Monday 6 April 2015

முரண்வெளி 2005 – 2008 வரையிலான பிரதிகளின் முழுமையான தொகுப்பு



முரண்வெளி


2005 – 2008 வரையிலான பிரதிகளின் முழுமையான தொகுப்பு


Skip to content

இல்லம்
சில எதிர்வினைகள்
நன்றி




CATEGORY ARCHIVES: கட்டுரைகள்

நான் ஒரு வெள்ளாளன், பிராமணன்…


Posted on மார்ச் 6, 2009 | பின்னூட்டமொன்றை இடுக


எழுதியது: ஜூன் – நவம்பர் 2006 \ வலையேற்றம்: டிசம்பர் 2006


சத்தியக்கடதாசியின் மீள் இடுகை:http://tinyurl.com/b55ldb


http://tinyurl.com/bee3z6







முன் பள்ளி வகுப்பில் கல்வி கற்க நான் அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எந்தப் பஞ்சமர்களுடனும் நான் சேர்ந்து விடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கையாலும், வேறு சில குடும்ப பொருளாதார சூழ்நிலைகளாலும் அம்மா என்னை அங்கு சேர்க்கவில்லை. பனங்கிழங்குகளை கிண்டியபடி வேர்க்க விறுவிறுக்க அவள் சொல்லித்தந்த ஆனா ஆவன்னா தான் எனது முன்பள்ளிப் பாடங்கள். அம்மாவிடம் தன்னைக் கைவிட்டுச் சென்ற அய்யனுக்கெதிராக (அப்பாவுக்கு) என்னை வளர்த்து ஓர் பிராமணனாக-பத்ததி (சமஸ்கிருதத்திலும் குருகுலக் கல்வியிலும் உயர்தகுதி பெற்ற பிரம்மஸ்ரீ பிராமணர்கள் மாத்திரம் சொல்லக்கூடிய பிரார்த்தனை) வாசிக்கிற பிராமணனாக-எடுத்துவிட வேண்டுமென்ற வெறி இருந்தது. அப்போதெல்லாம் அம்மா எனக்கு முன்னுதாரணங்களாய்க் கூறியது கோப்பாய் சிவம் என்கிற ஒரு பிராமணரின் புத்தகங்கள், இலங்கை வனொலியில் கடமையாற்றிக் கொண்டிருந்த ஹரிஹரஷர்மாவின் குரல் என்பவற்றைத்தான். வேறெந்தக் கனவுகளையும் என்னுள் கிளர அம்மா அனுமதித்ததில்லை. பனங்கொட்டைகளை பொறுக்கி கடகத்திலிட்டபடி, புகையும் அடுப்பை ஊதியபடி, இடியப்பம் புழிந்தபடி இவர்களைப் பற்றிய உயர்வான புனைவுகளை அம்மா சொல்லிக் கொண்டிருப்பாள். கயத்ரி மந்திரத்தை சொல்லிமுடித்த மாலைப் போதொன்றில் அவள் கூறினாள்; ‘நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடம். ரயில்வேப் பொடியள், நளச்சிணியள் (எங்கேயோ இருந்து இடம்பெயர்ந்த வந்த பஞ்சமர்கள், கைவிடப்பட்ட பாழடைந்த ரயில்வே குவார்ட்டர்ஸ்களில் தஞ்சமடைந்திருந்தனர். அவர்களது பாவனைக்கு கோவில் கிணறு மறுக்கப்பட்ட பின்னர் அசுத்தமான ரயில்வே கிணற்று நீரை அவர்கள் பருகினர்.) எல்லாம் வருவாங்கள். அவங்கள் ஆரோடயேனும் சேந்தாயெண்டு கதை வந்துது… அம்மா உனக்கு இல்லை சரியோ, நீ கோமதி மாமின்ர பொடியனோட மாத்திரம் சேர். சாப்பிடேக்க சாப்பாட்டுப் பெட்டிமூடியால மறைச்சு வைச்சுத் தான் சாப்பிட வேணும்-நீ பிராமணன்! ஏதாவது திருகுதாளம் பண்ணினாய், எனக்கு வந்து சொல்ல ஆக்கள் இருக்கினம் சரியே.’



பாடசாலையில் முதல்நாள் எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது-நான் பயப்பிட்டுக் கொண்டிருக்கவில்லை. எல்ல ஆசிரியர்களும் நான் அப்பாவைப் போலவே இருப்பதாய் அம்மாவிடம் கூற அவள் ‘கைப் புண்ணுக்கு கண்ணாடி வேணுமோ’ எனக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவும் மூன்று நான்கு வெள்ளாளப் பெண்மணிகளும் நின்றுகொண்டிருந்தனர், பென்ச் அழுக்கானது என என்னையோ அல்லது அவர்களது பிள்ளைகளையோ அப்பக்கம் அண்டவிடாது பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. பெத்தா அதில் தான் உட்கார்ந்திருந்தாள். அவள் வீ.சீயில் துப்பரவு வேலை செய்பவள். அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்; ‘பெத்தான்ர பிள்ளையும் பள்ளிக்கூடத்தில சேருதே….! கடவுளே கலிகாலம்’. பெத்தாவை நான் பார்த்தேன் – கறுப்பு. ‘எவனுக்கோ ஈணப்போறாள், வயித்தப் பார்..’ சிரித்தார்கள். ஊத்தை பென்ச்சில் அமர்த்திருந்த பெத்தா ஒருமுறைதானும் இப்பக்கம் திரும்பிப் பார்த்தாளில்லை.. அளவுக்கதிகமாக நீலம் போடப்பட்டு ஊத்தைகள் வடிவாக எடுபடாமல் இருத்த சீருடையை பெத்தாவின் மகன் அணித்த்ருத்தான். அவன் என்னைபோல சப்பாத்து அணித்திருக்கவில்லை. கால்களை அடிக்கடி சொறிந்த படி மூக்கில் புல்லாக்குப் போல தொங்கும் சளியை தாயின் சீலைத்தலைப்பில் துடைத்தபடி நின்றிருந்தான். அர்வருப்பாய் இருந்தது. அம்மா எல்லா படிவ நிரப்பல்களும் முடித்து என்னைக்கொண்டு போய் வகுப்பில் விடும் போது நான்கு பளபளப்பான மணவர்களைக் அறிமுகப் படுத்தினாள். என்னைப் போல மிகு வெண்ணிறச் சேட்டையும் மடிப்புக் குலையாத காற்சட்டையையும் அவர்கள் அணிந்திருத்தனர். வெளிநாட்டில் இருவருடைய அப்பாக்கள் இருந்தனர். அவர்கள் அழகான புத்தகப் பைகளை வடிவான பொம்மைக்குட்டி தண்ணீர்ப் போத்தல்களை வைத்திருந்தனர். நான் வட்ட வடிவிலான சாப்பாட்டுப் பெட்டி ஒன்றை வைத்திருந்தேன். எனது பளபளப்பான வெள்ளாள நண்பர்களும் விதவிதமான வடிவ சாப்பாட்டுப் பெட்டிகளை வைத்திருந்தனர். பஞ்சமர்கள் பெரும்பாலும் சாப்பாடு கொண்டுவருவதில்லை. அப்படியே ஓரிருவர் கொண்டுவந்தாலும் வனிதாமணி ரீச்சரிடம் வாழையிலைக்கும் பூவரசம் இலைக்கும் பேச்சு வங்குவார்கள். (அவர்கள் பூவரசம் இலைகளை வெகுநுட்பமாக உதயன் பேப்பரில் விரித்து அதன் மேல் புட்டையோ பாணையோ வைத்துப் பார்சல் கட்டிக் கொண்டுவருவார்கள். வனிதாமணி மிஸ் வகுப்பறைச் சுத்தம் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டிருந்தவராதலால் அவருக்கு வாழையிலைகள் பூவரசம் இலைகள் வீசப்பட்டு அவற்றுக்கு காக்கைகள் வட்டமிடுவது குறித்து பெரும் அதிருப்தி இருந்தது.)

நாங்கள் (வெள்ளாள மாணவர்களையும் என்னையும்) முன்வாங்கில் இருந்தோம். பெண்பிள்ளைகளுக்காக ஒதுக்கப் பட்ட மறுபிரிவின் முன்வாங்கில் சுஹாசினி, யசோதரா, நிர்மலா போன்றோர் அமர்ந்திருக்க பின்வாங்குகளில் றபீக்கா, சொர்ணா, மேரி போன்றோர் அமர்ந்திருந்தனர். முன்வாங்கு பின்வாங்கு ஒழுங்கு ஆசிரியர்களால் மிகக்கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. கிறிஸ்தவம் படிப்பவர்கள் மாமர நிழலுக்குப் போய்விட வேண்டும். கிறிஸ்தவ ஆசிரியையின் தலையில் காகம் எச்சமிட்ட சம்பவம் பாடசாலை முழுதும் தெரியவந்த பின்னரும் கூட.

பவளம் ரீச்சரை கோயில்லில் சந்திக்கும் நேரமெல்லாம் அம்மா என்னைப் பற்றி விசாரிப்பாள். ‘ என்ன பவளம், பின்வாங்குப் பெடி பெட்டையளோட ஆள் கொண்டாட்டமே?’

பின்வாங்குப் பெடியள் கதைத்துக் கொண்டிருப்பதற்காக, குழப்படிகளுக்காக ரீச்சர்களிடம் அடிவாங்கியபடியே இருந்தார்கள். எங்களுக்கு அடியே விழுவதில்லை. ஏனெனில் நாங்கள் குழப்படி விடுவதில்லை. ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். அவர்கள் பிழைவாங்கியபடியே இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் பின்வாங்கில் இருந்தார்கள். நாங்கள் சரிகளையே அதிகம் வாங்கவும் விரும்பவும் செய்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் முன்வாங்கில் இருந்தோம். ஏனெனில் நாங்கள் இந்து உயர்வேளாள குலத்தினராகவும் பிராமணர்களாகவும் இருந்தோம்.

என்னைக் கள்ளப் பிராமணி என அழைக்கும் பழக்கத்தை பின்வாங்கு மாணவர்கள் கொண்டிருந்தனர். காரணம் இல்லாமலில்லை. அவர்கள் பக்கம் நியாயம் இருந்தது. அவர்கள் அடி வாங்கும் போதெல்லாம் நானும் என் வெள்ளாள நண்பர்களும் மிக மோசமாகப் பகிடி (பகிடியை விட வேறு ஏதாவது மோசமான வார்த்தைகளிருப்பின் அதை இவ்விடத்தில் ஒட்டி வாசிக்கவும்) செய்வோம். அய்ந்தாம் ஆறாம் ஆண்டுகளில் படிக்கும் போது இக்கிண்டல்கள் அதிகமும் பாலியல் சார்ந்தவையாக இருந்தன. ‘பனைமரத்தில ஏறியிருந்த உன்ர கொப்பன்ர / ‘உன்ர கொம்மா ஆமை றைச்சி திண்டிட்டு ஆமிக்காரனோட படுக்கிற வேcensored‘ என்ற வகையான கிண்டல்கள். அவர்களால் எங்களை -முக்கியமாக நோஞ்சானான என்னை- அடித்து நொறுக்கி விட முடியும். ஆனால் தவறுதலாய்க் கூட அவர்கள் என்மீது தொட்டதில்லை. வெள்ளாளச் சிறுவன் ஒருவனது பொன்மூக்கை இடைவேளையின் போது அவர்கள் உடைத்த சம்பவம் இன்றும் என் நினைவிலிருக்கிறது. இராணுவத்தினருடன் பஞ்சமர்களின் தாய்மாரை இணைத்துப் பேசியதாலேயே அது நடந்தது. ஆசிரியரிடம் அப் பனையேறிச் சிறுவனின் நியாயங்கள் எடுபடவேயில்லை. ‘திருப்பிக் கதையாத’ ஆசிரியர் திருப்பித் திருப்பி அவனுக்கு கூறிக்கொண்டிருந்தார். முதலில் அவனது விரல் மொளியைப் பதம் பாத்த வாத்தி பின்னர் மேசைக்குக் கீழாய் அவனைக் குனியச் செய்து பின்புறமாய் விளாசினான் – அவனிடமிருந்து எந்த அழுகையொலியும் வராதது வாத்தியின் கோபத்தை மேலும் கூட்டிக்கொண்டிருந்தது. பெண்பிள்ளைகள் பேசாமல் இருந்தார்கள். ஆனால் நானும் எனது முன்வாங்கு நண்பர்களும் வாத்தியின் கிண்டல்கள் ஒவ்வொன்றுக்கும் உரக்கச் சிரித்துக் கொண்டிருந்தோம். தன்னுடைய பாடம் முழுதும் குறித்த மாணவனை முட்டுக்காலில் நிற்கும் படி வாத்தி கூறினான். நான் அவன்பக்கம் ஒருமுறை பார்த்து நைக்காட்டினேன். அந்தக் கண்களை வாழ்நாள் பூராவும் நான் மறக்கமுடியாது. நீர் தளும்பி அழுகையை அடக்கும் கண்ணும் துடித்துக் கொண்டிருக்கும் சொண்டும்…

மறுநாள் இடைவேளையின் போது அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்திருப்பதாய் ஆசிரியரொருவர் அழைத்துச் சென்றார். அவனது தாயார் அவனைப் பாடசாலைக்கு அனுப்பி வைத்து விட்டு மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரித்துக் கொண்டதாய் பள்ளிக் கூடத்தில் பேசிக் கொண்டார்கள். பிறகு ஒருபோதும் நான் அவனைக் கண்டதில்லை.

***


2001 இடப்பெயர்வு என்னை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சேரும்படி செய்தது. அம்மாவுக்கு வேதக்காரப் பள்ளிக்கூடம் என்பதில் பல அதிருப்திகள் இருந்தன தான் என்றாலும் வேறுவழியிருக்கவில்லை. ஆங்கிலம் கற்க மிக ஏதுவான இடம் எனவும் பஞ்சமர்கள் அதிகம் படிப்பது வட்டு சென்றல் போன்ற பள்ளிக்கூடங்களில் தான் எனவும் இங்கு அதிகம் கல்வி கற்பது கிறிஸ்தவ வெள்ளாளர்கள் தான் என்பதையும் உறுதிப்படுத்திய பின்னரே அரைகுறை மனதுடன் அம்மா அங்கு படிக்க அனுப்பினாள்.

“What was your school?”

“Palai Central College, Sir”

“Temporary Admission, No?”

“yes sir”

” What is your name?”

” My name is Hariharasharma sir”

“ஓ! அய்யராக்களா?’

‘ஓம் சேர்’

‘அய்யா, அப்ப சொல்லுங்கோ, பூணூல் போட்டாச்சே,’

வகுப்பறையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆசிரியர் டஸ்டரை கமில்ரனை நோக்கி வீசினார். ‘ டேய் கமில்ரன், நாயே.. எந்த நேரம் பார் கதை. கொப்பரும் கொம்மாவும் என்ன கத்திக் கொண்டே ஓcensored? வகுப்பறை சிரித்தது. எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. எனது முகக்குறியிலிருந்து அதைப் புரிந்து கொண்ட வாத்தி ‘அய்யாவுக்கு விளங்காதுதான்’ என்றான். பிறகும் ‘அய்யா’ எண்டான். எழுந்து நின்றேன். ‘இருங்கோய்யா, இருந்து பதில் சொல்லுங்கோ’ ‘பூணூல் போட்டாச்சே’

‘ம்ஹூம்.’

‘ஏனய்யா? ஏழு வயசில போடவேணுமெண்டு சொல்லுவினம்?..”

‘பதினேழு வயசிலயும் போடலாம் சேர். இனித்தான் போடோணும்’ (பொய் சொன்னேன். உண்மையிலேயே ‘அய்யா’ அங்கீகாரம் எனக்குப் பிடித்திருந்தது. அதைக் குலைக்க நான் விரும்பவில்லை. உண்மையில் அப்பா-அம்மா கலப்பு மணம் குறித்த இரு சமூகங்களின் அங்கீகாரத்தினின்றும் என்னை புறந்தள்ளியிருந்தது. வெள்ளாளர்களும் ஒருவித வேற்றுமை உணர்வோடேயே என்னை ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் என்னை அங்கீகரிக்கவேயில்லை. அப்பா அம்மாவைக்கைவிட்ட போது அவரைப் பிரமச்சாரி என்று அக்கினிசாட்சி கூறிக் மறு கல்யாணம் பண்ணிவைக்கத் தயாராயிருந்த பிராமணிகள் எனக்குப் பூணூல் போட்டுவிடத் தயாராயிருக்கவில்லை – மனுநீதி என்னை பிராமணி என்று ஏற்றுக் கொண்டும்)


***


அம்மா யாழ்ப்பாணக் கல்லூரியில் எனது இருப்புக் குறித்து மிகவும் அதிருப்தியடைந்திருந்தாள். அவளது அதிருப்தி என்னை கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு மாற்றியது. கொகுவில் இந்துக் கல்லூரி அம்மாவை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. மஞ்சவனப்பதி கோயில் – இரண்டு கட்டடத் தொகுதிகளுக்கு நடுவில் இன்னொரு முருகன் கோயில் – நல்ல சாதி பெடியள் படிக்கிற இடம் என அப் பாடசாலை குறித்து அலட்டிக் கொள்ள நிறைய விடயங்கள் இருந்தன. எனது ஆங்கிலம், நடை, உடை பாவனைகள் கொக்குவில் இந்துவில் என்னைச் சுற்றி ஒரு உயர்ந்த பிம்பத்தைக் கட்டமைக்க உதவின. திருநீறு பூசிக்கொண்டு போகவேண்டிய கட்டாயம் இருந்தது. தினம் தினம் பிரார்த்தனைக் கூட்டங்களில் தேவாரம் பாடிக் கொண்டிருந்தேன். பிரேயரில் கிறிஸ்தவ மாணவர்கள் எங்களது ஒன்றுகூடல் மண்டபத்தின் மூலையில் வந்து நிற்கும்படி விதிக்கப் பட்டிருந்தார்கள். சமயப் பாடத்தின் போது அவர்கள் லைபிறறிக்கு அனுப்பப் படுவார்கள்.

தமிழ்த்தினப் போட்டிகள் என்றால் எனக்கும் ஏனைய இந்து மாணவர்களுக்கும் சரியான வாசிதான். தலைப்புகள் எல்லாம் சமய இலக்கியங்கள் சார்ந்தே கொடுக்கப் பட்டிருக்கும் . விவாதமென்றால் அது மணிமேகலையா கண்ணகியா, சீதையா கண்ணகியா என்ற வட்டத்துள்ளேயே சுழலும். எப்பவாவது, தொழில்னுட்ப முன்னேற்றம் நம் சமூகத்துக்கு நல்லதைப் பண்ணுகிறதா இல்லையா தொனியில் ஏஎதாவது தருவார்கள். அதற்குக் கூட திருக்குறளில் இருந்தும் அங்கிருந்தும் இங்கிருதுமாய் மேற்கோள் காட்டி வென்றுவிட முடியும். தமிழ்த்தினப் போட்டியென்றால் இந்துக் கல்லூரிகளின் கும்மாளம் சொல்லிமாளாது. ஆங்கில தினப் போட்டிகளின் போது கூட யாழ் இந்துவும் வேம்படியும் கொக்குவில் இந்துவும் எப்படியோ பல முதலாமிடங்களை சுவீகரித்து விடுகின்றன. ஏனெனில் ஆங்கில தினப் போட்டிகளில் விவிலியம் சார்ந்த எந்தக் கட்டுரைகளும் கோரப் படுவதில்லை.

மிகக் கஷ்டமான உடல்செயற்பாடுகளைக் கோரிநிற்கும் ஒப்படைகளுக்காக நான் கோகுலனை வைத்திருந்தேன். சரியான விதத்தில் சேர்கிட்டுகளைப் பொருத்தி மின்னோட்டத் தொகுதி தயாரிப்பது. மோட்டாரில் இயங்கும் விளையாட்டு சுழலி செய்வது போன்ற விஞ்ஞானப்பாட ஒப்படைகளுக்கும் அவனை நம்பியிருக்க வேண்டிய காலம் வந்து விட்டதால் அவனை வீட்டு வரவேற்பறையினுள் அனுமதிக்க வேண்டிய அவலம் அம்மாவுக்கு வந்தது. மஞ்சள்த் தண்ணி கரைத்து ரெடியாய் இருக்கும் மாலைப்போதுகளில் அவன் வருவான். அவன் என்னிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதாக இருந்தது. அம்மா ஏதோ பெருமையில் அதற்கு ஒத்துக்கொண்டிருந்தாள். அதுவே ஒவ்வொருநாளும் அவனது வருகைக்கு வித்திட்டது. அம்மா மூக்குப்பேணிகள் இல்லாது போய்விட்டமைக்கு மிகவும் வருத்தப்பட்டாள். கோகுலனுக்கான ரம்ளர் சமயலறையின் மூலையில் கிடக்கும். பளையில் இருந்தபோது அம்மா இரண்டு மூக்குப்பேணிகளை வைத்திருந்தாள். அவற்றிலொன்று வேலிப்பூவரசம் கெட்டில் கவிழ்க்கப்பட்டிருக்கும். அது பன்ம்பாத்தி கிண்டவரும் பனையேறிக்குடியைச் சேர்ந்த முதியவளுக்கானது. மற்றையது மாதத்தில் மூன்று நாட்கள் தான் பாவிப்பதற்கு.


***

உயர் தரத்தில் எனது பாடத்தேர்வு (ஆங்கில இலக்கியம்) சார்ந்த காரணங்களால் யாழ்.மத்திய கல்லூரிக்கு மாறவேண்டி வந்தது. ஏகப்பட்ட பஞ்சமர்கள் கற்கும் (வெள்ளாளப் பாஷையில் ‘காவாலிப் பள்ளிக்கூடம்’), ஒரு பஞ்சமரே அதிபராய் இருக்கும் பாடசாலை என்பதில் அம்மாவுக்கு படு எரிச்சல் இருந்தது. அம்மாவுக்கு எனது பாடங்களை வழங்கக் கூடிய யாழ் இந்து விருப்பமான ஒன்றாக இருந்த போதும் அதன் டொனேஷன் தொகை அப்பக்கமும் தலை வைக்க விடவில்லை.

நான் சேர்ந்த வருடத்தில் அதிபராய் இருந்து பின்னர் கொலையுண்ட அதிபர் இராசதுரை ஒரு பஞ்சமர். பல முற்போக்கான நடவடிக்கைகள் அவரால் பாடசாலையினுள் செய்யப் பட்டிருந்தன. முஸ்லிம் மாணவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே படித்த போதும் காலைப் பிரார்த்தனையில் அவர்களது பிரார்த்தனையும் இடம்பெறும். இஸ்லாமியப் பிரார்த்தனை, ஒளிவிழா, நவராத்திரி என சகல மதங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப் பட்டிருந்தது. மிகுந்த கண்டிப்புடைய வன்முறையாளரான அவர் என்னை ஒருபோதும் ‘நீ’ போட்டுக் கதைத்ததில்லை. (அவரால் கதைக்க முடிந்ததில்லை எனப்து மேலும் பொருத்தமானது) என்னை அவர் ஆங்கில யூனியனுக்கு தலைவராகப் பிரேரித்த போது ‘அய்யாவோட ஸ்கில்ஸ் வந்து மார்வெலஸ். ஹி டிஸர்வ்ஸ் திஸ்’ என்றார். எனது ஆங்கிலமும் சாதியும் அவரது அணுகுமுறைக்குக் காரணமாயிருக்கலாம் என்பது எனது ஊகம்.





‘சர்மா, முந்தி எந்தப்பள்ளிக்கூடம்? ஏன் இஞ்ச வந்தனீங்கள்? இங்கிலிஷ்க்கு என்ன றிசல்ஸ். தமிழ் வாசிக்கிறது போல உங்களுக்கு இங்கிலிஷ் விளங்கும் என்ன?’ இது தான் மாணவர்கள் என்னை எதிர்கொண்ட விதம். ஒ.எல் இல் கணிதத்துக்கு விசேடசித்தி வைத்துக் கொண்டு கலைப்பிரிவிற்கு வந்தது வேறு அவர்களிடம் விநோதமான மதிப்புணர்வைத் தோற்றுவித்திருந்தது. எனக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருக்கும். ‘மச்சான் அந்தச் சரக்கு செம கட்டையடா… கோழி..’ அது இதென்று கதைத்துக் கொண்டிருப்பவர்கள் என்னைக் கண்டதும் நிறுத்திக் கொள்வார்கள். நானே என்னைச் சுற்றிக் கட்டமைத்துக் கொண்ட இந்த ஒளிவளையம் மீது குற்ற உணர்வுடன் கூடிய அதீத பிரியம் இருந்ததைக் கட்டாயம் ஒத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களிடம் என்னைக் குறித்து ஆயிரம் கேள்விகள் இருந்தன. புறனிலையாளனாய் நின்று என்னையும் மாணவர்களையும் விளையாட்டாய் அவதானித்துப் பதிந்து கொண்டிருந்தேன் டயரியில். ‘இரவில எத்தினை மணிகாணப் படிக்கிறநீர்’ போன்ற கேள்விகளே அவர்கள் என்னிடம் கேட்க முடிந்த கேள்விகள். எனது உள்புதைந்த ஆளுமை காரணமாயும் குறைந்தளவிலான பாடசாலைப் பிரசன்னம் காரணமாயும் அவர்களுடன் நெருங்கித் தொடர்புற முடிந்ததில்லை. பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாட்களிலும் எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன். நான் ட்ரிப்பிள் எக்ஸ் பார்க்கிற ஆளா இல்லையா, வயதுக்கு வந்தவனா வராதவனா என்பதெல்லாம் அவர்களது முக்கியமான இடைவேளை அலசல்கள். சாடைமாடையாக மாத்திரமே அவர்கள் என்னைக் கிளறியதுண்டு. ஒருதடவை செல்போனில் பதிவுசெய்யப்பட்ட நீலப்படத் துண்டுகளைப் பின்வாங்கில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருத்தன் ‘என்ன ஐயா, எப்ப ஆம்பிளையாகிறது’ என்று கத்தினான். நான் மையமாகச் சிரித்து விட்டு வாசிப்பது போன்ற பாவனையைத் தொடர்ந்தேன். அன்று விட்டுவிட்டார்கள். முன்திட்டமிடப்பட்ட அணுகல்களை அவர்கள் என்னிடம் நிகழ்த்தியதுண்டு. எனக்கு இவையெல்லாம் ஆர்வமிக்க விளையாட்டொன்றின் அங்கங்களாகத் தோன்றியபடியால் புதிர்மிக்க ஒருவனாய் என்னைக் கட்டமைத்த படியிருந்தேன். எனது உள்வாங்கல்களின் படி அம்மாணவர்கள் என்னை அணுகமுடிந்ததில்லை என்பதே முடிவாய் இருக்கிறது.


நான் கடந்துவந்த எல்லா ஆசிரியர்களுக்குமே எனது கதைக்கும் தொனி மீதான மோகம் இருந்து வந்திருப்பதை நான் உள்ளுணர்ந்திருக்கிறேன், இவற்றுள் ஸ, ஹ, ஷ, ஜ உச்சரிப்புகள் அளித்த பங்கு முக்கியமானது. (எல்லோராலும் தினேஸ் என்று அழைக்கப்படும் ஒருவனை நான் தினேஷ் என்பேன்!)


பள்ளிக்கூடத்துக்கு சாப்பாடு கொண்டுவரும் மாணவர்கள் மிக சொற்பமானவர்களே. அவர்களிலும் மாமிச உணவு கொண்டுவர்வோர் யாரும் கிடையாது. பொரித்த முட்டை போன்ற காலை உப உணவுகள் எப்போதாவது வருவது வழக்கம். எனக்கு மூன்று கதிரைகள் தள்ளி முட்டைப்பொரியல் பார்சலை விரித்து வைத்திருந்த மாணவன் ஆசிரியை ஒருவரால் பின் வரிசையில் சென்று சாப்பிடும் படி விரட்டப்பட்டான். என்னுடன் வேறு சில விடயங்களை அலசியபடியிருந்த ஆசிரியை விடயம் மாறி, தான் சுனாமியின் பின்னர் மீன் சாப்பிடுவதை விட்டுவிட்டதாயும் இறைச்சி சாப்பிடுபவர்களைத் தனக்குப் பிடிப்பதில்லையென்றும் பிள்ளைகளுக்காக முட்டை சமைப்பதாகவும் அதுவும் பாம் முட்டையே கொடுப்பதாகவும் கூறத் தொடங்கினார். இதையெல்லாம் கூறும் போது ஒருவிதமான சங்கடம் அவருக்கிருந்தது. மீண்டும் வெள்ளைக்காரர்கள் இப்போதெல்லாம் மரக்கறிகளை அதிகம் விரும்பும் போக்கு அதிகரித்து வருவதாக கூறி மரக்கறி உணவுப்பழக்கத்தின் நன்மைகளை வகுப்பிலிருந்த பிறருக்கு கூறத் தொடங்கினார். எனக்கு இதெல்லாம் மூன்று கதிரைகள் தள்ளி இருந்த முட்டைப் பொரியலுக்கான பிராயச்சித்தமாகவே தோன்றிற்று.


நாடக வகுப்புகள் மிக சுவாரசியமானவை. 1947க்குப் பிற்பட்ட தமிழ் நாட்டு அரங்க செயற்பாடுகளை என்முன்னிலையில் கற்பிக்கும் போதெல்லாம் ஆசிரியரிடம் ஒருவித அசௌகரியம் தொற்றிக் கொள்ளும். ஆரிய பார்ப்பனீயத்துக் கெதிராக திராவிட உணர்வுகள் வெடித்துக் கிளர்ந்த வரலாறு என்ன்முன்னிலையில் கற்பிப்பதற்கு அவருக்கு பல மனத்தடைகள் இருந்தன. சிறிதாய் சிரித்தபடி ஆரம்பிப்பார் ‘சர்மா.. குறைநினைக்கக் கூடாது’ .


அர்சியல் கற்கும் போதுகூட ஆசிரியர்களிடம் இதை நான் உணர்ந்திருக்கிறேன். பாரதிய ஜனதாவை, ஆர்.எஸ்.எஸ்-இனை விமர்சிக்க நேரும் போதெல்லாம் அவர்கள் என்னைப் பார்த்து சமாளிப்புப் புன்னகை சிந்தத் தவறுவதில்லை. என்னை நோக்கி அவர்கள் கூறும் சமாதானப் பிற்குறிப்பு கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்: ‘எவ்வளவுதான் பார்ப்பனீயம் கொடூரமானதாய் இருந்தாலும் அது இந்தியாவின் சமூகக்கட்டுமானங்களை முன்னேற்றியிருக்கிறது.’ புரிந்து கொண்டதாய்ப் புன்னகைப்பேன். அவர்கள் தொடர்வார்கள் ‘ அதேபோல முற்போக்குச் சிந்தனை கொண்ட நம்பூதிரிபாடு ஒரு பிராமணர் தானே’. இந்த சமாதானங்களை எனக்கு வழங்கிவிட வேண்டும் எனத் துடிக்கும் ஓர் மனதில் ஊறிப்போயுள்ள பார்ப்பனீய அரசியலை வடிவமைத்தது எதுவாய் இருக்கக் கூடும்?


***

பின்னிணைப்பு:





ஷோபா சக்தியின் ‘விலங்குப்பண்ணை’
சிறுகதையிலிருந்து சில பகுதிகள்

ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் இராசையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார்.

அதாவது A B C D எனப் பிரிக்கப்படடிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள்.

கொடுமை, கொடுமையென்று கோயிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமை அவிழ்த்துப் போட்டு ஆடிய கதையாய் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் “வைட் அண்ட் வைட்” போட்டுக்கொண்டு வரவேண்டும் என்றொரு அவசர சட்டம் பாடசாலையில் கொண்டுவரப்பட்டது. என்னுடைய முதற் சற்பிரசாதத்துக்காகத் தைக்கப்பட்ட எனது வெள்ளைச் சட்டை எனக்கு இப்போது அளவாக இராது. அதை என் தம்பி போட்டிருக்கிறான். அவனிடம் கெஞ்சி மன்றாடி வெள்ளிக்கிழமைகளில் அச்சட்டையைப் போட்டுக்கொண்டேன். அந்த வெள்ளைச் சட்டை தொப்புள் வரைதான் வரும். அடிக்கடி கீழே இழுத்துவிட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. வெள்ளைக் காற்சட்டை கிடைக்கவில்லை. அதற்குப் பப்பா கொழும்பிலிருந்து வரும் வரை பொறுத்திருக்கவேண்டும்.வெள்ளிக்கிழமை காலைகளில் ஒரு வெறிநாயின் மூர்க்கத்துடன் அதிபர் பாடசாலையின் முன்வாசலில் நின்றிருப்பார். “வைட் அண்ட் வைட்” போட்டு வராத மாணவர்களின் குண்டிகள் அவரின் பிரம்பால் பழுத்தன. நான் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு மட்டம் போடத் தொடங்கினேன். என் வீட்டு நிலைமை தெரியாத மாணவர்கள் திங்கட்கிழமை காலையில் “பள்ளிக்குக் கள்ளம் பழஞ்சோத்துக்குக் காவல்” என்று பொருத்தமில்லாமல் என்னைப் பழிக்கத் தொடங்கினர். ஆனால் ம.அன்ரனி வெள்ளிக்கிழமைகளிலும் பாடசாலைக்கு போனான். அவனிடமும் “வைட் அண்ட் வைட்” கிடையாது. ஆனால் அவன் அதிபரின் அடியை ஏற்றுக்கொண்டான். அவனுக்கு எதையும் நேருக்கு நேர் சந்தித்துத்தான் பழக்கம். இப்படியான சில விறுமத்தடியன்களை அடித்தும் உதைத்தும் பார்த்துத் தோல்வி கண்ட அதிபர் இறுதியில் அவர்களை “வைட் அண்ட் வைட்” போடும்வரை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைக்கு வரக்கூடாது எனத் தீர்ப்பிட்டார்.

வகுப்புகள் தொடங்கிய அன்று முதலாவது பாடம் சமயம். இந்து சமய ஆசிரியர் ஜெகசோதி வகுப்புக்குள் வந்துவிட்டார். வந்தவரத்தில் பாடத்தையும் ஆரம்பித்துவிட்டார். எங்கள் வகுப்பில் மிக அழகாகப் பாடக்கூடிய பெண்ணொருத்தியிருந்தாள். அவளுக்கு நாங்கள் கே.பி.சுந்தராம்பாள் என்று பட்டம் கூட வைத்திருந்தோம். அவளை அழைத்து வாத்தியார் ஒரு தேவாரம் பாடச் சொன்னவுடன் அவள் பாட ஆரம்பித்தாள். ம.அன்ரனியின் பெயரில் இருந்து அவனும் கிறிஸ்தவன்தான் என்பது எனக்குத் தெரியும். அவனைப் பார்த்தேன். அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். முன்னைய வருடங்களின் அனுபவங்களின் போது முதல்நாள் சமய வகுப்பில் இந்து சமய வாத்தியார் “வகுப்பில் யாராவது வேதக்காரர்கள் இருக்கிறார்களா?” எனக் கேட்பார். நான் எழுந்து நிற்பேன். “போய் அசெம்பளி ஹோலில் இரு கிறிஸ்தவ சமயத்தைக் கற்பிக்க ஆசிரியர் வருவார்” என்பார். நானும் மூன்று வருடங்களாக தட்டத் தனிய அசெம்பிளி ஹோலில் காத்திருக்கிறேன். வேதக்கார வாத்தியார் வந்தபாடில்லை. இவ்வளவுக்கும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒரு வாத்தியார் எங்கள் பாடசாலையில் இருந்தார். அவர் சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்துவந்தார். மற்றைய நேரங்களில் புகைப்படம் பிடிப்பது தபால் தலைகள் விற்பது போன்ற உபதொழில்களையும் மேற்கொண்டு வந்தார். நான் எழுந்து ஜெகசோதி வாத்தியாரிடம் “சேர் நான் கிறிஸ்தவ சமயம்” என்று அறிவித்தேன். “வேறு யாராவது கிறிஸ்தவர்கள் வகுப்பில் இருக்கிறார்களா?” என வாத்தியார் கேட்டார். ம.அன்ரனியும் எழுந்து நின்றான். வாத்தியார் எங்கள் இருவரையும் அசெம்பிளி ஹோலுக்கு அனுப்பினார்.
நாங்கள் இருவரும் அசெம்பிளி ஹோலில் போய் ஒரு மூலையில் இருந்தோம். சற்று நேரத்தில் அவ்வழியால் சென்ற அதிபர் ‘ஏன் இங்கு இருக்கிறீர்கள்?” எனக் கேட்டார். “கிறிஸ்தவ சமயப் பாடம்” என்றேன். “இருங்கள் மாஸ்டர் வருவார்” என்று கூறிவிட்டுச் சென்றார். நான் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து விலகும் வரை கிறிஸ்தவ சமய ஆசிரியர் வரவேயில்லை.


