Wednesday 3 August 2016

வேலிமீறிய கிளை : நாரணோ ஜெயெராமன் கவிதைகள் நூலுக்கான பிரமிள் முன்னுரையிலிருந்து......., க்ரியா, 1976.

இடையீடாக
கவிதை பற்றிய பிரமிளின் (இடைக்கால) விமர்சனக் கருத்துக்கள் - மாதிரிக்கு ஒரு பதிவு,
(பக்கக் கட்டுப்பாட்டால் மிக இறுக்கமாக எழுதப்பட்ட முன்னுரை இது என்பதால் பொறுமையாகத்தான் உள்வாங்க வேண்டும். இடையில் ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது காண்க)
வேலிமீறிய கிளை : நாரணோ ஜெயெராமன் கவிதைகள் நூலுக்கான பிரமிள் முன்னுரையிலிருந்து.......
கவிதை
------------
பிரமிள்
அகத்துறை வாழ்வின் ஸ்திரீலட்சியமாக வாழ்ந்த கண்ணகியை, அவளது அன்பின் வீர்யம், தார்மிகத்தின் தீவிரமாக முகம்கொள்ள, புறத்துறையின் சிகர நிகழ்ச்சியான ஒரு புரட்சியின் நடுநாயகியாக உயர்த்திச் ‘சிலப்பதிகார’ மாகப் படைத்தபோது, இளங்கோ, தனிமனிதத் தீபமாக ஜ்வலித்த நியதி பொதுவாழ்வையும் பற்றிப் பெரு நெருப்பாகி யதைச் சித்தரித்தான். ‘சிலப்பதிகாரம்’, இந்த நியதியின் ஊற்றுக்கண்ணி லுள்ள தூய்மையான ஒரு கனல் நிலையாக நிதர்சனமாக்கி, ஒரு சமூக தர்சனமாகவே பெருகி, வால்மீகியின் ராமாயணப் பாத்திரங்களை கம்பனின் தமிழ்ப்படைப்பில் உன்னதமான நியதிகளின் பாற்படுத்து மளவு ஒரு நாகரிகத்தின் ஆளுமைக் காவியமாக நிலைத்த வலிமை வாய்ந்த சிருஷ்டி. ஆனால்,
இன்று நுண்ணுணர்வுகளை மழுங்க அடிக்கும் சமகால வாழ்வின் தமிழ் வேஷமாகவே, இளங்கோவின் தீபத்தினடியில் இருளாகி, ருசிகரமான போலிகள் பதுங்குகின்றன. காந்தியின் தியாகக் கொள்கை வெகுஜனவாதமாகியதும், ருசிகரமான காதல்கதைகளுக்கு ஒரு ஜனரஞ்சகமான பின்னணியாகிறது. நிதர்சனத்தையோ, புத்துணர் வையோ ஆதர்சிக்காமல், மனோ விகாரத்தைச் சார்ந்த ருசிகரத்துக்குக் காலாதீதமான மகுடங்களைத் திருடிச் சூட்டுகிற போது, உக்கிரகிக்கும் கவிஞனது எழுத்து, மகுடத்தை அதன் மூலமதிப்புக்கு உருக்கி, விகாரங் களை அம்பலப்படுத்துகிறது. உருகிவிட்டது எனினும், மகுடத்தின் சரித்திரகால ஸ்தானத்தை நினைவில் கொள்வதோடு, பொன் தனது அகமதிப்பை இழக்காமல், புதிய மௌலிகளாகச் சமையக் காத்திருக் கிறது என்பதையும் அறிவுவாதி, கவிஞன் ஆகிய இருவரும் உணர்வார்கள். இத்தகைய உணர்வு அற்றவர்கள், இன்று தமது மண்டைகளின் கிரகிப்புக்கே அப்பாற்பட்ட தத்துவதர்சிகளைக்கூடப் ‘பாப்புலர்’ ஆக்கிவிட்ட, சமகால ‘இஸம்’களின் தளத்தில் நின்று மட்டம் தட்டி, சரித்திர உணர்வோ, அடிப்படை மதிப்பீட்டுணர்வோ அற்ற தமிழகத்தில் பவிஷû கொள்கின்றனர். ஒரு ஐம்பது வருஷ காலத்துக்குள், இன்று கடந்துவிட்ட தமிழ் இலக்கியச் சரித்திரத்தை, அந்த அந்த எழுத்தாளர் களின் சமகாலப் பின்னணியை உட்படுத்தி ஆராய்ந்தாலே, எவ்வித தரிசனம் உள்ள எழுத்தாளர்கள், மதிப்பீடுகளின் அடிப்படைகளை ஆதர்சிக்கும் உக்கிரமான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் எனக் காணலாம். வாசகனின் அநுபவத்தில் நிதர்சன சக்தியாகக் கனலும் அந்தப் படைப்பாளிகளின் சிருஷ்டிகள், சாட்சிகளாக நிற்கும். அடிப் படை மதிப்பீடுகளைப் புத்துணர்வுடன் சுயதர்சனமாக அனுபவிப்பது தான், நிதர்சன உக்கிரம் வாய்ந்த சிருஷ்டிகரத்தை விழித்தெழவைக்கும் என்ற உண்மையும் புலனாகும்.
