Thursday 22 January 2015

ரீதி - பூமணி, பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் - S.RENGASAMY - CDMISSMDU



அஞ்ஞாடி... (நாவல்)

பூமணி

பக்கங்கள் : 1,066

விலை: ரூ. 925

க்ரியா பதிப்பகம், 2/25, முதல் தளம், 17- வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை - 41.

தொடர்புக்கு: 044-4202 0283, creapublishers@gmail.com








A FIELD OF MILLION POSSIBILITIES பூமணி என்ற நல்லாசிரியரும், அஞ்ஞாடி என்ற பாடப்புத்தகமும் Poomani as a Teacher and Anjaadi as a Text Book 

POSTED BY S.RENGASAMY - CDMISSMDU AT 4:16 AM 

4/9/13

1
......
இந்தநிலையில் தான் என் மாணவர் வினோத் “அஞ்ஞாடி” வாங்கித்தந்து என்னை படிக்கவைத்தார்.

பூமணியை அதிகம் வாசிக்காமலயே, அவர் மீதிருந்த அபிமானத்தால்தான், அஞ்ஞாடி எனக்கு கனமற்றதாகத் தெரிந்தது. வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம் என்று சிலர் எழுதுவதைப் படித்திருக்கின்றேன். அதை “அஞ்ஞாடி” எனக்கு நிறைவாகத் தந்தது பூமணிக்கு நன்றி.
ஒரு எழுத்தாளன் தன் ஆளுமையை எழுத்தில் வெளிப்படுத்துகின்றான். அஞ்ஞாடி முழுவதும் எந்தவித ஆர்ப்பாட்டமோ, அலட்டலோ இல்லாமல் பூமணி அவ்வளவு இயல்பாக, தான் பார்த்த, தான் வாழ்ந்த சமூகத்தின் மீது வாஞ்சையுடன் வெளிப்படுகின்றார். அது வாழ்வின் மீது தீராக் காதல் கொண்டவர்களாலேயே முடியும். அஞ்ஞாடி பக்குவமடைந்த மனதின் வெளிப்பாடு. அது பக்குவமடைந்த மனதின் வெளிப்பாடு மட்டுமல்ல, படிப்பவர்களையும் பக்குவப்படுத்த எழுதப்பட்ட பாடப் புத்தகம். பாடப் புத்தகங்களில் எழுத்தாளனின் ஆளுமை வெளிப்படக்கூடாதுதான். அதனால்தான், தான் சித்தரிக்கும் கதாபாத்திரங்களின் ஆளுமைகளிலிருந்தே நமக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சூட்சுமத்தை பூமணி கையாண்டுள்ளார்.


கழுகுமலை, சிவகாசிக் கலவரங்களின் போது முக்கிய கதாபாத்திரமான ஆண்டி உயிரோடிருப்பதாகக் காட்டப்படுவதால், அஞ்ஞாடி ஏறக்குறைய 150 வருடகால வாழ்வியலைப் படம்பிடித்துக் (ஒருசில சம்பவங்கள் தவிர) காட்டுவதாகக் கொள்ளலாம். இந்த 150 வருடத்தில்தான் எத்தனை மாற்றங்கள். மனிதர்களைப் பலிவாங்கிய வலிமிகுந்த போராட்டங்கள். சுதேசி ஆள்வோர்களும் சரி, விதேசி ஆள்வோர்களும் சரி மாற்றத்திற்கான நியாயங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமலிருந்த பாராமுகப் போக்கு. கோயிந்தன் போன்றவர்கள் முன்னெடுத்த மாற்றத்திற்கான முஸ்தீபுகள். ஆனால் இந்த மாற்றங்களையெல்லாம் கடந்து, பூமணி செதுக்கியிருக்கின்ற கதாபாத்திரங்கள், இதிகாச கதாபாத்திரங்களைப் போல காலம் கடந்து நிற்கின்றன. நிற்கும்.

Resilience என்ற வார்த்தைப் பிரயோகம் சமூகப் பணியாளர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. அதை இடர்ப்பாடுகளை தாங்கி நிற்கும் வலுவுள்ள, நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய நிலை என்று சொல்லலாம். Resilient Families மற்றும் Resilient Communities ஐ கட்டமைப்பதுதான் சமூகப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால். ஆண்டி-கருப்பி என்ற ஆளுமைகள் தங்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் எப்படி இடர்ப்பாடுகளைத் தாங்கி நிற்கும் வலுவைத் தருகின்றார்கள் என்பதுதான் அஞ்ஞாடி வெளிப்படுத்தும் வாழ்வியல் நெறி. ஆண்டியின் குடும்பம் மட்டுமல்ல, கலிங்கலூருணி மக்கள் கூட அவர்களோடு தொடர்புடைய அனைவரின் resilience-க்கும் உதவுகின்றார்கள். பஞ்சம் பிழைக்க வந்த சண்முக நாடாரின் குடும்பத்திற்காகட்டும், சுந்தர நாயக்கர் மற்றும் ஆண்டாள் என்ற நாயக்கர் பெண்மணிக்காகட்டும், கருத்தையா தன் கூட்டாளிகளுக்கு செய்துகொடுக்கும் ஏற்பாடுகளில் அது வெளிப்படுகின்றது. இதையெல்லாம் செய்வது மிகச் சாதாரண மனிதர்கள்தாம். இதையெல்லாம் இப்படிஇப்படி செய்யவேண்டும் என்று விரிவான ஆய்வுகளுக்குப்பின் பரிந்துரைக்கின்ற கனமான பாடப்புத்தகங்கள் சொல்லும் உத்திகளையெல்லாம் போகிற போக்கில் வெளிப்படுத்தி, நம்மையெல்லாம் அஞ்ஞாடி கதாபாத்திரங்கள் அசர வைக்கின்றார்கள். சிந்திக்கத் தூண்டுகின்றார்கள்.

அஞ்ஞாடி ஆண்டி-மாரியின் நட்பில் தொடங்கும் ஒரு வாழ்வோவியம். அவர்கள் பள்ளர்–வண்ணார் என்பது ஒரு அடையாளம்தான். ஆனால் அந்த அடையாளத்தின் மீது கட்டமைக்கப்படும் மதிப்பீடுகள்....வண்ணாக்குடி, கழுதைகள், வண்ணாந்துறை பற்றி எழுதும்போதெல்லாம் பூமணி விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார். கம்மந்தரிசில் கழுதைகளை மேய்த்துக்கொண்டிருந்த மாரி என்று முதல் பக்கத்தில் தொடங்கும் பூமணி, இறுதியில் 990 ஆம் பக்கத்தில், கலிங்கலில் வாழ்ந்த மாரியின் வம்சவரலாறு என்றுகூட குறிப்பிடாமல், கலிங்கலில் பட்டமாண்ட அல்லத்தானின் வம்சவரலாறு என்று சொற்பிரயோகம் செய்யும் போது, பூமணியின் மனது புரிய வருகின்றது.

பட்டமாண்ட பாளயக்காரர்களெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் மறைந்துபோக, வேறு எந்த ஆதாரங்களுமில்லாத ஒரு வண்ணார் குடும்பம், CPR என்று சொல்லப்படும் Common Property Resources மட்டும் பயன்படுத்தி கிளைவிட்டுப் படர்வது பல பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றது. இதுவரை CPR பற்றி மிகப் பெரிய ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள் சொல்லமறந்ததை எல்லாம் அஞ்ஞாடி சொல்லிச் செல்கின்றது. சலவைத் தொழிலுக்கும், sustainable Development க்கும் தொடர்புகளிருப்பதை களப்பணியினின் மூலம் அறிந்துகொண்டவன். இன்று வரை அவர்களில் பெரும்பாலோர் Common Property Resources ஐ நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். நகரத் தெருக்களின் மரநிழலிலோ, கட்டடங்களின் உயரத்தால் நிழல் விழும் இடங்களிலோ நின்று தொழில்செய்து கொண்டிருக்கும் அயர்ன் வண்டிக்காரர்கள் அதற்கு நல்ல உதாரணம். எந்த ஒரு சேவைத் தொழிலாளியும் - வீட்டு வேலைக்காரர்கள், எலெக்ட்ரீசியன், பிளம்பர் உருவாக்க முடியாத நம்பகத்தன்மையை அவர்கள் சமூகத்தில் உருவாக்கி வைத்துள்ளனர். அவர்கள் எங்கிருந்து வருகின்றார்கள் என்று தெரியாமலே, விலையுயர்ந்த துணிகளை அவர்களிடம் தேய்க்கக் கொடுக்கின்றார்கள். அந்த நம்பிக்கையை அவர்கள் சீர்குழைத்ததாக இதுவரை எந்தப் புகாருமில்லை. இமயத்தின் கோவேறு கழுதைகளை அடுத்து நான் படித்தவரை, வண்ணார்களின் வாழ்வியலை இவ்வளவு கரிசனத்தோடு தமிழ் எழுத்தாளர்கள் யாரேனும் கையாண்டிருக்கின்றார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

மருது சகோதரர்களுக்கும்- ஊமைத்துரைக்கும் இடையிலிருந்த நட்பைவிட, ஆண்டிக்கும்- மாரிக்கும், ஆண்டிக்கும்-பெரிய நாடாருக்கும் இடையே நிலவிய நட்பு நமக்கு ஒரு பாடம். பாளயக்காரர்களின் நட்பை நம்மால் பாவிக்க(Imitate)/பின்பற்ற முடியாது. ஆனால் நாம் நினைத்தால் ஆண்டி-பெரிய நாடாருக்குமிடையே, சுந்தர நாயக்கர்- மாடப்பனுக்குமிடையே, ஆண்டாள்- நெத்திலி வேலம்மாள் இடையே ஏற்பட்ட நட்பை நம்மால் பின்பற்ற முடியும்.
சிவகாசி கலவரத்தில் தன் கணவன் தங்கையாவைப் பறிகொடுத்துவிட்டு, கழுகுமலைக்குத் தன் இருகுழந்தைகளுடன் திரும்புகின்றாள் பெரிய நாடாரின் பேத்தி தெய்வானை. தோளில் கிடக்கும் மகள் இறந்துவிட்டதுகூட அவளுக்குத் தெரியவில்லை. களைத்து, சோர்வுற்று வரும்போது எதிரில் தென்பட்ட ஆட்டுக்காரனிடம் வழிகேட்கிறாள்.
“கழுகுமலை எங்கிருக்குய்யா”
“மேக்க தொலவட்டாச்சே.போறதுக்குள்ளே இருட்டீருமே”
“தெக்க என்ன ஊரு இரிக்குது”
“கலிங்கலூருணி”
“தூரமா”
“எட்டிப்போனா செத்த நேரத்திலே போயிரலாம்”

.....கலிங்கலுக்கு தெய்வானை நடையை விடுகிறாள். ஆண்டிப்பாட்டையா வீட்டிற்கு செல்கின்றாள். ஆண்டிக்குடும்பன் அடைக்கலம் தந்து ஆதரிக்கின்றான். காலம் கடக்கின்றது. கலிங்கலில் நாடார் தெரு உருவாகின்றது. அல்லல் படுவோருக்கு அபயமளிக்க தெய்வீக சக்தியால்தான் முடியுமென்று நம்முடைய இதிகாசங்கள் நம்மை நம்பவைத்துவிட்டது, மாறாக சாதாரண மனிதர்களாலும் அதைச் செய்யமுடியும் என்று பூமணி காட்டும்போது, அபயமளிப்பதற்கு தெய்வ சக்தியோ, தியாகமோ தேவையில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது என்று பூமணி நம்பிக்கை ஏற்படுத்தும்போது, நமக்கும் மனிதனாக, ஆண்டியைப் போல ஆக ஆசைவருகின்றது.

