Tuesday 2 July 2019

July 01, 2019
ரகசியத்தின் அரூப நிழல்கள்.
லஷ்மி சரவணகுமார்.
https://iruthisuvaasam.blogspot.com/2019/07/blog-post.html?fbclid=IwAR0gJ7BSEQjxBm0BSUYnCutwZmLvCWN9nl3lKXlu-Ymp5nzPiA17BMhlhoc
ஒரு நிமிடம் பொறுங்கள்.
இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது பக்கத்திலோ அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால் பதட்டப்படாமல் பாதியில் நிறுத்தாமல் முழுவதும் வாசிக்க முயற்சி செய்யுங்கள். அவன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது தனிமனித உடல் இச்சைகளை அல்ல. காமத்தின் சுவிசேஷத்தை.



Story of a male whore…..
Whore? இந்த வார்த்தை எத்தனை அபத்தமானது தெரியுமா? உடல் என்பது பிரார்த்தனைக்கானது, சமயங்களில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிரார்த்திக்க, இன்னும் சில சமயங்களில் ஒரு ஆணும் சில பெண்களும் அல்லது சில ஆண்களும் சில பெண்களுமென தேவை எதுவோ அதுவாக கொண்டாடுவது. அதிகாரத்தின் வழியாய் தனிமனித விருப்பங்களை ஒடுக்க நினைக்கும் சர்வாதிகார மனம் கொண்டவர்களை வேண்டுமானால் இப்படி சொல்லலாம், whore.



அந்த இணையத் தளத்தில் முகம் மட்டும் மறைக்கப்பட்ட இவன் படத்திற்குக் கீழ்
Hi I am foot fetish slave. Looking for a mistress who wants me to be her slave dog. This relation is full of submission and domination with privacy and 100% safety.
My services are
Foot worship
Foot licking
Toe nails eating
Femdom
And etc….. you can make me your slave dog. You can use me In anyway u want.
Pinky.

இணையத்தின் வழியாய் எல்லாவற்றையும் நுகரப் பழகியிருக்கும் சமூகத்தில் உடல் தேவதைகளின் புதிய ருசிகளை அறிமுகப்படுத்தும் ஏராளமான இணையதளங்களில் வெவ்வேறான அடையாளத்தோடு அவன் தன்னை பதிவு செய்திருந்தான். தனது சேவைக்கென சின்னஞ்சிறிய தொகையை மட்டுமே பெற்றுக்கொள்ளும் அவன் அதை கூட்டுப்பிரார்த்தனை என்றுதான் எப்போதும் சொல்வது வழக்கம்.
1
இருளின் ரகசிய பாதைகளுக்குப் பழகின அவன் வெளிச்சத்தின் அவசியமின்றி கதவு திறந்து வெளியேறியபோது அப்பார்ட்மெண்ட்டில் அந்த வீட்டைத் தவிர்த்து எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். நிசப்தம் அப்பெருநகரின் ரகசிய மனிதர்களுக்கான அந்தரங்க பார்வையாளனாய் அடர்ந்திருந்தது. சுனிதா இவனுக்கு முன்பதிவு செய்துவைத்திருந்த வாகனம் நின்ற இடத்தை கவனித்தான். கைவிடப்பட்டவனுக்கான தேவதூதன் போல் அமைதியாய் தெருவிளக்கின் மஞ்சளான வெளிச்சத்திற்குள் நின்றிருந்தது. பாதி உறக்கத்தோடு புன்னகைத்த ஓட்டுனருக்கு இவன் முகத்திலிருந்த அசாத்தியமான மலர்ச்சி ஆச்சர்யமளித்திருக்கக் கூடும். முன்சீட்டில் அமர்ந்து கொண்டதும் கண்கள் அனிச்சையாய் அவள் வீட்டு ஜன்னலுக்கு செல்ல சுனிதா அந்த விடையனுப்புதலுக்காக காத்திருப்பதைப் பார்த்தான். மெலிதாக சிரித்தான். அவள் சிரிப்பதன் தடங்களை தெளிவாகக் காண முடிந்தது. வெளிச்சத்தில் எத்தனை அருகில் பார்த்தாலும் தூரத்தில் சிரிக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தலென்பது மகோன்னதமான விஷயம், சில இரவுகளை அர்த்தமாக்குபவை இப்படியான புன்னகைதான். இன்னும் சில மணி நேரங்களில் அவளின் கணவன் ஊரிலிருந்து திரும்பக் கூடுமென்பதால் இத்தனை நேரம் வீட்டில் இவன் இருந்ததற்கான தடயங்கள் அவ்வளவையும் அவள் இப்பொழுதே சரிசெய்தாக வேண்டும். வண்டி கிளம்பின சில நொடிகளில் இரவு முழுக்க விழித்திருந்த அசதியில் வினோத் கண்களை மூடித் தூங்கினான்.
நரம்புகள் சுகித்தலுக்குப் பிறகான புத்தெழுச்சியில் தன்னருகில் படுத்திருந்தவளை சீண்டி விளையாடத் தூண்டியது. வியர்த்து கொஞ்சமாய் உப்பேறிப்போன சுனிதாவின் நடு முதுகிலிருந்து கழுத்து வரையிலும் பின் கழுத்திலிருந்து இடைக்குக் கீழ்ப்பகுதி வரையிலுமாய் நாவால் முத்தமிட்டான். நான்காவது புணர்ச்சிக்குத் தன்னை தூண்டுகிறானென்பதைப் புரிந்து கொண்டவள் சுதாரித்து அதிலிருந்து துண்டித்துக் கொண்டாள். “போதும்டா ப்ளீஸ்..” அவள் சொற்களிலிருந்த களைப்பையும் அச்சத்தையும் பொறுக்காமல் ஏமாற்றத்தோடு அவன் ஒதுங்கிப் படுத்தான். இன்னும் சில நிமிடங்களில் இங்கிருந்து கிளம்ப வேண்டுமென்கிற யதார்த்தம் உரைக்க இரவு விளக்கின் வெளிச்சத்தில் தனது உடைகளைத் தேடி எடுத்தான். கழிவறையிலிருந்து வெளியேறியவள் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள். அவனை விடவும் இரண்டு இஞ்ச் அதிக உயரமான அவள் மூச்சுக் காற்றில் இன்னும் விஸ்கியின் நறுமணம் மிச்சமிருந்தது. ஆடையில்லாத இரண்டு உடல்களிலும் கூடுதலுக்கான சூடு பெருகிவழிய அவன் வலது தோள்ப்பட்டையில் பற்தடங்கள் பதியும்படி கடித்தாள். திரும்பி அவள் இடையோடு சேர்த்தணைத்து மூர்க்கமாக முத்தமிட்டான். மொபைலில் வைத்திருந்த அலாரம் அவர்கள் இருவரும் பிரிவதற்கான நேரத்தை நினைவுறுத்தி அலற சிரித்தபடி அவனை விலக்கினாள். உடைகளை அணிந்து கொண்டு கிளம்பியவனிடம் என்றைக்குமில்லாமல் இன்று சில ஆயிரங்களைக் கொடுத்தாள். “நான் எல்லார் கிட்டயும் பணம் வாங்கறதில்ல சுனிதா.. நம்மளுக்குள்ள இதென்ன புதுப் பழக்கம்?” தவிர்க்க விரும்பும் சில உணர்ச்சிகளை அவன் முன்னால் அடையாளங் காட்டிக் கொள்ளாமல் “சொல்லிப் புரிய வைக்க முடியாது வினோத், எனக்கு உன்னோட அன்பு வேணும். உடல் வேணும். ஆனா காதல் என்னய தொந்தரவு செய்து. உன்ன எனக்கானவனா வெச்சுக்கனும்னு கேக்கத் தோணுது. அபத்தமா இருக்குல்ல. நாம எவ்வளவோ பேசி இருக்கோம். எல்லா சந்தோசங்களும் தற்காலிகமானது நம் உடல்களைத் தவிர்த்துன்னு. ஆனா இப்போல்லாம் ஒவ்வொரு முறையும் உன்னோட இருந்துட்டு திரும்பவும் நீ எப்ப வருவன்னு காத்திருக்கிறது அவஸ்தையா இருக்கு. அதான்..” பதில் சொல்ல முடியாமல் வினோத் அவள் உடலெங்கும் தன் கண்களை அலையவிட்டான். அவனது கண்களை எதிர்கொள்ள முடியாமல் எழுந்து போய் விளக்கை அணைத்தாள். சமீபமாய் அவள் கூடுதல் அன்போடு செய்யும் ஒவ்வொன்றும் இருவருக்குமான ப்ரியத்தின் நெருக்கத்தில் தான் என்று நினைத்திருந்தான். ஆனால் அப்படி இல்லை. சிலமுறை இவனது உடலெங்கும் தயிரால் பூசி ஊற வைத்து நிதானமாக அவள் குளிப்பாட்டுகையில் ஒருவித பிரார்த்தனையை உணர்ந்தான். தன்னையும் தனது உடலையும் அவள் என்னவாகக் கொண்டாடுகிறாள் என்பது அச்சமாக இருந்தாலும் அந்தரங்கமாய் அந்த அன்பு அவனை அற்புதமானவனென உணரவைத்தது. எப்போதும் பெண்கள் சூழ வாழும் இந்த சில வருடங்களில் யாரோவொரு பெண் இப்படியானதொரு அற்புதத்தை செய்கிறாள் தான். ஆனால் அற்புதங்கள் எந்தவொரு மனிதனுக்கும் வாழ்க்கை முழுவதுற்குமாக விதிக்கப்பட்டதில்லை தானே.
