Friday 4 September 2015

பட்டு: புரிந்து கொள்ளாத அன்பு நிரந்தரமாகிறது by தயாஜி , Bogan Sankar மதாம்



http://vallinam.com.my/version2/?p=2317
பட்டு: புரிந்து கொள்ளாத அன்பு நிரந்தரமாகிறது
by தயாஜி • September 1, 2015 • 0 Comments


காதலுக்கு ரசாயன மாற்றங்களைக் காரணமாக சொன்னாலும், அத்தகைய ரசாயன மாற்றம் ஏற்படும் நேரம் காலமெல்லாம் நம் கைவசம் இருப்பதில்லை. ‘இருபது வயதில் காதல் வராவிட்டாலும் தப்பு; அறுபது வயதில் காதல் வந்தாலும் தப்பு’ என்று சில பேச்சாளர்கள் பேசுவதை கேட்டிருக்கிறேன். அந்த வசனங்களுக்கு கைதட்டல்களின் சத்தம்தான் இருக்குமே தவிர வாழ்வின் உண்மையை அவை நெருங்குவதே இல்லை. யார் யாரைக் காதலிக்கலாம் யாரோடு யாருக்கு காதல் வரலாம் என்ற வரையறையெல்லாம் இல்லை.

காதல் என்பதற்கு ஆளுக்கு ஆள் ஒரு புரிதலை வைத்திருக்கிறோம். ஆனாலும் இன்னொருவரின் காதல் கதைகளிலும் காதல் விமர்சனங்களிலும் ஆர்வம் கொண்டிருக்கிறோம். காதில் விழும் கதைகள் தொடங்கி காகிதத்தில் கிடைக்கும் காதல் கதைகள் வரை அவற்றின் உண்மைத் தன்மைக்கு ஏற்ப நாம் ஈர்க்கப்படுகின்றோம்.

கணவன் மனைவி என்னும் உறவு புனிதமாகப் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் எப்படி இருந்திருந்தாலும் திருமணத்திற்கு பின் ஒருவருக்கொருவர் எனும் கட்டமைப்பிற்குள் அடங்குகிறார்கள். திருமணம் பெண்களை அடிமையாக்குகிறது என்றார் தந்தை பெரியார். காதல் என்பதும் ஒன்றுமில்லாதது. வெறுமனே அதற்கு புனித பிம்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றும் பெரியார் சொன்னதாய் படித்த ஞாபகம் இருக்கிறது.

உடல் தேவைக்காக வேறு துணை நாடுவது; மனத்தேவைக்காக வேறு துணை தேடுவது என ஆழ்மனதின் ஆசைகளைத் தீர்ப்பவர்கள் எப்போதும் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் தேவைகள் உண்டு, மனம் உண்டு, ஆசைகள் உண்டு என்பதனை உத்தம வேடதாரிகள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், வாழ்க்கை எந்தக் கட்டத்திற்குள்ளும் அடங்காமல் தூண்டுதலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. அது வெளிப்படுத்தும் உணர்வுக்கு பஞ்ச பூதங்களும் கட்டுப்பட்டே இயங்குகின்றன. புலன்களுக்கும் உணர்வுக்குமான ஊடாட்டத்திலேயே வாழ்வின் சுவாரசியம் இருப்பதாகத் தோன்றுகிறது.

இவ்வாறான உணர்வுகள் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும் என நினைத்துப்பார்க்க வைத்தது, ‘பட்டு’ எனும் மொழிபெயர்ப்பு நாவல். அச்லெசாண்ட்ரோ பாரிக்கோ Alessandro Baricco எழுதிய நாவல் இது.

‘பட்டு’ (செட்டா-seta) என்ற இந்நாவல் இத்தாலிய மொழியில் 1996-ல் வெளியானது. நாவல் வெளிவந்த மறு ஆண்டே இந்நாவல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து 30 மொழிகளில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். 2005ஆம் ஆண்டு மேடை நாடகமாகவும், 2007ஆம் ஆண்டு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் நாடக வடிவை, அமெரிக்க நாடக இயக்குனராக மேரி ஸிம்மன்மான் உருவாக்கினார். திரைப்படத்தை பிரெஞ்சு-கனடிய இயக்குனர் பிரான்ஸ்வா கியார்த் இயக்கியுள்ளார்.

பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பிரகாசமான எதிர்காலத்துக்குக் காத்திருக்கும் இளைஞன் ஹெர்வே ஜான்கர். நண்பனின் தூண்டுதலால், பட்டுப் புழு வியாபாரம் செய்யத் தொடங்குகிறான். வியாபாரத்திற்காக உலகின் மறுகோடியில் இருப்பதாகச் சொல்லப்படும் ஜப்பானுக்குச் செல்கிறான். 1860ஆம் ஆண்டுக் காலகட்டம் என்பதால் பயணம் இலகுவாக இருக்கவில்லை. ஒரு முறை அங்கு சென்று பட்டுப் புழு முட்டைகளை கொண்டு வர ஆறு மாதம் வரை ஆகிறது. ஹெர்வே ஜான்கரின் அந்தப் பயணம் மனதைச் சுவாரஸ்யப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.

ஜப்பானுக்கும் இதர நாடுகளுக்கும் கூட அரசியல் நெருக்கடியாக இருந்த சமயம் அது. அங்கே செல்வதால் உயிருக்கேகூட ஆபத்து நேரலாம் என்றபோதும் அதன் சுவாரசியமும் அதனால் கிடைக்கப்போகும் லாபமும் ஹெர்வே ஜான்கரைத் தடுக்கவில்லை.

அங்குதான், ஜப்பானியப் பெண் ஒருத்தியை அவன் சந்திக்கின்றான். முதல் சந்திப்பிலேயே இனம் புரியாத ஈர்ப்பு அவள் பார்வையில் இருப்பதாக உணர்கிறான் ஜான்கர். அவளும் அதற்கு ஏற்றார் போலவே பார்வையைப் பரிமாறுகிறாள். பின்னர் யாருக்கும் தெரியாமல் கடிதம் ஒன்றை ஜான்கரிடம் கொடுக்கின்றாள். ஜப்பானிய மொழியின் சித்திர எழுத்துகளில் அக்கடிதம் இருந்ததால், ஹெர்வேக்கு அதன் பொருள் புரியவில்லை. அதே நினைவுகளுடனும் அன்று நடந்த சம்பவங்களுடன் திரும்புகிறான்.

தன் நாட்டிற்கு வந்ததும் தன் நண்பனிடம் ஜப்பானிய சித்திர எழுத்துகளை வாசிக்க தெரிந்தவர்கள் குறித்து வினவ, அங்கேயிருக்கும் விபச்சார விடுதியை நடத்தும் பெண் குறித்து அறிந்து அங்கே செல்கிறான். அவள் அந்த சித்திர எழுத்துகளைப் படிக்கிறாள்.

“திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்…” என்று இருக்கிறது. அப்போதிருந்து ஹெர்வேயின் வேட்கை அதிகமாகிறது. யார் அவள்? எதற்கு இப்படி எழுதியிருக்கிறாள்? ஏன் தன்னிடம் இப்படியொரு கடிதத்தை அவள் எழுதிக்கொடுத்திருக்கிறாள்? தான் பட்டுப் புழு முட்டைகளை வாங்கும் சர்வாதிகாரியின் மனைவியாக இவள் இருப்பாளோ.. என எண்ணுகிறான். அந்த சர்வாதிகாரியிடமிருந்து தன்னால் அவளைக் காப்பாற்ற முடியும் எனவும் தன்னால் அவளுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்க முடியும் என நம்புகிற அளவுக்கு தன்னிடம் ஒன்றுமில்லையே என்று ஜான்கர் தனக்குள் எழும் கேள்விகளால் குழப்பத்தில் ஆழ்கிறான்.

மீண்டும் பயணிக்கிறான். முன்பு போல பயணம் அத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கவில்லை. அப்போது உள்நாட்டு போருக்கான ஆரம்ப வேலைகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தன. ஆதலால் வெளியில் இருந்து யார் நாட்டிற்குள் நுழைந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவேண்டியிருந்தது.

