Tuesday 7 July 2015

கன்னியாஸ்திரியை கல்லெறிதல்
- குருசு.சாக்ரடீஸ்


http://kurususocrates.blogspot.in/2012/08/blog-post.html

கன்னியாஸ்திரி ரெபேக்காளின் மேல் முதல் கல்லை எறிவதற்காக மெற்றாணியர் வானத்தை நோக்கி கல்லை உயர்த்திப் பிடித்திருந்தார்.

மெற்றாணியர் மெருகூட்டப்பட்ட புதிய பொன்னிற அங்கியை அணிந்திருந்தார். மேலங்கி சிவந்த நிறத்தில் சரிகை வேலைபாடுகளுடன் இருந்தது. இத்தாலிய தையல் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த அவ்வுடையை வாடிகன் கடைவீதியில் சொற்ப விலைக்கு வாங்கியிருந்தார். அவருக்குப் பொருத்தமான அவ்வுடையை வாங்க திருச்சபையின் எந்த அனுமதியும் தேவைப்பட்டிருக்கவில்லை. குறுநில மன்னர்களைப்போல அணிந்திருந்த கிரீடம் வெள்ளியில் செய்யப்பட்டுத் தங்க முலாம் பூசியிருந்தது. செங்கோலை உதவியாளரிடம் கொடுத்திருந்தாலும் மெற்றாணியர் கம்பீரமாகவே கல்லை உயர்த்திப் பிடித்திருந்தார். செங்கோல் செய்யவென்றே தஞ்சாவூரில் சில குடும்பங்கள் இருந்து வந்தன. செங்கோலை பிடித்துகொண்டு மெற்றாணியருக்கு உதவிசெய்ய விரும்பியவர்கள் தொடர்ந்து விண்ணப்பங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

சாயங்காலத்தை அழகூட்ட குவிக்கப்பட்டிருந்த கற்களின் மேல் மக்கள் நின்றுகொண்டிருந்தார்கள். மெற்றாணியரின் உடையைப் புகழ்ந்து பேச யாருக்கும் வார்த்தைகள் கிடைத்திருக்கவில்லை. எறிவதற்குத் தோதான கற்கள் மைலாடி சந்தையிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தன. விலையற்ற கற்களைப் பலரும் காணிக்கையாக அனுப்பியிருந்தார்கள்.

வாட்டிகனோடு நெருங்கிய உறவை தொடர் கப்பற் பயணங்களின் வழியே மெற்றாணியர் அடைந்திருந்தாலும் வாட்டிகனின் உத்தரவுகளைப் பெரும்பாலும் நிறைவேற்றுவதில்லை. நகரமக்கள் விரும்பியிருக்காத பிராந்திய மொழியிலேயே திருப்பலிகளை நிறைவேற்றும் துணிச்சல் எந்த மெற்றாணியருக்கும் கிட்டியிருக்கவில்லை. ஆலயத்தின் வழக்கத்திலில்லாத வழிபாட்டை எந்த முணுமுணுப்பும் இல்லாமல் நிறைவேற்றிக்கொண்டிருந்தார். பிராந்திய மொழியில் திருப்பலிகளை நிறைவேற்ற வாட்டிகனுக்கு அனுப்பியிருந்த அனுமதி கடிதம் கப்பல் விபத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்ததை மெற்றாணியர் அறிந்திருக்கவில்லை.

பிரார்த்தனை நேரத்தில் நாணயங்களை உருட்டி விளையாடும் சிறுவர்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த கன்னியாஸ்திரி ரெபேக்காளின் கட்டுப்பாட்டில் எந்தச் சிறுசுகளும் வந்திருக்கவில்லை. ரெபேக்காளின் புன்னகைக்கே வீறிட்டலறும் குழந்தைகள் பிரார்த்தனைகூடத்தில் கொஞ்சி விளையாடுவதைக் கடவுளால்கூட நிறுத்த முடியாதென்பதை அறியாதவர்கள் ஆலயத்திற்குத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். ஞாயிற்றுகிழமை பிரார்த்தனைக்குக் கூச்சலிடும் குழந்தைகளை அழைத்துவர எல்லாக் குடும்பங்களுக்கும் மெற்றாணியர் உத்தரவிட்டிருந்தார்.


சவஅடக்கச் சடங்குகளுக்கான பாடல்களை உருவாக்கிக்கொண்டிருந்த ரெபேக்காளை கான்வென்டின் கற்சுவர்களுக்கு வெளியேயும் அனேகர் அறிந்துவைத்திருந்தார்கள். அச்சமூட்டும் அவளது மருத்துவமுறைகளும் மக்களைக் கவர்ந்திருந்தது. கல்லறைத்தோட்டத்திற்கும் தேவாலயத்திற்கும் புதிய குறுக்கு வழிகளைக் கண்டுவைத்திருந்தாள். குறுக்கு வழிகள் அவளால் மட்டுமே போகமுடிந்த பாதைகளைக் கொண்டிருந்தது.

பனங்காட்டிலிருந்த கல்லறை தோட்டத்தை அணுகவென்று வாகனங்களும் இருந்திருக்கவில்லை. மேடான அப்பிரதேசத்தில் எந்த மாட்டுவண்டியும் ஏறுவதில்லை. தென்திருவிதாங்கூர் சமஸ்தானத்தினுள் மோட்டார் வாகனங்கள் பெரும்பாலும் வருவதில்லை. மெற்றாணியரை காண வரும் வாகனங்கள் கிளப்புகிற புகை இரண்டொரு நாட்கள் நகரத்தைவிட்டு அகலுவதில்லை. பேருந்துகளும் லாறிகளும் வந்துபோகவென்றே சாலைகள் நகரத்தினுள் நுழைந்திருந்தன.

சவப்பெட்டிகளைத் தூக்கிவருபவர்கள் வேகமாக நடப்பதில்லையென்றாலும் பாடலையும் மலர்களையும் பிரசவித்துக்கொண்டிருந்த ரெபேக்காளை அடைய அவர்கள் வேகமாக ஓடவேண்டியிருந்தது. கிட்டதட்ட ஏழு மைல் தூரத்திலிருந்த கல்லறைத்தோட்டத்திற்குச் சவப்பெட்டிகளைச் சுமந்துவர யாரும் விரும்புவதில்லை. கல்லறைத்தோட்டத்திற்கான புதிய இடத்தை நகரத்தினுள் கண்டடைய மெற்றாணியருக்கு பலரும் கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

சப்பரதேர் வலம்வரும் காலங்களிலும் நகரெங்கும் ஓடிக்களைத்தவர்கள் ரெபேக்காளை திட்ட விஷேச பாஷைகளைக் கற்றுவைத்திருந்தார்கள். ஆவணி மழைக்காலத்தைக் கொண்டாட தேவாலயத்திருவிழாக்கள் நடப்பதுண்டு. சப்பரத்தை நகரம் முழுவதும் சுற்றிக்கொண்டுவர நியமிக்கப்பட்ட குடும்பங்கள் ரெபேக்காளின் நடைவேகத்தை விரும்பிருக்கவில்லை. மழைக்காலச் சேற்றை மறைக்கக் கடல் மணலை நகரத்தெருக்களெங்கும் விரித்திருந்தாலும் யாராலும் விரைவாக நடப்பதற்கான சந்தர்ப்பங்களைத் தந்திராத தெருக்களில் ரெபேக்காள் விரைந்த நடையில் போய்கொண்டிருந்தாள்.

எல்லா அதிகாலையையும் தேவாலயத்திலிருந்து ரெபேக்காளே பறக்கவிடுவதாக எழுந்த நம்பிக்கைகளை யாரும் குலைத்திருக்கவில்லை. பீட அலங்காரத்திற்கென்று பல கன்னியாஸ்திரிகளும் அதிகாலை வருவதுண்டு. ரெபேக்காளுடைய உலகத்தில் பீட அலங்காரத்திற்கென்று எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

நுங்கும் நுரையுமாக வந்திறங்கும் புதிய கன்னியாஸ்திரிகள் அதிககாலம் அந்நகரத்தில் வாழ்ந்திருக்கவில்லை. நாகரீக வார்த்தைகளே வந்திறங்காத நகரத்தில் புதியவர்கள் காலம் தள்ள பயிற்சிகூடங்கள் இயங்கின.

கான்வென்டின் கற்சுவர்களைத் தாண்டி வளர்ந்திருக்காத போன்சாய்களை அப்பிரதேசத்திலுள்ளவர்கள் விரும்பியிருக்காததை மெற்றாணியரிலிருந்து பலரும் அறிந்து வைத்திருந்தார்கள்.

கான்வென்டு நகரத்துக்கு வெளியே புன்னை மரங்கள் காய்த்துக்குலுங்கும் பழையாற்றின் கரையில் இருந்தது. தண்ணீரை உறையவைத்துச் சிலைசெய்துகொண்டிருந்த சிற்பிகள் தலைமுறையைத் தாண்டியும் பழையாற்றின் கரையைவிட்டு எங்கேயும் போயிருக்கவில்லை. மூலிகைகளால் தண்ணீரை உறையவைக்க அவர்கள் எந்தக் கடவுளையும் வேண்டுவதில்லை. பனிச்சிற்பங்களைச் செய்யவென்றே ஜெனித்த அவர்களை அப்பிராந்தியத்தில் யாரும் தொந்தரவு செய்வதில்லையென்றாலும் நகரக்காவலர்கள் சிறை நிரப்பவென்று சிற்பிகளைப் பிடித்துபோவது வழக்கத்திலிருந்தது.

பனிச்சிற்பங்களைச் செய்துகொண்டிருந்தவர்கள் கன்னியாஸ்திரிகளைக் காதலித்துக்கொண்டிருந்த தகவல் கடைசியாக மெற்றாணியரை வந்தடைந்திருந்தது. அச்செய்தியை மெற்றாணியரின் முன் திறக்க துணிச்சலற்றவர்களே அரண்மனையில் உலாவிக்கொண்டிருந்தார்கள்.

