Friday 18 March 2016

வாகனம் - அம்பை

https://ia801409.us.archive.org/4/items/Vaganam/Vaganam.pdf
automated google-ocr

வாகனம் - அம்பை

எல்லோருக்கும் அவரவர் தேவைக்கேற்ப ஒரு வாகனம் இருக்கிறது. அவரவர் தகுதியையொட்டி அமைந்த வாகனம். சிவனுக்கு நந்தி முருகனுக்கு மயில் விஷ்ணுவுக்குக் கருடன் சனீஸ்வரனுக்குக் காகம் யமனுக்கு எருமை. அத்தனை பெரிய உடம்புடைய வினாயகருக்குக் கூட அதிகம் பயணம் செய்யாமல் அரசமரத்தடியில் அமர்ந்திருந்தால் போதும் என்றாலும் வாகனக் குறை இருக்கக் கூடாது என்று ஒரு மூஞ்சூறு வாகனம் துணைக்கு நாயகர்களுடன் வாகனத்தில் ஒண்டிக் கொண்டுவிடும் தேவிகளுக்குக்கூட சொந்த வாகனத்தைப் பொறுத்த வரை குறை இல்லை. பாகேச்வரிக்கு அன்ன வாகனம். பத்மாசனிக்கு நாக வாகனம். மகேச்வரிக்கு ரிஷப வாகனம். மீனாட்சிக்குக் குதிரை வாகனம். இது தவிர சிலர் சும்மா இருக்கும்போது சிவப்புத் தாமரை அல்லது வெள்ளைத் தாமரையில் மிதந்தபடி இருக்கிறார்கள். சற்று உக்கிரமாகச் செயல்பட நினைக்கும் பெண் கடவுள்கள் சிங்கத்தின் மீதேறி அதன் பிடரியைப் பிடித்தபடி தங்கள் பயணத்தைத் துவக்கிவிடுகிறார்கள். தேவிகள் இருக்கட்டும். அரசிளங்குமரிகள் மற்றும் ராணிகள் எத்தனை பேர் யானையேற்றம், குதிரையேற்றம் செய்யவில்லை? தேரோட்டியவர்கள் கூட உண்டு. காவியத்து நாயகி கள் புஷ்பக விமானத்தில் பறந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் குழந்தை களுக்கான, தேவதைகள் வரும் புனைகதைகளில் சூனியக்காரிகள் கூடத் துடைப்பக்கட்டையில் பறந்து வருவார்கள். பாக்கியத்துக்கு ஒரு வாகனத்திற்காக ஆசைப்பட இத்தனை புராண, சரித்திர, காவியப் பின்புலம் இருந்தது. இருந்தும் வாகன யோகம் இருக்கவில்லை.

 O 

சின்னக் குழந்தையாக இருந்தபோது அவளுக்கு மூன்று சக்கர சைக்கிள், பெடல் மோட்டார் வண்டி என்று எதுவும் இருந்ததாக நினைவில்லை. பத்து மாதத்திலேயே அவள் நடக்க ஆரம்பித்து விட்டாளாம், நடைவண்டிகூட இல்லாமல் குடும்பத்துப் புகைப்பட ஆல்பத்தைப் புரட்டும்போது அவளுடைய பெரிய குடும்பத்து
வாகனம் ** 347 --
________________

அத்தனை ஆண் குழந்தைகளும் ஒரு மூன்று சக்கர சைக்கிளுடனோ, சின்ன மோட்டார் வண்டியில் அமர்ந்தபடியோ எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. இவளுடையதும் இருந்தன. மரப்பாச்சி பொம்மையைக் கையில் பிடித்தபடியோ, அழகிய வேலைப்பாடு செய்த, வெல்வெட் மெத்தை பதித்த மர நாற்காலியின் கையை அல்லது நீளமான காலைப் பிடித்தபடியோ அந்தக் குடும்பத்து அத்தனை பெண்களுக்கும், குழந்தைகள், பெரியவர்கள் என்ற பேதமி ல்லாமல் அந்த அலங்கார நாற்காலி துணை நின்றிருந்தது. அதன் முதுகு, கை, கால் என்று வயதுக்கேற்றபடி ஒரு பகுதி பெண்கள் சார்ந்து நிற்க உதவியிருந்தது. எதையாவது பிடித்துக் கொள்ளாமல் பெண் பிறவிகள் நிற்க முடியாது என்பதில் அவர்கள் குடும்பத்துப் புகைப்படக்காரருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது என்று தெரிந்தது அவளுக்கு ஆண்களுக்குக் குழந்தைப் பருவத்தி லிருந்தே சக்கரங்கள் உள்ள வாகனங்கள் துணை நின்றன. அரை யானை கனம் கனத்த, அசைக்கவே முடியாதபடி பூமியில் அழுந்தி நின்ற தேக்கு நாற்காலிதான் பெண்களுக்கு அம்மாவழித் தாத்தா வாங்கிய முதல் கறுப்பு ப்யூக் காரின் மேல் ஸ்ட்ை கோட்டுடன் சாய்ந்தபடி நின்றவாறே தாத்தாவின் புகைப்படம். பின்பு அதே போஸில் மாமாக்களின் புகைப்படங்கள் இருந்தன. மூன்று சக்கர சைக்கிளிலிருந்து ப்யூக் கார் வரை ஓர் அதிகாரபூர்வமான வாகன முன்னேற்றம் கண்கூடாகத் தெரிந்தது ஆண்களைப் பொறுத்தவரை.

அப்பாவின் குடும்பத்தில் சித்தப்பாவுக்கு இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு ஏற்பட்டபோது ஒரு மோட்டார் பைக் வந்தது பள பளத்தபடி அதில் சித்தியை ஏற்றிக்கொண்டு சுற்றியது மட்டுமல் லாமல், அவளை அதன்மேல் அமர்த்தி, பல புகைப்படங்களையும் அவர் எடுத்தது பல விமர்சனங்களைக் கிளப்பியது குடும்பத்தில். அதன் தோல் இருக்கைமேல் அமர்ந்து விட்ட சித்தியை எப்படி மீண்டும் தூய்மைப்படுத்துவது என்பது பற்றிய சர்ச்சைகள் நீடித்தன. சாணத்தைப் போட்டு மோட்டார் பைக்கைக் கழுவுவதா, அல்லது சித்தியையே சாணத்தில் குளிப்பாட்டுவதா போன்ற பட்டி மன்றங் கள் நடந்தன. முடிவில் எல்லாவித மீறல்களுக்கும் ஏதாவது ஒரு நிவாரணச் சடங்கு வைத்திருந்த ஒரு புரோகிதரின் யோசனைப்படி பசு மூத்திரம் ஒரு துளி கலந்த எதையோ விழுங்கி சித்தி தன்னைச் சுத்திகரித்துக்கொண்டாள் என்று கேள்வி. ஒரு முறை அவள் சுத்திகரிக்கப்பட்ட பின்பு எந்த விமர்சனமும் வரவில்லை. சித்தி மோட்டார் பைக்கில் சவாரிசெய்தாள் நிதமும்.
O

கூட்டத்திலும் மழையிலும் பேருந்தை அல்லது மின்ரயிலைப் பிடித்து அலுவலகம் செல்லப் பழக்கப்பட்ட அந்த நகரத்திலிருக்கும் அத்தனை பேருடனும் அவள் கலந்துபோயாயிற்று. ஆவேச மழையாக
<- 348 4'- அம்பை
________________

