Sunday 5 July 2015


எஸ். சம்பத் (1941 – 1984)
By சாரு நிவேதிதா

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/07/05/எஸ்.-சம்பத்-1941-–-1984/article2902290.ece


First Published : 05 July 2015 10:00 AM IST




சம்பத் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைத் தேடியபோது அழியாச்சுடர் இணைய இதழில் கீழ்க்காணும் விபரங்கள் கிடைத்தன:

‘சம்பத் நாராயணன் என்கிற எஸ். சம்பத் 1941-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி பிறந்தார். அப்போது சம்பத்தின் தந்தை சேஷாத்திரி ஐயங்கார், டில்லியில் ரயில்வே போர்ட் அதிகாரியாகப் பணியாற்றினார். எனவே சம்பத்தின் இளமைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. பொருளாதாரத்தில் எம்.ஏ., பி.எட். பட்டம் பெற்ற சம்பத் டில்லியிலேயே தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பணியாற்றினார். தன் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட சம்பத்துக்கு மூன்று குழந்தைகள். சேஷாத்திரி ஐயங்கார் பதவி ஓய்வு பெற்று சென்னை திரும்பியபோது, சம்பத்தும் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பினார். சென்னையில் பல நிறுவனங்களில் வேலை செய்த சம்பத் கடைசியில் பெரியமேடு பகுதியில் உள்ள தோல் பதனிடும் மண்டியில் கணக்கு எழுதுபவராகப் பணியாற்றினார். கடைசியாக, சில ஆண்டுகள் வேலை ஏதும் பார்க்காமல் இருந்தார். ’

1984-ல் இடைவெளி நாவல் வெளிவருவதற்கு முன்பு எஸ். சம்பத் என்று அறியப்பட்ட சம்பத் இடைவெளி வந்த பின் ‘இடைவெளி சம்பத்’ என்றே அறியப்பட்டார். இன்றளவும் அப்படியே அறியப்படுகிறார். இவ்வளவுக்கும் இடைவெளி, க்ரியா பதிப்பகத்தின் வெளியீடாக வருவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்பு மூளையின் ரத்த நாளம் வெடித்து இறந்து போனார் சம்பத். இன்னொரு துயரகரமான ஆச்சரியம் என்னவென்றால், இடைவெளி என்ற அந்த சிறிய நாவல் மரணத்தைப் பற்றி விவாதிக்கிறது. மட்டுமல்லாமல் சொந்த வாழ்விலும் கூட சம்பத் பெரும்பாலும் மரணத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்திருக்கிறார். இன்னொன்று, அவர் சாகும் போது அவருடைய ஒரு நூல் கூட வெளிவந்திருக்கவில்லை.

கிளாஸிக் என்ற பதத்துக்கு காலத்தைக் கடந்த கலைப் படைப்பு என்றும் வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பேசுகின்ற படைப்பு என்றும் பொருள் கொள்ளலாம். மஹாபாரதம் அப்படிப்பட்ட ஒரு கிளாஸிக். உலகின் ஆகப் பெரிய காவியம். அதேபோல் உலகிலேயே மிகச் சிறிதாக எழுதப்பட்ட ஒரு கிளாஸிக் உண்டென்றால் அது சம்பத் எழுதிய இடைவெளி என்று தயக்கமில்லாமல் கூறலாம். சென்ற வாரக் கட்டுரையில் ஜான் ஜெனே, முகமது ஷுக்ரி, சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி ஆகியோரை விட ஆ. மாதவன் சிறந்த எழுத்தாளர் என்று நான் கூறியதற்குக் காரணம், மூவரும் தங்களுடைய சொந்த அனுபவத்தை எழுதினார்கள்; மாதவனோ மற்றவர்களின் அனுபவத்தை எழுதினார் என்பது. ஏனென்றால், தன்னுடைய வேதனையை எழுதுவதை விட அடுத்தவரின் வேதனையை எழுதுவதே கடினம். ஆனால் அதே காரணத்தினால்தான் – அதாவது, மற்றவர்களின் அனுபவத்தை எழுதாமல் தன்னுடைய அனுபவத்தையே எழுதியதால் சம்பத் சுயசரிதைத்தன்மை கொண்ட genre-ல் எழுதிய மற்றவர்களை விடவும் சிறந்து விளங்குகிறார்.





ஏனென்றால், சம்பத் எழுதிய அனுபவம், மரணம். வேறு யாருடைய மரணமோ அல்ல; அவருடைய மரணம். தன்னுடைய மரணத்தையே அணுஅணுவாக வாழ்ந்து, அதனோடு உரையாடி, தர்க்கித்து, பிணங்கி, பயந்து, மோதி, சரணடைந்து அந்த அனுபவத்தை எல்லாம் தொகுத்து ஒரு மகத்தான கலைப்படைப்பாக உருவாக்கியிருக்கிறார் சம்பத். மரணத்துடனான அவரது உரையாடல் முடியும் தருணத்தில் - இடைவெளி நாவலின் அச்சுப் பிரதியில் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் – சம்பத் மூளையின் ரத்த நாளம் வெடித்து இறந்து போனார். அந்த வகையில் சம்பத்தின் இடைவெளி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் ஆல்பெர் கம்யூவின் அந்நியனை விட உலக அளவில் பெரிதும் பேசப்படும்.

வெங்கட் சாமிநாதன் கூறுவது போல் சம்பத் இறப்பதற்குச் சற்று முன் எழுதிய மரண சாசனம்தான் இடைவெளி. அல்லது, மரணத்தைப் பற்றிய ஒரு தத்துவ விசாரணை. சம்பத் பற்றி யோசிக்கும்போது ஆதவனைப் பற்றிய நினைவையும் தடுக்க முடியவில்லை. இருவரும் தில்லியில் வளர்ந்தவர்கள். இருவருமே தென்னிந்தியாவுக்கு வந்த பின் இளமையிலேயே இறந்து போனார்கள். ஆதவன் 1987-ல், 45 வயதில் ஒரு விபத்தில் இறந்தார். இருவருக்குமான இன்னொரு ஒற்றுமை, சம்பத்தும் ஆதவனும் தில்லியில் கல்லூரியில் படிக்கும்போது இந்திரா பார்த்தசாரதியின் மாணவர்கள்.

இடைவெளியின் கதை இதுதான்: சென்னையில் உள்ள பெரியமேட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் எழுத்தராக வேலை பார்க்கும் சுமார் 35 வயது தினகரன் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவன். (சம்பத்தும் அதே இடத்தில் அதே நிறுவனத்தில் அதே வேலைதான் செய்தார்.) தினகரனுக்குப் பிடித்த எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி. (சம்பத்தின் ஆதர்ச எழுத்தாளரும் அவரே.) தஸ்தயேவ்ஸ்கியைப் போலவே தினசரிகளில் வரும் கொலை வழக்குகளை ஈடுபாட்டுடன் வாசிக்கிறான் தினகரன். அவரைப் போலவே சூதாடுகிறான். (சம்பத்தும் ரேஸுக்குப் போய் மனைவி மற்றும் உறவினரின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார். பிழை திருத்தம் செய்வதற்காக க்ரியா அலுவலகத்துக்குப் போகும்போது அவருடைய சட்டைப் பாக்கெட்டில் ஏகப்பட்ட லாட்டரி டிக்கட்டுகள் இருக்கும் என்று எழுதுகிறார் சி. மோகன்.) தினகரனின் மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெயஸ்ரீ. (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களும் இவையே.) நாவல் முழுக்கவும் சம்பத், அதாவது தினகரன், ‘அடிப்படைகள்’ குறித்து – அதாவது மரணம் குறித்து - செய்யும் தத்துவ விசாரணையை அவனைச் சுற்றியிருந்தவர்கள் எப்படி மனநோயாகப் பார்த்தார்கள் என்பதை விவரித்துக் கொண்டே போகிறார் சம்பத். அந்த விவரணைகளுக்கும் அசோகமித்திரன் சம்பத் பற்றி எழுதியுள்ள ஒரு உண்மைச் சம்பவத்துக்கும் அதிசயிக்கத்தக்க ஒற்றுமை உள்ளது.

சம்பத் பற்றிய அசோகமித்திரனின் கட்டுரைத் தலைப்பு ‘பஸ் அடியில் விழவா?’ ஒருநாள் காலை வேளையில் சம்பத்தின் மனைவி பத்மா தன்னுடைய இரண்டு சிறு குழந்தைகளையும் (ஒரு குழந்தைக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறது) அழைத்துக் கொண்டு அசோகமித்திரனின் வீட்டுக்குப் போய் அவர் காலில் விழுகிறார். அதைக் கண்டு பதறிப் போகிறார் அசோகமித்திரன். ‘எனக்குப் பயமாக இருக்கிறது; நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்கிறார் அந்தப் பெண். ‘அவர் (சம்பத்) ஏதாவது செய்து கொண்டு விடுவாரோ என்று பயமாக இருக்கிறது; நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.’ அந்தச் சமயத்தில்தான் அசோகமித்திரனின் மூத்த சகோதரி மயக்கம் போட்டு விழுந்து வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அசோகமித்திரன் எழுதுகிறார். ‘நிலைமை மிகவும் நெருக்கடி. நான் மயக்கம் போட்டு விழக் கூடாது. பணம் வேண்டும்.’ (அசோகமித்திரன் ஏன் உலகின் முதல்தரமான எழுத்தாளராக அறியப்பட வேண்டியவர் என்று நான் சொல்வதன் காரணம் இதுதான். எப்பேர்ப்பட்ட துயரத்தையும் black humour-ஆக மாற்றும் கலையில் வித்தகர்.) அன்றைய தினமே அசோகமித்திரன் எழுதி அச்சேற வேண்டிய ஒரு கட்டுரை வேறு எழுதப்படாமல் இருக்கிறது. அப்போது மருத்துவமனைக்கு வரும் சம்பத் அசோகமித்திரனை காஃபி சாப்பிட வெளியே அழைக்கிறார். தான் மிகுந்த கவலையிலும் பதற்றத்திலும் இருப்பதைச் சொல்கிறார் அசோகமித்திரன். ம்ஹும். சம்பத் அதைக் கேட்கத் தயாராக இல்லை. இருவரும் காஃபி ஹவுஸ் செல்கிறார்கள். (அப்போது அசோகமித்திரன் தி. நகர் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள தாமோதர ரெட்டி தெருவில் - இப்போது தாமோதரன் தெரு - வசித்து வந்தார். அவர் வீட்டிலிருந்து கொஞ்சம் நடந்தால் இண்டியன் காஃபி ஹவுஸ் வரும்.) அந்த காஃபி ஹவுஸில் அசோகமித்திரனுக்கும் சம்பத்துக்கும் நடந்த உரையாடல்:

‘சீக்கிரம். அங்கே என் அக்கா தனியாக நினைவில்லாமல் இருக்கிறாள்.’

