Saturday 12 March 2016

மாறாட்டம் - மெளனி

மாறாட்டம்

மெளனியின் கதைகள்
நன்றி
tshrinivasan/google-ocr-python : in UBUNTU Linux
Automation of google ocr using python
requests>=1.2.3
google_api_python_client>=1.1
requests_oauthlib>=0.4.2
asciitree>=0.3.1
________________
அவனைப் பற்றி உங்கள் அநேகருக்கு அதிகமாகத் தெரியாது. அவன் என்னுடைய நெருங்கிய நண்பன்.

நேற்று சாயந்திரம் வெகு நேரம் அயர்ந்து துங்கிய வனே போன்று திடீரென்று எழுந்தான். மணி ஐந்து அடித்து விட்டது. அவசர அவசரமாகவே காப்பியைக் குடித்துவிட்டு, தினம் செல்வதைவிடக் குறைந்த நேரத்திலேயே ஆடைகளணிந்து கொண்டு வெளியே புறப்பட்டான். அநேகமாக ஊரின் பொறுக்கிகளை (பொறுக்கி எடுத்த பிரமுகர்கள்) அவனுக்குத் தெரியும். 'குட்ஈவினிங் வைப்பது முதல் சிறிது நின்று சல்லாபம் செய்யும் வரையிலுள்ள, அவனுடைய நண்பர்களின் தொகை கணக்கிலடங்காது என்று சொல்வது மிகையாகாது. அன்று சாயந்திர ஊர் பவனி செல்லுதல் கொஞ்சம் நாழிகை ஆகிவிட்டது என்று சஞ்சலமுற்றவனே போன்று நிதானமின்றியும் வேக மாகவும், அந்த முக்கியமான நான்கு வீதிகள் சேரு மிடத்தை அடைந்தான்.

சாதாரணமாகவே அவ்விடம் ஜன நடமாட்டம் உள்ளது. அன்றைய தினம் கொஞ்சம் அதிகமாகவே ஜனங்கள் குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண் டிருந்தனர். ஜனங்களின் இரைச்சல் ஆரவாரத்திடையே கை தட்டிக் கூப்பிடும் சப்தமும் கலந்திருந்தது. அவ்விடத்தை அவன் அடைந்ததும், அவன் நடையில் ஒரு நிதானம் ஏற்பட்டு, மனதும் யோசனைகளைக் கொள்வதாகியது.

என் நண்பனின் பழக்க வழக்கங்கள் மூலமாகவே, நவநாகரீகம் வெளிவிளக்கம் கொள்வதென்ற அபிப்பி ராயம் எனக்கு உண்டு. அவனுடைய ஒவ்வொரு செய்கைக்கும், எண்ணத்திற்கும், மாறாக நாஸுக்கற்ற விதத்தையும் அவன் கண்டு கொண்டு, அவைகளை விலக்காமலில்லை. ஆனால் அப்போது எவ்வித விருத்த விஷயங்களுக்கும், தலை சிறந்ததாக அவன் மனத்தில் வெறுப்படையும்படி நின்றது, இவ்வகையில் ஒருவருக் கொருவர் கை தட்டிக் கூப்பிட்டுக் கொள்ளுதல்தான். ஆமாம், அது எவ்வளவு நாசுக்கற்ற பழக்கம், அநாகரிகம், காட்டுமிராண்டித்தனம்! அவ்வகையாகக் கூப்பிடுவோரும், கூப்பிட வைத்துக் கொள்வோரும் கீழ்த்தரமானவர்கள். அவ்வகையில் தன்னை யாராவது கூப்பிட்டால், அவர் எத்தனை ஆப்தமாக இருந்தாலும், கண்டிப்பாய், அவர் சிநேகத்தையும் தான் இழக்கத் தயாராக இருப்பதைத் தன் மனதிற்கு நன்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தான்.