இருந்தால் குடையிருந்து ஒர் உபயோகமும் இல்லை. குடையைப் பிரித்தவுடன் அது கம்பிகளை நீட்டியபடி மடங்கி அம்பேல் சொல்லி விடும். மழைக்கோட்டும் தொப்பியும்தான் கை கொடுக்கும். ஆண்கள் தங்கள் கால்சராயை முட்டுக்கு மேல் மடக்கி விட்டுக்கொண்டு, காலணியைப் பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு கைப்பெட்டி சகிதம் கிளம்பிவிடுவார்கள் பேருந்து நிறுத்தத்தை நோக்கியோ, ரயிலடியை நோக்கியோ. மழைக்காலத்துக்கு என்று புடவைகள் உண்டு பெண்களிடம் பருத்தி அல்லாத, வேகமாக உலர்ந்துவிடும் செயற்கை இழைப் புடவைகள். அதுவும் முட்டுக்கு மேல் ஏறிவிடும். ஸல்வார் கமீஸாக இருந்தால் ஸல்வார் முட்டு வரை மடக்கப்பட்டு விடும். ஆயிரக்கணக்கான, பலவித வடிவமும் வயதும் உள்ள பெண் கள் வேலைக்குப் போகும் மும்முரத்தை முகத்தில் காட்டியபடி ஒரு கூட்டமாகத் திரண்டு இப்படி வரும்போது யாருக்கும் வெறித்துப் பார்க்கவோ, கவனிக்கவோகூட நேரமிருக்காது. எதிரே நின்று வெறித்துப் பார்க்கும் அல்லது நோட்டம் விட முற்படும் வேற்றுார் ஆளை, "உனக்கு அம்மா இல்லையா. அக்கா, தங்கச்சி இல்லையா?” என்றெல்லாம் நின்று கேட்காமல், வேகமாக முன்னேறும் அந்தக் கூட்டம் தயங்காமல் வீழ்த்திவிட்டுப் போய்விடும். பாக்கியத்துக்கும் இது பழகிவிட்டது.

அவள் செல்ல வேண்டிய ஈரடுக்குப் பேருந்தை எதிர்நோக்கி நின்று, அது வந்ததும் முண்டியடித்து ஏறி, "ஒ, குடை ஏ, மஞ்சள் புடவை அரே கறுப்புப் பான்ட் ஏ, நரைத்த தலை முன்னால் போங்க, முன்னால் போங்க . . .' என்று நடத்துநரால் முன்னால் தள்ளப்படும் குறியீடுகளில் மறைந்துபோன நபர்களில் ஒருத்தியாய்ப் பயணித்து இறங்கி, பின்பு ரயிலடியில் எந்த பிளாட்பாரத்தில் வண்டி நிற்கிறது என்று பளிச்சிடும் விளக்குக் குறிகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, படிக்கட்டில் ஏறி, பாலத்தில் ஒடி, இறங்கி, விரைவு மின்ரயிலைப் பிடித்து அமர்ந்து வெளியே பார்ப்பாள். ஒவ்வொரு நாளும்.
O

பாக்கியத்தின் அம்மாவின் காலத்திலேயே மகரிஷி கர்வே மகா ராஷ்டிரத்தில் நடத்திய பள்ளியில் பெண்கள் சைக்கிள் விட ஆரம் பித்தாயிற்று. சைக்கிள் பந்தயங்களில் வேறு அவர்கள் பங்கெடுத் தார்கள். சைக்கிள் ஒட்ட மகாராஷ்டிரப் புடவைக் கட்டு வாகானது. பத்திரிகைகளில் முட்டுவரை ஸ்கர்ட் போட்ட மேல் நாட்டுப் பெண்கள் சைக்கிள் ஒட்டுவது போல் விளம்பரங்கள் வந்தபடி இருந்தன அப்போது, ஆனால் அம்மா வீட்டுப் பெண்களுக்கு வாகன யோகம் தாத்தா கோயமுத்துரர் வந்த பிறகுதான் வந்தது.

தாத்தா தேர்ந்தெடுத்த வீடு சற்றுத் தள்ளி, ஒதுக்குப்புறமாய் இருந்தது. மாமாக்கள் கல்லூரி போக, எடுபிடி வேலை செய்யப்
வாகனம் ** 349 --
________________

போக என்று ஒரு ராலே சைக்கிள் வந்தது வீட்டுக்கு முன்பக்கம் பிடியிலிருந்து உட்காரும் இருக்கைவரை குறுக்குக் கம்பி போட்ட ஆண்களுக்கான சைக்கிள். சில நாட்கள்வரை மாமாக்களின் தனி உரிமையாக இருந்தது. பின்பு சுவரைப் பிடித்தபடி கமலா சித்தி அதை ஒட்டப் பழகி தங்கை ஆனந்திக்கும் தேர்ச்சி கொடுத்தபின் அது பொது வாகனமாயிற்று. புடவையுடனேயே முன்னால் காலை மடித்து அதில் ஏறிவிடுவாள் கமலா சித்தி, வேகவாகினி அவள். ஒடிசல் தேகம். நீள நீளமாய்க் கால்கள். விடுமுறையில் கோயமுத்துரர் போனபோது இவள் காரியரில் தொற்றிக்கொண்டு போனதுண்டு அவளுடன் நின்றபடியே மிதித்து ஒட்டி, வேகமெடுத்தபின் அமர்ந்து, மரம், செடி, வீடுகள் எல்லாம் பார்வையில் நிற்காமல் ஒடும்படி சைக்கிளை விடுவாள் கமலா சித்தி. பறக்கும் குதிரையில் போவது போல் கற்பனை ஓடும். இறக்கைகளை விரித்து வானில் பறக்கும் வெள்ளைக் குதிரை.
வேறு உலகத்துக்குப் போய்விட்டு வந்தவள்போல் ஒரு கிறக்கத்து டன் இறங்குவாள் காரியரிலிருந்து முன்பற்கள் இரண்டும் உடையும் வரை சைக்கிள் சவாரி நீடித்தது. அதன் பின்பு தாத்தா ப்யூக் வாங்கிவிட்டார். சித்திகள் அதை ஒட்டவில்லை. ப்யூக் வாகன சவாரி எப்போதாவது கோயமுத்துார் போகும்போது கிடைத்தது. கமலா சித்தியுடன் போன சைக்கிள் சவாரியின் சுகமில்லை அதில், கையை விரித்துப் போட்டுக்கொண்டு ஒட்டுவது போன்ற கமலா சித்தியின் பராக்கிரம சாகசங்கள் மாமாக்களிடம் இல்லை கார் ஒட்டும் போது.
O

மின்ரயிலின் சன்னலூடே பார்க்கும்போது மோட்டார் சைக்கிள், ஜீப், கார் என்று விரைபவர்கள் கண்ணில் படுவார்கள். ஈரடுக்குப் பேருந்தின் மேலடுக்கிலிருந்து கீழே பார்க்கவும் அவளுக்குப் பிடிக்கும். பார வண்டி, தண்ணிர் லாரி, பேரீச்சம்பழத்துக்குத் தர வேண்டியது போல் கிடுகிடுத்துப் போன சைக்கிள், முதுகை நன்றாக வளைத்து ஒட்ட வேண்டிய பந்தய சைக்கிள், பல வண்ணங்களில், வடிவங்களில், ஒலிகளில் விரையும் கார்கள் என்று கண்ணில் படும் வாகனங் களுக்குக் குறைவே இல்லை.

