Monday 26 October 2015

mubeen-sadhika.blogspot.in/2015/10/blog-post_26.html, மோலாய்:சாமுவேல் பெக்கெட்-நாவல் மொழிபெயர்ப்பு

https://www.facebook.com/profile.php?id=100000015930586&fref=nf

ஒருகாலத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிதையான இராமச்சந்திரக் கவிராயரின் பாடல் 

வரிகள் இந்த நூலில்தான் இருக்கின்றன.
//கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான் அரைத்தானோ அத்தானையோ வெங்கும்
பல்லைத்தான் றிறக்கத்தான் பதுமத்தான்
புவியிற்றான் பண்ணினானே. //
இந்தக் கவிதையை கலைஞர் எழுதினார் என்று எண்ணியிருப்பாரும் உண்டு. கலைஞர் கதைவசனம் எழுதிய பராசக்தியில் ஒரு காட்சியில் பேசப்படும் ஒரு காட்சிக் கோவையாக இது காட்டப்பட்டிருக்கும்.

தருமு சிவராம் பிரமிளின் சில கவிதைகள்

மகுடம் இதழ் வெளியீட்டு நிகழ்வில் வாசித்த கட்டுரை








http://mubeen-sadhika.blogspot.in/2015/10/blog-post_26.html

கண்ணாடியுள்ளிருந்து

யாரிது?
இதுதான் என் பிறப்பா
இது பிரதி,
எனது புதிய மறுமை

கண்ணாடி சமீபிக்கிறது
எனது எண்ணங்கள்
கதவைத் தட்டுகின்றன.
தட்டும் ஒலி எதிரொலித்து
எனது இரட்டையின்
காலடியில் சப்திக்கிறது.

சிகிக்சைக் கருவிபோல்
ஒரு கதிர்
என்னைத் துளைத்து
நுழைகிறது.
தனது நகத்தைக் கழற்றி
என்னுள் எங்கோ
எரிய விடுகிறது.

இரவினுள் புதைந்து
முடங்கிக்கிடக்கும் நிழல்கள்
ஒன்றையொன்று கண்டு நிற்கும்
கண்ணாடிகளினுள்
புதைந்து
தனது பிரதிகளின் கானகத்துள்
தன்னை மறக்கிறது
எங்கும் வியாபித்த
ஒற்றை யுரு.
பிரதி பிம்பத்துக்கு
முதுகு இருக்குமா?
கண்ணாடியின் மர்மப்படலம்
கண்ணுக்குத் தெரியாது.
அதன் வித்தை ஒரு
போலிவெளி
மீண்டும்
நான் கண்ணாடியுள் பிறக்கிறேன்
ஆனால், கண்ணாடியுள் நிற்பவன்
நிழலுக்கும் பதிலதன்
கண்ணாடி
ஊடற்ற ஒரு
போலி வெளி
வெற்றுத் தளம்
நிர்பரிமாணம்

தசைச் சுவர்களின் இப்
புவன நிழல் வெளியில்
சுவர்கள் ஆடுகின்றன
ஒவ்வொரு சுடரும்
பெண்குறி விரிப்பு
தசை நிழல் பிளவு
அவற்றை நோக்கி
காற்றில் ஏறும்
மயானச் சாம்பாலாய்
எனது லிங்கம்
மீண்டும் எழுகிறது
பனிவிரலாய் நிற்கிறது

பாலைமீ தெங்கும்
திசையின்மையுள்
திசை தவறி ஓடும்
சுவடுகள்.
கண்ணாடி
வெறிச்சிட்டு நிற்கிறது.
-----

1.தருமு சிவராம் பிரமிளின் இந்தக் கவிதை கண்ணாடியுள்ளிருந்து ஊடுருவும் ஒரு மாய உலகம். பிரதிபலிப்பின் மீது எழுப்பும் கேள்விகள், ஒளியின் ஊடுருவல்கள், நிழலின் நீட்சிகள் என்று பல வர்ணனைகள், வண்ணங்களைக் கொண்டது. 

2.பிரதியும் ஒரு பிரதிபலிப்புதான். அது வெறுமையை பிரதிபலிக்கிறது.
அல்லது கவிதை சொல்லியின் பிறன்மையாக இருக்கிறது. 

3.கண்ணாடியைத் தட்டுவதா அல்லது கதவைத் தட்டுவதா என்ற ஒலித் தடுமாற்றம் இருக்கிறது. தானும் தனது பிம்பமும் இரட்டையாக இருக்கிறார்கள். அல்லது பிம்பம் கண்ணாடியைக் கதவு போல் தட்டி பிரதிபலிப்பின் காலடியில் ஒலி எழுப்புகிறது. தன்னையும் தன் பிரதிபலிப்பையும் இணையாக்கி எதிராக்கி ஒன்றாக்கி உருவாக்கி இருக்கிறது இக்கவிதை.  

4.தன்னை ஊடுருவும் ஒளி. தன்னை எரியவைக்கும் ஒளி.
பிரதி பிம்பமாக மாற. இதில் தான் என்பது தனது பிம்பமாக தனது பிறன்மையாக மாறுகிறது. கண்ணாடியின் பிம்பம் தன்னை வர்ணிப்பது நடக்கிறது. கண்ணாடியில் ஊடுருவ வேண்டிய ஒளி அது எதிரொளிக்கும் தன் மீது ஊடுருவிவிடுகிறது.

5.ஒளியை விரும்பாத படைப்பு. தன்னை எரியவிடுவதை பதிவு செய்யும் படைப்பு. பிம்பத்தின் தானாக இருப்பதால் ஒளி ஊடுருவுவதாக சொல்கிறது. 

6.கண்ணாடிகளில் புதைந்த நிழல்கள் பிரதிகளில் வியாபிக்கின்றன. அது ஓர் ஒற்றை உரு. தானும் தன் பிறனும் கலந்தது. பிரதிகளிலிருந்தோ கண்ணாடியிலிருந்தோ பிரித்தெடுத்துவிடலாம் என்றால் அது ஒற்றை உருவாக உள்ளது.  கண்ணாடியின் இடத்தைப் பிரதி எடுத்துக் கொண்டுவிட்டதால் தன்னையும் பிரதிபலிப்பையும் ஒரு சேரக் கலந்த ஒற்றை உரு ஆகியிருக்கிறது அது.

7.பிரதிபிம்பத்திற்கு ஒற்றைப் பரிமாணம் மட்டுமே இருப்பதாக தோன்றுகிறது.
அதன் பின்புறத்தைக் காணமுடியவில்லை. அதனுள் ஊடுருவிச் சென்று காணமுடியாது. ஒரே பக்கத்தை மட்டுமே காட்டும். நின்றுவிட்ட பரிமாணம்.
அது ஒரு போலி வெளி. உண்மை போல் தெரிவது. அதன் போலித் தன்மையைத் தெரிந்துகொள்ள பிம்பத்தின் எல்லா பக்கங்களும் தெரியாமல் இருப்பதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.  பிரதியும் ஒரு போலிப் பொருளைக் கொண்டு பிம்பத்தை மறைத்துவிடுகிறது. தான் என்ற முழுமையின் எல்லாப் பக்கங்களையும் பிரதி காட்ட முடியாதது போல கண்ணாடியும் ஒற்றைப் பரிமாணத்தை மட்டுமே காட்டுகிறது.

8.வெற்றுவெளி, பாலைவனம் போன்றது. அது போல் கண்ணாடியும் வெறிச்சோடிவிடும். அதன் முன் ஏதுமற்ற உரு நின்றால் பிரதிபலிக்க முடியாமல் வெறிச்சிடும். 

9.நான்/பிறன்மை என்ற விளையாட்டின் கூறுகள் கொண்ட கவிதை இது.
பிறன்மை மூலம் 'தான்' கட்டப்படுவதை புதிர் போல் வளைத்துச் சொல்கிறது இந்தக் கவிதை.  

10.ஆண் என்ற தானின் பிறன்மை போல் பெண் என்ற பொருளின் செயல்பாடு இருப்பது போலவும் இக்கவிதை தோற்றமளிக்கிறது. உளவியலாளர் லக்கானின் கண்ணாடி நிலை என்ற கோட்பாட்டுக்கும் இக்கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது கவிதை. பிறன்மை தானைக் கட்டமைக்கிறது என்ற லக்கானின் விளக்கத்திற்கு பதிலாக உள்ளது இக்கவிதை. கண்ணாடி பிம்பத்தில் உண்மையான தானைக் காண விழைந்து அது பெண் உருவின் பரிமாணமாகப் புரிந்து அதனுடன் கலக்க முடியாத கூக்குரலாகக் கண்ணாடியுள்ளிருந்து கூவுகிறது இக்கவிதை.

----------

நான்

ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
பாரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்றுவிட்டவென்
தாய்
வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடும் அரன் தீவிழியால்
மூடியெறித்துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களின்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்
யாரோ நான்? ஓ-ஓ-
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்
---
1.நான் என்பதைக் கண்டடைய பிறப்பும் இடமும் தெளிவாக்கப்பட வேண்டியிருக்கிறது. பிறப்பு பற்றிய புதிர் விடுபடுவது தாய் பற்றிய தெளிவில் கிடைக்கிறது. தாயைப் பற்றிக் கூறிவிட்டால் தான் யாரென்று விளங்கிடும் என்பதாக.
2.பெக்கெட்டின் மோலாய் என்ற நாவலில் ஒரு வசனம் வரும். மோலாய் என்ற பாத்திரத்திடம் அதன் பெயரையும் அதன் தாயின் பெயரையும் கேட்கும் போது தன் பெயர் மோலாய் என்றும் தன் தாயின் பெயரும் மோலாய் தான் என்றும் கூறும். இதைப் பற்றி ஜில் டெல்யூஜ், பிலிக்ஸ் கட்டாரி தங்களது ஆண்டி இடிபஸ் என்ற இடிபலுக்கு எதிராக என்ற நூலில் ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்கள். தாயைத் தேடி தன்னைக் கண்டடைவதாக இந்த நாவல் பாத்திரம் இருப்பது விருப்பிற்கு எதிரான மனப்பிறழ்வு நிலை என்று அவர்கள் கூறுகிறார்கள். அது போல் தன்னை விளக்கும் கவிதையில் தாயைப் பற்றி கூறுவது தன்னை பிறப்பித்த தான் என்பதைச் சொல்வதாக உள்ளது. அண்டத்தின் தாய் என்றால் விரிந்த தன்னிலையைப் படைக்கும் ஒன்றாக இக்கவிதை சொல்கிறது. அந்தத் தாயிலிருந்து பிரித்தெடுத்துக் கொள்ளும் தான் என்பதுதான் தானாக தன்னிலையாக விளக்குகிறது இக்கவிதை.

3.பக்தி இலக்கிய மரபும் இக்கவிதைக்குள் ஓடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சக்தியின் ஒட்டுமொத்த வடிவமாக தாய் இருந்தால் அழிவின் வடிவமான தந்தையின் இடத்தை சிவன் என்று நிரப்புகிறது இக்கவிதை. ஏனெனில் அண்டம் முழுதும் தாயினது என்றால் தனது இடத்தைச் சுட்ட தந்தையின் இடத்தைத் தேடுகிறது கவிதை. அது சுடுகாடு. மரணத்தில் முடிந்துவிடும் தானைக் கொண்ட இடம் அது. அந்த இடத்தில் அழிவின் சின்னமான சிவன் இருப்பதை தனதாக்கிக் கொள்கிறது இக்கவிதை.