பெண்கள் இல்லாத ஒரு நாள் எத்தனை துயரமானதென்பதை வாழ்வை பெண்களோடு மட்டுமே கழிக்க விரும்பி அதற்காகவே தன்னை மாற்றிக் கொண்ட மனிதன் மட்டுமே அறிவான். வினோத் தனக்கு இந்த பிரபஞ்சம் எத்தனை குழப்பமானதென்கிற அச்சம் வருகிற போதெல்லாம் தற்காலிகமாகவேனும் எல்லாவித அச்சங்களில் இருந்தும் மீள பெண்களிடம் தான் தஞ்சமடைகிறான். ஒரு பெண்ணோடு இருக்கும் பொழுதில் தான் அதீத பாதுகாப்பில் இருக்கும் உணர்வு ஏற்படும். நிகழ் காலமென்னும் விடுவிக்க முடியாத புதிரை உடலின் துணையோடு கடந்து செல்லும் ஒரு மனிதன் கையில் எதுவுமில்லாமல் போனாலும் எத்தனை சுதந்திரமானவன் என்பதை அவனோடு பயணிக்கும் பெண்கள் மட்டுமே அறிவார்கள். வினோத் நம்பிக்கைகளையும் சொற்களையும் அற்புதங்களாய் நம்புகிறவன். நீதிக் கதைகளிடம் வாழ்வை நம்பி ஒப்பிடைக்கும் கடைசித் தலைமுறையின் குழந்தை. வாழ்வின் நீதி அதை பிசிறில்லாமல் அனுபவித்து வாழ்வது மட்டுந்தான்.
பேசவும் எழுதவும் பழகிய வயதில் திருப்பரங்குன்றம் சைவப் பள்ளியில் ஆன்மீகக் கல்விக்காக சேர்க்கப்பட்டவன் அந்த இடத்தில் பிடிப்பில்லாமலேயே இருந்தான். அறிவின் நிமித்தமாக மனித சமூகத்தின் மீது செலுத்தப்படும் எல்லாவிதமான வன்முறைகளையும் வெவ்வேறு வடிவங்களில் அந்தக் கல்வி அவனுக்கு சொல்லிக் கொடுத்தது. அதிகாலை குளியலுக்குப் பிறகு வகுப்பு, பிறகு சிறிது கோவில் மடத்து வேலை. மீண்டும் வகுப்பு, கொஞ்சம் உணவு பின் கோவில் மடப்பள்ளி வேலை. சந்தோசத்தின் சிறகுகள் ஆகாயம் முழுக்க விரிந்து பறக்கத் தூண்டும் வயதில் தன்னையொத்த சிறுவர்கள் குன்றத்து வீதிகளில் குதூகலமாய் சுற்றி வருகையில் தான் மட்டும் ஏன் இப்படி துன்புறவேண்டுமென்கிற தவிப்பு அவனுக்கு.
கடவுளை அடைவதற்கான பிரார்த்தனைகள் மனிதனின் ஆதி நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருந்ததை இந்த முட்டாள்த்தனமான வழிபாடுகள் அவனுக்குப் புரிய வைத்தன. ஒரு பிற்பகல் நடை சாத்திய பிறகு குருகுலத்திலிருந்த சீடன் ஒருவன் தெப்பகுளத்தில் அந்த கசகசப்பான வெயில் வேளையில் தனியாய் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணின் ஒற்றை மார்பை பிடித்து கசக்கி விட்டு ஓடிவந்துவிட்டான். அவள் யாரிடமும் புகார் அளிக்கவில்லை. திட்டவில்லை. பல நாட்கள் தூரத்திலிருந்து தன்னுடலைக் கவனித்து ஏங்கிய அவனால் அதிகபட்சமாய் செய்ய முடிந்தது இவ்வளவுதானா என அவனுக்காக பரிதாபப்பட்டாள். அடுத்த சில நாட்கள் அவன் வரவில்லை. பின்னொரு நாள் வந்தபோது அவள் முன்னை விடவும் தன் உடலின் பெரும்பகுதி அவனுக்குத் தெரியும்படி துணி துவைத்துக் கொண்டிருந்தாள். தனது எந்தவொரு சைகையும் அவனை அச்சப்படுத்திவிடக் கூடுமென்கிற எச்சரிக்கையில் முடிந்தவரை இயல்பாக இருந்தாள். உடலெங்கும் வியர்த்து பிசுபிசுக்க தன் காவி வேஷ்டியை விலக்கி மண்டபத்தின் தூண் மறைவில் சுயமைதுனம் செய்து கொள்ளத் துவங்கினான். மனதெங்கும் கொதித்த தகிப்பு கைகளை ஆக்ரோஷமாக இயங்கச் செய்தது. சில நிமிடங்களில் தன் தொடைகளின் வழி ஒரு பெண்ணின் கை நழுவி வருவதை உணர்ந்து பதட்டமானான். அவள் கையில் இன்னும் சோப்பின் நுரைகூட விலகியிருக்கவில்லை. அவனது மூர்க்கத்தை அடக்கி நிதானமாக்கி மெதுவாக தன் கைகளால் இயக்கினாள். பிரபஞ்சமே அவன் உடலோடு கலந்து போன பூரிப்பில் கண் மூடி ரசித்தவன் மெதுவாக அவள் உடலைத் தீண்ட கைகளை நீட்ட ஒரேயொரு விரல் படுவதற்கு முன்பாகவே ஸ்கலிதம் கண்டான்.
அன்றைய தினம் அவன் மீது விசாரணை நடத்தப்பட்டதோடு மடத்தை விட்டும் நீக்கப்பட்டான். எது ஒழுக்கமென புரிந்து கொள்ள முடியாத முதியவர்கள் உடலையும் இச்சையையும் பாவமென்றார்கள். இச்சைகளுக்கு இடமில்லாத இந்த வாழ்க்கையில் பிரார்த்தனைகளும் வழிபாடும் எதை நமக்கு கொண்டு வந்து தரப்போகிறது. கடவுளின் பெயரால் உடலைப் பாவமென நிர்ப்பந்தித்த அந்த கல்விமுறை வினோத்திற்கு கூடுதாலன நெருக்கடியாய் இருந்தது. பெருஞ்சிறகுகள் முளைத்து அந்த சின்னஞ்சிறிய கூண்டுக்குள்ளிருந்து பறந்து போக விரும்பியவனை நீண்ட கால நோய் ஆசிர்வதித்தது. மீண்டும் வீடு வந்த போது தான் பொதுசமூகத்தின் நம்பிக்கைகளுக்கு எதிராக வாழ விதிக்கப்பட்டவன் என்பதைப் புரிந்து கொண்டான். வீட்டிலிருந்தவர்கள் அவனிடம் எதிர்பார்த்த எதையும் அவன் செய்யவில்லை. அப்பா வீட்டில் நாள்தோறும் பூசைகளை செய்யச் சொன்னதற்கு “வழிபாடென்பது ஒரு மனிதன் தனக்குத் தானே அந்தரங்கமாக செய்து கொள்வது அப்பா. யாரும் யாருக்காகவும் பிரார்த்திக்க முடியாது. சொல்லப் போனால் மனிதன் தனக்காக பிரார்த்திப்பதே கூட முட்டாள்த்தனமானதுதான்.” என விரக்தியாய் சொன்னான். யாருடைய விருப்பங்களுக்காகவும் அவன் வாழப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட குடும்பத்தினர் தங்களது உணவை அனாவசியமாய் பங்குபோட்டுக் கொள்ளும் வேற்று மனிதனாகவே அவனைப் பார்த்தனர். கல்விக்கூடம் கற்றுக் கொடுத்ததைக் கொண்டு தன் வாழ்வை இதற்கு மேல் பார்த்துக் கொள்ள முடியுமென்கிற நம்பிக்கை வந்த நாளில் கொஞ்சம் பழைய உருப்படிகளோடு சொந்த ஊரை என்றெறைக்குமாய் துறந்தான்.
2
ஹோட்டல் கலிஃபோர்னியா இரண்டாவது முறை அந்த பாரில் ஒலித்தபோது அங்கிருந்த வாடிகையாளர்கள் எரிச்சலானார்கள். அந்தக் கூட்டத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒருவனாய் தனித்துக் குடித்துக் கொண்டிருந்த அவனது அழைப்பேசி ரகசியமானதொரு அழைப்பிற்காய் காத்திருந்தது. வோட்காவின் நறுமணத்தோடு முத்தமிடும் அவள் காத்திருக்கச் சொல்லியிருக்கிறாள். எப்போது வேண்டுமானாலும் அழைக்கக் கூடும். ஒரு பெண்ணின் அழைப்பிற்கான காத்திருப்பில் நிதானமாய் குடிப்பது சவாலான காரியம். மயங்கும் போதையில் ஒரு பெண்ணை நெருங்கும் போது பலசமயம் இவனுக்கு அழவே தோன்றும். யாராவது ஒருத்தி தன்னை சுருட்டி தனது சின்னஞ்சிறிய கருப்பைக்குள் என்றென்றைக்குமாய் வைத்துக் கொள்ள மாட்டாளாவென தவிப்பாய் இருக்கும். ஒரு பெண்ணின் உடலுக்குள் யுகம் யுகமாய் பிறக்காத சிசுவாய் இருந்துவிடுதல் எத்தனை ஆசிர்வதமானது. கடவுளிடம் கேட்பதற்கு எப்போதுமிருக்கும் ஒரேயொரு கோரிக்கை அதுதான், ஒருபோதும் அவர் அவன் மீது கருணை கொள்ளப்போவதில்லை என்பதால் அபூர்வமாய் போதை முற்றும் நாட்களில் தனக்கு விருப்பமான யாராவதொரு பெண்ணிடம் சொல்வான். கருப்பைகள் குழந்தைகளுக்கானவை மட்டுமே அதில் எந்தவொரு காதலனுக்கும் இடமில்லை என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் அவனின் காதலிகள் கருணையே இன்றி நிராகரிப்பார்கள். அவன் ஒரு சிசுவை கேட்கவில்லை, தானே சிசுவாக வேண்டுமென்னும் அச்சத்திற்குரிய விருப்பம் கொண்டிருக்கிறான். அதனாலேயே பெரும்பாலான பெண்கள் அவனோடு உடலை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். சுனிதா எப்போதும் சொல்வாள். “நான் புரிந்து கொள்ள விரும்பும் உண்மைக்கும் நீ உணர்த்த விரும்பும் உண்மைக்கும் இடையிலான மிக நீண்ட தூரத்தை ஒவ்வொரு முறையும் ஈடு செய்து கடக்க வைப்பது நாம் பகிர்ந்து கொள்ளும் சின்னஞ்சிறு பொய்கள் தான்.”