அப்படி அவள் ஒரு முறை மேலடுக்கிலிருந்து பார்த்துக்கொண்டி ருந்தபோதுதான் அதைப் பார்க்க நேரிட்டது. அந்த விபத்தை. ஒரு ஸ்கூட்டரில் நான்கு பேர் கொண்ட குடும்பம் போய்க்கொண்டி ருந்தது. கடைத் தெருவிலிருந்து வந்திருந்தார்கள் என்று கூறுவது போல், பின்னால் அமர்ந்த மனைவியின் கையில் பெரிதாகப் புடைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பை, ஸ்கூட்டர் ஒட்டும் அப்பாவின் முன்னால் நின்றபடி பையன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே
<- 350 <- அம்பை
________________

இடுக்கில் பெண். முகங்களில் சிரிப்புடன் ஒரு குதுகலமான குடும்பம். நொடியில், இவள் பார்த்துக்கொண்டே இருந்தபோது, ஒரு பேருந்து கட்டுக்கடங்கா வேகத்தில் வந்து ஸ்கூட்டரைத் தாக்கியது. வாகனங் கள் நிறுத்தப்படும் கிரீச் ஒசைகளும், உரத்த பேச்சுகளுக்குமிடையே கீழே ரத்தம் பூசிக்கொண்ட குடும்பம். பெண்ணின் சிறு கையில் இறுகப் பிடித்த மஞ்சள் மோட்டார் பொம்மை இருந்தது.

அந்த முனை எப்போதுமே ஒரு விபத்து முனைதான். அதற்கு முன்தினம்கூட மோட்டார் சைக்கிளில் போன ஒரு பையன் பெட்ரோல் வண்டி மோதி செத்திருந்தான். இவள் வீடு திரும்பும் வழியில் அன்று பார்த்தபோது அந்த விபத்து நடந்த இடத்தில் எண்ணெயும் கண்ணாடித் துகள்களும் சிதறி இருந்தன. சற்றுத் தொலைவில் ஒற்றைச் செருப்பு ஒன்று குப்புறக் கிடந்தது.

"விபத்துகள் அதிகமாகிவிட்டன. காலையில் போனால் மாலை திரும்புவோமா என்றிருக்கிறது” என்று சிலர் பேசிக்கொண்டனர்.

O

இவளுடைய தம்பிக்கு ஒரு வயதாகும்போதுதான் மூன்று சக்கர சைக்கிள் வந்தது வீட்டில். கறுப்பு வண்ண சைக்கிள். அதன் பின்பு அவனுக்கு நான்கு வயதாகும்போது வீட்டுக்கு இரண்டு சக்கர சைக்கிள் வாகனம் ஒன்று வந்தது. சிவப்பு வண்ணப் பூச்சுடன் வழுக் கும் சிவப்பு ரெக்ஸின் இருக்கையுடன், நான்கு வயதுப் பையன் ஒட்டு வதற்கான வாகனம். அதைத் தொட்டுத்தொட்டு ரசித்ததுடன் சரி.

அந்தக் கனவு மட்டும் அடிக்கடி வந்தது. அந்தப் பறக்கும் கனவு. சைக்கிள் பெடலில் கால் வைத்ததும் ஓர் எடையற்ற உணர்ச்சி. பிறகு சைக்கிளுடன் வானில் எம்பிஎம்பிப் பறப்பது. எடையே இல்லை. பெடல் பூவிதழ்போல்.
பார்க்கப்போனால் சின்ன வயதில் அவள் சைக்கிள் விட்டது ஒரு முறைதான். சந்தில் ஒட்டிக் காட்டுகிறேன் என்று தம்பியிடம் சவால் விட்டுவிட்டுக் குப்பைத் தொட்டிமேல் ஏறி சர்க்கஸ் செய்து, சுவரில் முட்டி, சைக்கிளுடன் சாக்கடையில் விழுந்தாள். 'மளக் கென்று வலது முழங்கையில் சத்தம். அப்படியும் எழுந்து மீண்டும் ஒட்டினாள். வலது முழங்கை பங்கனபள்ளி மாம்பழமாகியது. "சைக்கிள் பக்கம் போனால் தெரியும்” போன்ற கூப்பாடுகளுக்குப் பிறகு, கை கால் முறிந்த பெண்ணுக்குத் திருமணமாகாது போன்ற எச்சரிக்கைகள் தொடர்ந்து, தம்பிக்கு மட்டுமே சைக்கிள் ஒட்ட அனுமதி வழங்கப்பட்டது. அவனுக்குக் கை, கால் உடைந்தால் அவனை யார் கட்டிக்கொள்வார்கள் போன்ற இவள் வாதங்கள் யார் காதிலும் விழவில்லை.
வாகனம் * 351 -
________________

கிண்டி அருகில் குடிபோனபோது குதிரைச் சவாரி பழக வேண் டும் என்று இவள் விண்ணப்பித்தாள் பெற்றோரிடம். இவளுடைய 'விபரீத ஆசைகளைப் பற்றிய பல கருத்து மோதல்கள் வீட்டில் நடந்தன. பின்பு குதிரையும் விலக்கப்பட்ட வாகனமாயிற்று.

டில்லியில் மேல்படிப்பு படிக்கும்போது மனத்தில், ஸ்கூட்டர் வேண்டுமென்ற வெளியிடாத ஆசை இருந்தது. தோழன் மணி வண்ணன் புத்தம்புது ஸ்கூட்டரைக் கொண்டுவந்து, "வாங்க பாக்கியம், ஒரு ரவுண்டு அடிக்கலாம். போணி பண்ணுங்க" என்றான். மறுக்காமல் அவன் பின்னால் உட்கார்ந்துகொண்டாள். அவன் ஸ்கூட்டர் ஒட்டப் பயின்று பல வருடங்கள் ஆயிற்று, ப்ரேக் விஷயத் தில் அவனுக்குப் போதிய ஞானம் இல்லை போன்ற அத்தியாவசிய மான விவரங்களை மணிவண்ணன் கூற மறந்துவிட்டான். சிறு வீதிகளில் உள்ள மாடுகள், எருமைகள், நாய்கள், பன்றிகள், மணியில் லாச் சைக்கிள்கள் இவைகளைக் கடந்து பிரதான வீதியை எட்டியதும் இரு புறமும் வேகமாக ஒடும் வாகனங்கள். புது மாடு மாதிரி மணிவண்ணன் மிரண்டுபோனான். பின்னால் அவசரப்படுத்தும் பார லாரியும் எதிரே விரைந்து வரும் பேருந்தும் அவனைக் கலவரப் படுத்த, எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் ப்ரேக்கை ஓங்கி அழுத்த, இவள் தெரு ரிப்பேர் செய்யப் போட்டிருந்த சரளைக் கற்களின் மேல் தூக்கி எறியப்பட்டாள். உடலெல்லாம் சிராய்ப்புக்கள். "ஐயோ, உங்களுக்குப் பின்னால உக்காரத் தெரியலையா? நல்லா பிடிச்சுட்டு உக்காரணும். எழும்புங்க. ரவுண்டை முடிச்சிடலாம்” என்றான் மணிவண்ணன் விடாப்பிடியான வேதாளம்போல, சரளைக் கற்களை விட்டு எழுந்தபடி, கோபித்துக்கொள்ளாமல், மணிவண்ணன், ஒரு நாளைக்கு இத்தனை விழுப்புண்கள் போதுமே?” என்றாள். இன்னமும் தோள்பட்டையிலும், முழங் கையிலும் உள்ளங்கை அளவுக்குத் தழும்புகள் இருக்கின்றன.