‘எனக்குக் கொடுங்கள்.’

‘எதை?’

‘உங்கள் மந்திர சக்தி.’

“என்ன, என்ன, என்ன?’

‘உங்கள் மந்திர சக்தி. அதோ அந்த பஸ் அடியில் விழட்டுமா?’

‘என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே? மந்திரமாவது, தந்திரமாவது. நான் ஒவ்வொரு ரூபாய்க்கும் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.’

‘அந்த பஸ் முன்னால் விழட்டுமா?’

‘நீ எது முன்னாலும் விழ வேண்டாம். என்னைப் பார்த்தால் மந்திர சக்தி இருக்கிற மாதிரியாகவா இருக்கிறது?’

இண்டியா காஃபி ஹவுஸை ஒட்டியபடி உள்ள பர்க்கிட் சாலையில் நிமிடத்துக்கு ஏழெட்டு பஸ்கள் போய்க் கொண்டிருக்கும். சம்பத் பஸ் அடியில் விழ பத்து விநாடிதான் தேவை. ‘ஆளை விடு; என் அக்கா அங்கே சாகக் கிடக்கிறாள்’ என்று சொல்லியபடி காஃபியைக் குடித்தவாறே வெளியே ஓடுகிறார் அசோகமித்திரன். ஒரு வாரம் கழித்து சம்பத்தைத் தன் தெரு அருகே பார்க்கிறார். ‘என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே போய் விட்டான்,’ என்று எழுதுகிறார் அசோகமித்திரன்.

அசோகமித்திரன் மந்திரவாதியாகிய கதை என்னவென்றால், சம்பத்தின் மிக நெருங்கிய நண்பர் ஐராவதம். இருவரும் சில கதைகளைக் கூட சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். ஐராவதத்திடம் சம்பத், அசோகமித்திரன் சாமியார் கதையெல்லாம் எழுதியிருக்கிறாரே; எப்படி எழுதினார் என்று கேட்க, ஐராவதம்தான் ‘ஒருவேளை அதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியாகத்தான் சம்பத்துக்கும் அவர் மனைவிக்கும் அசோகமித்திரன் மந்திரவாதியாகத் தெரிந்திருக்கிறார்!

மீண்டும் இடைவெளிக்கு வருவோம். ஒருநாள் மாலையில் தனது வழக்கமான மரண ஆராய்ச்சியின் ‘களப் பணி’களில் ஒன்றாக, மெரினா கடற்கரையில் உடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு வெறும் ஜட்டியுடன் அலைகள் உடலைத் தழுவப் படுத்துக் கொண்டு மரணத்தைப் பற்றி வாய் விட்டு யோசித்துக் கொண்டிருக்கிறான் தினகரன். மரணத்தைப் பற்றி இதுவரை யாரும் சொல்லாத ஒன்றைத் தன்னால் சொல்லி விட முடியும் என்றும் நம்புகிறான். அப்போது அந்தக் கடல் மணல்கள் மனித இனத்தை விடப் பன்மடங்கு சக்தி கொண்டது என்றும், அதற்கும் தனக்கும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் சம்பந்தம் உண்டு என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. உடனே எழுந்து முழங்காலைக் குத்திட்டு உட்கார்ந்து கொண்டு மணலை கோபுரம் போல் குவிக்க ஆரம்பிக்கிறான்.

மற்றொரு நாள் தினகரனின் பெரியப்பா சாகக் கிடப்பதாகவும், சாவதற்கு முன் அவனைப் பார்க்க விரும்புவதாகவும் செய்தி வருகிறது. பெரியப்பாவின் அருகில் இருந்தால் மரணம் சம்பவிப்பதை நேரடியாக அனுபவம் கொண்டு விடலாம் என்று எண்ணி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே உள்ள அவர் வீட்டுக்குக் கிளம்புகிறான். இடையில் புகாரி ஓட்டலில் டீ குடிக்கச் செல்கிறான். அப்போது மரணம் பற்றிய விசாரணை குறுக்கிடுகிறது. அப்படிச் சொல்வது கூட தவறு. எப்போதும் அவன் நினைவை விட்டு அகலாதபடி இருக்கும் அந்த விசாரணை, அப்போது ஒரு புதுவிதப் பாதையை எடுக்கிறது. எண்ண ஓட்டங்களும் தர்க்கங்களும் பிய்த்துக் கொண்டு போகின்றன. அதில் ஒரு பாதைதான் Probability theory. ஹென்றி ஷாரியர் எழுதிய பட்டாம்பூச்சி நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதில் ஒரு தீவிலிருந்து அவன் தப்பிக்கும் போது இந்த Probability theory தான் உதவுகிறது. யாருமற்ற தீவு அது. கீழே பெரும் ஆழத்தில் பாறைகளோடு கூடிய கடல். விழுந்தால் எலும்பு மிஞ்சாது. மேலேயிருந்து பாறைகளில் மோதும் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவனுக்கு ஒருநாள் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குப் பிறகுதான் அலையானது பாறையின் மீது மோதுகிறது. இடையில் உருவாகும் அலைகள் பாறையில் மோதுவதில்லை. உதாரணமாக ஏழாவது அலை மோதுகிறது என்று வைத்துக் கொண்டால், ஆறு அலைகள் பாறையில் மோதுவதில்லை. அந்த ஆறு அலைகள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கணக்கிட்டு மேலிருந்து குதித்துத் தப்பி விடுகிறான் ஷாரியர்.

மரணத்துக்கும் இந்தக் கணித உண்மைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது தினகரனுக்கு. அதனால்தான் அவன் ரேஸுக்குப் போகிறான். படச் சீட்டு சூது ஆடுகிறான்.

‘மனதில் தோன்றும் இம்மாதிரியான விஷயங்கள் ஹேஷ்ய ஸ்வரூபம் கொண்டதாக உள்ளதை நிர்ணயிக்க, முக்கியமாக அர்த்த ரீதியில் அவை தங்கிவிட வேறு ஏதாவது யுக்தியைக் கையாள வேண்டும் என்று அவருக்குப் பட்டது. அதாவது ஹேஷ்யங்கள் மனதில் தோன்றி வலுவடைய, நிஜம் அல்லது பொய் என்கிற நிரூபணம் கிடைத்துக் கொண்டிருந்தால், ஹேஷ்யங்கள் தம் கதியில் தன்னில் தங்கும் என்று நினைத்தார். இதற்காக அடிக்கடி குதிரைப் பந்தயத்திற்குப் போகலாம் என்று பட்டது. ஆனால் அதற்கு ஏகப்பட்ட பணம் தேவையாக இருந்தது…

இந்த நிலையில்தான் அவர் மூர் மார்க்கெட் எதிரில் இருக்கும் ஒரு சூதாட்டக் கிடங்கைப் பார்த்தார். நின்ற படிக்கே தலைகள் குனிந்து, வரைந்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய ரப்பர் துணியில் ஆறு படங்கள் வரையப்பட்டு இருந்தன. அவர் நின்ற இடத்துக்கு நேர்கோடியில் ஒட்டகப் படம். அதற்குப் பூஜை போட்டு வாழைப்பழத்தில் எரியும் ஊதுபத்தி செருகப்பட்டிருக்கும். அங்கே எப்போதும் கூட்டம் இருப்பதை அவர் கண்டிருக்கிறார். காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை அங்கே கூட்டம் இருக்கும்…

