Saturday 5 September 2015

காலமாற்றத்தின் காதல். கண்டராதித்தன்

http://kapaadapuram.com/?p=148

கொடுங்காநல்லூர் தேர்முட்டியிலிருந்து
அந்தகன் பள்ளியறைக்குச் சென்றதற்கு மறுநாள்
காலமாற்றத்தைக் கண்டுணரா மூடன்
குடிபோதையில் இருண்ட வீதியில் நின்று
ஊர்பற்றும் தழலொன்றை வைத்திருந்த அரூபியைத்
தனக்குத்தெரியும் என்றான்
கூடவே நாய்கள் கேவியழ நரிகள் கோடியைவிட்டு
ஊர் எல்லைவரை எட்டிப்பார்த்தன
அது நல்ல மழைக்கும்,நல்லகாற்றுக்குமான நன்னாள்
பிறகவன் கிழப்பிணியெய்திய பெண்ணின் கால்தடுக்கி மல்லாந்தான்
கிழவி காலை அணத்தியபடி மடக்கினாள்
நீ சன்னலைத் திறக்க மறுத்தாய்
இருள்கவ்வும் பூப்பந்தாய் உன்பிராட்டி
காதோடுரசும் பாவத்தில் கேட்டாள் யாரிவன்
யாரிவன் என்று சொல்ல
கள்ளப்பிழைபோல் ஊர்ந்து செல்லும்
அரவம் என்றோ அல்லது நெடுங்கணமாய்
நம்மை அண்ட நிற்கும் அபசகுனம் என்றாவது
மறுத்த அவள் நற்காலத்தின் புத்தம் புதிய யுவன்தான் என்றாள்
இந்நடுச்சாமத்தில் அவளுக்கு கொள்ளைக்காதல்
நீ தெருக்கதவைத் திறந்துவிட்டாய்
சில்லிட்ட காற்று சலசலக்கிறது.

யோக்கியதை – சில குறிப்புகள்.

கண்டராதித்தன்

சதா யோக்கியதையை
கேள்வி கேட்கிறது
யோக்கியத்தனம்
அயோக்கியதைக்கு
இந்த சிக்கல் இல்லை
இல்லவே இல்லை.

நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளைச்
செலவழிக்கிறான் ஒருவன்.
அதையொரு பன்னீர் கரும்பைப்போல
கடித்துத் துப்பிச்செல்கிறான் மற்றொருவன்.

காட்டாற்று வெள்ளத்தின்
ஓரம் நின்று
கை கால் முகம்
கழுவிக்கொள்கிறான்
அயோக்கியன்
அவ்வளவு அயோக்கியத்தனமும்
அடித்துக்கொண்டு போனது
வெள்ளத்தில்.

வெதுவெதுப்பாக
நீரை விளவி
கைகளை நனைக்கிறாய்
உன் யோக்கியதை
இரத்தச் சிவப்பாய் மாற்றுகிறது
தண்ணீரை.

யோக்கியனாகவே கழித்துவிடும்
வாழ்க்கையை போலொரு
துயருண்டா இல்லையா.

ஆசாபாசங்களை
மலத்தைப்போல
அடக்கிக்கொண்டிருக்கிறது
யோக்கியதை
அயோக்கியத்தனத்திற்கு
அந்த மலச்சிக்கல் இல்லை.

சந்தர்ப்பவாதமும்
அயோக்கியத்தனமும்
நல்ல நண்பர்கள்
வேண்டுமானால்
இரண்டு நல்ல
நண்பர்களை உற்றுக்
கவனியுங்கள்.

******************