ரெபேக்காள் தன் அசாத்திய நடைதிறனை கான்வென்டிற்கும் தேவாலயத்திற்குமான தூரத்தில் அடைந்திருந்தாள். சிறுபிராயந்தொட்டே மலைசரிவு ரப்பர் தோட்டத்தில் நடந்து பழகியிருந்தாள். ரப்பர் மரத்தின் சருகுகளைக் கூட்டி பனம்பழங்களைச் சுட்டெடுக்கும் வித்தையைக் கற்றுவைத்திருந்தாள்.


சிற்பிகளை மீட்டெடுக்கக் கன்னியாஸ்திரிகள் மதர் சுப்பிரீயரின் கடிதத்துடன் காவல்நிலையங்களுக்குப் போவதுண்டு. ரெபேக்காள் போனால் காவல்நிலைய சுவர்கள் நடுங்கும்படி கூச்சலிடுவாளென்பதால் மதர் அவளைப் பெரும்பாலும் அனுப்புவதில்லை. கன்னிசிவந்துவிடும் ரெபேக்காளின் முகத்தை இரண்டொரு நாள் ஏறிட்டுப்பார்க்க யாரும் விரும்புவதில்லை. நகரக்காவலர்களைப் பலமுறை மதர் எச்சரித்திருந்தாலும் கேட்கும் திறனை இழந்த அவர்களுக்கு வேறுவேலைகளும் தெரிந்திருக்கவில்லை.

ரத்தகொதிப்பின் தொடக்கத்திலிருந்தாளென்றே பலரும் நினைத்திருந்தார்கள். ரெபேக்காளின் பேச்சு சாந்தமாயும் சிலவேளைகளில் குலைநடுங்கும் கூச்சலையும் கொண்டிருந்தன. பிரார்த்தனைகள் வழியே அன்பை தவறவிட்டிருந்தாள்.
நகரம் அவளைக் காதலுக்கும் மனநோய்க்கும் இடையில் கொண்டு சேர்த்துவிடும் சாதுர்யத்திலிருந்தது.

அவள் மனநோயாளியில்லையென்றாலும் நகரம் முழுவதும் காதலும் மனநோயும் பரவிக்கொண்டிருந்தது. நகரமெங்குமிருந்து காதலையும் மனநோயையும் ஒழிக்க மெற்றாணியருக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. இடைவிடாத கடிதங்களால் மெற்றாணியர் குழம்பிபோயிருந்தார்.

இரவு ரோந்துக்கு அனுப்பபட்ட பாதிரிகள் திரும்பி வந்திருக்கவில்லை. நகரத்தின் குழப்பத்தை மெற்றாணியர் புறங்கையால் ஒதுக்கிய தகவல் யாரையும் வந்தடைந்திருக்கவில்லை. நகரத்தின் விசித்திர குணங்களிலிருந்து யாரையும் மீட்டெடுக்க அவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.

மனநோய்களின் திரட்டப்பட்ட தகவல்களைச் சுமந்தபடி மெற்றாணியர் ரோமுக்கு போய் வந்துகொண்டிருந்தார். பல மாதங்கள் பிடிக்கும் அப்பயணத்தை மெற்றாணியர் விரும்பவே செய்தார். போப்பை சந்தித்ததின் அடையாளமாகப் போப்பின் திருமுகத்தை ஆலயங்களில் வாசிக்கச் சொல்லி ரகசிய உத்தரவுகளை உலவவிட்டிருந்தார்.

தூரதேசங்களிலிருந்தும் ஆட்கள் திரளாக வந்திருந்தார்கள். பல தேவாலயங்களுக்கும் மெற்றாணியரின் உருக்கமான மடல் போயிருந்தது. மடல் வாசிக்கப்பட்ட பின் ஆசிர்வாதத்திற்குக் காத்திருக்காமல் மக்கள் எழும்பிப்போய்கொண்டிருந்தார்கள்.

எல்லாக் கற்களும் ரெபேக்காளை நோக்கியே எறியப்பட்டன. யாருடைய குறியும் தவறியிருக்கவில்லையென்றாலும் கல்லெறிய அவர்கள் எந்தப் பயிற்சியும் பெற்றிருக்கவில்லை. திருச்சபை பயிற்சி கூடங்களில் அதற்கெனத் தனி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும் கலந்துகொள்ளும் விருப்பம் யாருக்கும் இருந்திருக்கவில்லை.

ரெபேக்காள் எந்தக் கூச்சலையும் வெளிப்படுத்தவில்லை. அதற்கான அவசியமும் அவளுக்கு நேர்ந்திருக்கவில்லை. எல்லாத் திசைகளிலிருந்தும் வீசப்பட்ட கற்களைத் தடுக்க எந்த ஆத்மாக்களும் முன்வந்திருக்கவில்லை. ஆத்மாக்கள் தலையிடுவதற்கான காலகட்டத்தை ரெபேக்காள் கடந்திருந்தாள்.

சவஅடக்கச் சடங்குகளில் தவறாமல் கலந்துகொண்டிருந்த அவளுக்கு ஆத்மாக்களோடு நல்ல பரிச்சயம் இருந்தது. ஆத்மாக்களின் திருநாளின் போது கல்லறைத்தோட்டத்தைச் சுத்தப்படுத்த யாரின் உதவியையும் ரெபேக்காள் எதிர்பார்ப்பதில்லை. ஆத்மாக்களின் திருநாளுக்கென அவள் தயாரித்து வரும் பாடல்களை நகரமக்கள் தினமும் பாடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். கிற்றாரை மீட்ட பாடற்குழுவில் அனேகர் இருந்தாலும் அவளது பாடலுக்கு ரெபேக்காளை தவிர வேறுயாரும் கிற்றாரை மீட்டுவதில்லை.
தேவாலய பாடற்குழுவோடு இணைந்து பாட அவள் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை. நற்கருணை பவனியின்போது எந்தப் பாடலையும் முணுமுணுக்காத அவளது அமைதியை கன்னியாஸ்திரி மடத்திலுள்ளவர்கள் மிகச்சரியாகப் புரிந்துகொண்டிருந்தார்கள். போன்சாய்களைப்போல வாழ நேர்ந்திருந்தாலும் போன்சாய்களின் செழிப்பை அவள் பெற்றிருக்கவில்லை.

கல்லெறிந்தவர்கள் எழுப்பிய கூச்சல் திருவிழாவின் உச்சத்தைக் கொண்டு இறக்கியிருந்தது. ரெபேக்காளின் தேகத்திலிருந்து பொட்டி சிதறிய ரத்த துளிகளை நிலம் விழுங்கிகொண்டிருந்தது.

நகரத்திற்கு வெளியே இருந்து வந்திருந்த மக்களைச் சுமந்த மாட்டுவண்டிகளின் அடியில் லாந்தர்விளக்குகள் எரிய தயாராயிருந்தன. அசைபோட்டுகொண்டிருந்த மாடுகளுக்குக் கல்லெறியும் விதிமுறைகள் தெரிந்திருக்கவில்லை. தூரதேசங்களிலிருந்து நகரத்தை அடைய இரண்டொரு நாட்கள் நடந்த களைப்பை மாடுகள் பழையாற்றின் கரையில் தொலைத்திருந்தன. திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்குப் பழையாற்றின் கரை தயாராயிருந்திருக்கவில்லை. சாக்ரீன் கலக்கிய தண்ணீரை அவசர பந்தலின் கீழே வைத்திருந்தார்கள். குடிப்பதற்குப் போதுமான சுவையைச் சாக்ரீன் கலக்கிய தண்ணீர் தந்திருக்கவில்லை.

கோடைகாலமென்பதால் வந்திருந்த கூட்டத்திற்குப் பானகம் வழங்க பலரும் முயன்றுகொண்டிருந்தார்கள். தூரபகுதிகளிலிருந்து வந்தவர்கள் காலையிலேயே பழையாற்றைக் கொண்டாட்டங்களுக்குத் தயார்படுத்தி விட்டிருந்தார்கள். பழையாற்றின் கரை திறந்த வெளியாக இருந்ததால் குழுமிய மக்கள் ஓய்வெடுக்கத் திணறிக்கொண்டிருந்தார்கள்.

மன்னாவைப் போல இறங்கிகொண்டிருந்த கற்களின் அடியில் ரெபேக்காளின் தேகம் கடைசித் துடிப்பில் இருந்தது. சவஅடக்கத்திற்கான ரெபேக்காளின் பாடலை குழந்தைகள் உரத்தகுரலில் பாடிக்கொண்டிருந்தன. எல்லாக் கற்களையும் தாங்கிகொண்டிருந்த அவளது பிரார்த்தனையைக் குழந்தைகள் விட்டெறிந்த கற்கள் தகர்த்துகொண்டிருந்தன.

மரங்களுக்கு வார்னிஷ் அடிக்கிற தகப்பனுக்குப் பதினாறாவது பெண்ணாகப் பிறக்க ரெபேக்காள் பொருத்தனைகள் பல செய்திருக்கவேண்டும்.

தனிமையின் குணாம்சங்களைக் கன்னியாஸ்திரி பட்டத்தோடு கிடைக்கப்பெற்றிருந்த ரெபேக்காளுக்கு மன்றாட்டுகளைத் தினமும் சுமந்துதிரிவது பிடித்திருந்தது. வெளிறிய வானத்தோடு பேச அவள் கற்று வைத்திருந்த சங்கேத பாஷைகள் போதுமானதாயிருந்திருக்கவில்லை. ஊதாரியைப்போல வார்த்தைகளைச் செலவழித்தாலும் வெளிறிய வானத்தோடு பேச அதிக நேரம் ஒதுக்குவாள்.

கான்வென்டின் கற்சுவர்களைத் தாண்டி விரிந்திருந்த உலகத்தில் போன்சாய்களைப் போல வாழ விருப்பமற்றிருந்தாள். மருத்துவச்சியின் வேஷத்தை விரும்பி அணிந்த தருணத்தை மறக்க சிற்பிகள் புதிய புதிய நகைசுவைகளை அவள் முன் விரித்துகொண்டிருந்தார்கள்.