அப்போது பின்னாலிருந்து ஒருவர் கைதட்டிக் கூப்பிட்ட சப்தம், திடீரென்று அவன் பிடரியில் அடித்தது போன்றுதான் இருந்தது. கொஞ்சம் லாகவமாக அப்பேர்ப்பட்ட பிராணியைப் பார்ப்போமென்று தலையைத் திருப்பினான். அவனுக்குச் சுமார் முப்பது தப்படி பின்னால் வந்த ஒருவன் இன்னும் வேகமாகத் தட்டிக்கொண்டே, “உங்களைத் தானுங்க-” என்று கூச்சலிட்டுக் கொண்டு அவனை நெருங்குவதைப் பார்த்தான். உலகத்திலே பிரளயம் வந்தாலும் கூட அப்போது அவன் அவ்வளவு பீதி அடைந்துவிட மாட்டான். அப்போதுதான் குறுக்காக அந்த 'ரிடையர்ட் சப் ஜட்ஜ் போய் கொண்டிருந்தார். கொதிக்கும் மனதைக் கொண்டவனே ஆயினும், புன்னகையை முகத்தில் கொண்டு அவருக்கு குட் ஈவினிங் வைத்தான். அவரும் திரும்பி மரியாதை வைத்துச் சென்றார். அவர் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்ளுவார், நினைத்துக் கொள்ள மாட்டார் என்ற எண்ணத்தில் சிறிது சமைந்து நின்ற அவனை, அந்த கூப்பிட்ட மனிதனும் நெருங்கி விட்டான்.

பக்கத்தில் வந்து, “உங்களைத் தானுங்க-” என்று உரத்தே சொன்னான்.

 "ஆமாம், உன்னைத் தேடிக் கொண்டுதான், போகிறேன். வாப்பா வா..!" என்றான். உள்ளிருந்து எழுந்த ஆத்திரம் இவ்வகையாக வார்த்தையில் பீறிக் கொண்டு வந்தது. மனத்திலோவெனின் அவன் மூக்கைப் பிடித்துக் குலுக்கினால் அவன் கண்களிலிருந்து நீர் தளும்புமா என்ற பிரச்னை ஏற்பட, அதையும் அவனை விழித்து நின்ற என் நண்பனின் கண்கள் காட்டின. ஆனாலும் மேலே நீட்டியும் கைக்கு எட்டாது என்பதும், அப்படி எட்டினாலும் அவன் மூக்கைத் தன் இரண்டு கைகளாலும்தான் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதும் குறுக்கிட்டு, கூடாது என்று தடை செய்தது போன்று பேசாதுதான் நின்று விட்டான்.

 "ஆமாங்க, எனக்குத் தெரியுங்க” என்றான் நாட்டுப் புறத்தான், இவனை மேலும் கீழுமாக உற்றுப் பார்த்துக் கொண்டே அவன் ஒரு முடிச்சுமாறியாக ஏன் இருக்கக் கூடாது. அப்படியிருந்தாலும் பயமில்லை. தன்னுடைய ஸில்க் ஷர்ட்டுக்குப் பை இல்லை. மடியிலும் பர்ஸ்’ இல்லை. ஒருக்கால் தாசி வீட்டுத் தரகனாக இருக்க லாமோ? அப்படியாயின் தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்ளுவார்கள் அப்போது பார்க்கும் தனது நண்பர்கள்? இப்படி என்னவெல்லாமோ ஒரு வினாடியில் தோன்றுவ தாயின. ஒருக்கால் அவன் தனக்குத் தெரிந்தவனோ என்றும் மறந்துவிட்டதன் ஊர்ப்பண்ணை ஆளோ என்றும், என்னவெல்லாமோ எண்ணினான். எப்படியாயினும், தன் பெருமையை மிகவும் நோவச் செய்ததில் மனது உருகியே போய்விட்டது. ஆத்திரம் மூண்டது. அவன்தான் என்ன செய்வான், தானாகப் பிடித்துக் கொண்ட சனியனுக்காக! "என்ன-?”

என்றான் என் நண்பன்.

"ஆமாங்க, உங்களைத்தானுங்க" என்றுதான் பதில். துன்பங்கள் அவ்வளவு சீக்கிரமாகவா நீங்கிவிடும்? அப்படி யாயின், கஷ்டகாலத்திற்கும், சனிஸ்வர பகவானுக்கும் என்னதான் மதிப்பு இருக்கப் போகிறது?

“சரியப்பா - இங்கேயே இரு. நான் அவசரமாகக் கடைத்தெரு போக வேண்டும். ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்” என்று விட்டால் போதுமென்று, அமுத்தல் நடையையும் இழந்து, ஓடுவதுபோன்று அவனை விட்டு நடந்தான். அப்போதும் “சரீங்க-” என்ற சப்தம் பின் தொடர்ந்து காதில் கேட்டது.

