Sunday 7 May 2017

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா – ஆத்மார்த்தி, ..

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா – ஆத்மார்த்தி

மொழியின் முறைமை: சாரு நிவேதிதா
ஆத்மார்த்தி
மே 3, 2017
http://charuonline.com/blog/?p=5834
என் இந்தக் கட்டுரையை என்னிடமிருந்தே தொடங்குவதுதான் எனக்கு நானே செய்துகொள்ளக் கூடிய நியாயமாக இருக்க முடியும். என்னளவில் நான் இன்னும் சிலபல ஜென்மங்களுக்கு வெறுக்க விரும்புகிற ஒருவனைப் பற்றிய கட்டுரை இது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு சாரு நிவேதிதாவைப் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் கையில் கிடைத்தால் நாக்கு எரிகிறாற் போல நாலு கேள்விகளையாவது கேட்டுவிடவேண்டும் என்பதை நோக்கமாக அல்ல, உறக்க நடுவாந்திரம் எழுப்பி இந்தா சாரு என்றால்கூட சாறு பிழிந்துவிடுகிற எத்தனமாக, ஏன் என் பல பிறவிகளுக்கான ஒற்றை வெறியாகவே வைத்திருந்தேன்.
“எதையாவது எரிக்கப் போகிறாயா? எழுத்துக்கள் கொண்ட காகிதமாக இருந்தால் படித்துவிட்டு எரி,” என்று எனதொரு நண்பன் ராஜஷேகர் சொல்வான். எனக்கு ராஜஷேகரை ரொம்பப் பிடிக்கும். பாவம், பீஎஸ்சி படித்துவிட்டு மேலே தான் படித்த கணக்கைத் தொடராமல் சீ.ஏ. படித்து முடித்துவிட்டு கம்பெனிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். எழுத்தாளனாக வந்திருக்க வேண்டியவன். எனக்கு ஆத்மாநாமை அறிமுகப்படுத்தி சுஜாதாவைத் தாண்டிச் செல்வதற்கான வழிமுறைகளை என்னோடு உரையாடியவன். பல நவீன எழுத்துக்களை எனக்கு முன்னால் உதிர்த்தாடுகிற சீட்டுக்களைப் போலக் காண்பித்த அதே அவன்தான். சாரு நிவேதிதாவை நான் திட்டும் போதெல்லாம் அமைதியாகக் கடந்து சென்றுவிடுவான். எனக்கென்னவோ ஷேகரைத் திட்டும்போது சாருவையே திட்டுகிறாற் போல ஒரு அந்தரங்கமான கிளுகிளுப்பு ஏற்பட்டது. மேலும் யாரெல்லாம் அமைதியை முன்வைக்கிறார்களோ அவர்களிடம்தான் இன்னும் கொஞ்சம் அலம்பல் செய்து பார்க்கத் தோன்றும். நான் ஒரு சல்லியாகத்தான் அவ்வாறு நடந்துகொண்டேன்.
மேலும் சில கூடுதல் தகவல்கள். நான் சாருவைத் திட்டியதற்கான ஒரே ஒரு காரணம் அந்த மனிதன் அதுவரைக்குமான உலகத்தின் ஒழுங்குகளை எல்லாம் மீறி ஸீரோ டிகிரி என்ற ஒன்றை எழுதினதால்தான். அடுத்த தகவல் என்ன தெரியுமா? என்னிடம் ஸீரோ டிகிரியின் பிரதிகள் இரண்டு இருந்தன என்றபோதும் நான் அதன் ஒரு பக்கத்தைக்கூட படித்திருக்கவில்லை என்பதுதான். படித்துவிட்டதாகவும் அது ஒரு குப்பை என்றும் சில முடிவுகளுக்கு நான் வந்திருந்தேன். எதிர்பாராத நள்ளிரவில் தலைவன் ஒருவனை இழந்தபின் கலவரம் வெடித்த நீர்சூழ் நகரொன்றின் அடுத்த தினக் காலைப் பொழுதைப் போல் பலரும் எந்தவிதமான கூச்சமுமே இன்றி ஸீரோ டிகிரியைப் பற்றிய கொடூரமான கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள். அந்தச்  சூழலில் நானும் அவர்களில் ஒருவனாக என்னை நானே நியமித்துக்கொள்வதற்கு அந்தப் பிரதியை அல்ல, அதன் ஒற்றை வார்த்தையைக்கூடப் படித்திருக்கவேண்டியதில்லை என்று எனக்குள் ஒரு குரல் ஒலித்தது. அதுதான் எல்லோரும் திட்டுகிறார்களே, பலர் திட்டுகிற ஒன்றை நானும் சேர்ந்து திட்டினால் என்ன பாவம்? முதலில் திட்டுவோம். பிற்பாடு தேவைப்பட்டால் வாசித்துக்கொள்ளலாம். இப்போது என்ன அவசரம்? மேலும் சாரு நிவேதிதா என்ன கடவுளா? இப்படித் தன் தலையில் தானே மண்ணை அல்ல, மலையைப் போட்டுக்கொள்வானா ஒருவன்? சரி, சாருவை யாரென்றே தெரியாது; ஒழியட்டும்; நமக்கென்ன என்றுதான் எனக்குள் ஒலித்த குரல் பேசிற்று.
ராஜஷேகர் சாருவை விடாமல் வாசிப்பவர். என் வாசிப்பின் மீது பெரிய காதல் உள்ளவரும்கூட .எப்படியாவது சாருவின் எழுத்தை எனக்குள் சரியான திசையில் செலுத்திவிடுவதற்கான நல்லதோர் தருணத்திற்காக அவர் காத்திருந்தார். அந்த வேளையில்தான் ஒரு மழையற்ற இரவு முழுக்க நானும் ஷேகரும் இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். இசை, வெயில் என்றெல்லாம் நவ கவிஞர்கள் உருவானது பிற்காலத்தில். இந்த இசை என்பது ம்யூசிக்தான். என்ன கொடுமைடா சாமி! தமிழை விளங்க வைக்க இங்கிலீஷித் தொலைய வேண்டி இருக்கிறது.
“ரவீ, ஸீரோ டிகிரியை நீ உண்மையாவே படிச்சியா?” என்றார் ஷேகர். நான் அதிர்ந்தேன். பிடிபட்டுவிட்ட குற்றக்காரனின் மௌனமாய் என்னுடையதும் தொனித்திருக்கக் கூடும். என்னை மேலும் சங்கடப் படுத்தவிரும்பாத ஷேகர், “சரி ரவீ, நீ படிச்சிட்டு சொல்லு. உண்மையாவே படிச்சிட்டு, உண்மையாவே சொல்லு,”என்றபடி உறங்கப் போனார்.
சைத்தான்களுக்கான ப்ராயம் பதின்பருவம் என்பார்கள். உண்மையில் குழந்தைகளாயிருக்கையிலேயே பற்களின் கோரத்தால் தன் தசையையே குதறிக் குருதி ருசி பழகுபவை சைத்தான்கள். உண்மையாகவே என்ற சொல்லின் இரட்டை வருகைகள் எனக்குள் இருந்த வாசிப்பாளனைத் துன்புறுத்தின. பலவந்தமாகஆடைகளை அகற்றிய பிற்பாடு தன் நிர்வாணத்தைத் தண்டனையென்று உணராத ஓர் கணத்தில் அடுத்த யுத்த வாய்ப்புக்காகக் காத்திருக்கத் தொடங்குவானே செதிலாழங்களில்கூடத் தப்புதலும் வெறியும் சரிவரக்கலந்த சண்டைப்ரியன், அவனைப் போல ஸீரோ டிகிரி என்ற நூலுக்குள் நுழைந்தேன். உண்மையில் என் விருப்பம் அந்தப் பிரதியைப் படித்துவிட்டு இன்னும் பலமாக சாரு நிவேதிதாவைக் காயப்படுத்த வேண்டும்; அதைவிட என்ன செய்தாலும் அசைய மறுக்கிற ராஜஷேகர் என்கிற வாசக சைத்தானை ஓரே வெட்டில் இரண்டாகப் பிளந்துவிட வேண்டும் என்ற வெறியோடே படித்தேன்.
அந்த இரவிலிருந்து புதிதாக மதம் மாறிய ஒருவன் புதிய ஆலயத்திலிருந்து சதா தன் முதுகில் ஆயிரம் கண்களை எதிர்நோக்கியபடியே வெளிவருவானே, அப்படித்தான் வெளியேறினேன். நான் வெகு நேரம் கழித்தே எழுவேன் என்பதால் ஷேகர் அதிகாலையிலேயே கிளம்பிச் சென்றுவிட்டிருந்தார். நான் எழுந்த போது காணாமற் போனதற்கும் சேர்த்து ஷேகருக்கு நன்றி சொன்னேன். லவ் யூ ஷேகர் என்று காற்றில் முனகினேன். ஸீரோ டிகிரி என்பதைப் படித்த பிறகு ஒரு மலைப்பாதையில் முழுவதுமாக ஏறிவந்த ஒருவனைப் போல் சாரு என்பவரை முற்றிலுமாக வெறுத்து முடித்த ஒருவனாக நேசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலையில் நான் சாருவை சந்தித்திருப்பேனேயானால் அவரது வலது கன்னத்தில் ஓங்கி ஒரு அறையைக்கூடத் தந்திருப்பேன். அல்லது ஒரு அழுத்தமான முத்தத்தை. இந்த இரண்டின் நோக்கமுமே அவருக்கு ஏதேனும் ஒரு சிறிய வலியைத் தந்தபடி அவருக்கு அறிமுகமாக வேண்டும் என்கிற என் பழைய ஆசையின் தீர்ந்துபோன இன்னொன்றாகவே இதனையும் பிற்பாடு உதிர்த்தேன்.