பதினாறு பெண்களையும் தகப்பனால் சுமக்க இயலாமல் போனதின் வார்த்தைகளை வானத்து வசனங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை வழக்கத்திலிருந்து விரட்ட பெருமுயற்சி எடுத்துகொண்டிருந்தாள். தேவாலயத்தைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்த பறவைகளோடு அவள் ஒன்றிப்போயிருக்கவில்லை. ஞானஉபதேசங்களில் பறவைகளைப் பற்றி அதிகநேரம் பேசுவாளென்றாலும் எந்தப் பறவையையும் பிடித்திராத குணத்தை வந்தடைந்திருந்தாள்.

மருத்துவத்திற்குப் படித்திருந்தாலும் ஞாயிற்றுகிழமை வகுப்புகளைக் குற்றங்குறையில்லாமல் நடத்தி கொண்டிருந்தாள். சின்னக் குறிப்பிடத்தைப் படித்திராத பிள்ளைகளைத் தண்டிப்பதில்லையென்றாலும் பயமுறுத்தும் வார்த்தைகளைச் சடையோடு பின்னிவிடுவதில் ரெபேக்காள் பெயரெடுத்திருந்தாள். ரெபேக்காளுக்குப் பயந்து திருவிருந்தை கல்யாணபிராயம் வரை தள்ளிபோட்டவர்கள் நகரத்தில் இருந்தார்கள். பாவம் எதுவும் செய்வதில்லையென்றாலும் சனிக்கிழமைகளில் பாவசங்கீர்த்தனம் செய்வதை ரெபேக்காள் தவறவிட்டதில்லை.

அசூசையால் எந்த நோயாளியையும் அவள் தொடுவதில்லையென்றாலும் வைத்தியத்தை மிகசிறப்பாகச் செய்துகொண்டிருந்தாள். ஆங்கில மருத்துவத்தில் அவளடைந்திருந்த தேர்ச்சியைக் குறித்து மெற்றாணியருக்கே சந்தேகமிருந்தது. எல்லா நோயாளிகளும் விரைந்து குணமடைந்த தகவல் அவருக்கு எட்டியிருக்கவில்லை.

நகரத்தின் சந்துபொந்தெங்கும் ரெபேக்காளின் வருகைக்கு வீறிட்டு அலறிய குழந்தைகள் ஞாயிற்றுகிழமை உபதேசத்திற்கு வரத் தவறியதில்லை. குழந்தைகளோடும் சப்தங்களோடும் அவள் விலகியே இருந்தாள்.

நகரத்தின் பிரதான கடவுளாக அவள் மாறிக்கொண்டிருந்ததை மெற்றாணியரால் தடுக்க முடிந்திருக்கவில்லை. அவர் எல்லா விஷயங்களையும் வெறுமனே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தார். மாதத்திற்கு இரண்டு திருப்பலிகளில் மட்டுமே பங்குகொள்ளும் அவரால் நகரமக்களோடு நெருங்க முடிந்திருக்கவில்லை.

பதினாறு பெண்களைக் கன்னியாஸ்திரியாக்கின ரெபேக்காளின் தகப்பனை ஊர்மக்கள் மரியாதையாகவே நடத்தினார்கள். அவளது கன்னியாஸ்திரி பட்டத்து நாளில் ஊர்மக்களுக்கு இரவு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். வரிசையாக வெட்டப்பட்ட ஆடுகளின் தலைகள் அவர் வீட்டை அலங்கரிக்கத் தவறியிருந்தன. அசனத்திற்கு வெட்டப்பட்ட ஆடுகளைப்போல ரத்தத்தைப் புனிதப்படுத்த பாதிரியார் முயன்றது ரெபேக்காளின் தகப்பனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.


தன் மகளுக்காகச் செய்த கடைசிச் செலவு அதுதானென்றாலும் மற்றபெண்களுக்குக் கன்னியாஸ்திரி பட்டத்தின் போது எந்தச் செலவையும் அவர் செய்திருக்கவில்லை. தூரதேசங்களில் குடியேறியிருந்த எந்த மகளும் அவருக்குக் கடிதங்கள் அனுப்புவதில்லை. கன்னியாஸ்திரி மடங்களில் கடிதமெழுத பரிபூர்ண அனுமதி உண்டென்றாலும் ரெபேக்காளின் தகப்பன் கடிதங்களுக்கு வெளியே உலவிக்கொண்டிருந்தார்.


மரங்களை இழைத்து வார்னிஷ் தடவியபடியே தன் கண்ணீரை மறைத்துக்கொண்டுவிடும் வழக்கத்தை வைத்திருந்தார். எல்லா நற்கருணை விருந்திற்கும் அவரை முன்னால் அமரவைக்க ஊர்மக்கள் விருப்பங்கொண்டிருந்தார்கள். அதற்கான தகுதியை அவர் பெற்றிருந்தாலும் பாவமன்னிப்பை சரிவர நிறைவேற்றாத ஆளாகவே இருந்தார். நற்கருணை பவனியின் போது அவர் மீதும் தூப ஆராதனை காண்பிக்க ரகசிய உத்தரவு அமலில் இருந்தது. மெற்றாணியரின் அரண்மனைக்குச் செல்ல யாதொரு முன்னனுமதியும் அவருக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. அரண்மனை விருந்திற்கு அவருக்கு அழைப்புகள் வருமென்றாலும் கூச்சத்தால் எல்லாவற்றையும் தவிர்த்து வந்தார்.

ரெபேக்காளின் ஊரிலிருந்து நகரம் வெகுதொலைவில் இருந்தது. தன் வீட்டு முற்றத்து ரப்பர் மரங்களிலிருந்து ஒட்டுக்கறைகளை நெட்டா சந்தையில் விற்றுவிட்டு ரெபேக்காளின் தகப்பன் பேருந்து ஏறுவதைப் பார்ப்பவர்கள் மெற்றாணியரை காணப்போவதாகத்தான் நம்பினார்கள். மாதத்திற்கு ஒருமுறை கடைசி மகளைக் கான்வென்டின் வெளிவாசலில் நின்றபடி பார்த்துப்போகும் வழக்கத்தை வெகுகாலம் அவர் கைக்கொண்டிருந்தார்.


சுமந்துவந்த கூழான் சக்கையை ரெபேக்காளே வெளியே வீசியெறிந்ததை அவரால் லேசில் மறந்திருக்க முடியவில்லை. மறப்பதற்கான பெருமுயற்சியில் ஆறுகாணி வாற்றுச்சாராயம் அவர் வீட்டை அண்டியிருந்ததை மக்கள் நம்பியிருக்கவில்லை. சக்கையோடு சிற்பிகளின் குடிசையில் இரண்டொரு நாள் தங்கிவிட்டே வீடு திரும்பினார். அவரிடம் எந்தப் பிடிவாத குணமும் மிச்சமிருந்திருக்கவில்லை.

கூழான் சக்கையோடு நகரத்துப்பக்கம் வருவதை அடியோடு நிறுத்தியிருந்தார். மொட்டைபனைகளையெல்லாம் விற்றுவிட்டாரென்றாலும் அக்கானிக்காக விட்டுவைத்திருந்த இரண்டொரு பனைகளும் ரெபேக்காளை காணவிரும்பின. ஆயினி மரத்தின் மூட்டில் கட்டப்பட்டிருந்த மனைவியின் கல்லறையில் உதிர்க்க வார்த்தைகளற்று அடிக்கடி நின்றுகொண்டிருந்ததை ஊர்மக்கள் கவனித்திருக்கவில்லை.

கன்னியாஸ்திரிகள் சிற்பிகளுடன் காதல் கொண்டிருந்த செய்தி நகரத்தை வந்தடைந்திருந்த போது கவிந்துகொண்டிருந்த இருள் திகைத்திருந்தது. மங்காத ஒளியை நகரவாசிகள் நம்ப இயலாமல் பார்த்துகொண்டிருந்தார்கள். எந்தச் சலசலப்பையும் ஏற்படுத்தியிராத அச்செய்தி நகரத்தின் இயக்கத்தைக் குலைத்திருந்தது. வீடுகளெங்கும் வண்ண மெழுகுத்திரிகளைக் கொளுத்தி வைத்து புதிய பிரார்த்தனைகள் துவங்கியிருந்தன.

ஆற்றங்கரையோரம் கூடியிருந்த மக்கள் புதிய புதிய பாஷைகளால் திருவிழாத்தனத்திற்கு வெறியூட்டியிருந்தார்கள். வெறுப்பின் கற்கள் சகல இடங்களிலிருந்தும் உதிரத்துவங்கின. களைப்பற்ற அவர்கள் ரெபேக்காளின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.


கன்னியாஸ்திரி மடத்தில் நடந்த நீண்ட பிரார்த்தனையில் ரெபேக்காள் கலந்துகொண்டிருக்கவில்லை. விடியற்காலம் துவங்கிய பிரார்த்தனை நேரங்காலமற்று நீண்டு கொண்டிருந்தது. மதர் நெக்குருக பிரார்த்தனை வார்த்தைகளை உதிர்த்துகொண்டிருந்தாள். ரெபேக்காள் பிரார்த்தனை தீரும்வரை உணவுமேஜையைவிட்டு அகன்றிருக்கவில்லை.

சக கன்னியாஸ்திரிகளால் எந்த நம்பிக்கையையும் ரெபேக்காளுக்குத் தந்திருக்க முடியவில்லை. நம்பிக்கைகள் அர்த்தமிழந்துவிட்டிருந்த தருணத்தை மதர் உணர்ந்திருந்தார். ரெபேக்காளின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு பிரார்த்தனையை முடித்துவைத்தார். உணவுமேஜையின் வலப்பக்கமாக அமர்ந்தபடி கண்ணீரை மறைக்க மதர் எடுத்த முயற்சிகள் பலித்திருக்கவில்லை. அவர்கள் இருந்த துக்கத்திலும் உணவின் சுவை மாறியிருக்கவில்லை. நேரங்கெட்ட நேரத்தில் பரிமாறப்பட்ட உணவை ரெபேக்காள் மறுத்திருக்கவில்லை.

