Wednesday 12 August 2015

காமம் : உடைமையாக்குதலின் அலைக்கழிப்பு - அ. ராமசாமி (இமையத்தின் எங்கதெ பற்றி)



berlin-artparasites

Accept the fact that you will grow apart from people you’ve had significant relationships with. Understand when someone no longer positively affects your life. Let them go. Don’t hinder your growth. ―Lyjeeria

இமையத்தின் எங்கதெ பற்றி இவ்வளவு பாராட்டுகளும் ஆச்சரியங்களும் விமரிசனங்களும் வந்தபின் நான் எழுதியுள்ள விமரிசனத்தை வாசிப்பார்களா? என்று தெரியவில்லை. தீராந்தியில் வந்துள்ள இந்த விமரிசனத்தை இப்போது இணையத்தில் வாசிக்கலாம்.


August 10, 2015


காமம் : உடைமையாக்குதலின் அலைக்கழிப்பு


குடும்பம், சமூக அமைப்பின் மிகச்சிறிய நுண் அலகு. எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பை உருவாக்கவும் தக்கவைக்கவும் விரும்புகின்றன. மதம், இனம், மொழி, பண்பாடு என்பதான காரணிகளால் வேறுபாடுகள் கொண்ட எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பின் மீது கொண்ட நம்பிக்கையைத் தொலைக்கவில்லை. அந்த நம்பிக்கையின் அவை ஏற்படுத்திக் கொண்ட நடைமுறையின் பெயர் திருமணம். திருமணத்தின் வழியாக நிகழும் ஆண் பெண் உறவின் முதன்மை நோக்கம் மனித உற்பத்தி ; வாரிசுகளை உருவாக்குதல். வாரிசுகளின் செயல்பாடுகள் பண்பாட்டின் அடையாளங்கள்.


ஆண் - பெண் உறவைக் குறிக்கத் தமிழில் இருக்கும் வசீகரமான சொல் காமம். காமத்தைக் காமம் என்று சொல்லலாமா? என்று தயங்கிய நவீன சமூகம் இன்னொரு சொல்லால் சொல்லிப்பார்க்கிறது. காமத்தைக் காதல் என்னும் சொல்லால் வெளிப்படையாகப் பேசிக்களிப்பதில் எல்லாச் சமூகத்திற்கும் குறைந்ததல்ல தமிழ்மொழி பேசும் தமிழ்ச்சமூகம். உலகம் முழுக்க இலக்கியங்களோ, காதலைக் காமமாகவும், காமத்தைக் காதலாகவும் எழுதிப் பார்த்து விவாதிக்கின்றன. தமிழிலும் நடந்துகொண்டே இருக்கும் ஒரு புள்ளையை - இழையை - இமையமும் எழுதிப் பார்த்துள்ளார். இமையத்தின் நான்காவது நாவலான எங்கதெ வேறெதன் பக்கமும் திசைதிருப்பாமல் முழுமையாக அந்த விவாதத்திற்குள் வாசகர்களை அழைத்துச் சென்று நிறுத்த முயன்றிருக்கிறது.

“ அவன் எதுக்கு வந்தான்? என்னா சொல்லிட்டுப் போறான் பாத்தியா? என்னெப் பத்தி அவனுக்கு எப்பிடித் தெரியும்? நீ சொன்னியா?”

“ எனக்கு அவன் ஆபீசரு. மாவட்ட அதிகாரி. ஊட்டுக்கு வந்தவங்கிட்ட எதுக்கு வந்தன்னு கேக்க முடியுமா?”ன்னு கேட்டா.

“ அவன் பேச்சும் செய்கையும் சரியில்ல. நமக்கிடையில அவன் நெருப்ப வைக்கிறான். அவன் சனி கிரகம். கோளாற உண்டாக்குவான். குடும்பத்துல கொழப்பத்த உண்டாக்குவான்னு சொன்னன்.