கடைத்தெரு வழியாகவும், ஒரு குறுக்குச் சந்தாக அவனை ஏமாற்றிப் போய்விட முடியும். அப்படித்தான் என் நண்பனின் எண்ணமும். மூன்று பர்லாங், முட்டி பிடித்த சந்துகளில் போவதும், அதனால் சில சில பேர் வழிகளை நடுவில் காணக்கூடாது போவதையும் கூட அவன் பொருட்படுத்தவில்லை.

 கடைத்தெருவின் நடுவில் ஒரு சிநேகிதன் தென் பட்டான். அவனோடு பேசி குறுக்குச் சந்தை அடையும் போது அரை மணி நேரம் ஆகிவிட்டது. சந்தில் நுழையும் போது கை தட்டல் சப்தமும், "உங்களைத் தானுங்க-” என்றதும் அவனைத் தூக்கியே போட்டுவிட்டது.

"சரி, வாப்பா" என்று முன்னே சென்றான். வழக்க மாக அரை மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் ஒரு கடையை அடைந்ததும் அதனுள் சென்றான். அங்கு கூடின. இரண்டொரு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த ஆள் ஞாபகத்தையே ஒழித்து விட்டான். வீட்டிற்குச் செல்ல வெளிக் கிளம்பி பத்து தப்படி சென்றதும் பழையபடியே கை தட்டல் சப்தமும் “உங்களைத் தானுங்க-” என்ற வார்த்தையும் காதில் விழுந்தன. அப்போது மணி ஏழரை ஆகிவிட்டது. நன்றாக இருட்டியும் விட்டது. அதிகமாகப் பிறர் கண்ணில் படாது அவனோடு போவது என்பதைப் பற்றி எண்ணும்போது தன் மனது ஒருவகைச் சாந்தத்தை அடைந்ததை உணர்ந்தான்.

 "சரி, வா-” என்று அழைத்துக் கொண்டே நடந்து சென்றான். நடுவில் கொஞ்சம் ஆத்திரமாக, "ஆமாம், உனக்காகத்தான் காத்திருந்தேன்” என்று சொல்லி, பேசாது முன் சென்று கொண்டிருந்தான் என் நண்பன்.

 "ஆமாங்க-தெரியுங்க- என்று சொல்லிக் கொண்டே அவனும் பின்தொடர்ந்தான். அவனுடைய மூக்கு ஞாபகம் என் நண்பனுக்கு நடுவில் வந்தது போலும்! பின்னால் வந்தவன் அதே சமயத்தில் "ஆமாங்க - என்னைப் பார்த்தாலே மறக்காதுங்க - என் மூக்குங்க-” என்று சொல்லி நிறுத்தி என் நண்பனுடைய சட்டையை மேலும் கீழும் பார்த்தான்.

 "ஆமாம்-என் சட்டைக்குப்பை இல்லைடா என்றான் என் நண்பன்.

 "ஆமாங்க-” என்றான் அவன். என் நண்பன் மனது அப்போது பையில்லாச் சட்டையிலிருந்து பாஷன் நாசுக்கு முதலிய மூலைகளுக்குக் குறுக்காக ஓடிக் கொண் டிருந்தது. இதற்குள் இருவரும் எங்கள் ஊர்ப் பெரிய மைதானத்திற்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். என் நண்பனோவெனில் உலக நடப்பை மறந்து ஒன்று கூட்டும் ஞாபக சக்தியையும் அன்று சாயந்திரம் முதல், இழந்தவன் போன்று தான் தோன்றினான். ஏதோ மறந்ததை ஒரு பிசகான காரியத்தை ஞாபகப் படுத்திக் கொள்வதே போன்றுதான் அவன் மனது சஞ்சலமடைந்து கொண் டிருந்தது.

மைதானத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே அதன் வாயிலில் வந்து நின்றான்.

 "சரீங்க-” என்றான் அந்த நாட்டுப்புறத்தான். என் நண்பனுக்குத் தெரிந்த அநேக நண்பர்கள் மைதானத்தின் உள்ளே போய்க் கொண்டிருந்தனர். அவனுடைய ஊறிய நாகரீகப் பழக்கமே, அவன் கையைத்தூக்கி குட் ஈவினிங் செய்வித்தும், தலையை அசைத்தும் கொண்டிருந்தது போலும். மூளை மட்டும் இடம் விட்டு எங்கேயோ வெகு தூரத்தில் உலாவச் சென்றதுதான்.

