Tuesday 2 June 2015

மூக்குப்பீறி பாட்டா - லட்சுமி மணிவண்ணன், [குறைபாடு கொண்ட ஆன்மாவின் வெளிப்பாடுதான் கலை.] - நேர்காணல்



https://www.facebook.com/profile.php?id=100009078137431
மூக்குப்பீறி பாட்டா
*
இதோ வந்தான் என்பார் இவனில்லை என்றிடுவார்
அதோ வந்தான் என்பார் அவனில்லை என்றிடுவார் 
இப்படியே சூட்சமொன்று எடுப்போம் நாம் மாமுனியே
எப்படியும் உள்ளறிவார் எனை அறிவார் மாமுனியே
- வைகுண்ட சுவாமிகள்
*

பனையிலிருந்து விழுந்து கொண்டிருக்கும்
மூக்குப்பீறி பாட்டா
நிலத்தில் இன்னும் விழவில்லை
தறிக்கப்பட்ட
பனை நின்ற இடங்கள் அதனைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன.
மேலும்
வடக்கு விளையிலிருந்து
கள்கலசம் கண்டு மறந்த
பண்ணிமாடனும்
சாராயச்சுவை மறந்த
சுடலைமாடனும்
ஐநூறு வருட நிலத்திற்கு ஆடுகட்டி
மரிக்காமல் உலவும் இடையர்களும்
மீன் மனமற்ற இசக்கியும்
அறிந்து வருகிறார்கள்.
இடையர்கள் காடுகளுக்குள் மூட்டியணைந்த
தீ ,ஆளற்ற இரவுகளில் எரியும் போது
குளிர் காய்கின்றன
பசி நிறைந்த பழந்தெய்வங்கள்
பனைநிலக் காடுகளுக்குள்
சுற்றித்திரிந்த துரைப்பாண்டி நாடார்
ஆவி கொண்டலைகிறார்.
சவங்களை தொட்டுக் குளிப்பாட்டி
இட்ட மையக் குழிகளில்
சுண்ணாம்பிட்டுப் பூசிய
நாசுவர் பண்டாரத்திற்கு தெரிந்திருக்கிறது
சவங்களின் மயிர்கால்களிலிருந்து
தாவரங்கள் முளைக்கின்றன என்பது .
பனை உயரம் கடந்து கடலுக்குச் செல்லும்
முக்குவன் பார்க்கிறான்
பனையிலிருந்து விழுந்து கொண்டிருக்கும்
மூக்குப்பீறி பாட்டா
நிலத்தில் இன்னும் விழவில்லை
*
மூக்குப்பீறி நாடார் அல்லது
சாணார் பாட்டா
பனையிலிருந்து தவறிய விபத்து
திருமணப்பந்தலில்
ரேஷன் அரிசி அவியும் வாசனைக்கு
டி.எம் .சௌந்தரராஜன் பாடிய நாளில் நடந்தது.
பிறகு
தோள்சீலை கிழிக்கப்பட்ட
சாணாத்தி
பட்டுடுத்தி பணமழுகி நாறினாள்
தன் கையில் சமமாக நிற்க மறுத்த
தராசு முள்ளில் ஆண்குறி கொருத்து
வவ்வாலாய் தொங்கி
தட்டு நிறைந்த காசள்ளினார்கள் ;
கொட்டாலைகளை இரும்பு அளிகளால் பூட்டி
பரிசளித்த பொருட்களில் தன் பெயரெழுதி
பிரார்த்தனை செய்கிற
பாண்டி நாடார்கள்.
இது நடுத்தீர்வை காலம்
கவிதை எழுதச் சொல்லி துணை நிற்கின்றன
பூசையற்றுப் போன பழந்தெய்வங்கள்
பிராமணர்களின் வெஜிடேரியன் குசு நாற்றமடிக்கும்
நாடார் குலம் பற்றி.
{ வீரலெட்சுமி கவிதைத் தொகுப்பிலிருந்து - 2003 }

[குறைபாடு கொண்ட ஆன்மாவின் வெளிப்பாடுதான் கலை.]
எல்லாமே இருக்குது!"மிகப்பெரிய அநீதியின் முன்னால்"
எல்லாமே இருக்குது! ...