நாவலில் இடம்பெற்றுள்ள இந்த உரையாடல் பகுதியில் ’நீ’யென ஒரு பெண்ணை நோக்கிப் பேசுபவன் கதை சொல்லி. அவன் பெயர் விநாயகம். இந்தப்பெயர் நாவலில் ஒரேயொரு தடவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. ஆனால் கமலா என்ற அந்தப் பெண்ணின் பெயர் 110 பக்க நாவலில் பக்கத்திற்கு இரண்டு தடவையென்ற அளவில் இடம்பெற்றுள்ளது. விநாயகத்தால் குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி விடுவான் என எச்சரிக்கையோடு சொல்லப்படும் பாத்திரம் மாவட்டக் கல்வியதிகாரியாக -சி.இ.ஓ.வாக வருபவரின் வயது 57. ஏழெட்டு மாதத்தில் ஓய்வுபெறப் போகும் நிலையில் தான் நாவலுக்குள் வருகிறார். அவருக்கும் நாவலில் பெயரில்லை.

தனக்கான வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்ற தெளிவு இல்லாமலும், மூன்று தங்கச்சிகளின் திருமணம், தொடங்கிக் குடும்ப விவசாயம், வரவுசெலவு என அதன் உள்விவகாரங்களில் பெரிதும் அக்கறை காட்டாமல் 33 வயதைக் கடந்துவிட்ட தன் வாழ்க்கைக்குள்கமலா என்னும் விதவை நுழைந்து பாடாய்ப் படுத்திய கதையைத் தான் எங்கதெ எனச் சொல்கிறான். அவளது உடல் தரும் சுகத்தின் பொருட்டு 90 மைல்களுக்கு அப்பால் இருந்த தனது கிராமத்திலிருந்து கடலூருக்கு அலைந்த கதையில் வெறும் காமம் மட்டுமில்லை; அதையும் தாண்டி அவளை உடமையெனக் கருதிய மனம் இருந்தது எனக் கதையைக் கட்டிச் சொல்கிறான். தன் கதையைச் சொல்வதாகச் சொன்னாலும், அவன் சொல்வதெல்லாம் கமலா.. கமலா..கமலா என உருகியுருகிப் பெயர் சொல்லி- வர்ணித்து- குதூகலித்து -கோபித்து - பாராட்டி- சிரித்து -சினந்து சொல்லும் அவளின் கதைதான். அவளால் அவன் அடையும் வேதனைகளின் கதை



விநாயகத்தோடு கமலா கொண்ட உறவுக்கு ஊரும் சமூகமும் தரும் பாத்திரப்பெயர் வைப்பாட்டி. இந்த வார்த்தை நாவலில் ஒரு இடத்திலும் இடம்பெறவில்லை கல்யாணமே செய்துகொள்ளாத ஒருவனின் வாழ்க்கைக்குள் நுழையும் ஒருத்தியை - அவன் வயதொத்த ஒருத்தியை- வைப்பாட்டியென ஏன் சொல்லவேண்டும்; காதலியென்று சொல்லக் கூடாதா? காதல் காமமாகக் கனிந்தபின்பு மனைவியாகிவிடும் வாய்ப்பும் இருக்கத்தானே செய்கிறது? அப்படியான நகர்வைத் தடுப்பது எது? எதையும் உடைமையாக்கிச் சொந்தம் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டாது இருக்கும் கமலாவின் மனமா? அல்லது கமலாவின் வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளா? திருமணவாழ்க்கை என்பது ஒரு பெண்ணுக்கு ஒருமுறைதான் என வலியுறுத்தியுள்ள சமூகநடைமுறையா? கல்லூரி வாழ்க்கைக்குள் நுழைய இருக்கும் பெண்பிள்ளைகளையும் மறந்து, சிக்கல் இல்லாத வாழ்க்கைக்காக மேலதிகாரிக்கு அடிபணிந்து போக நினைக்கும்போது அவள் மனம் உருவாக்கிக் கொள்ளும் சமாதானங்களை என்னவென்று சொல்வது? கமலாவின் பாத்திரநிலையை எந்தச் சொல்லால் சொல்வது? காமக்கிழத்தி ? அப்படிச் சொல்லிவிட்டு அவன் ஒதுங்கியிருக்கலாம்.



ஏழெட்டு ஆண்டுகளாகத் தனது சொந்தம் எனக் கருதிக் கொண்டு அந்தரங்க உரிமையாய் அனுபவித்துக் கொண்டிருக்கும் கமலா தனது கையைவிட்டுப் போய்க் கொண்டிருக்கிறாள் என்ற ஆதங்கம் ஏற்படும்போது அவனிடம் ஏற்படுவது பதைபதைப்பு மட்டுமல்ல; கொலை வெறி. அவளையும் கொன்று தன்னையும் மாய்த்துக்கொள்ள நினைக்கும் கொலைவெறி. ஆனாலும் அவன் அப்படிச் செய்யவில்லை. அப்படிச் செய்வதே நடப்பில் நிகழக்கூடியது. ஆனால் எழுத்தாளன் கொலையை அனுமதிப்பதில்லை.

