும் காதல்வசப்பட்ட பெயர்களான எரிந்திராவையும் யுலிஸ்ஸையும் பிடிக்கத் துரத்தும் கார்களும் அலங்கார நாற்காலியில் பாட்டியும் தங்கிவிட,இருந்தும் வார்த்தைகளின் மந்திரசக்தி படத்திலன்றி எழுத்தில்தான். மொழி தந்த போத்தல்களிலிருந்து பூதங்களை உலவ விட்டிருப்பதில் தான். படிமங்கள் மூலம் வருகிற பூதங்கள் ஒளிந்து விளையாடுகின்றன. வாசக மூளையாகிய கண்ணாடியில் பிரதிபலித்து திரும்பவும் வார்த்தைகளாகின்றன. திரைக்கதையை நாவலாக அவர் எழுதும்போது கூடுதலான கிளர்ச்சி வாசகனுக்கு நிச்சயம்.

தமிழில் - ரமோலா நடராஜன்

Thursday 1 August 2019

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல் கோணங்கி 3

உலர்ந்த நிலத் தோற்றங்களின் அரூபக் கதையாடல்  கோணங்கி  3
3
சிறுகதையின் திருமூலரை மனக்கோட்டையில் அடைத்த பயத்தில் நடுங்கும் புறம் கோட்டை மதில்கள் எட்டிய வெளியில் நகரும். பிரபஞ்சத்திலேயே விடுவிக்க முடியாத சிக்கலான வஸ்து கதையாகவே இருக்க முடியும். "ஓடி னால் (odin) ஓடினுக்குக் கொடுக்கப்பட்டு சாம்பல் மரத்தில் ஒன்பது பகல்களும் ஒன்பது இரவுகளும் தொங்க விடப்பட்டு பிறகு ஓடினால் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஸ்காண்டினேவிய ஆதி எழுத்துக்களை மூதாதையர்கள் செதுக்கியது போல தங்கள் எழுத்துக்களை செதுக்கிக் கொண்டார்கள். ஆனால் நான் கண்டது இந்தச் சச்சதுக்கத்தின் நடுவே மஞ்கள் மரக்கம்பம். அதனுடைய உச்சியில் மீனின் கறுப்பு உருவம். எங்களுடன் வந்த ஓர்ம் அந்த மீன்தான் அந்த வார்த்தை என்றான். ஆனால் உன்னுடைய சாவைச் சந்திக்க நீண்ட நாட்கள் இல்லை. ஏனெனில் நீ அந்த வார்த்தையைக் கேட்டுவிட்டாய். * போர்ஹெவின் வார்த்தையில் திறந்து கொண்ட கபாடபுரம் ஞாபகம்காண மறதியைத் தேடுவதில் ஐடமென இருநூறு வருஷங்கள் நாற்காலிகளில் வீற்றிருந்தார்கள் எழுத்தாளர்கள். எதார்த்தவாதக் கதைஉலகை இருள்கொண்டுவிட்டது. கபாடபுரத்திலிருந்து பித்தன் திரும்பிப் பார்க்கிறான். சரிந்துவிழும் கதைகளாலே சுவர் எழுப்பிய கபாடபுரம் கண்முன் செவிப்புலனாம் ஓசை கேட்டுக் கட்புலனாம் பொருளுணரும் தொல்லோர் திணைப்புக்களின் வாசனைக்குள் நிலங்களாய் விரிந்த பித்தனின் வார்த்தையில் கபாடபுரத்தின் மறையாத யார் யாருடைய காலடிகளின் வளைந்த ரேகை அலையலையாய். முன்னோர் கலாச்சாரம் மூழ்கிய கடலினுள்ளே தொல்காப்பியத் திணைப்பூவில் விரியும் கடல் கொண்ட கபாடபுரம். வெறுமையாகி நின்ற தெருக்களில் உலவும் முன்னறியாத கதைகள் முகங்களை விழுங்கி கிழக்கோட்டான்களாய் தனிமொழியில் சொல்லத் தொடங்கிய ஞாபகங்கள் தெருக்களில் மோதி எதிரொலிக்கின்றன. கபாடபுரத் தெருவில் பித்தனிடம் பேசுகிறது நகரம். கடல் கொண்டழிந்த தெருக்களில் வசித்தது தனிமை. மெளனியின் எட்டிய வெளிக்கும் அப்பால்,
297
கபாடபுரம் விரிவதைப் பார்வைகொள்ளச் சிறிது நேரம் ஆகியது போலும். முன் பின்னும் இடிந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டக் கலாச்சாரத்தின் பாழ் தோற்றம். . . பாதையில் புதைந்த சுடுமண் தாழிகளின் புராதன மூச்சிலிருந்து குருதியின் பழங்கால் ரகஸியமே கதைமரபாகும். உறைநிலையில் இருந்த பூதக ஏடுகள் நுரைபொங்கி பித்தனை இழுத்த ஸர்ப்ப அலைகளால் விழுங்கப்பட்டு மீண்டும் ஸர்ப்ப வாய் திறந்து வெளிப்பட்டான். ஞாபகங்களில் ஊர்ந்துவரும் ஏடுகளில் நிழல் கோடுகள் எதிரே ஒளி படர்ந்த தரையில் நீண்டு வளர்ந்து ஆடும் நிழல்கள். எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம். ஊழிப்பெருவெளியில் வெட்டி வெட்டிப் போன எழுத்துகள் நிழல்களாகி விரட்ட கூட்டமாய் கடலுக்குள்ளிருந்து நுழைய கபாடபுர நிழலின் அசுர ஓட்டத்திலிருந்து தப்பி ஓடுகிற நிழல்கள். தவளைகள் குரல் சுழற்சியில் உருவெடுத்த காடபுரம் நீருக்குள் சுழிசுழியாய் சுழல்கிறது. நகரும் பவளப்பாறைகளில் இடம் மாறி நகரும் நாவலந்தீவு. எட்டுத் துதிக்கைகள் கொண்ட கடல்ராசியாக மாறிய நாவலந்தீவு தோன்றி மறைய பித்தன் தலையில் விழுந்த துதிக்கையின் ஸ்பரிசம் பட்டு கற்பனைத் தீவுகளில் விசித்திர நீர் செடிகள் ஒளிர்வடைந்து புதைபாதையில் சுழற்றி இழுத்தது பித்தனை. செல்லும் வழி இருட்டு. செல்லும் மனம் இருட்டு. சிந்தை அறிவினிலும் தனி இருட்டு. பித்தன் தானே விசித்திர பிராணியைத் தேடிப் போகிறான்.