( இந்த நேர்காணல் சுமார் ஒரு வருடத்துக்கும் முன்னர் மாதவம் இதழுக்காக நண்பர்கள் மேற்கொண்டது.மிகவும் சாதாரணமான நேர்காணல்தான் இது.அபூர்வமாக இதில் எதையுமே நான் கூறிவிட வில்லை.ஆனால் அப்போது தமிழ்ச்சூழல்
பெரிய தீமையை எதிர் கொள்வதைப் போல இந்த நேர்காணலை எதிர் கொண்டது ஏன் என்றே எனக்கு விளங்கவில்லை.நேரடியான எதிரிகளாக இந்த நேர்காணலைத் தொடர்ந்து மாற்றமடைந்தவர்கள் சிலர் .இப்போது இதனை வாசித்து பலர் பாதிப்பும் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சியே !அனுபவம் என்று கருதப்படும் விஷயத்தில் துளையிடாத எதுவும் இயக்கமில்லை எனும் எண்ணம் எனக்கு உண்டு.அந்தவகையில் இந்த நேர்காணல் குறித்தும் நிறைவடைகிறேன். சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இந்த நேர்காணலை பதிவிடுகிறேன்.மாதவம் இதழ் ஆசிரியர் , நண்பர் அய்யப்பனுக்கு என்னுடைய நன்றிகள்.பொறுமை கொண்ட நண்பர்கள் சமயம் கிட்டும் போது படித்துப் பாருங்கள் )
லக்ஷ்மி மணிவண்ணன் நேர்காணல்
கேள்விகள்: சிவ அய்யப்பன், ரமேஷ், கோதை சிவ. கண்ணன்
புகைப்படங்கள்: ரோஸ் ஆன்றா
{ “என்னைப் பெரும் சாத்தானாகப் பார்ப்பவர்கள் இருக்கின்றனர். அதே வேளை என்னைத் திருத்தொண்டனாகக் கருதுகிறவர்களும் உள்ளனர். நானோ ஆழமான பற்றுறுதிகள் கொண்ட, அவற்றை இந்த உலகில் உள்ள எதற்கும் பரிமாற்றம் செய்து கொள்ளாத சராசரி மனிதன்” என்று அந்தோனியா கிராம்சி கூறிய வார்த்தைகள் அப்படியே எனக்கும் பொருந்தக்கூடியவை என்று கூறும் லக்ஷ்மி மணிவண்ணன் நவீன தமிழ் இலக்கியச் சூழலின் பெருமதிப்பாக கருதப்படகூடியவர், கலகக்காரராக அறியப்படக்கூடியவர். கவிதை, சிறுகதை, விமர்சனம் என பல தளங்களில் இயங்குபவர்.
லக்ஷ்மி மணிவண்ணன், 23-11-1969இல் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பனங்கொட்டான்விளை என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். அப்பா.ஆ. அய்யாக்கண், ஓய்வுபெற்ற அரசுமேனிலைப்பள்ளி தலைமையாசிரியர். அம்மா எஸ். பாக்கியலெட்சுமி, சாத்தூரில் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாக பணியாற்றும் போது இவரது சிறுவயதிலேயே காலமானார். இரண்டு சகோதரர்களும் தங்கையும் உள்ளனர்.
தற்போது முழுநேர எழுத்தாளராகவும் சுதந்திர பத்திரிகையாளராகவும் பணியாற்றும் லக்ஷ்மி மணிவண்ணன் ‘சிலேட்’ சிற்றிதழின் ஆசிரியர். குழந்தைகள் ரிஷிநந்தன், ரிஷி நாராயணி, மனைவி எஸ். சுதந்திரவல்லி ஆகியோரோடு நாகர்கோயிலில் வசித்து வருகிறார்.
மாதவம் இதழுக்காக என்.ஜி.ஓ. காலனியிலுள்ள அவரது வீட்டில் வைத்து 11-09-2014 அன்று பதிவு செய்யப்பட்ட உரையாடல் இது. }
கே: எங்களுக்கு லக்ஷ்மி மணிவண்ணன்னு சொன்னாலே அறிவாளிங்கிற எண்ணம் தன்னாலேயே வந்திருது. இந்த ஆளுமை மணிவண்ணனுக்கு எங்கிருந்து வந்தது?
ப: அது சும்மாதான். அறிவாளிங்கறதெல்லாம் ஒண்ணுமில்லை. அதற்குரிய தகுதியும் உழைப்பும் இரண்டுமே என்னிடம் கிடையாது. மற்றபடியும் தற்போதைய தமிழ்ச் சூழலில் அறிவாளிகளே இல்லை என்பதுதான் இன்றைய யதார்த்த நிலை. கவிதைதான் எனக்கு விருப்பம். கவிஞன் என்று சொல்றதே மகிழ்ச்சி. ஆனால், எனக்கு முதலில் சிறுகதை தொகுப்புதான் வெளி வந்தது. ‘36-A, பள்ளம்’ தான் முதல் சிறுகதைத் தொகுப்பு. 1998-ல் வெளிவந்தது. கவிஞன் கவிஞனாக அவன் அளவில் இருக்கணும். சிறுகதைங்கிறது சிறுகதை ஆசிரியராக தனியாக இருக்கலாம்!. நாவல் எழுதுகிறவன் தனியாக இருக்கலாம். எல்லாவற்றிலும் சேர்ந்து இயங்குவது ஒருவருடைய விருப்பம். நான் எல்லா விஷயங்களையும் எழுதிப் பார்க்கிறேன். இருந்தாலும் கவிஞன் என்கிற அடையாளத்தை விரும்புகிறேன். மற்ற எல்லாமே எழுதி பார்க்கிறதுதான். பொதுவா இங்க என்ன நினைக்கிறாங்கன்னா கவிதை, அப்புறம் சிறுகதை. அடுத்த படி நாவல் அது மூணாவது படி?. இப்படி ஒரு படியும் கிடையாது.