பின்னூட்டமொன்றை இடுக


Posted in கட்டுரைகள்

உயர் இந்து வேளாள சமூக அமைப்பு: கட்டுமானங்களும் சிதறடிப்புக்கான முன்மொழிவும்


Posted on மார்ச் 6, 2009 | பின்னூட்டமொன்றை இடுக
எழுதியது: dec 2006 - april 2006 | வலையேற்றியது dec 2006



சிவில் சமூக வடிவமைப்பு என்பதில் சமூக நிறுவனங்களுக்கு ஓர் முக்கிய பங்கு உண்டு. யாழ்ப்பாணத் தமிழ் சமூக உருவாக்கத்திலும், அதனுடைய தன்மைகளைத் தீர்மானிப்பதிலும் அதிகளவு செல்வாக்குச் செலுத்துபவை கல்வி நிறுவங்களே என்பது கண்கூடு.
யாழ்ப்பாணத்துக் கல்வி நிறுவனங்கள் பெரிதும் இந்து-சைவ-வெள்ளாள நியமங்களால் / கிறிஸ்தவ வெள்ளாள மேட்டுக்குடி நியமங்களால் கட்டியமைக்கப் பட்டவையே. யாழ்ப்பாணத்துப் பாடசாலைகளில் ஓரிரு அரிதான விதிவிலக்குகளைத் தவிர இந்து ஆதீனம், கிறிஸ்தவ மிஷனரி என இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். இந்த இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று குறைவில்லாத வகையில் வெள்ளாள நலன் பேணும் மேட்டுக்குடி சமூக அமைப்பை வடிவமைப்புச் செய்கின்ற கருவிகள் தாம். மாணவர்களை இளநிலையில் சாதகமாகத் தகவமைத்துக் கொள்ளும் இச்செயற்பாடு இன்று வரை உக்கிரமாக எதிர்க்கப்படவில்லை.
மாணவர்களிடையேயான ஒழுக்கச் சீர்குலைவுகளை சீர்செய்யும் முயற்சியின் முதல்படியாக ஹார்ட்லிக்கல்லூரியின் தரம் ஆறு மாணவர்கள் தமது ஆசிரியர்களை (உபாத்தியாயர்களை என்பது மிகப்பொருத்தம்) வீழ்ந்து வணங்கும் படி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். இதை யாழ்.தினக்குரல் செய்தியாக வெளியிட்டது.
ஓ.எல் பரீட்சைக்காலம், மின்சாரம் சீரின்மை, எதுவந்தாலும் விடாப்பிடியாக கோவில்கள் அதிகாலை ஐந்து மணிக்கே சினிமா பாணி மெட்டிலமைந்த ஆபாசப்பாடல்களை ஒலிபரப்புவதால் உற்சாகமாக சுயபுணர்வில் ஈடுபடமுடிகிறதேயன்றி படிக்கமுடிகிறதில்லை. அதிகார அலுவலகங்களின் ஆசியுடன்தான் இது நடக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவேனும் உரிய அலுவலகங்களுடன் தொடர்புற முடிவதில்லை. அலுவலர் ஆட்சியின் சீரழிவு அனைத்து இடங்களிலும் தலைவிரித்தாடுகிறது. கோவில்களில் சென்று தட்டிக்கேட்கவும் நாதியில்லை. வெள்ளாளர்கள் வீடு பூந்து அடிப்பதற்காக சிறந்த தலித்துக்களை வைத்திருக்கிறார்கள்.
இந்த சமூகத்தகவமைப்பின் வலுமிக்க கருவியாக பாடசாலை விளங்குகிறது. சொல்லின் செல்வர்களும் செஞ்சொற்செல்வர்களும் மணிக்கணக்கில் நடாத்தும் அறுவைகளை கேட்கவேண்டியிருக்கிறது – வாய்மூடியபடி.. மூத்திரம் வரும் எங்கள் குறிகளைப் பிசைந்தபடி. ஆணாதிக்க வெள்ள்ளாளப் பிற்போக்கு அவர்கள் வாயிலிருந்து வெளிவருவதைக் கண்டும் மூக்கைப் பொத்தமுடியாதபடி நிற்பான் ஒழுக்காற்று சட்டம்பி. எழுந்து செல்லமுடியாதபடிக்கு மண்டபவாயிலில் ஆமிக்காரன் போல நிற்பான் இந்து மாமன்ற வாத்தி. சமீப காலமாக பெருகிவரும் இத்தகைய அதிருப்திகளைச் சமாளிக்கும் பொருட்டு சில இந்துக்கல்லூரிகள் சுண்டல் விநியோகிக்கின்றன. ஒன்றிரண்டு பாடசாலைகளில் தான் இந்த ஏற்பாடு மற்றையவற்றில் எல்லாம் ஒத்துழையாமைக்கான துன்புறுத்தல்களே தண்டனை.
பாதிரிகளும் மேட்டுக்குடி எலைட் அசடுகளும் நளினம் கலந்து உளறும் அபத்தங்களையும் அவர்களது வெறுப்பூட்டக்கூடிய போலியான மனிதாபிமான நல்லெண்ணத்தையும் காது வலிக்கக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு லஞ்சமாக கேக்துண்டங்கள், பிஸ்கட்டுகள், குளிர்பானம் தருகிறார்கள். ‘பாடசாலைகளினூடு நிறுவப்படும் சாதியம்’ தொடர்பான கட்டுரை சுட்டுவது போலவே மேற்கூறியது மிஷனரிப்பாடசாலைகளின் தந்திரமான நுண்ணிய செயற்திட்டங்களின் ஒரு பகுதியே.
இவ்வாறான தந்திரங்கள் மூலம் / ஒடுக்குமுறை மூலம் கல்லூரிகளில் புறநிலையாளர்களது தோன்றுகைக்கான சாத்தியங்கள் பெருமளவிற்கு இழிவளவாக்கப்பட்டுவிடுகின்றன. கெட்டிக்காரத்தனமாய் புறநிலையாளர்களது உருவாக்கம் தவிர்க்கப்பட்டு விடுகிறது.


தமிழ்த்தினப் போட்டிகளைப் போல இந்துத்துவத்துக்கு வேறு சிறந்த எடுத்துக்காட்டு இருக்குமா என்பது தெரியவில்லை. தமிழ்த்தினப் போட்டிக்கான விவாதத் தலைப்புகளாக கடந்த 5/6 வருடங்கள் கொடுக்கப்பட்டு வரும் தலைப்புக்களின் பட்டியலை ஒருமுறை பார்வையிட்டால் போதும். இந்து மேலாதிக்கம் தெளிவாக விளங்கி விடும். விவாதத் தலைப்புகள் கிறிஸ்தவ மாணவர்களுக்கு பெரிதும் பொருத்தமற்றவை. பெரும்பாலும் சைவ/இந்து புராணீகங்கள் நிகழ்வுகள் சார்ந்துமே இவை அமைகின்றன. விவிலியத்திலிருந்தோ குர்-ஆனில் இருந்தோ போட்டிகளுக்கான தலைப்புகள் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை.

தரம் 8/9களில் அறிமுகப்படுத்தப் படும் பாலியல் கல்வி (சுகாதாரமும் உடற்கல்வியும் பாடம்) பல பள்ளிக்கூடங்களில் நடாத்தப்படுவதில்லை. இங்கு இந்துத்துவமும் மேட்டுக்குடித்தனமும் moral police ஆக தம்மைக் காட்டிக்கொள்கின்றன. சுயபுணர்வு குறித்த இழிவுணர்வு, அது சார்ந்த பிரச்சனைகள் என மாணவர்கள் உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாகுவதையும் உளவளத்துணையாளர்களை நாடி அவதியுறும் போக்கும் அதிகரித்து வருவது கண்கூடு.

Save the children போன்ற INGOக்களும் சரி, DCPC போன்ற அரச ஏற்பாடுகளாக இருந்தாலும் சரி இரு அணிப் பாடசாலைகளின் காவலர்களும் ‘நோ என்றி’ பலகையுடன் இருக்கிறார்கள். கருத்தரங்குகளுக்கான அனுமதி கிடையாது. துண்டுப்பிரசுர விநியோகங்கள் மட்டுப்படுத்தப் பட்ட அளவில் அனுமதிக்கப் படுகின்றன. பல தவிர்க்க முடியாத காரணங்களினால் இடம்பெறும் கருத்தரங்குகளில் கஎழுந்து கேள்வி கேட்கும் மாணவன் ஒழுக்காற்று சபையின் கடூரமான விசாரணைக்கு ஆளாக வேண்டி வரும். அரங்க செயற்பாட்டாளர்கள் இக்கல்லூரி நிர்வாகிகள் பற்றிய பல சுவாரசியமான கதைகளைக் கொண்டுவருவார்கள். அதையெல்லாம் இங்கு எழுதினால் ஓரு நகைச்சுவை நாவலாக மாறிவிடக்கூடும் இக்குறிப்பு.


எமது கவனப் படுத்தல் பூரணமான ஒன்று அல்ல. நீண்ட விரிவான கள ஆய்வைக் கோரினிற்கும் ஆய்வொன்றுக்கான முன்மொழிபாகவே பாடசாலைகளினூடு சாதியம் பற்றிய தோழர்களது அனுபவப்பகிர்வுகள், கட்டுரைகள், குறிப்புகள் முரண்வெளியில் பதிவேற்றப்படுகின்றன. யாழ்ப்பாணப் பாடசாலைகள் செய்துவரும் சமூக வடிவமைப்பு மிக நுண்ணிய தளத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயம்.


மத நீக்கம் செய்யப்பட்ட பிள்ளைநேயப் பாடசாலைகளுக்கான முனைப்புகளுக்கு எதிராக அறம், வன்முறை நீக்கத்துக்கான மதப் போதனை கட்டுப்பாடும் ஒழுக்கமும் போன்ற வேடப்பெயர்களில் மீள் வலிதாக்கம் செய்யப்படும் பிற்போக்குத் தனங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ள நிலையில் திறந்த கதையாடலுக்கான முனைப்புகளைத் தூண்டுதலின் அவசியத்தை நாம் உள்ளுணர்ந்தோம்.


எரிகின்ற பிரச்சனைகளை மாத்திரம் கவனப் படுத்துகிற ஊடகங்கள் நாளைக்கு எரியப் போகும் பிரச்சனைகள் குறித்து கவனஞ் செலுத்தத் தயாராயிருப்பதில்லை. இந்த நிலையில் சாதியம் பற்றிய தனது மின்தொகுப்பை வெளியிடுகிறது முரண்வெளி.

கருத்துக்களை வரவேற்கிறோம்


மேலதிக வாசிப்புப் பிரதிகள்:‘யாழ்ப்பாணத்துச் சாதியம் ; காலனித்துவ சமரசம்’

மு.நித்தியானந்தன்

பக்.40-47, கறுப்பு (தொகுப்பு – சுகனும் ஷோபாசக்தியும்)


‘விலங்குப் பண்ணை’ – ஷோபாசக்தியின் சிறுகதை – சத்தியக்கடதாசி


‘Schooling in Jaffna’ – S.R.H.Hoole

in, ‘The Exile Returned : The self-portrait of the tamil vellaahlahs of jaffna’

Aruvi publishers

Colombo



பாடசாலைகளினூடு நிறுவப்படும் சாதீயமும் மதமேலாதிக்கமும்;
பிந்தைய நிலவரங்கள்


1


யாழ்ப்பாணத்தின் பிரபலமிக்க ஆண்கள் பாடசாலையான யாழ் இந்துக்கல்லூரியில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் நண்பர்கள் அக் கல்லூரியின் வெள்ளாள பார்ப்பனச் சாய்வு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பலவற்றை கூறுவார்கள். நாவலர் பற்றிய சரிநிகர் விவாதங்களை ஆழமாய்க் கற்று கறுப்பு போன்ற விளிம்புநிலைக்குரல்த் தொகுப்புகள் வாசித்துக் கருத்தாடும் நண்பரொருவரும் யாழ் இந்துவில் கல்விகற்பதனால் ஏற்படும் உடலுபாதைகள் பற்றி நகைச்சுவையாகக் கூறுவார். பலவகைகளிலும் யாழ் இந்து, சென் ஜோண்ஸ் பாடசாலைத் தோழர்களின் விபரிப்புகளே எனது கட்டுரைக்கான மூல்கங்களும் தூண்டுதல்களுமாகும். பெயர்வெளியிட முடியாத நிலையிலிருக்கும் அம்மாணவர்களுக்கான நன்றியுணர்வுடன் நாம் பாடசாலை விடயங்களுக்குள் நுழையலாம்.


***


நான் இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்கிற களம் பாடசாலைகளே. பல்கலைகழகம் போன்ற இதர கல்விநிறுவனங்களிலும் கீழ்விபரிக்கப்படும் சாதிமேலாதிக்கத்தின் இணைத்தன்மைகள் அவதானிக்கப்பட்டுள்ள போதும் தரவு மற்றும் ஆதாரங்கள் போதாமையை மனங்கொண்டு அவை பற்றிய தகவல்கள் இங்கு தரப்படவில்லை.


***


எனக்குக் கிடைக்கும் வாய்மொழித் தகவல்களின்படி யாழ் இந்துவைவிட மற்றைய இந்துக்கல்லூரிகள் முற்போக்கானவையாகக் காட்டிக்கொள்ள முற்பட்டாலும் யாழ் இந்துவிற்கும் மற்றையவற்றுக்கும் இடையே துளியளவும் வித்தியாசம் கிடையாது என்பதுதான் உண்மை. கீழே பட்டியற்படுத்தப்படும் தகவல்கள் ஒன்றிரண்டு மாற்றங்களுடன் அனைத்து இந்துக்கல்லூரிகளுக்கும் பொருந்திப் போகக்கூடியவையே.


· பாடசாலைகளுக்கு புதுமுக மாணவர்களை உள்ளீர்க்கும் செயன்முறைகளின் போதே இந்துவேளாள வடிகட்டல் தொடங்கி விடுகிறது. தரம் ஐந்து புலமைப்பரிசிலும் நுழைவுத்தேர்வுகளும் அனுமதிக்கான முன்நிபந்தனைகள். புலமைப்பரிசிலில் பெரும்பான்மை புள்ளிகள் பெற்றுவருவது அதிகமும் டாக்குத்தர் இஞ்சினியர் லோயர் அன்ன பிறரின் பிள்ளைகளாகவே இருந்துவிடுவதால் அதிகம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஆயினும் பொஸ்கோ போன்ற கத்தோலிக்க வெள்ளாள பாடசாலைகளூடு புலமைப்பரிசிலைத் தட்டிவிடும் கிறிஸ்தவர்களும் அபூர்வமாக சித்தியடைந்துவிடும் தலித்துக்களும் புலம்பெயர் உறவுகளால் புதுப்பணக்காரர்களாகிய தலித்துக்களும் தான் இந்துக்கல்லூரிகளுக்கு இருக்கும் முக்கிய சவால்கள். நேர்முகத் தேர்வின் போது மேற்குறித்தவகை மாணவர்கள் வேறுபாடசாலைகள் குறித்துச் சிந்திக்கும்படி தூண்டப்படுகிறார்கள். நன்கொடைத்தொகையைக் கூட்டிக் கேட்டல் போன்ற பொருத்தமான உத்திகள் மூலம் இது நடக்கிறது.


· 8ம் வகுப்பு வரையான மாணவர்களிடம் மாத்திரமே வாத்தியார்களதும் சட்டம்பிமார்களதும் (கவனிக்க ஆசிரியர்கள் அல்ல) செல்வாக்கு எடுபடுகிறது. 9ம் 10ம் தரங்களில் ஆயுதக்கலாச்சாரம் ஊடுருவிவிடுவதால் வாத்திகள் பெரிதும் அடக்கியே வாசிக்கும். 8ம் ஆண்டு வரையிலான மாணவர்கள் அனுபவிப்பது நரகம். மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணிந்து வராத பட்சத்தில் தண்டிக்கப்படுகிறார்கள். ‘ஏன் அணிந்து வரவில்லை’ என்ற அதட்டலுக்கும் உறுக்கலுக்கும் பின்பே நீ வேதமா என்ற கேள்வி வரும்.


· பாடங்கள் தொடங்குகையில் சில ஆசிரியர்கள் தேவாரம் பாடியே கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றனர். கிறிஸ்தவ மாணவர்களும் மதாவனம்பிக்கையுடைய மாணவர்களும் கூட எழுந்து நிற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அநேக சந்தர்ப்பங்களில் இந்தக்கட்டாயப் படுத்தலுக்கு எந்த தேவைகளும் இருப்பதில்லை; மாணவர்கள் தாமே எழுந்து நிற்கிறார்கள்.


· தண்டனை மற்றும் விசாரணைகளில் இருந்து பிராமண மாணவர்களும் பிரபலங்களின் பிள்ளைகளும் மிக இலகுவாக தப்ப முடிகிறது.


· கிறிஸ்தவ சமயம் இந்துக்கல்லூரிகளில் கற்பிக்கப்படுவது கிடையாது. மாற்று ஏற்பாடுகள் ஏதுமில்லை. சமய பாட நேரங்களில் நூலகத்துக்கோ மைதானத்துக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள். ஆங்கிலமொழிவழிக் கல்வி வகுப்புகளில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை யாரேனுனுமொரு கிறிஸ்தவ மாணவன் பெற்றுவிடுகிற நிலையிலும் கூட இந்த அவலம் தொடர்கிறது. கிறிஸ்தவ மாணவர்கள் சைவசமயம் பாஸ்பண்ண இலகுவானது என்றவகைப் போதனைகள் மூலம் திசைதிருப்பப் ப்டுகிறார்கள். 2007 ஓகஸ்ட் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதப் போகிற அணியில் இருக்கும் மாணவர்களில் இரு கிறிஸ்தவர்கள் சாதாரண தரத்தில் சைவ சமயத்தையே எழுதினார்கள். கிறிஸ்தவம் தொடர்பாக அவர்களுக்கு ஒன்று தெரியாது. தேவாரம் நன்றாகப் பாடுவார்கள்.


· பிரார்த்தனை ஒன்றுகூடலில் பஞ்சபுராணம், பஜனை, மந்திரம், தியானம் என்று நடாத்துகிறார்கள். உடற்பயிற்சி நடாத்தப்படுவதில்லை – ஓங்கார மூச்சுப் பயிற்சியில் அவ்வளவு நம்பிக்கை. எவ்வளவுதான் தாமதமானாலும் பார்ப்பன மாணவன் இருந்தால்தான் நடராஜர் சிலைக்கு வழிபாடு நடக்கும். மேலும் அனைத்து மாணவர்களும் தலா 2/= இந்துமாமன்றத்துக்கு வழங்க வேண்டும். கிறிஸ்தவ மாணவர்களுக்கென்று தனியாகப் பிரார்த்தனை நடாத்தப் படுவதில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் திருநீறணிந்து சப்பாத்துக்கழட்டிப் பிறகு பிரார்த்தனை மண்டபத்தினுள் நுழையலாம். பிறர் பிரார்த்தனை மண்டபத்துக்கு வெளியே கால் கடுக்க நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. கிறிஸ்தவ மாணவர்கள் பிரார்த்தனை நேரம் முடிய பாடசாலை வரலாம் / பிரார்த்தனை நேரங்களில் வகுப்பறைகளில் அமர்ந்திருக்கலாம் போன்ற் எவ்வித நெகிழ்வுகளும் நிர்வாகத்திடம் கிடையாது. வகுப்பில் உட்கார்ந்திருந்தால் மாணவத்தலைவர்களும் ஒழுங்குபேண் வாத்திகளும் அந்தரப்பட்டு எப்படியாவது விறாந்தைகளுக்கு விரட்டிவிடுவார்கள்.


· பாடசாலைக் கீதம் இசைக்கப் படுவதற்கு முன்பாக தேவாரம் இசையுடன் பாடப்படும். கிறிஸ்தவ மாணவர்களும் எழுந்து நின்று கண்மூடி கைகூப்ப வேண்டும். சற்றே முரண்டுபிடிக்கும் இளம் மாணவர்களுக்கு சொல்லப்படும் சமாதானம் ‘நீ உன்ர கடவுள நைச்சுக்கொள்’


யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி உள்ளிட அனைத்துப் பாடசாலைகளிலும் வெள்ளாள மேலாதிக்கப் போக்கு சமீபகாலங்களில் கேள்விக்குள்ளாகி வருவது வெறும் மேல்மட்டத் தோற்றப்பாடே தவிர உண்மையல்ல. மேலும் இந்தக் கேள்விக்குள்ளாக்கல் எவ்வாறு அமைகிறது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். (உதாரணங்கள் – மாணவர்களது விநோத சிகையலங்காரங்களை, ரைற்றாக ஜீன்ஸ் அணிவதை முன்புபோல் எதிர்க்க முடிவதில்லை, பெண்களை மிக மோசமாக துன்புறுத்தும் கேலிகளில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிப்பது கூட பெரும்பாடாய் இருக்கிறது) இப்படியான கேள்விக்குட்படுத்தல்கள் நமது சமூகம் வீழ்ந்துகொண்டிருக்கும் வீழ்ச்சியின் இன்னொரு நோய்க்கூறான சாட்சி என்பதற்கும் மேலாக எதிர்காலத்தில் அறநெறி/மதம் போன்றவற்றின் மீள்வலிதாக்கத்துக்கு துணைபோகக் கூடும்.


2

கிறிஸ்தவப் பாடசாலைகள்-முக்கியமாக அங்கிலிக்கன் திருச்சபையின் சமயப் பரப்புக் கருவியும் மறுகாலனியாதிக்க சக்தியுமான சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி மகளிர் போன்றவை- இதுக்கல்லூரிகளை விடவும் மிக நுண்மையான கட்டமைப்புகளைக் கொண்டியங்குபவை. மேலும் இவை வெளித்தள்ளும் மாணவ சமூகம் மேட்டுக்குடி கத்தோலிக்க வெள்ளாள சமூகத்தின் பிரதிகளாகவே பெரும்பாலும் அமைந்து விடுவர்.


இவை இந்துக்கல்லூரிகளைப் போலல்லாது சைவ சமயத்தைப் பேரளவிலாவது கற்பிக்கின்றன. சந்தனப் பொட்டு திருநீறு அணிந்து செல்லும் மாணவர்கள் முன்பெல்லாம் தண்டிக்கப் பட்டார்கள். 90களின் நடுப்பக்தியில் நிலவரங்கள் மாறி வெளிப்படையான தண்டனை நீக்கப் பட்டது. நுண்ணிய செயற்பாடுகள் மூலம் ‘சந்தனப் பொட்டு மாணவன்’ புறமொதுக்கலை உணரும் படி செய்யப் படுவான். யாழ்ப்பாணக் கல்லூரி பற்றிக்ஸ், திருக்குடும்பக் கன்னியர்மடம், சென்.ஜோன்ஸ், அன்னபிற பாடசாலைகளில் இதுதான் நிலமை.


நன்கொடையாளர்களைத் திருப்திப் படுத்தும் ஓர் உத்தியாகவும் இந்த semi-secular நிலைப்பாடு கடைப்பிடிக்கப் படுகிறது. இதற்குச் சிறந்த உதாரணம் பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை. பொஸ்கோவிற்கு முன்புறமுள்ள பிள்ளையார் கோவிலில் நவராத்திரி காலப் பிரார்த்தனைகளுக்கு சைவப் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள்.


சென்.ஜோன்ஸ், சுண்டுக்குளி, போன்றவை தலித்துகளுக்கான கல்விக்கூடங்கள் அல்ல. கத்தோலிக்க வெள்ளாளர்களும் மேட்டுக்குடிக்குமான பாடசாலைகள் இவை. 90களுக்குப் பின்பு யாழ். சமூக அமைப்பில் உருவாகின்ற தலித் பணக்காரர்கள் (புலம்பெயர் உறவுகள் உதவியால்) மட்டும் விதிவிலக்காக இப்பாடசாலைகளில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளமுடிகிறது. இவர்கள் நிர்வாகத்துக்குப் பெரும் தலையிடியாக இருப்பதில்லை. தலித் பணக்காரர்கள் மிக விரைவாகவே தம்மை நவவேளாளகுடிகளாய் வடிவமைத்துக் கொண்டுவிடுவதால் இப்பாடசாலைகளின் புனிதமிக்க நளினமிக்க இருப்பு பேணப்படுகிறது. புகுமுக வகுப்புகளில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களிடமிருந்து 75000/= வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. தவணைக்குத் தவணை அறவிடப்படும் கட்டணமும் சராசரிக்கு மிக அதிகமானது. இத்தனைக்கும் மாணவர்களுக்கு புத்தகங்கள் சீருடை பாடசாலையின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் அரசு கவனிக்கிறது. மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளை பெரிதும் OBA க்கள் பொறுப்பேற்கிற நிலையில் நன்கொடையாகப் பெறப்படும் நிதிகளில் பெரும்பங்கு திருச்சபையின் சமயப் பரப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கே செல்கிறது.


இந்த பாடசாலைகள் மிக உறுதியான ஆனால் இலகுவில் கண்ணுக்குப் புலப்படாத பிரச்சாரக்கட்டமைப்பு ஒன்றை சமூகத்தினுள் நிறுவி வைத்திருக்கின்றன. பாடசாலை பற்றிய உயர்வான் எண்ணத்தை சமூகமனதில் பதிய வைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் கனகச்சிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. பரப்புரைகளை நிறைப்பதற்கென்றே சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந்தொகைப் பணம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது.

இந்த நுணுக்கமன செயன்முறை அடுக்குகள் குறித்து அறியமுடியாதளவு திறம்படச் செய்கிறார்கள். புலனாய்வுப் பத்திரிகையியல் கற்றுத் தேர்ந்தோர் கூட இந்த வலையமைப்புக்களின் துளைத்தறியமுடியா மூட்டத்தன்மையையும் சிக்கலையும் புரிந்து கொள்வதில் பல இடர்களுக்கு முகங்கொடுக்க நேரும்.


3

யாழ்ப்பாணத்து இந்துக்கல்லூரிகள் தொடர்ச்சியாகப் பண்ணிக்கொண்டிருக்கிற இந்துமயமாக்கல்/வேளாளமயமாக்கலுக்குத் தக்க சான்றாதாரங்கள் யா.இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்டிருக்கும் நூற்றாண்டு விழா மலரில் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பின்வருமாறு:


· பக்.212 – அ.பி.மரியதாஸ் என்ற கிறிஸ்தவர் (வடிவமைக்கப் பட்ட இந்து?!) கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
‘மேலைத்தேய ஆட்சியாளரின் வலைக்குள் சிக்கிய பிரதேசங்கள் ஆட்சியாளர்களைத் தொடர்ந்து வந்த பாதிரிமாரின் முயற்சியினால் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு ஆங்கிலக்கல்வி போதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி மெல்ல மெல்ல மக்கள் மத மாற்றத்துக்கு உள்ளாக்கப் பட்டனர். அரச சலுகைகள் அவர்களின் முயற்சியை இலகுவாக்கின. கீழைத்தேய மக்களின் மேலைத்தேய நாகரீக மோகம் பாதிரிமாரின் நோக்கத்தை வெற்றி பெற வைத்தன.’
‘இரண்டாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட நம் பாரம்பரியப் பெருமை மெல்ல மெல்ல வீழ்ச்சியுறத் தொடங்கும் விபரீதம் கண்ட சில தமிழ்ச்சான்றோர் அந்ந்நிலை தடுக்க முயன்றோர்’
..’இக்கிளர்ச்சியின் வெளிப்பாடே தமிழ்ப்பாடசாலைகளின் தோற்றமெனலாம். இப்பாடசாலைகளின் தோற்றத்துக்கு நாவலர் பெருமானின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாகும்.’

*—கட்டுரையாளர்— நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சம் மரியதாஸ் கத்தோலிக்க மதகுருமாரை ‘பாதிரிமார்’ எனக் குறிப்பிடப் படுவதைத் தான். இந்துக்கள் தான் கத்தோலிக்க மதகுருக்களை பாதிரியென அழைப்பது வழக்கம். மற்றபடிக்கு வெறியிலிருக்கும் அதிருப்தியடைந்த மீனவர்கள் இவ்வாறு விளித்துத் திட்டுவது வழக்கம். பெரும்பாலும் ‘மதகுருமார்’ ‘மதத்தலைவர்கள்’ ‘சுவாமி’ ‘பங்குத்தந்தை’ போன்ற சொற்பிரயோகங்களே அச்சு ஊடகங்களில் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

மேலும் மரியதாஸ் ஓர் வரலாற்றுண்மையைக் கவனிக்க விரும்பவில்லை. கத்தோலிக்க மதப் பரவலும் விளிம்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட விடுதலையும் உடனிகழ்வுகளாயிருந்த உண்மையை அவர் லாவகமாக மறைத்து இந்து வெள்ளாளனுக்கு உவப்பான உண்மையைக் கட்டமைக்கிறார்.

‘நாவலர் பிரான்’ பற்றிய கட்டுடைப்பு ஆய்வுகளை மரியதாஸ் அறிந்திருக்காவிடினும் கூட நாவலர் பற்றி யாழ்ப்பாணத்தில் நிலவிவரும் சுவாரசியமான வாய்மொழிக்கதைகளைக் கூடவா அறிந்து கதைக்கமுடியாமல் போயிருக்கிறது? இதைக் கூட மரியதாஸின் தெரிவுக்கானது என நாம் விட்டுவிடலாம். மேலும் மரியதாஸ் ஓர் இந்துவைப் போல வரலாற்றுண்மைகளைத் திசைதிருப்புவதும் அவரது தெரிவுக்கானதே. நமது கேள்வி என்னவெனில் அவரது இத்தகைய தெரிவுகளை மேற்கொள்ளும் படியாக அவரது மனத்தை வடிவமைத்தது எது என்பது தான்.—


· பக்.216 – சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் இவ்வாறு எழுதுகிறார்:
‘யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பெரும் அறிஞர்களையும், கல்விமான்களையும், ஆன்மீகவாதிகளையும் உருவாக்கிய பெரும் கோவில் ஆகும்’
‘காத்தார் சமூகத் தொண்டன். புகழுக்காக! விளம்பரத்துக்காக! சமூகத்திற்குள் நுழைந்தவர் அல்லர்! உண்மைக் கம்யூனிஸ்ட் இவர் இந்துக் கல்லூரியை நடாத்துவாரா என..’

*—கட்டுரையாளர்—செஞ்சொற்சொல்வருக்குக் கூற எம்மிடம் ஒன்றுமில்லை. வாசகர்கள் அவரது கூற்றுக்களுடன் சேர்த்து வாசிக்க வேண்டிய ஓர் பிற்குறிப்பு இது : ஆணாதிக்க, இந்துத்துவ, உயர்குடியாதிக்க மலத்தை தன் வாயாலேயே கழித்துவரும் கம்பவாரிதிகளையும் அசட்டுத்தனமாக கோவில் கோவிலாய் ஏறி கத்திக் கொண்டிருக்கும் சொல்லின் செல்வர்களையும் உருவாக்கிய அற்புத உன்னத கோவில் இந்த இந்துக்கல்லூரி.


· பக்.223 – செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுகனார் உரைப்பது யாதெனில்:
‘திரு.யோசேப் மரவேலை பொறிமுறை வரைதல் கற்பித்தவர் ஒரு கிறிஸ்தவர் என்றாலும் பிரார்த்தனைக் கூட்டத்துக்குத் தவறார். திரு சந்தியாபிள்ளை, திரு.மரியதாஸ் இவர்கள் கிறிஸ்தவ ஆசிரியர்கள். ஆனால் கல்லூரியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் எம்மை நெறிப்படுத்துவதில் முதன்மை வகிப்பர். இந்துக்கல்லூரி ஒரு பெரிய குடுமபம்.’


*—கட்டுரையாளர்—இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் இந்து மயமாக்கலுக்கான உதாரணம்.


· பக்.253 – சமீப காலமாக இலக்கியவாதியாக அறியப்பட்டுவரும் த.ஜெயசீலன் (கைகளுக்குள் சிக்காத காற்று – அரச விருதொன்றைப் பெற்றது, வார்த்தைகளை இடைனடுவில் முறித்துப் போட்டவுடன் பிரசுரிக்கத் தயாராயிருக்கும் சிறுபத்திரிக்கைகளில் இவரது கவிதைகளைக் கண்ட ஞாபகம்) எழுதிய கவிதையிலிருந்து:
‘சந்தனப் பொட்டுப்பள்ளி
என்றவர் வாயடைக்க
விந்தை விஞ்ஞானம், நூறு
விளையாட்டு, கலைகள், கல்வி
என்றெந்தத் துறை என்றாலும்
“இந்துவே முதலில் இன்று”!
சந்தது சைவ மேன்மை
காக்குது.. தளராதிங்கு!’

*—கட்டுரையாளர்—ஜெயசீலன் நம்மையெல்லாம் பார்த்து அவரது கவிதையின் இறுதிப்பகுதி மூலம் ஒன்று கேட்கிறார்: ‘நாம் இந்துமைந்தர் என்னும் நட்புக்கெது ஈடாகும்?’ என்ன சொல்லலாம் தோழர்களே? தயவு செய்து ஒன்றும் கூறாதிருப்போம். நிச்சயமாய் நாம் அவருக்கு ஈடு கிடையாது தான்.


3


பாடசாலைகள் விடயம் சமூக அமைவாக்கத்தில் செலுத்தும் செல்வாக்கு பெரிதுபண்ணப்பட வேண்டிய விடயம் கிடையாது என்று வாதிடுபவர்களுடன் குஸ்திபோடும் எண்ணம் எனக்கில்லை. பாடசாலைகளின் சமூகவடிவமைப்புச் சக்தியை விளங்கிக் கொள்ள நான் இக்கட்டுரைக்குச் சற்றும் பொருத்தமற்ற விடுதலைப் போராட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பேரினவாத சக்திகளுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் ஒரு பெரும் தலையிடியாகவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. எதிர்ப்பின் வலுமிக்க சக்தியாக அது இருந்து வருவதில் சந்தேகமில்லை. தமிழ்த்தேசியத்துக்கு அளப்பரிய பங்களிப்புச் செய்த கல்லூரி என்கிறார் இ.விஸ்வநாதன் (பக்.18-19, நூற்றாண்டுவிழா மலர்) நூற்றாண்டுவிழா மலரில் கல்லூரியன் வரலாற்றை எழுதுகிற பேரா.ச.சத்தியசீலன் குறிப்பிடுகிறார்:

“தமிழீழ சுதந்திரப் போராட்டம் முளைவிட்ட காலத்தில் இருந்து யாழ் இந்துவின் மாணவ மணிகள் தங்களையும் இப்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவிலே இணைத்துக் கொண்டனர். இவ் விடுதலைப் போராட்டத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பொன்னுத்துரை சிவகுமாரன், உலகே அதிசயிக்கத் தக்க வகையில் தன்னுயிரை தமிழினத்துக்காக அர்ப்பணித்த தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) தளபதி இராதா எனப் பலர் இந்த வரிசையிலே திரள்வர்.”