 “என்னடா விசேஷம்?” என்றான் திடீரென்று என் நண்பன். அவன் வார்த்தைகளில் ஒரு ஆத்திரம் தொனித்தது. கூட்டத்தைக் கண்டதும் அவன் மனத்தில் ஒரு நிதானமும் தைரியமும் கூடச் சேர்ந்து கொண்டது போன்றுதான் அவன் நின்ற தோரணை தெரிவித்தது.

 "கேசுங்க-” என்றான் பட்டிக்காட்டான்.

"ஆமாம்" என்றான் மறதியில் ஏதோ ஆமோதிப்பவன் போன்று என் நண்பன்.

 "லெட்டருங்க-” என்று மடியிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினான் பட்டிக்காட்டான். "ஐயா கொடுத்தாரு கொடுக்கச் சொல்லி-” என்றான்.

"யாரு-?”

"அவங்க- ரயிலிலே, என்னைத் தெரிஞ்சுண்டு-அந்த ஐயா எங்கிட்டே சொன்னாரு - கொடுத்தாரு-"

"என்ன-?” என் நண்பனுக்குக் கொஞ்சம் ஆச்சரியம் மேலிட்டது. அவன் விஷயங்களையும் தெரிந்து கொள்ள அவாக் கொண்டான். "அந்த ஐயா கேட்டாரு எங்கே போறேன்?னு. சொன்னேனுங்க-அவங்க சொன்னாரு 'வக்கீலய்யா நல்ல நல்ல ஆர்க்குமெண்டு செய்வாரு - முனிசிபே அவங்களுக்குத் தனதுன்னு. என்னை தெரிஞ்சிருக்கும்னு கூடச் சொன்னாரு - டேய் எங்கே போனாலும் அவங்கதாண்டா. சாயங்காலம் பார், சில்க் சட்டை விசிறி மடிப்பு அங்கவஸ்திரம் சோரா பாத்தாலே உனக்குத் தெரியும்டா அவங்களைனு அது சரிதானுங்க. உங்களைப் பார்த்ததே தெரிஞ்சுடுத்தே எனக்கு!” என்றான் பட்டிக் காட்டான்.

 செய்கிறதை அறியாமலே, அவன் லெட்டரை வாங்கிய என் நண்பனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அல்ல எல்லாம் நன்கு புரிந்துவிட்டது போன்றுதான். ஒரு சிரிப்புக் கூட வந்துவிட்டது. தன்னைப் பார்த்துக் கொண்டான் என்றுதான் நான் நினைக்கிறேன். தன் முகத்திற்கு நேராக மூன்று நிமிஷம் பிடித்தும், கண்கள் கவரின் விலாசத்தைப் பார்த்தும் அவனுக்கு விளங்கவில்லை. யோசனைகள் அல்லவோ அவன் மனத்தில். கடைசியாக விலாசத்தை உரத்தே படித்தான். 'வக்கீல் சுப்ரதிவ்யம் அய்யங்கார் என்று எழுதியிருந்தது. ஆமாம், அவரும் என் நண்பனுக்கு நன்றாகத் தெரிந்தவர்தான். அவர் அந்நகரில் ஒரு பிரபல வக்கீல்.

கொஞ்சநேரம் முன்புதான், அவர் மைதானத்திற்குள் சென்றார். தானும் அவருக்கு 'விஷ் பண்ணியது ஞாபகம் வந்தது. அவர் அமுத்தல் ஆசாமிதான். வக்கீல் தரகர் சொன்னது உண்மை தான். "சில்க் சட்டையிலும் விசிறி மடிப்பு அங்க வஸ்திரத்திலும் தினம் தினம் சாயங்காலம் அவர் போகும்போது அவரைச் சுட்டிக் காட்டாமல் இருக்கப் பொட்டையன் கண்களால் கூட முடியாது. ஆனால் இன்றைய தினம் அவர் உடை ஒரு மாதிரியாக......” என்று என் நண்பன் யோசித்துக் கொண்டே மைதானம் பக்கம் பார்த்தான். அவனைத் துக்கி வாரிப்போட்டது அங்கு பார்த்த காட்சி!