“ கமலா” ஒம்போது வருசம் கழிச்சி அவள் பேரச் சொன்னன்.

“ நீ யார்கூட வேணுமின்னாலும் இரு. எப்பிடின்னாலும் இரு. ஆனா உசுரோட இரு. இதான் என் ஆச.” ரகசியமா குனிஞ்சி அவ காதில் சொன்னன்.

சொல்லிவிட்டுக் கிளம்பியவன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான் என்பதாக நாவல் முடிகிறது.



வெளிப்படையாகச் சமூகம் அங்கீகரிக்காத ஆண்- பெண் உறவுக்குள் ஒரு பெண்ணின் இருப்பை ஆண்மைய நோக்கில் எழுதியிருக்கிறார் இமையம். விநாயகமே தன் மனத்தையும் சொல்கிறான். கமலாவின் மனம் இப்படித்தான் உருவாகியிருக்கிறது என்றும் சொல்லிக் கொள்கிறான். அவளது நகாசுத்தனம், தவிர்ப்பது - அனுமதிப்பது என ஒவ்வொன்றிலும் அவளின் முடிவெடுக்கும் திறன் போன்றன தனக்கில்லை என்ற கழிவிரக்கத்தில் அல்லது இயலாமையில் மனம் விலகிவிடச் சொன்னாலும் தடுத்து நிறுத்துவது அவளிடம் கிடைத்த உரிமை; உடல்வழியான உரிமை. அந்த உரிமையை அனுபவிப்பதன் மூலமாக, அவளின் முடிவுகளெல்லாம் தன்னை மையமிட்டதாக இருக்கவேண்டும் என நினைக்கிறது விநாயகத்தின் மனம். ஒருவிதத்தில் இது எதிர்பார்ப்பு சார்ந்தது. அந்த எதிர்பார்ப்பு ஆண்மையின் நிலைபாடு. எங்கதெ எழுப்பும் விவாதங்கள் முழுமையும் ஒருபெண்ணின் உளவியல் சார்ந்தவை போலத் தோன்றினாலும், கணவன் இல்லாத பெண்ணின் வகை மாதிரியாகவும், காமந்தீரா இளமையோளாகவும் கட்டமைக்கப்பட்ட கமலாவின் மீது குற்றம் சுமத்தும் தொனிகொண்ட உரையாடலையும், தனிமொழியையும் கொண்டது விநாயகத்தின் தன்னிலை. அது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. சொந்த வாழ்க்கையில் செய்யவேண்டிய எதையும் செய்யத் தவறிவிட்டேன் என்ற அங்கலாய்ப்புகளை குறைவாகவும், கமலாவின் சேர்க்கையால் தவிக்கும் மனத்தவிப்பை அதிகமாகவும் மொழியும் கதைசொல்லித் தனது நிலைபாட்டை நியாயப்படுத்தும் வாதங்களின் பக்கமே அதிகமாக நிற்கிறான். இது முன்னிலையில் கதைசொல்லும் எழுத்தின் சிக்கல். அந்தச் சிக்கலை இமையம் இந்த நாவலில் சந்தித்திருக்கிறார். வட்டார வழக்கின் இயல்பை மிகைப்படுத்த உதவும் பழமொழி, சொலவடை போன்றவைகளால் நிரப்பப்படும் விநாயகத்தின் பேச்சு அவனது தரப்பை நிறுவ உதவும் கருவிகளாக மாறிவிடுகின்றன. மொழியைக் கருவியாக்கிக் கமலாவின் செயல்பாடுகளால் தத்தளிக்கும் அவனின் மனதையே முன்வைக்கிறான்.