தமிழீழ விடுதலைக்கென பல மாணவர்களைத் தளபதிகளாகவும் உயர்பீடங்களிலிருப்போராகவும் உருவாக்கிக்கொடுத்த யாழ்.இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழா மலரின் பக்கநிரப்பிகளாகத் தரப்பட்டிருக்கும் ‘பொன் மொழி’களில் சிலவற்றின் பட்டியல் இது. (தமிழீழத்துக்குப் பொருத்தமான குடிமக்களை வடிவமைப்பதற்கான ஒழுங்கு விதிகளாகவும் இவற்றை வாசிக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.) அவர்கள் களங்களிலும் கோட்பாடுகளிலும் எட்டிய வெற்றியின் பின் யாழ்.இந்துவின் பங்களிப்பும் உள்ளது என்பது போலவே கறுப்புப் பக்கங்களுக்கும் யாழ் இந்துவும் காரணமாயிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் இதோ:


· நிலமைக்குத் தக்கபடி நடந்துகொள்

· உயரவேண்டுமானால் பணிவு வேண்டும்

· நாட்டுப்பற்றை விட அதிகமான அன்பு வேறொன்றில்லை

· இன்னுயிர் நீர்ப்பினும் நம் தமிழ் காப்போம்

· முதலில் கீழ்ப்படிதற்குக் கற்றுக்கொள், பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாகவே வந்து சேரும்

· நீ எதைச்செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், இதயம், ஆன்மா முழுவதையும் அர்ப்பணித்துவிடு.

· எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ, சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

· அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்

· கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள், அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்துகிறார்கள்.

· மன அமைதி வேண்டுமானால் பிறரிடம் குற்றம் காணாதே.

· சுடர்விடவேண்டுமானால் சூடுபட வேண்டும்.


***

தரவு தரு பிரதி : 1905-2005 நூற்றாண்டு மலர்

யாழ். இந்துக் கல்லூரி

பழைய மாணவர் சங்கம்.


பின்னூட்டமொன்றை இடுக


Posted in கட்டுரைகள்

மேற்குலகின் புதிய மனச்சாட்சி மி்ஷெல் வெல்பெக்


Posted on மார்ச் 6, 2009 | பின்னூட்டமொன்றை இடுக


மேற்குலக நவீனத்துவத்தின் முக்கிய மனச்சாட்சிகளாக காஃப்கா, காம்யு, ஆர்த்தோ மூவரையும் குறிப்பிடுவது வழக்கம். இவர்களது பிரதிகள் சென்ற நூற்றாண்டின் மாபெரும் தத்துவார்த்தச் சிக்கல்களாக எதிர்கொள்ளப்பட்டவை. பல சிந்தனைப்பள்ளிகளின் தொடக்கத்துக்கும் சமூக இயக்கத்தின் முற்போக்கான நகர்வுகளுக்கும் பங்களித்த பிரதிகள் இவை.



காம்யூவிற்குப் பிறகு இம்மரபில் தோன்றியவரென மி்ஷெல் வெல்பெக்கை அடையாளம் காணப்படுகிறார். ஆனால் இம்மரபின் `தொடர்ச்சி`யென -அம்மரபின் பண்புகளைக் காவுகிறவராய்- வெல்பெக்கை இனங்காண முடியவில்லை. வெல்பெக்கின் வேர் காஃப்காவிடத்திலோ, காம்யூவிடத்திலோ இல்லை; மாறாக, ஃபெர்டினாண்ட் செலைன், மி்ஷெல் ஃபூக்கோ போன்றோரிடமிருக்கிறது என்று நினைக்கிறேன். கலகத்தன்மையிலும் சரி புனைவுத் தளத்திலும் சரி தன்னை ஓர் பாய்ச்சலாக நிறுவிக்கொண்டிருக்கும் இவரது பாய்ச்சல் முன்னோக்கியதா இல்லைப் பின்னோக்கியதா என்பதே தற்போது அதிகளவில் விவாதிக்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது. வெல்பெக்கின் புனைவுக்குப் புறம்பான செயற்பாடுகளும் புனைவுகளின் கலகத்தன்மையும் அவரை செலைன், அந்ரே ழ்ஜித், ழீன் ஜெனே போன்றோருடன் ஒப்புநோக்க வைக்கின்றன. `தேங்கிப்போன கவனங்களை உலுக்குவதே என் நோக்கம்` எனக்கூறிய ழ்ஜித்துடன் மிகவும் நெருங்கிப் போகக்கூடியவர் வெல்பெக். ஃபிரான்ஸின் புத்திஜீவிகளும் கலைஞர்களும் அதிரடியானவர்களாகவோ அதிர்ச்சியூட்டுபவர்களாகவோ தான் இருந்து வந்துள்ளார்கள். மார்க்கி டி சேட், பெர்டினாண்ட் செலைன், ழீன் ஜெனே இப்போது வெல்பெக். சேட் மறைந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அவரது எழுத்துக்கள் மீதான சர்ச்சை இன்னமும் நீடிக்கிறது. இத்தகைய கலகத்தன்மையுடன் கூடிய அறிவுமரபின் தீவிரம் அமெரிக்கர்களிடமோ இதர ஐரோப்பியர்களிடமோ காணக்கிடைப்பதில்லை.



சமகால பிரெஞ்சு-அய்ரோப்பிய இலக்கியத்தின் முக்கிய நபரான மி்ஷெல் வெல்பெக் (Michel Houellebecq – pronounced wellbec) இதுவரை நான்கு நாவல்களை எழுதியுள்ளார். வெல்பெக்கினுடைய எழுத்துமுறை முற்றிலும் சலிப்பூட்டக்கூடிய வாசகனை அவமதிப்புக்குள்ளாக்கக் கூடிய ஒன்று. சமகால ஆங்கில ஐரோப்பிய இலக்கிய மரபிற்கு எதிர் மரபொன்றைத் தாபிக்க முயலும் பிரதிகளென இவற்றைக்கொள்ள முடியும். அமெரிக்க-ஆங்கில புத்திஜீவி நாவல்களுக்கு – முக்கியமான ஏதோ ஒன்றைச்சொல்கிற பாவனையில் புரியாத பூசிமெழுகிய வார்த்தைகளை இட்டு நிரப்பும் நாவல்களுக்கு எதிராக இயங்கும் நாவல்கள் இவருடையவை. ஆடம்பரமற்ற வரண்ட மொழி, மிக மிகப்பழைய கதைநகர்த்து முறை போன்றவற்றைக் கொண்டிருக்கும் நாவல்கள் பெரும் வரவேற்பையும் சர்ச்சையையும் சம்பாதிக்க முடிகிறதென்றால் அப்பிரதிகள் வேறு வகைகளில் முக்கியமாகிறது என்று அர்த்தம்.



வெல்பெக்கின் முதல் நாவலான ‘Whatever’ 1994 இல் வெளி வந்தது. பரவலான கவன ஈர்ப்பைச் செய்ய முடியாது போன இந்த நாவலுக்குப் பின் 1998இல் The Elementary Particles ஐ பிரெஞ்சில் வெளியிடுகிறார். 60களில் தாராண்மைவாதத்தின் உடன்நிகழ்வுகளான தாராளவாதப்பெண்ணியம், தாராளவாதத்தனிமனிதவாதம், பொகீமியனிசம் என்பவற்றின் இருண்ட பக்கங்களை கருணையற்ற மொழியில் விமர்சனம் செய்கிறது நாவல். மிக ஆழமான சமூக விமர்சனமும் தத்துவார்த்தமாக்கலும் நிறைந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சலிப்பூட்டக்கூடிய மொழியும் குரூர நகைச்சுவையும் எரிச்சலூட்டக்கூடிய வகையில் முன்-திட்டமிடப்பட்டிருக்கிறது.



The elementary particles இரு சகோதரர்களை மையப்படுத்துகிறது. ஒருவன் Michel Djerzinsky – விஞ்ஞானி. மற்றையவன் Bruno – மனஞ் சிக்கலுற்ற ஆசிரியன். இருவருமே வேறுவேறு தந்தையர்களுக்குப் பிறந்த ஒரு தாய் பிள்ளைகள். 60களில் ஹிப்பி வாழ்வின் ஈர்ப்பில் தாய் இவர்களை வயதான பாட்டியுடன் விட்டுச்செல்கிறாள் – அமைதியையும் தன்னையும் ஹிப்பி வாழ்வில் – கலிபோர்னியாவின் கொம்யூன் ஒன்றில் கண்டுகொள்கிறாள், வேறு வேறு தந்தைகளுக்குப் பிறந்த மி்ஷேலும் ப்ரூனோவும் இதைத் தொடர்ந்து பேரன் பேர்த்திகளிடம் வளர்கின்றனர். ப்ரூனோவின் குழந்தைப் பருவம் மிகக்கசப்பானதொன்றாக அமைந்துவிடுகிறது. முகத்தில் சுருக்கம் விழுந்த பாட்டி பாடசாலைக்கு வந்து தன்னைக் கூட்டிச் செல்வதையிட்டு மிகுந்த அருவருப்படைகிறான் ப்ரூனோ. இவர்கள் இருவரும் சிதைந்த சமூகத்தின், சிதைந்த குடும்பங்களின் சிறுவர்களாய் இருந்தவர்கள். இலக்குகளேதுமற்ற தரிசு வெளியில் ஏதாவது ஒரு பிடிமானத்தைத் தேடியலைகிற உயிரிகள். Bruno சுய அழிப்பிலும் செக்ஸினுள்ளும் தன்னைப் புதையுண்டு போகச்செய்ய மி்ஷெல் தனது மூளையினுள் மூழ்கி தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறான் (cerebral). ப்ரூனோவும் மி்ஷெலும் வெல்பெக் விமர்சிக்கின்ற சமூக அமைப்பின் பிரதிநிதிகள் அல்லர். அவர்களது செயற்பாடுகள் 60களில் ஏற்பட்ட மாற்றங்களின் தொடர்வினைகளாகவே தோற்றம் தந்தாலும் உண்மையில் அச்சமூக மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களே அவர்கள் (victims of a socio-cultural transition/transformation). நூலின் பக்கங்களில் வெல்பெக்கினால தாராளமாகவே மேற்கோளிடப்படும் Auguste Comte பக் 129இல் இவ்வாறு மேற்கோளிடப்பட்டிருக்கிறார்: `When it is necessary to modify or renew fundamental doctrine, the generation sacrificed to the era during which the transformation took place remain essentially alienated from that transformation, and often become directly hostile to it.` ஆக, 60களின் தாராண்மைவாதப் புரட்சி எனும் சமூகமாற்றத்துக்கு தவிர்க்க முடியாதவகையில் பலியிடப்பட்டவர்களாய் மிஷேலையும் ப்ரூனோவையும் கொள்ள முடியுமென நினைக்கிறேன்.






ப்ருனோவினுடைய பதின்மவயதுகள் ஓர் விபத்தாகவே கடந்தன. மி்ஷெல் தனித்திருந்ததால் உயிர்வாழ்ந்தான். அவனுடைய வாழ்வு என்பது மூளை சம்பந்தமானதாக மாத்திரமே இருக்கிறது -A cerebral life. இத்தனைக்கும் மூல காரணமாயிருப்பவள் ஜேன் – மி்ஷெலினதும் ப்ரூனோவினதும் தாய். கட்டற்ற ஹிப்பி வாழ்க்கையில், ஹெடோனிசத்தில் மூழ்கி `தாய்` எனும் ஸ்தானத்தில் இருந்து விலகிய ஜேன், மற்றும் அவளது தலைமுறை.



நாவலில் ஜேன் இனுடைய நியாயங்கள் சொல்லப்படுவதில்லை. ஹிப்பி வாழ்வை அவாவுவதன் பின்னிருக்கிற உளவியல் தேவைகளை வெல்பெக் எதிர்கொள்ளவில்லை. வெல்பெக்கின் கரிசனையெல்லாம் ஜேன் என்கிற அடங்காப்பிடாரி `பெண்`ணால் `கைவிடப்பட்ட` `ஆண்`குழந்தைகளின் மீதே இருக்கிறது.



ப்ரூனொ கீழைத்தேய மனைவியைப் போல நடந்து கொள்ளும் ஒருத்தியிடம் மாத்திரமே திருப்தி அடைகிறான். நாவல் மரபார்ந்த விக்டோரிய மனைவிகளியும் தாய்களையும் அவாவுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜேனின் மரணப்படுக்கையில் அவளருகில் இருந்து ப்ரூனொ சொல்லும் வார்த்தைகள் அதிர்ச்சியூட்டக்கூடியவை: ‘அவர்கள் உன்னை எரித்தால் நல்லது.. நான் உனது சாம்பலை எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாள் காலையும் மூத்திரமடிப்பேன்.’ [வெல்பெக்கின் நிஜவாழ்க்கையிலும் ஜேன் போன்ற அம்மா தான். வெல்பெக்கிற்கு 12 வயதாயிருக்கையில் ஹிப்பி வாழ்வைத் தேர்ந்தெடுத்த அம்மா பிரிகிறாள்.]



வெல்பெக்கின் நாவல் ஒரு சமூகத்தின் மீதான விமர்சன வாசிப்பு – தாராளவாத சமூக அமைப்பின் மீதான மீள்பார்வையைச் சாத்தியமாக்கும் விமர்சனங்களால் ஆகியிருக்கிறது நாவல். நாவலின் பக்கங்களில் பாலியல் புரட்சியாளர்களுக்கு வயது ஏறுகிறது. அவர்களது உடல்கள் வயதடைகின்றன. விரக்தியும் சோர்வச்சமும் சேர்ந்து ஏறுகிறது வயது. பாலுறவை மையப்படுத்தாத, அதற்குப் புறம்பான இணைவுகளையும் அடர்த்தியான தொடர்புகளையும் பேணத்தவறிய அவர்களை இறுதிக்காலத் தனிமையின் யதார்த்தம் அச்சமடையச் செய்கிறது. இந்த தரிசு நில நிலையை சமூகம் atomise செய்யப்பட்டதன் விளைவு என்கிறார் வெல்பெக். தனிமனிதவாதத்தினுள் ஹீடனிசத்துள் (hedonism) அனைத்தும் அமிழ்ந்து விடுகின்றன. அர்த்தமுள்ள பிணைவுகளை ஏற்படுத்த முடியாத நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட உடைந்து சிதறுகிறது சமூகம். ஃபூக்கோவின் பிரதிகள் நிகழ்த்திய கட்டுடைப்புகளுக்கு உள்ள அதே முக்கியத்துவம் வெல்பெக் முன்வைக்கும் நுண்ணிய அவதானிப்புகளுக்கும் உண்டு.



60களில் ஏற்பட்ட தாராளவாத பாலியல் புரட்சி பெண்ணிய வாதம் என்பவற்றுக்குப் பிந்தைய சமூகத்தை வெல்பெக் அணுகும் கோணம் அதிர்ச்சியூட்டும் சித்திரத்தை தருகிறது. இச்சமுக மாற்றத்தின் விளைவுகளென எஞ்சியிருப்பவை மனிதாயத்தின் சிதைவு, தொடர்வுறுத்துவதிலும் தொடர்புறுவதிலுமான தோல்வி, misanthropy போன்ற எதிர்மறைகளே என்பதை நிறுவுகிறார் வெல்பெக். நாவலின் கதாபத்திரங்கள் மதத்தின் வீழ்ச்சி தனிமனிதம் என்பவற்றின் எதிர்மறையான விளைவுகளை அனுபவிக்கும் அப்பாவிகள். மரபு / பழமை பேணும் நிலை என்பது சமகாலப் போக்குகளின்படி எரிச்சலூட்டக்கூடியதுதான் என்றாலும், வெல்பெக் வித்தியாசம் வித்தியாசமான சமூக/தனிமனிதச் சூழ்நிலைகளிலிருந்து தெளிவான ஆதாரங்களினை எடுத்துக் கோர்த்து நிறுவுவதன் மூலம் தனது நாவலை தவிர்க்கமுடியாத ஓர் பிரதியாக்கி விடுகிறார்.



வெறுமை அவநம்பிக்கை ஆகியவற்றை நாவல் முன்வைக்கிறது. அவநம்பிக்கைவாத நாவலென (nihilistic novel) இதை ஒரு சாரார் வகைப்படுத்துகின்றனர். நாவல் முழுதும் அவநம்பிக்கை விரவியிருப்பதை மேலோட்டமான முதல் வாசிப்பிலேயே உணர முடியும். ஆனால் த கார்டியனின் அலெக்ஸ் கிளார்க் கூறுவது போல அவநம்பிக்கை வாத நாவலென இதை அடையாளாப்படுத்துவது குறைமதிப்பீட்டின் விளைவுதான். நாவலின் கதாபத்திரங்கள் கருத்துக்களைச் சொல்லியவாறேயிருக்கின்றன. சில நம்பிக்கைச் சாத்தியப்பாடுகள் இடையிடையே உண்டு. விவாதங்களினூடான வெளியை உருவாக்கித் தருவதால் `அவநம்பிக்கையை விவாதிக்க` உதவும் நாவல் எனலாம்.



பாலியல் விபரிப்புகள் நாவலில் நிறைய உண்டு. ஆனால் அந்த உறவுக்கான பெறுமானம் அங்கு இருப்பதில்லை. உடலுறவின் தருணங்களை வெல்பெக் எழுதிச்செல்லும் விதம் கவர்ச்சிகரமானதல்ல. அசௌகரியத்தை உண்டுபண்ணும் மொழியும் காட்சிப்படுத்தல்களும். உறவு கொள்ளமுடியாமை, பலவீனம், குற்ற உணர்வு என பாலுறவின் தருணங்கள் செருகப்பட்ட அதிர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது. ஒரு சில சித்தரிப்புகள் அசூசையுணர்வை ஏற்படுத்தவில்லை என்றால் அவ்வுறவின் பின்னணி சந்தோ்ஷமளிக்கக்கூடிய ஒன்றாக இருக்காது. அது ஓர் கடமை போல, தேவையின் அடிப்படையில், உடலின் அவஸ்தை தரும் நிர்ப்பந்ததின் அடிப்படையில் ஏற்பட்டதாக இருக்கிறது. பாலுறவையும் வெல்பெக்கையும் பற்றி நிறைய எழுதப்பட்டு விட்டது. தனது இளவயதில் புறக்கணிப்பினை தான் அழகின்றி இருப்பதான உணர்வினைத் தான் அனுபவித்ததாக வெல்பெக் கூறுகிறார். அவருடன் பாடசாலைப் பார்ட்டிகளில் நடனமாட யாரும் விரும்பவில்லை .ஆனால் அவை வெறும் பிரமைகளே எனவும் அவர் ஒத்துக்கொள்கிறார். ஆனால் தான் இவ்வாறான பிரமைகளில் சிக்கியிருந்ததற்கான காரணிகளை அவரால் துல்லியமாக அவரால் இனங்காட்ட முடிகிறது. அழகு ஓர் பரிமற்றாக இருக்கிறது. பாலியல் புரட்சி – சமத்துவத்தைஇ சுதந்திரத்தை வலியுறுத்திய பாலியல் புரட்சி வெளித்தெரிய முடியாத மனச்சிக்கலுற்ற ஓர் கீழ்வகுப்பை தாராளவாத சமூக அமைப்பில் ஏற்படுத்தி விடுகிறது. இந்த விளிம்பு நிலையே நாவலில் கவனப்படுத்தப் பட்டுள்ளது. வெல்பெக்கின் கதாபாத்திரங்கள் இவ் விளிம்பு நிலை மனிதர்களே.



நாவல் அளிக்கும் பார்வைக்கோணத்தின் படி மேற்குலகினர் தங்களது உடம்பிலிருந்து அந்நியப்படுத்தப்படுத்தப் பட்டுள்ளமை புலனாகிறது. ட்ரிப்பிள் எக்ஸ் உலகின் ஆதிக்கம் நிலவும் படுக்கையறகள் கொண்டதே மேற்கு என்பது ஓர் புதிய விடயமல்ல. ஆனால் அது அவர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதில்லை.சுத்தம் சுகாதாரம் போன்ற காரணிகள் பற்றிய பிரக்ஞை கிட்டத்தட்ட ஓர் ஆட்டுவிப்பு மனோநிலையாக (obsessive) மாறியிருக்கிறது. போர்ணோ உலகின் தரங்களுக்கு சமமாக அமையாத தங்களின் உடல் குறித்த குற்ற உணர்வுடன் மனத்தாழ்வு கொண்ட சமூகமாக மாறியிருக்கிறது தாராளவாத பாலியல் புரட்சிக்குப் பிந்தைய சமூகம். ஒவ்வொருவரும் உறைந்து பகுத்தறிவிற்குள்ளும் தனிமனித சுய பிரக்ஞையினுள்ளும் சிக்கிக் கிடக்கின்ற அவல நிலை – உள்புதைந்த மனிதர்களின் கட்டடமாக மேற்கு மாறியிருக்கிறது. மி்ஷெல் ஃபூக்கோ தாராளவாத அமைப்பின் மீது வைத்த விமர்சனங்களின் அடுத்த கட்ட நகர்வே மி்ஷெல் வெல்பெக்கின் புனைவுகள் எனலாம். வழமைக்கு மாறான புணர்ச்சி நிலைகளை வெல்பெக் எழுதிய போது பல விமர்சனங்கள் அதைக் கண்டித்தே எழுந்தன. இதிலிருந்தே வெல்பெக்கின் தரப்பில் நியாயமிருப்பதை உணரமுடிகிறது. எவ்வளவு தான் முயன்றாலும் பாலுறவை மிக இயல்பான, இயற்கையான ஒன்றாகப் பாவனை பண்ணிக்கொள்ள முடிவதில்லை.



வெல்பெக் நிற, இனத் தூய்மை வாதியெனவும் பிறதேச வெறுப்புள்ளவரெனவும்அடையாளங்காணப்படுகிறார். இவ்விமர்சனக்களில் உண்மை இல்லாமலில்லை. நீக்ரோக்களுக்கு எதிரான அவரது துவேஷம் the elementary particles நாவலின் சில பகுதிகளில் வெளிப்பாடடைந்தது. அவர் இனவாதியாக இருப்பதற்குச் சொல்லும் தன்விளக்கம் மேலோட்டப் பார்வையில் அபத்தமானதாகத் தோன்றக்கூடும்: We are not born racists. We are made into because of the penis envy – said Bruno. முஸ்லிம்களுக்கும் அரபியர்களுக்கும் எதிரான அம்சங்கள் நாவலில் நிறையவே உண்டு. இஸ்லாம் ஒரு முட்டாள் மதம் என்கிறான் மி்ஷெல்.



1930களில் பெர்டினாண்ட் செலைன் இனவாத (anti-Semitic) எழுதினார்: I think I’ll go and live in Ireland, Where they don’t like the English or the Jews. செலைன் என்ன செய்ய விரும்பினாரோ அதை மி்ஷெல் வெல்பெக் அவரது நிஜ வாழ்விலும் அவரது கதாநாயகன் மி்ஷெல் புனைவிலுமாய் செய்கிறார்கள். நாவலில் மி்ஷெல் அயர்லாந்தில் சந்தோஷமாக இருப்பதாய்க் கூறப்படுகிறது: Michel is relatively happy in Ireland, where they still go to the mass. மதத்தை மீள்வலிதாக்கம் செய்வதற்கான முனைப்பு இவ்வரிகளில் தென்படுகிறது. தஞ்சமடையும் வெளியே மதம் என்று வாதிட முடிந்தாலும், Da vinci Code இற்குப் பிறகான மதத்தின் மீளெழுச்சியுடன் இதை இணைத்துப்பார்க்க வேண்டியுமுள்ளது. திருச்சபைகள் தமது பிரச்சாரச் செயற்பாடுகளை உலகளாவிய ரீதியில் முடுக்கி விட்டுள்ளன. அவர்களது பிரச்சார வேலைத்திட்டத்தினுள் நாவல் கச்சிதமாக பொருந்துகின்றது. (இப்படியான கொன்ஸ்பிரேசிகள் எப்போதும் இருந்தபடியே தான்: பொரிஸ் பாஸ்டர்நாக், சோல்செனிட்சின், ஓர்வெல் பின்னர் இப்போது புக்கர் பெறுகிற `பின் காலனிய` நாவலாசிரியர்கள்!!!)



வெல்பெக் வருமான வரிச்சிக்கல்களை முன்னிட்டு அயர்லாந்தில் வசிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவரது நிலைப்பாடுகளை ஆராய்கையில் எங்கேயோ இடறுகிறது. அயர்லாந்து celtic தீவு என்பது அனைவருமறிந்த விடயம். 60களின் மாற்றங்கள் அயர்லாந்தில் பெரிதாக எதையும் மாற்றவில்லை. மதத்தில் தஞ்சமடைவதை நியாயப்படுத்துகின்ற, மேலைத்தேயக் கலாச்சாரத்தின் சிதைவைப் பேசுகிற ஓர் எழுத்தாளருக்கு மாற்றங்கள் இன்னும் அணுகாத கெல்டிக் அயர்லாந்து உவப்பாயிருப்பதில் வியப்பேதுமில்லை.



Elementary particles இனைத்தொடர்ந்து வெளிவந்த Platform இல் இனத்துவேஷக்கூறுகள் தூக்கலானவையாக அமைந்து வெல்பெக்கிற்கு எதிரான வழக்குகளை சம்பாதித்துக்கொடுத்தன. Platform மூன்றாமுலகின் பொருளாதாரச்சிக்கல்களுக்கு படு அபத்தமான தீர்வொன்றை முன்மொழிகிறது : முதலாமுலகத்தினர் மூன்றாமுலகின் மீது செக்ஸ் சுற்றுலாக்களை மேற்கொள்வதன் மூலம் அனைத்தும் தீர்ந்து போய்விடும்!



மானுடவியல் ரீதியான விழிப்புணர்வு வெல்பெக்கிடம் காணப்படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு. அனல்காற்றின் போது பிரான்ஸின் கைவிடப்பட்ட முதியவர்கள் பரிதாபமாகச் செத்துப்போவதை ஆவணப்படுத்துகிறார் ஓரிடத்தில். விஞ்ஞானப் புனைகதையின் பாவனையில் கருத்துக்களை முன்வைப்பது அவரது வழக்கமாகி விட்டது. சமகாலப் போக்குகளை மிக உன்னிப்பாக அவதானித்துப் பதிவு செய்கின்ற போது அவற்றை தனது கருத்துகளுக்குச் சாதகமான அம்சமாக மாற்றிவிடும் கெட்டிக்காரத்தனம் வெல்பெக்குக்கே உரியது.



Platform பாலியல் புரட்சியின் எதிர்மறையான விளைவுகளை விபரிக்கிறது. கதானயகன் மி்ஷெலும் அவனது காதலி வெலேரியும் சுற்றுலா ஏஜென்சியொன்றை உருவாக்குகிறார்கள். கவர்ச்சி ஒரு பரிமாற்ற ஊக்கியாக (exchange) தாராள வாத சமூகத்தில் இயங்குகிற நிலையை பகடி செய்கிறது நாவல். டில்டோக்களில் பாலுறவுத்தேவைகளுக்காகவும் செல்லப்பிரணிகளில் அன்புக்கும் ஆதரவுக்கும் தங்கியிருக்கும் விரக்தியுற்ற மேற்குலகினரை கீழைத்தேசங்களுக்கு பாலியல் சுற்றுலாவுக்கென அழைத்துச் செல்லும் சுற்றுலா ஏஜென்சி – குறிப்பாக தாய்லாந்துக்கு – நீங்கள் அழகா அசிங்கமா எனக்கவலைப்படாத பாலியல் தொழிலாளர்கள் நிறைந்த தாய்லாந்துக்கு.



நியூயோர்க் டைம்ஸ்ஸின் ஜென்னி டேர்னர் கூறுவது போல வெல்பெக் பாலியல் சுற்றுலா குறித்து எழுதும் விதம் அதை அருவருப்பூட்டக் கூடிய விதத்தில் தத்துவப்படுத்துகிறது. மேலைத்தேயக் கண்ணோட்டத்திலேயே அக் கருத்துருவம் வடிவமைக்கப் படுகிறது. துஷ்பிரயோகம் செய்யப்பட்டு சிறுவயதிலேயே அந்த நரக வாழ்வினுள் தள்ளப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் இன்னல்கள் குறித்து வெல்பெக் ஒப்புக்கு சில இடங்களில் கிறுக்கியிருந்தாலும் அத்தகைய அனுதாபம் கூட பிரசுர நிர்ப்பந்தமாயிருக்கலாமோ எனச் சந்தேகிக்கும் அளவுக்கு மிகக்குறைவான அளவில் கதையின் தொனிக்கு ஒவ்வாத விதத்தில் கலக்கப் பட்டுள்ளது: ‘they didn’t have an easy job. Those girls.`



platformஇல் இஸ்லாம் மீதான அவமதிப்பு முக்கிய கதாபாத்திரம் ஒன்றின் வாயில் திணிக்கப்படுகிறது: ‘ஓரு பாலஸ்தீனத் தீவிரவாதியோ அல்லது பாலஸ்தீனக் குழந்தையோ அல்லதி ஓர் பாலஸ்தீனக் கர்ப்பிணிப் பெண்ணோ காஸாவில் சுட்டு வீழ்த்தப்படும் செய்தி என்னை எட்டும் போதெல்லாம் நான் பரவசமடைகிறேன். ஏனெனில் அது முஸ்லிம் சனத்தொகையில் ஒன்று குறைந்து விட்டதைக் குறிக்கிறது.’ இந்த வார்த்தைகள் 9/11 ஐ தமது நியாயமாகக் கொள்கின்றன. வெல்பெக்கின் மிகச்சமீபத்திய நாவலான Possibility Of an Island இலும் வெல்பெக்கியக் கதாநாயகன் (Houllebecqian Hero) வருகிறான். வெல்பெக்கின் முந்தய நாவல்களில் நடந்ததைப் போலவே இதிலும் அவனது தன்னிலை விளக்கமும் வெளிப்பாடுகளும் நாவலின் உயிரை உறுஞ்சி விடுகின்றன. இந்த நாவலிலும் முஸ்லிம்கள், அரேபியர்கள், மற்றும் சிறுவர்கள் மீதான துவேஷம் வெளிப்படுத்தப் படுகிறது. டேனியல் 1 கூறுகிறான்: “The Palestinian orgy Sluts” was undoubtedly the pinnacle of my career”. அவன் எடுக்கும் நீலப்படத்தின் தலைப்பு ‘Munch on my Gaza strip, My huge Jewish Settler.” ஆக்கிரமிப்பாளன் – அடிமை உறவுகள் நீலப்பட உலகில் ஒன்றும் புதியவையல்ல எனினும் கூட பாலஸ்தீனத்துடன், முஸ்லிம் பெண்மையுடன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தொடர்வுறுத்தி erotic பிரதியொன்றை தயாரிப்பது பற்றிய சிந்தனையின் மூலவேர்கள் புதிரானவை. அதுவும் ஓர் வெள்ளை அறிவுஜீவியிடமிருந்து வருகையில்?



தடாலடியாக கருத்துச் சொல்வதில் முன்னோடியாக வெல்பெக்கைத் தான் இனிவரும் கலைஞர்கள் கொள்ள வேண்டியிருக்கும். அவரைப் பொறுத்தவரை, ்ஷேக்ஸ்பியர் ஒரு sad fool. ஜேம்ஸ் ஜொய்ஸ்: சிக்கலான சலிப்பூட்டக்கூடிய கதைகளை எழுதிய ஐரிஸ் பைத்தியம். விளாடிமிர் நபக்கோவ் ஒரு போலிக் கவிஞர். அகதா க்ரிஸ்டி வெல்பெக்கிடம் பாஸ் மார்க்ஸ் பெறுவது ஏன் என்பதை உங்களைப் போலவே நானும் அறியேன் – அதுதான் மிஷெல் வெல்பெக்.



குற்றவுணர்வேதுமின்றி xenophobic இமேஜை மெயின்டெயின் செய்வதும், கோர்ட்டுகளில் ஏறி வாதாடி வருவதும், Time பத்திரிக்கையின் பெண் நிருபரை புணர்ச்சிக்கு வருமாறு அழைத்தசம்பவமும் அவரை ஒரு Enfant Terrible ஆக மாற்றிவிட்டன. வெல்பெக்கின் விசிறி விமர்சகர்கள் அவரது கருத்து நிலைகளை நியாயப்படுத்துகின்ற விதம் கவனிப்புக்குரியது. வெல்பெக்கை உள்ளுணர்வு வாதி (Intuitive intellect) என்பதன் மூலம் அவரது சகல செயல்களையும் நியாயப்படுத்த முடிகிறது அவர்களால்.



Elementary particles 1998 இல் பிரான்சின் கௌரவத்துக்குரிய இலக்கிய அங்கீகாரமான Prix Novembre விற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே தேவையானளவு கெட்டபேரைச் சம்பாதித்திருந்த வெல்பெக்கிற்கு எதிராக பாடசாலை ஆசிரியர் சங்கம் வேறு அச்சமயத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தியது. ஆனால் ஜுலியன் பார்ண்ஸ், மாரியோ வர்காஸ் ல்லோசா ஆகியோரை உள்ளடக்கிய நடுவர் குழு வெல்பெக்கை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது. கிழிந்த ஆடையுடனேயே விழாவிற்கு வந்திருந்த வெல்பெக் குடிபோதையில் இருந்தார். அவரது இத்தகைய பிரசன்னம் பரிசினை ஸ்பொன்ஸெர் செய்யும் பணக்காரர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. அனைவரும் அதிருப்தி அடைந்திருந்த நேரத்த்தில் ல்லோசா நாவல் குறித்த மிகச்சரியான விளக்கத்தைக் கொடுக்கும் வார்த்தையொன்றை முன்வைத்தார் : The Insolent Art of Michel Houellebecq. அவர் இதை ஓர் புகழ்ச்சியாகவே கூறியிருந்தார். அவரது வார்த்தை வெல்பெக்கிற்கு பொருத்தமானதுதான் – சகலவிதத்திலும்!


(வெல்பெக் மீதான எனது வாசிப்பு அவர் குடும்ப அமைப்பையும் மத்ததையும் வலியுறுத்துகிறார் என்பதாகஅமைந்தது. கட்டாயமாக அந்த ‘இணைவு’ குடும்பமாகத்தான் இருக்க வேண்டுமா என்பது ஓர் கேள்வி)
வாசிப்பு பட்டியல்
The Elementary Particles – Novel by Michel Houllebecq ( French)
Translated by: Frank Wynne
Published by: Alfred A.Knopf, New York 2000Dec
The Platform – Novel by Michel Houllebecq (French)
Heinemann 2002
The possibility of an Island – Novel by Michel Houllebecq (French)
Translated by: Gavin Bowd
Published by: Alfred A.Knopf 2006
90% HATEFUL – A new novel by the provocative Michel Houellebecq.
Review by JOHN UPDIKE for Possibility Of An Island
Newyorker – Issue of 2006-05-22
HATE AND HEDONISM – The insolent art of Michel Houellebecq.
Review by JULIAN BARNES for The Elementary Particles.
Newyorker – Issue of 2003-07-07
The man can’t help it – Essay by Suzie McKenzie – Guardian – Saturday August 31, 2002


பின்னூட்டமொன்றை இடுக


Posted in இலக்கிய விமர்சனம்,கட்டுரைகள்

பண்பாட்டு அடையாளங்கள் சிதைதலும் ஓர் ஆப்பிரிக்க இலக்கியப் பதிவும்


Posted on மார்ச் 6, 2009 | 1 மறுமொழி



வாழ்வோரின் நிறத்தால் மட்டுமல்ல, அங்கு நிறைந்திருக்கும் இனக்குழுக்களின் வாழ்முறைமைகள், மரபுகள் மற்றும் தரைத்தோற்றங்கள், அடர்வனங்களாலும் கூட ஆப்பிரிக்கா ஒர் இருண்ட கண்டம் தான் – ஆப்பிரிக்காவைக் கதைக்களனாகக் கொண்டமைந்த ஆங்கில இலக்கியப் பிரதிகளும், ஆய்வுகளும் மேற்கூறியதையே இதுவரை காலமும் நமக்குச் சொல்லி வந்திருக்கின்றன. வெள்ளைமையவாதம், கொண்ட ஆங்கில இலக்கியப் புனைவு வெளி நெடுகிலும் ஆப்பிரிக்கவைச் சாத்தனின் தேசமாகவும், காட்டுமிராண்டிகளின் வாழ்விடமாகவும் காட்ட முயற்சிக்கும் சித்தரிப்புகள் இறைந்து கிடக்கின்றன. கொண்டாடப்படும் புனைவுகளான Heart of Darkness (Joseph Conrad), Moby Dick (Herman Mellville) ஆகியவற்றில் காணப்படும் இனத்துவேஷப் போக்குகளை டிக் கிரகொரி போன்ற விமர்சகர்கள் விமர்சித்த போதும் அவ்விமர்சனங்கள் கவனத்தில் கொள்ளப் பட்டதில்லை.



