Thursday 22 January 2015

ஓ.வி. விஜயனின் 'கசாக்கின் இதிகாசம்'

ஓ.வி. விஜயனின் 'கசாக்கின் இதிகாசம்'



ஓ.வி. விஜயனின் ‘கசாக்கிண்ட இதிகாசம்’ மலையாளத்தின் செவ்வியல் நாவல். 1969-ம் ஆண்டு வெளிவந்த இது இதுவரை 50க்கும் மேற்பட்ட பதிப்புகள் கண்டுள்ளது. தெற்காசியாவில் அதிகம் விற்பனையான நவீன நாவல் என்ற சிறப்பும் இதற்குண்டு. ஓ.வி.விஜயன் எழுத்தாளர், பத்திரிகையாளர் என்ற பன்முக அடையாளம் கொண்டவர். ‘தி இந்து’ வில் கார்டூனிஸ்டாகப் பணியாற்றியவர். பல உலக மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம், சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி இந்நாவலைத் தமிழில் கொண்டுவரவிருக்கிறது. எழுத்தாளர் யூமா வாசுகி மொழிபெயர்த்துள்ள இந்நாவலில் இருந்து ஒரு பகுதி…

ழுதுகொண்டு வீட்டுக்குச் செல்லக் கூடாது. ஆபிதா முகங்கழுவி ஆசுவாசமடைய ஓடைப் பக்கம் நடந்தாள்.
ஓடையோரத்தில் அப்புக்கிளி தும்பி பிடித்துக் கொண்டிருந்தான்.
“அக்கோவ்,” அவன் அழைத்தான், “நீ வந்துட்டியா!”
“எங் கிளியப் பாக்கத்தான நான் வந்துருக்கேன்.” ஆபிதா சொன் னாள். அதைச் சொல்லும்போது, அவளுக்கு என்னமோ உள்ளே குளிர் பட்டதுபோன்றிருந்தது.
“நீயென் தும்பியப் பாருடி,” அப்புக்கிளி காட்டினான். கண்ணாடிக் கண்களுள்ள பெரியதொரு பச்சைத் தும்பி. மங்கிய நினைவைப்போல கண்கள் ஒளிர்ந்தன. யாருடையவோ முன்ஜென்ம நினைவு அது. அவளது அம்மாவுடையதாக இருக்கலாம். அந்தக் கண்கள் அவளை நோக்கின. அவளது துக்கத்தை உட்கொண்டன.
“அட, க்ளியே,” ஆபிதா சொன்னாள், “நீ எத்க்கு அந்த தும்பியப் பிடிக்கறே? பாவம். அத விடு.”
அப்புக்கிளி அழத் தொடங்கினான்.
“ஸெரி, ஸெரி,” அவள் சொன்னாள், “நாவொன்னும் சொல்லல.”
கிளி தெளிந்தான்.
“நீயி தும்பினெ வ்டச் சொல்லுதயோ?” அவன் கேட்டான்.
“இல்ல.”
அவன் சிரித்தான்.
“இந்தா, அக்கோவ்,” அவன் ஒரு பொட்டலத்தைப் பிரித்து அவள் முன்னால் வைத்தான். செண்பகப் பூக்கள்.
“ஓ, எவ்ளோ புவ்வுடா க்ளியே!”
ஆபிதா இடைத்துணியை மடக்கி பூக்களை நிறைத்துக் கொண்டாள். காதுகளில் ஒவ்வொரு பூக்களைச் சூடிக்கொண்டாள். வீட்டுக்கு நடந்தாள்.
“சின்னும்மோ! புவ்வு.”
மைமுனாவும் தங்கயும் அப்போதும் அமர்ந்து ரகசியம் பேசிக்கொண்டிருந்தார்கள். மைமுனா பூக்களை வாங்கி காதில் சூடினாள். தங்கயின் முடியில் சூடினாள். பிறகு ஆபிதாவைப் பார்த்தாள்.
“காதுல என்னாடி?”
“சும்மா வச்சது, சின்னும்மா.”
“ரொம்ப ஆடாதடி, ஆடாத. யாரு பாக்குறதுக்குடி புவ்வு, எல்ம்புக்கூடே?”
ஆபிதா கூடத்திற்குச் சென்று நின்றாள். சாய்த்து வைத்திருந்த துடைப்பத்தை எடுத்துப் பெருக்க முயன்றாள். மீண்டும் துடைப்பத்தை மூலையிலேயே சாய்த்து வைத்தாள். பானையில் கஞ்சி இருந்தது. குளிர்ந்து ஆடை படிந்திருந்தது. கொஞ்சம் குடித்தாள். ருசியில்லை.