4.தாயிடமிருந்து பிறந்து தந்தையிடம் மறைந்து போன தான் என்பதுதான் இங்கு நானாகிறது. பிறப்பின் விருப்பும் அழிவின் விருப்பின்மையும் கலந்ததுதான் நான் என்கிறது கவிதை. இந்து மத பிடிப்பில் சக்தியும் சிவனும் தன்னைப் பிறப்பித்தாலும் தான் என்பதற்கான தேடல் தொடர்கிறது. ஏனெனில் தன்னைப் பிறப்பித்து தன்னை அழிக்கும் தொடர் சக்கர இயக்கமாக நான் இருப்பதில் ஏற்படும் குழப்பம் மிஞ்சிவிடுகிறது கவிதைக்குள். மேலும் நான் என்பது தனித்த ஒன்றாக உடலற்ற ஒன்றாக அலையும் பிரதிமையாகக் கவிதை சொல்கிறது.

5.உடல்/மனம் என்கிற பிளவை ஏற்படுத்திய தெக்கார்த்தின் சிந்தனையை உள்வாங்கிய ஒலி கவிதையில் மண்டிப் போய் ஒலிக்கிறது. 'நான் சிந்திக்கிறேன் எனவே நான் இருக்கிறேன்' என்ற கார்டீசிய பிளவு கவிதையின் சிந்தனை முனகலாகத் தெறிக்கிறது.

6.பிறப்பும் இடமும் தானை நிர்ணயித்துவிட்டதாகத் தோன்றினாலும் தாயின் தானும் தந்தையின் தானும் தன்னில் கலந்து பல தான்கள் உருவாவதைக் கோடிட்டு காட்டுகிறது இக்கவிதை. தாயாதல், தந்தையாதல் என்ற இயக்கத்தில் தானுமாதல் நடக்கிறது.

7.தாயையும் தந்தையையும் பிறன்மை எந்திரங்களாக மாற்றி நானை உருவகிக்க முனைகிறது இக்கவிதை. பிறப்பும் இறப்பும் உடலியக்கம் மட்டும் அல்ல, நான் என்ற விளைவை உற்பவிக்கும் தாக்கங்களாக இக்கவிதை காட்டுகிறது. ஏனெனில் பிறப்பும் இறப்பும் தொடர்மங்களாக இருக்கும் வாழ்வின் போக்கில் நான் என்பது அவற்றின் விளைபொருளாகிவிடுவதாக கவிதை கொண்டுவிட்டது.

8.நான் ஒரு நிலையற்ற மாறிலி(uncertain constant) என்பதாக பிறப்பையும் இறப்பையும் முன்வைத்து வகுத்துக் கொள்கிறது இக்கவிதை. மதத்தின் குறியீட்டியல் பண்புக்குள் மிதக்கும் மாறிலியாக(floating signifier) நான் இந்தக் கவிதைக்குள் உள்ளது.

9.நான் இருக்கும் இடம் உயிரற்ற வெளி. அதாவது மனிதமற்ற அப்பாலை இடம். அங்கு தந்தைமையின் அதிகாரம் பாதுகாப்பற்ற உறைவிடத்தை நானுக்குத் தருகிறது. அது விடுபடுதலற்ற ஒரு சிறை போன்ற வெளி. மீண்டும் மீண்டும் இறத்தலைச் சுட்டும் களம். இறந்த நான் கொண்டிருக்கும் வசிப்பிடம்.

10.பிறப்பின் கூட்டுத் தொகையையும் இறப்பின் பெருக்கத்தையும் நினைவில் இருத்தும் ஒன்றாக நான் வெளிப்படுகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான ஒரு புள்ளியில் நான் இருக்கலாம் என்பதாகக் கவிதை கொண்டுவிடுகிறது. இந்த இடைப்பட்ட நான் என்பது தனித்தது என்பதாகப் பொருள்படுத்தப்படமுடியாது. பல நான்களின் கூட்டுத் தொகுப்பு என்பதாகக் கொள்ளலாம்.

11.அண்டத்தைப் பிறப்பித்த தாய் என்பதால் எப்போதோ பிறந்துவிட்ட நான் என்பதாக கவிதை சொல்கிறது. விருப்பத்தின் காலத்தை அளக்க முடியாது என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாம். தானின் உற்பத்தி தொடர்வதும் முறிவதும் என்ற சிக்கலான வட்டம் கவித்தைக்குள் தெரிகிறது.

12.தாயும் தந்தையும் அற்ற ஒன்றாகவோ அல்லது தாயும் தந்தையும் கலந்த ஒன்றாகவோ நானை பொருள் கொண்டுவிடுகிறது இக்கவிதை. இந்து மத மரபுசார் நம்பிக்கை இந்த பற்றைக் கொடுத்துவிடுகிறது.

13.பிறப்பு/இறப்பு, தாய்/தந்தை என்ற இருமைக்குள் மையமிட்டு வரலாற்றின் காலத்திலும் வெளியிலும் பரவி நின்று தனித்தது என்ற தகுதியை அமையப்பெறாத ஒன்றாக நானை சுட்டுகிறது இக்கவிதை. இடம், காலம் என்ற சட்டகமாகவும் நானை வரைந்துவிடுகிறது இக்கவிதை. அவற்றைக் கடந்த ஒன்றாக சிந்திக்கும் ஆற்றலற்றதாகிவிடுவதையும் சுட்டுகிறது.

14.நான் எனும் தன்னிலையாக்கம் இந்தக் கவிதைக்குள் பொதுமைப் படுத்தப்பட்ட ஒன்று. மனித இனத்தின் நான் என்பதாக உருவாகிவிட்ட ஒன்று. அதில் பன்மைத்துவம் கொண்ட நான் பொதுவிதியினால் கட்டமைக்கப்பட்ட ஒன்றாக இருப்பதையும் இந்தக் கவிதை தெளிவாக்குகிறது.

15.உள்ளுறைந்த சக்தியும் வீணாகும் ஆற்றலும் நானை தனிப்பட்டதாக்க இயலாமல் தவிப்பதை சொல்கிறது இக்கவிதை. அதைவிடுத்த வேறொன்றாக இருப்பதையே நானாக இக்கவிதையின் கற்பனை உருவகிக்கிறது.
-------

E=mc2

காலமும் வெளியும் ஒருமித்து
ஓடும் ஒற்றை நிழலாறு
ஒரு புதிய பிரபஞ்சம்
நேற்று நேற்று என்று
இறந்த யுகங்களில்
என்றோ ஒரு நாள் அவிந்த
நக்ஷத்ர கோளங்கள்
ஒளிவேகத்தின்
மந்தகதி தரும் நிதர்சனத்தில்
இன்றும் இருக்கின்றன-
காலமே வெளி
இன்று கண்டது
நேற்றையது
இன்றைக்கு நாளைக்கு
இக்கணத்தின் கரையைத்
தீண்டாது
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறொரு பரிமாணத்தில்
--------
வடக்குவாசல்:தபாலில் வந்த தனித்துவம்

புலனும் புலனெட்டாப்
பரிமாணங்களுக்கும்
இடைவெளிகளிலே
திரிந்துகொண்டிருந்தேன்
வெளிதோறும் நின்றது
ஒருகணப் பொறி
கையொப்பமின்றி
அனுப்புனர் பெறுநர்
முகவரி இன்றி
காலமும் இன்றி
அண்டத்தை அளாவி
நின்றது தனித்துவம்

தெற்கு வாசல்

தெற்கு கோபுர வாசலுக்கு
வந்த உன்முன் உனது
இடப்புறமாக நிற்கிறான்
காலபைரவன்
பூணூலில் அவர்
கோர்த்தணிந்திருக்கும்
பொக்கிஷங்களைப் பார்
பூக்களல்ல, புஷ்பராகக்
கற்களல்ல
கபாலங்கள்
ஒவ்வொரு கபாலமும்
பார்ப்பனில் இருந்து
பறையன் வரை
ஐரோப்பியனிலிருந்து
ஆப்பிரிக்க நீக்ரோப்
பழங்குடி வரை
ஒவ்வொரு மனித
இனப்பிரிவினை காண்
நேர்கொண்டு பார், சிலையின்
கால்களுக்குப் பின் நாயாய்
உருமுகிறது மரணம்
அது காலத்தின் வாகனம்.

எனவே, எட்டாத
வெற்றுவெளி ஒன்றில்
ஓயாத திகிரியை
மென்சிறகலைத்து
ஓட அசைத்தபடி
ஆடாமல் அசையாமல்
பறப்பது நீயல்ல
நானல்ல
காலாதீதம்

கிழக்குவாசல்

மேஷசூர்ய உதயவேளை
கீழ்த்திசை கண்டம்
காலம் இற்றைக்கு
ஆறு மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு

சிறகு தளர்ந்து
தாழ்ந்து பறந்து
இடியொலிக் குரலில்
இறுதியாய் அலறி
வீழ்ந்தது-இன்னும்
மனித வர்க்கம்
தோன்றியிராத அவ்
உதய வேளையில்-
பிரமாண்டானதோர்
பெயரில்லாப் பட்சி

கணத்தில் நின்றது
நின்று ஜடத்தின்
காலத் துடிப்பை
நாளை நேற்றாய்
திசை மாற்றிற்று
பட்சியின் உரு
மாற்றமடைந்து
இரண்டு மில்லியன்
ஆண்டுக்குள் பிர
மாண்டமான தோர்
பாறையாயிற்று
பூமிச் சுழற்சியின்
அச்சாணியிலே
சரிவு கண்ட
யுகம் ஒன்று
துருவங்களின்
உறைபனி வெளி
உருகிய காலம்
உருகலில் நீர்
அலையற்று
புயலற்று
மலை முகடுகளை எட்டி
மூடத்துவங்கியது
--------
1.ஈ=எம்சி2, வடக்கு வாசல், தெற்கு வாசல், கிழக்கு வாசல் ஆகிய கவிதைகளில் அண்டம், காலவெளி போன்ற கருத்துகளைப் பற்றிய ஒரு தத்துவப் பார்வை பகிரப்பட்டிருக்கிறது.

2.சக்திச் சொட்டுப் பொறியியலின் அடிப்படையில் காலம் என்பது இல்லை. பிரமிள் க்வாண்டம் இயற்பியலை படித்தவர். அதனால் காலம் கற்பனை வெளியுடன் கலந்து பிணைந்து இக்கவிதைகளில் உருவாகியிருக்கிறது. காலமே வெளியாவது இந்த அடிப்படையில்தான். பிரபஞ்சத்தின் காலமும் நனவின் காலமும் தன்னிலையில் நிகழும் காலமும் வேறு வேறானவை. இன்று கண்டது நேற்றையதாகவும் இன்றுக்கு உரியது நாளையதாகவும் பிரிப்பது காலத்தை இருத்திக் கொள்ள மட்டுமே. காலம் என்பது இல்லாததால்தான் புதிய புவனம் பிரவாகம் எடுக்கும் என்கிறது இக்கவிதை.

3.ஐன்ஸ்ட்டீனின் சார்பியல் கோட்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்த இந்த சூத்திரம் இக்கவிதைக்குள் விளைவிப்பது வேறொரு பரிமாணத்தை. இன்று 11 பரிமாணங்கள் இருப்பதாக எம்தியரி எனப்படும் இழைக் கோட்பாடு கூறுகிறது. அதைத்தான் வேறொரு பரிமாணமாக இந்தக் கவிதை வெளிப்படுத்துகிறது. அதில் காலமும் ஒரு பரிமாணம்தான். அந்தக் காலத்தின் இருப்பாக உள்ள பரிமாணத்தை இப்படிச் சுட்டிச் செல்கிறது.

4.ஈ=எம்சி2 கவிதையில் அறிவியலின் அழிவுக்கு சின்னமாக ஐன்ஸ்ட்டீனும் அழிவின் கடவுளான சிவனும் இரு பாத்திரமேற்புகளைச் செய்கிறார்கள். அழிக்கும் விருப்பம் கடவுளுக்கு இருந்திருந்தால் எந்த சூத்திரமும் தேவை இருந்திருக்காது. ஆனால் சூத்திரங்கள் மற்றும் விதிகளுடன் இறையின் படைப்பை அணுகும் அறிவியலாளர்கள் கண்டடைவது அழிவைத்தான். ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் உருவாக்கியதைப் போன்ற அழிவைத்தான். அதனால் அழிவின் கடவுள் சிவன் கெக்கலிக்க அழிவின் அறிவியலாளர் ஐன்ஸ்ட்டீன் அழுகிறார். அழிவுக்கான அறிவியலைக் குறித்த விமர்சனமும் அறிவியலின் இறையை எட்டாப் போக்கைப் பற்றிய ஆசுவாசமும் வெளிப்படும் கவிதை இது.