ஷேகர் அடுத்த சந்திப்பின் போது ஒன்றே ஒன்றைத்தான் கேட்டார், “சொல்லு ரவி, உன் வார்த்தைகள்ல உனக்குக் கிடைத்த வார்த்தைகளைப் பற்றிச் சொல்லு,” என்றார். ஒரு நனவிலி கால ஞாபகத்தைப் பெயர்த்துத் தருகிற ஒருவனைப் போல் ஸீரோ டிகிரி பற்றிய என் அவதானத்தைப் பகிர்ந்துகொண்டேன்.
ஸீரோ டிகிரி மூலமாக எனக்குள் அறிமுகமான சாரு நிவேதிதாதான் நான் எழுத வருவதற்கான காலத்தை இன்னுமோர் எட்டு வருடங்கள் தாமதித்துத் தந்தார் என்பது நான் வெறுமனே வார்த்தைக்காக சொல்லவில்லை. எதையும் நான் நிரூபிக்கப் போவதில்லை. ஏனெனில் இந்த உலகத்தில் நிரூபிக்கப்படாதவற்றின் இயல்பான சித்திரங்கள் மாத்திரமே நிரந்தரிப்பதற்கான வாய்ப்புள்ளவை. அத்தனை சத்தியங்களும் கைவிடப்பட்டே தீரும்.
சாருவைப் படித்த பிற்பாடு எத்தைத் தின்றால் பித்தைத் தீர்க்கலாம் என்றானது தனிக்கதை. “என்னடா நீ பெரிய ரஜினியா?” என்று கோபத்தில் உதிர்க்கிற வாக்கியம்கூட, “என்னடா நீ பெரிய சாரு நிவேதிதாவா போடாங்க்…!” என்று திட்டும் அளவுக்கு அதிகரித்துப் போயிற்று.
கோவையிலிருந்து ஸ்ரீபதி பத்மநாபாவும் சுதேசமித்திரனும் சேர்ந்து ஆரண்யம் என்ற மெகா சைஸ் பத்திரிகையைத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தின் மாபெரிய சைஸ் பத்திரிகை அது. அட்டையிலிருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் மகா நேர்த்தியுடன் வெளியான அந்தப் பத்திரிகையின் சந்தாதாரர்களுள் அடியேனும் ஒருவன். அதில் சாரு ‘மதுமிதா சொன்ன பாம்பு கதைகளை’ எழுதினார். எனக்குள் கிறுக்குக்கூடியது. பிறிதொரு நாளில் சாருவின் அத்தனை புத்தகங்களும் வைத்திருக்கிறேன் என்ற போது அருணாச்சலம் சொன்னது நினைவுக்கு வருகிறது. “நேநோ முதல் பதிப்பு இருக்குதா ஜீ?” என்றார். நான் உடனே பதிலுக்கு, “அதன் தலைகீழ் அட்டையின் பின்புறம் ச்செகப்பு சட்டைபோட்டுக்கிட்டு சாருவோட இளமையான படம் ஒண்ணு இருக்கும்ல,” என்றேன். “ஏன் ஜீ இப்பவும் சாரு இளமைதானே,” என்றார் என்னைவிட அதிகப்பித்து அருணா.
சாருவின் படைப்புகள் பற்றிப் பெரிதாக என்ன சொல்லிவிடப் போகிறேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் முரண்பாடுகள். சாருவைப் பிடித்தாயிற்று. ஆயிற்றா? முதல் பிரச்சினை இளையராஜாவா சாருவா என்று வந்தது. எனக்கு உண்மையிலேயே ராஜா நீச்சலறியாதவனின் கடலாழம் போல். திரும்புவதற்கான வாய்ப்பே இல்லாமல் பார்த்துக்கொண்ட பிறகான ஜலமாடல் இளையராஜா மீதான என் பித்து. ஆனால் அடிக்கடி சாரு எதையாவது ராஜா பற்றி சொல்லி வைப்பதும் என்னளவில் என்னைச் சார்ந்த சொற்பசிலர், “என்ன பார்த்தியா, உன் ஆளு உன் ஆளைப் போட்டுத் தாக்கியிருக்காப்ல,” என்று கருத்துக் கேட்பதும் நான் வெறுப்பாகி வேதனையாகி விரக்தியாகி, “அதான் நீங்களே சொல்றீங்கள்ல, என் ஆளு என் ஆளுன்னு! ரெண்டுமே என் ரெண்டு கண்ணுய்யா; இதுல எதை நா விட்டுத் தர்ரது?” என்று சிவாஜி போலவே நடிக்கும் சண்முகசுந்தரம் போல பெர்ஃபார்ம் பண்ணுவேன்.
நிசமாகச் சொல்லப் போனால் எதன் மீதும் ஒரு அளவுக்கு மேல் பற்றற்று இருப்பதற்கான உந்துதல் எனக்கு சாருவின் மேற்கண்ட வெளிப்பாட்டின் விளைவாகவே வந்தது. நீங்க முடியாத ஒரு மச்சத்தின் மறுநிறம் போன்றது நமக்குள் நேர்கிற சாருவின் அனுபவம். திரும்புவதாவது திருப்புவதாவது. ஒரு சொல்லைக்கூடத் திருப்பித் தரமுடியாத கடன் சாருவிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டிருக்கும் பெருஞ்செல்வம் என்பேன்.
இளையராஜாவின் இசை என்னளவில் என்னைக் காப்பாற்றிய அருமருந்து. என்னை ஆற்றுப்படுத்திய மகா மருத்துவனாகவே இளையராஜாவை மதிக்கிறேன். மேலும் இளையராஜாவின் இசை மீதான என் பற்றுதல் என்பது ஒரு முடிவிலாப் பேரன்பின் தொடக்கம். இவை ஒரு புறம் இருக்க சாரு இளையராஜாவின் இசை பற்றி எழுதுகிற எதையுமே நான் அவருடைய விமர்சனம் என்பதைத் தாண்டி என் மனதினுள் புகுத்திக் கொள்வது இல்லை. ஏன் என்றால் சாரு என்பவர் கருத்துப் பிடிவாதியாக இருந்தால்தான் நான் கவலைப் படவேண்டும். ஒரு பக்கம் இளையராஜாவின் பின்னணி இசைக் கோர்வைகள், ஆரம்ப காலம் முதற்கொண்டு அவருடைய தனித்துவமான பாடல்கள், மேலும் திரை இசை சாராத அவருடைய இசைப்பணி குறித்தெல்லாம் சாரு சிலாகிப்பதை நான் அறிவேன். இளையராஜாவின் இசை பற்றிய சாருவின் ஏற்ற இறக்க சார்புகள் எவை மீதுமான நிரந்தரப் பிடிமானமோ பெரும் விவாதமோ அவருடைய விருப்பமில்லை. சாரு சொல்லிவிட்டார் என்பதற்காக இளையராஜா பற்றிய என் மதிப்பீடுகளை நான் மாற்றிக்கொள்வேனா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதே. ஆனால் சாரு நிவேதிதா என்கிற என் மனம் கவர்ந்த எழுத்துக்காரன் இளையராஜா குறித்துத் தன் கருத்துகளை முன்வைப்பதை என்னால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முரண்படுகிறேனே தவிர வெறுப்பை உமிழ்வதில்லை. எந்த இருவரும் முரண்படுவதற்கான முழு உரிமையின் பேர்தானே வாழ்வென்பது. என் சாரு என் ராஜா என்பதை அறியாமல் சாருவா ராஜாவா என்று என்னிடம் கேள்வி கேட்காத எல்லாரையும் விரும்புகிறேன். மற்ற எல்லாக் கேள்விகளையும் விரும்பினாற் போலவே.
என் வாழ்வில் என்னால் மறக்கவே முடியாத மூன்று புத்தகங்கள்: ஜெயமோகனின் அறம் மற்றும் சாருவின் தேகம் மற்றும் கோணங்கியின் பாழி. பாழியை மறக்க முடியாததற்கான காரணம் நெருக்கமான நண்பனொருவனின் மரணத்தின் போது அந்தப் புத்தகத்தை வாசித்தபடி அந்த இழப்பைக் கடந்தேன்.
