Thursday 10 September 2015

-Nuno Júdice--Leah Goldberg ---Zelda -David Avidan--Zelda---Giloba-M.Geldman - -Ha-sefer-ha-sh' lishi'- -Eugénio de Andrade- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்),-D.H.Lawrence- -Sophia de Mello Breyner- (தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



நாட்டுப்புற வெளிகளில், மேயும் மந்தைகள்
பச்சையத்துடன் இரண்டறக் கலக்கின்றன ,
பச்சையம் அவைகளை உண்ணுதல் போலும்,
மேய்ச்சல் ஆடுகள் குரலொலித்தும்,
மணிகள் இசைத்தும், நாயின் குரைப்பில்
இயைந்திருக்கிறது.
ஆயரது குரல் தொலைகிறது,
அவை ஏகும் சேரிடம் பற்றி
ஒன்றும் சொல்லாது ( மந்தையின்
சேரிடம் உள்ளதென்றக் கற்பிதத்தில்)


நாட்டுப்புற வெளிகளில், ஆயர்கள் எங்குள்ளனர் என
யாருக்குமே புலனாவதில்லை,
அந்தியில் ஆயர்கள் எவ்விடம் பயணிக்கிறார்கள்
அவர்கள் சாலைகளை குறுக்காய் கடந்து
கார்கள் உறையும்படியாக வலிய - நிறுத்துகின்றனர்,

சில சமயங்களில் ஒட்டுனர்
விலங்குகளின் சருமத்தையும் கொம்புகளையும்
வகிர்ந்து செல்ல எத்தனிக்கின்றனர், ஆனால்
நாய்கள் கார்களை நேரெதிராய் எதிர்கொள்ளும் ,
ஆயர்களுடன் உள்ள சகாவைப் போலும்
திசை கழன்று செல்லச் செய்விக்கின்றன.

இவ்வுலகிற்கென விதிகள் உள்ளன,
மானுட இயல்பு மாற்றமுறாது.
விலங்குகளும்,நாட்டுப்புறவெளிகளும்- ஏதோ
ஒற்றைத் தனியுடலாய் உருவுற்றது போல்,
இருண்மை ஆளுகையின் புலப்படா எல்லையை,
அதன் சட்டங்களை மற்றும் திசைவழியை,
ஊடுருவ நம்மில் யாராலும் இயலாதது போல்,
ஆயர்களும் மோனத்தில்,
கடவுளர்களால் வழிநடத்தப்படுதாய்த் தோன்றுகிறது.

-Nuno Júdice-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





மற்றைய முகங்களில் தொலைந்து போன
முகம் இதுவன்று.
இது யாரென தன்னை அறியா,
ஒருவனது முகம் -என்றென்றைக்குமாக
ஒளியின் பின்புறத்திருக்கும் நிழலின் முகம்.


இரு முகங்களுக்கு இடையேயான வேற்றுமை
சில சந்தர்ப்பங்களில் ஏதுமற்றதாயிருக்கிறது;
விழியூன்றலில் பிழைத்தவை
அதன் சூழ்நிலையின் உடன்நிகழ்வில்
நம்மில் நினைவற்று போனவையாகிறது,

நமது விழிகள்
மற்றொரு விழியை மீள்-நினைவடையும்,
அல்லது
மழை- மதியத்தின் மேகங்களை உயர்த்தி
ஒரு திடீர் வண்ணத்தைச் செய்விக்கும்.

மனத்திலிருந்து எழும் மேகங்களும்,
ஆன்மாவிலிருந்து எழும் பனிப்பருவமும்,
ஒரு வசந்த ஒளிர்வின் பொய்மைக் குறிப்பை
எழுப்புகிறது.
நேசத்தை விரித்துரைக்கும்
கச்சிதமான வார்த்தைகளை ஒத்திருக்கிறது.

மொழியப்பட்ட நேசத்தின் கச்சிதமாய்.....

- Nuno Júdice -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





விட்டிற்பூச்சிகள்
ஏதோவொரு மதியத்தின் திரைக்கதவில்
அவைகளாகவே மோதிக் கொள்கின்றன.