வற்றிப்போன கன்னங்களுடன் ரெபேக்காள் தேவதையின் சாயலை அடைந்துகொண்டிருந்தாள். தளர்வுற்ற நடையில் எல்லாவற்றிற்கும் தயாராயிருப்பதை வெளிப்படுத்தினாள். தளர்வுற்ற ரெபேக்காளின் நடையை அன்றுதான் மக்களால் காணமுடிந்தது. கூட்டத்தின் முன் உருகிக்கொண்டிருந்த அவளது உருவம் முணுமுணுப்புகளை அலட்சியப்படுத்தியிருந்தது. சம்மனசுகளின் கடைசிப் பிரார்த்தனையை அவள் மனனம் செய்ய மறந்திருந்தாள். மிரட்சியற்ற அவளது விழிகளிலிருந்து கண்ணீருக்கான அவசியத்தைக் கூட்டத்தில் யாரும் யாசித்திருக்கவில்லை.


அவளது தனிமையைக் கொன்றுவிட்டிருந்த சிற்பிகளின் குடிசைகள் தீபிடித்து எரிந்துகொண்டிருப்பதைக் கடைசிக் காட்சிப்போலப் பார்த்துகொண்டிருந்தாள். அதை மட்டுமே அவளால் செய்ய முடிந்ததென்றாலும் ஒரு பெருமூச்சைகூடச் சிற்பிகளுக்காகச் செலவழித்திருக்க முடியவில்லை. கன்னியாஸ்திரி உடை பொருத்தமற்றுப் போயிருந்தாலும் ரெபேக்காளை அவ்வுடை கச்சிதமாகத் தழுவியிருந்தது. நம்பிக்கையூட்டிக்கொள்ள யாருடைய பெயரும் அவளது ஞாபகங்களுக்குக் கிட்டியிருக்கவில்லை. எரிந்துகொண்டிருந்த குடிசைகளிலிருந்து கருகும் உடல்களின் வாசம் காற்றிலிருந்தது. பழையாற்றின் கரை முழுவதும் நிரம்பியிருந்த மக்கள் அவ்வாசனையை நுகர்ந்திருக்கவில்லை.


தேவாலயத்தின் மணியை ஒலிக்க அனுப்பப்பட்டிருந்த உபதேசியார் கடைசிப் பிரார்த்தனையில் இருந்தார். ஆலயத்தின் மணியை அடிக்க உபதேசியாருக்கு மட்டுமே அனுமதியிருந்தது. தேவாலய கோபுரத்தின் மத்தியில் நுணுக்கமான வேலைபாடுகளுடன் இருந்த மணியைச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியர்கள் கடல்மார்க்கமாகக் கொண்டுவந்திருந்தார்கள். தேவாலய கோபுரம் மணின் உருவத்திற்கு ஏற்றபடி நிர்மாணிக்கப்பட்டிராததால் கோபுரத்தின் மத்தியில் மணி பொருத்தமற்றுத் தொங்கிகொண்டிருந்தது. நகரம் முழுவதும் உயிர்ப்பிக்கும் ஓசையை அம்மணி கொண்டிருந்ததைப் போர்த்துகீசியர்கள்கூட அறிந்திருக்கவில்லை. ஞாயிற்றுகிழமை திருப்பலிகளிலும் ஆபத்து காலங்களிலும் மணியை ஒலிக்கத் திருச்சபை அனுமதித்திருந்தது.

முழங்காலிட்டு நீண்ட பிரார்த்தனையைத் துவக்கியிருந்த அவரது உடல் லேசான நடுக்கத்திலிருந்தது. உலகத்தின் கடைசிப் பிரார்த்தனையில் உபதேசியாரின் பங்களிப்பை குறித்து நகரத்து மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. வாழ்வில் ஒரே ஒரு உடையைச் சொந்தமாக வைத்திருந்த உபதேசியாரை யாரும் சீந்துவதில்லையென்றாலும் எல்லோரையும் நேசிக்கக் கற்று வைத்திருந்தார். வாழ்வில் எந்த முணுமுணுப்பும் கொண்டிராத அவரைக் கடவுள்கூட அறிந்து வைத்திருக்கவில்லை.

பீடம் அலங்கரிக்கப் பறித்து வரப்பட்ட மலர்களின் மீது நகரத்துப் பாதிரிகள் உறங்கிக்கொண்டிருந்ததை உபதேசியார் கவனிக்கத் தவறியிருந்தார். நகரத்தில் நடந்த கால்பந்தாட்டத்தில் பெற்றிருந்த உடல்வலியால் பாதிரிகள் தொடர்ந்து தூங்கிகொண்டிருந்தார்கள். தூங்குவதற்குப் பொருத்தமான இடம் அதுவல்லவென்றாலும் களைப்பு பாதிரிகளை உருகுலைத்திருந்தது.

கன்னியாஸ்திரிகள் சிற்பிகளைக் காதலிக்கும் தகவல் கடவுளை அடையுமுன்னம் கற்களால் எறிந்துகொல்ல மெற்றாணியர் அனுமதித்திருந்தார். அவ்வுத்தரவில் கையெழுத்திடும் முன்பு கலக்கத்தை விரட்ட இரண்டு முறை சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். வாட்டிகனுக்கு அதைத் தெரியப்படுத்த நேரமில்லாதிருந்தது.

எல்லாத் தகவல்களும் வாட்டிகனை சென்றடைய அதிகக் காலமெடுத்தது. கப்பற்பயணங்களில் மட்டுமே அடையமுடியும் வாட்டிகனை மெற்றாணியரை தவிர வேறுயாரும் தரிசித்ததில்லை. ரெபேக்காளின் தகப்பனுக்கு எழுத நினைத்த கடிதத்தை நடுக்கத்துடன் பலமுறை முயற்சித்துக்கொண்டிருந்தார்.

போன்சாய்கள் கர்ப்பந்தரிப்பதில்லையென்றாலும் ரெபேக்காள் கர்ப்பமாயிருந்தாளென்ற வறட்டு இருமல் உலா வந்தது. யாரையும் அவள் காதலித்திருக்கவில்லையென்றாலும் காதலிப்பதற்கான குறைந்தபட்ச அறிவை பெறக்கூட ரெபேக்காளுக்கு நேரம் வாய்த்திருக்கவில்லை.

தேவாலயத்தின் முன்புற மணல்வெளியில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அடித்த பந்து கொடி ஏற்றியிராத கம்பத்தில் மோதி ஆலயத்தின் மணியில் விழுந்தது. இரக்கமற்ற கற்கள் ரெபேக்காளை நோக்கி பறக்க துவங்கின.

-------

அவளுடலை தீண்ட வந்திராத மீன்கள்(சிறுகதை) —-குருசு.சாக்ரடீஸ்

http://eathuvarai.net/?p=1580


நிர்வாணமான பெண்ணின் உடலை கடலில் வீச அவர்களுக்குப் பயிற்சியொன்றும் இருந்திருக்கவில்லை. அவர்கள் பதினேழு பேர் இருந்தார்கள். மீன்பிடிடெக்கில் நின்றுகொண்டிருந்தவர்களைக் கண்டு மிரண்ட வெயில் மட்கத்துவங்கியது. தளதளத்த கடலின் மேனியை கிழித்தபடி நகர்ந்துகொண்டிருந்த தைவானி மீன்பிடிக்கப்பல் ஒரு சாயங்காலத்தை விரட்ட எந்த உபகரணங்களையும் கொண்டிருக்கவில்லை.

அவளுடல் கனத்திருக்கவில்லை. பிடிவாத உயிர் மிச்சமிருந்தது. கடல்நீரின் மகோன்னதக் குணங்கள் அவளது நீண்டகூந்தலை தொடர்ந்து சிதைத்திருந்தன. கூந்தலால் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்த கைகள் தோள்பட்டையிலிருந்து கழன்றுவிடும் சாத்தியம் தெரிந்தது. அவளுடம்பில் வழவழப்பு மறைந்துவிட்டிருந்தது. பரணில் வீசப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பொம்மையின் தோற்றத்தை மிச்சம் வைத்திருந்தாள்.

பதினேழுபேரும் நெடுங்காலக் கடற்கொள்ளையர்களின் தோற்றத்தை அடைந்திருந்தாலும் வேட்டையின் கண்ணியில் தொங்கிகொண்டிருக்கும் மீன்வேட்டையர்களைப் போலக் குணத்தை மிச்சம் வைத்திருந்தார்கள். பலநாட்டு முகச்சாயல் கொண்ட அவர்களைக் கடலின் முரட்டுமொழி அதிர்ஷ்டத்தின் கண்ணிகளால் பிணைத்திருந்தது. தெற்கத்திய முகமே அதிகமும் தென்பட்டன. அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி கப்பல்கூடத் தைவான் மீனவர்கள் மூழ்கடிக்கக் கொண்டுவந்த நவீனரக டிராலர்தான். நிரந்தரப் படகுகளை அவர்கள் சுமக்கும் வழக்கமில்லை. ஆறுமாத வேட்டை காலத்தில் கிடைத்த படகுகளைப் பயன்படுத்திக்கொள்வதையே விரும்பினார்கள். நிரந்தரப் படகுகளும் நிரந்தர வாழிடங்களும் அவர்களது கனவுகளில் கூட எட்டிப்பார்ப்பதில்லை.

தைவான் மீன்பிடிகப்பலை கைப்பற்றிக் கொள்ளச் சிறிய யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. யுத்தகணத்தில் கொள்ளையர்களில் நான்குபேர் கடலின் அடியில் தமக்கான சமாதியை தேடிப்போனார்கள். கணிக்கஇயலா யுத்தகணத்தில் பொருதிகொண்ட அவர்களை அதிர்ஷ்டமும் துரதிர்ஷடமும் கைவிட்டிருந்தது.