‘தாட்’டின் முன் உட்கார்ந்திருப்பவன் இவ்வாறு கூவுகிறான். ‘மோசடி, ட்ரிக்ஸ் கிடையாது சார். நீங்களே வைக்கலாம். நீங்களே பிரிக்கலாம். உள்ளேயிருந்து எடுக்கும் கவர்ல என்ன இருக்குன்னு உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. வை. இன்னும் வை… அண்ணன் வச்சா தம்பி வைக்கக் கூடாதுன்னு இல்லே. வை. யாரு வேணும்னாலும் வைக்கலாம். ஆனா ஒரு கட்டத்திலே பத்து ரூபா தான் வைக்கணும். அதுக்கு மேலே வைச்சுடாதீங்க… பத்து ரூபா லிமிட். நேர்த்துப் பாருங்கோ ஒரு சேட்டுப் பையன் பத்து பத்தா ஆறு பத்து மடிச்சு வைச்சான். அந்த மாதிரி பண்ணாதீங்கோ, நமக்குத் தாங்காது. வைச்சாச்சா… எடுக்கலாமா… ஏன் பெட்டியப் பெட்டியப் பாக்குறீங்க. பெட்டிக்குள்ளே என்ன இருக்கு… ஒரு கோழி முட்டை, ஒரு பாம்பு இருக்கு. பசிச்சுதுன்னா பாம்பு கோழி முட்டையைத் தின்னும். அவ்வளவுதான். தாட்ல போடு பணத்தை… ம்… வச்சாச்சா…’ பெட்டியைத் திறக்கிறான். பெட்டிக்குள்ளே நிறைய பழுப்பு நிறக் காகித உறைகள் இந்தக் கோடிக்கு அந்தக் கோடி வரிசையாய் வைக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து தன் பக்கமாக உள்ள முதல் உறையை எடுக்கிறான். படங்களின் நடுவே மீண்டும் அந்த உறையைப் போட்டு விட்டு மீண்டும் பேசுகிறான். இப்பக் கூட பத்து ரூபா இனாம் தர்றேன். இதிலே இருக்கும் படம் என்னன்னு சொல்லிட்டா… காசு போடு… (வெறி பிடித்துக் கத்துகிறான்) காசு போடு… காசு கொடுத்தா தாசி, காசு இல்லே தாசி இல்லே… போடு, பிரிக்கப் போறேன்.’ ஒரு ஆக்ரோஷத்துடன் உறையைப் பிரிக்கிறான். மூன்று ஒட்டகப்படம் தெரிகிறது. ரப்பர் துணியில் ஒரு ஆள் நாலரை ரூபாய் போட்டிருக்கிறான். அவனுக்கு அத்துடன் 13.50 சேர்த்துத் தரப்படுகிறது. குதிரையில் கிட்டத்தட்ட பத்து ரூபாய் இருக்கிறது. புலியில் நூறு ரூபாய் சில்லரை தேறும்.

தினகரன் இப்போது மீண்டும் ஒட்டகம் வராது என நம்பி மானில் எட்டணா போடுகிறார். சிறிது நேரம் செல்கிறது உறையைப் பிரிக்க. மீண்டும் ஒட்டகமே வருகிறது. குதிரையில் எட்டணா போட்டார். மயில் வந்தது. யானையில் எட்டணா போட்டார். மீண்டும் ஒட்டகமே வந்தது.

அவருக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. ‘இது என்னடா கூத்து’ என்று சொல்லிக் கொண்டார். வரும் படத்தை எப்படி நிர்ணயிப்பது? அவருக்கு ஒன்று மட்டும் பட ஆரம்பித்தது. இதில் தொடர்ந்து அவர் சரியாகச் சொன்னால், சாவு விஷயத்தைப் பற்றி எண்ணுவதில் ஒரு தொடர்ச்சியும், அந்தத் தொடர்பில் உருவாகும் இணைப்புச் சக்தியும் கண்களுக்கு, மனக் கண்களுக்கு புலப்படும் என்று அவர் நம்பினார். அன்றிலிருந்து அவர் தினமும் மாலை அங்கே போக ஆரம்பித்தார். அவர் விளையாடிய வேகத்தில் ஒரு வாரத்திற்குள் 117 ரூபாய் தோற்று விட்டார். இதனாலெல்லாம் சொல்ல முடியாத தொல்லை. அந்தப் பணம் போய் பால் கணக்கிலிருந்து குழந்தைகளின் பள்ளிக்கூடக் கட்டணம் வரை உதைத்தது. இருபது நாட்களில் மூன்று மாத சம்பளம் போயிற்று. ஆனால் ஒன்று, அந்தக் கவர்கள் பிரிக்கும் முறையில் ஒரு சித்தாந்தம் தெரிய ஆரம்பித்தது. என்றாவது ஒருநாள் தற்செயலாக இல்லாமல், முழுமையாக, சித்தாந்த அடிப்படையில் அந்தக் கூட்டத்தை மொத்தம் பத்து தடவைகள் ஜெயித்து, அந்த உலகம் தனக்குப் பிடிபட்டு விட்டது என்கிற நிலையில் அந்த மூன்று மயில் மூன்று புலி ஆட்டத்திலிருந்து விடுதலை அடைவது என்று தீர்மானித்துக் கொண்டார்.’

பிறகு தினகரனுக்கு அந்த இடத்தில் ராஜ உபசாரம் கிடைக்க ஆரம்பிக்கிறது. ஆனால் ஒருநாள் அந்த மூன்று மயில் மூன்று புலி ஆட்டத்தின் சூட்சுமத்தைத் (Probability) தெரிந்து கொண்டு அந்த ஆளை போண்டி செய்து விடுகிறான் தினகரன். பிரபஞ்ச லயத்துக்கும் சூதுக்கும் இருக்கும் தொடர்பைத் தெரிந்து கொண்டு அவனை வென்ற பிறகு அவன் அங்கே போவதை நிறுத்திக் கொண்டு விடுகிறான்.





இப்போது மீண்டும் நாம் மரணப் படுக்கையில் கிடக்கும் தன் பெரியப்பாவைப் பார்க்கக் கிளம்பிய தினகரன் இடையில் புகாரி ஓட்டலில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இடத்துக்கு வருவோம். தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது மீண்டும் அவனுக்குப் பிரபஞ்ச லயம் பற்றியும் மரணம் பற்றியுமான சிந்தனை வருகிறது. ஒரு நாணயத்தை எடுத்துச் சுண்டி சுற்ற வைக்கிறான். பூவா, தலையா? மீண்டும் சுண்டுகிறான். பூவா, தலையா? மீண்டும் சுண்டுகிறான். பூவா, தலையா? மீண்டும்… மீண்டும்…மீண்டும்… ‘வெளி’யில் – அதாவது பிரபஞ்சத்தில் ஒரு திட்டமிட்ட லயம் இருக்கிறது. அந்தத் திட்டமிட்ட லயத்துக்கும் இந்தப் பூவா தலையாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சுண்டுகிறான். பூவா, தலையா? சுண்டுகிறான். பூவா, தலையா? அப்போது அவனிடம் வரும் சர்வர் சொல்கிறான்: ‘நீங்கள் ஒருமணி நேரமாக இந்தக் காயினை சுண்டிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோரும் உங்களையே பார்க்கிறார்கள்.’

வெறும் நூறு பக்கங்களே உள்ள இந்த இடைவெளி என்ற நாவலைப் படிக்க எனக்கு ஒரு வார காலம் ஆயிற்று. அதுவும் உறங்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற எல்லா நேரத்திலும் படித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் இத்தனை சிறிய நாவலைப் படிக்க இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டதில்லை. காரணம், ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் படித்த அத்தனை நூறு நாவல்களிலும் இடைவெளியே ஆகச் சிறந்ததாக இருந்தது. வழக்கமாக வாசிப்பதைப் போல் ஒரு வாக்கியத்தைப் படித்தவுடன் அடுத்த வாக்கியத்தை நோக்கி நகர முடியவில்லை. படித்த வாக்கியம் அதைப் படித்த உடனேயே நம்மை ஒரு மயக்கநிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. புரிய வைப்பதற்காக மயக்க நிலை என்று சொல்கிறேனே தவிர அந்த மனநிலையை என்னால் வார்த்தையால் விளக்க முடியவில்லை. இப்படியே யோசித்து யோசித்து வாசித்து முடிக்க ஒரு வாரம் ஆகி விட்டது.

உலக இலக்கியப் பரப்பில் இதுபோல் ஒரே ஒருமுறைதான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டேன். அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பர்ரோஸ் தன்னுடைய ஹெராய்ன் அனுபவங்களை Naked Lunch என்ற நாவலில் எழுதியிருக்கிறார். ஆனால் அதை விட இடைவெளி physical and metaphysical தளங்களில் இன்னும் செறிவானது என்று சொல்லலாம். எனக்கு அப்படித் தோன்றிய உடனேயே தமிழ்ச் சூழலில் இடைவெளி பற்றிய எதிர்வினை எப்படி இருந்தது என்பதைத் தேடினேன். அதில் ஆகச் சிறந்ததாகத் தெரிந்தது, சி. மோகனின் கட்டுரை. (ஆனால் ஒரு காலத்தில் சி. மோகன் சிபாரிசு செய்ததாலேயே இந்த நாவலைப் படிக்காமல் போனேன் என்பதும் இதில் உள்ள ஒரு நகைமுரண்.) சி. மோகன் சொல்கிறார்:

‘பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ஜேம்ஸ் ஜாய்ஸை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, ‘ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்ஸின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும்’ என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளி’யுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது.’

(தொடரும்)


எஸ். சம்பத்- 2


By சாரு நிவேதிதா

First Published : 12 July 2015 10:00 AM IST

புகைப்படங்கள்





சென்ற வாரத் தொடர்ச்சி:

இடைவெளியை மட்டும் தனியாகப் படிப்பதை விட சம்பத்தின் எல்லாக் கதைகளையும் ஒருசேரப் படித்தால்தான் அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இடைவெளிக்கு முந்திய எல்லாக் கதைகளுமே அந்த நாவலின் முந்தைய அத்தியாயங்கள் என்றே கொள்ளத்தக்கன. கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள், விவாதங்கள் என்று எல்லாமே ஒரு நீண்ட நாவலின் பல்வேறு அத்தியாயங்களாகவே தெரிகின்றன. மிக முக்கியமாக, சாமியார் ஜூவுக்குப் போகிறார் என்ற சிறுகதையின் நீட்சிதான் இடைவெளி என்று கொள்ள இடமிருக்கிறது.