இந்திய/ தமிழ்ச் சமூகத்தில் ஆணின் வாழ்க்கைக்குள் நுழையும் ஒரு பெண் என்னவாக நினைக்கப்படுகிறாள் என்பதைத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கும்விதமான தனிமொழி நாவல் முழுக்க விரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் பெண் ஆணின் உடைமைப் பொருள்; அவன் நினைத்தால் எடுத்துப் புழங்குவான்; அதற்காகவே அவள் அல்லது அது இருக்கிறது என நினைக்கும் மனநிலையை உருவாக்கி வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்தத் தனிமொழி. தனது தனித்துவமான ஆளுமையால் தன்னைப் பற்றிய சித்திரத்தை உறுதியாகக் கட்டமைத்துக் கொண்ட கமலா போன்ற ஒரு பெண்ணை உடைமைப் பொருளாக மட்டும் நினைப்பதும் சரியல்ல என்றும் அவனது மனம் சொல்கிறது. அப்படியானால் கிடைக்கும்போது எடுத்து ரசித்து நுகரும் பண்டமா அவள்? தாலி கட்டிய உரிமையைப் பெறாததன் காரணமாக ஆவேசமும் ஆத்திரமும் கொள்கிற ஆண் மனம் தனக்கான நுகர்பண்டம் இன்னொருவரால் நுகரப்படுவதை ஏற்கத் தயங்குவதாக கதை விவரிக்கிறது. இந்த நிலையை ஆணின் மனநிலை என்றுகூட நினைக்க வேண்டியதில்லை. இருபாலாரின் பொதுநிலைப்பட்ட ஒன்றுதான். ஆணின் நோக்கில் சொல்லப்பட்ட கதையென்பதால் இங்கே ஆணின் மனநிலையாக நாவல் முன்நிறுத்துகிறது.



தமிழின் புனைகதைப் பரப்பில் தனது மூன்று நாவல்களாலும்(கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல்) நான்கு தொகுதிகளிலுள்ள ( மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், சாவுச்சோறு) அரைசதத்திற்கும் அதிகமான சிறுகதைகளாலும் பெத்தவன் என்னும் குறுநாவல் மூலமும் தமிழின் முக்கியமான புனைகதையாசிரியராக நிறுவிக்கொண்டவர் இமையம். அவரது மொத்தக் கதைகளிலும் அதிகமும் எழுதப் பெற்றவர்கள் பெண்களே. வயது சார்ந்து சிறுமிகளும் குழந்தைகளுமே அதிகம். வெளிசார்ந்து கிராமங்களில் வாழ்பவர்கள். ஆண்களின் உழைப்பை நம்பி, அவர்களைச் சார்ந்தே வாழவேண்டுமென நினைக்காத - தன்னுழைப்பில்- சொந்தக்காலில் நிற்கும் விளிம்புநிலைப் பெண்களே அதிகம். இதுவரை அவர் உருவாக்கி வைத்திருந்த இந்த அடையாளத்தைத் திட்டமிட்டு அழிக்கும்விதமாக இந்தநாவல் எழுதப்பட்டுள்ளது. கிராமத்து வாழ்க்கைக்குள் இருந்தாலும், படித்த பெண்ணாக, நடுத்தரவர்க்கக் வாழ்க்கையும் குணங்களும் கொண்ட ஒரு பெண்ணாகக் கமலாவை எழுதியிருக்கிறார். இந்த எழுத்து சமூக நடைமுறைக்குள் மனிதர்களை நிறுத்துபவர் என்ற இடத்திலிருந்து, ஆண் -பெண் உறவு சார்ந்த உளவியல் விவாதங்களை எழுப்பும் திசைக்குள் இமையத்தை நகர்த்தியிருக்கிறது. இத்தகைய நகர்வு தமிழின் முன்னோடிப் புனைகதை ஆசிரியர்கள் பலரின் பயணமுறையே.



பேச்சுமொழியின் லாவகத்தைக் கொஞ்சமும் குறைத்துவிடாமல், தனிக் குரலாகவும், உரையாடலாகவும் கதையை நகர்த்துவது என்பது இமையத்தின் தனித்துவமான மொழிநடை. பேச்சுமொழிக்குள் அவர் நிரப்பிக் காட்டும் பழமொழிகளும் சொலவடைகளும், உவமைகளும் ஆச்சரியமூட்டுபவை. பேச்சுமொழியின் சாத்தியங்களைத் திறமாகக் கையாள்வதில் இமையத்தின் தேர்ச்சி முதல் நாவலான கோவேறு கழுதைகளில் தொடங்கி ஒவ்வொரு கதையிலும் கூடிக்கூடி வந்த ஒன்று. இந்நாவலில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. தொகுத்து வைத்துக் கொண்டு திட்டமிட்டுப் பயன்படுத்துகிறாரோ என்று நினைக்குமளவுப் பயன்படுத்தியுள்ளார். இதனைத் தாண்ட அல்லது மறுக்க இன்னொரு நாவலை அவரே எழுத வேண்டும்

.