ஒரு செந்நிற ஆடை
எனது மனதில் தழலாய் எரிகிறது.


வெளிப்புறம்
மழையில் விடுபட்ட விளக்குக் கூண்டை
ஒரு வேட்டைநாய் கவிழ்க்கிறது.

நான் வெதுவெதுப்பான நாளுக்காக ஏங்குகிறேன்
ஓதமுற்ற உள்ளங்கை
எனது கதகதப்பை அடைய எத்தனிக்கும் போது
ஏதோவொரு ஈரப்பதம் ; என்னை
அஜாக்கிரதையான ஆழத்திற்கு இழுக்கிறது.

இரவு தன் வெல்வெட்டின் மென் - கரையை
என்மீது சிந்துகிறது.

-Jewel Kilcher -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

மற்றும் நான் செய்திராத அக்கவிதை
நான் அக்கவிதையைச் செய்யும் அத்தருணம்-
யாவையும் நான் இன்னமும் ஞாபகமடைகிறேன்,
ஒவ்வொரு ஒலியையும், ஒவ்வொரு அசையழுத்தத்தையும்.
இக்கணப் பொழுதுவரையிலும் அது எழுதப்படாதிருக்க
-ஒருவேளை நானதை அடுத்ததாக எழுதியிருப்பின்,
அதுவும் மிகை -நிர்வாண மெய்மையாக இருந்திருக்கும்,
இன்று நான் அதை எழுதியிருப்பின்
அது முழுநிறை பொய்மையாய் இருந்திருக்கும்
- வா என்மீது இறங்கு , கடவுளர்களின் புதல்வியே ,
என்மீது உளநாட்டம் கொள்,
வெண்மையடையும் உனது சிரம்.


- வார்த்தைகளுடன் நாம் விளையாடிக் களிக்கலாம்.

-Leah Goldberg -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





பகற்பொழுதில்,
அவளது சின்னஞ்சிறு இல்லம்
அத்துணைப் பாழில் தனித்து உழல்கிறது,
நண்பர்கள் யாருமின்றி, மணாளன் அற்றிருக்க,
இராப்பொழுதில், ஒரு எஜமானன் அவளை ஆள்கிறான்
பேருவகையிலும் ,முழு நம்பிக்கையிலும்.


-அவள் பிணியுற்ற போது, அவன் அவளை சேர்த்தணைப்பான்.
அவள் காலாவதியாகும் போது, அவன் அவளை முத்தம் செய்வான்.
அவள் மரிக்கும் போது
அவனது சில்லிட்டிருக்கும் நெஞ்சில் அவளை அழுத்திச் சேர்ப்பான்,
புழுதி படர்ந்த கரங்களால்.
.
-Zelda -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





நாம் வீடு திரும்பிய போது பொழுது ஏறக்குறைய விடிந்துவிட்டது,
நாம் மாடி ஏறிச் சென்றோம். கொட்டாவி விட்டோம்.
காபியை சூடேற்றினோம்,
மறு-நிர்மானமுற்ற நகரம் காலையை நோக்கி சுவாசிக்கிறது.
ஒரு இனிமைத் தோற்றத்தவனை விழையும் யுவதியின் அனலாக.
வாளுக்கு ஒப்புக்கொடுக்கும் கழுத்தாக விடியல் வீழ்கிறது.
குளுமை படர்ந்த ஒரு வெண் பாரசூட்டாய் காலை நேரம்.
கோடையின் தெள்ளியக் காலையாயினும் கொள்ளை வனப்பு.


-David Avidan-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
உனது மேலாடை உனது தொப்பி ,மற்றும்
உனது காலணிகளை, களைந்துவிடு.
எனது நெருப்பிடத்தின் அருகே சமிபித்துவிடு
வேறெந்த நங்கையும் அமராத அவ்விடத்தில்..


தழலை நான் பிரகாசமடையச் செய்திருக்கிறேன்
மீதமுள்ளவைகளை நாம் இருளிடம் கையளிப்போம்,
தழலொளியின் அருகே அமர்வோம்.