உன்னதமானவை என முத்திரை குத்தப்பட்டு வாசகர் முன்னிறுத்தப்படும் வெள்ளை இனமையவாதமுடைய ஆங்கில இலக்கியப் பிரதிகள் மறைமுகமாக வாசக மனதில் ஆப்பிரிக்காவைப் பற்றிய எதிர்மறையான மனப்பதிவையும், வெள்ளைமையச் சார்பு கொண்ட கருத்து நிலையையும் தூண்டும் வல்லமை கொண்டவை. ஒருவித கருத்தியல் ஆதிக்கத்தை இதன் மூலம் நிறுவி ஸ்திரப்படுத்த முயற்சி செய்யும் ஆங்கிலப் பிரதிகளின் நுண் அரசிய லை கேள்விக்குள்ளாக்கும் விதத்திலும், ஆபிரிக்காவை காலனித்துவ அடிமை மனோபாவத்திலிருந்து விடுவிக்கும் நோக்கிலும் ஆப்பிரிக்காவில் எதிர்ப்பிலக்கிய அலையொன்று தோன்றிற்று.



வோல் சொயின்கா, சின்னுவ அச்செபே, ங்குகி போன்றோர் அவ்வலையின் முக்கியமான ஆரம்ப காலப் படைப்பாளிகள். காட்டுமிராண்டிகள் என வர்ணிக்கப்பட்ட நீக்ரோ மக்களது வாழ்வையும் மரபுகளையும் இலக்கிய விபரிப்புக்கு உட்படுத்திய போது இவர்களுடைய படைப்புகள் பரவலான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. பொதுவாகவே ஆங்கிலேயரால் சிதைக்கப் பட்ட கலாச்சார, இன மத அடையாளங்களையும் அவற்றின் தனித்துவங்களையும் மீள் நிர்மாணம் செய்வதையே இப்பிரதிகள் தமக்குள்ளும், வெளியிலும் நிகழ்த்தின. அப்படைப்புகளுக்குள் குறிப்பிடத்தக்க நாவல் சினுவா அச்செபேயின் Things Fall Apart. 1930இல் பிறந்த சினுவா அச்செபே இந்நாவலை தனது 28வது வயதில் எழுதினார். 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பிரதிகள் விற்றுத் கீர்ந்ததும், 40 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருப்பதும் இந் நாவலின் சாதனைகள்.



நைஜீரியாவின் உமுஓஃபியா கிராமத்தைக் களமாகவும், இபோ இனத்தின் முக்கியஸ்தர்களைக் கதை மாந்தர்களாகவும், கொண்டிருக்கிறது நாவல். கதையின் நாயகனான ஒக்கொன் க்வோ உமுஓஃபியாவில் ஆண்மையினதும் வீரத்தினதும் சின்னமாகக் கருதப் படுபவன். மிகவும் குறைந்த வயதிலேயே மாபெரும் மல்யுத்த வீரன் ஒருவனை அவன் தோற்கடித்திருக்கிறான். ஆதிக்க சுபாவம் உள்ளவனாகவும் கடின உழைப்பாளியாகவும் விளங்கும் ஒக்கொன்க்வோவின் பிள்ளைப்பராயம் மிகவும் கசப்பானது. அவனது தந்தை உனோக்கா கடனிலேயே செத்துப் போய்விட்டவன். உனோக்காவின் பொழுது இசைக்கருவிகளை இசைத்து லயிப்பதிலும் ஒக்கொன் க்வோவின் பொழுது இசையை வெறுப்பதிலும் கழிந்தது. உனோக்கா நிலபுலன் களுக்கோ பதவிகளுக்கோ சொந்தக்காரன் அல்ல. உமுஓஃபியாவில் நிலபுலன்களோ பதவிகளோ இல்லாத ஒருத்தனை, சாகச மனோபாவமற்று இசையை ரசிக்கும் ஒருவனை பெண்ணாகவே கருதுவர். ஒக்கொன்க்கோவின் சமவயதுக்காரச் சிறுவர்கள் உள்ளிட அனைவரும் உனோக்காவை ஒக்கொன்க்வோவின் முன்னிலையிலேயே கேலி செய்வது வழக்கம். அந்த சமயங்களில் எல்லாம் ஒக்கொன்க்வோ அவமானத்தையும் வலியையும் உணர நேரிட்டது. ஒக்கொன்க்வோ, தனது தந்தையின் ஊர் பழிக்கும் பெண்மைத் தனங்களை மிகவும் வெறுத்தான். அன்பு பாசம் கருணை இரக்கம், இரசனை போன்ற ‘பெண்மைத் தனங்கள்’ மீதான ஒர் இரகசிய வெறுப்பு அவன் மனதில் வளர்ந்து கொண்டே வந்தது. வீரனாக மட்டுமே தான் வளர வேண்டுமெனக் கங்கணம் கட்டிக் கொண்டு, ஒரு வித வீறாப்புடன் வளர்ந்தான். மேற்குறித்த பெணமித் தனங்கள் தனக்குரிய வை அல்ல என்றும் அவை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லக் கூடிய் அவை என்றும் அவன் தீவிரமாக நம்பினான்.



தகப்பனால் பெறமுடியாது போன அனைத்தையும் ஒக்கொன்க்வோ ஒரு வித மூர்க்கத்துடன் பெற முயல்கிறான். குறுகிய காலப்பகுதியிலேயே தன் இலக்கில் பாதியை அவனால் அடைய முடியுமாயிருக்கிறது. சமூகத்தில் தனது மதிப்பையும் அந்தஸ்தையும் குலையாது பேணுவதற்காக எந்த விலையையும் தர அவனது மனம் தயாராக இருக்கிறது. மூன்று மனைவிகளுக்குச் சொந்தக்காரனான அவனுக்கு இருக்கும் மனத்தடைகள் எண்ணற்றவை. இதோடு கூடவே அவனது மூத்த மகன் என்வோயி பெண்மைத்தனமான உந்துதல்கள் உடையவனாக இருப்பது அவனுக்கு எரிச்சலூட்டுகிறது.



அயல் கிராமம் ஒன்றில் நடந்த கொலைக்கு அபராதமாக உமுஓஃபியாவுக்கு அபராதமாகச் செலுத்தப் பட்ட இக்மேஃபியூனா எனும் பையனைப் பராமரிக்கும் பொறுப்பு ஒக்கொன்க்வோவிற்கு வந்து சேர்கிறது. இக்மேஃபியூனா என்வோயியைப் போலன்றி அசல் ஆண்மகனாக – ஒக்கொன் க்வோவின் எதிர்பார்ப்புகளிற்கு ஏற்றவனாக – இருக்கிறான். ஒக்கொன்க்வோவிற்கு இக்மேஃபியூனா மீது ஒருவித புத்திர வாஞ்சை ஏற்படுகிறது. என்வோயி கூட அவனைத் தனது சகோதரனாகவே நினைக்கும் அளவிற்கு இக்மேபியூனா அவர்களுடன் ஒன்றி விடுகிறான்.



ஒரு கட்டத்தில் உமுஓபியாவின் உயர்மட்ட முதியோர்கள் ஒன்று கூடி இக்மேபியூனாவைப் பலியிடுவதற்குத் தீர்மானிக்கிறார்கள். ஒக்கொன்க்வோ, என்வோயி, இக்மேபியூனா மூவரும் சேர்ந்து வெட்டுக்கிளி வறுவலைக் கொறித்துக் கொண்டிருந்த ஒரு மாலையில் கிராமத்தின் மரியாதைக்குரியவனான எசியுடு கிழவன் ஒக்கொன்க்வோவிடம் இத்தீர்மானத்தை கூறுகிறான். ஒக்கொன்க்வோவிற்கு இத்தீர்மானம் ஆழமான வலியை உண்டுபண்ணுகிறது. ஆனால், அவ்வலியை வெளிக்காட்டுவதோ, அத்தீர்மானத்தை மறுப்பதோ பெண் தனமானதாகக் கருதப் படும் என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிகிறது. தனது ‘அஞ்சா நெஞ்சுடைய ஆண்மையை’ நிரூபிப்பதற்காகப் பலியிடுதலுக்குச் சம்மதம் தெரிவிக்கிறான். இக்மேபியூனா ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு நடுக்கானகத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப் படுகிறான். இக்மேபியூனாவின் சாவு ஒக்கொன்க்வோவைக் குரூரமாக அறைகிறது. ஆனால், இக்மேபியூனாவின் மரணம் தன்னில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதாகப் பாசாங்கு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு இருக்கிறது. அடக்கப் பட்ட உணர்வெழுச்சி மூர்க்கத்தைக் கிளறவும், கொலைகாரனாகிறான் ஒக்கொன்க்வோ.



கொலையின் மூலம் ஒக்கொன் க்வோ தெய்வங்களின் கோபத்தைக் கிளறி விட்டான் என்று குற்றஞ் சாட்டப் படுகிறது. பிராயச்சித்தமாக உமுஓஃபியாவில் இருந்து வெளியேறுகிறான். அயல் கிராமமான ம்பான்ராவில் ஏழு வருடங்களைக் கழிக்கும் அவன் ஊர் திரும்புகையில் அனைத்துமே தலைகீழாக மாறியிருப்பதைக் காண நேர்கிறது.



ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நிலப்பகுதியில் வெறுங்கால்களுடன் நிற்பது போலிருக்கிறது அவன் நிலமை. தான் முக்கியமற்றுப் போய்விட்டதை நினைக்கையில் அவனுக்குப் பதற்றம் வருகிறது. கிறிஸ்தவ மி்ஷனரி புதிய ஆதிக்க சக்தியாக இருப்பதையும் இபோக்களில் பலர் அதனுடனிருப்பதையும் அவனால் சகிக்க முடியவில்லை. காலங் காலமாக நிலவி வந்த பயங்களும் நம்பிக்கைகளும் வழக்காறுகளும் தகர்கின்றன. மி்ஷனரி, வர்க்கப் பிளவுகள் பலியிடுதல் ஆணாதிக்கம் போன்ற அனைத்திற்கும் எதிராக இருக்கிறது. ஒக்கொன்க்வோ தனது வெற்றி இலட்சியம் இபோ சமூகத்தின் வரம்புகளுக்குள் மட்டுமே சாத்தியம் என்பதை நன்கறிந்தவன். அவனது கனவுகளுக்கு மி்ஷனரி முட்டுக்கட்டையாக இருப்பதையுணர்ந்து அதை அழிக்க முயன்று தோற்று கொலைகாரனாகி பின் தானும் தற்கொலை செய்து கொள்கிறான் என்பதாக முடிகிறது நாவல்.



நடுங்கிக் கொண்டிருக்கிற, ஆட்டங்கண்டுகொண்டிருக்கிற நிலப்பகுதியில் வெறுங்கால்களுடன் நிற்பது எப்படியோ அப்படியானதுதான் தகர்ந்து கொண்டிருக்கும் விழிமியங்களுக்குள் சமூக இருப்பு என்பதுவும். அவ்வாறான அவல இருப்பை மேற்கொள்ளும் இனமொன்றின் பாடுகளை, அவர்களின் அன்றாட வாழ்க்கையை மிக இயல்பாக சினுவா அச்செபேயால் சொல்ல முடிகிறது. அச்செபே ஓர் தேர்ந்த கதை சொல்லி. இபோ மக்களுடைய நடத்தைகள், மரபுகள், உணவுப் பழக்க வழக்கங்கள்? போன்றவற்றின் சுவையான விபரிப்புகள் மூலம் அசலான ஆப்பிரிக்க வாழ்வனுபவம் வாசிப்புச் செயற்பாட்டின் போது சாத்தியமாகிறது. உமுஓஃபிஆவின் இரவுகளைச் சித்தரிக்கும் பத்திகளை வாசிக்கையில், அந்த ஆப்பிரிக்க இரவின் இருளும் பயமும் அறையெங்கும் படிவதை என்னால் உணர முடிந்தது. உயிரோட்டமுள்ள சித்தரிப்புகள் நாவல் நெடுகிலும் நிறைந்திருக்கின்றன.



சிறந்த கதைக்கட்டுமானத்தைக் கொண்டிருக்கும் நாவலில் தனியே இபோ மக்களது வாழ்வும் அழிவும் மட்டும் பதிவாகவில்லை. மாறாக, அப்பதிவோடு கூடவே கதாபாத்திரங்களின் உளவியல் ரீதியான ஆளுமைக்கட்டமைவும் அலசப்படுகிறது. ஒக்கொன் க்வோவின் ஆதிக்க மனோபாவத்தை, அவனது குடும்ப சூழ்னிலைககள், சிறுவயதுச் சம்பவங்களின் பின்னணியில் தோற்றமுற்றதாகக் காட்டும் அச்செபே இத்னூடாக ஆதிக்க நடிப்பின் உளவியல் ரீதியான கட்டமைவை ஆராய்கிறார் எனலாம். ஆனால் இந்த உளவியல் அலசல் கதைப்போக்கில் இருந்து துருத்திக்கொண்டோ தனித்தோ தெரியவில்லை என்பது இதன் சிறப்பம்சம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாவலின் ஒரு பக்கத்தில் கூட வகுப்பறைகளில் இருப்பதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்படவில்லை.



சிதைந்து கொண்டிருக்கும் இனக்குழு ஒன்றின் பார்வையாளனாக வாசிப்பாளரை நிறுத்தி நகர்த்தப்படும் நாவலில் யாரும் குற்றஞ்சாட்டப்படவோ போற்றப்படவோ இல்லை என்பது ஆறுதலளிக்கிறது. அசலான ஆப்பிரிக்க வாசிப்பனுபவத்தையும், ஆங்கிலேயப் புனைவுகள் மீதான மீள்பார்வையையும் சாத்தியமாக்குகும் சினுவ அச்செபே மீது எறியப்படும் குற்றச்சாட்டுகள் கவனிப்புக்குரியவை.



சினுவா அச்செபே அளவிற்கு, தனது டெவில் ஒன் த க்ரொஸ் நாவல் மூலம் கவனம் பெற்றவரான எங்கூகி வா தியாங்கோ, சொயின் கா, அச்செபே போன்றோரின் பிரதிகளைக் கட்டுடைப்புச் செய்து அவை காலனித்துவ சிந்தனைப் போக்கின் நீட்சிகளே எனத் தெரியப்படுத்தினார். கிக்கியூ மொழியில் எழுதுவதில் அதீத நாட்டத்துடனிருப்பவரான எங்கூகிஆங்கிலத்தில் எழுதுகிற அச்செபேயின் நியாயங்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஆப்பிரிக்க மையவாதமுடைய எழுத்தாளர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்கிறது. தியாங்கோவின் மதிப்பீடுகளின் படி சொயின் கா, அச்செபே ஆகியோர் ஆப்பிரிக்காவை காலனித்துவ நீக்கம் செய்யவேண்டும் என்கிற இலக்கிலிருந்து விலகிவிடுகிறார்கள். இதனால், நிலவியே ஆகவேண்டிய கறுப்பு இலக்கியச் சகோதரத்துவம் குலைந்து போகிறது என்றெல்லாம் விமர்சனங்கள் உண்டு. நாவலில் இபோக்களைக் குறைகூறி மிசனரியை நியாயப் படுத்துவதாக இருக்கும் கதையமைப்பைக் குறைகூறி எழுந்த விமர்சனங்கள் போதாதென்று நைஜீரியப் பெண்கள் அமைப்புகள் அச்செபேயின் நாவல்களில் பெண்களின் வகிபாகம் பற்றிக் குறைகூறத் தொடங்கின. இணையத்தில் ‘சினுவ அச்செபேவைப் பெண்ணிய வாசிப்புக்குட்படுத்தல்’ ‘பெண்ணிய நிலை நோக்கில் சினுவ அச்செபே’ என்ற தலைப்புகளில் கட்டுரைகள் கிடைக்கின்றன.



நாவலைக் கவனமாக வாசிப்பதன் மூலமும், சினுவ அச்செபேயின் கருத்து நிலைப்பாடுகளைத் தெரிந்துகொண்டு நாவலை மீள்வாசிப்புச் செய்தல் மூலமும் இவ்விமர்சனங்களின் பலவீனங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.



வெறுமனே வெள்ளை மேலாதிக்கத்தைத் திட்டிக்கொண்டிருக்காமல், இபோ இனத்தவரின் தவறுகளையும், பலவீனங்களையும், நாவலில் அச்செபே அலசுவதைக் காண முடிகிறது. இபோ அழிக்கப்பட்ட மரபு அல்லவென்றும் அது தானாகவே அழிவுக்குட்பட்டதென்றும் நாவல் சொல்லுவதாகவே எனது வாசிப்பு. நாவலின் பல சம்பவங்களின் வழியாக இக்கருத்து நிறுவப்படுகிறது. வெள்ளையின ஆதிக்கத்துக்கும் மிஷனரியின் பரவுதலுக்கும் காரணமாயிருந்த இபோ மக்களின் அபத்தமான சமூகக் கட்டமைப்பை, அதன் பலவீனமான அமிசக் கூறுகளை விமர்சிக்கும் அச்செபே எந்த ஒரு இடத்திலும் மிஷனரியை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. இபோ சமூக அமைப்பின் பலவீனங்கள் எல்லாம் வெள்ளையரின் ஊடுருவலுக்குச் சாதகமாய் அமைந்து போனதை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கான பல சான்றுகள் நாவலில் தரப்பட்டிருக்கின்றன. சிறந்த உதாரணமாக என்வோயி ‘ஐசாக்’ என்று பெயர்மாற்றம் செய்துகொண்டு கிறிஸ்தவனாய் மாறிப்போனதன் பின்னிருக்கும் உளவியல் பின்னணியைக் கூறலாம். (இக்மேஃபியூனாவின் இழப்பாலும், ஒக்கொன்க்வோவின் தொடர்ச்சியான புறக்கணிப்பாலும் ஆழமாகக் காயம்பட்டுப் போயிருக்கும் என்வோயினது மனதை கிறிஸ்தவப் பிரச்சாரக் கதையான ‘இரு சகோதரர்களின் கதை’ ஆற்றுப் படுத்துவதையும், அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தின் பால் அவன் படிப்படியாக ஈர்க்கப்படுவதையுமே உளவியல் காரணி என்கிறேன்.)



இவ்வாறு இன அடையாளம் தகர்ந்து போவதற்கான அடிப்படைகள் வெள்ளையர் வருகைக்கு முன்பே தாபிக்கப் பட்டிருந்ததை நாவல் உணர்த்துகிறது. மூச்சுத்திணறல் கொண்டிருந்த இபோக்கள் சுவாசிக்கும் வெளியாக மிஷனரி இருந்ததையும், எண்ணற்ற கட்டுக்களால் கட்டமைந்த இபோ மரபுகளில் இருந்து விடுபட விரும்புவோர் அடைக்கலம் புகுவதற்கான ஒரே ஒரு இடமாக அது மட்டுமே இருந்ததையும் எழுதுவது மிஷனரியை நியாயப் படுத்துகிற ஒன்றல்ல.



நாவலைப் புரிந்து கொள்ள அச்செபேயின் கருத்து நிலைப்பாடு பற்றிய சிறிய அறிவாவது அவசியம். அச்செபே ஜனநாயகம், கருத்துச்சுதந்திரம் என்பவற்றுக்காகப் பாடுபடுபவர். சமூகத்தின் ஒவ்வொரு பிரஜையும் தன் கருத்தை சமூகத்தில் பரப்ப உரித்துடையவன் என்பது அவரது வாதம். அவனது உரிமையைக் காப்பாற்றுவதற்காக எந்தப் போராட்டத்திலும் ஈடுபடத் தயாராக இருப்பதாய்க் கூறுகிறார் அவர். ‘எழுத்தாளன் படைப்பில் தீர்வு கூறுவதும் கூறாததும் அவனது சுதந்திரம் சார்ந்த வி்ஷயம். என்னளவில், என் படைப்பில் தீர்வுகளை முன்வைப்பதை நான் வெறுக்கிறேன். அது மக்கள் விவாதித்து தேர்ந்தெடுக்க வேண்டிய ஒன்று – வாழ்வின் பாடுகளைச் சித்தரிப்பதும், வாழ்வின் மீதான புரிதலை ஏற்படுத்துவதும் தான் என் எழுத்தின் நோக்கங்கள்’ என்று அவரது நேர்காணலில் தெரிவிப்பது நம் கவனிப்பிற்குரியது.



காலனித்துவ மனோபாவத்தில் இருந்து விடுதலை பெறுதல் பற்றி, அதன் அவசியம் பற்றி, நாவல் பேசாதது போலத் தெரியலாம். ஆனால் இந் நாவல் அதோடு சேர்த்து இன்னும் பல அம்சங்களைப் பேசுகிறது. காலனித்துவ நீக்கம் என்ற எண்ணக்கருவை உதாசீனப்படுத்தாது – அத்னுடன் இணைந்து காலனித்துவத்துக்கு எதிரான பலம் வாய்ந்த இருப்பொன்றின் தேவைப்பாடு பற்றிய பிரக்ஞையை வலியுறுத்துகிறது நாவல். ஸ்திரமான சமூகக் கட்டமைப்புகளையோ அல்லது பிணைப்புகளையோ கொண்டிராத எந்தவொரு சமூகமும் அழிவுக்கு உட்படுவது தவிர்க்கவியலாத ஒன்று என்பதை நாவல் கற்பிப்பதாக எனக்குத் தெரிகிறது. நாவலின் ஆரம்பத்தில் இருந்தே சுய அழிவை நோக்கிய பயணம் தொடங்குவதை மீள் வாசிப்பில் உணர முடிகிறது. முழு நாவலுமே இலகுவில் அழிப்பிற்குள்ளாகக் கூடிய கட்டுமானங்களாலமைந்த இருப்பொன்றின் மீதான விமர்சனமாகவே அமைகிறது.



இது ஒரு நவீனத்துவப் பிரதி. தமிழ் நவீனத்துவப் பிரதிகள் மரபுகள், தொன்மங்களில் இருந்து விடுபட்டு அவற்றிலிருந்து தம்மை அறித்துக் கொண்டு உலகளாவிய பொது ஒழுங்கை நோக்கிப் பயணித்ததைப் போன்ற விபத்துக்கள் ஆப்பிரிக்க இலக்கியத்தில் குறைவு. தியாங்கோ போன்றோர், வெளிப்படையாகவே மரபுகளைத் தூக்கிப் பிடிக்கும் நிலையில் அச்செபே தனது பிரதிகளில் இபோ இனக்குழுமத்தின் பழமொழிகளைச் செருகுவதன் மூலம் இனக்குழு மரபின் செழுமையைப் பேசுகிறார்.



தேர்ந்த கதைக்கட்டுமானத்தையும் கதைசொல்பாங்கையும் கொண்டிருக்கும் இந்த நாவல், சாதாரண சம்பவங்களினூடாக உணர்த்த விழையும் செய்தி ஆழ்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. தனியே இபோக்களுக்கும் கறுப்பினர்களுக்கும் மட்டுமன்றி உலகளாவிய பின் காலனித்துவ இருப்புகளுக்கும், வலிந்தேற்றப்படும் கலாச்சார அடையாளங்களுக்குள் நசிபடுகிற சிறு பான்மையினருக்குமான பொருத்தப்பாட்டைக் கொண்டிருக்கிறது நாவல்.



இந் நாவலைப் படித்து முடித்தவுடன் நமது இலக்கியங்களுடன் ஒப்பீடு செய்து பார்த்தால், பெரும் விசனம் தான் எஞ்சுகிறது. நம் படைப்பாளிகள் மீதல்ல, நல்ல இலக்கியங்கள் எழுதப்பட முடியாமலிருக்கும் சூழல் மீது. தமிழகத்துச் சூழலில் தோன்றிய ஒருதொகைப் புனைபிரதிகளையே நாம் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. சிறுகதைகள் சிலவற்றில் நம்பிக்கையளித்த பல பிரதியாளர்கலிடமிருந்து எமது தற்கால, இறந்தகால , எதிர்கால இருப்பை புனைவுகளூடு தர்க்கித்து ஆராயும் பெரும் பிரதிகள் வரவேயில்லை. ஷோபா சக்தியின் வெற்றிய டைந்த மூன்று பிரரதிகளையும் வைத்துக் கொண்டு நமக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்ன நடந்தது என்பதனை நாம் பேச முடியாது. இங்கு இலக்கியங்கள் என்று கொண்டாடப்படும் உற்பத்திகளில் எத்தனைக்கு ஷோபா சக்தியுடைய பிரதிகளுடன் தர்க்கித்து நமது இருப்பின் மற்றைய பக்கங்களையும் வெளிக்கொணரும் வலு இருக்கிறது? இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது பொய், இலங்கையின் முதலாவது பெரும் பிரச்சனை தமிழ்த் தேசியம் தான் போன்ற குரல்கள் ஒலிக்கத் கொடங்கிவிட்ட நிலையிலும் கூட `தமிழர்கள்` இவற்றை எதிர்கொள்வதற்கான போதிய வலுவுடன் இருக்கிறார்களா? எமக்கு சுட்டப்படும் இலக்கியங்களில் எத்தனை வீதமான இலக்கியங்கள் எமது இத்தனை நாள் பாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்கிற தன்மையுடன் இருக்கிறது? ஒரு கேள்வியாக நான் இதை முன்வைக்கிறேன். இனப்பிரச்சனை தொடர்பாக வந்த படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாக தளையசிங்கத்தின் ‘இனி ஒரு தனி வீடு’ கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ மு.பொவின் ‘நோயில் இருத்தல்’ அ.இரவியின் ‘காலம் ஆகி வந்த கதை’ மலரவனின் ‘போர் உலா’ ்ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ ‘தேசத்துரோகி’ ‘ம்’ சண்முகம் சிவலிங்கம், காருண்யன் கொன்பியூசியஸ், சக்கரவர்த்தி, சேனன் இன்னும் பலரின் சிறுகதைகள் என்பவற்றைக் குறிப்பிட முடியும். ஒரு கதையாடலுக்காக இவற்றுள்ளிருந்து நாம் அநேகமாக அனைத்தையுமே எடுத்துக்கொள்ள முடியும் தானென்றாலும் இவற்றுள் எத்தனை பிரதிகள் நம் காலத்தின் குறுக்குவெட்டை தனித்து நின்றே உணரும் படி பண்ணக்கூடியவை?



இவாறாக வலுவற்ற கலாச்சாரக் கட்டுமானத்துக்குள்ளேயே நம் இருப்புத் தொடர்கிறது. தேசியவாதம் என்ற பெயரில் வெளிவரும் குப்பைகளை வாசிப்புக்காக சிபாரிசு பண்ணுவதும், இயல்பான ஆசைகளையும் உந்துதல்களையும் அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்துவதும் நிலையான ஆரோக்கியமான கலாச்சாரக் கட்டுமானம் உருவாக வழிசமைக்கும் எனக் கருதுவது முட்டாள்த் தனமானது அல்லவா? எண்ணற்ற உளவியற் காரணிகள், சமூக ஊடுபாவுகளால் நிகழ்த்தப்படும் கலாச்சாரச் சிதைப்பை அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட ஒரு சில காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இழிவளவாக்கலாம் எனக் கனவு காண்பது அபத்தமானது.



கலை, இலக்கிய எத்தனங்களை சரியான முறையில் சமூகத்தினுள் நீட்சியடையச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான சுய பிரக்ஞையை ஏற்படுத்த முடியும். இந்த சுய பிரக்ஞை கலாசார அடிக்கட்டுமானத்தை வலுப்படுத்தும் செயற்பாட்டிற்கான தொடக்கப் புள்ளியாக அமையும். இதற்கு நீண்ட காலமும் கடின உழைப்பும் தேவைப் படலாம். ஆனால் சுயம் பற்றிய பிரக்ஞையைக் கட்டியெழுப்புவதற்கு இத் தடங்கல்கள் ஒன்றும் பெரிதில்லை. தெளிவின் மீது கட்டி எழுப்பப்படும் கலாச்சார இருப்பே வலுவானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தனித்துவமிக்க கலாச்சார இருப்பொன்றினை ஸ்தாபிக்க முயல்கிற இலக்கியங்கள் நம் மத்தியில் மிகவும் குறைவு. இதை ஒரு விவாதமாக முன்னெடுப்பதற்கு இங்கிருக்கும் புனைபிரதிகள் வல்லமை உள்ளவையாக இல்லை.



கலாச்சார அடையாளமுள்ள இருப்பை வலியுறுத்தும் இலக்கியம் ஒன்றிற்கு இருக்கக்கூடிய சமகாலத் தேவைப்பாடு பற்றிய பிரக்ஞையை முகத்திலறைந்து சொல்கிறது சினுவா அச்செபேயின் Things Fall Apart.


————————–


1 பின்னூட்டம்


Posted in இலக்கிய விமர்சனம், கட்டுரைகள்

குருதியால் வரையப்படும் எல்லைகோடுகளுக்கு அப்பால்


Posted on மார்ச் 6, 2009 | பின்னூட்டமொன்றை இடுக


மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும், பின்-காலனிய நாடுகளிலும் தேசியவாதப் போராட்டங்கள் முனைப்புடன் நிகழ்ந்துவரும் காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூக இருப்புகளுக்கு எதிரே இருக்கும் மாற்றுபாயம் என்ற அளவிலும் அமெரிக்காவும் அதன் பின்னாலிருக்கும் யுத்தப் பிரபு அரசுகளும் உலகமயமாக்கலின் பெயரில் முன்னெடுக்கும் அபாயமான தந்திரோபாயங்களுக்கு எதிரான கருத்துருவம் என்கிற அளவிலும் மட்டுமே தேசியவாதப் போராட்டங்கள் தமக்கான நியாயப் பாட்டினைக் கொண்டிருக்கின்றன. தேசியவாதப் போராட்டங்களின் பொது இயங்கியல் என்ன என்பதை இதுவரையிலும் நடந்த தேசியவாதப் போராட்டங்களின் வரலாறுகளிலிருந்தும் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் போக்குகள் நிலைப்பாடுகளிலிருந்தும் ஒருவர் அறிந்து கொள்ள முடியும். தேசியவாத அமைப்புகள் யாவும் ஆரம்பத்தில் இனத்துவ, தனிமனித உரிமைகளின் மொழியிலேயெ தம் விழைவுகளை முன்வைக்கின்றன. எனவே, அவற்றுக்கான அங்கீகாரம் இலகுவில் கிடைத்தும் விடுகிறது. இந்த அங்கீகாரம் அனைத்துத் தளங்களிலும் தேசியவாதக் கருத்துக்களை ஆதிக்க நிலையடையச் செய்கிறது. தேசியவாதம், அதன் அடிப்படை, நியாயப் பாடு, சிக்கல்கள் என்பன பற்றிய விரிவான விவாதங்கள் இன்றைய சூழலில் மிகவும் அவசியம்.


ஆதிக்க நிலையடைந்த தேசியவாதம் அனைத்தையும் வரையறை செய்ய முயல்கிறது. விரிவைக் கொண்டாடுவதை விட குவிவையே வரலாறு முழுதிலும் தேசியவாதம் கொண்டாடி வருகிறது. மனித உரிமைகள், மாற்றுச் சிந்தனைகள், பல்லின இருப்பு என அனைத்தையும் நிராகரித்து குறுகிய இயங்கு வெளியைத் தருகிற தேசியவாதங்கள் அச்சமூட்டக் கூடியவை. வெளி-ஒதுக்கல் என்பது அவர்களது வாதங்களுள் முதன்மையான ஒன்று. அறவிதிகளை உருவாக்குதல், தனிமனித இருப்புகளை இடையறாது கண்காணித்தல், இச்சைகளை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தல், முன் முடிவுகளுடன் தொழிற்படுதல், என்பன தேசியவாதங்களின் பொதுக் குணாதிசயங்கள். இவற்றையும் கட்டமைத்துப் பின், இலக்கியக் கலைத் தளத்திலும் போலியான புனித மதிப்பீடுகளை உருவாக்கல், அபத்தமான தணிக்கை விதிகளை அமுல் படுத்துதல் என்பதாக நீட்சியடைகிறது. தேசியவாதம் தன் எல்லைகளை விரித்துக் கொள்வதை எதிர்கொள்ளுவதுதான் சமகால கலை இலக்கியத்தின் பெரும் பிரச்சனையாகவும் உள்ளது.


ΩΩ


இலக்கியவாதிகள், கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கற்பனைகளுடனும் பன்முகப்பட்ட சாத்தியங்களுடனும் வாழ்பவர்கள். அவர்களுக்கு எல்லைகளால் மட்டுமே அமையும் தேசங்களில் இடம் கிடையாது.


எல்லைக்கோடுகளற்ற உலகத்தைக் கொண்டாடும் படைப்புகள் மீதான என் ஆர்வத்தைத் தூண்டியது ராதிகா குமாரஸ்வாமியின் கிரே்ஷியன் விருதுகள் ஏற்புரை.3 அவரது உரையை அடித்தளமாக கொண்டமைந்த எனது வாசிப்புக் காலகட்டம் மிகவும் சிறப்பானது. பல்லின இணைவைக் கொண்டாடுவோர் வரிசையில் முன்னணியில் இருக்கிற ரெஜி சிறிவர்டனே, ஷ்யாம் செல்வதுரை, கார்ல் முல்லர், ரோஹின்ரன் மிஸ்றி, வி.எஸ்.நய்பால், மைக்கல் ஒண்டாற்ஜே போன்றோர் தேசியவாதம் குறித்த புரிதலை அடைய உதவியவர்கள். ராதிகா குமாரஸ்வாமியின் சிபாரிசுப் பட்டியலில் ஒரு விசேஷம்; அதில் இடம்பெறுகிற படைப்பாளிகள் அனைவருமே தெற்காசிய வலயத்தைச் சேர்ந்தவர்கள்.


என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்கிற சில படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் அமிட்டவ் கோஷ். சல்மான் ருஷ்டி, அருந்ததி ரோய், ஜும்பா ஜஹ்ரி, சித்தர்த் தன்வந் ்ஷங்வி ஆகியோர் வரிசையில் சர்வதேச இலக்கிய அரங்கில் இடம் பிடிக்கிற அமிட்டவ் கோஷ் கல்கத்தாவைச் சேர்ந்தவர்.


உலகெங்கும் அலைந்து திரிகிற படைப்பாளி என்பதால் உலகு தழுவிய படைப்புகளை எழுதிச் செல்வது மிக இயல்பாக சாத்தியப் பட்டுப் போகிறது அமிட்டவ் கோஷ்-இற்கு. இவருடைய நாவல்கள் கவனக் குவிப்பைச் செய்கிகிற பிரதிகளாக இல்லை.


அவருடைய படைப்புகள் உலகுதழுவிய தன்மையைக் கொண்டிருப்பதுடன் அதைக் கொண்டாடவும் செய்கின்றன. விரிவைக் கொண்டாடுகிற படைப்பாளிகளில் குறிப்பிடத் தக்கவர் அமிட்டவ் கோஷ். இந்தியத் தன்மையை அதன் வரைவிலக்கணத்தின் வழி நின்று கோஷிடம் ஒருவர் எதிர்பார்ப்பாராயின் பெரும்பாலும் அவர் ஏமாந்து போக நேரும். கல்கத்தாவோ, குல்நாவோ அல்ல அங்கு மையம் பெறுவது. உலகு தழுவிய மனிதர்கள், அவர்களுடைய பல சிக்கல்கள் என பலமையப் பிரதியாக தோற்றம் கொள்கிற படைப்புகள் அவருடையவை.


அமிட்டவ் கோஷ் ஓர் இந்தியப் படைப்பாளி, அல்லது அவர் ஒரு தெற்காசியப் படைப்பாளி அல்லது அவர் ஒரு ஆசியப் படைப்பாளி என்றெல்லாம் குறிப்பிடுவதை விட அவர் ஒரு உலக இலக்கியவாதி என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாக இருக்கும்.


இலங்கையில் முரண்கள் கருக்கொள்ளத் தொடங்கிய காலப் பகுதியில் கொழும்பில் அவர் ஒரு பள்ளி மாணவன். சதாம் உசேன் இராக்கிற்கு எகிப்தியர்கள் வேலைதேடிப் புலம்பெயர்ந்த போது அவர் அங்குள்ள சிறு கிராமமொன்றில் இருந்தார். 9/11 இன் போது நியூயோர்க்கின் பரபரப்புமிக்க கட்டடங்களிலொன்றில் இருந்தார். இப்படியாக உலகம் முழுவதும் அலைந்து திரிவது தன் அவருடைய எழுத்தில் உலகு தழுவிய பார்வை சாத்தியமாகிறதென்றில்லை. இதுதான் காரணமெனில், அலைந்து திரிவதையே தொழிலாகக் கொண்ட தூதுவர்களும், வணிகப் பிரமுகர்களும் பேரிலக்கியம் படைத்து விட முடியும். அத்தனை உள்வாங்கல்களையும் பார்வைகளையும் சமப்படுத்திப் பதிவு செய்வதும் அவற்றைத் தன் படைப்பின் குறிக்கோள்களை நோக்கி நகர்த்துவதும் தான் அமிட்டவ் கோஷ் படைப்புகளின் தனித்துவம் எனலாம்.