2
வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்தவன் புத்துணர்வு பெறுகிறான்; புத்துணர்வு பொங்கும் வெளியீட்டின் வழியே கலையுருவில் நிதர்சனத் தைப் புனர் படைப்பாகச் சிருஷ்டிக்கிறான். ஆனால், ருசிகரமான அநுபவமோ, மனசின் முதிர்ச்சியின்மை, விகாரம் ஆகியவற்றைச் சார்ந்தது. ஆழ்ந்துயர்ந்துணராதவர்கள் படைப்பவற்றின் நிரந்தர த்வனி ருசிகரம்தான். இவ்வகையினர் தம்மை உன்னத ஜீவிகளாக வேஷமிட்டுக் காட்ட காந்தீயமும் கண்ணகீயமும் உபயோகமானால், இன்னொரு புறம், திறனற்ற இலக்கிப் போலிகளுக்கு, புரட்சியும் கட்சியும் அந்நியத்துவமும் ‘பாப்புலர்’ ஆன ‘இஸம்’களும் கிடைக்கின்றன.
நிதர்சன ஊற்றிலே பருகியவனோ வாழ்வின் அவல மதிப்பீடு களைத் தனது படைப்பில் நிகழ்த்தி நிதர்சனத்தின் குரூர சந்நதியாக்கு வதன் மூலமே உன்னதமான மனச்சலனங்களை எழுப்புகிறவனாவான். இந்த மனச் சலனங்கள் ஆக்கபூர்வமாக மனோசக்திகளாக மாறி வாசகனின் வாழ்வையே தொற்றிச் சஞ்சரிக்குமளவு சில அபூர்வ படைப்பாளிகளிடமிருந்து பிறக்கின்றன. இது ஒழுக்கமுறை, புரட்சி குரல் என்ற தற்காலிகக் குளிகையோ, தார்க்குச்சியோ அல்ல. தானே வாழ்ந்து கற்றுக்கொள்கிற வகையான நிதர்சனமாக, சிருஷ்டிக்கப்பட்ட கலையுருவமே அமைந்து ஏற்படுத்தும் ஆழ்ந்த பாதிப்பு இது. இத்தகைய படைப்புக்களின் பாதிப்பில் நாகரிகங்கள் விழித்தெழுகின்றன, தம்மை விமர்சித்துக்கொள்கின்றன.
வாழ்வின் ரகஸியங்களாகத் திவ்யம்கொண்டு, உள்ளத்தை ஜீரணம் கொள்ளப் புறவயமான குரூரங்களாகி, மனிதன்மீது பாய்வதுதான் நிதர்சனம். நிச்சய புத்தியைச் சிதறடிப்பதன் மூலமே, நிதர்சனம் மனிதனை உட்கொள்கிறது. இது மனோபங்கம். பழமை சார்ந்த நிச்சயநிலையின் வீழ்ச்சி. இதன் விளைவாக, பழமையின் இழப்பில், துடைக்கப்பட்ட வெறுமை நிகழ்கிறது. இந்த வெற்றுணர்வின் ஒரு சாயல், ‘துக்கம்’ என்று உணரத்தக்க மனசின் கனல்நிலை. இன்னொரு நிதர்சனத்தை இந்த இருமுகச்சாயல்களாகக் காணலாம்.