(சத்திரப்பட்டி) சுந்தர நாயக்கர் - மாடப்பக்குடும்பன், மாடனின் மனைவி முத்தம்மா, மகள் சீனித்தாய் இவர்களைச் சுற்றி பின்னப்படும் பாசவலை போன்று எல்லோரையும் பின்னிக்கொண்டால் இவ்வுலகில் எவ்வளவு சமாதானம் உண்டாக்கியிருக்கும். சுந்தர நாயக்கர் தன் மனைவியால் அவமானப்படுத்தப்படுவதாக நினைக்கும் போதெல்லாம், மாடப்பனின் ஆறுதல் வார்த்தைகள், ஒரு குடும்பனின் வார்த்தைகளாக அல்லாமல் ஒரு குருவின் உபதேசமாகவல்லவா வருகின்றது.


“நாளெல்லாம் ஒரே மாதிரி இருந்தே முடியுமா சாமி” (பக் 911) ”காலத்துக்கு தக்க மாரிக்கிறனும் சாமி” “எல்லாம் நல்லா நடக்குதா சந்தோசம்னு பெருந்தன்மையா நெனைச்சுக்கிறனும் சாமி” (பக்.920). மனதை வருடும் இதமான வார்த்தைகள் அதுவும் ஒரு வாலிபனிடமிருந்து வருகின்றது என்பதுதான் மிகப் பெரிய பாடம்.

அதே மாதிரி கலிங்கல் நெத்திலி வேலம்மாள் – வேப்பங்காடு ஆண்டாள் உறவைச் சொல்லவேண்டும். துயருரும் ஒருவர் தன்னிடம் கொட்டித்தீர்ப்பதை யாரிடமும் சொல்லக்கூடாது. Principle of Confidentiality என்பது சமூகப் பணியாளர்களும், Counsellars ம் கடைபிடிக்க வேண்டிய தர்மம். படபடவென்று பேசும் கதாபாத்திரமாக நெத்திலி வேலம்மாள் காட்டப்பட்டாலும், விதவையான ஆண்டாள் உணர்ச்சிகளோடு தோற்று கர்ப்பம் தரிக்க அதைக் கலைப்பதற்கு நெத்திலி உதவினாலும், அதை ஆண்டாளின் பலகீனம் என்றோ, இழுக்கியல்புடையதாகவோ (not attaching any stigma with the people who are suffering) நினைக்காமல் உதவுவதும், அந்த உதவியை சாக்காக வைத்து சலுகைகள் பெறமுயற்சிக்காததும், அந்த இரகசியங்களை காப்பாற்றுவதும் – நெத்திலி வேலம்மாள் சமூகப்பணி பயில்பவர்களுக்கு மிகப் பெரிய முன்னுதாரணம்.


பருவமடைந்த குழந்தைகளை உளவியல் ரீதியாக எப்படி கையாளவேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றோம். ஆனால் வெளிஉலகத் தொடர்பில்லாத ஆண்டியும் கருப்பியும் தங்கள் மகள் வீரம்மாளின் காதலை அங்கீகரிக்கும் போது, படிப்பென்ன மயிர் படிப்பு, Knowledge is structured in consciousness என்ற யோக ஞானத்தின் விளக்கமாக அவர்கள் வாழ்ந்ததை உணரமுடிகின்றது.

நம்முடைய ஞாபகசக்திக்கு சவால்விடுமளவு எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையோட்டத்தில் தேவைப்படுகின்றார்கள். தன் திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம், கருத்தையா பிற சண்டியர்கள் கலிங்கலைக் கொள்ளையடிக்காமல் தடுத்து நிறுத்துவது. புளுகுனியாக, பொறுப்பற்ற இளைஞனாக கோயிந்தன் காட்டப்பட்டாலும், தேங்கிக்கிடக்கும் ஒரு சமூகத்தில் கலாச்சார ரீதியான மாற்றங்களுக்கு வித்திடுவது படிப்பவர்களை நிச்சயமாக சிந்திக்க வைக்கும்.
கொத்துக்கொத்தாக பஞ்சத்திலும், நோயிலும், கலவரங்களிலும் மக்கள் மடிவது நம்முள் பலகேள்விகளை எழுப்பினாலும், அதற்கான விடைகளை நோக்கி சற்றாவது நாம் முன் நகர்ந்திருப்பதாகவே எனக்குப் படுகின்றது. ஆனால் தன் மகன் மாரிமுத்துவின் பாராமுகத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பொம்மக்காள், உவர்க்காட்டுத் தோட்டத்தின் தெலாக்கல்லில் தூக்குப் போட்டுக்கொள்ளும் சர்க்கரை நாடார், தொழுநோயாளியான மரியான் உபதேசியாருக்கு மரணத்திற்குபின் கிடைக்கும் மரியாதை, மரணத்திற்கு முன் கோவிந்தனின் மனநிலை - இந்தச் சம்பவங்கள் எழுப்பும் கேள்விகளுக்கான விடைகள் இன்றளவும் நம்மிடம் இல்லை. அதற்கான விடைகளை நாம் தேடுகின்றோமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால் அஞ்ஞாடி சிலவிடைகளை தொட்டுக்காட்டிச் செல்கின்றது. அது என்ன?

3
ஏதாவது சம்பவத்தையோ, மனிதர்களையோ நினைவுகூறும் போது, “அதுமாதிரி இப்ப எங்கே பார்க்கமுடியுது, அந்த மாதிரி மனுசங்க இப்ப எங்கே இருக்காங்க” என்று கடந்த கால விருப்புணர்வு (nostalgic feeling) மிகும்போது, அந்த சம்பவங்களும், மனிதர்களும் நடைமுறை சாதியமற்றவைகள் என்ற கருத்தே அதிலிருந்து மறைமுகமாக வெளிப்படுகின்றது. கடந்தகால மிகையுணர்வு நிகழ்காலச் சம்பவங்களைப் புரிந்துகொண்டு செயலாற்ற தடையாய் இருந்துவிடுகின்றது. மாறாக அந்த மாதிரியான சம்பவங்கள் காலம் கடந்தும் தொடர்கின்றது, அந்த மாதிரியான மனிதர்கள் இன்றும் நம்முடன் வாழ்கின்றார்கள் என்ற உணர்வு மேலோங்கும்போதுதான், அதிலிருந்து, அவர்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள தயாராகின்றோம். “அஞ்ஞாடி” குறிப்பிடும் சம்பவங்களாகட்டும், சித்தரிக்கும் கதாபாத்திரங்களாகட்டும், காலத்தைக்கடந்து வெவ்வேறு வடிவங்களில் நம்மைத் தொடர்கின்றன. அதை பூமணி எழுத்தாக்கிக் காட்டும் போது, அதை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, “ஓ! அதுமாதிரி தானே இதுவும், அவர்கள் மாதிரிதானே இவர்களும்” என்று நமக்கு புரியவரும் போது, “அஞ்ஞாடி” புதினம் என்ற நிலையிலிருந்து மேலுயர்ந்து நம்மைப் பக்குவப்படுத்தும் பாடப்புத்தகமாகின்றது. நாம் பாடம் கற்றுக்கொள்ள தோதாக அஞ்ஞாடியில் எத்துணை சம்பவங்கள். எத்துணை மனிதர்கள்.

ஆண்டியின் மனைவி கருப்பி கதைப்படி ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டவள். ஆனால் அவள் குழந்தைகளைக் கையாளும் முறை, நூற்றாண்டுப் பழமைக்குப் பதிலாக இன்றுகூட பார்க்க முடிந்த செயலாகத்தான் இருக்கின்றது.

கருப்பி பிள்ளைகளை வளர்த்த விதத்தை பூமணி விளக்குகின்றார்.


“அவள் தன் பேரனை என்னமாக வளர்த்தாள்”......ஒருதடவை பேரனை தலைக்குமேலே தூக்கி அண்ணாந்து கொஞ்சும் போது சரியாக அவள் வாயில் மோண்டுவிட்டான். அவள் பதட்டப்படவில்லை. மோண்டு முடிக்கும் வரை வாயைத் திறந்து காட்டிவிட்டு கொப்புளித்துத் துப்பினாள்”

அதைப் பார்த்த ஆண்டி “நீயென்ன எறும மாட்டுப் பெறவியா” என்று திட்டுகின்றான்.
அதற்கு கருப்பி “ஒனக்கு ஒண்ணும் தெரியாது. புள்ளையை படக்குன்னு எடுத்தா மோத்திரத்தை அடக்கீரும்”

இன்னொரு சம்பவம்...
ஒரு நல்ல நாளன்று கும்பா நெறைய நெல்லுச்சோற்றில் பருப்பாணம் ஊற்றி ஆசையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். பேரன் (பொய்யாளி) நின்றாமானைக்கி கும்பாவில் மோண்டுவிட்டான். அதைப்பார்த்த சொக்கம்மா (கருப்பியின் மருமகள்) “சனியனே ஒனக்கு மோத்திரக் குடுக்கை அந்துபோச்சா” என்று ஓடிவந்து பொய்யாளியை அடிக்கின்றாள்.
அடிதாங்காமல் அழுத பேரனை மடியில் வைத்து அமர்த்தியபடி, அந்த சோற்றை கருப்பி பிசைகின்றாள். சாப்பிட்டு முடித்துவிட்டு அழுது ஓய்ந்திருந்த பேரனைப் பார்க்கின்றாள். ‘பருப்புக்கு கொஞ்சம் உப்பு கூடிப் போச்சுடா” என்கிறாள்.