 கதர் ஜிப்பாவும், குல்லாயும் உயிர் பெற்று உலாவுவதைப் போன்றுதான் நினைத்தான். தன்னை ஒரு தரம் பார்த்துக் கொண்டான். ஆம், கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகம் வந்தது. ஏதோ மத்தியானம் உறங்கியவன் அநேக ஆண்டுகளை, சாயங்காலம் எழுவதற்குள் நித்திரையில் கழித்து, தெரியாது எதிரில் இருந்த சில்க்  சட்டையையும் விசிறி மடிப்பு அங்கவஸ்திரத்தையும் போட்டுக்கொண்டு வெளியே வந்துவிட்டான் என்ற தோற்றத்தைத் தான் முதலில் அடைந்தான். ஒரு வகை மயக்கம் உலகத்திலே ஒருவரும் இத்தகைய உடுப்புக்களில் தோன்றவில்லை அன்று. பாஷன் மாறிப் போய்விட்டதுபோலும்! ஆனாலும் நிச்சயமாக நேற்று வரையில் சில்க் சட்டையும் விசிறி மடிப்பும் ஊரில் உலாவியதே.

 திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்தது. அன்று சாயங்காலம் ஜவஹர் அவ்வூர் வருகிற விஷயம் தெரிந்தது. மேடையின் மீது போடும் ஆசனங்களில் ஒன்றில் உட்காரும் அந்தஸ்து சுப்ரதிவ்யம் அய்யங்காருக்கு அன்று உண்டு என்பதையும் தெரிந்து கொண்டான். ஆமாம், ஒருநாளைக்காவது சில்க்கும் விசிறி மடிப்பும் ரஜா வாங்கிக் கொண்டு வீட்டு ஸ்டாண்டில் இருக்கின்றன. புதிதாகத் தைத்ததும்  பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டதுமான ஜிப்பாவும், குல்லாவும் வெளிவந்து உலாவுகின்றன என்பது தான் அவன் மனதில் தோன்றி நிச்சயம் கொண்டது......

"நான் அல்லடா அவர். இப்படியே நேராகப் போய் வலது பக்கத்தில் இரண்டாவது விதி திரும்பி 18-ம் நம்பர் வீட்டிற்குப் போ-அங்கே இருப்பார் வக்கீல் ஐயா-” என்றான். பட்டிக்காட்டானுக்கு நம்பிக்கை இல்லை. உள்ளே மேடையில் அவர் இருக்கிறார் என்றாலோ, அந்த உடையில் அவரைப் பார்த்தால் நிச்சயம் நம்பமாட்டான், மற்றும் தன்னையும் விடமாட்டான் என்று நண்பனுக்குத் தெரிந்தது.

"அவர் என் சிநேகிதர்தான். ஆமாம், ரயிலிலே அந்த ஐயா சொன்னதும் சரிதாண்டா. அவர் ரொம்ப ஷோக்கானவர் தாண்டா - ஜிப்பா - சீ, சீ-இல்லை. சில்க் சட்டையிலும், விசிறி மடிப்பிலும் - போய்ப் பாரு, வீட்டிலே இருக்காரு - அவருக்குத் தலைவலி இன்னிக்கு - வெளியிலே வல்லை" என்று சொல்லி அவனை மெதுவாக அனுப்பினான்.

தன்னை ஒரு தரம் பார்த்துக் கொண்டான். அப்போது தனிமையாக அவன் அந்த மைதான வாயிலில் நின்று கொண்டிருந்தான். உள்ளே பிரசங்கம் நடந்து கொண் டிருக்கிறது. தனியாக பைத்தியக்காரத்தனத்தில் தான் இருப்பதாக ஒரு எண்ணம் முதலில் - பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாய்ப் போய்விட்டதோ என்ற யோசனையும், சம்சயமும், கடைசியாக, ஒன்றுமே புலப்படாமல் ‘பைத்தியக்காரத்தனம் என்று ஒரு தரம் முணுமுணுத்து மூச்சு விட்டான். யார் யார் எப்படி எப்படி என்பதை அவனால் உணர முடியவில்லை அப்போது.

எப்போதும் முடியாதென்ற எண்ணம் தான் எனக்கும். -

மணிக்கொடி 1938.

 **************************
விமலாதித்த மாமல்லன்

Sunday, March 13, 2016

போலிகளைப் பகடி செய்யும் மெளனி - தி இந்து கலை ஞாயிறு பத்தி 13.03.16 (முழு வடிவம்)

இலக்கியமா, அதெல்லாம் நமக்குப் புரியாது. இலக்கியம் என்பது புரியாமல் எழுதப்படுவது. சமூக அக்கறையும் இல்லாமல் சமூகப் பிரச்சினைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாதவர்கள் எழுதுவது இலக்கியம். தனிமனிதப் பிரச்சினைகளைத் தங்களுக்கு மட்டுமே புரியும்படியாக ஒரு சிறு குழுவினர் எழுதி, அதைத் தாங்களே மெச்சிக்கொள்வதுதான் இலக்கியம். இது போன்ற கருத்துகள், படித்துப் பார்க்க சிறிதுகூட முயலாத இன்றைய ஆரம்ப வாசகர்களிடையே பரவலாக நிலவுகின்றன.