5.காலம், அண்டம் மற்றும் ஈர்ப்புவிசை பற்றிய ஆய்வில் ஈ=எம்சி2 கவிதை சைவத்தின் அடிப்படையைத் தேர்ந்து விடையை அடைகிறது. சக்தியும் சிவனும் ஒளியாகவும் நிழலாகவும் கண்டு அணுவின் கோர்ப்பை விளக்குகிறது இக்கவிதை. ஜடப் பொருள்களும் சக்தியின் சலனமாகவே கவிதை பார்க்கிறது. அழியும் பொருள்கள் யாவும் சிவனின் இயக்கத்தைச் சார்ந்தவை என்று வரையறுக்கிறது இக்கவிதை. அறிவியிலில் தொடங்கி சைவத்தின் ஆன்மீகத்தில் முடிக்கிறது இக்கவிதை.

6.காலாதீதம், காலவெளி, காலமும் இன்றி, கணப்பொறி, நாளைய நேற்று, என காலத்தின் பிரசன்னத்தை பல சொற்களில் சொல்கின்றன இக்கவிதைகள். புலன் உணர்த்தும் பரிமாணத்தில் காலத்தின் அறிதலும் புலன் எட்டாப் புலத்தில் காலமின்மையும் கவிதைகளுக்குள் நிகழ்கிறது. இடத்தில் நின்ற கணத்தைக் கண்டறிவதுதான் தனித்துவம் என்கிறது கவிதை. காலமும் இன்றி என்ற வரி க்வாண்டம் இயற்பியல் கூறும் காலம் என்பது ஒரு மாயை என்பதைத்தான் சுட்டுகிறது.

7.'நாம் உண்மை என்று கூறிய பொருள்கள் எல்லாமே உண்மையான பொருள்களால் உருவானவை அல்ல' என்கிறார் நீல்ஸ் போர். நட்சத்திரங்கள் மறைந்து போன பின்னும் ஒளியின் பயணத்தில் அவை இருப்பது போல் தெரிவது காலத்தை வெளியாகப் புரிந்த கவிதையின் வெளிப்பாடாக உள்ளது.  

8.காலம் என்பதை காலனாக மாற்றுகிறது தெற்குவாசல் கவிதை. காலம் என்ற ஸ்தூல வடிவாக இருப்பது நாயாக, காலபைரவக் கடவுளாக எல்லை வகுத்துவிடுகிறது இக்கவிதை. கல்லைக் கண்டால் நாயைக் காணம், நாயைக் கண்டால் கல்லைக் காணம் என்ற வழங்குதலிலிருந்து நாயின் சிலையாக இருப்பது காலத்தின் இறுகிய தோற்றமாகவும் காலம் என்பதே மரணத்தின் மற்றொரு உருவாகவும் மரணத்தைக் குறிப்பது நாயாகவும் கல்லும் நாயும் துரத்தும் மனித பிறப்பாகவும் கொண்டு இறப்பும் காலமும் பிணைந்து பொருளாகிவிடுகிறது. காலத்திற்கான பொருளை இந்து மதத்தத்துவத்தில் தேடிக் கண்டடைகிறது கவிதை.

9.கடந்ததும் வருவதும் நிகழ்வதில் அடக்கம் என்ற காலத்தின் நேர்க்கோட்டுத் தன்மையை வெளி அல்லது இடம் என்று மாற்றிவிடுகின்றன இக்கவிதைகள். அனுபவங்களின் சாரத்தில் விளைந்த ஒன்றாகவோ அல்லது உடனடித் தன்மையுடன் நிகழும் காரணகாரியமாகவோ காலத்தைப் பார்க்கின்றன இக்கவிதைகள்.

10.பெருவெடிப்பின் பின்னான உயிராக்கங்களைக் கற்பனை செய்யும் கிழக்குவாசல் கவிதை உயிரும் உயிரற்றதும் ஒரு வேதியியல் வினையில் உருமாறுவதைத் தோற்றம் கொள்ளச் செய்கிறது. யுகம் கடத்தல், மீண்டும் உயிராக்கம் நிகழ்தல் என்பதையும் தாண்டி ஒளியின் நிரந்தரத்தை மாறா நிலைப்பை பதிகிறது இக்கவிதை. ஒளி, சூரியன், சக்தி என்ற சிந்தனை வளர்ச்சி மனித இனங்களின் பரிணாமத்தில் மிதந்து கொண்டிருக்கும் குறியிடல்கள்தான். அதிலும் 'நேற்றின்று நாளை' என்ற நேர்க்கோடு பாம்பு போல் வளைகிறது. இந்தக் கவிதையும் மனிதனாவதில் இறுகிய தன்னிலையும் கடவுளாவதில் சூட்சுமம் கொண்ட புறநிலையும் சாத்தியப்படுவதாய் கூறுகிறது. ஏனெனில் மனிதப் பார்வை அகமுகமானது அது வெளிப்படுவது பகிர்முகமானது என்கிறது. மீண்டும் ஓர் உயிராக்கம் நிகழ்த்த பரமாணு அகத்திலிருந்து வெளிக்குப் பாய்கிறது. அகம் காலத்தைக் கொண்டிருப்பது அதாவது காலனைக் கொண்டிருப்பது. புறவெளி எல்லையற்றது. காலமற்றது. கடவுளானது. சிவமானது.

11.காலம் என்பது படைப்பாகவும் மரணமாகவும் இறையாகவும் பல அடுக்குகளை இந்தக் கவிதைகள் காட்டுகின்றன. இறையில் காலமானது விடுதலை அடையும் என்ற கருத்து தொடர்ந்து இக்கவிதைகளுக்குள் உரத்து ஒலிக்கிறது. அழிவற்ற உயிராக்கம் இறையைப் படைத்தளிக்கும் என்று இக்கவிதைகள் கூறுவதாகக் கொண்டுவிடலாம். அழிவின் சின்னமாகக் காலமும் படைப்பின் புதிராக இறையும் இரு இணை கோடுகளாக இக்கவிதைகளுக்குள் பயணிக்கின்றன. புறநிலையின் காலம் இறையாகவும் அகநிலையின் காலம் மரணமாகவும் நனவின் காலம் படைப்பாகவும் உள்ளது பிரமிளின் படைப்புகளில்.

12.காலம் குறித்த அறிவியல் சிந்தனை வெளியாக நிலை பெற்றுவிடுகிறது இக்கவிதைகளுக்குள். இருப்பின் எல்லையில் கடந்ததும் வருவதும் நிகழ்வதுதான் அற்புதமாக, காலத்தின் அற்புதமாக இக்கவிதைகள் கூறுகின்றன. புராணம் நிகழ்வில் நடப்பதாக மாறுகிறது. அதில் அற்புதங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஏனெனில் நிகழ்ந்ததற்குள் கடந்தது புதிய நடப்பைக் கொண்டிருக்கிறது. அது அவதாரத் தன்மையை மறுப்பதாக மாறுகிறது. காலத்தை புராணத்தின் வெளியிலிருந்து மீட்டு நிகழ்வதில் மறுஉற்பத்தி செய்கிறது கவிதை. அதில் கடந்ததும் இல்லை. எதிர்வருவதும் இல்லை. இருப்பு மட்டுமே உள்ளது.


Prem Prem "உளவியலாளர் லக்கானின் கண்ணாடி நிலை என்ற கோட்பாட்டுக்கும் இக்கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது கவிதை." என்பதன் வழி என்ன சொல்ல வருகிறார் இந்தக் கட்டுரையாளர்? தமிழில் ழாக் லக்கானை யார் படித்திருக்கப்போகிறார்கள், அவருடைய எக்ரி நூலை யார் நினைவில் வைத்திருக்கப்போகிறார்கள் என்ற தன்மிதப்பில்தான் இவ்வாறான வாசகங்கள் உருவாக்கப்படுகின்றன. கட்டுரையாளர் லக்கானின் அத்தனை நூல்களையும் தன் மேசைமீது அடுக்கிவைத்திருக்கிறேன் என்று கூறினாலும் கூட இது அடிப்படையில் தவறான வாசகம். ழாக் லக்கான் 'கண்ணாடி நிலை' என்று எதையும் கூறவில்லை பிம்பம் வழி அறிதல் உருவாகும் கட்டம் என்பதை அறிவு-தன்னிலை உருவாக்க நிலையுடன் உறவுபடுத்தி விளக்கும் கோட்பாடு இது. symbolic, real, imaginary பற்றியதாக விரிவடைகிறது லக்கானின் ைமயமறுப்பு சாராம்ச மறுப்பு உளவியல். அதற்கு முற்றிலும் எதிர் நிலையில் உள்ளதுதான் இதில் உள்ள கண்ணாடி. 'எங்கும் வியாபித்த
ஒற்றை யுரு' ைவ கருத்தியல் தளத்தில் தகர்த்த லக்கானின் கோட்பாட்டை பிரதிபலிக்க இக்கவிதை மறுக்கிறது.இக் கவிதையும் புரியாமல் லக்கானும் புரியாமல் கண்ணாடி என்றவுடன் லக்கானின் மிர்ர் ஸ்டேஜ் என்று சொல்லிவிட்டால் தமிழ் வாசகர்கள் தலை சுற்றி நின்று விடுவார்கள் என்ற நினைப்புதான் இப்படியெல்லாம் எழுத வைக்கிறது.

Like · Reply · 5 · October 28 at 12:11am · Edited


Prem Prem "This behavior is none other than that of the human infant before its image in the mirror starting at the age of six months, which is so strikingly different from the behavior of a chimpanzee, whose development in the instrumental application of intell...See More

Like · Reply · 5 · October 27 at 11:48pm


Mubeen Sadhika Prem Prem i will explain my understanding soon. Thx for your comments.

Like · Reply · 1 · October 28 at 7:27pm


Prem Prem Please read: [ Ecrits: the first complete edition in English / Jacques Lacan; translated by Bruce Fink in collaboration with Heloi'se Fink and Russell Grigg.(1966,2006)

Like · Reply · October 28 at 9:33pm


Write a reply...