19ம் நூற்றாண்டின் பர்மா பற்றிய அவரது நாவலான The Glass Palace (2000) மிகச்சமீபத்தில் வெளிவந்த The Hungry Tide இரண்டும் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை.


புனைவுகளின் மூலமாக என்னை எந்தளவிற்குக் கவர்கிறாரோ அந்தளவிற்கு அவருடைய புனைவு சாரா எழுத்துக்களும் என்னை ஈர்க்கத் தவறுவதில்லை. சமீபத்திய கட்டுரைத் தொகுப்பான Incendiary Circumstances இன் excerpts இணையத்தில் கிடைத்த போது இலங்கை பற்றிய அவரது கட்டுரைப் பகுதியைக் காண நேர்ந்தது. அது ஓர் இந்தியரால் எழுதப்பட்டிருப்பதாக உணர முடியவில்லை. புலம்பெயர் எழுத்துக்களில் இழையோடுமே ஒருவித நொஸ்ரால்ஜியா – அது தான் தெரிந்தது. அதை வாசித்துக் கொண்டிருந்த போது மைக்கல் ஒண்டாற்ஜேவின் வாக்கியம் எனக்கு நினைவுக்கு வந்தது. You can take a boy out of Ceylon, But you cannot take Ceylon out of him.


ΩΩ


அமிட்டவ் கோஷ் இனுடைய Circle of reason (1986) – முதலாவது நாவல் – அவரை இந்திய இலக்கிய அரங்கில் கவனிக்கத் தகுந்த படைப்பாளியாக முன்னிறுத்தியது. இந்நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு, பிரான்ஸின் உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றான Prix Medici Estanger விருதைப் பெற்றது.


1988 இல் வெளிவந்து சாஹித்திய அக்கடமி விருதைப் பெற்ற The Shadow Lines நாவல் சர்வதேச அரங்கில் கவனம் பெற உதவியது. அதன் பின்னர் The Culcutta Chromosomes, In an Antique Land, The Glass Palace என வரிசையாக சர்வதேச கவனம் பெற்ற நாவல்கள்.


இந்திய இலக்கியத்தில், உயர்ந்த விபரிப்புத் திறனும், தனித்துவமான குரலும் உடையவராக விளங்கும் கோஷ் – இனுடைய நகைச்சுவை இழையோடும் கவித்துவமான மொழிநடை வாசக மனதிற்கு மிக நெருக்கத்தில் வந்து போதையூட்டும் வல்லமை கொண்டது. நனவோடை உத்தியின் முற்றிலும் வித்தியாசமான பரிமாணத்தைக் கோஷ் – இன் நடையில் காணலாம்.


ΩΩ


80களின் யதார்த்தவாதப் போக்கிலிருந்து, சலிப்பூட்டக் கூடிய அதன் இறுக்கத்திலிருந்தும் விலகி, வித்தியாசமான கதைக் கட்டுமானத்துடனும், கதை சொல்முறையுடனும் வெளிவந்த The Shadow Lines கவனம் பெற்றதில் ஆச்சரியமில்லை. குஷ்வந்த சிங் இந்நாவல் பற்றிக் கூறுகையில் ‘This is how the language should be used, This is a novel should be written’ என்றார். தனிமனித நிகழ்வுகளையும் சமூக நிகழ்வுகளையும் ஒன்றாக இழைத்து இழைத்து கதையாடலை நிகழ்த்தும் கோஷ் சொல்வது ஒரு சில குடும்பங்களினதும், சில சமூக நிகழ்வுகளதும் கதையை அல்ல. பிரதிக்குள் நிகழ்த்தப்படுவது சமகாலத்தின் துயரமிக்க கதை.


உணர்வுகளாலும், இன்ன பிறவற்றாலும் ஒன்று பட்டு வாழக்கூடிய மக்களைக் குறுகிய நோக்கத்துடன் பிரித்து வைப்பதற்காக தேசியவாதிகள் வரையும் செயற்கையான, தேவையற்ற எல்லைக் கோடுகளால் (நிழல் கோடுகள்) ஏற்படும் சமூகப் பிளவுகளும் வன்முறையும், அவலமுமே இந்நாவலில் மையக் கரு.


நெருக்கடிகளும் கலவரங்களும் நிகழ்ந்த காலப்பகுதியில், வாழ்ந்த ஒரு சிறுவனே கதை சொல்லி – மிகைப் பண்புடைய (Eccentric) உறவினன் ரிடிப், அழகான இலா, மாயாதேவி, பிரைஸ் குடும்பம், போன்றோர் பற்றிய கதைசொல்லியின் மனப்பதிவுகள் மூலம் கதை சொல்லப் படுகிறது.


1964இல் நடந்த சிறு கலவரமே – ஒரு போர் அல்ல – கதையின் மையச் சம்பவம். கதைசொல்லியின் விருப்பத்துக்குரிய உறவினனான ரிடிப் அக்கலவரத்தின் போது கொலை செய்யப்படுகிறான். ரிடிப்பின் காதலியும் இங்கிலாந்து தேசத்தவளுமான மே பிரைஸ் திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையுடன் வசிக்கிறாள். ரிடிப் கொலை செய்யப்படுவதை நேரில் பார்த்தவளான பாட்டி பாகிஸ்தான் மீது எல்லையற்ற வெறுப்புக் கொண்டவளாக இருக்கிறாள். அவள், பாகிஸ்தானுடன் நடக்கும் போர் பற்றிய செய்திகள் வானொலியில் ஒலி பரப்பப்படும் போது வானொலியை சத்தமாக வைத்து பின்னர் அதை சடசடவென்று குத்தியவாறே காலங்கழித்துச் செத்துப் போகிறாள். கதை சொல்லி ரிடிப்பின் கடைசி இரகசிய இன்கா சல்யூட்டுடன் வாழ்கிறான். இவ்வாறு, குறித்த அக்கலவரத்தில் ரிடிப் உடல் ரீதியாகவும் மற்றையோர் வேறு வேறு விதங்களிலும் மரணிக்கிறார்கள்.


ஒரு கட்டத்தில் பழைய கலவரம் பற்றிய நினைவுகள் கிளரவும், கதை சொல்லி 1964 கலவரம் பற்றி நூலகத்தில் தேடுகிறான். கல்கத்தாவில் 15 பேர் இறந்த அச்சம்பவம் தலைப்புச் செய்தியாக இருக்கிறது. ஆனால், அதே சமயம் குல்நாவில் 29 பேரைப் பலியெடுத்த கலவரம் பற்றிய குறிப்பு விளையாட்டுச் செய்தியை விடவும் சிறியதாக பிரசுரிக்கப்படுகிறது. ‘இராணுவத்தால் இரு இளைஞர்கள் படுகொலை’ ‘மனித உரிமை அமைப்புகள் கண்டனம்’ ‘மாணவர் ஒன்றியம் கண்டனம்’ ‘வெகுஜன அமைப்புகள் கண்டனம்’ என்று முழுப்பக்கத்தை ஒதுக்கும் பத்திரிக்கைகள் ‘இனந்தெரியாதோரால் இரு இளைஞர்கள் சுடப்பட்டு மரணம்’ எனக்கட்டங்கட்டப் படாத நான்கு வரிக் குறிப்புகளை வெளியிடுவது இவ்விடத்தில் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது.


எல்லாவற்றையும் விட கொடுமை என்னவெனில் எதுவுமே ஆவணப்படுத்தப்படுவதில்லை. ஓரிரு முயற்சிகள் உண்டுதான் (U.T.H.R / ICES) என்றாலும் பெரும்பான்மையானவற்றில் அவர்களது அரசியற்சார்பு நிலை வெளிப்பட்டும் தொழிற்பட்டும் நிற்கிறது. (உதாரணம் – அண்மையில் வெளியான குமார் ரூப சிங்கேவின் தொகுப்பு நூல்) நடந்த அனைத்தும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை என்பதற்கு மேலாக ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே அனித்தும் மறக்கப் பட்டும் விடுவது தான் கொடுமையானதும் அதிர்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கிறது.


‘படையதிகாரிகள் சந்திக்கும் யுத்தமேடையானது அரசாங்கங்கள் விளையாடி மகிழும் விளையாடு களம் தான். 1964 ஜனவரி முடிவதற்குள்ளாகவே கலவரம் செய்தித் தாள்களில் இருந்து மங்கிப் போய் விடுகிறது. பொறுப்புடைய கருத்துடைய ஒருங்கிணைந்த எண்ணத்தில் இருந்தும் காணாமல் போய்விட்டன. வரலாற்றிலும் புத்தக அலமாரியிலும் எந்தத் தடயத்தையும் விட்டு வைக்காமல் மறைந்து விட்டன. நினைவுகளில் இருந்து நழுவி அமைதி என்னும் எரிமலையின் வாய்க்குள் விழுந்து விட்டன.’ (நாவலில் இருந்து)


பத்து நபர்கள் இறக்கவும் பதினைந்து நபர்கள் காயமுறவும் காரணமாயிருந்த – ஒரு நாளின் சில மணித்துளிகளே நீடித்த – கலவரத்துக்கே இவ்வளவு சோகக்கனதி மிகுந்த கதையாடல் எனில், முப்பது வருடங்களாக பெரும் யுத்தத்தினுள் வாழ்கிற – நம் கவிகளின் வார்த்தையில் சொல்வதானால் மரணத்துள் வாழ்கிற – எம்மிடம் இருந்து எத்தகைய பெருங்கதையாடல் பிறந்திருக்க வேண்டும்.

இயல்பாகவே மற்றமைகளின் பிரக்ஞையற்றும், நேர் கோட்டு ஆய்வுமுறைத் தொழிற்பாடும் கொண்ட தேசியவாதங்கள், முன்முடிவுகளதும் சுயதணிக்கையினதும் அடிப்படையில் படைப்புகள் தோன்ற வேண்டுமென எதிர்பார்க்கின்றன. தேசியவாதிகள்து அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவே பேனா பிடிக்கும் பலர் போரினுள் வாழ்வோர் போரினது அரசிய லையும் அதன் மேல்மட்டப் பாதிப்புகளையும் , விடுதலை நோக்கிய விழைவையுமே பேசுவர் என்ற முன்முடிவுடன் படைப்புகளைத் தயாரிக்கிறார்கள். (தயாரிப்புகள் என்பது மேல். காசி ஆனந்தனின் ஹைக்கூ – மாத்திரைக் கதைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான சொற்பட்டியலும் தயாரிப்பிற்கான செய்முறைக் குறிப்பும் விமர்சகர் சி.சிவசேகரத்தால் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கின்றன. விமர்சனங்கள் சி சிவசேகரம், தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ்) இத்தகைய முன்முடிவுகளுக்கு இந்நாவலில் இடம் இல்லை.


ΩΩ


சிறுவர்களின் உலகம் அதன் அத்தனை முகங்களுடனும் அழகாக விரிகிறது, ஆனால், அவ்வுலகின் ஒவ்வொரு நிகழ்வும் பாரிய குறியீட்டு வலிமையுடன் விளங்குகிறது.


கதை சொல்லியும் அவனது தோழி இலாவும் சேர்ந்து தமது எதிர்கால வீடு பற்றிக் கனவு காண்கிறார்கள். இருவரும் சேர்ந்து அதை வரைகையில், கல்கத்தாவிலேயே முடங்கி வாழ நேர்ந்த கதை சொல்லி கோடுகளால் அதை வரையறை செய்கிறான். தந்தையின் வேலை நிமித்தமாக உலகெங்கும் அலைந்து திரிந்த இலா கண்ணில் நீர் முட்ட கூறுகிறாள்;


‘நீ அப்படிச் செய்யக் கூடாது. நீ அங்கெல்லாம் அப்படிக் கோடு கீறுவது சரியல்ல’


நாவலில் வரும் வீடுகள் நவீனத்துவப் பண்புகளில் ஒன்றான குறியீட்டியலின் சிறந்த வெளிப்பாடுகள். வீடு கதைவெளியில் அதன் பொருண்மை அர்த்தம் சிதையாது இடம்பெறும் அதேவேளை, வீடுகளை கதை வெளியினின்றும் நகர்த்தி குறியீட்டு ரீதியாக அணுகுகையில் அவை நாடுகளுக்கான குறியீடாக மாறுவதைக் காணலாம். கதை சொல்லியின் பாட்டி சிறுவயதில் டாக்கா வீடொன்றில் வளர்ந்தவள். அண்ணன் தம்பி இடையிலேற்படும் முறுகலால் வீடு இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அண்ணனும் தம்பியும் இட்டுக்கொள்ளும் சண்டையால் அவர்களின் பின்னால் இருப்போரும் திடீரென ஒருவருக்கொருவர் எதிரிகளாக வேண்டியதாய் இருக்கிறது. வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு கோடிடப்பட்ட பின்பு அவ்வீட்டின் சிறுவர்களும் கூட திடீர் எதிரிகளாகி விடுகிறார்கள். அவர்கள், எல்லைக்கப்பாலிருக்கும் வீட்டைப் பற்றி பயங்கரமான கட்டுக்கதைகளை உருவாக்குகிறார்கள். தலைகீழாகக் கிடக்கும் அந்த வீடு பற்றிய அதி பயங்கரமான அவதூறுகளைப் பேசுவதை மிகவும் விரும்புபவர்களாக மாறிவிடுகிறார்கள். இந்நிகழ்வை தேசிய உருவாக்கம் மீதான குறியீடாக வாசிக்க முடிகிறது. தேசிய இனத்தின் அடையாளம் மற்றமைகளை மறுப்பதில் இருந்தே ஆரம்பமாகிறது. பிறவற்றிலிருந்து அந்நியப்படுவதிலிருந்தே தேசியப் பிரக்ஞையின் கட்டுமானம் தொடங்குகிறது என்பதை இவ்விடத்தில் நினைவு கூர முடிகிறது.


நாவலின் ஓரிடத்தில் கதை சொல்லி உலகப்படமொன்றில் கவராயங்களால் வட்டங்களை வரைகிறான். குல்நாவை மையமாகவும், குல்நாவுக்கும் ஸ்ரீநகருக்குமான தூரத்தை ஆரையாகவும் கொண்டு வரையப்படும் வட்டம், அதிசயிக்கத்தக்க விதமாக வருகிறது. அதன்படி, கல்கத்தாவுக்குளூ சீனாவின் செங்டூ நகர் ஸ்ரீனகரை விட அருகாமையில் இருக்கிறது. தாய்லாந்தின் சியாங்மை நகர் டில்லியை விட அருகில் இருக்கிறது. குல்நாவிற்கு கல்லெறியும் தூரத்தில் தென் சீனம் இருக்கிறது. ஆனால் கல்கத்தாவில் சலனமேற்படுத்துவதாய் அமைவது புது டெல்லியின் வீதியில் ஏற்படும் வாகன விபத்துத்தானே தவிர செங்டூவில் நடக்கும் பேரழிவோ, சியாங்மையில் வரும் புயல்காற்றழிவோ இல்லை. தூரம் வேற்றுமைகளைக் கொண்டு வருவதை விட தேச எல்லைகளான கற்பனைக் கோடுகள் பிளவுகளை ஏற்படுத்துகின்றன.


தேசியம் என்பது கட்டி உருவாக்கப் படும் காலப்பகுதியில் மட்டும் அன்றி தேசம் உருவான பின்பும் கூட தொழிற்படும் தேசியவாதம் அச்சந்தரக்கூடியது. தேசியத்துக்கான ஒருங்கிணைவை வலியுறுத்துபவளான கதைசொல்லியின் பாட்டி ஓரிடத்தில் கூறுகிறாள்;


‘அந்த மக்கள் அந்த நாட்டைக் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுத்தது. பல நூறு வருடக்கணக்கான போருக்கும் பெருகியோடிய குருதிக்கும் பின்பு அங்கு வாழ்கிற ஒவ்வொருவரும் அதற்கான உரிமையை தமது இரத்தத்தை, தமது தந்தையர்களது இரத்தத்தை, தமது சகோதரர்களின் இரத்தத்தைக் கொடுத்துப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள், தமது நாட்டின் எல்லைக் கோட்டை குருதியால் வரைந்திருப்பதால் தாமனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றே எண்ணுகிறார்கள். அவர்களுடைய புனித ஆலயங்களில் எவ்வாறு இராணுவக் கொடி பறக்கிறது என்பதையும் அவர்களது சேர்ச்சுகளில் போரில் மரித்தோருக்கான நினைவுச் சின்னங்கள் எவ்வாறு எழுப்பப்படுள்ளன என்பதையும் மாயா உனக்குச் சொல்லவில்லையா? போர் தான் அவர்களுடைய மதம். அந்த நாட்டை உருவாக்கியிருப்பதும் அதுதான். ஒரு முறை அது (போர்) இங்கு நடந்து விட்டால், மக்கள் தாம் பஞ்சாபியாகவோ, முஸ்லிமாகவோ, இந்துவாகவோ பிறந்ததை மறந்து ஒரே இரத்தத்தில் பிறந்த குடும்பமாகிவிடுவர்.’


பங்களாதேஷ் பிரிவினைக்குப் பின் முதன்முதலாக விமானத்தில் பயணம் செய்யவிருக்கும் பாட்டி, விமானத்தில் இருந்து பார்க்கையில் எல்லைக் கோடு அல்லது சூனியப் பிரதேசம் புலப்படுமா எனக் கேட்கிறாள். இல்லை என விடை தரப்படுகிறது. குழப்பமடைந்த அவள் சிறிது நேரம் யோசித்து விட்டு;


‘அப்படி பதுங்கு குழிகளோ வேறெதுவுமோ இல்லையென்றால் மக்கள் எப்படித் தெரிந்து கொள்வது? நான் சொல்ல வருவது என்னவென்றால், பின் வித்தியாசம் என்பது எங்குதான் இருக்கும்? வித்தியாசம் இல்லையென்றால் இரண்டு பக்கங்களும் ஒரே மாதிரியாகவல்லவா இருக்கும்? நாங்கள் டாக்காவில் ரயிலேறி மறு நாள் காலை கல்கத்தா வந்து சேர்ந்த அந்த, பழைய நாட்களைப் போலல்லவா இருக்கும். நடுவில் அப்படி எதுவுமே இல்லையென்றால் பிரிவினையும், படுகொலைகளும் மேலும் நடந்ததனைத்தும் எதற்காக?’


ஈழத்தில் வாழும் ஒருவருக்கு இக்கேள்விக்கான விடையை வரலாற்றினூடாகத் தேடும் தைரியம் இருக்குமா என்று தெரியவில்லை.


கோஷ், பாட்டி கதாபாத்திரத்தை உணர்வுவயப்பட்ட வரட்டுத் தேசியவாதியாகக் காட்டுகிற போதும், தேசியவாதியாக இருப்பதற்கு அவள் பக்கமிருக்கும் நியாயங்களை கூறுகிறார். அவளுடைய அரசியல் நிலைப்பாடு அவளைப் பொறுத்தவரை தவிர்க்கவியலாத ஒன்று என்பதை அவ்ளுடைய வரலாறைக் கூறுவதன் மூலம் சொல்லுவதில் கோஷ் பின் நிற்கவில்லை. தேசிய ஒருங்கிணைவுக்கான ‘போரையும் பேரழிவையும்’ வரவேற்கிற தீவிர நிலைப்பாடுடையவளாக உள்ள போதும் அனுதாபத்துடனேயே அக்கதாபாத்திரம் அணுகப்படுவது இந்நாவலின் சிறப்பு எனலாம்.


சிறுவர்களை சமூக வன்முறை எப்படிப் பாதிக்கிறது என்பதற்கு பாட்சாலைப் பேரூந்தில் நடக்கும் சம்பவங்கள் சிறந்த உதாரணம். நானெல்லம் சிறுவனாக இருந்த காலத்தில் சென்ரிப் பொயின்ற்களைக் கடக்கும் போதும், புரட்சிப் பாடல்களை இசைத்துக் கொண்டு வெள்ளை வான்கள் விரையும் போதும் பெரும் பயத்தை அடைந்திருக்கிறேன். ்ஷெல்கள் கூவியபடி வந்து வீழும் போது, சுப்பர் சொனிக்குகளும் கிபிர்களும் வட்டமடிக்கும் போதும், பெரும் பீதியுடன் வீதியில் வீழ்ந்து படுத்து எழுந்து அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்தவாறு பிணங்களுக்கு மேலாக ஏறி ஓடியிருக்கிறேன். இதையெல்லாம் எழுதலாம் என்றால் மொழி கூடமாட்டேன் என்கிறது. அ.இரவி ‘காலம் ஆகி வந்த கதை’யில் முயற்சித்திருக்கிறார் – வெற்றியடைந்தார் எனச் சொல்ல முடியாது. ஆனால் அமிட்டவ் கோஷ், இச்சிக்கல்கள் அனைத்தையும் அநாயாசமாகத் தாண்டி மொழியினை இலாவகமாகக் கையாளுகிறார். துக்கம் பளபளபான மொழியில் வெளிப்படாது என்பார்கள். லா.சா.ராவின் பளபளப்பான மொழியும், வர்ணணையும் மனதின் ஓரத்தில் துக்கத்தை நெளியச் செய்வது போல கோஷ் மொழிநடையின் சோகம் அதீதமான மன அருட்டலை உண்டு பண்ணுகிறது.


ΩΩ


மையக் கதையின் எண்ணற்ற துணைக்கதைகளில் ஒன்று, சிறுவர்கள் களங்கமற்றவர்கள் என்பதாக நாம் உருவாக்கி வைத்திருக்கும் சமநிலைத் தோற்றப்பாட்டைச் சிதைக்கிறது. இலா, ஒரு சந்தர்ப்பத்தில் ‘எல்லாப் பையன்களுக்கும் பிடித்த விளையாட்டை’ விளையாட வருமாறு கதை சொல்லியை அழைக்கிறாள். நிக் பிரைஸ் என்ற நண்பனால் இலாவுக்கு அறிமுகப் படுத்தப்படும் இவ்விளையாட்டின் மேல், இலாவுக்கு இருப்பதாகச் சித்தரிக்கப் படும் ஆர்வம் நிச்சயம் கமிசார்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இராது.


கிளைக்கதைகளில் பல, தலை முறை இடைவெளி, தொடர்பாடல் இடைவெளி பற்றிப் பேசுபவை. மத்திய தர வர்க்கத்துக்குச் சற்று மேல் நிலையிலிருக்கும் மக்களின் வாழ்முறையை பதிவு செய்யும் நிகழ்வு இலக்கியப் புலத்தில் மிகவும் அரிதான ஒன்று. முற்போக்கு இடதுசாரி இலக்கிய வாதிகளால் மேல்தட்டு வாழ்க்கையை எழுதியதற்காக கமலா தாஸ், குர்ரத்துலைன் ஹைதர் தொடங்கி சமீபத்திய பங்கஜ் மிஷ்ரா வரை பூர்ஷ்வா எழுத்தாளர்கள் என முத்திரை குத்தப் படுவதை நாம் இங்கு நினைவு கூரலாம். மேல்தட்டு மக்களின் டாம்பீகத்தையும், போலி மதிப்பீடுகளையும் திட்டித் திட்டி எழுதிக் கைவலித்துப் போனவர்கள் நம் மத்தியில் நிறைய உண்டு. மேல் தட்டு வர்க்கத்துக்கும், அதன் சிக்கல்களுக்கும், போன்மை நிலைக்கும் இலக்கியத்தில் இடமில்லை என்ற முன்முடிவுகளுடன் தான் தமிழில் இலக்கியம் எழுதப் படுகிறது. அதிகமும் இத்தகைய போக்கே ஆதிக்கம் செலுத்திய சூழலில் அமிட்டவ் கோஷ் வெளி ஒதுக்கல் கொள்கையில் நம்பிக்கை கொள்ளாதிருப்பது நிம்மதியைத் தருகிறது.


தேசியவாதம், போர் பற்றி யாழ்ப்பாணச் சராசரி மக்களின் பார்வை நாவலில் பல கதாபாத்திரங்களுக்கு இருக்கிறதுளூ

மே பிரைஸ் ஓரிடத்தில் கதை சொல்லியைப் பார்த்துக் கூறுகிறாள்ளூ


‘கடவுளே! நீ எவ்வளவு விவரம் தெரியாத ஒருத்தனாய் இருக்கிறாய். முப்பதுகளில் பெர்லின் நகர பார்களில் இடதுசாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று எல்லாருமே அறிவோம். நாஜி – சோவியத் ஒப்பந்தத்தைப் பற்றியல்ல அவர்கள் கதைத்தது. அவரவர் படுக்கைகளைப் பற்றித்தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இங்கிலாந்து பற்றி உனக்கு எதுவும் தெரியாது. உன்னால் எதையும் ஊகிக்க முடியாது.’


போருக்குப் பின்னான லண்டனில் சிதைந்த கட்டடமொன்றில் உடலுறவு கொள்ளும் இருவரை ரிடிப் காண்கிறான். உடலுறவில் ஈடுபடும் அவ்விருவரதும் உடல் மொழி அன்றைய சூழ்நிலையின் பயங்கரத்தைக் கூறுகிறது. அக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்ததை விட பல மடங்கு அதிகமான பாலியல் வற்மையும் வெறுமையும் நிலவுகிற, சமூக வடுவினடியாகக் (Collective Trauma) கிளரும் பாலியல் பிறழ்வும் சிக்கல்களும் நிறைந்த நம் சமூகத்தில் 60களில் எஸ்.பொ எழுதிய அளவுக்காவது யாராவது எழுதுகிறார்களா?


அமிட்டவ் கோ்ஷின் மற்றுமொரு சிறந்த நாவல் In An Antique Land. வரலாற்றைத் தற்காலத்தினூடாகக் கூறி மீள் புனைவுகளின் மூலம் பன்மைத்துவமான சமூக இருப்பிற்கான நியாயங்களை, அதன் சாத்தியங்களை, வரலாறுகளில் அதற்கு இருக்கும் பெரிய இடத்தை நிறுவிக் காட்டுகிறது இந்த நாவல்.


யுhத வணிகனான ஏப்ரகாம் பென் யிஜி டுனீசியாவில் இருந்து இந்தியாவுக்கு எகிப்தினூடாகப் பயணமாகிறான். கி.மு 1130 அளவில் இது நிகழ்கிறது. மங்களூரில் 17 வருடங்கள் வாழ்கிற அவன், நாயர் குல யுவதியொருத்தியை மணமுடிக்கிறான். இந்தியாவை விட்டுச் செல்கையில் பொம்மா என்கிற இந்திய அடிமை ஒருத்தியும் அவனுடன் கூடவே எகிப்துக்குப் பயணமாகிறாள். பரிமாறிக்கொள்ளப்படும் கடிதங்களும் குறிப்புகளும் வராற்றின் பக்கங்களில் எப்படியோ பதிவாகின்றன.


வரலாற்றின் வெளித்தெரியக் கூடிய இடுக்குகளில் புதைந்து போயிருக்கும் பொம்மா பற்றிய ஆய்வுக்காக கதைசொல்லி கி.பி 19 80 இல் எகிப்து பயணமாகிறான்.


ஒரு புறம் கதைசொல்லியின் எகிப்திய பயண அனுபவங்கள், மறுபுறம் சொல்லப்படாத அடிமையின் வரலாறும் அவளது வரலாற்றில் புதைந்து போயிருக்கிற பண்பாட்டிசைவின் வரலாறும். பயணக்கதை என்னும் பாவனையுடன் தன் வரலாற்றுடனான உரையாடலைத் தொடங்குகிற நாவலில் சிறப்பான விபரிப்புகள், நெருக்கமான சித்தரிப்புகள் எல்லாம் உண்டு. இப்போதெல்லாம், சிதைந்தும் பிளவுபட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கிற இந்திய – எகிப்திய, யூத – முஸ்லிம், இந்து – முஸ்லிம் உறவுகள் முன்னொரு காலத்தில் எப்படியிருந்தன என்பதை இந்த நாவல் எமக்குக் க்காட்டுகிறது.


புனைவு தானே என்று இந்த நாவலை ஒதுக்கி விட முடியாது. சிலுவைப் போர் தொடங்கி சதாம் குசேன் வரையான காலத்தைத் தனது கதையாடலில் விரித்துப் போட்டு வரலாறாய்த் தோற்றமுறும் நாவலின் ஒவ்வொரு வார்த்தையிலும் அமிட்டவ் கோஷ் இன் உழைப்பு நன்கு புலப்படுகிறது. நாவலின் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கிற 40 பக்கங்கள் நீண்டு செல்கிற ஆதாரப் புத்தகப் பட்டியலைப் பார்வையிடும் யாரும் இந்த நாவலைப் புறக்கணிக்க நிரம்பவும் தயங்க வேண்டியிருக்கும்.


ΩΩ


நிழல் கோடுகள் என்று கூறிவிடுவதால் மாத்திரம் தேசிய எல்லைக்கோடுகளின் குரூர யதார்த்தம் அற்றுப் போய்விட மாட்டாது. பயங்கரமான வன்முறையின் தோற்றுவாய் தேசியவாதம் தான் என்ற புரிதல் வரலாற்று யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத நிலையில் ஏற்படுகிற ஒன்று. தேசியவாதத்தை தட்டையான ஒற்றைப்பரிணாமப் புரிதலுடன் அணுகுதல் குறுகிய பார்வை, வரலாற்று இயங்கிய லை மறுக்கும் முட்டாள்த்தனமான புனைவு என்றெல்லாம் விமர்சனங்கள் பன்மைத்துவத்தைக் கொண்டாடும் படைப்பாளிகள் மீது வைக்கப்படுவதுண்டு. பெரும்பாலானோர், பன்மைத்துவம் உடைய உலகமயமாதலை, பண்பாடுகளின் இசைவில் அழிபடும் கலாசாரத் தூய்மைவாத அழிவை பெரும் அச்சத்துடனேயே எதிர்கொள்கிறார்கள். தங்களது அடையாளங்கள், கட்டியெழுப்பப்பட்ட பிம்பங்கள் உலகப் பெருவெளியில் பெறுமதியற்றவை என்பது தேசியவாதம் உருவாக்கித்தருகிற குறுகிய வரம்புகளுக்குள் மாத்திரமே அவை சாசுவதம் பெறும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. இந்த நிலையில் பண்பாடுகளின் உலகு தழுவிய இசைவையும் இணைவையும் பேச வேண்டிய தேவை நமக்கு உண்டு. உலகமயமாதல் என்பது ‘அமெரிக்க மயமாக்கலாக’ மாறிப்போய்விட்ட நிலையில் கீழிருந்து எழும் உலகமயம் பற்றிய புரிதல்களை ஏற்படுத்த வேண்டியது பெருங் கடமை. எமது வாசிப்பின் திசைகளை பின் – நவீன நிலவரம் திறந்து விட்டிருக்கிறது. அமிட்டவ் கோஷ் போன்ற பிரதியாளர்களை நாம் கற்றுக்கொள்வதன் மூலம் எமது பிரச்சனைகள் பற்றிய இன்னொரு பரிமாணத்தை உணரலாம்.


சிக்கலடைந்து மோதலும் முறுகலும் முற்றிய நிலையிலிருக்கும் தமிழ் – சிங்கள – முஸ்லிம் உறவுகள் முன்னொரு காலத்தில் எப்படியிருந்தன என்பதை, நொக்ஸ், மெக்கன்சி சுவடிகளைப் பார்வையிடுவதன் மூலம் புரிந்து கொள்ளலாம். In an Antique Land மாதிரியான புனைவுகளுக்கான வரலாற்று ஆதாரங்கள் நம்மிடம் நிறையவே உண்டு. உயிர் மீது ஆசையற்ற யாராவது முயற்சி செய்யலாம்.


ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே நம் தலைவர்கள் குருதியால் வரைந்து வைத்துவிட்ட சிங்களவனுக்கும் தமிழனுக்குமிடையிலான எல்லைக்கோடும், அக்கோடு பற்றி நம் மனதில் கட்டி எழுப்பப்பட்டிருக்கிற தவிர்க்க முடியாத பிரக்ஞையும் குறித்த பிரதியை உருவாக விடாது நிச்சயம் தடை செய்யும். அத்தடையையும் மீறி எழும் பிரதி அதை எழுதியவனி/ளின் குருதியில் தோய்ந்துதான் வெளிவரமுடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.


குறிப்புகள்.

1. Ernest Geller, Thought and Change, London (1964) London.

2. Orhan Pamuk, in an interview with Adam Smith. Nobel.

3. From Authenticity to Hybridity – A personal Journey, Radhika Kumaraswamy (Gratien Awards Acceptance Speech March 28th 1998)
நாவலில் இருந்து தரப்பட்ட மொழி பெயர்ப்புகள் முற்றிலும் சரியானவை அல்ல.
அமிட்டவ் கோஷ் இன் படைப்புகள் யாவும் டெல்லி Ravi Dayal Publishers இன் வர்த்தகப் பதிப்புகளாகக் கிடைக்கின்றன. The Shadow Lines நாவல் மாத்திரம் Oxfordஇன் Colegge And University Level Texts (CULT) வெளியீடாக கிடைக்கிறது. இப்பதிப்பில் நாவலின் மீதான 4 விமர்சனக்கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.


♦♦♦♦♦♦
AMITAV GHOSH – UN CHRONICLE INTERVIEW
நேர்காணலில் இருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள்


On literature in a globalized world

I think the world has been globalizing for a long time. It is not a new phenomenon, but one that has achieved a new kind of intensity in recent years. The only real barrier to a complete uniformity around the world is not the image but language. Images can be exchanged between cultures, but the domain where globalization has truly been resisted is that of language. We can send e-mails, which can be instantly translated, but that is shallow communication. For any kind of deeper, resonant communication, language is essential. All such communication is always deeply embedded in language.


As a writer, thinking back to the birth of the novel, it really coincides with the development of monolingual cultures in Europe, which is also a fairly new phenomenon. It is only since about the beginning of the seventeenth or eighteenth centuries that you have people who only spoke German, as opposed to Latin and German, or similarly, French, English or whatever. The decline of dialects happened at exactly the same time. So the novel coincides with the rise of monolingualism. I remember when I first started writing, the comments I would get in Europe were, “what you are doing is very peculiar because you are writing in languages other than those you spoke at home”. I think that is true. It is also true that writers like me have been pioneers. Everybody is going to have to deal with multilinguality and interlingual communication. The old monolingual worlds are in some way not the same as they used to be; that is why translation is such an important part of this book. I feel that this is the crucial sense in which writers are figures in the emergent culture we see ahead. In a text like mine [The Hungry Tide], you see the possibility of deep communication, which you would not see in films or in any kind of image-based representation.


On exploring cultural gaps

I find history completely absorbing and fascinating. I’m always interested to discover aspects of history; it adds a kind of richness to one’s experience of a place. Speaking about history, one of the very important things in a text is that it becomes a place where those cultural interactions are performed in the most difficult possible ways. The two central characters in my book can’t speak to each other. Yet I feel it is exactly that form of cultural gap that you have to explore. Someone who has experienced non-communication must try to represent it in some sort of truthful or interesting way.


The novel is such that it is impossible to have formulae about it. Look at Herman Melville: we have certain autobiographical elements in his writing, but when he decided to write Moby-Dick, he picked a historical incident-the sinking of the whale ship The Globe, which had been attacked and sunk by a whale. On that he built his story. Similarly, he did that with many of his works. His novella Benito Cereno was actually founded upon a fragment that he took from someone else’s autobiography. I find this very interesting. I think the imaginative procedures of novelists are neither easily exhausted nor sufficiently accounted for. There can be remarkable novels that come out of journalistic experiences. Gabriel Garcங்a Mநூrquez, for example, was a journalist for many years, and a number of his stories are written as a journalist. These are just wonderful, wonderful stories. I just don’t think there are any rules about this.