உணர்வுநிலையே அனுபவநிலை. பொருள் காணுவது அறிவு பூர்வமாகவே ஆகும். கலை இவ்விரண்டுவகை அணுகுதல்களுக்கும் ஈடு தருவதெனினும், நிதர்சன சக்தியாக வெளியீடு பரிணமிக்கிறபோது, உணர்வுநிலைலேயே பொருள் அனுபவமாகிறது.
தமிழ் விமர்சனமோ, பொருளம்சத்தையே முன்நிறுத்தி நிதர்சனானுபவத்தை இழந்து, தனது பாரம்பரியத்தின் தேய்ந்த, வலுவிழந்த மதிப்பீடான, வியாக்யான வரம்புக்குள் தேங்குகிறது. வியாக்யானத்துக்கு அகப்படும் பொருள் போதும் என்பது, இந்த மதிப்பீட்டின் அடிப்படை. நிதர்சனத்தை அனுபவிக்கிற உணர்வுநிலை, வாழ்வைப் புறநிலையில்கூட அதன் மெய்மையாகச் சந்திக்கிற அகச்சக்தியை இழந்து, தானும் மங்க, லட்சியங்கள், நியதிகள், கொள்கைகள், நேர்மையின் பவிஷûகள், ‘இஸம்’களின் புரட்சிப் பகட்டுகள் என ‘பொருள் பண்ணி’, இல்லாத பொருளையும் இருப்பதாக மசியும் இழிவாக, இன்று கவிதையிலும் விமர்சனத்திலும் தமிழ்மூளை வேலைசெய்துகொண்டு வருகிறது. ‘பாடை, நாய் போன்ற தீவிரமான பிரத்தியட்சங்கள்கூட இவர்கள் கையில் வீர்யத்தை இழக்கின்றன’ என்றும், ‘விகடத்தனமான... இந்த மனநிலைக்கும் இவ்வகை விகடத்துக்கும் கவிதை அகப்படாது’ என்றும், பிறிதொரு கட்டுரையின் இருவேறு இடங்களில் எனது கருத்தைக் காணலாம்.
இங்கே பொருள் வீர்யம் பெறுவதும், மனநிலை கவிதையாக, அதாவது உணர்வினைத் தாக்கும் அனுபவப் பொருளாக, வெளியீட்டுக்கு அகப்படுவதும்தான் கவனிப்புக்கு உரியவை. ஆனால், இவ்வரிகளுக்குப் பதிலாக, எவ்விதத்திலும் கலைஞனுடன் ஒப்பிடத் தக்க சூசகம் பெறாத நாயைக் ‘கலைஞன்’ என்றும், பாடையை விட்டுவிட்டுப் பாடைதூக்கிகளின் கால்களை- அதுவும் ஓர் இழவு வீட்டின் முக்கிய கடமையாகப் பிணத்தை அகற்றுவதில் ஈடுபட்டுள்ள கால்களை - அவை நாயை உதைப்பதை மட்டும் கொண்டு, ‘சமூக மதிப்புகள்’ என்றும், வாய்க்கு வந்த, ‘பாப்புலர்’ பொருளைக் கவிதைக்கு ஏற்றும்போது, வியாக்யான சாத்யத்தைக் கவிதையின் மதிப்பீடாக மயங்கும் தமிழ்த்தனம், சொத்தையாகிப் போன தனது பல்லைக் காட்டிவிடுகிறது. தெருவைக் காத்து, திருடர்களை மாட்டி வைத்து, குரல்தரும் நாய், வீசப்பட்ட இலையிலுள்ள உணவை நோக்கித் தாவும் போது, குறுக்கே டப்பாங்கூத்து ஆடுகிற சில காலிகளின் கால்கள் மறித்து உதைப்பது போன்ற ஒரு நிலைமைதான், மேற்படி வியாக்யானத் துக்குப் பொருந்தக் கூடியது. இதைப் படித்ததும் இந்த ரகத்தில் இனி நிறையவே எழுதப்படக்கூடும். ஆனால் அதுகூட, கவித்துவ வீர்யத்தோடு நிகழ்ந்தால்தான் நிதர்சனானுபவம், சிருஷ்டி, கவிதை என ஆகும்.
‘முன்னுரை’. வேலிமீறிய கிளை, நாரணோ ஜெயெராமன், க்ரியா, 1976.