O -

மின் ரயிலின் சன்னல் வழியாகவும், இரண்டடுக்குப் பேருந்தின் மேலடுக்கிலிருந்தும் பார்க்கும்போது, பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை என்று பல வடிவங்களில் வசீகரமாய்க் கண்ணில் மோதிச் சென்ற வாகனங்களில் உட்கார்ந்து பயணம் செய்யும்போது, அந்த நகரத்தில் அவற்றுக்கு இடமில்லை என்று தோன்றியது. காலையும், மாலையும், இரவும் எந்நேரம் அவற்றில் போனாலும் ஹாரனின் பிளிறல்களும், மராட்டி, இந்தி மற்றும் ஆங்கிலத்தின் பொறுக்கி எடுத்த, பெண்களை மையமாக்கிய கெட்டவார்த்தைகளும், பிரதான வீதிகளில் அங்குலம், அங்குலமாய் நகரும் அவஸ்தையும் கேட்டு, உணர முடிந்தது. இசை வடிவில் வந்த ஹாரன் ஒலிகள் சில சமயம் எலும்பை ஊடுருவித் தாக்கின. எதிலும் மோஸ்தரைப் பின்பற்றும் சிலர் காரைப் பின்புறமாக நகர்த்தும்போது அமெரிக்க உச்சரிப்பில் "இந்தக்
* 352 -- அம்பை
________________

கார் பின்னால் போகிறது” என்று ஆங்கிலத்தில் பதிவுசெய்த ஒலிநாடாவை இயக்கும் ஒலியை எதிர்பாராத சமயம் கேட்டபோது துரக்கிவாரிப்போட்டது. சிலர் குழந்தையின் அழுகை ஒலியை இதற்குப் பயன்படுத்தியதால் வேளை கெட்ட வேளையில், தெருவில் நடந்தபடி, நகரம் இல்லாக் கனவில் மூழ்கியிருக்கும்போது, குழந்தையின் அழுகை திடீரென்று முதுகின் பின்னால் கிளம்பித் திடுக்கிடவைத்தது.

துரத்தில் இருந்து பார்க்கும்போது கறுப்பும் மஞ்சளும் கலந்த சமோசா மாதிரி அழகாகத் தெரிந்த ஆட்டோக்கள் பயணம் செய்ய ஏறியதும், மற்றப் பெரிய வாகனங்களின் புகை உமிழ்வில் சிக்கிக்கொண்டன. விரைவு நெடுஞ்சாலைகளில் ஆட்டோவில் போய், பார லாரி, மோட்டார் வண்டி, பேருந்து இவை கக்கும் புகையைச் சுவாசித்து மீள்வது ஜீவ மரணப் போராட்டம்போல் தோன்றியது.

தெருக்களும், வீதிகளும், நெடுஞ்சாலைகளும் குருதியையும், குப்பை யையும், புகையையும் அப்பிக்கொண்டு நிற்க, வாகனங்கள் அசுர கணங்களாய் அவற்றில் ஓடின.
O

கல்பாக்கத்துக்கு அவள் தம்பியை மாற்றல் செய்தபோது, "கடலைப் பார்க்க வாயேன். இங்கே இருக்கும் மீனவர்கள் எனக்கு நல்ல நண்பர்கள். அவர்களில் ஒருவன் என் நெருங்கிய நண்பன். கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறான். கட்டு மரத்தில் ஏற்றிக்கொண்டு போய்க் கவிதை படிப்பான். சினிமாவுக்குப் பாட் டெழுத ஆசையாம். கட்டுமரத்தில் ஏறிக் கடலைப் பார்க்க வா” என்று அழைப்பு விடுத்தான். கடல் பக்கமாய் வீடு. தெருக்கள் இடையே கடற்கரை மணல் கொட்டிக் கிடந்தது.

போய்ச் சேர்ந்தவுடனேயே தம்பியும், தம்பி குழந்தைகளும், அவளுமாய்க் கடல் நோக்கி நடந்தனர். “பொம்பளங்கள கட்டு மரத்துல ஏத்தக் கூடாது” என்று தயங்கிய தம்பியின் நண்பனைக் கவிதைப் பக்கமாய்த் திசை திருப்பிக் கட்டுமரத்தில் ஏறிக் கொண்ட னர். பொங்கும் அலைகளினால் ஏற்பட்டக் குமட்டலுக்குக் கடலைப் பார்க்காமல் வானைப் பார்க்கச் சொன்னான். கடலலைகள் கால் களில் முட்ட, மேலே வானைப் பார்த்தபடி, மீனவ நண்பனின் ஏலேலோ பாணிக் கவிதைகளைச் செவிமடுத்தபடி கட்டுமரப் பயணம்.

வீடு திரும்பியதும் எலுமிச்சம் பழ சர்பத் குடிக்கத் தோன்றியது. "இதோ" என்று தம்பி மனைவி கதவைத் திறந்து வாயிலில் நிறுத்தி யிருந்த சைக்கிளில் ஏறி எலுமிச்சம் பழம் வாங்கச் சென்ற போதுதான் கண்ணில் சைக்கிள் பட்டது. சிறிது நேரத்துக்குப் பின் தம்பியின்
வாகனம் * 353 ->
________________

பெண் அவள் தோழியிடமிருந்து புத்தகம் வாங்கச் சைக்கிளில் போனாள்.

மாலையில், "எனக்கும் சைக்கிள் ஒட்டணும்” என்றாள் மெள்ள. தம்பி பெண்ணும், பையனும் உற்சாகமாக உடன் வந்தனர். சைக்கி ளைத் தள்ளி ஏறுவது மறந்துபோயிருந்தது. ஓர் ஒரமாகச் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏறி, விட ஆரம்பித்ததும் தெரு குறுகிப்போவதுபோல் தோன்றியது. இரு பக்க மணலும் இவள் மேல் பாய்வதுபோல் பட்டது. வெகு துரத்தே முள்வேலி சுற்றிக்கொண்டு நின்ற மரங்கள் தெருவின் குறுக்கே ஓடிவர முயன்றன. கால் செருப்புக்கள் கழன்று விழுந்தன.

+
"அத்தே, அத்தே! மணல் மேல ஏத்துங்க. சைக்கிள் நின்னுடும்' என்று தம்பி பையன் சைக்கிள் பின்னால் ஓடி வந்தபடி கத்தினான்.

மணல் மேல் ஏற்றி, சைக்கிளும் அவளுமாய் விழுந்தனர். வீட்டுக் குத் திரும்பியதும் தம்பி மனைவி சிராய்ப்பின் மேல் மருந்திட்டாள். "ஏங்க்கா, தேவையா இதெல்லாம்?" என்றான் தம்பி.

