Saturday 21 April 2018

கிஸ்டீரியா…” கற்சுறா


Thursday, 19 April 2018
“கிஸ்டீரியா…”

கற்சுறா
https://matrathu.blogspot.in/2018/04/blog-post.html




குரல் அறுந்தே கிடந்தது… ஒரு இரவல்ல. சீவியத்தின் சாமமெங்கும்
தொண்டைத் தண்ணி வற்றிப் போகுமளவுக்கு நிழல்களே ஊசலாடிக் கொண்டிருந்தது. நிலவை முகில் மறைத்த வேளைகளெங்கும் யாரையெல்லாம் மன்றாடினார்கள் என்பதனை இப்போது சொல்ல முடிவதில்லை. மன்றாட்டங்களோடு மட்டுமே கழிந்த காலம் அது.

“காலத்தை மீள் நிறுத்தி கதை சொல்லும் காலமா இது” என்று மனது
நினைக்கும் தருணங்களிலெல்லாம், இல்லை… இல்லவேயில்லை.
என்று அவரது மனது துருதுருத்து எப்பொழுதும் அதனை மறுத்துக்
கொண்டேயிருந்தது. தான் கண்டடைந்த எல்லாக் கதைகளையும்
அவரால் ஒருபொழுதும் சொல்லிவிடவே முடியாது. சொல்லப்பட்ட
கதைகளில் மட்டுமே வாழ்வு தடமிடுவதில்லை. சொல்லமுடியாத
கதைகளோடு கழியும் தனது சீவியத்தின் தண்டனைகளை அவர்
சாமங்களில் மட்டுமே இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு கடும் இரைச்சலோடு கூடிய மழையை அல்லது கசிந்துருகும் தார் +ஒட்டும் வெயிலை அல்லது கடும் பிறேக் ஒன்றைப் பிடித்தபடி
திடீரென்று நிறுத்தப்படும் ஒரு வாகனத்தை அல்லது நிறுத்தாமலேயே
வேகமாகப் போகின்ற ஒரு வாகனத்தை காணவேண்டிவரும்போது
சட்டென நிலை குலைந்து கால்கள் தடுமாறி விடுகிறது அவருக்கு.
அவர் தனக்குள் ஒழித்து வைத்திருக்கும் கதைகளை அவ்வப்போது
நடக்கும் இப்படியான சாதாரண நிகழ்வுகள் அந்தப் பொழுதுகளிலேயே
அவரை உடைத்து ஒரேயடியாக ஓட்டையாக்கிவிடுகின்றன. அவை
ஒவ்வொன்றும் அவருக்கு சாதாரண நிகழ்வுகளாக ஒருபொழுதும்
இருப்பதேயில்லை.

இப்படி வெறுமனே மிகவும் சாதாரணமாக, அன்றாடம் நடக்கின்ற
ஒவ்வொரு சிறிய செயற்பாடுகளையும் கண்டு இப்போது குலைபட்டுப்
போகும் அவரை எல்லோருமே அப்போதே கிஸ்டீரியா என்று
அழைத்தார்கள்.

அப்போதைக்கும் இப்போதைக்கும் இடைவெளி கிட்டத்தட்ட
முப்பத்தியொரு வருடங்களாக இருக்கின்றது. இந்த முப்பத்தியொரு
வருடங்களுக்குள்ளாக அவருடன் உருண்டோடிய கதைகளின் ஒரு
கதைதான் இது.

மிகைப்படுத்தப்பட்ட அல்லது கற்பனைக்குக் கூட ஒவ்வாத கதைகளைச்
எப்பொழுதும் சொல்லுவதே கிஸ்டீரியாவின்  இயல்பு. அதனைக்
கேட்பவர்கள் தங்கள் கொடுப்புக்குள் சிரித்துத் தன்னைப்  பழித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பதனைப் பற்றி  ஒருபொழுதும் கொஞ்சமும்
கவலை கொள்ளாத முகம் கிஸ்டீரியாவினுடையது.
ஒவ்வொரு கதையையும் சொல்லும் போது மிக நிதானமாக தொடர்
சம்பவங்களை விபரித்துக் கொண்டிருக்கும் கிஸ்டீரியா அதன்
இடையிடையே தன் அனுபவமாக புகுத்தும் பாலியல் அபரீதக்
கதைகளைக் கேட்டுச் சிரிப்பதற்கென்றே அவனைச் சுற்றி எப்பொழுதும்
ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும். அந்தக் கூட்டத்தின் கலகலப்பை
தன்னுடைய கதைகளால் அதிகரித்துக் கொண்டிருப்பான். அவன்
சொல்லுகின்ற பாலியல் கதைகளால் அப்போது அவனுக்கு உண்டான
காரணப் பெயர்தான் கிஸ்டீரியா.

இப்பொழுது கிஸ்டீரியாவுக்கு அறுபது வயதை நெருங்கிக்
கொண்டிருக்கும் தோற்றம். சலரோக வியாதி தொடக்கம் அனைத்து
வியாதிகளும் அவரது உடலில் தோன்றியிருக்கும் நிலையில்
அவற்றைச் சமநிலைப்படுத்த காலையும் மாலையும் தொடர்ந்து நடந்து
களைக்க வேண்டியிருக்கிறது. அவர் தனது மனதின் சமநிலையை
மட்டுமல்ல தனதுடலின் சமநிலையையும் குலைத்து நீண்ட
காலமாகிவிட்டது.

உடலின் உன்னதத்தையோ இன்னொரு உடலின் வாழ்தலுக்கான
உரிமையையோ விளங்கிவிடாத இள வயதுகளின் செயல்களைக்
கொண்டு ஒருவரை இப்போது ”பெட்டிகட்டி” “கட்டங்கட்டி”
குறுக்கிவிடமுடியுமா? என்று என்னால் யோசிக்க முடிவதில்லை.
ஆனால் என்னை விட கிஸ்டீரியாவுடன் அதிகமான காலங்களில்
நெருக்கமாக இருந்த “கே.எம். அவர்கள்” கிஸ்டீரியாவின் மீதும் அவரது
ஆரம்பகால செயற்பாடுகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை
இப்போது முன்வைக்கிறார். இன்றைக்கு எஞ்சி
உயிரோடிருக்கின்றவர்களில் ஒரு முக்கியமானவர் கிஸ்டீரியா.
“கே. எம் அவர்கள்” இதுசம்பந்தமாக கிஸ்டீரியாவை இதுவரையில்
மூன்று முறை சந்தித்திருக்கிறார். இருந்தும் அவர் எதிர்பார்ப்பது போல்
அவருக்குத் தெரியாத புதிதாக எந்தத் தகவலையும்
கிஸ்டீரியாவிடமிருந்து அவரால் பெற்றுக் கொள்ள முடியவேயில்லை.
கிஸ்டீரியா தன்னுடைய இயல்பாகச் சொல்லப்படும் வார்த்தைகளில்
“கே. எம் அவர்கள்” தொடர்ந்தும் குழம்பிப் போய்க்
கொண்டேயிருக்கிறார்.




கிஸ்டீரியா தனது வயோதிப காலத்தை வாழ்ந்து முடிக்க
ரொரன்டோவில், மார்க்கம் அன்ட் செப்பேட் சந்திப்பில் தென்கிழக்குப்
பக்கமாக அமைந்திருக்கும் ஏழு மாடிகளைக் கொண்ட முதியோர்
இல்லத்தில் இப்போது வாழ்ந்து வருகிறார். இங்கே வந்த பிற்பாடுதான்
கே. எம். அவர்களுக்கும் தொடர்ந்து அவரைச் சந்திக்க முடிகிறது. கே.
எம். அவர்களும் மார்க்கம் அன்ட் செப்பேட் சந்திப்பில் இருந்து கிழக்குப்
பக்கமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இதே மாதிரியான
இன்னுமொரு முதியோர் இல்லமொன்றில் வசித்து வருகிறார்.
அவருக்கும் உடலில் ஆயிரம் வியாதிகள். மலம் போவதையோ சலம்
போவதையோ அவரால் உணர்ந்து கொள்ளமுடியாத நிலையில்
பம்பர்ஸ் கட்டிக்கொண்டுதான் வாழ்நாளைக் கழிக்க வேண்டிய நிலை
வந்திருக்கிறது அவருக்கு. உடலளவில் தைரியத்ததை இழந்தாலும்

மனதளவில் இழந்து விடாது கர்வம் பிடித்திருக்கும் வாழ்வு
அவருடையது.

கிஸ்டீரியா சம்பந்தப்பட்ட கதைகளை உண்மையோடு அறிந்து பதிவு
செய்யவேண்டும் என்பதுவே அவரது நீண்டகால நோக்கம்.
அதற்காகவே கிஸ்டீரியாவுக்கு தொடர்ந்து கரைச்சல் கொடுக்கிறார்.
கே.எம் அவர்கள் மீது இன்னமும் மரியாதை வைத்திருக்கும்
கிஸ்டீரியாவிற்கு இந்தக்கரைச்சலில் இருந்து விலத்திவிட ஒற்றைச்
சொல்லில் “போடா பேயா” என்று சொல்லிவிட வேண்டும் என மனம்
உன்னினாலும் சொல்லி மறுத்துவிட முடியாதிருக்கிறது. அதனால்தான்
பல நேரங்களில் பொறுமை இழந்து போனாலும் கிஸ்டீரியாவினால்
ஒருபொழுதும் அவரது முகத்தை முறித்து கதைத்துவிட விருப்பம்
இன்னமும் வரவில்லை.

இது சந்திப்பின் நான்காம் நாள். கிஸ்டீரியா தன் கதையின்
பின்பாதியை இப்போது சொல்லத் தொடங்கினார். கிஸ்டீரியா
சம்பந்தப்பட்ட மூன்றாவது கொலை அது.
1984ம் வருடம் துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்
வைத்துக் கடத்தப்பட்டு அனிச்சயங்குளம் வெளிக்காட்டுச்
சுடலைக்குள்ளே வைத்து கொலை செய்யப்பட்ட சிங்கள மனுசி
ஒருத்தியினது கதையை இப்பொழுது விளக்கமாக “கே. எம்.
அவர்களுக்குச்” சொல்லத் தொடங்கினார் கிஸ்டீரியா.
கதையைச் சொல்லத் தொடங்க முதல் கிஸ்டீரியா தனது முகத்தைக்
இரண்டு கைகளாலும் இறுகப் பொத்தினார். கிட்டத்தட்ட முப்பது
செக்கன்கள் வரையில் குனிந்தபடியே கண்களை மூடியிருந்தார். அந்த
முப்பது செக்கன்களில் அவர் தனது மனதைக் கட்டுப்படுத்தினாரா?
அல்லது இளகவிட்டாரா என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால்
கழுத்தில் இருக்கும் தசைநார்கள் இரண்டும் அப்போது

வெளித்தள்ளியபடி இருந்தது. மூடியிருந்த கைகளால் முகத்தை
வளித்தெடுத்து இரண்டு பெருவிரல்களிலும் தனது நாடியைத்
தாங்கிப்பிடித்தவண்ணம் கே.எம் அவர்களை அண்ணாந்து பார்த்தபடி
அவர் பேசத் தொடங்கினார்.