பனையோலைச் சுவடிகள் நீந்திவர ஓங்காரமிட்டு அலறித்துடிக்கிறது கடல். இருள்படிகளில் புதுமைப்பித்தன். உள்ளே மெளனி வடித்த பெண் சப்தம். சிலம்பின் கொஞ்சல்கள். கேட்டுக் கேட்டு மறையும் பிரபஞ்ச கானம். வான வெளிச்சம் ஜலப்பரப்பின்மேல் படர்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. மெல்லெனக் காற்று வீசியது. அல்லிப் பூக்களின் தலைகள் ஆடின. பிரபஞ்ச கானம் அவளுள் அடைபட்டுவிட்டது. அடைபட்ட சங்கீதம் விரிந்து வியாபகம் கொள்ள வெளியுலகம் கொஞ்சமாய் மாறுதல் அடைந்தது. தலை கிறுகிறுத்து ஒன்றும் புரியாமல் இவன் தூணோடு தூணாகிவிட்டான். அவள் சங்கீதத்தின் ஆழ்ந்த, அறிதற்கரிய ஜீவ உணர்ச்சிக் கற்பனைகள் காதலைவிட ஆறுதல் இறுதி எல்லையைத் தாண்டிப் பரிமாணம் கொண்டன. மேருவை விட உன்னதமாயும் மரணத்தைவிட மனதைப் பிளப்பதாயும் அலைகள் வந்து வந்து மோதிச் செல்கின்றன. கபாடபுர இசைப் பறவைகளின் எச்சம். வழிவழியாய்க் குரல் கொடுக்கும் கோயில் பிரகாரங்களில் நடந்து போகிறான் மெளனி, சிலைகள் உருவெடுத்து மறையும். கோபுரமெல்லாம் மூளிக்கலசங்கள். மோதும் சிறகுகளோடும் காதல் வடித்த கண்களோடும் கபாடபுர இசைப்பறவை. பறந்து பறந்து துடிக்கும் குரல். அங்கே அவள், பித்தனை எந்த யுகத்திலோ பின் தொடர்பவள், பேசாமடந்தையாகி கடல் கொண்டும் கல்லாய். கன்னியே கல்லாகிக் கண்மூடி பொய்ப்புன்னகை புரிந்து நிற்கிறாள். எதையோ கல்பதுமையிடம் இழந்த பித்தன் கதறுகிறான். கர்ப்பக்கிரஹ இருட்டு துயரங்களில் மூழ்கிக்கிடக்கிறது. இருளை மீறி முனகல் கேட்கிறது. மனம் கீறும் கண்களா, இரு தீப்பொறிகள் உள்ளே தெறிக்கின்றன.
நிருதியின் திசையிலிருந்த பலிபீடத்தின் மீது தலை அமர்ந்திருந்தது. கன்னியின் தலை. பீடத்தில் பலியிடப்பட்டு கடலில் எறியப்பட்ட சப்த கன்னிகளின் எலும்புகளின் குமுறல் அறைகளுக்குள் அடைபட்ட கடலாய் சீறுகின்றது, கன்னியின் சிரசு கல்லாகவும்
298
ஆ மையோட்டு
லலாமுகத் தோற்றங்களையும்
முடியும். பித்தன,
ஐயாட்டு நிறத்தில். அவள் முகத்தோற்றம் எல்லாமுகத் காட்டுவதாக, பித்தன் பார்த்தவாறு தி.
தை நினைத்துப்பார்த்து அதில் பிரதிபலிக்கக் கண்டான். பிற
'தேதி வெறித்தான். அவனது தந்தையின் தந்தை மகத்தோற்றத்தை நினைக்க அதுவ
ககக் கண்டான். பிறகு பாட்டியின் மகங்களையெல்லாம் காண வ
குந்தது. தாயின் முகம், அத்தையின் முகம், புராதன அது பித்தனின் கற்பனையில் வாழ்ந்தவர்கள், கடந்த காலத 2
' அனுபவத்துக்கு அப்பாற்பட்டதையும் அதில் காண கதைகளின் வீரர்களாக
* கடந்த காலத்தைச் சேர்ந்த கட்டுக் ) அடர்களது சாயல் தோன்ற எல்வா மாகாண
"ஒறங்கள், கேள்விப்பட்ட கதைகளிலுள்ள அதி உதிரத் தொடங்கிய குரல்களில் வித
பிலா முகங்களின் ஒரே முகமாக கன்னியின் சிரசில் உரிய கடலான இருளில் உறைந்து போன கல்,
'ந்துவந்த நிலத் தோற்றங்களைப் பார்வைகொண்டு
றைந்து போன கற்கள் கண்ம் விலகி நகர்கின்றன். கண அலையாகத் தங்குகிற கரிய நிற இருளடைந்த கடல் துளி விரிந்து வர்றது வரியும் கபாடபுரம் பயங்கரம் நிரம்பி மங்கலாய்த் தெரிகிறது. நகரம் ' பித்தனின் வார்த்தையில் உயிர்க்கும் கபாடபுரம்.
(கலாய்த் தெரிகிறது. நகரம் நீரில் அசைகிறது,
இருக்கும் கன்னியின் சிரசு அதன் அலகபாரம் ரத்து வினாறான பலிபீடத்தில் விரிந்து கிடக்கிறது. அவள் கூந்தல் வளர்ந்தபடியே இருந்து கட்டுக்கட்டாய் அலைய00, வெளியேறிப் போனது அவள் அரூபத்துடன். கானகங்களில் மிருகங்களின் புராதன மூச்சின
ய இருந்து கட்டுக்கட்டாய் அலையலையாய் மேல் துயில்கிறாள் கன்னி. திரும்பவும் கடலில் புகுந்து பலிபீடத்தில் தலையாகி விடுகிறார்: மனிதவம்சத்தின் ஞாபகச் சரடாக இருந்து வருகிறான். பல
(பகச சரடாக இருந்து வருகிறாள். பலிபீடத்தில் தலை பேசுகிறது. சண்பகப்பூவின் வாசம் கலந்த றெல்,
பொசம் கலந்த மெல்லிய காற்று பலிபீடத்தில் ஊன சலாடியது. காற்று எங்கிருந்து வருகிறது, கற்குகைக்குள்ளே தோன்றி அதனுள்ளே மடிகிறது போலும்.
"இம்மாதிரிக் காற்றடித்தால் சூரியோதமாகிவிட்டது என்று அர்த்தம். அஸ்தமனமாகும் போது மல்லிகையின் வாசம் வீசும்" என்றது கன்னியின் தலை.
"நீ யார்."
"மூன்று கர்ப்பகாலம் கடந்து விட்டது. எத்தனை காலம் பிரக்ஞையுடன் இருக்க இச்சைப்படுகிறேனோ அத்தனை காலமும் வாழ முடியும்.'
சிரசு மறுபடியும் பேச ஆரம்பித்தது.