தில்லியில் வசிக்கும் தினகரன் தன் மனைவி பத்மாவுடனும் இரண்டு குழந்தைகளுடனும் ஜூவுக்குப் போகிறான். அன்றைய தினம் காலையிலிருந்தே பத்மாவுக்கு அவன் மீது தாபம். குழந்தை குமாரைத் தூங்கப் பண்ணி விட்டு தினகரனை அணுகலாம் என்று நினைத்தவளுக்கு குமார் ஜூவுக்குப் போக வேண்டும் என்று கேட்டதும் ஏமாற்றம். தினகரனைக் கவர வேண்டும் என்றே அவனுக்குப் பிடித்த ஜார்ஜெட்டை அணிந்து கொண்டு ‘தாபத்தால் சுடச் சுட முறுகிச் சிவந்த முகத்தோடு’ கிளம்புகிறாள். ஜூவில் அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றி மறைகிறது. ‘இவருக்கு இன்னொருத்தி இருந்திருக்கிறாள்.’ (அந்த இன்னொருத்தியான கல்பனா எல்லாக் கதைகளிலும் வருகிறாள்.) ‘போனால் போகட்டும். இனிமேல் கொஞ்சம் கவனித்துக் கொண்டால் போகிறது என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறாள். இருந்தும் அவன் தன்னை அணைத்துக் கொண்டு நீதான் எனக்கு எல்லாம் என்று கதறினால்தான் அவள் மனசு சாந்தமடையும் போலிருந்தது.’

சம்பத் கதைகளின் இரண்டு பிரதான motifகள் மரணமும் செக்ஸும். Le petit mort என்பதற்கு சிறிய மரணம் என்று பொருள். ஃப்ரெஞ்ச் தத்துவவாதி ரொலான் பார்த் (Roland Barthes) தான் முதல் முதலில் பாலுறவின் உச்சத்தை ‘சிறிய மரணம்’ என்று குறிப்பிட்டார். பாலுறவுக்கும் மரணத்துக்கும் என்ன சம்பந்தம்? பாலுறவு – உடலின் துய்ப்பு – physical; மரணம் - metaphysical. உடல் மற்றும் உடலின் இல்லாமை. இது பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் George Bataille எழுதிய The Story of the Eye என்ற நாவலைப் படித்துப் பார்க்கலாம். அதன் PDF இணைப்பு:
http://ps28.squat.net/bataille_story_of_eye.pdf

ஜூவில் பத்மா ஆண் மயில்களைப் பார்க்கிறாள். ‘ஆண் மயிலின் தலை நிமிர்ந்த கர்வம் அவளுக்குப் பிடித்திருந்தது. ஏனோ, முன்னால் மதறாஸில் ஆனந்தில் ‘ஸ்பார்ட்டகஸ்’ படம் பார்க்கும் போது அதில் அடிமைகளைச் சாகும் வரையில் சண்டையிடச் சொல்லி வேடிக்கை பார்க்கும் ராஜ விளையாட்டுக் காட்சி ஞாபகத்திற்கு வந்தது. ஒருவித லஜ்ஜையுடன் அந்தக் காட்சிகள் எப்போதும் தனக்குப் பிடித்தமான ஒன்றாகத் திகழுமே ஒழிய ஐயோ பாவம் உணர்ச்சியை எழுப்பாது என்ற தன்மையை இப்போதும் மனதிற்குள் ஒப்புக் கொண்டாள்.’

ஸ்டான்லி குப்ரிக் இயக்கி 1960-ல் வெளிவந்த ஸ்பார்ட்டகஸ் படத்தில் பத்மா குறிப்பிடும் காட்சி மனிதனின் sado-masochistic வேட்கை பற்றிய மிக முக்கியமான சமிக்ஞை. மரணத்துக்கும், கொலைக்கும், காமத்துக்குமான ஆழமான உறவை இங்கே நாம் புரிந்து கொள்ளலாம். (ஜார்ஜ் பத்தாயின் கண்ணின் கதையில் இது போன்ற பல காட்சிகள் உண்டு.)

அதைத் தொடர்ந்து பத்மா தனக்கும், ஆண்களை அடியோடு வெறுக்கும் தன் கல்லூரி டீச்சருக்கும் இடையே இருந்த ‘உறவைப்’ பற்றியும் நினைத்துப் பார்க்கிறாள். தினகரனுடனான உறவுக்குப் பிறகுதான் அவளுக்கு டீச்சரோடு சேர்ந்து கொண்டு ஆண்களைத் திட்டியது தவறு என்று புரிகிறது.

ஜூவில் அவ்வப்போது மனைவியைத் திரும்பிப் பார்க்கிறான் தினகரன். அவள் சிரிக்கிறாள். ‘இரு, அவ்வளவு சிரிப்பையும் இரவில் வலியாக, முனகலாக, வேர்வையின் தெப்பக் கடலாக மாற்றுகிறேன் என்று மனதில் சொல்லிக் கொள்கிறான்.’ இந்த இடத்தில் சம்பத் பற்றிய வெங்கட் சாமிநாதனின் கட்டுரை நினைவு வருகிறது. ‘1970-71 வருடங்களில் நானும் சம்பத்தும் அண்டை அயலாராக டில்லி ராமகிருஷ்ணாபுரம் நான்காம் பகுதியில் இருந்திருக்கிறோம்… அவர் வருவார். ‘நான் என்ன சொல்லட்டும் சாமிநாதன். எப்படிச் சொல்றது அதை?’ என்று ஆரம்பித்து கண்களை அகல விரித்து, தலையைச் சிலுப்பி, என்னென்னவோவெல்லாம் அங்கசேஷ்டைகள் செய்து தன் பரவசத்தை வெளிக்காட்ட முயல்வார். அவர் பரவசத்துக்குக் காரணம், முன்னிரவு அவர் பெற்ற தாம்பத்ய உறவு. ‘நான் சொல்றேன்… எனக்கென்ன தோன்றது தெரியுமா சாமிநாதன்? இதுக்கு ஈடு இணை உலகத்திலேயே வேற எதுவுமே இல்லை. எங்கேயோ வேறு உலகத்துக்குன்னா ஆளைக் கொண்டு போயிடறது?’ என்பார்.’ காமத் துய்ப்பு குறித்த இந்த ஆச்சரியமும் பரவசமும் மரணத்தைப் போலவே சம்பத்தின் ஒவ்வொரு எழுத்திலும் அடியோட்டமாக ஓடிக் கொண்டே இருக்கிறது.

இந்த இடத்தில் ‘முடிவுகள்’ என்ற அற்புதமான கதை பற்றிப் பார்ப்போம். பேராசிரியர் சந்திரசேகர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்புகிறார். கும்பகோணத்தில் இருக்கும் அம்மாவைப் பார்ப்பதற்காக தில்லியிலிருந்து மெட்ராஸ் போகும் ரயிலில் பயணம். விமான டிக்கட் கிடைக்கவில்லை. கூபேயில் சகபயணியாய் வருபவர் திலீப் என்ற பிரபலமான நடிகர். ஆனால் பேராசிரியருக்குப் புத்தகங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது. சினிமாவே பார்த்ததில்லை. திலீப்பைப் பார்த்து நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்கிறார். இப்படி ஒரு மனிதனை திலீப்பும் கண்டதில்லை. இருவரும் சிநேகமாகி விடுகிறார்கள். அடுத்த கூபேவில் ராணுவத்தில் கேப்டனாக இருக்கும் சுரேஷ், ஸ்வப்னா என்ற தம்பதி. நால்வரும் பொழுதுபோக்காக சீட்டாடுகிறார்கள். எஞ்ஜின் பழுதாகி ரயில் ஏதோ ஒரு காட்டில் நின்று விடுகிறது. மத்தியப் பிரதேசத்தின் காடுகள் கடும் அடர்த்தியானவை. கேப்டன் வேட்டைக்கும் திலீப் அருவியில் குளிக்கவும் போய் விடுகிறார்கள். பேராசிரியர் சந்துரு வனத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வருகிறாள் ஸ்வப்னா. வெகு இயல்பாக, கொஞ்சம் கூட செயற்கைத் தன்மை இல்லாமல் அவர்கள் இருவரும் தங்கள் மனதையும் தேகத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அது எப்படி நடந்தது என்பதற்கான ஒரு சமிக்ஞை பின்வரும் உரையாடலில் உள்ளதை கவனியுங்கள்:

‘உங்கள் கணவர் எங்கே?’

‘வேட்டைக்குப் போயிருக்கிறார். நாரை, காட்டுப் புறா என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னையும்தான்.’

‘உங்களை ஏன் வேட்டைப் பொருளோடு ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்?’

‘அவர்தான் சொல்கிறார் அடிக்கடி…’

‘என்ன?

‘அழகான பெண் எங்கே என்று வேட்டையாடி வேட்டையாடித்தான் தேடிப் பிடித்தாராம் என்னை.’

‘ஸ்வப்னா, நான் உங்களிடம் ஒன்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?’

‘தாராளமாக… எது வேண்டுமானாலும் சொல்லுங்கள்.’

‘சீட்டாடும் போது எனக்கு உங்களை ஒருதரம் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.’

‘அது எனக்குத் தெரியும் புரொபசர்.’

‘நான் இப்போது உங்கள் கையைத் தொட்டுப் பார்க்கலாமா?’

‘இதோ’ என்று அவளது வலது கரம் அவர் பக்கம் நீண்டது. அவர் ஆசையுடன் அந்தக் கையைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டு வருட ஆரம்பித்தார்.

‘நீங்கள் ஒரு குழந்தை புரொபசர்.’ ஸ்வப்னா சிரித்தாள். அதன் பிறகான உரையாடலில் அவருக்குத் திருமணமாகவில்லை என்றும் இதுவரை அவர் இரண்டே இரண்டு பெண்களின் கைகளை மட்டுமே தொட்டிருக்கிறார் என்றும் தெரிந்து கொள்கிறாள். ஒரு பெண் கும்பகோணத்தில் கோடி வீட்டு பத்மா. இன்னொரு பெண்? ராமஸ்வாமி கோவிலில் ஒரு கந்தர்வ பெண்ணின் சிலை.