ஒருமுறை மதுரை புத்தகத் திருவிழா ஆரம்ப தினம் அது. மனுஷ்ய புத்திரன் அன்றைக்குக் காலையில் மதுரை வந்து சேர்ந்து ஹோட்டலில் தங்கி இருந்தார். அவரைப் பார்க்கச் சென்றுவிட்டு அப்படியே புத்தக விழாவில் நுழைவதாகத் திட்டம். அம்மாவிடம் BYE சொல்லிவிட்டுக் கிளம்பினேன். என் அபார்ட்மெண்டில் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டேன். மின்வெட்டுகாலத்தின் தொடக்கம் என்பதால் இஷ்டத்துக்கு வருவதும் போவதுமாக தெருப்பொறுக்கி ஒருவனின் தன்னிஷ்ட வருகைகளைப் போல மின்சாரத்தின் பிரசன்னம் இருந்தது. அப்படியான காலத்தில் மின்வெட்டின் போது லிஃப்டுக்குள் நான். வழக்கமாக யாராவது லிஃப்டில் மாட்டினால் அலாரத்தை அடிப்பார்கள். அதைக் கேட்டுவிட்டு சம்மந்தப்பட்ட லிஃப்டுக்கான ஜெனரேட்டரை ஆன் செய்து அவரை வெளியேற்றிவிட்டு மறுபடி ஜெனரேட்டர் அணைக்கப் படும். இது அப்போதைய நிலைமை. இதில் என் ஜாதகப் பலன் என்னவாயிற்று என்றால் அலாரம் அடிக்கவில்லை. என் புத்திக்கு செல்ஃபோன் இருப்பதே மறந்து போயிற்று. அதை எடுத்திருந்தால் ஒரு பிரச்சினையுமின்றி யாரையாவது அழைத்திருக்கலாம். இருள். கசகசப்பு. காற்றில்லாத் தனிமை. பயம். பள்ளம். நடுவாந்திர அந்தரம். பல்கிப் பெருகி மிருகமாய் ஆனேன். நேரம் ஆக ஆக சட்டை பனியனை எல்லாம் கழற்றினேன். பெருவெள்ளமொன்றை அடைத்துக்கொண்டிருப்பவனைப் போலாகி இருந்தேன். யாராவது எப்போதாவது வந்துகொள்ளட்டும் என்று சற்று நேரம் லிஃப்டின் தரையில் சரிந்து அமர்ந்திருந்தேன். விடாமல் கால்களால் லிஃப்ட் கதவை உதைத்துக்கொண்டே இருந்தேன். எங்கேயோ யாரோ மாட்டிகிட்டாங்க போல என்று ஒருவன் இன்னொருவனிடம் பேசியதைக் கேட்டு, இருவரின் பரம்பரையையும் சபித்தேன். கதவை ஓங்கி ஓங்கித்தட்டி, சப்தமாய்க் கத்தி ஒருவழியாக முதலாவது நபருக்கு நான் மாட்டியிருக்கிற அதே லிஃப்ட் தெரிந்து அதற்குண்டான சக்தியை ஊட்டி எப்படியோ வெளியேறினேன்.
அன்றைய தினம் ஒன்றும் தெரியவில்லை. அதற்கடுத்த நாட்களில் சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு என்னை அறியாத பதற்றம் என் உடலில் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துவதை உணர்ந்தேன். அப்போதுதான் ஆசான் எழுதிய அறம் நூலைப் படித்தேன். அவ்வப்போது அவரது எழுத்துகளையும் வாசிப்பவன்தான்; ஏழாம் உலகம் ரொம்பப் பிடித்த நாவல்; அதைப் பிற்காலத்தில் பாலா என்கிற இயக்குனர் தன்னிஷ்டத்துக்கு ஃபிலிமால் எழுதியதைப் படித்த போது கண்ணீர் உகுத்தவன் நான். ஜெயமோகனின் எழுத்தை அப்படியே படமாய் எடுக்க பாலாவால் முடியவில்லை, முடியாது. அன்றைக்கு வாசித்த அறம் என்னை உலுக்கிற்று. அந்தத் தொகுப்பின் அத்தனை கதைகளையும் படித்து முடித்து வேணமட்டும் கள்ளருந்திய யானை போலாகி மறுபடி மதுரையை மீட்ட சுந்தரனாய் மாறினேன். ஒரு தவிப்பான பதற்றமான பொழுதின் வதங்கலிலிருந்து எனை மீட்டெடுப்பதற்கான மந்திரத்தை அறம் கதையின் ஏதோ ஒரு சொல்லாக்கி வைத்திருந்ததாகவே நம்புகிறேன்.
சாருவின் எழுத்துக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது தேகம். ஒரு லௌகீக சண்டையின் இரண்டாவது தளத்தில் உச்சஸ்தாயியில் விஸ்வரூபம் எடுக்க முற்பட்ட போது எனக்கு ‘வாய்ஸ் லாக்’ (voice lock) ஏற்பட்டது. தொடர்ச்சியாகக் கத்துவதும் சிகரட்டும் சேர்ந்து என் குரல் எனக்கு இல்லாமல் போயிற்று. ஒவ்வொரு புத்தகத் திருவிழாவிற்கும் சென்னைக்குச் செல்வது; மூன்று நாலு பெட்டிகளை பார்ஸலில் எனக்கே அனுப்பிக்கொண்டு திரும்புவது என்று ராஜவாசகவாழ்வு வாழ்ந்துகொண்டிருந்த காலம் அது. தேகம் நாவலை வாங்கிப் பல நாட்கள் படிக்காமல் வைத்திருந்தேன். சாருவின் கட்டுரைத் தொகுதிகளைக் குறிப்பாக அவரது கோணல் பக்கங்களின் உள்ளே மறைந்திருக்கிற வரிசை தப்பிய உபநுட்பத் தரவுகளின் மீது பெருங்கிறக்கம் ஏற்பட்டிருந்த காலம் அது. எதையுமே சாருவின் கண்களால் பார்க்க எத்தனித்தது அப்போதுதான். அனேகமாக ஒரு நாற்பது பக்க நோட்டில் நாலு நீண்ட பத்திகளாகக் காதல் கடிதம் ஒன்றை எழுதினேன். அதை வாசித்த நித்தி, “நீ முழுசா சந்திரமுகியா மாறிட்டே,” என்றாள். என் கவலை சாருவின் வாசனைகூட என் எழுத்தில் தெரியவே கூடாது என்பது. பெர்ஸனலை எழுதும்போதே பிடிபடுவது எழுதுவதை நோக்கி அல்லாமல் எதிர்ப்புறம் நோக்கி என்னைத் தளர்த்தி அனுப்பிற்று.
உண்மையில் ‘வாய்ஸ் லாக்’ ஆன போது மரணத்தின் ஒரு பகுதியாகவே அதனை உணர்ந்தேன். நான்பேசுவது எனக்கே அன்னியமானது. உறவும் சுற்றமும் அட்வைஸ்களை மழையாக்கினர். சுயபரிதாபத்தின் உச்சத்தில் திரும்ப வருமா என் பழைய குரல் என்பது தெரியாமல் தவித்தேன். அன்றைய பொழுதில் முன்பைப் போல் எந்த மாற்றமும் கொள்ளாமல் இசையைக்கூட ரசிக்க முடியாமற் போன எனக்கு மாபெரும் ஆறுதலாய் இருந்தது சாருவின் தேகம் நாவல்தான். உண்மையில் சாருவைவிட்டு விலகுவதும் இல்லை நெருங்குவதும் இல்லை என்ற என் முந்தைய அணுக்கத்தை முழுவதுமாக அற்றுப் போகச் செய்திருந்தது தேகம். அந்த நாவலின் ஒரு சொல்லைக்கூட தங்கள் வாழ்க்கைகளில் விரும்புவதைப் பற்றி கற்பனைகூட செய்யாத பலருடைய வாழ்விலும் அத்தனை சொற்களையும் விரும்பச் செய்கிற குறளிகாரியம் சாருவின் தேகம்.
தேகம் நாவலின் ஏழாவது அத்தியாயத்தில் இரண்டே இரண்டு வரிகள் வரும். அதன் பின் சாருவிற்கு பதிப்பாளன் கிருஷ்ணா ஒரு கடிதம் எழுதி இருப்பார். அதில் அந்தக் கதையில் இடம்பெறுகிற தேகவதைகள் சாதாரண மனிதர்களிடையே நடப்பது போலிருப்பதை ஆட்சேபித்து மாற்றம் செய்யலாமா எனக் கேட்பார். அதற்கு பதிலாக ஒரு பத்தி எழுதி இருப்பார் சாரு.
“நீ சொல்வது போல் மாற்றி வாசித்துக் கொள்ளும் உரிமையை வாசகரிடமே விட்டுவிடுகிறேன். மனிதவதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல்ரீதியாகப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே என் நோக்கம்.”
அந்தப் பத்தியின் முடிவு இப்படி இருக்கும்:
“அந்த இன அழித்தொழிப்பின் ஆதாரமாக இருந்தது எது என்று நினைக்கிறாய்?
பழி வாங்கும் உணர்வுதான்.
சாரு”
என்னால் எளிதாக இதற்கு மேல் இந்த நாவலைப் படித்துக் கடந்து செல்ல முடியவே இல்லை. என் சூழலும் அதனுள்ளே இருந்த நானும் மறந்து போனோம். என்னை மெல்ல ஒரு கதையின் வாக்கியங்களைக் கொண்டே அழித்தவாறு நிசமான என்னை வரைந்தெடுக்க விழைந்தேன். மேற்சொன்ன இடத்தில் அந்தக் கதைசொல்லியாக சாருவை உணராமல் நான் என்னையே உணர்ந்தேன். அதன் பின்னதான தேகம் நாவலை என் விரல்களைக் கொண்டு சாரு எழுதிச் சென்றதாகவே என் அனுபவம் இருந்தது.
The Blind Belief என்பார்கள். அப்படியான ஓரிடத்துக்கு ஒரு வாசகன் தன் வாழ்காலத்தில் இரண்டாவது எழுத்தாளனை அமர்த்தவே மாட்டான். என் வாழ்வில் சுஜாதா என்ற ஒருவருக்கு அப்பால் இன்னொருவர் வழியற்ற வழியில் நுழைவதென்பது இயலாத காரியம். ஆனால் அதுதான் நடந்தது. சாரு என்கிற மனங்கொத்தியின் பிம்பம் எனக்குள் மாவுருவாய்த் தோன்றும் போது நானடைந்த  அதிர்வென்பது உச்சபட்சமாயிருந்தது.