கே: நீங்கள் எழுதக்கூடிய கவிதைகள், பத்து வாசகனில் நாலு அஞ்சு பேருக்கு மட்டும்தான் புரியுதுன்னு வச்சிகிடுங்க. மீதியுள்ள அந்த அஞ்சு வாசகனுக்கு அந்த கவிதை புரியலைன்னா பிரச்சனை இல்லையா?
ப: இல்லை. முதலில் கவிதை எல்லோருக்கும் புரியணுங்கிறது அவசியமே இல்லை. எல்லார்க்கும் கவிதை புரியணுமுன்னு ஒண்ணும் கிடையாது. அப்படி சட்டம் ஒண்ணுமில்ல. கவிதை புரியாமல் எவ்வளவு பேர் அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கவிதைகளை காட்டிலும் அழகா? அப்புறம் எல்லாவர்க்கும் புரியவும் செய்யாது. அதற்கு என்னோட கவிதையையோ அல்லது என்னைப்போல எழுதிக் கொண்டிருக்கும் யவனிகா ஸ்ரீராம், ஷங்கர்ராமசுப்பிரமணியன் போன்றோரின் கவிதைகளோ காரணம் இல்லை. நாங்கள் மிகவும் எளிமையான கவிதைகளை எழுதிக்கிட்டு இருக்கோம் என்கிறதுதான் உண்மை.
திருக்குறளை எத்தனைபேர் புரிஞ்சிருக்காங்க? மகாகவி பாரதியை எத்தனை பேர் புரிஞ்சிப்பாங்க? பாரதியின் வலு எந்தளவுக்குத் தெரியும்! கவிதை, சிறுகதை என்கிறது படைப்பு ரீதியான ஒரு துறை. பிசிக்ஸ் மேதமெட்டிக்ஸ் மாதிரி தான் அது. இயற்பியலும் வேதியலும் கணிதமும் இங்கு எல்லோருக்கும் புரியுதா என்ன? படைப்பை மட்டும் கரண்டியில் வச்சு எடுத்துக் கொடுக்கணும்னு எதிர்ப்பார்க்கக்கூடாது. எப்படி பிசிக்ஸ் தெரியாதுன்னா பிசிக்ஸ் லேப்குள்ள போக முடியாதோ அதே மாதிரி உங்களுக்கு இலக்கியம் தெரியாதுன்னா படிக்க முடியாது. கண்ணை கட்டுறது மாதிரி இருக்கும். ஏன்னா இலக்கியம் என்பது பொதுமொழியல்ல. மொழிக்குள் செயல்படும் கிளைமொழி. படைப்பாளிக்கு படைப்பாளி மாறுப்படக்கூடிய கிளைமொழி அது.
படைப்பு என்பது மொழிக்குள்ள இருக்கக்கூடிய உபமொழி. தமிழுக்குள் உள்ள உபமொழியை படைப்பாளி உருவாக்குகிறான். கவிதையிலையும் அதைத்தான் செய்கிறான். சிறுகதையிலையும் அதைத்தான் செய்கிறான். திரும்ப திரும்ப அந்த உபமொழியின் தான் அவனுடைய வலு. அது ஜன சமுத்திரம் முழுக்க புரிய வேண்டும் என்ற அவசியமில்லை. எனக்கு வந்து என்னுடைய வாசகர்கள் என்று பார்த்தீங்கன்னா அப்படி எதுவும் சிறப்பான தகுதி படைத்தவன் எவரும் கிடையாது. ஒரு கிரிமினலும் படிக்கிறான், கொலைகாரனும் படிக்கிறான், கொலையுண்டவன் மனைவியும் படிக்கிறாள். தடை எங்கிருக்கிறது என்றால் உங்களுடைய பயிற்சியில்தான் இருக்குது. உங்களுடைய மூளையில் இது கவிதைன்னு ஒண்ணு நினைச்சு வச்சிருப்பீங்க? உங்க மனதில் அப்படி பதிஞ்சிட்டுது வேற ஒன்ணும் இல்லை. சொல் அலங்காரமோ ஒரு துணுக்கையோ நாலு வார்த்தையில் சொல்றதையோ கவிதைன்னு படிச்சு பயிற்சி எடுத்ததினால, பழகிட்டதால எங்களை மாதிரியான ஆட்கள் எழுதக்கூடிய எளிமையான கவிதைகள் உங்களுக்குப் புரியமாட்டேங்குது, அதுதான் சிக்கல். என்னுடையது எளிமையான கவிதைன்னு ஏன் சொல்றேன்னா அதுக்குள்ள நீங்க எளிமையாக வந்திடமுடியும். ஏற்கனவே மூளையில முன்பதிவு இருக்கிறவன் தான் உள்ள வரமுடியாது. கவிதைகள் பல விசயங்களை இரகசியமாக வெளிபடுத்துகிறது. நான் யார்கிட்டே போக விரும்புறேன்னா பாரதியை படிச்சா எவனுக்கு உண்மையாகவே புரியுமோ அவன் கிட்ட போக விரும்புகிறேன்.