‘நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லையா?’

‘நான் எப்போதும் எதிலும் அவநம்பிக்கை கொள்வதில்லை புரொபசர்…’

அவள் செல்லமாக, முன்னே வந்து விழுந்த அவருடைய கிராப்புச் சுருளை ஆள்காட்டி விரலால் சுற்றிக் கொண்டாள்.

‘ஆனால் ஸ்வப்னா…’

‘எஸ் புரொபசர்?’

‘நான் இதுவரை பத்மாவைக் கூட…’

‘எனக்குப் புரிந்து விட்டது புரொபசர்… நீங்கள் மேலே ஏதும் சொல்ல வேண்டாம்.’

அதன் பிறகு அவள் அவர் மடியில் படுத்து அவர் கழுத்தை வளைத்துக் கொண்டு ‘நீங்கள் ஒரு குழந்தை. வளர்ந்த குழந்தை’ என்கிறாள்.

அவள் வாயின் அமுதைத் தன் வாயில் வாங்கிக் கொண்ட பிறகு அது தொண்டையை எல்லாம் ஊடுருவிக் கொண்டு ஹிருதயத்தைத் தொட்டு தொப்புளை நோக்கி சுகமாக இறங்குவதை உணர்ந்தார். பிறகு அவர் புலம்ப ஆரம்பித்தார். தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாகிய அம்மா என்ற சப்தத்துடன் தான் அவருடைய புலம்பல் ஆரம்பித்தது. அது புலம்பல் இல்லை. கீதம். சோக கீதம். எப்போது எங்கே ஆரம்பித்ததோ. வெகுநாள் தேங்கிக் கிடந்த அணையின் நீரை அவிழ்த்து விட்டாற் போன்று பெரும் இரைச்சலுடன் தான் அது ஆரம்பமாயிற்று. கீதமாக, சோக கீதமாக அது உருவெடுக்கத் தொடங்கிய போது யுகங்கள் கழிந்திருக்க வேண்டும். ஆம். அவர் புலம்ப ஆரம்பித்தார். அம்மா. என் அம்மா. ஸ்வப்னா தாயே. அழுதார். மீண்டும் அவர் முகத்தை அவள் மார்பகத்தில் புதைத்துக் கொண்டார். அவருக்குக் கீழே ஸ்வப்னா விம்மி விம்மி பெருகிக் கொண்டிருந்தாள். காட்டாறாகப் பெருகும் அவளை ஒரேயடியாக அணைத்துத் தன் உடம்புக்குள் ஐக்கியப் படுத்திக் கொண்டுவிட மாட்டோமா என்ற ஆவேசத்துடன் உத்வேகத்துடன் அவளை இறுக்கினார். உலகம் மறையத் தொடங்கியது. படித்த அறிவு ஸ்தம்பித்தது. உணர்வுக் கோலம் உயிரின் ரகசிய அறைகளைத் தேடின. படார் படார் என்று கதவுகள் திறப்பது போல், எதையோ சம்மட்டி கொண்டு அடிப்பது போல் உள்ளுக்குள்ளே ஒரே புரட்சி. ரகளை. மண்டையிலிருந்து தீப்பொறிகள் போன்று ஏதோ வெளிப்பட்டு கண்ணுக்கு முன்னால் நீந்த ஆரம்பித்தன. கீழே லாவகமாக அசைந்து கொண்டிருந்த ஸ்வப்னாவின் உருவமும் அந்தத் தீப்பொறியில் கலந்து மறையத் தொடங்கியது. ஸ்வப்னா தன் கண்களிலிருந்து மறைவதை அவர் விரும்பவில்லை. அவளுடைய கண்களில் தன் உதடுகளை ஒத்தி எடுத்தார். அவள் அவரை நோக்கினாள். அவள் மலர்ந்து கொண்டிருந்தாள். ஓர் தாமரைப் பூவின் சிகப்பு அவள் மேல் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அவர் மெள்ள சிரித்தார். உணர்ந்து விட்ட சிரிப்பு. உச்சக்கட்டத்தை நெருங்கும் தறுவாயில் மீண்டும் புலம்ப ஆரம்பித்தார். அடியே… என்னம்மா இவ்வளவு இன்பம் கூட வாழ்க்கையில் உண்டா… ஜன்ம சாபல்யமென்பது இதுதானோடி சொல்லடி… அடியே… என் தாயே சொல்லடி…

அதிகமாகப் பேசக் கூடாது. பேசினால் சாரமே போய் விடும். ஆன்புடன் ஆனால் அதட்டலுடன் வந்த அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டார்…

இப்படியே போகும் அந்தச் சம்பவத்தின் இறுதிப் பத்தி இது:

‘அவர் கரையத் தொடங்கினார். கரைந்து கொண்டிருக்கும் போதே உருவாகத் தொடங்கினார். தான் நினைத்த வெள்ளைக் கோட்டுக்கும் அப்பால் உள்ள பெரிய வெள்ளைக் கோட்டில் நின்றிருப்பதாக ஏற்பட்ட ஓர் உணர்வு கரையும் உடம்பில் இதத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. அந்த உணர்வு இனித்தது. ஸ்வப்னா முனகினாள். அந்த சப்தம் இனித்தது. வாழ்க்கையே முதல் முதலாக இனிக்கத் தொடங்கியது.’

பின்வருவது இடைவெளியில் வரும் ஒரு பத்தி:

‘திடீரென்று யார் வாயைத் திறந்தாலும், சாவு அவர்கள் வாய் வழியாகப் போகுமோ என்று பயந்து, காதை நீட்டிக் கொண்டு, ஹிருதயத்தை கெட்டித்துக் கொண்டார். பயமாய் இருந்தது. எங்கேயாவது ஓடி விடலாமா என்று நினைத்தார். ஆனால் எங்கு ஓடுவது? எண்ணங்களில்தான் வாழ்வு அமைகிறதோ? ஒரு ஆண் பெண் புணரும் போது, அங்கு எண்ண அலைகள் மோதத்தானே செய்கின்றன? எல்லாமே எண்ணங்கள்தாமே? எண்ணற்ற புணருதல் எங்கே? எண்ணங்கள் எப்படி உதயமாகின்றன? ம்ருத்யூ கூட எண்ணம் தானே? நாம் காணும் உருவங்களுக்குப் பின்னால் எண்ணங்கள் இருப்பதால் சாவு கூட எண்ணம் தானே?’

எஸ். சம்பத்தின் எழுத்து ஆங்கிலத்துக்குப் போனால் அநேகமாக ஜார்ஜ் பத்தாய் (Goerges Bataille), கேத்தி ஆக்கர் போன்றவர்களின் எழுத்தை விடவும் அதிகம் கொண்டாடப்படுவார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அவர்களின் எழுத்தில் ஒருவித இருண்மையும், நம்பிக்கையின்மையும் இருக்கும். ஆனால் சம்பத் காமத்தைக் கடவுளோடு இணைக்கிறார். இருப்பை (being) இருப்பின்மையோடு (nothingness) இணைக்கிறார். பிண்டத்தின் (body) இசைவெறியை அண்டத்தின் (universe) லயத்தோடு இணைக்கிறார்.

மீண்டும் சாமியார் ஜூவுக்குப் போன கதைக்கு வருவோம்.

தினகரனும் பத்மாவும் குழந்தைகளும் மிருகங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த போது ஜூவின் கூண்டுக்குள்ளிருந்த ஒரு புலி தப்பி வெளியே வந்து விடுகிறது. அதுவும் ஜூவிலேயே பிறந்து வளர்ந்த புலி அல்ல. மனிதனைக் கொல்லும் குமாயுன் புலி. பிடித்துக் கொண்டு வந்து இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. புலி சுட்டுக் கொல்லப்படுகிறது.

‘ஒரு பாவமும் அறியாத புலியை மனிதன் கொன்று விட்டான். நடந்து சென்று புலியின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தால் கூட அது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்திருக்காது என்று அவருக்குப் பட ஆரம்பித்தது. அவருக்கு அந்தப் புலியின் ஓட்டம், அதனுடைய முகம் எல்லாம் கண் முன்னால் நீந்த ஆரம்பித்தது. ஆம்; அது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்திருக்காது. அது வெளியே வந்த போது தனக்கு விடுதலை கிடைத்து விட்ட சந்தோஷத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தது; சுவாசித்துக் கொண்டிருந்தது. விடுதலை. கூண்டிலிருந்து விடுதலை.

வெகுநேரங் கழித்து அழித்து வாலைச் சொடுக்கினபோது தான் அதனுடைய தேடல் ஆரம்பித்தது. அதற்குப் பிறகுதான் தன் உடம்பால் தான் விடுதலை அடைந்து வந்த இடம் காடில்லை என்பதை உணர்ந்தது.

பிறகுதான் மனிதனுடைய ஆச்சர்யம், அவன் சுவாசிக்கும் காற்றாகத் தேங்கிக் கிடந்த ஆச்சர்யம், ஆச்சர்யமே என்ன என்று அறியாத அந்தப் புலியையும் தொற்றியது.

வேங்கையைக் கூண்டில் அடைத்து அதற்கு சாசுவதமான தன்னுடைய புளித்துப் போன மனிதத்தன்மையைத் தர வேண்டும் என்ற வெறி மனிதனை எப்படி எப்போது தொற்றியது?

அவனுடைய கையாலாகாத்தனம். Ah! தினகரன், What a great rediscovery. Slowly proceed with this thought.