பட்டுப்புழு மூட்டைகளைப் பெற அதைவிட எளிய வழிகள் இருப்பதை வியாபாரிகள் உணர்கிறார்கள். அப்போதும் ஹெர்வே ஜான்கர் ஜப்பானுக்குச் செல்வதை விரும்புகிறான். அவனது மனைவிக்கு சந்தேகம் எழுகிறது. ஆனாலும் அவளால் அவனை மேலும் மேலும் நேசிக்கவே முடிகிறது.

“கட்டாயம் நீங்கள் திரும்ப வேண்டும்,” என்ற விருப்பத்தைக் கூறியே வழியனுப்புகிறாள்.

முன்பு சென்றிருந்த நகரம் பாதியாக சீர்குலைக்கப்பட்டு இருந்தது. இடிபாடுகளுக்கு இடையில் அரசாங்க ராணுவப் படை முகாமிட்டிருந்தது. நதி, காடு, அதனைத் தொடர்ந்து பாதை என ஒவ்வொன்றாக நாள்கணக்கில் கண்டுபிடித்து முன்பு அந்தப் பெண்ணைச் சந்தித்த கிராமத்தை அடைகிறான். முழுக்க எரிந்துபோன வீடுகள், மரங்கள் என ஒவ்வொன்றாக அவன் பார்வையில் படுகின்றன. அங்கே எதுவும் இவனின் வருகைக்காக மிஞ்சியிருக்கவில்லை. உயிருள்ள எதுவும் இருக்கவில்லை. மீண்டும் ஊருக்குத் திரும்புகிறான். அவனால் இயல்பாக இருக்க முடியாததை அனைவரும் உணர்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவற்றை செய்து, அவன் தன்னிலை மறந்துவிட்டான், புத்தி பேதலித்துவிட்டான் என்று பலரும் பலவாறாகப் பேசும்படி ஆகிறான்.

இப்போது அவனது முகவரிக்கு ஒரு கடிதம் வருகிறது. முகப்பில் மட்டுமே பழக்கமான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. கடிதத்தில் ஜப்பானிய சித்திர எழுத்துகள் பக்கம் பக்கமாக இருக்கின்றன. இனம் புரியாத சிந்தனை அவனை எங்கெங்கோ கொண்டு செல்கிறது. படிக்காத போதும் அந்தக் கடித்தத்துடனேயே தன் நாட்களைக் கடக்கிறான். மீண்டும் விபச்சார விடுதி நடத்தும் பெண்மணியைத் தேடி போகிறான். அவளும் அவனை அடையாளம் கண்டு வரவேற்கிறாள். அவள் அணிந்திருந்த நீல மலர்கள் அவளுக்கு மேலும் அழகைக் கூட்டின. நீல மலர்களுக்கு ஏற்றார்போலவே இருந்தாள் அவள்.

அப்போது அவள் ‘இதுதான் கடைசி, இனி இந்தக் கடிதங்களை தன்னால் படிக்க இயலாது’ என்கிறாள். மேற்கொண்டு தன் நிலையை அவனுக்கு விளக்க அவள் விரும்பவில்லை. குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டவள் போல அவள் கடிதத்தை அவனுக்கு படித்துக் காட்டுகிறாள். கவிதைகளாகக் காதல் மொழிகளாக ஏக்கத்தின் அழைப்பிதழாக அந்தக் கடிதம் இருக்கிறது. அந்த இன்பமான

வாழ்க்கைதான் அவன் வாழவேண்டிய வாழ்க்கை என மனம் நம்புகிறது.

வாழ்க்கை மாறிவிட்டது. வியாபாரமும் வளர்ந்தது. அவனுக்கு வியாபார யுக்தி முதல் ஆலோசனை வரை சொல்லி வந்த நண்பன் விடைபெறுகிறான். யாருக்கும் அந்த நண்பன் எங்கே போகப் போகிறான் எனத் தெரிந்திருக்கவில்லை. ஹெர்வே ஜாங்கர் அவனை வழியனுப்ப, ஹெர்வேயின் மனைவி அவனை கட்டியணைத்து அன்பு பரிமாறிக் கண்ணீருடன் அவனை வழியனுப்புகிறாள் . தன் கணவனின் ஜப்பான் பயணத்தில் நடந்ததெல்லாம் இந்த நண்பனின்றி அவளுக்கு தெரிந்திருக்காது. சொல்வதற்கும் யாருமில்லை. இனி கணவன் மனைவிக்கு இடையில் அன்பு மிகும் என்ற நம்பிக்கையில்தான் இதுவரை உடன் இருந்த நண்பன் பெயர் குறிப்பிடாத இடத்திற்குச் செல்கிறான்.

இந்நிலையில் ஹெர்வே ஜான்கரின் மனைவி இறக்கிறாள். அவளுக்கு சமாதி கட்டப்படுகிறது. இரண்டு மாதங்கள் கழித்து, மனைவியில் கல்லறையில் பூக்களை வைக்கும்போது வேறு சில பூக்களையும் கவனிக்கிறான். அவை நீல நிறப் பூமாலை. அவனுக்கு புதிய உண்மைகள் தோன்றுகின்றன.

கடிதத்தை படித்த அந்த ஜப்பானியப் பெண்மணியைத் தேடிப் போகிறான். அவள் வேறு நாட்டுக்குச் சென்றது தெரிகிறது. பல நாட்களுக்கு பிறகு அவளைச் சந்திக்கின்றான். அவள் மெருகேறியிருந்தாள். இப்போது பணக்காரன் ஒருவனுக்காக மட்டுமே அவள் வாழ்ந்துகொண்டிருந்தாள் எனத் தெரிந்தது. அவளிடம் நீல நிற பூக்களோ, நீல நிறப் பூக்கள் போன்ற மோதிரமோ அப்போது இருக்கவில்லை.

ஹெர்வே கேட்கிறான்.

“நீங்கள்தானே அந்தக் கடிதத்தை எழுதினீர்கள்”

அவள் சொல்கிறாள்.

“கடிதத்தை எழுதியது நானில்லை..”

அமைதி நிலவுகிறது; மீண்டும் அவள் சொல்கிறாள்.

“கடிதத்தை எழுதியது உங்கள் மனைவி ஹெலன். அவள் என்னிடம் வருவதற்கு முன்பே அதனை எழுதியிருந்தாள். என்னை அவற்றை ஜப்பானிய சித்திர எழுத்துகளில் எழுதச் சொன்னாள்.”

மேற்கொண்டு அவளது விவரிப்பு ஹேர்வோ போல நம்மையும் உருக வைப்பவை.

“ஐயா, இந்த உலகத்தில் எதைவிடவும் அவள் ஆசைப்பட்டது நீங்கள் மனதில் உருவகப்படுத்தியிருந்த அந்தப் பெண்ணாக ஆவதற்குத்தான் என்று நம்புகிறேன். அதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அவள் அந்தக் கடிதத்தை வாசிப்பதை நான் கேட்டிருக்கிறேன். எனக்குப் புரியும்”

ஹெர்வே புறப்படுகிறான். மீண்டும் அவர்கள் சந்திக்கவேயில்லை. நாவலில் மீதி இருப்பது ஓர் அத்தியாயம் மட்டுமே. கணவன் காதலிக்கும் பெண்ணாக மாற எத்தனிக்கும் ஒரு மனைவியின் வலி இந்த நாவலை முடிக்கும்போது விரவியிருக்கும். நாவலைப் படித்தாலின்றி, அவர்களின் அன்பை புரிந்துகொள்ள முடியாது. புரிந்துகொள்ளாத அன்பு அந்தக் கடைசி அத்தியாயத்தையும் தாண்டி வாசகர்களின் மனதின் நுழைந்துவிடுகிறது.

துணைநூல் பட்டியல்
அச்லெசாண்ட்ரோ பாரிக்கோ. (2012). செட்டா: பட்டு (சுகுமாரன், மொழிபெயர்ப்பு). மிலனொ: ரிசோலி. (அசல் பதிப்பு 1996)

Bogan Sankar
தாம்
அந்த அறை இருந்ததை விடவும் பெரிதாகக் காட்டின அந்த நாற்காலிகள்
ஒரு நீண்ட உணவு மேசையைச் சுற்றிலும் விறைப்பாக ராணுவ வீரர்கள் போல அமர்ந்திருக்கும் செந்தேக்கு நாற்காலிகள்.அவை மாஹியில் வசித்துவந்த பிரெஞ்சுக்காரர்கள் விட்டுச் சென்றவை என்றாள் மதாம்.மதாமின் உண்மையான பெயர் என்ன ?என்று எனக்குத் தெரியாது.நான் அதைத் தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் காண்பிக்கவில்லை என்பதுஇப்போது வியப்பைத் தருகிறது .தடித்து குட்டையான முழங்கால் வரை பூப்போட்ட கவுன் அணிந்த முகமெங்கும் சிவந்த ஈரல் புள்ளிகளும் தாடையில் உள்ள மருவில் ஒரு ஆட்டை நினைவுபடுத்தும்படியாக மயிர் சுருண்டு வளர்ந்த மதாமின் உண்மையான பெயர் என்னவாய் இருந்தால் தான் என்ன ?
மய்யழியில் ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு கர்க்கடக மாதத்தையும் அவளது விடுதியில்தான் நான் கழித்தேன்.எதிர்பாராவிதமாக ஒரு பிரஞ்சு டெலிவிசன் குழு அவர்கள் நாட்டுப் பிரதமரைத் தொடர்ந்து வந்துவிட்ட ஒரு வருடத்தைத் தவிர .பெரும்பாலும் கழிமுகத்தைப் பார்த்தபடி இருக்கும் அதே அறையில் .மதாமின் பிரஞ்சு உணவுவிடுதி அங்கு பிரசித்தம்.ஆனால் எனக்கு ஒருபோதும் பிரஞ்சு உணவு பிடித்ததில்லை.மற்றவகையில் முழுக்க ஒரு பிரஞ்சு ஆன்மாவான என்னிடம் இது ஒரு ஆளுமைப் பிசகு என்று அவள் கருதினாள்
உண்மையில் எனக்கு பிரஞ்சு ஆன்மா என்று அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்று புரியவில்லை.விக்டர் ஹ்யூகோவைத் தவிர வேறு எந்த பிரஞ்சு எழுத்தாளரையும் நான் விருப்பத்துடன் வாசித்ததே இல்லை.நீ பிரான்ஸ் என்ற தேசம் ஒன்று உண்டு என்று அறியாமலே கூட ஒரு பிரஞ்சு காரனாக இருக்கலாம் என்றாள் அவள் ஒருநாள் இரவு .எனது பாண்டிச்சேரி நண்பர் ஒருவர் அதை உண்மை உண்மை என்று பின்னர் ஒரு பொழுதில் சொன்னார் .அவருக்கு ஜெயகாந்தன் போல நீளமான கிருதா உண்டு என்பது இங்கு பொருத்தமான செய்தியா தெரியவில்லை
அன்று மழை வெகுவாக அடித்துப் போயிருந்தது.மய்யழியில் மின்சாரம் போவது ஒரு செய்தியே அல்ல.எனினும் இம்முறை இன்னும் ஒருவாரத்துக்கு அதை எதிர்பார்க்கவேண்டாம் என்றார்கள்.முக்கியமான மின்பாதையில் எல்லா கம்பங்களையும் புயல் பிடுங்கிக் கொண்டு போய் புற்களைப் போல வேறிடத்தில் கொண்டு நட்டு விட்டது என்றார்கள்
நாங்கள் இருவர் மட்டும் சாய்ந்து சாய்ந்து விழுந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி தீபங்களின் நிழல்களை வெறித்தபடி அந்த அறையில் அமர்ந்திருந்தோம்.வெளியே சளசள வென்று மழை பொழிந்துகொண்டிருந்தது.யாரோ ஈர ரப்பர் செருப்புகளுடன் எங்களைச் சுற்றி நடனமாடுவதைப் போல எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது .அன்று மதாம் வழக்கத்துக்கு மாறாக நிறையவே பேசினாள் .பெரும்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போலத் தோன்றிய விஷயங்கள் . மழையோ வெயிலோ நாற்காலிகளை எப்போதும் உடுத்தியே வைத்திருப்பதன் அவசியம் பற்றி திடீரென்று அவள் சொன்னாள் .அது உண்மைதான் அவள் ஒருபோதும் தனது நாற்காலிகளை ஆடையில்லாமல் விட்டதில்லை.குறிப்பாக அவளது உணவு மேசையின் முன் இருக்கும் இந்த நாற்காலிகள்.முதலில் சற்று விநோதமாக ஒரு ஐரோப்பிய ஆடம்பரமாக மட்டுமே தோன்றிய இந்த வழக்கம் எனக்கு பல நாட்களில் ஒரு இனம்தெரியாத அமைதியைக் கொடுத்ததை உணர்ந்திருக்கிறேன்.நள்ளிரவுகளில் என் துர்க்கனவுகளில் இருந்து விழித்துக்கொண்ட பிறகு உறக்கம் பிடியாது நான் என் அறையி லிருந்து வெகு கீழே எனது விடுதியின் அடித்தானத்தின் மீது இடையறாது ஆவேசமாக மோதிக்கொண்டிருக்கும் கடலின் சாபத்திலிருந்து ஓடித் தப்பித்துக்கொள்ள இறங்கி ஓடி வரும்போதெல்லாம் ஆடை போர்த்திய அந்த நாற்காலிகள் எனக்கு மிகுந்த ஆறுதலை அளித்திருக்கின்றன .அவை வெறுமனே நாற்காலிகள் அல்ல .அவை எதையோ தீவிரமாக யோசித்தபடி அமர்ந்திருக்கும் மனிதர்கள்
அந்த இரவில்தான் மதாம் Strindberg பற்றி சொன்னாள் .அவளுக்குப் பிடித்த எழுத்தாளர்.பிரான்சில் பிறக்கவில்லை ஆனால் பிரஞ்சுக்காரன்தான் ,நிச்சயமாக.ஏனெனில் அவன் இப்படி எழுதினான் ''கோணலான ஆண்கள்தான் பெண்களை ஆராதிக்கிறார்கள்.நேர்மையான ஒரு ஆண் எப்போதும் பெண்களை வெறுப்பவனாக தான் இருப்பான் ''
ஒரு ப்ரஞ்சுக்காரனைத்தவிர வேறு எவராலும் இப்படி எழுத முடியுமா ?இதை மதாம் மிகுந்த ஆவேசமாகக் கேட்டாள் .நான் சற்று தயக்கத்துடன் ''ஆம் ஆம் ''என்றேன்
''பெண்கள் அவர்களது கண் சிமிட்டல்கள் கள்ளப் பார்வைகள் நாணக் களிகள் இடுப்பை தேவைக்கும் அதிகமாக ஆட்டுவது மார்புகளைப் பிதுக்கிக் கொள்ளவும் உதட்டை ருதுகால யோனியை ஆண்களுக்கு நினைவுபடுத்தும்படி சாயம் பூசிக்கொள்ளவும் செய்வது இதெல்லாம் குமட்டல் ஏற்படுத்துகிற விஷயங்கள் இல்லையா ?ஒரு நேரிய ஆண் இதை விரும்புவானா ?''என்று அவள் கத்தினாள்
நான் ''இல்லை இல்லை ''என்றேன் .சற்றுநேரம் மவுனம்.வெளியே காற்று உக்கிரமாகச் சுழன்றடித்தது மெழுகுவர்த்திகள் தங்களது கடைசித் தசையை உருக்கிக் கொண்டிருந்தன .பேசிப் பேசி உருகி அவள் தலையும் இன்னொரு மெழுகுவர்த்தி போல அவள் குடித்துக்கொண்டிருந்த கோப்பையின் மீது சாய்ந்தது