"நானும் பின்பக்கமாக நின்று அவளின் முதுகுத்தண்டில் எட்டிக் காலால்
உதைத்தேன். சாம்பல் தூறிக்கிடந்த நிலத்தில் குப்புற விழுந்தாள். குப்புறக்
கிடந்த அவளின் தலைமயிர்களுக்குள்ளால் சாம்பல் புழுதி புகைபோன்று
மேலெழுந்தது. கைகளையும் கால்களையும் நீள் கயிற்றில்
கட்டிவைத்திருந்தபடியால் ஒவ்வொருமுறை உதையும்போதும் அவள்
நிலத்தில் விழுந்து எழும்பிக் கொண்டிருந்தாள். ஆனால் நான் உதைந்த
இந்தமுறை மட்டுந்தான் அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை.
சாம்பல் பரவிக் கிடந்த நிலத்தில் கால்களை விரித்து முட்டுக்காலில்
ஊன்றியபடி குப்புறக்கிடந்தாள். கைகள் மட்டும் முதுகுப்பக்கமாகக்
கயிற்றில் இழுபட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன."

என்று சம்பவம் குறித்து அவர் சொல்லத் தொடங்கிய விதம் “கே. எம்.
அவர்களுக்கு”கொஞ்சம் சங்கடத்தைக் கொடுத்திருக்கத்தான் வேண்டும்.
அவரால் அதனைச் சரிவரக் கிரகித்துக் கொள்ளமுடியவில்லை.

தனது பாணியில் கதையைச் சொல்லத் தொடங்கியது சரியாக
இருந்ததாகவே இப்போதும் கிஸ்டீரியா நினைக்கிறார். பழக்கப்பட்டுப்
போன கதை கேட்கும் முறையிலிருந்து “கே.எம் .அவர்களாலும்”
மாறமுடியாதிருந்தது. மிக அதிகமாகவே குழம்பிப் போனார்.
பதட்டப்பட்ட கண்கள் வெள்ளேந்தியாக கிஸ்டீரியாவை நோக்கி
நேரெதிராகத் திரும்பியிருந்தன. அந்தவிதமான பார்வையை

கிஸ்டீரியாவும் கவனித்தார். சொல்லப்பட்ட வார்த்தைகளிலிருந்து
எந்தக் குறிப்பையும் எடுத்துவிடக்கூடிய காலஅவகாசம் கே.எம்.
அவர்களுக்குப் போதாமல் இருந்தது.

அதனை திசைதிருப்பும் விதமாகத்தான் அவர் கிஸ்டீரியாவை
இடைமறித்து உடனே கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.

"அவளுக்கு கிட்டத்தட்ட எத்தனை வயது இருந்திருக்கும்?"

சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அப்போது அவளைப்பார்க்க
எனது பெரியமாமியின் சாயல் இருந்ததால் ஒரு முப்பத்தெட்டு நாற்பது
வயது மதிக்கலாம். என்று நினைக்கிறேன். என்றார் கிஸ்டீரியா.

"எதற்காக அவளை நீங்கள் கடத்தினீர்கள்?"

"அவள் ஒரு சி.ஐ.டி."

“அவள் சி.ஐ.டி. என்பதனை நீங்கள் எவ்வாறு அடையாளம்
கண்டுகொண்டீர்கள்?”

"அவள் சிங்களத்தி..."

ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலைச் சொல்ல இடையில் அதிக
நேரத்தை எடுத்துக் கொண்டார் கிஸ்டீரியா.

கிஸ்டீரியாவிற்கு பதில் சொல்வதில் இருக்கின்ற நெருக்கடி
என்னவென்றால் சொல்லுகின்ற பதிலை எந்தக் காலத்தில் வைத்துச்
சொல்வது என்பதுதான். முடிந்தவரை பதட்டமில்லாது கதை நடந்த
அன்றைய காலத்தில் வைத்தே இந்தக் கேள்விகளுக்கு பதில்
சொல்லிக் கொண்டிருந்தார்.

“சிங்களத்திலே உங்களிடம் அவள் பேசினாளா?”

“இல்லை அவள் யாருடனும் எதுவும் பேசவேயில்லை.”

இந்தக் கேள்விகளினூடு “கே.எம்.அவர்கள்” ஒவ்வொரு தடவையும்
தன்னைச் சுதாகரித்துக் கொண்டேயிருந்தார். கிஸ்டீரியாவைக் கதை
சொல்ல விடுவதிலும் பார்க்க கேள்விகளால் தனக்குத்
தேவையானவற்றை எடுத்துக் கொள்வது கே.எம். அவர்களுக்கு
இலகுவாக இருந்தது.

“அப்போ எப்படி அவள் சிங்களத்தி என்று உங்களுக்குத் தெரியும்?”

“அப்ப எண்பது எண்பத்திரண்டில சிங்களத்திகளே அங்கு தேங்காய்
விற்பதற்காக லொறியில் வருவார்கள். அப்பிடித்தான் அவள் லொறியில்
தேங்காய் விற்பவளாக வந்தவள்.”

“தேங்காய் வாங்கியவர்கள் யாரிடமாவது அவள் சிங்களத்தில்
பேசினாளா?”

“இல்லை. ஆரம்பத்தில் பேசினாளாம். பின்பு எதுவுமே பேசவில்லையாம்.”
“அதுதான் ஏன்?”

“அவள் ஊமை மாதிரி நடித்தாள்.”

“அதை எப்படி நீங்கள் கண்டு பிடித்தீர்கள்?”

“அவள் இவ்வளவு அடிக்குப் பிறகும் வாய்திறக்கவில்லை.”

“எத்தனை நாட்களாகக் கட்டி வைத்திருந்தீர்கள்?”

“தொடர்ந்து மூன்று நாட்கள்.”

“அந்த மூன்று நாட்களும் உங்களுடன் எதுவும் பேசவில்லையா?”
“இல்லை.”

“என்ன சாப்பாடு கொடுத்தீர்கள்?”

“றோஸ்பாணும் பிளேன்ரீயும்.”

‘ம்... அதனை விரும்பிச் சாப்பிட்டாளா?”

“இல்லை. அவள் சாப்பிட மறுத்தாள்.”

“நீங்கள் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லையா?”

“கட்டாயப்படுத்தினோம். அடித்தும் பார்த்தோம். அவள் சாப்பிடவில்லை.”

“ம்...”

“நீங்கள் சொல்வது எதாவது ஒன்றேனும் அவளுக்கு விளங்கியிருந்ததா?”

“தெரியாது.”

“அதனை நீங்கள் அறிய ஏன் முற்படவில்லை?”

“சிங்களம் தெரிந்த ஒரு தோழரைக் கூட்டிவந்து பேசவைத்தோம்.”

“நீங்கள் கூட்டி வந்த தோழருக்கு நன்றாகச் சிங்களம் தெரிந்திருந்தது
என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அவர் நிக்கரவட்டியாத் தாக்குதலுக்குப் போய்வந்தவர். அவருக்கு
நன்றாகச் சிங்களம் பேசத்தெரியும்.”

“அவள் அவருடனாவது பேசினாளா?”

“இல்லை. அவரை அவள் நிமிர்ந்தே பார்க்கவில்லை. அவள் களைத்துப்
போயிருந்தாள் என்று நினைக்கிறேன். அப்போ கண்களைத்
திறக்கமுடியாமல் இருந்தாள். இரத்தம் காய்ந்து அவளது கண்களை
ஒட்டவைத்திருந்தது.”

“அவர் பேசியதை அவள் விளங்கிக் கொண்டாளா?”

“தெரியாது.”

“அவள் காது கேட்கக் கூடியவளா?”

“தெரியாது.”

“உங்கள் தோழர் வந்து போனதையாவது அவள் உணர்ந்து கொண்டாளா?”

“தெரியாது.”

கே.எம். தனது இரண்டு சொண்டையும் உள்ளுக்குள் இறுக்கி மடித்துக்
கொண்டு தலையை பக்கம்பக்கமாக ஆட்டினார்.  கே.எம்.அவர்கள்.
தன்னுடைய பதில்களில் திருப்தியடையவில்லைப் போலிருந்தது
என்பதனை அந்தத் தலையாட்டு கிஸ்டீரியாவிற்கு உணர்த்தியது.

“நான் என்ன செய்யமுடியும் எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்.
அவ்வளவுதான். நானே அவளைக் கட்டி வைத்திருந்த கொட்டிலுக்குக்
கடைசி நாள்தான் போனேன். அப்போதே அவள் அரை மயக்கத்தில்
இருந்தாள். நான் போனபோது அவளைப் பிடித்து மூன்று
நாட்களாகியிருந்தன”
என்றார் கிஸ்டீரியா.

கே.எம்மின் தலையாட்டு அவருக்கு ஒரு அரியண்ட எரிச்சலைக்
கொடுத்தது. அதனால்தான் அந்தச் சம்பவத்தின் விளக்கவுரையை
மேலும் தெளிவு படுத்த வேண்டியிருந்தது.

“அதுநாள்வரை அவள் பேசினாளா? அல்லது உண்மையிலேயே ஊமையா
என்று எனக்குத் தெரியாது. அவளைப்பிடித்தது ஒருத்தன். இந்தக்
கொட்டில்வளவிற்குள் கொண்டு வந்தது வேறு ஒருத்தன்.அதுவரை
சாப்பாடு தண்ணி கொடுத்தான்களா என்றே எனக்குத் தெரியாது.”  என்று
அவரை நிமிந்து பார்க்காமலேயே தொடந்து சொல்லிக்
கொண்டிருந்தார்.