On discovering histories

Part of the idea behind The Hungry Tide was to shine light on this area that is little known within India. But even within Bengal, the Sundarbans is really a kind of area of darkness. People don’t think of it, they don’t write about it, they don’t look at it. This is such a strange thing. For the ordinary tourist, the Sundarbans doesn’t offer much. You will never see the tigers; there is no wildlife to be seen. Sometimes you may see a crocodile, a few birds, but it is not like going to the Serengeti or some resort; it offers nothing to tourists as such. But, at the same time, it is a place of incredible beauty and presence. To appreciate it, tourists would have to be there for quite a long time-for three or four days at least-because the beauty of it reveals itself very slowly. Although the book has deep personal links, it’s all fiction. Certainly nothing like this happened to me, but in a way a lot of real experiences get invested even in a fiction of this kind. Many encounters, many people that I’ve met, experiences that I’ve had, have become invested in the book.


The Sundarbans is a wilderness-it’s like a forest. In some sense, you don’t expect to encounter history in a place like that. The strange thing is that when you look at any place closely, you discover that a place that seems empty of history is actually deeply layered. It is like an onion; you can just keep peeling layers upon layers and never come to a core; there is always more. This proved to be exactly the case with the Sundarbans: there was layer upon layer of things to be seen and heard. This is not surprising. The Sundarbans was the approach route to the Gangetic lands; for millennia people have been coming through there. We know, for example, that the great Chinese traveller Fa-hien stayed in the region for two years. Similarly, there are reports about European travellers in the Sundarbans, among them Marco Polo, who also visited the Andaman Islands. The more closely you look, the more you discover. This is precisely the sort of depth and layering that you will find there.


On weaving fiction, autobiography and history

My previous novel, The Glass Palace, was very much about my father’s history. The Hungry Tide is again closely related to my family. This is my first book that is completely located and situated in Bengal and it was very important to me for exactly that reason. It was also very exciting to explore the deep layering of Bengal. I feel in some mental and emotional way I’m in a process of returning-which will take me a long, long time-and it is currently underway. Typically, it takes me between three and four years-but sometimes more-to conceive the idea of a novel and actually execute it. The Glass Palace took me five years; The Hungry Tide took four. I spent a long time in the Sundarbans-living in a village, meeting people, learning how to catch crabs.


I also spent a long time working with a dolphin specialist in Cambodia; we travelled up the Mekong together surveying the dolphins. It is striking that in Hindu culture so many animals-cows, cats, dogs, monkeys-figure in different ways within the civilization. Yet, Hindu culture has nothing to say about dolphins or whales. It is completely silent on this issue. Even though the Gangetic dolphin has always been there, it doesn’t seem to have been of interest to the culture. I don’t know why that should be the case, for India has a very rich and diverse population of marine mammals. It was a very long and very interesting process of research. I loved that-I find great pleasure in investigating these things.


My entire relationship with the Sundarbans began with my family. I had an uncle who went there in 1947 as the headmaster of a school in a small town called Gasaba, which had been founded by Sir Daniel Hamilton. It is because of my uncle’s presence there that I forged this long connection. I would often go and visit him. That experience planted the seed of this book; it was just those connections, the sense in which you see a landscape growing within your mind. It began in 2000 when I had finished The Glass Palace, set in Burma, which is not far from the Sundarbans. There were many passages in the book that actually dealt with mangroves, forests and so on. At that point, I suddenly realized that I had become so deeply interested in forests and animals that I wanted to write a book that explored these subjects. The book was almost a natural outgrowth.


♦♦


பின்னூட்டமொன்றை இடுக


விமர்சனம்,கட்டுரைகள்



CATEGORY ARCHIVES: புனைவு

மெர்சேவும்…
Posted on நவம்பர் 10, 2008 | பின்னூட்டமொன்றை இடுக
உன்னுடன் பேசுவது குறித்து நான் அச்சமடைகிறேன். மொழியின் கதவுகள் எப்போதும் பயங்கரங்களை நோக்கியே திறந்திருப்பது அச்சந்தருகிறது. உனது மொழியினூடு என் நிலத்தின் வாசனையை ஏன் நுகர முடியவில்லை? உன் மொழி பச்சையம் அற்றதாய் வரண்டு சருகாகி விட்டது. அதிலிருந்து வேகும் தசையின் ரத்த வீச்சம். தயவு செய்து ஏதும் கூறாதிருக்காதே. உனது மௌனம் மிகவும் இரைச்சலுடன் உள்ளது. மௌனம் மிகச்சிக்கலான அகச்சங்கேதம்.



கொலைகளை, சிதைவுகளைப் பேசுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறாய் நீ! உன் மொழியின் இடுக்குகளில் உறங்கும் அரூப மரணம் எந்த நிமிடத்தில் அரூபம் கலைந்தெழும்?



மிருதுவான கனவுகள் படிந்திருக்கும் என் மூளையின் அடுக்குகளைச் சுரண்டி கனவு நுண்மங்களைக் குரூரமாகப் பெயர்க்கும் கெடூர ஆயுதம் உன் மொழி.



உலர்ந்த உதிரச் சகதியைக் கொண்ட உன் மொழி என்னைக் கிளர்வுறுத்துவதாயில்லை. எனக்கு வேண்டியது பச்சையம். இந்த அந்தரத்தில் வேரூன்றுவதற்காகவேனும், என் நிலங்களிலிருந்து ஒரு துளி பச்சையம் சுரண்டியெடுத்து உன் மொழியில் பூசிக்கொள் – தயவு செய்து. எனக்கு என் மண்ணின் வாசனை தேவையாயிருக்கிறது. பெருமழைக் காலங்களில் கிளரும் மண்வாசனையின் போதை… தயவு செய்து..



அது முடியாவிடின் கூடப் பரவாயில்லை. உன் மொழியில் நீ பேசாதிரு. உன் மொழி என்னைக் கவர்வதாயில்லை என்பதற்கும் மேலாக அது ஓர் கொலைக்கருவியைப் போலவிருக்கிறது. மேலும் அது என் நினைவுகளைப் புனைவென்கிறது.


1

வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையின் தாரை எழுப்பும் சப்தம், அது வாழையிலைகளில் விழும் சப்தம் என்பன எனக்குப் பிடித்தமானவை. ஆவி பறக்கும் தேநீருக்கான பேரவா எனக்குள் எழுந்தது. தேநீர் தயாரிப்பது மிகவும் நாடகத்தனமான ஒன்று – என்னைப் பொறுத்தவரை. ஆவி பறக்கும் சுடுநீர்க் கப்பினுள் தேயிலைத்தூள் சாஷேவை இறக்கி தேயிலையின் செங்கருப்புச் சாயம் சுடுநீரெங்கும் பரவுவதையும் மெலிதான போதையூட்டும் வாசனை நிறைவதையும் கிளர்வுடன் அனுபவித்துக்கொண்டிருக்கலாம்.



தேயிலையெல்லாம் இப்போதைய சூழ்நிலைகளின் கீழ் ஒரு ஆடம்பரப் பொருள்தான். அம்மா விநோதமான ஏற்பாடு ஒன்றைச் செய்திருந்தாள். நற்சீரகம், மல்லி, வேர்க்கொம்பு சிறிதளவு சீனி எல்லவற்றையும் ஒன்றாக்கி கருகும்வரை வறுத்து பொடி செய்து வைத்திருந்தாள். கேட்டபோது இதுதான் கோப்பி என்றாள். முதலில் வாய் வைக்க முடியாதளவு எரிச்சலாய் இருந்தது – பிறகு பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டேன்.



அம்மா பொருட்களை வாங்குவதற்கான நீண்ட வரிசையில் நின்றிருப்பாள் இப்போது. அவளை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவள் இதற்கெல்லாம் பழக்கப் பட்டவள் தான் – ஆயினும் அவளது வயதுக்கு இதெல்லாம் ஆரோக்கியமான நிலவரங்கள் அல்ல. மழைக்குளிரில் நடுங்கியபடியிருக்கக் கூடும் அவள்.



நீர் கொதிக்க வைப்பதற்கு மின்சாரம் இல்லாமல் இருந்தது. காஸ் பாவித்தால் தட்டுப்பாடு நீடிக்க நீடிக்க நிலமை மோசமாகி காஸே இருக்கப்போவதில்லை. அம்மா ஈரவிறகுடனான அல்லாட்டத்தைத் தொடங்கி நாட்களாகிறது. என்னால் ஈர விறகுகளைத் தொட முடியாது. ஆம்! அது அப்படித்தான் – என்னால் முடியாது.



காஸை மூட்டி நீரைக் கொதிக்க வைத்தேன். கொழகொழவென்ற ஆபாசமான சத்ததுடன் கொதிக்கவாரம்பித்தது நீர். ஆவி வெளியேற, அதன் மீது என் உள்ளங்கைகளைக் காட்டி சூடுபடுத்திக் கொண்டேன். இளஞ்சூடான கையில் முகத்தைப் புதைத்துக் கொண்டேன். எனக்கு அழுகை வரும் போலிருக்கிறது.



நாசம் பிடித்த வேசி மகன்களால் நான் முடங்கிப் போகவேண்டியதாகி விட்டது. கொழும்புப் பேப்பர்கள் கிடையாது. இண்டர்நெட் கிடையாது. கால்களையும் கைகளையும் ஒருசேர இழந்து போய்விட்டதைப் போலிருக்கிறது நிலமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தொலை பேசியில் பேசிய நாய் கூட நிலத்தின் பச்சையம் கேட்கிறது. அவன் தாயின் குருதி வழிந்து படிந்த இந் நிலத்தின் பச்சையத்தைச் சுரண்டியெடுத்து – அல்ல – அள்ளியெடுத்து நான் வீசுவேன் : நிலக்குறிகள் குறித்தும் மண்வாசனை குறித்தும் அலம்பும் வேசிமகன்களின் மூஞ்சியில்.



இதையெல்லாம் விட்டுவிட்டு நான் மழையைக் கேட்கலாம். ஆம். மழையினோசை என்னைக் கிளர்வுறுத்துவதாய் நான் நினைத்துக் கொள்ள வேண்டும்! வேறு வழிகளில்லை. இந்த மழைக்காலம் மிகக் குளிரானது. அம்மா குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பாள். சைக்.. இல்லை, இந்த மழை எனக்கு அவனை நினைவூட்டுகிறது. தாபமும் காதலும் வேட்கையும் மழைசார்ந்தன போலும்.



அவனோடு பழகுவது எனக்கு விருப்புடைய காரியமல்ல. எனது கவிதைகள் அவனுக்குப் புரிவதில்லை. நான் கதைப்பதும் புரிவதில்லை. ஆனால் அவன் எனக்குத் தேவையானவனாக இருக்கிறான். மழை அவனை நோக்கிய விழைவை உண்டுபண்ணுகிறது. பிரதான வீதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டதையடுத்து ஒற்றையடிப் பாதைகளை நாங்கள் பிரதான வீதிகளாக்கிக் கொண்டோம். அவனுடன் அவனுடைய நண்பர்களைப் பற்றிக் கதைத்தபடி வந்து கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக சிப்பாய் ஒருத்தன் வழிமறித்தான். என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். ஆண் சிரிப்பு அது. அவனைச் சைக்கிளை விட்டிறங்குமாறு பணித்த சிப்பாய் கையில் துப்பாக்கி எப்போதும் போல இருந்தது. இவனுடைய கண்களில் பயம் இருந்தது. அரும்பிக்கொண்டிருந்த மீசை அருவருப்பூட்டும் விதத்தில் அவனிடமிருந்து அன்னியப்பட்டுத் தோன்றியது. மிகப்பணிவுடன் விநயமாக அடையாள அட்டையை எடுத்து நீட்டினான்: சிப்பாயிடமிருந்து மீள்வதற்குள் ஏழெட்டுத் தடவைகள் ‘சேர்’ போட்டுவிட்டான். ஒரு வளர்ப்பு நாயின் பணிவு அவனிடமிருந்தது.



அன்றுதான் நான் அவதானித்தேன்: அவனுடைய குறுஞ்சிரிப்பு கவரக்கூடியதாக – என்னைத் தயார்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை. அவனுடைய அணைப்பில் மிகவும் குளிர்வதாய் உணர்ந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக அவனுடைய ஆண்குறி சிறுபிள்ளையினுடையதுதான். அவனுடைய மார்பு ரோமம் தேவையற்ற ஒன்று போல் தோன்றிற்று. நீண்ட நேரம் அன்று அழுதேன்.



நீர் குமிழியிட்டு கொழகொழவென ஆபாசமாகக் கொதிக்க ஆரம்பித்தது. அளவாக – மிக அளவாக சேர்மானங்களைச் சேர்த்து தேநீரைத்(?) தயாரிப்பதில் வெற்றிய டைகிறேன். ஆனால் இது கவர்ச்சியற்ற ஆபாசமான கலவைதானே. செங்கருப்பு தேநீரினுள் மிதக்கும் எலுமிச்சம் துண்டத்தை அமிழ்த்தி அது மேலெழும்புவதைப் பார்த்தபடி நான் அருந்தும் நாட்கள் இனித் திரும்பப் போவதில்லையோ என்னமோ? அர்த்தமிழந்த நாட்களில் வாழ்கிறதென்றால் இப்படித்தான்.



இன்னும் சிறிது நேரத்தில் அம்மா வந்து விடக்கூடும். அவள் வந்து விடின் நான் இந்தச் சிறையினுள் அன்னியப்பட்டுப் போய்விடுவேன். அவளின் சக இருப்பை உணர்தலே கொடுமையானது. அவள் முன்னிலையில் நிர்வாணமாய் உணர்வேன். அவள் என்னை வாசிக்கும் திறன் கொண்டவள்.



கந்தர் சஷ்டி ஆரம்பித்திருக்கிறது. கோயிலுக்கு செல்வதனால் மாத்திரமே இயல்பு நிலையைத் தக்க வைக்க முடிகிறது. உடல்கள், நெஞ்சில் கால்களில் உரோமம் மண்டிய, உருண்டு திரண்ட தசைத் திரட்சி கொண்ட ஆணுடல்கள். கோவில் என்னை இயல்பு நிலையில் வைத்திருக்கிறது!



நான் சுயபுணர்விலீடுபட்டு எத்தனை நாளாகிறது? சரியாகத் தெரியவில்லை, நீலப்படங்களே – இன்னும் சரியாக சொவதென்றால் அவை மாத்திரமே – அதைத் தீர்மானிக்கும் சக்திகள்.



எனது தொடைகளை வருடிக்கொடுக்கிறேன்.



இளஞ் சூடாயிருக்கும் தேநீர்க் கோப்பையின் வெளிப்புறம்.



–அம்மா சுடுநீர்க் குடுவையில் தேநீர் கொண்டு போயிருப்பாளா? சரியாகத் தெரியவில்லை. அவள் தேநீர் மீது பெருவிருப்புடையவள். மழைக் குளிர்.. நிச்சயம் அவளுக்குக் காய்ச்சல் வரும். சைக்..



மீண்டும் அதிக சிரத்தையுடன் நான் எனது தொடைகளை அகல விரிப்பேன். இது என்னுடைய நிமிடம்.. இது என்னுடைய யோனி.. இது என்னுடைய விரல்..



–தொலைபேசியில் பேசுபவன் குறி எங்கனம் என்னைப் புணரும்?



நான் மௌனமாயிருந்த போதெல்லாம் அவன் கேட்டுக் கொண்டிருந்தான்:



“நீ தொடர்பிலிருக்கிறாயா?”

“நீ தொடர்பிலிருக்கிறாயா?”

“இணைப்பில் ஏதும் கோளாறுகள் இல்லையே?”

“இணைப்பு சீரற்றதாய், தெளிவற்றதாய் உள்ளது போலும்!”

–ஃபக்கிங் ஷிற் – நான் அதிக சிரத்தையுடன் எனது தொடைகளை அகலித்து விரல்களை…

–அடக் கறுமமே, சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருக்கிறது. அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள் மழைக்கால சிறுநீரக உபாதைகள் தொடங்கியிருப்பதாக. அவளுக்காகப் பரிந்துரைக்கப் பட்ட மாத்திரைகளை தற்போதைய சூழ்நிலையில் பெற்றுக் கொள்ள முடியாது.

–அடக்கடவுளே–

மெர்சே…

அன்னையின் மரணமும் உனது கலவியும்

மெர்சே… மெர்சே…

தொடரும்….
2

வெளியே மழை தொடங்கி விட்டது. ஒரே இரைச்சல். மழை எனக்குப் பிடிப்பதே இல்லை. போர்வைக்குள் சுருண்டு படுத்துறங்க விருப்பமாயிருந்தது. அம்மா இப்போது பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான நீண்ட வரிசையில் நின்றிருப்பாள். அவள் இவ்வாறு எங்காகிலும் போய்விடுவது தான் எனக்கு நிம்மதியாய் இருக்கிறது. எப்போதும் தொணதொணத்துக் கொண்டேயிருக்கும் வாய் அவளுடையதாகத் தான் இருக்க முடியும்.



பெட்ஷீட்டில் சக்கு மெலிதாக மணத்தது. முன்பு போல் சவர்க்காரங்களோ, வோஷிங் பௌடர்களோ வரத்தில்லையென்பதால் முன்பு போல் கிழமைக்கொரு பெட்ஷீட் சுழற்சிமுறைக்கு அம்மா அனுமதிப்பதில்லை.



கட்டிலின் கதகதப்பை ஒருபோதும் பூரணமாக அனுபவிக்க முடிந்ததில்லை. குறுகி, முடங்கி எப்படிப் படுத்தாலும் முடிகிறதேயில்லை.

படுத்தாலும் முடிவதில்லை. அவளை இனிமேல் சந்திக்கக் கூடாது.

ரோட்டுக்களில் ஆமி குவிக்கப் பட்டிருப்பதால் நாங்கள் குச்சொழுங்கைகளைப் பயன்படுத்தும் படியாயிருந்தது. அப்படியிருந்தும் இன்று ஆமிக்காரனிடம் மாட்டுப்பட்டு விட்டோம். அவள் என்னைத் தனது அண்ணன் காரனெனக் கூறினாள். நான் பயத்திலும் அவமானத்திலும் அரைவாசியாகவே சிரித்து வைத்தேன். அவனிடமிருந்து மீண்டு சற்று தூரம் சென்ற பின் ஒரு மாதிரியாகச் சிரித்து கொண்டு கூறினாள் மழைக் கோட்டணிந்த சிப்பாயின் உடல் அழகாயிருந்ததாக.



அவள் தீண்டாமல் விட்டுச் சென்ற என்னுடலில் வீசியது வியர்வை நாற்றமென அசிங்கவுணர்வடைந்தேன். இனி நானவளைச் சந்திக்கப் போவதில்லை.



அவள் தந்த புத்தகம் அவளை விடச் சிக்கலானது. உறவின் போது குறிப்புக்களை எழுதும் அவளைப் போலவே அப்புத்தகம் புதிரானது. எரிச்சலூட்டக் கூடியது.



அவள் அப்புத்தகத்தை என்னிடம் தந்து விட்டுக் கேட்டாள் : ‘சுயபுணர்விற்கான வாதை நாய்க்குரைப்பில் அமிழ்ந்த இரவுகளில் ஏற்படின் என்ன செய்வாய்?’ அவளது கேள்விகள் பாறங்கற்களைப் போன்றிருப்பவைதான். இதுவரை காலமும் அவற்றைத் தூக்கி வீசிவிட்டு நகர முடிந்திருக்கிறது. இதைத் தூக்கவே முடியவில்லை.



உணமையில் நான் இதையெல்லாம் கூர்ந்து கவனித்ததில்லை.



சுய இன்பம் என்பது ஹெல்த், மருத்துவ மலர் என்கிற இந்திய மகசீன்களில் இருந்து நான் எடுத்த சொல்லு. முந்தியெல்லாம் பெடியன்களோட கதைத்தால் வேறு பல பேர்கள் வைத்திருந்தேன். நாகரீகம் கருதி இவளுடன் இந்த வார்த்தையைப் பாவித்தால் அது உனக்கு உண்மையிலேயே இன்பம் தருகிறதா எனக் கேள்வி கேட்கிறாள். நாய்க் குலைப்பை நான் கவனிப்பதே இல்லையோ? இதற்கான பதில் இப்புத்தகத்தில் உனக்குக் கிடைக்கலாம் என்று ஒரு வில்லிச் சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனாள்.



வீட்டிற்குக் கொண்டுவந்து முதல்வேலையாக அப்புத்தகத்தை புரட்டினான். அந்தக்கதை தாய்க்காரி செத்து அடுத்த நாளே ஆரோ ஒருத்தியுடன் படுக்கும் ஆளைப் பற்றியது. இந்த ஒன்றுதான் அப்புத்தகத்தை நான் முழுதாய் வாசிக்கக் காரணம்.



ஆனால் அந்த மாதிரியாய் எதுவும் தட்டுப்படவில்லை. பேருக்கும் புத்தகத்துக்கும் சம்பந்தம் என்ன எண்டு கூட எனக்கு இதுவரை தெரியாது. அந்நியன் படத்தை இதோட ஒப்பிட்டுப் பாக்கவும் முடியேல்லை. அந்நியன் (பிரெஞ்சு நாவல்) அல்பர் காம்யூ – தமிழில் வெ.ஸ்ரீராம் – வெளியீடு – க்ரியா. 92இல் அச்சடித்திருந்தார்கள். ஆனால், புத்தகம் புத்தம் புதுசாய் இருந்தது – இன்னமும்.



நான் சுய இன்பம் கண்டு எத்தனை மணித்தியாலங்களாகிறது. சரியாகத் தெரியவில்லை. இதெல்லாம் கணக்கு வைத்துக் கொள்கிற விடயமா என்ன, தொடக்கத்தில் எத்தனை நிமிஷம், எத்தினை துளி எண்டபடியெல்லாம் கணக்குப் பண்ணிக்கொண்டிருந்தேன். நாய்கள் தொடர்ச்சியாக குலைத்தபடியிருப்பதால் நான் இப்போது சுய இன்பம் செய்ய முடியும். பார்க்கலாம் – எப்படி இருக்கிறதென்று…


நாயின் குரைப்பொலி

என் சாரத்தை விலக்குகிறேன்

தெருவோரச் சிப்பாயின் கைகளில் நீண்டிருக்கும் துப்பாக்கி முனை

அவள் தீண்டாது சென்ற என் உடல்

நாயின் குரைப்பொலி

அம்புலன்ஸ்சின் சைரன் (எங்கோ எதோ நடந்திருக்கிறது.)

—அம்மா சென்றிருக்கும் சங்;கக் கடைக்குக் கிட்டவாகவும் ஒரு படைநிலை உள்ளது.

—அம்மா?

சங்கம் கிட்டத்தானே, ஏதாவது நடந்திருந்தால் நிச்சயம் சத்தம் கேட்டிருக்கும்.

எனக்குச் சிரிப்பாயிருக்கிறது. சிறுவனுடையதைப் போல் சுருங்கியிருக்கிறது உறுப்பு. உருவி உருவி, வசைச் சொற்களைச் சொல்லி சொல்லி உருக்கூட்ட வேண்டியிருக்கிறது அதை.



நாய்களின் குரைப்பொலி.

ஜீப் விரையும் சத்தம்.கையில் பிசுபிசுக்கும் வெண்திரவம் – அப்பாடா.



அந்தப் புத்தகம் எங்கே? நான் அதைப் படிக்க வேண்டும். அவன் பேரென்ன? சவத்தை – ஞாபகத்துக்கு வரமாட்டேனென்கிறது. ஆங்.. மெர்சே.. ஆமாம் அவன் பெயர் மெர்சே…

தொடரும்….
3
1 மற்றும் 2 இன் முடிபற்ற முடிவு
மெர்சே… மெர்சே…
மெர்சேவைப் புணர்வது வாதை நிரம்பிய வினை.
புணர்ச்சியில் மெர்சே நீயும் நானுமானான்.
நான் மேர்சேவாயிருந்தேன்.
நீ மேர்சேவாயிருந்தாய்.
நீயும் நானும் மேர்சேவாயிருந்தோம்.
தேயிலையின் செங்கருப்புச் சாயம் சுடுநீரினுள் பரவுவதே போன்ற வெம்மை மிக்க அசைவுகளுடன் எனக்குள் கிளர்ந்தியங்கும் மெர்சே.
மெர்சே யோனியுடனிருந்ததை நீங்கள் கவனித்தீர்களா?
மெர்சேவின் புதிர்மிகு அகச்சங்கேதங்கள் கரைந்த வெளியில் உலவும் கடவுள் அச்சமுறுகிறான்.
அகச்சங்கேதங்களின் சங்கீதம் ஒலிக்கையில் மெர்சேக்களின் குறி எழுந்து நெளியும்.
மெர்சேக்களின் முகங்கள் கரைந்து கிடக்கிற கிணற்றில் விழுபவனுக்கு…

மெர்சே மெர்சேக்களுடன் சேர்ந்து மெர்சேக்களைப் புணர்கையில்:
1.மெர்சேவின் தாயார் பிணமாக (அல்லது) உயிருடன் சமீபத்தில் எங்கேயோ இருந்தாள்.
2.நாய்கள் புணர்ச்சி வெறியில் (அல்லது) வெகுண்டு போய்க் குரைத்துக் கொண்டிருந்தன.
3.ஜீப் வண்டிகள் மெர்சேக்களை நோக்கி (அல்லது) நோக்காமல் விரைந்து சென்றன.
4.சேதம் விளைவித்து (அல்லது) சேதம் விளைவிக்காமல் வெடிபொருட்கள் வெடித்துக் கொண்டிருந்தன.
ஆனால் (அல்லது) மேலும்
–மெர்சேவின் குறி விறைப்பாய் தயாராய் இருந்தது.
–மெர்சேவின் யோனி ஈரலிப்பாய் தயாராய் இருந்தது
மேலும் (அல்லது) ஆனால்
மெர்சேவின் கண்களில் கண்ணீர் இருந்தது. பிறிது பலவும் இருந்தது.
பின்னூட்டமொன்றை இடுக
Posted in புனைவு
அவளின் இரவு விடிகிறது
Posted on நவம்பர் 10, 2008 | 1 மறுமொழி

அவன் தள்ளாடிக் கொண்டுவந்து படலையைத் திறந்த போதே இப்பிடி ஏதாவதுதான் நடக்கும் என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. அவனிடமிருந்து புளித்த கள்ளின் நாற்றம் சகிக்கமுடியாதளவுக்கு கிளம்பிக்கொண்டிருந்தது. அவள் இன்னமும் இராச் சாப்பாட்டை முடித்திருக்கவில்லை. இவனுக்கு சோற்றையும் ஊறுகாயையும் வைத்து விட்டு மிச்சம் வரும் கஞ்சியை உப்பிட்டுக் குடிக்க நினைத்திருந்தாள். பசி வயிற்றை விறாண்டியது. வெளியில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. அவனுக்குத் தேநீர் தேவைப்படாது என அவள் நன்கறிவாள். அவனது சாரமும் சேட்டும் தொப்பமாய் நனைந்து போய் நிலத்தில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. தரை ஈரமாகிக் கொண்டிருந்தது குறித்து அவள் அதிகமாய்க் கோபப்படவும் எரிச்சலடையவும் தலைப்பட்டாள். உதடுகளை அதிகம் திறக்காமல் வீடு நனைவதாக நெருமினாள். வெறித்துப் பார்க்கத் தொடங்கியிருந்தான் அவன். மீண்டும் அடங்கிய குரலில் கொடியில தோச்சுக் காயப் போட்ட சரம் இருப்பதைத் தெரிவித்தாள். அவன் நகர்ந்ததும் அவசர அவசரமாக சிந்திய நீரை விளக்குமாத்தால் தட்டி சுத்தப் படுத்த எத்தனித்தாள். காறை பூசியிருந்த தரையின் கீழிருக்கிற மண்ணுக்குள் நீர் ஊறிச் சென்று விட்டால் அகிழான் எடுத்து தரை முழுதும் பாழாய்ப் போகும். பின்பக்கப் பத்தியில் அவன் பாடும் ஒலி கேட்டது. ஆதங்கத்துடன் தனது கல்யாண வாழ்வின் ஆரம்ப நாட்களை மீளவுமொருமுறை நினைவுபடுத்திப் பார்த்துக் கொண்டாள். அவன் எப்போதும் போலவே நிர்வாணமாகவே உள் வந்தான். எப்போதும் நடப்பதைப் போலவே அது நடந்தது.

அவன் அவளிடமிருந்து விலகிப்படுத்தான். கள் நெடி விலகியது குறித்து நிம்மதியடைந்த மறுகணம் வெறுமை அவளைச் சூழ்ந்து அழுத்தத் தொடங்கியது. கைவிளக்கு நூர்ந்து இருள் பரவியிருப்பதை திடுக்கிடலுடன் உணர்ந்தாள். இருள் கரைந்து ஒழுகுவது போலிருந்தது மழையின் சப்தம். மின்னியது. இடி அடிக்கடி முழங்கிக்கொண்டிருந்தது. காளியாச்சி தாயே.. அவளுக்கு மிகவும் பயமாயிருந்தது. பயம் மழையைப் போல வலுத்துக் கொண்டிருந்தது. அவனை அணைத்து அவனது அகண்ட மார்புக்குள் பதுங்கிக் கொள்வது அவளுக்கு விருப்பமாயிருந்தது. கள் நெடியை, வெற்றிலைக் காவி படிந்த பற்களை, அவள் அணைவதை உணர்ந்ததும் அவன் சொல்லக் கூடிய அவமானப்படுத்தத் தக்க தூஷண வார்த்தைகளை யோசித்து திரும்பிப் படுத்தாள். நித்திரை வர மறுத்தது. தலை மாட்டில் இருட்டுக்குள் துழாவி நெருப்புப் பெட்டியை எடுத்து கைவிளக்கை ஏற்றினாள்.

வரிச்சு மட்டைகளுக்குள்ளால் நுழையும் காற்று சுடரை நூர்க்கப் பார்த்தது. அவள் சட்டை ஊசியால் அதன் திரியை தூண்டி விட்டாள். அதன் ஒளியில்  அவளுடைய உடம்பின் நிழல் பூதாகாரமாய் ஓலைத்தட்டியில் விழுந்தது. அந்நிழல் மிகவும் கவர்ச்சியானதாக இருந்தது. இவன் அடிக்கடி கூட்டிக் கொண்டு வரும் ஆமிக்காரன் காட்டும் படங்களில் வரும் பெண்களின் உருவங்களை விடவும் அதீத அழகுடன் அக்கரிய நிழல் இருந்ததை உடலெங்கும் சில்லிடும் உணர்வாக அறிந்தாள். அவன் நித்திரையிலிருக்கிறான் என்பதை குறட்டையொலி உறுதிப்படுத்தியது. விளக்கின் ஒளி மங்கத் தொடங்கியது.

அவள் மெதுவாக எழுந்து தன் நிழலை ஆராய்ந்தாள். அவளுள் இனம்புரியாத குறுகுறுப்பு ஓடிப்பரவியது. அவனுக்கு, வீட்டில் எது எது எங்கிருக்கும் என்பதில் எதுவித அக்கறைகளும் கிடையாது. ஆகவே ‘அதை’ ஒளித்து வைப்பதில் அவள் அதிக சிரமங்களை எதிர் நோக்கும்படியாகவிருக்கவில்லை.  ஓசையேதும் எழாத வகையில் சிரத்தையாக நகர்ந்து ‘அதை’ எடுத்தாள். ஆணுறுப்பு வடிவில் அமைந்திருக்கும் ரப்பர் உபகரணமான அதை என்சியோ(ngo) சின்ராசு தொடுத்து விட்ட சீனாக்காரன் அவளுக்குத் தந்திருந்தான். அவ் உபகரணத்தை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பதை சீனாக்காரன் சொல்லித் தந்த விதத்தை நினைத்தால் அவளுக்கு இப்போதும் சிரிப்பு வருகிறது. அவன் வரும்போதெல்லாம், அதைப் பாவித்துக் காட்டும் படி சொல்லி புகைப்படங்கள் எடுக்கத் தவறுவதில்லை அவன். முகம் மட்டும் வரக்கூடாது என்று சொல்லித் தான் பணம் வாங்கி அதற்கு சம்மதித்திருந்தாள்.

சுவரில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து, கால்களை அகட்டி வைத்துக்கொண்டாள். குறுகுறுப்பும் சிலிர்ப்பும் அவள் உடலெங்கும் ஓடி மறைய தன் மார்பகங்களை ஆவேசத்துடன் கசக்கத் தொடங்கினாள். பெருமூச்சா கேவலா எனப் பிரித்தறிய முடியாத பயங்கரமான சப்தத்தை எழுப்பினாள். தனது சொரசொரத்த வரண்ட கருத்து மெலிந்த கால்களை வருடத் தொடங்குகையில் தனது தோலின் தன்மை குறித்த கவலை அவளை மிகவும் அழுத்தியது. கண்களை மூடியபடி பெண்ணுறுப்பின் ரோமங்களை வருடிவிடத் தொடங்கினாள்.

முனகலாக ஒலியெழுப்ப நா உன்னியது. அவனை நினைக்க அவளுக்குப் பயமாயிருந்தது. அவனிடமிருந்து கிளம்பிக் கொண்ண்டிருந்த அசிங்கமான, சீரற்ற குறட்டை ஒலி மூலம் அவள் நித்திரையிலிருந்து உசும்பவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுதான் தொடர முடிந்தது.

நன்றாக உமிழ்ந்து எச்சில் உண்டாக்கி அவ்வுhருளை மீது பூசினாள். பின் மெதுவாக தன் யோனிக்குள் அதைச் செலுத்தி முன்னும் பின்னும் இயக்கத் தொடங்கினாள். ஒரு கையால் அதை இயக்கியவாறு மறு கையால் தன் மார்புகளை கசக்கி விட்டாள். இயக்கும் வேகத்தை அதிகரித்த போது அலறுவதற்கான பெருவிருப்பு தோன்றிற்று. கீழ்ச்சொண்டை இறுகக் கடித்து அந்த ஆவலை இறுகப் புதைத்தாள். தனது கால்கள் இரண்டு புழுக்களைப் போல நெளிந்து கொண்டிருப்பதாய் அவளுக்குத் தோன்றியது. தன் விரல்கள் ஈரமாவதை ஏமாற்றத்துடன் உணர்ந்து கீழே பார்த்தாள். அது அவனது வாயிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் சாத்துவாய் வீணீரைப் போலவிருந்தது.

மீண்டும் அவள் தன்வயமான போது கை விளக்கு மீளவும் நூர்ந்து ஊடுதிரி பத்திக் கொண்டிருந்தது. மண்ணெண்ணைப் புகை நாற்றம் மூக்கை நிறைத்தது. அவன் குறட்டையொலி இருளில் பேரச்சம் தருவதாயிருந்தது. மூத்திரம் பெய்ய வேண்டும் போலிருந்தது. பனை மட்டை வரிச்சுகளினூடாக மின்னல் வெளிச்சம் கண்ணைப் பறித்தது. பயமாகவும் உடம்பு சற்று மிதமாய்க் குளிருவதாகவும் உணர்ந்தாள்.  தட்டிக் கப்பில் வழிந்த மழை ஒழுக்கு நீர் மண் குந்தில் வழிந்து உருண்டு குந்தில் சாய்ந்திருந்த அவளது முதுகில் பிரண்டது.

அருகில் வைத்திருந்த நெருப்புப் பெட்டியைத் தடவி எடுத்து பற்ற வைக்க முயற்சி செய்தாள். சிவப்பு மஞ்சள் சூர்யா நெருப்புப் பெட்டி. அதை மட்டுமே அவள் நம்பியிருந்தாள். யானை மார்க் தீப்பெட்டிகளோ வேறு எதுவுமோ இப்போது வருவதில்லை. நெருப்புப் பெட்டியின் வலு குளிரில் குறைந்து போயிருந்தது. போதாக்குறைக்கு தட்டிப்பற்றவைக்க முயன்ற அவளது விரல்களையும் சீறிப் பதம் பார்த்தது. அவனுடைய பாய் அருகே தவழ்ந்து சென்று சுருட்டுக் கட்டுக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த நெருப்புப் பெட்டியை எடுத்தே விளக்குக் கொளுத்த முடிந்தது. திரியைத் தூண்டி எரியவிட்டாள். அதன் சுடர் மீது அவளுக்கு நம்பிக்கையீனம் இருந்தது. ஏனெனில் அந்த விளக்கினுள் மண்ணெண்ணையே இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தாள். ஆனால் இந்த விளக்கும் நூர்ந்தால் இரவு முழுதும் இருட்டுக்குள் தான். அதனால் மட்டுமே அதை பலவிதமாகவும் எரியப் பண்ண முயற்சித்தாள். லீலாவதி, இராணி எல்லாம் கைவிளக்காலேயே செத்துப் போனதை அவள் அறிந்திருந்தாள். அது குறித்த பயமும் அவளிடம் உண்டு.