Mubeen Sadhika ’நான்' என்பது பிறன்மையால் கட்டப்படுகிறது என்பது லக்கான் கூறியதுதான். இதில் என்ன சந்தேகம். மேலும் இதைத்தான் இந்தக் கவிதை பிரதிபலிக்கிறது. அதைத்தான் கவிதை 'எனது இரட்டை' என்றும் 'தன்னை மறைத்த ஒற்றையுரு' என்றும் கூறுகிறது. பிறன்மை என்பதே தானாகிவிட்டதான ஒற்...See More

Like · Reply · 2 · October 29 at 5:36pm


Kaala Subramaniam Mirror: A Psychological Door to the Otherness of Self, by ANDRE PIJET (2009) போன்ற கட்டுரைகள் அநேகம். ஓவிட் கூறும் நார்சிசஸ் போன்ற புராணக்கதைகளும், கண்ணாடியுள் கண்ணாடியாக விரியும் வெளி பற்றிய ஓவியங்களும் புகைப்படங்களும், திரைப்படங்களும் பல. மிஸ்டிகல் மரபில் கண்ணாடியைப் பற்றியும் தன் இரட்டையைச் சந்தித்தால் மரணம், தனனழிவு என்பதுமான பல ஆர்கிடைப் தொன்மங்கள் உண்டு. doppelganger பற்றிய இலக்கியப் பிரதிகள் நீண்ட மரபுடையவை. The Double என்ற தலைப்பிலேயே ஒரு ஜெர்மன் மொழிபெயர்ப்பு உளவியல் ஆய்வுநூலை 1980இல் படித்த ஞாபகம் வருகிறது. போர்ஹேஸ் தனது மிரர் பற்றிய கட்டுரையில் பல மிஸ்டிகல் மரபுக் கதைகளையும் கோட்பாடுகளையும் தொகுத்துரைப்பார். இவற்றையெல்லாம் உட்கொண்டதே ‘கண்ணாடியுள்ளிருந்து’ என்ற நெடுங்கவிதை. இந்த வியாக்யானங்கள் இல்லாமலேயே கவிதையைப் படித்து ரசிக்கலாம். பிரமிள் மிஸ்டிகல் மரபு பற்றி யாராலும் நினைத்துக்கூடிப் பார்க்கமுடியாத ஆழங்களை அறிந்தவர். தத்துவங்களில் தீவிரமான படிப்புடையவர், இந்திய ஆன்ம மரபை நன்றாக அறிந்தவர், ஓவியர், புனுவல் போன்றோர் திரைப்படங்களை விரிவாக அறிந்தவர், போர்ஹேயின் பரமரசிகர். எனவே இக்கவிதையின் பரிமாணங்களைத் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்களைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். கவிதை என்ற பெயரில் எதையோ எழுதிவெளியிடும், கவிதைகளை ஆழ்ந்து ரசித்துப் படித்ததற்கான எந்தத் தடயத்தையும் தமது விமர்சனங்கள் என்ற அரைவேக்காட்டுக் கட்டுரைகளில் வெளிக்காட்டாத சிலர் இதில் 10 சதவீதம் கூட தெரியாதவர்களே, வெறும் பின் நவீனத்துவக் கருத்தியல்களை மட்டும் படித்து எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்பவர்களும் இந்த வரிசையில்தான் சேர்வார்கள். தன்முனைப்பும் அகங்காரமும் பன்மைத்துவம் பேசியபடியே தன்னை மீறிய தனதுக்குப் புறம்பான மற்றவர்களை அவமதிக்கும் ஆங்காரமும் இப்போது காணக்கிடைக்கிறது, (உண்மையிலேயே) தனது தகுதியை ஏற்றுப் போற்றவில்லை என்ற, ஒதுக்குதலின் ஆற்றாமை வெளிப்பாடாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

Like · Reply · 3 · October 29 at 7:45pm · Edited


Perundevi Perundevi ஒன்றை மட்டும் பதிய விழைகிறேன். லகானுடைய கோட்பாடு அதன் “decentering of the self,” சுயத்தை மையத்திலிருந்து அகற்றலுக்கு முக்கியத்துவம் தருவது. ஏற்கெனவே தரப்பட்ட, சாரப்பட்ட, திடப்பட்ட ‘சுயம்’ என்பதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ’புரட்சிகரமான’ தத்துவம் என்று அறியப்படுவது அது. பிரேம் கூறியிருப்பது போல பிம்பம்வழி தன்னிலை உருவாக்கம் நடப்பதை விவரிப்பது. மற்றமையால் கட்டமைக்கப்படுவது தன்னிலை என்பது முக்கியம். குறிப்பிட்ட கவிதையில், மற்றமைக்கான இடமின்றி, ’நானாக’ இருக்கிறது மற்றமை, தன்னிலையைக் கட்டமைக்கும் இயக்கங்களை, செயற்பாடுகளை மறுப்பது இது. கவிதையில் ‘நான்’ ஒற்றையுருவாகவும், பிரதிகளாக வியாபிப்பதாகவும், அழிபட்ட நிலையிலும் எழும்பக்கூடிய ஆண்குறி லிங்கமாகவும் இருக்கிறது. தவிர, கண்ணாடி என்கிற கவிதைப்படிமம், மற்றமையாகவும் தன்னையே காண, தன்னையே பிறப்பிக்க உதவுவதாகவும் இருக்கிறது. லகானுடைய கோட்பாட்டுக்கு எதிர்நிலை என்று பிரேம் கூறுவதை இவ்வாறு அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.

Like · Reply · 2 · October 30 at 3:14am · Edited


Kaala Subramaniam கவிதையில் கண்ணாடி முன் நிற்பவன் குழந்தையல்ல. அகத்தாலும் புறத்தாலும் சமைக்கப்பட்ட வளர்ந்த ’நான்’. அவன் கண்ணாடியில் பார்ப்பது தனது ’இரட்டை’யை தனது double-ஐ. (தன் இரட்டையைச் சந்தித்தால் மரணம், ‘நான்’அழிதல், தன்னழிவு சம்பவிக்கும் என்பதும் மிஸ்டிகல் மரபின் ஒரு கூற்று, வேறு பலவும் உண்டு ) கண்ணாடிப் பிம்பத்தைப் பார்க்கும் எதார்த்த நேர்நிலையும் அதற்கான எதிரிடல்களுடன் கவிதையில் வருகிறது. அவன் ஆண் என்பதால் லிங்கம் பற்றியல்லாது யோனி பற்றி வர ஏதுவில்லை. இங்கே மற்றமையாக இருப்பது ’பிற’ அல்ல, ‘நான்’இன் பிரதி. (மற்றவன்). (போர்ஹேயின் ’மற்றவன்’ கதை வேறு காலப்பரிமாணத்தில் தன்னையே சந்திப்பதைக் கூறும்). உண்மையில் லக்கானுக்கும் இதற்கும் அதிக தொடர்பில்லை. யுங் பற்றி வந்திருக்கவேண்டும். அல்லது அதன் இலக்கிய விமர்சன வகையான ஆர்கிடைப்பல் கிரிட்டிசிசம்’ செய்திருக்கவேண்டும். இவை தமிழில் இல்லை. வாய்ப்பும் இல்லை. ஆனால் பிற கோட்பாடுகள் வழி கவிதையைப் பார்க்கலாம், மறுக்கலாம், விமர்சிக்கலாம். அதே சமயம் கவிதையிலிருந்து கோட்பாடுகளை வரவழைத்தும் காட்டலாம். இரண்டும் இல்லாமல், புரிந்துகொள்ளும் திறனும் இல்லாமல், தம்மவற்றைப்போலவே இதுவும் ஒரு சூடோ பொயட்ரி’ என்று நினைத்துக்கொண்டு, வேண்டுமென்றே ‘தகர்க்க’ நினைப்பது தங்களது போதாமைகளைத்தான் வெளிக்காட்டும். அதுவும் ஒருவகையில் நல்லதுதான்.

Like · Reply · 2 · October 29 at 11:52pm · Edited


Prem Prem தங்களது போதாமைகளைத்தான் வெளிக்காட்டும்.

Like · Reply · 1 · October 30 at 2:41am

Write a reply...



Prem Prem முபின் சாதிகா அவர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு இலக்கிய அறிவுத்துறை மாணவரும் லக்கானைப் படிக்க வேண்டும்.

ஃபிராய்டையும் லக்கானையும் படித்தால்தான் மிஸ்டிக் ஆன்மீகம் உள்ளொளி பல்லொளி என்ற மூட இலக்கிய அக்கப்போர்கள் தமிழின் குப்பை மேட்டில் கொட்டப்படும். ஃபிராய்டு மேற்குலகின் சமய அடித்தளத்தை அடித்து நொருக்கிய பெரும் பணியைச் செய்தார். ழாக் லக்கான் மேற்குலகின் மிஸ்டிக் மூடத்தனம்-மெட்டாபிசில் அய்யோக்கியத்தனம் இரண்டையும் அடித்து உடைத்து மொழியின் வழியான மனித நிலை பற்றிய மிகத்தேவையான கோட்பாடுகளை கருத்தியல்களை உருவாக்கினார். டெல்லி பல்கலைக் கழக சிறப்பு வகுப்புகளில் பிராய்ட், லக்கான், ழாக் தெரிதா, மார்க்ஸ், ஃபூக்கோ, அம்பேத்கர் பற்றிய எனது சிறப்பு வகுப்புகளை மாணவர்கள் மட்டுமின்றி பல ஆசிரியர்களும் உற்று பயின்று செல்வதைப் கடந்த பத்து வருடங்களாக ஒரு ஆதங்கத்துடன் கவனித்து வருகிறேன். இந்த ஆங்கிலவழி வகுப்புகள் தமிழ் மாணவர்களுக்குப் புரியாத நிலையில் மிகவும் வருத்தம் உணர்பவன். 1985 முதல் என் உரையாடல் கருத்துப் பகிர்வுகள் வழி கற்று வருகிறவர்கள் அதிகம், அது எனது அரசியல் தளம்.

தமிழ் இலக்கியக் களத்தை தற்போது ஆக்கிரமித்துள்ள சோதிடச் சொல்லிகள், ஆன்மிக அறிவீனர்கள், உள்ளொளி உன்மத்தர்கள், சாமியார் சாணத்தின்னிகள் என அறிவு மறுப்பு அரசியல் மறுப்புக் கூட்டத்திடமிருந்து உண்மையான அறிவுத்தேட்டம் உடைய இளையோர் குழுக்களை மீட்டு தற்காலத் தன்மை கொண்ட அறிவியக்கம் நோக்கி நகர்த்துவது எனது இலக்கிய- அரசியல்- கருத்தியல் செயல்பாடு. அதனை எனது ஒவ்வொரு இலக்கிய எழுத்தில் மட்டுமின்றி, நமது தமிழ்மண் போன்ற அரசியல் ஏட்டில் நான் எழுதி வரும் தொடர் கட்டுரைகளிலும் செய்து வருகிறேன்.

அந்த அறிவியக்க செயல்பாட்டின் ஒரு பகுதிதான் "உளவியலாளர் லக்கானின் கண்ணாடி நிலை என்ற கோட்பாட்டுக்கும் இக்கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது கவிதை." என்ற அடிப்படையில் தவறான ஒரு தொடர் குறித்த எனது எதிர்வினை. கண்ணாடி உள்ளிருந்து என்ற அந்த கலங்கிய கவிதை பற்றிய அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு வரியும் பின்நவீனத் தளத்தில் மட்டுமின்றி நவீனத் தளத்தில்கூட பொருளற்ற உளறல்கள் என்பதை இலக்கிய மாணவர்கள் அறிவார்கள். அது மிஸ்டிசிச மூளைச்சிக்கல் வழிப்பட்ட வார்த்தைக் கலக்கம். உளறல் இலக்கியம் செய்ய ஒருவருக்கு உரிமை இருக்கிறது.

Like · Reply · October 30 at 1:04am


Prem Prem ஆனால் தமிழில் பின்நவீனத்துவ குறியியல் உரையாடல்களில் நானும் எமது நண்பர்களும் அதிகம் பயன்படுத்தி வரும் புறத்தால் அமைந்த அகம் மொழியால் வரைந்த தன்னிலை பற்றிய லக்கானிய கருத்தியல் மாதிரியை அதற்கு முற்றிலும் முரணான ஒரு கவிதைக்கு பயன்படுத்தி அது அக்கோட்பாட்டைபிரதிபலிக்கிறது என்று எழுதி வாசித்து இணையம் வழி பரப்பி பலரின் மனதில் இல்லாத ஒரு பொய்யைப் பதியவைக்கும் போது எனது அறிவியக்க செயல்பாட்டின் ஒரு பகுதியாக அதனை புலப்படுத்தி அதற்கான சரியான விளக்கத்தை அளிக்கவேண்டிய பொறுப்பும் உரிமையும் எனக்கு உண்டு.