சுஜாதாவை நான் சந்தித்த போது என்று ஆரம்பித்து எதையும் எழுதப் போவதில்லை. நான் சந்தித்ததில்லை. கூட்டத்தில் ஒருவனாகப் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். அப்படித்தான். அதுதான் நல்லது. எனக்கு ப்ரியமான என்ற இரண்டு சொற்களின் காரணத்தினாலேயே நான் சாருவை சந்திக்கக் கூடாதென்று திட்டமாய் இருந்தேன். வேண்டாம். எதையாவது செய்து நானோ அவரோ எனக்குப் பிடிக்காமல் போய்விடுவதற்கான சன்னலைத் திறந்துவிடுவோமோ என்ற பயம். சாருவின் புத்தகங்கள் எனக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கக் கூடிய நாட்டில் சாருவின் எழுத்துகள் இணையவெளியெங்கும் கிடைத்துக்கொண்டே இருக்கிற ஒரு வாழ்வில் அவரை ஸ்தூலமாய் அருகில் சென்று நெருங்கித்தான் ஆகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. மேலும் எனக்கே உண்டான தயக்கமும் நிஜப்ரியத்திலிருந்து பத்தடி தூரத்தில் இருந்துவிடுவதன் சிலாக்கியத்தை நடைமுறைப் படுத்திவிடுவதன் சவுகரியமும் என்னை அப்படியானவனாகவே ஆக்கின.
மதுரையில் ஒரு புத்தகத் திருவிழாவில் அப்போதுதான் எழுத ஆரம்பித்திருந்த நேரம். மனுஷ்ய புத்திரனுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது புகையிலிருந்து எழுந்து வந்த தாமத தூதனைப் போல அங்கே வந்து சேர்ந்தார் சாரு. அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார் மனுஷ்ய புத்திரன். சாரு தன் மெல்லிய குரலால் அப்பிடியா என்றார். அதுதான் என் வாழ்க்கையில் அவரளித்த முதல் சொல். சதா சர்வ காலமும் அப்படித்தான் சாரு என்று அப்போது சொல்லவில்லை. அதனாலென்ன இங்கே சொல்லியாயிற்றல்லவா? அன்றைய தினம் ஒரு பெண்மணி தன்னோடு வந்திருந்த இன்னொரு பெண்மணியிடம், “ஸார் பெரிய ரைட்டர் தெரியும்ல,” என்றவாறே சாருவைக் கைகாட்டி அறிமுகப் படுத்தினார். அப்பிடியா பேரென்ன என்றார் சொல்லப்பட்ட பெண்மணி. “ஸார்தான் ஜெயமோகன். உனக்குத் தெரியாதா?” என்றவாறே உயிர்மை ஸ்டாலைக் கடந்தார். அவர்கள் நீங்கியதும் சாரு மனுஷ்ய புத்திரனிடம், “மனுஷ் இது தானா நடந்ததுதானே? யாரும் ஏற்பாடு செய்யலைதானே?” என்றார். நாங்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்ததில் மொத்த புத்தகத் திருவிழாவுமே ஒரு நிமிடம் நின்று எங்களை வெறித்தது.
சாரு தன்னைக் கலைத்துக் கொள்ளத் தயங்காத முதன்மையான எழுத்துக்காரர். பின்வாங்குவதும் பிடிவாதமும் தான் சொல்லியவற்றில் உறுதிபட நின்றுகொண்டே இருப்பதும் தனக்கு எதிரான பேய்களைத்தானே உற்பத்தி செய்வதைப் போன்றது. சாரு ஒருபோதும் அப்படிச் செய்வதே இல்லை. அவ்வப்போது குறுகியும் பெருகியும் வறண்டும் பொங்கியும் நிதானித்தும் அலைந்தும் பிரவகிப்பதன் பெயர்தான் நதி என்றாக முடியும். ஒரே சீராய் எப்போதும் பாய்கிறதென்றால் அது வெறும் பம்ப் ஸெட்தான். சாரு நிவேதிதா அடித்துத் திருத்திக் கொள்ளத் தயங்காத இயல்பின் மொழியாளர். இந்தக் குணாம்சம் எனக்குத் தெரிந்து சாருவுக்கு முன்பாக இத்தனை சதவிகித அதிகம் வேறொரு எழுத்தாளரிடமும் இல்லை என்றே கருதுகிறேன். அப்படி யாரேனும் இருந்திருந்தால் அவர்களது ஆவி என்னை மன்னிப்பதாக.
சாரு ஒரு முழுமையான ஆளுமை. தனக்கென்று தனியான வாழும் வழிப்பட்டியலைக் கொண்டிருப்பவர்கள்தான் முழுமையான ஆளுமை என்று அழைக்கப்பட முடியும். பிரபலமாவதோ ஒருதுறையில் உயர்ந்தோங்குவதோ ஒரு ஆளுமையின் பகுதி மட்டுமே. மேலும் அது அவர்களது ஆளுமையின் முக்கியமான பகுதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் அப்படியானவர்களை முழுமையான ஆளுமை என்று சொல்லிவிட முடியாது. சேணம் கட்டிய குதிரைகளில் ராஜகுதிரைகள் என்று தனியாக சிலாகிக்கலாம். அதைத் தாண்டி ஒன்றுமில்லை. உதாரணமாய்ச் சொல்வதானால் சச்சின் டெண்டுல்கர் ஒரு ஆளுமை. தலைசிறந்த கிரிக்கெட்டியர். ஆனால் பாராளுமன்றத்தில் நியமன எம்பியாக புஸ்தகத்தை விரித்துக் காண்பித்தும் வெள்ளெளுத்து எனப் பொய்கூறி எதையும் எழுதாமல் திரும்பி வருகிற மக்குப் பையனாகத்தான் பாராளுமன்றத்தில் சச்சின் நடந்துகொண்டார். இப்படியானவர்கள் நிறைந்து ததும்புகிற வாழ்தலில் முழுமையான எனும் சொல்லின் தீவிரம் அலாதியானதும்கூட. என்னைப் பொறுத்தவரை சகலகலா சன்னிதானங்கள் பலவும் அற்றுப் போகிற தராசில் முழுமையான பர்ஸனாலிடிகள் மிகவும்சொற்பமே கிட்டுகிறார்கள். நம் தேசத்தில் குஷ்வந்த் சிங், எம்.எஃப். ஹுஸேய்ன், ஓஷோ போன்ற முழுமையான பர்ஸனாலிடிகளின் பட்டியலில் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் சேர்ப்பேன். வாழ்கிற காலகட்டத்தைத் தன்னாலான அளவு மாற்றியமைக்க, சிதைக்க குறைந்த பட்சம் சலனிக்க வைக்க முயன்றுகொண்டே இருப்பவனைத்தான் அப்படியான முழுமையான பர்ஸனாலிடி என்று விளிக்க முடியும். மேலும் இப்படியானவர்களின் வாழ்க்கை வழியைக் கவனித்தால் இன்னொருவருடன் ஒப்பிட முடியாத வினோதங்களின் கூட்டுக்கலவையாக போலி செய்யமுடியாத நிரந்தரமான விலகிச்செல்லும் சாலையாக இப்படியானவர்கள் இருப்பதை கவனிக்கலாம்.
சாரு ஒரு முறை மதுரைக்கு வந்திருந்தார். அப்போது அவரைச் சுற்றிப் பலரும் இருந்தார்கள். அன்பு நண்பர் அருணாச்சலம் என்னை சாருவிற்கு இன்னொரு முறை அறிமுகப் படுத்தினார். அந்த மாலையில் சாருவோடு சிலமணி நேரங்கள் செலவிட முடிந்தது. இசை சார்பு அரசியல் கலாச்சார அறம் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமனிதன் ஒருவனுக்கு புற உலகம் தந்து கொண்டிருக்கும் அழுத்தம் ஆகியவற்றைப் பற்றிய சாருவின் அணுகல்களைக் கண்ணறியாப் புள்ளிகளைக் கொண்டு இணைத்து ஒரு சித்திரமாக்கி அவரிடம் முன்வைத்தேன். அத்தனை பேர்கள் சூழ்ந்திருந்த போதும் எனது வினாக்கள் சிலவற்றுக்கு வெகு விரிவாகப் பதிலளித்தார். மற்ற சில வினாக்களுக்கு ஒற்றை வார்த்தைகள் தொடங்கித் தன் பாணியில் பதில் சொன்னவாறே நடுவில், “பழமாவது சாப்பிடுங்க ஆத்மார்த்தி. எதுவுமே எடுத்துக்கலைன்னா, நான் எதுவுமே தரலைன்னு எனக்கே தோணிடும்ல,” என்றார்.