அதிலும் குறிப்பாக மெளனி மனவெளி மனிதராகவே பார்க்கப்படுகிறார். இவர் பெயரைக் கேட்டதுமே கலை கலைக்காகவே என்று எதிர்மறை எண்ணத்துடன் ஒதுக்கி ஒதுங்கி விடுபவர்களே ஏராளம். 

மெளனியிடம் புரியாமல் போக என்ன இருக்கிறது. மெத்தப் படித்த பண்டிதர் போல புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதி வைத்துள்ளாரா. ஒவ்வொரு வார்த்தையும் புரிகிறது. ஒவ்வொரு வாக்கியமும் புரியும்படியாகவே உள்ளது. ஒவ்வொரு பத்தியும் புரிகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகக் கதைதான் புரியவில்லை. 

முப்பதுகளிலேயே ’கதை’ என்கிற அம்சத்தை நீக்கிவிட்டு கதை எழுத முயன்ற முன்மாதிரியற்ற முன்னோடி மெளனி. அன்றாட நிகழ்வுகளின் வழியாக மனித வாழ்க்கையை அவர் ’பார்த்த விதம்’ இன்றைக்கும் புதிதாக இருப்பதுதான் படித்தவுடன் புரியாதது போன்ற பிரமையை உண்டாக்குகிறது. 

மேடை போட்டு மைக் வைத்து ஒலிபெருக்கியில் செய்தால்தான் சமூக விமர்சனம் என்றில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தக் கதை. இது வெளியான வருடம் 1938. சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். தேசபக்தர்கள் என வெளிப்படையாய் பிரகடனப் படுத்திக் கொண்ட எழுத்தாளர்களால் நடத்தப்பட்ட மணிக்கொடி பத்திரிகையில் வெளியான கதை. இதை வெளியிட்ட மணிக்கொடியின் சகிப்புத்தன்மையை இன்றுகூடக் காண்பது அபூர்வம்.

எழுத்தாளன் என்பவன் தீவிர தேச பக்தனாகவோ அல்லது எழுத்தாளன் என்பதற்காகவே தீவிர தேச விரோதியாகவோ இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அவன் எல்லாவற்றையும் எட்டி இருந்து பார்க்கக் கடமைப் பட்டவன். அகலாது அணுகாது தீக்காய்வார் போல எதையும் கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்பதே அதன் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்வதற்கான எளிய அணுகுமுறை என்கிற முதிர்ச்சி உடையவன். 

அவ்வளவு சமூக விழிப்புணர்வுடன் சாட்டையைச் சுழற்றி சமூக விமர்சனம் செய்த புதுமைப்பித்தன் கூட சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாக வைத்து பெரிதாக எதையுமே எழுதவில்லை என்பது அவரிடம் சிலருக்கு இருக்கும் குறை. ஆனால் அன்றைய சமுதாயத்தின் அத்தனைப் பிரதிபலிப்பும் அவர் கதைகளில் விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம். எதை எப்படி எழுதவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி உரிமை எழுத்தாளனுடையது. தொடர்கதை எழுத வேண்டிய நிர்பந்தம் இல்லாததால், சுதந்திரப் பின்னணியை வைத்துக் கதை பண்ண வேண்டிய அவசியமும் புதுமைப்பித்தனுக்கு இல்லாது போயிருக்கலாம். 

புதுமைப் பித்தனைப் போலவே, ஆனால் சாட்டை சவுக்கை சொடுக்காமல், அமைதியாய், தேச பக்தியின் பெயரால் போலித்தனம் எப்படி விரவிக் கிடந்தது என்பதைப் பகடி செய்யும் கதை. மெளனியிடமிருந்து இப்படி ஒரு கதை என்பது இலக்கியவாதிகளுக்கே சற்று அதிர்ச்சிகரமானதுதான். இதே காரணத்தால், அவர்களாலும் இந்தக் கதை சுமாரானது என்று பார்க்கப்படுகிறது. எழுத இதை எடுத்தால்தான் இலக்கியமாகும் இதெல்லாம் ஆகாது என்கிற முன் முடிவுடன்கூடிய மூட நம்பிக்கை, துரதிருஷ்டவசமாக இலக்கிய உலகிலும் நிலவுகிறது என்பதே யதார்த்தம். 