"உடல் இழந்த வாழ்வு ஏற்பட்டதைக் கேட்காதே. ரகஸியம் உனக்குக் கிடைக்காது. பரம ரகஸியமாய் ஹிரண்ய கர்ப்பத்தில் சென்று ஒடுங்கிவிட்டது. இது திசைகள் அற்றுப் போன இடம். எந்த வழியாகச் சென்றாலும் ஒன்றுதான்."
பிலத்திலிருந்து எழுவதும் மறுகணம் அடியோடு மறைவதுமாகத் தெரிந்தது. பூமிக்கு அடியிலிருக்கும் எரிமலைதான் இப்படி. அக்னி கக்கும் மலையருகில் எப்படிப் படிக்கட்டும் மண்டபமும் கோவிலும் வந்தன. பூமியின் அடியில் கபாடபுரத்தின் பெருங்குமுறல் கேட்டுக் கொண்டிருந்தது. பிலத்துக்குள் சென்றான் பித்தன்.
299
ஒரே இருட்டு.
கடல் குகைகளுக்குள் மறதியில் மூழ்கிய கபாடபுர வாசிகள் தங்கள் தனிமொழியால் இசைக்கும் மகரயாழில் மறைந்த "வார்த்தை "யின் சங்கேதப் பாடலை இசைக்கிறார்கள், அவர்கள் கையிலிருந்தது மறைந்து போன சில தானியங்கள் மட்டும்தான். ஒவ்வொரு பூவைச் சேர்ந்த தானியத்திலும் ஒரு கன்னியின் தனிப்பாடலை இசைத்தார்கள், அந்த வடிவங்களைக் கேட்கக் கேட்க பல குளிர்காலங்களுக்கு கூதிர்காலத்துக்கு கோடைகளுக்கு பாலைகளின் பாதைகளுக்கு முல்லை நிலங்களுக்கு மருதநில மரங்களின் நிறங்களுக்கு சண்பகப்பாலை மரங்களின் மந்திர வயப்பட்ட குறிஞ்சிக்கு நெய்தலின் தீராத அலைகளுக்கு அவர்களது தனிப்பாடல் இழுத்துச் சென்றது. கடல் குகையின் கதக ப்பான சுவர்களில் இருந்த பெருமூச்சில் விரிந்த யாழின் நரம்புகள் தீரவே தீராமல் அ, து கொண்டே இருக்கவும் இதயத்தை அறுக்கும் சோகத்தை இசைக்கவும் மகர யாழ் கல்லில் மோதி விழுந்தது. கை தவறிவிட்ட மகர யாழ் கடலில் மூழ்கியபடியே அலைகளால் அதிர்கிறது, தானே வாசித்துக் கொண்டிருக்கும் யாழ் மூழ்கிய இனக்குழுவின் பாடலின் அடியில் மெளனித்து.
உள்போய் உள்போய் குமுறிக் குமுறிக் கதறுகிற யாழ். யாழ் அலைகள் பாறையில் மோதி அழி அழி எனக் கதறும். வானளாவிய கோபுர நிழல்களை கடல் அரிக்கிறது. கடல் மோதி மோதி கோபுரத்தைக் கொல்கிறது. கோபுரம் உருவெடுத்துப் பெருகி வளர் கிறது. கபாடபுர வீடுகளில் கறுமையான கடல், பாறைகளில் பாதம் படர்ந்து கடல்நீலமாகிவிட்ட பித்தன் எப்போதுமே கடலின்மேல் நடமாடுகிறான். கபாடபுரம் ஒளியில் லேசாய் மினுக்கும் சில ஜன நடமாட்டம் தெரிகிறது. தெருக்களில் மீண்டும் நடமாடும் அரூபமானவர்கள் கபாடபுரத்தில் இன்னமும் எஞ்சிப் போயிருக்கிறார்கள். எங்கோ மறைந்து போய் ஆள் அரவம் கேட்டு கடல்கோட்டையில் மறைகிறார்கள். என்றைக்குமான மனிதர்களுடன் பேசிப் பேசி வார்த்தை இழந்து மெளனமாய் நிற்கின்றன கபாடபுரத் தெருக்கள். சுருக்கங்களே முகமாகிப்போன மனித அரூபங்கள் படபடத்து தெருக்களை ஊடுருவி நகரும். கரும்பூமி கபாடபுரத்திலும் உண்டுதானே. அங்கே மண் கறுத்துப் பிறந்த கதைகள் கொடி சுற்றிக் கொள்ளும். சில இடிந்த கோயில்களில் சிலை செதுக்கும் சப்தம். கல்லின் வறண்ட ஊற்றை நோக்கி உளிகள் நகரும். உளிகளில் அலைகள் கோடுகோடாய் சுழலும்.
கடல்பறவை கூட்டம் கூட்டமாய் அமரும் கபாடபுர மதில்கள் கரைந்து பரந்த மணல்வெளியில் கால்வைத்து மணல் கொறிக்கும். பாழ்வெளியே சிறகு முளைத்து மணல் சிறகில் பறந்து செல்லும். அலகில் கபாடபுரத்தின் நூற்றாண்டுகளான தனிமைவாசத்திலிருந்த ஒரு மஞ்சள் தானியம்.