யோசியுங்களேன். எதை எதையோ கேட்கிறேன். அவர் பதில்களைத் தந்துகொண்டபடி இருக்கிறார். இந்த கான்வர்ஸேஷனை அவரே எள்ளித் தள்ளிக் காலி பண்ணுகிறதுதான், “பழத்தையாச்சும் சாப்பிடு.இல்லைன்னா நா எதுமே தரலைன்னு ஆயிடும்ல,” என்பது. இதை வேறாரால் சொல்ல முடியும்! “ச்சாரூ….” என்று முறைத்ததும் சிரித்தார். அது ‘கண்டுபிடிச்சிட்டியா’ என்கிற வெள்ளந்தித்தனம் பொங்கும் சிரிப்பு. இந்த ஒரு வாக்கியத்தின் மேலார்ந்த பாசாங்குகளுக்கு அப்பால் தொனிக்கிற அபாயமான எதிர்மறையான பகடியை நான் உணர்ந்தபோது தனக்கும் அதற்கும் சம்மந்தமே இல்லாதவரைப் போல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தார் சாரு. சாருவின் அடிப்படைக் குணமே ஒவ்வொரு மனதின் மேற்தோலை மாத்திரம் தானே கிழித்தும் தைத்தும் விளையாடியபடி செல்வதுதான். இதை வேறாரும் முயன்றுகூடப் பார்க்கமுடியாது.
குரு என்பது ஒரு சுமை. இந்தியாவில் அதிகம் சிதைவுக்கு உட்படுத்தப்படுகிற சொற்க்கூட்டுக்களில் குரு என்பதும் ஒன்று. இன்றைக்கும் சமூகத்தின் பொதுப்புத்தியில் அதிகம் சிதைக்கப்பட்ட சொற்களில்தலையானது என்பேன். அந்தச் சொல் அத்தனை பரிதாபமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விதிவிலக்கு நபர்களை உற்றுக் கவனித்தால் அப்படியானவர்கள் மனிதர்கள் சூழ இருப்பதையும் சதா அவர்களை நேசிக்கிறவர்களுக்கிடையே போட்டியும் போருமே நேர்வதையும் அப்படியான நபர்களின் வழங்கல் சதவீதத்திற்கு எந்தவித விகிதாச்சார நிர்ப்பந்தமும் இன்றி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதன் இயக்கம் நடைபெறுவதையும் அளவைகளாகக் கொண்டால் ஒரு ஆச்சரியம் ஏற்படத்தான் செய்கிறது. ‘டாம் இட்!’ இந்த ப்ராஸஸ் முழுக்க இதுவரைக்கும் நடிகர்களுக்கும் அவருக்கு நெருக்கமான நட்புத் தளம் என்கிற பெயரிலான மேல்மட்ட ரசிகர்களுக்கும் இடையில் மாத்திரம் காண வாய்த்தது. முதல்முறையாக இதனை எழுதுகிற ஒருவனை விரும்புகிறவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் மொழியின் அறமாகப் பழமையின் பிடிவாதம் முன்வைக்கப் படுகிற நமது நிலத்தில் சாருவுக்கும் அவரது அன்பர் குழாமுக்கும் இடையே இயங்குகிற அன்பின் குறுக்குவெட்டுத் தோற்றம் பண்படுதலின் பின்தொடர்தலின் இடைப்பாலமாக உள்ளுறைவதை உணரமுடிகிறது. சாருவுடனான இந்தச் சமீப வருடங்களில் எந்த விதமான பாசாங்குமின்றி ஒரு சாதாரண மனிதனால் எனக்குத் தர முடிகிற அதே ஒரே போலியற்ற comfort எனப்படுகிற அணுக்கத்தை உணரச்செய்தபடி இருக்கிறார்.
இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். உண்மையில் நான் புகை பிடிப்பதை நிறுத்தி ஏழு மாதங்களாகிறது. நான் வெறுமனே புகைத்தவன். அதிகம் அருந்தியவன் அல்லன் என்பதால் மது எனக்குப் பெரிய வதை அல்ல. ஆனால் வெகு கம்பீரமாக மது அருந்துவதிலிருந்து வெளியேறிய சாருவின் மானசீக விரல்களைப் பற்றிக்கொண்டே என் குரல்வளையை நெறித்த புகையெனும் பாம்பிலிருந்து விடுபட்டேன். சாருவை நினைத்துக்கொள்வதால் என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது. ஏதாவதொரு சாருவின் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு யானையின் முதுகிலமர்ந்தபடி நகரமொத்தத்தையும் அசைந்தாடிப் பார்க்கிற குழந்தையைப் போல் ஆகித் தப்பிவிட முடிந்தது. யாருமற்ற போழ்துகளில் லவ் யூ சாரு என்று ஏதோ ஒரு திசை பார்த்துக் கத்துவதைத் தவிர பெரிதாக எதையும் செய்துவிடவில்லை. என்றாலும் இங்கே ஒரு தடவை பதிவு செய்துகொள்ளலாம். லவ் யூ சாரு.
சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழாவில் ( 2015) நானும் கலந்து கொண்டேன். உலக அளவில் தான் ஏற்கனவே எழுதிய ஒரு பிரதியின் திருத்தங்களுடனான புதிய பிரதியை வெளியிடுவதை இப்படி ஒரு கொண்டாட்டமாக வேறெங்கேயும் எப்போதும் செய்திருக்கிறார்களா என்றெனக்குத் தெரியாது. என்னளவில் பழைய எக்ஸைலை நிராகரித்ததையும் புதிய எக்ஸைலை முன் வைத்ததையும் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி சாரு நிவேதிதா செய்தது அவரது கம்பீரம் என்பேன். மிட்டாய் கிடைக்கப் போகிற ஈர்ப்பில் கொடியேற்றத்தின் போது விடாமல் கைதட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் போல வளர்ந்த சமூகத்தின் அங்கத்தினர்களைக் கையாள முடியுமா? எக்ஸைல் எனக்குள் வார்த்தைப் பட்டாம்பூச்சியாகி சதா பறந்தபடி இருந்தது.
எனக்கே எனக்கு நிகழ்வதன் ஆச்சரியம் தாளவில்லை. “என்னடா இது, நமக்குப் பிடிச்சவம் பக்கத்துலயே போகமாட்டம்; இப்ப என்னடான்னா சாருவோட மாத்திரம் இவ்ளோ அருகாமையில போறமே,” என்று. அந்த இரவு நீரற்ற தீர்த்தமாடலின் கூடுகையில் சாம்நாதன், அராத்து, டேய் மனோ, ஜெகா ஜெகதீசன், ஸ்ரீராம் உட்படப் பல புண்யாத்மர்களிடம் நான்தான் ஆத்மார்த்தி என்று அறிமுகம் செய்துகொண்டேன். பிறிதொருசமயம் சாரு தன் ப்ளாகில் நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் எனும் பட்டியலில் அராத்துவுக்கு அப்பால் என்ற முன் குறிப்புடன் கணேசகுமாரன் உள்பட நால்வரைக் குறிப்பிட்டதும் அவர்களில் நானும் ஒருவனாய் இடம்பெற்றதையும் இங்கே செருகிக் கொள்ளலாம். என் பெருமைக்குரிய பெருமிதம் அல்லவா அது? பிற்காலத்தில் எனது குலேபகாவலி நூலை வெளியிட்ட சாரு எனதொரு சிறுகதை ‘தென்னம்பாளையை’ வெகுவாக சிலாகித்தார். இடைக்கால முதல்வராகையில் முகம் சாதாரணமாக தோற்றமளித்தாலும் உள்ளே ஒவ்வொரு செல்லும் கூத்தாடும் அல்லவா? அப்படி நிசமாகவே கூத்தாடியது மனசு.
சாருவின் எழுத்துகள் ஆகப்புதியவை. அவற்றின் தரவுகளின் பின்னே இருக்கக் கூடிய சவால் தமிழ் மத்யமசமூகத்தின் hide and seek மனோபாவத்தைக் குறிவைத்து இயங்குவது. அதாவது இவனை யாராச்சும் பிடிச்சித்தாங்களேன் ப்ளீஸ் எனப் பெருங்கூட்டமே ஒருவனின் பின்னால் தொடர்ந்து அலைவது. பிடிபடுவது அன்னாரின் ஜாதகத்திலேயே கிடையாது என்பது அமைப்பின் வடிவம். சாரு சுட்டுகிற எதையும் உடனே சந்தேகித்து அதன் மெய்மைத் தன்மையை சரிபார்த்துக் கொள்கிறவர்கள் பலரும் மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்து சாரு மதத்திற்கு மாறுவதும் ஒரு கட்டத்தில் சாருவைக் கண்திறக்காமல் காதலிப்பதும் அதே மனோபாவத்தின் மீவரும் பாதைதானே அன்றி வேறொன்றுமில்லை. அவரது சினிமா விமர்சனங்களை ஒழுங்காகப் புரிந்துகொண்டவர்கள் ஒன்று நல்ல சினிமாக்களை நோக்கி இன்னும் உறுதியாக விரைவார்கள். அல்லது நிச வாழ்க்கையில் இல்லாத அன்ஃப்ரெண்ட் மற்றும் ப்ளாக் பட்டன்களைத் தேடுவார்கள்.
சாருவின் கதாமாந்தர்கள் நாளை மறு தினங்களில் வரப்போகிறவர்கள். அவர்கள் உண்மையில் நேற்றும் இன்றும் இருந்தார்கள் என்கிற நிசத்தின் வேறோரு பரிணாமத்தை கிரகிக்க இயலாத ஒரு பார்வையைத்தான் தொடர்ந்து சாருவின் எழுத்துகளை அதிர்ச்சி எழுத்துகள் என்றே விமர்சித்தவர்கள் வைத்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் காலம் அவர்களைத் திருப்பி அனுப்பிற்று. தற்போது அந்த அதிர்ச்சிகள் ம்யூசியத்தில் கரப்பான்களின் மீசைகளைக் கண்டு அஞ்சியபடி காலங்கழிக்கின்றன.