January 24, 2010


கோளாறான வயசு: ராசேந்திரச் சோழனின் எதிர்பார்ப்புகள்

 மனிதர்களின் பயன்பாட்டிற்காகவும், மேன்மையான வாழ்வுக்காகவும் கண்டு பிடிக்கப்படும் கருவிகளின் பயன்பாடு பல நேரங்களில் நேர்மறையாகவே அமைகின்றன. மனிதர்களுக் கிடையே இருந்த தொலைதூரங்களை மறக்கச் செய்துள்ள கைபேசியின் பயன்பாடே சாலைகளில் ஏற்படும் விபத்துக்களின் பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதே போல அக்கருவியைப் பல்நோக்குப் பரிமாணங்களில் பயன்படுத்தலாம் எனக் கண்டுபிடித்துச் சொன்ன அறிவியலாளர்களையே குற்றவுணர்வுக்குள் தள்ளி விடும் அளவுக்குக் கைபேசிகளில் இருக்கும் ஒளிப்படச் சாதனம் பாலியல் சார் குற்றங்களுக்குக் காரணமாகி விட்டன எனத் தொடர்ந்து ஊடகங்களில் கட்டுரைகள் வந்து கொண்டே இருக்கின்றன. சொந்தமான அந்தரங்கம் என்பது காணாமல் போய்விடும் நிலையில் மென்மையான உணர்வுகள் இல்லாமல் போய்விடும் ஆபத்துக்கள் நேர்ந்து விடும். மென் உணர்வுகள் மழுங்கடிக்கும் நிலையில் வன்முறையும், அதிர்ச்சிகளும் நெருக்கடிகளை ஏற்படுத்தி அவற்றை இயல்பானவைகளாக ஆக்கி விடக்கூடும்.

இதையெல்லாம் உணர்த்துவது யாருடைய கடமை. இதிலிருந்து தப்பிப்பதற்கான வழியாகச் சொல்லப்படும் பரிந்துரைகளில் ஒன்று; இயல்பானவற்றைத் தடைகள் போட்டு நிறுத்தக் கூடாது என்பது. குறிப்பாக ஆண்- பெண் ஈர்ப்பு என்பதும், இரு உடல்களின் வேட்கை என்பதும் உயிரியல் சார்ந்த இயற்கை என வாதிடும் அவர்கள், சமூக நியதிக்காக நாம் உண்டாக்கிக் கொண்ட கட்டுப்பாடுகள், பிரிவுகள், தராதரங்கள் போன்றவற்றில் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கூடாது என்கின்றனர். ஆண்- பெண் நட்பு என்பதில் தொடங்கி,காதல், காமம் என்பது வரை கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரம் வழங்கப்படும் போது வரம்பு மீறிய உறவுகள் நிகழ வாய்ப்பில்லை என்கின்றனர்.

தொடர்ந்து இந்த வாதம் விவாதத்திற்குரியதாக இருந்த போதிலும், மைய நீரோட்ட இந்திய சமூகம் அதனைச் சரியென ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் படைப்பாளிகள் இதனைச் சுலபமாகப் புரிந்து கொண்டு படைப்பாக்கிக் காட்டுவதன் மூலம் பரப்புரை செய்யத் தயங்குவதில்லை. சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றங்கள் வேண்டும் என வலியுறுத்தும் ஒரு படைப்பாளி, ஆண்-பெண் உறவுசார்ந்தும் இந்திய சமூகம் பழைமையான போக்கைக் கைவிட வேண்டும் என்றே வலியுறுத்துவான். அத்தகைய வலியுறுத்தலைச் செய்துள்ள பல கதாசிரியர்களைப் பட்டியல் இடலாம் என்றாலும், உடனே நினைவுக்கு வரும் பெயர் ராசேந்திரச் சோழன் தான்.

