Saturday 27 August 2016

நவீன கவிதை மனம் - 08 மீள் பகிர்வு : றியாஸ் குரானா

நவீன கவிதை மனம் - 08 மீள் பகிர்வு
இந்தக் கூற்றிலிருந்து, கவிதை முறைமைகளை பரிசோதனை செய்வதில் ஒரு தயக்கத்தை நகுலனின் மனம் தனக்குள்ளே கொண்டிருக்கிறது என்பதை ஊகிக்கலாம். இந்த வகைாயன இலக்கியப் பிரதிச் செயல்களுக்கு ஒரு பெயரிருக்கிறது. COLLAGE POETRY WORK ஆனால், இந்தப் புரிதலுடன் நகுலன் இதைச் செய்யவில்லை என்றே நினைக்கிறேன்.
அதை இனிப் பார்க்கலாம். ”டைம்ஸ் லிட்டரி சப்ளிமென்ட் ” என்ற இதழில் ”வில்லியம் பரோஸ்” ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் அழுத்தம் கொடுத்த வரிகள் இவைதான்......................................
Riyas Qurana - றியாஸ் குரானா
நவீன கவிதை மனம் - 08
முதலில் நகுலனின் கவிதை ஒன்றை தருகிறேன். அதைப் படியுங்கள். சில நேரம் நீங்கள் சொல்லக்கூடும் இது நகுலனின் கவிதையல்ல. அவரின் தொகுப்புக்களில் இல்லை. ஆகவே, நான் புனைவாக இதைச் சொல்கிறேன் என்று. கிட்டத்தட்ட இது புனைவு போன்றதுதான். முற்று முழுக்க புனைவானது அல்ல. நவீன கவிதை தனது ஆரம்ப காலத்தில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டது. தமிழ் கவிதைக்கென்று இருந்த யாப்பை உதறிவிட்டு, எப்படி கவிதையை நிகழ்த்திக் காட்டுவது என சிந்தித்தது. அப்போது, ஆங்கிலப் பரீட்சயமுள்ள பலர் ஆங்கிலத்தில் வெளிவரும் கவிதைகளைப் படித்தும், கவிதை குறித்த முன்வைப்புக்களை உள்வாங்கியும் தமிழில் அதை நிகழ்த்த முற்பட்டனர். எனினும், சில எடுத்துரைப்பு முறைமைகளை மட்டுமே இவர்களால் பின்தொடர முடிந்தது. என்பது வரலாறு.
சற்று முன்னர்கூட க.நாசுவின் ஒருவகை எடுத்துரைப்பு பரிசோதனை முறைமையை இங்கு பதிந்திருப்பேன். அந்த முறை தொடரப்படவில்லை. அந்தச் திசையில் கவிதை குறித்து சிந்திக்கவும், அன்றை நவீன கவிதைச் சிந்தனையாளர்களால் முடிந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு அந்தக் கவிதையை கீழே தருகிறேன். இதை நான் எடிட் செய்திருக்கிறேன். சிலர் சொல்லக்கூடும் ஒரு கவிஞரின் கவிதையை எடிட் செய்யக்கூடாது. அது அவரின் தனித்தன்யைில், சுதந்திரத்தில் தலையிடுவது என. அவைகளை ஒரு புறம் வைத்துவிட்டுத்தான் இதைச் செய்கிறேன். இப்படி ஒரு கவிதையை மயன் எழுதவே இல்லை என்றுகூட சிலர் சொல்லக்கூடும் சொல்லும்போது, அதற்கான பதில்களை அவர்களுக்கு தருவேன்.
கநாசு மயன் என்ற பெயரில் எழுதும்போது,
மின்னல் கீற்று
புழுக்கம் தாங்காமல்
அன்றையத் தினசரியை
விசிறிக் கொண்டு நடந்தேன்;
இந்தப் புழுக்கத்திலே
மழை பெய்தால்,
நல்லதென்று நினைத்தேன்.
தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல்
சட்டச் சடவென்று பத்துத் தூற்றல்
ஆஹா! பத்தே பத்துத் தூற்றல்தான்.
பின் புழுதியைக் கிளறிய காற்று விசிற
மழை ஓடி ஒழித்துவிட்டது.