வலிக்கும் வரை அன்பு செலுத்து (Love Until it Hurts) என்று மதர் தேரெசா பற்றிய புத்தகத்தின் அட்டையப் பார்த்துள்ளேன். வலிக்கும் வரை வேண்டாம். அருவருப்பில்லாமல் இருந்தாலே போதுமே. அன்புக்கு அருவருப்பு கிடையாது.

சில ஆண்டுகளுக்கு முன், தவழ்ந்து திரிந்த எங்கள் வீட்டுப் பாப்பா, தட்டில் வைத்திருந்த பட்டாணியை எடுத்து முழுங்கி விட்டது. தட்டில் வைத்திருந்த பட்டாணியை காணவில்லை என்று தேடியபோது, நான்கைந்து மணிநேரம் கழித்து, அது பாப்பாவின் வயிற்றிலிருந்து ஜீரணமாகமுடியாமல் கழிச்சலாக வெளிவந்தது. பட்டாணியை விட்டுவிட்டு கழிச்சலை மட்டும் வீட்டு நாய் நாக்கிவிட்டுச் சென்றுவிட, கொத்தான பட்டாணி எண்ணை தடவிய பளபளப்புடன் வராண்டாவில் கிடந்திருக்கின்றது. அதைச் சுத்தம் செய்யுமுன், உறவாடிவந்த அம்மையார் அப்பட்டணிகளை எடுத்து தின்ன ஆரம்பித்தார். அதைப் பார்த்து பதறிப் போய், “அதையெடுத்து ஏன் தீங்குறீங்க. அது பாப்பாவோட பீயில் வந்தது” என்று அலற, அவரோ மிக நிதானமாக, “பாப்பா பீயிலே வந்ததுதானே. ஏதோ பாலிடால் தடவுனது மாதிரி ஏன் இந்த அலறு அலறீங்க” என்றாரே பார்க்கலாம்.

கருப்பிகள் என்றைக்கு செத்தார்கள். அவர்கள் செத்தார்கலென்றாள், அஞ்ஞாடி பாசையில், “வொக்காளி இந்த ஓலகம் என்ன மயித்துக்காகுறது”. அவர்கள் காலம் தோறும் வாழ்கின்றார்கள். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டிலும் கருப்பிகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இரண்டு மூன்று கருப்பிகள் ஒருசேர ஒருவீட்டிலிருந்தால் அது பல்கலைக்கழக அந்தஸ்து A+ தரச் சான்றிதழ் பெறுகின்றது.

அடுத்து ஆண்டியைப் பற்றி ஒரு சித்தரிப்பு.

ஆண்டியின் விதைப்பில் பழுதிருக்காது. கருப்பி கையிலும் பழுதிருக்காது. அவர்கள் விதைத்தால் பயிர்கள் எக்காளமிட்டு முளைக்கும். அவர்களின் கைராசியும் நேர்த்தியும் அப்படி.
தங்கள் நிலத்தில் விதைத்துக் கொடுக்க அயலூர்களிலிருந்தும் ஆண்டியைத் தேடி வருவார்கள். இன்ன சாதிக்காரர்கள் என்றில்லை. அவனும் சுணங்காமல் போவான். ஆண்டி எந்த ஊருக்குப் போனாலும் வாய்நிறைய மரியாதை கிடைக்கும். மேல்சாதிக்காரர்கள் கூட அவன் விதைப்பைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.

போகிற ஊர்களிலெல்லாம் “வெள்ளாமையெல்லாம் எப்படீருக்கு” என்று ஆண்டி அக்கறையாக விசாரிப்பான்.

“புள்ளீகளைப் பத்தி வெசாரிக்கிற மாதிரியில்ல வெள்ளாமையைப் பத்தி விசாரிக்கான். அவன் என்ன கஞ்சிக்கில்லாத வெங்கம் பயலா. ஈரனேர்ச் சம்சாரி. ஏகப்பட்ட நிலம். வாழைப்பழம் போல மாடுகள். கெதியான விவசாயம். சொந்த வேலையைப்போட்டுவிட்டு ஊரானுக்கு வெதச்சிக் கொடுக்கனும்னு வேதவதியா?

விதைபுக்காக ஆண்டிக்கோ, கருப்பிக்கோ யாராவது கொத்துக்கூலி கொடுக்கவந்தால் வசவு நாறிவிடும். அடுத்தவர்கள் காட்டில் விதைப்பது பிரியத்தினால். அது அவர்களைப் பிடித்தாட்டிய கிறுக்கு.

தன்னார்வத்தில் செயல்பட்ட அற்புதத் தம்பதியினர் The couple together were great volunteers.
சிலவருடங்களுக்கு முன் ஒரு கலந்துரையாடலுக்காக, நிதி ஒதுக்கீடு இல்லாத ஒரு informal discussion-க்காக தமிழ் நாடறிந்த மதுரை பேராசிரியர்கள் இருவரை தொடர்புகொண்டோம். தமிழ் இலக்கிய/கலாச்சாரப் பின்னணியில் சமூகப்பணி கல்வியைப் புரிந்துகொள்ள செய்யப்பட்ட முயற்சி. அவர்களை எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். நாங்கள் அழைத்துக்கொண்டு வருகின்றோம் என்று ஆர்வமுடன் சொல்லிச்சென்ற மாணவர்கள் வாடிய முகத்துடன் திரும்பினார்கள். என்னவென்று கேட்க, அவங்க ரெண்டு பேரும் சொல்லிவைத்த மாதிரி இரண்டாயிரம் ரூபாய் “கொத்துக்கூலி” கேட்கின்றார்கள் என்று சொல்ல வேறு இரண்டு பேராசிரியர்களை (Prof. EKR of Yadhava College and Prof. PothiReddy of American College) அழைத்து வந்தோம். தன்னார்வத்துடன் செயல்படும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.
இதைவிட மனதை நெகிழ வைத்த சம்பவம்.

கிழக்கு பதிப்பக பத்ரியவர்களுடன் எனக்கு சின்னதாக அறிமுகம் உண்டு. உங்களை மாதிரியான நபர்கள் எங்கள் மாணவர்களிடையே பேசினால் அவர்கள் மேலான செயல்களுக்கு தூண்டப்படுவார்கள் என்று அவரை கல்லூரிக்கு அழைத்தேன். மதுரைக்கு வேறு வேலையாய் வரும்போது மாணவர்களைச் சந்திப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்படி அவர் மதுரைக்கு வந்தபோது “பத்ரியுடன் ஒருநாள்” என்று தலைப்பிட்டு நிகழ்ச்சி நடத்தினோம். அது மாணவர்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்காக “தேங்காய் முடி” (பொன்னாடை போர்த்தியது) வழங்கினோம். நாங்கள் என்ன சொல்லிக் கொடுக்கின்றோம், அதை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆலோசனை சொன்னார். ரயில்வே ஸ்டேஷனில் விட்டு வருகின்றோம் என்றதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் அவரே ஆட்டோ பிடித்துச் சென்றார். அடுத்த சில தினங்களில் அவர்களுடைய System Engineer ஐ சென்னையிலிருந்து அனுப்பிவைத்து, மிகக் குறைந்த செலவில் கல்லூரி கணணிகளுக்கு இணையவசதி எப்படி ஏற்படுத்தலாம் என்று ஆலோசனை சொல்ல அனுப்பினார். அடுத்து கிழக்கு ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.மருதன் அவர்களை அனுப்பி வைத்து, எங்களுடைய அனுபவங்களையெல்லாம் ஆவணப்படுத்தி உலகின் பார்வைக்குக் கொண்டுசெல்ல முடியுமா? என்பதை அறிந்துவர அனுப்பினார். எங்களுக்கு ஒரு செலவும் இல்லை.

ஆண்டியையும் கருப்பியையும் பிடித்தாட்டிய கிறுக்கு அவரையும் பிடித்து ஆட்டுவதை உணர்ந்த இன்னொரு சந்தர்ப்பம். ஆண்டியைவிட பத்ரி இன்னும் மோசமான கிறுக்கு என்பதை பூந்தமல்லிக்கருகிலுள்ள ஜமீன் கொரட்டூர் என்ற கிராமத்தில் அவர் College of Engineering, Guindy, NSS மாணவர்களுடன் செலவிட்ட நேரத்தையும், மற்றதையும் சொல்லலாம். ஆண்டியை மற்றவர்கள் குறிப்பட்டது மாதிரி, வேலைவெட்டி இல்லாதவரா பத்ரி. ஒரு பிரியம். சமூக ஆர்வம்.

அஞ்ஞாடி கதைப்படி ஆண்டி இறந்துவிட்டார்தாம். ஆனால் ஆண்டியைப் போன்ற ஆத்மாக்கள், ஊரெல்லாம் “நல்லது விதைத்துக் கொடுக்க” நம்மிடையே இருக்கின்றார்கள். கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தால் பல ஆண்டிகளை நாம் பார்க்கலாம். விதைத்துச் செல்வதில் மட்டும் அவர்களுக்கு அலாதிப்பிரியம். அறுவடையை நாம் அனுபவித்துக்கொள்ளலாம்.
அஞ்ஞாடி முழுக்க காலம் கடந்துநிற்கும் கதாபாத்திரங்கள்தாம். ஆண்டியின் கொள்ளுப் பேரனாக கோயிந்தன் என்று ஒரு கதாபாத்திரம். மாற்றங்களை மிக மெதுவாக எதிர்கொள்ளும் கலிங்கலில் சடசடவென மாற்றங்களைக் கொண்டுவருகின்றான். சிறுசுகளையும், பெருசுகளையும் கிராப் வெட்டிக்கொள்ள வைக்கின்றான். பெருசுகளின் “பொட்டணத்தை” மறைக்க கோவணம் கட்டவைக்க தந்திரம் செய்து சாதிக்கின்றான். சவுரிமுடி ரகசியத்தை தெரிந்துகொண்டு குளுவன் செவிட்டில் அறைந்து துரத்திவிட்டு அதைப் பற்றி ஜம்பமடிக்காமல் அமைதிகாக்கின்றான். ஊரில் முதன்முதலாக மடமும், வேப்பமரத்தடியில் உட்கார்ந்துபேச மேடையும் கட்டுகின்றான். இளைஞர்களை ஒன்றிணைத்து கூட்டு முயற்சியில் ஈடுபடுகின்றான். கலிங்கலில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும், விதைக்கின்றான். முன்னேற்றப் பணியாளர்களைப் பற்றி பேசும் போது “அவர்கள் முன்னேற்றப் பணியை மகிழ்ச்சிக்குரியதாக்கினார்கள்” என்று ஒரு அறிஞர் குறிப்பிடுவார். (They made development work as a pleasurable one). அது மாதிரி கோயிந்தன் எந்த கோட்பாட்டு வட்டதிற்குள்ளும் சிக்காமல், கலிங்கல் உருள மசகாகின்றான்.