விடாப்பிடியாக, மறுநாள் விடிகாலை தம்பி குழந்தைகளுடன் ஒசைப்படுத்தாமல் வெளியே வந்தாள். "அத்தே, உங்களால முடியும். கமான் அத்தே. மெள்ள மிதியுங்க. திருப்புங்க” என்ற உற்சாகமூட்டும் அவர்கள் குரல்களின் துணையோடு அந்தப் பகுதியைச் சைக்கிளில் வலம் வந்தாள். ஒரு ராணி போல் உணர்ந்தாள் சில கணங்களுக்கு.

O

திட்டமே போடாமல் ஒரு வாகனம் அவளுடையதாயிற்று. சக்கர மில்லா, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத வாகனம். ஒசையின்றி, மோதலின்றி, ரத்தமின்றி இயங்கும் வாகனம். மின்னியக்க வாகனம். மூஞ்சூறு வாகனம். கணிப்பொறியை ஏந்திச் செல்லும் வாகனம். அதில் ஆரோகணித்துத் தகவல் வீதியில் பல காத தூரம் பயணம் போனாள். தகவல் வலைக் கூட்டத்தாரின் வீட்டுப் பக்கங்களை நோட்டம் விட்டாள். பல வீட்டின் கதவுகளைத் தட்டித் திறந்தாள். தனக்கென்று ஒரு வீட்டை அதில் அமைத்துக்கொண்டாள். இது தவிர, பூகோள நகரங்கள் அமைப்புத் திட்டம் மூலம் உலகின் பல இடங்களுக்கு ஒரு வீட்டுப் பக்கம் அமைப்பதற்காக வலம் வந்தாள்.

 முடிவில், சினிமா, காதல், புரட்சி இவற்றுடன் இணைந்த பாரீஸ் நகரத்தில் ஒரு வெற்றிடம் தேடிக் குடி புகுந்தாள்.

இரண்டு வீட்டின் நுழைவாயிலிலும் வீட்டிற்கு வரப்போகும் விருந் தாளிகளுக்குத் தன்னை அறிமுகப்படுத்தும் முதல் கட்டச் செயலாகத் தனக்கும் வாகனங்களுக்கும் உள்ள உறவைப் பற்றி எழுதினாள். தற்போது தன் வாகனம் என்று குறிப்பிட்டு, மின்னியக்க மூஞ்சூறின் மேல் ஆரோகணித்தவளாய்த் தன்னை வரைந்துகொண்டாள்.
* 354 -o- அம்பை
________________

பாம்பு, சிங்கம், அன்னம், குதிரை என்று வாகனம் அமைத்துக் கொண்டவர்கள் வழியில் வந்த அவளுக்கும் ஒரு வாகனம் அமைந்து போயிற்று. அரக்கர்களை அழிக்கவும், தேவர்களைச் சந்திக்கவும், மின்னியக்கத் தருணம் பார்க்க ஆரம்பித்தாள்.
'தினமணி' பொங்கல் மலர், 1997

வாகனம் -- 355 --

 http://www.tamilvu.org/courses/degree/p101/p1012/html/p1012663.htm


6.3 சிறுகதை நோக்கும் போக்கும்

பெண்கள் உழைப்பு சுரண்டப்படுதல், அவர்களுடைய உரிமைகளும், உணர்வுகளும் ஒடுக்கப்படுதல் இவற்றின் அடிப்படையில் எழும் பெண்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துதலை அம்பையின் நோக்கமாகக் காண்கிறோம்.
ஆண் ஆதிக்கத்திற்கும், பெண்கள் அந்த ஆதிக்கத்தின் கீழ் அடங்குவதற்கும் உரிய காரணங்களை உளவியல் ரீதியில் புனர் சிறுகதையில் அம்பை எடுத்துக் காட்டுகின்றார் (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை). இச்சமுதாயத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும், ஆண்களாகவும், பெண்களாகவும் உருவாக்கப்படுகின்றனர். இச்சமுதாயமே அவர்களின் நடத்தைக்குக் காரணமாகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது அவர் நோக்கமாகிறது. 'இவ்வுலகில் பிறந்தவர்கள் இயல்பாக இருப்பதே அவர்கள் சுதந்திரம்’. அவர்களை அவ்வாறு இருக்க விடுவதும் சுதந்திரம் என்பதைப் பல சிறுகதைகளில் வெளிப்படுத்துகிறார் அம்பை.

6.3.1 முறிக்கப்படும் சிறகுகள்

உயிர் வாழ உணவு தேவைதான். அந்த உணவைத் தயாரிக்க ஒரு சமையலறையும் தேவைதான். ஆனால் அந்தத் தேவை பெண்கள் மீது செலுத்தும் அழுத்தமும் ஆதிக்கமும் சொல்லி முடியாது. சமையலறை பெண்கள் மீது செய்யும் ஆதிக்கம் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற சிறுகதையில் விவரிக்கப்படுகிறது.
ஒளியற்ற, ஜன்னல் அற்ற குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால் போல், ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப் போட்டன. கால்கள் இறுக்க இறுக்கக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலா புறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்து கொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகள் எடுத்தனர்.' பேடி அதிகாரம்' என்று இதனைக் கடுமையாகச் சாடுகிறார் அம்பை.
"திருமணமான புதிதில் முப்பது பேர் வீட்டில் அஞ்சு கிலோ ஆட்டா மாவு பிசைவேன். 300 சப்பாத்தி இடுவேன்" என்று கூறுகிறாள் ஜீ.ஜி. முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் இரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. தோள்பட்டையில் குத்திக்குத்தி வலித்தது. அவளைப் பார்த்துப் பப்பாஜி சொன்னார். "சபாஷ் நீ நல்ல உழைப்பாளி" என்று (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை). சந்தேகப்படும் கணவன் மனைவியை எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாக்குகிறான் என்பதைச் சொல்லும் சிறுகதை 'வல்லூறுகள்' (சிறகுகள் முறியும்).
‘உடன்கட்டை ஏறுவது ஒரே மனிதனிடம் அவளுக்கு உள்ள விசுவாசத்தின் உச்சக் கட்ட நிரூபணம்’ என்று வாமனன் சிறுகதை குறிப்பிடுகிறது.
சமையலறைச் சிந்தனைகளே பெண்ணின் மனத்தை ஆக்ரமித்திருப்பதால் அவளால் உலக அறிவும் விழிப்புணர்வும் பெற இயலாமல் போய் விட்டதை இக்கதையில் இடம் பெறும் மீனாட்சி வாயிலாக அம்பை குறிப்பிடுகிறாள்
நாலு நாட்களுக்கு ஒருமுறை ஸ்டவ் திரியை இழுத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் கிடைக்கும் போது வாங்க வேண்டும். மழைக் காலத்தில் கவலை. அரிசி, பருப்பில் பூச்சி, மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்; வெயில் காலத்தில் அப்பளம், பழங்கள் வரும் காலத்தை ஒட்டி சர்பத், ஜூஸ், ஜாம், பழைய சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுண்ணாம்பு, மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை; தள்ளிப் போகாவிட்டால் கவலை என்று பெண்களின் கவலைகளையெல்லாம் எடுத்துரைக்கிறார். இவை இல்லாமல் இருந்திருந்தால் 'புதுக்கண்டங்களைக் கண்டு பிடித்திருக்கலாம், காவியம் எழுதியிருக்கலாம், குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம்’ என்று பெண்ணின் உழைப்பும் குறுகிய வட்டத்திலான உணர்வுகளும் அவளை இதுவே உலகம் என்று எண்ணச் செய்து விட்டதையும், அவள் விரும்பினால்தான் அதிலிருந்து அவள் விடுபட முடியும் என்பதையும் உணர்த்துகிறது வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்னும் சிறுகதை.
 