மூன்று நாலுபேர் சொல்ல வேண்டிய பதிலைத் தனியொருவனாகத்
தான் மட்டும் இப்ப முப்பத்தியொரு வருடம் கழித்து சொல்லிக்
கொண்டிருப்பது மிகுந்த கவலையளித்தது. இந்தச் சம்பவத்தின்
நாலிலொருபகுதியைத்தான் தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்
என்பதுவோ இது ஒரு முழுமையற்ற பதிவு என்பதனையோ கே.எம்.
அவர்கள் விளங்கிக் கொள்ளப் போவதேயில்லை.

அந்தக் கொட்டில்வளவு நடுக்காட்டிற்குள் இருப்பதுபோல் தோன்றியது.
சுற்றிவர முள்ளுப்பத்தைகள். வளவின் வேலிக்கு அடையாளமாக
வெட்டிய பற்றைகளைக் கொண்டே “அக்கிள்” போட்டிருந்தார்கள்.
வைபோசாகப் பிடித்த காணி என்பது அந்த அக்கிளில் தெரிந்தது.
வளவிற்குள்ளும் முளைத்தால் முளைக்கட்டும் என்று சோளனையும்
கவுப்பியையும் விதைத்திருந்தார்கள். அது அங்கொரு கொஞ்சம்
இங்கொரு கொஞ்சம் என முளைத்திருந்தது. கொட்டில் வரையும் ஒரு
ஒற்றையடிப்பாதை இருந்ததே நடக்க நடக்கத்தான் தெரிந்தது. சுற்றிவர
வீடுகளே இல்லை. அவ்வளவிற்குக் காடுபத்திய வளவு அது. சிறியான்
குரங்குகளின் பாய்சலும் விளையாட்டும் மரக் கிளைகளை உலுப்பிக்
கொண்டிருந்தன. புல்லுக்கும் நோகாமல் அசுமாத்தமும் தெரியாமல்
அசைவேயற்று நடக்கின்ற சிறியான் குரங்குகள் இத்தனை உலுப்பு
உலுப்புவது அன்று என்னமோ அதிசயமாகவே இருந்தது.
கிஸ்டீரியாவுக்கு பழைய ஞாபகங்கள் வந்து போயின.

மூன்று நாட்களாக இரவுக்குளிரைப் போக்க விறகு கட்டையைக்
கொட்டிலுக்குள்ளேயே எரித்திருந்தார்கள். நெருப்பிற்குமுன்னால்
நிலத்தில் முழங்கால்கள் முட்டும் படி அவளது கைகளைக் கட்டித்
தொங்கவிட்டிருந்தார்கள். மூன்று நாட்களாக எரித்த சாம்பல் அவளின்
கால்களின் கீழேதான் பரவிக் கிடந்தது. சற்று நிமிடம் நிதானித்து
பழைய கதையை யோசித்துக் கொண்டிருந்த கிஸ்டீரியா மீண்டும்
பேசத் தொடங்கினார்.

“ஒருகட்டத்தில் இனி உவள வச்சிருந்து நாம மினக்கடமுடியா… என்று
சொன்னான் தளையன். தளையன் சொல்வதை நாங்கள் யாரும் அங்கே
மறுப்பதற்கில்லை. ஜேர்மனிலிருந்து திரும்பிவந்து இந்திய றெயினிங்
முடித்து வந்தவன் அவன். அதனால் எங்கள் எல்லோருக்கும் அவன்
மீது மிகுந்த மரியாதை இருந்தது. தளையன் சரியான கறுப்பு
என்றாலும் ஜேர்மனில் இருந்து திரும்பி வந்ததால் அவனை நாங்கள்
ஒரு வெள்ளைக்காரனைப் போலவே அனுசரித்தோம்.” என்றார்
கிஸ்டீரியா.

ஆனால் இவ்வளவையும் கேட்ட கே.எம். எவ்வித பதட்டமும்
அவசரமும் இல்லாது

“நீங்கள் அவளை வைத்திருந்த காலங்களில் என்ன தகவலைப்
பெற்றீர்கள்?”
என்று கேட்டார்.

கிஸ்டீரியாவிடம் அதற்கு ஒரு பதிலும் இல்லை என்பதும் கே.எம்.இற்குத்
தெரிந்திருந்தது. அதனால்தான் உடனேயே தன்னைச் சுதாகரித்தபடி

“சரி...என்ன தகவலைப் பெற்றுவிடலாம் என்று எண்ணி நீங்கள் அவளைக்
கடத்தினீர்கள்”
எனக் கேட்டார்.

அவளை நாங்கள் கடத்தியதற்கும் இன்று தான் கே.எம்முடன்
கதைத்துக்கொண்டிருப்பதற்கும் முப்பத்தியொரு ஆண்டுகள்
இடைவெளியிருந்தது. இதையே இருபது ஆண்டுகளுக்கு முன்
கேட்டிருந்தால் ஒருபதிலும் போன ஆண்டு கேட்டிருந்தால் வேறு
ஒருபதிலும் சொல்லியிருக்கவேண்டிய கேள்விக்கு நான் என்ன பதிலை
இப்போது சொல்ல? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் “கே.எம். அவர்கள்” ஒவ்வொரு கேள்விகளுக்கூடாகவும் ஒரு
அடிமட்டத்தை வைத்து அளந்து தன்னைக் கோணர் பண்ணுவதை
கிஸ்டீரியா உணர்ந்து கொண்டேயிருந்தார்.
ஆனால் கேள்வி கேட்கப்படும் போது அந்த ஒரு கேள்வி முப்பத்தியொரு
பதில்களால் நிரப்பப்படக்கூடியவை என்பதை தனது ஆசானான கே.எம்.
மிற்கு எப்படித் தெரியாதிருந்தது என்பதுதான் அவருக்கு மிகுந்த
கவலையளித்தது.

“கே.எம். அவர்கள்” அவரையொரு விசாரணைக் கைதியை
விசாரிப்பதுபோல் விசாரித்துக் கொண்டிருந்தார். இப்போது
கிஸ்டீரியாவின் கால்களின் கீழே சாம்பல் கொட்டியிருக்கவில்லை.
கார்ப்பெட் போட்ட தரையில் அவர் இருந்தார். “கே.எம்.அவர்கள்”
கொஞ்சம் உயரத்தில் சோபாவில் இருந்தார். விசாரணைதான்
அப்பொழுதும் இப்பொழுதும் ஓரே வடிவமாய் இருந்தது.

பதிலேயற்ற கேள்விகளால் தொடரப்படும் விசாரணைகளால் எதையும்
விசாரணையாளர் புதிதாக அறிந்து கொள்ளப் போவதில்லை.
விசாரணையாளரால் எடுக்கப்பட்ட முடிவில் இருந்து எழுப்பப்படும்
ஒரு கேள்விக்குக் கூட சரியான பதிலைக் எந்தக் கைதியும்
சொல்லிவிடப்போவதேயில்லை.
இன்றைய கேள்விகளை விடவும் மிக மோசமான கேள்விகளால்
அவள் மீதான விசாரணையை அப்போது நாங்கள் மேற்கொண்டோம்.

அந்த மோசமான கேள்விகளில் இருந்தே நாம் எதையும் அப்போது
பெற்று விடவில்லை. என்று நினைத்து கிஸ்டீரியா குனிந்திருந்து
சிரித்தார்.

விசாரணையாளர் தனது செயலுக்கு அதிகமான வீரியத்தைக்
கொடுப்பதற்கு மட்டுமே அவ்வகையான கேள்விகள் உகந்தவையாக
இருக்கும். நாங்கள் அந்தச் சிங்களத்தியிடம் கேட்ட கேள்விகளிலும்
விட மிகப் பலவீனமான கேள்விகளையே கே.எம் இப்போது தன்னிடம்
கேட்டுக் கொண்டிருப்பதாக கிஸ்டீரியா ஒரு பக்கம் நினைத்துச்
சிரித்தார்.

தேவையற்ற பதில்களுக்காக “கே.எம். அவர்கள்” நீண்ட நேரம் காத்துக்
கொண்டிருப்பது கிஸ்டீரியாவுக்கு பெருத்த அயர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரே இடத்தில் தொடர்ந்து அசைவற்று இருந்ததினால் அவருக்கு கால்
விறைத்திருக்கவேண்டும். சுவரில் சாய்ந்தபடி இருந்து கொண்டே
காலை நீட்டி மெல்ல உதறினார்.

“அரைமணிநேரம் காலை மடித்திருந்ததுக்கே உமக்குக் கால்
விறைக்கிறதா? மூன்றுநாட்கள் தொடர்ந்து கால்களையும் கைகளையும்
கட்டிவைத்தால் மட்டும் விறைக்காதா?”
என்று கேட்டார் “கே.எம் அவர்கள்.”

கிஸ்டீரியா அதற்கு எதையும் பதிலாகச் சொல்லவில்லை. காலை
நீட்டி இடுப்பைச் சுவர்ப்பக்கமாக இழுத்து நிமிர்ந்திருந்து கொண்டு,
“நீங்கள் என்னிடம் மேலதிகமாகக் கேட்கவேண்டியிருக்கும்
கேள்விகளைத் தொடர்ந்து கேளுங்கள் தோழர்”
என நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தபடி சொன்னார்.

கிஸ்டீரியாவின் இந்த வார்த்தையைக் கேட்டு கே.எம். ஒரு செக்கன்
திகைத்துத்தான் போனார். அவரது அந்தத் திகைப்பின் இடையே
சிறிதும் நேரம் விடாது,

“நீங்கள் என்னை மன்னிக்கோணும், உங்களிடம் இருந்து நான்
ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் தோழர்”
எனச் சொல்லி,

“வதைகளை வடிவமைத்தவர்கள் யார் தோழர்?”
என்று மிகவும் பக்குவமாக மரியாதையாக கே.எம் அவர்களைப்
பார்த்துக் கேட்டார் கிஸ்டீரியா.

“வகைவகையான மனித வதைகளை நமக்குக் கற்பித்தவர்கள் யார்?

இதன் தொடக்கம் எங்கிருந்தது என்பதையாவது எனக்குச்
சொல்வீர்களா?”
என்று தயவாகக் கேட்டார்.

கே.எம் தொடர்ந்து மௌவுனமாக இருந்தார். கிஸ்டீரியாவிடம் இருந்து
இந்தச்சிறயளவு கேள்வியைக் கூட அவர் எதிர்கொண்டதில்லை.

