Saturday 10 September 2016

https://minnambalam.com/k/1473445819
ஓவியர் பா.பெருமாளுடன் ஒரு நேர்காணல்
சனி, 10 செப் 2016






பேட்டி கண்டவர்:வைஷ்ணவி

வைஷ்ணவி: உங்களுடைய இளமைப் பருவத்தில் நுண்கலைப் படிப்பு பலர் அறியாத ஒன்று. இது இப்படியிருக்க, நீங்கள் எவ்வாறு ஓவியராக முடிவெடுத்தீர்கள்?

பெருமாள்: ஸ்ரீவில்லிபுத்தூரில், கூமாப்பட்டி என்ற கிராமத்தில் நாங்கள் விவசாயம் செய்துவந்தோம். பொங்கல் பண்டிகையின்போது வீட்டையே ஓவியங்கள்மூலம் அலங்கரிப்பேன். அதைக்கண்ட ஒரு சமூக சேவகர் என் தந்தையாரிடம், நுண்கலை படிப்பைப் பற்றியும் சென்னை கலைக் கல்லூரியைப் பற்றியும் கூறினார். என் தந்தையாருக்கு இதில் முழுச் சம்மதம் இல்லையெனினும், என்னை கலை பயில சம்மதித்துவிட்டார். அதுவரை நான்தான் எங்கள் குடும்பத்தில் விவசாயம் செய்துவந்தேன். ஏனென்றால், என் அண்ணா திருமணம் முடிந்தபிறகு வெளியே சென்றுவிட்டார். நான் கலை பயின்றபிறகு, என் சகோதரர்களை மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க வைத்தேன். நான் சென்னை கல்லூரியில் 1951 முதல் 1955 வரை படித்தேன். தனபால், பணிக்கர், ராம்கோபால் ஆகியோர் என்னுடைய ஆசிரியர்கள். ராய் சௌத்ரி சிற்பக்கலை கற்றுக் கொடுப்பார். நாங்கள் படிக்கும் காலத்தில் இறுதியாண்டில் நிர்வாண (Nude) மாடல்களைக் கொண்டு வகுப்பறையில் வரைவோம். ஆனால் அரசுக்கு இந்தப் பழக்கத்தில் விருப்பம் இல்லை. ராய் சௌத்ரி, மனித உடலமைப்பைப் புரிந்துகொள்ள இது அவசியம் என்று வலியுறுத்தினார்.



வைஷ்ணவி: நீங்கள் கல்லூரியில் படித்தபோது எத்தகைய சூழ்நிலை இருந்தது?

பெருமாள்: நான் படித்த காலத்தில் நுண்கலை மற்றும் கைவினை கல்லூரி என்றுதான் எங்கள் கல்லூரியின் பெயர் இருந்தது. கைவினைக்கென வேறு ஆசிரியர்கள் இருந்தார்கள். நுண்கலைக்கு தனபால், பணிக்கர் மற்றும் இராம்கோபால் ஆகியோர் இருந்தார்கள். தனபால், பல மாணவர்களுக்கு உதவி அளித்துள்ளார். அவர் வண்ணம்தீட்டும் முறையையும் பணிக்கர், துரிகையை பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொடுத்தார்கள்.

நான் படித்து முடித்தபிறகு, அருங்காட்சியகத்திலும் பள்ளிக்கூடங்களிலும் வேலை செய்தேன். நாங்கள் அச்சமயத்தில் ஒரு சிறிய வீட்டில்தான் இருந்தோம். ஆனால் அப்போதுகூட அயராமல் நான் ஓவியம் படைப்பேன். 1951இல் அகில இந்திய கண்காட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1991இல் நான், அகில இந்தியப் பரிசையும் (national award) பெற்றேன்.

வைஷ்ணவி: உங்களுடைய ஓவியங்கள் கிராமிய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால் நீங்கள் பல ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறீர்கள்?