6.3.2 பெண்நிலை நோக்கு

சாயா திருமணமானவள். கணவன் பாஸ்கரன் சாயாவின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் சிறிதும் மதிப்பளிக்காதவன். தன்னுடைய ஒரு சொத்தாக மட்டுமே மனைவியை நினைப்பவன். எழுதாத சமூகச் சட்டங்களினால் இச்சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற கட்டுப்பாடுகளும், ஆதிக்க வேகமும் சாயாவுக்குக் கோபத்தை உண்டாக்கினாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
அலுவலகம் செல்லும் கணவனுக்குத் தினமும் அக்கறையாகச் சமைத்து உணவு கொடுத்தனுப்புகிறாள். அன்போடு அவள் செய்தவற்றை அவன் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் மேலிட வாய்விட்டே கேட்டு விடுகிறாள்.
"நீ நன்னாத்தான் சமைக்கிறே. சாமானை வீணடிச்சுடறே. இருந்தாலும் ஓட்டல்ல சாப்பிடறதை விட இது லாபம்தான்" (சிறகுகள் முறியும்) என்று கூறுகிறான். இதுபோன்ற தருணங்களில் தன்னுள் எழும் ஆத்திரத்தைச் சாயா எப்படிச் சமாளிக்கிறாள் தெரியுமா?
நாட்டை ஆளும் ராணியாக, ஆணையிடும் அரசியாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்வாள். "இஸ்திரி போட்ட பேண்ட் உடுத்தினால் என்ன?" என்று கேட்டால், "வண்ணானுக்கு எத்தனை கொடுக்கிறது?" என்று புலம்பும் கணவன்.
மனதுக்குள்ளே இடும் சட்டம்: கருமிகளுக்குக் கல்யாணமே ஆகக்கூடாது. ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும் போது, கெட்டியாக மூடிக் கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றொரு சட்டம். அடக்குமுறை அதிகமாக அதிகமாகச் சுதந்திர தாகமும் அதிகரிக்கிறது. சாயாவுக்கும் அப்படித்தான். அவள் தங்கையைப் பெண் பார்க்க வருவதால் சாயா வரவேண்டுமென்று அவள் தாய் கடிதம் எழுதியிருந்தாள். பாஸ்கரனோ "ஆயிரம் பேர் பெண் பார்க்க வருவா, ஒவ்வொரு தடவையும் நீ போக முடியுமா? "என்கிறான். அந்தக்கணம் ஓர் இந்துப் பெண்ணுக்குத் தோன்றக் கூடாதது என்று காலம் காலமாய் எல்லாரும் சொல்லும் ஓர் எண்ணம் அவளுக்கும் தோன்றியது. அவனை விட்டுப் போய்விட வேண்டும் என்று அவள் நினைத்தாள். பத்து வருஷங்களாய் இழுக்க இழுக்க நீளும் ரப்பர் துண்டாய் வளைந்து கொடுத்த மனம் அன்று கல்லென்று உறைந்தது. மனம் நினைத்த மறுவினாடியே எதிர்காலத் திட்டங்கள் நீண்டு அவள் தீர்மானமே செய்து விட்டாள். அவள் சிறகுகளை விரித்து அவள் பறக்க வேண்டும். விசும்பின் நிச்சலனமான அமைதியில் அவள் சிறகுகள் அசைய வேண்டும். அதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறாள். (சிறகுகள் முறியும்)
• பெண்ணின் சாதனை

ஆணாதிக்கத்தில் உரிமைகள் ஒடுக்கப்படலாம். உணர்வுகள் அடக்கப் படலாம். ஆனால் பெண் நினைத்தால் சாதிக்கலாம் என்பதை அம்பை எவ்வளவு சுவையாகச் சொல்கிறார் என்று பாருங்கள்:
எந்த வாகனமும் ஓட்ட அவளுக்கு உரிமை மறுக்கப்பட்டது. அவளுக்கு ஒரு வாகனம் உரிமை உடையதாயிற்று. சக்கரமில்லா, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத வாகனம், ஓசையின்றி, மோதலின்றி, ரத்தமின்றி இயங்கும் வாகனம். மின்னியக்க வாகனம். அதில் ஆரோகணித்துத் தகவல் வீதியில் பல காத தூரம் பயணம் போனாள். தகவல் வலைக் கூட்டத்தாரின் வீட்டுப் பக்கங்களை நோட்டம் விட்டாள். பல வீட்டின் கதவுகளைத் தட்டித் திறந்தாள். தனக்கென்று ஒரு வீட்டை அதில் அமைத்துக் கொண்டாள். தற்போது தன் வாகனம் என்று குறிப்பிட்டு மின்னியக்க மூஞ்சூறின் மேல் ஆரோகணித்தவளாய்த் தன்னை வரைந்து கொண்டாள். அரக்கர்களை அழிக்கவும் தேவர்களைச் சந்திக்கவும் மின்னியக்கத் தருணம் பார்க்க ஆரம்பித்தாள். இவ்வாறு அக்கதை (காட்டில் ஒரு மான்) செல்கிறது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே அமையும் தோழமை உணர்வையும் நெருக்கத்தையும் பல படைப்பாளிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோலத் தாய்க்கும் மகளுக்கும் அமைந்த தோழமை உணர்வையும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் நிலையினையும் வெளிப்படுத்துகிறது அம்பையின் 'பிரசுரிக்கப்படாத கைப்பிரதி' (காட்டில் ஒரு மான்).

