Friday 16 June 2017



நாடோடியின் நாட்குறிப்புகள் - 30 - சாரு நிவேதிதா

 நாடோடியின் நாட்குறிப்புகள் - 30 - சாரு நிவேதிதா
ஆலன் ராப் க்ரியே
Author photograph by Nancy Crampton. From the Paris Review.
ஃப்ரெஞ்ச் இலக்கியம், தத்துவத்தை அடுத்து என் சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது ஃப்ரெஞ்ச் சினிமா. அதில் முக்கியமானவர், லன் ராப்-க்ரியே (Alain Robbe-Grillet: 1922 - 2008). நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திரைப்பட இயக்குனர். ஃப்ரெஞ்ச் சிந்தனை, இலக்கியம், சினிமா ஆகியவற்றில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராப்-க்ரியே பற்றி யாரும் அவ்வளவாக எழுத மாட்டார்கள். ஆனால், மிஷல் ஃபூக்கோவும் (Michel Foucault) ரொலான் பார்த்தும் (Roland Barthes) அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஃப்ரான்ஸின் நவீன சிந்தனையே ஆலன் ராப்-க்ரியேவிலிருந்துதான் துவங்குகிறது என்று அறுபதுகளிலேயே Tel Quel என்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார் ஃபூக்கோ. ராப்-க்ரியேவின் சிறப்பு என்னவென்றால், எழுத்தில் அவருக்கு யாரும் முன்னோடிகள் கிடையாது. அதேபோல், அவரைப் பின்பற்றி எழுதியவர்களும் யாரும் இல்லை. (நான் முனியாண்டி என்ற பெயரில் எழுதிய சிறுகதைகளில் ராப்-க்ரியேவின் பாதிப்பைக் காணலாம்.) The Erasers, The Voyeur போன்ற நாவல்களை எழுதிய ராப்-க்ரியே ஆறு படங்களை இயக்கியிருக்கிறார். அந்தப் படங்கள் அனைத்தும் பாலுறவில் உள்ள அரசியலை மிக ஆழமாகப் பேசுபவை. அந்தத் தாக்கத்தினால்தான் பிற்காலத்தில் காதரீன் ப்ரேயா (Catherine Breillat) போன்றவர்கள் ஃப்ரெஞ்ச் சினிமாவில் உருவானார்கள். உதாரணமாக, ராப்-க்ரியேவின் Trans-Europ-Express (1966)-இல் வரும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிர்வாணப் பெண் தான் காதரீன் ப்ரேயாவின் ’ரொமான்ஸ்’ படத்தில் வரும் நாயகி. ஆக, ராப்-க்ரியே இல்லாவிட்டால் பாலுறவில் பின்னப்பட்டிருக்கும் அரசியலைப் பேசிய காதரீன் ப்ரேயா இல்லை.
ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளின் முற்பகுதியில் ராப்-க்ரியே எழுதிய For a New Novel என்ற கட்டுரைத் தொடரில் தன் இலக்கியக் கோட்பாடுகளை விரிவாக விளக்கியிருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால், நவீன கதைசொல்லி தான் பார்க்கும் விஷயங்களை விவரிப்பதில்லை; அவனைச் சுற்றியுள்ள பொருட்களை அவன் தான் கண்டுபிடிக்கிறான்; அப்படிக் கண்டு பிடிப்பவற்றை அவன் பார்க்கிறான். அதனாலேயே அவன் குழந்தையாகவும் மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பொய்யனாகவும் மாறுகிறான். இங்கே தெக்கார்த்தே (Rene Descartes) கூறியதை இணைத்துப் பார்ப்போம். ”என் கனவு மிகத் தீவிரமாக இருந்ததென்றால் கண் விழித்து எழும் போது அது கனவா நனவா என்றே எனக்குத் தெரியாது.”