கணப்படுப்பில் வைன் கதகதத்து இருக்கிறது;
ஒளி- நடுக்கங்கங்கள் வந்து விடைபெறுகின்றன.
முத்தங்களால் உனது அங்கங்களை வெதுவெதுப்பாகிறேன்
அவையாவும் தழல் வண்ணமாகும் வரை.

-D.H.Lawrence-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)
நானொரு உயிரற்றப் பறவை,
உயிரற்றுப் போன பறவை.
சாம்பல் வண்ண மேலங்கியைத் தரித்திருக்கும் பறவை.
நான் நடையிட்ட போது
ஒரு கோமாளி என்னை இகழ்- நகையாடினான்,
-எதிர்பாராத விதமாக ,உனது மோனம் என்னைச் சூழ்கிறது,
நீங்கள் காலகாலத்திற்கும் உயிர்த்திருப்பீர்கள்
கொந்தளிப்பான சந்தைவெளியில்
உயிரற்றப் பறவை இசைக்கிறது-
நீ மட்டுமே வாழ்கிறாய்.
கொந்தளிப்பான சந்தைவெளியில்
ஒரு செத்த காட்டுக் கோழி இசைக்கிறது-
கொந்தளிப்பான சந்தைவெளியில்
ஒளிந்துள்ள பாடலுடன் பறவையொன்று தத்திச் செல்கிறது.


-Zelda-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



ஒரு பிராத்தனைப் புத்தககத்தின் உள்ளத்திலிருந்து
நான் பிராத்திக்கிறேன்,
கிழிக்கப்பட்ட விளிம்பில் தொலைந்து போன வார்த்தைகளுடன்
நான் பறத்தலை காண்கிறேன், நாட்கள் நீண்ட பறத்தல்,
பாதங்கள் பாவத்- தரையிறங்கும் நிலத்தை நாடுகிறது,
அதற்கான குணமடைதலை என்னால் தருவிக்கக் கூடுமா
எனது பிராத்தனைப் புத்தகத்தின் உள்ளம்
விளிம்புகளில் உண்ணப்பட்டு
மெல்ல மங்கி அம்மணமாகிறது.


-Giloba-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


நீர்- ஊற்றுகளின் மீதொரு தோட்டம் ,
நிழல் அதன் சிறு அறைகள்,
அதன் புரவிகள் செந்நிறத்தவை,
நீர்- ஊற்றுகளின் மீதொரு தோட்டம்
அதன் தாவரங்களை நானறியேன்,
அவைகளைப் பெயரிடவும் இயலாது.
அதன் பறவைகள் துயில்நடையினர்,
நீர் -ஊற்றுகளின் மீதொரு தோட்டம்
அதன் பருவநிலை ஆசீர்வதிக்கப்பட்டவை.


வெம்மை அதன் ஊற்றுடன் இன்புறுகிறது,
மணாளனை ஒத்திருக்கும் கதிரோன்.
நீர்-ஊற்றுகளின் மீதொரு தோட்டம்
நான் வாழ்ந்திராத ஒரு வாழ்வு, ஐயுறுவது போன்றிருக்க,
நான் உயிர்த்திருக்க இயலுமோ.

-M.Geldman -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)












