Saturday 24 January 2015

அபிதா- லா.ச.ரா

http://azhiyasudar.blogspot.in/2009/12/blog-post_24.html
la_sa_ra
லா.ச.ரா

அபிதா- லா.ச.ரா

மாமீ! மாமாவை எண்ணெய் தேய்ச்சுக்கச் சொல்லுங்கோ! வந்த அன்னிக்கே நான் சொல்லியி ருக்கணும். ஆனால் அப்போ எண்ணெய்ச் சட்டி காலி. 'கப்சிப்'புனு இருந்துட்டேன். என்ன சொல்றேள், பழக்கமில்லையா? நன்னாச் சொன்னேள் போங்கோ! இந்தக் கந்தக பூமியிலே எண்ணெய் முறை தப்பிப் போச்சுன்னா, நடந்துண்டு இருக்கறத்துலேயே சொக்கப்பானையா எரிஞ்சி போயிடுவோம். வரட்டியே வேண்டாம். நாமா ஏன் பஸ்மாசூரம் பண்ணிக்கணும்? அவரையே மாமா தலையிலே ஒருகை வெக்கச் சொல்றேன். மிளகாய்ப்பழம், இஞ்சி, புழுங்கலரிசி எல்லாம் போட்டுக் காய்ச்சி வெச்சிருக்கேன். உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது. இஞ்சியைக் கடிச்சுத் தின்னச் சொல்லுங்கோ. கரகரன்னு பிஸ்கோத்து தோத்துடும். அத்தனையும் சத்து. எங்கே போயிட்டார் எங்காத்துப் பிராம்மணன்? சமயத்தில் காணாமல் போறதில் வரப்ரசாதி !''

கடைசி வார்த்தைகள் திடீரென கர்ஜனையில் உயர்ந்தன.

ஆனால் குருக்களை எங்கேயும் போய்விட வில்லை. கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் திடீரெனச் சுவர் மூலையிலிருந்து முளைக்கிறார். மறுகையில், திடீரென எங்கிருந்தோ, செப்பிடு வித்தைபோல் ஒரு மணை தோன்றிற்று. குட்டி மணை.

என் தோளை மெதுவாய் அழுத்தி, மணைமேல் என்னை அமர்த்தி, தலையில் எண்ணெயும் வைத்தாகிவிட்டது. எல்லாம் அரை நிமிஷம்.

உடனே 'பரபர' தேய்ப்பில் மண்டை 'கிர்ர்ர்'- தலை வயிற்றுள் போய்விட்டது . மண்டையுள் மத்துக் கடைந்தது.

கரடி மலையை விட்டபின் எண்ணெய் மறுபடியும் இப்போத்தான்.

கடியார முள்ளை இப்படியும் திரும்ப முடியுமோ?
Picture_741_zoom_500x500
எண்ணெய் ஸ்னானம் இந்தப் பக்கத்து விருந்தோம்பலின் இன்றியமையாத சடங்கு.

இத்தனை வருடங்களுக்குப் பின் இப்போது தேய்த்துக் கொள்வதால் எனக்கு என்னவா னாலும் இதைத் தப்ப முடியாது.

அதிதி வாசற்படி யேறி, திண்ணையில் உட்கார்ந்ததும், வீட்டுக்காரி ஏந்திவந்த தம்ளர் தண்ணீரை, உப்போ தித்திப்போ, தேவையோ இல்லையோ குடித்தாக வேண்டும். பிறகுதான் கால் அலம்பவே உள்ள அனுமதி. பிறகு நாகரிகத்தின் அறிகுறி காப்பி என்ற பேரில் காவித் தண்ணீரின் குமட்டல் அடங்கின தோயில்லையோ, ''வாடாப்பா எண்ணெய் தேய்ச்சுக்கோ''

- ஐயையோ என்ன நடக்கிறது?

- கண்ணில் ஒரு கரண்டி எண்ணெய். விழிகளில் திடீரென வைத்த நெருப்பில் உடலே நெளிகிறது.

''உஸ் அப்பப்பா ''

தொண்டையில் எச்சில் கொழு கொழுத்துக் கடைகிறது. விழியுள் என்னைச் சூழ்ந்து கொண்ட மதுரை எரிப்பில் எங்கிருந்தோ ஒரு குரல் - குருக்கள் அல்ல; வந்த அன்று பேசினபின் அந்த மனிதன் வாய் அநேகமாய்ப் பூட்டுதான் - ஒரு குரல், மந்திர உச்சாடனம் போல்:

''நாள் கழிச்சுத் தேய்ச்சுண்டாலே இப்படித் தான். கண்ணிலிருந்து ரெண்டு சொட்டு ஜலம் கழண்டால் சரியாப் போயிடும். மாமாவைக் கையைப் பிடிச்சு அழைச்சுண்டு போங்கோ. அபிதாவை வென்னீரை விளாவச் சொல்லியிருக் கேன். நான் கடைவரைக்கும் போய் வரேன். கண்டந் திப்பிலி வாங்க!''

பேசிக் கொண்டே குரல் தூரத்தில் ஓய்ந்தது.

என்னை ஒருகை பிடித்தது. மெதுவாய்த்தான். என்னுள் சினம் மூண்டது. என்னைப் பிடித்த கையை வெடுக்கென உதறினேன். உதறின கை என்னைத் திரும்பவும் பிடிக்க முன்வரவில்லை. ஐயோ, விழிவயண்டு விடும் போல் வதைக்கிறதே! கண்ணைக் கசக்கிய வண்ணம், நடுக்கூடத்தில், நடுக்காட்டில் நிற்கிறேன்.