இப்பொழுதும் மனம் சுனிதாவைக் குறித்த யோசனையில் தான் லயித்திருந்தது. தனக்கானவள் என அர்த்தமேயில்லாமல் நினைத்து சிரித்துக் கொண்டான். இந்த எண்ணம் தொடர்ந்தால் இந்த இரவு வீணாகிவிடுமென முடிவுசெய்து மதுக்கூடத்திலிருந்து வெளியேறி மூன்று சக்கர வாகனமொன்றை அமர்த்திக் கொண்டான். தன் உடலில் துர்நாற்றமெதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளத் தவறவில்லை. ”ஓகே. நான் ரெடி சீக்கிரம் வந்துடு.” அர்ச்சனாவின் உரையாடல் எப்போதும் சிக்கனமானது. ஒவ்வொருமுறையும் தன்னை இப்படி காத்திருக்க சொன்னதற்காய் அவள் மன்னிப்பு கூட கேட்பதில்லை. சில மாதங்களுக்கு முன் அவளை ஒருதலையாய் காதலித்தான், ஆனால் சொல்ல அச்சம். அவளைப் பொறுத்தவரை அவளுக்குத் தேவை தனது ஆணைகளுக்குக் கீழ்ப்படியும் ஒருவன். இச்சையை இரண்டாம் பட்சமாய் நினைக்குமவள் அவளின் தேவைகள் ஒவ்வொரு முறையும் வினோதமானது.
பிரபல ஆங்கில தினசரி ஒன்றின் தலைமைப் பொறுப்பிலிருந்த அர்ச்சனா வதைபடுதலின் வழியாய் உடலைக் கொண்டாடும் புதிய உலகை அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். புதிய குற்றங்களை சாகசங்களைத் தொடர்ந்து காட்சிப்படுத்துவதை வெற்றியின் அடையாளமாய்க் கண்டு பழகியதால் அந்த ருசி வாழ்விற்கும் தேவையாய் இருந்தது. ரப்பர் பொம்மைகள், டில்டோக்கள் எல்லாம் காலவதியாகிப் போன இந்தக் காலத்தில் உலக யுத்தத்தின் மிச்ச வன்முறைகளை பொருளாதார வீழ்ச்சிகுப் பிறகான வளரும் நாடுகளின் இழிவுகளை எல்லாம் வதைப்பதின் வழியாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இந்த தேசத்தின் அரசியல் குழப்பங்கள், தனி மனித துயரங்கள், அடுத்த நாளுக்கான தலைப்பு செய்தி, அவ்வளவும் அம்மணமான பின் மறந்து போவது ஒருவித ஆச்சர்யம் தான். உடலென்பது கேளிக்கை, துயரத்தின் முடிக்கப்பெறாத ஓவியம், தனிமனிதன் எப்போதும் ஓய்ந்து போகாத சுவாரஸ்யங்களைக் கொண்டிருக்கும் விளையாட்டு.

முதல் சந்திப்பின் போது எடுத்த மாத்திரத்தில் இவனைத் தனது படுக்கையறைக்குள் அனுமதிக்கவில்லை. பதிமூன்றாவது மாடியிலிருந்த அவளது ஃப்ளாட்டின் ஹாலில் சுத்தமான தரையை மூடி மறைத்திருந்த கார்ப்பெட்டில் ஆங்காங்கே வைக்கப்பட்ட போன்சாய் செடிகளைப் பார்த்தபடி நின்றவனுக்கு அருந்த ஆரஞ்சு பழச்சாறைக் கொடுத்தாள். தேவாலயத்திற்குச் செல்லும் ஒருவனிடம் இருக்கும் பணிவு அவனிடம். “கேஷ்வலா இருக்கலாம் வினோத்… வினோத் தான உண்மையான பேர்…” அவனுக்கு இருக்கையைக் காட்டிவிட்டு எதிரில் அமர்ந்தாள். லீவைஸ் ஷார்ட்ஸும், ஸ்லீவ் லெஸ் டாப்ஸும் அணிந்த முப்பத்தைந்தை தாண்டிய அவளது கண் கண்ணாடி மியா கலிஃபாவை நினைவு படுத்த, மென்மையாய் சிரித்தான். “என்ன எதோ சொல்ல வர்ற மாதிரி தெரியுது…” “ஸ்பெக்ஸ் மியாவ நினைவு படுத்துது… அதான் சிரிச்சேன்..” தனக்கு அருக்கிலிருந்த சின்ன தலையனையை எடுத்து அவன் மீது எரிந்தவள் “ஸ்பெக்ஸ் ஃபெட்டிஷ்” என சிரித்தாள். நீண்ட நேர உரையாடலுக்குப் பின் படுக்கையறைக்குள் நுழைந்தவளை பின்னாலிருந்து அணைத்து முத்தமிட்டான். மெல்ல விலக்கியவள் “நான் உன்ன அதுக்கு கூப்டல… கொஞ்சம் வெய்ட் பண்ணு…” தனது கட்டிலுக்கு கீழிருந்து ஒரு சிவப்பு நிற வைல்ட்க்ராஃப்ட் பயணப்பையை எடுத்தாள். படுக்கையறையில் கண்களை உறுத்தாத சிவப்பு நிற வெளிச்சம். கட்டிலின் தலை மாட்டில் மட்டும் பொருத்தமே இல்லாமல் இருபுறமும் நீலநிறத்தில் இரண்டு சின்னஞ்சிறிய விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. சின்னதும் பெரியதுமாய் சில flodgers, vampire gloves, clamps, ball gog என அவன் இதுவரை பார்த்திராத பொருட்களை மெத்தையின் மீது வைத்தவள் திரும்பி இவனைப் பார்க்க, “BDSM?” என சந்தேகமாகக் கேட்டான். “ம்ம்.. இதுக்கு முன்ன ட்ரை பண்ணி இருக்கியா?” ஆர்வமாகக் கேட்டாள். “இல்ல கேள்விப்பட்டிருக்கேன். Fifty shades of gray படம் பாத்திருக்கேன்..” தயக்கத்தோடு சொன்னான். “shit… அந்தப் படம் ஒரு நான்சென்ஸ்… நான் சொல்லித் தர்றேன். ஆனா எப்பவாச்சும் நேரங் கெடச்சா ரோலாண்ட் ரெப்பரோட படம் பாரு…” மெதுவாக தனது உடைகளைக் களைந்தபடியே சொன்னாள்.
அந்த வீட்டில் சிவப்பு நிறம் ஆக்ரமித்திருந்ததை மெத்தையில் படுத்திருக்கும் போதுதான் கவனித்தான். ஹாலில் இருந்த ஷோஃபா, தரை விரிப்பு, இந்த மிருதுவான படுக்கையின் படுக்கை விரிப்பு, இவன் கைகளை கட்டிலின் தலை பக்க விளிம்போடு கட்டியிருந்த மெல்லிய துணி அவ்வளவும். உள்ளாடைகளோடு அவனை நெருங்கியவள் கழுத்திலிருந்து முத்தமிடத் துவங்க “நீங்க சேடிஸ்ட்டா…?” குனிந்து அவளைப் பார்க்க முடியாமல் கேட்டான். “ஒரு வகைல நாம எல்லோருமே சேடிஸ்ட்தான்… சேடிஸம் அருவருப்பு இல்ல. ஒரு ஆர்ட். துரதிர்ஸ்டவசமா இங்க பலர் அத மேலோட்டமா புரிஞ்சுக்கிட்டு இருக்காங்க” அவன் கண்களைப் பார்த்து பதில் சொல்லியபடி படுக்கையின் ஓரத்திலிருந்த ரப்பர் paddle ஐ எடுத்து அவன் பின்புறத்தில் அடித்தாள். முதல் முறையாக உடலின் அத்தனை நரம்புகளும் சடாரென விழித்தெழுந்தது அவனுக்குள். “இந்த கேம் ல முதல் விதி… நான் சொல்லாம நீ பேசக் கூடாது…” இன்னொரு முறை அடித்தாள். அவனுக்கு வலியில் கண்களில் இருந்து தானாக நீர் கசிந்தாலும் புதுவிதமான ஒரு பரவசத்தில் சரியெனத் தலையாட்டினான். இறுகக் கட்டப்பட்ட கைகளில் இப்போது வலியில்லை, மரங்களடர்ந்த இருண்ட பள்ளத்தாக்கில் தன்னந்தனியாய் தியானிக்கையில் மட்டுமே பெற முடிந்த அமைதி அவன் மனமெங்கும். பெருங்காற்றில் அசைவுறும் மூங்கில் வனமாய் அவளின் அசைவுகள் ஒவ்வொன்றின் போதும் இரைச்சலோடு சுவாசித்தான். யாருமே கண்டறியாத உடலின் ரகசிய இசையை அவள் தீர தீர அந்த இரவில் மீட்டிக் கொண்டிருந்தாள். முதல் முறையான விளையாட்டென்பதால் அவன் வாங்கிய தண்டனைகளின் எண்ணிக்கை அதிகமானதாய் இருந்தது, விரகத்தின் சுவாரஸ்யத்தை அவனது ஒவ்வொரு வலியிலும் அனுபவித்தவள் தப்பித்தலுக்காக துடித்துக் கொண்டிருந்த அவனது கால் தொடைகளில் முத்தமிட்டபின் கைகளை அவிழ்த்து விட்டாள். குழந்தையாகி அவள் பாதத்தைக் கட்டிக் கொண்டான். வலியென்று சொல்ல முடியாத அவனின் கண்ணீர் அவளது பாதங்களை நனைத்தது. அந்த இரவு விடிந்தபோது ஜன்னல் வெளியே தெரிந்த உலகை புதிதாகப் பிறந்த குழந்தையின் கண்களோடு பார்த்தான்.