6.3.3 உளவியல் நோக்கு
'தனிமையெனும் இருட்டு' உளவியல் ரீதியாகப் படைக்கப்பட்ட சிறுகதை (சிறகுகள் முறியும்). கணவன் வெளியூரில் வேலை நிமித்தம் தங்குவதாகவும், தனிமையை விரட்ட கணவன் அருகில் இருப்பது போலவும் அவன் தன் விருப்பப்படி நடந்து கொள்பவனாகவும் கற்பனை செய்தே காலத்தை இனிமையாக ஓட்டிக் கொண்டிருக்கிறாள். நாளடைவில் அதுவே பழக்கமாகிவிடவே இனியதான அந்த உலகத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறாள். உண்மையில் கணவனிடமிருந்து மறுநாள் வருவதாகக் கடிதம் வந்த போது அவளால் அதை ரசிக்க முடியவில்லை. இதுநாள்வரை தான் அனுபவித்த சுதந்திரமான கற்பனை இன்பத்தைக் கைவிட முடியாமல் தூக்க மாத்திரைகளை விழுங்கி விடுவதாகக் கதை முடிவடைகிறது.
சமுதாயத்தில் ஆண்கள், பெண்கள் இவர்களின் நடத்தைக்கு, சமுதாயம் அவர்களுக்குக் கற்பித்துத் தந்ததே என்று உளவியல் ரீதியான காரணத்தை ஒரு சிறுகதையில் எடுத்துக் காட்டுகிறார் (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை).
‘லோகிதாஸ்’ என்ற ஆண் உருவாக்கப்பட்டான். சபரி என்ற பெண்ணும் உருவாக்கப்பட்டாள்.
ஆண் சம்பாதிப்பவன். சம்பாதிப்பவனே ஆண். நீ சம்பாதிப்பவன். நீ வேலைக்குச் செல்பவன். நீ உரிமைகளை உடையவன். நீ அழக் கூடாதவன். நீ உறுதியானவன். நீ தீர்மானங்களைச் செய்பவன். நீ ஆண் - இப்படி உருவாக்கப்படுபவன் ஆண் என்று ஆணாதிக்கச் சமுதாயத்தை எடுத்துக் காட்டுகிறார். (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை)
ஹிஸ்டரி எடு! அப்புறமா அடுப்பு தானே ஊதணும்? சமைக்கக் கத்துக்க,வாய்க்கு ருசியா சமைக்காத பொண்ணை யார் கட்டுவாங்க? ஃபெமினா பாரு, ரெசிபி கத்தரிச்சு வை. நீ வீட்டைப் பேணுபவள், நீ அழகு சாதனங்களுக்கானவள். நீ அடக்கமானவள். நீ தீர்மானங்களைக் கேட்டுக் கொள்பவள். நீ தேவியானவள். நீ உபயோகமானவள். நீ சுகத்தைத் தருபவள். நீ தேவைக்காக மட்டுமே வேலை செய்பவள்.நீ பாதுகாக்கப்பட வேண்டியவள். நீ பெண். இவ்வாறு சபரி என்ற பெண்ணை உருவாக்கியுள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்.
ஆண் மேம்படுத்தப்பட்டும், பெண் அடக்கப்பட்டும் உருவாக்கப் படுவதால் இச்சமுதாயச் சூழல் அதனை வளர்க்கவே வழி செய்வதை அம்பை எடுத்துக் காட்டுகிறார். 

 


6.4 சிறுகதைக் கலை

சிறுகதைக்குரிய கரு அதற்குப் பொருத்தமானதான கதைக்களன், இயல்பான கதைமாந்தர் படைப்பு, மனத்தில் நிற்கும் சிறந்த கதை வடிவம், ஒருமைப்பாடு அனைத்தும் பொருத்தமுற அமையும் போது அங்கும் சிறுகதை இலக்கியம் ஒரு சிறந்த கலையாகின்றது. பெண் நிலை நோக்கில் சமுதாயத்தை நோக்கும் ஒரு பார்வையில் பிறந்த கருத்துகள் அம்பையின் சிறுகதையில் சிறுகதை வடிவம் கொள்கின்றன. இவர் படைக்கும் கதைமாந்தர்கள் இவ்வுலகில் நாம் சந்திக்கின்றவர்களே. ஆனால் அவர்களுடைய அகநோக்கும், ஆழ்ந்த சிந்தனையும் இவருடைய சிறுகதைகளின் உள்ளடக்கமாகின்றன. தனக்கென்ற சில உத்தி முறைகளையும், அதற்கேற்ற மொழி நடையையும் அம்பை கையாள்கின்றார். இதுபற்றி இனிப் பார்ப்போம்.

6.4.1 பாத்திரப் படைப்பு

அம்பையின் கதை மாந்தர்களில் ஆண்கள் பெரும்பாலும் ஆதிக்க உணர்வு மிக்கவர்களாக இருக்கின்றார்கள். பெண்கள் அவ்வாதிக்க உணர்வினால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் ஒடுக்கப்படுவதை அறிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்த அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புணர்வு பாதிக்கப்படும் பெண்கள் மனத்தில் இருப்பதை அம்பையின் பெண் கதைமாந்தர்கள் வாயிலாக அறிகிறோம். அவ்வெதிர்ப்புணர்வைச் சிலர் தங்கள் பேச்சில் வெளிப்படுத்துகின்றனர். சிலர் செயலில் காட்டுகின்றனர். பெரும்பாலும் சமுதாயம் முழுவதுமே பெண்களுக்கான தனிப் பார்வையோடு இருப்பதை இளம்பெண்கள் மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றனர். யம பயம் கொண்ட ஒரு முதியவர் தன் வாழ்நாள் பெருக வேண்டும் என்று யாகம் செய்கிறார். ஆனால் அவர் மகளுக்கு இச்செயல் வெறுப்பை உண்டாக்குகிறது. ஓம குண்டத்தில் அவர் நெய் வார்க்கும் போது ஏற்கனவே உயிரிழந்த ஓர் எலும்புக் கூடு நெய் வார்ப்பது போல் இருந்ததாக மகள் உணரும் காட்சியை ம்ருத்யு சிறுகதை காட்டுகிறது (சிறகுகள் முறியும்).
பெண்கள் வாழ்க்கை சமையலறையைச் சுற்றியே இருப்பதைக் காட்டும் சிறுகதை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. குழாயடித் தண்ணீருக்கு நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். மருமகள் மீனாட்சி துணிச்சலாகப் பாத்திரம் தேய்க்க வெளியே ஒரு தொட்டி போடலாம் என்கிறாள். மாமனார் பப்பாஜி எதற்கு என்று கேட்கிறார். சமையலறைத் தொட்டி சிறியது. வெளியில் கொடியில் கட்டியிருக்கும் துணிகள் மலையை மறைக்கிறது என்கிறாள். ஆனால் சமையலறை நிலவரம் மாற்றப்படவில்லை. "மைசூர்ப் பெண்ணே, இங்கே நிரந்தரமாக வாழாத உனக்கு மலை எதற்கு. அதன் பச்சை எதற்கு? ராஜஸ்தானத்துச் சமையல் பண்பாட்டுக்கும் ஜன்னலுக்கும், பாத்திரம் அலம்பும் தொட்டிக்கும் என்ன சம்பந்தம் பெண்ணே..... முக்காடு அணிய மறுக்கும் ... நிறையப் பேசும் பெண்ணே" என்கிறது மாமனார் பப்பாஜியின் மௌனச் சவால். சந்தேகப்படும் கணவனுக்குத் தன் மௌனத்தாலேயே தண்டனை தருகிறாள் அவன் மனைவி (வல்லூறுகள், சிறகுகள் முறியும்). பெண்ணுரிமை அடிப்படையிலேயே பல கதைமாந்தர்களைப் படைத்திருப்பதை அம்பையின் சிறுகதைகளில் காணலாம்.
 
6.4.2 கதைப் பொருள்

பெண் உழைப்பும் உரிமையும் சுரண்டப்படுதல், ஒடுக்கப்படும் பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்படுதல், எதிர்ப்புணர்வைத் தெரிவித்தல் ஆகியன அம்பையின் கதைப் பொருளாக அமைகின்றன. பெண்கள் பற்றிய ஆராய்ச்சி நூலொன்று இவர் எழுதியுள்ளார் என்று முன்னரே பார்த்தோமல்லவா ! அதையொட்டியே பல நுணுக்கமான ஆய்வுகளை இவர் கதைகளில் காணலாம். பெண்ணின் சுதந்திரம் ஆணுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று எண்ணும் பல பெண்களை இவர் கதைமாந்தராகப் படைத்துள்ளார். இளமை முதல் முதுமை வரை, அடுப்படி முதல் ஆகாயம் வரை பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படாமல் இருப்பதையும் அவ்வுணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் இவர் கதைகள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆணின் அடக்குமுறைக்கு எதிராக, உணர்வுகளைப் பல்வேறுநிலைகளில் பெண் எப்படி வெளிப்படுத்துகிறாள் என்பதைப் பல சிறுகதைகளுக்குக் கதைப்பொருள் ஆக்கியிருக்கிறார் அம்பை.