“இராணுவ வடிவமைப்பில் இராணுவச் சிந்தனையில் நமது மனமும்
அணுகுமுறைச் செயற்பாடும் உருவாகத் தொடங்கிய போதே
வதைமுறைச் சிந்தனையும் அதனுடன் வெளித்தோன்றி விடுகிற
தல்லவா? அந்த வதைமுறையை நாங்கள் அப்போது புதிதாக
யாரிடமிருந்தும் கற்கவேண்டியிருக்கவில்லை. அது எங்கள்
எல்லோருக்குள்ளும் உள்ளேயே இருந்திருந்தது அல்லவா?”
என்று கேட்டார் கிஸ்டீரியா.

இதனை உற்று அவதானிப்பது போல்.தலையைக்குனிந்து
கேட்டுக்கொண்டிருந்தார் கே.எம். அவர்கள்.

அந்த மௌவுனத்தின் பின்னும் கே.எம் அவர்களிடமிருந்து அதற்குப்
பதில் வரவே வராது என்று தெரியும் கிஸ்டீரியாவிற்கு. அதனால்
அவரே தொடர்ந்து கதையைச் சொல்லத்தயாரானார்..

நாங்கள் அவளை இரவு சுடப் போகிறோம். இனிவைத்திருக்க முடியாது
என்று தளையன் ஒரேயடியாகச் சொல்லிவிட்டான். சுடுவதற்கு
கொண்டு செல்வதற்கு முன், தளையன் வெளியில் போய்விட்டான்.
குட்டான் சிவாதாசனும் நானும் தான் தனியே அந்தக்
கொட்டில்வளவில் இருந்தோம். திடீரென அவளின் பாவடையைக்
கிளப்பி,
“டேய் கிஸ்டீரியா இஞ்ச இவளின்ர சாமானைப் பார்” என்று எனக்குக்
காட்டினான் சிவா.
“அதனைப் பார்க்கும் போது எனக்கு என்ன மனநிலை இருந்தது என்று
உங்களால் ஒருபொழுதும் சொல்லிவிடமுடியாது. இண்டைக்கு அது
நடந்து முப்பத்தியொரு வருசம்.”
இதனைச் சொல்லும் பொழுது கிஸ்டீரியாவிற்கு தொண்டை
கரகரத்தது.
“கொஞ்சக்காலத்திற்கு முன் றெஸ்ரோறன்டில இறைச்சி
வெட்டிக்கொண்டிருந்த ஒரு சின்னப்பொடியன் “ ஐயா இஞ்ச வாங்க
எண்டு கூப்பிட்டு, “நீங்களும் இன்னமும் கலியாணம் கட்டேல்ல,
இப்பயே அறுபதத்தாண்டுது உங்களுக்கு, இனியும் கட்டப் போறேல்ல.
இண்டுவரைக்கும் நீங்கள் ஒரு சாமானையும் பாத்திருக்கமாட்டியள்.
பொம்புளையளின்ர சாமான் எப்படியிருக்குமெண்டு தெரியுமா?”

என்று சொல்லிப்போட்டு மேசையில் கிடந்த மாட்டிறச்சியில ஓங்கி
கத்தியால ஒரு கொத்துக் கொத்தி அந்தக் கத்தி நுனியாலேயே
கொத்திய இறைச்சியின் பிளவை விரித்துக்காட்டினான்”

“இப்படித்தான்”. ஐயா, சரியா இப்புடித்தான் ஐயா அந்தச் சாமான்
இருக்கும்” வேணுமெண்டா இதப்பாத்து இண்டைக்கு ஒருக்கால்
“கையில அடியுங்கோ” எண்டான்.

“என்ர கண்ணுக்கு அப்படியே குட்டான் சிவதாசனப்பார்த்தமாதிரியே
இருந்தான் அவன்.”

கே.எம். அவர்களிடம் ஒரு அசுமாத்தமும் தெரியவில்லை.

“தளையன் “பிக்-அப்” ட்றக்கை எடுத்துவரப் போயிருந்தான். அப்போது
இரவு 1 மணியைத் தாண்டியிருந்தது. அவளின் கையில் கட்டியிருந்த
கயிற்றை கத்தியால் அறுத்தான் சிவா. அவள் குப்புற சாம்பலுக்குள்
விழுந்தாள். அவளது கைகளும் கால்களும் செயலிழந்து போனவை
போல் பலமிழந்து கிடந்தன. மூச்சு வந்து போய்க்கொண்டு இருந்ததைப்
பார்த்தே உயிருடன் இருப்பது தெரிந்தது. வெளியில் மழை மெதுவாகப்
பெய்யத் தொடங்கியிருந்தது. திரும்பி வந்த தளையன் மிகுந்த
ரென்சனில் இருந்தான். இந்த மழைக்கு விறகுகட்டைகள் நனைந்து
போய் இருக்கும் என்று சிவா என்னிடம் காதுக்குள் மெதுவாகவே
சொன்னான்.”
என்றார்.

“நானும் சிவாவும் அவளை பின் பெட்டிக்குள் ஏற்ற தளையன்
வாகனத்தை மிக வேகமாக எடுத்தான். சில்லுகள் நான்கும்
சுற்றியடித்துப் புறப்பட்டது. நாங்கள் பற்றிப்பிடிக்க வாகனத்தில் எதுவும்
இருக்கவில்லை. கால்களை நீட்டி பெட்டியில் அமத்திக்கொண்டு
முதுகை மறுமுனையில் பின்னால் சாய்த்து இறுக்கிக் கொண்டேன்.

சிவாவின் இரண்டு கைகளும் அவளது முலையை இறுக்கிப்பிடித்தபடி
இருந்ததன. அவளின் தலைமாட்டில் அவன் இருந்தபடியால் அது
அவனுக்கு வசதியாக இருந்திருக்க வேண்டும்”
என்றார்.

கே.எம் அவர்கள் இப்போது கதையைக் கேட்கின்ற பொறுமையை
இழந்திருந்தார் என்பதை உணர்ந்தாலும் இன்றோடு இந்த
அரியண்டத்தை முடித்துவிட விரும்பினார் கிஸ்டீரியா. அதனால்தான்
கதையை வேண்டுமென்றே மிகவும் இறுக்கமாகவும் செறிவாகவும்
சொல்லிக் கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கேட்பதற்குப் பொறுமையிழந்த கே.எம். அவர்கள்.
“இதற்குள் நீர் தொடர்ந்து உம்மை மட்டும் புனிதனாக்கிக் கொண்டே
வருகிறீர். நீர் செய்த ஊத்தைச் செயல்களையும் சொல்லும். நீர்
ஒண்டும் தெரியாத சூசைப்பிள்ளையில்லைத்தானே.”
என்று கிண்டலடித்தார்.

“இந்தச் சம்பவத்தைப் பொறுத்தளவில் சம்பந்தப்பட்ட மிக
முக்கியமானவர்களில் குட்டான் சிவதாசனும் தளையனும் இன்று
உயிரோடு இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் தோழர்.
விரும்பியோ விரும்பாமலோ சம்பவம் குறித்த நபர்களை மாற்றி
மாற்றித்தான் நான் கதையே சொல்ல வேண்டியிருக்கிறது. இப்ப என்ன
எல்லாவற்றையும் நான்தான் முன்னின்று செய்தேன் என்று சொல்லி
குற்றத்தை முழுவதுமாக என்தலையில் புதைத்துவிட்டு உங்களிடம்
இருந்து என்னால் விலகிச் சென்று விடமுடியும். அப்படி நான்
செய்யப்போவதில்லை. உண்மையில் இந்தக் கொலைக்கு நாங்கள்
மூவர் மட்டுமா காரணமாக இருக்க முடியும்.? இல்லைத்தானே…”

என்று சொல்லி முடிப்பதற்குள் இருக்கையை விட்டு எழுந்தார் கே.எம்.
அவர்கள்.

“அந்த நேரத்தில் நமது சமூகத்தின் பலத்த ஆதரவுடன்தானே மிக
அதிகமான கொலைகள் நடந்தேறின. கொலைகள் மக்கள்
மயப்பட்டிருந்தன என்பதனை நீங்கள் ஒருபோதும் மறுக்கமுடியாது”
என்று கிஸ்டீரியா சொன்னார்.

“நீங்கள் செய்த லூசுத் தனத்திற்கும் முட்டாள்தனமான செயலுக்கும்
இப்ப வந்து எனக்கென்ன விஞ்ஞான விளக்கம் தருகிறீரா நீர்?”
என்று எகிறினார் கே.எம்.

“நீங்கள் கதையை முழுவதுமாகக் கேட்பதற்குப் பின்நிற்கிறீர்கள்.
உங்களைப் போன்றவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் முடிவுகளுக்காக
எமது கதைகளை உருமாற்றமுடியாது தோழர். இந்தக் கதை நடந்த
காலத்தில் நீங்கள் இந்தியாவில் இருந்தீர்கள். அந்தக் காலத்தை
உங்களால் ஒருபோதும் கற்பனை பண்ணிப் பார்க்கவே முடியாது.”

“அந்தக் காலத்தின் சாமமெங்கும் தொண்டைத் தண்ணி வற்றிப்
பேகுமளவுக்கு எப்பொழுதும் எம்கண்முன்னே நிழல்களே ஊசலாடிக்
கொண்டிருந்தன. நிலவை முகில் மறைத்த வேளைகளெங்கும் நாங்கள்
யாரையெல்லாம் மன்றாடினோம் என்பதனை இப்போது சொல்ல
முடிவதில்லை. மன்றாட்டங்களோடு மட்டுமே கழிந்த காலம் அது.
உங்களால் ஒருபோதும் அதனைக் கற்பனை பண்ணிப் பார்க்கமுடியாது.
முப்பத்தியொருவருசத்துக்குப்பிறகு வந்திருந்து இப்ப கேள்வி மட்டுமே
உங்களால் கேட்கமுடியும். அதற்குரிய பதில்கள் உங்களுக்கு உகந்ததாக
இல்லாதிருப்பதற்கு நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்”
என்றார் கிஸ்டீரியா.

கே.எம் அவர்கள் அருகிருந்த ஜன்னல் கரையோரம் நின்றபடி
தெருவைப்பார்த்துக் கொண்டிருந்தார். சனப்பழக்கம் குறைவான தெரு
அது. அங்கே தொடர்ந்து பார்ப்பதற்கு எதுவுமேயில்லை என்றாலும்
அவர் தலையை அசையாது பார்த்துக்கொண்டேயிருந்தார்.

அவருக்கு கிஸ்டீரியாவை நேரெதிர் பார்ப்பதற்கு இயலாமல் இருந்தது. சில
மணித்துளிகள் கழித்து கிஸ்டீரியா கதையைச் சொல்லத்
தொடங்கினார்.