இரவின் இருள்வழியே உருவற்று ஊளையிட்டோடியது எட்டிப்போகும் நாரி', தொன்மக் கதைகளுக்கு ஊசியாகும் முள்ளெலிகளோடு கூட்டமாய் வருகிறான் வால்பகடை. கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாக சர்ப்பங்கள். நரியின் ஊளையில் புரளும் நாக சாரைகளின் காட்டுக் கலவி புறங்களில் விம்ம ஒலிபுரளும் உறுமிக்குள்
300
****
ஆயிரம் கபால வழி திறக்க குறுக்கோடும்
சாரைகளின் சீற்றம். இருளின் கால்கள்
ன கால்கள் திரியும் வேட்கையில் ஊனளயிடும் அரூப வனம். விட்டுக் கேட்கும் உருவற்ற ஊளை. மரண நடனமிடும் முள்ளெலிகளுடன் நரிகள் தெரி
தாடர வடுகாட்டில் மூதாதையின் எலும்புகள் உறுமும். ஆயிரம் கபால வழி திறக்க 94 வெருகுப்பூனை கபால வெளிச்சத்தில் விழுந்து மிதந்து மறைந்து... கலை கல்தோலையுடைய கட்டுக் கட்டான விருசம்பாம்புகள் விஷப்புகை கக்கி தம் சாவதானமாய் நெளியும், பலபல வகைகள்
" பலபல வகையில் ஒளிவிட்டுத் தவிக்கும் கல்நாகங்கள் பாய எழுத்தில் டமாரமிடும் அனல்வாக்கு சடை நாக்கில் வா வால்பகடை வருகிறது " தொலைதூர் நரியின் குரல் தேய உடனே உறுமியில் பற்றும் ஒலி தோலில் நகர்ந்து அதிர் பிரபஞ்ச கானமது நரியின் ஊளை, எழுத்தாவிகளின் இருள் கூட்டம் முன்பு எலும்புகளில் சுற்றிச் சுழல் கண்களைப் பறிக்கும் எலும்புத் துகள்கள் மணலில் சுற்றி உலகத்து ஜீவராசிகளின் எலும்புக்கூடுகள் பாதிபுதையுண்ட மொழி மணிபல்லவத்தில் மாந்திரீகப் பாத்திரத்துடன் ககனங்கள் துகளாகும் வெறியுடன் பிளந்த கோலத்தும் வெ வாலைக் கனிவு குன்றாத கன்னியுருவம். அசைவற்று நிற்கும் உருவத்தின் முகம் புன்னகை. உயிர்குடிக்கும் கொடூர உணர்ச்சிக்கும் அப்பால் வேட்கை பெருக்கெடுக்கும் இதழ் நடுக்கம். சப்த உலகங்களும் மோதுவனவாகும் பேரிடி. நீல நாயின் கண்கள். கானத்தில் நாயின் ஊளை திருகத் திருக வால்பகடை உறுமியில் திறக்கும் நீல நாயின் கண்கள். பாறை ஊசிகள் இருகூறாகப் பிளக்க முள்ளெலி முதுகுகள் குத்திட்டு அசைய மாட்டுத் தோலில் வரையப்பட்ட பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்ச கானம் என்ப்.
வாலைக்கனிவு குன்றாக் கன்னியிடம் அடைபட்ட உன்னத கானம் வெளியில் படரும் நாளை வேண்டிக் கூவும் பிரலாபிப்பே என விழுந்த மெளனி காதில் உரசும் மாட்டுத்தோல் உறுமி படபடக்க ஒரே இடத்தில் பதிந்து பரவும் மிகக்கோரமான பறைச்சேரி நாய்க்குரைப்பே பிரபஞ்சகானம் வசீகரமென தோலின்மீது எழுதப்பட்ட மாந்திரீக மொழி கொலம்பியப் புதிராய் தொடர் கட்புலனுக்கு அடைபடாத பறைச்சேரி நாயின் முதுகெலும்பு வளர்ந்து வாலாக ரூபமடையும் தொன்மம். வர்ணபேதங்கள். சிற்ப செளந்தர்யங்கள். சக்திப்பிரளயம். காவல் தெய்வம். ஒரே இருட்டு. பின்தொடரும் ஞானக்குகை. சப்த நுணுக்கங்களில் சஞ்சரிக்கும் கிரியாசக்தி. மோப்பம் தொண்ணூற்று ஆறு வகை ஞானம். மனிதனைக் கடைசிவரை தொடரும் அனுபூதி என நவீனன் எழுதிக் கொண்டிருந்தான். இந்த ஊரில் மேட்டுத்தெரு என வீதி. வண்ணான்குடி கசாப்புக்கடை மனித சமூகத்தின் எச்சங்கள் தெருநாய்கள். காகாவென கத்தும் விகாரமான காகங்கள் கோடியில் நின்று பார்த்தால் மறுகோடியில் பார்ப்பனர்கள் மயானம். எட்டிய வெளி சாம்பவாய். ஒனம் தள்ளும் கோலுடன் சுடுகாட்டுத் சாம்பலில் புரண்டு நிணம் எரிய கோடி கோடி யோனி பேதங்களில் துவாரங்கள் சுருண்டு ஊளையிட அனந்த கோடி ஜீவராசிகள் பட்சி ஜாலங்களின் இரைச்சலும் ஊளையும் தொடர் வால்பகடை வருகிறான். மயானபூமி இடிபட அவாந்திர வெளியில் நெருப்பாறு பாய நட்சத்திர மண்டலங்கள் திறக்க அப்போது துக்க ஓலத்தில் வாடைக்காற்றுடன் ஊர்க்கோடியில் நாயின் ஊளை. முன்வரிகளின் சாம்பலிலிருந்து முகில்கூட்டம் புகைந்து மேலோங்க ஊளையிடுகிறான் வால்பகடை தொலைவில் வெளிச்சப் புள்ளிகளாய் நீல நாயின் கண்கள். உருவற்ற ஊளையாய் பதில்குரல் கொடுக்கின்றன நீலநாயின் கண்கள்.
-
--
301
யார் பாறையால் கீழே இழுக்கப்பட்டவனோ
யார் காலரில் சங்கிலியால் பிணைக்கப்பட்டவனோ
யார் லாயத்தில் இடம் பெற்றவனோ
என முடியும் ரோஜர் வாட்டர்ஸின் நாய்களுக்குப்பின் நீண்ட பாடல். நாயின் ஊளைச்சத்தம் உடலுறவு கொள்ள இரண்டுக்குமிடையே நடக்கும் சண்டையின் சத்தம், அடிபட்டுக் கதறும் சத்தம், இடையிடையே நாய்க்குரைப்பின் ஓசைக்கட்டை விரிய, நாயின் பன்முகக் குறியீடாய் தெருக்கோடியில் நாய்களின் ஊளைகளோடு முடிகிற பாடல், நாயின் பல்வேறு பாஷைகள் ஊடே முடிய மெல்ல பின்னே நாயொன்று கூடவே பாட மனிதக்குரல் மங்கி தனியான குரலில் நாய் ஆலாபிக்க பின்னணியிசை நாயின் ராகத்தில் பல்வேறு ஐந்துக்களும் கோபம் கொண்ட மிருகங்களும் பிரபஞ்ச இடுக்கில் ஒரே குகையுள்ள படரும் நாளை வேண்டி பிரலாபிப்பென அவளுள் ஒடுங்கிய உன்னத கீதம் இருள்வெளியில் படரும் தெரு எனவே.

4
எஸ்தஃபான் மீன்களின் பெயர்களை வெறுமனே கூப்பிட்டுக் கடலிலிருந்து மீன்களை வெளியே இழுக்கும் அளவுக்கு அதிகாரம் கொண்டவன். இந்திரஜித் வில்லில் பூட்டிய நாணைத் தோள்புரள வாங்கி பாசுபதாஸ்திரத்தை பிரயோகிக்கும் வலிமை கொண்டவன். சூலாயுதங்களையும் அக்கினியையும் விஷத்தையும் ஸர்ப்பங்களையும் நீரடி நெருப்படி மருப் சொரூபங்களை கரும்பூதங்களை பெரும் பேய்க்கூட்டங்களை உலகெலாம் நிரப்பிக் கொண்டு ஒருபுறமும் வடவாமுகாக்கினியை சூரைக்காற்றையும் சப்தசமுத்திரங்களையும் பேரிருள் மூடிவரும் வேகத்துடன் பறந்துவரும் பாசுபதாஸ்திரத்துக்கொப்பான பலம் உள்ளவன். எஸ்தஃபான் பாறை உச்சிகளில் பூஞ்செடிகளை வளர்ப்பதற்காக பாறைகளிலிருந்து நீரூற்றுகளை பீறிட்டுக் கிளம்பும்படியாக கரங்களை நிலத்தில் செலுத்தியிருக்கக் கூடியவன்.