கோயிந்தன் வாய் கூசாமல் சாமிகளைக் கிண்டலடிப்பான். அப்படியொரு குணம். “சாமியைக் கும்புட்டாத்தானே மழ பேயும்” என்பவரிடம் “அப்ப இத்தனை வருஷம் கும்புட்டதெல்லாம் பொய்யா” என்று எதிர்க்கேள்வி போட்டு மடக்குவான்.

ஆனால் அதே நேரத்தில், சத்திரப்பட்டி சக்கிலியக்குடி முனியசாமி மீது மூத்திரம் மோண்டு கொண்டிருந்த கலிங்கல் ஆட்டுக்காரச் சிறுவர்களை ‘ஏலே அகராதி புடிச்ச அறுதச் சிறுக்கி புள்ளீகளா” என்று அவர்கள் மீது கல்லெறிந்து விரட்டுவான்.

“அதை சாமியா என்னன்னு நெனச்சீக. மழைன்னும் பாக்காம வெயிலன்னும் பாக்காம பாவம் அது பாட்டுக்கு ஒத்தியிலே நிக்குது. அதைப் போயி பாடு காங்கீகளே. நாளைக்கு மேச்சாதிக்காரப் பசங்க வந்து ஓங்க சாமி மேல பேண்டுவச்சா என்ன செய்வீக”

“பேண்ட குண்டிய அறுத்து நாய்க்குப் போட்ருவோம்” என்று மோண்டவன் அதட்டலாகச் சொல்ல, “ஒன் மானிய அறுக்குற ஆளில்லங்கிற துமுருள பேசுற. தைரியமான எளவட்டங்கன்னா அங்கயே நில்லுங்க. அத்தன பேரு குஞ்சியவும் அறுத்து காக்காய்க்கு போடுறனா இல்லையான்னு பாரு” என்று கோவத்தோடு கத்துவான்.

கோவணத்தைக் கெட்டிக்கோ, குஞ்சியத்தான் பொத்திக்கோ” என்று பயல்கள் பொச்சைப் பொத்தியபடி ஓடிவிடுவார்கள்.

கோயிந்தனுக்கு சகலரிடமும் இருந்த சௌஜன்யம் கடந்த கால நிகழ்வல்ல. இன்றைக்கும் பல குடியிருப்புகளில் காணக் கிடைப்பதுதான். அதை சமூக மூலதனம் என்கின்றார்கள். இவர்களெல்லாம் ஊருக்கு ஊறுகாயாகவும், வீட்டிற்கு வேப்பங்காயாகவும் இருப்பவர்கள். ஊருக்கு ஒரு கோயிந்தன் இருந்தாகவேண்டும் என்பது சமூகவிதி. இல்லையென்றால் அது ரெவின்யூ பாஸையில் பேச்சற்ற கிராமமாகிவிடும். அவர்களில்லாமல் ஊரில்லை. முன்னேறிய ஊர்களிலெல்லாம், யாரையும் கேட்கவேண்டாம், என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன், அங்கே ஒன்றுக்கும் மேற்பட்ட கோயிந்தன்கள் இருப்பார்கள்.
இன்னும் தொடரும்
படங்கள் நன்றி
 http://vidhaanam.wordpress.com, http://solpudhithu.wordpress.com, http://seyakumaar.wordpress.com
,
POSTED BY S.RENGASAMY - CDMISSMDU AT 4:16 AM 
LABELS: ANJAADI, BADRI SESHADRI, CREA, POOMANI, S.RENGASAMY, VINOD, அஞ்ஞாடி, எஸ்.ரெங்கசாமி, பூமணி

4 COMMENTS:



Thilipan said...
This comment has been removed by the author.
APRIL 9, 2013 AT 6:45 AM

Prabakar J, Kappikulam said...
நான் அஞ்ஞாடி நாவலைப் படிக்கவில்லை. சிறிய புத்தகங்கள் படித்துதான் பழக்கம். இந்த வாசிப்பனுபவம் என்னை அந்த நாவலைப் படிக்கத் தூண்டுகிறது. இது போல வாடிவாசல் என்ற நாவல் பற்றியும் வாசிப்பனுபவத்தை படித்தறிந்தேன். இனி நாவல்களைப் படித்தால் நிறைய அனுபவங்கள் கிடைக்கும். உங்களோடு கற்ற கள அனுபவங்களை உண்மையாக்கும் விதமாக, மேம்படுத்தும் விதமாக இந்த வாசிப்பனுபவம் இருக்கும் என நம்புகின்றேன்.
APRIL 9, 2013 AT 6:48 AM

sons of soil said...
மீண்டும் ஒருமுறை உங்களிடம் மாணவனாக பயில வேண்டும்
APRIL 12, 2013 AT 4:52 AM

Rathnavel Natarajan said...
அல்லல் படுவோருக்கு அபயமளிக்க தெய்வீக சக்தியால்தான் முடியுமென்று நம்முடைய இதிகாசங்கள் நம்மை நம்பவைத்துவிட்டது, மாறாக சாதாரண மனிதர்களாலும் அதைச் செய்யமுடியும் என்று பூமணி காட்டும்போது, அபயமளிப்பதற்கு தெய்வ சக்தியோ, தியாகமோ தேவையில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது என்று பூமணி நம்பிக்கை ஏற்படுத்தும்போது, நமக்கும் மனிதனாக, ஆண்டியைப் போல ஆக ஆசைவருகின்றது. = அஞ்ஞாடி பற்றி அற்புதமான விமர்சனம். திரு பூமணி நம்மை அந்த களத்துக்கே கூட்டிச் செல்கிறார். பஞ்சம் என்றால் நாமும் ஆகாயத்தைப் பார்க்கிறோம். கழுதை தண்ணீரில் இழுத்துப்பட்டு செல்லும் போது நாமும் வேதனைப் படுகிறோம். எனது இனிய முகநூல் நண்பர்கள் இந்த பதிவை கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஆழ்ந்து படிக்க கேட்டுக் கொள்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Srinivasan Rengasamy = சார், உங்களை நினைத்து மிகவும் பெருமைப் படுகிறேன். திரு உதயசங்கர், எழுத்தாளர், கோவில்பட்டி அவர்களிடம் போன் செய்து ஒரு நாள் திரு பூமணி அவர்களை சந்திப்போம் என்று கேட்டிருக்கிறேன்.
SEPTEMBER 16, 2013 AT 7:42 PM
Post a Comment
திரு.சிவராமன் அவர்கள் அஞ்ஞாடிக்கு எழுதிய பின்னுரையில் “ஒரு வாசகன் படைப்பில் தேடுவதும், காண்பதும் உருவாக்கியவனின் மனம் என்ன தரத்திலானது என்பதைத்தான்” என்ற வார்த்தைகள் என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. படைப்பாளாரின் தரம் பனைமரம் மாதிரியோ, சிகரம் மாதிரி நெடுநெடுவென்று உயர்ந்திருந்தாலோ, என்னை மாதிரி நோஞ்சான் வாசகர்கள் (சிவராமன் பாஷையில், கலைப்படைப்புகளின் சிறந்த மாதிரிகளோடு இடைவிடாது தொடர்பு இல்லாதவர்கள்; கடுமையான வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்) உயரம் தொட முடியாது. அண்ணாந்து பார்க்கலாம். அவ்வளவுதான். தமிழிலக்கியத்தில் திருப்புமுனை என்று சொல்லப்பட்ட சில புத்தகங்கள் எனக்கு அவ்வளவாக ஆர்வ மூட்டவில்லை. காரணம் அதன் உயரமாகக்கூட இருந்திருக்கலாம். மாறாக, ஒரு படைப்பை உருவாக்கியவனே அதன் உயரத்தைத் தொடும்படியாக, தன் கதைசொல்லும் திறனால், மொழிநடையால் நமக்கு உதவினால் எப்படியிருக்கும்?.

அஞ்ஞாடியில், நூற்றாண்டுகளின் காலச்சித்திரம் தீட்டி, அதற்குள் ஒரு கதையை வைத்து, கதைக்குள் இன்னும் பல கதைகளையும் கனவுகளையும் வைத்து, வாசகனின் பாஷையிலே பேசி......பூமணி உயரத்தை தொட்டிருக்கின்றார். என்னை மாதிரி வாசகர்கள் அந்த உயரத்தைத் தொடுவதற்குத் தோதாக படிக்கட்டுகள், பிடித்தேற பக்கவாட்டு கைப்பிடிகள், அங்கங்கே மூச்சுவாங்கும் போது சற்று இளைப்பாறிச் செல்ல திண்டுகள் என்று திட்டமிட்டு அமைத்துள்ளார். அஞ்ஞாடி மொத்தத்தையும் 22 பாகங்களாகப் (படலங்களாகப்) பிரித்து, ஒன்றிலிருந்து இன்னொன்று போக, அளவாக படிக்கட்டுகளை (தலைப்புகள்) அமைத்து, ஓய்வெடுக்க திண்டுகளை அமைத்திருந்தாலும், சில பகுதிகள் மிக செங்குத்தாக இருக்க, என்னைப் போன்ற வாசகர்களுக்கு (அவ்வளவாக வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள்) மூச்சுத் திணறத்தான் செய்கின்றது. “நால்லாத்தானே போய்க்கிட்டிருந்தாறு. தீடீர்னு ஏன் நம்மை மூச்சுத்திணற வைக்கின்றாரு” என்று சற்று ஆசுவாசமாக உட்கார்ந்து மேலும், கீழும் பார்க்கும் போது, கீழே அவர் விவரித்துச் சொல்லும் நிலப்பரப்பிற்கும் (கதைக்களத்திற்கும்), மேலே அவர் தொட்டுக்காட்ட நினைக்கும் மதிப்பீடுகளுக்குமான தொடர்பு புலப்படுகின்றது.