“தளையன் அனிச்சயங்குளச் சுடலையையும் தாண்டி நீண்ட தூரம்
காட்டிற்குள் சென்று. “பிக்-அப் ட்றக்”ஐ நிறுத்திவிட்டு எங்களையும்
இறங்கும்படி சொன்னான். கையிலும் காலிலுமாகப்பிடித்து அவளை
நாங்கள் கீழே இறக்கினோம். அவளின் இறுதி முடிவு குறித்து நாம்
எங்களுக்குள் எதையும் பேசிக் கொண்டதேயில்லை. தளையனும்
எங்களிடம் கேட்டதுமில்லை. வார்த்தைகளுக்கு அங்கே
அவசியமேயிருக்கவில்லை. சிதறிக்கிடக்கும் வீரைக்கட்டைகளையும்
பாலைக்கட்டைகளையும் குவித்தோம். மேலிருந்த கட்டைகளில் மட்டு
மெல்ல ஈரம் ஊறியிருந்தன.”
என்றார்.

மனம் பதைக்கும் முகத் தொனி தெரிய கே.எம். அவர்கள் திரும்ப
வந்து தனது இருக்கையில் இருந்தார். இருந்த இருப்பும் சாயலும், இது
குறித்து கேள்விகள் எதையும் தான் இனிக் கேட்கப் போவதில்லை
என்பதை உணர்த்தியது.

“ஈரம் படர்ந்திருந்த புல் நிலத்தில் அவளை இருத்தியிருந்தோம்.
நிமிரிந்திருக்க முடியாதவளாய் சரிந்து நிலத்தில் விழுந்தாள்.
அதற்குள்ளாக கொஞ்சம் தள்ளி இருட்டில் நின்ற வேட்டைக்கார
முத்துமாணிக்கத்தை தளையன் கூட்டிவந்திருந்தான். அவருக்கு காது
சரிவரக் கேட்காது. எல்லாவற்றையும் நாம் கைப்பாசையால் தான்
அசைத்துக் காட்ட வேண்டும். ஆனால் அந்த நேரம் தனது
கட்டுத்துவக்குடன் அவர் தயாராக நின்ற நிலை தளையன் அவருக்கு
 ஏற்கனவே எல்லாவற்றையும் சொல்லியிருப்பதனை எமக்கு
உணர்த்தியது.

கையை உயர்த்தி எங்ளைப் போய் வானில் ஏறும்படி சைகை செய்தார்
அவர். எங்களுக்கு வானில் ஏறியிருக்க மனமிருக்கவில்லை. மீண்டும்
ஒருமுறை உள்ளுக்க ஏறுங்கோ என்று கையால் காட்டினார்.

“டேய்… கட்டுத்துவக்கு பக்கத்தால பிரிஞ்சால் நீங்களும்
போயிருவியளடா. உள்ளுக்க ஏறி இருங்கோடா”
என்று கத்தினான் தளையன். ஏறி மூன்று செக்கனில் முதல் வெடி
தீர்ந்தது.

தனது மனக் கட்டுப்பாட்டையும் குலைத்துக்கொண்ட கே.எம். இப்ப
அந்த வேட்டைக்கார முத்துமாணிக்கம் எங்க இருக்கிறார் என்று
தெரியுமா என ஒரு கேள்வியை மீண்டும் கேட்டார்.

“இப்ப இரண்டாயிரத்து எட்டில கருணாரத்தினம் அடிகளார் கிளைமோர்
தாக்குதல்ல செத்தார் தெரியுமா? சரியா அதே இடத்தில அப்ப
இந்தியன் ஆமிக்கு கிளைமோர் வைக்கிறதுக்காகக் கூட்டிக்கொண்டு
போனவங்கள். இவருக்கு காது கேட்காதுதானே மாறி ஏதோ விளங்கி
ஆமி வரமுதலே அமத்திப் போட்டார்."

"வேணுமெண்டுதான் அவரச்சாகடிச்சிட்டாங்கள் என்று சனம் சொல்லுது. உண்மையா நடந்தது
என்னவென்று தெரியாது. ஆனால் அதில் அவர் செத்துப் போனார்”
என்றார் கிஸ்டீரியா.

“அப்ப, அவரும் செத்துட்டாரா… சரி.”

நன்றி புதியசொல்

******************
Tuesday, 19 May 2015
மூலம்: மூலவர்ணம்: வாக்குமூலம்.

http://matrathu.blogspot.in/2015/05/blog-post_19.html


கதை.


கற்சுறா





மூலம்.

செங்கமலம் இன்று வீட்டிற்கு வருகிறான்.
மிக நீண்ட நாட்களான காத்திருப்பு அது.
இருபத்தியெட்டு வருசத்துப் பகைக்குப் பின் அவனை நேரில் பார்க்கப்போகிறேன்.
அவனுக்கும் எனக்குமான முதல் உரையாடல் என்னவாக இருக்கும்? அப்பொழுது எனக்குச் சரியாக பதினேழு வயது. அவனுக்கும் இருபதைத் தாண்டியிராத வயது. இப்ப எப்படி இருக்கிறானோ எனத் தெரியாது. இப்ப எனக்கு
முன்மண்டையில் வழக்கை விழுந்து எனது முழு அடையாளமும் மாறிவிட்டிருக்கிறது. அவனும் கிழவனாகியிருக்கலாம்.

அவனை வேலை முடிய வந்து கூட்டிவருவதாகச் சொல்லியிருந்தேன். அவனை அவனது வேலையிடத்தில் போய்க் கூட்டிவரவேண்டும். அவனுக்கும் வேலை முடிய எப்படியும் ஏழுமணியாகும். அவன் ஒரு தமிழ்க்கடையில் வேலை செய்கிறான். தமிழ்க்கடை என்று சொன்னதும் ஏதோ ரொரண்டோவில் அதுமட்டுந்தான் தமிழ்ககடை என்று நினைக்கக்கூடாது. ரொரண்டோவில் அது ஒரு வித்தியாசமான சாப்பாட்டுக்கடை. கனடாவுக்கு புதுசா வாறவர்களுக்கு அதுவும் தமிழர்களுக்கு மட்டும் அவர்கள் உடனே வேலை கொடுப்பார்கள். கனடாவுக்கு வந்தவுடன் வேலை கிடைக்கக் கூடிய ஒரே இடமாயும்  தமிழர்களுக்குரிய  சட்டதிட்டங்களோடு இருப்பதும் அந்தக்கடைதான். அதற்காகத்தான் அதனை நாம் பாசத்தோடு தமிழ்க் கடை என்போம். எடுக்கிற வெல்பயரைக் கழித்துக் கொண்டுதான் சம்பளக் கணக்குப் பார்ப்பார்கள். அதிலும் கொடுக்கிற சாப்பாடு பிடிக்கிற சீட்டு கிழமைக்குக் கிழமை வெட்டுற லொத்தர் வாகனத்தில் ஏற்றி இறக்கிறது என்று மொத்தச் செலவும் வெட்டி மிச்சக்காசை வேண்டி எடுப்பதற்கு தலையைச் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும். இதை விட சிறிலங்கா ஜெயிலில  இருக்கேக்க வேலை செய்து தான் கூடக்காசு உழைத்ததாக ஒருமுறை இன்னொரு நண்பன் சொல்லியிருந்தான்.

நான் ஏழுமணிக்கு தமிழ்க் கடையடிக்குப் போய்விட்டேன்.  சமோசாவுக்கும் இடியப்பத்திற்காகவும் சனம் அடிபட்டு இடிபட்டுக் கொண்டு உள்ளேயும் வெளியேயும் எனப் போய்வருகிறார்கள். ஒரு டொலருக்கு 10 சமோசாவும் 4டொலர் 50 சதத்திற்கு 50 இடியப்பமும் சம்பலும் வைத்து  சொதி இலவசமாவும் கொடுக்கிறார்கள். அந்த இலவசச் சொதிக்குத்தான் இவ்வளவு அடிபாடு.  லைன்ல நின்ற சனத்தை விலத்திக் கொண்டு செங்கமலம்; ஓடிவந்தான் வெளியே ஓடிவந்த செங்கமலத்தை இழுத்துப்பிடித்து அண்ணை இடியப்பம் முடியேல்லத்தானே என ஒருவர்  கேட்டுவைத்தார். இல்லயப்பா... எனக் கத்திவிட்டு ஓடிவந்து காரில் ஏறினாhன். ஆள் நல்லாக் காய்ந்து மெலிந்து போயிருந்தான். இருபத்தியெட்டு வருசத்துக்கு முன் பார்த்த செங்கமலமல்ல அவன். சரியான சின்னவனாகியிருந்தான்.

என்ன எப்படித் தமிழ்க்கடை வேலை என்று பேச்சைத் தொடங்கினேன்.

கனடாவுக்கு வந்து இந்தக் கடையின்ர பெயரைப் பார்த்தவுடன் நான் திகைச்சுப் போனன். கனடாவில ஒரு கடைக்குத் தமிழில மாவீரன் எண்டு பெயரும் வைச்சு கடையின்ர பெயருக்கு முன் மாண்டவீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக்கடலில் மாவீரம் குளிக்கும் என்று போடுறதுக்கு ஒரு தவம் வேண்டும். வேலை செய்தால் இஞ்சதான் வேலை செய்யிறது என நினைச்சுப் போய்ச் சேர்ந்தனான். இப்ப இஞ்ச இருந்து எப்படித் தப்புறது என்று தெரியாமல் கிடக்கு என்றான் செங்கமலம்.

மட்டக்களப்பு ஜெயில் உடைப்பையும் களுத்துதுறை ஜெயில் சமரையும் பார்த்த எங்கட பெடியளுக்கு ரொரன்ரோ மாவீரன்ர தமிழ்க்கடையை உடைச்சு வெளியேறமுடியாமல் இருக்கிறது புதினம்தான்.   உடைத்துக்கொண்டு வெளியேறேலாம சீட்டாலையும் வட்டியாலையும் சுற்றி சென்றியை வளைச்சுப் போட்டிருக்கிறார் வீரத்தமிழ்மகன் என்றான்.

வீட்டு வாசலைத் திறக்கவே இன்று யாரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று ஜெபா எட்டிப்பார்த்தாள். ஜெபாவுக்கு செங்கமலத்தைக் கண்டதும் திகைப்பு வந்தவிட்டது. ஒன்றும் சொல்ல முடியவில்லை. செங்கமலம் பாவம் என்பது அவளுக்கும் தெரியும்.