தைவான் மீனவர்களை வதைத்துகொல்லும் திட்டத்தைச் சீட்டுக்குலுக்கி அவர்கள் தேர்வு செய்தார்கள். எதையும் சீட்டுகுலுக்கி தேர்ந்தெடுப்பது அவர்களது வழக்கமென்றாலும் கைப்பற்றிய மீன்பிடிக்கப்பலில் அதற்கான பொருட்கள் இருந்திருக்கவில்லை. அவர்களால் கைவிடப்பட்ட பைபர் படகுகளில் அதற்கான வசதியிருந்தது. தைவான் மீன்பிடிக்கப்பல் யார்டிலிருந்து கிளம்பிய மேனிக்கே இருந்தது. வலைகளை வீச பயன்படுத்தும் ரோப்புகள் டிரம்மிலிருந்து முன்னோர்களால் உருவப்பட்டிருந்தன. மீன்பிடிவலைகளின் துண்டைகூட விட்டுவைத்திராத தைவானியமுன்னோர்களைக் கொள்ளையர்களால் வழிபடமுடியவில்லை. இன்சூரன்ஸிற்காக மூழ்கடிக்கக் கொண்டுவந்திருந்தாலும். மீன்பிடிக்கப்பலின் வெளிப்புற தோற்றத்தை தைவானிகள் சிதைத்திருக்கவில்லை.

அவர்கள் கொண்டுவந்த நான்கு பைபர் படகுகளும் திசை மாறியிருந்தன. பலதிசை நீரோட்டங்களும் முட்டிகொள்ளும் தாமிரா கிரவுண்டில் நீரோட்டத்தில் படகுகள் இழுபடுவது கவலைகொள்ளும் விஷயமல்ல. வேகமான நீரோட்டமென்றாலும் மேற்புறத்தில் அதைக் காண்பித்திருக்கவில்லை. ஆழ்கடலுக்குப் பொருத்தமான படகுகள் இல்லையென்றாலும் பெரும்பாலான தாக்குதலுக்கு அதைப் பயன்படுத்தியிருந்தார்கள். விரிக்கப்பட்ட வலைகளை அறுத்துக்கொண்டு நுழைய பெரும்பயிற்சியுள்ள படகுகள். மீன்பிடி காலங்களில் கொள்ளையிட பைபர் படகுகளே சௌகரியமானவை. திசைக்கொன்றாக வந்து தாக்கவும் தப்பிக்கவும் பயன்படுத்தியதை விட்டுபோகும் மனசை அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அதிலொன்றை கைப்பற்ற கடலில் குதித்த கொள்ளையன் சிறிது நேரத்திலேயே மீன்களிடம் கால் ஒன்றை பறிகொடுத்தான். அலறுவதற்கான சந்தர்ப்பத்தை அம்மீன்கள் அவனுக்கு வழங்கியிருக்கவில்லை.

அம்மீன்கள் எவ்வகையைச் சார்ந்ததென்று அறிந்துகொள்ள அவர்கள் பெருமுயற்சி எடுக்கவேண்டியிருந்தது. தாமிரா கிரவுண்டில் பயங்கரக் குணமுள்ள மீன்கள் கிடையாது. வங்காளவிரிகுடாவின் எப்பிரதேசங்களிலும் அம்மீன்கள் அவர்களது கண்களுக்குத் தென்பட்டிருக்கவில்லை. இனப்பெருக்கத்திற்காக இடம்பெயரும் வகையினமல்ல. பெருந்துக்கத்தில் கூட வாழிடங்களைக் கெட்டியாகப் பிடித்தலையும் கோளா வகையைப்போலத் தோன்றின.

அன்றைய உணவிற்காக அவனைக் குதறிக்கொண்டிருந்த மீன்கள் மேற்புறத்தில் தலைக்காட்டாமல் தங்கள் காரியங்களை நடத்தி கொண்டிருந்தன.

அவனை மீட்பதற்கான முயற்சிகளைக் கொள்ளைகுழு எடுத்திருக்கவில்லை. மரணத்திலிருந்து மீட்பதற்கான மருத்துவமுறைகளையொன்றும் அவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. சில கடலோடி மருத்துவங்களில் அவர்களுக்கு முறையான பயிற்சியொன்றுமில்லை. சிலவகைக் கடற்பாசிகள் சதைமுறிவுகளைக் குணமாக்குமென்றாலும் துரிதபயன்பாட்டிற்குப் போதுமானவையல்ல. கொப்பளிக்கும் ரத்தத்தைக் கடவுளாலும் நிறுத்தமுடியாதென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

மரண அலறல்களைக் கேட்டுப் பழகியிருந்தார்கள். வழக்கத்திலில்லாத விஷயங்களைக் கடல் பரப்பில் அவர்கள் முயற்சிப்பதில்லை. வேட்டைக்குக் கிளம்பிய சொற்ப நாட்களில் ஐந்துபேரை இழந்திருந்தார்கள். அதிர்ஷ்டம் பின்வாங்கியிருந்தது.

தாமிரா கிரவுண்டில் பெரும்பாலும் இரால்வகைகளே இனப்பெருக்கத்திலிருந்தன. அவைகளுக்குக் கொடூர குணமொன்றுமில்லை. உண்ணத் தோதான அவைகளை மனிதர்களும் சில மீன்வகைகளுமே விரும்பின.

கடலில் இனப்பெருக்கத்திற்கான கிரவுண்டுகள் பல இருந்தனவென்றாலும் மீன்பிடிக்கப்பல்களுக்கு வசதியான இடம் தாமிராகிரவுண்டுதான். கடலின் அடியாழம் வரை வலைகளை விரித்து இழுத்துகொண்டு நகரும் இழுவைகப்பல்களே அக்கிரவுண்டில் மேய்வது வழக்கம். அதிஆழமுள்ள அவ்வெளியில் பல விசித்தரங்களும் இன்சூரன்சிற்காக மூழ்கடிக்கப்பட்ட மீன்பிடிக்கப்பல்களும் இருந்தன.

மூழ்கடிக்கப்பட்ட பொக்கிஷகப்பல்களைக் குறித்த ஆர்வங்கள் அப்பிரதேசத்தின் மீது இருந்திருக்கவில்லை. தாமிரா கிரவுண்டு கடலில் தான் இருந்ததென்றாலும் அது நடைமுறை வாழ்கைக்கு வெளியே இருப்பதாகப் பல கற்பனைகள் உலாவந்தன. மீன்வேட்டை வரைபடங்களில் ஆபத்தற்ற வெளியாகவே குறிக்கப்பட்டிருந்தாலும் வேட்டைக்காலங்களில் திமிறிக்கொண்டிருக்கும் அதன் சுவாபத்தை வரைபடங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கவில்லை.

அப்பெண்ணின் உடலை தாமிராகிரவுண்டில் எறிவதற்கு முன்னால் அவளது கைகளைப் பின்புமாகப் பிணைத்து நீண்ட கூந்தலால் கட்டினார்கள். நீண்ட கூந்தலுள்ள பழங்காலவகையைச் சார்ந்தவளென்றாலும் நவநாகரீக வழக்கங்களின் அடையாளங்களும் அவளுடம்பில் காணக்கிடைத்தன. விசேஷ எண்ணைவகைகளையே கூந்தலுக்குப் பயன்படுத்தியிருந்தாள். துருப்பிடித்த கட்டுகம்பியின் உருவத்தைக் கூந்தல் அடைந்திருந்தது. நீண்ட கூந்தல் வகையினத்தின் கடைசிபெண்ணாக இருந்தாள்.

அந்தரத்தில் வீசி எறியப்பட்ட உடல் கொஞ்சநேரம் காற்றில் மிதந்தது. கப்பலின் மீன்பிடி டெக்கில் நின்ற பதினேழு பேரும் அவ்வுடல் காற்றில் மிதப்பதை சிலகணங்களேனும் ரசித்திருக்கவேண்டும். ஒரு பறவையின் கதியை அடைந்துவிடும் சாத்தியங்கள் அவ்வுடலுக்கு இருந்திருக்கவில்லை. நிலைதடுமாறி கப்பலின் பக்கப்பலகையில் மோதிவிடும் சாத்தியங்களே தென்பட்டன.

நிர்வாண உடல் ஒரு கர்ணத்துக்குத் தயாரானதுபோல் ஆட்டம் கொடுத்தது. அவளுடலில் மிச்சமிருந்த உயிரைப்போலத் தளர்ந்து தண்ணீர் பரப்பை நோக்கி வேகமாக இறங்கியது. எலும்புகள் நொறுங்கிவிடும் வேகத்தை உடல் அடைந்திருந்தது.

அவளுடலின் பாரத்தில் தண்ணீர் வெடித்து வர்ணங்களைத் தூவியது.

அவள் உயிரை மிச்சம்வைத்திருந்தது அவர்களுக்கு வருத்ததைத் தந்திருந்தது. நெடுநேரம் நீடித்திராத வருத்தம் உப்புகாற்றில் கரையத்துவங்கியிருக்கவேண்டும். அவளது உடலை துண்டு துண்டாக வெட்டியெறியவே விரும்பினார்கள். சீட்டுகுலுக்கியதில் அதிர்ஷ்டம் அவள் பக்கமாகத் திரும்பிவிட்டது. அதிர்ஷ்டத்தின் எல்லாப் பக்கங்களையும் அவர்கள் ஆதரிப்பவர்களென்பதால் அவளுடலை சேதப்படுத்தியிருக்கவில்லை.

கணக்கற்ற நாட்களாக அவளுடலின் அங்கங்களைச் சுவைத்திருந்தாலும் அவள் ருசியை அவர்கள் கண்டடைந்திருக்கவில்லை. அவளது முலைகளில் கடலின் மூர்க்கத்துடன் பதிக்கப்பட்டிருந்த பற்களின் வடுக்கள் எண்ணிக்கையைத் தாண்டிருந்தன. அவளது முனகலுக்கு எற்ப கிழிந்திருந்த உதடுகளில் எந்த யாசிப்பும் இருந்திருக்கவில்லை.

அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் நிரம்பிய கடலில் கொள்ளையர்கள் அவளைக் கைவிட்டிருந்தார்கள்.