கலிங்கல் மற்றும் கழுகுமலையைச் சுற்றி நம் கைபிடித்து “சொகமாக” சுற்றிக்காட்டும் பூமணி, தீடீரென்று பலவேசத்தின் கல்விளைக்கு (நாகர்கோவிலுக்கு அருகில்-படலம்-5) நம்மைத் தூக்கிச் செல்கின்றார். பள்ளர்-வண்ணார்–நாடார்-நாயக்கர் என்ற பிரக்ஞையில்லாத ஆண்டி-மாரி-பெரியநாடார் நட்புக்கிடையில், “மேச்சாதிக்காரனாக இருந்தா எனக்கென்ன! ஞாயமென்னா எல்லோருக்கும் ஒண்ணுதானே” என்று அவர்களுக்கு இணையாக நியாயச் சண்டியராகும் (கலிங்கல் கருத்தையா) அளவிற்கு இடம்கொடுக்கும் கரிசலின் பின்புலத்தைக் காட்டிவிட்டு, திடீரென்று “எந்தா பொலையாடி மவனே தள்ளி நில்லுடே” என்று ஆணவமாகப் பேசும் நாயர்களையும், நம்பூதிரிகளையும் நமக்கு காட்டும்போது “இங்கே எதுக்கு நம்மை கூட்டியாந்தாறு” என்று யோசிக்க வைக்கின்றார். தங்கள் மார்புகளைக்கூட மறைக்கும் உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களிடமிருந்து பலவேசம் என்ற மனிதனைப் பிரித்துக்கொண்டு வந்து கழுகுமலையில் நடுகின்றார்.

5

பலவேசம் என்ற கதாபாத்திரம் ஒரு அர்த்தமுள்ள குறியீடு. தங்கள் மீது சுமத்தப்பட்ட எல்லாச் சிறுமைகளையும் தாங்கிக் கொண்டு, எத்தனை விதமான போராட்ட முறைகள் இருந்தனவோ அத்தனையையும் கையாண்டு, மதம் மாறியதிலிருந்து, பிரிட்டிஷ் மகாராணிக்கு மனுச்செய்து கொள்வது வரை, “கோயிலுக்குள்ளே போற காலமும் வராமயா போயிடும்” என்று சளைக்காமல் போராடிய ஒரு குழுவின் கம்பீரமான வரலாற்றை தொடங்கிவைக்க பூமணி கையாண்ட கதாபாத்திரம்தான் பலவேச நாடர். ஒன்றுமில்லாமல் கழுகுமலைக்கு வந்து, தலைச்சுமையாக கருப்பட்டி விற்று, பின் பொதிமாடு வாங்கி, பின் ஒத்தைமாட்டு வண்டி, ரெட்டைமாட்டு வண்டி என்று பலவேசத்தின் வளர்ச்சியோடு, வண்டிப்பேட்டை தொடங்கி நாடார்கள் நாலா திக்கிலும் பரவி, ‘தெராசு பிடிச்சாத்தான் யேவரமா. இது புது யேவாரம்” என்று புதுத் தொழில்களில் ஈடுபட்டு, அருப்புக்கோட்டை, கமுதி, கழுகுமலை, சிவகாசி என்று அவர்கள் அனுபவித்த வலியையெல்லாம் மறந்து, “பழசை எதுக்குக் கிண்டி கெளரிச் சங்கடப்படனும்” “மறந்தாத்தானே ஆத்துமா சமாதானமடையமுடியும். முன்னேறமுடியும்” என்று அவர்களின் மனோபாவத்தை வார்த்தைகளாக்கிக் காட்டும்போது......கல்விளைக்கு ஏன் நம்மைக் கூட்டிச் சென்றார் என்று கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு புரிய வரும் போது, பூமணியின் தரத்திலும், உயரத்திலும் பிரமித்து நிற்பதைத் தவிர வழியில்லை.

அதேமாதிரிதான் படலங்கள் 7,8,9,10. விரிவான வாசிப்புப் பழக்கம் இல்லாத என்போன்ற வாசகர்களுக்கு, மிகவும் செங்குத்தாக மூச்சுதிணறித் திணறி ஏறும்படி அமைந்திருந்தாலும், சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோசித்தால், பூமணி விவரிக்கும் வரலாற்றிற்கும், சொல்லவந்த கதைக்களத்திற்கும் உள்ள தொடர்பு புரியவருகின்றது. சிலுவைப் போர்களைப் பற்றி நமக்குத் தெரிந்த அளவு, கத்தோலிக்க-பிராட்டஸ்டண்டு பிரிவுகளுக்கிடையே நடந்த மோதலைத் தெரிந்திருக்கின்ற அளவு, ஜைன-சைவ மோதலைப் பற்றி, ஆயிரக்கணக்கில் அப்பாவிகள் அவர்கள் நம்பிக்கையின் பொருட்டு கழுவேற்றப்பட்டது குறித்து நமக்குத் தெரிந்திருக்கவில்லை. சாதாரண மக்களின் வாழ்க்கையென்பது, நாடு பிடித்தலுக்கும், மக்களின் நம்பிக்கையைப் பிடித்தலுக்குமான அதிகாரப் போராட்டத்தின் ஆடுகளம்போல்தான் கடந்தகாலங்கள் இருந்திருக்கின்றது. நமது நம்பிக்கைகள்தான் நம்மை வழிநடத்தியிருக்கின்றதென்றாலும், அதே நம்பிக்கைகள்தான் நம்மை மூச்சுத் திணறவும் வைத்தது என்பதை பூமணி தொட்டுக்காட்டிச் செல்கின்றார். விரிவான வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், வரலாற்று எழுத்து நடைதவிர்த்து, பாமர நடையில் பூமணி சிலவற்றைச் சொல்லிச்செல்லும் போது அதன் அழகை, என்னைப் போன்றவர்களைவிட இன்னும் கூடுதலாக அனுபவிப்பார்கள்.

6
பாண்டியர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையங்கள் உருவானது, முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வருகை, ஜமீன்கள் உருவானது.... அஞ்ஞாடியில் சித்தரிக்கப்படும் வாழ்வெல்லாம் இந்த வரலாற்றின் எச்சங்களே. கடந்தகாலத்தில் மட்டுமல்ல, இப்போதும்கூட கலவரங்களும், சமாதானமின்மையும் முன்னேற்றத்தை முற்றிலும் முடக்க முடியாவிட்டாலும், அதை நிச்சயமாகத் தாமதப்படுத்தும். சிறிதும் பெரிதுமான உள்நாட்டுப்(பாளையங்களுக்கிடையே)போர்கள், நம்பிக்கைத் துரோகங்கள், அரண்மனைகளுக்குள்ளே நடந்த கண்ணாமூச்சி விளையாட்டுகள், சகோதரத் துரோகங்கள், அரண்மனைகளுக்கு நெருக்கமாயிருந்தவர்களின் அத்துமீறல்கள், ஆள்வோர்களின் ஸ்திரத் தன்மை கேள்விக்குறியாகும் போது, அது சாதாரண மக்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதித்திருக்கும் என்பதை நம்முடைய மனமுதிர்ச்சிக்கு ஏற்ப யூகித்துக் கொள்ளும்படி பூமணி விட்டுவிடுகின்றார். தங்களுடைய கோவணத்தை யாரும் உருவிவிடக்கூடாது என்று சமஸ்தானங்களும், பாளையக்காரர்களும், ஜமீந்தார்களும் பயந்திருந்த போது, மக்களாவது மண்ணாங்கட்டியாவது.

தன்னுடைய மதத்தைச் சார்ந்தவர்களே கூட்டம்கூட்டமாக மாற்று மதத்திற்கு மாறிக்கொண்டிருந்தபோது, “கீச்சாதிப் பயலுகதானே போனாப் போறாங்க” என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சமஸ்தானங்களையும், பாளையங்களையும் ஆன்மீகம் வளர்த்தார்கள் என்று சொன்னால், “வொக்காளி! அவனுக என்னத்தை ஆன்மீகம் வளர்த்தாணுகளோ” என்று யாருக்காவது கோபம் வந்தால் அதை நியாயமற்றது என்றும் தள்ளிவிட முடியாது.

ஆவணச் சான்றுகளின் அடிப்படையிலே பெரும்பாலும் கடந்தகால வரலாற்றைப் பூமணி அணுகுகின்றார். கதாபாத்திரங்கள் உரையாடிக்கொண்டது வேண்டுமானால் பூமணியின் புனைவாக இருக்கலாம். ஆனால் அந்தக் கதாபாத்திரங்களில் பலர் உண்மையில் வாழ்ந்தவர்கள். வீரபாண்டிய கட்டபொம்மனை, ஊமத்துரையை, வெள்ளையர்களுடன் அவர்கள் போரிட்டதை “முதல் விடுதலைப் போராக” பூமணிக்கு முன்னரே பல வடிவங்களில் ஆவணப்படுத்திவிட்டார்கள். அதையெல்லாம் பார்த்தவர்களுக்கும், படித்தவர்களுக்குத்தான் தெரியும், அவர்கள் சொல்ல மறந்ததில் எதையெல்லாம் பூமணி சொல்லமுயன்றிருக்கின்றார், ஏற்கனவே சொல்லப்பட்ட செய்திகளுக்கு எப்படி அர்த்தம் கூட்டியிருக்கின்றார் என்பது. எனக்கென்னவோ கடந்த கால வரலாற்றோடு, சமீபகால வரலாற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்படியான ஒரு தளத்தை, வாய்ப்பை பூமணி உருவாக்கிக் கொடுத்திருப்பதாகவே படுகின்றது. “தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம்” என்ற ராஜ்மகாலின் விளம்பர வாசகம் போல், பல மாச்சரியங்களை இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டலைகின்ற நமது கோட்டித்தனத்தை பூமணி நாசூக்காகச் சொல்லும் போது நமக்கே சிரிப்பு வருகின்றது. .