பெருமாள்: நான் 1947இல் கல்லூரியில் சேர்ந்தபோது, என்னால் நகர வாழ்க்கையை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் மீண்டும் என் கிராமத்துக்குச் சென்றுவிட்டேன். சிற்பி மூக்கையா என்னுடைய சொந்தம். அவரும் சென்னை கலைக் கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரியில் கலை பயிலும் முறை பற்றி எடுத்துச் சொன்னார். அவருடைய கலையுடன் ஒப்பிடுகையில் என் கலைதான் சிறப்புடையது. அதனால் கலைப்படிப்பை ஏன் தொடரக் கூடாது என்று எண்ணி மீண்டும் சென்னை வந்தேன்.

சடுகுடு, கபடி, சிலம்பாட்டம் போன்ற கலைகளும் விளையாட்டுகளும் எங்கள் கிராமத்தில் உண்டு. அவற்றை என் குழந்தைப் பருவத்திலிருந்தே கூர்ந்து கவனித்து, எவ்வாறு ஓவியங்களாக மாற்றலாம் என்று சிந்திப்பேன். பின்னர், அவற்றை என் கலைமூலம் பதிவு செய்வேன். காவடி, கரகம், சாமியாடுதல் போன்றவற்றில் நானும் பங்குபெறுவேன். குழந்தைப் பருவத்தில் நாம் கண்ட காட்சிகள் நம்மைப் பின்தொடரும்.



வைஷ்ணவி: நீங்கள் இப்போது சென்னையில் இருந்தாலும் உங்கள் கிராமம் இன்றும் உங்கள் மனதில் உள்ளது?

பெருமாள்: நான் இப்போதுகூட நேரம் கிடைக்கும்போது என் கிராமத்துக்குச் செல்வேன். மீண்டும் ஊருக்குச் செல்வது ஒரு இனிமையான அனுபவம். குறிப்பாக, கிராம திருவிழாக்களில் பங்குகொள்வதுபோல் வேறு இன்பம் கிடையாது. கிராமிய மக்களின் வாழ்க்கையும் போராட்டங்களும் என்னை மிகவும் பாதிக்கின்றன. அவற்றைத்தான் என் ஓவியங்களின் மூலம் பிரதிபலிக்கிறேன். ஒவ்வொரு காட்சிக்கேற்ப நான் என் உருவங்களையும் வண்ணங்களையும் மாற்றுவேன். எடுத்துக்காட்டாக, ஒரு ஜல்லிக்கட்டை வரையும்போது ரத்தம் சிந்த, உடல்கள் தெறிக்க இருக்கும். இது, எனக்கு உலகளவில் புகழைக் கொடுத்திருக்கிறது.

நாங்கள் கிராமத்தில் பூமலர் ராசா, மலைச்சாமி போன்ற தெய்வங்களை வழிபடுவோம். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் திருவண்ணாமலை என்ற மலையில் உள்ள தெய்வங்களையும் வழிபடுவோம். அந்த மலையும் மக்களும் மிக அழகாக இருப்பார்கள். என் கிராம மக்களை நான் பலவிதமாக வரைந்திருக்கிறேன். சிலர் குழந்தைகள்போல் கள்ளம் கபடமில்லாமல் இருப்பார்கள். நான் இவை எல்லாவற்றையும் கவனிப்பேன். மூத்தவன் ஒருவன் இறந்தால் ஆடலும் பாடலும் இருக்கும். ஆனால் இளையவன் ஒருவன் இறந்தால் ஊர்வலம் சோகமாக இருக்கும். நான் இதையொட்டி ஓவியங்கள் செய்து வருகிறேன்.



வைஷ்ணவி: இதைத்தவிர நீங்கள் பல கிறிஸ்தவ ஓவியங்களைப் படைத்திருக்கிறீர்கள்...

பெருமாள்: நான் கல்லூரி காலத்திலிருந்தே கிறிஸ்தவ ஓவியங்களைச் செய்து வருகிறேன். ஏனென்றால், அயல்நாட்டவர் அத்தகைய ஓவியங்களை மிகவும் விரும்புவார்கள். நான் இந்துவாக இருந்தபோதும் கிறிஸ்தவனாக மாறியபோதும் நான், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கான ஓவியங்களைச் செய்து வருகிறேன். கலைக்கு மதம் கிடையாது. மதரீதியாக வேறுபாடுகளைப் பார்க்கும் ஒருவன் உண்மையான கலைஞனே கிடையாது.