நான் என்ன படித்திருக்கிறேன் எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்பதையெல்லாம் ஓராமாக ஒதுக்கிவிட்டு நான் கேட்ட கேள்வியை அளித்த விளக்கத்தை மறுபடியும் படியுங்கள். கண்ணாடியுள்ளிருந்து கவிதையின் மிஸ்டிசிஸ-தன்வியாபக குறுக்கல் வாதத்தை உடைக்கும் கோட்பாடுதான் லக்கானுடையது.
"லக்கான் பற்றி எக்ரி என்ற நூலைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய பலரின் நூல்களும் கட்டுரைகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன" என்பது எல்லோருக்கும் தெரியும் அதில் சிலவற்றை படித்திருந்தால்கூட அந்தத் 'தன்மைய பிம்பச் சிக்கல் கவிதை' லக்கானின் கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது, தற்கால பின்நவீனத்துவ தானற்ற தன்னிலைக் கருத்தியலை கேலி செய்கிறது இக்கவிதை என்றுதான் ஒருவர் எழுதியிருப்பாரே தவிர 'நெருங்கிய தொடர்பு உள்ளது' என்று அப்பட்டமான அறியாமையை அறிவினால் அமைந்த வாசகம் போல எழுதியிருக்க மாட்டார். நான் சொல்ல வந்ததும் இதுதான் 'லக்கானை யார் வேண்டுமானாலும் இப்போது படிக்கலாம். அந்தக் கோட்பாட்டை இலக்கியங்களில் பயன்படுத்தி எழுதலாம்.' அதற்கு லக்கானைப் பற்றி எழுதப்பட்டவைகள் கொட்டிக் கிடந்தாலும் லக்கானின் நான்கு நூல்களை நேரடியாகப் படித்துவிடுவது நல்லது. 'இலக்கியத்தை இப்படித்தான் படிக்கவேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது.'ஆனால் கோட்பாட்டை இப்படித்தான் படிக்கவேண்டும் என கோட்பாடே உங்களுக்குச் சொல்லும். அனைவரும் படியுங்கள் புரிந்து கொண்டு எழுதுங்கள் இதனைச் சொல்வது அதிகாரம் என்றால் இல்லாத ஒன்றை எழுதிப் பரப்புவதை பாசிச மாறுவேடம் என்று சொல்லலாம்.

"உளவியலாளர் லக்கானின் கண்ணாடி நிலை என்ற கோட்பாட்டுக்கும் இக்கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்தக் கோட்பாட்டை பிரதிபலிக்கிறது கவிதை." மீண்டும் சொல்கிறேன் இந்த வாசகத்தை எழுதியவருக்கு கவிதையும் புரியவில்லை லக்கானும் புரியவில்லை. தர்மு சிவராம தர்சன மண்டலத்தை உடைத்து அதன் அறிவு மறுப்பு தன்மையத்தை விளக்க லக்கான்தான் முதல் கருத்தியல் கருவி. என் சிதைவுகளின் ஒழுங்கமைவு நூலில் இடம்பெறும் கட்டுரைகளில் இதனைப் பலவகையில் விளக்கியிருக்கிறேன். 20-25 ஆண்டுகளாக தமிழில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கருத்தியல் கருவியை பொறுப்பின்றி பயன்படுத்துவது தன்மிதப்புதான் என்பதை மறுமுறையும் உறுதி செய்கிறது உமது பதில்.

Like · Reply · October 30 at 1:04am


Prem Prem ' 

'பிரமிள் மிஸ்டிகல் மரபு பற்றி யாராலும் நினைத்துக்கூடிப் பார்க்கமுடியாத ஆழங்களை அறிந்தவர்." அடடா காலசுப்பிரமணியம் அருளிய வாக்கு எவ்வளவு சுயமான சுத்தமான தத்துவ தரிசனம். உங்கள் மிஸ்டிக்கா மெடிகாவை நீங்கள் கொண்டாடுங்கள் பக்த கோடிகளே. ஆனால் மிஸ்டிசிஸசம் மெடாபிசிக்ஸ் இரண்டையும் கருத்தியல் தளத்தில் உடைத்து எறிந்து மொழியின் பொருளுரும் நிலை பற்றி தன் வாழ்நாள் முழுக்க விளக்கிய ழாக் லக்கானை மிஸ்டிசிஸ தன் கலக்கத்திற்கு சாட்சியாக ஆதாரமாக பயன்படுத்துவது அறிவீனம் மட்டுமல்ல திமிர்வாதமும் கூட. அடுத்து போர்ஹஸ் வந்து மாட்டினாரா அவர் மிஸ்டிக் அனுபவத்தை மறுத்து 'மிஸ்டிபிகேஷன் இன் பிக்ஷன்' மிஸ்டிபையிங் பங்ஷன் ஆப் பிக்ஷன்' என்பதை கதைக் கணித வகைமைகள் வழி ஆராய்ந்தவர். கதையாக்கத்திற்கு வெளியே பூடக புலன் கடந்த நிலை என்று எதுவும் இல்லை என்பதை விளக்குபவை லூயி போர்ஹஸ் கதைகள். எழுதுபவர்- எழுதும் குரல் இரண்டும் ஒன்றா என்பதைக் கேள்விக்குட்படுத்திய, எழுத்து உருவாக்கும் எழுதுபவர் என்ற கோட்பாட்டை விளக்க கதைதந்த போர்ஹஸை மிஸ்டிக் கொழுக்கட்டைக்கு தீனியாக்கி உமது அறிவு பிரமிளால் கூட ஆழம்காணமுடியாத அளவுக்கு பாதளம் நோக்கிப் பாய்கிறது. எந்த பின் நவீனத்துவக் கருத்தியல்களையும் அறியாமல் எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்ள முனையும் சோதிட சிகாமணிகளுக்கு இன்னும் எதையெதையெல்லாம் சொல்லி விளக்க வேண்டுமோ தெரியவில்லை. கால சுப்புரமணியம் எழுதிப்பழகுகிறார் பார்க்கலாம், எதையாவது படித்து சில பத்திகள் எழுதட்டும். "உண்மையில் லக்கானுக்கும் இதற்கும் அதிக தொடர்பில்லை. யுங் பற்றி வந்திருக்கவேண்டும்." என்ன கொடுமை சார் இது? லக்கான் இல்லை உங்கள் விபூதியைக் கொட்டி வைக்க யுங்தான் சரியான சட்டி என்பது இளங்கலை மாணவர்களுக்குத் தெரியும். குளூத் லெவிஸ்த்ரோஸ் படியுங்கள்'மித் அண்ட் மீனிங்' நூலில் தர்மு சிவராமன் கவிதைபற்றி அதில் எழுதியிருக்கிறார். பிரடெரிக் ஏங்கெல்ஸூம் கார்ல் மார்க்ஸூம் இணைந்து 'தி ஹோலி பேமிலி' (1845) என்ற நூலில் 'மிஸ்டிரி ஆப் ஸ்பெக்குலேடிவ் கன்ஸ்ட்ரக்சன்' என்ற இயலில் கூட மிஸ்டிக் கவிதை பற்றித்தான் எழுதியிருக்கிறார்கள் இல்லையா? தர்மு சிவராமன் அதைபடித்தார் இதைக் குடித்தார் என்ற மாயாஜால மந்திர உச்சாடனத்தைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு நீ என்ன படித்தாய் நீ என்ன எழுதினாய் என்று தன்னிடம் ஒருவர் கேட்டுக் கொண்டால் 'வெறும் பின் நவீனத்துவக் கருத்தியல்களை மட்டும் படித்து எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை அறிவித்துக் கொள்பவர்களும்' என்ற குரைப்புக் கோட்பாடுகளை கொட்டிவிட்டுச் செல்லமுடியாது. வெறும் பிரமிளை படித்து வெறும் பஜனையைப் பாடும் உள்ளொளி உன்மத்த நிலைக்குத் ெதரியாது வெறும் பின்நவீனத்துவம் என்றும் அதன் கருத்தியல்கள் என்றும் எதுவும் இல்லை என்பது.


Like · Reply · 1 · October 30 at 2:09am


Prem Prem சில எழுத்தாளர்கள்-கோட்பாட்டாளர்களின் பெயர்கள், சில நூல்களின் தலைப்புகள் பிறகு தமிழில் எதை உளறினாலும் கேட்க யாரும் இல்லை என்ற தினமலர் திமிர் இதை மட்டும் வைத்துக் கொண்டு கோயில் கட்டலாம் குருபூசை நடத்தலாம் ஆனால், நவீன-பின்நவீன இலக்கியம் பற்றிப் பேசவோ எழுதவோ இயலாது. எல்லாம் தெரிய வேண்டிய தேவையில்லை நாம் சொல்லுவது பேசுவது எழுதுவது என்ன என்று தெரிவதுதான் அறிவியக்கம்.

Like · Reply · October 30 at 2:16am


Prem Prem (போர்ஹேயின் ’மற்றவன்’ கதை வேறு காலப்பரிமாணத்தில் தன்னையே சந்திப்பதைக் கூறும்). என்றும் இது மிஸ்டிக் பற்றியது என்றும் ஒருவர் சுவரெழுத்து எழுதுகிறார். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் படித்த ஒரு கலைஞரின் எழுத்து என்றால் என்ன செய்வீர்கள் அது அபத்தம் என்று சொல்லுவீர்களா இல்லையா? "The other man dreamed me, but did not dream me rigorously—he dreamed, I now realize, the impossible date on that dollar bill." என்று முடியும் அக்கதை self reflective memory பற்றியது என்று சொல்லி அந்தப்பக்கத்தை எடுத்துக் காட்டினால் வெறும் பின்நவீனத்துவம் என்று சொல்லும் அறிவீனத்தை எதிர்த்து பெரும் போராட்டத்தைத் தொடங்கவேண்டியுள்ளது.