7

கழுகுமலையில் ஏற்பட்டது திடீர்க் கலவரம். சட்டென்று ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி, தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் (ஜமீன் மேனேஜர்), நாடர்களையும் சேர்த்தே பழிதீர்த்துக் கொண்ட வஞ்சகம். ஆனால் சிவகாசிக் கலவரம் திட்டமிடப்பட்டது. அந்த திட்டத்தை நாடர்கள் எப்படி முறியடித்தார்கள் என்பது பெரிய பாடம். “வேலும் மயிலும் துணை” என்று கோஷமிட்டுக்கொண்டு, வெள்ளையர்களை ஊமத்துரை பாடுகண்ட மனதைரியத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல சிவகாசிக் கலவரத்தை நாடார்கள் எதிர்கொண்ட தீரம்.

“பிடிக்கலன்னா வேதத்துக்கு ஓடிப்போயி ஒதுங்கிக்கோ. இங்கிருந்தா இப்படித்தான். காலங்காலமா இருந்து வாற வழக்கத்த ஓதறித்தள்ளீட்டு ஒன்னோட கூடிக் கொலாவ முடியாது. அணிலு கொப்புலதான் ஆம கெணத்துல தான். மத்த கீச்சாதிக்காரனெல்லாம் இப்படியா முண்டீட்டு தோரணி பண்றான். பொச்சப் பொத்திக்கிட்டுக் கெடக்க வேண்டியதுதான்” (709) இதை பூமணியின் கற்பனை என்று ஒதுக்கி தள்ளிவிடமுடியாது. இது கடந்த காலத்தில் நாடர்கள் அனுபவித்த உண்மை.

அத்தனை ஜாதியினரும், ஏன் மதம் மாறிய கிறிஸ்தவ நாடார்களும் கூட பயந்து ஒதுங்கிக் கொள்ள, சிவகாசி இந்து நாடார்கள் மட்டும் தனித்து விடப்படுகின்றார்கள். சிவகாசி கோயில் நூழைவுப் போராட்டத்தில் முக்கிய பங்குவகித்த செம்புக்குட்டி நாடார், “நான் பனையேறியில்லடா. படியேறி. செவங்கோயில் படியேறம இந்த செம்புக்குட்டி ஓயமாட்டான்.....நான் சாதாரண செம்புக்குட்டி நாடான்னு நெனைச்சயா. நான் செம்பகப் பாண்டியண்டா” என்ற அவரின் கர்ஜனை கட்டபொம்மு ஜாக்சன் துரையிடம் கர்ஜித்ததைவிட உணர்வுபூர்வமானது. அதைவிட ஒருபடி உயர்ந்தது. கட்டபொம்மனாவது தன் அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள ஆவேசப்பட்டான். அவனுள் விடுதலை வேட்கையோடு, சுயநலமும் கூட இருந்தது அவனுக்கு உதவ பலர் இருந்தனர். ஆனால் சிவகாசியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் “செவங் கோயில் படியேறம இந்த செம்புக்குட்டி ஓயமாட்டான்” என்ற கர்ஜனையில் சுத்த தரிசனத்திற்கான தேடல் மட்டுமே இருந்தது. இதைவிட ஒரு உயர்வான ஆத்மத் தேடலை யாராவது ஆவனப்படுத்தியிருக்கின்றார்களா என்ன? செம்புக்குட்டி நாடாரை 63 நாயன்மார்களோடு 64 வது நாயன்மாராக வைத்து வழிபட்டாலும் அதில் ஒன்றும் தவறில்லை.
“வேலும் மயிலும் துணை” என்ற மந்திரத்தை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டு வெள்ளையர்களின் பீரங்கிகளை பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் எதிர்கொண்டது மாதிரி, “காளியும் மாரியும் நமக்கு தொணையிருக்கும்போது கவலையெதுக்கு” என்ற தைரியத்துடன் நாடார்கள் களமிறங்கினார்கள். கலகக்காரர்களை, நாடார்கள் எதிர்கொண்ட விதத்தை பூமணி விவரிக்கும் போது, கலகக்காரர்களைவிட எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த நாடார்களின் நெஞ்சங்களிலும், ஆயுதங்களிலும் அவர்கள் நம்பியது மாதிரி, காளியும், மாரியும் குடிகொண்டுவிட, அவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், “காளியே கோவங்கொண்டு துரத்துவதாக” கலகக்காரர்கள் ஊரை விட்டு ஓடினர்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கைப்பற்றி, இடித்துத் தரைமட்டமாக்கி, உழுது, அடையாளத்தை மறைக்க ஆமணக்கை விதைத்தான் வெள்ளையன். நூறாண்டுகளுக்குப் பின்னே அரசு முயற்சி எடுத்து அங்கே நினைவுச் சின்னம் எழுப்பியபின்தான் அவ்விடத்திற்கு உயிர் வந்தது. ஆனால் யாருடைய உதவியும் இல்லாமல் சிவகாசி நாடார்கள் மீண்டெழுந்தார்கள்.

கட்டபொம்மன் வசனத்தை இன்றும் நாம் மறக்காமல் பேசிக்கொண்டிருக்கின்றோம். அந்த வசனத்தை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூறுவது, தேச பக்தியை நீர்த்துப் போகாமல் வைத்திருக்கவா? இல்லை நம்முடைய இயலாமையை மறைக்க கையாளும் உத்தியா? ஆனால் சிவகாசிக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களே அதை மறந்துவிட்டார்கள். “மறக்கப்போயித்தானே இம்புட்டுக்கு முன்னேறியிருக்காக” என்று அஞ்ஞாடியில் (904) வரும் உரையாடல் நம்முடைய மதிப்பீடுகள் பலவற்றை  காலத்திற்கேற்றவாறு கட்டமைத்துக்கொள்ள வற்புறுத்துகின்றது.

சிவகாசி கலவரத்திற்குப் பின்னும் நாடார்கள் நீண்டகாலம் பொறுமை காத்தார்கள். மக்கள் மக்களாக இருந்தவரை மாற்றங்கள் மெதுவாக நடக்கின்றது. ஆனால் மக்கள் வாக்காளர்களாக, தொழிலாளர்களாக, நுகர்வோர்களாக உருமாறும்போது மாற்றங்கள் வேகம் கொள்கின்றன. ஓட்டு வாங்குவதற்குத்தான் கோயிலைத் திறந்துவிட்டார்கள் என்பதை பூமணி நாசூக்காக சொல்லிச்செல்லும் போது, அதை ஒட்டுப்பொருக்கிகளின் சூழ்ச்சி என்ற அவநம்பிக்கையோடு நிறுத்தாமல், மாறாக ஜனநாயகம் நடைமுறைக்கு வரவர, மக்களின் அபிலாட்சைகளை ஆள்வோர் அங்கீகரிக்கத் தொடங்கி விட்டதை பூமணி நமக்கு புரியவைக்க முயற்சி செய்கின்றார். நாம் கண்டடைந்த ஜனநாயகம் குறைபாடுகள் அற்றதல்ல. இருப்பினும், கலிங்கல் மயானத்தில், ஆண்டியும் கருப்பியும் குழிக்குவெளியே அட்ணக்கால்போட்டு வெயில்காய்ந்து கொண்டிருக்கும் போது, ஆண்டி கருப்பியிடம் “ஏ கழுத. எதுவும் கெட்டுப்போகல. முன்னேறியிருக்கு’ என்று சொல்வதைப் படிக்கும்போது, “வொக்காளி! இதைவிட மேலாக இந்த மண்ணையும், இந்த மண்ணில் ஏற்பட்ட சகல மாற்றங்களையும்  மகிமைப்படுத்தமுடியுமா? என்ற பிரமிப்பிலிருந்து மீளமுடியவில்லை. நூற்றாண்டுகால இந்த மண்ணின் வரலாற்றை உள்வாங்கி, தன் நாடி நரம்புகளிலெல்லாம் கரைத்து, ஞானக்கரைசலாக்கி, ஞானிகளின், அரசர்களின், புலவர்களின் வார்த்தைகளாக அல்ல, சாதாரண மக்களின் வார்த்தைகளாக, பூமணி வெளிப்படுத்தும்போது நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை.

8

நான் அஞ்ஞாடியை ஒரு பாடப்புத்தகமாகத்தான் பார்த்தேன். எந்த ஒரு மாணவனும் பாடப்புத்தகத்தில் பொருளடக்கத்தையே முதலில் பார்ப்பான். அஞ்ஞாடியில் அப்படியான பொருளடக்கம் இல்லை. பல தமிழ் இலக்கியப் படைப்புகளில் பொருளடக்கம் இல்லை என்பது உண்மை. அது தேவையற்றதென கூட பதிப்பாளர்கள் நினைத்திருக்கலாம். பொருளடக்கமும், சொற்பட்டியல்/பெயர்ப் பட்டியல் வாசிப்பதற்கும், வாசித்த பகுதிகளைக் மறு வாசிப்பு செய்யவும் வாசகனுக்கு உதவும். அதனால், என்னுடைய புரிதலை ஆழமாக்க எனக்குப் பயன்படுகின்ற மாதிரி அஞ்ஞாடிக்கான பொருளடக்கம் தயார் செய்தேன். அதை இங்கு தந்துள்ளேன். இந்தப் பொருளடக்கம் அஞ்ஞாடியை இனிமேல் வாசிப்பவர்களுக்கு உதவலாம்.