இந்திரஜித் ஆகாயத்தில் மறைந்ததை வானர சேனை கண்டு இவன் சண்டை செய்து கொண்டே ஆகாயத்தில் மறைந்துவிட்டானே என ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்.
1

நீரில் மூழ்கிப் போன சில மனிதர்களுக்க மட்டுமே மரணத்திற்குப் பின்னும் வளர்ந்து கொண்டிருப்பது இயல்பாக இருக்கலாம். எஸ்தஃபோன் நீரில் வளர்ந்து கொண்டே இருப்பவன்.
302
ஆகாயத்திற்கும் பூமிக்குமாக உயர்ந்து உதயதிரியின் சிகரத்தில் உதித்தான இற?”
இந்திரஜித்.
எஸ்தஃபானிடம் கடலின் வாடை வீசியது. இந்திரஜித் புரிந்த யுத்தத்தில் "ப" "* பூமியும் உதிரத்தால் நனைந்து போகவும் உதிரமயமான சமுத்திரமாகவும் ஓங்கி வயற்ற """" எத்தப்பிரவாகத்தில் மாமிச பக்ஷணிகளாகிய பட்சிஜாலங்கள் மூழ்கி எழுந்து விடும் - மீது உட்கார்ந்து தம் சிறகுகளை உதறுவதினால் ரத்தத் துளிகள் பறந்து மலர்ந்த தா தேனுண்ண வந்த கறுத்த வண்டுகளும் செவ்வண்டுகளாய் காடுகளும் உத்தியாவா?" செந்தளிர்களைக் கொண்ட இந்திரஜித்தின் திரேகமாய் விரிந்தன செடிகள்.
மீதிருந்த செடிகொடிகள் தூரத்துக் கடல்களிலிருந்தும் மிகவும் ஆழத்திலிருந்தும் வந்தவை என்றும் அறியப்பட்டான் எஸ்தஃபான். அவன் மயிரில் சிக்கிய கடலடிக்கற்களை அகற்றினார்கள். களைக்கொத்திகளாலும் மீனைச் சுரண்டும் உபகரணங்களாலும் கடல் ஆழப் பாசிகளையும் மண்டியும் மகிளியுமாய் பாளம் பாளமான கடல் பவளங்களையும் அகற்ற முற்பட்டார்கள்.
.
கந்தர்வ ஸ்திரீகளென்ன, யக்ஷ ஸ்திரீகளென்ன, சித்த ஸ்திரீகளென்ன, ராட்சஸிகளென்ன, கிளிகள் நாகணவாய்ப் புட்களையொத்த அவன் சொந்த தேவிமார்களென்ன கறுத்த அற்றிற்பெட்டைகளான அரக்கிகளும் கும்புகும்புகளாகக் கூடி தலைமயிரை அவிழ்த்துக் கட்டி அழுதார்கள் இந்திரஜித்தின் மாபெரும் உடலைக்கண்டு.
எஸ்தஃபானுக்கு அப்பாவாக, அம்மாவாக, மாமனாக, மருமகனாக, அத்தையாக இருக்க ஓங்குதாங்கான சிறந்தமக்களைத் தேர்ந்தெடுத்தனர். தூரத்திலிருந்து பெண்களின் அழுகைச் சத்தத்தைக் கேட்ட மாலுமிகள் வழி மாறிச் சென்றனர். கடல் தேவதைகள் பற்றிய பழங்கதைகள் நினைவுக்கு வந்ததால் தன்னைப் பாய்மரத்தில் கட்டிப் போட்டுக் கொண்டே வீர புருஷன் இவனே என நினைவு வந்தது.
படரும் திசையெல்லாம் இந்திரஜித்தின் ரத்தம். அம்புகள் பதிந்த தேகத்தில் பட்சி ஹாலங்களும் தைத்திருக்க பலாயனப்பட்டு ஆகாயத்தில் பாய்ந்து உலகங்கள் கிழிபட்டுப் போகும்படி பறந்து கூக்குரலிட்டன. கறுத்த கழுகுகளின் சிறகுக் கூட்டத்துக்கு மத்தியில் ரத்தமேகம் இருப்பதாக இந்திரஜித் உருவம் கண்ட பகைவரும் நடுங்கினார்கள். இவன் கையில் பிடித்த வில் முறிய மாட்டாமல் போனாலும் இந்திரஜித் கையை அறுத்துத்தள்ள நினைத்தான் வஞ்சக லட்சுமணன். விரல்களழுந்தப் பிடித்த வில்லுடனே கூட வீர புருஷனாகிய இந்திரஜித்தின் இடது கையானது கீழே விழுந்து மரங்களும் மலைகளும் பொடியாகவும் வானர சேனை நசுங்கிப்போகவும் துடித்தது. அந்தர மார்க்கத்தில் நின்று படர்ந்து கொண்டிருந்த இவன் கையானது வீழா வில்லுடன் சூரியன் நடுங்கும்படியாகவும் சந்திரன் ஒளியும்படியாகவும் பேரும் தலை சுற்றி விழும்படியாகவும் அறுந்து விழுந்து விட்டதே.
எங்க போன் மரணத்தைப் பெருமையுடன் சந்தித்திருக்கிறான் என உணர்ந்தார்கள். கடல்பவளங்களில் மிதந்துவந்த மாபெரும் உடலானது வாடாமல் இருந்தது. பிற மம்கி இறந்தோரின் முகத்திலுள்ள துயர முகபாவமோ நதியில் மூழ்கி இறந்தவர்களிடமிருக்கும்
303
களைத்துப்போன தவிக்கும் முகமோ அவனிடமில்லை. அவர்கள் முகத்தில் கண்டதெல்லாம் மாபெரும் வீரனுடைய அழகைத்தான். இதுவரை பார்த்திராத மிக உயரமான. சக்திவாய்ந்த, வீர்யமான, வாளிப்பான உடல்கொண்ட மனிதன் மட்டுமின்றி கற்பனைக் கெட்டாதவனாகவும் இருந்தான்.