வைஷ்ணவி: கிராமத்திலிருந்து சென்னை வந்தவுடன் நீங்கள் சமாளித்த விஷயங்கள்...

பெருமாள்: கல்லூரியில் படித்த காலம் மிகவும் கடினமான காலம். ஒரு தங்கும் விடுதியிலிருந்து படித்துக்கொண்டிருந்தேன். தினமும் புரசைவாக்கத்திலிருந்து கல்லூரிக்கு நடந்து செல்வேன். பல மாணவர்கள் விலையுயர்ந்த ஆடைகள் அணிந்து கல்லூரிக்கு வருவார்கள். ஆனால் நான் ஒரு வேட்டியும் சாதாரண சட்டையும் அணிந்து செல்வேன். பலர் என்னை இழிவாகப் பேசினார்கள். ஆனால் நான் எதையும் பொருட்படுத்தவில்லை. முரடன் என்ற பட்டமும் எனக்கு இதனால் வந்தது. நான் சென்னை கலைக்கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தபோது பலர் என்னை எதிர்த்தார்கள். ஆனால் நான் எல்லாவற்றையும் கடந்து வென்றுவிட்டேன்.



வைஷ்ணவி: சென்னை கலை இயக்கத்தைப் (madras art movement) பற்றி...

பெருமாள்: கே.சி.எஸ்.பணிக்கர் கல்லூரியில் துணை முதல்வராக இருந்தபோது ரஷ்யா சென்றார். அங்கு பலவிதமான ஓவியங்களைப் பார்த்துவிட்டு எங்களிடம் நவீன கலையைப் பற்றி கூறுவார். நவீன கலையை வற்புறுத்தி சில மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நவீனமுறையில் கலை படைக்க ஊக்குவித்தார். அவர் தேர்ந்தெடுத்த மாணவர்களில் நானும் ஒருவன். பணிக்கர், கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சோழமண்டலம் என்னும் ஓவியர்களுக்கான காலனியை தோற்றுவித்தார். என்னையும் அங்கு வீடு வாங்கச் சொன்னார். நானும் என் மனைவியும் ஆசிரியராக இருந்தமையால் எங்களிடம் பண வசதி இல்லை. இப்போது சோழ மண்டலம் கலைக்கான முக்கிய இடமாக உள்ளது. மேலும் அங்கு என்னுடைய ஓவியமும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

வைஷ்ணவி: அழகிய கிராமத்தைவிட்டு, மாசும் கூட்டமும் நிறைந்த சென்னையில் வசிக்கிறோமே என்ற குறை உள்ளதா?

பெருமாள்: நான் என்றும் அவ்வாறு நினைத்ததில்லை. கலைக்காக வாழ வேண்டும் என்பது என் சிந்தனை. பலர் என் ஓவியங்களைப் பார்க்க வேண்டும். சிறுவர் முதல் பெரியவர் வரை என் ஓவியங்களை ரசிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

வைஷ்ணவி: உங்களுடைய inspiration....

பெருமாள்: நான் சென்னை அருங்காட்சியகத்தில் பணிபுரிந்த மூன்று ஆண்டுகள் மிக முக்கியமானவை. அப்போது, அங்குள்ள அமராவதி சிற்பங்களும் அவற்றுள் காணப்படும் உருவ அமைப்பும் ஏன் ஓவியங்களையே மாற்றி அமைத்தன. மேலும் அருகில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் பல கலை சம்பந்தமான புத்தகங்களைப் பார்த்தேன். van gogh, gaugin, monet போன்ற ஓவியர்கள் எவ்வாறு கலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள் என்பதைக் கண்டு பூரித்தேன்.



வைஷ்ணவி: உங்களைப் பாதித்த இந்திய ஓவியர்கள்...