ராப்-க்ரியேவைப் புரிந்து கொள்ள ’கடற்கரை’ என்ற அவருடைய ஒரு சிறுகதையைப் படித்தாலே போதும். அந்தக் கதையில் ஒரு கடற்கரையில் பனிரண்டு வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் கை கோர்த்தபடி நடந்து செல்கிறார்கள். கடல் அலைகள் கரையில் வந்து வந்து போகின்றன. அவர்களின் இடப்பக்கம் ஒரு குன்று இருக்கிறது. எதிரே பறவைக் கூட்டம் அவர்கள் நெருங்குவதைக் கண்டு கூட்டமாக மேலே பறக்கிறது. இவ்வளவுதான் கதை. சுமார் 1500 வார்த்தைகளைக் கொண்ட அந்தக் கதையை பின்நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த படைப்பு என்று சொல்லலாம். ஒருமுறை படித்தால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பதிவை ஏற்படுத்தும் கதை அது. கதையில் எதுவுமே நடப்பதில்லை. சிறுவர்கள் நடக்கிறார்கள். அலைகள் கரைக்கு வந்து வந்து போகின்றன. இதை எப்படி ஒருவர் சிறுகதையாக எழுத முடியும்? அதைப் பொருட்களின் எதார்த்தம் என்கிறார் ராப்-க்ரியே. புரியாவிட்டால் நீங்களே அந்தக் கதையைப் படித்துப் பார்க்கலாம்.
இந்த இடத்தில் ரொலான் பார்த் 1967-இல் எழுதிய 'எழுத்தாளனின் மரணம்’ என்ற கட்டுரையை நினைவு கூற வேண்டும். அதில் பார்த்த, வாசகர்களுக்காகச் ’சிந்திக்கும்’, வாசகர்களுக்காகச் ’சொல்லும்’ மகா புருஷனான எழுத்தாளரைக் குறிப்பிடுகிறார். தமிழில் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அந்தக் கோட்பாட்டின் பொருள், வாசகரையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் பன்முகத் தன்மை கொண்ட பிரதிகளை உருவாக்குதல் என்பதாகும். இந்தக் காரணத்தினாலேயே ராப்-க்ரியேவுக்கு தொல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களைப் பிடிக்காது. அவர்கள் ‘சொல்கிறார்கள்’ என்கிறார் ராப்-க்ரியே. ”குஸ்தாவ் ஃப்ளெபர் இந்த உலகத்தையே எழுதினார்; ஆனால், அவர் எதுவும் ‘சொல்லவில்லை’. மானுடத் துயரத்துக்கு அவர் எதுவும் மருந்து வைத்திருக்கவில்லை. அவர் எழுதினார். அவ்வளவுதான். அதனால், எனக்கு அவரைப் பிடிக்கும்” என்கிறார். உலகப் புகழ் பெற்ற காப்ரியா மார்க்கேஸையும் மறுதலிக்கிறார். அவர்களெல்லாம் அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள் அல்ல; லத்தீன் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர் காப்ரேரா இன்ஃபாந்த்தே (Guillermo Cabrera Infante) தான் என்கிறார் ராப்-க்ரியே. நான் ராப்-க்ரியேவின் இலக்கியக் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு முன்னதாகவே காப்ரேரா இன்ஃபாந்தேவின் நாவல்களைப் பற்றி எழுதி விட்டேன். கார்ஸியா மார்க்கேஸ் அல்ல; லத்தீன் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர் காப்ரேரா இன்ஃபாந்தே தான் என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இன்ஃபாந்தேவின் மிக முக்கியமான இரண்டு நாவல்கள், Infante's Inferno மற்றும் Three Trapped Tigers.
*
Miriam Gomez and Guillermo Cabrera Infante by Nestor Almendros
ஃப்ரெஞ்ச் இலக்கியம் தவிர்த்து என்னை உருவாக்கிய மற்றொன்று, ஐரோப்பிய சினிமா. குறிப்பாகச் சொன்னால், ஜெர்மன் மற்றும் ஃப்ரெஞ்ச் சினிமா. இன்று உலக சினிமாவில் ஹாலிவுட் மற்றும் ஜப்பானிய, கொரிய, ஈரானியத் திரைப்படங்களுக்குக் கொடுக்கப்படும் ஆரவாரமான வரவேற்பும் கவனிப்பும் ஜெர்மன் சினிமாவுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் திரையுலக வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் சினிமா ஜெர்மனியில்தான் எடுக்கப்பட்டது. 1927-ஆம் ஆண்டு Fritz Lang இயக்கத்தில் வெளிவந்த ’மெட்ரோபலிஸ்’ தான் உலக சினிமா வரலாற்றின் முதல் சயன்ஸ் ஃபிக்ஷன் படம். ஃபாஸிஸம் பற்றி எத்தனையோ புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாததை ஒரே ஒரு ஆவணப்படத்தின் மூலம் புரிய வைத்தவர் Leni Riefenstahl. ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹிட்லர். ஆக, ஃபாஸிஸத்தைப் புரிந்து கொள்ள ஃபாஸிஸ்டே உதவி செய்கிறார். அந்தப் படத்தின் பெயர் Triumph of the Will. 1935-இல் ஹிட்லரின் புகழ் உச்சத்தில் இருந்த போது அவரது மேற்பார்வையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். இந்தப் படத்தைப் பார்த்த எவராலும் தன் வாழ்வில் ஃபாஸிஸத்துக்குத் துணை போக இயலாது.