தொடர் மயக்கத்திலேயே அவளுடல் இருந்துவந்தது. நேரங்காலமற்று ஒரு பெண்ணைப் புணர்வதாகவே அவர்கள் நினைத்திருக்கவேண்டும். ரத்தம் ஒழுகிகொண்டிருந்த யோனியில் கடலின் இரைச்சலை அவர்கள் கேட்டிருக்கவில்லை. மீன்பிடி டெக்கில் உணர்வற்று வெளியேறிய மூத்திரத்தை கழுவிவிட அவர்களுக்கு எந்த வெட்கமும் இருந்திருக்கவில்லை.



அவர்களது கைக்குக் கிடைப்பதற்குமுன் அழகானவளென்று பெயரெடுத்திருந்தாள். கணிக்க இயலாத இளவயது பெண்ணான அவளுடம்பில் தத்தமது அடையாளங்களைப் பதிக்கப் போட்டியிட்டார்கள். அடையாளங்கள் அரூப ஓவியத்தின் அழகையிழந்து குரோதத்தின் வடிவை அடைந்திருந்தன. தறிகெட்ட பாய்ச்சலுக்கு எதிர்ப்பொன்றையும் அவ்வுடல் காண்பிக்கவில்லை.

ஹ_க்கிளி ஆற்றின் பொழிமுகத்திலிருந்து அவர்கள் வெளியேறிகொண்டிருந்தபோது சாகர் தீவின் தெற்கில் நடந்த சண்டையில் சிறிய சொகுசு படகிலிருந்து அவளைக் கைப்பற்றியிருந்தார்கள். அவளைச் சோனகஞ்சில் விற்பதற்காகச் சில வியாபாரிகள் அழைத்துபோய்கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்திலிருந்த அவளும் சிலஉயர்ரக மதுவகைகளும் டின்களில் பதப்படுத்திய உணவுகளும் கொள்ளையில் கிடைத்தன. குடிநீரை சேகரிக்க ஹ_க்கிளி பொழிமுகத்துக்குப் போய்விட்டு திரும்பும்பொழுது அதுபோன்ற பெரியவேட்டையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சொகுசுப்படகிலிருந்தவர்கள் எதிர்பொன்றும் காண்பித்திருக்கவில்லையென்றாலும் அதிர்ஷ்டம் வியாபாரிகள் பக்கமிருந்திருக்கவில்லை. கொல்வதற்கு முன் அவளைப்பற்றிய விவரங்களை அவர்கள் சேகரித்திருக்கவில்லை. வியாபாரிகள் மரணபயத்தில் வார்த்தைகளை மறந்திருந்தார்கள். பேசுவதற்கான அவகாசமும் கிட்டவில்லை. சொற்ப நிமிடங்களில் யுத்தம் முடிவிற்கு வந்திருந்தது.

கொள்ளையர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மழுங்கிப்போயிருந்தன. குண்டுகள் தீர்ந்த நாட்டுத்துப்பாகிகளே கைவசமிருந்தன. வியாபாரியின் தலையைத் துண்டிக்க இருபத்தி எட்டுமுறை மழுங்கிய வாளால் கொள்ளையர்களில் ஒருவன் கொத்திக்கொண்டிருந்தான். போதிய பயிற்சி அவனுக்கு இருந்தபோதிலும் பெரிய மீன்களை வெட்டிவிட்டு அதைச் சாணைபிடிக்க மறந்திருந்தான். சாணைபிடிக்கும் வசதிகளொன்றும் தைவான் மீன்பிடிக்கப்பலில் இல்லாதிருந்தது. கிச்சனிலிருந்த பல ரகக் கத்திகளும் மழுங்கிப்போயிருந்தன.

பலமாதங்களுக்குப் போதுமான டீசல் டாங்குகளில் இருந்தது. மீன்பிடிக்கப்பலின் டீசல் தீரும்வரை பயன்படுத்திவிட்டு இறங்கப்போகும் கரையோரங்களில் எலும்புகூடாகக் கைவிடுவதையே வழக்கத்தில் வைத்திருந்தார்கள். வேட்டைகுணம் நிரம்பிய அவர்கள் உறங்குவது குறைவென்றாலும் படுக்கைவசதி கொண்ட தைவான் மீன்பிடிக்கப்பலை விரும்பவே செய்தார்கள். இன்சூரன்சிற்காக மூழ்கடிக்ககொண்டு வந்திருந்தாலும் பழக்கவழக்கங்களை மாற்றிவிடும் வசதிகளை யாரும் குலைத்திருக்கவில்லை. பழங்காலத் தோற்றத்திலிருந்தாலும் உறுதியான மீன்பிடிக்கப்பலது. தைவானிய செய்நேர்த்தியை கொள்ளையர்களிலொருவன் தொடர்ந்து முணுமுணுத்து அலைந்தான்.

பாரத்தீபின் சந்துபொந்துகளில் தற்காலிக குடும்பங்கள் வாடகைக்குக் கிடைத்துவந்தன. பழந்துணிகளைப்போலச் சுருண்டுகொள்ள இடப்பரப்புள்ள கச்சிதமான வீடுகள். பிக்கலும் பிடுங்கலும் அனவாசிய வார்த்தைகளும் நிரம்பிய பெண்கள் புழங்க தோதான வரவேற்பை வைத்திருந்தார்கள். வேட்டை முடிந்து திரும்புகிறவனைக் குளிர்விக்கப் போதுமான வெப்பத்தை அப்பெண்கள் கைவசம் வைத்திருந்திருக்கவேண்டும். கொள்ளையிட்ட பொருட்களை வாங்கவரும் ஏஜென்றுகள் அப்பெண்களோடு தொடர் நட்பிலிருந்த பரசியத்தை யாரும் கண்டுகொள்வதில்லை.

அவள் கைப்பற்றபட்டபோது போதுமான உடைகளை அணிந்திருந்தாள். கல்லூரி மாணவிக்குரிய தோற்றம் தந்திராத அவ்வுடைகளின் நிறம் கொள்ளையர்களுக்கு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பளப்பளப்பான கிராமச்சாயல் கொண்ட பட்டுப்பாவடையை அணிந்திருந்தாள். மேற்புற சட்டையைப் பொதிந்த கோட் அவளை அழகானவளாய்க் காண்பித்தது. பாவாடையினுள் நீண்ட தொடைகளைக் கௌவிக்கொண்டிருந்த கால்சாராயை அவர்கள் அதற்குமுன் கண்டதில்லை. மயக்கத்திலிருந்தாலும் சூடான மூச்சுக்காற்றைப் படரவிட்டாள்.

நடன அரங்கிலிருந்து தூக்கி வரப்பட்டிருக்க வேண்டும். தூக்கி வந்தவர்கள் எந்த நகையையும் அவளிடம் விட்டுவைத்திருக்கவில்லை. அவளது காதுகளிலிருந்த பிளாஸ்டிக் அணிகலனை கொள்ளையர்களிலொருவன் கழற்றிப் பத்தரப்படுத்தினான். தெற்கத்திய நாட்டைச் சேர்ந்த அவனுக்கு அவளைப்போன்ற காதலி இருந்தாள். வடக்கிலிருந்து ஒன்பது டிகிரி முப்பத்தெட்டு மினிட் நாற்பது செகன்றுகளைப் பாகைமானியில் திசைவைத்தால் அவனால் காரங்காட்டையும் காதலியையும் அடைந்துவிட முடியும். தென்பகுதிக்குப் போய்ப் பலவருடங்கள் ஆகிவிட்டது. காதலிகுறித்த எண்ணங்கள் தொலைந்திருக்கவில்லை.

கடலோடிகளாய் இருந்தபோதும் கொள்ளையர்களின் தோற்றத்தை அவர்களால் மறைக்க இயலவில்லை. பெரும்பாலும் மீன்பிடிப்படகுகளையே பயன்படுத்திகொண்டிருந்ததால் கடற்படையின் ரடார்களில் அதிகப்பிரசங்கித்தனமான மீன்பிடிக்கப்பல்களைபோல உலவமுடிந்தது. பொதுவே கடல்ப்பரப்பில் கெடுபிடிகளுக்குப் பஞ்சமொன்றுமில்லை.

கொள்ளையடிக்கும் படகுகளின் இன்ஜின்களையும் மீன்பிடி வலைகளையும் வாங்கிகொள்ள விசாகப்பட்டணத்தில் ஏஜென்றுகள் இருந்தார்கள். சொற்ப விலைக்கே பொருட்கள் கைமாறினவென்றாலும் தொழிலில் நாணயமிருந்தது. வேட்டையொழிந்த காலங்களில் ஏஜென்றுகள் தாராள குணங்களைத் திறப்பதுண்டு.

சர்வதேச எல்லை கடந்துவரும் மீன்பிடிக்கப்பல்களைத் தாக்குவதே எளிதாக இருந்தது. எதிர்பற்ற அவர்களைத் தாக்குவதில் எந்தச் சுவாரஸ்யமும் இருப்பதில்லையென்றாலும் பறிகொடுத்த உடமைகளைக் குறித்த முணுமுணுப்பொன்றும் அதிகமாக எழுவதில்லை. வலைவிரித்துத் திணறிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே அவர்கள் தாக்குவது வழக்கம். தைவான் மீனபிடிகப்பலை தாக்க அவர்கள் எந்தவொரு முன்னேற்பாடுகளும் செய்திருக்கவில்லை. நான்குபுறமும் பைபர் படகில் வந்து சூழ்ந்துகொள்ளும்வரை மரணவாதைகள் மீன்பிடிக்கப்பலில் உறங்கிகொண்டிருந்திருக்கவேண்டும். எதிர்பாரா தாக்குதலுக்கு நான்கு பேரை பிணமாக்கிவிட்டுதான் தைவானிகள் அடங்கினார்கள்.