சாரு நிவேதிதா என்கிற மனிதன் எதை எழுதினாலும் அது எனக்குப் பிடிக்கும் என்று சொல்பவர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள். அந்தப் பட்டியலில் என்னைக் கேட்க வேண்டியதில்லை. என் பெயரை எழுதிக்கொள்ளுங்கள். இந்த இரண்டு வாக்கியங்களைவிட வேறெதையும் சொல்லிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
சாருவைப் பற்றி அனேகர் அனேக முறைகள் சொல்லித் தொலைத்ததுதான். மனிதரோடு எத்தனை வேண்டுமானாலும் முரண்படலாம். எவ்வளவு வேண்டுமானாலும் விவாதிக்கலாம். தன் நிலையிலிருந்து மாற்றம் கொள்வதைப் பற்றிய எந்தவிதமான பதற்றமும் அல்லாத நிசமான ஞானி சாரு நிவேதிதா. அவரது எழுத்துக்களில் அவர் நான்கு உளவியல்களாக வகுபடுகிறார். இன்னும் எளிதாக சொல்வதானால் நாலு நிவேதிதா என்று வைத்துக்கொள்ளுங்கள். முதலாமவர் பயணி. அதாவது சதா சர்வ காலமும் தன் கைகளைக் கட்டியிருக்கிற நிலம், காலம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் கட்டுமானங்களிலிருந்து தப்பியோட முயற்சித்தபடி இருப்பது. சாருவின் அனேக பத்தி எழுத்துக்கள் இந்த உளவியலை முன்வைத்தபடி இயங்குபவை.
அடுத்தவர் கலகக்காரன். தான் சார்கிற காலத்தினின்றும் தப்பியோட முற்பட்டு முடியாமற் போகிற பயணி தன் நிலத்திலேயே கலகங்களைத் தொடர்ந்து முன்வைப்பவனாகிறான். சாரு அவ்வப்போது முன்வைக்கிற அரசியல், அதிகாரம், பணம், நிறுவனம் ஆகியவற்றுக்கெல்லாம் எதிரான குரல்கள் இத்தகைய திரி கொளுத்துகிற கணங்களே.
அதற்கும் அடுத்தவர் காதலன். இசை உள்படப் பல கலைகளிலும் முகிழ்ந்து சதா மென்மையிலும் மென்மையான ஆழமொன்றில் சஞ்சாரித்துக்கொண்டே இருப்பதும் சுயத்தின் ரசித்தல் எனும் குணாம்சத்தைத் தன்னை அகழ்ந்து அதிகரித்துக் கொள்வதையே போதையாக்கிக் கொள்கிற அபாயன் சாரு.
நாலாமவர் எதிராளி. தனது முந்தைய அத்தனையையும் எந்தவிதமான சூட்சும சூத்திரங்களுக்கும் கட்டுப்படாமல் கலைப்பதன் மூலமாக, மறுதலிப்பதன் மூலமாக, கைவிடுவதன் மூலமாக, திரும்பப் பெறுவதன் மூலமாக, இல்லாமற் செய்வதன் மூலமாக, தன்னைப் பற்றிய சித்திரத்தின் அனுமானங்கள் அத்தனையையும் நொறுக்கியபடி தானே அதனைப் பூர்த்தி செய்துகொண்டு உட்புறம் பூட்டிக் கொள்கிற லாவகம். The Most Dangerous Planning Methodology is Un-Plan the Plans. சாத்தியமுள்ள அத்தனை முடிச்சுக்களையும் மானசீகத்தில் சதா அவிழ்த்து விளையாடுகிற தந்திரவாதி சாரு நிவேதிதா.
ஞானம் என்பதன் வசீகரமே அதனைத் தந்துகொண்டே பெற்றுக் கொள்ளவும் முடியும். ஞானிகள் தருவதைப் பற்றிக் கித்தாய்ப்புக் கொள்ளாமற் போவதற்கு இதுவே முக்கிய காரணம். சாரு நிவேதிதா நிசத்தின் ஞானி. சாரு நிவேதிதா என்பது ஒரு மனிதனின் பெயர் மாத்திரமல்ல. அது ஒரு காலகட்டத்தில் ஒரு மொழியில் ஒருமுறை மாத்திரம் நிகழவாய்ப்புள்ள ஒரு முறைமை. அதன் முக்கிய பாகம் அவராகிறார். அந்த முறைமையின் மற்ற பாகங்கள் நான் நீங்கள் நாம் எல்லாருமே.
வாழ்தல் இனிது
அன்புடன்
ஆத்மார்த்தி

வதைகளின் கலைஞன் : வளனரசு


2.5.2017
(அடியேனைப் பற்றி நண்பர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு வாங்கி, அதை ஒரு நூலாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்ரீராம்.  அவருக்கு அப்படித்தான் புதிது புதிதாக யோசனைகள் தோன்றும்.  அந்தத் திட்டத்தில் முதல் முதலாக வந்த கட்டுரை இது.  என் நண்பர் வளனரசு எழுதியது.  வளனுக்கு என் அன்பு…)
என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு மாணவன் என்பதாலும் நண்பர் வட்டம் மிகவும் சிறியது. இந்த நிலையில்தான் தமிழ்தாசன் எனக்கு ஆசிரியராக அறிமுகமானார். ஆரோக்கியதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்தாசன், தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார். பாதிரியார் என்பதனால் பெரிதாக வெள்ளை அங்கி அணிந்து, அன்பே உருவாகி, எப்போதும் பிரசங்கம் செய்துகொண்டிருப்பவராகக் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அவர் தன் சொந்த முயற்சியில் ‘கனவு’ என்ற பதிப்பகத்தை நடத்தி பல புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்து வந்தவர். (அவருடைய ‘கலகத்தின் வார்த்தைகள்’ என்ற மால்கம் எக்ஸ்-இன் இரண்டு நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது). அவருடைய அறையில் எங்கு நோக்கினும் புத்தகங்கள். அப்போது ஏதேனும் எனக்கு வாசிக்கக் கிடைக்குமா எனக் கேட்டபோது, சாரு நிவேதிதாவின் சில புத்தகங்களை காட்டி, “இந்த ஆளுடைய புத்தகங்களைத் தவிர வேற எது வேண்டுமானாலும் எடுத்துப் படிச்சுக்கோ,” என்றார். ஆச்சரியமாக ஏன் என்று கேட்டபோது, ”உன் வாழ்க்கைல அப்றம் நீயும் தனியா நின்னுகிட்டு பைத்தியம் மாதிரி சண்ட போட்டுக்கிட்டு இருக்கனும்,” என்றார். இப்படித்தான் சாரு நிவேதிதா என்ற பெயர் எனக்கு அறிமுகமானது.