லெனி பற்றியே தனியாக ஒரு புத்தகம் எழுதக் கூடிய அளவுக்கு சாகசங்கள் நிறைந்தது அவர் வாழ்க்கை. 1902-இல் பிறந்த அவர் 2003-இல் அவரது 101-ஆவது வயதில்தான் இறந்தார். 1934-இல் நடந்த ’நியூரம்பர்க் ஊர்வலம்’ என்ற உலகப் புகழ் பெற்ற சம்பவத்தை லெனி படமாக எடுத்தார். அதில் நான் பார்த்த ஒரு காட்சியை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாது போலிருக்கிறது. ஹிட்லர் ராணுவ அணிவகுப்போடு போய்க் கொண்டிருக்கிறார். அப்போது கேமரா ஹிட்லரைப் பார்க்க ஆர்வமுறும் லட்சக் கணக்கான மக்களின் முகங்களைக் காண்பித்து விட்டு திடீரென்று அவர்களின் பின்னால் பாதங்களின் பக்கம் செல்லும். எல்லோருடைய பாதங்களின் குதிகால்களும் எழும்பியபடி நிற்கும். காமரா வரிசையாக அந்தக் குதிகால்களையே காட்டியபடி செல்லும். அப்படியும் ஒரு சிறுவனுக்கு ஹிட்லர் தெரியாததால் சிறுவனின் தந்தை அவனைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொள்கிறார். ஹிட்லர் பேசுவதைக் கேட்கும் போது டொனால்ட் ட்ரம்ப் பேசுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஃபாஸிஸ்டுகள் அனைவருடைய உடல் மொழியும் பேச்சும் ஒன்றே போல் இருப்பதைக் காணலாம்.
(நியூரம்பர்க் ஊர்வலம் முடிந்து ஹிட்லர் பேசும் காட்சி, Triumph of the Will படத்திலிருந்து.)
தில்லியில் கஸ்தூர்பா காந்தி மார்க் என்ற சாலையில் இருந்தது மாக்ஸ் ம்யுல்லர் பவன். அதே சாலையில்தான் அமெரிக்க மையமும் இருந்தது. 1978-இலிருந்து 1990 வரை நான் தில்லியில் இருந்தேன். மக்களுக்கு ரேஷன் கொடுக்கும் அலுவலகத்தில் வேலை. வடக்கத்தி ஆட்கள் ராஷன் என்றுதான் சொல்வார்கள். எனவே ராஷனிங் டிபார்ட்மெண்ட். தில்லிப் பல்கலைக்கழகம் இருக்கும் வட தில்லியில் இந்திர ப்ரஸ்தா பெண்கள் கல்லூரியின் எதிரே இருந்தது நான் வேலை பார்த்த ராஷனிங் டிபார்ட்மெண்ட். சிவில் சப்ளைஸ் என்பது அதன் மற்றொரு பெயர். அந்த அலுவலகம் இருந்த அண்டர் ஹில் ரோடுக்கும் கஸ்தூர் பா காந்தி மார்குக்கும் 13 கி.