பெருமாள்: எனக்கு தனபாலன் ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். அவருடைய ஓவியங்கள் கோயிலில் காணப்படும் பழங்கால ஓவியங்களைப்போல் இருக்கும். பின்னர், அவர் நவீன சிற்பங்களைச் செய்யத் தொடங்கினார். அதேபோல் ஸ்ரீனிவாசுலுவின் ஓவியங்களும் என்னை ஈர்த்தன. ஆனால் அவை எல்லாவற்றையும்விட என் ஓவிய பாணிதான் எனக்குப் பிடிக்கும். கோடுகளின் மூலமாகவோ வண்ணங்களின் மூலமாகவோ நாம் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. ஆனால் நான் செய்யும் ஓவியங்களிலோ அது முடியும்.

வைஷ்ணவி: உங்கள் ஓவியங்களில் நிறக்கோடுகள் உருவத்தை ஒட்டி இருக்கின்றன...

பெருமாள்: ஆமாம். அது என் பாணி. தொலைவிலிருந்து பார்க்கும்போது இந்த வெள்ளைக் கோடு ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும்.

வைஷ்ணவி: உங்கள் படங்களில் உள்ள உருவங்கள் ஆப்பிரிக்க நாட்டு கலையில் காணப்படும் உருவங்களுடன் தொடர்பு உள்ளன என்பது சிலரின் எண்ணம்...

பெருமாள்: கிராமத்தில் இருக்கும் மக்கள் இப்படித்தான் இருப்பார்கள். ஒரு வேட்டியும், துண்டும் இயல்பாக அணிந்து இருப்பார்கள். ஏனென்றால், அதுதான் வேலை செய்வதற்குச் சீரான உடை. ஆப்பிரிக்கா எங்கு இருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது. நான் வரைவது கிராம மக்களும் அவர்கள் வாழ்க்கையும். எனக்குள் இருக்கும் உணர்வுகளை நான் கித்தானில் அப்படியே பதிவு செய்கிறேன். நான் என்றும் உருவ அமைப்பை முன்பே முடிவு செய்வது இல்லை.

வைஷ்ணவி: ஓவியத்தைத் தவிர, நீங்கள் வேறு எந்த ஊடகங்களில் வேலை செய்திருக்கிறீர்கள்?

பெருமாள்: நான் சென்னை கலைக் கல்லூரியில் அச்சுக்கலை ஆசிரியராக இருந்தேன். நான் அச்சுக்கலை, சிற்பம் என பல ஊடகங்களைக் கையாண்டுள்ளேன்.



வைஷ்ணவி: ஒரு ஓவியனுக்குத் தேவையான முக்கியப்பண்பு...

பெருமாள்: வாழ்க்கையில் நாம் காணும் ஒன்றை, கலையின் மூலம் பதிவுசெய்யும் திறன் வேண்டும். ஒவ்வொருவனுக்கும் ஒரு தனி கற்பனைத்திறன் உள்ளது. அதை வெளிப்படுத்த வேண்டும். உருவம் இருக்கும் படமோ, உருவமற்ற படமோ அது தனித்தன்மையுடன் இருக்க வேண்டும்.

வைஷ்ணவி: உங்களுடைய ஓவியங்களில் உருவங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்குள் ஒரு abstract தன்மையும் உள்ளது.

பெருமாள்: ஓவியங்கள் உருவங்களைச் சார்ந்து இருக்கலாம். இல்லாவிட்டால் வண்ணங்களைச் சார்ந்து இருக்கலாம். நான் செய்யும் ஓவியங்களில் உருவமும் உண்டு, வண்ணங்களும் உண்டு. இது ஒருவிதமான semi-abstraction.

வைஷ்ணவி: ஓவியத்தில் புதுமை...

பெருமாள்: புதுமையை நோக்கிச் செல்வது ஒவ்வொருவர் விருப்பம். அனுபவத்திலிருந்து புதுமை வந்தால் அது சரி. ஆனால் பலர் இணையதளத்தைக் கண்டு தங்கள் கலையைப் படைக்கிறார்கள். அது தவறு.

நல்ல கலைக்கு விலை மதிப்பு கிடையாது. ஆனால் இப்போது பலர் ஒரு வெறும் கோடைப் போட்டுவிட்டு பல லட்சங்கள் கேட்கிறார்கள். அதை வாங்குவதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை.