Sunday 8 February 2015

காதல் கவிதைகள் பத்து - பேயோன்

காதல் கவிதைகள் பத்து - பேயோன்

 in கவிதை

உன்னை முதன்முதலில் பார்த்தபோது
உன் பெயர்கூடத் தெரியாதெனக்கு
இப்போது இனிஷியல் முதற்கொண்டு தெரியும்.
*
எவ்வளவு எளிதாய்ச்
சொல்லிவிட்டாய்
பிரிந்துவிடுவோம் என்று!
உனக்கு இதயநோய்
என்றறிந்தபோதுகூட
இப்படி வலிக்கவில்லை
இந்தப் பாழும் மனம்!
*
அழகான பாதங்களில்
செருப்பின்றி நடக்கிறாய்
டைல்ஸ் தரையே ஆனாலும்
வீணாகிறதுன் பாத ஸ்பரிசம்.
*
கைரேகை சோதிடம் பார்க்க
எனக்குன் மலர்க்கரத்தைத் தருகிறாய்
அதை ஆண்டு அனுபவித்துவிட்டுத்
திருப்பித் தந்த பின்பு சிரிக்கிறேன்
எனக்குச் சோதிடம் தெரியாதென
மோதிர விரலை பூமத்திய ரேகை
எனச் சொன்னபோதே தெரியும்
என்று நீயுஞ்சிரிக்கிறாய்.
*
ரோஜாவைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது
உன் பெயர் ரோஜா
என்பதாலோ என்னவோ.
ஆனால் ரோஜாக்களைப்
பார்க்கும்போது வருவதில்லை
உன் பெயர் ரோஜாக்கள் அல்ல
என்பதாலோ என்னவோ.
*
குடையோ ஒதுங்கிடமோ
இல்லாத பெருமழையில்
தொப்பலாக நனைந்தபோதுதான்
பர்ஸில் உன் புகைப்படம்
நினைவுக்கு வந்தது
அட, உன் புகைப்படமும்
தொப்பலாக நனைந்திருக்கிறாய்!
*
கொஞ்சம் வைத்து விடேன்
என்று மல்லிகையைத் தந்து
திரும்பி நிற்கிறாய்
முழம் பத்து ரூபாய்
கிடைப்பதோ இத்தனூண்டு.
*
சத்தமில்லாமல் முத்தமே
கொடுக்க வராதா என்று
கிசுகிசுப்பாய்க் கடிந்துகொள்கிறாய்
நாங்களெல்லாம் அப்படித்தான்.
*
உனக்கொரு கட்டவுட் வைத்து
அதை என் முத்தங்களால்
அபிஷேகம் செய்யும் வரை
ஆறாது இந்த மனது!
*
ஒரு முத்தம்
ஒரே ஒரு முத்தம்
அதுவும் எனக்காகத்தான் கேட்கிறேன்
அதையும் உன்னிடம் மட்டும்தான் கேட்கிறேன்
அதற்கே இந்த கலாட்டா.