பாரதியை படிச்சா பக்கத்து வீட்டுக்காரனுக்கு புரியாதுன்னா அவன் என்னுடைய வாசகன் இல்லை. அவன் எனக்கு பொருட்டும் இல்லை. அவனை நோக்கி நான் எழுதவில்லை. நாட்டை ஆட்சி செய்யக் கூடியவங்களுக்கு புரியலைன்னா எனக்குக் கவலை இல்லை. என்னுடைய வாசகன் ஏதோ சின்ன கிராமத்தில் இருப்பவனாக இருக்கலாம். பெரிய அதிகாரியாக இருக்கலாம். சிறையில் இருக்கலாம். விலைமாதுவாக இருக்கலாம், லஸ்பியனாக இருக்கலாம் பிரச்சனை கிடையாது, இல்லை புதுமைப்பித்தனையோ, மௌனியையோ அவங்களுக்கு புரியுமாக இருந்தால் எங்களைப்புரியும்.
இல்லைன்னா ரெண்டு சாய்ஸ் இருக்கு. ஒண்ணு படைப்பைத் துறைன்னு எடுத்துக்கொள்ளக்கூடிய ஆய்வுகூடத்துக்குள் உள்ள வந்து படிக்கிறது. படைப்பு என்பது அறிதல்முறை இயக்கம். அறிதல் இயக்கத்தின் பெரிய சங்கிலித் தொடர் அது! ஏற்கனவே உள்ளதோட சேர்த்து உங்களுடைய கண்டுபிடிப்பும் நிகழுது. பல துறைகளும் சேர்ந்த கண்டுபிடிப்பு படைப்பு. மற்ற எல்லாத்துறைக்கும் பார்த்தீங்கன்னா அதில் மட்டும் பலமாக இருந்தா போதும். இலக்கியத்துக்கும், கலைக்கும் மட்டும் அப்படியான நியதியும் கிடையாது.
எல்லா துறைகளையும் தெரிஞ்சு வச்சிருக்கிறது படைப்பாளிக்கு ஓரளவுக்கு நல்லதுதான். நமக்கு வாசிப்பு ரெண்டுவிதம்.
1. ஒன்று ஆய்வு கூடத்துக்குள்ள வந்து படிக்கிறது. 2. வெளிப்படையான ஏற்கனவே உள்ள வாசிப்பு பழக்கம் இல்லாம படிப்பது. குறிப்பா நீலப்படம் மட்டுமே பார்த்து பழகிட்டீங்கன்னு வையுங்க சத்தியஜித் ரே-ஐ பார்த்தவுடனே வெளியே போக சொல்லும். பார்த்த உடனே இது என்னய்யா படம்? ஒரு பொழுதுபோக்கும் இல்லைன்னு தோணும். நீங்க பழகினதும் நீலப்படம். படைப்புக் கலை வெறும் நீலப்படம் இல்லை.
கே: பாரதியினுடைய இடம் அப்படீங்கற விசயம் உங்களுடைய இலக்கு என்று சொல்லாமா?
ப: இல்லை இல்லை. பாரதி எனக்கு இலக்கும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. யாரும் யாருக்கும் இலக்கு கிடையாது. இப்போ தமிழில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான கவிஞர்கள். நான் எதுக்கு பாரதியை உங்களுக்கு சொல்றேன்னா. உங்களுக்கு தெரிஞ்ச உதாரணம். அதனால் சொல்கிறேன். தெரிஞ்ச உதாரணத்தில் பாரதி ஒரு சாதகமான உதாரணம். அதனால் பாரதியை சொல்கிறேன். பாரதியை திரும்ப எழுதமுடியாது, திரும்ப எழுதக்கூடாது. அது வேலை அல்ல. யாருடைய வேலையும் அல்ல. திருப்பி எழுதுதல் என்கிற ஏற்பாட்டிற்கே படைப்பில் இடமில்லை.
கே: சிறுகதை தொகுப்பு 36-A பள்ளம் தவிர பிற படைப்புகள்! அதில் அதிகமாகப் பேசப்பட்டது?
ப: சிறுகதைகள், கவிதைகள், நாவல், கட்டுரைகள் என இதுவரையில் பத்து நூல்கள் வந்துள்ளன. ‘வீரலெட்சுமி’ ‘கவிதைத்தொகுப்பும்’ ‘எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம்’ கவிதைத் தொகுப்பும் சக கவிஞர்களையும், வாசகர்களையும், சூழலையும் கடுமையாக பாதித்தவை. சித்திரக்கூடம், வெள்ளைப்பல்லி விவகாரம் ஆகிய சிறுகதைகள் தமிழில் சிறுகதை எழுதுபவனுக்கு பெரிய சவாலாக முன் நிற்பவை.
நூற்பட்டியல்
1. 36 A, பள்ளம் (சிறுகதைத் தொகுப்பு)-1998 – அகரம் பதிப்பகம்
2. சங்கருக்கு கதவற்ற வீடு (கவிதைத் தொகுப்பு)-2000- ஜூபிட்டர் வெளியீடு.