செங்கமலத்திற்கு என்னைப் பிடிக்காது. என்னை எந்த ஒரு சந்தர்ப்பத்திலையும் அவன் நம்ப மாட்டான். நானும் அவனை நம்பத்தயாரில்லை. மற்றவனை எப்பவும் சந்தேகித்துக் கொண்டே இருக்கும் மனம் எனக்கு. அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கிறனான். அதிக நேரம் திரும்பிப் பார்க்காமல் இருந்தால் ஒரு துப்பாக்கி எனது தலைக்குப் பின்னுக்கு குறிபார்த்துக் கொண்டிருப்பதாகவே யோசிக்கத் தோன்றும். பயம் எல்லோருக்கும் இருக்கிறது. பயத்தில கொஞ்சப் பயம் கூடப்பயம் எண்டு ஒன்று இல்லைத்தானே பயம் பயம் தான். அதால செங்கமலம் என்னட்ட எவ்வளவு நெருங்கினாலும் என்னால முடியுதில்லை. எல்லாத்தையும் தாண்டி ஒன்றே ஒன்று, அவனுக்குத் தெரிஞ்சதென்றோ அல்லது சொந்தக்காரங்கள் என்றோ இங்கு யாருமில்லை. அவன் பாவம்.

செங்கமலம் அப்ப எங்கட ஏரியாப் பொறுப்பாளர். ஒரு ஹொண்டா 200 மோட்டசைக்கிள்ள திரிஞ்சு ஏரியா வேலை செய்தவன். ஊருக்கு ஹொண்டாவை முதலில கொண்டு வந்தவன் இவன்தான். அதுவரைக்கும் சீ90 தான் ஆகப்பெரிய மோட்டசைக்கிள். அப்ப எங்கட ஊரில செங்கமலத்தோடு சேர்த்து மொத்தம் 7 ஏரியாப் பொறுப்பாளர்கள் இருந்தவை. மற்றவர்கள் எல்லாரிட்டையும் சைக்கிளும் சீ90யும் இருக்கேக்க இவனிட்ட மட்டும் தான் ஹொண்டா 200 இருந்தது.

சரியா கணக்குப் பண்ணிப் பார்த்தால் அந்த நேரம் எங்கட ஊரில் 4 முழுக் காம்ப். 7 ஏரியாப் பொறுப்பாளர்கள். 11ஒவ்பீஸ் என்று ஊரே இயக்கமயப்பட்டுப் போயிருந்தது. பெரிய இயக்கத்திற்கு மட்டும்தான் காம்பும் ஒவ்பீசும் இருந்தது. மற்றயவற்றிற்கு எல்லாம் தனிய ஒவ்பீஸ் மட்டும்தான்.

அந்தக்காலத்தில் மாங்குளத்துக்காம்பில இருந்தும் பூனகரிக்காம்பில இருந்தும் அல்லது தள்ளாடிக் காம்பில இருந்தும் ஆமிக்காரன் செல்லடித்தாலும் எங்கட ஊருக்கு செல் வராது.  ஒரு காட்டு ஊர். இதுக்குத்தான் 7 ஏரியாப் பொறுப்பாளர்கள். இயக்கத்தை வளக்கிறதுக்கு ஊர் ஊரா வேலை செய்ய வேண்டும் தானே. ஆனால் ஏரியாப் பொறுப்பாளர்களுக்கும் அவர்களின்ர சென்றிப் பொயின்றுக்களுக்கும் இருந்த முக்கிய வேலையே ஊரில இருக்கிற மற்ற இயக்கங்களை வேவு பார்க்கிறதுதான்.

ஒருத்தன்ர காம்புக்கு முன்னால மற்ற இயக்கம் போக முடியாது. போனோலே  ஒன்றையொன்று தீப்பற்றும் நிலை. நினைத்தாலே இப்பபோது சிரிப்பு வருகிறது. அக்கினி நட்சத்திரத்தில வருகின்ற பிரபுவும் கார்த்திக்கும் வாயுக்குள்ள தேவடியாப் பய என்று திட்டுற மாதிரி திட்டிக்கொண்டு ஒண்டையொண்டு விலத்திச் செல்லுவார்கள். ஏதோ இது எல்லாத்தையும்  நாளைக்கு மலரப்போற தமிழீழத்திற்கு என்று சொல்லிவிட்டு ஊர்மக்கள் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.


செங்கமலம் இயக்கத்திற்கு ஏரியாவேலை செய்ய வந்த நாளில இருந்து  அவன் ஒவ்பிசில பெரிசா இருக்கிறதில்லை. எல்லோரும் ஊர்மனைக்குள் ஒவ்பீஸ் வைச்சிருக்கும்போது செங்கமலத்தின்ர இயக்கம் மட்டும் ஒரு காட்டுரோட்டில தமது ஒவ்பீசை வைத்திருந்தது. அது ஒரு ஒவ்பீஸ் மாதிரியே இருக்கிறதில்லை. எப்பவும் அச்சம் தருகிற அளவுக்கு இருட்டடிச்சமாதிரி இருக்கும். அங்கு எப்பவாவது யாரையாவது விசாரணை என விசாரிக்கக் கூட்டிக் கொண்டு போனால்தான் செங்கமலமே போவான். மற்றப்படி ராசாத்தியக்கா வீட்டிலதான் படுகிடை. வைப்புச்செப்பெல்லாம் அவனுக்கு அங்குதான். அது இயக்கத்திற்கும் ஒரு பெரிய பிரச்சனையாய் ஒருபோதும் இருககவில்லை.

ஏனென்றால் ராசாத்தியக்காவுக்கும் பாலசிங்கண்ணையிற்கும் இயக்கமெண்டால் போதும். தமிழீழத்திற்கு தாம் செய்யுற தொண்டு அதுதான் என்று அவர்கள் நினைத்தார்கள்.. பாலசிங்கண்ணையும் வீட்டில பெரிதாக நிக்கிறதில்லை. இயக்கத்திற்கு லொறி ஓடுறவர். றெயினிங் எடுக்கவில்லை என்பதுதானேயொழிய மற்றப்படி இயக்கத்திற்குரிய எல்லா உரிமையும் கொண்டவர். பொடியள் சிலருக்கு ராசாத்தியக்கா வீடும் இயக்கத்தின்ர காம்ப் மாதிரித்தான். சாப்பாடு சமையல் குளிப்பு முழுக்கு எல்லாம் அங்குதான். ஆனால் மற்ற இயக்கமெல்லாம் “செங்கமலம் சிரிக்குது ராசாத்திய நினைக்குது” என்றும் “ராசாத்தி நினைப்பில செங்கமலம் நினைப்புத்தான்” என்றும்  பாட்டுப்பாடிக்கொண்டு திரிந்தார்கள்.

ஒருமுறை என்னை வேவு பார்த்த ஒரு நாய் நான் இந்தப் பாட்டுகளப் பாடினதைக் கேட்டு செங்கமலத்திற்குச் சொல்ல செங்கமலம் என்னை விளக்கத்திற்கு கூட்டிக்கொண்டு போனான். அன்றைக்குத்தான் செங்கமலத்தை பக்கத்தில பார்க்கிறன். ஒரு பற்றிக் சறம். கோடன் சேட்டு இறுகின மூஞ்சி என்று எப்பவும் எட்டத்தில பார்த்த உருவத்தை அனறைக்குத்தான் மிக நெருக்கமாய்ப் பார்க்கிறன். ஊருக்கிள்ள ரெண்டு வருசமாத் திரிஞ்சாலும் என்னோட அவன் ஒரு கதை கதைக்கிறேல்ல. இப்பவும் விளக்கத்திற்கு வரச் சொல்லிட்டான் ஆனால் விளங்கயில்ல.

கையை நீட்டி அறைந்தால் கைவிரல் பதியும் தூரம் தான் எனக்கும் அவனுக்கும். நான் எதுவும் பேசவில்லை.  அப்பவும் ஒன்றரை மணித்தியால விளக்கம். ஆனால் ஒன்றரை மணித்தியாலத்திற்குள் மூன்றே மூன்று கேள்விகள் தான் செங்கமலம் என்னைக் கேட்டான். “உனக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்.?” “உன்ர கொப்பற்ற மரியாதையை ஏன் கெடுக்கிறாய்.?” “ஏன் அவங்களுக்குப் பின்னால திரியிறாய்?” என்று விட்டுவிட்டு அரை மணித்தியாலத்திற்கு ஒரு கேள்வியாய் மூன்று கேள்விகளையும் கேட்டான்.

ஆனால் ஒன்றுக்கும் பதில் எதிர்பார்க்கவில்லை. அப்பாவித்தனமாக என்னைப் போ என்று சொல்லி விட்டுவிட்டான். ஏன் பாட்டுப் பாடினனீ என்றோ அல்லது ராசாத்தி அக்கா பற்றியோ அவன் கேட்கவில்லை. ஆனால் அப்படியொரு செங்கமலத்தை நான் அன்றுவரைக்கும் பார்த்ததே இல்லை. ராசாத்தி அக்காவுக்கும் செங்கமலத்திற்கும் உறவு இருந்ததோ என்று இன்று வரைக்கும் நான் யோசிக்கிறனான்.

கொஞ்சக்காலத்தில செங்கமலத்தின்ர இயக்கம் தடை செய்யப்பட்டு ஆயுதம் எல்லாம் புடுங்கி ஒன்றும் இல்லை என்று ஆன பிறகு செங்கமலம் மட்டும் ஓடுறதுக்கு வழியில்லாமல் இருந்தபோது ஆஸ்பத்திரியில் இருந்த சைக்கிள் பார்க்கில் வேலை செய்து கொண்டிருந்தான்.

ஆனால் அந்த வேலையால் ஒரு நேரச் சாப்பாட்டுக் காசு கூட அவனுக்கு வராது. ஆனால் தான் ஒரு அப்பாவி, நேர்மையான மனிசன் எண்டு காட்டுறதுக்கும் உயிரோட இருக்கிறதற்கும் தான் அந்த வேலை உதவியது. ஆனாலும் எப்பவும் செங்கமலத்தில ஒரு கண் வைச்சுக் கொண்டுதானிருந்தனாங்கள்.

அந்த நேரத்தில் வத்தளையில இருந்து இடம்பெயர்ந்து வந்த பெட்டை ஒன்றைக் கூட்டிக்கொண்டு செங்கமலம் ஓடிற்றான். அதுக்குப் பிறகு நான் செங்கமலத்தை இங்குதான் சந்திக்கிறன்.

இப்ப செங்கமலமும் நானும் அரைப் போத்தல் பக்காடியை முடித்திருந்தோம்.