அஞ்ஞாடி 22 படலங்களாகவும், ஒவ்வொரு படலமும் பல்வேறு தலைப்புகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பொருளடக்கம் கொடுக்கப்படாததால் நமக்கு பிடித்த பகுதிகளை தேடுவதற்கு மெனக்கெட வேண்டியிருக்கின்றது அந்த குறைபாட்டைக் களையவே இப் பொருளடக்கம் கொடுக்கப்படுகின்றது
படலம் 1 1-112
படலம் 10 487-540
படலம் 17. 794-824
1. கண்ணுக்குட்டியும் கழுதைக்குட்டியும்
1. தகர்ந்தது பாளையம்
1.பிண வாடை
1. தண்ணிப் பேயி
2. தடுமாறும் உறவுகள்
2.கிழக்குச் சீமை
2. ருசியாயிருக்குதா
3. மைனர் ராசா
3. கோழிக்கொள்ளை
3. அவுத்துக்கிருச்சாம் கழுத
4. அரண்மனை விவகாரம்
4. மேலச்சீமை
4. கட்டுத்துறை விட்டு வெளியேறி
5. வந்தாரைய வெங்கட்ராயர்
5. கோயில்கள் எரிந்தன
5. கூனையிலே பதனியாம்.
6. புது வழி
6. பாவா பாவா
6. அடித்தட்டு விளையாட்டு
7. பரலோக மாதவே
8. நடை திறப்பு
7. அடிவானம் வெளுத்துருச்சு
8. வேத போதம்
9. தடையும் தண்டமும்
8. கஞ்சி போடுங்கஞ்ஜா
9. ஊர் புதுசு கோயில் புதுசு
10. குற்றப் பத்திரிகை
9. எம்பிளி கருப்பி
10. சோறு வேணாம் துணி வேணாம்
11. குற்றமும் தண்டனையும்
10. போயிட்டயே கழுத ஓதஞ்சான்
11. அல்லேலூயா
படலம் 18. 824-880
11. புது மூச்சு
படலம் 11 540 – 605
1. முளைக் கீரை
12. இப்படியும் உண்டுமா
1. அருமுருக்கு
2. ஆப்பு
13. மஞ்சனத்திப் பூக்கள்
2. கண்டனமாக்கி ஓடும் காலம்
3. அரவக் கருடனார் உலா
14. கதகதயாம்
3. உன்னைக் கழுவுகின்றேன்
4. இறக்கம்
15. போடி அனந்தி
4. தேரும் குருத்தும்
5.ஆலமரம் சாஞ்சது
படலம் 2 113-159
5. நீக்கிரகம் பண்ணுவேன்
6. நாடார் தோட்டம்
1. வாங்க மக்கா
6. பாவத்தின் சம்பளம்
7. பணமும் கோயிலும்
2. கேளுங்க மக்கா
7. சிலுவைப்பாடு
8. தப்பித் திரிந்தவர்கள்
3. வனவாசம்
8. தேரோட்டம்
9.பல்லாக்குச் சுமை
4. வயித்துப் பாடு
9. அவ்வளவுக்காயிப் போச்சா
10.தீட்டுச் சிலுவை
5. மதியக் குளிப்பு
10. வாக்குமூலம்
11.சீமையிலிருந்து சேதி
6. நல்லாருப்ப தாயீ
11. என் அஞ்ஞயிள்ளே
12.சம்சாரி வேலையா
7. கருத்தையன் பெண்டாட்டி
12. பிரேத விசாரணை
13.புகையும் நெருப்பும்
படலம் 159-212
13. அடுத்தகட்டம்
14.ரெண்டு பங்கு
1. பாளையறுவாள்
14. அடையாளப் பேரேடு
15.முகாவெட்டு.
2. கும்பிய கருப்பட்டி
15. விசாரணையும் விசாரமும்
16.அடுப்பு அடுப்பே
3. பனையும் துணையும்
படலம் 12 605-647
படலம் 19 881-905
4. வெள்ளைப் பேத்தி
1. விசாரிக்கப்படாத கதை
1.கதவு திறந்தது
5. நல்ல பொண்ணுதான்
2. அமைய மாட்டாங்காளே
2. புது மீனாட்சி
6. பருசம் வேலம்புங்க
3. நீதியின் தேவனே
3.தானான தனனன்னா
7. என்னைப் பெத்த அப்பன்
4. சிறைவாசம்
4. நில்லும் பிள்ளாய்
8. பட்டணப் பிரவேசம்
5. ரெட்ட வெள்ளாவி
5. தள்ளிப் போட்டிருக்கலாமே
படலம் 4 212- 260
6. ஆத்தும விடுதலை
6. அடடா...
1. தாது வந்தது.
7.ஏகசுதன் உயிர்த்தெழுந்தார்
7. விடிஞ்ச பின்னே
2. தண்ணீரும் கண்ணீரும்
8.அடியே மாடத்தி
படலம் 20. 906-952
3. சின்னஞ் சிறுசுகள்
9.மாதவுக்கு மாற்றுமனை
1. அண்ணைக்குப் பாத்த முகம்
4. மாண்டதும் மீண்டதும்
10.வாறென் இவனே
2. நாடாக்கமார் தெரு
5. மேகாட்டு நெல்
படலம்.13. 647-672
3.முறிவு
6. கால மழை பொழிஞ்சது
1. கூடை தொடேன்
4.குடல் கழுவி
படலம் 5 261-308
2. நெய்தல் மகன்
5.நெல்லுச் சோறு
1. கோயிலும் குளமும்
3. பாலையின் தோழன்
6.நெத்திலி
2. பொலையாடி மவளே
4.முல்லையின் பிள்ளை
7.சோளத்தட்டை
3. தீமிதி
5.மனசெல்லாம் மருதம்
8.வெலபோயிட்டானே
4. வந்த இடமே சொந்தம்.
6.குறிஞ்சி மனம்
9. பிடிமானம்
5. கோயிலைத் தேடி
7.வணிக உழவன்
10. வெறிச்சோடிய திருணை
6. வடலிவளர்த்து
8.நெடும்பயணம்
படலம்.21. 953-1002
படலம் 6 308-386
9. பாண்டியக் காலடிகள்
1. ஆகமான சவரிமுடி
1. செல்லக் கொடி
10. சிறுக்குளம் பெருக்கி
2. தேவ மாதா
2. நித்திரையும் ஆனதென்ன
படலம் 14. 672-707
3. வாழப் பிறந்தவளே
3. கட்டுச்சோறும் எலியும்
1.மேலைக்கூவல்
4. உப்புச் சக்கரை
4. எலிக்கூத்து
2.வெயிலும் மழையும்
5. வேதப் பள்ளிக்கூடம்
5. வெளையாடி முடிச்சாச்சி
3.ஊடு பட்டம்
6. அலைச்சலும் உலைச்சலும்
6. கருப்புக் கானா
4.கர்த்தரின் பந்தியில் வா
7. ஒப்புவதாரடி ஞானப்பெண்ணே
7. ஊர்க்குடும்பு
5.முதல் கனி
8. கழுத்துப் புண்
8. வீடாள வந்தவளே
6.வேதச் சாதி.
9. கண்டுகொண்டேன்
9. அந்தா போராண்டா
7.காட்டுவழி நெடுக
10. வண்ணாக்குடி வம்சாவளி
10. சிறகு முற்றி
8.இதோ வெட்டுங்கள்
11. அடிவகுத்துக் கொடியறுத்து
படலம் 7 386- 412
9.ஆறுதல் அடை மனமே
12. காக்கா முட்டை
1. பிஞ்சுப் பழம்
10.வேத வெள்ளாமை
படலம் 22 1002-1050
2. அரகர அரகர
11.அந்தரங்கம்
1. தொலைந்து போனது
3. அருகா முருகா
படலம் 15. 708-734
2. தங்கையா கூட்டம்
4. அரை மலை
1.ஆம கெணத்துலதான்
3. பாவ சங்கீர்த்தனம்
5. மோனத் திருமேனிகள்
2.தீவட்டிக் கொழுத்தி.
4. என்ன எழவு உறவோ
6. அமணச் சுவடுகள்
3.கொலையுண்ட நந்தவனம்
5. கழுதகளைக் காணலயே
படலம் 8 412-446
4.எங்கே வைப்பது
6. அலச்சல் தீரலயே
1. கழுகுமலை தேடிவரும்
5.முன்னோட்டம்
7. வாழைத்தார்
2. எட்டப்பவம்சம்
6.பதட்டமும் ஆவலாதியும்
8. தொட்டிவீடு
3. ரத்தமானியம்
7.கூடிக்கலையும் மேகங்கள்
9. மறப்பும் நினப்பும்
4. வடுகபாண்டியர்
8.வருத்தமே மிஞ்சியது.
10. ஆறுக்கு மூணடியாம்
5. கைமாறும் அதிகாரம்
படலம் 16. 734-791
6. சிவசங்கரன் பிள்ளை ஓடை
1.தனிமரம்
நன்றி 1051 -1053
7. எட்டனும் கட்டனும்
2.நெருங்கி நெருங்கி
பின்னுரை 1054-1066
8. சும்மா கெடக்காது சிங்கம்
3.தன் கையே
படலம் 9 446-487
4.வா மச்சான் வா
1. ஊமைக் கனல்
5.தொடரும் வேட்டை
2. உடைந்தது சிறை எழுந்தது கோட்டை
6. போதகரும் ஆதரவும்
3. முன்னேறிப் பின்வாங்கி
7. கடைசி நம்பிக்கை
4. வெற்றிமேல் வெற்றி
8. ஆயுத முளைப்பாறி
5. ஆயுத வேட்டை
9.முற்றுகை
6. போர் முழக்கம்
10.படுகளம்
7. பறந்துவிட்ட ராசாளி
11. தும்பை விட்டு.
8. அஞ்ஞாடி வந்துட்டானே
12. பிணக்கணக்கு
9. சிவகங்கை தேடி
13. சுட்டாலும் சும்மா இருந்தாலும்
10. பேசிப் பிரிந்த கைகள்
14.மரண ஓலம்
11. காளேசுரா
15.பம்மாத்து
12. பிரயச்சித்தம்
16.கழுகுமலைக்கு போவலைய்யா
9
அஞ்ஞாடியின் பலமும், பலகீனமும் நம் ஞாபகத்திற்கு சவால்விடுமளவு நடமாடும் கதாபாத்திரங்களே. அவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொண்டு கதைத் தொடர்ச்சியை புரிந்துகொள்வது சற்று சிரமமானதுதான். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதையோட்டத்தில் முக்கியப்பங்கிருக்கின்றது. இந்தகுழப்பத்தைத் தவிர்க்க கதாபாத்திரங்களை அவர்கள் வம்சா வழிப்படி புரிந்துகொண்டேன். ஆண்டி வம்சம், மாரி வம்சம், பெரியநாடார் வம்சம், உத்தண்டு,  தூங்கன், மொங்கன் வம்சம், சத்திரப்பட்டி சுந்தர நாயக்கர் குடும்பம், வேப்பங்காடு ஆண்டாள் குடும்பம் என்று வகைப்படுத்திக்கொண்டேன். அதே மாதிரிதான் கிறிஸ்தவ மத போதகர்களையும் புரிந்துகொள்ள முயற்சிசெய்தேன். என் புரிதலையொட்டி சில வம்சாவளிப் பட்டியலை தயாரித்தேன். இந்த வம்சாவளிப் பட்டியல் அஞ்ஞாடி கதாபாத்திரங்களை சட்டென்று அடையாளம் காணவும், மொத்தக் கதையோட்டத்தில் அவர்கள் பங்கை இரசிக்கவும், அசைபோடவும் உதவும். அஞ்ஞாடியை ஒரு புதினமாகப் பார்த்திருந்தால் இந்த வேலையில் ஈடுபட்டிருக்க மாட்டேன். அதைப் பாடபுத்தகமாகப் பார்த்ததன் விளைவு.
Andi Vamsaavali New
மாரி வம்சம்
பெரிய நாடார்
பிற வம்சம்