6.4.3 உத்தி முறை
சிறுகதைத் தலைப்பிலேயே, கதைக் கருவைப் புலப்படுத்தும் உத்தியை இவருடைய பல சிறுகதைகளில் காணலாம். ‘சிறகுகள் முறியும்’ என்பது பறத்தற்குரிய சிறகுகள் இருந்தும் சுதந்திரம் பறிக்கப்பட்டதன் அறிகுறியாக இடப்பட்ட தலைப்பாகிறது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுக்கும் பொருந்துவது போல் முறியும் என்று குறிப்பிடுவதைக் காணலாம்.
கதைக் கருவை உருவகமாக்கித் தலைப்பிலே தரும் உத்தி ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதைத் தலைப்பில் காணலாம். மான் கொடிய விலங்குகளுக்கு அஞ்சக் கூடியது. அச்சத்துடன் ஓடினாலும் அதற்கென்று ஓர் உலகம் இருக்கிறது. ஒருநாள் தன் கூட்டத்தை விட்டுத் தான் வாழும் காட்டில் ஒரு பகுதியை விட்டு விட்டுப் புதியதொரு பகுதிக்கு வந்து விடுகிறது. எதைப் பார்த்தாலும் புதியதாக இருப்பதால் அஞ்சி அஞ்சி ஓடுகிறது. பிறகு துள்ளித் துள்ளி ஓடி அனைத்துப் பகுதிகளையும் அறிந்து கொள்கிறது. அதன் பின்னர் அச்சமின்றி அங்கு வாழ்வதாகச் சொல்லப்படும் இக்கதை ஒரு பெண்ணால் அங்குள்ள குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது. அந்த மானைப் போன்றவள்தான் அந்தப் பெண்ணும். மணமான அவளுக்குக் குழந்தைப் பேறு கிட்டவில்லை. அவளால் அனைவரிடமும் அன்பு செலுத்த முடியும். நல்ல எண்ணங்கள் கொண்ட அவள் குழந்தைப் பேறில்லாத ஒரு பெண்ணுக்கு இச்சமுதாயத்தில் என்னென்ன பழிகள் உண்டாகும் என்பதை அறிந்து கொண்டவளாய் இருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல் கணவனுக்கு மறுமணம் செய்து வைத்தாள். எல்லாக் குழந்தைகளையும் அன்புடன் நேசித்தாள். பிள்ளை பெறாதவள் என்று கூறும் இச்சமுதாயத்தைத் தன் உள்ள உறுதியால் வென்று அந்த மான் போல் அச்சமின்றி வாழ்கிறாள் என்பதை உருவகமாக இச்சிறுகதை உணர்த்துவதைக் காணலாம்.
ஒரே தலைப்பில் (பயணம் 1, பயணம் 2, பயணம் 3) மூன்று சிறுகதைகளைப் படைத்து வேறுபட்ட மூன்று பயண அனுபவங்களைச் சுவைபடச் சொல்கிறார் அம்பை (காட்டில் ஒரு மான்).


6.5 தொகுப்புரை
அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து பெண்ணிய நோக்கில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் அம்பையின் சிறுகதைகள் இதுவரை மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. மாத இதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து தன் சிறுகதைப் படைப்புகளை அளித்து வருகிறார். தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூலை எழுதியுள்ள இவர் அந்த ஆய்வு அடிப்படையிலேயே சிறுகதைகள் படைத்து வருகின்றார். பிறப்பதற்கு முன்னரே ஒரு பெண்ணுக்கு இச்சமுதாயத்தில் வாழும் உரிமையில்லாமல் போகிறது. பிறந்த பின்னரோ அவள் உரிமைகளையும் உணர்வுகளையும் ஒடுக்குவதற்கு இச்சமுதாயம் வைத்திருக்கும் சாத்திரங்கள், கோட்பாடுகள் அனைத்தும் அம்பை கதைகளின் களன்களாகின்றன. குடும்பத்தில் தொடங்கிச் சமுதாயம் முடியப் பெண்கள் உரிமையற்று ஒடுக்கப்படுதலும், அந்த உரிமைகளைப் பெறும் முயற்சியில் அவள் ஈடுபடுதலும் அம்பையின் சிந்தனையில் கருக்கொண்டு சிறுகதை வடிவம் பெறுகின்றன.
புராணக் கதைகளைப் புதிய பார்வையோடு நோக்கி அம்பை புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்.
கல்வி அறிவில்லாத கிராமத்துப் பெண் ஆணின் அடக்குமுறைக்கு உட்பட்டு வீட்டு வேலைகள் செய்யும் ஓர் அடிமைபோல்தான் இருக்கிறாள். தான் ஒடுக்கப்படுகிறோம் என்பதை அறியாதவளாய் இருப்பதால் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். டாக்டர் பட்டம் பெற ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்ணோ அந்த அடக்குமுறைகளினால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிறாள். வேதனைக்கு உள்ளாகிறவள் ஒடுக்கப் பட்டிருப்பவளின் மகிழ்ச்சியைப் பார்த்து வியப்பதும் அம்பையின் கதைகளில் காணலாம். அறிவியல் தொழில் நுட்பச் சாதனங்களாகிய கணினிகளிலும் ஆணாதிக்க உணர்வு மிக்கிருப்பதை எடுத்துக் காட்டுகிறார் அம்பை. மனித நேய உணர்வினை எடுத்துக் காட்டும் சிறுகதைகளையும் அம்பை படைத்துள்ளார்.
கடலில் பிடித்த மீன்களில் மஞ்சள் மீன் ஒன்று மீனவர் கையிலிருந்து கீழே தப்பியது. அதை மீண்டும் கடலில் கொண்டு போய் விட்டு மகிழ்ச்சியடையும் உயர்ந்த உணர்வையும் அம்பை மஞ்சள் மீன் சிறுகதையில் எடுத்துக் காட்டுகிறார். வெவ்வேறு வகையான கதை மாந்தர்களைப் படைத்துக் காட்டுகிறார் அம்பை. வெவ்வேறு வகையான கதை மாந்தர் படைப்பு அம்பையின் படைப்புத் திறனுக்குச் சான்றாகும். ஆணாதிக்கம், அதை உணர்ந்த பெண்களின் எண்ணங்களும், பேச்சும், செயலும் அம்பையின் அனைத்துப் படைப்புகளிலும் எதிரொலிக்கின்றன எனலாம்.
 
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)
‘புனர்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது?
(விடை)
2)
சமையலறையில் பெண்கள் உழைப்புச் சுரண்டப்படுதல் குறித்த சிறுகதை யாது?
(விடை)
3)
‘வாகனம்’ சிறுகதையில் பெண் இறுதியாகத் தேர்ந்தெடுத்துப் பயிலும் வாகனம் எது?
(விடை)
4)
உளவியல் ரீதியில் படைக்கப்பட்ட சிறுகதை எது?
(விடை)
5)
‘மஞ்சள் மீன்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது?
(விடை)