அதன்பின் நண்பன் ஒருவன் மூலமாக ஸீரோ டிகிரி அறிமுகமானது. படித்தால் ஒன்றும் புரியவில்லை; ஆனால் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு. அடுத்த கொஞ்ச நாளில் தேகம். தேகம் நாவல் தந்த போதையை என்னவென்று சொல்ல! அந்த இரு புத்தகங்களின் பாதிப்பால் சாருவின் மற்ற புத்தகங்களை பித்தனாகப் படிக்க ஆரம்பித்தேன். சாருவின் புத்தகங்களைப் படிப்பது ஒரு புதிர்விளையாட்டை விளையாடுவது போன்ற சாகசங்கள் நிறைந்தது. சாருவைப் படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாளில் உள்ளூர் இலக்கியம் தொடங்கி உலக இலக்கியம் வரை அறிமுகமானது. அதே போல நல்ல இசை, உலக சினிமா, சமையல் என்று சகலமும் என்னைப் பற்றிக்கொண்டன. இப்போதுதான் பிரச்சனைகளும் ஆரம்பமானது.  ஒரு Transgressive எழுத்தாளராக சாருவின் போராட்டத்தை நாம் அறிவோம். அவர் எதிர்கொள்ளும் அதே பிரச்சனைகளை அவருடைய வாசகர்களும் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனால் அவற்றைப் பிரச்சனைகளாக பார்க்காமல், எதார்த்தமாகப் பார்ப்பதைதான் சாருவின் எழுத்து போதிக்கிறது. (போதனை என்பது சாருவுக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை!) சாருவின் வாசகனாக நான் நிறைய சவால்களை சந்தித்திருக்கிறேன். உதாரணமாக லா.ச.ரா.வின் நூற்றாண்டை லால்குடியில் கொண்டாடத் திட்டமிட்ட போது சாருவின் பெயரை சிறப்புரைக்காகப் பரிந்துரைத்தேன்; அப்போது பலர் என்னிடம், “அந்த ஆள எப்படி சார் புடிச்சிங்க? உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலயா?” என்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படிக் கேட்ட யாரும் சாருவைப் படித்தவர்கள் அல்ல; சாருவைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள். யாரவது தங்கள் தகப்பனை வேறு யாராவது வசைபாடினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? சாரு என்னுடைய ஞானத்தகப்பன் (அப்பா என்றுதான் கூப்பிடுவேன்) என்றாலும் அவரை வசை பாடும்போது நாம் எதிர்த்துக் கேட்டால் அவ்வளவுதான்! போஜனவாயை கொடுத்து ஆசனவாயைப் புண்ணாக்கிக்கொள்ளும் கதைதான். (அனுபவம் பேசுகிறது!) சாருவின் எழுத்துக்களைத் தனதாக்கிக் கொள்ளும் மனிதன் சராசரி மனிதனாக இருக்க முடியாது. சராசரித்தனம் என்று நான் கூறவருவது யாதெனில், கண்ட இடத்தில் குப்பை போடுவது, கண்ட இடத்தில் எச்சில் உமிழ்வது, நமக்கு அடுத்திருக்கும் மனிதர்களின் சுதந்திரத்தை மதிக்காமல் இருப்பது, இன்ன பிற. இவற்றிலிருந்து ஒதுங்கி வாழும் போது நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள். இந்த சராசரித்தனத்தை ஏற்றுக்கொள்ளாததனால்தான் சாருவும், சாருவின் ‘தீவிர’ வாசகர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
தனிமை என் வாழ்வின் ஓர் அங்கம். தனிமையைப் போராடி வெல்ல முடியாது. அதை நண்பனாக்கிக் கொண்டால் வாழ்வில் எல்லாமும் நமக்குச் சொந்தமாகிவிடும். தனிமையில்தான் நம்மை நாம் அடையாளம் காண முடியும். தனிமையை நண்பனாக்கும் அந்தச் செயல்முறையைத்தான் சாருவின் எழுத்துக்களில் இருந்து நான் கற்றுக்கொண்டேன். இசையின் வழியாக, நல்ல சினிமாவின் வழியாக நான் தனிமையைக் கடந்து செல்கிறேன். சாருவின் சினிமா ரசனையை கவனிக்கும்போது எனக்கு ப்ளேட்டோ கூறிய குகை மனிதர்கள் என்ற உவமைக்கதை (Analogy of cave) ஞாபகத்துக்கு வந்தபடியே இருக்கும். குகையில் சில மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது முகம் சுவற்றை நோக்கிய வண்ணமும் அவர்கள் கரங்கள் பின்புறம் கட்டப்பட்டதுமாக இருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்புறம் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் ஏற்படுத்திய நிழல்கள் சுவற்றில் விழுந்து வந்தன.  ஆக அந்தக் கட்டுண்ட மனிதர்கள் சுவரில் பார்த்தது வெறும் நிழல்கள்; இந்த மனிதர்கள் வேறெதையும் கண்டவர்கள் இல்லை என்பதனால் அந்த நிழலை மட்டும் உண்மை என்று நம்பியிருந்தனர். அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவன் எப்படியோ தன்னை விடுவித்துக்கொண்டு குகையை விட்டு வெளியுலகைப் பார்த்துவிட்டு வந்து இவ்வளவு நாள் தம்மினத்தவர் பார்த்தது நிழல் பிம்பங்கள், அவை உண்மையில்லை என்று கூறுவான் என்றால் அதை அவர்கள் நம்பவா போகிறார்கள்? இதுதான் சாருவுக்கும் இந்திய (குறிப்பாக தமிழ்) சினிமாவுக்கும் இடையேயான உறவு.
எனக்கு இலக்கியம் அறிமுகமான பொழுதில் என் நண்பர்கள் திட்டமிட்டு சாருவின் எழுத்துக்களை எனக்குத் தர மறுத்தார்கள். இதுதான் அசல் இலக்கியம் என்று ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமி, கோணங்கி, ஜெயமோகன் (கொற்றவை) இவர்களின் படைப்புகளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். இலக்கிய வாசிப்பிற்குப் புதியவன் என்பதால் ஆர்வமாக உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பேன். ஆனால் அரைமணி நேரத்தில் அத்தனை ஆற்றலும் வற்றிப் போகும். அதற்கு நேர் எதிர் சாருவின் எழுத்துக்கள். யார் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் என்ற இலக்கிய பேதங்கள் தெரியாமல் படித்ததால் விழுங்குவதற்கரிய கடப்பாரைகளை விழுங்கியிருக்கிறேன் என்பதைப் பின்னரே புரிந்துகொண்டேன். சாரு எந்தக் குழுவையும் சாராத கலகத்தின் எழுத்தாளன் என்பதையும் அறிந்துகொண்டேன்.
சாருவிடம் நெருக்கமாக இருந்து பார்க்கும்போது ஒரு விஷயம் அப்பட்டமாகத் தெரியும்: அவர் குழந்தை உள்ளம் கொண்டவர். திடீரென ஒட்டு மொத்த மாநிலத்தவர்க்கும் எதிராக நின்று சமர் செய்து கொண்டிருப்பார். அடுத்த கணமே சாதரண ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கருத்தைத் தூக்கிப்பிடித்து அடித்தட்டு மக்களின் மனோபாவத்தைப் பிரதிபலிப்பார். (இதனாலேயே சாருவை நெருங்கியிருப்பது மிகப் பெரிய சவால்). இந்த குணங்களை அவர் தனக்குத் தானே கட்டமைத்துக் கொண்டவரல்ல; இயல்பிலேயே சாருவிடம் இந்தத் தன்மை இருக்கிறது என்பது மற்றுமொரு ஆச்சரியம்.
ஆத்மன், ப்ரம்மன், அஹம் ப்ரம்மாஸ்மி, தத்வமசி, ப்ரதிபாஷிகா, வ்யவஹாரிகா, பரமார்த்திகா, ஜீவா, ஜடா என்று தன்னைத்தானே ஒரு குறுகிய எல்லைக்குள் அடக்கிக்கொள்கின்றன இந்தியத் தத்துவங்கள். இவற்றால் ஒரு சராசரி இளைஞனைக் கவர முடியுமா? இதிகாசங்களையும் புரணாங்களையும் வேதங்களையும் இன்னும் எத்தனை நாட்களுக்கு மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருப்பது? இவை இப்படி இருக்க, நமது நிலப்பரப்பைத் தாண்டி மேற்குலகில் என்ன நடக்கிறது? இந்தியத் தத்துவங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுழன்று கொண்டிருக்க, மேற்கத்திய தத்துவங்கள் காலந்தோறும் மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. சாருவை சரியாக ஒருவர் புரிந்துகொண்டால், இந்திய ஞான மரபையும் மேற்கத்திய தத்துவங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தியத் தத்துவங்கள் ஒரு குறுகிய எல்லைக்குள் செயல்படுவதாக நான் சொல்வதால் மேற்கத்திய தத்துவங்களைத் தூக்கிப்பிடிப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. இவை இரண்டும் வாழ்வைச் செம்மைப்படுத்த இன்றியமையாதவையாக இருக்கின்றன. இவற்றை எப்படி புரிந்துகொள்வது?
எனது இரண்டு வருட தத்துவவியல் படிப்பிற்கு முன்னதாகவே சாருவின் எழுத்துக்களின் வழியாக இவை இரண்டும் எனக்கு அறிமுகமாகிவிட்டன. அதனால்தான் சொன்னேன், சாருவை சரியாக ஒருவர் புரிந்துகொண்டால் இந்திய ஞான மரபையும் மேற்கத்திய தத்துவங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். சாருவின் எழுத்தில் எக்ஸிஸ்டென்ஷியலிசம், ஸ்ட்ரக்சுரலிசம், Deconstruction போன்ற பதங்களையும் கிர்க்கேகார்ட், ஜான் பால் சார்த்தர், ஜாக் தெரிதா, மிஷல் ஃபூக்கோ, ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற பெயர்களையும் அடிக்கடி காண முடியும். சாதாரண வாசிப்பில் இயல்பாகக் கடத்தப்படும் இச்சொற்கள் உண்மையில் பல வகையான அறிவுத் தேடல்களுக்கான ஊற்றுக் கண்கள். இந்தத் தத்துவங்களையும் தத்துவவாதிகளையும் ஓரளவிற்கு அறிந்தவன் என்ற முறையில் தைரியமாகச் சொல்வேன், மேற்கண்ட தத்துவங்களும் தத்துவவாதிகளும் உங்கள் வாழ்வை மாற்றிவிடுவார்கள். இந்தப் பின்னணியில் படிக்கப்பட வேண்டிய ஒருவரே சாரு.