மீ. தூரம். மெட்ரோ ரயில் இல்லாத அந்தக் காலத்தில் அதெல்லாம் நாற்பது ஐம்பது கிலோமீட்டருக்குச் சமம். அந்தக் காலகட்டத்தில் சிமெண்ட் கட்டுப்படுத்தப்பட்ட விலையிலும் வெளிச்சந்தையிலும் விற்றதால் இரண்டு இடங்களிலும் இரண்டு வெவ்வேறு விலைகள் இருந்தன். ராஷன் கார்டை ராஷனிங் டிபார்ட்மெண்டில் காண்பித்து பர்மிட் பெற்று வாங்கினால் ஒரு மூட்டை 30 ரூ. வெளிச்சந்தையில் 60 ரூ. அதனால் எங்கள் அலுவலகமே ஊழல் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. நானோ கலைஞனுக்குப் பணம் எதுக்கு என்று கஸ்தூர் பா காந்தி மார்க் அமெரிக்க நூலகத்திலும் மாக்ஸ் ம்யுல்லர் பவனிலுமே இருந்தேன். கஸ்தூர் பா காந்தி மார்கை குறுக்காக வெட்டிக் கொண்டு பாரகம்பா சாலை போகும். அதன் இடது பக்கத்தில் நடந்தால் மண்டி ஹவுஸ் வந்து விடும். இந்தியாவின் கலாச்சாரக் கேந்திரம் தில்லி என்றால் தில்லியின் கலாச்சார மையம் மண்டி ஹவுஸ். மண்டி ஹவுஸில் மட்டுமே ஒரு டஜன் கலை அரங்கங்கள் உள்ளன. மாக்ஸ் ம்யுல்லர் பவனில் சினிமா இல்லாத நாட்களில் நடந்தே மண்டி ஹவுஸ் வந்து விடுவேன்.
அலுவலகத்துக்கு மாதம் ஒருமுறை போய் எல்லா நாட்களுக்கும் கையெழுத்துப் போட்டு விட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தால் போதும். என்னுடைய ’பங்கை’ மற்றவர்கள் பிரித்துக் கொள்வார்கள் ஆதலால் நீ உன்னுடைய படிப்பு வேலையையே கவனி என்று சொல்லி விட்டார்கள் என் சகாக்கள். நான் தில்லியில் இருந்த பனிரண்டு ஆண்டுகளும் இப்படி இல்லை. மூன்று நான்கு ஆண்டுகள் அப்படி இருந்தது.
அப்போது கஸ்தூர் பா காந்தி மார்க் என்றால் யாருக்கும் தெரியாது. கர்ஸன் ரோட் என்ற பெயரை எழுபதுகளின் இறுதியில்தான் காந்தியின் மனைவி பெயருக்கு மாற்றியிருந்தார்கள் என்பதால் அப்போதெல்லாம் கர்ஸன் ரோட் என்பதே புழக்கத்தில் இருந்தது. 1978-இல் ஒரு ஆண்டுக் காலம் கர்ஸன் ரோட்டிலேயே இருந்த சர்க்கிள் நம்பர் எட்டில் வேலை பார்த்தேன். சிவில் சப்ளைஸில் பல பிரிவுகள் உண்டு. அவைதான் சர்க்கிள் நம்பர் ஒன்று, இரண்டு, மூன்று என்று அழைக்கப்பட்டன. அலுவலகமும் கலாச்சார மையங்களும் ஒரே ஏரியாவில் இருந்ததாலும், டிபார்ட்மெண்ட்டுக்குப் புதிது என்பதாலும் தினமும் போய் தலை காட்ட வேண்டியிருந்தது. ஆனால் கையெழுத்துப் போட்டு விட்டு ஓடி விடலாம்.
