Tuesday 14 April 2015

இதில் இல்லை அவர் பெயர் - 1999 - ஆரண்யம் முதல் இதழில் விக்ரமாதித்யனின் கவிதை

இதில் இல்லை அவர் பெயர்
****************************************
https://www.facebook.com/sreepathy.padhmanabha?fref=nf

மனசுக்குப் பிடித்த
கபிலர் பரணர் ஔவை
இளங்கோ கம்பன்
அருமை ஆண்டாள்
காரைக்கால் அம்மையார்
ஜெயங்கொண்டான்
திரிகூட ராசப்ப கவிராயர்
பலபட்டடை சொக்கநாதபிள்ளை
பாரதி
நமது கண்ணதாசன்
நகுலன்
எல்லோரையும்
மீறிய நம் பிரமிள்
அன்பான கலாப்ரியா
சுகுமாரன்
பொறாமைப்பட வைக்கும் தேவதேவன்
காளமேகம் போல
ஞானக்கூத்தன்
இளைய
தலைமுறையில் சமய்வேல்
இனிய
யூமா வாஸுகி
வளர்ந்து
வரும் யவனிகா ஸ்ரீராம்
வம்பு
வழக்குப் பண்ணும் கைலாஷ் சிவன்
இதோடு முடியாது
எங்கள் தமிழ்க் கவிதை
இதில்
இல்லை அவர் பெயர்
*******
1999 - ஆரண்யம் முதல் இதழில்
விக்ரமாதித்யனின் கவிதை

இரண்டாம் வரவு - பிரசுரமான என் முதல் கவிதை

[பிரசுரமான என் முதல் கவிதை - 1994 -இல் ‘புதிய பார்வை’ இதழில் (அப்போது பாவை சந்திரன் பொறுப்பாசிரியராக இருந்தார்). இரண்டு பாகங்களாக எழுதிய கவிதையின் இரண்டாம் பாகம் மட்டுமே பிரசுரமானது. முதல் பாகம் ‘அமெச்சூர் அகலிகை’ என்னுடைய முதல் தொகுப்பில் இடம்பெற்றது.]

இரண்டாம் வரவு அல்லது ப்ரொஃபஷனல் அகலிகை  - ஸ்ரீபதி பத்மநாபா

இப்போதெல்லாம் அவருடைய முகத்திலும்
உன்னைக் காணமுடிகிறது என்றாலும்
உன் ஆயிரம் விழிகளின் பிரகாசத்தை
அவர் விழிகளில் காணமுடிவதில்லை

மற்ற விரல்களின் பாகங்கள் தொட்டு
அவருடைய பெருவிரல் எண்ணும்
மந்திரங்களின் தொகை
எப்போதும் ஆயிரத்திலேயே முடிகிறதோ
என்ற சந்தேகம் எழும் எனக்குள்

கால்தூசி பட்டு இரண்டாம் முறையாய்
நான் வந்த பின்னும் இன்னும்
இந்த ஜபங்களினூடே அந்த ஊளையிடல்
காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது

சோணை நதியில் நீராடுகையில்
மீன்கள் கடிக்கும் இடமெல்லாம்
உன் இதழ்கள் அழுந்திய நினைவுத் துணுக்குகள்

உனக்கும் தெரியும்
கல்லுக்குள் மாயமாய் மறைவதன்
இன்பம்

என்னையறியாமலேயே உன் மூச்சுக்காற்றுக்காய்
சிலிர்த்தெழும் என் மெல்லிய மயிரிழைகள்
இறுகிப்போய் பின் இளகி மீண்டும் கல்லாய்
இறுகிப்போயிருந்தாலும் இன்னும் அங்கே தேன் சுரக்கும்
சுராபோதை இன்னும் உள்ளே
ஊறிக்கொண்டுதான் இருக்கிறது

மீண்டும் கல்லாய் மாறினால்தான் என்ன
காலங்கள் பறக்க கல்லாய்
ஒரு யுகமோ ஒரு வினாடியோ
நிற்கலாமே

சாபங்களுக்காக நியாயங்களை
ஏன் விட வேண்டும்
தவனுக்கு எதற்கோர் மேனகை

வா.
கல்லுக்காய்க் காத்திருந்த நான் மீண்டும்
கல்லுக்காய்க் காத்திருக்கிறேன்
அதற்கு முன் மீண்டும் ஒருமுறை
வா.