ஆம், மனிதனுடைய கையாலாகாததனம்தான் அவனைப் புலியைக் கூண்டில் அடைக்கத் தூண்டியது…’

‘அன்று இரவு தினகரன் ஒரு கனவு காண்கிறார். மிருகங்கள் எல்லாம் மனிதனைத் தின்ன ஆரம்பிக்கின்றன. மனிதன் ஓடப் பார்க்கிறான். ஒளிந்து கொள்ளப் பார்க்கிறான். முடிவதில்லை. எல்லோரையும் பிடித்து ஒருவர் பாக்கி இல்லாமல் விலங்கினம் துவம்சம் செய்கிறது. கடைசியாக மாமிச பர்வதம் போன்ற மனிதனிடம் விலங்குகள் வருகின்றன. அவன் ஓடவில்லை. ஒளியவில்லை. மனமுவந்து தன்னை விலங்குகளிடம் அர்ப்பணிக்கிறான். I wish the meat is good என்று ஆங்கிலத்தில் பேசுகிறான். பிறகு கனவு கலைந்து விட்டது. இதைப் பற்றி ரொம்ப நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தார் தினகரன்.

பிறகு தன் டயரியில் ஒருநாள் இவ்வாறு எழுதினார். (தினகரன் எவ்வளவு இளைஞனாக இருந்தாலும் எல்லாக் கதைகளிலும் அவனை அவர் என்றே குறிப்பிடுகிறார் சம்பத்.) நான் அழகைத் தரிசித்தவனானேன். எதுவுமே வேண்டாம் என்றோ – இல்லை எது கொடுத்தாலும் அது எவ்வளவு அல்பமாக இருந்தால்கூட மனப்பூர்வமாக எது கொடுத்தாலும் போதுமென்று எவன் நினைக்கிறானோ அங்கு அவனுக்கு அழகு தபஸ் செய்ய ஆரம்பிக்கிறது. தன்னைச் சதா வருத்திக் கொண்டு ஒரு தேடல் மயமாகி தனக்குப் பிடித்தவனைச் சந்தோஷப்படுத்த ஆசை கொள்கிறது. முயற்சி செய்கிறது.’

சம்பத்தின் வாழ்வையும் எழுத்தையும் புரிந்து கொள்ள நாம் எழுபதுகளில் உலகம் முழுவதும் புத்திஜீவிகளிடமும் கலைஞர்களிடமும் பரவியிருந்த எக்ஸிஸ்டென்ஷியலிஸத் துயரத்துக்குச் (Angst) செல்ல வேண்டும். அது ஒரு பெரிய ஆய்வு என்பதால் இங்கே சில குறிப்புகளை மட்டும் தந்து விட்டு மேலே செல்கிறேன். ஆத்மாநாமின் மரணமும் சம்பத் இறந்த அதே ஆண்டுதான் (1984) நிகழ்ந்தது. அப்போது ஆத்மாநாமின் வயது 33. தற்கொலை. இவ்வளவுக்கும் ஆத்மாநாமை கவிஞன் கவிஞன் என்று அவருடைய குடும்பத்தினர் போற்றிக் கொண்டாடினர். அந்தக் காலத்திலேயே ஆடம்பரமான மோட்டார் பைக் எல்லாம் வைத்திருந்தார். வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத வசதியான குடும்பம் வேறு. ஆத்மாநாமை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியது எது என்று புரிந்து கொண்டால், சம்பத்தின் மூளை ரத்தக் கசிவையும் புரிந்து கொண்டு விடலாம். அதற்கு இரண்டு விபரங்களைப் பார்ப்போம். ஒன்று, தனி என்ற ஒரு அற்புதமான சிறுகதை. இதுவும் இடைவெளி என்ற நாவலின் இன்னொரு அத்தியாயமாகவே கொள்ள வேண்டியது. இந்துமதி என்ற பெண். முந்தின இரவை நினைத்தபடி சோம்பலாக நிற்கிறாள் இந்துமதி. உடம்பில் ஒரு ஊமைவலி. பெரிய காயம் ஆறும் தறுவாயில் எழும் நமநமப்பும் ஒருவித சுகமும் அந்த வலியில் தெரிந்தது. இரவில் அவளைத் தூங்க விடாமல் புரட்டிப் புரட்டி சாறாகப் பிழிந்து குடித்து விடும் தீவிரத்துடன் இடித்து, முட்டி, உடம்பில் அசைக்க முடியாத வலியை ஏற்படுத்தி விட்டு, முனகல் தூக்கத்திலிருந்த அவளுக்கு டாட்டா சொல்லி விட்டு வேலைக்குப் போய் விட்ட கணவன் பிரகாஷ். இந்துமதிக்குக் குழந்தை இல்லை. அந்தக் கதையில் ஒரு இடம்: ஒரு புறா ஜன்னல் கம்பியில் உட்கார்ந்திருந்தது. ஒரு பத்துப் பதினைந்து நாட்களாகவே அது அந்த வேளையில் ஜன்னல் கம்பியில் வந்து உட்கார ஆரம்பித்திருந்தது. இந்துமதிக்கு அந்தப் புறாவை கையில் எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று ஆசை. பலவிதங்களில் தினம் அதைத் தன் பக்கத்தில் கூப்பிட்டுப் பார்த்திருந்தாள். புறா குர்ர்ர்ங் குர்ர்ர்ங் என்று சப்தமிட்டுக் கொண்டிருக்குமே தவிர பக்கத்தில் வராது… பிறகு ஒரு அட்டைப் பெட்டி நிறைய பலவித தானியங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு தினம் கொஞ்சம் தானியத்தை ஜன்னல் விளிம்பில் வைக்க ஆரம்பித்தாள். புறாவும் தானியங்களைக் கொத்தித் தின்னும். வேண்டும் என்றே இன்று அவள் ஜன்னல் விளிம்பில் தானியங்களை வைக்காமல் குளிக்கச் சென்றாள். இப்போது கை நிறைய தானியங்களை அள்ளிக் கொண்டு புறாவைக் கூப்பிட்டாள். புறா தயங்கியது. இங்கும் அங்கும் தன் கழுத்தை வளைத்துப் பார்த்தது. பிறகு என்ன நினைத்துக் கொண்டதோ, பறந்து ஜன்னலுக்குக் கீழே தரையில் இறங்கியது. அவள் அதைக் கூப்பிடுவதை நிறுத்தவில்லை. பிறகு மெள்ள ஒரு தானியத்தை அதன் பக்கமாக விட்டெறிந்தாள். புறா பறந்து போய் மீண்டும் ஜன்னல் கம்பியில் உட்கார்ந்தது. அவள் அதைக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள். மீண்டும் புறா கீழே இறங்கியது. தானியத்தைக் கொத்தித் தின்றது. பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பக்கமாகத் தத்தித் தத்தி வர ஆரம்பித்தது. இந்துமதியின் உடம்பு புல்லரித்தது. உருட்சியான தோளுக்குள் ஏதோ கரைவது போலிருந்தது. அவளிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. புறா அவளுடைய கையிலிருந்த தானியத்தைக் கொத்திக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது. இந்துமதி அவசரப்பட்டு விட்டாள். ஆவல் தாங்க மாட்டாமல் அவள் இரண்டு விரலால் தொட்டதும் புறா அம்பு போல் மேலே எழும்பியது. ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியில் பட்டுக் கீழே விழுந்தது புறா. இந்துமதி மயக்கமானாள்.

இரண்டாவது, வெங்கட் சாமிநாதன் சொல்லும் ஒரு சம்பவம்:

‘அக்காலங்களில் டில்லியில் ஓடிக் கொண்டிருந்த இரட்டைத் தளம் கொண்ட விஜயா என்று அழைக்கப்பட்ட ட்ராலர் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தோம். நானும் சம்பத்தும் மேல் தளத்தில் முன் வரிசையில் உட்கார்ந்திருந்தோம். சம்பத் முன்புற ஜன்னல் கண்ணாடி வழியாக எதையோ ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். சம்பத் வைத்த கண் எடுக்கவில்லை. என்ன கவலையோ, என்ன யோசனைகளோ என்று நான் சம்பத்தின் அந்நிலையைக் கலைக்கவில்லை. அவர் முகத்தில் கவலையும், பயமும், ஒருவித நிம்மதியின்மையும் கொஞ்சம் கொஞ்சமாக விரவிப் படர்வதாக எனக்குத் தோன்றியது.’ பஸ்ஸை விட்டு இறங்கிய பின் ‘என்ன ஆயிற்று சம்பத்?’ என்று விசாரிக்கிறார் சாமிநாதன். அதற்கு சம்பத் சொல்கிறார்:

‘நாம் போயிட்டிருந்தப்போ பஸ் ஒரு வேப்ப மரக்கிளையை உரசிண்டு போச்சு இல்லையா, அப்பத்தான்னு நினைக்கிறேன். ஒரு வேப்பங்காய், இத்துணூண்டு பச்சைப் பசேல்னு, எவ்வளவு அழகா தொட்டுத் தடவலாம் போல… அது விழுந்துடுத்து கர்டர் மேலே. விழுந்து அங்கேயும் இங்கேயுமா உருள்றது. எப்போண்ணாலும் அது கர்டரின் இடுக்கிலே விழுந்து சிக்கி நசுங்கிச் செத்துப் போயிடும். உருள்றது. அதற்கு என்ன தெரியும். உருள்றது. நமக்குன்னா பயமாயிருக்கு. சின்னக் குஞ்சு. அநாதை. ஆதரவில்லாத தனிச்சுப் போயிட்ட குழந்தை. அதுக்குத் தெரியலை. இதோ சாகப் போற கணம் வந்து ஒரு மயிரிழையில் தப்பிச்சுடுத்துன்னு நினைச்சேன். ஆனா அது திரும்பவும் உருள்றது சாவின் முனைக்கு. இப்படியே திரும்பத் திரும்ப நடந்துண்டே இருக்கு. நான் என்ன செய்ய முடியும் சாமிநாதன்? பகவானே அதைக் காப்பாத்திடுன்னு வேண்டிக்கலாம். வேண்டிண்டேனே. ‘எங்கேயாவது ரோட்டிலே உருண்டு விழும்படியா பண்ணிடுடா வெங்கடேசா, அது சாவுக்கு உருண்டோடறதை நிறுத்துடா’ன்னு வேண்டிண்டேன். அது அப்புறம் கண்ணிலே படலை. ரோட்டிலேதான் உருண்டு விழுந்திருக்கணும். அப்பா, என்ன பயங்கரம். எப்போடாப்பா இதுக்கு முடிவு காலம்னு தோணிப் போயிடுத்து.’