கரிய வானம் பிளந்து கொண்டு
கோடை மின்னல் கீற்றை தேடியது.
கையை நான் நீட்டியிருந்தால்
அக்கோடை மின்கீற்று
என்னைத் தொட்டிருக்கும்;
உலகை அழித்திருக்கும்.
தினசரிச் செய்திகள் கற்றிருக்கும்;
தூற்றல் இன்பம் மரத்திருக்கும்;
புழுக்கம் வெளி நிறைந்திருக்கும்;
புழுதி எழுந்து படர்ந்திருக்கும்;
உலகம் ஒழிந்திருக்கும்.
நான் தன்னந்தனியாக இருந்து
என்னதான் செய்வது.
அதனால்தான் கை நீட்டாதிருந்தேன்.
கவிதையை வரிகளில் கண்டுபிடிக்கும் ஒருவகை புரிதலுக்கு நவீன கவிதை விமர்சகர்களும், கவிஞர்களும் பழக்கப்படத்தொடங்கியதே அதற்கான முக்கிய காரணம். கவிதை என்பது, முழுமையான ஒன்று.. அதிலிருந்து சிலவரிகளை மட்டும் உருவி எடுத்து, இது அற்புதமான படிமம் என்றோ, மிக கவித்துவமாக வந்திருக்கிறது இந்த வரி என்றோ விபரிக்கவே முற்பட்டனர். ஒரு மனிதனிக் குறித்த ஒரு பகுதியை மட்டும் பிய்த்தெடுத்துக்கொண்டு போய் சா இது அற்புதமானது எனச் சொல்வதற்கு நிகரானது இது. படிமம் என்ற ஒரு பிசாசு இவர்களைப் போட்டு ஆட்டிவைத்ததுதான் பிரதான காரணம். அது அன்று தேவையானதும்கூட என்பதை மறுக்கவில்லை. எனினும், வரிகளைக் கடந்து கவிதைச் சம்பவங்களை முன்வைப்பதினுாடாக, பிரதியினுள்ளிருக்கும் அனைத்து அம்சங்களையும் பொருட்படுத்தி கவிதை என்ற அந்த முழுமையை பேச்சுக்கு கொண்டுவர முடியவில்லை. அதனால்,தான் மேலுள்ள கவிதை எடுத்துரைப்பு முறை தொடரப்படவில்லை. அதுபோல, பலவகையான கவிதை எடுத்துரைப்பு முறைமைகள் பரிசோதிக்கப்படவில்லை.
பரிசோதிக்கப்படவில்லை என்று சொல்ல முடியாது. பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. நகுலன் அதை முயற்சித்திருக்கிறார். ஆனால் அதுவும் தொடரப்படவே இல்லை. நகுலன் கவிதை முறைமையை பரிசோதிப்பதற்கு, கவிதை குறித்த அவரின் புரிதலே காரணமானது. அப்புரிதலில் இருக்கும் பிரதானமான குறைபாட்டையும் இங்கு நான் சுட்டிக்காட்ட இருக்கிறென். அதற்கு முன், அவர் பரிசோதனையில் ஈடுபட்ட கவிதையை இங்கு தருகிறேன். இதைக்கூட அவரின் தொகுப்புக்களில் காணமுடியாது என நினைக்கிறேன். சிலவேளை இருக்கலாம். அண்மையில் அவரின் தொகுப்புக்களை படித்தவர்கள் சொல்லுங்கள்.