எழுபதுகளின் இறுதியில் காந்திகிராமத்தில் நடந்த நவீன நாடக முயற்சிகளுக்கான பட்டறையில் கலந்து கொண்டதன் மூலமும், அதன் தொடர்ச்சியாக நாடகங்களை எழுதியும் இயக்கியும் ஒரு நாடகக்காரராக அறியப்பட்டவர் அஷ்வகோஷ். தனது அரசியல் நடவடிக்கைகளின் போதும், விவாதங்களின் போதும், கட்டுரை எழுத்துக்களின் போதும் கறாரான இடதுசாரி முகம் காட்டும் அஷ்வகோஷ் சிறுகதை எழுத்தில் அதற்கெதிரான முகத்தைக் காட்டுபவர் என விமரிசகர்களால் சுட்டிக் காட்டப்படுகிறார்.

பொதுச் சமூகம் எழுத்துகளிலும் மேடைகளிலும் பேசுவதற்குரியன அல்ல என ஒதுக்கி வைக்கும் ஆண்- பெண் உறவின் சிடுக்குகளைக் கதைகளாக ஆக்கியதன் மூலம் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர். ஒழுக்கம் சார்ந்த பார்வைகளை மிகத்துச்சமாக மதிக்கும் மனித மனம், தனது உடலின் தேவைக்காகச் செய்யத்தயாராகும் கணங்களை அவரது கதைகள் அளவுக்கு வேறு ஒருவருடைய கதையிலும் பதிவுகளாகப் பார்க்க முடியாது. அதே நேரத்தில் வாசிப்புச் சுவைக்காக மலினமான உடல் வர்ணனைகளையோ, உடல்களின் சேர்க்கைகளையோ எழுதிக் காட்டும் எழுத்தும் அல்ல.

ஆண்- பெண் என்ற பேதமின்றி இயல்பான காமம் எல்லா உடல்களுக்குள்ளும் இருக்கிறது; வெளிப்படும் வாய்ப்பைத் தவற விடும் தருணங்களில் – அதன் கொதிகலன்கள் வெளிப் படுத்தும் ஆவியின் நிழலை எழுத்தில் கொண்டு வர வேண்டும் எனச் செயல்பட்டவர் ராசேந்திரச் சோழன் என்பதை அவரது கதைகள் தெளிவாகக் காட்டுகின்றன.

குமரப் பருவத்து இளைஞன் ஒருவனின் செயல்பாடுகள், வெளிப்படையாக ஒரு நோக்கத்தையும் , மறைமுகமாக இன்னொரு நோக்கத்தையும் கொண்டிருக்கும் நிலையினை அவரது எதிர்பார்ப்புகள் கதை மிகச் சாதாரணமான காட்சிகளின் வழியேயும், உரையாடல்கள் வழியேயும் காட்டுவதைக் காணலாம். கதை இப்படித் தொடங்குகிறது:

பசுபதி கிளார்க் வீட்டுக் குழந்தை ரொம்ப அழகு என்று சொல்லிக் கொண்டான். அவர் வீட்டிலேயே எப்போதும் ஒட்டிக் கொண்டு கிடந்தான். காலையில் பலகாரம் சாப்பிட்டு முடிந்ததும், சட்டை மாட்டிக் கொண்டு டீக்கடையில், பங்க் கடையில், பார்பர் ஷாப்பில், லைப்ரரியில் அவனை மாதிரி வேலையற்ற நண்பர்கள் வழியில் கிடைத்தால் அவர்களோடு அங்கங்கே கொஞ்ச நேரம். உடன் வீட்டுக்குத் திரும்பி வந்தான்.
செருப்பை மாட்டிக் கொண்டு அவர் ஆபீஸ் புறப்படுகிற சமயம், ‘ என்னா சார் பொறப்டாச்சா’ என்று கேட்பான். ‘ஆமா சார்’ என்று அவர் புறப்பட்ட பிறகு அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொஞ்சத் தொடங்குவான். அவர் வீட்டிலேயே வைத்துக் கொஞ்சுவான்.
“ அதுக்கு சோறு ஊட்டலியா.” “வேணா இப்பதான் பால் போட்டது. அப்புறமா ஊட்டிக்கலாம்”
“தட்டுல கொஞ்சம் போட்டு எடுத்துக்னு வாங்களேன். நான் பெசஞ்சி ஊட்டிடறேன். என் கையால ஊட்டனா சாப்பிடும்”
அம்மா மறுபடியும் கூப்பிட்டாள். “ கூப்பிடறாங்களே போவலியா? ” “ போவணம்”
அவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவள் கேட்டான். “ ஏன் இங்கேயேதான் சாப்பிட்ருங்களேன்”
அம்மா வந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தாள். “ என்னா பையனாயிருப்பானோ. தெரியலியே இவன் இப்பிடியா கொழுந்த மேல உசிர வச்சிக்னு இருப்பான். சாப்டக்கூட வராம”
**** *****
அவனது வெளிப்படையான ஈடுபாடு கைக்குழந்தை மீதான ஈர்ப்பு என்பதாகத் தொடங்கும் கதை, அடுத்ததொரு நிகழ்வின் மூலம், அவனது ஈர்ப்பு குழந்தை மட்டுமல்ல என்பதைக் காட்டுகிறது. அவன் தங்கள் வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் – அந்தக் குழந்தையின் தாயிடம் நடத்தும் உரையாடல் இது.
“ தூக்கம் வர்ர மாதிரியிருக்குது. கொஞ்சம் தூங்கலாம்னு பாக்கறேன்” “ ஏன் தூங்குங்களேன்” அவன் அப்படியே நின்றான்.
“நீங்க தூங்கலியா..?’’ “ எனக்கு பகல்ல தூக்கம் வராது”
கொஞ்சம் பொறுத்துப் பார்த்தபிறகு அவள் “இன்னைக்கி என்னமோ ஒரே அசதியா இருக்கிறாப் போலருக்குது ” தனக்குத்தானே முனகிக் கொள்பவள் போல அவன் காதுபடச் சொல்லி விட்டு சுவர் பக்கம் முகத்தை வைத்து குழந்தையைப் பக்கத்தில் கிடத்திப் படுத்துக் கொண்டாள்.
முந்தானையை இழுத்து இடுப்பில் செறுகி வளையல்களை கைகளில் இறுக்கமாக ஏற்றிவிட்டு, ஒரு காலைத் தூக்கி கல்லில் வைத்து கிணற்றடியில் அவள் புடவை துவைத்துக் கொண்டிருந்தாள். கை ஏறி இறங்கும் போது அக்குளில் ஈரம் தெரிந்தது.
அவள் அடிப்பதை நிறுத்தி வியர்வையில் ஒட்டியிருந்த தலைமுடியை ஒதுக்கிக் கொண்டாள். “ சோப்பு தண்ணி மேல படப்போவுது. அப்பால போங்க” “ பரவாயில்லிங்க இருக்கட்டும்”
“ வெய்யில்ல எதுக்கு நிக்கணம்ன்றேன்” பசுபதி பதில் சொல்லாமல் நின்றான்.
“ கொழந்த வேற வெய்யில்ல” அவள் அலுத்துக் கொண்டாள். “ தோ இப்படி நெழலா வச்சிக்னு உக்காந்துக்கறேன்” பசுபதி சற்றுத் தள்ளியிருந்த பூவரச மரத்தடியில் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு குந்தினான்.
****** ****** *******
குழந்தை மீது காட்டும் ஈடுபாடு அதனைத் தாண்டி அந்தப் பெண்ணின் மீது படிகிறது என்பதை அறியும் பசுபதியின் அம்மாவின் எச்சரிக்கை உணர்வு இப்படி யோசிக்கிறது.