மவுனம் பேச்சு மவுனம் என்று நேரம் போய்க் கொண்டிருந்தது. நான் செங்கமலத்தின்அருகில் மூன்றாவது தடவையாக இன்று இருந்தேன்.

ஒன்றரை வருசத்திற்கு முதல் சன்சீ கப்பலில வன்கூவரில வந்திறங்கினவன். மனிசி செத்துப்போய்விட்டது. தான்தான் புதைத்துவிட்டு வந்தவனாம். பெடியனும் சின்னவயசிலேயே இயக்கத்தில சேர்ந்திட்டான்.

மகனோ இப்ப இவன கொஞ்சமும்; மதிக்கிறேல்ல. இரண்டாவது மகள். யாழ்ப்பாணத்தில ஒரு வாத்தியார் வீட்டில  விட்டுவிட்டு வந்திருக்கிறான். கந்தர் மடத்தில வீடு.

யூனிவெர்சிற்றியில படிப்பிக்கிற வாத்தியார். மனிசியும் ரீச்சர். அதுகளுக்கு ஒத்தாசையா வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவளைப்பற்றித்தான் அவனுக்குக் கவலை. மாறி மாறி அவளப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தான்.

படிக்கிற வயசில வேலை செய்யுறாள்.  இப்ப நினைக்கச் சரியான பயமாக் கிடக்கு. நடக்கிறதுகளைக் கேள்விப்படுறதைப் பார்த்தால் வாத்தின்ர வீட்டில விட்டதிலையும் பார்க்க சவுதிக்கு அனுப்பிற்று வந்திருக்கலாம்.

பதின்மூன்று வயது....  தாயில்லாமல்.......



கன நேரமா யோசிச்சுக் கொண்டிருந்தான்.

என்ன மகனோட கிட்டடியில கதைச்சனியோ எண்டு கேட்டன்.

அவன் கற்சிலைமடுவில இருக்கிறான். போன் அடித்து சுகம் விசாரிச்சாலே காசுதான் கேட்கிறான். வந்த காசே நான் இன்னும் குடுத்து முடியேல்ல அதுக்குள்ள கனடாவுக்குப் போய் ரண்டு வருசம் என்ன மயிரைப் புடுங்கிறாய் என்று கேட்கிறான். அவனோட கதைக்கேலாது. வயசுக்கு மீறின கதை என்றான்.

சின்னவயசிலேயே கொலை செய்து பழகினவங்கள். வாழ்க்கை எண்டால் என்னெண்டு தெரியாது. இப்ப அங்குள்ள பொடியளோடு கதைக்கேலாது.  இப்ப அவன் எடுத்தாலும் நான் எடுக்கிறேல்ல. என்றான்.

பிள்ளையளைக் குறை சொல்லி என்னசெய்யிறது. அவனுக்கும் காசு வேணும்தானே என்றேன்.

கேஸ் அக்ஸப் பண்ணினாலும் எதையாவது பார்க்கலாம். இரண்டு வருசமாகப்போகுது இவங்கள்; விசாரிக்கிறாங்கள் விசாரிக்கிறாங்கள் இன்னும் என்னை விசாரித்து முடியுதில்லை. கப்பல்ல வந்தவங்களைத் திருப்பி ஆனுப்புறாங்கள் எண்டு கதைக்கிறாங்கள். ஏன் வந்தனெற்று கிடக்கு. மகளோட நின்று இருக்கலாம். அல்லது மனிசி சாகேக்க நானும் செத்திருக்கலாம்.

வாழோணும் என்ற ஆசையில் தானே சயனைட்டை எறிஞ்சனாங்கள்...

.... யோசியாதே. என்றேன்.

நானும் என்ர குடும்பமும் ஒரு நாளும் சயினைட்டை எறியேல்ல....

என்றான் செங்கமலம்.




மூலவர்ணம்.

தேசபிதாக்களால் மாவீரர்களால் மாமனிதர்களால்
கட்டப்பட்ட இந்தப் பூமியில்
எப்போதும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.
அழகிய நறுமணம் கொண்ட பூக்களின் அடியில்
நமது குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அறியாத தவறுகளும்
அவர்களே சொல்லாத பொய்களும்
வரலாறு நீளவும் அவர்கள் மீது கவிந்து கிடக்கிறது.
எனது குழந்தைகளைத் தோண்டியெடுத்து
 கொஞ்சிக் கொண்டிருக்க மனம் விருப்பியும்
வெறும் நறுமணம் வீசும் பூக்களைப்
புடுங்கி எறிய யாரும் விடுவதில்லை.
தேசத்தின் பெயரிலும் மாவீரர்களின் பெயரிலும்
வெறும் பூக்கள்
பூத்துக் கொண்டிருக்கிறது.




வாக்கு ஒன்று:

அவர்களை மீண்டும் மீண்டும் வழியனுப்பிக் கொண்டிருந்தேன்.
கொல்லைப்புறத்திலிருந்து விளையாடிய குழந்தைக்குத்
தெரியாமல் ஒளிவதுதான் அது.

வளரும் ஒருகட்டு வார்த்தைகளில் இருந்தது அவளது பருவம்.

சிரிப்பொலியைத் தாண்டி ஓடும் குழந்தைக்குத் தெரிந்திருந்தது நீள் பயணம்.

மெல்லிய நீர்த்தரிப்பும் இளஞ்சூட்டுத்தாகமும் எடுத்து
எனது குறி விரைக்கத் தொடங்கியது.

கடைசி மனிதனின் மறைவுக்காய் காத்திருந்தன கண்கள்.

பயணத்தின் இடைமடிப்பில் விழுந்தது குழந்தை.

எல்லாக் குழந்தைகளையும் போலவே அவளும் என்னிடம் மன்றாடினாள்.

அல்லாவையையோ யேசுவையையோ அல்லது ஏதோ ஒரு

சைவக்கடவுளையோ பெயர் சொல்லி அழைக்கவில்லை

கணேசலிங்கம் என்னைக் கொல்லாதே என்றாள்.

நான் யாரையும் கொல்வதில்லையே.

எனது பெயரையே அவள் மெல்லிதாய் உச்சரித்தாள்.

நான் அவளைச் சீண்டினேன்.

அவள் சிலிர்த்தாள்.

ஆம் அவள் சிலிர்க்கிறாள் என்றே நான் சொல்கிறேன்.

நான் பரவசத்தில் திளைத்தேன்.

அவளது சிலிர்ப்பு பயம் கவ்வியது.

நான் அதையே விரும்பினேன்.

குழந்தையின் தொட்டிலில் அவளைக் கிடத்தி பேசத் தொடங்கினேன்

அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு என்ன வேலை நான் சொல்வதையெல்லாம் மறுக்காமல் கேட்பதுதானே.

அதற்காவே எனது பெற்றோர் அவளை நன்றாகப் பழக்கப்படுத்தியிருந்தார்கள்.

எங்கிருந்துதான்  பழகுகிறார்களோ தெரியாது
தங்களது பிள்ளைகளுக்காகவே வாழக் கற்றுக் கொண்டுவிடுகிறார்கள் எல்லோரது பெற்றோரும்.

வீட்டிற்கு வெளியில் யுத்தம் கோரமாய் மெல்ல நடந்து நகர்ந்து கொண்டிருந்தது.

யுத்தத்திற்குள் வாழவும் யுத்தத்திற்குள் பேசவும் நாங்கள் கற்றிருந்தோம்.

யுத்தம் பற்றி முன்பிருந்த பயத்திற்கும்
தற்போதுள்ள பயத்திற்கும் உள்ள இடைவெளியே அது.

அவளை முதல் முதலில் தொட்டபோது இருந்த பயம்
எனக்கு இப்பொழுது இல்லை.

ஆனால் அவளிடம் அதே பயம் தொடர்ந்தது.

அவள் ஒவ்வொரு தடவையும் முதல் யுத்தப் பயத்தினுள் இருந்து கொண்டிருந்தாள்.

அது ஒரு குழந்தையின் பயத்தை ஒத்திருந்தது.

அவளிடம் முதல் யுத்தம் பற்றிய அச்சம் எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது.

வெளியில் குழந்தைகள் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

இப்போது நான் பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பும் ஒவ்வொரு தருணமும்

அவள் ஏதோ ஒரு மூலையில் ஒழியத் தொடங்கினாள்.
நான் தேடத் தொடங்கினேன்.

அந்த ஒழித்துப்பிடித்து விளையாடும் விளையாட்டை நான் விரும்பினேன்.

அவள் என்னிடமிருந்து தப்புவதற்காகத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

என்னிடமிருந்து அவள் தப்ப முடியாது.

அவள் ஒருபோதும் தப்பமுடியாது.

அதனால் அவளது உடலை எனக்குள் மறைப்பதற்கு முன்

அவளின் மொழியை மழித்தேன்.

அது செயல் இழந்தது.

ஒரு கராத்தே வீராங்களை போல் என்னுடன் தர்க்கம் செய்யும்
அத்தனை மொழிகளையும் அவளிடமிருந்து அழித்தேன்.

இப்பொழுது அவள் ஒரு குறுகிப் படுத்திருக்கும் புனைக்குட்டி போல ஆனாள்.

நான் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல ஆயத்தமானேன்.

பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் போரின் வீயூகம் அமைக்கும் படைத் தலைவர்களாக விசர் பிடித்து அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

பொங்கலுக்குத் தமிழீழம் தீபாவளிக்கு தமிழீழம் என்று

 நாங்கள் ஆரம்பத்தில் சொன்ன அதே வேகத்துடன்

இப்போதும் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை வளாகத்திற்குள் கண்டதும் ஒரு மாவீரனைக் கண்டதுபோல் அவர்களின் தேசபிதாவைக் கண்டதுபோல் ஆரவாரப்பட்டார்கள்.

எனக்குள் கர்வம் எகிறியது.

அவர்களின் ஆவேசம் என்னை வேறு உலகத்தில் இறக்கியது.

அவர்களின் கண்களை உற்று நோக்கிய நான் எனது அச்சம் தெளிவுற மெதுவாகப் பேசத் தொடங்கினேன்.