Like · Reply · October 30 at 2:38am


Kaala Subramaniam போர்ஹேயின் மற்றவன் கதையில் தன்னையே தான் சந்தித்துக்கொள்கிறான். தனது Double-ஐ அல்ல. அந்தச்சூழ்நிலையை மனநிலையை தமது மொழிமூலம் உருவாக்கிக்காட்டுகிறார். இதனால்தான் இவரது கதைகளை ‘பென்டாஸ்டிக் ரியலிசம் என்றும் ‘மிஸ்டிகல் ரியலிசம்’ என்றும் குறிப்பிட்டார்கள். ( இது The Morning of the Magicians என்ற பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 1960களின் முற்பகுதியில் பிரபலமான, Louis Pauwels & Jacques Bergier எழுதிய புத்தகத்தில்தான் முதன்முதலில் பதச்சேர்க்கை பெற்றது, அதற்குமுன் ரியலிசத்திலிருந்து சோசலிசரியலிசம் என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது. பின்புதான் மேஜிக்கல் ரியலிசம் வருகிறது. போர்ஹே இந்த நிலையை நம்பினார் என்றோ ஆசைப்பட்டார் என்றோ ஒரு மிஸ்டிக் என்றோ பொருளல்ல. புனைகதையிில் இதை எதார்த்தமாக்கிக் காட்டுவதுதான் இலக்கிய லட்சியம். ஆர்தர் சி, கிளாக் விஞ்ஞானப் புனைகதைகளில் அயல்கிரகவாசிகளை, அயல் உலகை, அதன ஆன்மீகத்தை உருவாக்கி எதார்த்தமாக்குவதால் அவர் பறக்கும் தட்டுகளை நம்புகிறார், உலக எதார்த்தத்திலிருந்து தப்பிக்க வைக்கிறார் என்பதல்ல. யேட்ஸ், எலியட், செஸ்டர்டன், கிரகாம் கிரீன் போன்ற எத்தனையோ நவீன எழுத்தாளர்கள் (அதற்கு முந்தியவர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தவர்கள்) சமய நம்பிக்கையுள்ளவர்கள்தாம். அதற்காக அவர்கள் எழுத்து ஒதுக்கப்படும் முட்டாள்தனம் நடந்ததில்லை. (மற்றவன் கதை எனது மொழிபெயர்ப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கிறது. நான் தேர்ந்தெடுத்து உன்னதம் ஆசிரியரைக்கொண்டு பிரேமுக்கு மொழிபெயர்க்க அனுப்பப்பட்டு வெளிவந்ததுதான் Tlön, Uqbar, Orbis Tertius என்ற போர்ஹேயின் கதை) ஒருபுறம் உள்ளொளி, தரிசனம், பஜனை, சநாதனம், ஆன்மீகம் என்று ஜல்லியடிக்கிறார்கள் என்றும் மற்றொருபுறம் உடல்மொழி/வெளி, தலித்/பெண்எழுத்து, பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள் என்றும் எடுத்தஎடுப்பில் மட்டையடி அடிப்பதும் பொறுப்புள்ள காரியம் அல்ல. லக்கானை லூசி இரிகரே, நோம்சாம்ஸ்கி Fashionable Nonsense என்னும் Alan Sokal & Jean Bricmont, phallocentric, sadistic narcissism உள்ள கோட்பாடு என்போர் என்றெல்லாம் மறுப்பவர்கள் பலர் உண்டு. ஆனாலும் பின்நவீனத்துவ மும்மூர்த்திகளில் ஒருவர் அவர் என்பதும் பிராய்டைப் போலவே அவரது கோட்பாடுகளின் வலிமையும் மதிப்புக்கும் இயக்கத்துக்கும் உரியவையே. சாரங்களைத் தெரிந்து மட்டும் பயனில்லை என்று ஒரு சமயம், மூலங்களைப் படிக்கவைக்கவேண்டும் என்ற அற்ப ஆசையில் (யாரும் படிக்கத்தயாரில்லை என்ற தடைப்படுத்தல்களையும் மீறி) சில முக்கியமான பின்நவீனத்துவ, குறியியல் கோட்பாட்டாளர்களின் முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்க்க வைத்து (அதன் கஷ்டம் பெரிது) ஓரிரு கட்டுரைகளை லயத்திலும் உன்னதத்திலும் வரச்செய்துள்ளேன். அப்படி மொழிபெயர்க்கப்பட்ட பல கட்டுரைகள் உன்னதம் ஆசிரியரிடம் சிக்கிப் பூதம் காத்த புதையலாக இருக்கின்றன. யாரையோ கொண்டு மொழிபெயர்த்த லக்கானின் முக்கியமான கட்டுரையும் அதிலொன்று, நான் மொழிபெயர்த்தது ஒன்றிரண்டு வேறுபெயர்களில் வந்தன. நான் மொழிபெயர்த்துப் பிரசுரமாகாத தோடரோவ் போன்றோரின் சில கட்டுரைகளைக் கூட என்னால் அவரிடமிருந்து மீட்க முடியவில்லை-இப்போது வெளியிடும் வாய்ப்பிருந்தும். சரி, அப்படி அன்று வெளியிட்ட கட்டுரைகளையும் யாரும் வாசித்தார்களா என்ற சந்தேகமே உள்ளது.

Like · Reply · 1 · October 30 at 4:48am · Edited


Prem Prem போர்ஹேயின் மற்றவன் கதை The Other என ஆங்கில வடிவம். முதிய போர்ஹஸ் இளைய போர்ஹஸ் மனக்களத்தில் சந்தித்தல். "Suddenly, I had the sense (which psychologists tell us is associated with states of fatigue) that I had lived this moment before." என்ற குறிப்பு வரிகளைக் கொண்டது. எனது 'போர்ஹே என்னும் கணிதவியல் வினோதமும் கதைமரபின் விரீத மாற்றங்களும்" கட்டுரை 20 ஆண்டுகளுக்கு முன இருக்கலாம் உன்னதம் சிறப்பிதழில் வந்து தொகுதியில் சேர்ந்து பின் மணல் பிரதி கதைத் தொகுதியின் அறிமுகக் கட்டுரையாக தளவாய் சுந்தரத்தால் சேர்க்கப்பட்டுள்ளது. உங்கள் லாயத்தில் அடங்காத குதிரையை உங்களுக்குத் தெரியாது.

Like · Reply · October 30 at 3:55am


Prem Prem "The other man dreamed me, but did not dream me rigorously—he dreamed, I now realize, the impossible date on that dollar bill." என்ற வாக்கியத்தின் அதிசயம் உணர்த்தும் சொல்லான impossible date என்பதை டாலர் நோட்டில் இருந்த தேதியை என்றும் rigorously என்பதை துல்லியமாக என்றும் மொழி பெயர்த்துவிட்டு போர்ஹே-வை நானும் பிரமிளும் தவிர எவன் படிச்சான் அப்படின்னு சவால் விடுபவர்களைக் கண்டு கௌதம சித்தார்த்தன் மிரளலாம் காலசுப்புரமணியம் அவர்களே. பின்நவீனத்துவம் மட்டுமல்ல உங்களைப் போன்ற லயப்பாடிகளின் முன்நவீனத்துவத்தையும் கடந்தே நான் வந்திருக்கிறேன்.

Like · Reply · October 30 at 4:05am

Write a reply...



Prem Prem 'ஆர்கிடைப் தொன்மங்கள் உண்டு' இப்படிச் சொல்வது அபத்தம் அறியாமை என்பதை பின்நவீனத்து அறிவுள்ளவர்கள் மட்டுமல்ல முன்நவீனத்துவ முரடர்கள் கூட சொல்லிக்காட்டுவார்கள்தானே?

Like · Reply · October 30 at 2:53am


Kaala Subramaniam தொன்மம் என்று கா,மீனாட்சிசுந்தரம் புராணக் கதைகளுக்குப் பயன்படுத்திய சொல் பின்பு தொல்படிவம் எனப்படும் ஆர்க்கிடைப்புக்கும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது கல்விவட்டாரத்தில். எனவே தொல்படிவக் கதைகள் கருத்துக்கள்/புராணிகம் என்ற பொருளில் ஆர்க்கிடைப்/தொன்மம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

Like · Reply · October 30 at 5:05am


Prem Prem "சக்தியும் சிவனும் ஒளியாகவும் நிழலாகவும் கண்டு அணுவின் கோர்ப்பை விளக்குகிறது இக்கவிதை. ஜடப் பொருள்களும் சக்தியின் சலனமாகவே கவிதை பார்க்கிறது. அழியும் பொருள்கள் யாவும் சிவனின் இயக்கத்தைச் சார்ந்தவை என்று வரையறுக்கிறது இக்கவிதை. அறிவியிலில் தொடங்கி சைவத்தின் ஆன்மீகத்தில் முடிக்கிறது இக்கவிதை." நவீனத்தின் உச்சம் நம் காலச் சிந்தனையின் மிச்சம் இந்த வரிகள் இல்லையா?? சைவமா ஆன்மிகமா சைவ ஆன்மிகமா ஆன்மிக சைவமா? லக்கானில் தொடங்கி லயத்தில் முடியுமா இன்றைய தமிழ்ச்சிந்தனை?

Like · Reply · October 30 at 3:00am


Kaala Subramaniam சிவதாண்டவத்தையும் அணுத்தாண்டவத்தையும் ஒன்றாகக் கண்ட பிரிட்ஜாப் காப்ரா (டாவோ ஆஃப் பிசிக்ஸ்) போன்றோரை சுஜாதா என்ற ‘விஞ்ஞான’ எழுத்தாளர் போற்றியபோது அதை மறுத்து எழுதியதுதான் ‘விஞ்ஞானம் ஞானம் விபூதிப்பட்டை’. இங்குவரும் சக்தியும் சிவனும் சைவமல்ல. சாக்த தாந்ரீகத்தைச் சேர்ந்தவை.

Like · Reply · 1 · October 30 at 5:15am


Prem Prem "The other man dreamed me, but did not dream me rigorously—he dreamed, I now realize, the impossible date on that dollar bill." என்ற வாக்கியத்தின் அதிசயம் உணர்த்தும் சொல்லான impossible date என்பதை டாலர் நோட்டில் இருந்த தேதியை என்றும் rigorously என்பதை துல்லியமாக என்றும் மொழி பெயர்த்துவிட்டு போர்ஹே-வை நானும் பிரமிளும் தவிர எவன் படிச்சான் அப்படின்னு சவால் விடுபவர்களைக் கண்டு கௌதம சித்தார்த்தன் மிரளலாம் காலசுப்புரமணியம் அவர்களே. பின்நவீனத்துவம் மட்டுமல்ல உங்களைப் போன்ற லயப்பாடிகளின் முன்நவீனத்துவத்தையும் கடந்தே நான் வந்திருக்கிறேன்.

Like · Reply · October 30 at 4:08am


Kaala Subramaniam உங்களுடைய மேலுள்ள கிண்டல்களின் அபத்தத்தையும் அறியாமையையும் நினைத்தால் ஆச்சரியப்படுவதைத் தவிர வேறென்னசெய்ய? இன்றைய இணைய யுகத்தில் போர்ஹேயின் கதையை எளிதாகத் தேடிப்பிடித்து, உன்னதம் உங்களிடம் இருக்கும் என்பதால் உடனே ஒப்பிட்டுப் பார்த்து (உங்களடையதும் அதிலே வந்திருக்கலாம், அல்லது முன்பின் இதழ்களில்) ’கண்டுபிடித்த’ உழைப்பைப் பாராட்டலாம். ஆனால் போர்ஹே போன்றவர்களுக்கு ஒன்றுக்குமேற்பட்ட மொழிபெயர்ப்பு இருக்கும் என்ற சிறு ஞானம் கூடவா பிரேமானந்தருக்கு இல்லாமலாகும். சரி இப்படியெல்லாம் வீணாக எழுதி உங்களைப் போலவே விரையமாக்க வேண்டாம் என்று நினைத்தாலும் உங்கள் தோரணை இப்படிச் செய்யவைத்துவிட்டது. மன்னிக்க. \\ The other man dreamed me, but he did not dream me exacty. He dreamed, I now realize, the date on the doller bill. // The Book of Sand, Tr. by Norman Thomas di Giovanni, 1979. P.10. போர்ஹேவைப் படித்தவர்கள் இன்று ஏராளம் உள்ளனர், அன்று கநாசுவும் பிரமிளும்தான் மொழிபெயர்த்தார்கள்.

Like · Reply · October 30 at 8:43am · Edited


Prem Prem போர்ஹஸை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை மீண்டும் சொல்கிறேன். கௌதம சித்தார்த்தன் வகையாறாக்களுக்கு உங்கள் ஞானமோதிரம் பொருந்தலாம். இன்றைய வாசகர்களுக்கு அல்ல. The Other என்பதை 'மற்றவன் ' என்று மொழிபெயர்த்ததே புரிதலை அழித்த பொறுப்பற்றதனம் 'மற்றொருவன்' என்று கிறுக்கியிருந்தால்கூட ஏதோ கொஞ்சம் தெரிந்துதான் படித்திருக்கிறான் இந்த ஆள் என்று நம்பலாம். அன்று கநாசுவும் பிரமிளும்தான் மொழிபெயர்த்தார்கள். அதற்கு என்ன அன்று ஏழுகழுதை வயதான ஆட்கள் இவர்கள்தான் இதைக்கூடச் செய்யாமல்? மிஸ்டிக் -போர்ஹே என்று உளறுவதை நிறுத்து என்றால் கிண்டலாம் கேலியாம்.

Like · Reply · October 30 at 11:36am · Edited

Write a reply...



Prem Prem என்னைக் கற்றுச் சொல்லியெனச் சொல்லிய காலசுப்புரமணியம் உங்களைப் போன்ற கற்காமல் சொல்லிகளுக்கு விளக்கம் தருவது என் எழுத்தின் களத்திற்கும் வாசிப்பின் தளத்திற்கும் தேவையற்ற ஒரு வீண்வேலை என்பது எனக்கு மிகநன்றாகத் தெரியும்.