சாரத்தை எடுத்துக் குறுக்குக்கு கட்டிக்கொண்டு படலை நோக்கி நடந்தாள். தொடையில் சாரம் ஈரமாக இருந்தது. சாரத்தை அவள் கழட்டி வைத்த இடம் மழைக்கு ஒழுக்காக இருந்திருக்க வேண்டும். அதுதான் சரம் ஈரலிப்பாய் இருக்கிறது. நாளைக்கு இவன் குடிக்கப் போக முந்தி கூரைக்கு வைக்கோல் போடுவிக்க வேண்டும் என நினைத்தாள். எப்படியும் மாரி தொடங்க முன்னம் புதுசா மேயத்தான் வேணும். அவள் மனம் செலவைக் கணக்குப் பண்ணியது.

கைவிளக்கைத் தூக்கிக் கொண்டு போய் சாமிப்படத்தருகே வைக்கப் பட்டிருந்த தேங்காய் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டுக்குள் இருந்த அச்சமூட்டும் இருளைச் சற்றுக் குறைக்க முடிந்தது. இருட்டை விடவும் வெளிச்சம் பயம் தருவதாயிருந்தது. நிழல்கள் பேய் மாதிரி வீட்டுக்குள்… அவனது முகத்தின் பாதிப்பக்கத்தில் ஒளிபடிந்து மறுபக்கத்தில் இருளடர்ந்து விகாரமாகி.. ‘காளியாச்சி தாயே’ அவள் வாய் முணுமுணுத்தது. படலையோரமாக வந்து நின்று தலைமயிரை அள்ளி முடிந்தாள். வெளியில் மழை தூறிக் கொண்டுதானிருந்தது.

தாழ்வாரத்திலிருந்து வடிநீர் சொட்டிவிழும் சத்தம் கேட்டது. படலையைத் திறந்து வெளி வந்தாள்.

தாழ்வாரத்தின் கீழாக நடந்து போய் பனம்பாத்திக்குச் சற்றுத்தள்ளி குந்தினாள். சிறுநீர் பிரிந்தது. அவளுக்குச் சற்று ஆசுவாசமாக இருந்தது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தாள். மேகம் மூட்டம் கலைந்திருந்ததால் நிலவின் ஒளி மங்கலாகத் தெரிந்தது. ஆனாலும் இது தற்காலிகம் தான் என்பதை மேற்கில் கருமேகம் இருள் கட்டியிருப்பதன் மூலம் உணர்ந்தாள்.

தாழ்வாரத்தின் கீழாக அவள் நடந்து செல்கையில் சுவரில் ஏறத்தொடங்கியிருக்கும் அட்டைகளையும் நத்தைகளையும் காண நேர்ந்தது. அவளுக்கு அருவருப்பாயிருந்தது.

உள்ளே கொழுத்தியிருந்த எண்ணெய் விளக்கின் வெளிச்சம் வரிச்சு மட்டையினூடு தெரிந்தது. வாசலடியில் வாளிக்குள் தண்ணி வைத்திருப்பது அவள் வழக்கமாயிருந்தது. முதலி வீட்டுப் பழக்கம்; வாசலில் வாளி வைக்கும் பழக்கம் அவளிடம் வந்து சேர்ந்த கதை மிக வினோதமானது. முதலியின் மனிசிக்காரி வளவு துப்பரவாக்க வரச்சொல்லும் நாட்களில் அவளுக்காகவும் அவள்  யாழ்பாணத்துக்கு மகனிட்டப் போற நாட்களில் முதலிக்குமாக அவள் அங்கு செல்வது வழக்கம். முதலி வாசலில் மஞ்சள் நீர் கரைத்து வைத்திருப்பான். அதை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்ட பின்னரே அவனது குழாய்க்கிணற்றுத் தண்ணீரில் அவளைக் குளிக்க அனுமதிப்பான். இவன் குடித்துக் கூத்தடித்து வரும் போதெல்லாம் வாளித்தண்ணீரில் கால்கை கழுவி வரும்படிக்கு வற்புறுத்துவது இதன் பின் வழக்கமாய்ப் போயிற்று. வாளித்தண்ணீர் சில்லென்றிருந்தது. நடுங்கிய போதும் அவள் தன்னைக் கழுவியெடுத்துக் கொண்டாள். சாரத்தை வெளிக்கொடியில் போட்டாள். தூவானமடித்து நனைந்திருக்கும் சாக்கில் கால்களைத் துடைத்துவிட்டு உள்ளே வந்த போது கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. கைகளை தேங்காய் எண்ணெய் விளக்கில் காட்டு சூடுபடுத்தி முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டாள். நல்ல சாயம் போட்ட பிளேன்ரீ சூடாய்க் குடிக்க வேண்டும் போல இருந்தது. அதேசமயம் ஈரவிறகுடன் மல்லுக் கட்ட அவளுக்கு பஞ்சியாக இருந்தது. அடுப்பு மூட்ட மண்ணெண்ணை இல்லாதது வேறு நினைவுக்கு வர அந்த யோசனையைக் கைவிட்டாள். தேங்காயெண்ணை விளக்கை எடுத்து தலை மாட்டில் வைத்தாள். நன்றாக நீட்டிப் படுத்து உறங்க வேண்டும் என்ற நினைப்பில் படுத்த போது முதுகுத்தண்டில் பாயையும் மீறி மணலின் மீதிடப்பட்ட சீமேந்துக் காறையின் குளிர் சுட்டது. சாணகத்தால மெழுகின குசினிக்குள்ள தான் மாரிக்குளிருக்கு படுக்க வேணும் என நினைத்தாள். அடுப்புச் சாம்பலின் கதகதப்பும் சாணத்தரை காப்பாத்தி வைத்திருக்கிற நிலச்சூடும் ஓரளவு பரவாயில்லாமலிருக்கும். சாரத்துக்குள் தன்னைச் சுருட்டி கல்களை உள்ளே இழுத்து நத்தையைப் போல குறுகிக் கொண்டாள். நெருப்புப்ப் பெட்டி தலை மாட்டில் இருக்கிறதை உறுதி செய்து கொண்டு விளக்கை ஊதி நூர்த்த மறுகணமே கண்களை மூடித் தூங்க முயற்சி செய்தாள். இருளைக் காண்பதற்கு அவளுக்குப் பயமாயிருந்தது. கூரையில் சிலுநீர் கொட்டும் சத்தமும் பனையோலைகள் காற்றில் உரசும் சத்தமும் அச்சமூட்டுவதாய் இருந்தது. வெளவால் ஒன்று கிறீச்சிட்டது. அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள். மயிரடர்ந்த மார்பு ஒன்றினுள் பதுங்கிக் கொள்ள ஆவல் விழுந்தது. குறட்டை ஒலி அவளுக்கு எரிச்சலூட்டியது.

கோப்பிரட்டிவ் மணியோசை ஒரு மணியென அறிவித்தது. பறை நாய்களின் துயரமிக்க ஊளையோசை கேட்டது. ஆரோவொரு சீவன் கெதியில போப்போது என சொல்லிக் கொண்டாள். அது தானாகவும் கூட இருக்கலாம். தொழிலை நிறுத்திக் கொள்ளும்படி அவளுக்கு வழங்கப் பட்ட காலக்கெடு முடிவதற்கு  இன்னும் சொற்ப காலமே பாக்கியிருந்தது.

சரசக்காவிடம் அடகுவைத்த தோட்டைப் பற்றி யோசித்தாள். தையல் மெசினுக்கு கடிதம் குடுத்தது, கோழிப்பண்னை வைக்க லோன் போட்டது எல்லாம் யோசித்துக் கொண்டேயிருந்தாள். 96இல் அவனது தோட்டக்காணியெல்லாம் பறிபோனதற்குப் பிறகு இப்படியெல்லாம் அவள் யோசித்துக் கொண்டேயிருக்கிறாள். அவனுக்கென ஒரு லாண்ட் மாஸ்ரரை வாங்குவதற்கு லோன் போட்டு அலைந்ததற்கு மேலாக அவளுடன் படுத்தெழும்பியவர்கள் எத்தனை பேர்? பின்னுக்குக் கரைச்சல் தரப்போகும் தனது உறுப்பைத் தடவி நடுங்கினாள். கோப்பிரட்டிவ் மணியோசை மூன்றுதரம் கேட்ட போது கண்களை இறுக மூடித்தூங்க முயற்சி பண்ணினாள்.

விடிய ஆறுமணிக்கு முன்னம் நாகரப்பு கடைக்கு நூறு இடியப்பம் குடுக்க வேணும் என்பது ஞாபகம் வந்தது. விடியவும் வானம் இப்பிடியே இருந்தாத்தான் எப்பனெண்டாலும் குசினியில் எதுவாவது செய்யலாம். என்;ன இருந்தாலும் அடி வயிறு நோக நோக அடுப்பு ஊதி ஈரவிறகுடன் போராடுவதிலிருந்து அவள் தப்பிக்க முடியாது. குஞ்சம்மா இருக்கும் வரை சம்பலரைக்க, இடியப்பம் புழிய எண்டு உதவியாய் இருந்தாள். அவள் இருந்த போது வருகிறவங்கள் எல்லாம் அவளையே கேட்டாங்கள். ஒருமுறை மூண்டு ஆமிக்காரங்கள் கட்டாயப் படுத்திய போதுதான் கனக்க காசு என்பதற்காய் இவள் ஒத்துக் கொண்டாள். வெளியில் போய் விட்டு வந்து பார்த்தால் உறுப்பில் போத்தல் செருகப்பட்டு வாயில் துணி அடையப் பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் குஞ்சம்மா செத்துக் கிடப்பதைக் காண நேர்ந்தது. பாவாடை முழுக்க இரத்தம் நிரம்பி வழிந்து கண்ணீரும் எச்சிலுமாய் அவள் முழித்துக் கொண்டு கிடந்தது இப்பவும் கண்னுக்குள் நிற்க உடம்பு நடுங்கியது. சாரத்தை கைகளில் இழுத்து பந்து போலாக்கி வாய்க்குள் அடைந்து அழத்தொடங்கினாள். இவளும் கூடத் தொடையிடுக்கில் குருதி பெருகியோட ஆஸ்பத்திரி வரிசையில் துணியடைந்து நிற்க வேண்டியிருக்கிறது. டாக்குத்தரம்மா ஒருதரம் இவனைக் கூப்பிட்டு பேசியும் விட்டாள். இனிமேல் பொலீசைக் கூப்பிட வேண்டியிருக்கும் எனவும் காட்டமாக சொல்லிவிட்டாள். இவன் தலையைக் குனிந்து கேட்டுவிட்டு வெளியில் வந்து மிகவும் அசிங்கமாகக் கேட்டான்.

சுகமிலாமலுக்கு வருகிற நாட்களில் இந்த வேதனை இன்னமும் அதிகமாயிருக்கிறது.

இந்த நோவோடதான் நாளைக்கு பள்ளிக்கூட வளவு துப்பரவாக்க வேண்டியிருக்கிறது, இரத்தினசிங்கம் விதானை வீட்டு பனம்பாத்தி கிண்ட வேணும். மண்வெட்டியை ஓங்குகிற நேரமெல்லாம் அடிவயிற்றில் உயிர் போகிற மாதிரி வலிக்கிறது. பிள்ளைகரைப்பதற்கு தனக்குக் கிடைக்கிற தண்டனையாய் இதை சமன்படுத்தி ஆறுதலடைய முயற்சித்தாள்.

தட்டிக்கும் கூரைக்கும் இடையிலாக இருந்த நீக்கல் மேலும் விரிசல் கண்டிருந்தது. அந்த சிலாகையும் கறையான் அரித்து உக்கிப் போய்விட்டது.  அந்த நீக்கலூடாக வரக்கூடிய புலுமச் சிலந்தி, கொடுக்கன், கருந்தேள் பற்றிய பயம் அவளைப் பிடித்தாட்டியது. கருந்தேள் கடித்து, மாட்டுவண்டில் பூட்டிகொண்டு பரியாரி வீடு போகிற வழியில் செத்துப் போன தாயின் நினைவு வந்தது அவளுக்கு.

‘அறுப்பில போவாங்கள், கோதாரி விழுவாங்கள்’ அவள் மீளவும் சொல்லிக் கொண்டாள். அடிக்கடி அவள் சொல்லிக் கொள்கிற இந்த வார்த்தைக்கும் புலுமச்சிலந்திகளுக்கும் என்ன சம்பந்தமிருக்கக் கூடும்?

அவள் தனது கைகளை மடித்து அதில் தலை வைத்து நித்திரை கொள்ள முயற்சி செய்தாள். ‘காளியாச்சி… என்ர தாயே’ ஏக்கத்துடன் அரற்றினாள். கண்களை இறுக மூடிப் புரண்டாள். குப்புறப் படுத்துத் துணிமூட்டையைக் கட்டிக் கொண்டு எல்லவற்றையும் மறக்க முயற்சித்தாள்.

கோப்பிரட்டிவ் மணியோசை நான்கு மணி என்பதைச் சொன்னது. இடியப்பம் அவிக்க வேண்டியிருந்தது அவளுக்கு அலுப்பாக இருந்தது. அம்மியில் குழவியை இழுத்து இழுத்துச் சம்பலரைக்க முன்பு போல் முடிவதில்லை. நெஞ்சு நோக ஆரம்பித்து விடுகிறது. இப்பவே தொடங்கினாத்தான் ஆறுமணிக்கு முடியும். விளக்கைக் கொழுத்துவதற்காக நெருப்புப் பெட்டியைத் தெடினாள். அது எப்போதும் போலவே கைக்கு அகப்பட மறுத்தது.

மழை தூறத் தொடங்கி வலுத்துக் கொண்டே வருவதை கவலையுடன் கேட்டவாறு எழுந்து உட்கார்ந்தாள். இருட்டு அவளைப் போர்த்தியிருந்தது. விடிவதற்கு இன்னும் ஒருமணி நேரம் தான் இருக்கிறது.







1 பின்னூட்டம்
Posted in புனைவு
மழைக்கோட்டணிந்த கோடைகாலத் தார்ச்சாலை
Posted on நவம்பர் 10, 2008 | பின்னூட்டமொன்றை இடுக
‘வேண்டாம்.. முன்பாகவே எடுத்துவிடலாம்’ மிகவும் இரகசியமான தொனியில், ஒருவித பதட்டத்துடன் கூறியபோது அவன் கண்கள் வழக்கம் போலவே ஜன்னலுக்கு வெளியில் தானிருந்தன. என் கண்களை சந்திப்பதிலிருந்து அவன் தன்னை தொடக்கத்திலிருந்தே தப்புவித்து வந்திருக்கிறான். சிறிய அவனது பூனைக் கண்கள் அவ்வாறு அலைவது மிகவும் வேடிக்கையாக இருந்தது.

‘அவனது நிறம் கறுப்பு’ என நினைத்துக் கொள்வதாய் நினைத்துக்கொண்டேன் – மீளவும் ஒரு தடவை.

ஜன்னலின் திரைச்சீலை அவனைப் போல அசைந்தது.

மழை அவனைப் போல தூறிப் பெய்தது.

அவனது பிரசன்னம் எனது அறையை கதகதப்பூட்டியிருப்பதாய் நினைத்துக்கொள்வதை விட வேறு வழிகளேதுமில்லை. உண்மையில், அவன் அணைப்பில் மிகவும் குளிர்வதாகத் தான் உணர்ந்தேன். அவன் தயக்கத்துடனிருந்தான் – மிகவும் தயக்கத்துடன்.. படுக்கை விரிப்பில் கறைகள் விழுந்து விடக் கூடாதென்பதில் அதிகம் கவனமாயிருந்தான்.

மார்பு ரோமங்களை அளைந்தபடி உறங்க முனைந்த வேளை, காத்துக் கொண்டிருப்பவனின் அவசரமிக்க குரலில் வெளியில் செல்லவேண்டியிருப்பதாய் மெதுவாக முணுமுணுத்தான். மழையின் ஈரம் அவன் குரலில் பிரண்டிருந்தது.

பாவித்த கைக்குட்டையை அவன் தன்னுடன் எடுத்துச் செல்வான் என்பதை நான் நன்கறிவேன். அவன் கொண்டு செல்வான் – எதையும் விட மிகக் கவனமாக.. எனது குப்பைக் கூடைக்குள் அவனது பொருட்களை ஒரு போதும் விட்டுச்சென்றதில்லை.

மழைக்கோட்டணிந்த அவனது கோட்டுருவம் மழைப்புகையூடு நடந்து சென்றது. அவன் குடிக்காமல் விட்டுச்சென்று ஆறிப்போன தேநீரின் அடர் செங்கருமையின் நிறத்தில் தான் மழைக்கோட்டும் இருந்தது.

||

மஞ்சள் வெய்யில் படிந்த நகரம் அதன் முரணான ஒலிகள்உடன் எங்களைச் சூழவும் நகர்ந்து கொண்டிருந்தது. எப்போதும் போலவே வேட்டொலிகள் கேட்டவாறிருந்தன.

‘காற்றில் இடைவெளிகளை உன்னால் அவதானிக்க முடிகிறதா? ‘ தெருவில் சுடப்பட்டு வீழ்ந்து கிடப்பவனைக் கடக்கும் போது இவ்வாறு கேட்டான். நான் அவதானித்த அளவில் காற்று ஒரு சுவரைப் போலவும் இருந்தது. ஒரு உடல் உயிரற்று சரிகையில் அது புழங்கிக் கொண்டிருந்த வெளிகளில் எல்லாம் ஒரு வினோத வெற்றிடம் தோன்றுவதாய் சொல்லியபடி வீழ்ந்து கிடக்கிற குருதி பெருகியோடும் உடல்களைக் கடந்து வந்தோம்.

மதிவண்ணனின் வீடு கண்ணீரிலும் குரோதத்திலும் செய்த கிடுக்கியோடு தொலைவில் காத்திருக்கிறதைப் போல எமக்கெனக் காத்திருக்கும் அறையுள் நுழைந்தோம். வியர்வை கசகசக்கும் மேல்சட்டையைக் களைந்து மூன்றுவருடங்களாய் அவன் தீட்டிக் கொண்டிருக்கும் The Color Curtain ஓவியத்தில் ஆழ்ந்து போனான். இரண்டொரு வர்ணக் கோடுகளைத் தவிர வேறேதும் அதில் இல்லை. அழகான பூஞ்செடிகளுக்கு நீரூற்றுகையில் மாத்திரம் வர்ணங்களுக்கான சாத்தியப்பாடுகள் மனதில் தோன்றிப் பின்னர் கருகி விடுவதாய் சொல்லியிருக்கிறான். நான் வர்ணங்களில் தளும்பிக் கொண்டிருப்பதாகவும் (அப்படித்தானா?) அதன் காரணமாய் செல்லமாக பொறாமைப் படுவதாகவும் அந்தரங்கமான தருணங்களில் இரகசியமாய் கிசுகிசுத்திருக்கிறான். ஒருமுறை, டாலியின் Accommodations Of Desire ஐப் பார்த்தபடி சொன்னான், ‘எனது கனவுகளுக்கு வர்ணங்களில்லை, I see everything in black and white..’ சலிப்புடனும் துயரத்துடனும் இருந்த அவன் குரல் வர்ணங்களற்றதாய்த் தான் தெரிந்தது.

அவனுடைய கனவுகளை இரவில் படிக்கும்படியாகத்தான் அதிகமும் நேர்கிறது. இரவு மட்டுமே ஒளியற்றிருப்பதாய் இதற்கு அர்த்தங்களில்லை. ஆனால், ஏனோ தெரியாது, இரவில் மாத்திரம் தான் அவனது கனவுகளைப் படிக்க முடியுமாய் இருக்கிறது. அவற்றின் மிக இரகசியமான வேட்கை மிகு கிசுகிசுப்புகளை யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் இரவுகளைத் தேர்ந்தெடுக்கிறோமென்று நினைக்கிறேன். கனவுகளை நான் அவனுடலில் உணர்வேன், சமிக்ஞைகளாக, புரியாத லிபிகளில் எழுதி வைக்கப் பட்ட வரி வடிவங்களாக..

‘கனவுகளை படிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை’ அவன் என்னை லேசாக முத்தமிட்டான், கண்கள் இறுக மூடியபடி. கனவு இருளத் தொடங்கியது. அவன் உடல் எப்போதும் போல அதிரத் தொடங்கியது. கனவினைப் போல அவனுடல் அசைந்தது. புரிய மறுக்கும் கனவின் லிபிகளை அவன் கண்களுக்குள்ளாக புரிந்து கொள்ள எத்தனித்தேன். அவன் கண்களை மூடியபடி இயங்கவாரம்பித்தான் – நோய்மையுற்ற இயங்குதலையும் அசைவுகளையும் தவிர வேறெதுவுமில்லை. இக்கணங்களில் ஆழமான மூச்சைதவிர அவனிடமிருந்து சொற்கள் ஏதுமில்லை.

அவனிடமிருந்து ஜன்னலுக்கு நகர்ந்தேன். மாந்துளிர்கள் இளம்பச்சை நிறத்திலிருந்தன. அடரிளம் பசுமையில் நான் குழைந்து போனேன் – அவனது அன்பையும் நேசத்தையும் போல. அவனையும் அவனது வார்த்தைகளையும் போல சிலுநீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் மீளவும் அவன் மீது துவண்டு சரிந்தேன். மறுபடியும் மறுபடியும் ‘ஒரு துளி அன்பிற்காய் எல்லா இடங்களிலும் நான் விழுந்து கிடக்கிறேன்’ அரற்றலாய் வார்த்தைகள் உருண்டன.. அழ விரும்புவானோ? அவன் கண்ணீரைத் தின்னத் தொடங்கினேன். துயரடர்ந்த கவிதையைத் தின்பது போலிருந்தது.

||

எம்மிருவரது உடல்கள் பேசிக்கொள்வதை கேட்க அவன் விரும்பியதில்லை. ஆனால், எந்த ஒன்றையும் தவிர்க்க முடியாதிருப்பதைப் போலவே இதையும் தவிர்க்க முடிவது இல்லை. கதவுகளற்ற அறைக்குள் சிக்கிக் கொண்டதைப் போல உணர நேர்கிற அந்தத் தருணங்களை தவிர்ப்பதற்கு என்றே இரண்டு உடல்களையும் வேறு வேறு திசைகளில் வைத்து விடுவதுண்டு. எது எப்படியிருந்தாலும், குறித்தவொரு கணம் – மிகத் தற்செயலானதே எனும் பாவனையில் அமையும் ஒரு கணம் – உடல்களைப் பேச வைத்து விடுகிறது.

எதுவும் தணிக்கை செய்யப் படாத நிமிசமொன்று என்றைக்கு சாத்தியமாகிறதோ அன்றைக்குத் தான் அவனுடைய புதிர்மிகு கனவின் சங்கேதக் குறிப்புகளை இனங்கண்டு புரிதல் சாத்தியம்.

||

கனவுகளை புரிந்து தீர்த்து விடுவதென கதிரைகளில் தேநீர்க் கோப்பைகளுடன் அமர்ந்தோம். அவன் மனதைப் போல ஆவி பறக்கும் தேநீரை உறுஞ்சியபடி கனவுகளைக் கேட்கத் தொடங்கினேன்.

அதிகாலையின் பனித்துளியீரம் சில்லிட வைக்கும் காவிளாய்கள் முளைத்த பாதையில் என்னை நடத்திச் சென்றான். பாதியெங்கும் கனவுகள் மிதி பட்டன, வழவழப்பாக. சொரசொரப்பாக இன்னும் என்னென்ன தன்மைகள் உண்டோ அந்த எல்லா தன்மைகளுடனும் கனவுகள் காலடியில் கிடந்தன. ‘ஆளடங்கிய கிராமத்தின் கனவுகள் இவை’யென்றான். ‘இவற்றில் எது உன்னுடையது?’ என்றேன். ‘உன்னைப் போலவே எனக்கும் அது தான் தெரியாமலிருக்கிறது. சில வேளை இவை எல்லாமும் என் கனவுகளாயிருக்கலாம்’ சொல்லியபடி என்னை விட்டு முன் சென்றான்.

கனவைப் போன்ற குளிர் உள்ளங்காலை சில்லிட வைக்கவும் அவன் கைகளைப் பற்றி இறுக்கி அருகாமையில் இன்னும் நெருங்கினேன். பனியை விடவும் அதிக சில்லிடலுடன் குளிராகவும் ஈரமாகவும் அவன் உடல் இருந்நது. வெறிச்சோடிய கிராமத்தின் தெரு நீண்டு கிடக்க என் காலடியெங்கும் எண்ணற்ற மனிதர்களின் சிதம்பிய கனவுகள். குருதி சலசலத்து ஓடியது. அவன் கனவுகளில் சதா ஓடிக் கொண்டிருக்கும் ஆறைப் போல அது சப்தமிட்டோடியது. கதறல்களும் கத்தல்களுமாய் அதில் மிதந்து வந்த உடலுறுப்புகளில் இவன் ஓவியங்களின் சாயல் இருந்தது. குவேர்னிகாவின் துண்டங்களை அள்ளியெடுத்து வீசி விட்டு அந்த இடத்தில் உட்கார்ந்து அரற்ற துவங்கினான். அவன் கன்னங்களை ஆறுதலாக முத்தமிட்டேன். நெல்லவியும் மணம் அவன் உதடுகளில் இருந்து கிளம்பிற்று. சீயாக்காய் மணம் கமழும் வார்த்தைகளை கொட்டினான். நான் மௌனமாய் அழத் தொடங்கினேன். எல்லாவற்றுக்கும் அடியில் அவன் தாயின் எலும்புக் கூடிருப்பதாய்க் கூறி அரற்றினான். வீணி வடிய, கண்ணீர் மிக அசிங்கமாக அவவனது ஓவியங்களின் தன்மையுடன் வழியத் தொடங்கியது. அவனுடைய பீதிக்கனவொன்றுக்குள் நான் இருக்கிறேனா…? தொலைந்து போன அக்கிராமத்தின் சந்தோஷமிக்க மாலைப் பொழுதுகளை, புழுதி கிளம்பும் தெருக்களை அவன் குழறல்களில் இருந்து நான் கேட்டுக் கொண்டிருந்தேன். காவிளாய்களுக்குள் சில்லிட வைப்பது பனி மட்டுமில்லையென்பது மனதின் எங்கோவொரு மூலையின் பளீரிட அவனைபற்றிய புதிர்கள் அவிழத் தொடங்குவதாய் உணர்ந்தேன். அவனது எரிந்து போன வீட்டின் எச்சங்களுக்குள் கனவுகள் ஈரலிப்புடன் வழவழத்தன. விளையாட்டுப் பொம்மைகளும் பாடப் புத்தகங்களும் குருதியில் மிதந்து வர அவன் சிரிக்கத் தொடங்கினான். நான் அவன் நெஞ்சில் முகம் புதைத்து விம்மினேன் ‘போய்விடலாம்’

தன் கனவின் வர்ணங்கள் காவிளாய்களுக்கடியிலிருக்கும் சாம்பல் புழுதிக்குள் இருப்பதாய்க் கூறினான். இம்முறை அவன் முகத்தில் விரோதமிருந்தது – அவன் ஓவியங்களில் இருப்பதைப் போல.

அவனை இழுத்தபடி இருட்டான கிராமத்தின் பற்றைகள் மண்டிய வெளிகளில் ஓடத் துவங்கினேன். கனவுகள் அவனைத் தின்னத் தொடங்கியிருப்பதாய் உணர்ந்த கணத்தில் என் கால்கள் வேகமெடுத்த்ன. ஒரு குழந்தையைப் போல கனக்கத் தொடங்கினான். பிணங்களின் மீதும் உதவிக்கு அழைத்துக் கதறும் கிழவிகளின் குரல்களின் மீதும் ஏறி ஓடினேன். தசைப்பிண்டங்களை உதறி ஓலங்களை ஒப்பாரிகளை உதறி அவனை இழுத்தபடி – அவன் கனவுகளை உதறியபடி ஓடினேன். எனது வார்த்தைகளில் குருதியும் ஓலமும் படியத் தொடங்கியிருப்பதை தாமதமாய் உணர்ந்து எலும்புகள் துருத்தும் பாழ்வெளியில் அப்படியே நின்றேன்.

ஒரு சிறிய ஒளிக்கீற்றுக்காய் மண்டியிட்டேன். கைவிடப்பட்ட கிராமமென அவன் உடல் இளைத்துக் கிடந்தது. உடலெங்கும் தசைத் துணுக்குகள் ஒட்டிக் கிடக்க அவன் மீது விழுந்து என் நினைவுகளனைத்தையும் அழுது கழுவினேன். கிராமம் இருளில் ஊளையிடத் தொடங்கியது. அவன் மார்பில் அப்படியே உறங்கிப் போனேன். கனவில் அவன் சிறுவனாகி கைவிடப்பட்ட கிராமத்தின் தெருக்களில் புழுதி கிளம்ப ஓடினான். இத்தனை வருடங்களுக்குமாக…

அவனுடனான புணர்ச்சி என்பது அவனுடைய நினைவுகளை வாசிக்கும் செயலாகவும் இருக்கிறது. அவன் மார்பில் புதைந்து அவன் காயங்களைத் தடவியபடி விம்மினேன். அன்றைய கனவில் அவன் தாய் கதறியபடி எரிந்தாள். பிணங்கள் ஓலமிட்டபடி மீளவும் நெருப்புள் புகுந்தன.

||

ழாக் ப்ரெவரின் கவிதைகளில் போல இருந்தது.

அவன் கோப்பியையும் பாலையும் கலந்தான்.

நான் தலையணையில் முகத்தை இறுகப் புதைத்தேன். என்னைப் பார்ப்பதை மிகவும் பிரயாசையுடன் தவிர்த்தான்.

நான் கண்களை மூடினேன். கண்ணீரின் கசிவு இதமானதாயிருந்தது.

அவன் மழைக்கோட்டை அணிந்தான். ஏனெனில் அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. குப்புறப் படுத்தப்டி உள்ளங்கைகளை விரித்து ஆராய்வதாய் பாவனைபண்ணத் தொடங்கினேன். மெல்லிய செருமலுடன் கதவைத் திறந்து வெளியேறினான். ஜன்னலுக்கு நகர்ந்து வெளியில் பார்த்தேன்;

மழைக்கோட்டணிந்த அவனது மெல்லிய உருவம் மழைப்புகையூடு நடந்து செல்கிறது – மழையைப் போல.

கட்டிலுக்குத் திரும்பினேன். கனவுகள் பெருகுவதில் இருந்து தப்பிக்க வழிகளேதுமில்லை. புரண்டு புரண்டு யோசித்துக் கொண்டிருந்தேன், அவனது கனவுகளிலொன்றைப் போல என்னுடல் பிசுபிசுக்கத் தொடங்கியது.

உடலின் எல்லாத்திசைகளிலும் அவன் அசையத் தொடங்கினான். கைவிடப்பட்ட கிராமத்தின் தெருக்களை நான் வரைய ஆரம்பிக்கிறேன். என்னுடல் விறைப்படைந்து கசியவாரம்பிக்கிறது. அவனில்லாத இடத்தில் துயரம் சீண்டும் இனிமையான நாக்குகளுடன் இருந்தது. அவனை, அவனது துயரமிக்க பீதிக்கனவுகளை உணரும் பேராழத்தில் விழுந்து விழுந்து உள்ளே இன்னும் உள்ளே புதைந்து போய்க்கொண்டிருந்தேன். அறை கனவுகளால் நிரம்பித் தளும்புகிறது. குருதியின் இளம் சூட்டுடன் இருக்கும் கனவுகள் என்னை மிதத்துகின்றன. அறையின் மேற்பரப்பில் அச்சத்துடன் மிதக்கவாரம்பித்தேன். காவிளாய்ப்புற்களுக்குள் சிக்கிக் கொள்வது பற்றிய கனவு என் தொண்டையை இறுக்குகிறது.நான் நிர்பயத்துடன் இருப்பதாய் நினைத்துக் கொண்டேன்.

வெளியே மழை பெய்து கொண்டுதானிருக்கிறது என்கிற நினைப்பு திடீரென வர கனவுகளின் புழுக்கத்தில் இருந்து விடுபட்டு கட்டிலில் தொப்பென விழுந்தேன்.

||

[மார்கழி 2005 – திருத்தியெழுதியது சித்திரை 2007]
பின்னூட்டமொன்றை இடுக
Posted in புனைவு
எசமானின் வருகையும் என் உள்ளாடையை உலர்த்துதலும்…
Posted on நவம்பர் 3, 2008 | பின்னூட்டமொன்றை இடுக
(நடப்பியல் புனைவு நாட்குறிப்பு – றிச்சார்ட் பௌச்சரின் வருகையையொட்டி)
Thursday, May 10, 2007 10.20PM


இதை எழுதத் தொடங்குகையில் தான், நேற்றைய தினம் அழுக்குப் பண்ணிய என் ஜட்டி உலரத் தொடங்குகிறது..

***

எசமான் வருகிறார்…

எசமான்களுக்கென வரலாறுகள் எப்போதும் உண்டு!

அவர்கள் நிமிர்ந்து நின்று கைலாகு தருகிறார்கள். புன்னகையுடன்.

நான் அவர்கள் முன் மௌனமாய்த் தலை குனிந்திருக்கும் உயிரி.

குருதியுறைந்த என் நகரத்தின் வெய்யில் பிடித்த தெருக்களில் அலைந்து திரிபவன் நான்.

அச்சத்துடன் – வரலாற்றின் சுற்றுப்பாதைகள் நெடுகிலும்…….

[தெருவிலே செல்பவர்களுக்கென்று வரலாறேதுமுண்டா?]

எசமானின் வருகைக்காக திறக்கப்பட்ட என் நகரதின் பிரதான வீதியில்

வழக்கமான குருதியில்லை!

சிப்பாய்கள் என்னைப் பார்த்தும் கூட மென்னகை செய்தார்கள்.

***

இந்தப் பாதை பூட்டு….

வாகனத்தொடரணி எனது பாதையில் எனை மறித்துச் செல்கிறது.

NO ENTRY

பாதைகள் மாறி மாறி… அலைந்து அலைந்து

நூலகத்தை அடைந்தேன்.

[நூலகங்களுக்கான வழிகள், எப்போதும் – வரலாறு முழுவதும் – இப்படியாகத்தான், இப்படியாகவேதான் இருந்தனவா?]

வரும் வழிகளில்:

வீதியெங்கும் அன்னையர்கள்

எசமானுக்கென,

                தோட்டை அடகுவைத்து, ஆங்கிலத்தில் மனு தயாரித்து

                அவர்கள் நின்றார்கள்

                வெய்யிலில்.

                தமக்கு வழங்கப் பட்ட ஒரு கோப்பை இருளை0 விழுங்கியபடி

                அவர்கள் நின்றுகொண்டேயிருந்தார்கள்…

[வரலாறு முழுவதிலும் அவர்கள் செய்து வந்ததை இப்போதும் செய்கிறார்கள்]

சைக்கிளை உழக்கி கண்களை இறுக மூடி அவர்களை/அவர்களது கண்ணீரைக் கடந்தேன்.

[நூல் அகங்களுக்குள் செல்பவர்கள் இப்படியாகத்தான் அனைத்தையும் கடக்கிறார்களா?]

***

[செவ்விரத்தம் பூக்கள் வைக்கப் பட்ட, வெள்ளையடிக்கப் பட்ட சரஸ்வதி சிலையில் உட்கார்ந்திருந்த காகங்களை இப்போது கூட நான் காணவில்லை]

[காகங்களை நாங்கள் 1990இல் துரத்தினோம்]

எசமான்கள் காகங்களை அழைத்து வருவதில்லை.



நூலக வாசலில் சிப்பாய் வழிமறித்தான்.