10

மேலைநாட்டு கல்லூரி ஆசிரியர்கள், ஒரு பாடத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு புத்தகத்தை, அத்தியாயம் வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு அத்தியாயமும் என்ன சொல்லவருகின்றது என்பதன் சுருக்கத்தையும், அதோடு தொடர்புடைய மற்ற புத்தகப் பட்டியலையும் power point presentation ஆக தருவதை இணையத்தில் பார்த்திருக்கின்றேன். அது மூலப் புத்தகத்தை படிக்க மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் உத்தி. எனக்கும் அஞ்ஞாடி புத்தகத்திற்கு அது மாதிரி குறிப்புகள் கொடுக்க ஆசைதான். அஞ்ஞாடி கதைக்களத்தின் வரைபடங்களை- கலிங்கலூருணியில், கழுகுமலையில், சிவகாசியில் கதை நடந்த இடங்களை, அந்த இடத்தோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை ஒரு GIS Presentation ஆக்க ஆசைதான். பார்க்கலாம்.நான் செய்யாவிட்டாலும் யாராவது செய்வார்கள்.
http://tamil.thehindu.com/general/literature/
பூமணியுடன்-ஒரு-சந்திப்பு-சாகித்ய-விருதால-பெருமைப்பட-ஏதுமில்ல/article6710857.ece


தமிழின் மகத்தான படைப்புகளுள் ஒன்றான பூமணியின் ‘அஞ்ஞாடி…’ இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறது. இது பூமணிக்கும் பெருமை, சாகித்ய விருதுக்கும் பெருமை!

“சின்ன வயசுல ஓணான் அடிச்சிக்கிட்டு அலைஞ்சோம். கழுதைக்குப் பின்னாடி ஓலையக் கட்டி விளையாடிக்கிட்டு இருந்தோம். கால்ல செருப்பில்லாம பள்ளிக்கூடத்துக்குத் தினமும் ரெண்டு கிலோ மீட்டர் நடந்தே போயிவருவோம். இல்லாத விளையாட்டுன்னு எதுவுமில்லே. மலையேறுவோம், ஓடைக்குள்ளே, கண்மாய்க்குள்ளே, ஊர்மந்தையச் சுத்தி ஓடியாடுவோம். அணில் வேட்டை, எலி வேட்டைன்னு எல்லா வேட்டையும் உண்டு. இளமைக் காலங்கிறது அவ்வளவு சந்தோசமா இல்லேன்னா எப்படி? அந்த அடியுரம் இல்லேன்னா, எழுதுறது ரொம்ப கஷ்டம்.

எனக்கு எல்லாமே எங்க அம்மாதான். இன்னைக்கு வரைக்கும் நான் எழுதுற மொழி, மற்ற எல்லா விஷயங்களுக்கும் அளவுகோல் அம்மாதான். எங்கம்மா சொன்ன கதைகளும், பாடுன தாலாட்டு, ஒப்பாரி எல்லாமே எனக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கு. படிக்கிற காலத்திலேயே நான் யாப்பில் செய்யுள்கள் நிறைய எழுதியிருக்கேன். 1966-ல இருந்தே என்னோட கவிதைகள் ‘எழுத்து’ இதழ்ல வந்திருக்கு. யாப்பைக் கற்று மறந்தவன் நான். அப்படி அன்னைக்குக் கத்துக்கிட்டது இன்னைக்கி நாவலைக் கவித்துவமா சொல்லப் பயன்படுது.

வாழ்க்கைங்கிறது எப்பவுமே யதார்த்தத்திலிருந்துதானே புனையப்படும். யதார்த்தத்துல நின்னுக்கிட்டு பூக்கிற விஷயம்தான் சரியானது. இல்லேன்னா, அது இலவம் பஞ்சு மாதிரி அலைஞ்சிக்கிட்டே இருக்கும். சரக்கொன்றைனு ஒரு மரம். அது இங்கே பக்கத்துல இருந்துச்சு. இப்ப வெட்டிட்டாங்கன்னு நெனக்கிறேன். என் வாழ்க்கையில அதை இங்கேதான் பாத்திருக்கேன். அது பூக்குற நேரத்துல ஒத்த இலைகூட மரத்துல இருக்காது. மரமே மொத்தமா பூவாப் பூத்திருக்கும். அப்படித்தான் நான் யோசிச்சுப் பாப்பேன். இலையப் பத்தி எனக்குக் கவலையில்லே. என்னோட படைப்பு மனமும் அந்த சரக்கொன்றை மரத்தைப் போலத்தான்.

என்னோட சிறுபிராயத்து ஞாபகங்கள்தான் ‘அஞ்ஞாடி...’ நாவலோட மையம். சலவைத் தொழிலாளிகள் இருக்காங்கள்ல, அவங்கள புதிரை வண்ணார்னு சொல்வாங்க. அவங்க, தாழ்த்தப்பட்ட மக்களுடைய துணிகளை வெளுக்குறவங்க. அவங்களோட எனக்கும் நல்ல பழக்கமிருந்தது. அதே மாதிரி குடும்பர்கள். அவங்களோட வாழ்க்கையும் எந்த நாவல்லயும் இதுவரை முழுமையா சொல்லப்படலே. இங்கேயும் அன்பான மனிதர்களும், அந்நியோன்யமான உறவுமுறைகளும் இருக்கு. எந்த சாதியப் பத்தியும் கவலையில்லே. அன்பும் அந்நியோன்யமும் இருக்கும்போது, சாதியத் தூக்கித் தூரப் போட்டுடுவாங்க. அதுபோன்ற உறவுகள்தான் ‘அஞ்ஞாடி...’ நாவல்ல நிறைஞ்சிருக்கு.

வரலாற்றை நாம சரியாச் சொல்லணும். சில விஷயங்களை நாம தெரிஞ்சோ தெரியாமலோ சொல்லாமத் தவறிட்டோம். எல்லாஞ் சேர்த்து நமக்கு ஒரு சமூக வரலாறு முழுமையாக் கிடைக்கலே. அடித்தட்டு மக்களைப் பற்றிய ஒரு நாவல்ல அவங்களோட சமூக வரலாறும் சேர்ந்திருந்தா நல்லா இருக்குமேன்னு ரொம்ப நாளா எனக்கொரு ஆசை இருந்துச்சு. 200 வருசத்தை மனசுக்குள்ளே போட்டு ஊறவச்சிக்கிட்டு இருந்தேன். சிவகாசிக் கலவரமும் கழுகுமலைக் கலவரமும் சேர்ந்து எனக்குள்ளே ஒரு கதைக்களனுக்கான ஊற்றா உருவாச்சு.

இந்த நாவல்ல வர்ற மனிதர்களெல்லாம் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள்தான். வாழ்க்கை எவ்வளவு குரூரமாய் நம்மை வேட்டையாடினபோதும், மனித உறவுகள்ல மனிதநேயத்தோட முக்கியத்துவத்தைச் சக மனிதர்களா இருந்து நம்மிடையே சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் இந்த மனிதர்கள். இன்றைக்குக் குடும்ப முறை சிதைஞ்சு உறவுகளே சுயநலமாகிடுச்சு. எப்படி இதை மீட்டெடுக்குறது? மரத்துப் போயிருக்கிற மனித உணர்வுகளைத் தட்டியெழுப்ப எழுதித்தான் தீர்க்கணும்.

இந்த நாவல்ல வெவ்வேறு வகையான மொழி வழக்குகளப் பயன்படுத்தியிருக்கேன்னு நெறைய பேர் சிலாகிக்கிறாங்க. திருஞான சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றியது பற்றி எழுத தேவாரம் படிச்சேன். இதுக்காக நூறு, இருநூறு புத்தங்களப் படிச்சிருப்பேன். சேக்கிழாரோட பெரிய புராணத்துக்கு திரு.வி.க. உரை எழுதியிருக்கிறதை எல்லாமும் படிச்சேன். மதங்கள்னு உள்ளே வரும்போது எப்படிக் கோர முகத்தோட வருதுன்னு சொல்லி ஆரம்பிக்கலாமேன்னு ஒரு ஐடியா வந்துச்சு. அப்ப எட்டாம் நூற்றாண்டு, அந்த மொழில சொல்றதுதான் சரின்னு பட்டது. நான் படிச்சிருந்த சங்க இலக்கியங்கள் எனக்குப் பயன்பட்டது. இன்னமும்கூட தமிழின் சங்க இலக்கியங்களை ஒரு ரெஃபரன்ஸுக்காக எடுத்துப் படிப்பேன். இங்க உள்ள மக்களோட மொழி நமக்கு ஏற்கெனவே நல்லாத் தெரிஞ்சதுதான். அப்புறம், இவ்வளவு பெரிய நாவல்ல ஒரே மாதிரியான மொழிநடை இருக்கிறதுங்கிறதும் சலிப்பு தரக் கூடாதில்லையா, அதனாலதான் பல வழக்கு மொழிகளை அந்தந்த காலத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி எழுதினேன்...”

பெரிய பெருமிதங்கள் ஏதும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார் பூமணி. சாகித்ய விருதும் அவரிடம் பெரிய தாக்கங்களை உருவாக்கியதாகத் தெரியவில்லை. “எனக்கு இந்த விருதுகள்மேல பெரிய ஆர்வம் ஏதுமில்ல. சாகித்ய விருதால பெருமைப்பட ஏதுமில்ல. ஏற்கெனவே பல விருதுகள் இந்த நாவலுக்குக் கிடைச்சிருக்கு. இப்ப நாட்டின் தலைநகர்லேர்ந்தும் ஒரு விருது கொடுத்திருக்காங்கன்னு நெனச்சிக்கலாம். ‘எமக்குத் தொழில் எழுத்து’ அவ்வளவுதான்!” சினேகமாகக் கை குலுக்குகிறார் பூமணி.

வாழ்த்துகள் சார்!

- மு. முருகேஷ், தொடர்புக்கு: murugesan.m@thehindutamil.co.in