என் பக்கத்தில் ஒரு சிரிப்பு. விழித்துப் பார்க்கிறேன். நல்ல கண்களே நெற்றிக் கண்களாகிவிட்டன.

என் அவஸ்தை சாவித்திரிக்கு நகைப்பு. நகைக்க இப்போ அவள் முறை.

சிந்திய கெளரவத்தைத் திரட்டி, நிமிர்ந்த முதுகில் சுமந்து கொண்டு, கொல்லைப்புறம் செல்கிறேன். விழி தெறிக்கிறது. தலை சுற்றுகிறது. காலடியில் ஏதோ தடுக்...

''ஐயோ!''

அபிதா அலறினாள்.

ஒரு கை என்னைப் பிடித்துக் கொண்டது

உதறினேன்.

ஆனால் இந்த சமயம் குருக்கள் என்னை விடுவதாயில்லை. என் கூச்சம், கோபம் அவருக்குச் சட்டையில்லை. என்னை அழுத்திப் பிடித்துக் கொண்டு, முதுகில் சீய்க்காய்க் குழைவைப் பூசித் தேய்க்கிறார்.

முதுகுத் தேய்ப்போடுதான் எண்ணெய்ச் சடங்கு பூர்த்தி.

சுறீல் -

ஸன்னமானதோர் வெம்மை, பிடரியில் கண்டு, வேர் பிரிந்து, ஆணி வேர் நடுமுதுகில் இறங்குகிறது.

மண்டையும் நினைவும் அமிழ்ந்து கிடக்கும் அரைமயக்கத்தில், விழிகள் எண்ணெய்க் கரிப்பின் முழுக்குருடில், சூடு என்று தவிர, சட்டென அடையாளம், உணர்வில் உடனே கூடவில்லை.

கட்டிய விரல் நுனியில் ஈர்ப்பில் புருவ நடுவைத் துருவும் வேதனை போல் உடல் பூரா, காலிலிருந்து தலைநோக்கி ஒரு காந்தம் ஊடுருவிக் கடுத்தது.

மொண்டு மொண்டு, தலையிலும் தோளிலும் மாறி மாறிக் கொட்டிக் கொள்கிறேன். ஆனால் பிடரிமேல் நூல் பிடித்து விழுந்து கொண்டி ருக்கும் இந்த கிண்டிநீரின் நெருப்பு, தந்தியறவில்லை. நேரே முதுகுத் தண்டிலி ருந்து நரம்பு தானே கண்டுமீட்டும் இந்த இன்பமும் துன்பமும் ஒரே பங்கில் கலந்த இந்தத் தவிப்புக்கு ஈடு, பூமியைப் பிளந்து கொண்டு புறப்படும் முளையைச் சொல்வேனா?

கோத்துவாங்க மறந்து, உள்ளுக்கிழுத்த மூச்சு உள்ளுக்கே இன்னும் இன்னும் இன்னும் - ஐயையோ ! - இன்னும் இழுத்துக் கொண்டே போகும் இரக்கமற்ற தன்மையில், இந்த அபிஷேக தீர்த்தம், ஒரே சூட்டுச்சரடி, சதையுள் இறங்கி, அங்கங்கே ஏதோதோ மந்திரங்கள் புரிகின்றது. நாளடைவில், என் மூதாதையர் நாளிலிருந்தே, பரம்பரையாய் ஓய்ந்துபோன யந்திரங்கள், ஏதேதோ சக்கரங்கள், தம்தம் முதல் சுற்றில், ரத்தத்தில் அசைய ஆரம்பிக்கின்றன.

இதென்ன, ப்ரக்ஞையுடன் புது பிறவியின் பயங்கரம், ஆச்சர்யம், தோலுரிப்பு, அழல் நடுவில் ஸ்புடம், தபோக்னியின் கானல் நடுக்கம், கண்ணிருட்டு, விடியிருள், பிறந்த மனதோடு பிறந்த மேனியின் விடுதலை, காலமாய் உடலின் சருமத்வாரங்களை, நெஞ்சின் சல்லடைக் கண்களை அடைத்து கொண்டிருந்த அழுக்குகளின் எரிப்பில், பழைய வேகத்தை மீண்டும் பெற்ற புத்துணர்வில், ஜீவநதியின் மறுஓட்டம், ஆதார ஸ்ருதியின் தைரியமான, கம்பீரமான மீட்டலின் சுடர் தெ ரிக்கும் சொடசொடப்பு, காண்டீபத்தின் டங்காரத்தில் உடல்பூரா, உணர்வுபூரா, மனம்பூரா ஜல் ஜல் ஜல் சிலம்பொலி!

கண்ணைக் கசக்கி இமை சிமிழ்

திறந்ததும்

கண் கரிப்புடன் திரையும் கழன்று விழுந்து

சித்திரத்துக்குக் கண் திறந்த

விழிப்பு.

என்னைச் சூழ்ந்து கக்கும் வென்னீரின் ஆவியினின்று என் புதுத் துல்லியத்தில் புறப்படுகிறேன்.

உலையிலிருந்து விக்ரகம்.

வென்னீரின் ஆவி கலைகையில், புலனுக்கப் பிதுங்குவது, பளிங்கிலடித்தாற்போன்று, நெருக்கமாய் நின்ற இரு பாதங்கள், அங்கிருந்து முழங்காலை நோக்கி விழியேறுகையில், பிடிப்பான கண்ட சதையின் வெண்சந்தனப் பளிச்சில், பச்சை நரம்பின் ஓட்டம் கொடி பிரிகிறது.

அம்பா!

உன் பாத கமலங்கள்

எனக்கு மட்டும் தரிசனமா?