மவையைப் பேர்த்தெடுத்து வானரங்கள் மீது வீசி எமனுக்கும் எமனான இந்திரஜித் அந்தந்த அம்புகளை அந்தந்த அம்புகளாலே துண்டாக்கி விட்டு ஆகாய முழுவதையும் அட்டத்திக்குகளையும் சப்த சமுத்திரங்களையும் மூடிக் கொள்ளும்படியான யுகாந்த காலத்தில் பெய்கிற மேக வர்ஷங்களாகப் பிரவேசித்தான்.
எலும்புகளுக்குள் நடுங்கினவர் கத்தியால் மட்டுமே வெட்டக்கூடிய கல் நகங்களுடன் வெண் திமிங்கலமாய் தரை மேல் கிடந்தான் எஸ்தஃபான்.
ராவணகுமாரனுடைய வஜ்ஜிரத்தையொத்த கையானது அறுந்ததைப் பார்த்த அரக்கர்கள் எல்லாம் தங்கள் தலைகள் அறுந்ததை உணர்ந்தார்கள். வில்லுக்குள் உறங்கும் கும்பகர்ண மூச்சு இந்திரஜித் கைவிரல் பிடியில் இருந்தது உயிருடன். இந்திரஜித் உயிர் போன காலத்தில் உள்ளே இருந்த உணர்வும் இந்திரியங்களும் கொதித்துப் புரண்டு சுழலும் சீற்றத்தில் இருந்தன.
தைத்த எந்த ஆடையும் எஸ்தஃபானுக்கு சின்னதாகவே இருந்தது. அவன் இதயத்தில் மறைந்திருக்கும் சக்தி அவர்கள் அணிவித்த சட்டையின் பொத்தான்களைத் தெறித்து விழச் செய்தது.
சண்டமாருதத்தால் அடியுண்ட மேகமானது மின்னலுடன் இடியுடன் நிலத்தில் வீழ, சூரியனாகும் கண்கள், மண்டலங்கள் இடிபட பூமியில் இந்திரஜித்தின் தலை விழுந்தது வந்து. கேதஞ் சொல்லி வந்த தூதுவர்களை ஒரே வீச்சால் வாளால் வெட்டி இருபது கைகளும் அலையலையாகச் சோர்ந்து விழும்படியாய் சமுத்திரம் விழுந்ததேயாக கீழே விழுந்தான் லங்கேஸ்வரன்.
எஸ்தஃபானின் மாபெரும் தேகத்திலும் அழகிலும் மெய்மறந்துபோன பெண்கள் அவன் சாவிலும் கெளரவமாக இருப்பதற்காக தொடர்ந்து அவனுக்கு பெரியதொரு கப்பலின் பாய்த்துணியிலிருந்து கால்சட்டைகளையும் மணப்பெண்ணின் பிராபாண்ட் லினனிலிருந்து கொஞ்சம் எடுத்து சட்டையும் தயாரிக்க முடிவு செய்தார்கள். வட்டமாக உட்கார்ந்து தைத்துக்கொண்டும் தையலுக்கிடையில் பிணத்தைப் பார்த்துக்கொண்டும் இருந்தவர்களுக்கு காற்று இவ்வளவு தொடர்ந்து இதற்கு முன் எப்போதுமே அடித்ததில்லை என்றும் அந்த இரவைப் போல் கடல் அமைதியற்று இருந்தததில்லை என்றும் தோன்றியது.
கஸ்தூரிகளால் சித்திரமெழுதி உருக்கு ஸ்தம்பத்தைப் போலிருந்த இந்திரஜித் கை என்னைக் கட்டித்தழுவாமல் போனதே என்பான். மற்றொரு வாயால் ஆண்புலி போலிருந்த இந்திரஜித்தே உன்னைப் பயந்த மான்குட்டிக்கு ஒப்பானவன் வாங்குவதோ.
304
ராவணன் ரணகளத்திற்கு வந்ததைக் கண்ட மாத்திரத்தில் அங்கு பிணங்க 602 தின்பதற்கு வந்த பேய்களும் பட்சிஜாலங்களும் சினேகிதர்களாகி அழுதன. சில ராவணன் பாதத்தில் வீழ்ந்து சோகத்தில் பிடித்து அழ சில பேய்கள் துன்புற்ற மார்பிலடித்தன. சில பேய்கள் பயத்தால் யானைப்பிணங்களுக்குள்ளே புகுந்து ஒளிந்து கொண்டன. வந்த ராவணன் குதிரைப் பிணங்களையும் முகபடாமணிந்த யானைப் பிணக் கூட்டத்தையும் முறிந்து கிடக்கிற தேர்களையும் புரட்டிப் புரட்டி அக்கினியாக கொதிக்கிற மனதுடனே அதிக பலமுள்ள வெற்றி வில்லைப் பிடித்தபடியே இந்திரஜித்தின் வல்லமையான கை அறுந்து கிடக்கிறதை கண்ணால் கண்டு அக்கினிக் கண்களால் தீ கக்கும் கார்க்கோடக சர்ப்பமாய் கிடக்கிற கையை தன் சிவந்த கையால் தூக்கி தலைமேல் வைத்து ஊழிக்கால் சண்டமாருதமாகப் பெருமூச்சு விட்டான். பாண வர்ஷங்களால் மூடப்பட்டிருக்கிற இந்திரஜித் மார்பை ராவணன் கண்ணீரால் நிறைத்ததை இந்த உலகத்தில் வேறு யாரும் புத்திர சோகத்தில் இப்படி இருபது கைகளும் அலைபட அழுததில்லை என்ப.
அடிவானத்தில் தெரியும் ரோஜாக்களின் வரிசையை கப்பல் தலைவனின் தொலை நோக்கியும் திசைகாட்டியும் சுட்டிக்காண்பித்துப் பதினாலு பாஷைகளில் சொல்லக்கூடும். எங்கே இப்போது காற்று அமைதியாக உள்ளதோ, படுக்கைகளுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருக்கிறதோ. சூரியனின் பிரகாசத்தில் சூரியகாந்தி மலர்கள் திரும்பும் திசை தெரியாமல் இருக்கின்றனவோ அங்கே எஸ்தபானின் கிராமம் இருக்கிறது.
-
1
-
வட்டமாக விசாலித்துக் கிடக்கிற யானைப்பிணங்களே பெருங் கரையாகவும் ஒன்றின் மேலொன்றாக அடுக்கி வீழ்ந்த புஜங்களே கற்களாகக்கட்டிய மதில்களாகவும் உயிர்மாய்த்து உள்ளே கிடக்கிறான் இந்திரஜித். ராட்சஸ ஸ்திரீகளின் ரத்தம் படிந்த முகங்களே யானைத் துதிக்கைகளுக்கிடையில். இவனுடைய கையும் கிடக்க அறுந்த கை ஏவிய பாணத்தினாலே நிலப்புழுதியே தரைக்குப் பாயாகிப் புரண்டு கிடந்தன வானர சேனைப் பிணங்கள்.
ரன்களைக் குருடாக்கும் ஆழத்தில் கடலில் மூழ்குபவர்கள் ஏக்கத்தால் இறக்கும் கல் சரக்குக் கப்பலின் நங்கூரத்தை அவனுடன் சேர்த்துக் கட்ட அவர்கள் உந்தனரர்கள். இந்த மாபெரும் ஆள் இவ்வூரில் வசித்திருந்தால் அவன் வீடுதான் மிக அமரன கதவுகளையும் மிக உயரமான கூரையையும் கனமான தரையையும்
கம். எஸ்தஃபான் கட்டில் சட்டங்கள் யுத்தக் கப்பலின் சட்டங்களிலிருந்து கொண்டி செய்யப்பட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருக்கும்.
புறப்பட்ட வ
தேனை குடல் சரியவும் அஷ்ட குலாசங்கள் நிலைதடுமாற, பூமிகிழிந்து ., 9லம் இருள் பரவி நிற்க, ஆதிசேஷன் படம் நசுங்கிப்போக, எதிரிலுள்ள -- படபடத்து வெளிச்சம் வர, இந்திரஜித்தின் தேர் ஆகாயத்துடன் பூமியில்
- அரக்கர்கள் ஆரவாரித்தார்கள். வானர சேனை தேர்களின் திமுதிமுவென்ற வலி கேட்டு திக்குமுக்குகளில் சிதறியோட்டம் பிடித்தது.
போன் மார்பில் தொங்கிய கடல் பாசிமணிகளைத் தொட்டும் பக்கத்தில் நல்ல களத் தரும் அதிஷ்ட எலும்பை வைத்தும் மறு பக்கத்தில் ஒரு மணிக்கட்டில்
305
திசைகாட்டியை வைப்பதுமாக அதிர்ச்சியடைந்த கோழிகளாக குறுக்கும் நெடுக்கும் நடமாடினர் பெண்கள்.
கோடி கோடி குதிரையின் கூட்டமும்
ஆடல் வென்றி யரக்கர் தமாக்கையும் ஓடை யானையுந் தேரு முருட்டினான்
நாடினான்றன் மகனு டனாளெலாம்.
மெய்கிடந்த விழிவழி நீர்விழ
நெய்கிடந்த கனல்புரை நெஞ்சினான் மொய்கிடந்த சிலையொரு மூரிமாக்
கைகிடந் தது கண்டனன் கண்களால்.
பொங்குதோள்வளையும் பொழிபுட்டிலோ
டங்கதங்களு மம்பு மலங்கிட வெங்கணாகமெனப் பொலிமெய்யதை
சங்கையாலெடுத் தான் சிரஞ் சேர்த்தினான்
என கை கண்டான் ராவணன் கருங்கடல் கண்டான் மெய்கண்டான தன் மகன் இந்திரஜித்தின் அம்புமாரியமுந்திய மார்பைத் தன் கண்ணீரால் மூட. கம்பன் நிலத்தடி மேழியில் நிணச்சேற்றில் உதிரநீர் நிறைந்துவிட யுத்தகளத்தில் கிடந்த இந்திரஜித் எனும் மாபெரும் அழகனின் பிணத்தின் அருகில் பேய்களும் பயந்து யானைப்பிணங்களுக்குள் ஒளிகின்றன அழுதவாறு.
நீரில் மூழ்கிய நிகரற்ற அழகனை நங்கூரத்தில் கட்டி மலையிலிருந்து மீண்டும் கடலில் வீசியபோதும் சூரியகாந்திப் பூக்கள் திரும்பும் திசைதெரியாமல் இருக்கிற எஸ்தபானின் கிராமத்தார் இதயங்களில் கண்ணீரின் முதல் சுவடுகள் தோன்றவாரம்பித்தன. அந்த நினைவு கொண்ட மற்றவர்களும் பெருமூச்சுகளிலிருந்து புலம்பலுக்கு மாறி விசும்பல் கூடக்கூட அழவே செய்திருந்தார்கள் பெண்கள். அவ்வளவு அழுதார்கள்.
மகா அழகனான இந்திரஜித் எனும் கார்மேகம் மரணத்திலும் வீரனாக சிவ தனுசை விடாமல் விரல்கள் அழுந்த பிடித்தவாறே கிடக்கிறான் இன்னும்.
ராவணன் புத்திரசோகத்துக்குப் பக்கமாய் எஸ்தபான் கிராமத்துப் பெண் களும் கும்புகும்புகளாகக் கூடி அமுத குரல்கேட்டு மாலுமிகளும் திசைமாறிச் சென்றார்கள் எனவே,
306

பலியான கன்னியின் கூந்தல் அலையை எழுதிய கதை - Gabriel Garcia Marquez தமிழில் - நாகார்ஜுனன்

பலியான கன்னியின் கூந்தல் அலையை எழுதிய கதை - Gabriel Garcia Marquez
தமிழில் - நாகார்ஜுனன்

1949 அக்டோபர் 29. முக்கிய செய்தியென நிறையாமல் போகத் தெரிந்த நாள். பத்திரிகைக்காரத் தொழிலின் அடிப்படைகளை நான் கற்ற தாளின் பிரதம ஆசிரியர் மாஸ்ட்ரோ க்ளெமென்டெ மானுவல் ஸபாலா. வழக்கமான விஷயங்கள் இரண்டு மூன்றுடன் காலையில் முடித்துக்கொண்டார் நிருபர் யாருக்கும் இன்னதென்று செய்யத் தராமல். சில நிமிஷங்களில் ஸான்டா களாரா பழைய கன்னிகாஸ்திரீ மடத்தின் கல்லறைப்பெட்டகங்கள் காலிசெய்யப் படுவதாக ஃபோனில் வந்தது அவருக்கு. "நின்று அங்கே ஏதும் தேறுமா பாரேன்." கிடைக்கலாம் என்ற மாயமேதிலும் சிக்காமல்தான் கூறினார் என்னிடம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆஸ்பத்திரியாக்கப்பட்ட, சரித்திரப்பெயர் கொண்ட க்ளாரிஸ்ஸ கன்னிகாஸ்திரீகளின் மடம் விற்பனைக்காக, ஐந்து நட்சத்திர ஹோட்டல் அவ்விடத்தில் எழுப்ப, கொஞ்சம் கொஞ்சமாக விதானம் விழுந்ததில் தேவ வாக்கியம் பெறுகிற சிற்றாலயத்தின் அழகிய சந்நிதியான இடமும் பஞ்சபூதங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது நேரடியாக. இருந்தாலும் மூன்று தலைமுறையாக அருட்தந்தைகளும் பிரதம் சகோதரிகளும் பிரபலஸ்தர்களும் என புதைக்கப்பட்டு வந்தனர் மடத்தில் இன்னும். பெட்டகங்களைக் காலி செய்து தமதெனக் குடும்பத்தினராகக் கேட்போருக்கு மாற்றி, எஞ்சியதைப் பொதுக் கல்லறையில் புதைக்க ஏற்பாடு. செயலின் கொச்சைத்தனம் நான் எதிர்பாராதது. கோடாரிகளும் களைக் கொத்திகளும் கொண்டு கல்லறைகளைப் பிளந்தும் நகர்த்தும்போதே நொறுங்கிப்போகிற, துருப்பிடித்த சவப்பெட்டிகளைப் பெயர்த்தும் தூசியும் உடைக்கந்தலும் உலர்ந்துபோன தலைமுடியுமாகக் குழம்பிய கலவையிலிருந்து எலும்புகளைப் பிரித்தவாறிருந்தனர். தங்க, வெள்ளி ஆபரணங்களையும் விலை மதிப்பற்ற மணிக்கற்களையும் மீட்கும் நோக்கத்துடன் எச்சங்களைத் தூர்வாரி இடிபாடுகளைப் பிரித்தார்கள் என்பதால் இறந்தவர்களின் பிரபலஸ்தம் கூடக்கூட வேலையும் சிரமமானது.
