Saturday 28 March 2015

புரிகிற பாரதி --------பேயோன் ‏@ThePayon

புரிகிற பாரதி




பாரதியாரின் பாடல்கள் முழுவதையும் (குறைந்தது ஓன்றிரண்டு) படித்திருந்தும் அகராதியின் துணையின்றி அவர் பாடல்களைப் படிக்க முடியும் என்று நான் கருதியதில்லை. ஆனால் இந்தப் பாடலைப் பாருங்கள். பாரதியாரை நம் போன்ற சாமானிய வாசகர்கள் புரட்டிப் பார்த்தேயாக வேண்டும் போலிருக்கிறதே!

*

உண்மையின் பேர்தெய்வம் என்போம்--அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்;
உண்மைகள் வேதங்கள் என்போம்--பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத் தாண்டும் குரங்கும்--வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்ததனாலே--தெற்கில்
வந்து சமன்செய்யும் குட்டை முனியும்

நதியி னுள்ளேமுழு கிப்போய்--அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த--திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்--ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்--அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்--அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி--நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

ஸ்மிருதிகள்

பின்னும் (ஸ்)மிருதிகள் செய்தார்--அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை’
மன்னும் இயல்பின வல்ல--இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்.

காலத்திற் கேற்ற வகைகள்--அவ்வக்
காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய்--எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை.

சூத்திர னுக்கொரு நீதி--தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்--அது
சாத்திரம் அன்று, சதியென்று கண்டோம்.

மேற்குலத்தார் எவர்?
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.