[அவன் ஆண்மையாய் இருந்தான் – எல்லா தேசத்து சிப்பாய்களையும் போலவே]

அவன் புன்னகைத்தான்…

[புன்னகைக்கும் சிப்பாய்களின் கதையை சிங்களக் கிராமங்களில் கேளுங்கள்]

அடையாள அட்டையை வினாவினான்…

அவன் எனதுடலெங்கும் தடவினான்

எனது பிறப்புறுப்பைத் தீண்டாது செல்லும் அவன் கண்களைக் கண்டேன் – பயந்திருந்தான்

அவன் மேலுதட்டில் வியர்வை அரும்பியது

–சிறுவன்-வெறும் சிறுவன்

மீளவும் அவன் புன்னகைக்கையில்

அவனது தாய் போலுணர்ந்தேன்.

***

அவனுக்காகக் கழற்றிய தொப்பியை மீளவும் அணிந்தேன்.

[தொப்பியுள் எழுதப்பட்டிருந்த வாக்கியம் : One Size Fits All.  made in Sri Lanka]

அவனுக்காக நிறுத்திய எனது சைக்கிளை மீளவும் உருட்டினேன்.

[நாம் எல்லாவற்றையுமே மீளவும் தொடங்கவேண்டியிருப்பதாய் யாரோ சொன்னார்கள் – இதுதானா அது?]



நான் ஒரு போதும் ஒளிர்ந்து பார்த்திராத நூலகத்தின் மின்குமிழ்கள்

இன்றைய பகலில் ஒளிர்ந்தன

பிரகாசமாக – மிகவும் பிரகாசமாக, எசமானின் பற்களைப் போலவே…

Air Freshener வாசனையில் நூலகம் கமகமத்தது.

[ரெக்கிட் பென்கிஸர் – Haze… feel NY in your room..]



எசமான் வருகிறார்.

[நூலக விளக்குகள் பிரகாசிக்கின்றன]

எசமான் வருகிறார்.

[அசையாமலிருந்த மின்விசிறிகள் சுழல்கின்றன]

வாகனங்களை நிறுத்துமிடத்தில்/லும் புன்னகைக்கும் சிப்பாய்கள்.

நூலகத்தின் இருளகற்றப்பட்ட வராந்தாக்களெங்கும் சிப்பாய்கள்.

புன்னகைக்கும் சிப்பாய்கள் – இன்றைக்கு மட்டுமேயாய்…

[புன்னகைக்கப் பழக்கியது யார் – சிங்கள நண்பனே?]

***

நான் வாசிக்க ஆரம்பித்தேன்.

[உள்ளூர்த் தமிழ்ப் பத்திரிகைகள் மூன்று தவிர அரசாங்கப் பத்திரிகைகள் + ஆங்கில,சிங்கள் ஏடுகள் மாத்திரம் வைக்கப்பட்டுள்ளன]

COLOMBO CITY WILL BE PLUNGED INTO DARKNESS!!

COLOMBO CITY WILL BE PLUNGED INTO DARKNESS!!

[எசமானின் வருகையிலாவிடில்] நூலகத்தின் மங்கிய இருளில்தானே

ஒளிமிகுந்த இச்செய்தியை

நான் வாசிக்க நேர்ந்திருக்கும்?

ஒளிமிகுந்த செய்தியா?

ஒளிமிகுந்த செய்தியா?

[கால்நூற்றாண்டுத்துயரம் நண்பரே… கால் நூற்றாண்டுத்துயரம்]

President Mahinda Rajapakse’s shawl, worth Rs.5,900 is really a trend-setter. Like Condoleeza Rice’s Sleeveless top, Mahinda Rajapakse’s Shawl too had a great following. …….Partygoers were asked to wear a shawl during this vesak in order to create a ‘common identity’ for them. This hearty appreciated dress code is a unique creation of Barbara Sansoni, Sri Lanka’s leading fashion designer.

மேசையில் தட்டினார்கள்.

அது நான் பிறந்ததிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் சப்பாத்துக் கால்களின் உதைப்பொலியைப் போன்றது.

‘அவர் வரும் போது எழுந்து நில்‘

[எனக்கு மூத்திரம் வந்தது | வந்துகொண்டிருக்கிறது | வரும்]

கழிப்பறை நோக்கிய என் பயணம் ஆரம்பிக்கிறது.

[தெருவில் செல்பவர்கள் காலம் முழுதும் கழிப்பறை தேடித்தானே அலைகிறார்கள்?]

[பாதசாரிகள் தெரு முழுதும் இருளைப் பெய்தபடிதானே நகர்கிறார்கள்?]

[அமெரிக்க வீதிகளில் இருளைக்கண்டதுண்டா?]

***

நான் பெய்யும் பொழுதில் நினைத்தவை:

                தெருவில் குருதி பிரள நடப்பவர்கள்

                US aid உதவியில் ஆங்கிலம் கற்பதில்லை.

                US aid குருதியிலிருந்து வெளியேறும்

                அமெரிக்கக் கனவில்00 உங்களை ஆழ்த்துகிறது.

                அக்கனவு தெருக்களில் நடக்கும் போதும்

                உங்களைப் போர்த்தியிருக்கும்…

                அவர்களில் குருதி/கண்ணீர் + இதர உடல்திரவங்கள்

                பிரள்வதற்கான சாத்தியங்கள் இல்லை

                [FA Rol Onஉம் வெள்ளை உடல்களும் தவிர வேறேதும் பிரள்தல் சாத்தியம் தானா?]

அட முட்டாளே – அந்தத் தாய்மார்கள் + பிள்ளைகள் + உறவுகள்

எல்லாம் கதறும் மொழி ஆங்கிலமா?

DOWN WITH AMERICA என எழுதி தூக்கிப் பிடிக்கலாமா?

[நான் பெய்தேன்.. பெய்தேன் பெய்து கொண்டே இருந்தேன் – அமெரிக்க அரசனைப் போல]

***

அவன் அழகானவனாய் இருந்தான் – அது போதுமானது.

&

அவன் சிங்களவன்/சோனகன்/பறங்கி/ஏதோ ஒன்று… போகட்டும்.

கழிப்பறைக்குச் செல்லும் இருளகற்றப்படாத நடைபாதையில் துப்பாக்கியால் மறித்து எசமானுக்காய் உடல் தடவிய அவனது கண்கள் மின்னின – பூனைக் குட்டியின் கண்களைப் போல. அவனை மெல்லிய இருளில் தடவ அனுமதித்த போது நான் புன்னகைத்தேனா? [ஞாபகமில்லை/இருக்கலாம்/தெரியாது/சொல்ல விரும்பவில்லை]

சித்திரை மழையைப் போலவும் நான் அபத்தமாக கருக்கட்டினேனா?

எச்சரிக்கையுடன் உடல் தடவும் அவனது கை மேடிட்டிருக்கும் என் டெனிம் {American Levi} மீது படிந்ததும் தயங்கி நகைச்சுவையாய் முணுமுணுக்க, நான் புன்னகைத்தேனா?

அந்த ஒப்பந்தத்தின் பெயர் என்ன?

அவன் தனது பிடியை இறுக்க சுவரோடு அழுந்தி………..

இதை எங்கு கைச்சாத்திட்டோம்?

யாராவது எசமானர்கள் எங்களுக்கிடையில் இருந்தார்களா??



கோடைகாலப் பணி அலுப்பூட்டுவதாக களைப்புடன் சொன்னபடி தனக்கு வழங்கப் பட்ட உள்ளாடை களைந்தான்.

நான் அமெரிக்க லெவியைத் திறந்து விடுதலையானேன்.

நானும் அவனும் இணைகையில் – இருட்டில்தானென்றாலும் – உறுத்தியது என் அமெரிக்க லெவி மட்டுமே…

அமெரிக்க ஆணுறையொன்றுக்கான/லூப்ரிக்கன்ற்றுக்கான அவசியம் இருக்கவேயில்லை.



நான் அவனை ஈரமாக முத்தமிடுகையில் அவனது  அவனுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தூரத்தில் – தேவையற்றுக் கிடந்தது.

                தனக்கு வழங்கப் பட்ட உள்ளாடையை மீண்டும் இழுத்து மூடியபோது;

                அமெரிக்க லெவியை மீளவும் அணிந்த போது;

                One Size Fits all : made in Sri Lanka தொப்பியை அணிந்த போது;

அவன் மறந்துபோயிருந்த துப்பாக்கியை மீளவும் எடுத்தான்.

                எசமானின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக

                எசமானால் வழங்கப் பட்ட அதை மீளவும் எடுக்கும் படியாயிற்று;

எசமான்களுக்காக,

எசமான்களுக்காக மாத்திரம்!

***

அவனதும் எனதும் அடையாளங்கள் என்ன?

அவனதும் எனதும் மனதில் இன்றைய சாகசத்தின் ஈரம் என்றைக்குமாய் காய்ந்து போகாது தானே?

–அவன் ஒரு தமிழனின் கறையுடன்

–நான் ‘இனம்‘ தெரியாதவனின் கறையுடன்

அப்படியே மறந்தாலும் கூட

நாளை காலை வரை ஒருவருக்குள் மற்றவர் இருந்தபடியே தானே? J

***

எசமானுக்காய் ஒளியூட்டப்பட்ட, வாசனையளிக்கப் பட்ட நடைபாதையை அடையும்வரை நாங்கள் இணைந்து நடந்தோம்.

எசமானுக்காய் அலங்கரிக்கப் பட்ட நடைபாதைகளில், நாமிருவரும் வேறு வேறு திசைகளில் பிரிந்தோம் – அறிமுகமற்றவர்களைப் போன்ற பாவனையுடன் பிரிந்தோம்…

எசமானுக்கான வழிகளில் நாங்கள் பிரிகையில்;

அவனது முகத்தில்

                பயம் + அச்சம் + கடூரம்

அவன் சிங்கள சிப்பாய் ஆகினான்! ஆக்கப் பட்டான்.

எனது முகத்தில்

                அச்சம் + சோர்வு + அலுப்பு + துயரம்

நான் தமிழன் ஆகினேன்! ஆக்கப்பட்டேன்.

எசமானுக்கான பாதைகளில் எங்கள் அடையாளங்கள் இருந்தே ஆகின…

எசமான்கள் அடையாளங்களை வழங்குகிறார்கள்.

சிப்பாய்களைக் கடந்து கடந்து…. எசமானின் கடைக்கண் வீச்சிற்காய் புத்தகங்கள் வைத்திருக்கும் பகுதிக்கு வந்தேன்.

தூசு தட்டி வைத்திருந்தார்கள் – இதுவரை காலத் தேடலில் நூலகத்தின் அடுக்கொன்றிலும் நான் காணாத புத்தகங்களை.

‘தம்பி தொப்பியைக் கழட்டும்‘

‘தலையை ஒழுங்கா இழும் – வாற நேரமாச்சு‘

‘ரீ-சேர்ட்டை உள்ளுக்கு விடும்‘



நான் அங்கிருந்த புத்தகங்களைப் பார்த்தேன்.

எனதல்லாத மொழியில் என்னைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள்.

State of World Children: Excluded and Invisible.

Impact of war on children: A report by Gracha Machel

Sri Lanka- A bitter harvest: Minority Rights Group

Paradise Poisoned.

அமெரிக்க எஜமானனுக்காய் புத்தகங்கள் விரித்து வைக்கப் பட்டிருந்தன.

IELTS guides.

Learning English

Essential English grammar

Intermediate grammar exercises.

எதுவும் விளங்காத அந்தப் புத்தகங்களை முகர்ந்து பார்த்தேன் – அடித்தது அமெரிக்க வாசனை.

***

காய்ந்து கொண்டிருக்கும் என் ஜட்டியில் இருந்து மெல்ல அகலும் சுதேசிய ஈரம்.



_________________

0 –  கறுப்புத் தேநீர். உங்களுக்கு வழங்குவது US Aid

00 – Green Card American Visa Lottery





பின்னூட்டமொன்றை இடுக
Posted in புனைவு
பாதையில் நிற்பவர்கள்
Posted on நவம்பர் 3, 2008 | பின்னூட்டமொன்றை இடுக
தலைக்கவசம், கனமான சீருடை, துப்பாக்கி, தொடர்புச் சாதனம் மற்றும் கவலைகள் பயங்களைத் தாங்கியவாறு வெயிலுக்குக் கீழ் வீதியில் நிற்பது அவனது கடமை. பாதையில் நிற்கும் அவனது படைப்பிரிவே சமாதானத்துக்கான பாதையில் நிற்பதாக பேப்பரில் பார்த்த குறிப்பு அவனுக்கு ஞாபகம் வந்தது. சிரித்த கணத்தில் மேலுதட்டு வியர்வையை களைப்புடன் உணர்ந்தான். கைக்குட்டையால் நெற்றியையும் மேலுதட்டையும் அழுந்தத் துடைத்தவாறு நாளை மறு நாளில் இருந்து தனக்கு கிடைக்கவிருக்கும் மூன்று மாத கால விடுமுறையினை ஆசுவாசத்துடன் நினைவூட்டிக்கொண்டான். நின்று நின்று கால் உளைவதை உணர்ந்தவன் அருகில் இருந்த இடிந்த மதில்  துண்டொன்றில் அமர்ந்து கொண்டான். தன்னுடைய சீருடைக்கும் ஆயுதங்களுக்கும் அந்நியமானவனாக திடீரெனத் தன்னை உணர்ந்தான். தனக்கும் அவற்றிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலுணர்ந்த மறுகணமே தாங்க முடியாத சுய பரிதாபம் ஏற்பட்டது.. தாகம் எடுத்தது. போத்தலினுள் குடிநீர் முடிந்திருந்தது. ஆத்திரத்தில் எட்ட இருந்த கல்லொன்றை பூட்ஸ் காலால் உதைத்தான். எச்சில் கூட்டி விழுங்கி பின் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டான்.
வெய்யில் அவனுக்கு அறவே பிடிப்பதில்லை . குளிர் நிழல்களால் ஆன  தரை கொண்டது அவன் கிராமம். அதன் நீர் நிலைகளையும் தாமரைக் குளங்களையும் ஆதங்கத்துடன் நினத்துக் கொண்டான். மூன்று வருடங்களாக  பெரும் சிக்கல்கள் இன்றிக்கழிந்து போன அவனது பணி தற்போது மிகவும் சிரமமூட்டக்கூடியதொன்றாகவும் அச்சம் தக்கூடியதாகவும் மாறிவிட்டது. கிரனேட்டுகள் எந்நேரமும் வீசப்படலாம் என்பது மட்டுமே அவன் இந்த வெய்யிலிலும் மயங்கி விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரே காரணி. பெரிய கருமேகம் ஒன்று சூரியனை மறைத்துக் கொண்டது. குளிர்ந்த காற்றாக பத்மாவை அவன் உணர முடிந்தது. ஒரு குறுஞ் சிரிப்பு அவன் உதடுகளில் ஓடி மறைந்தது. நாளைக்கு இதே நேரம் வவுனியா கழிந்த பிறகு தானும் அவளும் ரயில் ஜன்னலோர இருக்கை நெருக்கத்தில் செய்யக்கூடியவற்றை மீண்டும் காட்சிப்படுத்தி ஊகித்தான்.அந்த நினைப்பு அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்தது.
மேகம் மீண்டும் விலகியது. தங்கியிருக்கும் பதுங்கு அரணுக்கு செல்வதற்கான பேரவா அவனுள் தோன்றியது. ஜினசேன தயாரித்துத் தரும் நெல்லிக்கோர்டியல் மீதுஅவனுக்கு திடீர்க் காதல் ஏற்பட்டது.
m
மல்லிகை கொடியை தகரக்கூரைகளுக்கும் மண்மூடைகளுக்கும் மேலாகப்படர விட்டு ஜினசேனவும் மூன்று வருஷம் முன்பு சமரில் பலியான நிசங்கவும் அவ்வரணின் உள்ளே நிலவும் வெப்பத்தைத் தடுத்திருந்தனர். காலப் போக்கில் கொடி கிசுகிசுவென்று வளர்ந்து  அரணை அடையாளம் தெரியாதவாறு மறைத்திருந்தது. பாம்பு, புழு, பூச்சி பயம் என்பதால் சொந்தச் செலவில் கம்பி நெற் அடிக்க வேண்டி இருந்தது. கூரையில் நீக்கல் இல்லாமல் பேப்பர் ஒட்ட வேண்டியும் இருந்தது. ஆனால் ஜினசேன, எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஜப்பான் ரோஸ்களையும் வாடாமல்லியையும் அரண் சூழலில் வளர்க்கத் தொடங்கியிருந்தான்.
மூன்று மாதங்களுக்கு முன்பெல்லாம் இரவின் சுகமான குளிருடன் கலந்து வரும் மல்லிகையின் சுகந்தத்துடன் ஜினசேன மார்பு ரோமங்களுக்குள் ஊதி விளையாடும் சிகரெட் புகையின் கதகதப்பையும் சேர்த்து அனுபவிப்பது ஒரு சுகானுபவமாக இருந்தது. ஜினசேனவுடன் இருப்பதென்பது போதை மருந்தேற்றிக் கவலைகளை மறந்து போகச் செய்வதைப் போன்றது எனவும் அவன் சிந்தித்ததுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் புணர்விற்கான வாதை முற்றிய தருணங்களில் நிகழும் யந்திரமயமான செயற்பாடாக அது மாறி விட்டது. சுய பரிதாபத்தையும் இழிவுணர்வையும் ஏற்படுத்தும் ஒன்றாகவும் தவிர்க்க முடியாததாகவும் அது மாறிவிட்டது. மேலும் ஜினசேனவை இவன் குதத்தில் புணருகையில் ஜினசேன முனகியவாறே வீதியை அவதானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது. ஒருமுறை ஜினசேனவின் வாயில் குறியைக் கொடுத்து விட்டு அவனது தலைமயிரை அளைந்தவாறு வீதியை அவதானித்துக் கொண்டிருந்தான். தூரத்தில் தெரிந்த ஒளிப்பொட்டொன்றின் மீது பயத்துடன் கூடிய கவனம் பதிந்ததில் ஸ்கலிதமாகு முன்னரே உறுப்பு சிறிதாகி விட்டது. பின் ஜினசேன ஆயிரம் வித்தை காட்டி அதை விரைப்படையச் செய்ய வேண்டி இருந்தது.
இந்த பதுங்கு அரணுக்கு வந்து சேர்ந்த காலத்தின் ஆரம்ப நாட்களில்  ஜினசேன ஒரு அண்ணன் காரனைப் போலவே நடந்து கொண்டான். இவன் இருபதுகளின் தொடக்கத்திலும் அவன் முப்பதுகளின் நடுவிலுமாய் இருந்தது அதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். ஜினசேன சற்று நாட்செல்லச்செல்ல ஒரு நெருங்கிய நண்பன் போல பேப்பர்களில் பிரசுரமாகியிருந்த யசோதாவின் புகைப்படத்தின் கிளுகிளுப்பூட்டும் அம்சத்தை அதன் பின் ஊரின் காதற்பொழுதுகளை கிளர்ச்சிகளைப் பேசத் தொடங்கினான். இதுவே குளிக்கும் போது இவன் மார்பின் அடர் ரோமத்தை அவன் கிண்டல் செய்வதாய் அவனது மதர்த்த மார்பகங்களை இவன் கிண்டல் செய்வதாய் வந்து முடிந்தது. இவ்வாறான நாட்களின் மாலைப் போதொன்றில் இவன் சிறுநீர் கழிப்பதற்காக கையில் பிடித்திருந்த குறியை ஜினசேன உற்றுப்பார்த்துச் சிரித்ததில் இருந்து போடப்பட்ட இந்த ஒப்பந்தம் இவனுக்குத் தற்போது அலுத்து விட்டது. உறவின் ஆரம்பக் காலத்தில் இருந்த அசிங்க உணர்வு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது. தொடக்கத்தில் ஜினசேனவின் உறுப்புக்காகப் பிரித்த உதடுகளை விகாரையில் புத்தர் முன் பிரிப்பதற்கு மிகவும் சங்கடப்பட்டான். இப்பொழுதெல்லாம் ஜினசேனவுடனான புணர்ச்சி அருவருப்பாகத் தோன்றுவதற்கான காரணம் வேறு என்பதை அவன் அறிவான். அந்த உறவை விடவும் பத்மாவை முலைகளாகவும் உதடுகளாகவும் பின்னங்களாகவும் சந்தனாதித் தைல வாசனையாகவும் உணர்ந்தபடி சுயமைதுனம் செய்வது அவனுக்கு உவப்பாயிருக்கிறது. சுயபோகத்தின் பின்னரான வெறுமையும் அச்சமும் சுயபச்சாத்தாபமும் அவனை சோர்வச்சமடையச் செய்தபோதும் வேறெந்த நிகழ்வும் தன்னை நிம்மதியடையச் செய்ய  முடியாது – இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கேனும் – என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். பத்மா முலைகளாகவும் சந்தன்னாதித் தைல வாசனையாகவும் உணரப்படாத பொழுதெல்லாம் அவன் மனது கவலையும் விரக்தியும் நிரம்பித் தளும்பத் தொடங்கி விடுகிறது.
m
பத்மா இவனுக்கு அறிமுகமாகி  சில மாதங்கள் கூட ஆகியிருக்காது என்ற உண்மை மீது இவனுக்குப் பலத்த சந்தேகம். பல ஜென்மப் பிணைப்பு பந்தம் என நீளும் அவனது கவிதைகள் இந்தச் சந்தேகத்தின் அடிப்படையிலானவையே. பத்மாவின் தம்பி மூலமாகத் தான் பத்மா இவனுக்கு அறிமுகமானாள். இவன் இங்கு வர முன்னரே பத்மாவின் தம்பி ஜினசேனவுக்கு சிகரெட் வங்கித் தர அது வங்கித் தர இது வங்கித் தர என உபயோகப்பட்டுக்கொண்டிருந்தான். இவனுக்கு பத்மாவின் தம்பியை மிகவும் பிடித்திருந்தது. பொடிமல்லியை நினைவூட்டுவதாயிருந்த அவனது தோற்றமும் செயற்பாடுகளும் இனிப்புகள் வங்கித்தருவதற்கான காரணங்களாயிருந்தன. பத்மாவைக்காட்டி தனது அக்கா என அவன் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து இனிப்பு வங்கித் தர வேறு காரணமிருந்தது.
ஒரு முறை இவனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது. றக்ரர் ஒன்றை சொந்தமாக வாங்கிக் கொள்ளும் பொருட்டு இவன் சேர்த்து வைத்திருந்த பணம் முழுதும் தாயின் வைத்திய செலவுக்குக் கரைந்து கொண்டிருந்ததில் இன்னும் எத்தினை நாளைக்கு முகாமில் கிடக்கவேண்டியிருக்கப் போகிறதோ என்ற கவலைகள் கூடியது. யோசனைகள் முற்றிய நாளொன்றில் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்த பத்மாவையும் பொடிமல்லியையும் இவன் கண்டான். கண்கலங்கியவாறு அரைகுறைத் தமிழில் விபரம் விளக்கி தாயின் பெயரும் நட்சத்திரமும் சொல்லி அர்ச்சனை செய்யச் சொன்ன போது சத்தியமாக அவன் மனதில் எவ்வித மென்னுணர்வுகளும் இருக்கவில்லை. பத்மா, பூசை முடிந்து வீடு திரும்புகையில், தேங்காய்ப் பாதியொன்றினுள் குங்குமம், திருநீறு, வீபூதி, நித்தியகல்யாணிப் பூக்கள் வாழைப்பழம் இட்டு நிரப்பி அவனிடம் தந்தாள். சைகையும் சிங்களமும் இதந்தரு புன்னகையும் கலந்த மொழியொன்றில் அவனது தாய் குணமாகி விடுவாள் என பத்மா கூறிய நொடியிலிருந்து அவளை குளிர்ந்த காற்றாக, சந்தனாதித் தைல வாசனையாக, புன்னகையாக உணரும் செயற்பாடு இவனுள் தொடங்கியிருந்தது.
வெசாக்கின் போது இதய வடிவிலான வெசாக் கூண்டொன்றை பத்மாவுக்கென வடிவமைத்துப் பரிசளித்தான். சனங்களுக்குக் கொடுப்பதற்காக படைத்தலமையகம் அளித்திருந்த பாற்சோற்றுப் பார்சல்கள், உடைகள், பலகாரங்கள், போன்றவற்றை வெற்று ஷெல் பெட்டியொன்றினுள் இட்டு பத்மா வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான். பிரத்தியேகமான இத்தகைய செயற்பாடுகளின் மூலம் தன்னைப் பத்மாவிடம் சொல்லிவிட முடியும் என அவன் நம்பினான். பதிலுக்கு, பொடிமல்லியுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடுகையில் அவள் முகம் புன்னகையுடன் ஜன்னலருகே தெரிந்தது. பிறிதெரு நாள் வீதியால் சென்று கொண்டிருந்த இவள் தடுமாறி கல்தடக்கி விழவும் அவன் ஓடி வந்து பிடிக்கவும் நாடகத்தனமாக காதல் தொடங்கியாகி விட்டது. விழுந்த பத்மா, பேச்சுச் சிங்களம் புத்தகம் அவன் கண்களில் பட வேண்டும் என்பதற்காகவே பிறிம்பாய் அதை விழுத்தினாள். அது அவனது கவனத்தை ஈர்க்கும் வகையில் விழுந்து கிடந்தது. ‘சிங்களம் படிக்கிறது? .. ஆ?’ என்று கேட்டவாறு முதல் பக்கத்தைத் திறந்த அவன் அதிர வேண்டியிருந்தது. அவனது பெயர் நெளிநெளியாக சிங்களத்தில் எழுதப்பட்டு வண்ணாத்துப் பூச்சி ரோஜாப்பூ படங்கள் கலர் பேனைகளால் வரையப்பட்டு இருந்தது. இரண்டு இதயங்களும் ஒரு அம்புக்குறியையும் தெளிவாகவே பத்மா கீறியிருந்தாள். புத்தகத்தைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டாள் அன்று. இச்சம்பவத்துக்குப் பின் வீட்டுக் கேற்றடிக்கு முற்றம் கூட்ட வரும் அவளை இவன் ஒருவித உரிமையோடு உற்றுப் பார்ப்பதும் சைகைகளை வெட்கத்துடன் அவள் பரிமாறிக்கொள்வதும் நடந்தன.
சம்பளத்தில் வீட்டுக்கு அனுப்புவது, தனியான வோக்மன் வாங்க, றக்ரர் வாங்க என்று சேமிப்பது போக தங்கச்சிக்காரிக்கு தோடு வாங்கவெனவும் பணம் சேமிப்பில் வைத்திருந்தான். அந்தப் பணத்தில்தான் தீபாவளி வந்த போது சாறி ஒன்றும் குமாரோதய வர்த்தகப் பதிப்புக்களும் வாங்கி இதயம் அச்சிடப்பட்ட பரிசுப்பொதித் தாளில் பொதிந்து பத்மாவுக்கென பரிசளித்தான். அந்தச் சேலைஅவளுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே பொடிமல்லியிடம் 50 ருhபாய் லஞ்சம் கொடுத்து அவளுக்குப் பிடித்தமான கலரைத் கெரிந்து கொள்ளவேண்டியிருந்தது. அதன் பின்னான அவர்களுடைய இரகசியச் சந்திப்பில் வீட்டில் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டானென கடிந்து கொண்டாள். பதிலுக்கு அவள் அதை எங்கனம் சமாளித்தாள் என அவன் வினவிக்கொண்டிருக்கவில்லை. அவளுடைய கோபத்தின் இடுக்குகளில் வெளித்தெரியும் புனித காதலை அவதானித்தவாறு குறுநகை புரிந்தான். அவள் அவனது மார்பில் குத்திச் சிரித்தாள்.
அவனுடைய மூன்று சகோதரிகள் பற்றி, அவர்களுக்குப் பிடித்தமானவை பற்றி, நகைச்சுவையாக உரையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கிறது. கடிதம்  ஊரிலிருந்து வரும் நாட்களில் அவளுக்கு அதை மொழிபெயர்த்து சேர்ந்து சிரிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கிறது. அவளுடன் இருப்பது மாத்திரமே அவனுக்கு ஆறுதலளிக்கும் ஒரே விஷயம்.
m
இதுவரை அவர்களுக்கிடையே உடலுறவு ஒரே ஒரு முறை தான் நடந்தது. இன்றும் அந்த நிகழ்வை ஓர் அசௌகரியமான, அச்சமூட்டக்கூடிய ஒன்றாகவே அவனால் நினைவு கூரமுடிகிறது. உடலெங்கும் ஓடிமறைந்த குறுகுறுப்பில் அவளை இறுக்கி அணைத்து முரட்டுத்தனமாக அவளுடலைச் சுவைக்க முயன்ற வேளை பெரும் அச்ச உணர்வை அவன் அடைந்தான். மார்பகங்களைக் கையாளுகையில் பயத்துடன் உதடுகளைக் கடிக்க வேண்டியிருந்தது. அவள் கண்களை மூடிய நிலையில் இருந்தது சற்று ஆசுவாசமளித்தது. உறவுக்கு அவள் சம்மதித்த நாள் தொட்டு அவனைப் பயப்படுத்திக்கொண்டிருந்த விடயம் விந்து முதலிலேயே வெளியேறிவிடுகிற பிரச்சனை தான். வார இதழொன்றின் மருத்துவக் கேள்விபதில் பகுதியில் இதைப்பற்றி இவன் வாசித்தறிந்திருந்தான். பத்மாவினுள் புகுந்து நீண்ட நேரம் இயங்கியும் விந்து வெளிப்படவில்லை. குறி விறைத்தபடியே இருந்தது. இந்த நிலமை அவனுக்கு மேலும் பயத்தைக் கொடுத்தது. குறி சுருங்கிவிடக்கூடும் என அவன் மிகவும் அஞ்சினான். மனதை ஒருமுகப்படுத்தி இயங்குவதற்காக பதமாவின் மார்பகங்களை நோக்காது அவற்ரைக் கசக்கத் தொடங்கினான். இயலாமல் போகவே பத்மாவை மனத்திரையில் தூஷண வார்த்தைகளுக்கிடையில் இயக்கிப் பார்த்தும் தோல்வி கண்டான். கண்களை மூடியவாறே ஜினசேனவுடனான அனுபவங்களை மீட்டு, சில தூஷணங்களை முணுமுணுத்து உச்சமடைந்து இயங்கிச்சரிகையில் அவனுக்கு அழுகை பீரிட்டுக்கொண்டு வந்தது. பத்மாவின் மார்பகங்களுக்குள் புதைந்து விம்ம ஆரம்பித்தான். பத்மா பிடரித் தலைமயிரை அளைந்து அழுத்தியது அவனது ஆழுகையை மேலும் அதிகரிப்பதை உணர்ந்து உடைகளை அணிந்து கிளம்பினான்.
இதன் பிறகு, பத்மாவை உடலுறவுக்கென அவன் அழைத்தது இல்லை. திருமணமானால், தனது உடமையாக அவள் ஆகிவிட்டால் பயம் இருக்காது என அவன் நம்பினான். அவளை சீக்கிரம் திருமணம் செய்ய வேண்டி இருப்பதற்கான காரணங்களில் இதுவுமொன்றாயிற்று. அவனுடைய தமக்கைக்கும் தாய்க்கும் பத்மாவின் புகைப்படத்தை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஊருக்குக் கூட்டிவந்தால் உடவத்த முதலாளியுடன் கதைத்து ஒருமாதிரி பன்சாலைக் காரங்களை ஒப்பவைக்க ஏலுமென அக்கா கடிதமெழுதியிருந்தாள். குழந்தை பிறந்தவுடன் தாயையும் தம்பியையும் புத்தளம் பக்கமாக கூப்பிட்டுவிடலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை இவன் செய்யமுடியுமெனவும் பத்மாவுக்குக் கூறினான். கடிதமெழுதி வைத்துவிட்டு புறப்படுவதென பத்மா தீர்மானித்தாள். இவன் எல்லையற்ற மகிழ்வடைந்தான்.
m
‘அலாம்’ அடித்தது. அதன் தொடர்ச்சியான கீ கீ, அவனுக்கு எரிச்சலூட்டியது. மணிக்கட்டை பற்றி ஆத்திரத்துடன் அலாமை நிறுத்தி பதுங்கு அரணை நோக்கி நடக்கத் தொடங்கினான். தூரத்தில் ஜினசேன வருவது தெரிந்தது. பிளாஸ்க்கினுள்  தேநீர் வாங்கி வைத்த்கிருப்பதாய்க் கூறி இவனைக் கடந்து போனான் ஜினசேன.
கிணற்றடிக்கு மேல்கழுவப் போன போது வேலி இடுக்கினால் பத்மா இவனை அழைத்தாள். மிகவும் பயமாயிருப்பதாய் கிசுகிசுத்தது அவளது குரல். புற்கள் சலசலத்ததில் பறந்த நுளம்புகள் காதுக்குள் கீ என்றன. பயப்படத்தேவையில்லை வவுனியாவில் சந்திக்கலாம் எனக்கூறி இனம்புரியாத பயத்துடன் அரணுக்கு வந்து சேர்ந்தான்.
மெழுகுதிரியைக் கொளுத்தி வீதியை அவதானித்தான். கப்பினுள் தேநீரை ஊற்றி கிழங்கு ரொட்டியிடன் சேர்த்துக் குடித்தான். குரல்களேதுமற்ற நிசப்தம் அவனுக்குப் பயத்தை தருகிறது. ஜினசேன திரும்பி வர பதினொரு மணியாகும். அவனால் இன்று நித்திரை செய்ய முடியாது. இதை அவனே நன்கறிவான். றேடியோவில் ஸ்டேஷன் பிடிக்க முயற்சி செய்தான். வெறுமையே இருந்தது. தமிழ் எப்.எம் ஒன்றில் விட்டுவிட்டு கிழங்கு ரொட்டி சுற்றி வந்த ஆங்கிலப் பேப்பரைப் படிக்கத் தொடங்கினான் – எழுத்துக்கூட்டி.
m
ஜினசேன, இவன் கேட்காமலேயே சமகன் தூளை தேநீருள் போட்டுக் கலக்கி குடிக்க வைத்தான். துக்கம் நிரம்பி வழிந்தது. ஜினசேன மெழுகுதிரியை அணைத்தான். போர்வை தன்மீது போர்த்தப் படுவதை உணர்ந்தான். ஜினசேனவின் சூடான மூச்சுக்காற்றால் உடலைப் போர்த்திக்கொள்வதற்கான விருப்பம் வந்தது. போர்வையை அகற்றி மெல்ல நகர்ந்து ஜினசேனவின் மீது கைகளைப் பரப்பி அணைத்துக் கொண்டான். ஓலமிட்டு அழ அவன் மனம் மிகவும் விரும்பியது.  
இன்றைக்கு எழுந்ததைப் போல அதைகாலையில் அவன் என்றுமே எழுந்தது கிடையாது. குத்தும் பனிக்குளிரில் நடுங்க நடுங்கக் குளித்துத் தயாராகியிருந்தான். புத்தர் சுருவத்தைக் கும்பிட்டு ஜினசேனவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அணைத்து விலகினான். கண்ணீரைக் கண்ட ஜினசேன கேலியுடன் பின்புறத்தில் தட்டிச் சிரித்தான். ஜினசேனவின் குரல் கரகரத்திருந்தது.
பத்மாவின் மாற்றுடுப்புகள் இரண்டும் இவனது பொருட்களும் அடங்கிய பாக்–ஐ எடுத்தவாறு அரணுக்கு வெளியில் வந்து ராணுவ பஸ்சுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான். சற்றுத் தூரத்தில் சூரியனின் வெள்ளொளியில்  குளித்தவாறு பத்மா நின்றிருந்தாள். மனம் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கிற்று. அதீத சந்தோஷத்தில் அவளை நோக்கி கையசைத்த மறுகணம் காதைக்கிழிக்கும் வெடியோசையுடன் கதகதப்பான சிவப்புக் குருதியை முகமெங்கும் உணர்ந்தான். வெடியொலியின் பின்னணியில் காட்சிகள் மஞ்சள் நிறமடைவதையும் வெண்ணிறமான சூரியனை மறைத்தவாறு ராணுவ ஜீப்பில் இருந்து சிப்பாய்கள் குதித்தோடுவதையும் மோட்டர் சைக்கிள்கள் உறுமிப்பறப்பதையும் கண் இமைகள் மூடும்வரை பார்த்துக் கொண்டிருந்தான்.    
November 2005
பின்னூட்டமொன்றை இடுக
Posted in புனைவு
பழைய பதிவுகள்