இன்று அவனை அழைக்கும் போதே தெளிவாக சொல்லிவிட்டாள் “உன்னோட இன்னொருத்தரும் இருப்பாரு. நாம மூணு பேர். உனக்கு ஓகேவா?” இதற்குமுன் ஒரு ஆணின் முன்னால் நிர்வாணமாய் இருந்திராத வினோத்திற்கு சங்கடமாக இருந்தாலும் அவளென்பதால் மறுக்காமல் சம்மதித்தான். வழமையாக தரும் பணத்தை விடவும் இரு மடங்கு அதிகமாக தருவதாக வாக்களித்தபோது தன்னை இத்தனைப் பொருட்படுத்துவதற்காக சந்தோசப்பட்டான். வதைபடும் கனங்களில் ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை அவளிடம் கற்றுக் கொண்டாலும் அதன் அதிகபட்ச சாத்தியங்களை வேறு சில பெண்களிடம்தான் அவனால் பரீட்சித்துப் பார்க்க முடிந்தது. பெண்கள் தனித்துவமானவர்கள், இருளுக்கும் ரகசியத்திற்குமான அந்தரங்கத்தைப் போல் அற்புதமானவர்கள். அந்த புதிய மனிதன் இவனை விடவும் உயரமாகவும், வலிமையானவனாகவும் இருந்த போதும் மிதமான ஒரு பெண்மைத்தனம் அவனது பாவனைகளில் வெளிப்பட்டது.
படுக்கையின் இரண்டு பக்கங்களில் எதிரெதிராய் இருவரும் கைகள் கட்டப்பட்டு படுத்திருந்தனர். அர்ச்சனா மிக நிதானமாகவே துவங்கினாள். அடையாளங்காணமுடியாத நெருக்கடி அவளின் முகத்தில். பங்குச் சந்தையில் அவளுக்கு பெருத்த நஷ்டமாயிருக்கலாம், சரியான தலைப்பு செய்தி கிடைக்காத சங்கடமாயிருக்கலாம், குறைந்தபட்சம் அவளது சமையலறைக்குள் கரப்பான் பூச்சிகள் புகுந்து விட்ட எரிச்சலாவது இருக்க வேண்டும். வினோத் தாபத்தை மீறி “என்னாச்சு அர்ச்சனா? ஏன் இவ்ளோ மூர்க்கம்?” அவளது காதுகளில் முனகினான். “த்தா.. எத்தனவாட்டி டா உனக்கு சொல்லிக் குடுப்பேன். பாடு…” paddle ஆல் மூர்க்கமாக அடித்தாள். இதுவரையில்லாத வன்முறை அது. அவள் ஒருபோதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை. கைகளை விடுவித்துக் கொண்டு எழுந்து செல்ல விரும்பியவனின் பின்புறத்தில் முன்னை விடவும் மூர்க்கமாக அடிக்க, வலியில் சுருண்டு படுத்தான். அருகிலிருந்த புதிய மனிதனின் கைகளை அவிழ்த்துவிட்டவள் “அவனுக்கு blow job பண்ணிவிடு..” ஆவேசமாக உத்தரவிட்டபின் அங்கிருந்து வெளியேறி மதுவோடு திரும்பினாள். அந்த அறையிலிருந்த 50 இஞ்ச் சோனி டிவி ஒளிர வினோத்தும் இன்னொருவனும் நடப்பது புரியாமல் பார்த்தனர். சில நொடிகளுக்குப்பின் பாதியிலிருந்து ஒரு கலவரக் காட்சி ஓடத் துவங்கியது. சிரியாவின் மீது வெடித்த குண்டுகளும் அதனால் ரத்தக் காயமுற்று உடல் பாகங்களை இழந்தவர்களின் கதறலும் குரூரமான காட்சித் துண்டுகளாய் ஓட இவர்கள் இருவரும் அச்சத்தோடு பார்த்தனர். Paddle ஆல் அந்த புதிய மனிதனை ஓங்கி அடித்தவள் “நான் உன்ன நிறுத்த சொன்னனா நாயே..” அலறினாள். அவன் கட்டளையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆவேசமாகத் துவங்கினான்… மதுவருந்தியபடியே தொலைக்காட்சியையும் இவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவள் நெருங்கி வந்து இருவரையும் முத்தமிட்டாள் “நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஸ்லேவ்ஸ்.. என்னோட நாய்ங்க.. அப்டித்தான…” இருவரும் ஒரே நேரத்தில் “எஸ் கமாண்டர்…” என்றனர். இருவரையும் அடித்தாள். வினோதிற்கு அந்தக் கனம் அருவருப்பா, காமமா என எதுவும் விளங்காமல் இதுவெல்லாம் எப்போது முடியுமென மனம் பரபரத்தது. தனது உடைகளைக் களைந்து இருவரையும் நெருங்கிய அர்ச்சனா வினோத்தின் மேல் படர்ந்தாள். “என்னோட ஸ்லேவ், என்னோட ஏஞ்சல், என்னோட தேவதூதன் எல்லாம்டா நீ…” வேறு யாரும் ஒருபோதும் தரமுடியாத காதலோடு அவனோடு கூட இன்னொருவன் தனது கட்டளைக்காக காத்திருந்தபடி ஒதுங்கி நின்றான். வினோத் இந்த புணர்ச்சிக்காகத்தான் இந்த பிறப்போ என கலங்கி மயங்க அர்ச்சனா திரும்பி இன்னொருவனிடம் “beat me..” என கட்டளையிட்டாள். அந்த மனிதன் சீரான இடைவெளியில் அவளை அடிக்கத் துவங்க தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த யுத்தக் காட்சிகள் முடிந்து ஓஷோவின் தந்த்ரா இசை மெதுவாக ஒலிக்கத் துவங்கியது. அர்ச்சனா களைத்து வினோத்தின் மேல் படுத்து உறங்கினாள். அவனால் அவளை விலக்கவே முடியவில்லை.
காலை அந்த புதிய மனிதன் கிளம்பிச் சென்றபின் இருவருக்குமான உணவு தயாரித்தாள். உடலெங்கும் ரணமும் களிப்பும் சேர்ந்த களைப்பில் வினோத் அவளது கவுச்சில் படுத்திருந்தான். அவன் முதுகில் முத்தமிட்டபோது ஒருவித காதலை அவளிடம் உணர்ந்தான். “பேசாம என் கூடயே இருந்திடேண்டா…” இந்த வார்த்தைகளை அவளிடம் எதிர்பார்த்திருக்கவில்லை. சிரித்தான். “இல்ல அர்ச்சனா, சரியா வராது. நமக்கான வெளி தனித்தனியானது. பக்கத்துலயே இருக்கறது நம்ம ரெண்டு பேருக்கும் நல்லதில்ல.” அவளை தன் உடலெங்கும் முத்தமிட அனுமதித்தான். ”உன்ன மாதிரி பசங்க ஒரு கிஃப்ட் டா… வெளில சாதாரணமா ஆம்பளத் தேவிடியான்னு சொல்லிருவானுங்க. ஆனா பெண்களோட உலகத்துல ஒருத்தன் குழப்பமே இல்லாம வாழ்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? யாருக்காகவும் லைஃப் ஸ்டைல மாத்திக்காத… எனக்கு ஆசயாத்தான் இருக்கு உன்னய என்னோடயே வெச்சுக்க… நீதான் முடியாதுங்கறியே..” கடைசியாக ஒருமுறை ஆழமாக முத்தமிட்டு எழுந்தாள். இரவுகளில் அவளிடமிருக்கும் மூர்க்கமெல்லாம் தீர்ந்து உறங்கியெழுந்த குழந்தையாய்ப் பார்த்தான்.
3
வினோத்தின் வேதாகமத்தில் பொருந்தாத ஓர் பகுதி.
சுப்புலஷ்மியை உங்களில் பலரும் நேசிக்கக் கூடும். அவள் குரல் அப்படி. முருகனை நினைத்து உருகிப் பாடுகையில் குரலில் பக்தி நித்ய ஜீவனாய் கசிந்து வெளிப்படுவதைக் கேட்கலாம். இசையின் ரத்தமும் சதையுமான ஜீவனவள். பெசண்ட் நகர் கடற்கரையை ஒட்டின பிரம்மாண்டமான வீடு. தோட்டமும், தோட்டக்காரர்களும் தவிர்த்து குடும்பத்தினர் என சொல்லிக் கொள்ளத்தக்க எல்லோரும் மாயவரத்தில் இருக்க பாடல் பதிவுகளுக்காகவும் கச்சேரிகளின் போதும் தங்கவென்றே இந்த வீட்டை வாங்கியிருந்தாள். போகன் வில்லா மரங்கள் நிறைந்த அந்த சாலையில் இவள் வீடு தியானமடம் போலிருக்கும். முன் வாசலில் அலங்கரிக்கப்பட்ட கூண்டுகளுக்குள் நிறைய பறவைகளை வளர்த்தாள். மிக அரிதான blue and yellow macaw வகை கிளிகளை அவற்றின் அற்புதமான குரலுக்காகவே வாங்கி வைத்திருந்தாள். அந்த வீட்டில் அவளின் ஆதுரமிக்க துணைவர்கள் இவர்கள் தான்.
மானஸி என்னும் பெயரில் தான் இணையத்தில் இவனுக்கு அறிமுகமானாள். Loccante தளத்திலிருந்த இவனது சுய விவரக்குறிப்பில் தகவல்கள் அவ்வளவும் உண்மைதானா என ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துக் கொண்டாள். ஆனாலும் நம்பிக்கை வராமல் நேரில் சந்திப்பதற்கு முன்னால் ஒருமுறை ஸ்கைப்பில் பேச அழைத்தாள். வினோத்திற்கு இதுமாதிரியான நீண்ட விளையாட்டுகளில் எல்லாம் ஆர்வமில்லை. வருமானம் குறைவென்பதோடு பெரும்பாலான பெண்களும் செக்ஸைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாகவே இருப்பார்கள். “come on asshole lick my cunt.. oh fuck…. Lick more… don’t stop… don’t stop… ahhh .. ahh…” என அவர்களின் அலறலுக்குப் பதிலாக எழும்பாத உணர்ச்சியை எழும்பிய போன்ற ஒரு நாடகத்தை நிகழ்த்தி பதிலுக்கு இவனும் “come babe.. fuck me… fuck me hard… yah that’s right.. go on baby… fuck me fuck me…” காமத்தின் அலறலை வெளிப்படுத்த வேண்டும். சிலருக்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடங்களுக்குள் முடிந்து விடும். சில பெண்கள் நாற்பது நிமிடங்கள் வரை வியர்க்க வியர்க்க அவனோடு காட்சி வழியே கூடிக் களிப்பார்கள். தனது வாழ்வாதார தேவைகளுக்கும், உடலைப் பராமரிக்க தேவையான அழகு சாதன மற்றும் ஆரோக்கியப் பொருட்களை வாங்கவும் அவன் நிறையவே உழைக்க வேண்டியிருந்தது.

