Tuesday 9 May 2017

பறவையியல் விவாதம் ----- ஹோர்ஹே லூயி போர்ஹே

பறவையியல் விவாதம்
-----
ஹோர்ஹே லூயி போர்ஹே
நான் கண்களை மூடியபோது ஒரு பறவைக் கூட்டத்தைக் கண்டேன். ஒரு விநாடி அல்லது அதற்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி இருந்தது. எத்தனைப் பறவைகளைப் பார்த்தேன் எனத் தெரியவில்லை. அந்த எண்ணிக்கை அறுதியானதா? அறுதியற்றதா? இந்த சிக்கல் கடவுள் உள்ளாரா? இல்லையா என்பதோடு தொடர்புடையது. கடவுள் இருந்தால் இந்த எண்ணிக்கை அறுதியானது. ஏனெனில் நான் எவ்வளவு பறவைகளைப் பார்த்திருப்பேன் எனத் தெரியும் அவருக்கு. கடவுள் இல்லை என்றால் எண்ணிக்கையும் அறுதியற்றது. ஏனெனில், எத்தனை பறவைகள் என யாராலும் சொல்லவியலாது. இந்த நிலையில் நான் பத்துக்கும் குறைவான ஒன்றுக்கு அதிகமான பறவைகளைப் பார்த்தேன் (எனக்கொள்வோம்). ஆனால் நான் ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு பறவைகளைப் பார்க்கவில்லை. நான் பார்த்தது பத்திலிருந்து ஒன்றுக்குள் ஒரு எண்ணை. ஆனால், ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து…. மற்றவை இல்லை. அந்த எண் ஒரு முழு என் என்ற அளவில் புரிந்துகொள்ளவியலாதது. எனவே, கடவுள் இருக்கிறார்.
(தமிழில்: இளங்கோ கிருஷ்ணன்)