நான் அவளருகே சென்று அவளை எழுப்ப முயற்சித்தேன்.அவள் உடல் கொதித்துக்கொண்டிருந்தது.அந்த குளிரிலும் அவள் கவுன் முழுவதும் வியர்வையில் கசகசத்து நனைந்திருப்பதைக் கவனித்தேன்.நான் அவளை பாதி தூக்கிக் கொண்டும் பாதி இழுத்துக்கொண்டும் அவள் அறைக்குக் கொண்டு போனேன்.அங்கிருந்த படுக்கையில் அவளைக் கிடத்தினேன்.கிடத்தும்போது அவள் எதையோ முணுமுணுத்தாள் .நான் அதைக் கேட்க அவள் உதடுகளினருகே குனிந்தபோது அவள் சட்டென்று எம்பி என் உதடுகளை கவ்விக்கொண்டாள் .ஒருகணம் .ஒருகணம் தான்.மறு நிமிடம் பதறி அவற்றை விட்டுவிட்டாள்
நான் ஒரே நேரத்தில் கிளர்ச்சியையும் அருவெருப்பையும் அடைந்தேன்.கிளர்ச்சி அடைந்ததற்காக அருவெறுப்பு .அருவெறுப்பு தந்த வினோத கிளர்ச்சி.
அவள் நன்றாக விழித்துக்கொண்டுவிட்டாள் என்பதை என்னால் உணரமுடிந்தது ஆனால் ...
மேலே என் அறையில் நான் இரவு முழுக்க நிம்மதியின்றி அலைந்துகொண்டிருந்தேன்.வெளியில் மழையும் ஒரு பெரிய அறையில் நடக்கின்ற மனப்பதற்ற வியாதி கொண்ட மனிதன் போல இங்குமங்கும் திரும்பித் திரும்பி அலைந்து மன்றாடிக்கொண்டிருந்தது
மறுநாள் காலையில் கீழே நான் மதாமைக் காணவில்லை.அவளது பணியாள் மட்டுமே இருந்தாள் நான் இரண்டு நாள் காத்திருந்துவிட்டு ஊருக்குத் திரும்பினேன்
அடுத்த இரண்டு கர்க்கடக மாதங்கள் என்னால் மய்யழிக்குச் செல்ல இயலவில்லை .அந்த வருடம் என் மனைவி என்னை விவாக ரத்து செய்திருந்தாள் .மறுவருடம் முழுவதும் என்னுடைய குழந்தையைப் பார்ப்பதற்கான உரிமைக்காக போராடி நீதிமன்றத்தின் வளாகங்களில் கழிந்தது .முடிவில் அது கிடைத்தபொழுது என் குழந்தை ஏறக்குறைய என்னை மறந்து போயிருந்தாள் .அவளுக்கு முடிந்த அளவு என் மீது கசப்பு ஊட்டப்பட்டிருந்தது.அவள் என்னைக் கண்டாலே அலற ஆரம்பித்தாள்
இம்முறை நான் மய்யழிக்குத் திரும்பியபோது நான் ஏன் ஒரு பிரஞ்சு ஆன்மாவைக் கொண்டவன் என்பது பற்றி நன்றாகப் புரிந்துகொண்டிருந்தேன்.நாற்காலிகளை ஏன் துணிகொண்டு போர்த்தவேண்டும் என்பதிலும் எனக்கு தெளிவு ஏற்பட்டிருந்தது.இம்முறை மதமுக்குக் கையளிக்க என்னிடமும் Strindberg மேற்கோள்கள் சில இருந்தன .முக்கியமாக 'ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் அன்பு என்பது யுத்தமாகும் ''
ஆனால் மதாமின் விடுதியில் மதாம் இல்லை .மதாம் போனவருடம் பிரான்ஸ் போய்விட்டாள் என்றாள் அவளது முன்னாள் வேலைக்காரி.விடுதி இப்போது அவள் கையில் இருந்தது .அவள் இப்போது மதாம் சொல்வது போல இடுப்பை அளவுக்கு அதிகமாக ஆட்டவும் உதடுகளைக் குவித்து சிவத்து ஆண்களுக்கு மறைமுகமாய் அவர்களது பிறப்புறுப்பையும் தனது பிறப்புறுப்பையும் நினைவுபடுத்துகிற ஒரு குமட்டுகிற பெண்ணாய் மாறியிருந்தாள்
உணவு அறையில் இருந்த எந்த நாற்காலியின் மேலும் இப்போது ஆடை இல்லை.
மதாமோடு அந்த நாற்காலிகளும் எழுந்து போய்விட்டன என்று நான் நினைத்துகொண்டேன்
நான் அதன்பிறகு ஒருபோதும் மய்யழிக்குப் போகவில்லை.