கைவசத்தில் கிட்டும் பொருட்களைப் பங்குபிரிக்கப் பெரும்பாலும் சண்டையிட்டுகொள்வதில்லை. அவளுடைய உள்ளாடைகளைச் சீட்டுக்குலுக்கியே பகிர்ந்துகொண்டார்கள். சீட்டுக்குலுக்கும் சடங்கிற்குப் பிரதான பொருட்களொன்றும் தேவையில்லை. துரதிர்ஷ்டத்தின் கண்ணிகளிலிருந்து விடபடவே தொடர்ந்து சீட்டுகளைக் குலுக்கிகொண்டிருந்தார்கள். எல்லாகட்டத்திலும் அதிர்ஷ்டம் நிரம்பிய ஒருவன் கூட்டத்தில் இருந்துகொண்டிருந்தான்.

சொகுசுப்படகிலிருந்த வியாபாரிகளைப் பரலோகராஜ்யங்களுக்கு அனுப்பிவிட்டுப் படகை பாகம்பாகமாகப் பிரித்து மீன்பிடிகப்பலில் ஏற்ற அதிக நேரமொன்றும் எடுத்திருக்கவில்லை. கிடைத்த மதுவகைகளும் போதுமான சுவையுடன் இருக்கவில்லை. சுட்ட மீன்கள் சுண்டகாய்ச்சிய சாராயத்தின் ருசியை அதிகப்படுத்திவிடுவதை அவர்களால் கற்பனை செய்யமட்டுமே முடிந்தது.

அவள் நிர்வாணமாக்கப்பட்டபோது எழுந்த கூச்சலை அவர்களாலேயே சகித்திருக்க முடியவில்லை. அவளைக் கடத்திவந்த சொகுசுபடகிலிருந்த மூவரும் போதுமான போதையை ஏற்றியிருந்தார்கள். அளவுகடந்த போதையால் அவள் தொடர் உறக்கத்திலிருந்தாள். உடலின் வேதனையில் அவள் முனகினாளவென்பதை யாரும் கவனித்திருக்கவில்லை. போதையில் எதுவும் அறிந்திருக்கமாட்டாளென்ற நம்பிக்கையிருந்தது. அவளைக் குளிப்பாட்டும் போது விழிப்பாளென்ற நம்பிக்கையைப் பலமுறை பொய்ப்பித்திருந்தாள். பதப்படுத்தப்பட்ட மீனின் கதியை அவள் அடைந்திருக்கவேண்டும்.

காலமற்ற வேட்டையை அம்மீன்கள் கொண்டலைந்தன. ஒரு காலின் பெரும்பகுதி சதைகளைத் தின்றுவிட்டிருந்தன. மீன்கள் ஆவேசத்தையொன்றும் காண்பித்திருக்கவில்லை. ருசித்து உண்ணவும் கூட்டத்திற்கு வழிவிடவும் மீன்கள் பயிற்சி பெற்றிருந்தன. மிகச்சோம்பேறியான மீன்கள் குழந்தை தவழுவதுபோல நரங்கி நீந்தின.

பைபர் படகுகளை இழக்க அவர்களுக்கு விருப்பமில்லாதிருந்தது. அதற்கான முயற்சிகளில் இன்னொருவனையும் பலியிட அவர்களது புத்திசாலித்தனம் தடுத்தது. மீன்கள் கொத்துவதை வேடிக்கைப்பார்க்க அவர்கள் விருப்பங்கொண்டிருக்கவில்லை.

அவனது அலறலுக்கு ஏற்ப தொற்றிக்கொண்டிருந்த பதற்றம் தண்ணீரெங்கும் பரவிக்கொண்டிருந்தது. ரகசியங்களிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மீன்வகைகளைக் குறித்துக் கொள்ளையர்கள் அறிய முயன்றார்கள். கடலின் மறைந்துவிட்ட குணாம்சங்களை மீட்டெடுக்க அம்மீன்கள் முயற்சித்திருக்க வேண்டும்.

மீன்பிடிக்கப்பலை திருப்பி நீரோட்டங்களில் பயணித்துக்கொண்டிருந்த பைபர்படகுகளை மீட்க அவர்கள் காண்பித்த கூத்துகளைக் கண்டு கடல் சிரித்தது. மீன்பிடி டெக்கில் வெட்டுபட்டுகிடந்த தைவானிகளை ஷவலால் கோரி வெளியே எறிந்தார்கள். கடல்பரப்பில் அநாவாசியமாக மிதந்துகொண்டிருந்த உடற்பாகங்களை மீன்கள் கண்டுகொள்ளவில்லை.

கொள்ளையர்கள் மறைந்து வாழ தோதாக நீர்விலகிய பவளத்தீவுகள் நிகோபாரின் அருகே இருந்தன. தற்காலிக ஓய்விற்கும் பதுங்கிப்பாயும் வேட்டைகளுக்கும் பவளப்பாறைகள் வசதியை தக்கவைத்திருந்தன. அங்கேயிருந்த நண்டு இன பழங்குடிகளும் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. நண்டு இன பழங்குடிகளுக்கு ஆராய்ச்சிகூடங்களில் நல்ல விலைகிடைத்து வந்தது. நண்டு இன பழங்குடிகளைப் பிடித்துபோக வரும் ஏஜென்றுகளின் கப்பல்களை வேட்டையாட கொள்ளையர்கள் கடல்பரப்பெங்கும் பொறிகளை வைத்திருந்தார்கள். மிருககாட்சிசாலைகளில் நண்டு இன பழங்குடிகளின் வித்தைகளைக் காட்சிபடுத்த முயற்சித்துகொண்டிந்த குழுக்கள் வந்துபோன கப்பல்கள் கசியவிட்டிருந்த எண்ணைபிசுக்குகள் பவளப்பாறைகளில் மினுமினுப்பை ஏற்றியிருந்தது. எண்ணைபிசுக்களை உறிஞ்சிவிடும் பாசிகள் தென்கடலில் இருந்தன.

நண்டு தீவுகள் அந்தமானுக்கு வடக்கே பர்மாவின் கடலோர கால்மாட்டிற்குத் தென்மேற்கே இருந்தன. நண்டுகளின் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்த பழங்குடிகள் நீர் சூழும்காலங்களில் பாறை மாற்ற பெருங்கூட்டமாக வெளியே வருகிறபோது வேட்டைக்கு வாய்ப்பிருந்தது. சரக்குகப்பல்களின் நீர்தடங்களுக்கு வெளியே வெகுதொலையில் நண்டுதீவுகள் இருந்தன. வடக்கிலிருந்து பதினைந்து டிகிரி நாற்பத்தியொன்று மினிட்டுகளும் கிழக்கிலிருந்து எண்பத்தி ஒன்பது டிகிரி முப்பத்தி ஏழு மினிட்டுகளையும் பாகைமானியில் யாரும் வைத்தால் நண்டு தீவருகே சுற்றியலையும் கொள்ளையர்களின் வாயில்போய் விழவேண்டியிருக்கும். நண்டுஇன பழங்குடிகளைப் பிடிக்கவரும் ஏஜென்றுகளுக்குக் கொள்ளையர்களைத் தெரிந்தேயிருந்தது. தற்காப்பு ஆயுதங்களின் முன் கொள்ளையர்கள் நடனமிடவே செய்தார்கள். உயிரை மிச்சப்படுத்தவும் வழியற்ற வெறிகொண்ட யுத்தங்களை யாரும் விரும்புவதில்லை. வேட்டை எல்லாப் பக்கங்களிலும் மரணச்சுவையுடன் அலைந்தது. திசைமாறும் டாங்கர்களைக் கொள்ளையர்கள் நெருங்குவதில்லையென்றாலும் அவைகள் அடிக்கடி திசைமாறின. கொள்ளையர்களை நோட்டமிட சாத்தியமற்ற டாங்கர்கள் கசியவிடும் எண்ணையை மோப்பம்பிடித்து ஆராய்ச்சிபடகுகள் வந்துவிடுவதுண்டு.

தைவான் மீன்பிடிக்கப்பலில் இருந்த ரடார் செயலற்றுப் போயிருந்தது. உயிர் மிச்சமிருந்த எக்கோசவுண்டரின் உதவியுடன் மீன்களின் நடமாட்டத்தைக் கணிக்கமுடியவில்லை. அவ்வகை மீன்களைத் தாமிரா கிரவுண்டில் அதற்கு முன் யாரும் கண்டிருக்கவில்லை. இரால்கள் குஞ்சுபொரிக்கும் காலங்களில் வந்துபோகும் மீன்களாயிருக்கலாம். பருவசுழற்சி கடலின் நிரோட்டங்களை அடிக்கடி மாற்றிவிடுகிறது. நீரோட்டத்தில் இடம்பெயரும் மீன் இனம்போலத் தோற்றம் தந்திராத அவைகளைக் கண்டுகொண்டிருக்கக் கொள்ளையர்களுக்குத் துளியும் விருப்பமில்லை. அவன் முழுதாகச் சிதையுமுன்னே மீன்பிடிக்கப்பலை திசைமாற்றியிருந்தார்கள்.

தைவான் மீன்பிடிகப்பலின் விஹச்எப் ரேடியோ உயிரோடிருந்தபோதும் யாரும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. தைவானிகளைக் குறித்த அக்கறை கரையிலிருந்தவர்களுக்கும் இருந்திருக்கவில்லை. தகவலற்ற விஹச்எப் ரேடியோ தைவானிகளின் மேல் இனம்புரியாத பாசத்தைக் கசியவிட்டது. கொள்ளையர்களிலொருவன் பலவித்தைகளையும் விஹச்எப் ரேடியோவின் மேல் பிரயோகித்துப் பார்த்தான். சுக்குநூறாக்கப்பட்ட விஹச்எப் ரேடியோ கடலில் எறியப்பட்டதை மீன்பிடிகப்பலின் சுக்கானை இயக்கிகொண்டிருந்த இரவுகடவுள்கூட அறிந்திருக்கவில்லை. கொள்ளையர்கள் மூழ்கடித்த கப்பல்குறித்த தகவல்களைக் கசியவிடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். தைவானிகளுக்கு அப்பாக்கியம் கிட்டியிருக்கவில்லை. தைவான் மீன்பிடிகப்பலில் இருந்த பொருட்கள் தந்த ஆசுவாசம் எல்லாவற்றையும் மறக்கவைத்தது.