3. அப்பாவின் வீட்டில்... (நாவல்) - 2002 அகரம்-பதிப்பகம்
4. வீரலெட்சுமி (கவிதைத் தொகுப்பு)- 2003 அகரம் பதிப்பகம்.
5. எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம் (கவிதைத் தொகுப்பு)-2005 சந்தியா பதிப்பகம்
6. சித்திரக்கூடம் (சிறுகதைத் தொகுப்பு)-2008- அம்ருதா-பதிப்பகம்
7. பெரியவர்களுக்குக் கடவுள் குழந்தைகளுக்கும் சாத்தான் (கட்டுரைத்தொகுப்பு)-2008
அம்ருதா பதிப்பகம்.
8. அப்பாவைப் புனிதப்படுத்துதல்-(கவிதைத் தொகுப்பு) – 2009 – அனன்யா பதிப்பகம்.
9. வெள்ளைப்பல்லி விவகாரம் - (சிறுகதைத் தொகுப்பு) – 2010- உயிர்மைப் பதிப்பகம்.
10. ஓம்...சக்தி ஓம்.. பராசக்தி- (கட்டுரை தொகுப்பு) – 2013 – கயல்கவின் பதிப்பகம்.
கே: உங்களுடைய எழுத்தும், விமர்சனங்களும் பொதுவாக அச்சமூட்டக்கூடியவையாகப் பார்க்கப்படுதே?
ப: ஒரு சூழலில் கவிஞன் தன்னுடைய விமர்சனத்தை ஒளிச்சு வைத்துக் கொள்கிறான் என்றால் அது ரெம்ப ஆபத்து. கவிதையில் ஈடுபடுவதற்கு அவன் லாயக்கில்லைன்னு அர்த்தம். நீங்க உங்க விமர்சனங்களை எல்லாம் வெளிப்படுத்த வேண்டுமே தவிர ஒளிக்க வேண்டிதில்லை. வெளிப்படுத்தும்போது இழப்புகள் கொஞ்சம் கூடுதல்தான். ஒரு நூல்பற்றி எழுதிட்டோம்னா. அவருக்கு அது பிடிக்குதா பிடிக்கலியாங்கிறது எழுதும்போது ஒரு விசயமாகவே இருக்கக்கூடாது, மிக முக்கியமானவங்க வாசகர்கள்தான், வாசகர்களுக்கு நாம நியாயமாக இருக்கோமா இல்லையாங்கிறது தான் முக்கியம். அவரு என்ன நினைப்பாங்கிறபத்தி நமக்கு ஒண்ணும் இல்லை. கவிஞன் சமூகத்தின் குமாஸ்தா இல்லை. அவன் எல்லாவற்றையும் உடைக்கணும் உடைச்சு சொல்லத்தான் வேணும். நிறையபேர் சொல்லாதினால், குறிப்பா ஒன்றிரண்டுபேர் சொல்றது அச்சுறுத்தல் போல தெரியுது ஆபத்து மாதிரி தோணுது.
கே: இன்றையச் சூழல்ல தமிழ் திரைப்பட கலாச்சாரம் எப்படியிருக்குது?
ப: வெகுசன ‘பொழுது போக்கி’ தமிழ்த் திரைப்படங்கள் அனைத்தும் மிகமெதுவாக நகருகிற நீலப்படங்கள் தான். அதனுடைய எல்லா தன்மைகளும் கூட்டிட்டு போறது நீலப்படங்களின் காமத்தை நோக்கியும் அதன் மதிப்பீடுகளையும் நோக்கி மட்டும்தான். அதனுடைய எல்லா அம்சங்களுமே அப்படித்தான் இருக்குது. தமிழ்சினிமாவைப் போட்டு பார்த்திட்டு இருக்கிறதுக்குப் பதிலா நீங்க நீலப்படங்களை நேரடியாக பார்த்திட்டீங்கன்னா உங்க வெறி நாலுநாளில் தீர்ந்து போயிடும். இது குப்பைன்னு தெரிஞ்சு போயிடும்.
நமக்கு என்னான்னா தமிழ்ச் சூழல்ல திரைக்கலாச்சாரமே உருவாகவில்லை. மலையாளத்தில் இருக்குது, அவங்களுக்கு திரைக்கலாச்சாரம்ணு ஒண்ணு இருக்குது. மலையாளத்தில் ஒரு மோசமான சினிமாவை பார்க்கக் கூடியவனுக்கே நல்ல சினிமாவின் அடையாளம் தெரியும். பாகுபாட்டை அவங்க போராடி உருவாக்கி வச்சிருக்காங்க. ஃபாஸிலுக்கும் அரவிந்தனுக்கும் என்ன வித்தியாசங்கறது தெரியும்! தமிழ் சினிமா மாதிரி மோசமாக இருந்தது தான் மலையாளத்தில் பிரேம் நசீர் காலத்தில்! அதன் பிறகு வெவ்வேறு திறமைசாலிகள், மேதைகள் அதுக்குள்ள வந்து அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், ஜாண் ஆப்ரகாம் போன்றோர் உலக சினிமாக்களின் இடத்திற்கு நகர்த்திட்டாங்க. தமிழில் நடக்கவில்லை.