இப்படி ஒரு கவிதை
நெய்தல்
காண்மதி பாண
நீ உரைத்தற்கு உரியை (நெய்தல்-40)
யான் எவன் செய்கோ பாண (நெ - 133)
ஓண்தொடி அரிவை
கொண்டனள் (நெ - 172)
இரவினாலும்
இன் துயில் அறியாது
அரவு உறு துயரம்
எய்துப தொண்டித்
தண் நறு நெய்தல் நறும்
பின் இருங் கூந்தல்
அணங்குற்றோரே (நெ 178)
தோளும் கூந்தலும்
பல பாராட்டி
வாழ்தல் ஒல்லுமோ பாண
அம்ம வாழி பாண (நெ - 178)
பிரியினும் பிரிவது அன்றே
இவளோடு மேய
மடந்தை நட்பே (குறிஞ்சி - 207)
புல்லென்று படரும்
இம்மாலைவாய்
அம்பல் கூம்ப
அலரும் சிதற
ஊரும் இவள் உருவம்
கண்டெனம் அல்லமோ
பாண ஆகலின்,
வறிது ஆகின்று
என் மடம் கெழு நெஞ்சே (மருதம் - 47)
இதுதான் அந்தக் கவிதை, வெவ்வேறு பிரதிகளிலிருந்து வரிகளை உருவி எடுத்து தனியான வேறு ஒரு பிரதியை உருவாக்கிப் பார்த்திருக்கிறார். இதை செய்துவிட்டு கீழே நகுலன் இப்படி கூறியிருப்பார். ” கவிதையை நான் எழுதிவிட்டேன். இந்தமாதிரி முயற்சிகள் வேண்டுமா என வாசகர்கள் நிச்சயித்துக்கொண்டால் நல்லது”
இந்தக் கூற்றிலிருந்து, கவிதை முறைமைகளை பரிசோதனை செய்வதில் ஒரு தயக்கத்தை நகுலனின் மனம் தனக்குள்ளே கொண்டிருக்கிறது என்பதை ஊகிக்கலாம். இந்த வகைாயன இலக்கியப் பிரதிச் செயல்களுக்கு ஒரு பெயரிருக்கிறது. COLLAGE POETRY WORK ஆனால், இந்தப் புரிதலுடன் நகுலன் இதைச் செய்யவில்லை என்றே நினைக்கிறேன்.
அதை இனிப் பார்க்கலாம். ”டைம்ஸ் லிட்டரி சப்ளிமென்ட் ” என்ற இதழில் ”வில்லியம் பரோஸ்” ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் அழுத்தம் கொடுத்த வரிகள் இவைதான்.
” எந்த ஒரு எழுத்துப் பத்தியையும் எடுத்துக்கொண்டு அதன், வார்த்தைகளையும், சொல் அமைப்புகளையும் மாற்றி அமைத்தால் ஒரு நுாதன உருவைக் கொண்டுவரலாம்”
இந்த வரிகளை நகுலன் புரிந்துகொண்ட விதம்தான் இப்படி ஒரு கவிதை முறையை பரிசோதிக்க இடம்தந்தது. பரோஸ் குறிப்பிட்டது ஒரு பிரதியை அதற்குள்ளிருக்கும் சொற்களையும், வார்த்தை அமைப்புக்களையும் கலைத்து புதிய ஒரு ஒழுங்கில் அமைக்கும்போது மீண்டும் புதியதொரு பிரதியைக்கொண்டுவரலாம் என்பதே. ஆனால், நகுலன் புரிந்துகொண்டது வேறு, அது கட் அன் பேஸ்ட் கவிதை செயல் முறை. நிச்சயமாக இந்த இரண்டு முறைமைகளுக்கும் வேறுபாடுகள் உண்டு.
ஒரு பிரதியை கலைத்துப்போட்டு பிறிதொரு பிரதியை உருவாக்குதல். இது இன்றைய கவிதைச் செயலுக்கு முற்றிலும் அவசியமான ஒன்று. அதாவது நவீனம் கடந்த கவிதைகளை புரிந்துகொள்ளவும், உருவாக்கவும் அவசியமானது. நகுலன் சரியாகப் புரிந்துகொண்டு முயற்சித்திருந்தால் இன்று தமிழ்க்கவிதைகள் வேறு ஒரு இடத்தை தொட்டிருக்கும்.
கநாசு வின் கவிதை முறைமை தொடரப்படாதது தமிழ் கவிதைக்கு எவ்வளவு இழப்போ, அதற்கு நிகரான இழப்புத்தான், நகுலன் வில்லியம் பரோஸின் கவிதை குறித்த முன்வைப்பை தவறாக புரிந்துகொண்டதும். இந்த இரண்டுமே, தமிழ் நவீன கவிதையின் திசைமாற்றத்தை தடுத்துவிட்ட முக்கிய தருணங்களாகும். அதற்கான முழுப்பொறுப்பும் கடந்த காங்களில் கவிதையை தீர்மானிக்கும் சக்திகளாக தங்களை முன்னிறுத்திய இலக்கியச் செயற்பாட்டாளர்களே.