பகல் முழுதும் படிப்பு. மாலையில் சினிமா. அதே கர்ஸன் ரோட்டின் கடைசிக் கட்டிடத்தில் தான் ஹங்கேரியன் செண்டர். அங்கேயும் வாரம் இரண்டு சினிமா இருக்கும். ஆக, மாக்ஸ் ம்யுல்லர் பவனிலும் ஹங்கேரியன் செண்டரிலுமாக வாரம் நான்கு சினிமா பார்த்து விடலாம். இரண்டு மையங்களிலும் சினிமா முடிந்து மதுபானமும் கொடுப்பார்கள். ஹங்கேரியன் செண்டர் கம்யூனிஸ்ட் என்பதால் கலாச்சார நடவடிக்கைகள் அதிகம் இருக்காது. வாரம் ரெண்டு படத்தோடு சரி. பார்ப்பதற்கும் ஒரு மாதிரி மயான அமைதியாக கலகலப்பே இல்லாமல் இருக்கும். ஆனால் மாக்ஸ் ம்யுல்லர் பவன் அப்படி இல்லை; அங்கே கலாச்சார நடவடிக்கைகள் அதிகம். (சில ஆண்டுகளுக்கு முன்பு தில்லி சென்றிருந்த போது பழைய ஞாபகத்தில் மாக்ஸ் ம்யுல்லர் பவன் போனேன். சினிமா முடிந்து சமோசாவும் டீயும் கொடுத்தார்கள். முன்பெல்லாம் விஸ்கி, பியர் எல்லாம் கொடுப்பார்களே என்று பவன் அதிகாரி போல் இருந்த ஒருவரிடம் கேட்டேன். வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பது போல் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, சிக்கன நடவடிக்கை என்றார். பிறகு சிரித்துக் கொண்டே ”இந்தியாவுக்கு வந்தால் நாமும் இந்தியரைப் போல் ஆகி விட வேண்டும் அல்லவா?” என்று கேட்டார். அப்படியானால் அடிக்கடி பெஹன் சூத் என்று சொல்லிப் பழகுங்கள் என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டேன்.)
தில்லியின் மாக்ஸ் ம்யுல்லர் பவனை என்னுடைய Alma materகளில் ஒன்று எனச் சொல்லலாம். அங்கே பார்த்த பல படங்கள் அப்படி அப்படியே காட்சிகளாக என் ஞாபக அடுக்குகளில் தங்கியுள்ளன. குறிப்பாக, Reinhard Hauff. சினிமா ஆர்வலர்கள் பலரிடமும் கேட்டிருக்கிறேன். அவர்கள், யாருக்கும் ரெய்னார்ட் ஹாஃப் பற்றித் தெரியவில்லை. மற்றொரு ஜெர்மன் இயக்குனரான வெர்னர் ஹெர்ஸாக் உலகப் புகழ் பெற்றவராக இருக்கிறார். ஆனால் ரெய்னார்ட் ஹாஃப்-க்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. ரெய்னார்ட் ஹாஃப்-இன் சினிமா என்னுடைய புனைவுலகம் போன்றது. ஹெர்ஸாக் அளவுக்கு அவர் புகழ் அடையாமல் போனதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம். இப்போது 78 வயதாகும் ரெய்னார்ட் ஹாஃப் தீவிரமாக இயங்கிய கால கட்டம் எழுபதுகளும் எண்பதுகளுமாக இருந்தது. அதனால் அவர் படம் வெளிவந்த உடனேயே மாக்ஸ் ம்யுல்லர் பவனில் திரையிட்டு விடுவார்கள். இத்தனை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ரெய்னார்ட் ஹாஃப்-இன் படங்களை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அவர் படங்கள் கிடைக்கவில்லை. பார்த்து 30 ஆண்டுகள் ஆகிறது.
காட்சி காட்சியாக ஞாபகம் இருக்கிறது என்று சொன்னேன். Slow Attack என்ற படத்தில் ஒரு சிறுவன் ஒரு தெருவில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் தன் கையிலிருக்கும் இரும்புக் கம்பியால் வரிசையாகக் கோடு போட்டுக் கொண்டே போவான். அந்தப் படத்தை நேற்று பார்த்தது போல் என்னால் விவரித்துக் கொண்டு போக முடியும். எண்பதுகளின் முற்பகுதியில் பார்த்த படம். இப்போதுதான் ரெய்னார்ட் ஹாஃப்-இன் வாழ்க்கைக் குறிப்புகளைப் பார்க்கும் போது 1983-இல் வெளிவந்த படம் என்று தெரிகிறது. Endstation Freiheit என்பது அதன் ஜெர்மன் தலைப்பு. இந்தப் படம் அவரது Knife in the Head என்ற படத்தின் இரண்டாவது பாகம் என்று சொல்லத்தக்கது. ரெய்னார்ட் ஹாஃப்-இன் மற்றொரு முக்கியமான படம் The Brutalization of Franz Blum.
கட்டுரையாளர் குறிப்பு: சாரு நிவேதிதா