கே: நல்ல இலக்கியத்துக்கும் மோசமான இலக்கியத்துக்குமான வேறுபாடு இருக்குதா?
ப: இருக்குது, தெரிஞ்சுக்கணுமுன்னு விரும்பினா நீ புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கி படிக்கணும் ஜி. நாகராஜனை படி, மௌனியைப் படி இன்னைக்கும் வரைக்கும் உள்ள எழுத்தாளர்களை படி. புதுமைப்பித்தனையோ மௌனியையோ தெரியாத எவனும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதையும் செய்ய முடியாது. தமிழ்ச் சமூகத்தை கௌரவப்படுத்தணுமின்னா புதுமைபித்தனைதான் முதலில் பரிந்துரைக்கணும்.
பாரதிக்கு பிறகு, புதுமைபித்தன் என்பது நல்ல ஆரோக்கியத்தின் குறியீடு. சிலை வைக்கிறதாக இருந்தால் புதுமைப்பித்தனுக்குதான் வைக்கணும். வைச்சிருக்கணும்! பெரியார் ராமசாமிக்கோ அண்ணாத்துரைக்கோ கருணாநிதிக்கோ அல்ல. புதுமைப்பித்தன் இதற்கு சம்மதிப்பானா என்பது வேற விசயம். அதையெல்லாம் கிண்டல் பண்ற ஆளு புதுமைபித்தன். ஆனா எங்களுடைய பெருமைன்னு பேசணுமின்னா தஞ்சை பெரிய கோவிலை சொல்றீங்கல்ல! எழுத்தில் ஏன் புதுமைப்பித்தனை சொல்லமாட்டேங்குறீங்க? நவீன தமிழ்க்காலத்தின் நல்ல வலிமைமிக்கத் தொடக்கமும் புதுமைப்பித்தன்தான். சி.சு.செல்லப்பா க.நா.சு. வெல்லாம் அதற்கான தியாகம் பண்ணின மிக முக்கியமான ஆட்கள்.
இதையெல்லாம் நீ சொல்லாமல் வந்து இராஜராஜன் இதை கட்டினான் அதை கட்டினான்னு கப்சா விட்டுட்டு அலையக்கூடாது, வைக்கம் முகம்மது பஷிர் கேரளாவில் கலாச்சாரத்தினுடைய அடையாளத்தின் பகுதி. அவனுடைய கவுரவத்தின் ஒருபகுதி.
கே: வாசிக்கிறவன் அவன் விருப்பத்துக்கு வாசிக்கிறான்? இதைத்தான் நீ வாசிக்கணும்னு நாம் வற்புறுத்த முடியுமா?
ப: பொழுது போக்கிகளை கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தலைன்னா உங்களுடைய தலைமுறையைக் காப்பாற்ற முடியாது. ரேஷன் அரிசியை நீங்க விரும்பித்தான் தின்றீங்கன்னு சொல்ல முடியுமா? கிடைக்குது தின்றீங்க. இங்கே நீங்க தேர்வு செய்துக்கறதுக்கான வாய்ப்பே இல்லையே? ரேஷன் அரிசிதான் மூடை மூடையாக கொண்டு கொட்டப்படுது! ரேஷன் அரிசியை உங்களுடைய விருப்பத் தேர்வுன்னு சொல்வீங்களா?
வாசிக்கிறவன் கொஞ்சம் பேருதான். ஆனா உருவாக்கக்கூடிய மதிப்பீடுகள் தான் ஆட்சியாக மாறுது, இதனுடைய மதிப்பீடுகள் தான் பின்பு அரசாங்கமாக மாறுது, உங்களுடைய வீட்டுக்குள் அணுஉலைகளை வைக்கக்கூடிய பகுதியாக மாற்றியது ரேஷன் அரிசி வாசிப்புப் பழக்கம்தான், இல்லைன்னா அணுவுலைகளை ஓங்கித் தட்டிக் கேட்கக்கூடிய மக்கள் இருந்திருப்பார்கள்.
இவற்றை, வெகுஜனப் போக்கை நான் ‘பொழுது போக்கி’ என்றேன். ‘பொழுது போக்கி’யில் இருக்கக்கூடிய மதிப்பீடு ஆபத்தானது அதைத்தான் எல்லாயிடத்திலும் அனுபவிக்கிறோம். பொழுது போக்கி எல்லா சமூகங்களிலும் இருக்கிறது. தமிழில் அது அரசியல், பண்பாடு, சமூகம் என்று எல்லாவற்றையும் ஆக்ரமித்துவிட்டதுதான் ஆபத்து, பொழுது போக்கிகளுக்கு தீனி போடுவது கலைஞனின் வேலை இல்லை.
கே: ஒரு எழுத்தாளன் தன் ஆன்மாவை கூர்மைப் படுத்துவதற்கு உங்களுக்குத் தெரிஞ்ச வழிகள் என்ன?