அம்மா சொன்னாள். “ ஏண்டா ஒனக்கு கொஞ்சமானா எதுன்னா இருக்கா. என்னாதான். பழக்க மானாலும் ஒரு வயசுப் பொண்ணுக்கு ஒரு ஆம்பளயக் கண்டா ஒரு கூச்சநாச்சம் இருக்காது? இன்னும் என்ன சின்னப்புள்ளையா நீ. எந்நேரம் பாத்தாலும் அங்கியே பூந்துக்னு.
“ சும்மா இருமா நீ வேற. இப்ப இன்னா பண்ணிடறம் இப்ப சும்மா கொழந்த கிட்ட கொஞ்ச நேரம் பெராக்கா வெளையாடனா என்னாவாம்.?”
அதுக்கு இங்க தூக்கியாந்து வெச்சி வெளையாடறது. உன்ன ஆரு வேண்டான்னா. அத வுட்டுப் புட்டு அவ சமையக் கட்டுக்குப் போனா சமையக்கட்டு. கூடத்துக்குப் போனா கூடத்துக்கு. தோட்டத்துக்குப் போனா தோட்டத்துக்கு. சீ..”
பசுபதி அம்மாவை முகச் சுளிப்போடு பார்த்தான்.
******* ******* *******
பசுபதி உள்ளே நுழைந்து “ அம்மா” என்றான். “கிளார்க் ஊட்ல எல்லாம் சினிமாவுக்குப் போறாங்களாம்மா; பாண்டிக்கி. என்னியும் கூப்புட்றாங்க.. காசு இருந்தா போவலாம்.” “ உன்னை நான் எந்நேர வேளையில பெத்தனோ..” அம்மா தலையிலடித்துக் கொண்டாள்.
“ எல்லாம் பொறப்டுட்டாங்கமா ரெடியா” “ சும்மா கெடறா வவுத்தெரிச்சல கெளப்பாத” பசுபதி அம்மா முகத்தைப் பார்த்து நின்றான். “ எல்லாம் இன்னோர் நாளைக்கி போய்க்கிலாம் தனியா.. அவங்களோட வேணாம்”. அம்மா கறாராய்ச் சொன்னாள்.
அவன் எதிர்பார்ப்பு அவளுக்குப் புரிந்த போது கிடைத்த பதில் அவனைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது. உடல் சார் ஈர்ப்பில் ஒருவரின் எதிர்பார்ப்பு ஒருவழிப் பட்டதல்ல; இருவழிப் பட்டது என்பதை உணரும் போது அந்தச் சாதாரண - இயல்பு நிலைக்கு அவனே வந்து விடுகிறான் என்பதாகக் கதையை முடித்து விடுகிறார் ராசேந்திரச் சோழன்.
வெய்யில் நேரத்து அமைதியில் மரத்தடியில் கட்டியிருந்த எருமை மாடு தூங்கியது. மண்ணை சீச்சிவிட்டுப் படுத்த நாய் தூங்கியது. ஈ மொய்க்கும் சப்தம் கேட்டது. அம்மா தூங்கினாள். தூக்கம் வராமல் உழன்றான் பசுபதி. காலையிலிருந்து மத்தியானம் வரை அவன் குழந்தையைத் தூக்கிக் குலுக்கியதைக் கண்டு பொறுக்க மாட்டாமல் அவள் சொல்லியதை நினைத்துக் கொண்டான். “கொஞ்ச நேரமாவுது கீழ உடுங்க கொழந்தைய. தூக்கித் தூக்கியே அதுக்கு உடம்பு வலி கண்டுடும் போலருக்குது..”
பக்கத்தில் கோரைப் பாயில் கிடந்தாள் அவள். சிகப்புத் தோல் மூடிய இமைகளுக்கு நடுவே கறுத்த இமை முடிகள் மை பிசுபிசுப்போடிருந்தன.. ... புரண்டவாக்கில் அரைக்கண் விழித்தவள் திகைத்துப் போய் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள். எல்லாவற்றையும் சரி செய்து கொண்டு அவனை எரிக்கும் கண்களுடன் பார்த்தாள்.
திணறலுக்குள்ளாயிருந்தவன் “ கொழந்த மட்டும் தனியா வெளையாடிக்னு கெடந்ததுங்க. அதான்” என்றான். அவள் பாயைச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். அவன் கொஞ்சம் யோசித்து, “ நான் இப்பத் தாங்க வந்தேன். கொஞ்ச நேரம்தான். நான் வந்தேன். நீங்க எழுந்திட்டீங்க” என்றான்.
“ இந்தாங்க கொழந்த” “ அப்படித்தான் உட்டுட்டுப் போங்க. அதுபாட்டுனு வெளையாடிக்னு கெடக்கும்.”
*********
“ என்னாடா ரெண்டு நாளா கொழந்தைய கையால கூட தொட மாட்டன்ற. ஓடியார்து பார்ரா அது. தூக்கித் தூக்கியே பழக்கப் படுத்திட்டியாங்காட்டியும் உடுதா பார் பாசம் அதுக்கு.”
அவன் மேஜைமேல் தாறுமாறாகக் கிடைக்கும் புஸ்தகங்களில் ஃபிசிக்சைத் தேடினான். “ ஆமா தூக்கி வச்சிருந்தவரிக்கும் போதாதாங்காட்டியும். எங்களுக்கு என்னா வேற வேல கீல இல்லியா என்னா..?
************* ********************