மீன்பிடிபொருட்களையெல்லாம் தைவானிகள் ஏற்கெனவே காயலான்கடைக்குப் போட்டிருந்தார்கள். இன்ஜின் ரூமில் யாரும் கைவைத்திருக்கவில்லை. இரண்டு ஜெனரேட்டர்களும் நல்லநிலையிலேயே இருந்தன. மீன்களைப் பதப்படுத்தும் கூலர்களும் உயிரோடு இருந்தன. மெயின் இன்ஜினை பாகம்பாகமாகத்தான் பிரித்து வெளியே கொண்டுபோகமுடியும். செயின்பிளாக் வைத்து தூக்கிவிட வாய்ப்;புண்டென்றாலும் இன்ஜின் ரூமை உடைக்கவேண்டியிருக்கும். நெடுங்காலக் கடலோடிகளின் விருப்பங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள். இன்ஜினை கூல் செய்ய வைக்கப்பட்டிருந்த பம்புகளே பெருந்தொகைக்குப் போகும். ஆறுமாதங்களுக்கு விற்றுதின்ன போதுமான புரபெல்லர் ராடு மரணபயங்களை விரட்டியிருந்தது. ராட்சஸ புரபெல்லரில் கொள்ளையர்கள் முகம்பார்த்துகொள்ளுமளவு பிரகாசத்தைத் தண்ணீரிலிருந்தபடி காண்பித்துகொண்டிருந்தது. உட்புறங்களில் தவிர்க்கஇயலா நீர்கசிவுகள் இருந்தன. ரசனையுள்ள யார்டில் போனால் அவைகளை ரிப்பேர் செய்துவிட முடியும்.

உறங்க சௌகரியமுள்ள கேபின் இருந்தது. மிகசிறிய கிச்சனில் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கழுவப்பட்டிராத ஸிங்கும் சில காஸ் சிலிண்டர்களும் தென்பட்டன. நண்டுஇன பழங்குடிகளைப் போல மீன்களைப் பச்சையாக உண்ண கொள்ளையர்கள் பழகியிருக்கவில்லை. வெண்ணைத் தடவிய அரைவேக்காட்டு மீன்களை மரணத்தின் முன் உண்ண தைவானிகள் விட்டுபோயிருந்தார்கள்.

மூழ்கடிக்கக் கொண்டுவரப்பட்ட தைவான் கப்பலில் இருந்தவர்கள் எதற்காக யுத்தத்தைத் துவக்கினார்களென்பதை கொள்ளையர்களால் கணிக்கமுடியவில்லை. உயிர்பயத்தின் துவக்கத்திலேயே யுத்தத்தில் குதிப்பது முறையல்ல. நெறியற்ற யுத்ததந்திரத்தின் முன் தைவானிகளின் உடற்பாகங்களே எஞ்சின. தைவானிகள் கொடூரசாவை குறித்து அறிந்தேயிருந்தார்கள். ஆயுதம் தீர்ந்துவிட்ட நிலையிலும் யுத்தம்செய்த அவர்களைக் கண்டு கொள்ளையர்களுக்கு ஆச்சரியமொன்றுமில்லை.

மீன்பிடி டெக்கில் அவளுடலை தொடர்ந்து வைத்திருக்கும் விருப்பம் வடியத்துவங்கியது. சீட்டுக்குலுக்கலில் பிழைத்த உயிரை மீன்களுக்கு ஊட்ட முயற்சித்தார்கள். அம்மீன்கள் தாமிரா கிரவுண்டிலேயே நிரந்தரமாகியிருக்கவேண்டும். மாறிவிட்டிருந்த நீரோட்டத்தின் முகங்களை நீர்ப்பரப்பு அறிவித்திருக்கவில்லை. சதையுண்ண காத்திருக்கும் மீன்கள் பதுங்கிய இடம் எக்கோசவுண்டருக்கு தெரிந்திருக்கவில்லை. எக்கோசவுண்டர் பச்சோந்திபோலக் காலை வாரியிருந்தது. மின்னணுப்பொருட்களோடு அவர்களுக்குப் போதுமான பயிற்சியுண்டென்றாலும் பதட்டம் சகோதரனைப்போல முன்நின்றது. தாமிரா கிரவுண்டு முழுவதும் பரவிய எக்கோசவுண்டரின் அலைகற்றைக்கு வெளியே மீன்கள் இருந்தன. சீட்டுகுலுக்கலில் தப்பிக்கும் அதிர்ஷ்டத்தின் உயிரை மீன்கள் விரும்பின.

கூந்தலால் அவளது கைகள் கட்டப்பட்டிருந்தாலும் வீசப்பட்ட வேகத்தில் கடலின் அடிப்பரப்பு வரை போய்விட்டு மேலே வந்திருந்தாள். போதம் தெளிந்திராத அவளுடல் கடலை கிழித்தபடி தண்ணீர் பரப்பிற்கு ஏறியிருந்தது. கொள்ளையர்களின் ஆச்சரிய முணுமுணுப்புகள் கடற்சாபத்தின் தன்மையை அடைந்திருந்தன. அவளது நுரையீரல்களில் தண்ணீர் ஏறியிருந்தாலும் மருத்துவ விதிகளுக்கு உட்படாமல் சுவாசித்துக்கொண்டிருந்தாள். சீழ்கையடித்து மீன்களைத் தருவிக்கும் முயற்சிகள் பலித்திருக்கவில்லை. கொள்ளையர்களின் சீழ்கை ஒலிக்கு புதிய அலைகளை எழுப்பும் சாத்தியமிருந்தாலும் மீன்களை வசீகரிக்கப் போதுமானதாயில்லை. கால்களை அகட்டியபடி மிதக்கும் அவளுடலை சபித்தபடி தாமிராகிரவுண்டிலிருந்து அவர்கள் விலகிக்கொண்டிருந்தார்கள். வெகுதூரம் வந்தபின்னும் அவளுடல் கொள்ளையர்களின் முன்னில் மிதந்துகொண்டிருந்தது. அவளுடலை தீண்ட எந்த மீன்களும் வந்திருக்கவில்லை.

௦௦௦௦௦

பார்வையில் அடைந்த கர்ப்பம்

தவிர்க்க இயலாத
நடைபாதையை நிறைத்தபடி
நிகழ்காலத்தின் அழகுபதுமை
என் எதிரே

நவீன உடையினுள்
துள்ளிக்குதிக்கிறது
எனக்கான வாழ்க்கை

சந்தோஷத்தின் ஹைஹீல்கள்
பின்னுகின்றன
என் பார்வையின் உக்கிரத்தில்

உடையை சரிசெய்ய முயலும்
அழகில் கலைகிறது
எனக்கான பெருமூச்சுகள்

வேட்டை தந்திரங்களின்
பார்வையில் விரியும்
கண்ணிகளை
லாவகமாக கடக்கின்றன
உன் முயல்கள்

உன் உடல்மொழியின் நடனம்
பார்வையில் கைகோர்க்கிறது

ஏவாளின் வெட்கங்களை
தொலைத்த உன் முகத்தில்
துளிர்த்த பனிபூக்களில்
தப்பிக்கும் மிருகங்களின் தந்திரங்கள்

கடந்துபோகையில்
நீ அடையும் கர்ப்பம்
எனக்கான சொப்பனத்தின்
திறவுகோலை திருடிக்கொள்கிறது

யாருமற்ற நடைபாதையில்
நீ திருப்பிக்கொள்ளும் பிருஷ்டங்கள்
மீறுகின்றன எழுதப்பட்ட நளினங்களை

இரவுக்கான உணவை பகிர்கையில்
நீ அணியமறுத்த உடைகளில்
தேங்கிநிற்கிற கர்ப்பம்
புணர்ச்சிக்கான ஏக்கத்தில் கலைகிறது

உடல்பாகங்கள் உறைந்த வார்த்தைகளை
வாசிக்கையிலெல்லாம்
உன்னை புணர்கின்ற விழிகளில்
சாத்திக்கொள்கின்றன
உடல் பலஹீனத்தின் கதவுகள்

கர்ப்பம் யாருமறியாமல்
மலர்ந்து கொண்டிருக்கிறது

வாதிகில்தியில் தவறவிட்ட காமசிலுவைகள்

யாசகத்தின் கடைசியில்
ஊர்ந்து மேலேறின
என் காமசிலுவைகள்

துரோக நாடகத்தின்
திரைசீலை விலகியது

முலைக்காம்புகளால்
என் நெஞ்சத்துரோமத்தில்
நீ வரைந்த காதல் ஓவியத்திலிருந்து
நிழலும் நிர்வாணமும் வெளியேறின.

ரெபோக்காள் தோட்டத்து மலர்களைப் போல
நீ பூத்திருந்த காலையில்
வெறுங்கையுடன் என்னை வெளியேற்றினாய் 

வாதிகில்தியின் நீர்வற்றிய படுக்கைகளில்
போக்கிடமற்ற என் பயணம்

உன் கவண்கல்
என் காலடியில் சிரித்தது
கோலியாத்தின் அலறல்
தேய்பிறையாகிக்கொண்டிருந்தது

சவஊர்வலத்து பாடல்வரிகளில்
நீ உதிர்த்த வார்த்தைகளின் நடனம்

உன் கண்களில் தேங்கிய
ஜென்மப்பகையின் காதல்

அங்க அசைவுகளில்
சங்கேதபாஷைகளின் கொக்கிகள்

உறங்கிவிட்ட கனவை
மறுபடியும் தாலாட்டுகிறாய்

பாரோனின் இரவுக்காவலர்கள்
நம் காதலை நமக்கு பாடுகிறார்கள்

உன் கூந்தலில் புரண்டெழ
என் விரல்கள் காதல் கொள்கின்றன


கோலியாத்தின் வெட்டப்பட்ட நாவில்
மறைந்தன ரத்தசுவடுகள்

காலம் நிறம் மாற்றிக்கொண்டிருந்தது.
காதல்
பெருவெள்ளத்தைப்போல பின்தொடர்கிறது

முஷ்டிமைதுனத்தின் கடைசியில்
நீ வெளியேறினாய்
விடைபெறாமலே நானும்.