நடுகல் ஒவ்வொன்றின் மீதான செய்தியை நோட்டுப்புத்தகத்தில் குறித்தும் எலும்புகளைக் கூறுகட்டியும் குவியல் ஒவ்வொன்றின் மீதும் பெயரெழுதிய சீட்டைப் பிரிப்ப வைத்தும் சென்றான் மேஸ்திரி. நுழைந்தவுடன் தேவாலயத்தில் நான் பார்த்தது கூரை ஓட்டைகள் ஊடே கொட்டிய அக்டோபர் மாதக் கொடூர சூரியனால் சூடாக்கப்பட்ட எலும்புகளாக அடுக்கிய நீள்வரிசைதான். விநாசமென வருஷங்கள் கழிந்ததன் அந்த பயங்கர சாட்சியம் என்னில் உண்டாக்கிய குழப்பத்தை உணர முடிகிறது அரை நூற்றாண்டுக்காலம் தாண்டி
248
இன்னும், தம் ரகஸியக் காதலியுடன் பெரு நாட்டின் ராஜாதிகாரி ஒருவரும் " மாவட்டமதன் அருட்தந்தை டான் டோரிபியோ டி கெஸரெஸ் ஒய் விாகு
அவர்களும் அன்னை ஜோஸஃபா மிராண்டா உட்பட மடத்தின் நிறைய ? சகோதரிகளும் பெட்டகங்கள் கொண்ட உத்திரங்கள் அமைப்பதில் வாழந்த' பாதியை அர்ப்பணித்த டான் க்ரிஸ்டோபல் டி எராஸோ என்ற க க பட்டதாரியும் இன்னும் பலரும் அங்கே. கஸால்டுவரோவின் இரண்டாம் பிரபு (Marquis) டான் இக்னேஷியா டி அல்ஃபாரோ ஒய் குயனாஸ் என்ற பெயர்க் கல்லால் மூடியிருந்த கல்லறையோ திறந்தபோது காலி. பிரபுவின் சீமாட்டி டோனா ஒலால்லா டி மெண்டோஸாவின் எச்சங்களோ தமக்கான பிரத்தியேகக் கல்லுடன் அடுத்த பெட்டகத்தில், அமெரிக்கக் கண்டத்தில் பிறந்த பிரபுக்கள் தமக்கென்று தயாரித்த கல்லறைகளில் அன்றி வேறில் புதைபடும் வழக்கம்
அறிந்த மேஸ்திரி இதைப் பொருட்படுத்தவில்லை.
உயரப்பீடத்தின் முன்றாம் குறுகலான பிறையில் தேவகுமாரனின் செய்திகள் வைக்கும் பக்கத்தில் இருந்தது ஆச்சரியம் எனக்கு. கோடாரியின் முதல் வெட்டில் கல் நொறுங்கியதும் உயிர்ப்ப பிரவாகமான கூந்தல் தீவிரச்செம்பு நிறத்தில் நிரம்பி வழிந்தது பெட்டகத்திலிருந்து. பிறருடன் சேர்ந்து மேஸ்திரி கூந்தலை விரிக்கும் முயற்சியில் இழுத்துப்போட நீளமாகவும் பெருகிச் செல்லவும் தோன்றியது இளம்பெண் ஒருத்தியின் கபாலத்துடன் இன்னும் பொருந்தியிருந்த இழைகள் தெரியும் கடைசிவரை. சிதறிய சிறு எலும்புகள் சில தவிர எஞ்சவில்லை ஏதும் பிறையதில். பாறையுப்பு அரித்திருந்த அலங்காரக் கல்லில் தெளிவாகத் தெரிந்தது வம்ச அடையாளமன்றி இட்ட பெயர் மட்டுமே. ஸியர்வா மரியா டி தோடோஸ் லாஸ் ஏஞ்செலஸ். தரையில் விரிப்பப் பெருகும் கூந்தல் பிரம்மாண்டமாய். அளந்தது மீட்டர் இருபத்திரண்டு, ஸென்டிமீட்டர் பதினொன்று.

மரணம் தாண்டியும் மனிதருக்கு தலைமுடி மாதம் ஸென்டிமீட்டர் ஒன்றாக வளரும். இருபத்திரண்டு மீட்டர் என்றால் வருஷம் இருநூறுக்கான சராசரி வளர்த்தியாக இருக்கலாம் தான் என்றான் உணர்வேதும் காட்டாத மேஸ்திரி. விஷயம் அத்தனை சாமான்யமானதென நினைக்கவில்லை நான். மணப் பெண்ணின் உடைரயிலாகப் பின்தொடர்ந்த கூந்தல் கொண்ட பன்னிரண்டே வயது சீமாட்டி ஒருத்தி வெறிநாய் கடித்து மரணமுற்றதையும் நிகழ்த்திய விநோதங்களுக்காக கரீபியக் கடற்கரைப்பிரதேச ஊர்களில் அவள் புனிதராகக் ொண்டாடப்பட்டதையும் சிறுவனாக இருந்த போது என்னிடம் பாட்டி சொல்லியிருந்த புராணிகம் தான் காரணம். கல்லறை அந்தச் சீமாட்டியுடையதாயிருக்கும் என்ற ஹேஷ்யம்தான் என் அன்றைய செய்தியும் இந்தப் புத்தகத்தின் மூலமும்.
தமிழில் - நாகார்ஜுனன்
E