படிக்கிறதுதான். படிக்கிறது. படிக்கிறது. கலையோட சம்பந்தம் வச்சுக்கிறதுதான்! நல்ல இலக்கியங்களை வாசிப்பது. நல்ல படங்களை பார்ப்பதுதான். கலை என்பது நன்னடத்தைக்கான பயிலரங்கம் அல்ல. நன்னடத்தை வேலையை சொல்லிக் கொடுக்ககூடிய நாலடியார் வேலையை கலை செய்யாது. கலை அறிதலுக்கான மனிதமனத்தையும் சரி, வெளியேயும் புறத்தேயும் சரி முயற்சி செய்து கொண்டேயிருக்க வேண்டும். கலை மனிதனுடைய சுதந்திரத்தை எவ்வளவு தூரத்துக்கும் அனுமதிக்க வேண்டும் சுயபரிசீலனையோடு. கலை சுதந்திரத்தை ஒருபோதும் ஒடுக்குவதில்லை. எதன்பேரிலும் சுதந்திரத்தை இழக்காமலிருந்தால் ஆன்மாவைக் காப்பாற்றலாம்.
கே: பிறவிக் கவிஞன் என்பது சரியா? அல்லது கலை என்பது வாசிப்பின் மூலம் உருவாகக்கூடிய விசயமா?
ப: ரெண்டும் கிடையாது. பிறவிக்கவிஞன் என்று ஒன்றுமே கிடையாது. அதேமாதிரி வாசிப்பின் மூலமாகவும் சாத்தியமில்லை. வாசித்தால் ஒருவன் எழுதி விடுவான் என்பதற்குரிய சாட்சிகளோ, தடங்களோ நம்மிடமில்லை. அதற்கப்பால் ஒரு சூட்சமம் அதிலிருக்கிறது.
கே: அப்போது ரெண்டுக்கும் நடுவுல எப்படிச் சாத்தியம்?
ப: எங்க காயம்பட்டிருக்குது? எங்க ஒடுக்கப்பட்டிருக்குது? அப்போ அதை எப்படி விடுவிப்பது என்பதை, எழுதுகிறவன் கண்டுபிடித்தால் அந்த இடம் தான் சரியான இடம். ஒரு நல்ல தறுதலைதான் கலையில் தலைவனாக முடியும். ஒடுக்கப்பட்ட குறைபாடு கொண்ட ஆன்மாவின் வெளிப்பாடுதான் கலை.
எழுத்தாளர்கள், தத்துவவாதிகள், எல்லோருமே குறைபாடு உள்ளவங்கதான். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மனநோய்கள், எழுத்தாளர்களின் பொதுவான உண்மைகள் . கலைஞன் யோசிக்கிறதே மூளை வழியாக இல்லை. நரம்பு மண்டலம் வழியாகத்தான் யோசிக்கிறான். அவனுடைய பிரபஞ்ச தொடர்பாகட்டும் நுண் உணர்வுகள் ஆகட்டும் நரம்பு மண்டலங்கள் வழியாக உள்ளதுதானே தவிர முழுமை, ஆரோக்கியம் சம்மந்தப்பட்டதில்லை. பொதுச்சமூகம் ஆரோக்கியம் என்று கருதக்கூடியவற்றுக்கு எதிரான குறைபாடு என்கிற வஸ்துதான் எழுத்தினுடைய பிரதானம். முழுமைபெற்ற ஞானியால் ஒருபோதும் படைப்பாளியவதற்கான வாய்ப்பே கிடையாது.
ஒரு தறுதலைதான் நல்ல எழுத்தாளனாக ஆவான். அவன் தான் சமூகத்தை கலையின் பக்கம் இழுத்துச் செல்வான். குறைபாடுதான் கலையில் முக்கிய சுருதி. குறைபாடுடைய ஆன்மாதான் எழுத்து. எழுத்தில் குறைபாடு தான் தகுதியாகிறது.
கே: உங்களுக்குள் இந்த ஒரு உத்வேகம் எந்த வயசுல எந்த சூழலில் ஏற்பட்டது?
ப: நான் சின்ன வயதில் இருந்தே கடுமையாக ஒடுக்கப்பட்ட குழந்தையாகத்தானிருந்தேன். எல்லா விதங்களிலும் ஒடுக்கப்பட்டு, தொந்தரவுக்குட்படுத்தபட்ட ஆன்மா என்னுடையது. நீதி மறுக்கப்பட்ட சூழல்தான் எனது குழந்தைப் பருவமாயிருந்தது. வசதியும் வாய்ப்பும் இருக்கக்கூடிய இடத்திலேயும்கூட ஏன் ஒடுக்குமுறை நடக்குது? ஒருத்தனுக்கு ஏன் கிடைக்கமாட்டேங்குது? ஒருத்தனுக்கு ஏன் கிடைக்குது!
எல்லாமே இருக்குது, பொங்கிவச்சதை பாதி பேருக்கு கொடுக்க மறுக்கறீங்க! பொங்கி வச்சதே சாப்பிடறதுக்குதானே?ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? இதுதான் எனது பிரதான கேள்வி. ‘எல்லாமே இருக்குது! மிகப்பெரிய அநீதியின் முன்னால் எல்லாம் இருக்குது’. இதுதான் பிரதானமான மனித துயரம், பிரச்சனை என்பதை அறிந்துகொண்டேன்.