இந்தியாவில் மார்க்சியத்திற்குப் பிறகான எந்த மேலைத் தத்துவங்களும் அறிமுகமானதாக தெரியவில்லை. மார்க்சியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மார்க்சியத்தில் சில மாற்றங்கள் செய்து அவை யாவும் ஒரு தனி மரபாக வளர்த்தெடுக்கப்பட்டது. சாருவை அந்த மரபோடுதான் நாம் பொருத்த முடியும். இயல்பாகவே சாருவின் வாழ்விலும் எழுத்திலும் இந்த தத்துவங்களின் தாக்கத்தைப் பார்க்க முடியும். உதாரணமாக, வாழ்வில் எவற்றைத் தேர்ந்தெடுப்பது என்ற போராட்டத்தை (Struggle of Choice) மையமாகக் கொண்டது எக்ஸிஸ்டென்ஷியலிசம். கொள்கை, கோட்பாடு என்று இயங்காத சாரு அந்தக் கணத்தை அற்புதமாக வாழ்ந்து அடுத்தடுத்த கணத்திற்குத் தாவிச் செல்கிறார். இதனால்தான் சாருவின் எழுத்திலும் அந்த குணத்தைக் காண முடிகிறது என நினைக்கிறேன். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இந்தத் தத்துவம் எந்த அளவிற்குச் சுதந்திரமாக இருக்கிறதோ அதேயளவு பொறுப்புணர்ச்சியும் உடையது. நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் தான் பொறுப்பு. எனவேதான் இது ஒரு அகப்போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
சாருவைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவருடன் நட்பு பாராட்டவோ, அவரை நெருங்கவோ தேவையில்லை. அவருடைய எழுத்துக்களை வாசித்தாலே சாருவை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். எழுத்தாளர்களுக்கு சம்பிரதாயமாக இருக்கும் எந்த பிம்பமும் சாருவுக்குக் கிடையாது. தன்னுடைய பின்நவீனத்துவ எழுத்துக்களால் அந்த சம்பிரதாயங்களை எல்லாம் அடித்து நொறுக்கியவர் சாரு. முதல்முறை சாருவை சந்திக்கச் சென்றிருந்தபோது, பெரிய எதிர்பார்ப்புகள் மனதில் இருந்தன. எழுத்தாளர் என்பதால் சட்டென கோபப்பட்டுவிடுவார்; அதனால் நல்லவிதமாக சில வார்த்தைகள் மட்டும் பேசி அவரை நிறைய பேச வைத்து குறிப்புகள் எடுக்கவேண்டுமென நினைத்திருந்தேன். பார்த்தால் நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது. எளிமையாக ஒரு வேட்டி உடுத்தி வாசலில் எனக்காகக் காத்திருந்தார். உள்ளே போனதும் மனப்பாடமாக பேச நினைத்திருந்ததைக் கொட்ட ஆரம்பித்தேன். என் பதற்றத்தை தனித்து, “டீ குடிக்கிறீங்களா?” என்றார். இது அடுத்த ஆச்சரியம். சுவையான ஆப்பிள் டீ குடித்த பிறகு நடந்த உரையாடலில் என்னை அதிகமாகப் பேச வைத்து அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது சில வார்த்தைகள் பேசியதோடு சரி. இதுதான் ரொலான் பார்த் எழுத்தாளன் பற்றிச் சொன்ன புகழ் பெற்ற கருத்து என்பதைப் புரிந்துகொள்ள எனக்குப் பல வருடங்கள் ஆயின. இது மட்டுமல்ல; இப்படி எல்லா ஆட்சிபீடங்களையும் நொறுக்கியவர்  சாரு.
இத்தாலோ கால்வினோவின் If on winter’s night a traveler ஒரு புதுமையான நாவல். நீங்கள் நாவல்தான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒரு கட்டத்தில் மறந்து போவீர்கள். பிறகு திடீரென விழிப்பு கிட்டி கதை நகரும். கதையின் போக்கு மீண்டும் உங்களை விழிப்பு நிலையிலிருந்து பழைய போதைக்கு ஆழ்த்தி மீண்டும் எங்கோ ஒரு இடத்தில் உணர்வு நிலை கிடைக்கும்.  இந்த அற்புதமான நாவலுக்கு இணையான ஒரு நாவல் ’ஸீரோ டிகிரி’. இப்படிக் கூறுவதால் சாருவிடம் கால்வினோவின் தாக்கம் என்று பொருள் இல்லை. கால்வினோவின் எழுத்துக்களைச் செரித்து ரொலான் பார்த்தின் ’எழுத்தாளனின் மரணம்’ என்ற தத்துவத்தை உள்வாங்கிக் கொண்ட ஒருவரால்தான் இப்படிபட்ட ஒரு படைப்பை வழங்க முடியும்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் யானைக் கட்டும் மண்டபம்தான் நான் கல்லூரி படிக்கும்போது எனக்கான வாசிக்கும் இடம். கோவிலுக்கு அருகே புத்தகக் கடை இருந்தது. புத்தகத்தை வாங்கிய உடன் மண்டபத்திற்குச் சென்று படிக்க ஆரம்பித்துவிடுவேன். அப்படித்தான் சாருவின் நிறைய புத்தகங்களை வாசித்தேன். அப்படி ஒரு நாள் ராஸ லீலா படித்துக்கொண்டிருந்தபோது கண்கள் தானாக கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்தது. காரணம், எனது தந்தை ஓர் இருதய நோயாளி. அவரது அறுவை சிகிச்சை சமயத்தில் அவர்பட்ட அத்தனை துன்பங்களும் ராஸ லீலாவில் இருந்தது. இதுதான் Autofiction வகைமையின் வெற்றி. ராஸ லீலா படித்தபோது சார்ல்ஸ் ப்யூக்கோவெஸ்கியின் ’தபால் நிலையம்’ நினைவுக்கு வந்தது. சாருவின் எழுத்துக்களோடு நான் ஒப்பிட்டுள்ள இவ்விரு நூல்களையும் உலகத்தில் யார் படித்தாலும் அவை அந்நியமாக இருக்காது. அதேபோல சாருவின் எழுத்துக்களும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டால் அப்படித்தான் இருக்கும். “எனது இலக்கு Dublin Impac விருது அல்லது நோபல் விருது,” என்று இந்த மனிதன் கூறுவதெல்லாம் பிதற்றல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி எதிர்ப்பின் அடையாளமாக இருக்கும் சாரு ஓர் ஆன்மீகவாதி என்பதை முதலில் என்னாலும் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பில் அவர் கூறிய வாசகம் நெஞ்சைவிட்டு இன்னும் நீங்க மறுக்கிறது: “இந்தியா மாதிரியான ஒரு நரகத்தில் வாழும் போது கடவுளின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் இங்கே வாழவே முடியாது.” சாருவின் ஆன்மீகம் மதம் சார்ந்ததல்ல. ஆன்மீகத்தின் அசல் – அதாவது வேறெவற்றாலும் கரை படாத தூய ஆன்மீகம். அதனால்தான் அவரால் யானியின் இசைக்கும் பிஸ்மில்லாகானின் ஷெனாய்க்கும் மனம் லயித்துப் பரவசமடைய முடிகிறது. இன்றைய ஆன்மீகவாதிகள் தங்களுக்கென ஒரு பீடம் அமைத்துக்கொண்டு அதிலிருந்து இறங்க மறுக்கின்றனர். அதிகாரம் அவர்களின் போதை வஸ்துவாக இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதுதான் சாருவின் ஆன்மீகம். ஒரு உதாரணம் தருகிறேன். லா.ச.ரா.வின் நூற்றாண்டு விழா நடந்த அன்று காலை எங்கள் வீட்டின் சிறிய அறையில் சாரு தரையில் அமர்ந்திருக்கிறார். லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷியும் கீழே அமர்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சப்தரிஷி அவர்களுக்கு கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது. காலை சற்று நீட்டி உட்காரலாம். ஆனால் எதிரில் சாரு உட்கார்ந்திருக்கிறார் என்று தயங்கி இறுதியாக சாருவிடமே தான் காலை கொஞ்சம் நீட்டிக்கொள்ளலாமா எனக் கேட்டுவிட்டார். அப்போது சாரு சொன்ன பதில்தான் ஆன்மீகத்தின் உச்சம் எனச் சொல்கிறேன்: “காலை என் மடியில் வச்சுகோங்க; நான் பிடித்துவிடுகிறேன்,” என்றார். இதைத்தான் லெவினாஸ் தன்னிலிருந்து பிறருக்குக் (From I to other) கடந்து போவது என்றார்.
இந்தக் கட்டுரையை இப்போது மீண்டும் படித்துப் பார்க்கும்போது எனக்கே சலிப்பாக இருக்கிறது. சாருவின் மீதான பாசக்கொதிப்பில் எழுதப்பட்ட கட்டுரையாக உங்களுக்குத் தோன்றலாம். சாருவுடன் எந்த இடத்திலும் முரண்பட்டு நிற்க முடியும்; ஆனால் அதற்கான காரணங்கள் சரியாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். மரண தண்டனை குறித்த சாருவின் பார்வையிலிருந்தும் நான் முரண்படுகின்றேன்.
தன்னுடைய காலத்தில் பிறரால் தன் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவதைவிட வதை வேறெதுவுமில்லை. இது நீட்ஷே, பாரதி என்ற பல மாமனிதர்களுக்கு நிகழ்ந்தது. இவர்கள் செய்தது, தான் வாழும் காலத்திற்கு அப்பாற்பட்டு சிந்தித்ததுதான். அதுவும் இந்தியா (குறிப்பாக தமிழகம்) போன்ற பெலிஸ்திய சமுதாயத்தில் இவ்வாறாக வாழ்வது மிகப் பெரிய வதை. இந்த வதையைதான் சாரு ஏற்றுக்கொண்டிருக்கிறார். சாருவைப் பற்றிப் பேசும் போது இந்த விவிலிய வாக்கியம் எப்போதும் நினைவுக்கு வரும். அந்த வாக்கியங்களைக் கொண்டே இக்கட்டுரையையும் நிறைவு செய்ய விரும்புகிறேன்.
“கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியவொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.” (பிலிப்பியர் 2: 6-8)
இங்கே ‘கடவுள்’ என்னும் இடத்தில் பாரம்பரிய எழுத்தாளரின் பிம்பத்தை பொறுத்திக் கொள்க. ‘அடிமை’ என்னும் இடத்தில் இந்திய குடிமகன் என்ற பிம்பத்தை பொறுத்திக் கொள்க. ‘சாவு’ என்னும் இடத்தில் எழுத்தையும் ‘சிலுவைச்சாவு’ என்னும் இடத்தில் Transgressive எழுத்து என்பதாகவும் பொறுத்தி இன்னொரு முறை படித்துப்பார்க்கவும்.