"நாம் எமது தேசிய விடுதலைக்கான போராட்டத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். சிங்கள இனவெறி அரசிற்கெதிரான யுத்தம் நம்முடையது. இந்த அரசு இனவாத அரசு. இதற்கெதிரான யுத்தத்தில் நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். தமிழ்த் தேசியத்தின் ஒரு விளைவு தான் நாங்கள். நமது முன்னோர்கள் அகிம்சைப்போராட்டம் நடாத்தினார்கள்.  தற்போது மக்களே எம்மை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்துள்ளார்கள். இது எமது விடுதலை. நமது சிறிய சிறிய பிரச்சனைகள் முரண்பாடுகள் எல்லாவற்றை யும் புறந்தள்ளிவிட்டு பொது எதிரிக் எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் "

என்ற சிறிய வழமையான உரையாடல் ஒன்றை அவர்களுக்கு நிகழ்த்தினேன்.

அவர்கள் மிக ஆக்கிரோசமானார்கள்.

எதையும் இலகுவாக உள்ளிளுக்கக் கூடிய தோல்களால் ஆனவர்கள் தானே அவர்கள்.

மயிர்க்கூச்செறியும் வார்த்தைகளை அர்த்தமற்றுப் பேசக்கூடியவர்களாக அப்போது எப்படி நாமிருந்தோமோ அப்படியே இப்போதும் பேசுகிறார்கள்.

சுழிபுரத்தில் ஆறு மாணவர்களுக்குக் குஞ்சாமணி அறுத்து வாயிற்குள் வைத்து மணலில் புதைத்தவர்கள் நாங்கள் இல்லை என்பதையும் விஜிதரனைக் கடத்தி சுட்டவர்கள் நாங்கள் இல்லை என்பதையும் எவ்வளவு உணர்வுகரமாக நம்பினோமோ ...
அதேபோல் நம்புகிறார்கள் இவர்கள்.

எந்தக் கஸ்டமும் இல்லாமல் நான் சொன்ன எல்லாவற்றையும் சீக்கிரத்தில் உள்ளிளுத்தார்கள்.

அவர்கள் உட்கொள்ள உட்கொள்ள எனக்குத் தொண்டை வற்றியது.

நமது சிறிய சிறிய முரண்பாடுகள் என்பதை  திருப்பித் திருப்பி அழுத்தமாகச் சொன்னேன்.

மிகமுக்கியமாக  நமது போராட்டத்தி;ற்கு இடையூறாக இருக்கும் சில பேராசிரியர்களை நாம் இனங்காணவேண்டும் எனவும்

அவர்கள் தமிழ்த்தேசியத்தின் துரோகிகள்.  அவர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரைத்தேன்.

நான் பெயர்களைச் சொல்ல முதலே மாணவர்கள் பட்டியலிட்டார்கள்.

அவர்கள் பட்டியலிட்ட அத்தனையும் நான் நினைத்ததும் சரியாக இருந்தது.

ஆனால் அது என்னுடைய அளவை விட மிகஅதிகமாகவேயிருந்தது.

மாணவர்களும் எனது பெற்றறோர்களைப் போலவே. எப்போதும் அவர்கள் ஆசிரியர்களுக்காகவே வாழ்கிறார்கள்.

நான் மிகவும் களைப்புற்றிருந்தேன். சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று ஒரு தேநீர் அருந்தினால் களைப்புக் குறையும்.
 மாணவர்களை விலத்திக்கொண்டு சென்று சிற்றுண்டிச்சாலையின்  மேசையில் அமர்ந்தேன்.

அது சிவரமணி இருந்த மேசை.
மறக்கப்பட்ட பாடலக்குத் தாளந் தட்டிய நண்பனும் விரல்களும் சிதறிக் கிடந்த தேனீர்த் துளிகளுமாய் அந்த நடுமேசை எனக்குப் பெரும் பீதியைத் தந்தது.

அங்கிருக்கவோ அல்லது தேநீர் அருந்தவோ என்னால் முடியவில்லை.
எழுந்து நடந்தேன்.

வரிசையில் நீண்டு நின்ற அசோகா மரங்களின் மறைவில் என்னை மறைத்தேன்.

பல்கலைக்கழகத்தின் மதிற்சுவர்கள் வெறும் கண்ணறைகளாயின.
முடியவில்லை.

உடலெங்கும் தீசூழ பல்கலைக் கழகத்தை விட்டு  வெளியில் ஓடிவந்தேன்.

வீட்டின் அறையில் முடங்கிக் கிடந்த அவள் வெளியில் வரவேயில்லை. தன்னுடலை முடிந்தவரை கீறிக் காயப்படுத்தியிருந்தாள். அவை பூனையின் நகக் கீறல்கள். அவளின் அசைவு ஒவ்வொன்றும் என்னைப் பயப்படுத்தியது. ஒரு பூனைக்குட்டியின் மிரட்சி கலந்த அசைவு அது. 




வாக்கு இரண்டு:

மவுனத்தின் மொழிக் கதவைத் திறந்து
வெளியில் பேசினேன்.

நான் பேசக் கூடியவளானேன்.

எனது உதடுகள் திணிக்கப்பட்ட அழுகிய ஆண்குறியை சூப்புவதைத் தவிர்த்து முதன் முறையாக சொற்களை உச்சரித்தது.

நான் விரும்பிய சொற்களையெல்லாம் பேசினேன்.

குறிக்கப்பட்ட நேரத்திற்குள் இத்தனை சொற்களை பேச நான் ஒருபோதும் எத்தனித்ததில்லை.

பேசப் பேச நான் எனது மொழிக்குள் இருந்து மெல்ல விடுபட்டேன்.

பேசாதிருந்தபோது எனக்குள் மொழி அடங்கிக் கிடந்தது.

மொழிக்குள் நான் அடங்கியிருந்தேன்.

மெல்ல மெல்ல மொழியிலிருந்து நான் விடுபட்டேன்.

ஆம் நான் மவுனத்தின் மொழிக் கதவைத் திறந்தேன்.

கணேசலிங்கம் எனது கதவைத் திறந்து கொண்டு வந்தார்.

அவர் வழமைக்கு மாறாகக் களைத்திருந்தார்.

அவரது முகம் அச்சத்தை எதிர் கொண்டிருந்தது.

அவர் வழமையற்ற வேறு ஒரு மொழியில் என்னுடன் பேச முற்பட்டார்.

எனக்கு எதுவுமே விளங்கவில்லை.

அது என்னுடன் இவ்வளவு நாளும் அவர் பேசிய மொழியல்ல.

அவரது வீட்டு வேலைக்காரியாய் வந்த நாட்களில் இருந்து இன்றுவரை நான் பேசாத மொழியை அவருடன் பேசினேன்.

முதல் முறையாக நான் மிகப்பெரிய நீண்ட சொற்களை அவர் முன்னால் பேசினேன்.

அவர் ஆச்சரியப்படவில்லை.

அவர் அச்சப்பட்டார்.

மொட்டந்தலையில் வேர்த்தது.

மிகத் தடுமாறியபடி தன்னுடைய மானத்தைக் காப்பாற்றும்படி மண்டியிட்டார்.
ஒரு பேராசிரியர் பதின்மூன்றாவது தடவையும் என்னிடம் மானமிழந்து கிடந்தார்.

இப்போது பேராசிரியருக்கு நன்றாக விளங்கிவிட்டது. தனது மானம் குறித்து தானே சிந்திக்கத் தொடங்கியருந்தார்.

தன்னை அவமானப்படுததலிலிருந்து மீட்டெடுக்க எதையும் செய்யத் தயாரானார்.


வீட்டிற்கு வெளியில் இருந்தது பொதுவெளி.

அதற்கும் எனக்கும் இடையில் இருந்தது மிகப்பெரிய இடைவெளி.
இடையில் கணேசலிங்கம் நடந்து திரிந்தார்.

பொதுவெளியில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தை விடவும் மிகப்பெரிய யுத்தம் எனக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நான் மிகப் பெரிய யுத்தம் ஒன்றின் ஒற்றைப் போராளி.

எனக்குரிய நேரத்தை மிச்சப்படுத்தவும் சுத்தமாய் இருக்கவும் முக்கியமாக தலையில் பேன் பிடிக்காமல் இருக்கவும் என கணேசலிங்கத்தின் பெற்றோர் என்னுடைய தலைமயிரை ஒட்ட வெட்டியிருந்தார்கள்.

இப்போது வெளியில் உள்ள போராளிகளின் சாயலை நான் ஒத்திருந்தேன்.

யாழ்ப்பாணத்திலிருந்த  வேலைக்காரிகள் அனைவரது சாயலும்   போரளிகளின் சாயலையே ஒத்திருந்தனர்.

வெளியில் குழந்தைப் போராளிகள் உள்ளே குழந்தை வேலைக்காரிகள்.

மானமிழந்த யாழ்ப்பாணம்.




இறுதி வாக்கு.

எப்பொழுதும் இடைஞ்சலான வார்த்தைகளுடனும் அபாண்டமான பழிகளுடனும் வாழப்பழகிவிட்ட என்னிடம் இருக்கும் ஒரேயொரு கேள்வி என்னவெனில் மேற்கூறிய இரண்டு வாக்கு மூலங்களையும் வாசித்த பின் பேராசிரியராகிய கணேசலிங்கம் தப்பிச் சென்ற வழி எது என்பதுதான். பேராசிரியரின் வழக்கை விசாரித்த அந்தக்காலத்து நீதவானின் துணையுடனோ அல்லது பல்கலைக் கழகத்தின் வாசல் வழியாகவோ அவன் தப்பித்திருக்கவில்லை.  அல்லது எல்லாக் கொலைகாரர்களும் தப்பித்த ஏ9 பாதையூடாகவோ சங்குப்பிட்டி வழியாகவோ அவன் தப்பித்திருக்க முடியாது. ஒரு சிறிய தீக்குச்சி போல் பற்றி பின் தீப்பிளம்பாகி எங்களை உறையவைத்த கோணேஸ்வரி எனும் கலாவின் கவிதையூடாக மட்டுமே கணேசலிங்கம் தப்பித்து மறைந்து போனாhன்.

சிங்களச் சகோதரிகளே
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை

என்று பாடிய அந்தக் கவிதை கணேசலிங்கத்தை எங்கேயோ ஒழித்து வைத்து விட்டது. யாழ்ப்பாணத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட வேலைக்காரக் குழந்தை குறித்து அவள் யோனி குறித்து கவிதை எழுதிவிட முடியாமல் போய்விட்டது கலாவுக்கு. நமது காலாவும் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டாள்.
உண்மையில் இனிக் கவிதை எழுதமுடியாமல் போன
கலா இப்போது எங்கே?
காலாவதியாகிப் போன கலா என்பவர் உண்மையில் யார்?




நன்றி
குவர்னிகா
41வது இலக்கியச்சந்திப்பு மலர்
2013 யூலை