இதற்கு எதிராக போராடுவதற்கு வெளிப்படுத்துவதை விட்டால் நமக்கு வேற வழியேதும் இல்லை என்பதுதான் நான் சிறு வயதிலிருந்தே புரிந்துகொண்ட உண்மை. அடிச்சா வலிக்குதுன்னு சொல்லிடணும். எனக்கு அநீதி இழைக்கப்படுகறிது என்று பொதுவில் ஓங்கிக் கத்தி விடவேண்டும். இல்லையெனில் வாழ முடியாது. வெளிப்படுத்துவதன் மூலமே அந்த பூட்டை திறக்க முடியும். கலை மூலமாகத்தான் அதன் கழுத்தை நெரிக்க முடியும். இன்று இந்தியா முழுவதிலும் பாருங்கள் ஏழ்மை, நோய், வன்முறை, விபத்து, கலவரங்கள், மனப் பிறழ்வு, தகாத குணங்கள் அனைத்துமே அதிகாரமற்றவர்களின் பக்கமாக திருப்பப்படுகின்றன. ஒரு சதமான பேர் அதிகாரத்தைப் பங்கு வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் போதுமான எல்லாமே இங்கேயே இருக்கிறது. எவ்வளவு விசித்திரமான முரண்? எதனால் இப்படி?
கே: இன்றைய சூழலில் பாரதி இருந்திருந்தால் என்ன செய்வான் உங்க கருத்து?
ப: கற்பனையாகத் தெரியவில்லை. ஒன்றுமே செய்திருக்கமாட்டார்! அவரை எவருக்கும் அடையாளம் தெரிஞ்சிருக்காது! இங்கேய நிறைய பேர் இருக்காங்க. யாரையும் அடையாளம் தெரியலயே? அதே மாதிரி அடையாளம் தெரியாத ஒருத்தரா இருந்திருப்பார். அவருடைய எந்தவிதமான செயல்பாடும் அவருடைய சமகாலத்தில் செல்லுபடி ஆனதே கிடையாது. அவருடைய பல விசயங்கள் பின்னாடிதான் தமிழ் சமூகத்துக்குத் தெரியும்.
கே: உங்களுக்கு கவிதையில், எழுத்தில் முன்னோடின்னு சொன்னா பாரதியை சொல்லாமா?
ப: கிடையாது. பாரதி எனக்கு முன்னோடி இல்லை. சரியாக சொன்னால் சுந்தர ராமசாமிதான் என்னுடைய முன்னோடி. ‘ஃப்ரன்ஸ் காஃப்கா’ என்ற எழுத்தாளன் உலகம் முழுவதையும் பாதித்த படைப்பாளி. கபாலத்தை பனி பாறையால் அடித்து உடைக்கிறதுதான் எழுத்து என்கிறான். அவன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளன். சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள், ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘அறிந்தனின்று விடுதலை’ ஆகியவை நூல்கள் நல்ல திறவு கோல்களாக அமைந்த நூல்கள். ஒரு புத்தகத்தை நீங்கள் படிக்கத் தொடங்குகிற போது இருக்கிற உங்கள் அகமனிதன் படித்து முடிக்கும் போது இறந்துவிட வேண்டும். அதுவே சிறந்த நூல். அந்த அனுபவத்தைத் தராத எதுவும் படைப்பல்ல.
கே: அறிவுசார்ந்த விசயத்தை ஒரு படைப்பு உடைக்கணுன்னு சொல்றீங்களா?
ப: அறிவு கொடூரமானது அறிந்ததினின்று விடுதலை. அதுதான் முதல்படியே! அப்படித்தான் அறிந்ததிலிருந்து வெளியே வா என்பதுதான் படைப்புச் செயல்பாடு. கிளுகிளுப்பு உண்டாக்கும் வேலையை படைப்பு ஒரு நாளும் செய்யாது. படிப்பதின் வழி மகிழ்ச்சி இருக்குது. மகிழ்ச்சி உங்களின் அகம் உடைவதிலிருந்தும், சுயம் உண்டவதிலிருந்தும் ஏற்படக்கூடியது. மனத்தடைகள் உடைவதிலிருந்து கிடைக்ககூடியதுமான, நம்பிக்கைகள் உடைவதில் இருந்து கிடைக்கக்கூடியதுமான மகிழ்ச்சியைப் படைப்பு தருகிறது.
கே: நடைமுறை வாழ்க்கைக்கு அது சரியாக வருமா?
ப: நடைமுறை வாழ்க்கை என்பது நாம் உருவாக்கிறதுதானே?
கே: சரி தப்பு என்கிற விசயமே உங்க கருத்திலிருந்து அடிப்பட்டு போகுதே? சரியுமில்லை தப்புமில்லைன்னு ஆயிடுமே?
ப: சரி தப்பு என்றெல்லாம் ஏதுமில்லை, கலைக்கோ, படைப்புக்கோ அது முக்கியமில்லை அறிதலும் கண்டுபிடிப்பும்தான் பிரதானம். சரி தப்பு என்பதெ