அவர்களெல்லாம் விடைபெற்ற பின்பு
கவிதைகளுடன் நான் ஒற்றையில் விடப்பட்டிருக்கிறேன்.
சில என்னுடைய கவிதைகளாயிருக்க,
மற்றவை பிறருடையதாயிருக்கிறது:
பிறரது கவிதைகளையே தேர்ந்து உவக்கிறேன்.
நான் அமைதியுள் நீடிக்கிறேன்.
எனது தொண்டையைப் பீடித்த இறுக்கம் தளர்கிறது.
நான் நீடிக்கிறேன்.
சிலசமயங்களில் அவர்களெல்லாம் விடைபெறுவதையே விரும்புகிறேன்.
கவிதைகளைச் செய்வது ரம்மியமாகிறது.
நீ அறையில் அமர்ந்திருக்கிறாய்,
அனைத்து சுவர்களும் நெடிதாய் வளர்க்கப்பட்டிருக்கிறது.
வர்ணங்கள் வலிமையடைகிறது.
கழுத்தின் நீல-சால்வை ஆழ்கிணறாகிறது,
அவர்களெல்லாம் விடைபெறுவதையே நீ விரும்புகிறாய்.
என்ன விஷயம் என்பதைக் கூட அறியாதிருக்கிறாய்.
ஒரிரு விஷயத்தைப் பற்றி மட்டுமே
ஒருவேளை நீ யோசிக்கக் கூடும்,
பின்பு யாவுமே கடந்திடும்
நீயோ பரிசுத்தப் படிகமாவாய்
அதன் பின்னர் நேசிப்பாய்.


-Ha-sefer-ha-sh' lishi'-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)


நடுஜாமத்து உண்ணுதல்,

மழலை

முடிவாக கண் துஞ்சுதல்;

ஒருமணிநேரம் மிருதுவாய் நாம் மொழிந்து கொள்கிறோம்,

இடையிட்டிருக்கும் வெளிகளில்
இல்லத்தின் நுண்-சப்தங்கள் அனைத்தையும்
கவனம் கொள்கிறோம்.
தருணம் திடீரென்று பெருக்கிறது:
குளிர்சாதனப் பெட்டியின் ரீங்காரம்,
மெழுகுவத்தியின்
கிணற்று அகழ்வில் பெருகும் இளகிய ஒட்டம் ,
வேறு-ஏதோவொன்று நம்மை சேகரிக்கிறது,
ஆழ்ந்த நீரிலுறையும் பனியாய்
வெண் அமைதி,
இவ்வில்லம்
ஆழியின் மரக்கல வகைகளாக,
பாய்மரங்களின் மரவாரைகள் மற்றும்
மழைச் சாளரப் பலகைள்,
கப்பற்பாய்களின்
விரிப்புகள், கடல் வாத்துகளின் உதிர்-தூவி.


-David Brooks-

(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)

அந்தப் பரி மட்டுமே,
விரிந்தகன்றிருக்கும் அந்த
குழவியின் கண்கள் மட்டுமே, அந்தப்
பட்டின் அபரிமித நெப்பத்த்தை மட்டுமே,
நான் தவறவிட்டவை யாவும் அவ்வளவே.


சந்ததமும் நான் செவி கொள்வது
இருண்ட நதியின் குரலையல்ல,
அன்றியும்
பனித்த இடையில்,
எனது கரங்களை வளையக் கிடத்தி,
நேசத்தை உணர்ந்தேன்.

நித்தம் யாமத்தே வருகை தருவது,
கூர்ந்திருக்கும் அப்பார்வைதானா,
கடந்து தொலைந்த தொடர்-இரவின்
தொலைப் புள்ளியிலிருந்து,
உடன் இணையும் குறுக்குப் பாதையில்
எனது துயிலை களவாடுகிறது - அது
நெஞத்தையும் விட்டுவைக்கப் போவதில்லை.

பனி கவிந்த அகண்ட புல்வெளியாய்,
எனது நெஞ்சம்.

-Eugénio de Andrade -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)




I have
always
knocked at
the door of
that
wonderful
and terrible enigma which
is life.


-Eugenio Montale-








உனது மேலாடை உனது தொப்பி ,மற்றும்
உனது காலணிகளை, களைந்துவிடு.
எனது நெருப்பிடத்தின் அருகே சமிபித்துவிடு
வேறெந்த நங்கையும் அமராத அவ்விடத்தில்..


தழலை நான் பிரகாசமடையச் செய்திருக்கிறேன்
மீதமுள்ளவைகளை நாம் இருளிடம் கையளிப்போம்,
தழலொளியின் அருகே அமர்வோம்.