வாசிப்பதைக் கொஞ்சம் நிறுத்தி விட்டு மேலே வெங்கட் சாமிநாதன் நமக்குக் காட்டும் சம்பத்தைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள். இந்த உலகின் மகா பெரிய கலைஞன் ஒருவனின் தரிசனம் கிட்டும்...


பின்குறிப்புகள்:

1. இடைவெளி பற்றிய சி. மோகன் கட்டுரையின் இணைப்பு:

http://azhiyasudargal.blogspot.in/2009/07/blog-post_9933.html

2. சம்பத் பற்றிய R.P. ராஜநாயஹம் கட்டுரையின் இணைப்பு:

http://rprajanayahem.blogspot.in/2009/10/blog-post_21.html

3. இடைவெளி நாவல் அழகியசிங்கர் தொகுத்த சம்பத் கதைகள் தொகுப்பில் உள்ளது. ஆனால் அது தெறிகள் பத்திரிகையில் வந்த rough draft. சி. மோகனும் சம்பத்தும் செப்பனிட்ட பதிப்பு (க்ரியா வெளியீடு) இப்போது கிடைக்கவில்லை. ஆனால் இணையத்தில் PDF வடிவத்தில் உள்ளது. மறுபிரசுரம் செய்ய சம்பத் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே இணையத்தில் தேடிப் படிக்கவும். தெறிகளில் வந்த பிரதி நமக்குப் புரியாது.

சம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்

வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN | நேரம்: 7:06 AM | வகை: கட்டுரை, சம்பத், சி. மோகன்


சி. மோகன்
(சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி சம்பத் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
1975ஆம் ஆண்டு கவிஞர் உமாபதியின் முயற்சியில் ‘தெறிகள்’ காலாண்டிதழ் வெளிவந்தது. அச்சமயம் அறிவிக்கப்பட்ட நெருக்கடி கால நிலையின் காரணமாக உமாபதிக்கு ‘தெறிகள்’ நடத்தியது தொடர்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அவ்விதழ் தொடர்ந்து வெளிவராமல் போனது. ஓர் இதழ் மட்டுமே வெளிவந்த தெறிகளில் இரண்டு மிக முக்கியமான படைப்புகள் வெளிவந்திருந்தன. ஒன்று : கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் ; மற்றொன்று: சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல். கலாப்ரியாவின் சுயம்வரம் பற்றி, நண்பர்கள் சிலருடன் இணைந்து அப்போது நான் நடத்திக் கொண்டிருந்த ‘விழிகள்’ இதழில் கட்டுரை எழுதினேன். அதே சமயம் ‘தெறிகள்’ இதழில் சம்பத்தின் இடைவெளி நாவல் முடிந்திருந்த பக்கத்தின் கீழ் இருந்த சிறு வெற்றிடத்தில் தமிழில் அதுவரை வாசித்த நாவல்களில் அதுவே மிகச் சிறந்தது என்ற என் எண்ணத்தையும் அந்நாவல் வாசிப்பு எனக்குள் ஏற்படுத்திய எக்களிப்பையும் நுணுக்கி நுணுக்கிக் குறித்து வைத்திருந்தேன். இன்றும் அந்த எண்ணத்தையும் எக்களிப்பையும் இடைவெளி தந்து கொண்டிருக்கிறது.

1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் க்ரியாவில் பணியாற்றுவதற்காக சென்னை வந்தேன். ‘க்ரியா’ புத்தக வெளியீட்டைத் தீவிரப்படுத்த யோசித்திருந்த நேரமது. அப்போது க்ரியா ராமகிருஷ்ணனிடம் ‘இடைவெளி’யை வெளியிடலாமென்று மீண்டும் யோசனை தெரிவித்தேன். ராமகிருஷ்ணன் வெளியிடப்படுவதற்கான கையெழுத்துப் பிரதிகளின் அடுக்கிலிருந்து ஒரு டயரியை எடுத்துக் கொடுத்தார். ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பத் ‘தெறிகள்’ இதழில் வெளியான பனுவலில் சில திருத்தங்கள் செய்து ஒரு டயரியில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதிலும் ஆங்கிலச் சொற்கள் நிரவிக் கிடந்தன. ‘அவரோடு உட்கார்ந்து எடிட் செய்யலாமென்றால் அவர் அதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள், என்றார் ராமகிருஷ்ணன். இதனையடுத்து சம்பத்துடனான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் சற்றும் எதிர்பார்த்திராத தோற்றம்; செமத்தியான உடல்வாகு; பருமனும் சரி , உயரமும் சரி. அவரைச் சம்மதிக்க வைப்பது சிரமமாகவே இருக்கும் ; எனினும் பக்குவமாக அவரை இந்த முடிவுக்கு நகர்த்திக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற என் முன்ஜாக்கிரதைகளுக்கு மாறாக, முதல் ஓரிரு பக்கங்களை முன்வைத்து நான் தெரிவித்த ஓரிரு யோசனைகளின் அளவிலேயே அவர் சரி, நாம் சேர்ந்து பார்க்கலாமென்று சம்மதித்துவிட்டார்.

இதனையடுத்து, சம்பத்தும் நானும் ராமகிருஷ்ணனுடைய வீட்டில் பகற்பொழுதில் வரி வரியாகப் பார்த்தோம். ஏªழுட்டு நாட்களில் அப்பணி முடிந்ததாக ஞாபகம். சதா தகிக்கும் உள்ளார்ந்த தீவிர மனநிலையும், நேசிக்கக்கூடிய வகையிலான ஒருவித பேதமையும் ஒன்றையொன்று மேவி அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அப்போது தொடங்கிய நட்பும், சந்திப்பும் அடுத்த ஆறேழு மாதங்கள் _ அதாவது 1984ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அவர் இறந்ததற்கு சில நாட்கள் முன்பு வரை தொடர்ந்தது.

1983ஆம் ஆண்டு இறுதியில் என் குடும்பமும் சென்னைக்கு வந்து நாங்கள் நண்பர் சச்சிதானந்தம் வீட்டு மாடியில் குடியமர்ந்தோம். அந்த மாடி இரண்டாகத் தடுக்கப்பட்டு ஒரு பகுதி எங்கள் வீடாகவும், மற்றொரு பகுதி ‘க்ரியா’வின் புத்தகக் கிடங்காகவும் அச்சுக் கோப்பகமாகவும் அமைக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஜூன் வாக்கில் இடைவெளி அச்சு வேலை தொடங்கியபோது சம்பத் அநேகமாக ஒவ்வொரு நாளும் மதிய வேளைகளில் வீட்டுக்கு வந்துவிடுவார். சென்னை வெயிலில் அவர் வந்தவுடன் செய்யும் முதல் காரியம் சட்டையைக் கழற்றிப் போடுவதுதான். சட்டை பாக்கெட்டில் எப்போதும் லாட்டரி சீட்டு இருக்கும். இப்படி 10_15 நாட்கள் வந்து கொண்டிருந்தவர் திடீரென்று பல நாட்கள் வரக் காணோம். ‘இடைவெளி’ புத்தகம் அச்சு வேலை முடிந்து பைண்டிங்கில் இருந்தது. இச்சமயத்தில் ஒரு நாள் காலை திலீப்குமார் ‘சம்பத் இறந்துவிட்டதாகத் தகவல்’ என்று தயங்கியபடி கூறினார். அத்தகவல் தெரியவந்தபோதே அவர் இறந்து 15_20 நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அன்றே அத்தகவல் உறுதிபடுத்தப்பட்டது. நான் அன்றே சம்பத் வீடு சென்று அவருடைய துணைவியாரைச் சந்தித்தேன். மறுநாளே அவர் பற்றிய ஒரு குறிப்பை எழுதி அச்சிட்டுப் புத்தகத்தில் சேர்த்தோம். ஒரு படைப்பாளியின் மரணம் பற்றிய தகவல்கூட வெளித்தெரிய சில நாட்கள் எடுக்கும் அவல நிலைதான் நம் சூழலின் யதார்த்தம்.

தெறிகள் இதழில் வாசித்தது தொடங்கி, அப்பிரதியை செம்மைப்படுத்துவதற்கு முன்னும் அப்பணியினூடாகவும், புத்தகமாக வெளிவந்த பின்பு அவ்வப்போதும், நடைவழிக் குறிப்புகளுக்காக சம்பத் பற்றி எழுதும்போதும் என நான் பலமுறை படித்த நாவல் இடைவெளி. நான் அதிக முறை படித்த நாவலும் இதுதான்.

பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ஜேம்ஸ் ஜாய்சை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, ‘‘ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்சின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும்’’ என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளி’யுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது.