என்றாலும் இல்லாத நிகழ்வுகளில் சிலையெழுப்பி இன்று உதவாத எழுத்துக்களுக்கு பாலபிஷேக உபயம் செய்து பஞ்சாமிர்த மகுடம் வைத்து புதுவகை பூசக வியாபாரம் தொடங்கியுள்ள உங்களையும் ஏதோ இலக்கியம் செய்யும் நபர் என்று நம்பி புதிய தலைமுறையினர் சிலர் வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு அறிவிக்கவே சிலவற்றை எழுதுகிறேன்.

Like · Reply · October 30 at 12:04pm

மோலாய்:சாமுவேல் பெக்கெட்-நாவல் மொழிபெயர்ப்பு

http://mubeen-sadhika.blogspot.in/2015/08/blog-post_24.html
நான் என் தாயின் அறையில் இருக்கிறேன். அங்கு இப்போது நான் தான் வசிக்கிறேன். அங்கு எப்படி போனேன் என்று எனக்குத் தெரியாது. ஒருகால், ஏதாவது அவசர ஊர்தியில் அல்லது ஏதோ ஒரு வாகனத்தில் சென்றிருக்கலாம். என்னை இங்கு கொண்டுவந்து விட்டிருக்கலாம். நான் இங்கு தனியாக வந்திருக்கமாட்டேன். ஒவ்வொரு வாரமும் இங்கு ஒருவன் வருகிறான். அவனால் இங்கு நான் வந்திருந்தால் அவனுக்கு நன்றி. அவன் இல்லை என்கிறான். எனக்கு பணம் கொடுத்துவிட்டு நான் எழுதுவதை எடுத்துச் செல்கிறான். எத்தனை பக்கம் எழுதுகிறேனோ அத்தனை பணம். ஆம் இப்போது நான் வேலை செய்கிறேன், எனக்கு தெரிந்த வகையில், ஆனால் எனக்கு வேலை செய்யத் தெரியாது. அது பெரிய ஒன்றல்ல. இப்போது நான் என்ன விரும்புகிறேன் என்றால் விடுபட்டவற்றைச் சொல்லிவிட்டு, விடைபெறுதல்களுடன் மரணத்தை முடிக்கவேண்டும். அவர்களுக்கு அது தேவை இல்லை. ஆம், ஒன்றுக்கும் மேல் ஒன்று இருக்கிறது. ஆனால் எப்போதும் வருவது அதேதான். நீ நன்றாக செய்வாய் என்கிறான் அவன். நல்லது. என்னிடம் அதிகம் விடுபட்டது எதுவும் இல்லை என்பதே உண்மை. அவன் புதிதான பக்கங்களுக்காக வரும் போது முந்தைய வாரத்தின் பக்கங்களை எடுத்து வருகிறான். அவற்றில் எனக்குப் புரியாத அடையாளங்கள் இடப்பட்டிருக்கின்றன. எப்படியாயினும் அவற்றை நான் படிப்பதில்லை. நான் எதுவும் செய்யாத போது அவன் எனக்கு எதுவும் தருவதில்லை, என்னைத் திட்டுகிறான். இருப்பினும் நான் பணத்திற்காக வேலை செய்வதில்லை. பிறகு வேறு எதற்கு? எனக்குத் தெரியவில்லை. உண்மை என்னவெனில் எனக்கு அதிகம் தெரியாது. உதாரணமாக, என் தாயின் மரணம். நான் இங்கு வந்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டளா? அல்லது அதன் பிறகுதான் அவள் இறந்தாளா? அதாவது புதைக்கும் அளவுக்கு என்ற பொருளில். எனக்குத் தெரியவில்லை. ஒருகால், அவர்கள் அவளை இன்னும் புதைக்காமல் இருக்கலாம். எப்படியாயினும் எனக்கு அவளுடைய அறை கிடைத்துவிட்டது. நான் அவள் படுக்கையில் தூங்குகிறேன். அவளுடைய கழிப்பறையில் மல, ஜலம் கழிக்கிறேன். நான் அவள் இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டேன். நான் அவளைப் போலவே இருக்கவேண்டும். இப்போது எனக்குத் தேவைப்படுவது எல்லாம் ஒரு மகன். ஒருவேளை எங்காவது ஒரு மகன் இருக்கலாம். ஆனால் இல்லை என்றே நினைக்கிறேன். அவனுக்கு இப்போது வயதாகி இருக்கலாம், கிட்டத்தட்ட என் வயதாகியிருக்கும். அது ஒரு சிறிய பணிப்பெண்ணுடன். அது உண்மையான காதல் இல்லை. உண்மையான காதல் வேறொருத்தியுடன். அது பற்றி வருவோம். அவள் பெயர்? அதை மறுபடியும் மறந்துவிட்டேன். எனக்கு என் மகனைத் தெரியும் என்று சில சமயங்களில் தோன்றுகிறது, அவனுக்கு நான் உதவியிருக்கிறேன். அதன் பின் நான் எனக்கு சொல்லிக் கொள்கிறேன், அது சாத்தியமில்லை. நான் யாருக்காவது உதவியிருப்பேன் என்பது சாத்தியமில்லை. நான் எப்படி உச்சரிப்பது என்பதையும் பாதி சொற்களையும் மறந்துவிட்டேன். அது ஒரு பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். நல்லது. என்னை சந்திக்க வருபவன் எந்த பயனும் இல்லாதவன். உண்மையில் அவன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வருகிறான். மற்ற நாட்களில் அவன் ஓய்வாக இல்லை. அவன் எப்போதுமே தாகம் கொண்டவனாக இருக்கிறான். அவன்தான் நான் எல்லாமே தவறாகத் தொடங்கியதாகவும், நான் எல்லாவற்றையும் வித்தியாசமாகத் தொடங்கியிருக்கவேண்டும் என்றும் கூறினான். அவன் சொல்வது சரியாக இருக்கலாம். நான் தொடக்கத்தில் பழைய பீஜத்தைப் போல் தொடங்கினேன். உங்களால் அதை கற்பனை செய்ய முடிகிறதா? இதுதான் என் தொடக்கம். ஏனெனில் அவர்கள் அதை உண்மையாக வைத்திருக்கிறார்கள். நான் அதில் பல சிக்கல்களைச் செய்தேன். இதுதான் அது. அது எனக்கு பல தொல்லைகளைக் கொடுத்தது. அது தான் தொடக்கம். உங்களுக்குப் புரிகிறதா? ஆனால் இப்போது இறுதிக்கு வந்துவிட்டது. இப்போது நான் செய்வது கொஞ்சம் நன்றாக இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. அது வேறொரு அம்சம். இதுதான் என் தொடக்கம். அது ஒரு பொருளைத் தரவேண்டும் அல்லது அவர்கள் அதை வைத்துக் கொள்ளமாட்டார்கள். அது இதுதான்.

...

என் திட்டத்தை நான் துல்லியமாக்கிய போது என் சைக்கிள் ஒரு நாயின் மீது ஏறிவிட்டது, அப்படித்தான் தோன்றியது, மன்னிக்க முடியாத திறமையின்மையுடன் கீழே விழும் போது, கழுத்தில் பட்டை அணிந்த நாயைப் போல் சாலையில் அல்லாமல் நடைபாதையில் அதன் பெண் உரிமையாளரின் காலடியில் அந்த நாய் பவ்யமாய்க் கிடந்தது. முன்னெச்சரிக்கைகள், முடிவுகளைப் போல் முன்னெச்சரிக்கையுடன் எடுக்கப்படவேண்டியவை...நான் அந்த சிக்கலை அதிகமாக்க அங்கிருந்து ஓடிப்போனேன். நான் உடனடியாக ரத்தவெறி கொண்ட பெரிய கும்பலால் ஆட்கொள்ளப்பட்டேன்...என்னை அவர்கள் துண்டுத்துண்டாக கூறாக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது அந்த பெண் தலையிட்டாள்...இந்த வயதானவரை விட்டுவிடுங்கள்...அவர் டெட்டியை கொன்றுவிட்டார், அதை நான் என் குழந்தையைப் போல் நேசித்தேன் என்பதை உங்களுக்காக ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அது ஒரு பெரிய காரியமாகக் கருதமுடியாது, அதை நான் ஒரு மிருக வைத்தியரிடம் எடுத்துச் சென்று கொண்டிருந்த போது நடந்திருக்கிறது, அதனால் அதன் வலியிலிருந்து இந்த சம்பவம் அதை விடுவித்திருக்கிறது. டெட்டி வயதாகி, பார்வையற்று, கேட்கும் திறனற்று, முடக்குவாதத்தால் முடங்கி, மல,ஜலம் வெளியேற்ற முடியாமல், இரவிலும் பகலிலும் உள்ளேயும் வெளியேயும் அலைந்துகொண்டிருந்தது. என்னை ஒரு வலிமிக்க வேலையிலிருந்து காப்பாற்றிய இந்த வயதான மனிதருக்கு நன்றி சொல்லவேண்டும், இதற்காக ஆகப்போகும் செலவு பற்றி சொல்லவே வேண்டாம், அதை நான் ஏற்றிருக்கவே முடியாது... ஏனெனில் பாதுகாப்பு படையில் வேலை செய்து இறந்து போன என் கணவரின் ஓய்வூதியம் மட்டுமே எனக்கு ஆதரவாக உள்ளது. அந்த கும்பல் கலைந்து போகத் தொடங்கியது...அங்கிருந்து விடுபட்டுச் செல்ல முயற்சித்தேன். ஆனால் அந்த பெண் திருமதி லாய், இப்போது சொல்லும் பெயர்தான் இருக்கும் என்று முடிவு செய்கிறேன், அல்லது லோஸ், கிறித்துவ பெயர், சோஃபி என்பது போல் ஏதோ ஒன்று, என் கோட்டின் பின் புறத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள், நான் முதல் முறையாகக் கேட்ட சொற்களைப் போன்று ஒலிக்கும் சொற்களைப் பேசினாள், கனவானே, நீங்கள் எனக்குத் தேவைப்படுகிறீர்கள். என்னை எப்போதும் கைவிடும் என் பாவனையை அவள் பார்த்ததிலிருந்து, அவள் எனக்கு புரியவைத்துவிட்டாள் என்பது போல இருந்தது, இதைப் புரிந்து கொண்டால் அவர் எதையும் புரிந்துகொள்வார் என்பது போல அவள் சொன்னாள்....ஆஹ் ஆம் எனக்கும் அவள் தேவை என்று தோன்றியது. அந்த நாயைப் புதைக்க அவளுக்கு நான் தேவை, எனக்கு அவள் எதற்காக தேவை என்பதை மறந்துவிட்டேன்..

ஒரு பெண் என்னை என் தாய் நோக்கி நான் தள்ளப்பட்டதிலிருந்து தடுத்திருப்பாளா? இருக்கலாம். நல்லதுதான் இருந்தாலும், அது போன்ற ஒரு நிகழ்வு எனக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இடையில் சாத்தியமாகியிருக்குமா? ஆண்கள் சிலருடன் போராடியிருக்கிறேன், ஆனால் பெண்கள்? ஓ நல்லது, இந்த நேரத்தில் நான் உண்மையைச் ஒத்துக்கொள்ளவேண்டும், நான் ஒரு முறை ஒரு பெண்ணுடன் இழைந்திருக்கிறேன். நான் என் தாயைக் குறிப்பிடவில்லை. நான் அவளுடன் இழைந்தது தவிர இன்னும் பலவற்றைச் செய்திருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் என் தாயை இவற்றிலிருந்தெல்லாம் விடுவித்துவிடலாம். ஆனால் மற்றொரு பெண், என் தாய் ஆகக்கூடியவர், என்னைப் பொறுத்தவரை வாய்ப்பிருந்திருந்தால் என் பாட்டியும் கூட ஆகக்கூடியவர். வாய்ப்பு பற்றி இப்போது அவன் பேசுவதை கவனியுங்கள். அவள்தான் எனக்கு காதலுக்கு நெருக்கமாக்கினவள். அவள் அமைதியின் பெயரான ரூத் என்று அழைக்கப்பட்டாள் என்று நினைக்கிறேன், எனக்கு சரியாக நினைவில்லை. அந்த பெயர் எடித் என்றிருக்கலாம். அவள் கால்களுக்கு இடையில் ஒரு துளை இருந்தது, நான் எப்போதுமே கற்பனை செய்வது போல் குப்பிகளில் போடப்படும் துளை போன்றதல்ல, ஒரு துவாரம், அதில்தான் அவள் சொல்வது போல் வீரியமிக்க என் குறியை, என்னை நுழைப்பேன், அல்லது அவள் நுழைத்துக் கொள்வாள், கொஞ்சமும் சிரமப்படாமல், நான் திண்டாடி திணறி வெளியேற்றும் வரை, அல்லது முயற்சியை நிறுத்தும் வரை, அல்லது அவள் போதும் என்று மன்றாடும் வரை...