கணப்படுப்பில் வைன் கதகதத்து இருக்கிறது;
ஒளி- நடுக்கங்கங்கள் வந்து விடைபெறுகின்றன.
முத்தங்களால் உனது அங்கங்களை வெதுவெதுப்பாகிறேன்
அவையாவும் தழல் வண்ணமாகும் வரை.

-D.H.Lawrence-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)







இல்லங்கள் நீரில் பிரவேசிக்கின்றன,
முன் கதவுகள் காலைப் பொழுதிற்க்காக விரிகின்றன,
தாரகை, ஹாதோர்ன் பூக்கள்
மலர்ச்சியில் அவிழ்கின்றன,


புராதன ஆழியின் இளமை ததும்பும் ஒளி
சாளரங்களில் தகதகக்கிறது,
தொலைப் புலங்களில் திக்கற்று அலைந்த கடலோடிகளின் நாவாய்களை கவனித்திருக்கும் ஆழிகள்,
திசைகாட்டிக்கும், காரண அறிவிற்கும் குருடாக்கப்படுகிறது,
பிரதிபலிக்கப்பட்ட விடிவெள்ளியில் சிந்தையாழ்ந்திருக்கிறது,
மரணமொன்றில் மட்டுமே
இனி நாம் அந்நியர்களல்ல.

-Eugénio de Andrade -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)





தூரத்துப் பனியை இன்னமும் நான் செவியறிகிறேன்.
நவம்பர் மாத ஒளியுடன்,
ஒருநாள் அது கைகோர்த்து வரும்.
முதலாவதாக
நமது அதரங்களின் வழியே கடந்திடும்.
நீயோ தயையுடன்
வனங்களை அடைய நீண்டிருக்கும் தடத்தை குறிப்பிட்டு காண்பிப்பாய்.
உனது கரத்தை
எனது வாய்வரை உயர்த்த நெஞ்சுரமின்றி ஏந்துகிறேன்.
இருளில் தனித்திருக்கும் கலங்கரை விளக்கத்தின் சுக-உணர்வு
அந்த பனிக்கும் வாய்த்திருக்கிறது.
நமது நெஞ்த்தை புதைக்கும் முன்பு.


-Eugénio de Andrade -
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



எனக்கு நீர்ப் பூ எவ்வாறிருக்கும் எனத் தெரியாது,
ஆயினும் அதன் வாசத்தை நன்கறிவேன்,
முதல் மழைப் பொழிவிற்குப் பின்பு
அது மேல்- மாடிக்கு ஊர்ந்தெழுகிறது,


பிறந்த மேனியாய் வீட்டில் நுழைகிறது
அதன் உடல் இன்னமும் ஈரம் கோர்த்திருக்கிறது
நமது உடலை தேடிய வண்ணமிருக்கிறது
நடுநடுங்கத் துவங்குகிறது:
பிறகு அதன் வாயிலுள்ளதைப் போன்ற

நிலைபேற்றின் எஞ்சிய மிச்சம்
நமக்கு பருக அளிக்கப்படுகிறது
பூமியின் இசையாவும்
வானுலகின் இசையாவும்
நம்முடையதே.

உலகின் அந்தம் வரையிலும்,
வருகைதரும் புலர்தல் சம்பவிக்கும் வரையிலும்.

-Eugénio de Andrade-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)



இரவின் பாரமுற்ற உனது கேசத்தின் கீழ்
அநுதினமும் பகலில் உனது தோள்கண்ட நிலவின் கீழ்
உலகின் முறியா ஒழுங்கை விழைகிறேன்
செவியுறா அவ்வார்த்தையை


மீண்டும் மீண்டும் இடையறாது
கனல் அன்றி கண்ணாடியின் கீழ்
உனது முகத்தில் விழைகிறேன்
ஆண்டவனின் அருள்வெளிப்பாட்டை
நான் அறிந்திலேன்.

ஆயினும் நீ என்னூடே கடந்தாய்
நாம் நிழலினூடே கடந்த போது.

-Sophia de Mello Breyner-
(தமிழாக்கம் :எஸ்.சண்முகம்)