2

காலம், வாழ்க்கை, மனித ஸ்திதி, ஆகியவற்றைக் கண்டுணர்ந்தும் கிரஹித்தும் ஒரு நாவல் புனைவாக்கம் பெறுகிறது. இப்புனைவு அதற்கான ஞானத்தை, மெய்யறிவைக் கொண்டிருக்கிறது. இது மனித இருப்புக்குப் புதிய சாத்தியங்களையும் காலத்துக்கான கண்டுபிடிப்புகளையும் அளிக்கிறது. அதனால்தான், ‘‘அறிவியல் சிந்தனைகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் 19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பே, மனித இருப்பின் விலக்க முடியாத ஒரு பரிமாணமாக, மடத்தனம் இருப்பதை ஃபிளாபெர்ட் தம் நாவல்கள் மூலம் கண்டடைந்ததுதான்’’ என்று மிலன் குந்தரேவால் கூற முடிகிறது. மேலும் ஃபிளாபெர்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பு மார்க்ஸ், ஃபிராய்டு ஆகியோரின் திடுக்குற வைக்கும் கருத்துகளை விடவும் எதிர்கால உலகுக்கு முக்கியமானது என்கிறார்.

ஆக, நாவலாசிரியன் தன்னளவில் ஒரு தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன். இவ்வகையில்தான் சிந்தனையும், புனைவும் கூடி முயங்கி உருக்கொண்ட இடைவெளி, தமிழின் பெறுமதியான ஒரு நாவலாகி இருக்கிறது.

தமிழ் நாவல் பரப்பில் இந்நாவலின் முக்கியத்துவம் பற்றிச் சற்று விரிவாகப் பேசுவதற்கு முன் மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியரான டி. எச். லாரன்ஸ் ‘கீலீஹ் ழிஷீஸ்மீறீ விணீttமீக்ஷீs’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு ஆதங்கத்தை முன்வைக்க விரும்புகிறேன்: ‘பிளாட்டோவின் உரையாடல்கள் விநோதமான சிறிய நாவல்கள். தத்துவமும் புனைகதையும் பிரிந்தது, இவ்வுலகின் மிகப் பெரிய சோகமாக எனக்குப் படுகிறது. இரண்டும் ஒன்றாகத்தான் புராணக் கதைக் காலங்களிலிருந்து உருவாகி வந்திருக்கின்றன. அரிஸ்டாடில், தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைபடுத்திக் கொண்டே இருக்கிற தம்பதிகளைப் போல் தனித்தனியே பிரிந்து போயின. இதன் காரணமாக நாவல் மேலோட்டமானதாகவும், தத்துவம் அருவமானதாகவும் வறண்டு போயின. நாவலில், இவ்விரண்டும் மீண்டும் இணைந்து வர வேண்டும்.’

இத்தகையதோர் இணைப்பில் புனைவாகியிருக்கும் நாவல்தான் இடைவெளி. இதனாலேயே தமிழின் முதல் முழு முற்றான கருத்துலக நாவலாக இடைவெளி தனித்துவம் பெற்றிருக்கிறது.

சம்பத்துக்கு முன் தமிழ் நாவல் பரப்பில் கருத்துலகச் சாயல் கொண்ட படைப்பாளியாக அறியப்பட்டு அதனாலேயே பிரபல்யமும் அடைந்தவர் ஜெயகாந்தன். ஆனால் அவருடைய படைப்புகளில் புனைவுலகின் மெய்யறிவிலிருந்து கருத்துகளோ, சிந்தனைகளோ உருண்டு திரள்வதில்லை. மாறாக, கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை ஸ்வீகரித்துக் கொண்டு அவற்றுக்குப் புனைவடிவம் தந்தவர் ஜெயகாந்தன். இவ்விடத்தில் இன்று, கலை, இலக்கியமானவை எந்த ஓர் அமைப்புக்குமோ, கொள்கைக்குமோ, துறைசார் அறிவுக்குமோ சேவகம் செய்வன அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, படைப்பின் மெய்யறிவுப் பயணத்திலிருந்து உருக்கொள்ளும் சிந்தனைகளிலிருந்து பிற அமைப்புகளும், கொள்கைகளும், துறைசார் அறிவுகளும் தங்களை செழுமைப்படுத்திக் கொள்ள முடியும். முடிந்திருக்கிறது. சலித்துப் போன உதாரணம் : ஃப்ராய்டு, தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து பெற்ற பெறுமதிகள். கலை_இலக்கியங்களிடம் காலம் எதிர்பார்ப்பது இதுதான். ஜெயகாந்தனிடம் இது நிகழவில்லை. ஆனால், இடைவெளி நாவலில் அடிப்படைகளில் உழன்று தகிக்கும் தினகரனை சாவு பிரச்சனை ஆட்கொள்ளும் போது அவர் மேற்கொண்ட பயணத்தினூடாக படைப்பு ஒரு மகத்தான கண்டுபிடிப்பை வசப்படுத்துகிறது. அதுவே இப்படைப்பை முக்கியத்துவமிக்கதாக்கி இருக்கிறது. சம்பத்தின் ‘இடைவெளி’க்குப் பின் வெளிவந்த சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.’ சில குறிப்புகள்’ தமிழில் சிந்தனைத் தளத்தில் இயங்கிய முதல் நாவலாகப் போற்றப்பட்டுக் கொண்டாடப்பட்டது. பெறப்பட்ட அறிவின் உதிரித் தொகுப்புகளாகவே பெரிதும் அமைந்துவிட்ட இந்நாவல் அதன் வசீகர நடை காரணமாக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. அடியறியா, ஆழமறியா புனைவுப் பயணத்தினூடாகப் படைப்பு மெய்யறிவு கொள்வதற்கான எவ்விதப் பிரயாசையும் இந்நாவலில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஒரு அடிப்படைப் பிரச்சனைக்குத் தன்னை முழு முற்றாக ஒப்புக் கொடுக்க சம்பத்துக்கு முடிந்திருக்கிறது.

‘இடைவெளி’ 7 அத்தியாயங்கள் கொண்ட சிறிய நாவல். இந்நாவலின் மையப் பாத்திரமான தினகரன் பற்றி நாவலிலிருந்து நாம் அறிவது என்ன என்று பார்க்கலாம்.

பத்தாண்டுகள் முன்னோக்கிப் பார்க்க விரும்பாத இச்சமூக ஓட்டத்திற்கிடையே அடிப்படைப் பிரச்சனைகளில் உழன்று தகிக்கும் ஒருவர் தினகரன். இப்போது அவரை ஆட்கொண்டிருப்பது சாவு பற்றிய ஒரு கேள்வி. பிறப்பால் பிராமணன். அவருக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும். காரணம் அவர் Êஏசு கிறிஸ்துவை, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கடைசி பட்சமாக, அசைக்க முடியாத அளவுக்கு ஓர் கண்டன விமர்சனம் பண்ணிப் போயிருக்கிறார். இது தினகரனுக்கு ரொம்ப முக்கியம். ஏசுவை தினகரனுக்குப் பிடிக்கும். ஆனால் எண்ண ரூபமான எதையுமே எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்பது தினகரனின் நிலைப்பாடு. (இப்படிப் பார்க்கும்போது வேதங்களும் உபநிஷத்துகளும் இந்த மாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை என்பது அவரது ஆதங்கம்.

கிட்டத்தட்ட 35 வயதான தினகரனின் குடும்பம் இது. மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெÊயஸ்ரீ, (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களே இவை.) கலவியில் அதீத நாட்டமுடையவர். சாவு பிரச்சனையில் உழலத் தொடங்கிய பிறகு, மனைவியே கேட்டுக் கொண்டும் மறுக்குமளவு பிரச்சனையில் அமிழ்ந்து போனவர். டில்லியில் பணிபுரிந்த போது கல்பனா என்ற பெண்ணுடன் உறவு. மனதில், நினைவுகளில் அவளின் தீவிர இருப்பு.

சாவு பிரச்சனை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். பிரச்சனை தீவிர முகம் கொள்ளும்போது, வேலை அதிகமில்லாத, மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக் கேட்டு மாற்றிக் கொள்கிறார். முன்னர் டில்லியிலும் தற்சமயம் சென்னையிலுமாக ஒருபோதும் ஒரு அலுவலகத்தில் அதிக நாட்கள் அவர் நீடித்திருந்ததில்லை. சாவு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உழன்று தவிக்கும் போது வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன.

இவ்வாறாக, லௌகீக வெற்றியை நோக்கி விரையும் பொது ஓட்டத்துக்கு எதிர்திசையில் நிகழ்கிறது இவர் பயணம். மனித ஸ்திதியின் மாறுபட்ட சாத்தியப்பாடு இது. இதிலிருந்துதான் நாவல் புது வெளிச்சம் கொள்கிறது.

சாவு பற்றிய ஒரு அடிப்படைத் தன்மையை சொல்லிவிடப் போகிறோம் என்ற எண்ணம் தினகரனிடம் உருவாவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. சாவு பல விதங்களில் சம்பவித்தாலும் அதன் அடிப்படைக் கூறு ஒன்றுதான் என்ற யூகத்துடன் முதல் அத்தியாயம் முடிகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் தினகரன் தான் காணும் கனவில் ‘இடைவெளி’ என்று தன்னையறியாது சொல்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் சாவு உருவம் தலையாட்டுகிறது.

இது குறித்து சதா உலைந்து கொண்டிருக்கும் தினகரன் வாழ்வு என்பது அணுசரணையான இடைவெளி என்றும், சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி என்றும் கடைசியில் கண்டடைவது, ‘எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கே உரித்தான வீர்யத்தோடும், பூ மணப்பின் குணத்தோடும், நாவலில் விகாசம் பெற்றிருக்கிறது.

தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதின் பரவசத்தையும் தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மானசீகமாக மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.