மானஸி என்னும் பெயர் போலியாகத் தெரிந்ததால் அவளின் மீது வினோத்திற்கு பெரிதாக ஆர்வம் ஏற்பட்டிருக்கவில்லை. வழக்கமாக வீடியோ கால்கள் பேசுவதற்கு முன்னால் கொஞ்சம் உடற்பயிற்சி செய்வான். தனது உடலைப் பார்க்கும் பெண்ணுக்கு எந்த விதத்திலும் ஏமாற்றமிருக்க கூடாதென்கிற கவனம். அன்றைய தினமிருந்த களைப்பில் முகத்தை மட்டும் கழுவி விட்டு வெகு இயல்பாக உடைகளைக் களைந்து உட்கார்ந்தான். உள்ளாடை மட்டுமே அணிந்திருந்த இவனைப் பார்த்து அதிர்ச்சியானவள் “ச்சே ச்சே என்னது இது? மொதல்ல துணிய மாட்டிக்கிட்டு வா…” அருவருப்போடு வெளிப்பட்ட போதும் அந்தக் குரல் மகோன்னதமானதாய் இருக்க அவளின் மீது புரிந்து கொள்ள முடியாத ஆர்வமெழுந்தது. நடிகை ட்ரூ பேரி மோரின் அழகான முகத்தை மாஸ்க்காக அணிந்து, தனது அசல் முகத்தை மறைத்திருந்தாள். இயல்பாக அவனைக் குறித்த அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்பியவளாக பேசினாள். அவளிடம் இச்சைகளைத் தாண்டி தனக்கு ஆதூரமான ஒருவனைத் தேடும் தவிப்பிருந்தது. “இதப் பேசறதுக்கு நீங்க நார்மலா என்னோடஃபேஸ்புக் ஐடி ல சாட் பண்ணி இருக்கலாமே. பே பண்ணி நேரம் செலவழிக்கனுமா?” கேலியாகக் கேட்டான். ”வாஸ்தவந்தான். ஆனா ஃபேஸ்புக் ல நீங்க என்னோட பேசனும்னு நிர்ப்பந்தம் இல்ல. இங்க நீங்க பேசித்தான ஆகனும்..” அவள் சொற்கள் ஒவ்வொன்றும் பிரபஞ்சத்தின் அபூர்வ சத்தங்கள் அவ்வளவையும் பிரதிபலித்தது. இவள் முகம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், தன் வாழ்நாளில் இவளிலும் ஓர் பேரழகியை ஒருபோதும் தன்னால் காணமுடியாதென உறுதியாக நம்பினான். அவளுக்கு அவனது வெளிக்காட்ட விரும்பாத கூச்சமும் எளிமையும் பிடித்திருந்தது. தன்னளவில் யாருடனும் நெருங்கிப் பழகமுடியாமல் தனித்திருக்கும் ஒருவனாகவே அவனைக் கருதியவள் அவனை சந்திப்பதால் பிரச்சனையில்லை என முடிவு செய்தாள். அனுமதிக்கப்பட்ட நேரம் முடியும் தருவாயில் “சரி எனக்கு நீ ஓகே. இந்த வீக் எண்ட் உன்னோட நேரம் எனக்கு கிடைக்குமா?” அவன் தொழிலை இத்தனை மரியாதையோடு நடத்தியவர்கள் மிகக் குறைவு. அவளது ஒவ்வொரு செயலிலும் ஒழுங்கும் திருத்தமும் இருந்ததால் அவளுடனான இரவிற்காக இந்த சில நிமிடங்களில் ஏங்கிப்போயிருந்தான். “கண்டிப்பா எப்போன்னு சொல்லுங்க. அவசியம் சந்திக்கலாம்.” அவள் தனது முகவரியைத் தந்து வர வேண்டிய நேரத்தையும் குறிப்பிட்டிருந்தாள். இணைப்பைத் துண்டிக்கப் போவதற்கு முன் அவசரமாக வினோத் “ஒரே ஒரு தடவ உங்களோட முகத்தப் பாக்கலாமா?” என மனம் பதைபதைக்க கேட்டான். சத்தமாக சிரித்தவள் “இந்த முகத்துக்கான தேவை இல்லாமத்தான இவ்ளோ நேரம் பேசினோம். முகந்தான் அடையாளமா மாறிடுது வினோத். அந்த அடையாளந்தான் சாதாரண எல்லா விஷயங்களையும் அபூர்வமாவோ இழிவாவோ மாத்திடுது. இப்ப போட்டிருக்கற இந்த மாஸ்க் ல ஒரு பன்றியோட படம் இருந்திருந்தா நீ இவ்ளோ நேரம் பேசி இருப்பியா?” அவளது கேள்விகளுக்கு அவனிடம் பதில்களில்லை. “சரிங்க நாம நேர்ல பேசலாம்..” சங்கடத்தோடு தேய்ந்தது அவன் குரல்.
பிரபஞ்சத்தை இரண்டாய்ப் பிளந்து மோகிக்க தந்தது போல் கொதித்து நின்றான் சுப்புலஷ்மியுடனான சந்திப்பு நிகழ்ந்த நாளில். அசாத்தியமான சுழல் ஒன்றுக்குள் புகுந்து கொண்ட பரவசம். மயிர்க்கால்களின் அடியாழம் வரை ஆர்வமும் தாபமும் தெறிக்க நின்றவனைப் பார்க்க சந்தோசமாய் இருந்தது. வழிபாட்டிற்குரியதென்பதாலேயே இங்கு பெண் சிலைகளின் உடல் வனப்பு ரசிக்கப்படவே இல்லை. இயற்கையின் மகத்தான கொடை அவள். விளைந்து நின்ற அவளின் இளமை வனப்பை அருகி சுவைக்க நாவில் அக்னி நீர் சுரந்து அவனை தாகம் கொள்ளச் செய்தது. வகைப்படுத்த முடியாத வசீகர வனம் அந்த படுக்கையறை, ஒளியின் அபூர்வமான மகரந்தம் நிறைந்த சுவர்களில் அவளது ஆளுயர புகைப்படங்கள். திசையெங்கும் சுப்புலஷ்மி நிறைந்திருந்த அந்த உலகிற்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து மதுவருந்தும் நினைவுகூட எழவில்லை “ஆண்கள் மேல அவ்ளோ அச்சமா சுப்பு?” அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தாள். “இல்ல வினோத், காதல். ஆண்கள் மேல அளவில்லாத காதல். சொன்னா சிரிப்பா கூட இருக்கும் உலகத்துல இருக்க அத்தன ஆண்களையும் படுக்கை ல சந்திக்கனும்னு கொந்தளிப்பான காதல் இருக்கு. ஆனா ஒரு பெண்ணோட இத்தனை தீவிரமான காதல எதிர்கொள்ள தொண்ணூற்றி ஒன்பது சதவிகித ஆண்கள் தயாரா இல்ல. மிச்சமிருக்கற ஒரு சதவிகித ஆண்கள தேடிக் கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு. அதனால தான் ஒருத்தன் எல்லா வகைலயும் சரியானவனா இருக்கானான்னு பாக்க வேண்டியிருக்கு.” அவள் சொற்களில் ஆழமான விரகத்தை உணர்ந்திருக்க முடியவில்லை. சின்ன அதிர்வோ சலனமோ கூட இல்லாமலே தான் பேசினாள். “சுப்பு லஷ்மிக்கா காதலர்கள் கிடைக்க மாட்டாங்க?. ஆச்சர்யமா இருக்கு.” உரையாடலில் உணவை மீறின சுவாரஸ்யம். “நீ இன்னும் புரிஞ்சுக்கல வினோத். எனக்கு தேவை ஒரு காதலனோ கணவனோ இல்ல, என்னோட கட்டளைகளுக்கு கீழ்ப்படியற ஒருத்தன. மஸ்குலினிட்டியோட மொத்த உருவமான ஒருத்தன் ஒரு பெண்ணோட ஆளுமைக்குக் கீழ வரும்போது மகத்தானவனா ஆகறான். அப்படியொரு மகத்தானவன தான் தேடறேன். மெடூஸாவ பத்தி படிச்சிருக்கியா? சிலர் அரக்கின்னு சொல்றாங்க, சிலர் தேவதைன்னு சொல்றாங்க. என்னயக் கேட்டா அவ ரெண்டும் தான். பெருங்காமம் பாவம்னு சொல்லப்பட்டதால அரக்கியானவ அவ. நானும் மெடூஸாதான் வினோத்.”
வரலாற்றின் கனவுகளுக்குள் துயில்வதற்கான அவர்களின் பயணம் சமையலறையிலிருந்து துவங்கியது. இன்னும் சில நிமிடங்கள் கட்டுப்படுத்தினால் உடல் வெடித்துவிடுமென தகித்துக் கிடந்தவன் சமயலறையின் கதவில் சாய்த்து பிரபஞ்சத்தின் அத்தனை பெண்களுக்குமான காதலோடு முத்தமிட்டான். இதழ்களை நிதானமாய்ப் பிரித்து அனுமதித்தவள் தன் பற்களையும் நாவையும் சுவைக்கத் தந்தாள். அவள் சொற்களின் குரலின் கனவுகளின் அத்தனை சுவையையும் சுரந்த நாக்கை முத்தமிட்டு தீர்த்தால் போதுமா? அந்தக் கனவுகளில் நுழைந்து செல்வதற்கான சாவியல்லவா இது? பற்களால் வலிக்காமல் கடித்தான். அவளையே தின்றுவிடத் துடிக்கும் மூர்க்கம் இந்த நாவை எப்படி விட்டுவைக்கும். அவளுக்கு உடல் வெப்பத்தில் கசகசக்க தன்னிலிருந்து விலக்க முயன்றாள். அவன் சிறு துளி கூட நகர்வதாயில்லை. அவன் பின்புறத்தில் ஓங்கி அடிக்க, சடாரென யதார்த்தத்திற்கு திரும்பி கொஞ்சமாய்ப் பிரிந்தான். “என்ன அவசரம், முழு இரவும் இருக்கு.. வா.. ” அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள். தோள்களில் வழிந்திருந்த வியர்வையை காதலோடு மேலேறும் நாய்க்குட்டியாய் நக்கிக் கொடுத்தான். இந்த விளையாட்டுகள் விரகத்திற்குப் பதிலாய் கூச்சத்தையே அவளிடம் ஏற்படுத்தியது.
ஆலயங்களில் மெல்லிய ஒலியில் கடவுளைத் துதிக்க ஒலிக்குமே ஓங்காரம் அப்படியான ஒரு மதுரக் குரல் அவளின் படுக்கையறையிலிருந்த ஸ்பீக்கர்களில் ஒலிக்கத் துவங்கியது. அவளே பாடின பக்தி பாடல்களின் தொகுப்பு. தன்னோடு இருப்பவனின் வழிபாட்டிற்குரிய தெய்வம் தானாக மட்டுமே இருக்க வேண்டுமென்கிற கர்வத்தை அவளின் நிர்வாணத்தில்தான் கண்டுகொண்டான். படுக்கைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ட்ரீம் கேட்ச்சர் அவர்கள் இருவருக்குமான மகோன்னதமான கனவுகளை மட்டுமே அந்த இரவு தருவதென உறுதியோடு நிதானமாக அசைந்தபடி இருந்தது. வேறு யாராலும் நீந்த முடியாத அக்னி குளத்திற்குள் அனுமதிப்பது போல் அவனை அழைத்தாள். ஸர்ப்பங்களின் நஞ்சு நிரம்பிய நாவைப் போல் தீவிரமாயிருந்தன அவளின் கண்கள். எல்லாம் துவங்குவதற்கு முன்பாகவே பெரும் தொகையை அவன் சேவைக்கான கூலியாய்க் கொடுத்தாள். “பாதியில போயிடமாட்டேன் சுப்பு, அப்றமா வாங்கிக்கறேன்.” மறுத்தவனிடம் நிர்ப்பந்தித்துக் கொடுத்தாள்.
ஆழ் கடலில் இரு பெரும் அலைகள் மோதிச் சிதற தயாராவது போல் இருவரும் கலவி கொள்ளத் துவங்கினர். தன் உடலின் ஒவ்வொரு செல்லில் இருக்கும் நறுமணத்தையும் முழுவதுமாய் அவன் நுகரத் தூண்டியவள் அவன் அக்குள் வியர்வைக்குள் தன்னை சரணடையத் தந்தாள். இத்தனை காலம் தான் கற்றுக் கொண்ட அத்தனையையும் இவள் ஒருத்தியிடம் தந்துவிடும் பிரயத்தனத்தில் ஆவேசமாக இயங்கியவனை அவளுக்கு ரொம்பவே பிடித்துப் போனது. பல நாட்களுக்குப் பிறகான இந்தக் கலவி அவளுக்கு ஒருவித ஆசிர்வாதம். நகங்களால் அவன் முதுகில் கீறி குருதி கசியச் செய்ய வியர்வையின் உப்பும் குருதியும் தந்த எரிச்சல் அவள் குறி தேடி அவனைச் சுவைக்கச் சொன்னது. நெருப்பு மலர்களின் குவியலுக்குள் முகம் புதைத்து நுகர்ந்து சுவைக்கத் துவங்கின சில நொடிகளுக்குப் பின் “ண்ணா…” என முனகினாள். அந்த வார்த்தைகளை முதல் முறை அவன் கேட்கத் தவறினாலும் “எவ்ளோ காலம்ணா நான் காத்துட்டு இருப்பேன்.. நீ வேணும்ணா..,” இந்தமுறை சத்தமாகவே அரற்றினாள். அவன் எதுவும் புரியாமல் விலகி “அண்ணாவா?” மூச்சு வாங்க அவள் கண்களுக்குள் ரகசியம் தேடி நின்றான். “பாதில நிறுத்தாதண்ணா.. ப்ளீஸ்ண்ணா… செய்ண்ணா..” என அவன் தலையைப் பிடித்து மீண்டும் தன் பக்கம் இழுத்தாள். அவசரமாக தன்னை அவளிடமிருந்து விலக்கிக் கொண்டவன் “என்ன நடக்குதுன்னு புரியல சுப்பு…?” பதட்டத்தோடு கேட்டான். அவளுக்கு மூச்சு வாங்கியது. “எதுக்கு புரிஞ்சுக்கனும். பணம் வாங்கி இருக்கல்ல… சொல்றத செய்..” முதல் முறையாக அவள் முகம் கொஞ்சம் கோரமாய் மாறியது. அவள் மீதான பித்தை அழிக்கவும் முடியாமல் ஒன்று கலந்து கூடவும் முடியாமல் தவிப்பாய் இருந்தது. “எனக்குத் தங்கச்சிகளோடு படுத்து பழக்கமில்ல சுப்பு. நான் இன்செஸ்ட் இல்ல.” அவனை இழுத்து கீழே தள்ளியவள் மேலேறி உடலெங்கும் தன் நாக்கால் தூண்டினாள். “நான் இன்செஸ்ட் தான் வினோத் அதுல என்ன பிரச்சன? நீ உடம்ப விக்கறவந்தான. பணம் குடுக்கறது யாரா இருந்தா என்ன?” முகத்தைப் பார்க்காமல் கால் விரல்களில் முத்தமிட்டாள். “வெறுமனே பணத்துக்காக இத நான் பண்ணல சுப்பு. எனக்கு ஒவ்வொரு பெண்ணோடயும் இருக்க காதல் முக்கியம்… அப்றந்தான் பணம்..” அவளுக்கு எரிச்சலானது. விலகி அவன் அருகில் உட்கார்ந்தவள் “புல்ஷிட்…” என புலம்பினாள். துடித்துக் கொண்டிருந்த உயிர் நரம்பை பாதியில் அறுத்துவிட்ட பதை பதைப்பு அவள் உடலில். தன்னை நெருங்கி வருகிற எல்லோரும் தயங்கி தப்பித்து ஓடும் அதே இடத்தில் இவனும் சிக்கிக் கொள்ளவான் என அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கபோர்டிலிருந்து ஒயின் பாட்டிலை எடுத்தவள் கோப்பை கூட தேவையற்றவளாய் அப்படியே குடித்தாள். அவனுக்கு சங்கடமாகிப் போனது. வினோதின் பக்கமாகத் திரும்பிக் கூட பார்த்திருக்கவில்லை. நெய்யால் பிணைந்து செய்த அந்த உடலில் இன்னும் நறுமணம் பெருகி வழிந்தபடியே இருக்க அறுபட்ட இடத்தை சரிசெய்துவிடும் பொருட்டு மீண்டும் முத்தமிட்டான். அசைந்து அவனிடம் ஒயின் பாட்டிலைக் குடுத்தாள். சில மிடறுகள் குடித்தான். இருவரும் பேசிக் கொள்ளாமலேயே முத்தமிட்டார்கள். தாமதிக்க விரும்பாமல் தன் மேலேற்றி அவளைப் புணரத் தூண்டினான். சந்திர கிரகணத்தின் போது மட்டுமே தெரியும் நிலாவின் அபூர்வமான சொரூபமாய் அவன் மீது படர்ந்தவள் நிதானமாக இயங்கத் துவங்கினாள். எல்லாம் சரியாகி அவன் முழுவதுமாக அவளோடு கரைந்த கனத்தில் “அண்ணா… லவ்யூண்ணா… லவ் யூண்ணா..ண்ணா..” என மீண்டும் அவன் காதுகளுக்குள் அவள் சொற்கள் எதிரொலிக்க பதட்டத்தோடு கண்களைத் திறந்து பார்த்தவன் எதுவும் செய்யமுடியாமல் அவளை வெறித்துப் பார்த்தான். “இந்த பிரபஞ்சத்துல எதாச்சும் ஒரு மூலைக்கு என்னய கூட்டிட்டுப் போயிடுண்ணா. பாக்கற எல்லா ஆம்பள கிட்டயும் உன் சாயலத்தான் தேடறேன், நீ ஒரு தேவதூதண்ணா.. தேவதூதன்…” நிறுத்தாமல் அரற்ற மெல்ல அவன் குறி மீண்டும் சுருங்கியது. தனது உடலுக்குள் புகுந்த நெருப்புக்கட்டி சடாரென உருகி கரைந்த ஏமாற்றத்தில் வினோத்தைப் பார்த்தவள் ஓங்கி அறைந்தாள். நிறுத்தவே இல்லை. தனக்குள்ளிருக்கும் வன்மம் தீர தீர அறைந்தாள். அவன் எதிர்வினைகளின்றி அப்படியே கிடந்தான்.
“ஏண்டா உறவுமுறைகள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க. எல்லாம் உடம்பு தான. என்னோட இந்த உடல் பருவமெய்தின நாள் ல இருந்து அணுகின ஆண் என்னோட அண்ணாதான். வயசு வர்ற வரைக்கும் எம்மேல இருந்த மயக்கம் எல்லாம் நான் வளரும் போது தங்கச்சியா தெரிஞ்சதும் அவனுக்குப் போயிடுச்சு. ரெண்டு பேரும் ஒரே அம்மாவுக்கு பொறந்தோம் ஒன்னாவே வளந்தோம் சொல்லப் போனா அவனுக்கும் எனக்கும் ஒரே முக ஜாட. என்னோட ஒருபாதி உடல் அவன். என்னோட இன்னொரு பாதியோட நான் கரையறதுல என்ன தப்பு? ஏன் யாருக்கும் இது புரியல.” அவளது கோபம் இப்பொழுது அழுகையாய் மாற சமாதானப்படுத்தத் தெரியாமல் அவள் தலையைக் கோதினான். “நம்மளோட பிரத்யேகமான விருப்பங்கள் சில சமயம் நம்மள சிதைச்சிடும் சுப்பு. நீ இந்த உலகமே கொண்டாடற ஆர்டிஸ்ட். இந்த ஒரு விஷயத்தால உலகத்துக்கிட்ட இருந்து துண்டிச்சுக்காத..” திரும்பி அவனை முறைத்தவள் “என்னோட இந்த குமுறலும் தாபமும் தான் என்னோட சங்கீதம் வினோத். என் அண்ணனோட தான் நான் உறவு வெச்சுக்குவேன்னு சொல்ல நான் ஏன் வெக்கப்படனும்? அதையெல்லாம் விட்டுட்டு வர்ற எந்த சந்தோசமும் எனக்கு வேணாம்..” நிதானம் கொள்ள முடியாமல் பேசியவளின் உடல் துடித்துக் கொண்டிருந்தது. தனது தோளில் சாய்த்துக் கொண்டான். “ப்ளீஸ் வினோத் பாதில போயிடாத, இவ்ளோ வருஷத்துல நீ ஒருத்தன் தான் என் அண்ணனோட சாயல்லயும் தேஜஸ்லயும் கொஞ்சம் ஒத்துப் போன. ஏமாத்திடாத வினோத்..” கதறலாகக் கேட்டாள்.
இரண்டு பேரும் எவ்வளவு முயன்றும் அவர்கள் நினைத்த எதுவும் நடந்திருக்கவில்லை. தான் கொண்டாடி பூஜிக்க நினைத்த ஒருத்தியோடு கூடவே முடியாமல் போகுமளவிற்கு ஆகிவிட்ட ஏமாற்றத்தில் அவனுக்கும் தன் மீதே வெறுப்பு. எவ்வளவு முயன்றும் அண்ணா என அவள் கூப்பிடுவதை சகித்துக் கொண்டு அவனால் இயங்க முடியவில்லை. அவன் குறியையும் குதத்தையும் நாவின் கடைசித் துளி வெப்பம் தீரும் வரை சுவைத்தாள். அவன் சமநிலையிலேயே இருக்க, இனி எதுவும் நடக்கப் போவதில்லையென ஒதுங்கி படுத்துக் கொண்டாள். பசியில் அழும் குழந்தை போல் தலையணைக்குள் முகம் புதைத்துக் கொண்டவள் நீண்ட நேரமாய் “ண்ணா அண்ணா என்று அரற்றுவது மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.” விடிவதற்கு முன்பாக உடைகளை மாற்றிக் கொண்டு அவன் கிளம்பிய போது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ட்ரீம் கேட்ச்சர் துர்கனவை பரிசளித்த திருப்தியில் உற்சாகமாய் அசைந்து கொண்டிருந்தது.
4
சபிக்கப்பட்ட வாழ்வின் அழியாத ரணங்களை ஒருவன் அலைச்சலின் வழியாய்க் கடந்து செல்லவேண்டியிருக்கிறது. கோடை ஆக்ரமிக்கும் வறண்ட நிலங்களின் இரவு நேரங்களில் குட்டையான முள் மரங்களுக்கு நடுவில் நீளும் தார்ச்சாலைகள், ஒரு மனிதன் கடந்த காலத்தில் எதிர்கொண்ட துர் சகுணங்கள் அவ்வளவையும் சரிசெய்யக் கூடியவை. நாடோடிகள் ரோகிகள் தெருவோரப் பாடகர்களென தேசமெங்கும் சுற்றியலையும் ஏராளமானவர்களுடன் சில நாட்கள் சுற்றக் கிளம்பினான். சொல்லப் போனால் நம்பிக்கைகள் கைவிட்ட ஏமாற்றம் அவனுக்குள். உடலென்பது கொண்டாட மட்டுமே என நம்பிக்கொண்டிருந்தவனை சுப்பு லஷ்மி சிதைத்துப் போட்டாள். ஒரேயொரு சொல் தன்னை பலவீனமாக்கக் கூடுமென்கிற நிதர்சனம் புரிந்து போது இன்னும் தான் உறவுகளுக்காக ஏங்குகிற மனிதன் தானோ என சந்தேகமும் வேதனையும் எழுந்தது வினோத்திற்கு. உறவுகள் மனிதனை பலவீனமாக்குகின்றன. சம்பாதிக்கவும், பொருள் சேர்க்கவும், தன்னைச் சுற்றியிருக்கும் சிலரை குறித்து மட்டுமே எப்போதும் சிந்திக்கச் செய்யவும் பழக்குகின்றன. அதனால் தான் எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொள்ள விரும்பினான்.
கடவுளை நம்புவதற்கும் வழிபாட்டிற்கும் ஆன்மீகத்திற்குமான குழப்பமான வெளிகளுக்குள் பயணித்த போது மீண்டும் சைவ மடத்து கடந்த கால நாட்கள் நினைவுக்கு வந்தன. கடவுளை நம்புவதென்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வது, ஆனால் பயணத்தின் வழியும், தெருவோரப் பாடகர்களின் இசையின் வழியும் அவன் புரிந்து கொண்ட ஒன்றை ஆன்மீகமாய் இருக்கலாமென நம்பினான். ஆன்மாவின் அடியாளம் வரை ஊடுருவிச் சென்ற அவர்களின் குரலில் சுப்புவின் குரலில் இருக்கும் ஒழுங்கோ கவர்ச்சியோ வசீகரமோ எதுவுமில்லை. பாறைகள் அதிரும் போது கசியும் கண்ணீரின் ஆன்மா மட்டும் இருந்தது. பெரும் மலைகள் சரியும் போது அவற்றின் ஆன்மா சின்னஞ்சிறிய மரத்தின் நிழல் வேண்டி கெஞ்சுவது போல் ஆதரவின் நிழலுக்காய் தவித்த அவனுக்குத் துணையாய் இருந்தவர்கள் அந்த பாடகர்களும் பக்கீர்களும் தான். சின்னஞ்சிறிய கிராமங்களில் இருக்கும் தர்காக்களில் பாடப்பட்ட ஹுவ்வாலிப் பாடல்கள் பரந்த இந்த உலகில் நகமளவிற்குக் கூட எதுவும் தனக்கு தேவையானதில்லை என்பதை புரிய வைத்தது. எல்லாவற்றின் மீதும் பற்று கொள்ளவும் எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொள்ளவும் தயாரான நாளில் தன்னால் மீண்டும் தனது இயல்பிற்குத் திரும்ப முடியுமென நம்பினான்.
பயணத்தில் இன்னும் சில தூரம் மிச்சமிருக்க எங்கெங்கோ அலைந்து மதுரா வந்து சேர்ந்தான். வரலாறும் புனைவும் ஒருசேர செழித்த நகரம். மதங்களும் நம்பிக்கைகளும் அந்த நகரை புனிதப்படுத்தியபடியே இருந்தாலும் மனிதர்கள் தங்களின் இருப்பின் மூலமாகவும் வழிபாட்டின் மூலமாகவும் ஜீவன் கெடாமல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவில் யமுனை நதி ஒரு யோகியின் ஆழ்ந்த தியானத்தைக் கொண்டிருந்தது. நதிகள் வழிபாட்டிற்கான ஜீவன் மிக்க அடையாளமாய் கொண்டாடப்படும் தேசத்தில் மனிதன் எந்த ஊருக்கு சென்றாலும் நீரைக் கண்டதும் முதலில் கொஞ்சத்தை அள்ளி தலையில் தெளித்துக் கொள்வதை தன்னைத் தூய்மைப்படுத்தும் என்னும் நம்பிக்கையிலேயே செய்கிறான். விஷ்ராம் காட்டில் சுருங்கலான வெள்ளை நிற சட்டையும் பழைய கருப்பு நிற வேஷ்டியும் அணிந்தபடி யமுனையை இதற்கு முன் தான் பார்த்த வெவ்வேறு நதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தான். நீர் ஒன்றே போல் இன்னொரு இடத்தில் ஒருபோதும் இருப்பதில்லை. எதையும் தேடாமல் அலைகிறவனுக்குத்தான் எல்லாம் கிடைக்கும் போல, அவன் தற்காலிகமாக சில நினைவுகளில் இருந்து துண்டித்துக் கொள்ள கிளம்பி இப்பொழுது தன்னை பிரபஞ்சத்தின் இயக்கமிக்கதொரு துளியாய் புரிந்துகொண்டிருந்தான். இதற்கு முன் உறங்காத இரவுகளில் இருந்து இந்த சில நாட்களின் இரவுகள் வேறுபட்டிருந்தன. உடல் பசிக்கேற்றவாறு தன்னை சமன்படுத்திக் கொள்ளும் வலிமையை அடைந்திருந்தது. இருளின் ரகசியமே மனிதன் எல்லாவற்றின் மீதும் ஆசை கொள்வதும் பின் அதனை அடைவதற்கென தன்னைத் தயார் செய்து கொள்வதும் தான். வினோத் எல்லாவற்றின் மீதும் ஆசை கொண்டிருந்தாலும் பற்றில்லாதவனாய் இருந்தான். ஊர் திரும்பும் பக்குவம் வந்திருந்தது. யமுனையை பல நூற்றாண்டுகள் தவம் புரியும் முதிர் கன்னியாக நினைத்துக் கொண்டு நீரில் இறங்கிய போது அவ்வளவு நேரமும் சூழ்ந்திருந்த குளிர் விலகி கதகதப்பு கூடியது. நதியென்னும் ஆதி உடலில் மெல்ல மெல்ல படர்ந்தவனின் குறி நீண்ட நாட்களுக்குப்பின் புணர்ச்சிக்குத் தயாராக கண்களை மூடிக் கொண்டு இதுவரையிலுமான தன் தோழிகளை நினைத்துக் கொண்டான், ஆக இறுதியாய் சுப்புலஷ்மி அண்ணா என அலறியது கூட காதில் எதிரொலிக்காமல் இல்லை. உடல் நிதானமாய் நீரோடு கலந்து அந்த பின்னிரவில் ஸ்கலிதம் கண்டான்.

ஈரம் உலவர்வதற்கு முன்பான உடலோடு அறை நோக்கித் திரும்பியவன் அந்த அதிகாலையில் வெள்ளை உடையோடு தூசியடர்ந்த வீதியில் வெவ்வேறு வயதிலிருக்கும் பெண்கள் எதிரில் வருவதைப் பார்த்தான். ஆண்களை அதிகமும் எதிர்கொண்டு பார்த்திராத அவர்கள் கிருஷ்ணருக்கென்று எல்லோராலும் கைவிடப்பட்டவர்கள், சொல்லப் போனால் கிருஷ்ணராலும் கூட. அரை வயிற்று உணவு, தாகத்திற்கு மட்டுமே நீர், உலகத்தின் கண்களில் இருந்து துண்டித்துக் கொள்வதன் வழி இச்சைகளில் இருந்து என்றென்றைக்குமாய் காத்துக் கொள்ளலாமென புராணமும் முன்னோர்களும் கற்றுக்கொடுத்த நம்பிக்கைகள் எத்தனை போலியானவை என்பதை நாற்பதைத் தாண்டியும் தேஜஸோடு மிளிரும் இந்தப் பெண்களைக் காணும் போது புரிந்து கொள்ள முடியும். பசி தான் இச்சைகளின் தோற்றுவாய், உடல் எரிந்து தன்னைத் தானே திண்ணப் பழகிய பின் உணவின் மீதிருக்கும் இச்சை எல்லாவற்றின் பக்கமாகவும் திரும்புகிறது. கணவன் இறந்த பின் கைவிடப்படும் பெண் கடவுளை துதிக்க மட்டுமே விதிக்கப்பட்டவள் என்பதை இன்னும் நம்பும் இந்துக்கள் கிருஷ்ணனின் சொந்த நிலத்தில் விட்டுச் செல்கின்றனர். இச்சைகளின் கேவல் நிரம்பிய அசுரத்தனமான இந்நகரில் அதிகாலைகளில் தங்கள் உடலை நீரால் சுத்தம் செய்து கொள்ள வரும் பெண்களிடம் காண்பதை இங்கு வந்து செல்லும் யாரும் பிறரிடம் சொல்வதில்லை. தலை மழிக்கப்பட்டு, வெள்ளை நிற சேலையில் ஆறுதலான மனிதர்களின் அருகாமைக்காக ஏங்கும் அப்பெண்களின் கண்கள் ஒரு வேட்டை மிருகத்தின் தீவிரம் கொண்டவை.
இன்னும் புற உலகின் இயக்கம் பெரிய அளவில் துவங்கி இருக்கவில்லை. தூரத்திலிருந்து வந்த சைக்கிள் காரன் அருகில் வந்ததும் ஒருமுறை மணியடித்தான், “ஸார் சாயா?” வினோத் பதிலே சொல்லாமல் கடந்து செல்ல அந்த வீதியின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குப் பின்னால் குள்ளமான ஒரு பெண் நிற்பதைப் பார்க்க முடிந்தது. அவளின் கண்கள் இவன் உடலைத் துளைத்து வெளியேறியதால் தான் திரும்பி கவனித்தான். அந்தப் பார்வையில் ஒரு அழைப்பும் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் தவிப்புமிருந்தது. ஊர் திரும்புகிற நாளில் இப்படியானதொரு கலவி அவனுக்கு கொஞ்சமும் தேவையில்லை. ஆனால் இதற்கு முன்பு ஒருபோதும் இதுமாதிரியான சூழலில் இப்படியான நகரத்தில் இப்படியானதொரு பெண்ணோடு கலவி கொண்டதில்லை என்னும் ஆர்வம் அவளிடம் நெருங்கிச் செல்லச் சொன்னது. அருகில் சென்றதும் எரிநட்சத்திரம் ஒன்று விழுந்ததைப் போல் மென்மையாய்ச் சிரித்தாள். வசீகரமான பல் வரிசை. இன்ன வயதென்று சொல்ல முடியாத தோற்றம். ஒருவேளை இரண்டாயிரம் வயதாகக் கூட இருக்கலாம், அல்லது இருபது வயதாகவும் இருக்கலாம். காலங்களைக் கடந்த உடல். உரையாடுவதற்கான அவசியங்களின்றி அவனிலும் உறுதியான கைகளால் இறுக்கி அணைத்தாள். மூச்சு விட இயலாமல் நெளிந்தவனின் ஈர உடலில் முத்தமிட்டுத் தூண்டியவளோடு பேச விரும்பியவன் பெயரைக் கேட்டான். “காளி” என்றாள் ஒற்றை வார்த்தையில். காளியின் மிருதுவாமன் சதைகள் படைத்தலுக்கென உருவானதாய் ஜொலிக்க அதன் ரம்மியத்தில் அந்த இருட்டிலும் மயங்கிப் போனான். அகன்று பெரிய கண்கள். இந்த நிலத்தைச் சேர்ந்தவளென அறுதியிட்டுச் சொல்ல முடியாத வனப்பு. அபூர்வமான பெண்களில் அபூர்வம் இவள். அவளிடம் பேச அவனுக்கு நிறைய இருந்தது, ஆனால் கேட்கும் அவகாசமில்லாதவளாய் அவனோடு கூடினாள். ”இந்த ஊர் இந்த மடம் எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு எங்கியாச்சும் போயிடலாமே?’” உடலின் தகிப்பை அவனுக்குள் கடத்தியபடியே “ஒரே ஒரு நாள் என்னய அணுகற உனக்கு என்னோட இருப்ப உன்னால புரிஞ்சுக்கவே முடியாது. என்ன மாதிரி எங்க இருக்க எல்லோருக்குமே குடும்பங்களோட வாழ்றதுதான் சாகற வரைக்குமான கனவா இருக்கு. ஆனா புனிதங்கள நம்பற குடும்பத்துக்குள்ள ஒரு விதவை வாழ்றது சாபம். எங்களுக்குன்னு ஒரு உடல் இருக்கு, பசி, ஆசை கனவுகள் இது எதையும் அவங்க மதிக்கிறதில்ல. குடும்பத்துல யாரும் பேசாம தனியா கெடக்கறதுக்கு இது பரவால்ல. கடவுளை துதிக்கிறதும் துதிக்கற மாதிரி நடிக்கிறதும் ஒருவித ஆறுதல் தான்.” அவள் லாவகமாய் அவனுக்குள் கரைந்து கொண்டிருக்க, “இல்லம்மா நீ ஏன் யாரயாச்சும் கல்யாணம் கட்டிக்க கூடாது?” மனிதன் அடியாழத்திலிருந்து அக்கறையோடே கேட்டான். முழு உடைகளையும் அவிழ்த்துப் போட்டுவிட்டு அவனை வெளிச்சத்திற்கு இழுத்து வந்தவள் கண்களைப் பார்த்துக் கேட்டாள் “என்னய நல்லா பாரு, நீ கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்னய?” உடலெங்கும் காயத்தின் தழும்புகள். தன்னைத் தானே வதைத்துக் கொண்டதின் அனேக அடையாளங்களை காண முடிந்தது. அவனுக்கு துளிர்த்த காமம் வடிந்துவிடுவதைப் போலிருக்க மீண்டும் இருளுக்குள் இழுத்து வந்தாள். “எனக்கு இன்றைக்குக் கிடைத்திருப்பது சில நிமிடங்கள் தான், வீணடிக்காதே” என முனகினாள். உலகின் ரகசிய கண்கள் தங்களை கண்கானிக்கும் என்கிற கவலைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் இருவரும் மூர்க்கமாக ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். காளி தன் நூறு கைகளால் அவனை அணைத்து தனது ஆதி பரப்பிற்குள் அவனை நீந்தச்ச் செய்தாள். யுத்தத்தின் ராட்சச அம்புகளை சலிக்காமல் எய்துவிடும் முனைப்போடும் வினோதமானதொரு காதலோடும் அவளோடு கூடியவன் எல்லாம் முடிந்து விலகிய போது விடியலுக்கு இன்னும் சில நிமிடங்களே மிஞ்சியிருந்தன. விரகத்தின் ரத்த சிவப்பான நாவினால் அவள் தொடர்ந்து முத்தமிட்டபடியே இருந்தாள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த கலவியில் அவள் லயித்துப் போயிருந்தாள். இனி எப்போது நிகழுமெனத் தெரியாத ஒன்றிற்காக ஒவ்வொரு நிமிடமும் தவித்துக் கிடக்க வேண்டும். முரடனோ, கிழவனோ, ரோகியோ, எவனாவது ஒருவன். ஆண்மையின் சின்னஞ்சிறிய மிளிர்தலோடு தன்னை அணுகும் நாள் என்பது அபூர்வமானதே. அவன் தனது பணப்பையிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து அவளிடம் கொடுத்தபோது, சிரித்தபடியே மறுத்துவிட்டாள். வெறுங்கையோடு அவளை அனுப்ப மனமில்லாமல் யோசித்தவன் தனது மொபைலை கொடுத்தான். “நம்மைச் சூழ்ந்த மனிதர்கள் எல்லோரும் ஏதோவொரு வகையில் கைவிடப்பட்டவர்கள்தான். இந்த வாழ்வை நீ வாழ்வதற்கான திறவு கோலாய் இதை பயன்படுத்தலாம், அல்லது எப்போதும் காளியாகவே இருந்தால் போதுமானது என நினைத்து தூக்கிப் போட்டுவிட்டு கடந்தும் செல்லலாம், உன்னுடைய விருப்பம்.” விடையனுப்புதலுக்காய் காத்திருக்கும் தொனியில் சொன்னான். அவன் இடது மார்பில் அழுத்தமாய்க் கடித்து பற் தடங்களை உருவாக்கியவள் அந்த மொபைலை தனது உடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு அங்கிருந்து விலகிச் சென்றாள்.