கதையின் இரண்டாவது பத்தியிலேயே, 

”அநேகமாக ஊரின் ‘பொறுக்கிகளை’ (பொறுக்கி எடுத்த பிரமுகர்கள்)” என்று எழுதுகிறார். 

கதை சொல்லியின் நெருங்கிய நண்பன், அந்த ஊரில் பெரிய மனிதர்கள் பலருக்கும் வணக்கம் வைக்கும் அளவுக்குக் கொஞ்சம் பிரபலமானவன்.  தெருவில் யாராவது யாரையாவது கைதட்டிக் கூப்பிடுவது நாகரிகமில்லை என்று எண்ணுகிற அளவுக்கு மத்தியதர வர்க்க கனவான். கையில் கிடைத்த உடையான சில்க் சட்டையை அணிந்து வெளியில் செல்கிறான். யாரோ ஒரு ‘நாட்டுப்புறத்தான்’ கைதட்டி இவனை அழைக்கிறான். சில்க் சட்டை போட்டிருப்பார் என்று அடையாளத்தைச் சொல்லி அவரிடம் அந்தக் கடிதத்தைக் கொடு என்று ரயிலில் ஒருவர் கொடுத்தார் எனச் சொல்லி, சில்க் சட்டை போட்டிருக்கும் இவனிடம் கொடுக்கிறான். அந்தக் கவரில் இருக்கும் முகவரி அவனுடையதன்று. முகவரிக்கு உரியவர் சமுக அந்தஸ்துள்ள வக்கீல். எப்போதும் சில்க் சட்டை போடுபவர் என்கிற அடையாளம் கொண்டவர். ஆனால் அன்று இவனைத் தவிர ஊரில் எவருமே சில்க் சட்டை போட்டிருக்கவில்லை. காரணம் ஊர் மைதானத்தில் அன்று நடந்துகொண்டு இருக்கும் கூட்டம். கூட்டத்திற்கு வந்திருப்பவரோ முக்கியப் பிரமுகரான ‘ஜவகர்’. எனவே ஊரே சீருடை போல் கதராடை அணிந்திருக்கிறது. இதுதான் இந்த ‘மாறாட்டம்’ எழுதப்படுவதற்கான காரணம். இதில் இன்னும் சிறப்பு கதையின் இறுதிப் பகுதி. 

மெளனியிடம் வளவளப்பு எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. ஏனெனில், எழுதிய கதையைப் பலமுறை திரும்ப எழுதி திருத்தி எழுதி கவனமாய் செப்பனிடுபவர். 

கதையின் பாத்திரம் கைக்குக் கிடைத்ததை எடுத்து அணிந்தது என்கிற தகவல் சும்மா சொல்லப்படவில்லை. அன்றைய தினம், ஊரே யூனிபார்ம் போல் கதராடை அணிந்திருப்பதுடன் இதைக் கோர்த்துப் படித்துப் பாருங்கள். 

எது அநாகரிகம். யாரோ யாரிடமோ கொடுக்கச் சொல்லி, ரயிலில் கொடுத்த கவரை, உரியவரிடம் சேர்த்துவிட வேண்டும் என கர்ம சிரத்தையாய் முயலும் ‘பட்டிக்காட்டான்’ தெருவில் கைதட்டி அழைப்பதா அல்லது என்றைக்கும் சில்க் அணியும் ஷோக்குப் பேர்வழியான ஊரின் பெரிய வக்கீல், ஜவஹருடன் மேடையில் அமர்வதற்காக அன்று மட்டும் கதாராடை அணிவதா. பொதுவெளிப் போலிமுகங்கள் மேடையில் தியாக தீபங்களாக காட்சியளிப்பது இன்றுவரை தொடரும் கதைதானே.

எதிலும் புனிதத்தைத் தூக்கி தூர வைத்துவிட்டு அதன் மையத்தை ஊடுருவிப் பார்ப்பவனே உண்மையான கலைஞன். ஆகவேதான் அவனால் காலத்தை வென்று நிற்க முடிகிறது.