நான் இந்த காட்டில் சில பேரைப் பார்த்திருக்கிறேன், வேறு எங்குதான் இப்படி நடக்கவில்லை, ஆனால் குறிப்பிடும்படியாக எதுவும் நடந்ததில்லை. நான் ஒரு நிலக்கரி எரிக்கும் ஒருவரை சந்தித்தது குறிப்பிடத்தக்க ஒன்று., நான் எழுபது வயது குறைவாக இருந்திருந்தால் நான் அவனை நேசித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி சொல்வதற்கில்லை. அப்படி இருப்பின் அவனும் அதே அளவு மிகவும் இளமையாக இருந்திருப்பான், அந்த அளவு இல்லை என்றாலும் இளமையாகத்தான் இருந்திருப்பான். ஆனால் அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நேசம் என்னிடம் இல்லை, நான் சிறிய வயதாக இருக்கும் போது, என்னிடம் ஒரு சிறு அளவு இருந்தது, அது முதுமையில் முடிந்த அளவு போய்விட்டது. ஒரு சிலரை நேசிக்கலாம் என்று நினைக்கிறேன், ஓ உண்மையான காதல் அல்ல, இல்லை, மூதாட்டி மீதான காதல் போல் அல்ல, நான் மீண்டும் அந்த பெண்ணின் பெயரை மறந்துவிட்டேன், ரோஸ், இல்லை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று, எப்படிச் சொல்வது, நல்ல நிலையில் இருக்க விரும்புபவர்கள் மென்மையாகக் கையாளப்படுவது போலத்தான். நான் வயதுக்கு மீறிய அறிவுத்திறனை உடைய குழந்தை அதன் பின் அறிவில் முதிர்ச்சி அடைந்த மனிதன். ஆனால் எல்லோரும் எனக்கு முதிர்ந்த, முதரிச்சி அடையாத பழங்களை கிளைகளிலிருந்து தருகிறார்கள். அவன் என் மீது படர்ந்தான், நீங்கள் நம்பினால் நம்புங்கள், அவனுடைய குடிசையைப் பகிர்ந்து கொள்ள கெஞ்சினான். அவன் அரிதானவனாக இருந்தான். தனிமையில் இருப்பது அவனுக்கு நோய்மையாக இருந்திருக்கலாம். நான் அவனை நிலக்கரி எரிப்பவனாக சொல்கிறேன், ஆனால் எனக்குத் தெரியாது. நான் அங்கு எங்கோ புகையைக் கண்டேன். புகை என்னிடமிருந்து எப்போதும் தப்புவதில்லை. ஒரு நீண்ட பேச்சு, முனகல்களுடன் நடந்தது. அவனிடம் என் நினைவில் இப்போது கூட இல்லாத என் ஊரின் பெயரையும் என்னுடைய ஊருக்கான வழியையும் கேட்க முடியவில்லை. அவனிடம் அருகிலிருக்கும் ஊரின் வழியைச் சொல்லும்படிக் கேட்டேன். எனக்குத் தேவையான சொற்களையும் உச்சரிப்புகளையும் கண்டுகொண்டேன். அவனுக்குத் தெரியவில்லை. அவன் காட்டில் பிறந்து அங்கேயே முழு வாழ்வையும் கழித்திருக்கலாம். அவனிடம் காட்டிலிருந்து வெளியேறும் அருகிலிருக்கும் வழியைக் கேட்டேன். நான் நன்றாக பேசும் அளவுக்கு மாறினேன். அவன் பதில் மிகவும் குழப்பமாக இருந்தது. நான் அவன் பேசுவதில் ஒரு சொல்லைக் கூடப் புரிந்துகொள்ளவில்லை அல்லது நான் பேசுவதில் ஒரு சொல்லைக் கூட அவன் புரிந்துகொள்ளவில்லை, அல்லது அவனுக்கு எதுவுமே தெரியவில்லை, அல்லது அவன் என்னை அருகில் வைத்துக் கொள்ள விரும்பியிருக்கலாம். நான் போக முனையும் போது அவன் என் சட்டையைப் பிடித்து இழுத்தான் அப்போது  அந்த நான்காவது கருதுகோளைத்தான் அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும் நான் அறிந்தேன். அதனால் நான் என் ஊன்றுகோலில் ஒன்றைத் தேர்ச்சியுடன் எடுத்து அவன் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டேன். அது அவனை அமைதி ஆக்கியது. முதிய அழுக்கான முட்டாள். நான் எழுந்து நடந்தேன்.

...

அது நள்ளிரவு. மழை ஜன்னலில் அடித்தது. நான் அமைதியாக இருக்கிறேன். எல்லோரும் தூங்குகிறார்கள். இருந்தாலும் நான் எழுந்து என் மேஜை அருகில் செல்கிறேன். என்னால் தூங்க முடியவில்லை. என் விளக்கு மென்மையான தொடர்ச்சியான ஒளியைப் பாய்ச்சுகிறது. அதை குறைத்தேன். அது காலை வரை எரியும். நான் ஆந்தைகள் கத்துவதைக் கேட்கிறேன். என்ன ஒரு போராட்டத்தின் ஓலம்! நான் அதை ஓரிடத்தில் நின்று கேட்கிறேன். என் மகன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் தூங்கட்டும். அவனும் தூங்கமுடியாத இரவுகள் வரும், அப்போது அவன் மேஜைக்கருகில் எழுந்து செல்வான். நான் மறக்கப்பட்டிருப்பேன்.

என் அறிக்கை நீளமானது. என்னால் முடிக்க முடியாமல் இருக்கலாம். என் பெயர் மோரான், ஜேக்கஸ். இந்தப் பெயரால்தான் நான் அறியப்பட்டிருக்கிறேன். என்னுடையது முடிந்துவிட்டது. என் மகனுடையது கூட முடிந்துவிட்டது. எல்லாமே சந்தேகமற. அவன் உண்மையான வாழ்க்கையின் இறுதியில் இருப்பதாக அவன் நினைக்கவேண்டும். அவன் அங்குதான் இருக்கிறான். என் பெயரைப் போல, அவன் பெயர் ஜேக்கஸ். இது குழப்பத்திற்குக் காரணமாக இருக்கக்கூடாது...

மோலாயைத் தேடச் சொல்லி எனக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட நாளை என்னால் மறக்க முடியாது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை...ஒரு மனிதன் தோட்டத்தில் நுழைந்து என்னை நோக்கி நடந்து வந்தான். அவனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனை எனக்கு நன்றாகத் தெரியும்...இந்த மனிதன் எனது அண்டை வீட்டுக்காரன் அல்ல, இவனுடனான எனது போக்குவரத்துகள் எல்லாமே வேலை சார்ந்தவை, அவன் மிகவும் தூரத்திலிருந்து பயணித்து என்னை தொல்லை செய்ய வந்திருந்தான்.

அன்னை மோலாய் அல்லது மோலோஸ் நான் முற்றிலும் அறியாதவர் அல்ல என்று தோன்றியது. ஆனால் அவருடைய மகனை விட குறைவாகத்தான் உயிரோடிருக்கிறார் என்று கடவுள் தூரத்திலிருந்து அறிந்திருப்பார்...

அவனைப் பற்றி முற்றுமாக அறிந்திருக்கவில்லை என்றாலும் எனக்கு மோலாயைத் தெரியும். ஏதோ சுருக்கமாக தெரிந்திருந்தது என்று நான் சொல்லலாம். நான் மோலாயைப் பற்றிய அறிய, ஒன்றுமே தெரியாத இடைவெளியைப் பற்றி அறியும் கவனத்தைக் கொடுத்திருக்கிறேன்.

நாங்கள் பல நாட்கள் தனிப்பாதைகளில் நடந்தோம். முக்கிய சாலைகளில் நான் தென்படுவதை விரும்பவில்லை...

கிளைகளைக் கொண்டு போக்கிடம் அமைப்பதை என் மகனுக்குக் கற்றுக் கொடுத்தேன். அவன் சாரணர் இயக்கத்தில் இருந்தும் அவனுக்கு எதுவும் தெரியவில்லை...

மாலையாகிவிட்டதால் நான் தீ மூட்டிவிட்டு அது பற்றிக் கொள்ளக் காத்திருந்த போது ஒரு குரல் ஒலிக்கக் கேட்டேன். எனக்கு மிக அருகில் ஓர் ஆணுடைய குரல் என்னை அதிரச் செய்தது...

நான் உன்னிடம் பேசிக் கொண்டிருப்பதை நீ கேட்கிறாயா?அவன் கேட்டான். நான் போக்கிடம் அருகில் செல்லும் போது என் காலை எடுத்து வைக்க முடியாமல் அவன் என் பாதையை மறித்தான். உன்னுடைய நாக்கு உன் தலையில் உள்ளதா? அவன் கேட்டான். உன்னை எனக்குத் தெரியாது என்றேன். நான் சிரித்தேன். நான் நகைச்சுவையான உள்நோக்கம் கொண்டிருக்கவேண்டாம் என்று நினைத்தேன்...அவன் என் அருகில் வந்தான். என் வழியிலிருந்து அகன்று விடு என்றேன். இப்போது சிரிப்பது அவன் முறை. நீ பதில் சொல்ல மறுக்கிறாய்? அவன் சொன்னான்...உனக்கு என்ன தெரியவேண்டும்?நான் கேட்டேன்...சுருக்கமாகச் சொல்வதென்றால் அந்த வழியாகக் கடந்து சென்ற கையில் தடி வைத்திருந்த ஒரு வயதான நபரை நான் பார்த்தேனா என்று கேட்டான். இல்லை என்றேன். இல்லை என்றால் என்ன பொருள்?என்றான். நான் யாரையும் பார்க்கவில்லை என்றேன்...அவன் என் மீது கையால் குத்தினான். அவனை என் வழியிலிருந்து அகன்றுவிடச் சொன்னதாக நினைவு. வெள்ளையான கை மூடியும் விரிந்தும் என்னை நோக்கி வந்ததை என்னால் இன்னும் கூட மறக்க முடியவில்லை. தன்னைத் தானே ஊக்கப்படுத்திக் கொண்டது போல. அதன் பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து, இல்லை அதிக நேரம் கழித்து அவன் நிலத்தின் மீது படர்ந்து கூழாய் வீழ்ந்திருந்தான்...

இப்போது நான் முடிக்க முயல்கிறேன்...

யூதி ஆணையிட்டது போல் நான் வீடு வந்துவிட்டேன்...
அவனுக்கு அறிக்கை தேவைப்பட்டது. அவனுக்கு அறிக்கை கிடைத்துவிடும்.

அது நள்ளிரவு. மழை ஜன்னலில் அடித்தது. அது நள்ளிரவு. மழை பெய்யவில்லை.

*********

கல்குதிரை 25வது இதழில் வெளியான மொழிபெயர்ப்பு