அவள் மீண்டும் வெளியே செல்லும் போது எங்கேயென்று மைமுனா கேட்க வில்லை. ஆபிதா அரச மரங்களின் நிழலை நோக்கி நடந்தாள். அங்கே யாருமில்லை. கோடைக் காலத்தில் மட்டும் சில சமயம் அங்கே பாம்புகள் பிணைந்தாட வரும். அரச மரங்களின் நிழலில் அவள் மெதுவாக நடந்தாள். அரச மரங்களின் நிழலில் அவளொரு தும்பியானாள். அவள் யாரின் நினைவு? அவளுடையதே ஆன முற்பிறவியின், துக்கம் நிறைந்த மறுபிறவியின் நினைவு. மீண்டும் அவள் ஓடைப் பக்கம் வந்தாள். காதில் சூடிய பூக்களெடுத்து இதழ் கிள்ளி ஓடையில் தூவினாள்.
“அக்கோவ், நிய்யேந்தப் பூவ தண்ணீலுட்ற?”
அப்புக்கிளி சென்றிருக்கவில்லை.
“ஒண்ணுல்ல, க்ளியே,” அவள் சொன்னாள்.
அவன் பக்கத்தில் வந்து நின்றான்.
“நீ அழக்காருக்கே தெர்யுமா,” அவன் ஆறுதல் சொன்னான். “நாவொன்னக் கத்திக்கிறன், என்னா. நீயென்னக் கத்திக்கமாத்தியா, அக்கோவ்?”
“பின்ன, நான் வேற யாரையாவது கட்டுவனா?”
“நா ஒனக்குப் பூப் பதித்துத் ததேன், என்னா.”
அப்புக்கிளி மீண்டும் தாழம்புதர்களுக்குச் சென்றான். ஆபிதா மீண்டும் அங்கே தனித்தானாள். * * *
விடுமுறைக்குப் பள்ளியைப் பூட்டுவதற்கு முன்பு ஒரு உல்லாசப் பயணம் செல்லலாம் என்று ரவி குழந்தைகளிடம் சொல்லியிருந்தான். செவ்வாய்க்கிழமை பள்ளி விடும்போது, எங்கே போக வேண்டும் என்று அவர்களிடம் கேட்டான்.
“பாலக்காட்டிய்க்கி, ஸார்,” யாரோ சொன்னார்கள்.
“பாலக்காட்டுல என்ன இருக்கு?” ரவி கேட்டான்.
“கோட்ட.”
“கோர்ட்டு.”
“ஆஸ்பத்திரி.”
“அஞ்சுவௌக்கு.”
பலரும் அப்படிச் சொல்லிச் சென்றார்கள்.
“சரி,” ரவி சொன்னான், “வேறங்க போகறதுக்கு இஷ்டம்னு சொல்லுங்க.”
குஞ்ஞாமினா சிரித்தாள்.
“செதலி மலைக்கிப் போலாம், ஸார்,” அவள் சொன்னாள்.
“செதலிக்கா?” ரவி கேட்டான்.
“செய்க் எஜமாவோட அடக்கஸ்தலத்தப் பாக்குறதுக்கு,” அவள் சொன்னாள்.
“சரி,” ரவி சொன்னான், “நாளைக்கிக் காலயில எல்லாரும் சீக்கிரம் வரணும்.”
மறு நாள், பனியில் நனைந்த புல்லில் மிதித்து அவர்கள் மலையேறினார்கள். பாடலில் விருப்பமுள்ள மங்குஸ்தான் பாடினான்:
“பிஸ்மிய்ம் ஹம்தும் ஸலாத்தும் ஸலாமாலும்
பிண்டெ பிறகெ துடங்நுன்னேன் யா அல்லாஹ் -
தச்ரிபு தானோர் ஸஹாபுல்பதர்மால
தீர்த்துமொழியுவான் ஏகணம் நீ அல்லா -
பச்ரிலும் ஜின்னிலும் ஆகெ முர்ஸலாயி
பான நெபீன்ட தணியும் அருளள்ளா.”
குஞ்ஞாமினாவின் முகம் மங்கி துயரார்ந்தது.
“ஸார்,” அவள் சொன்னாள், “மொல்லாக்காவோட பாட்டு ஸார்.”
மங்குஸ்தான் பாடினான். அந்தத் துதிப் பாடலின் திரிபுகள் மர அடர்வுகள் கடந்து கசாக்கை அடைந்தன. கசாக்கின் பனங்காடுகளில் பத்ரீங்கள் போரிட்டார்கள்.
குழந்தைகள் கூட்டமாகச் சேர்ந்து முன்னால் நடந்தார்கள். குஞ்ஞாமினாவும் ரவியும் பின்னால் நடந்து வந்தார்கள். கூட்டம் தவறிச் சில சமயம் அப்புக்கிளி மட்டும் பின்தங்கினான். ரவியையும் குஞ்ஞாமினாவையும் பின்னால் விட்டு குழந்தைகள் வெகு தூரம் சென்றிருந்தார்கள்.
“மொல்லாக்காவோட பாட்ட நெனக்கிறப்போ,”
குஞ்ஞாமினா சொன்னாள், “அழுக வருது.”
அவள் ரவியுடன் சேர்ந்து நடந்தாள். முகமுயர்த்தி ரவியின் முகத்தைப் பார்த்தாள்.
“பாவம்!” அவள் மீண்டும் சொன்னாள்.
வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளை மாமரங்களின் அடர்ந்த நிழல்.
செதலியின் உச்சியை அடைந்தார்கள். அவர்கள் செதலியின் ஸ்தூபிகளுக்கு முன்னால் நின்றார்கள். செய்கு எஜமானின் சமாதிக்காக காற்றும் மழையும் பத்தாயிரம் வருடம் ராவி ராவி இந்த ஸ்தூபிகளைச் செய்தன. அவை பத்தாயிரம் வருடம் அவற்றைப் பாதுகாத்தன. உலோக அம்சத்தின் இழைகளோடிய அந்தப் பாறைகளுக்குள்ளே குகைத் தளத்தில்தான் தங்ஙள்கள் செய்யத்மியான் ஷெய்க்கைக் குடிவைத்தார்கள். ரவியும் பிள்ளைகளும் ஷெய்கின் அடக்க ஸ்தலத்தில் செம்பு நாணயங்கள் எறிந்தார்கள்.
நேரம் பன்னிரண்டு மணி ஆகியிருந்தது. சிற்றுண்டிக்குப் பிறகு மலையூற்றில் குளியல்.
“பாறையில வழுக்கி விழுந்துடாம ஜாக்கிரதையா இருக்கணும்.” ரவி சொன்னான்.
“ஓ, ஸார்.”
“ஸார் ஸார்,” ஆதம் சொன்னான், “ஒர் பூதமிர்க்கு, ஸார், அந்தத் தண்ணில.”
“ஆமா ஸார்,” ராமன்குட்டி சொன்னான், “தண்ணிப் பூதம் ஸார்.”
“நீர்ப் பறவ உருவமாக்கும், ஸார்,” கதீஜா சொன்னாள்.
“பொய், ஸார்.” கொலுஸு சொன்னாள். “அந்தப் பொண்ணுக்கு பூதத்தோட பிசியம் ஒண்ணுந் தெரியாது, ஸார். அதொரு பாம்புப் பூதமாக்கும் ஸார்.”
“அதுக்கு செறகும் கிரிகிடவும் இரிக்கு, ஸார்.”
“சரி,” ரவி சொன்னான், “யாரும் பூதத்துக்கிட்ட சண்டைக்கிப் போகாதிங்க, கேட்டிங்களா.”
“ஓ, ஸார்.”
பூத்துச் சிவந்த வாகையினடியில் ரவி அமர்ந்தான். சற்று நேரத்திற்குப் பிறகு குஞ்ஞாமினா திரும்பி வந்தாள்.
“என்னா,” ரவி கேட்டான், “தண்ணில குளிக்கப் போகலியா?”
“இல்ல,” அவள் சொன்னாள், “அங்க பூதமிர்க்கும்.”
அவள் பக்கத்தில் வந்து நின்றாள்.
“என்னா ஒனக்கு?” அவன் கேட்டான்.
“நான் இங்க ஒக்காரட்டுமா?” அவள் கேட்டாள் “ஒங்க பக்கத்துல?”
சட்டென்று ரவிக்கு மனம் உருகியது.
“ஒனக்கு என்னா வருத்தம் ஆமினாக்குட்டி?” அவன் கேட்டான்.
“வருத்தம்,” அவள் சொன்னாள்.
ரவி மெதுவாக அவளைத் தன்னோடு சேர்த்தான். அவள் அவன் மடியிலமர்ந்தாள். மடியில் அவள் கனஸ்பரிசம் நிறைவதுபோலத் தோன்றியது.
“போ குஞ்ஞாமினா,” அவன் சொன்னான், “போய்க் குளி.”
அவள் எழுந்து நின்றாள். அவள் கொஞ்சம் தூரம் நடந்து சென்று பிறகு திரும்பி வந்தாள்.
“எனக்கு முடியல,” அவள் சொன்னாள்.
கண்கள் அசாதாரணமாக ஒளிர்ந்தன.
“என்னா செய்யிது?”
அவளொன்றும் பேசவில்லை. இப்போது கண்கள் நிறைந்தொழுகின.
“அய்யோ, பாரு,” ரவி சமாதானப்படுத்த முயன்றான். “அழுவுறியா?”
குஞ்ஞாமினா தன் அடிவயிற்றில் கையழுத்தினாள். அவள் சற்றே முன் சாய்ந்தாள். ரவி அவளைத் தாங்கினான். திடீரென்று வெள்ளித் தண்டையின் மீது, புறங்காலில், குங்குமப் பொட்டுபோல. ரவி முழித்துப் பார்த்தான். மீண்டுமொரு ரத்தத் துளி கீழே விழுந்தது. குஞ்ஞாமினாவைத் தரையில் அமர்த்தியபோது அவள் அழுதாள். ரவியின் உள்ளங்கை நனைந்திருந்தது. அவன் கையை விரித்து இமைக்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். வறண்ட கைரேகைகளுக்கு மேல் ரத்தத்தின் புது மழைத் துளிகள் ஊறிக் கிடந்தன.



ஓ.வி. விஜயன் – ஓர் அறிமுகம்




ஓ. வி. விஜயன் (ஜூலை 2, 1930 – மார்ச் 30, 2005) 
பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.
ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.
கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி  என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது.  1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.
ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.
10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.
கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :
…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.
“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.
“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.
“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.
“அக்காவை மறந்துவிடுவாயா?”
“மாட்டேன்”
“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”
இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.
… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”  
 இக்கட்டுரை ஏப்ரல் 2007 வலம்புரி இதழில் வெளிவந்தது.

http://aadhirah.blogspot.in/2010/05/blog-post.htmlTuesday, May 11, 2010 , Posted by பிறவி at 8:36 AM



















I wish to escape nothing, Ravi answered from within his silence, I want to be the sand of the desert, each grain of sand; I want to be the lake, each minute droplet. I want to be the laya, the dissolution.

From The Legends Of Khasak, 1969



... Long before the lizards, before the dinosaurs, two spores set out on
an incredible journey. They came to a valley bathed in the placid glow
of sunset.
My elder sister, said the little spore to the bigger spore, let us see
what lies beyond.
This valley is green, replied the bigger spore, I shall
journey no farther.
I want to journey, said the little spore, I want to discover. She
gazed in wonder at the path before her.
Will you forget your sister ? asked the bigger spore.
Never, said the little spore.
You will little one, for this is the loveless tale of karma; in it
there is only parting and sorrow.
The little spore journeyed on. The bigger spore stayed back in the
valley. Her root pierced the damp earth and sought the nutrients of death
and memory. She sprouted over the earth, green and contended.
... A girl with silver anklets and eyes prettied with surma came to
Chetali's valley to gather flowers. The Chempaka tree stood alone-
efflorescent, serene. The flower gatherer reached out and held down a soft
twig to pluck the flowers. As the twig broke the Chempaka said, My little
sister you have forgotten me !

- O.V.Vijayan "Legends of Khasak"

Short stories